முதல் திருவந்தாதி-பாசுரம் -90 -ஸ்ரீ நம்பிள்ளை படி வியாக்யானம் –

அவதாரிகை –

போலியைக் காட்டித் தம்மைத் தரிப்பித்த பிரசங்கத்தைக் கொண்டு
அநு கூலனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வானுக்கு
அவ்வடிவைக் கொண்டு முன்னே நின்று
அவன் விரோதியைப் போக்கித்
தன்னைக் கொடுத்த படி
சொல்லுகிறார் –

நரசிம்ஹ ரூபியான ஈஸ்வரன் உடைய
ஆஸ்ரித விரோதி நிரசன சீலத்தையும்
வாத்சல்யத்தையும்
அனுசந்திக்கிறார் –

——————————————

வரத்தால் வலி நினைந்து மாதவ நின் பாதம்
சிரத்தால் வணங்கானாம் என்றே உரத்தினால்
ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை
ஒரரியாய் நீ யிடந்த தூன் –90-

பதவுரை

மாதவ–திருமாலே!
ஈர் அரி ஆய்–(இரண்டு கூறாகக்) கிழித்துப் போட வேண்டிய சத்துருவாகி
நேர் வலியோன் ஆய்–எதிர்த்து நின்று போர் செய்யும் வலிவை யுடையனாகிய
இரணியனை–ஹிரண்யாஸுரனது
ஊன்–சரீரத்தை ,
ஓர் அரி ஆய்–ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாகி
உரத்தினால்–உனது மிடுக்கினாலே
நீ இடந்தது–நீ உன் நகங்களினால் குத்திக் கீண்டதானது,
வரத்தால்–(பிரமன் முதலானவர்கள் கொடுத்த) வரத்தினால் (தனக்கு உண்டான)
வலி–பலத்தை
நினைந்து–பெரிதாக மதித்து
நின் பாதம்–உனது திருவடிகளை
சிரத்தால்–தனது தலையினால்
வணங்கானாம் என்றே–வணங்காமலிருந்தானென்ற காரணத்தினாலோ?
(அன்று; பக்தனான ப்ரஹ்லாதனை நலிந்தானென்ற காரணத்தினாலே.)

———————————————-

வியாக்யானம் –

வரத்தால் வலி நினைந்து –
சர்வேஸ்வரன் கொடுக்கப் பெற்ற தேவதைகள் பக்கலிலே
வரத்தைப் பெற்று
அத்தால் வந்த பலத்தை அனுசந்தித்து
இருந்தான் ஆய்த்து-
மெல்லியத்தை உறவிதாகக் கொண்டு  பிரமித்து இருந்தான் ஆய்த்து –

வர பலத்தை அனுசந்தித்து ஈச்வரனிலும் தன்னைப் பெரியானாக அபிமானித்து இருந்தான்
அத்தனை அல்லது
வரம் கொடுத்தவர்கள் உடைய சக்தி
பகவத் அதீனம் என்று அறிந்திலன் –

மாதவ –
சர்வராலும் சமாஸ்ரயணீயன் ஸ்ரீ யபதி போலே
இவனும்
இவனுக்கு வரம் கொடுத்தவர்களும்
வணங்கும் விஷயம் -கிடீர் –

நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே –
தேவர் திருவடிகளை ஆதரித்துக் கொண்டு ஆஸ்ரயித்திலன்-என்றே

அதாகிறது –
உன் பக்கலிலே ஒரு சாத்ரவம் பண்ணினான் என்னுமது கொண்டு அன்று இறே
சிறுக்கன் பக்கலிலே ப்ராதிகூல்யம்  பண்ணித் தப்ப நின்றான் -என்னும் அத்தாலே இறே -என்னுதல்

அன்றிக்கே
அவன் தேவர்க்குப் பண்ணுவதொரு அபகாரம் உண்டோ –
தன் பேறு தான் இழந்தான் என்னுமது கொண்டு இறே -என்னுதல்

தப்பச் செய்தோம் என்னாமை -என்னுதல்

உன் வஸ்து அழியாமைக்கு -என்றுமாம் –

உரத்தினால் –
வரத்தினால் வந்த வலியை-
நினைத்து இருந்தவன் கூட
பிற்காலிக்கும் படியான
பலத்தை உடையானாய்க் கொண்டு –

ஈரியாய் நேர் வலியோனாய இரணியனை –
ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்
நேர் நிற்க வல்ல பலத்தை யுடைய இரணியனை –
கீழே வர பலம் சொல்லிற்று
இங்கே புஜ பலம் சொல்லுகிறது  –

உரத்தினால் ஈர் அரியாய் –
மிடுக்காலே ஈரப்படும் அரியாய்
வத்யனான சத்ருவாய்

அன்றிக்கே
பெரிய சத்ரு -என்னுதல்

அன்றிக்கே
உரத்தினால் ஈர் அரியாய்  நீ இடந்தது ஊன் -என்று மேலே கூட்டவுமாம் –

ஒரரியாய் –
நாட்டில் நடையாடாத அத்விதீயமான நரசிம்ஹம் -என்னுதல்

அன்றிக்கே
இச் செயலை அனுசந்திக்க ஆஸ்ரிதர்க்கு எப்போதும் கிட்டும்படியான நரசிம்ஹமுமாய்
அதாகிறது
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு இவ்வருகு உள்ளார் அடங்க இச் செயலை அனுசந்தித்து
அச்சம் கெட்டு இருக்கும்படியாய் இருக்கை-

ஓர் அரியாய்
காமத்வ ஜாயதே -என்று
தன்னுடைய இச்சையாலே பிறந்த நரசிம்ஹம் -என்றுமாம்  –

நீ யிடந்த தூன் –
வணங்காமையாலே அவனுக்கு ஹிதமாக இடந்தான்
ஆத்மாவுக்கு ஸ்வபாவம் வணக்கமே இறே

தொழும் இவள் -திருவாய்மொழி -6-5-1-
ப்ரஹ்வாஞ்ஜலி புடஸ்த்தித்த
நம இத்யேவ வாதின  –
கைகேயி தோற்றினாப் போலே இறே உடம்பு –

நீ அவனுடைய மார்பைப் பிளந்தது
நின் பாதம் சிரத்தால் வணங்கானாம் என்றே அன்று இறே -என்றபடி –

———————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading