ஸ்ரீ இராமாயண தனி ஸ்லோக வியாக்யானம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அருளிச் செய்தது –இயம் ஸீதா மம ஸுதா-பால – 73-27–

பால காண்டம்

ஸர்க்கம்-73; ஶ்லோகம்-27

இயம் ஸீதா மம ஸுதா ஸஹத4ர்ம சரீதவ|

ப்ரதீச்ச2 சைநாம் 4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||

பொழிப்புரை:
என்னுடைய பெண்ணான இந்த ஸீதையானவள் உமக்கும் தர்மங்களைக் கூட இருந்து செய்யக்கூடியவள்;
இவளை அங்கீகரிப்பீராக; உமக்கு மங்களமுண்டாகட்டும்;
இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்.

இந்த ஶ்லோகத்தில் புருஷகாரத்துக்கும் புருஷகாரானாகும் ஜநகரின் நிலையைப் பற்றிச் சிலாகித்துச் சொல்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.
ராமபிரான் ஶிவதநுஸ்ஸை முறித்து பித்ரு பாரதந்த்ரியம் தோன்ற அடக்கவொடுக்கத்துடன் நிற்க,
ஜநகர் சிந்தார்ணவம் என்னும் கவலைக்கடலிலிருந்து கரையேறினவராய், மிகவும் மனமுவந்து
பெருமாளையும் பிராட்டியையும் சேர்த்து வைக்க எண்ணி, பெருமாள் கையிலே பிராட்டியைக் கொடுப்பதன் மூலம் தன் காரியத்தை முடிக்கிறான்.
சேதனரைப் பெருமாளிடம் சேர்ப்பிக்கும் புருஷகாரபூதையான பிராட்டியையே
பெருமாளிடம் சேர்ப்பிப்பதன் மூலம் பிராட்டிக்கும்  புருஷகாரமாகிறான் இவன்.

இதோ இருக்கிறாள் ஸீதை, (இயம் ஸீதா) இங்கேயும் பாரும் என்று ராமனை நோக்கிச் சொல்வதாய் அமைகிறது
இங்கே. சந்திரனைப் போன்ற முகத்தினை உடையவனாய், அந்தச் சந்திரனைக் காட்டிலும் அழகு பொருந்தியவனாய்,
வடிவழகு, வண்மை குணங்கள் முதலியவற்றால் ஆண்களின் கண்களையும், நெஞ்சங்களையும் கொள்ளை கொள்பவனாய் இருக்கும் ராமனிடம்
(சந்த்ர காந்தாநநம் ராமம் அதீவப்ரியத3ர்ஶநம், ரூபௌதா3ர்யகு3ணை: பும்ஸாம் த்3ருஷ்டிசித்தாபஹாரிணம்; அயோ.கா. 3-29 )
‘உம்மைப் பார்த்து இறுமாந்திராதீர்; இவளையும் பாரீர்; குணம், வயது, நடத்தை முதலியவற்றால்
வேறு ஒருவருக்கும் பொருத்தமின்றிக்கே, உமக்கே பொருத்தமாயிருக்கிற (துல்ய ஶீலவ்யோவ்ருத்தாம்; ஸுந்தர.கா. 16-5)
காரணத்தால் உமக்குத் தருகிறேனத்தனை காணும்’ என்று மனத்தில் நினைத்திருப்பதாகக் கற்பித்து வியாக்கியானம் செய்கிறார் பெரியவாச்சான்பிள்ளை.

‘என்னைக் காட்டிலும் இவளுக்கு ஏற்றமேது?’ என்று ராமன் நினைப்பானாகில், இவள் ஏற்றம் சொல்லும் வகையாக, இவள் என் மகள் (மம ஸுதா) என்கிறான்.
இவள் நற்குடியில் பிறந்தவள்; உன்னைப்போல் அல்லாமல் கர்ப்பவாஸம் பண்ணாதவள்;
ஸீதா லாங்கலபத்ததி: (கலப்பை உழுத வழி ஸீதை எனப்படும்) என்பதற்கிணங்க, பொற்கொடிபோலே பூமியிலே பிறந்தவள்.
ஹிரண்யவர்ணை (ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்; ஶ்ரீ ஸூக்தம்) ஆயிற்றே இவள்!
பற்றி எரியும் மிதிலையில் எனக்குவொன்றும் இல்லை என்று அபிமானமற்று இருந்த எனக்கும்,
‘இவள் எனது பெண்’ என்று அபிமானிக்கும்படியாக ஏற்றமுள்ளவள்.
‘வள்ளி மருங்குல் என்றன் மடமான்’ (பெரிய திருமொழி 3-7-1) என்று தாயார் பெண்ணின் பெருமையைச் சொல்லுமாப்போலே சொல்லுகிறான்.
பிறவாமையிலும் ஏற்றமுண்டு; பிறப்பிலும் ஏற்றமுண்டு; இரண்டிலும் இவளுக்கு ஏற்றமுண்டு.
‘ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்; திருமகள் போல வளர்த்தேன்; (பெரியாழ்வார் திருமொழி 3-8-4) என்று சொல்கிறான்.

மேலும், ஜநகர் ராமன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருப்பான் என்று எண்ணுகிறார்.
ஒருவேளை, ‘இந்த வைலக்ஷண்யத்தில் எமக்கு என்ன தேட்டம்? எனது தர்மத்துக்கு உதவியாய் இருப்பாளா?’
என்று ஸங்கித்து இருப்பானாகில் என் செய்வது? என்று நினைத்து, மேலும் கூறுகிறான்.
உமக்கு தர்மங்களைக் கூட இருந்து செய்யக் கூடியவள் (ஸஹத4ர்ம சரீதவ) என்றும் சொல்கிறான்.
நண்பனாக வேஷம் தரித்து வந்தாலும் கைவிடமாட்டேன் (மித்ர பா4வேந ஸம்ப்ராப்தும் ந த்யஜேயம் கத3ஞ்சந; யுத்.கா.18-3)
என்கிற உமது ஸங்கல்பத்துக்கு உறுதுணையாக இருப்பாள்;
என்னைச் சரணமடைந்தவனுக்கு எல்லா பூதங்களினின்றும் நான் அபயமளிக்கிறேன்;
இது என் விரதம் (அப4யம் ஸர்வ பூதேப்4ய; த3தா3மி ஏதத் வ்ரதம் மம; யுத்.கா 18-34) என்று
விரதம் மேற்கொண்ட உமக்கு உறுதுணயாக இருப்பாள்;
இப்படித் தேவரீர் அருளிச்செய்த அர்த்தத்தை ‘ராக்ஷஸிகளான உங்களுக்கு அபயம் அளிக்கிறேன்
(அலமேஷா பரித்ராதும் ரக்ஷஸீர் மஹதோ ப4யாத்; யுத்.கா 27-46) என்றும்,
ராக்ஷஸிகளை பெரும் பயத்தினின்றும் காப்பாற்ற இப்பிராட்டியே தகுந்தவள்;
பாபிகளாயினும், நல்லோர்களாயினும், கொல்லத் தக்கவரே யாயினும் பெரியோனால் அவர்கள் விஷயத்தில்
கருணை காட்டப்படவேண்டும்; குற்றம் செய்யாதவர்கள் யாருமில்லை என்று ராக்ஷஸிகளுக்குப் பரிந்து பேசக்க்டியவள்
(பாபாநாம் வா ஶுபா4நாம் வா வதா4ர்ஹாணாம் வா ப்லவங்கம; கார்யம் கருணமார்யேண ந கஶ்சிந் நபராத்4யதி; யுத்.கா. 116-44).

இவளை அங்கீகரிப்பீராக (ப்ரதீச்ச) என்றவுடன், ஜநகர் மனதில் ஒரு ஸந்தேஹம் நிழலாடுகிறது.
நந்தகோபன் திருமகனைப் போன்றவனன்றே இவன்! ராமனும், ‘நாம் இதுக்குக் கடவோமோ?
ஐயரும், ஆச்சியரும், வஸிஷ்டாதிகளும் அன்றோ செய்விக்கவேண்டும்?’ என்றான்.
ஜனகரும் இதையறிந்து, ‘நின் தாள் நயந்திருந்த இவளை உன்மனத்தால் என் நினைத்திருந்தாய்?’ (பெரிய திரு. 2-7-1) என்று கேட்டு,
ஒத்தகுணம், வயது, நடத்தை (துல்ய ஶீல வயோவ்ருத்த:) ஆகியவற்றை உடையவளாயிருப்பினும் பயனில்லையே;
இவள் இறையும் அகலகில்லேன் (திருவாய்மொழி 6-10-10) என்று இருப்பதுபோல், நீரும் ஸீதையை விட்டு
ஒருகணமும் ஜீவியேன் (ந ஜீவேயம் க்ஷணமபி; ஸு.கா. 66-10)
தானே வருகிற ஶ்ரீதேவியைக் காலாலே தள்ளாதே கொள்ளும்’ என்று வேண்டி நின்றார்.

ஶ்ரீராமன் தந்தை இசைந்திருந்ததைப் போன்றே தானும் இசைந்திருந்தான்.
இவன் பெருமைக்கேற்ற பெருத்த கண்ணாலங்கள் செய்து (பெரியாழ். திரு. 3-7-10),
நாடு நகரமறிய நல்லதோர் கண்ணாலம் செய்து தக்கவா கைப்பற்றுங்கொலோ (பெரியாழ். திரு.3-8-6)
என்று ஆசைப்படுகிறான் ஜனகன்.
வெள்ளி வளைக்கை (பெரியாழ். திரு; 3-7-1) என்னும் கையைப் பற்றச்சொல்கிறான்
( ஏநாம் பாணிம் க்3ருஹ்ணீஷ்வ). இவ்வேப்பங்குடி நீரையன்றோ உம்மைக்குடிக்கச்செய்வது?
பால் குடிக்கக் கால் பிடிக்க வேண்டியிருப்பதே!
பால்மொழியாள் (பெரியாழ். திரு. 3-10-5), இவள் ஆயிற்றே! இனியவள்; இனிய பேச்சை உடையவள்
(மது4ரா மது4ராலாபா4; ஸு.கா. 66-15) என்று சொல்லப்பட்டவளன்றோ?
உனக்கு மங்களமுண்டாகட்டும் ( பத்3ரம்தே) பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் கண்டவுடன் மங்களாஶாஸனம் பண்ணுகிறார்.
பரமபுருஷனுக்குப் பெண்பெற்றுக் கொடுத்தாரெல்லாம் பெரியாழ்வாரைப்போலே திருப்பல்லாண்டு பாடவேண்டும் அன்றோ?
நன்று நன்று நறையூரர்க்கே (பெரிய திரு 8-2-2).

இப்போது செய்யவேண்டுவது என்ன? ‘இவளுடைய கையை உம்முடைய கையினால் பிடித்துக் கொள்ளும்’
(பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா)
அம்மி மிதிக்கும்போது காலைக்  கையாலே பிடிப்பீர்; இப்போது, கையைக்  கையாலே பிடிப்பீர்’ என்கிறான்.
மதுஸூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் (நா. திரு.6-6 ),
என்கைப் பற்றித் தீவலஞ்செய்யக் கனாக் கண்டேன் (நா. திரு. 6-7),
செம்மையுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் (நா. திரு. 6-8)
என்ற பகவானது கையைக் காட்டிலும், கைமேல் என்கை (நா.திரு. 6-9) என்கிற பிராட்டியின் கை
இனிமையில் விஞ்சியிருக்கையாலே, கையால் கையைப்பிடி என்னாதே, கையைக் கையாலே பிடி என்றது மிகப் பொருத்தம்.

————–—————————————————————————————————————————————————————————————-
ஸ்ரீ சீதா ராம ஜெயம் .
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading