அவதாரிகை –
ஒருவன் பல போக்தாவாய் இருக்க
ஒருவன் சாதனமாக வேண்டுகிற ஹேது என் என்னில் –
அறியுமவன் செய்யும் அத்தனை போக்கி
அறியாதவனால் செய்யலாவது உண்டோ
என்கிறார் –
சேதனர் கீழே போய்த்தும்
தாங்கள் படுகிறதும்
மேல் வரக் கடவதும்
அறியார்கள்
சர்வேஸ்வரன்
பழகியான் தானே பணிமின் -நான் முகன் திரு -22-என்று
இவர்கள் கீழ்ப் பட்டதும்
இப்போது படுகிறதும்
மேல் படக் கடவதும்
எல்லாம் அறிந்து பரிஹரிக்க வல்ல ஜ்ஞான சக்திகளை உடையவன் ஆகையாலே
அவனே உபாயமாம் இத்தனை இறே –
———————————————————-
சரணா மறை பயந்த தாமரை யானோடு
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் அரணாய
பேராழி கொண்ட பிரான் அன்றி மற்று அறியாது
ஓராழி சூழ்ந்த வுலகு —60–
பதவுரை
சரண் ஆம் மறை–(எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை
பயந்த–(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின
தாமரையானோடு–பிரமனோடு கூட
மரண் ஆய–மரணமடையுந் தன்மை யுடைய
மன் உயிர்கட்கு எல்லாம்–நித்யமான ஸ்வரூபத்தை யுடைய ஆத்மாக்களெல்லா வற்றுக்கும்
அரண் ஆய–ரக்ஷகமான விதங்களை
பேர் ஆழி கொண்ட பிரான் அன்றி–பெரிய திருவாழி யாழ்வானைக் கையிற் கொண்ட எம்பெருமான் அறிவனே யல்லது
மற்று–அவனிலும் வேறான
ஓர் ஆழி சூழ்ந்த உலகு–கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.
அறியாது–அறிய மாட்டார்கள்.
————————————————————–
வியாக்யானம் –
சரணா மறை பயந்த தாமரை யானோடு –
அபிமத சித்திகளுக்கு அடைத்த உபாயங்களை உபபாதிக்கிற
வேதத்தை ஜகத்துக்கு அறிவித்ததாலே
ப்ரஹ்மா ப்ரஹ்ம விதாம் வர -என்கிற ப்ரஹ்மா
மந்திர க்ருதப்யோ நம-என்று தன்னைச் சால ஜ்ஞானாதிகனாக
அபிமானித்து இருக்கிற ப்ரஹ்மாவோடே கூட –
மரணாய மன்னுயிர் கட்கெல்லாம் –
தாங்கள் நித்தியராய் இருக்கச் செய்தே
மரண தர்மாக்களாய்-செத்தான் பிறந்தான் -என்கிற வ்யவஹாரத்துக்கு
யோக்யதையை உடையராய் இருந்துள்ள சேதனர்க்கு எல்லாம் கல்பாதியிலே உண்டாய்
கல்பாந்ததிலே இல்லை யாகிற ப்ர்ஹ்மாவோடு
ஜாயதே ம்ரியதே -என்று
தோற்றி மாய்கிறவர்களோடு வாசி இல்லை
அடைய அஞ்ஞரும் அசக்தரும் –
அரணாய –
அரணானவை
ரஷையானவை –
பேராழி கொண்ட பிரான் அன்றி –
ரஷணத்துக்குப் பரிகரமான திரு வாழியைக் கையிலே உடையவனான
உபகாரகனை யல்லது –
மற்று அறியாது ஓராழி சூழ்ந்த வுலகு –
கடல் சூழ்ந்த பூமியானது வேறு அறியாது
சிறியாரோடு பெரியாரோடு வாசியறத் தம்தாமுடைய ரஷணம் தாம் தாம் அறியார்கள்
லோகம் எல்லாம் இப்படி அவனே என்று இரர்களோ என்னில்
உலகம் எனபது உயர்ந்தோர் மாட்டே -என்று
அறிவுடையாரை இட்டு இறே லோகத்தைச் சொல்லுவது
அப்படியே யாகில்
ஓராழி சூழ்ந்த வுலகு –என்று கொண்டு
கடலுக்கு உட்பட்ட பூமியைச் சொல்லுகையாலே
விலஷணர் தலையிலே ஒதுங்க ஒண்ணாது
ஆன பின்பு அவனை ஒழிய இவை வேறு ஒன்றை அறியாது
இத்தால்
அவனே அறிந்து ரஷிக்கும் அத்தனை -என்றபடி
சம்சாரம் வளர்க்கைக்கு உபாயம் அறிவார்கள் அத்தனை
மோஷத்துக்கு எம்பெருமானே வேணும்
மூடோயம் நாபி ஜா நாதி –
ஆப்பான் ஜீயரைக் கேட்க
பட்டருக்கு விண்ணப்பம் செய்ய
பட்டர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது –
அன்றிக்கே
கீழ்ச் சொன்ன தசரதாத் மஜனையே சொல்ல வேண்டில்
பேராழி கொண்ட -என்ற இடத்தை
கடலை வெதுப்பி வசம் ஆக்கினவன் என்று ஆக்கிக் கொள்வது-
———————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பொய்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply