ஸ்ரீ பெரிய திருமொழி-9-10—ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்-

(பதிகமாக அருளிச் செய்த திருமொழிகளில் நிகமனம் இது

ஏகாந்தமாக -ஆஸ்ரிதற்காக –
ஸ்தல புராணம் -ஹிரண்ய நிரசனத்துக்காக -தேவர்கள் கூடி
மணி முத்தாறு நதிக்கரை ஆஸ்ரமம்
கதம்ப மகரிஷி முனிவர் தபஸ்ஸூ -செய்து -ஷீராப்தி நாதனாக சேவை –
கோட்டி புரம் -கோஷ்ட்டி புரம்-ஆகவே ஏகாந்தமாக சேவை என்று வியாக்யானம்
உரக மெல் அணையான் -மாதவ -கீழ்
நடுவில் நின்ற நாராயணன்
மேலே பரமபத நாதன்
வடக்கு ஆழ்வான் தெற்கு ஆழ்வான் நரஸிம்ஹர்
கீழ் நடு மேல் தளம் -கூடல் மா நகர் போல்
அஷ்டாங்க விமானம்
நம்பி இடம் சரம ஸ்லோகார்த்தம் எம்பெருமானார் திரு நாமம்
பூர்ணர் -ராமானுஜருக்கு உபதேசம் -ஸ்ரீ வல்லப பதாம்போஜ ஞான பக்தி கடல் –
திரு மா மகள் நாச்சியார்
தெப்பம் உலக பிரசித்தம்
வெள்ளியால் ஆக்கப்பட்ட உத்சவர்
வைகாசி ரோஹிணி நம்பி அவதாரம்
வண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர் –
கண்ணன் பிறந்த இனிய இல் -அவதாரத்துக்கு எத்தனம் பண்ணிய திவ்ய தேசம் இது அன்றோ )

எங்கள் எம்மிறை -பிரவேசம் –

சர்வ அபேஷித பிரதானனாய்க் கொண்டு
திருமலையிலே வந்து நிற்கிற நிலையை
அனுசந்தித்தார் -கீழ் –
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கே ஸ்வம்மாகக் கொண்டு
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி நிற்கிற நிலையை அனுசந்திக்கிறார் –

அவன் பண்டு -பெற்ற தமப்பன் பகையாக
ஸ்ரீ பிரஹலாத ஆழ்வானுக்கு உதவி
அவன் விரோதியைப் போக்கி
அதிரும் கழல் பொரு தோள் இரணியன் ஆகம் பிளந்து அரியாய்
உதிரம் அளந்த கையோடே நிற்கிற தேசம் என்றும் –

அவன் தானே அநேகம் அவதாரங்களைப் பண்ணி ஆஸ்ரிதர்க்கு உதவினவன் என்றும் நினைத்து
அத்தனை பொதுவான நிலை தவிர்ந்து
ஆஸ்ரிதர்க்கே ஸ்வம்மாகக் கொண்டு
திருக் கோட்டியூரிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய
சௌலப்யத்தை அனுசந்தித்து
ப்ரீதராய் அனுபவிக்கிறார் –

ப்ரஹ்லாதிகளுக்கு  –
மத்தஸ் சர்வம் அஹம் சர்வம் -(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்னலாம்படி
(தன்மையீ பாவம் -கடல் ஞாலம் –யானே என்னும் )
ஹிருதயத்தை விடாதே இருந்து
பிரசாதத்தைப் பண்ணுமவன்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் -என்கிறார் –

—————————————————————

எங்கள் எம்மிறை யெம்பிரான் இமையோர்க்கு நாயகன் ஏத்து அடியவர்
தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான்
பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் இலங்கொளி
செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே —9-10-1-

எங்கள் எம்-எமக்கே எமக்கு
தங்கள் தம்-தங்களுக்கே
அடியவர் தங்கள் தம் -அடியவர்க்கே

எங்கள் எம்மிறை –
எங்களிலே விரிந்த சொல் -யெம் -என்று
எங்கள் அசாதாரண்ய ஸ்வாமி -என்றபடி –
(அசாதாரண்யம் தோற்ற எமக்கே எமக்கு என்றபடி )

யெம்பிரான் –
(எங்கள் அசாதாரண )உபகாரகன் –

இமையோர்க்கு நாயகன் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி –

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து
ஆஸ்ரிதரான எங்களுக்கு
ஸ்வாமியுமாய்-உபகாரகனுமாய் –

ஏத்து அடியவர் தங்கள் தம் மனத்துப் பிரியாது அருள் புரிவான் –
அடியவர் தங்கள் -என்றது -அடியவர்க்கு -என்றபடி
தம் திரு நாமத்தைச் சொல்லி ஏத்தும் படியாக
நெஞ்சை பிரியாதே இருந்து
அவர்களுக்கு பிரசாதத்தைப் பண்ணுமவன் –

பொங்கு தண்ணருவி புதம் செய்யப் பொன்களே சிதறும் -இலங்கொளி செங்கமல மலரும் திருக் கோட்டியூரானே
பொங்கு -என்று மேலுக்கு –
புதம் -அம்புதம் -ஆகிறது மேகம் –
கிளர்ந்து ஸ்ரமஹரமான அருவிகள் நீர் மாறாதே
ஒழுகுமா போலே

புதம் பொன்களே சிதற –
மேகம்  பொன்களையே சிந்த –

அத்தாலே மிக்க ஒளியை உடைத்தாய்
செந்தாமரைகள் மாறாதே அலர்ந்த
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனவன் –

——————————————-

(கீழே அசாதாரண ஸ்வாமியாய் அருளுபவர்
இதில் அப்படி அனுக்ரஹிக்க புருஷகார சம்பத்து குறைவற்று இருப்பதால் அருளுக்கு குறை இல்லை
நம் துக்கங்கள் அனைத்துத்தும் போக்கி அருளுபவர் என்று சங்கதி
குற்றம் இல்லாதார் யார் ஸ்ரீ தேவியும் -குற்றம் உள்ளவர் யார் பூமா தேவி புன் சிரிப்புடன் சொல்ல –
துவர் வாயைக் காட்டி -வால்லப்யம் )

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை இன்னகைத் துவர்வாய் நிலமகள் தம்
செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான்
மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம்
தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே —9-10-2-

(எவ்வம்-துன்பம் துக்கம்
திரு மா மகட்கு இனியான்–தான் அனுபவிக்கும் போக்யம் -இதுவே இத்திவ்ய தேச தாயார் திரு நாமம் )

நம்முடைய துக்கங்களை எல்லாம் போக்குகைக்காக
பிராட்டிமாரோடே கூட
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

எவ்வ நோய் தவிர்ப்பான் எமக்கு இறை –
எனக்கு வகுத்த ஸ்வாமி யாகையாலே
நம்முடைய துக்கா வஹமான வியாதியைப் போக்கும் ஸ்வபாவனாய் —

இன்னகைத் துவர் வாய் நில மகள் தம் செவ்வி தோய வல்லான் திரு மா மகட்கு இனியான் –
இனிய நகையையும்
சிவந்த அதரத்தையும்
உடைய ஸ்ரீ பூமி பிராட்டியார் உடைய
செவ்வியை அனுபவிக்க வல்லனாய்
அத்தாலே
பெரிய பிராட்டியாருக்கு இனியன் –

ந கச்சின் ந அபராத்யதி -என்று
குற்றம் பொறுப்பிப்பாள்  ஒருத்தியும்
பொறைக்கு உவாத்தாயிருப்பாள் ஒருத்தியும்
ஆக கூடி இனியனாய் இருக்கிறவன் –

மௌவல் மாலை வண்டாடும் மல்லிகை மாலையோடும் அணைந்த மாருதம் தெய்வ நாற வரும் திருக் கோட்டியூரானே –
மௌவல் மாலையோடும்
மல்லிகை மாலையோடும்
மது பானம் பண்ணின வண்டுகள் ஆடா நின்றன –
இவற்றோடு கூடி அணைந்த மாருதம் உண்டு -காற்று
அது அப்ராக்ருதமான பரிமளத்தை
கந்திக்க வந்து உலவா நிற்கும் திருக் கோட்டியூரானே –

—————————————————

(பிராட்டிமார் அருகில் இருப்பதால் துக்கங்களை போக்குவான் என்றார் கீழே –
அதுக்கு அடியாக ஆபத் சஹத்வம் அருளிச் செய்கிறார் என்று சங்கதி
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்)

அவ்வோ யுகங்கள் தோறும் ஆஸ்ரயிப்பார் உகந்த
திரு நிறத்தை தானும் உகந்து கொண்டு
பிரளய ஆபத்துக்களிலும் உதவும் ஸ்வ பாவனானவன்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான் –
என்கிறார் –

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை
தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே —9-10-3-

தெள்ளு நீர்–மணி முத்தாறு

வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன் விண்ணவர் தமக்கு இறை
கிருத யுகத்தில் வெளுத்த நிறத்தை உடையவனாய்
கலி காலத்தில் ஏதேனும் வடிவு கொண்டாலும் விரும்புவார் இல்லாமையாலே
கறுத்த நிறத்தை  உடையவனாய்
த்வாபரத்திலே நீல நிறத்தை உடையனாய்
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
சர்வாதிகனாய் வைத்து –

எமக்கு ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் –
எனக்கு வைத்த கண் வாங்க ஒண்ணாத படி
தன் அழகைக் காட்டி
பிரளய ஆபத்தில் ஜகத்தை உண்டு
ஆபத் சகனாய் உமிழ்ந்தவன் –

துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை சந்தன முந்தி வந்தசை
குறும் திவலைகளை உடைய திரைகளாலே
நீரானது சாமரத் திரளையும்
சந்தனத்தையும் இழுத்துக் கொண்டு  வந்து தள்ளி அலையா நிற்பதாய் –

தெள்ளு நீர் புறவில் திருக் கோட்டியூரானே –
கொழிக்கும் ஸ்வபாவத்தை உடைய
பர்யந்ததோடு கூடின  திருக் கோட்டியூரானே –

தெள்ளு நீர் -தெளிந்த நீரை உடைய பர்யந்தம் -என்னுமாம்
துள்ளு நீர் -தெழித்து வருகிற நீரானது –

———————————————-

(கீழ் ஆபத் சகத்வாதி குண அனுபவம்
தாழ்ந்த நமக்கும் அனுக்ரஹிப்பாரோ என்னில்
ஸுவ்சீல்யம் திரு உள்ளம் கொண்டு அருளிச் செய்கிறார் இதில்
கூறாளும் தனி உடம்பன் அன்றோ
இரண்டு உருவும் ஒன்றாக இசைந்து -சங்கர நாராயணன் )

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர்
கூறு தான் கொடுத்தான் குல மா மகட்கு இனியான்
நாறு செண்பக மல்லிகை மலர் புல்கி இன் இளவண்டு நன்னறும்
தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே —9-10-4-

பிராட்டியோடு ஒக்க ருத்ரனுக்கும்
திரு மேனி யிலே இடம் கொடுத்த சீலவான்
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

ஏறும் ஏறி  இலங்கும் ஒண் மழுப் பற்றும் ஈசற்கு இசைந்து உடம்பிலோர் கூறு தான் கொடுத்தான்
வ்ருஷபத்திலும் ஏறி
உஜ்ஜ்வலமான அழகிய மழுவைப் பற்றும் ருத்ரனுக்கு –
சர்வேஸ்வரன்  திருவடியை வாகனமாக உடையவனாய் இருக்குமாகில்
ஓர் எருத்தை ஏறி
அவன் திரு வாழியைப் பிடிக்கும் ஆகில்  -ஒரு மழுவைப் பிடித்து
இப்படி துர்மாநியான ருத்ரனுக்கு
துர்மானம் பார்த்து உபேஷியாதே
இசைந்து திரு மேனியிலே ஒரு கூறு கொடுத்தவன் –

குல மா மகட்கு இனியான் –
பெரிய பிராட்டியாருக்கு
பித்தர் பனி மலர் மேல் பாவைக்கு =(திரு நெடும் தாண்டகம் -)-என்கிறபடியே
அவளோடு ஒக்க இவனுக்கும் திரு மேனியிலே இடம் கொடுத்தவன் –

நாறு செண்பக மல்லிகை மலர் புல்கி இன் இளவண்டு நன்னறும்
பரிமளத்தை உடைத்தான
செண்பகப் பூ மல்லிகை -இவற்றைத் தழுவி
இவற்றால் வந்த உஷ்ணம் மாற்றுகைக்கு
தர்ச நீயமாய் பால்யாவஸ்தமான வண்டு
அற விலஷணமான –

தேறல் வாய் மடுக்கும் திருக் கோட்டியூரானே –
தேனிலே வாயை மடா நிற்கும் திருக் கோட்டியூரானே –

————————————————–

(கீழ் சொன்ன ஸுவ்சீல்யமே பரத்வம் என்னலாம் படி
வசிஷ்ட சண்டாள வாசி பார்க்காமல் நிரவதிக ஸுவ்சீல்ய அனுபவம் இதில் )

பண்டு பூமியை அளந்து கொண்டவன்
இப்போது திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் விண்ணவர் கோன் மது மலர்
தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்
மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர்
திங்கள் தான் அணவும் திருக் கோட்டியூரானே –9-10-5-

வங்கம் -கப்பல்கள் கடலுக்கு அழகு போல் திவ்ய ஆபரணங்கள் கடல் வண்ணனுக்கு –
கடல் வண்ணன்-நிறத்துக்கும் ஸ்வ பாவத்துக்கு கடல் ஸாம்யம் –

வங்க மா கடல் வண்ணன் மா மணி வண்ணன் –
மரக் கலங்களை உடைய
மகார்ணவம் போலேயுமாய்
ஸ்லாக்கியமான நீல மணி போலே இருக்கும்
திரு நிறத்தை உடையனாய் –

விண்ணவர் கோன் –
இவ்வடிவை நித்ய ஸூரிகளுக்கு போக்யமாகக் கொடுத்த
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்

மது மலர் தொங்கல் நீண் முடியான் நெடியான் படி கடந்தான்-
தேனை உடைத்தான
பூ மாலையோடு கூடின
ஆதி ராஜ்ய ஸூசகமான
திரு அபிஷேகத்தை உடையவனாய்
சர்வாதிகனாய்
பூமி எல்லாம் தன் கால் கீழே இட்டுக் கொண்டவன் –

மங்குல் தோய் மணி மாட வெண் கொடி மாகமீது உயர்ந்தேறி வானுயர் திங்கள் தான் அணவும்
மேகத்தில் சென்று கிட்டி மணி மயமான மாடத்திலே
கட்டின வெள்ளைக் கொடி ஆகாசத்தின் மேலே
உயரப் பரந்து
ஸ்வர்க்கத்திலே வர்த்திக்கிற  சந்த்ரனைச் சென்று
ஸ்பர்சியா நிற்கும்

வானுயர் திங்கள்
மிகவும் உயரா நின்ற சந்த்ரனை அணையா நின்ற
திருக் கோட்டியூரானே –

——————————–

(கீழே ஸுசீல்ய அனுபவம்
இப்பாட்டால் -விரோதி நிரசன சக்தி சாமர்த்தியம் -சர்வ சக்தி அனுபவம் )

ராவணன் மிடுக்கை அழித்த தசராத்மாஜன்
இப்போது திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார்  –

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்
நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத்
தேவர் வந்து இறைஞ்சும் திருக் கோட்டியூரானே —9-10-6-

காவலன் இலங்கைக்கு இறை கலங்கச் சரம் செல உய்த்து மற்றவன் –
ஈஸ்வரனோடு ஒக்க நானும் காவலன் என்று
திக் பாலர்களைத் தவிர்த்து ஜகத்துக்கு ரஷகன் தானேயாய்
இலங்கைக்கு நிர்வாஹகன் மலங்கும்படி
சரங்களை செல்ல நடத்தி –

ஏவலம் தவிர்த்தான் என்னை யாளுடை யெம்பிரான்-
ராவணன் உடைய -எய்ய வல்லார் என்னோரோடு ஒப்பார் இல்லை என்னும் மிடுக்கை தவிர்த்து
அச் செயலாலே  என்னை அடிமை கொண்டிருக்கும் உபகாரகன் ஆனவன் –

நாவலம் புவி மன்னர் வந்து வணங்க மாலுறைகின்றது இங்கு எனத் தேவர் வந்து இறைஞ்சும் –
ஜம்பூ த்வீபத்தில் ராஜாக்கள் வந்து ஆஸ்ரயிக்க-
சர்வேஸ்வரன் வந்து சந்நிதி பண்ணுகிறது இங்கே -என்று ப்ரஹ்மாதிகள் வந்து ஆஸ்ரயிக்கும்
திருக் கோட்டியூரானே   –

—————————————————-

(கீழ்ச் சொன்ன சர்வ சக்தித்வம்
அவ்வளவில் நில்லாமல்
இதில் அகடி கடநா ஸாமர்த்ய அனுபவம் )

கன்றாயும் விளாவாயும் வந்த அசூரர்களால் வரும்  நலிவைப் போக்கி
கோவர்த்தன உத்தாரணம் பண்ணின
மகா அபதானத்தை உடையவன் –
இப்போது
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –
(அவி விவேக -பஹுதா சந்தத துக்க வர்ஷிணி -சம்சாரம் போக்க இங்கு )

கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவன்று  மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்
குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்
தென்றல்  வந்து உலவும் திருக் கோட்டியூரானே —9-10-7-

கன்று கொண்டு விளங்கனி எறிந்து –
கன்றைக் கொண்டு விளாவை உதிர எறிந்து –
க்ரித்ரிமத்தால் வந்த இரண்டு அசுரர்களையும்
ஒன்றை இட்டு ஒன்றை முடித்தவன் –

ஆநிரைக்கு அழிவு என்று  மா மழை நின்று காத்து உகந்தான் –
பசுக்களுக்கு அழிவு வருமன்று மகா வர்ஷத்தை
மலையை எடுத்துக் கொண்டு நின்று காத்து
இவற்றுக்கு உறுப்பாக பெற்றோம் -என்று உகந்தவன் –

நில மா மகட்கு இனியான்-
பசுக்களையும் இடையரையும் காத்தால் உகபபாள்
ஸ்ரீ பூமி பிராட்டியார் இறே-
பூ பாரத்தை போக்குகையாலே ஸ்ரீ பூமிப் பிராட்டியாருக்கு இனியன் ஆனவன் –

குன்றின் முல்லையின் வாசமும் குளிர் முல்லையின் மணமும் அளைந்து இளம்தென்றல்  வந்து உலவும் –
குளிர்ந்த மலையில் உண்டான முல்லையின் பரிமளமும்
மல்லிகையின் பரிமளமும்
அளைந்து மிருதுவான தென்றல் வந்து சஞ்சரியா நிற்கும்
திருக் கோட்டியூரானே –

(மல்லிகைக்கு -குளிர் அந்வயம் இல்லாமல் –
கொடி மல்லிகை என்றும்
குளிர்ந்த மலையில் உள்ள முல்லை என்றும் இரண்டு நிர்வாகங்கள் )

—————————————————

(விளங்கனி எறிந்த ஒன்றேயோ
அநேக விரோதிகளை முடித்து
ஆழ்வார் திரு உள்ளத்தில் நிறைந்து இருந்தான் )

குருந்து தொடக்கமான விரோதி வர்க்கத்தைப் போக்கின
ஸ்ரீ கிருஷ்ணன் –
இப்போது
திருக் கோட்டியூரிலே சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த அரிமாச் செகுத்து  அடியேனை ஆளுக
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள் தம் பெருமான்
தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்த் திருக் கோட்டியூரானே—9-10-8-

பூங்குருந்து ஒசித்தானை காய்ந்த -அரிமாச் செகுத்து –
பூத்த குருந்தை அநாயாசேன முறித்து
குவலயா பீடத்தை முடித்து –

அரிமா செகுத்து –
வேகத்தை உடைய கேசியைக் கொன்று -என்றுமாம்
பச்சைக் குதிரை -என்னவுமாம்
(அரி-வேகம்-பச்சை)

அடியேனை ஆளுக ஈங்கு என்னுள் புகுந்தான் -இமையோர்கள் தம் பெருமான்
என்னை அடிமை கொள்ள விரும்பி
அயர்வறும் அமரர்கள் அதிபதி யான மேன்மையைப்
பாராதே
சம்சாரத்திலே
என்னுள்ளே
புகுந்தான் –

தூங்கு தண் பலவின் கனித்தொகு வாழையின் கனியொடு மாங்கனி தேங்கு தண் புனல் சூழத் –
இற்று விழப் புகுகிறதோ என்னும்படி
பழுத்து தூங்கா நின்று
அழகியதான பலாப் பழம்
திரட்சியை உடைத்தான வாழைப் பழம்
இவற்றோடு கூட மாம்பழம்
வந்து விழுந்து தேங்கி
ஸ்ரமஹரமான -புனல் சூழ்ந்த
திருக் கோட்டியூரானே –

—————————————————-

(விரோதி நிராசன சீலன் திரு உள்ளத்தில்
இப்படி புகுந்தது
திருக்கோட்டியூரில் பலரும் தொழுவார் இருக்க
நீசன் நிறை ஒன்றும் இல்லா என்னுள்ளம் புகுந்தான் -மஹா உபகாரம் அனுசந்திக்கிறார் )

தான் தன்னை சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்கைக்கு ஈடான
பக்தியை உடையராய் –
ப்ரஹ்மாவோடு சமாநரான-ப்ராஹ்மணருக்கு
ஆஸ்ரயணீயனாய் 
திருக் கோட்டியூரிலே வந்து சந்நிஹிதன் ஆனான்
என்கிறார் –

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை
மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தேவ தேவபிரான் திருக் கோட்டியூரானே —9-10-9-

(கோவை-ஒரு கோவையாக -ஒன்றும் விடாமல் -சந்தர்ப்பம் சரியாக கோவையாக அமைந்த
நாவ காரியம் சொல் இல்லாதவர் -நால் தோறும் விரும்பு ஓம்புவார் – தேவ கார்யம் செய்து வேதம் பயிலும்
குற்றம் இல்லாமல் குணம் பெருக்கி -திருக்கோட்டியூர் -செல்வ நம்பி போல்வார் உண்டே இங்கே
குடமாடுவார் -கண்ணன் பிறந்ததால் இங்குள்ளாரும் அவன் போல் இருப்பார்களே
குடக்கூத்து ஆடுவார்களைப் போல் திரு நாம சங்கீர்த்தனம் பாடி ஆடுவார்கள் -என்றுமாம் -)

கோவையின் தமிழ் பாடுவார் குடமாடுவார் தட மா மலர் மிசை-
கோவையை உடைத்தாய்
இனிய தமிழான இத் திருமொழியை பாடுவார்
செருக்காலே திரு வாய்ப் பாடியிலே படியாக
குடக்கூத்தை யாடுவாராய்-

தட மா மலர் மிசை-
திரு நாபி கமலத்திலே பிறந்த

மேவு நான் முகனில் விளங்கு புரி நூலர்
சதுர்முகனில் காட்டில் உஜ்ஜ்வலிதமான
யஞ்ஞோபவீதத்தை உடையரான பிராமணர் –

மேவு நான் மறை வாணரை வகை வேள்வி ஆறங்கம் வல்லவர் தொழும்
தன்னை உள்ளபடி பேச வல்ல வேதங்களுக்கு
வியாச பதம் செலுத்த வல்லராய்
பஞ்ச மகா யஞ்ஞம்
அங்கங்கள் ஆறும்
கை வந்து இருக்கிறவர்கள் ஆஸ்ரயிக்கிற –

தேவ தேவ பிரான்-திருக் கோட்டியூரானே-
ப்ரஹ்மாதிகளுக்கு ஆஸ்ரயணீயரான அயர்வறும் அமரர்களுக்கு
ஸ்வாமி யானவன்   –
இங்கே வந்து வர்த்திக்கிறான் –

———————————-

(ஆழ்வார் அருளிச் செய்த இப் பத்தும்
வல்லார்களுக்கு
பரம பதமே வாசஸ் ஸ்தானம்
என்கிறார் -)

ஆலு மா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை யின் தமிழால் நினைந்த விந்
நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே —9-10-10-

(இந் நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே அவர்களுக்கு இடம் பரமபதம் என்றும்
அவர்கள் இருக்கும் இடமே பரமபதம் என்றும் கொள்ளலாம் –
வைகுந்தமாகும் தம்மூர் எல்லாம் போல் )

ஆலு மா வலவன் கலிகன்றி மங்கையர் தலைவன் அணி பொழில் –
சர சஞ்சாரத்தை உடைத்தான குதிரையை
நடத்த வல்ல ஆழ்வார்
திரு மங்கைக்கு நிர்வாஹகர் ஆனவர் –
சம்சாரத்துக்கு ஆபரணாம் படி அழகிய பொழிலையும்

சேல்கள் பாய்  கழனித் திருக் கோட்டியூரானை –
சேல்கள் பாயா நின்றுள்ள வயலையும் உடைய
திருக் கோட்டியூரை உடையனாய் –

நீல மா முகில் வண்ணனை நெடுமாலை-
நீலமாய்
ஸ்லாக்கியமான
முகில் போலே இருக்கும் திரு நிறத்தை உடையனான
சர்வேஸ்வரனை –

இன் தமிழால் நினைந்த –
இனிய தமிழைக் கொண்டு
சம்சார தாபம் தீரும்படியாக நினைத்த –

நீல மா முகில் வண்ணனை-நெடுமாலை–
ஸ்ரமஹரமான வடிவை உடையவனை –
அத்தாலே என்னை முறை அறிவித்தவனை –
வ்யாமுக்தன் ஆனவனை –

இந் நாலும்  ஆறும் வல்லார்க்கு இடமாகும் வானுலகே –
தமக்கு இனிதானவாறே பிரித்து அனுபவிக்கிறார் –
இது கற்றவர்களுக்கு இடமாவது பரமபதம் –

(இனிதான பிரகாரங்களில் வாசி நாலிலும் ஆறிலும் என்றபடி )

———-

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

எங்கள் இமையோர் ஈசன் தொண்டர் எண்ணும் வண்ணத்தன்
அங்கம் அரர்க்கு உகந்து நல்கு சீலன் இங்கு அயனில்
மிக்கார் வாழ் கோட்டியூரான் என்று உரை செய் மங்கை வேந்தன்
உக்க வினை தீர்க்கும் ஒருவர் -90-

உக்க -பொடிப்பொடியாக
எண்ணும் வண்ணத்தன் -பாலின் நீர்மை இத்யாதி –
அவ்வாறான ஸ்வபாவம் யுடையவன் என்றுமாம்
தன் நிறத்தையும் ஸ்வ பாவத்தையும் அடியார் எண்ணப்படியே மாற்றி அருளுபவர்
ஆஸ்ரிதரை தன்னை அழிய மாறியும், நோக்குபவன் –

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading