சங்கதி -அரும்பதம்
ராம கிருஷ்ண அவதாரங்கள் செய்தததும்
திவ்ய தேசங்களில் உகந்து அருளி இருப்பதும் இவளுக்காகவே
இப்படி புலம்புவது எதற்க்காக
எதில் ஈடுபட்டு இப்படி விவரணையாய் இருக்கிறாள்
என்ன காரணம் அறியேன் கை விட்டு உன்னிடமே இவளை விட்டேன் என்கிறாள் திருத்தாயார் –
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது இவ் வணங்கினுக்குற்ற நோய் அறியேன்
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு
என் கொலாம் குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே–2-7-9-
——————————————————————-
வியாக்யானம் –
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்-
பொன்னை குலவா நின்றுள்ள -கொண்டாட நின்றுள்ள
வைவர்ண்யத்தை பஜித்தன விரஹ சஹம் அல்லாத தோள் –
பொரு கயல் கண் துயில் மறந்தாள் –
பொரா நின்றுள்ள கயல் போலே முக்த்த்யமாய் இருந்துள்ள
கண்களில் நித்தரை தத்வம் அடியே பிடித்து உத்பத்தி
பண்ண வேண்டும்படியாக வாசனையோடு மறந்தாள் –
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது-
சங்கம் அடியாக உம்முடைய பக்கல்
பிறந்த காமம் ஆனது அறப் பெரிது –
இவ் வணங்கினுக்கு-
பிறர்க்கு இப்படி தன் பக்கலிலே ஆதரம் பிறக்கும்படி
அழகை உடைய விலஷணையான இவளுக்கு –
உற்ற நோய் அறியேன்-
இவளுக்கு முருடு கொளுந்தும் படி-( காடின்யம் அடையும் படி ) பிறந்த நோய்
இன்னது யென்று அறிகிலேன்
பயலை பூத்தாள்
கண் துயில் மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது
யென்று நோவும் சொல்லி
நோவுக்கு நிதானமும் சொல்லா நிற்க
அறியேன் என்கிறது
இவ்விஷயம் தன்னில் நிதான விசேஷத்தைப் பற்ற –
அதாகிறது
முறுவலிலேயோ
நோக்கிலேயோ
வடிவிலேயோ
சீலத்திலேயோ
அகப்பட்ட துறை விசேஷம் அறிகிறிலேன் –
மின் குலா மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு-
மின் போலே வளையா நின்றுள்ள இடையானது
சுருங்கும்படியாக மேலே நெருங்கி வளரா நின்றுள்ள –
முன்பே இற்றது முறிந்தது -என்னும்படி யாயிற்று
இடை இருப்பது –
அதுக்கு மேலே ஆஸ்ரயத்தைப் பாராதே
நெருங்கி வளரா நின்றுள்ள அழகிய முலையை உடைய இவளுக்கு –
என் கொலாம்-
தாய் கை விட்டமை தோற்ற
சொல்லுகிற வார்த்தை –
இவளுக்கு எவ்வளவாக தலைக் கட்டக் கட்டவதோ –
குறிப்பில் என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே –
தாய் கை விடுதல்
தான் கை விடுதல்
செய்தால்-அதைக் கொண்டு நோக்குகைக்கு ஈடாக
திருவிடவெந்தையில் வந்திருக்கிற நீர்
உம்முடைய திரு உள்ளத்தால் நினைந்து இருக்கிறது என் –
வாலி பக்கலிலே கண்டோம் இறே ப்ராதாக்கள் உதவாதபடி –
ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் பக்கலிலே கண்டோம் இறே தமப்பன் உதவாதபடி
தான் தன்னை அனுசந்தித்து அஞ்சின அர்ஜுனனுக்கு
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்னக் கண்டோம் இறே அவன் உதவும் படி
——————————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply