ஸ்ரீ முமுஷுப்படி -சரம ஸ்லோஹ பிரகரணம்-ஸூர்ணிகை –263–278–ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் –ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் அரும்பத விளக்கம் —

இனி இந்த ஸ்லோக அர்த்தத்தில் ருசி ஒருவனுக்கு உண்டாகையில் உள்ள அருமையையும் –
இந்த ஸ்லோகம் தனக்கு இன்னதிலே நோக்கம் என்னுமத்தையும் –
இதில் விஸ்வஸ் உத்பத்தியின் அருமையையும் –
ஈஸ்வரன் தான் முதலிலே இத்தை உபதேசியாமைக்கு ஹேதுவையும் –
வேத புருஷன் உபயாந்தரங்களை  விதிக்கைக்கு ஹேதுவையும் –
உபாயாந்தரங்களை ஸ்வரூபேண த்யஜிக்கும் அளவில் தோஷம் இல்லை என்னுமத்தையும் –
அவை தானே முகாந்தரேண அந்விதங்கள் ஆகையாலே ஸ்வரூபேண த்யக்தங்கள் அன்று என்னும் இடத்தையும் –
பேற்றுக்கு சாதனம் இன்னது என்னுமத்தையும் –
பல சித்திக்கு இவன் பக்கல் வேண்டும் அம்சத்தையும் –
ஈஸ்வரனுக்கு இவனுடைய ஸூக்ருதம் அநிஷ்டம் என்னுமத்தையும் –
இவ் அர்த்தத்தில் ஆஸ்திகயாதிகள் உண்டாய் பிழைத்தல்-இல்லையாகில் நசித்தல் இத்தனை -என்னுமத்தையும் –
வ்யவசாயஹீனன் இதில் அந்வயித்தால் விநாச பர்யந்தமாம் என்னுமத்தையும் –
இதுக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தையும் –
அடைவே அருளிச் செய்து தலைக் கட்டுகிறார் –

——————————————————

உய்யக் கொண்டார் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-சூரணை -263-

அவற்றில் பிரதமத்தில் -இதில் ஒருவனுக்கு ருசி பிறக்கையில் உள்ள அருமையை தர்சிப்பிக்கைக்காக
ஓர் ஐதிக்யத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
தத்வ நிர்ணயம் பண்ணின உய்யக் கொண்டார் பக்தி நிஷ்டராய் இருக்கையாலே -அவரை
பிரபத்தி நிஷ்டராம் படி பண்ண வேண்டும் என்று அவருக்கு இந்த ஸ்லோக அர்த்தத்தை
அருளிச் செய்த அளவிலே –
அர்த்த ஸ்திதி அழகிதாய்  இருந்தது -ஆகிலும் அத்தை விட்டு இத்தை பற்ற தக்க ருசி எனக்கு இல்லை -என்ன –
வித்வான் ஆகையாலே அர்த்தத்துக்கு இசைந்தாய்-பகவத் பிரசாதம் இல்லாமையாலே ருசி பிறந்தது இல்லை -என்று
அவர் விஷயமாக உடையவர் அருளிச் செய்த வார்த்தையை நினைப்பது -என்கை –

—————————————————-

இதுக்கு ஈஸ்வர ஸ்வாதந்த்ர்யத்திலே நோக்கு –சூரணை -264-

இனி இந்த ஸ்லோகத்துக்கு இன்னதிலே நோக்கு என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் -தான் ஒரு தலையுமாய் இருக்கிற இந்த இச் சேதனனுக்கு தானே –
நிரபேஷ சாதனமாய் -ப்ராப்தி பிரதிபந்தக சகல பாபங்களையும் தள்ளிப் பொகட்டு –
ஸ்வ ப்ராப்தியை பண்ணிக் கொடுக்கும் -ஸ்வாதீன சகல ப்ரவர்த்தகனான ஈஸ்வரனுடைய
ஸ்வாதந்த்ர்யத்திலே தாத்பர்யம் -என்கை-

————————————————————-

இது தான் அநுவாத கோடியிலே-என்று வங்கி புரத்து நம்பி -வார்த்தை –சூரணை -265

இனி இதில் விஸ்வாஸ உத்பத்தியில் அருமையை அருளிச் செய்கிறார் –

அதாவது இந்த ஸ்லோக அர்த்தம் தான் அனு வாதத்தினுடைய கோடியிலே -என்று
ஆப்த தமரான வங்கி புரத்து நம்பி அருளிச் செய்யும் வார்த்தை -என்கை –
அனுவாதம் -கூறிய ஒன்றை மீண்டும் கூறுவது -அர்ஜுனனன் அறிந்தவற்றை மீண்டும் கண்ணன் அருளிச் செய்கிறான் –

————————————————————

அர்ஜுனன்-கிருஷ்ணனுடைய ஆனை தொழில்களாலும் –
ருஷிகள் வாக்யங்களாலும் –
கிருஷ்ணன் தன் கார்யங்களிலே அதிகரித்துப் போருகையாலும் –
இவனே நமக்கு தஞ்சம் என்று துணிந்த பின்பு –
தன்னைப் பற்றி சொல்லுகையாலே –
அது எத்தாலே -என்ன -அருளி செய்கிறார் –சூரணை -266-

அதாவது –
இதுக்கு அதிகாரியான அர்ஜுனன் பால்யமே தொடங்கி கிருஷ்ணனுடைய அகடிதகடநா
சாமர்த்திய பிரகாசமான அதி மானுஷ சேஷ்டிதங்களாலும் –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஸ்ரீரார்ணவ நிகேதன
நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம்

புண்யா த்வாரவதீ யத்ர தத்ராச்தே மது சூதன
சாஷாத் தேவ புராணோ அசௌ சஹி தர்மஸ் சனாதன

யத்ர நாரயனோ தேவ பரமாத்மா சனாதன
தத்ர க்ருத்ச்னம் ஜகத் பார்த்த தீர்த்தாந் யாயதநாநி ச

யே ச வேத விதோவிப்ரா யே சாத்யாத்மா விதோ ஜனா தேவதந்தி
மஹாத்மானம் கிருஷ்ணம் தர்மம் சனாதனம் –

பவித்ராணாம் ஹி கோவிந்த பவித்ராம் பரமுச்யதே
புண்யா நாம்பி புண்யா அசசௌ மங்களாணாம் ச மங்களம்

கிருஷ்ண ஏவ ஹி லோகா நா முத்பத்தி ரபி சாப்யய
க்ருஷ்ணச்ய ஹி க்ருதே பூதம் இதம்  விச்வம் சராசரம் -என்றும்
இத்யாதிகளில் இருந்துள்ள பராவர தத்வ யாதாத்ம்ய வித்துக்களான ருஷிகள் வாக்யங்களாலும் –

பல்யாத்ப்ரப்ருதி புரவாச தசையோடு -வன வாச தசையோடு -வாசியற கிருஷ்ணன்
தன் கார்யத்துக்குக் கடவனாய் நோக்கிக் கொண்டு போருகையாலும் –

இவன் சொல்லுகிற உபாயங்கள் எல்லாம் நமக்கு தஞ்சம் அன்று -இவனே நமக்கு தஞ்சம் –
என்று விச்வசித்த பின்பு -ஆனால் என்னை பற்று -என்று சொல்லுகையாலே -என்கை –

————————————————————–

புறம்பு பிறந்தது எல்லாம் இவன் நெஞ்சை சோதிக்கைக்காக-சூரணை-267-

இது தன்னை முதலில் உபதேசியாமைக்கு ஹேதுவை அருளிச் செய்கிறார் –

அதாவது
யச்சரேய சியான் நிச்சிதம் ப்ருஹூ தன்மே சிஷ்ய ஸ்தேஹம் சாதி மாம் த்வாம் பிரபன்னம் –
என்ற இவனுக்கு உபாய உபதேசம் பண்ணத் தொடங்கிகிற அளவிலே முதலிலே இத்தை உபதேசியாதே
உபாயாந்தரங்களை பரக்க நின்று உபதேசித்தது எல்லாம் -அவ்வளவிலே பர்யவசித்து விடுமோ -அவற்றினுடைய
தோஷத்தாலே இவ் உபாய உபதேசத்துக்கு  அதிகாரி யாமோ -என்று
இவனுடைய ஹ்ருதயத்தை  சோதிக்கைக்காக என்கை –

——————————————————–

வேத புருஷன் உபாயாந்தரங்களை விதித்தது -கொண்டிப் பசுவுக்கு தடி கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகாரங்களால் வந்த களிப்பு அற்ற ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக–சூரணை -268-

ஆனால் இவன் அன்றோ இப்படி ஹ்ருதய சோதன அர்த்தமாக உபாயந்தரங்களை உபதேசித்தவன் –
வேத புருஷன் அவற்றை விதிப்பான் என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆப்த தமனான வேத புருஷன் -விஞ்ஞாய  ப்ரஞ்ஞாம் குர்வீத –
ஒமித்யாத்மானம்  த்யாயத ஆத்மானமேவ லோகமுபாசீத
ஆத்மா வா அரே த்ரஷ்டவ்யஸ் ஸ்ரோதவ்ய மந்தவ்யோ  நிதித்யா சிதவ்ய-இத்யாதிகளாலே
உபாயாந்தரங்களை மோஷ சாதனமாக விதித்தது –

பட்டி தின்று திரிகிற பசுவுக்கு இடைஞ்சு வசப்படுகைக்காக கழுத்திலே தடியை கட்டி விடுவாரைப் போலே –
அஹங்கார மமகார வச்யனாய் களித்து திரிகிற இவனுக்கு –
ஜன்மான் தரசஹஸ்ரேஷூ  தபோ ஞான சமாதிபி -என்கிறபடி

காய க்லேச ரூபமான கர்ம அனுஷ்டானம் -இந்த்ரிய ஜெயம் -முதலான
அரும் தேவைகளாலே செறுப்பு உண்டு அந்த களிப்பு போய் -பகவத் பாரதந்த்ர்யம் ஆகிற
ஸ்வரூப ஞானம் பிறக்கைக்காக -என்கை –

——————————————————–

சந்நியாசி முன்பு உள்ளவற்றை விடுமா போலே இவ்வளவு பிறந்தவன்
இவற்றை விட்டால் குற்றம் வாராது –சூரணை -269-

ஆனால் இப்படி ஸ்வரூப ஞான உதய ஹேதுவான இவற்றை விட்டால் குற்றம் ஆகாதோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது
சரம ஆஸ்ரமத்திலே அந்விதன் ஆனவன் பூர்வாஸ்ரம தர்மங்களை விடுமா போலே -அந்ய உபாயங்களினுடைய
ஸ்வரூப விரோதித்வாதிகளாலே -சித்த உபாயத்தில் இழியும் படி இவ்வளவான ஞான பாகம் பிறந்தவன் –
இவ் உபாயந்தரங்களை விட்டால் தோஷம் ஆகாது -என்றபடி –

————————————————————-

இவன் தான் இவை தன்னை நேராக விட்டிலன் –சூரணை -270-

இவை தான் ஆகாரந்தரத்தாலே அன்விதங்கள் ஆகையாலே இவற்றில் இவன் தனக்கு
ஸ்வரூப த்யாகம் இல்லை -என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது
சாதனாந்தர பரித்யாக பூர்வகமாக சித்த சாதனம் பரிக்ரஹம் பண்ணின இவ் அதிகாரி தான் –
கர்ம ஞானாதிகள் ஆகிற  இவை தன்னை ஸ்வரூபேண த்யஜித்து இலன் -என்கை –

———————————————————-

கர்மம் கைங்கர்யத்திலே புகும்-
ஞானம் ஸ்வரூப  பிரகாசத்திலே புகும் –
பிரபத்தி ஸ்வரூப யாதாம்ய ஞானத்திலே புகும் –
அது எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –சூரணை-271-=

அதாவது
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம  உசிதமாக இவன் அனுஷ்டிக்கும் விஹித கர்மம் –
சாதனா புத்த்யா அன்றிக்கே -ஆன்ரு சம்சயத்தாலே -பரார்தமாக அனுஷ்டிக்கையாலே –
ஈஸ்வரனுக்கு மிகவும் உகப்பு ஆகையாலே -தத் ப்ரீதி ஹேதுவாக பண்ணும்  கைங்கர்யத்தாலே அந்தர்பவிக்கும்-

நுண் அறிவு -திரு வாய் மொழி -5-7-1–என்கிறபடியே -ஸ்வ ஸ்வரூப ஞான பூர்வகமாக -பர ஸ்வரூபத்தை
சாஷாத் கரிக்கைக்கும் உறுப்பான ஸூஷ்ம ஞானம் சாதனா புத்தி கழிந்தவாறே-
ஸ்வரூபத்தின் உடைய ப்ரகாசத்திலே அந்தர்பவிக்கும் –

(நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும் இனி உன்னை விட்டொன்று
ஆற்ற கிற்கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்கு மிகை அல்லேன் அங்கே.—5-7-1-)

பக்த்யா த்வந் அந்யா சக்ய-என்கிறபடி-பகவத் ப்ராப்திக்கு சாதனமான பக்தி -அந்த சாதனா புத்தி போனவாறே –
போஜனத்துக்கு ஸூத்து  போலே -ப்ராப்யமான கைங்கர்யத்துக்கு -பூர்வ  ஷணத்திலே அநு வர்த்திக்கக் கடவதான
ருசியிலே அந்தர்பவிக்கும் –

சித்தோ உபாய வர்ண ரூபையான பிரபத்தி ஏக பதத்திலே சொல்லுகிறபடி -சாதனா பாவம் கழிந்தவாறே -அத்யந்த
பரதந்திர தயா அநந்ய சரணமாய் இருந்துள்ள ஸ்வரூபத்தின் உடைய யாதாத்ம்ய ஞானத்திலே அந்தர்பவிக்கும் -என்கை-

———————————————————

ஒரு பலத்துக்கு அரிய  வழியையும் -எளிய வழியையும் உபதேசிக்கையாலே –
இவை இரண்டும் ஒழிய -பகவத் ப்ரசாதமே உபாயமாகக் கடவது –சூரணை -272-

பக்தி பிரபத்திகள் இரண்டையும் கழித்தால்
இவன் தனக்கு பல சாதனம் ஆவது எது -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது-
பகவத் ப்ராப்தி ஆகிற ஒரு பலத்துக்கு –
ஜன்மாந்தர சகஸ்ரேஷு தபோ ஞான சமாதிபி
நராணாம் ஷீண பாபாணாம் க்ருஷ்ணே பக்தி பிரஜாயதே -என்கிறபடியே
அநேக ஜன்மங்களிலே கர்ம ஞானாதிகள் ஆகிற அங்கங்களாலே சாதிக்கப் படுமதாகையாலே
அரிதாய் இருந்துள்ள பக்தி மார்க்கத்தையும் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று சகல பிரவ்ருத்தி நிவ்ருத்தி பூர்வகமாக
சக்ரு தனுஷ்டேயம் ஆகையாலே -எளிதாய் இருந்துள்ள பிரபத்தி மார்க்கத்தையும் -உபதேசிக்கையாலே
சாதனா கௌரவ லாகவங்களில் தாத்பர்யம் அன்றிக்கே தத் வயாஜேன பல பிரதானாக
நின்றுள்ள அவனுடைய ப்ரசாதமே பிரதானம் ஆகையாலே –
பக்தி பிரபத்திகள் ஆகிற இவை இரண்டும் ஒழிய
பகவானுடைய  ப்ரசாதமே உபாயமாக கடவது -என்கை –

——————————————————————

பேற்றுக்கு வேண்டுவது விலக்காமையும் இரப்பும்-சூரணை -273-

ஆனாலும் பேற்றுக்கு இவன் பக்கலிலும் ஏதேனும் உண்டாக வேண்டாவோ –
என்ன அருளிச் செய்கிறார்

அதாவது
பலசித்திக்கு சேதனன் பக்கல் உண்டாக வேண்டுவது –
ஸ்வ யத்னத்தாலே அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காது ஒழிகையும் –
அது புருஷார்த்தம் ஆகைக்கு உறுப்பான இரப்பும் -என்கை-

———————————————————————-

சக்கரவர்த்தி திரு மகன் பாபத்தோடு வரிலும் அமையும்
இவன் புண்யத்தைப் பொகட்டு வர வேணும் என்றான் –சூரணை -274-

இங்கன் அன்றிக்கே இவன் பக்கலிலும்  சில ஸூக்ருதம் உண்டானால் ஆகாதோ -என்ன
உபாய பூதனுக்கு அநிஷ்டம் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ராமோ விக்ரகவான் தர்ம -என்கிற சக்கரவர்த்தி திரு மகன் –
யதிவா ராவணஸ் ஸ்வயம் -என்று பபிஷ்டனான ராவணன் தான் ஆகிலும்
அழைத்து வாரும் -என்கையலே -பாபம் பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கு உடல் அல்லாமையலே
பாபத்தோடு வரிலும் அமையும் -என்றான் –
கிருஷ்ணன் தர்மம் சனாதனம் -என்று இவன் சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கையாலே
பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கைக்கு உடலான புண்யத்தை பொகட்டு  வர வேணும் என்றான் -என்கை
ஆகையால் சகாயாந்தர சம்சர்க்க அசஹனான -உபாய பூதனுக்கு இவன் பக்கல் ஸூக்ருதம் அநிஷ்டம் என்று கருத்து –

———————————————————————–

ஆஸ்திகனாய் இவ் அர்த்தத்தில் ருசி விச்வாசங்கள் உடையனாய் உஜ்ஜீவித்தல் –
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய நடுவில் நிலை இல்லை -என்று
பட்டருக்கு எம்பார் அருளிச் செய்த வார்த்தை –சூரணை -275-

இவ் அர்த்தத்தில் இழிந்த வனுக்கு ஆஸ்திகனாய் உஜ்ஜீவித்தல்
நாஸ்திகனாய் நசித்தல் ஒழிய
மத்யம ஸ்திதி இல்லை -என்னுமத்தை பூர்வாச்சார்யா  வசனத்தாலே அறிவிக்கிறார் –

அதாவது –
இவ் அர்த்தத்தில் அன்விதனானவன் பகவத் ப்ரபாவத்தால் -இது சத்யம் -என்று ஆஸ்திகனாய்
இவ் அர்த்தத்தில் ருசியும் -இது தப்பாது -என்கிற விசுவாசமும் உடையவனாய் உஜ்ஜீவித்தல் –
சாஸ்திரங்கள் எல்லாம் ஒரு தலையும் இது ஒரு தலையுமாய் இப்படி இருப்பது ஓன்று உண்டோ –
என்று நாஸ்திகனாய் இத்தை அநாதரித்து நசித்தல் இத்தனை ஒழிய -நடுவில் ஒரு நிலை இல்லை –
என்று சகல சாஸ்திர வித்தமரான -பட்டருக்கு -ஆத்மதமரான -எம்பார் அருளிச் செய்த வார்த்தை -என்கை –

———————————————————————–

வ்யவாசாயம் இல்லாதவனுக்கு இதில் அந்வயம் -ஆமத்தில் போஜனம் போலே –சூரணை -276-

வ்யவசாய ஹீனனுக்கு இதில் அந்வயம் விநாசத்துக்கு உடலாம் என்னுமத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது –
இதில் சொல்லுகிற  த்யாக ஸ்வீகாரங்களுக்கு ஈடான வ்யவாசயம் இல்லாதவனுக்கு
இதில் உண்டான அந்வயம் அஜீர்ண தசையில் பண்ணின போஜனம் மரண ஹேதுவாமா போலே
விநாச ஹேதுவாய் பர்யவசிக்கும் -என்கை –

—————————————————————–

விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் -என்கிறபடியே அதிகாரிகள் நியதர் –சூரணை -277-

இது தனக்கு அதிகாரிகள் இன்னார் என்னுமத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
செம்மை உடைய திரு அரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெரு வார்த்தை-
விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பர் –நாச்சியார் திரு மொழி –11-10-என்று கரண த்ரயத்தாலும் -செவ்வியராய் –
அது தன்னை அர்த்த க்ரியாகாரியாய்க் கொண்டு -கோவிலிலே சாய்ந்து அருளினவர் தாம் –
அர்ஜுன வ்யாஜ்யத்தாலே திருத் தேர் தட்டிலே நின்று அருளிச் செய்த
யதார்தமுமாய் -சீரியதுமாய் -ஸூலபமுமான –
மாம் ஏகம் சரணம் வ்ரஜ -என்கிற வார்த்தையை
பெரிய ஆழ்வார் கேட்டு -தந் நிஷ்டராய் இருபபார்-என்கிறபடி -இவ் அர்த்தத்துக்கு
அதிகாரிகள் இது கேட்டால் இதன் படியே நியதராய் இருக்குமவர்கள் -என்கை –

(செம்மை யுடைய திருவரங்கர் தாம் பணித்த
மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே —11-10-)

—————————————————————

வார்த்தை அறிபவர் -என்கிற பாட்டும்
அத்தனாகி -என்கிற பாட்டும்
இதுக்கு அர்த்தமாக அநு சந்தேயம் –சூரணை -278-

இவ் அர்த்த நிஷ்டரான ஆழ்வார்கள் உடைய திவ்ய ஸூக்தி யில் இதுக்கு
அர்த்தமாக அநு சந்திக்க படுமவற்றை அருளி செய்து -இது தன்னை
நிகமிக்கிறார் –

அதாவது-
வார்த்தை அறிபவர் பேர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு இறப்பவை
பேர்த்து பெரும் துன்பம் வேரற நீக்கித் தன் தாளின் கீழ்
சேர்த்து அவன் செய்யும் சேமத்தை எண்ணித் தெளி உற்று
மாயவர்க்கு ஆள் அன்றி ஆவரோ -திரு வாய் மொழி -7-5-10–என்று –

மாம் ஏகம் சரணம் வ்ரஜ சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்ற நல் வார்த்தையை அறியும் அவர்கள்
பரணி கூடு வரிந்தால் போலே -இவ் ஆத்மாவை சூழப் பொதிந்து கிடக்கிற ஜன்மங்களோடும்-
அவை புக்க இடத்தே புகக் கடவதான வ்யாதியோடும் –
அங்கனே ஆகிலும் சிறிது நாள் செல்லாத படி இடி விழுந்தால் போல் வரும் ஜரையோடும் –
அங்கனே ஆகிலும் இருக்க ஒண்ணாதபடி இவனுக்கு அநபிமதமான-வினாசமுமாகிற -இவற்றை –
விரகர் நெடும் சுவர் தள்ளுமா போலே தள்ளி -அவை போன்ற அநந்தரம் வரக் கடவதான –
கைவல்யம் -ஆகிற மகா துக்கத்தை சவாசனமாகப் போக்கி –

பாத ரேகை போலே தன் திரு அடிகளின் கீழ் சேரும் படி பண்ணி –
புனராவ்ய வசிதராய் கொண்டு தங்களுக்கு ஆஸ்ரயணீ யனாய்க் கொண்டு –
விரோதி நிவர்தகனான ஆச்சர்ய பூதனுக்கு ஒழிய வேறு ஒருவருக்கு ஆள் ஆவாரோ –
என்று நம் ஆழ்வார் அருளிச் செய்த –வார்த்தை அறிபவர் -திரு வாய் மொழி -7-5-10-என்கிற பாட்டும் –

முத்தனார் முகுந்தனார் ஒத்தொவ்வாத பல் பிறப்பு ஒழித்து நம்மை ஆள் கொள்வான்
அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய் புகுந்து -நம்முள் மேவினார் -ஏழை நெஞ்சமே
எத்தினால் இடர் கடல் கிடத்தி -என்று

ஹேய ப்ரத்ய நீகர் ஆகையாலே -அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -முக்தபூமி பிரதர் ஆனவர் –
சகல தேக வர்திகளான ஆத்மாக்களும் ஞான ஏக ஆகாரதையா ஒத்து -தேவாதி பேதத்தலே
ஒவ்வாமல் இருக்கும் பல வகைப் பட்ட ஜன்மங்களைப் போக்கி –

நித்ய சம்சாரிகளாய் போந்த நம்மை நித்ய ஸூரிகள் கொள்ளும் அடிமையைக் கொள்ளுகைக்காக
ஹிதமே ப்ரவர்த்திப்பிக்கும்  பிதாவாகவும் –
பிரியமே ப்ரவர்த்திப்பிக்கும் மாதாவாகவும் -அடிமை கொள்ளக் கடவ நம்முடைய ஸ்வாமி யாயும் –
இப்படி சர்வ வித பந்துமாய் –
நம்முடைய தண்மையையும்-தம்முடைய பெருமையும் பாராதே -நம்முடைய சர்வ பரத்தையும்
தாமே ஏறிட்டுக் கொண்டு செய்வாராக ஹேயமான நம்முள்ளே புகுந்து ஒரு நீராகப் பொருந்தினர் –

அறிவிலியான நெஞ்சே -நம்முடைய ஹிதம் அறிக்கைக்கு நாம் சர்வஞ்ஞராயோ -அவன் அஞ்ஞனாயோ
ஹிதத்தை ப்ரவர்த்திப்பைக்கு நாம் சக்தராயோ -அவன் அசக்தனாயோ –
கார்யம் செய்து கொள்கைக்கு நாம் ப்ராப்தராயோ -அவன் அப்ராப்தனாயோ –
தன் மேன்மை பாராதே தாழ நின்று உபகரிக்கும் அவனே இருக்க –
எத்தாலே நீ துக்க சாகரத்தில் கிடக்கிறது -என்று
திரு மழிசைப் பிரான் அருளி செய்த –அத்தனாகி -திரு சந்த விருத்தம் -115- என்கிற பாட்டும்
இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தமாக அநு சந்தேயம் -என்கை –

—————————————————————-

ஆக -இத்தால் –
ஸ்வீகார அங்கதயா த்யாஜ்யமான தர்ம விசேஷங்களையும் -சர்வ தரமான்-
அந்த தர்மங்களினுடைய த்யாக பிரகாரத்தையும் -பரித்யஜ்ய –
அந்த தர்ம த்யாக பூர்வகமாக பற்றும் விஷயத்தின் உடைய சௌலப்யாதி குண யோகத்தையும் -மாம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவினுடைய-சகாய அசஹத்வ லஷணமான நைர பேஷத்தையும் -ஏகம்-
நிரபேஷ வஸ்துவினுடைய உபாய பாவத்தையும் -சரணம்-
அத்தை உபாயத்வேன ஸ்வீகரிக்கையும் -வ்ரஜ –
ஸ்வீக்ருதமான உபாயத்தின் உடைய ஞான சக்த்யாதி குண யோகத்தையும் -அஹம்-
அக் குண விசிஷ்ட வஸ்துவிலே ந்யஸ்த பரனான அதிகாரியையும் -த்வா –
அதிகாரிக்கு விரோதியான பாப சமூகத்தையும் -சர்வ பாபேப்யோ –
அப் பாப விமோசன பிரகாரத்தையும் -மோஷ இஷ்யாமி –
அப் பாப விமோசகனைப் பற்றின அதிகாரி உடைய நைர்பர்யத்தையும்-மா ஸூச -என்று
சொல்லிற்று ஆயிற்று –

———————————————————————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஸூத்த ஸத்வ தொட்டாச்சார்யார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading