மூன்றாம் திருவந்தாதி -பாசுரங்கள் -81-100–திவ்யார்த்த தீபிகை —

இதில் முன்னடிகளிரண்டும் நெஞ்சை விளித்து உபதேசிப்பன்,
பின்னடிகளிரண்டும் தம்மில் தாம் வருந்திச் சொல்லிக் கொள்வன்.
என்னெஞ்சமே! (அவன்) நெஞ்சால் நினைப்பரியனேலும் நிலைப் பெற்றுப் பேசாய் – மனமே!
அப் பெருமானுடைய ஐச்வரியம் சிந்திக்கவும் முடியாதாகையாலே ‘இப்படிப்பட்ட பரமேச்வரனை நாம் எங்ஙனே பேசுவது?‘
என்று பின் வாங்கப் பாராமல், அவனது எளிமைக் குணங்களை நினைத்தாகிலும் கூசாமல் நிலை நின்று பேசப்பார் என்றபடி.

நெஞ்சால் நினைப்பரிய னேலும் நிலைப்பெற்று என்
நெஞ்சமே பேசாய் நினைக்கும் கால் -நெஞ்சத்துப்
பேராது நிற்கும் பெருமானை என் கொலோ
ஓராது நிற்பது உணர்வு –81-

பதவுரை

என் நெஞ்சமே–எனது மனமே!,
நெஞ்சால் நினைப்பு அரியன் எலும்–(எம்பெருமான்) நெஞ்சாலும் நினைக்க முடியாத பெருமை
வாய்ந்தவனே யாயினும் (அவனுடைய பெருமையை நினையாமல் ஸௌலப்யத்தையே நினைத்து)
நிலைப்பெற்று–காலூன்றி நின்று
பேசாய்–அவனைப் பேசப்பார்
நினைக்குங் கால்–நாம் ஒருகால் நினைத்தாலும்
நெஞ்சத்து–நெஞ்சு தன்னிலே
பேராது நிற்கும்-விட்டு நீங்காமல் நிலைத்து நிற்கின்ற
பெருமானை–எம்பெருமானை
உணர்வு–நமது நெஞ்சானது
ஓராது நிற்பது என்கொலோ–அநுஸந்தியாமல் வாளா விருப்பது ஏனோ?

இப்படி உபதேசித்த வளவிலும், நெஞ்சானது அவனுடைய பரத்வத்தையே நினைத்துக் கூசி நிற்பது கண்டு,
“நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ?“ என்கிறார்.
நாம் ஒருகால் நினைத்து விட்டாலும் அதையே வியாஜமாகக் கொண்டு நம் நெஞ்சை விட்டுப் பேராமல்
ப்ரதிஷ்டிதனாயிருக்கும் பரம ஸுலபனான பெருமானை நெஞ்சானது நினைக்கக் கூசுகின்றதே! இஃது என்ன பாவமோ! என்றவாறு.

உணர்வு என்ற சொல் – ஞானத்திற்கு வாய்த் தலையான நெஞ்சைச் சொல்லுகிறது இங்கு.

கீழ்ப் பாட்டில் “அரவணையான் சேவடிக்கே நேர் படுவான் தான் முயலும் நெஞ்சு“ என்று அருளிச் செய்தவர்
அடுத்த இப் பாட்டில் இங்ஙனே அருளிச் செய்யக் காரணமென்? என்று சங்கிக்கக் கூடும் கேண்மின்,
தம்முடைய நெஞ்சு பகவத் விஷயத்திலே அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாட்டிற் கூறினது உண்மையே
அந்த பகவத் விஷயத்தின் பெருமையைப் பார்த்தவாறே அதற்குத் தகுந்த வளவான ப்ராவண்யம் உண்டாக வில்லையாக நினைத்து
‘பகவத் விஷயத்தில் நாம் இன்னம் அடியிடவே யில்லை போலும்‘ என்று தோன்றி இப் பாட்டருளிச் செய்தாரென்க.
ஒருவன் வித்வானாயிருந்தாலுங்கூட இன்னமும் கற்றுணர வேண்டிய கல்விகளின் எல்லை
யில்லாமையை நினைக்குங்கால் ‘நாம் என்னகற்றோம், ஒரக்ஷரமும் கற்றிலோம்‘ என்னும்படி
யாயிருக்குமன்றோ,
அது போலக் கொள்க.

இவ்வார்த்தைப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்கிற அழகு காண்மின், –
கீழ், ஸம்ஸாரிகளுக்கில்லாத்து தமக்குண்டானவாறே நெஞ்சு பகவத் விஷயத்திலே மண்டிற்றென்று கொண்டாடினார்,
விஷயத்தைப் பார்த்தவாறே அடியிட்டிலராயிருந்தார்.“ என்று.

————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில். “நினைக்குங்கால் நெஞ்சத்துப் பேராது நிற்கும் பெருமானை உணர்வு ஓராது நிற்பது என்கொலோ!“ என்று வருந்தினார்,
இங்ஙனே நாம் வருந்துவது எதுக்கு? ஒருவர்க்கும் ஒருவகையாலும் அறியவெண்ணாதபடியன்றோ அப்பெருமானுடைய ஸ்வரூபமிருப்பது,
விஷணம் அப்படியிருக்கும்போது வீணாக நெஞ்சை நொந்துகொள்வதில் பயனென்?
இனி அவனை நாம் கிட்டிக்காணும் விரகு என்னோ! என்று தம்மில்தான் குழைகின்றார்.

உணர்வில் உணர்வு அரியன் உள்ளம் புகுந்து
புணரிலும் காண்பு அரியன் உண்மை இணர் அணையக்
கொங்கு அணைந்து வண்டறையும் தண் துழாய் கோமானை
எங்கு அணைந்து காண்டும் இனி –82-

பதவுரை

உணரில்–(அப்பெருமானை நாமாக) அறியப் பார்த்தாலும்
உணர்வு அரியன்–(அவன்) அறியக் கூடாதவன் (அவன்தானே)
உள்ளம் புகுந்து புணரிலும்–நெஞ்சிலே வந்து புகுந்து சேர்ந்தாலும்
உண்மை காண்பு அரியன்–உள்ளபடி அறியக் கூடாதவன்
இனி–இப்படியான பின்பு
இணர் அணைய–பூங்கொத்துகள் தாழும்படியாக
கொங்கு–தேனிலே
வண்டு–வண்டுகள்
அணைந்து–வந்துகிட்டி (மதுவைப்பருகி)
அறையும்–ரீங்காரம் செய்யப்பெற்ற
தண்–குளிர்ந்த
துழாய்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ளவனான
கோமானை–அப்பெருமானை
எங்கு–எவ்விடத்தில்
அணைந்து–கிட்டி
காண்டும்–காணக் கடவோம்.

‘உணரில் உண்மையுணர்வரியன், உள்ளம்புகுந்து புணரிலும் உண்மை காண்பரியன்‘ –நம்முடைய முயற்சியாலே அவனுடைய
உண்மை காணமுடியாதது என்பது மாத்திரமேயல்ல, “தாம் தம் பெருமையறியார்“ என்றும்
“தனக்குந்தன் தன்மையறிவரியான்“ என்றுஞ் சொல்லுகிறபடியே
அவன்றனக்கும் அறிய நிலமல்லாத உண்மையை அவன்றானும் நமக்கு அறிவிக்கவல்லனல்லன் என்றவாறு.

இணர் –பூங்கொத்து. எங்கு –எவ்விதமாக என்றுமாம்.

————————————————————————————————————————————————————————–

யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும்,
தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை
மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான்,
இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.

இனி யவன் மாயன் என உரைப்பர் ஏலும்
இனியவன் காண்பு அரியன் ஏலும் -இனியவன்
கள்ளத்தால் மண் கொண்டு விண் கடந்த பைம் கழலான்
உள்ளத்தின் உள்ளே உளன் -83

பதவுரை

இனி–இப்போது
அவன்–‘அந்தஸர்வேச்வரன்
மாயன்–மாயக்காரன்‘
என–என்று
உரைப்பர் ஏலும்–சொல்லுவார்களே யாகிலும்,
இனி–இப்போது
அவன்–அப்பெருமான்
காண்பு அரியன் ஏலும்–கண்டு அநுபவிக்கக் கூடாதவனே யாகிலும்
கள்ளத்தால்–க்ருத்ரிம வேஷத்தினால் (மாவலி பக்கலிலே சென்று)
மண் கொண்டு–பூமிதானம் வாங்கி
விண் கடந்த பை கழலான் அவன்–ஆகாசம் முதலிய மேலுலகங்களையும் ஆக்ரமித்துக் கொண்ட
பரந்த திருவடிகளை யுடையனான அப்பெருமான்
இனி–இப்போது
உள்ளத்தின் உள்ளே உள்ள–எனது ஹ்ருதயித்தினுள்ளே (வேறிடமறியாமே) நிலைத்து நிற்கின்றான்
(இந்த பரமலாபமே போது மென்கை)

எம்பெருமான் பெரிய மாயக்காரன் என்று பலர் சொல்லுவர்கள், அதாவது
“வந்தாய்போலே வாராதாய் வாராதாய்போல் வருவானே“ என்னுமாபோலே –
கரைபுரண்ட மாநஸாநுபவமரத்தினால் கைக்கு எட்டினவனாக நினைக்கலாம் படி யிருந்தும்,
‘ஒருநாளும் அவன் கைக்கு எட்டமாட்டான்‘ என்றிருக்கச் செய்தேயும் ஸ்வேச்சையாலே வந்து கைக்கு எட்டியும்
இப்படி மாயாவியாயிருப்பவன் என்பர்கள்,
மற்றுஞ் சிலர் ‘அப்பெருமான் ஒருகாலும் ஒருவர்க்கும் காணமுடியாதவன்‘ என்பர்கள்,
யார் எப்படி சொன்னாலும் எனக்கென்ன, அவன் மாயாவியாகவே யிருக்கட்டும், காண்பரியனாகவே யிருக்கட்டும்,
தன் உடைமையைப் பெறுகைகுத் தான் யாசகனாயச் சென்று அரிய பெரிய காரியஞ்செய்த அவன் என்னை
மறக்க வொட்டாதபடி என் ஹ்ருதயத்திலே வந்து புகுந்துவிட்டான்,
இனி அவனுடைய ஸ்வரூபம் எப்படிப்பட்டதா யிருந்தால் எனக்கென்ன? என்கிறார்.

—————————————————————————————————————————————————————————-

வேதங்களினால் அறியக்கூடியவனான எம்பெருமான் என்னெஞ்சிலுள்ளான் என்னெஞ்சிலுள்ளான் என்று
ஒவ்வொரு வரும் சொல்லிக் கொண்டிருக்கலாமத்தனை யன்றி அப்புண்டரீகாக்ஷனை நேரே கண்ணாற் கண்டவர் யார்?
யாருமில்லை. அப்படியானால் எத்தனையோ பக்தர்கள் ‘கண்டேனே, கண்டேனே‘ என்று சொல்லக் காண்கிறோமே,
அஃது என்ன? என்று கேட்கில் உவப்பினால் கவி சொல்லி விடுகிறார்களித்தனை யல்லது வேறில்லை – என்கிறார்.

உளனாய நான்மறையின் உட்பொருளை உள்ளத்து
உளனாகத் தேர்ந்து உணர்வரேலும்-உளனாய
வண்டாமரை நெடும் கண் மாயவனை யாவரே
கண்டார் உகப்பார் கவி –84

பதவுரை

நால் மறையின்–நான்கு வேதங்களினுடைய
உள் பொருள்–உள்ளுறை பொருளாக
உளனாயவனை–இருக்கின்ற எம்பெருமானை
தேர்ந்து–(ஜ்ஞாந யோகத்தாலே) ஆராய்ந்து
உள்ளத்து உளன் ஆக–நெஞ்சிலே பொருந்தி யிருப்பவனாக
உணர்வர் ஏலும்–(சில ஞானிகள்) அறிய வல்லாரென்றாலும்,
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு கண்–நீண்ட தீருக் கண்களை யுடைய
மாயவன்–ஆச்சர்யபூதனாக
உளனாபவனை–இருக்கின்ற அப்பெருமானை
கண்டார் யாவரே–கண்டு அநுபவிக்கப்பெற்றார் யாவர்? (ஒருவருமில்லை)
கவி உகப்பர்–தோத்திரக் கவிகளை உகந்து வாயாற் சொல்லிக் கொண்டு போது போக்குவர்களத்தனை.

எம்பெருமானைக் கண்டேனென்று சொல்லிக் கொண்டால் அதனால் தங்களுக்கொரு ஸ்ந்தோஷம் விளைகிறபடியால்
கண்டேன் கண்டேனென்று பலரும் கவிப்பாக்கள் கூறுகின்றவளவால் பரம்பொருளை மெய்யே கண்டாரகளல்லர் என்றவாறு.

முதலடியில் “உட்பொருளை“ என்ற விடத்துள்ள இரண்டாம் வேற்றுமை யுருபைப் பிரித்து
‘உளனாய‘ என்பதோடு கூட்டியுரைக்கப்பட்டது. மேலிடத்தும் இங்ஙனமே.

———————————————————————————————————————————————————-

கீழ்ப்பாட்டில் “மாயவனை யாவரே கண்டார்“ என்று பரம்பொருளை உள்ளபடியே காணப் பெற்றாராருமில்லை யென்றார்
உள்ளபடியே பேசப்பெற்றவர்களாவது உண்டோவென்ன. இப்பூமியிலுள்ளாரடங்கலும் ஒன்று கூடிப் பேசினாலும்
சிறப்புறப் பேசித் தலைக்கட்டலாம்படி யிராது எம்பெருமானுடைய குண சேஷ்டிதங்கள் என்கிறாரிதில்.

கவியினார் கவி புனைந்து கண்ணார் கழல் போய்
செவியினர் கேள்வியாய்ச் சேர்ந்தார் -புவியினார்
போற்றி உரைக்கப் பொலியுமே பின்னைக்காய்
ஏறு உயிரை அட்டான் எழில் –85-

பதவுரை

கவியினார்–தோத்திரங்கவிகளைச் சொல்லு பவராய்க் கொண்டு
கை புனைந்து–அஜ்ஞலிபண்ணி
கண்–தமது கண்கள்
ஆர் கழல் போய்–(அவனது) விலக்ஷணமான திருவடிகளிலே சென்று சோப்பெற்று
செவியின் ஆர் கேள்வியர் ஆய்–காது நிறைந்த கேள்விகளை யுடையராய்க் கொண்டு
சேர்ந்தார்–வந்து பணிந்தவர்களான
புவியினார்–பூமியிலுள்ளா ரெல்லாரும்
போற்றி உரைக்க–(ஒன்று கூடிப்) போற்றி யுரைத்தாலும்,
பின்னைக்காய் ஏறு உயிரை அட்டான் எழில் பொலியுமே–நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களினுயிரை மாய்ந்த
பெருமானுடைய அழகு சிறப்புறச் சொல்லப்பட்ட தாகுமோ?

வாயால் பலபல தோத்திரங்களைக் சொல்லிக் கொண்டும் கைகளைக் கூப்பிக்கொண்டும் கண்களை வேறொரு விஷயத்திலும்
செலுத்தாது அவனது திருவடித்தாமரைகளிலேயே செலுத்திக் கொண்டும். அப்பிரானது புண்யகீர்த்திகளையே செவிமடுத்துக் கொண்டும்
இப்பூமியிலுள்ளாடங்கலும் வந்து பணிந்து எல்லாருமொன்றுசேர்ந்து போற்றியுரைத்தாலும்,
கண்ணபிரான் நப்பின்னைப் பிராட்டிக்காக ரிஷபங்களை முடித்திட்டு மணக்கோலமும் பெரு மிடுக்குமாக நின்ற அழகு
பேச்சுவாக்கு நிலமாகுமோ? என்றவாறு.

——————————————————————————————————————————————————————-

எம்பெருமானுடைய அழகானது ஒருவருடைய பேச்சுக்கு நிலமன்றாகிலும் பேசாதிருக்க முடியாதன்றோ,
‘திருவடி அப்படியிருக்கிறது, திருக்கண் இப்படியிருக்கிறது‘ என்றாற் போலே உவமையிட்டாவது சொல்லிக் கொண்டு
தானே யிருக்க வேண்டும், ஆகவே உபமாந முகத்தால் எம்பெருமானது வடிவைப் பேசி அநுபவிக்கிறார்
இப்பாட்டாலும் மேற்பாட்டாலும்.

எழில் கொண்ட மின்னுக் கொடி எடுத்து வேகத்
தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும் -எழில் கொண்ட
நீர் மேகம் அன்ன நெடுமால் நிறம் போல
கார்வானம் காட்டும் கலந்து –86-

பதவுரை

எழில் கொண்ட–அழகையுடைத்தாய்
நீர்–நீர் நிறைந்ததான
மேகம் தான்–மேகமானது
எழில் கொண்ட மின் கொடி எடுத்து–அழகிய மின்னற்கொடி படரப்பெற்று
வேகம் தொழில் கொண்டு–வேகமாகத் திரிதலாகிற வியாபாரத்தைச் செய்யப்பெற்ற
முழங்கி தோன்றும்–கர்ஜித்துக்கொண்டு விளங்குதற்கிடமான
கார் வானம்–கார் காலத்து ஆகாசமானது
அன்ன நெடுமால் நிறம்போல கலந்து காட்டும்–அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருநிறத்தை அநுகரித்திராநின்றது.

கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது.
கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து
வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும்.
எம்பெருமானுடைய காளமேகம் போன்ற திருமேனியும் மின்னற்கொடி போன்ற பெரிய பிராட்டியாரோடு கூடியும்,
ஸ்ரீகஜேந்திராழ்வான் போன்ற ஒடித் திரிந்துகொண்டும், ‘ஆணைவரும் பின்ன மணி யோசைவரும் முன்னே‘ என்கிறாப்போலே
அன்பர்களிடம் தான் வருவதற்க முன்னமே அறிகுறியாக முழக்கத்தைச் செய்து கொண்டிராநின்ற
ஸ்ரீபாஞ்சஜந்யத்தை யுடைத்தாகியுமிருக்கும். ஆகவே இங்குச் சொன்ன உபமாசோபமேயபாவம் நன்கு பொருந்துமென்க.

மின் + கொடி, மின்னுக்கொடி, புணர்ச்சியில் உகரச்சாரியை பெற்றது.
‘மின்னலைக் கொடியாக வெடுத்து‘ என்றும் பொருள் கொள்ளலாம்.
முதலடியில் “எழில்கொண்டு“ என்ற (வினையெச்சமான) பாடம் பெரும்பான்மையாக வழங்கிவந்தாலும்
அது பெரிய வாச்சான்பிள்ளை வியாக்கியானத்திற்கு இணங்காது,
“எழிலை யுடைத்தான மின்னை“ என்பது வியாக்கியான வாக்கியமாதலால் “எழில்கொண்ட“ என்ற (பெயரெச்சமான) பாடமே பொருந்தும்.

————————————————————————————————————————————————————————————————————–

இப்பாட்டும் உபமாநமுகத்தால் அநுபவிப்பதாம்.

கலந்து மணியிமைக்கும் கண்ணா நின் மேனி
மலர்ந்து மரகதமே காட்டும் -நலம் திகழும்
கொந்தின் வாய் வண்டறையும் தண் துழாய் கோமானை
அந்தி வான் காட்டுமது -87-

பதவுரை

மணி கலந்து–ஸ்ரீகௌஸ்துப மணியோடுகூடி
இமைக்கும்–விளங்காநின்ற
கண்ணா–கண்ணபிரானே!
மரதகம்–மரதகரத்னமானது
மலர்ந்து–ஒளிப்பரப்பை யுடைத்தாய்க் கொண்டு
நின் மேனி காட்டும்–உனது திருமேனியை ஒத்திராநின்றது,
நலம் திகழும்–அழகாக விளங்குகின்ற
கொந்தின் வாய்–கொத்துகளிலே
வண்டு அறையும்–வண்டுகள் ரீங்காரம் செய்யப்பெற்ற
தண் துழாய்–திருத்துழாய் மாலையணிந்த
கோமானை–ஸர்வேச்வரனாகிய உன்னை
அந்தி வரன் அது காட்டும்–ஸந்தியாகாலத்து ஆகாசமானது ஒத்திராநின்றது.

குருமாமணிப் பூண்குலாவித்திகழுந் திருமார்பையுடைய பெருமானே!
மரகதப் பச்சையானது உனது பச்சைமாமலை போன்றமேனியைக் கோட்சொல்லித தருகின்றது,
பசுகுபசுகென்ற திருத்துழாய்மாலை யணிந்திருக்குமழகை ஸந்த்யாராக ரஞ்ஜிதமான ஆகாசம் காட்டுகின்றது என்கிறார்.
திருத்துழாயின் பசுமயும் “கைவண்ணந் தாமரை வாய் கமலம்போலும் கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே“ என்னும்படியான
திவ்யாவயவங்களிற் சிவப்புமான பரபாக சேரபையை அந்திவான் காட்டுமென்றபடி.

கோமானை –முன்னிலையில்வந்த படர்க்கை.

ஓரடைவிலே இப்பாசுரத்தை அழகிய மணவாளச்சீயர் உபந்ய ஸித்தருளுமளவில், இதற்கு இங்ஙனேயும்
பொருள் சொல்லலாமென்று அருளிச்செய்தபடி, கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும்,
கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான வுன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து,
பச்சைமாமலைபோல் மேனியானது ஸமுதாயரூபேண மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது,
அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் சோபையுமான அழகை உற்று நோக்குங்கால்
அந்திவான் போன்றிருக்கின்றது என்று வடமொழியிளாரின் நியாயம் தென்மொழியிலு முண்டாதலால்,
முதலடியிலுள்ள “கலந்து மணி யிமைக்கும் என்றதை மேலே அந்வித்தல் சாலும்.

—————————————————————————————————————————————————————

உலகத்தாரை நோக்கி யுரைக்கிறார். நன்மை தீமைகளைப் பகுத்துணரு முணர்வு உங்களுக்கில்லாமையினால்
‘எது நல்லது, எது தீயது‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டே காலங்கழிப்பதைத் தவிர்ந்து,
‘பகவத் விஷயத்தில் ப்ராவண்யங் கொண்டிருப்பதே நன்று, ஸம்ஸாரத்தில் ஆசை கொண்டிருப்பது தீது‘ என்று
உங்கட்கு நான் சொல்லும் விஷணத்தைத் திடமாகநம்பி, ஆச்ரித ரக்ஷணத்திற்குத் தனிமாலை யிட்டிருக்கு மெம்பெருமானுடைய
ஸர்வ ஸாதாரணமான திருவடிகளைத் தொழுங்கோள், தொழுதால் உங்களுடைய பரபங்களெல்லாம் தொலைந்து போம் என்கிறார்.

அது நன்று இது தீது என்று ஐயப் படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னம் கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து –88-

பதவுரை

அது நன்று இது தீது என்று ஐயம் படாதே–‘அது நல்லதோ? இது கெட்டதோ?‘ என்று ஸந்தேஹப்பட்டுக் கொண்டிராமல்
மது நின்ற தன் துழாய் மார்வன்–தேன்நிறைந்த தண்டுழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய
பொது நின்ற–ஸர்வஜந ஸாதாரணமான
பொன் அம்கழலே–விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே
தொழுமின்–தொழுங்கோள், (அப்படி தொழுதால்)
முன்னம்–முந்துறவே
முழு வினைகள்–ஸம்ஸ்த பாபங்களும்
முடிந்து–உருமாய்ந்து
கழலும்–விட்டு நீங்கும்.

முதலடிக்குப் பொருள் – அது பகவத்விஷயமானது, நன்று நல்லது, இது – ஸம்ஸாரமானது, தீது – பொல்லாத்து, என்று –
நான் சொல்லுமிவ்விஷயத்தில், ஐயப்படாதே எவ்வளவுமாம்.

பொது நின்ற – எம்பெருமானுடைய திருவடிகள் ஸர்வஸாதாரண மென்னத் தட்டுண்டோ?
ராவணசிசுபாலாதிகளுமுட்பட வந்து பணிந்தால் அங்கீகரிக்க ஸித்தமாயிருக்குந் திருவடிகளிறே.

முழுவினைகள் முன்னம் கழலும் –தொழவேணுமென்று நினைத்த மாத்திரத்தில் பாவங்கள் தொலையுமென்கை.
‘முடிந்து‘ என்றதனால் அப்பாவங்கள் வேறொருவரிடத்திற் போய்ச் சேர்வதற்கில்லாமே உரு மாய்ந்து ஒழியுமென்பது பெற்ப்படும்.

——————————————————————————————————————————————————————-

திருமலையின் நிலவளத்தையும் ஓக்கத்தையும் ஒரு சமத்காரமாகப் பேசுகிறாரிதில்.

முடிந்த பொழுதில் குறவாணர் ஏனம்
படிந்து உழு சால் பைம் தினைகள் வித்த -தடித்து எழுந்த
வேய்ங்கழை போய் விண் திறக்கும் வேங்கடமே மேலொரு நாள்
தீங்குழல் வாய் வைத்தான் சிலம்பு –89

பதவுரை

முடிந்த பொழுதில் சூற வாணர்–மரணமடையும் நிலைமையிலுள்ள கிழவர்களான குறவர்கள்
ஏனம் படிந்து உழு சால்–காட்டுப்பன்றிகள் (தங்கள் செருக்காலே மூங்கில்கள் வேர்பறிந்து விழும்படி) படிந்து உழுதசால்களிலே
பை தினைகள் வித்த–புதிய தினைவிதைகளை விதைக்க
தடிந்து–அறுத்துப்போட்ட பின்பும்
எழுந்த–(நிலவளத்தினால்) ஓங்கிவளர்ந்த
வேய்ங்கழை–மூங்கில் தடிகளானவை
போய்–மேலேசென்று
விண் திறக்கும்–ஆகாசத்தை யளாவப்பெற்ற
வேங்கடம்–திருவேங்கடம்
மேல் ஒருநாள்–முன்பொருநாள்
தீம் குழல்–மதுரமான புல்லாங்குழலை
வாய் வைத்தான்–திருப்பவளத்தில் வைத்து ஊதின கண்ணபிரானுடைய
சிலம்பு–திருமலையாம்.

தேன் திரட்டுதல், வேட்டையாடி மிருகங்களைப் பிடித்துவருதல் முதலியன குறவர்களின் தொழிலாகும்.
இத்தொழில்கள் நல்ல வயதிலுள்ள குறவர்கட்குச் செய்ய இயலுமேயன்றி, கிழக்குறவர்கட்குச் செய்ய இயலா.
ஆகவே, அவர்கள் கிருஷியினால் ஜீவிக்கப் பார்ப்பார்கள், அது தன்னிலும் தாங்களே உழுது பயிரிடுதலும் அவர்கட்கு இயலாது.
கலப்பை பிடித்து உழமாட்டாத முடிந்தபொழுதிற்குறவாண ராதலால். பின்னை அவர்கள் என செய்வார்களென்னில்,
திருமலையிற் சில வீடாக மூங்கில்கள் வேர் பறியுண்டு விழத்தள்ளி அந்நிலங்களை மூக்காலே உரோசி ஒருகால் உழுதுவைக்கும்,
அத்தகைய நிலங்களிலே இக்கிழக்குறவர்கள் தினைகளை விதைத்து ஜீவிப்பார்கள்.
ஏற்கனவே பன்றிகள் தள்ளியிட்டிருந்த மூங்கில்கள் பயிர்க்குக்களையாக வொண்ணாதென்று அவற்றை இக்குறவர்கள்
நன்றாகக் களைந்து போட்டுவிட்டுப் போனாலும் அவை நிலப்பண்பினால் பண்டுபோவே வளர்ந்து ஆகாசத்தை அளாவுகின்றனவாம்.
இப்படிப்பட்டநிலவளம் வாய்ந்த திருமலை முன்பு ஸ்ரீக்ருஷ்ணனாய்த் திருவ்வதரித்து வேணுகாநம் பண்ணின பெருமான் வாழுமிடம் என்றாராயிற்று.

குறவர் தங்கள் சாதித்தொழிலை விட்டு க்ருஷியில் இறங்கினதற்குக் காரணங் கூறுவது போலும் ‘முடிந்தபொழுதின்‘ என்ற அடைமொழி.
சரமதசையிலே யிருக்கின்ற குறவர் என்கை வாணர் –வாழ்நர் குறவராக வாழ்பவர்கள என்கை.
சால் –‘ஒருசால் உழுத்து, இரண்டுசால் உழுத்து‘ என்று உலகவழக்க முள்ளமை உணர்க.

சிலம்பு –மலைக்குப் பெயர்.

—————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் திருமலையின் மூங்கிற்பணைகளின் வளர்த்தியைச் சொன்ன ப்ரஸங்த்தாலே
உலகளந்த பெருமானுடைய திருத்தோள்களின் திருவளர்த்தி நினைவுக்குவர, அதனைப் பேசி யநுபவிக்கிறாதில்,

சிலம்பும் செறி கழலும் சென்றிசைப்ப விண் ஆறு
அலம்பிய சேவடி போய் அண்டம் புலம்பிய தோள்
எண்டிசையும் சூழ இடம் போதாது என் கொலோ
வண் துழாய் மால் அளந்த மண் -90-

பதவுரை

சிலம்பும்–(திருவடிகளில் சாத்தின) நூபுரங்களும்
செறி கழலும்–செறிவாக அணிந்த வீரத்தண்டைகளும்
சென்று இசைப்ப–எங்கும் ஒலிக்க
விண் ஆறு–ஆகாச கங்கையிலே
அலம்பிய–விளக்கப்பட்ட
கே அடி–திருவடிகளானவை
அண்டம் போய்–அண்டபித்தியளவும் நீண்டு போனபோது,
புலம்பிய–(அனைவராலும்) துதிக்கத் தக்க
தோள்–திருத்தோள்கள்
எண் திசையும் சூழ–எட்டுத் திசைகளையும் வியாபிக்க
இடம் போதாது–இடம் போராவில்லை,
வண் துழாய் மால்–அழகிய திருத்துழாய் மாலையணிந்த எம்பெருமான்
அளந்த–அளந்துகொண்ட
மண்–பூமியானது
என் கொல்–(சிறியதே போலும்)

எம்பெருமானளந்த இப்பூமண்டலம் மிகப்பெரிது என்கிறார்களே, அப்படி பெரிதாக எனக்குத்தோன்ற வில்லை,
அவன் உலகளந்த காலத்து எண்டிசையும் விம்மவளர்ந்த திருத்தோள்கள் செருக்குண்ணாமல் விசாலமாக
அடங்கியிருப்பதற்று இடம் போதவில்லையே, அப்படியிருக்க, “பெரிது பெரிது புவனம் பெரிது“ என்கிறார்களே,
இது என்கொல் என்கிறார்.

“வண்டுழாய் மாலளந்தமண்“ என்றவிடத்து ‘அளந்த‘ என்பதை ‘அளந்தது‘ என்றதன் குறையாகக் கொண்டும் உரைக்கலாம்,
வண்டுழாய்மால் மண் அளர்ந்தது என்கொலோ அளப்பதாவது அடியை மாறிமாறியிட்டுச் செய்யவேண்டுவது,
திருத்தோள் வளர்த்திக்கே இடம் போரவில்லையென்றால் எம்பெருமான் மண்ணளந்தானென்று எப்படி சொல்லமுடியும்? என்கை.

———————————————————————————————————————————————–

எம்பெருமானுடைய சில லீலைகளை அநுபவித்துப் பேசுகிறார்.

மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டுமாற்றாதாய்
வெண்ணெய் விழுங்க வெகுண்டு ஆய்ச்சி கண்ணிக்
கயிற்றினால் கட்டத் தான் கட்டுண்டு இருந்தான்
வயிற்றினோடு ஆற்றா மகன் –91-

பதவுரை

வயிற்றினோடு ஆற்ற மகன்–வயிற்றைக் கொண்டு ஆறியிருக்க மாட்டாத (கண்ணனாகிற) பிள்ளையானவன்
மண் உண்டும்–(பிரளயத்தில்) உலகங்களை யெல்லாம் அமுது செய்தும்)
பேய்ச்சி–பூதனையினது
முலை–(நஞ்சு தீற்றின) முலையை
உண்டும்–அமுது செய்தும்
ஆற்றதாய்–த்ருப்தி பெறாதவனாய்
வெண்ணெய்–வெண்ணெயை
விழுங்க–(களவு செய்து) விழுங்கின வளவிலே
ஆய்ச்சி–யசோதைப்பிராட்டி
வெகுண்டு–கோபங்கொண்டு
கண்ணி கயிற்றினால்–பல முடிச்சுகளை யுடைய தாம்பினால்
கட்ட–உரைக்கக்கட்டிப் போட,
தான்–ஸர்வசந்தனான தான்
கட்டுண்டு இருந்தான்–(அதற்கொரு பரிஹாரம் செய்து கொள்ளமாட்டாமல்) கட்டுண்டிருந்தான்

இதில் “வயிற்றினோடாற்றாமகன்“ என்றருளிச்செய்த அழகை என் சொல்வோம்.
எத்தனை பொருள்களையிட்டு நிரப்பினாலும் நிரம்பாதே ‘இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ? இன்னமும் ஏதேனும் கிடைக்குமோ?
என்றே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வயிறாகையாலே அதை வைத்துக்கொண்டு பரிக்கமாட்டாத மகன் என்றவாறு.
அவன் இப்படிப்பட்ட வயிறு படைத்தவனென்பது எங்ஙனே தெரிகின்றதென்ன, முன்னடிகளிலருளிச்செய்கிறார்.
உலகங்களையெல்லாம் அமுதுசெய்து பார்த்தான், அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை,
பெற்ற தாய்போல் வந்தபேய்ச்சியின் பெருமுலையைச் சுவைத்துண்டுபார்த்தான் அதிலும் வயிறு த்ருப்திபெறவில்லை,
ஆய்ச்சிகள் உறிகளிலே சேமித்து வைத்த வெண்ணெயெல்லாம் வாரியுண்டான், ஒன்றிலும் த்ருப்திபெற்றிலன்,
வெண்ணெய் களவு செய்த குற்றத்திற்காகக் கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்டதொன்றினால் த்ருப்திபெற்றானத்தனை.

கண்ணபிரான் வெண்ணெய் களவுசெய்கிற தன்னை யசோதைப் பிராட்டி அடிக்கடி தாம்பினால்கட்டி வருத்துகின்றாளென்று
வீட்டிலுள்ள கயிற்றையெல்லாம் துண்டுதுண்டாக அறுத்து வைத்திட்டுப் பின்பே வெண்ணெய் திருடப்போவன்,
அவன் இவனைப் பிடித்துக்கொண்ட பின்பு துண்டுதுண்டான அக்கயிற்றையெல்லாம் ஒன்றோடொன்று முடிபோட்டு
ஒரு தாம்பு வடிவமாக்கி அதுகொண்டு கண்ணனைக்கட்டுவள், ஆனது பற்றிக் கயிற்றுக்குக் கண்ணி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட தாம்பினால் கட்டும்போது தன் உடம்புக்கு எட்டம் போராதபடியான அத்தரம்பினால் தன்னைக் கட்டமுடியாதபடி
எளிதில் தன்னைத் தப்புவித்துக்கொள்ள வல்லவனாயினும்,
தனது ஸௌசீல்யம்
ஸௌலப்யம்
ஆச்ரித பாரதந்திரியம் முதலிய
சீலங்களை வெளியிடுவதற்கென்றே பரத்வநிலையைத் தவிர்ந்து மநுஷ்ய ஸஜாதீயனாக அவதரித்திருக்கிற தான்
உரலோடு கட்டுண்டிருக்கை முதலிய இவ்வகைகளினால்தான் அக்குணங்களை விளங்கச்செய்து கொள்ள வேணுமென்று கொண்டு,
ஒரு சுற்றுக்குப் போரும்படி உடம்பைச் சுருக்கி அமைத்துக் கொள்வனாதலால் இது தோன்றக் “கட்டுண்டிருந்தான்“ எனப்பட்டது.

வெகுண்டு –இத்தனை வெண்ணெயை வாரியுண்டால் ஜரிக்குமோ என்று சீற்றங்கொண்டு.

———————————————————————————————————————————————————-

எம்பெருமானோவென்னில், தாயும், தந்தையுமா யிவ்வுலகினில் வாழும் வாயுமீசன்,
அவன் ஸகல்லோக பிதாவாய்க் கொண்டு எல்லாரையும் தனக்கு மக்களாக வுடையவனேயன்றித் தான்
ஒருவற்கும் மகனாயிருக்கத்தக்கவனல்லன்,

மகன் ஒருவர்க்கு அல்லாத மாமேனி மாயன்
மகனாமவன் மகன் தன் காதல் மகனை
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்து என் நெஞ்சே நினை –92

பதவுரை

என் நெஞ்சே–எம் மனமே!
ஒருவற்கு மகன் அல்லாத–(கருமமடியாக) ஒருவனுக்கு மகனாகப்பிறந்தத் தகாத (ஸர்வலோக பிதாவான)
மா மேனி–சிறந்த திருமேனியையுடைய
மாயன்==ஆச்சர்யபூதனாய்
மகன் ஆமவன்–(வஸுதேவர்க்குப்) பிள்ளையாகப் பிறந்தவனாய்
மகன் தன்–தனது மகனான பிரத்யும்நனுடைய
காதல் மகனை==இஷ்ட குமாரனான ஆநிருத்தாழ்வானை
சிறை செய்த–சிறையிலேவைத்த
வாணன்–பாணாஸுரனுடைய
தோள்–தோள்களாயிரத்தையும
செற்றான்–அறுத்தொழித்தவனான பெருமானுடைய
கழலே–திருவடிகளையே
நிறை செய்து–பூர்த்தியாக
நினை–சிந்தை செய்வாயாக

அஸ்மதாதிகளைப் போலே கருமங் காரணமாக அவன் பிறவாவிடினும்
அநுக்ரஹம் காரணமாகப் பலபல யோனிகளிலும் பிறக்குமடைவிலே நந்தன் மகனாக ஒரு பிறவி பிறந்தான்.
அப்பிறவியில், தனக்கொரு மகனும் அவனுக்கொரு மகனும் ஆகப் பேரன்வரையில் பெற்றுவிட்டான்,
(தன் மகன் – ப்ரத்யம்நன் அவனது மகன் –அநித்ருதன்) பாணாசுரனுடைய பெண்ணாகிய உஷை என்பவள்
ஒருநாள் அவ்வநிருத்தனோடே தான் கூடியிருந்ததாகக் கனாக்கண்டு தனது தோழியான சித்திரலேகையின் யோகவித்தை
மஹிமையினால் அவனை த்வாரகையில் நின்றும் தூக்கிக்கொண்டுவரச்செய்து அவனோடுபோகங்களை அநுபவித்துக்கொண்டுவர
இச்செய்தியைக் காவலாளராலறிந்த பாணாசுரன் தன் சேனையுடன் அநிருத்தனை எதிர்த்து மாயையினாலே பொருது
நாகாஸ்திரத்தினாற் கட்டிப்போட்டிருக்க த்வாரகையிலே அநிருத்தனைக்காணாமல் யாதவர்களெல்லாரும் கலங்கியிருந்தபோது
நாரத முனிவனால் ஸமாசாரமறிந்த கண்ணபிரான் பெரியதிருவடியின் மேலேறிக்கொண்டு பலராமன் முதலானாரோடு
பாணபுரத்திற்கு எழுந்தருளிக் கார்த்திகையானுங் கரிமுகத்தானும் கனலும் முக்கண்மூர்த்தியும மோடியும் வெப்பும்
முதுகு காட்டிப் போகும்படிசெய்து சக்ராயுதத்தைப் பிரயோசித்துப் பாணனது தோள்களையும் தாரைதாரையாய் உதிரமொழுக அறுத்தான்,
அப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளையே தமது திருவள்ளத்தில் நிறைத்துக்கொள்ள விரும்பினாராயிற்று.

————————————————————————————————————————————————————————–

நினைத்து லகிலார் தெளிவார் நீண்ட திரு மால்
அனைத்து லகுமுள் ஒடுக்கியால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத்துயின்றானை
உள்ளத்தேவை நெஞ்சே உய்த்து –93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்டதிருமால் –அப்ரமேயமான பெருமைபொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி–ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

———————————————————————————————————————————————————–

கீழ்ப்பாட்டில் “உள்ளத்தே வை நெஞ்சே! உய்த்து“ என்றபடியே பலிப்பது போல இருள் தருமாஞாலத்தில்
ஒருவராலும் கண்டுபிடிக்க முடியாத எம்பெருமானாகிற பரம்பொருளை ஞானமாகிற சிறந்த விளக்கின்
ஸஹாயத்தினால் தேடிக் கண்டுபிடித்து நெஞசாகிற வலைக்குள்ளே இருத்திவிட்டேன்.
அப்பெருமான் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து போக மாட்டாமையாலே நெஞ்சு தன்னிலையே அவனுக்கு
என்னெஞ்சினுள்ளே யாயிற்று என்கிறார்.

உய்த்து உணர்வு என்னும் ஒளி கொள் விளக்கேற்றி
வைத்து அவனை நாடி வலைப்படுத்தேன் மெத்தனவே
நின்றான் இருந்தான் கிடந்தான் என்னெஞ்சத்து
பொன்றாமை மாயன் புகுந்து –94-

பதவுரை

உய்ந்து உணர்வு என்னும்–விவேக வுணர்ச்சி யாகிற
ஒளி கொள் விளக்கு–உஜ்வலமான தீபத்தை
ஏற்றி–ஏற்றி
அவனை நாடி வைத்து–அவ் வெம்பெருமானைத் தேடிப் பிடித்து
வலைப் படுத்தேன்–ஸ்வாதீனப் படுத்திக் கொண்டேன்
மாயன்–அப் பெருமான்
பொன்றாமை–குறைவின்றி
என் நெஞ்சத்து–என்னுடைய ஹ்ருதயத்திலே
புகுந்து–வந்து சேர்ந்து
மெத்தென–மெதுவாக
நின்றான்–(முதலில்) நின்றான்
இருந்தான்–(பிறகு) வீற்றிருந்தான்,
கிடந்தான்–(அதன் பிறகு) பள்ளி கொண்டருளினான்.

உலகத்திற்காணும் விளகுக்கு எண்ணெய் திரி முதலியவற்றின் சேர்க்கையினால் அழுக்கேறுதலுண்டு,
ஞானமாகிற விளக்கு அங்ஙனன்றியே நிர்மலமாயிருக்கு மென்பதைக் காட்டும் ‘ஒளி கொள்‘ என்ற அடைமொழி.

ஊரகமும் பாடகமும வெஃகாவும் பட்டபாடு படுகிறது என்னெஞ்சு என்கிறார் போலும் பின்னடிகளில்.

பொன்றாமை – நான் நசித்துப் போகாதபடியாக என்றுமாம்.
ஹ்ருதயத்தினுள்ளே நிற்றலிருத்தல் கிடத்தல்களுக்க விச்சேத மில்லாதபடியாக என்றுமாம்.

————————————————————————————————————————————————————-

புகுந்து இலங்கும் அந்திப் பொழுதத்து அரியாய்
இகழ்ந்த இரணியனதாகம்-சுகிர்ந்து எங்கும்
சிந்தப் பிளந்த திருமால் திருவடியே
வந்தித்து என் நெஞ்சம் வாழ்த்து -95

பதவுரை

அந்தி புகுந்து–ஸாயங்காலமானது வந்து சேர்ந்து
இலங்கும் பொழுதத்து–விளங்கும் ஸமயத்திலே
அரி ஆய்–நரஸிம்ஹ மூர்த்தியாய்த் திருவவதரித்து,
இகழ்ந்த இரணியனது ஆகம்–நிந்தித்துக்கொண்டிருந்த ஹிரண்யாஸுரனது சரீரத்தை
சுகிர்ந்து–பல கூறாக வகிர்ந்து
எங்கும் சிந்த–(ரத்தம்) எங்கும் சிந்தும்படியாக
பிளந்த–பிளந்தொழித்த
திருமால்–எம்பெருமானுடைய
திருஅடியே–திருவடிகளையே
என் நெஞ்சமே–எனது மனமே!
வந்தித்து வாழ்த்து–தலையார வணங்கி வாயாக வாழ்த்து

அரியாய் – அரி என்பதைத்தற்சம வடசொல்லாகக் கொண்டால் இரணியனுக்கு அடைமொழியாக அந்வயிக்கும்
(வடமொழியில் அரி என்னுஞ்சொல் விரோதியென்னும் பொருளது) பகவத் பாகவத விரோதியாய்க் கொண்டு
தூஷித்து வந்த இரணியன் என்றதாகிறது. இனி, சிங்கமென்னும் பொருளதான ஹரி என்ற வடசொல்
அரியெனத் திரிந்த்தாகக் கொண்டு ‘நரசிங்க மூர்த்தியாகி‘ என்று எம்பெருமானிடத்து அந்வயித்தலும் பொருந்தும்.

சிந்த – ரத்தவெள்ளம் சிந்தும்படியாக (அன்றியே) உடல் சிந்நபிந்நமாம்படியாக என்றுமாம்.

—————————————————————————————————————————————————————-

“வடிவிணையில்லார் மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடி“ என்கிற படியே
புஷ்பஹாஸ ஸுகுமாரமான திருக்கைகள் படைத்த பிராட்டிமார் பிடித்தாலும் கூசிப் பிடிக்க வேண்டும்படி
அவ்வளவு ஸுகுமாரமான திருமால் திருவடிகள் – ஸர்வகாலமும் நித்யஸூரிகள் தமது மணி மகுடங்களைச் சாய்ந்து
வணங்கப் பெறுதலால் தழும்பாமே என்று வயிறு பிடிக்கிறார்.

வாழ்த்திய வாயராய் வானோர் மணிமகுடம்
தாழ்த்தி வணங்கத் தழும்பாமே-கேழ்த்த
அடித்தாமரை மலர் மேல் மங்கை மணாளன்
அடித்தாமரையா மலர் –96-

பதவுரை

கேழ்த்த அடி–பெருத்த தாளையுடைய
தாமரை மலர் மேல்–தாமரைப்பூவிற் பிறந்த
மங்கை–பெரிய பிராட்டிக்கு
மணாளன்–வல்லபனான எம்பெருமானுடைய
அடி ஆம் தாமரை அலர்–திருவடிகளாகிற தாமரைப் பூக்களை
வானோர்–தேவர்
வாழ்த்திய வாயர் ஆய்–வாயால் வாழ்த்துகின்ற வராய்க் கொண்டு
மணி மகுடம்–மணிகளழுத்தின மகுடத்தை
தாழ்த்தி–தாழ விட்டு
வணங்க–வணங்குவதனால்
தழும்பு ஆமே–(அத்திருவடிகள்) தழும்பேறிக் கிடக்கின்றனவே.

பொய்கையாழ்வார் “தழும்பிருந்த தாள் சகஞ்சாடி“ என்று –கிருஷ்ணாவதாரத்தில் சகடத்தைச் சீறி உதைத்ததனால்
திருவடி தழும்பேறப் பெற்றதாக அருளிச்செய்தார்,
நித்யஸூரிகள் நித்தியம் வணங்குவதால் தழும்பேறி விடுவதாக இவ் வாழ்வார்ருளிச் செய்கிறார்
கிரீடங்கள் பட்டுப் பட்டுத் திருவடிகள் காய்ப்பு காய்த்தல் தகும்.

தழம்பாமே –இப்படி ஓயாமல் வானோர் வணங்கிக் கொண்டிருந்தால் திருவடிகள் தழும்பேறி விடாதோ என்கிறாரென்றுமாம்.

——————————————————————————————————————————————————————————–

வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுகின்ற பிரமன் சிவனிந்திரன் முதலானோர்க்கும் சிந்தைக்கும்
கோசரமல்ல னெம்பெருமான் என்கிறார்.

அலர் எடுத்த உந்தியான் ஆங்கு எழிலாய
மலர் எடுத்த மா மேனி மாயன் அலர் எடுத்த
வண்ணத்தான் மா மலரான் வார் சடையான் என்று இவர்கட்கு
எண்ணத்தான் ஆமோ இமை –97-

பதவுரை

அலர் எடுத்த உத்தியான்–தாமரைப்பூ ஓங்கி யிருக்கப் பெற்ற திருநாபியை யுடையவனும்
எழிலாய மலர் எடுத்த–அழகிய காயம் பூப்போன்ற
மா மேனி–பெரிய திருமேனியை உடையனுமான
மாயன்– எம்பெருமான்
அவர் எடுத்த வண்ணத் தான்–காஞ்சிமலர்போன்ற நிறத்தை யுடையனான இந்திரனென்ன
மா மலரான்–தாமரைப்பூவிற் பிறந்த பிரமனென்ன
வார் சடையான்–நீண்ட ஜடையை யுடையனான சிவனென்ன
என்ற இவர்கட்கு-ஆகிய இத்தேவர்கட்கு
இமை–சற்றேனும்
எண்ணத்தான் ஆமோ–நெஞ்சால் நினைக்கவுங் கூடியவனோ

முதலடியிலுள்ள அலர் என்றது தாமரைப்பூவைச் சொல்லுகிறது.
எம்பெருமானது திருநாபியில் தாமரைப்பூவுள்ளது ப்ரஸித்தமே.
இனி இரண்டாமடியில் மலர் என்றது காயம்பூவைச் சொல்லுகிறது,
எம்பெருமானது திருமேனிநிறம் காயாம்பூ வண்ணமென்பதும் ப்ரஸித்தமே.

இனி “அலரெடுத்த வண்ணத்தான்“ என்று இந்திரனுக்கு வாசகமானவிதனில்
அலர் என்றது காஞ்சிமலரைச் சொல்லுகின்றதென்றுண்ர்க.
திருவிளையாடற்புராணம் – திருவாலவாய்க் காண்டம் – தருமிக்குப் பொற்கிழியளித்தபடலத்தல் (ப்னிரண்டாவது செய்யுள்)
“செங்கதிர் மேனியான் போல விழ்ந்தன செழும்பலாசம், மங்குலூர்ச் செல்வன்போல மலர்ந்தன காஞ்சி,
திங்கட் புங்கவன் போலப் பூத்த பூஞ்சினை மாவம், செங்கையங்கதிராழியான் போல்லர்ந்தன விரிந்தகாயா.“
என்றதில் இரண்டாமடியில் இந்திரனது நிறம் காஞ்சிமலர் நிறமென்று காட்டப்பட்டிருத்தல் காண்க.
(மங்குலூர்ச்செல்வன் –மேகாவாஹனனான இந்திரன்) காஞ்சிமலரென்பது கறுத்தபயறு நிறங்கொண்டிருக்குமென்று கூறுவர்.

———————————————————————————————————————————————————————————-

க்ருஷ்ணாவதாரத்தில் தன்னை விழுங்கிக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்டு மிகப்பெரிய குதிரைவடிவங் கொண்டு
வந்த கேசி யென்னு மஸுரனை வாய்ப்பிளந்தொழித்த கண்ணபிரானே நாகத்தில் நின்றும் நம்மைக் காத்தருள்வனென்கிறார்.

இமம் சூழ் மலையும் இரு விசும்பும் காற்றும்
அமம் சூழ்ந்து அற விளங்கித் தோன்றும் -நமன் சூழ்
நரகத்து நம்மை நணுகாமல் காப்பான்
துரகத்தை வாய் பிளந்தான் தொட்டு –98-

பதவுரை

இமம் சூழ் மலையும்–பனியாலே சூழப்பட்டிருகிற இமய மலையையும்
இரு விசும்பும்–பெரிய ஆகாயத்தையும்
காற்றும்–வாயுவையும்
அமம் சூழ்ந்து–(பருமனாலும் உயர்த்தியாலும் வேகத்தாலும்) திரஸ்கரித்து
அற விளங்கி தோன்றும்–மிகவும் விளங்கிக் கண்ணெதிரே வந்து தோன்றின
துரகத்தை–குதிரை வடிவு கொண்டு வந்த கேசியென்னுமசுரனை
தொட்டு–திருக் கையால் பற்றி
வாய் பிளந்தான்–(அவனது) வாயைக் கிழிந்துப் போட்ட பெருமான்
நம்மை–நம்மை
நமன் சூழ் நரகத்து நணுகாமல் கரப்பான்–யமனைத் தலைவனாகக்கொண்ட நரகத்திலே புகவொட்டாமல் ரக்ஷித்தருள்வன்

முன்னடிகளிரண்டும் அவ்வசுரக் குதிரைக்கு அடைமொழி. பருமனில் மலையைவென்றிருந்த்தாம்,
உய்த்தியில் ஆகாயத்தை அதிக்ரமித் திருத்ததாம், லோகத்தில் (அல்லது வலிமையில்) வாயுவை வென்றிருந்ததாம்.
‘மலை‘ என்று பொதுவாகச் சொன்னால் போராதோ, ‘இமஞ் சூழ்மலை‘ என்று விசேஷித்துச் சொல்லுவானேன்? என்னில்,
ஸப்த குல பர்வதங்களில் இமயமலை முதலிற் கண்கிடப் பட்டிருப்பதால் இதனை உபலக்ஷணமாகக் கொண்டு
குலாசலங்களேழையுங் கொள்ளவேணு மென்பதற்காக வென்க.

அமஞ்சூழ்ந்து – அமமாவது நோய், மலையும் வீசும்பும் காற்றும் நோவுபடும்படாக,
எனவே இவைற்றைத் திரஸ்கரித்து மேலாக விளங்குகின்ற குதிரை என்றதாம்.
துரகம் – வடசொல், வேகமாகச் செல்வது என்று காரணக் குறி.

———————————————————————————————————————————————————————————–

இப்பாட்டும் மேற்பாட்டும் சா த்துப் பாசுரங்கள்,
திருக்கச்சி மாநகரில் திருக்கோயில் கொண்டிருக்கும் அஷ்டபுஜத் தெம்பெருமான் திருவடிகளே சரணம் என்கிறார்.

தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அந்நான்று-குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்கு சார்வு –99-

பதவுரை

தொட்ட–ஏந்தின
படை எட்டும்–எட்டு திவ்யாயுதங்களாலும்
தோலாத–தோல்வி யடையாத
வென்றியான்–ஜய சீலனும்
அட்டபுய காத்தான்–கச்சித் திருவட்டபுயகரத் திருப்பதியிலுள்ளவனும்
அந்நான்று–முன்பொரு காலத்தில்
குட்டத்து–நீர்ப் பொய்கையிலே
கோள் முதலை துஞ்ச–மிடுக்குடைய முதலை முடியும்படியாக
குறித்து எறிந்த சக்கரத்தான்–இலக்குத் தப்பாமல் பிரயோகிக்கப்பட்ட திருவாழியையுடைய பெருமானது
தாள் முதலே–பாதமூலமே
நங்கட்கு–எங்களுக்கு
சார்வு–பரம ப்ராப்யம்

தொட்டபடை யெட்டும் தோலாத வென்றியான் – திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் திருவட்டபுயகரத்
தெம்பெருமானை மங்களாசாஸ நஞ்செயும் திருப்பதிகத்தில் (2-8-3)
“செம்பொன்னிலங்கு வலங்கை வாளி தின்சிலை தண்டொது சங்க மொள்வாள், உம்பரிருசுட ராழியோடு
கேடக மொண்மலர் பற்றியெற்றே . . . அட்டபுயகரத்தே னென்றாரே“ என்ற பாசுரம் இங்கு அநுஸந்திக்கத்தகும்.
1. வாளி, 2. சிலை, 3. தணடு, 4. சங்கம், 5. வாள், 6. ஆழி, 7. கேடகம், 8. மலர் ஆக
திவ்யாயுதங்களெட்டையும் திருவுள்ளம் பற்றித் தொட்டப்டை யெட்டும் என்கிறாரிங்கு.
இப்படைகளைக்கொண்டு எங்கும் வெற்றியே பெற்றுனருவானென்கிறது.
இவற்றைத் தரிக்குமிடத்து ஒரு ஆயாஸமின்றியே பூவேந்தினாற்போலே எந்தியிருப்பது தோன்ற, ‘தொட்ட‘ எனப்பட்டது.

அட்ட புயகரத்தான் – அட்ட புயகரத்திலுள்ளவன் எறு பொருள். ‘அஷ்டபுஜன்‘ என்பது எம்பெருமானுடைய திருநாமம்.
எட்டுத் திருக்கைகளையுடையவன் என்று பொருள். க்ருஹம் என்னும் வடசொல் கரமெத்திரியும்,
ஆகவே, அஷ்டபுஜனுடைய க்ருஹம் – அட்டபுயகரம். (திவ்யதேசத்தைச் சொன்னபடி) அவ்விடத்திலுள்ளவன் என்றதாயிற்று.
‘அட்ட புயவரகம்‘ என்பது அட்டபுயகரகம் என மருவிற்றென்றலும் பொருந்தும்.
அகரமாவது அக்ரஹாரம். திவ்யதேசத்தை முன்னிட்டே எம்பெருமானைப் பேசவேண்டுமென்னும் நியதி
ஆழ்வார்கட்கு உள்ள தாதலால் ‘அஷ்டபுஜன்‘ என்னாமல் ‘அட்டபுயகரத்தான்‘ என்ன வேண்டிற்றென்ப.

அப்பெருமான் பஞ்சேந்திரியங்களாகிற பலமுதலைகளின் வாயிலே அகப்பட்டுத் துடிக்கின்ற நம்மைக் காத்தருள
வேண்டித் திருவட்டபுயகரத்திலே வந்து ஸந்நிதிபண்ணா நின்றான், அவன் திருவடிகளே தஞ்சம் – என்றாராயிற்று.

——————————————————————————————————————————————————————————————

கீழ்ப்பாட்டில் ‘எம்பெருமான் திருவடிகளே சரணம்‘ என்றார், இப்பாட்டில் ‘பிராட்டி திருவடிகளே சரணம் என்கிறார்.
எம்பெருமான் திருவடிகளே நேரே பற்றுவதற்கில்லையே,
“நீரிலே நெருப்புக் கிளருமாபோலே குளிர்ந்த திருவுள்ளத்திலே அபராதத்தாலே சீற்றம் பிறந்தால் பொறுப்பது இவளுகாக“
என்கிறபடியே ஸர்வாபராதங்களையும் பொறுப்பிக்கவல்ல பெரிய பிராட்டியார் புருஷகாரமாகவே எம்பெருமானைப் பற்ற
வேண்டியிருத்தலால் அப்புருஷகாரவரணத்தை இப்பாட்டால் செய்து இப்பிரபந்தத்தையும் தலைக்கட்டுகிறார்.

சார்வு நமக்கு என்றும் சக்கரத்தான் தண் துழாய்த்
தார் வாழ் வரை மார்பன் தான் முயங்கும் காரார்ந்த
வானமரும் மின்னிமைக்கும் வண் தாமரை நெடும் கண்
தேனமரும் பூ மேல் திரு –100-

பதவுரை

சக்கரத்தான்–திருவாழியைக் கையிலே உடையவனும்
தண் துழாய் தார் வாழ்–குளிர்ந்த திருத்துழாய் மாலை விளங்கப்பெற்ற
வரை மார்பன் தான்–மலைபோன்ற திருமார்பை யுடையனுமான எம்பெருமானால்
முயங்கும்–ஸம்ச்லேஷிக்கப்படுகின்றவளாய்
கார் ஆர்ந்த வான்–மேகங்கள் செறிந்த ஆகாசத்திலே
அமரும்–நிலைத்து நிற்கக் கூடியதான
மின்–மின்னல்போல
இமைக்கும்–விளங்குகின்றவளாய்
வண் தாமரை–அழகிய தாமரைப் பூப்போன்ற
நெடு–நீண்ட
கண்–திருக்கண்களை யுடையளாய்
தேன் அமரும் பூமேல்–தேன் நிறைந்த தாமரைப் பூவில் வஸிப்பவளான
திரு–பெரிய பிராட்டியார்
நமக்கு என்றும் சார்வு–நமக்கு எப்போதும் சரணம்.

“தேனமரும் பூமேல் திரு நமக்கு என்றும் சார்வு“ என்று அந்வயிப்பது. நடுவிலுள்ளவை பிராட்டிக்கு விசேஷணங்கள்
“சக்கரத்தான் தண்டுழாய்த்தார்வாழ் வரைமார்பன் தான் முயங்கும்“ என்பது ஒரு விசேஷணம்,
“காரார்ந்த வானமரும் மின்னிமைக்கும்“ என்பது இரண்டாம் விசேஷணம்,
“வண் தாமரை நெடுங்கண்“ என்பது மூன்றாம் விசேஷணம்.

இவளுடைய போக்யதையைக் கண்டு ஒரு நொடிப்பொழுதும் விடமாட்டாமல் எம்பெருமான் இவளை
நித்ய ஸம்ச்லேஷம் செய்திருக்கிறானென்பது முதல் விசேஷணத்தின் கருத்து.
எம்பெருமானுடைய வைலக்ஷண்யம் சொல்லவேண்டில் “அகலகில்லேளிறையுமென்று அலர்மேல்மங்கையுறை மார்பா!“ என்று
பிராட்டிமேல் விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுவர்கள், பிராட்டிக்கு வைலக்ஷணயம் சொல்லவேண்டில் இவளை
அவன் தான் மேல்விழுந்து அநுபவிப்பதாகச் சொல்லுங்கள் இரண்டு படியும் தகுமிறே.

நிலைநின்ற விளங்கமாட்டாத மின்னல்போன்றிராதே நிலைநின்று விளங்குவதொரு விலக்ஷணமான மின்னல்போலே
பிரகாசிப்பவளென்கிறது இரண்டாம் விசேஷணம். மின்னல் மேகத்திலே ஜ்வலிக்கும், இவளும் காளமேகத் திருவுருவிலே.

வண்தாமரை நெடுங்கண் – ஸ்த்ரீகளின் கண்ணழகை வர்ணிக்குமிடத்து
“குவளையங் கண்ணி“ எறும் “கருங்கண்ணி“ என்றும் “அஸிதேக்ஷணா“ என்றும் வர்ணிப்பதே
பொருத்தமுடைத்தென்றும் தாமரைமலர் போன்றதாக வருணித்தல் சிறவாதென்றும்,
அவ்வுவமை புருஷோத்தமானது திருக்கண்ணுக்கே பொருந்துமென்றும் சிலர் சொல்லுவர், அது பொருந்தாது,
‘பத்மாக்ஷி ‘பங்கஜாக்ஷி‘ என்ற விசேஷணங்களும் மஹாகவி நிபந்தங்களில் பெரும்பாலுங் காணாநின்றோம்,
அன்றியும், ஸ்ரீஸூக்தத்தில் “பத்மாலயே பத்மிநி பத்மஹஸ்தே பத்மப்ரியெ பத்ம தளாயதாக்ஷி“ என்று
ஓதப்பட்டிருத்தலால் அதை படியொற்றின வண்டாமரை நெடுங்கண் என்ற இவ்விசேஷணம் மிகப்பொருத்தமானதே யென்க.
கண்களின் நீட்சிக்குத் தாமரையிதழ்களும் கருமைக்கு குவளைமலரும் உவமையென்றுணர்க.

இப்படிப்பட்ட பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று தலைக்காட்டினாராயிற்று.
ஆக பெரிய பிராட்டியாரே நமக்குத் தஞ்சம் என்று தாயார் திருமடியிலே தலை சாய்ப்போம்

————————————————————————————————————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading