ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திரு கண்டம் என்னும் கடி நகர் -ஸ்ரீ தேவ பிரயாகை –

மூலவர் -நீல மேகப் பெருமாள் -புருஷோத்தமன் -நின்ற திருக் கோலம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -புண்டரீக வல்லித் தாயார்
விமானம் -மங்கள விமானம்
தீர்த்தம் -மங்கள தீர்த்தம் -கங்கை நதி
மங்களா சாசனம் -பெரியாழ்வார்

கடி நகர் -பரிமளம் மிக்கு உள்ள பிரதேசம் -கண்டம் -பகுதி -பூ மண்டத்தில் முக்கிய பகுதி ஹிமாசலம் –
அதில் முக்கிய திவ்ய க்ஷேத்ரம் -அழகா நந்தாவும் -பாகீரதியும் கலக்கிற படியால் இது பிரயாகை –
ஸ்ரீ ராமன் ப்ரம்மா ஹத்தி தோஷம் நீங்க இங்கே த்வம் புரிந்தார் -அவர் த்வம் செய்த பாறையை இன்றும் சேவிக்கலாம் –
ஸ்ரீ ராமபிரான் வில்லும் அம்பும் ஏந்தி சீதா லஷ்மண ஹனுமத் சமேதராய் எழுந்து அருளி உள்ளார் –
70 mile தேவ பிரயாக் -முதலில் -புருடோத்தமன் இருக்கை -பச்சை வர்ணம் பாகீரதி நதி -அலக்நந்தா சிகப்பு -கலப்பதை பார்க்கலாம் -வேகமாக ஓடி வரும்
உத்சவர் -ராமர் அமர்ந்த திண்ணையில் எழுந்து 10 நாள் உத்சவம்
கங்கையின் -திருமால் கழல் இணைப் கீழ் -குளித்து இருந்த கணக்கே பதிகம் பலன்
மந்தாகினி ருத்ர பிரயாக் —நந்த பிரயாக்
விஷ்ணு பிரயாக் மேலே
பிந்து சரஸ் -பளிங்கு பாறை –

தற்போது உள்ள பெயர் ஸ்ரீ தேவ ப்ரயாக்
மூலவர் ஸ்ரீ நீலமேக பெருமாள், ஸ்ரீ புருஷோத்தமன்
கோலம் நின்ற
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர்
தாயார் ஸ்ரீ புண்டரீக வல்லி
தீர்த்தம் ஸ்ரீ மங்கள தீர்த்தம், ஸ்ரீ கங்கை நதி
விமானம் ஸ்ரீ மங்கள விமானம்
மண்டலம் ஸ்ரீ வடநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் உத்தராகண்ட்
அடிப்படை இடம் ஸ்ரீ ரிஷிகேஷ்
நாமாவளி ஸ்ரீ புண்டரீக வல்லீ ஸமேத ஸ்ரீ நீல மேகாய நமஹ

———————-

ஸ்ரீ பெரியாழ்வார் -11-பாசுரங்கள் மங்களாசாசனம்

தங்கையை மூக்கும் தமையனை தலையும் தடிந்த தாசரதி போய்
எங்கும் தன் புகழா இருந்து அரசாண்ட எம் புருடோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடுவினை களைந்திட கிற்கும்
கங்கையின் கரை மேல் கை தொழ நின்ற கண்டம் என்னும் கடிநகரே -4 -7-1 –

சலம் பொதி உடம்பில் தழல் உமிழ் பேழ் வாய் சந்திரன் வெங்கதிர் அஞ்ச
மலர்ந்து எழுந்து அணவு மணி வண்ண வுருவின் மால் புருடோத்தமன் வாழ்வு
நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும்
கலந்து இழி புனலால் புகர்படு கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4-7-2 –

அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்து அழல் உமிழ் ஆழி கொண்டு எறிந்து அங்கு
எதிர் முக அசுரர் தலைகளை இடரும் எம் புருடோத்தமன் இருக்கை
சது முகன் கையில் சத்துப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி
கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-3 –

இமையவர் இறுமாந்து இருந்து அரசாள ஏற்று வந்து எதிர் பொரு சேனை
நமபுர நணுக நாந்தகம் விசுறு நம் புருடோத்தமன் நகர் தான்
இமவந்தம் தொடங்கி இரும் கடல் அளவும் இருகரை உலகு இரைத்தாட
கமைஉடை பெருமை கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே -4 7-4 –

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண் சுடர் ஆழியும் சங்கும்
மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால் புருடோத்தமன் வாழ்வு
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழுது அளவினில் எல்லாம்
கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-5-

தலைப் பெய்து குமிறி சலம் பொதி மேகம் சல சல பொழிநதிடக் கண்டு
மலைப் பெரும் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு
அலைப்பு உடை திரைவாய் அரும் தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட
கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-6-

வில் பிடித்து இறுத்து வேழத்தை முறுக்கி மேல் இருந்தவன் தலை சாடி
மல் பொருது எழப் பாய்ந்த அரையனை உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு
அற்புதம் உடைய ஐராவத மதமும் அவர் இளம்படியர் ஒண் சாந்தும்
கற்பக மலரும் கலந்து இழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே – 4-7 7-

திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய்
அரசனை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு
நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு இட்டு இரண்டு
கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே – -4-7-8 –

வட திசை மதுரை சாளக் கிராமம் வைகுந்தம் துவரை யயோத்தி
இடமுடை வதரி இடவகயுடைய வெம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிர தரணி விண்டிடிய தலை பற்றி கரை மரம் சாடி
கடலினை கலங்க கடுத்திழி கங்கை கண்டம் என்னும் கடி நகரே -4 7-9 –

மூன்று எழுத்து அதனை மூன்று எழுத்து அதனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை
என்று கொண்டு இருப்பார்க்கு இரக்க நன்குடைய வெம் புருடோத்தமன் இருக்கை
மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு ஆனான்
கான்றடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல் கண்டம் என்னும் கடி நகரே – 4-7-10-

பொங்கு ஒலி கங்கை கரை மலி கண்டத்துறை புருடோத்தமன் அடி மேல்
வெங்கலி நலியா வில்லிபுத்தூர் கோன் விட்டு சித்தன் விருப்புற்று
தங்கியவன் பால் செய் தமிழ் மாலை தங்கிய நா வுடையார்க்கு
கங்கையில் திரு மால் கழல் இணைக் கீழே குளித்து இருந்த கணக்காமே -4 7-11 –

இத்தலம் ரிஷி கேசத்திலிருந்து பத்திரிநாத் செல்லும் வழியில் 45வது மைலில் கடல் மட்டத்திலிருந்து 1700 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்தில் இருந்து நேராக பத்திரிநாத் சென்றுவிட்டும் திரும்பும் வழியிலும் சேவித்துவிட்டு வரலாம். பத்ரியிலிருந்து சுமார் 60 மைல் தூரமாகும்.

இவ்விடத்திற்கு தேவப்ராயகை என்றும் பெயர். ப்ர-சிறந்த யாகம், வேள்வி, மிகச் சிறந்த யாகத்தை பிரம்மன் இங்கு துவங்கியதால்
இவ்விடத்திற்கு ப்ராயாகை என்னும் பெயராயிற்று. ஸ்ரீமந் நாராயணனையே தேவனாக கருதி இவ்விடத்தில் யாகம் செய்யப்பட்டதால் தேவப்ராயாகை
என்றாயிற்று என்றும் சொல்வர். தேவலோகத்திற்குச் சமானமான சக்தி இவ்விடத்தில் பரவியிருப்பதால் தேவப்ராயாகை ஆயிற்றென்றும் சொல்வர்.

ப்ரயாகைக்கு கிழக்கே உள்ளே பிரதிஷ்டானம் என்ற இடத்தில் உள்ள தீர்த்தக் கிணறு. வடக்கேயுள்ள வாசுகி என்ற இடம், மேற்கே காம்ப்ளாஸ்
என்னும் சர்ப்பங்கள் உள்ள இடம். தெற்கு திசையில் உள்ள பஹூ மூலம் என்னும் பகுதி ஆகியன ப்ரயாகையின் எல்லைகளாகும்.
இந்த தேவப்ரயாகையின் சிறப்பை பற்றி பாத்ம, மத்ஸய, கூர்ம அக்னி புராணங்கள் பகர்கின்றன.

கங்கையும், யமுனையும் கூடும் இடமே ப்ரயாகை. மிக ரஹஸ்யமான தீர்த்தமிது. விதிப்படி இங்கே வசித்துக் கர்மாக்களைச் செய்தால் முற்பிறவியில்
எங்கிருந்தோம் எப்படி இருந்தோம் என்ற ஞானத்தை நமக்கு தரும் என்றுகூர்ம புராணம் கூறுகிறது.

கங்கையும், யமுனையும், சேருமிங்கு விதிக்கப்பட்டுள்ள முறைகளின்படி தூய்மையான மனத்துடன் யாகம் செய்பவர்கள் நற்கதி (மோட்சம்)
அடைகின்றனர். என்றும், இங்கே உயிர்விடுபவர்கள் மோட்சம் பெறுகின்றனர் என்றும் ரிக்வேதம் பகர்கிறது.
தேவேந்திரன் ப்ரயாகையைப் பாதுகாக்கிறான். இங்குள்ள ஆலமரம் தான் ப்ரளய காலத்தில் அழியாமல் இருக்குமென்றும் அதனிலையில்தான் பெருமாள்
குழந்தையாக பள்ளிகொள்வார் என்றும் மாத்ஸய புராணம் கூறுகிறது.
இத்தலத்தைச் சேவிப்பதும், ப்ரயாகையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் செய்ய வேண்டிய கடமையாகும்.

மூலவர்-  நீலமேகப் பெருமாள் (புருஷோத்தமன்) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். இப்பெருமாளுக்கும், பிராட்டிக்கும் வேணி மாதவன், விமலா
என்ற பெயரை வடநாட்டு நூல்கள் சூட்டி மகிழ்கின்றன.
தாயார்–   புண்டரீக வல்லி
தீர்த்தம்–  மங்கள தீர்த்தம், கங்கை நதி ப்ரயாகை
விமானம்-   மங்கள விமானம்

காட்சி கண்டவர்கள்–  பரத்வாஜ முனி, பிரம்மா

பாண்டவர்கள் எதிரிகளைக் கொன்றாலும் அவர்கள் சகோதரர்கள் அல்லவா, சகோதரர்களைக் கொன்ற பாவத்தைப் போக்க ப்ரயாகையில்
நீராடினால் போதும், ப்ரயாகை சகல பாவத்தையும் போக்கிவிடுமென மார்க்கண்டேயர் கூற, பாண்டவர்கள் அவ்விதமே செய்தனர் என்பது வரலாறு.
பிரம்மா, இவ்விடத்தில் செய்தயாகத்திற்குப் பின்பே தனது படைக்கும் தொழில் சக்தியை அதிகரித்துக் கொண்டாராம்.
பரத்வாஜர் இங்கு யாகம் செய்தே, சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார்.
ப்ரயாகை யாத்திரை செய்வதாக நிச்சயித்தவுடன் நம் உடம்பில் இருக்கும் பாவங்கள் எல்லாம் நடுங்குகின்றன.
இவ்விடத்தில் செய்யும் அன்னதானம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கொரு கதை உண்டு. சுவேத கேது என்னும் மன்னன் எண்ணற்ற
தர்மங்கள் செய்தும் அன்னதானம் மட்டும் செய்யாதிருந்தான். அதன் மகத்துவத்தை முனிவர்கள் உணர்த்தியும் அவன் பின்பற்றவில்லை.
அம்மன்னன் இறந்து மேலுலகு சென்ற பின் அவனை பசி வாட்டியது.
இப்பசியை அடக்க தாங்கள் தான் வழிகாட்ட வேண்டுமென்று பிரம்மாவிடம் விண்ணப்பித்தான். அதற்குப் பிரம்மா, நீ அன்னதானம் செய்யாததால்
உன்னை இங்கு கொடும்பசி வாட்டுகிறது. பூவுலகில் தானம் செய்யாதபொருள் இங்கு கிடைக்காது. எனவே நீ மண்ணுலகு சென்று பாதுகாப்பாக உனது
சரீரத்தை மிதக்க வைப்பதற்காக நீ வெட்டிய குளத்தில் மிதந்து கொண்டிருக்கும் உனது சரீரத்தை கத்தியால் அறுத்து அதைப் புசி என்றார்.

வேறு வழியின்றி சுவேத கேது அவ்வாறே செய்தான். ஆயினும் அவன் பசி அடங்கவில்லை. அப்போது முனிவரொருவர் ப்ரயாகையில் நீராடு என்று
சொல்ல அவ்விதமே நீராடியும் பயனில்லை.அப்போது அங்குவந்த அகஸ்தியர் ப்ரயாகையில் அன்னதானம்
செய்தால் உன்சாபம் அகலுமென்றார். தேவ சரீரத்தில் நான் அவ்விதம் செய்ய இயலாதே என்று மன்னன் தெரிவிக்க அவ்வாறாயின் கையில் உள்ள
யாதாயினும் ஒரு பொருளைக் கொண்டு அதை பிறரிடம் கொடுத்து அன்னதானம் செய்விக்கலாமென கூறினார். தனது தேவ சரீரத்தில் அவ்வாறு
கழற்றிக் கொடுக்க அணிகலன்கள் யாதுமில்லையே என்று கூற, நீ செய்த பிற புண்ணியங்களின் பலன்களை திரட்டி கொடு என்று கூற, தான் செய்த
தர்மத்தின் பலனையெல்லாம் திரட்டி ஒரு கணையாழி ரூபத்தில் தர அகஸ்தியர் அதனை அங்கிருந்த சீடர்களிடம் கொடுத்து இப்பொருளை விற்று
அன்னதானம் செய்யுமாறு கூற அவ்வாறே அன்னதானம் செய்ய சுவேத கேதுவின் கொடும்பசி அகன்று மோட்சம் பெற்றாரென்பர்.

மகாபுண்ணிய தீர்த்தமான இந்த ப்ராயாகையில் பல தீர்த்தங்களும் பல நதிகளும் சங்கமிக்கின்றன. கங்கையும், யமுனையும் கலப்பதோடு
அளகநந்தாவும் பாகீரதியும் இங்கு சங்கமிக்கின்றன. ப்ரயாகையில் நீராடும் போது மிகவும் கவனத்துடன் நீராட வேண்டும். வெள்ளப் பெருக்கும் நீரின்
விரைவும் இங்கு திடீரென உண்டாகும்.
இத்தலத்திற்கருகிலேயே ஆஞ்சநேயர், கால பைரவர், மகாதேவர், பத்ரிநாதர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன.
பிரம்மன், பரத்வாஜர், தசரதன் ஆகியோருடன் ஸ்ரீராமபிரானும் இங்கு தவமியற்றினார்.
ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாளை இங்கு ரகுநாத்ஜி என்று அழைக்கிறார்கள்.

கங்கை, யமுனை, சரஸ்வதி இம்மூன்றும் கூடுமிடம் திரிவேணியாகும். அ.உ.ம. என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையான ஓங்கார வடிவமானது
ப்ரயாக சேத்திரம். அ எழுத்தாகவும், பிரத்யுமனனாகவும் இருக்கிறாள் சரஸ்வதி. யமுனா உ என்ற எழுத்தாகவும், அநிருத்தனாகவும்இருக்கிறாள் ம என்ற எழுத்தாகவும், சங்கர்ஷனனாகவும் இருக்கிறாள் கங்கை.

இங்குள்ள ஆலமரம் அழிவற்றது. அதில் வேணிமாதவன் என்ற பெயரில் விஷ்ணு, ஆடலங்கேசர் என்ற பெயரில் சிவன், மற்றும் பிரம்மனும் இதில்
வாசம் செய்கின்றனர்.

பாண்டவர்கள் போருக்குப்பின் தமது சத்துருக்களைக் கொன்ற பாவங்களைப் போக்க யாது வழி என்று மார்க்கண்டேயரிடம் கேட்க, அவர்
ப்ரயாகை ஒன்றே சகல பாவங்களையும் போக்கவல்லது என்று பாண்டவர்களை இங்கு அனுப்பி வைத்ததாக மாத்ஸய புராணம் கூறுகிறது.

மத்தால் கடல் கடைந்து வானோர்க்கு அமுது அளித்த
அத்தா எனக்கு உன் அடிப் போதின் புத்தமுதை
கங்கைக் கரை சேரும் கண்டத்தாய் புண்டரிக
மங்கைக்கு அரசே வழங்கு –102-

(இ – ள்.) மத்தால் – (மந்தரமலையாகிய) மத்தினாலே,
கடல் கடைந்து – திருப்பாற்கடலைக்கடைந்து,
வானோர்க்கு – தேவர்களுக்கு அமுது அளித்த – அமிருதத்தைக் கொடுத்தருளிய,
அத்தா – தலைவனே!
புண்டரிக மங்கைக்கு அரைசே – செந்தாமரைமலரில் வாழ்கின்ற பெரியபிராட்டியார்க்குத்தலைவனே!
கங்கை கரைசேரும் கண்டத்தாய் – கங்கைநதிக்கரையிற்பொருந்திய கண்டமென்னுங் கடிநகரி லெழுந்தருளியிருப்பவனே! –
எனக்கு – அடியேனுக்கு,
உன் அடி போதின் புது அமுதை – உனது திருவடித்தாமரையில்) தோன்றுகின்ற புதிய அமிருதத்தை,
வழங்கு – கொடுத்தருள்வாயாக; (எ – று.)

இதனால், ஐயங்கார், எம்பெருமானை நோக்கி, உனது திருவடிகளின் போக்யதையை அனுபவிக்குமாறு
எனக்கு நல்லறிவைத்தந்தருள்வாயென்று பிரார்த்திக்கின்றனர்.
“தேனேமலருந் திருப்பாதம்,”
“விஷ்ணோ: பதே பரமேமத்வஉத்ஸ: (விஷ்ணுவினது சிறந்ததிருவடிகளிலே தேனின்பெருக்கு உள்ளது)” என்றபடி
எம்பெருமானது திருவடிகளில் போக்யதை விஞ்சியிருக்குமென்க. பாற்கடலைக் கையினால் வருந்திக் கடைந்து
அதனினின்று எழுந்த அமிருதத்தைப் பிரயோஜநாந்தரபரரான தேவர்கட்குக் கொடுத்தது போலன்றி,
அநந்யப்ரயோஜநனான அடியேனுக்கு உன் திருவடிகளினிடத்து இயற்கையாகவேயுள்ள இனிமையைத் தருவது
மிகவும் எளிதாகு மென்ற கருத்து,
‘மத்தாற் கடல்கடைந்து வானோர்க்கு அமுதுஅளித்த அத்தா! எனக்கு உன்னடிப்போதிற் புத்தமுதை வழங்கு’ என்ற
தொடரில் தோன்றும் அமுதம் வேண்டுமென்று பிரார்த்தியாத தேவர்கட்கு அதனை உண்டாக்கியளித்த
நீ அதனைவேண்டுகின்ற எனக்கு இயற்கையாக உன்னிடத்திலுள்ள அதனை அளிக்கலாகாதோ?
சமயம் வந்தபோதுமாத்திரம் காலைக்கட்டிக் காரியங்கொண்டு மற்றைச்சமயங்களில் விலகிநிற்பவர்க்குத்தான் உதவவேண்டுமோ?
எப்போதும் உன்னையே அணுகிநின்று உன்னாலல்லது மற்றையாவராலும் ஒன்றுங்குறைவேண்டாத எனக்கு உதவலாகாதோ?
என்பவை முதலிய கருத்துக்களும் இங்குத்தொனிக்கும்.
புத்தமுதுஎன்றது – எத்துணைக்காலம் அனுபவித்தாலும் தெவிட்டுதலில்லாது மேன்மேலும் இன்சுவைபயப்பதும்,
‘தேவாமிருதம்போல அசுரர்கள் கைக்கொள்ளப்புகுகிறார்களே!’ என்று அஞ்சவேண்டாததுமாகிய அமிருத மென்றபடி.

இத்தலம் இப்பொழுது தேவப்ரயாகை யென்று வழங்குகின்ற தென்பர். புண்டரீகமங்கையென்பது – இத்தலத்துநாச்சியார்திருநாமம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading