ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –இச்சா மோஹி மஹா பாஹூம் -அயோத்யா -2-22-

இச்சா மோஹி மஹா பாஹூம்  ரகுவீரம் மஹா பலம்
கஜேந  மஹதா யாந்தம் ராமம் ராமம் சத்ரா வ்ருதா நநம –அயோத்யா -2-22-

இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ
மஹா பாஹூம்  -நீண்ட திருக் கைகளை யுடையராய்
ரகுவீரம்-ரகு குல ஸ்ரேஷ்டராய்
மஹா பலம் -பெரும் பலத்தை யுடையரான
கஜேந  மஹதா -மஹதா கஜேந -பெரிய யானையின் மேலே
யாந்தம் -எழுந்து அருளுமவராயும்
ராமம் -ஸ்ரீ ராமனை
சத்ரா வ்ருதா நநம –குடையால் வெய்யில் படாதபடி மறைக்கப்   பட்ட திரு முகத்தை யுடையவராயும்
இச்சா மோஹி -ஆசைப்படுகிறோம் அன்றோ –

அவதாரிகை –
சக்ரவர்த்தி தான் பரிணத வயஸ்தன் ஆகையாலும்
எதிரிகளை நோக்கி எடுத்து விடுகைக்கு அசக்தன் ஆகையாலும்
தான் இருக்கிற போதே பெருமாளைத் திருமுடி சூட்டி ராஜ்யத்தோடு பொருந்தும்படி பண்ண வேணும் என்னும் நினைவுடையான் ஆகையாலும்
களித வயஸாம் இஷ்வாகூணாமிதம் ஹி குலவ்ரதம் -ரகுவம்சம் -3-70-என்று சொல்லுகிறபடியே
இந்தக் குலத்தில் பிறந்தார்க்கு பிள்ளைகள் பருவம் நிரம்பினால் அவர்களை முடி சூட்டித்
தாங்கள் உபசாந்தராய்ப் போருவதொரு முறைமை யுண்டாகையாலும்
பெருமாளை திருமுடி சூட்டி ராஜ்ய துரந்தராக பண்ண வேணும் என்று கருதி
அது செய்யும் இடத்தில்
பாண்டரஸ் யாத பத்ரஸ்ய சாயாயாம்   ஜரிதம் மயா-அயோத்யா -2-7-என்று நாம்
பயணத்தின் மேல் பயணமாய்த் திரிகையாலே நாமும் ரஷித்தோமாய்
நாட்டாரும் ரஷிதர் ஆனார்கள்
ரஷணத்தில் அல்பம் குறை யுண்டாமாகில் இப்போது ஒரு பாலன் கையிலே காட்டிக் கொடுத்து எங்களை உபேஷித்தான்
இவன் என்ன ராஜ்ஜியம் பண்ணிற்று என்று நாட்டார் குறை சொல்வார்கள்
அவர்களையும் இசைவித்துக் கொள்ளுவோம் என்று பார்த்து பௌரஜாந பதங்களை திரட்டி
கதக்லேசா பவிஷ்யாமி புத்ரே அஸ்மின் சந்நிவேச்ய வை -அயோத்தி -2-14-என்றும்
சோ அஹம் விஸ்ரமம் இச்சாமி புத்ரம் க்ருத்வா பிரஜா ஹிதே -அயோத்யா -2-10-என்றும்
நெடும் காலம் உண்டு நான் உங்களை ரஷித்துப் போருகிறது
நம்மை இப்போது வார்த்தகம் வந்து கைக் கொண்டது
இனி உங்களுடைய ரஷணம் நம்மால் துஸ் சகமாய்  இருந்தது
ஆனபின்பு ஆத்மா வை புத்ர நாமா அஸி-மந்திர பிரச்னம் -2-11-33-என்கிறபடியே
என்னோடு நிர்விசேஷரான என் பிள்ளையை உங்களுடைய ரஷணத்தில் நியோகித்து இளைப்பாறுவதாக பாரியா நின்றோம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் -அயோத்யா -2-15-என்று இதற்கு நீங்களும் இசைய வேணும் என்று சொல்ல
அவர்களும் இது கேட்ட ப்ரியத்தாலே
விமா நம் கம்பயன் நிவ -அயோத்யா -2-18-என்று மாளிகை கோப்புக் குலையும் படி பெரிய சம்ப்ரமத்தைப் பண்ணி
ஹர்ஷத்துக்குப் போக்கு விட்டு
அநேக வரஷ சஹஸ்ரோ வ்ருத்தஸ் த்வமஸி பார்த்திவ
ஸ ராமம் யுவராஜாநமபி  ஷிஞ்சஸ்வ பார்த்திவம் -அயோத்யா -2-21- என்று
வ்ருத்தனுமாய் நன்றாக எங்களை ரஷிப்பதும் செய்தாய் –
இவர் பெருமாளைத் திரு அபிஷேகம் பண்ணு என்று இசைந்து
அவன் கேட்ட வார்த்தைக்கு உத்தரம் சொன்னார்களாகை அன்றிக்கே
தங்கள் நினைவுகளையும் வெளியிட்டுப் பெருமாளுடைய ராஜ்ய பரண யோக்யதையும் சொல்லித் தலைக் கட்டுகிறார்கள் –

1-இச்சாம  –
இட்ட மாலையும் கவித்த அபிஷேகமுமாய் எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் என்று போற ஸ்ரத்தை பண்ணுகிறோம்
2–இச்சாம –
எங்களுக்கு உள்ளது இச்சை இ றே-
முடி வைக்கும் போது நீயே வேணும் இ றே –
இச்சைக்கு காரணம் எங்கள் ஆசை இ றே –
ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி -என்று இப்போது எங்களுக்குக் கிட்டப் புகுகிறதோ
3- இச்சாம –
கிடைப்பது -கிடையாது ஒழிவது –
நல்லது கண்டால் ஆசைப் படக் கடவது இ றே –
4- இச்சாம –
நிரபயமாக எங்களை ரஷித்த உனக்குக் குறையா கிறதோ என்று வாயிட்டுச் சொல்லிற்றிலோம்-
ஆனால் இப்போது தான் சொல்லலாமோ என்னில்
பாவம் விஜ்ஞாய சர்வச-அயோத்யா -2-19-என்று
அவனுடைய நினைவு அறிந்து சொல்லுகிறவர்கள் ஆகையாலே
இப்போது இச்சாம -எண்ணத் தட்டில்லை
இந்த ஆசை சிலர்க்கு உண்டாய்ச் சிலர்க்கு இல்லையாய் இருக்குமோ என்னில்
5-இச்சாம –
நாங்கள் இருந்ததே குடியாக இது தலைக் கட்ட வற்றோ என்று உம்மை இரக்கிறோம்-

உங்கள் நெஞ்சில் கிடந்தது நாம் அறியும் படி என் என்ன –
1-ஹி-அன்றோ –
பிறர் சொல்ல வேண்டி இருந்ததோ -இது எல்லார்க்கும்  ஒக்கும் என்னும் இடம் –
ஜனகோஷோ மஹாந பூத் -என்றும்
விமாநம் கம்பயந்நிவ-அயோத்யா 2-19-என்றும்
நாட்டார் பண்ணின ஆரவாரத்தாலே கோப்புக் குலைந்த உன் மாளிகையிலும் விமானங்களிலும் கண்டு கொள்ளும் இத்தனை அன்றோ –
2-ஹி -அன்றோ –
அகாமயத் மேதி நீ -அயோத்யா -2-48-என்றும்
நீயும் நிர்வாஹகனாய் இருக்க
பூமி தானே ஸ்வயம் வரித்து மாலையிட்ட போதே அறிந்திலையோ –
அகாமயத-காதலித்தாள்
நீ காக்ரஹணம் பண்ணிப் போரச் செய்தேயும் -முறை மசக்கி மாலை இட்டதில்லையோ –
காமுகருக்கு முறை தெரியாது இ றே-
லோக பாலோபமம் நாத மகாமையாதா மேதி நீ –
லோகபாலோபமா -லோக பாலனுக்கு ஒப்பானவன்
விஷ்ணு நா சத்ருசா -பால -1-18-என்று
சர்வேஸ்வரனைப் போலே இருக்கையாலே மேல் விழுந்து ஸ்ரத்தை பண்ணினாள்-
அதற்க்கடி என் என்னில் –
மேதி நீ –
மேதி நியான யாலே
எங்கனே என்றால்
மதுகைடபர்களுடைய வஸா விஸ்ர கந்தத்தாலே உபஹதையாய் இருக்கிற தன்னை
சர்வ கந்த -சாந்தோக்யம் -3-14-2-என்கிற அவனுடைய
சௌகந்த்யத்தாலே வாசிதை யாக்குகைக்காக –
வாசிதம் ஆக்க வேணுமத்தை புறம்பேயும் சொன்னார்கள் இ றே
மதுகைடபதாந வேந்த்ரமேத ப்லவ விஸ்ரா விஷமைவ மேதி நீயம அதி வாச்யயதி  –
ஸ்வ கைர்ய சோபிச் சிரமே நாமுப புஞ்சதே நரேந்த்ரா -என்று
முராரி கவியும் அனர்க்க ராகவம் -1-14-என்று சொன்னான் இ றே
இஸ் சௌகந்த்ய மாத்ரத்துக்காக கர்ப்பூர சந்த நாதிகளைப் போலே உபகரநமாய்-சேஷ கோடியிலேயோ அவதரித்தது என்னில்
நாதம-நாதனை –
ஏதாத்ருச கந்தமே பிடித்து இல்லாதபடி ரஷிப்பானாய்
அசௌகந்த்ய சௌகந்த்யன்கள்
தனக்கே அனுபவிக்க வேண்டும்படி நிருபாதிக சேஷியுமாய்-

மெய்ப்படவே உங்கள் எல்லார்க்கும் இச்சை யுண்டாகில் முடி சூட்டுகிறோம் –
அவர் தாம் நாட்டை அடக்கி ஆளவல்ல சாமர்த்தியம் யுடையவரோ என்னில்
1- மஹா பாஹூம் –
அவர் தோள் பரப்புக்கு  நடக்கிற கழஞ்சு மண்ணும் ஒரு சரக்கோ
2- மஹா பாஹூம் –
சக்தஸ் த்ரைலோக்யம் அப்யேஷ போக்தும் கிந்நு  மஹீமிமாம்-அயோத்யா -2-45-என்று
கோசல ராஜ்யம் அன்றிக்கே  லங்கா ராஜ்யமும் கைக் கொள்ளும்படியான தோளை யுடையவர் –
3- மஹா பாஹூம்
ஆயதாச்ச -என்றும்
ஆஜா நுபாஹூம் –அயோத்யா -17-7-என்றும்
அவருடைய சாமுத்ரிக லஷணம் கண்டால் சிலரைக் கேட்க வேணுமோ –
4- மஹா பாஹூம்
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற-நாச்சியார் -11-3- என்று
உபய விபூதியையும் வஹிக்கிற தோள் இ றே –
5- மஹா பாஹூம் –
அத் தோள் தான் வேணுமோ –
பாஹூச்சாயா ம வஷ்டப்தோ யஸ்ய லோகோ மஹாத்மந -சுந்தர -34-31-என்று
அவருடைய தோள் நிழல் தானே அமையாதோ எங்களை ரஷிக்கைக்கு –

ரஷ தர்மேண பலேந சைவ -கிஷ்கிந்தா -1-128- என்றும்
தர்மத பரி ரஷிதா -யுத்த -1-12- என்றும்
சிலரை சிலர் ரஷிக்கும் இடத்தில் தர்ம பலங்கள் இரண்டும் வேணும் இ றே
இவர் பலம் உண்டு என்று தோள் வலியாலே ரஷிக்கும் இத்தனையோ –
தார்மிகராய் ரஷிக்கும் ஆகாரம் இல்லையோ-என்னில்
1-ரகுவீரம் –
தீ நாந்தா நேந ராகவ -அயோத்யா -12-29-என்று
அவ்வாகாரம் பிறந்து படைத்ததன்றோ -இப்போதாகத் தேட வேணுமோ –
2- ரகுவீரம் –
ஆன்ரு சம்சயம்  பரோ தர்மச் த்வத்த ஏவ மயா ஸ்ருத -சுந்தர -38-41-என்று
பிறர்க்கும் கூட உபதேசிக்கும் படியாய் அன்றோ அதிருப்பது –
3- ரகுவீரம் –
தார்மிகத்வம் தன்னில் ரகுகளைக் காட்டில் இவருக்கு உள்ள தன்னேற்றம்
அது எங்கனே என்னில்
ரகுதான் ராஷசன் ஷூதார்த்தனாய்-பசியினால் – ம்ருதனானால் இதனால் வரும் பாபம் உனக்கு உண்டாகாதோ என்ன
மேல் ஒரு பிரதிக்ரியை பண்ண மாட்டாதே இருந்தான் இ றே
இவரோ -அப்யஹம் ஜீவிதம் ஐஹ்யாம் த்வாம் வா சீதே சா லஷ்மணாம்-ஆரண்யம் -10-19-என்று
பிராணன் ஒரு தலையாகவும்
ப்ராணேப்யோ அபி க்ரிய ஸீ-ஆரண்யம் -10-22-என்று பிராட்டி ஒருதலையாகவும் அழிய மாறி ரஷிக்குமவர் இ றே –

இப்படி இவர் ரஷிக்கும் இடத்தில்
வத்யதாம் பத்யதாம் -அயோத்யா -21-12- என்று விலக்குவார் உண்டானால் அவர்கள் வழியே போய் இள நெஞ்சே மீளுவாரோ என்னில்
மஹா பலம் –
ந து பிரதிஜ்ஞாம சம்ஸ்ருத்ய ப்ராஹ்மணேப்யோ  விசேஷத -ஆரண்ய -10-19- என்றும்
ஏதத் வ்ரதம் மம-யுத்த -18-34- என்றும்
ந த்யஜேயம் கதஞ்சந -யுத்த 18-3- என்றும்
அவர்கள் தங்களை கை விட்டும் ஆஸ்ரிதரை ரஷிக்கும் படியான வ்யவசாயம் யுடையவர்
பலம் -என்றது இவ்விடத்தில் மநோ பலத்தை –
நாய மாத்மா பல ஹீநேந லப்ய-முண்ட -3-2-4-என்கிறபடியே
துடங்கின கார்யத்தில் அசஞ்சலராய் இருக்கும் இருப்புக்கு
தைர்யேண ஹிமவாநிவ -பால -1-17-என்னக் கடவது இ றே-

உங்களுக்கு ஏற்ற ராஜ்ய பரணத்துக்கு சக்தராகில் நீங்கள் சொன்ன படி செய்கிறோம் –
இப்போது நான் இருந்த இடத்திலே இருக்க நாட்டுக்கு வேண்டுவது எல்லாம் ஆராய்ந்து நடத்தா நின்றார் ஆகில் அமையாதோ என்ன
உன் பிரயோஜனம் தலைக் காட்டிற்று இ றே
அவ்வளவில் விடலாமோ
எங்களுடைய பிரயோஜனமும் பெற வேண்டாவோ என்கிறார்கள் மேல் –
ஆகில் நீங்கள் சொல்லுகிறது என் என்ன
கஜேந மஹதா யாந்தம் –
நீ இசைந்தமையும் முடி சூட்டினமையும் தோற்ற
சத்ருஜ்ஞயன் கழுத்திலே இட்ட மாலையும் கவித்த முடியுமாய்-எங்கள் கண் முகப்பே தோற்ற வேணும் –
அது செய்யும் இடத்தில் தேரை அலங்கரித்து அதிலே வர அமையாதோ என்ன –
கஜேந-
அங்கன் ஒண்ணாது
மத்த மாதங்க காமிநம்  -அயோத்யா -3-28- என்ற அவருடைய நடைக்குச் சேர்ந்த வாகனமாக வேணும்
அது செய்யும் இடத்தில் ஏதேனும் ஒரு யானை யாக ஒண்ணாதோ என்ன –
கஜேந மஹதா –
சர்வ லஷணோ பேதமாய் பட்டத்துக்கு உரிய யானையாக வேணும் –
மஹதா –
சர்வ சக்தியை வஹிக்க வற்றாக வேணும் இ றே
உங்களுக்கு இப்படி அபீஷ்டமாகில் முடியையும் வைத்து
கஜாதி ரூடராம்படி பண்ணி விடுகிறோம் என்ன
யாந்தம் –
அவ்வளவும் போராது
யானைக் கழுத்திலே ஏறி நெடும் தெருவே நடக்க வேணும் –
அதுவே வேண்டும் போது அடைய இங்கே திரண்டிகோளாகில்
முடி சூட்டி யானைக் கழுத்திலே ஏற்றின அளவே அமையாதோ -என்ன
புதியது உண்பார் தனி உண்பார்களோ-என்கிறார்கள்
யாந்தம் -நனந்துஸ் ஸ பிரஜா பிரஜா -என்று இந்த மஹோத்சவத்தை எங்கள் மித்ராதிகள் உடன்
அங்கே எழுந்து அருளக் காண வேணும் –
யாந்தம் -ஆயாந்தம் –
போகின்றவரை -வருகின்றவரை
முகமும் முறுவலும்
கஸ்தூரி திரு நாமமும்
கருணா கடாஷததோடே
எழுந்து அருள சேவிக்க வேணும் –

இப்படி சேவிக்கிறது தான் யாரை -என்னில்
1-ராமம்
ராமயதீதி ராம -என்கிற வ்யுத்பத்தியாலே சமஸ்த ஜனங்களையும் கல்யாண குணங்களாலே ரஞ்ஜிப்பிக்கிற வரை –
2-ராமம் –என்கிற தாத் வர்த்தத்தின் படியே எல்லாரோடும் கூட விஹரிக்குமவர் ஆகையாலே என்றுமாம்

வெறும் யானைக் கழுத்திலே எழுந்து அருளுகிற மாத்ரம் அமையுமோ -என்ன
சத்ரா வ்ருதா ந நம் –
வெய்யில் படாமல் வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்து அருளக் காண வேணும் –
பாண்டரஸ் யாத பத்ரச்ய சாயாயாம் ஜரிதம் மயா -என்று
தசரத சக்ரவர்த்தி முதலான ராஜாக்களாலே இச்சிக்கப் படுமதாய் இருக்கிற
திரு முக மண்டலத்தை சேவிக்க வேணும் என்றுமாம் –

————-

இச்சா2 மோஹி மஹாபா3ஹூம் ரகு4வீரம் மஹாப3லம்|

3ஜேந மஹதா யாந்தம் ராமம் 2த்ராவ்ருதாநநம்||

பொழிப்புரை:
நீண்ட திருக்கைகளை உடையவராய், ரகு குலஶ்ரேஷ்டராய், மஹாபலம் பொருந்தியவராய் இருக்கும் ராமனைப்
பெரிய யானையின்மேல் எழுந்தருளுபவராயும், வெண்கொற்றக்குடையால் (வெய்யிலிலிருந்து) மறைக்கப்பட்ட
திருமுகமண்டலத்தை உடையவராயும் காண நாம் ஆசைப்படுகிறோமன்றோ!

ராஜ்ய பாரத்தை மகனிடம் கொடுத்து வானப்ரஸ்தாஶ்ரமம் மேற்கொள்ளவேண்டும் என்ற ரகுவம்ஶ குலவழக்கத்தின் படி,
ராமனுக்குப் பட்டாபிஷேகம் செய்விக்க விரும்பினான் தஶரதன். தனது மனக்கிடக்கையை அப்படியே செயற்படுத்திவிடின்,
ஒருகால், அயோத்தியா நகரவாஸிகள், ‘ஒரு பச்சிளம் பாலகன் கையில் நாட்டை இப்படிக் கொடுத்துவிட்டீரே!
பகைவரிடமிருந்து மக்களைக் காக்கும் திறல் பெற்றவனோ இந்த ராமன்?’ என்று ஸந்தேகிக்கக்கூடும் என்று
தன் மனத்துள்ளே சங்கித்து மேலே செய்வது யாது என்ற யோசனையுடன் அரசன் இருந்தான்.
‘அறுபதினாயிரம் ஆண்டுகள் வெண்கொற்றக் குடையின் நிழலிலேயே நான் கிழத்தனம் அடைந்தேன்’
[பாண்ட3ரஸ்யாதபத்ரஸ்ய சா2யாயாம் ஜரிதம் மயா; அயோ.கா 2-7] என்று மனதுளே எண்ணி,
இனி தாமதிக்காமல், குலவழக்கப்படி ராஜ்யத்தை மகனுக்கு அளித்தலே மேல் என்றும் எண்ணி,
[க3லிதவயஸாமிக்ஷ்வாகூணாமித3ம் ஹி குலவ்ரதம்; ரகுவம்ஶம் 3-70] நகரத்தாருடன் கலந்து யோசிக்க விரும்பினான்.

ஒருநாள், நகரத்தாரையும், நாட்டாரையும் ஒருங்கே கூட்டி, அவர்களிடம், ‘ராஜ்ய பாரத்தைப் பிள்ளையிடம் வைத்து இடர் தீருகிறேன்’
[க3தக்லேஶோ ப4விஷ்யாமி புத்ரேஸ்மிந் ஸந்நிவேஶ்ய வை; அயோ.கா. 2-14] என்றும்,
‘பிள்ளையை ப்ரஜா ரக்ஷணத்திற்கு வைத்துவிட்டு நான் இளைப்பாறுகிறேன்’
[ஸோऽஹம் விஶ்ரமம் இச்சா2மி புத்ரம் க்ருத்வா ப்ரஜாஹிதே; அயோ.கா. 2-10] என்றும் சொல்கிறான்.
இவ்வாறு சொல்லி, அவர்களிடம், ‘நீங்களும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்’
[ப4வந்தோ மேऽநுமந்யந்தாம்; அயோ.கா 2-15] என்று வேண்டி நிற்க,
ஜனங்களும் இதைக்கேட்ட உகப்பாலே, அரண்மனையின் கோப்பு குலையும்படி
[விமானம் கம்பயந்நிவ; அயோ.கா. 2-18] பெரியதொரு ஆரவாரத்தைச் செய்தனராம்.
அரசன் தங்களிடம் வைத்த ப்ரார்த்தனையை அங்கீகரிப்பதோடு மட்டுமின்றி தங்கள் அபிப்ராயத்தையும் சேர்த்தே,
‘அரசே!, உமக்கு வயது பல்லாயிரம் கடந்து விட்டது; வெகு விரைவில் ராமனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்யுங்கள்’
[அநேக வர்ஷ ஸாஹஸ்ரோ வ்ருத்3த4த்வமஸி பார்த்தி2வ; ஸ ராமம் யுவராஜாநம் அப்4யஷிஞ்சஸ்வ பார்த்தி2வம்; அயோ.கா.2-21]
என்று விண்ணைப் பிளக்கும் அளவிற்கு ஆர்பரித்தனர்.

‘இச்சா2ம:’ (விரும்புகிறோம்) என்று மக்கள் சொன்னதற்கு பல வியாக்கியானங்கள் தருகிறார் பெரியவாச்சான்பிள்ளை.
1. மாலை சூடிக் கிரீடம் தரித்து எங்கள் முன்னே அரசனாகக் காண விரும்புகிறோம்,
2. நாங்கள் விருப்பம்தான் செய்யமுடியும், செய்து வைத்துத் தலைக்கட்டவேண்டியவன் நீங்கள் அல்லவோ? எனவே விரும்புகிறோம்,
3. ‘பெரியோர்களுக்கும் நற்காரியங்கள் செய்யப்புகின் இடையூறுகள் பலவாய்த் தோன்றும்’
[ஶ்ரேயாம்ஸி பஹுவிக்3நாநி மஹதாமபி] என்ற உலக வழக்கின்படி, நாங்கள் விருப்பத்தை மட்டுமே தெரிவிக்கலாம், எனவே விரும்புகிறோம்,
4. நல்ல விஷயத்தைக் கண்டால் ஆசைப்படுவது மனுஷ்ய ஸ்வபாவமன்றோ!
ஒரு குறையுமில்லாமல் எம்மை இதுவரை காத்துவந்த உம்மிடம் குறை சொல்ல ஒரு காரணமும் இல்லை. என்றாலும்,
நீரே இப்படிக் கேட்டபிறகு, நாங்களும் ராமனையே அரசனாகக் காண விரும்புகிறோம் என்று சொல்வதில் தவறில்லையே,
5. இந்தவிருப்பம் சிலருக்கு உண்டு, சிலருக்கு இல்லை என்ற பேதமின்றிக்கே நாங்கள் அனைவரும் விரும்புவதால்,
பஹூவசனத்தில் ‘இச்சாம:’ விரும்புகிறோம் என்றபடி.

இப்படி விருப்பம் தெரிவித்த நகரத்தாரிடம், தஶரதன், ‘ஆமாம், நீங்கள் விருப்பம் தெரிவித்தீர்கள்;
ராமன் ராஜ்ய பாரத்தைத் தாங்கும் தகுதி உடையவன் தானா என்று யோசித்தீர்களா?’ என்பது போல் அவர்களை நோக்க,
அவர்களும், ‘அவர் தோள் பரப்பைக் காணுந்தோறும் இந்த மண்ணுலகும் ஒரு பொருட்டோ?
[மஹாபாஹும்], மூவுலகையும் ஆளவல்லவர், இந்த பூமியை ஆளவல்லவர் என்று சொல்லவும் வேண்டுமோ?
[ஶக்த: த்ரைலோக்யமப்யேஷ போ4க்தும் கிந்நு மஹீமிமாம்; அயோ.கா.2-45] [மஹாபா3ஹும், ஆஜாநுபா3ஹும்] என்றபடி.
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற செங்கோலுடைய செல்வன் அன்றோ இவன்? [நாச்.திரு. 11-3]
என்று அகல்விசும்பும் நிலனுமாகிற உபயவிபூதிகளைத் தாங்கும் தோள்கள் அல்லவோ இவனுடைய தோள்கள்?
எந்த மஹாத்மாவினுடைய தோள் நிழலில் உலகெல்லாம் விளங்குகிறதோ அவருடைய தோள் நிழல் போதாதோ எங்களைக் காப்பாற்றுவதற்கு?
[பா3ஹுச்சா2யாம் அவஷ்டப்3தோ4 யஸ்ய லோகோ மஹாத்மந: ஸூந்.கா. 34-31].

ராமன் தோள்வலியால் மட்டுமே பகைவரை வெல்ல வல்லவனா? ஒரு அரசனுக்குத் தோள்வலிமை மட்டுமே போதுமானதா? என்று வினவின்,
தார்மீகராய் ரக்ஷிக்கும் பெருமை இல்லையோ? என்றும் சங்கித்திருந்தால், அவன் ரகுவீரன் அல்லனோ?
தீனர்களை தானத்தால் வெல்கிறான் [தீ3னான் தா3னேன ராக4வ: அயோ.கா. 12-29].
தர்மத்தாலே ரக்ஷிக்கும் தன்மை ரகுகுலத்தில் பிறந்ததாலே ராமனுக்குப் பிறவிக்குணமாகவே இருக்கிறதே.
‘இரக்கம் என்ற மேலான தர்மம் உம்மிடமிருந்தே என்னால் கேட்கப்பட்டது’ என்று தாய்மைக் குணம் நிரம்பிய பிராட்டியே ஆநந்திக்கும்படி
[ஆந்ருஶம்ஸ்யம் பரோ த4ர்மஸ்த்வத்த ஏவ மயா ஶ்ருத: ஸுந்.கா 38-41] என்று பிறருக்கும் உபதேஶிக்கும்படியன்றோ இவன் பெருமை இருப்பது!
தீனர்களை ரக்ஷிக்கும் விஷயத்தில், லக்ஷ்மணனையோ, பிராட்டியையோ பின் தள்ளி ஆஶ்ரிதர்களை முன் வைப்பவன்.
காட்டில் பிராம்மணர்களுக்குச் செய்த ப்ரதிக்ஞையைக் காப்பாற்றுவதற்கு என் உயிரையும் விடுவேன்; லக்ஷ்மணனுடன் கூடிய உன்னையும் விடுவேன்;
[அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸீதே ஸலக்ஷ்மணாம்; ஆர.கா.10-19] என்றும்,
ப்ராணனைக் காட்டிலும் மேலானவள் என்ற பிராட்டியையும் தியாகம் செய்வேன்
[ப்ராணேப்யோபி க3ரீயஸி; ஆர.கா 10-22] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்வத்தைக் கடைப் பிடிக்கிறான்.

ஶரணமடைந்தவர்களை ரக்ஷிப்பது என் வ்ரதம்  [ஏதத் வ்ரதம் மம; யுத்.கா.18-34 ],
ஶரணமடைந்தவர்களை ஒருபோதும்  கைவிடமாட்டேன் [ ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா. 18-3] என்றும் ஆஶ்ரித ரக்ஷணத்தில் உறுதி உடையவர்.
ரகுவீரம் மஹாபலம் என்று இங்கே கூறுமிடத்தே, தேஹபலம் என்று பொருள் கொள்ளாதே, மனோபலம் என்றே பொருள் கொள்ளவேண்டும்.
மஹாபாஹும் என்று முன்னமே கூறப்பட்டுவிட்டதாலும், இந்த பரமாத்மாவானவன் மனோபலமற்றவனால் அடையத்தகாதவன்
[நாயமாத்மா ப3லஹீநேந லப்4ய:, முண்.உப. 3-2-4] என்றும் மனோபலத்தைப் பல ஶப்தத்தால் குறிப்பதாலும்,
இங்கே மனோபலம் என்பதே பொருந்தும். மேலும், தொடங்கிய காரியத்தில் அசஞ்சலாராய் இருக்கும் ராமனை
தைர்யத்தில் ஹிமவானைப் போன்றவர் [தை4ர்யேண ஹிமவாநிவ; பால.கா 1-17] என்பதால் அறியலாம்.

இப்படியாக அரசரும், நகரத்தாரும் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதே உசிதம் என்று உறுதி செய்த பிறகு,
நகரத்தார் அரசரிடம், ‘உமது விருப்பத்திற்கு நாங்கள் உடன் பட்டோம்; இப்போது எமது விருப்பத்தைக் கேளீரோ’ என்றனர்.
அப்படியாகில், நீங்கள் சொல்வதென்ன என்று வினவ,
‘கழுத்தில் மாலையும், கவித்த அரசமகுடமும் தாங்கி ஶத்ருஞ்ஜயம் மேலே பவனி வரவேண்டும்’ [க3ஜேந மஹதா யாந்தம்] என்றனர்.
அரசருக்கு ஏற்ப அரசத்தேரில் பவனி வருவதை விரும்பாமல், யானை மீதேறி வருமாறு விழைவது என்?
மதம்கொண்ட யானையைப் போன்ற நடையுடையவன் அன்றோ அவன்?
[மத்த மாத3ங்க கா3மிநம்; அயோ.கா.3-28]. அதற்கேற்ப யானைமீதேறி வரவேண்டாவோ?
அது செய்யுமிடத்தில், ஏதேனும் ஒரு யானையாக ஒண்ணாதோ? ஸர்வலக்ஷணங்களும் பொருந்தியதான பட்டத்து யானையாக இருக்கவேண்டும்.
[க3ஜேந மஹதா], ஸர்வ ஶக்திபொருந்தியவனை எழுந்தருளப்பண்ணும்படியான பட்டத்து யானையாக இருக்கவேண்டுமன்றோ!
யானை மீது ஏற்றம் மட்டும் போதாது; அயோத்தி மாநகரின் பெருந்தெருவே ஊர்வலமாய் வரவேண்டும்;
சுற்றத்துத் தோழர்கள், தோழிமாருடன் உடனிருந்து முகமும், முறுவலும், கஸ்தூரி நாமமும் கருணாகடாக்ஷத்தோடே எழுந்தருள ஸேவிக்கவேண்டும்.
அது மட்டுமன்று. வெய்யில் திருமுகத்தில் படாதவாறு வெண் கொற்றக் குடை நிழலிலே எழுந்தருளக் காண வேண்டும்.

———————————————————————————————————
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading