ஸ்ரீ பெரிய திருமொழி-1-2-10-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் –

கரிய மா முகில் படலங்கள் கிடந்தது அவை முழங்கிட களிறென்று
பெரிய மாசுணம் வரை எனப் பெயர் தரு பிரிதி எம்பெருமானை
வரி கொள் வண்டறை பைம் பொழில் மங்கையர் கோன் கலியனது ஒலி மாலை
அரிய வின்னிசை பாடு நல்லடியவர்க்கு அரு வினை யடையாவே —1-2-10

—————————————————————

வியாக்யானம் –
கரிய இத்யாதி –
கழுத்தே கட்டளையாக நீரைப் பருகையாலே கறுத்த நிறத்தை உடைத்தாய்
மஹா மேகங்களின் உடைய சமூஹங்கள் ஆனவை –
முகந்த நீர் கனத்தாலே பேர்ந்து போக  மாட்டாதே கிடந்த இடத்தே கிடந்தது முழங்க –
நீர் குறையும்படி வர்ஷித்து வெளுத்ததும் அன்றிகே கறுத்து
அது தான் மேக சகலமுமாய் இருக்கை அன்றிக்கே-துண்டு மேகமாக இல்லாமல்- -மா முகிலாய் –
அவை தான் ஓன்று இரண்டு அன்றிக்கே –
சமூஹங்களும் ஆனவை -முகந்த நீர் கனத்தாலே கால் வாங்கிப் போக மாட்டாதே –
வாயுவாலும் ப்ரேரிக்க ஒண்ணாத படி –
கறுத்து அது இருந்த இடத்தே கிடந்தது
கர்ப்ப வேதனையால்  முழங்குவாரைப் போலே முழங்கும் ஆயிற்று-

களிறென்று –
நிறத்தினுடையவும் -அதிருகிற த்வநியினுடையவும் சர்வதா சாம்யத்தாலே யானை என்று

பெரிய மாசுணம் –
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற மலைப் பாம்புகள்
ஆனையை விழுங்கும் படி யாயிற்று பெருமை இருப்பது –

வரை எனப் பெயர் தரு –
அம்மலைப் பாம்புகள் ஆனவை அவற்றுக்கு அஞ்சி மலை போலே பேர்ந்து போய்
புற்றிலே புகா நிற்கும் என்று ஸ்ரீ நஞ்சீயர் அருளிச் செய்ய
(காருடைய மின் என்று
நாகம் வாரணத்தை அஞ்சி ஒளிக்கும் )
இதுவோ இது அருளிச் செய்யும்படி -என்று ஸ்ரீ நம்பிள்ளை கேட்டருள
நீர் இப்படி கேட்கும் போது ஒற்றை நினைத்து அல்லது கேளீர் அத்தைச் சொல்லும் என்ன

பெயர் தரு-பேயருகை யாவது தான் போக்குவரத்து இரண்டுக்கும் சாதாரணமாயிற்று இருப்பது –
இனித் தான் மலைக்கு சிறப்பு சொல்லுமவர்கள் -மலைப் பாம்புகள் யானையை விழுங்கும் -என்றார்கள் -ஆகையாலே
கரிய மா முகில் படலங்கள் கிடந்தது முழங்குகிறவற்றை -பெரிய மாசுணம் ஆனது யானையாக புத்தி பண்ணி
ஆமிஷார்த்தமாக மலை பேர்ந்தாப் போலே கால் வாங்கி வந்து கிட்டா நிற்கும் ஆயிற்று என்றாலும் -என்ன –
அதுவே யிறே பொருள் என்று போர கொண்டாடி அருளினார் என்று அருளிச் செய்வர் –
ஆகை யிறே -பெரிய மாசுணம் என்றது ஆனையை விழுங்கும்படி யாயிற்று இதனுடைய பெருமை இருப்பது-
(மலைக்கு சிறப்பு -மலைப்பாம்புக்கு சிறப்பு -சொல்லவும் -பிரபன்னர் என்றதுக்கும் இதுவே பொருந்தும் )

வரி கொள் இத்யாதி –
வரியை உடைத்தாய் -தர்ச நீயமாய் இருந்துள்ள வண்டுகள் ஆனவை
மது பானம் பண்ணிக் களித்து த்வனியா நின்றுள்ள பரந்த பொழிலை  உடைத்தாய்
ஸ்ரீ திருமங்கையில் உள்ளாருக்கு நியாமகரான ஸ்ரீ ஆழ்வார் ஒலி உடையதாம் படி சொன்ன தொடை ஆயிற்று

அரிய இன்னிசை
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் தம் வாயாலே அரிய இன்னிசை -என்பதே என்று அருளிச் செய்வர்

ஸ்ரீ ஆழ்வார் திருவரங்க பெருமாள் அரையர் சிலரோடு பிணக்கி
கையிலே தாளத்தை பொகட்டு-இந்த பதிகத்தை என்னுடன்-
இயலிலும் இழியலாம்
பொருளிலும் இழியலாம்
இசையில் ஒருவராலும் இழிய ஒண்ணாது

அருமையால் நினைக்கிறது பெருமை
இனிமையால் நினைக்கிறது -சுவைப் பாட்டை –
அருமை பெருமைகளையும் சுவைப் பாட்டையும் உடைத்தாய் இருக்கும்-

நல்லடியவர்க்கு –
இத்தைப் பாடுமவர்கள் ஆயிற்று சர்வேஸ்வரனுக்கு அந்தரங்கர் ஆகிறார்

அரு வினை-
அவர்களை பாபங்கள் கிட்டாது –

சர்பங்கள் ஆனவை மேகங்களை ஆமிஷமாக  புத்தி பண்ணி மேல் விழுமா போலே
இத்தை அப்யசித்தார்கள் பக்கல் சர்வேஸ்வரன் போக்யதா புத்தி பண்ணி
அவர்கள் உடைய விரோதிகளைப் போக்கி
அவனாலே விஷயீ கரிக்கப் பெறுவார்கள்

இப் பாசுரங்களைச் சொன்னவர்களை –அச் சொல் வழியே சர்வேஸ்வரன்-
அவர்களையே எல்லா போக்யமுமாய் வந்து கிட்டும்-
நடுவில் பாபங்களுக்கு ஒதுங்க இடம் இல்லாமல் ஓடிப் போகுமே –
சர்வேஸ்வரன் போக்க வேண்டுமா -வினைகள் தாமே போகுமே –
பகவத் அனுபவத்தில் ஈடுபடாமல் இருக்க வினைகள் கிட்டும்
அவனை அனுபவிக்கவே இவை தன்னடையே போகுமே –
மோக்ஷயிஷ்யாமி -அவனும் வேண்டாமே நானும் வேண்டாமே -தன்னடையே விலகிப் போகுமே –
மத் மன பவ இத்யாதி-

—–

ஸ்ரீமத் சிறுமாமனிசராய், சௌசீல்ய நிதியாய், நம்பிள்ளை போன்று போது போக்குவது அருளிச் செயலிலேயாய்,
தற்போது காஞ்சீ வாதிகேஸரி மடாதிபதியாய் எழுந்தருளியிருக்கும் ஸ்வாமி,
திருவாய்மொழிக்கு நூற்றந்தாதி போன்று திருமொழிக்கு நூற்றந்தாதி அருளிச் செய்துள்ளார்.
அதில் இந்த பதிகத்திற்கு இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கி அருளிச் செய்துள்ளது.

வால் இமயம் வானோர் வணங்கவும் பத்தர் தம்
பால் அகலத் துன்பம் இன்பம் மிகவும் மால் சேர்
பிரீதி அடை நெஞ்சே என்னும் கலியன் நம் பால்
அருவினை அகற்றும் முற்றும் —

வால் -வெண்மை –

——————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading