மூன்றாம் திருவந்தாதி -பாசுரம் -93-ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

இப்படி இருக்கிற
எம்பெருமான் உடைய ஆச்சர்ய  சேஷ்டிதங்களை
லோகத்திலே ஒருவரும் அறிந்து
ஆஸ்ரயிக்க வல்லார் இல்லை –

ஆனாலும்
நெஞ்சே
நீ யவனை உன்னுடைய ஹ்ருதயத்திலே கொடு புகுந்து வை கிடாய்
என்கிறார் –

————————————————————————————

நினைத்து உலகிலார் தெளிவார் நீண்ட திருமால்
அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு
வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை
உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  —–93-

பதவுரை

நெஞ்சே–ஓமனமே!
நீண்ட–(முன்பு உலகங்களை அளப்பதற்காக) வளர்ந்து
திருமால்–ஸ்ரீய பதியானவனும்
நீண்டதிருமால் –அப்ரமேயமான பெருமைபொருந்திய திருமால் என்னவுமாம்.
கனைத்து உலவு வௌளத்து–கோஷித்துக் கொண்டு எங்கும் பரந்த பிரளய வெள்ளத்திலே
ஒர்பிள்ளை ஆய் அனைத்து உலகும் உள்ஒதுக்கி–ஒப்பற்ற சிறு குழந்தையாய்
அனைத்து உலகும்–உலகங்களை யெல்லாம்
உள் ஒடுக்கி–திருவயிற்றினுள்ளே அடக்கி
ஆல் மேல்–ஆலந்தளிரின் மேலே
மெள்ள துயின்றானை–மெள்ள சயனித்துக் கொண்டவனுமான பெருமானை
உய்த்து–சாரணாக அநுஸந்தித்து
உள்ளத்தே வை,–தியானிக்கக் கடவாய்
உலகில்–இவ்வுலகில்
நினைத்து–(அப்பெருமானை) அநுஸந்தித்து
ஆர் தெளிவார்–தெளிவுபெறுவார் ஆரேனு முண்டோ? (ஒருவருமில்லை)

—————————————————————————————-

வியாக்யானம் –

நினைத்து உலகிலார் -தெளிவார்-
சர்வேஸ்வரன் என்றான் ஒருவன்
நமக்குத் தஞ்சம் என்று கொண்டு
அனுசந்தித்து
லோகத்தில் கலங்காது இருக்க வல்லார் ஒருவரும் இல்லை –
அவனை அனுசந்தித்து தம்தாமுக்கு உரியராக வல்லார் உண்டோ –

நீண்ட திருமால் –
அபரிச் சேத்யனான ஸ்ரீ யபதியாய் வைத்து
ஸ்வ விசஜாதியர் அடங்கலும்
சேஷ பூதர்களாக உடையவனான சர்வேஸ்வரன்
என்றபடி –

அவனுடைய அபரிச் சேத்யதையைச் சொல்ல  என்று இழிந்து
அதுக்கு உறுப்பாக இங்கே அவனுக்குச் சொல்லக் கடவ
உயர்த்தி அடங்கலும்  சொல்லி
ஏவம் பிரகாரம் -என்கிறது-

அனைத்துலகும் உள்ளொடுக்கி யால் மேல் -கனைத்துலவு வெள்ளத்தோர் பிள்ளையாய் மெள்ளத் துயின்றானை –
சகல லோகங்களையும்
திரு வுதரத்திலே ஏக தேசத்திலே யடக்கி
பவனாய் இருப்பதொரு ஆலந்தளிர் மேலே
கோஷித்துக் கொண்டு
கண்ட இடம் எங்கும் தடையற சஞ்சரிக்கிற
பிரளயத்திலே
அத்விதீயமான முக்த சிசு விக்ரஹத்தை யுடையனாய்க் கொண்டு
வயிற்றில் புக்க பதார்த்தத்துக்கு ஓர் அலைச்சல் வாராத படி
மெல்லக் கண் வளர்ந்து அருளினவனை –

உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து  –
இப்படி சவிபூதிகனானவனை
நெஞ்சே
யுய்த்து உள்ளத்தே வை –
கொடு வந்து வை –

கொடு வருகை யாவது
அவன் புகப் புக்கால்
விலக்காது ஒழிகை –

—————————————————————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பேய் ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading