ஸ்ரீ பகவாந்‌ பதஞ்ஜலி மஹரிஷி அருளிச் செய்த யோக ஸூத்திரம்‌ -1-சமாதி பாதம் —

ஞான சாதனங்களான கர்மா முதலானவைகளை உபதேசிக்கிற சாத்திரங்கள் தர்சனம் எனப்படும். அவை ஆறு இருக்கின்றன. சாங்க்யம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வ – உத்தர மீமாம்சை என்பன அவை. சாங்க்யம் கபிலரால் செய்யப்பட்டது.

முதலில் யோக விஷயத்தை உபதேசம் செய்தவர் ஹிரண்யகர்பர். பதஞ்ஜலி அதை சூத்திர வடிவமாக்கினார். யோக சாஸ்திரத்தால் சித்த குற்றங்களையும் வியாகரண பாஷ்யத்தால் சொற் குற்றங்களையும் வைத்திய சாஸ்திரத்தால் சரீர தோஷங்களையும் போக்க உதவினார் என போற்றுகிறார்கள்.

இந்த பதஞ்சலி யோக சாஸ்திரத்துக்கு எட்டு வியாக்கியானங்கள் உண்டு.
யோகம் என்றால் யோக ஆசனங்கள்தான் நமக்கு உடனே நினைவுக்கு வருகிறது. ஆனால் யோகம் என்பதற்கு இணைதல் என்பதே பொருள். ஐக்கியம்; ஆன்மா பரமான்மாவுடன் ஐக்கியமாதல் எனலாம்.

இந்த நூல் முக்கியமாக ஞானம் பெற தீக்ஷை கிடைத்தவருக்கே உரித்தாகும். இன்று யோகம் உலகமெங்கும் பரவிவிட்டது. பல வேறு மாற்றங்களும் அடைந்துவிட்டது. பல போலிகளும் வந்தாகிவிட்டது.

பதஞ்ஜலி 195 சூத்திரங்களிலேயே ஒரு நம்பத்தகுந்த தத்துவமும் வழிமுறையும் சொல்லி இருக்கிறார்.

முதலில் வருவது சமாதி யோகம். இதில் யோகம் என்பது என்ன என்பதைப்பற்றி சிறிது விளக்கி பின் வெவ்வேறு வகையான சமாதிகளைப்பற்றி சொல்லப்படுகிறது. அடுத்து வரும் சாதனா பாதத்தில் எப்படி சமாதி அடையப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. விபூதி பாதத்தில் அடையப்படும் சித்திகள் குறித்தும், கடைசியாக கைவல்லிய பாதத்தில்
கைவல்லியத்தை அடைவது குறித்தும் சொல்லப்படுகிறது.

அத² யோகா³நுஶாஸநம் || 1||

[யோக சாத்திரத்தை பதஞ்சலி விளக்குகிறார்.] யோக சாஸ்திரம் தொடங்கப்படும்.

யோகம் என்பதென்ன?
யோக³ஶ்சித்த வ்ரு«த்தி நிரோத⁴: || 2||
 
சித்தத்தின் விருத்தியை (வளர்ச்சியை) அடக்குதல் யோகம்.

சூத்திரங்களில் இதான் பிரச்சினை. சுலபமா சொல்லிவிட்டு போய் விட்டார்! இப்போது சித்த விருத்தி என்றால் என்ன? அடக்குவது என்றால் என்ன என்றெல்லாம் ஆராய வேண்டும். ஆராய்ந்து மிகச்சரியான விடை கண்டு பிடித்துவிட்டால் சாஸ்திரமே படித்ததாகும்! போகட்டும், நாம் இங்கே
மேலோட்டமாகத்தான் பார்த்துக்கொண்டு போகிறோம்.

சித்தம் என்பதென்ன? வேறு பதிவில் இதை பார்த்தோம். அந்தக்கரணத்தின் ஒரு பகுதி. எளிமையாக சொல்ல மனதின் வேறு வடிவம் எனலாம். எதையாவது யோசிக்க ஆரம்பித்து தொடர்ச்சியாக அதைப்பத்தியே யோசித்துக்கொண்டு போனால் அது சித்தம் ஆகும். சப்ஜெக்டை விட்டு வேறு வழியில் போவது இல்லை. சாதாரணமாக நாம் எதையாவது யோசிக்க ஆரம்பிக்கிறோம். சற்று நேரத்திலேயே வேறு எண்ணம் கிளைத்து வேறு எதையோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம். இதை சரியாக அறிய ஒரு சின்ன சோதனை செய்து பாருங்கள். இதை படிக்க ஆரம்பிக்கு முன் எதைப்பற்றி நினைத்துக்கொண்டு இருந்தீர்கள்? அதற்கு முன்? அதற்கு முன்? இப்படியே ஆராய்ந்தால் 5 நிமிடங்கள் முன் யோசிக்க ஆரம்பித்ததும் இப்போது யோசிப்பதும் இடையில் யோசித்தவையும் பலவாக இருக்கும். இப்படி பல வழியிலும் ஓடுவது மனசு.

மனம் போகிற போக்கில் விடாமல் மனசை கட்டுப்படுத்தி குவித்து சிதறாமல் ஒரே வழியில் ஓடுவது சித்தம். இப்படி சித்தம் தொடர்ந்து ஓடுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை கட்டுப்படுத்தி கடைசியில் நிறுத்திவிட்டால் அது யோகம்.

ததா³ த்³ரு«ஷ்டு​: ஸ்வரூபே’வஸ்தா²நம் || 3||

அப்படி செய்யும் போது [சைதன்யமான (இயங்கு சக்தியாக) உள்ள புருஷனுக்கு] தன் சொந்த வடிவில் இருப்பு ஏற்படுகிறது.
போன சூத்திரம் சுலபமா இருந்தது. உடனே அடுத்தது டெக்னிகல் ஆயிடுத்து! அப்படி செய்யும் போது ….- புரியுது. சித்தத்தை அடக்கும்போது. சைதன்யம்? புருஷன்? சைதன்யம் என்பது இயக்கு சக்தி. எது நம்மை –உடம்பை, மனசை- இயக்குகிறதோ அது. புருஷன் என்பது இங்கே (யோக சாஸ்திரத்தில்) ஜீவாத்மாவை குறிக்குது. ஜீவாத்மாவை ‘கண்ணைக்கட்டி’, தான் வேற ஏதோ ன்னு நினைக்க வெச்சதே இந்த அந்தக்கரணம்தான். மனசு, சித்தமெல்லாமே அந்தக்கரணம்தான். அதனால அந்தக்கரணம் நிற்கும் போது, தான் சொந்த நிலையில் இருப்பது ஜீவனுக்கு தெரிஞ்சு போகும்.

வ்ரு«த்தி ஸாரூப்யமிதரத்ர || 4||

ஏனைய (யோகமில்லா) காலத்தில் [புருஷனுக்கு சாத்விகம், ராஜசம், தாமஸம் முதலிய] வ்ருத்திகளோடு ஒன்றாய் இருக்கும் தன்மை ஏற்படுகிறது.

சரி அப்ப ஜீவன் யோகத்திலே இல்லாத போது எப்படி இருக்கும்? ஏதோ எண்ணங்கள் ஓடிகிட்டே இருக்கு. அந்த எண்ணங்கள் சாத்விகமா இருக்கலாம்; ராஜசமா இருக்கலாம்; தாமசமா இருக்கலாம். எப்படி இருந்தாலும் அது கண்ணாடியில் அழுக்கு இருக்கிறாப்போல இருக்கு. இந்த அழுக்கை நீக்குவது ரொம்ப கடினமான வேலையே. நல்லாவே ஒட்டிகிட்டு இருக்கும்.

இந்த ராஜசம் தாமசம் சாத்விகம் எல்லாம் என்ன?

வ்ரு«த்தய: பஞ்சதய்ய: க்லிஷ்டாக்லிஷ்டா || 5||
தாமசமும் ராஜஸமும் சாத்விகமும் ஆன மனோ விருத்திகள் ஐந்து வகையாகும்.

மனசோட வளர்ச்சி- விரிவு – ஐந்து விதமாம். அவை சாத்விகமாகவோ ராஜசமாகவோ தாமசமாகவோ இருக்கலாம்.
ஏதோ க்ளிஷ்டா ன்னு சொல்லி இருக்கே? மன பாதிப்பு. [மனக் கிலேசம் என்ற வார்த்தை இதை ஒட்டினதே.] ராஜச, தாமஸ மனோ வ்ருத்திகள் வீண் மன பாதிப்பை செய்வதால் அவை கிலிஷ்டா. இதனால் சுக, துக்கங்கள் உண்டாகும்.
சாத்விக மனோ வ்ருத்தி செய்கிற பாதிப்பு வீண் இல்லை. அதனால் அது அக்லிஷ்டா. இந்த வகை மன வளர்ச்சியால் தான் யார் என்கிறது மறந்து போனாலும் இது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः ।।6।।
ப்ரமாண விபர்யய விகல்ப நித்³ரா ஸ்ம்ரு«தய: || 6||
இவை (சித்த விருத்திகள்) பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்ம்ருதி ஆகியன.
ப்ரத்யக்ஷாநுமாநாக³மா: ப்ரமாணாநி || 7||
பிரமாணம் என்பதென்ன? பிரத்யக்ஷம் (நேரடி அனுபவம்), அனுமானம் (ஊகம்), ஆகமம் ஆகியன பிரமாணங்கள் ஆகும்.

(அனுபவத்தால் உண்டானதை மற்றதற்கு பொருத்தி பார்ப்பது ஆகமம்.)
நம் கண் காது முதலான புலன்களாலே சிலதை அறிஞ்சு கொள்கிறோம். இது நேரடி அனுபவம். இது ஒரு பிரமாணம்.
முன் அனுபவத்தாலே சிலது தெரிஞ்சுக்கிறோம். நெருப்பை நேரடியா பார்த்து இது நெருப்புன்னு தெரிஞ்சு கொள்கிறோம். இது ப்ரத்யக்ஷம். முன் ஒரு முறை நெருப்பு இருக்கிற இடத்தில் புகை இருக்குன்னு பார்த்தோம். இப்ப புகையை மட்டும் எங்காவது பார்க்கும் போது “ஓஹோ! இங்கே நெருப்பு இருக்கு” ன்னு ஊகம் செய்கிறோம். இது ஒரு வகை. நெருப்பு என்கிற வார்த்தையை கேட்கும்போது நேரடியா பாக்கலைன்னாலும் இந்த நெருப்பையும் புகையையும் சம்பத்தப்படுத்தி நினைக்கிறது ஆகமம்.
இவை அத்தனையும் பிரமாணம்.

विपर्ययो मिथ्याज्ञानमेतद्रूपप्रतिष्ठम् ।।8।।
விபர்யயோ மித்²யாஜ்ஞாநமேதத்³ ரூப ப்ரதிஷ்ட²ம் || 8||
ஒரு வஸ்துவின் உண்மை சொருபத்தை வெளிப்படுத்தாத பொய்யான ஞானம் விபர்யயம்.

இது பின்னால் மாறிவிடக்கூடியது. (சிப்பியில் வெள்ளி காண்பது) ஒரு பொருளோட “உண்மை” நிலையை தெரிவிப்பது யதார்த்த ஞானம். இல்லாத ஒரு நிலையை இருப்பதா காட்டுவது மித்யா ஞானம். கடற்கரையிலே ஒரு சிப்பி கிடக்குது. அது வெய்யிலில் பளபளக்கிறது ன்னு பார்த்து ஓ! இது ஏதோ வெள்ளியிலே பண்ண பொருள் ன்னு நினைக்கிறோம். இது மித்யா ஞானம் அல்லது விபர்யயம். கிட்டே போய் பார்க்க அது சிப்பின்னு தெரியுது. அப்ப நம் கருத்தை மாத்திக்கிறோம். இப்படி மாறுவதே விபர்யயத்தோட முக்கிய லக்ஷணம்.

ஶப்³த³ஜ்ஞாநாநுபாதீ வஸ்துஶூந்யோ விகல்ப​: || 9||

ஒலியால் உண்டு செய்யப்பட்ட ஞானத்தை அனுசரித்து உண்டாவது விகல்பம். இது முன்னேயே சொன்னிங்களேன்னா கொஞ்சம் வித்தியாசம் இருக்கு. இது வஸ்துவின் உண்மையை எதிர் பார்ப்பது இல்லை. ஒரு மனிதனுடைய புத்தகம் ன்னு சொல்லும் போது மனிதன் வேறு; புத்தகம் வேறு; ஆனால் இரண்டுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு என்று தெரியும். இதில் உண்மை இருக்கு. ஆனா மலடியின் பிள்ளை ன்னு சொல்லும் போது மேலோட்டமா அர்த்தம் சம்பந்தம் இருக்கு, ஆனாலும் இது உண்மையா இருக்க முடியாது. இப்படி உண்மை இருக்கானு கவலைப்படாம ஒரு விஷயத்தை புரிஞ்சுகிறது விகல்பம்.

அபா⁴வ ப்ரத்யயாலம்ப³நா வ்ரு«த்திர் நித்³ரா || 10||
\

முன் கூறிய விருத்திகள் இல்லாததற்கு காரணமான தமோ குணத்தை விஷயமாக உடைய விருத்தி நித்திரை ஆகும்.
இது ரஜோ சத்வ குணங்களால் உண்டாகும் விருத்திகளை அழிக்கும்.
மூன்று குணங்களும் எப்போதும் இருந்தாலும் ஒரு குணம் மேலோங்கி மற்றதை அழிக்கக்கூடும். இப்படி தமோ குணம் மேலோங்கி மற்றதை அழிக்கலாம்.
விழிப்பு நிலையும் இல்லாம, கனவு நிலையும் இல்லாம தூங்கும்போது தமோ குணமே மேல் நிற்கும். இதை சுசுப்தி என்பர். கனவு நிலயில் நாம் பல செயல்களை செய்யலாம்; இல்லை சாந்தமாகவும் இருக்கலாம். அதனால கனவு நிலையில் ரஜோ சத்வ விருத்திகள் இருக்கும். சுசுப்தி என்கிறது ஆழ் உறக்கம். இதுவும் ஸமாதியும் ஒன்று இல்லை. ஸமாதியில் இந்த தமோ குண விருத்தி இராது.

அநுபூ⁴த விஷயா ஸம்°ப்ரமோஷ​: ஸ்ம்ரு«தி​: || 11||

அனுபவிக்கபட்ட விஷயத்தின் நாசமில்லா அறிவு ஸ்ம்ருதி விருத்தி ஆகும்.


அனுபவிச்சது ன்னு சொல்லும் போது இது பிரமாணமா இருக்கணுமே? இது வேற. அனுபவத்தில ஸ்தூலமாக பார்த்ததை நினைவில் வைப்பது அனுபவம். அதே விஷயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை கிரகித்து கொண்டால் அது ஸ்ம்ருதி. ஒரு கோவிலுக்குப் போய் ஸ்வாமி தர்சனம் செய்கிறோம். அங்கே கண்ணால பார்த்தது ஒண்ணு. ஆனால் அனுபவிச்சது கண்ணால பாத்ததுக்கும் மேலே வேற ஒண்ணு. இது ஸ்ம்ருதி.

அப்⁴யாஸவைராக்³யாப்⁴யாம்° தந்நிரோத⁴​: || 12||

இந்த விருத்திகளை அடக்கி தன் சுய நிலையில் நிற்பது பயிற்சியாலும், பற்றின்மையாலும் இயலும்.


யோகம் என்கிறது சித்தத்தை நிறுத்துவதுன்னு சொல்லியாச்சில்ல? அத எப்படி நிறுத்தறது என்பதே கேள்வி.
வைராக்கியம் என்கிறது பற்றின்மை. தப்பா பிரயோகத்திலே வந்துடுத்து. அதை திடம் (determination) என்கிற அர்த்தத்திலே பயன்படுத்தறோம். உலக சம்சாரங்களில பற்றை விட்டுவிட்டு தொடர்ந்து அப்பியாசம் – பயிற்சி செய்ய சித்தம் நின்று யோகம் உண்டாகும். அதெப்படி பற்று விடறதுன்னா – புலன்கள் எது பின்னால ஓடுதோ அதிலே இருக்கிற குற்றங்களை- தோஷங்களை பார்க்க ஆரம்பிக்கணும். ஆமாம்; துரியோதனப் பார்வை வேணும். அல்லது குணங்களை விமர்சிக்கணும். இப்படி செய்வதை பழக சித்தத்திற்கு வெளியே செல்லும் நாட்டம் குறைந்து போகும். இது விருத்தி நிரோதம் ஆகும்.
நமக்கு சக்கரை வியாதி இருக்கு. ரொம்ப பிடிச்ச மை.பா வை பார்கிறோமா? இதை இப்ப சாப்பிடலாம், ஆனா அப்புறம் சர்க்கரை அதிகமாகி யார் அவஸ்தை படுகிறதுன்னு எண்ணம் வரணும்
ஒத்தனுக்கு சோறு சில நாட்கள் கிடைக்கலை. காட்டு வழியிலே போகும் போது அங்க இலை போட்டு நல்ல சாப்பாட்டு போட்டு வெச்சு இருக்கு. சாப்பிட ஆசைதான். அப்ப இன்னொருத்தன் வந்து சொல்கிறான், “ஏம்பா, ஆளில்லாத வனத்தில இப்படி சாப்பாடு போட்டு வெச்சு இருக்குன்னா ஏதோ சூது இருக்குன்னு புரிஞ்சுக்க வேணாமா? இதை கேட்டு உணர்ந்த சாப்பிட உட்கார்ந்த ஆசாமி ஒடிப்போயிடறான். பசியாக இருந்தாலும் இப்படி அறிவு வந்துவிட்டா மனசு திரும்பிவிடும். இதப்போல விஷயத்தில் குற்றங்களை காண்பதால் ஏற்படுவது வைராக்கியம். இல்லாவிடில் ரஜோ விருத்தி அடங்கியதால் தமோ விருத்தி மேலோங்கும். சித்தமும் லயமாகிவிடும். இது நித்திரையாகும்.

தத்ர ஸ்தி²தௌ யத்நோ’ப்⁴யாஸ​: || 13||
 

இவ்விரண்டில் பயிற்சி (அப்பியாஸம்) என்பது ரஜோ தமோ விருத்திகளை நீக்கி யமம், நியமம் முதலான சாதனையை பின்பற்றுவது. ராஜசத்தால் விஷயங்கள் அதிகமாகிற விக்ஷேபம் என்பது உண்டாகும். தமஸ் விருத்தியானால் லயம் ஆகும். அதாவது விஷயங்கள் குறைந்து போகும். இது நல்லதுன்னு மேம்போக்கா தோன்றினாலும் அப்படி இல்லை. இப்படி வைராக்கியம் வரும் போது விவேக ஞானத்தை பயிற்சி செய்ய வேண்டும். இந்த ரஜஸ் தமஸ் இரண்டும் குறைந்து சத்வம் அதிகமாகி ஏகாக்ரதை வரணும். அதை எப்படி கொண்டு வரதுன்னா..

ஸ து தீ³ர்க⁴காலா நைரந்தர்ய்ய ஸத்கார ஸேவிதோ த்³ரு«ட⁴பூ⁴மி || 14||

அந்த பயிற்சியானது நீண்ட காலமும் இடைவிடாதும் ஶ்ரத்தை , பிரமசர்யம், தவம் இவற்றுடன் பல வழிகளிலும் செய்யப்பட வேண்டியது. அப்படி செய்யும் போது அது திடப்படுகிறது.

குருவிடமும் சாஸ்திரத்திடமும் விஶ்வாசத்துடனும், வரும் இடையூறுகளை பொருட்படுத்தாமலும் இடைவெளியில்லாமல் அப்பியாசிக்க வேண்டும். ஒரு காட்டுக்காளையை போன்றது சித்தம். காளையை வண்டியில் கட்டி சவாரி செய்ய விருப்பமுள்ளவன் காளையை அதன் விருப்பப்படி ஓட விடமாட்டான். வண்டியில் கட்டும்போது சண்டித்தனம் பண்ண இடம் தர மாட்டான். முயற்சியை கைவிடமாட்டான். முடியாதுன்னு தோணும்போது முன்னே செய்து வெற்றி அடைஞ்சவர்களை பாத்து நம்பிக்கை கொள்வான். மெள்ள மெள்ள அதை எப்படியும் வசப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் அதை வழிக்கு கொண்டு வருவான்.

த்³ரு«ஷ்டாநு ஶ்ரவிக விஷய வித்ரு«ஷ்ணஸ்ய வஶீகார ஸம்°ஜ்ஞா வைராக்³யம் || 15||

ஸ்த்ரீ, அன்னம், பானம், ஐஸ்வர்யம், முதலான பார்க்கக்கூடியதிலும்; வேதம் சொன்ன சொர்க்கம், பிரகிருதி, லயம், போன்ற பார்க்க முடியாத விஷயங்களிலும் ஆசையில்லாத சித்தம் “இவை எல்லாம் என்னை சேர்ந்தவை; ஆனால் நான் இவற்றை சேர்ந்தவனில்லை”ன்னு நம்மை அலைக்கழிக்கும் விஷயங்களை விலக்கும் புத்தி (உபேக்ஷை) வசீகார வைராக்கியம் (பற்றற்ற நிலை) ஆகும்.

இந்த வைராக்கியமே பல வகையானது. எது சாரமானது, எதில் சாரமில்லைன்னு குரு மூலமும், சாஸ்திரங்கள் மூலமும் தெரிந்து, அவற்றை விலக்க முயற்சி எடுப்பது யதமான வைராக்கியம். அப்படி முயற்சி செய்து “இதெல்லாம் விலக்கிவிட்டோம்; இதெல்லாம் இன்னும் விலக்கனும்” ன்னு அறிகிறது வியதிரேக வைராக்யம். இப்படியே போகும்போது நமக்கு ‘இது நல்லது, இது கெட்டது’ ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கும் இல்லையா? அதையும் விலக்குவது ஏகேந்திரிய வைராக்கியம். அதாவது நல்லது மேலே விருப்பமும், கெட்டது மேலே வெறுப்பும் கூட இல்லாம இருக்கிறது.

இந்த வைராக்கியங்கள் கூட போதாதாம். இவற்றால் ஞானம்ன்னு நினைச்சுகிற போலி குற்றமுள்ள – ஞானம் வரக்கூடுமாம். அதனால் சூத்திரம் சொல்லுவது நாலாவது வகையான வசீகார வைராக்கியம்.

தத்பரம்° புருஷக்²யாதேர் கு³ணவைத்ரு«ஷ்ணயம் || 16||

புருஷ சாக்ஷாத்காரம் உண்டான பிறகு ஸ்தூல ஸூக்ஷ்ம ரூபங்களான குணங்களில் இருந்து பற்றற்று இருப்பது எது உண்டோ அது பரவைராக்கியம்.

தோஷங்களை பார்த்து வசீகார வைராக்யம் வந்தது. இது அடுத்து வரும் பர வைராக்கியத்துக்கு காரணமாகிறது. குரு-சாஸ்த்திர துணையோடு புருஷனின் (ஜீவாத்மாவின்) சாக்ஷாத்காரம் கிடைக்கிறது. இதிலேயே நின்று பயிற்சி செய்வது தர்மமேகத்யானம் என்கிறாங்க. இதனால ரஜோ, தமோ குண அழுக்கு முழுவதும் போயிடும். சத்வத்திலேயே நிலைக்கும். அப்போது சித்தம் தெளிவாயிடும். இதை கைவல்ய நிலைன்னும் பராகாஷ்டை ந்நும் சொல்வதுண்டு. இந்த நிலையிலே மன கிலேசங்கள் (சஞ்சலம்) யோகியை விட்டு நீங்கும். சம்சார பந்தங்கள் அறும்.

விதர்க விசாராநந்தா³ ஸ்மிதாரூபாநு க³மாத் ஸம்°ப்ரஜ்ஞாத: || 17||

விதர்கம் (பருப்பொருளை காணல்), விசாரம் (ஸூக்ஷ்ம வடிவை சிந்தித்தல்) ,ஆனந்தம் (ரஜோ, தமோ சம்பந்தம் சிறிது இருக்கும் போது இந்திரியங்களால் அறியப்படும் ஆனந்தம்), அஸ்மிதை (சித்தம் மட்டுமே உள்ளதென அறிதல்) இவை சொரூபத்துடன் சேர்ந்து இருப்பதால் உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.

மற்ற விஷயங்களின் கலப்பில்லாமல் சித்தத்தை ஒரு விஷயத்தில் வைப்பது பாவனை ஆகும்.
பாவனை ஒரு பருப்பொருளில் இருக்கலாம். இது விதர்க்கம். ஒரு லிங்கம் (குறி), தெய்வ வடிவம், ஜ்யோதி இப்படி. இதுக்கு ஒரு உருவம் இருக்கும். ஒரு சப்தம்- சொல்- அதை குறிக்கும். இந்த பாவனையோட அடைகிறது ஸவிதர்க்கம்.
அல்லது பாவனை பருப் பொருளில் இல்லாம இருக்கலாம். இதுக்கு முன்னோ பின்னோ ஒரு தோற்றம் இராது. இதை எந்த சொல்லும் குறிக்காது. இந்த பாவனையோட அடைகிறது நிர்விதர்க்கம்.
பாவனை கண்ணுக்கு தெரியாத ஸூக்ஷ்மமான பொருளில் இருக்கலாம். ஸூக்ஷ்ம வஸ்துவை சாக்ஷாத்கரிப்பது விசாரம் ஆகும். தன் மாத்திரை (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை), அந்தக்கரணம் இவற்றோட ஸூக்ஷ்ம வஸ்துவை விஷயமா எடுத்து கொண்டு பாவனை செய்யலாம். இது ஸவிசாரம். இதோட தேசம், காலம் சேரலைன்னா அது நிர்விசாரம்.

ஸவிசாரத்துக்கு உதாரணம் பார்க்கலாமா? மனசையே எடுத்துக்கலாம். அது என்ன செய்கிறது, எங்கே போகிறது ன்னு கவனிக்கிறது ஸவிசார பாவனை. (இதுவே ரமணர் காட்டிய வழி.)
விதர்க்கம், விசாரம் இரண்டும் சேர்ந்தது க்ராஹ்ய ஸமாதி (த்யானம்). அதெப்படி இரண்டும் ஒண்ணா சேரும்ன்னா…. ஒரு பொருளோட தோற்றம், அதோட ஸூக்ஷ்ம சொரூபம் ரெண்டையுமே ஒரே நேரத்திலே த்யானிக்கலாம் இல்லையா?
சத்வமான சித்தம் ரஜோ, தமோ சலனங்களோட த்யானம் செய்கிறப்ப இந்திரியங்கள் மூலமா சுகமும் பிரகாசமும் அனுபவிக்கப்படும். இது ஆநந்தம்.
மூடிய கண் முன்னே கோடி சூர்ய பிரகாசத்தோட ஏதோ தெரிகிறது. இல்லை அருமையான மல்லிகைப்பூ வாசனை உணர்கிறோம். தென்றல் வருடின மாதிரி உணர்கிறோம். அபூர்வமான இசை கேட்கிறது. இவை எல்லாம் ரஜோ தமோ குண சலனங்கள். சத்வ சித்தம் அனுபவிக்கும் போது இவை ஆநந்தம் ஆகும்.
இப்படி ரஜோ, தமோ சலனங்கள் இல்லைன்னா அது ஸாஸ்மிதம். இந்த அஸ்மிதத்திலே சத்வமான சித்தம் இருக்கு என்கிறது மட்டுமே உணரலாம். வேற தூல, ஸூக்ஷ்ம இந்திரிய (புலன்கள்) சமாசாரம் ஒண்ணுமே தெரியாது.
இந்த விதர்க்கம், விசாரம், ஆநந்தம், அஸ்மிதை நாலுமே ஒரு வகை.- ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
ப்ரக்ஞை ன்னு கேள்வி பட்டிருக்கோம் இல்லையா. உணர்ச்சி. அனெஸ்தடிஸ்ட் ஊசி போட்டார். ப்ரக்ஞை போயிடுத்து. ஆபரேஷன் நடந்ததே தெரியாது என்கிறோம். ஸமாதியிலே ஏதோ ஒரு உணர்ச்சி இருந்தா அது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி.
விராம ப்ரத்யயாப்⁴யாஸ பூர்வ​: ஸம்°ஸ்கார ஶேஷோ’ந்ய​: || 18||

விருத்தி இல்லாமைக்கு காரணமான பர வைராக்கியத்தோட பயிற்சியை உபாயமாக உடையதும், சம்ஸ்காரத்தை மட்டும் மீதமாக உடையதுமான யோகமே மற்றது (அஸம்ப்ரக்ஞாத ஸமாதி.)

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியிலே ஒரு விஷயத்தில் பாவனை வைக்கப்பட்டது இல்லையா? அதிலே சித்த விருத்தி கொஞ்சம் இருந்தது. ஆனால் அலைய விடாம ஒரே விஷயத்தில வைக்கப்பட்டது என்பதே அதில சிறப்பு. ஆனா யோகம்ன்னா சித்த விருத்தியை நிறுத்தறது ன்னு இல்லை பார்த்தோம்? ஆக நாம் இதையும் தாண்டனும். அப்ப எதோட பயிற்சி செய்யணும்? முன்னே பர வைராக்கியம்ன்னு பார்த்தோமில்லையா? எல்லாவற்றிலிருந்தும் பற்றற்று இருப்பது- அதே உபாயம்.
இது அஸம்ப்ரக்ஞாத ஸமாதி. இப்ப யோகியோட நிலை என்ன? ஸ்தூல -பருப் – பொருட்களோட சம்பந்தமில்லை; ஸூக்ஷ்ம பொருட்களோட சம்பந்தமில்லை. இந்திரியங்களோட சம்பந்தமில்லை. ஏன் இப்படி சம்பந்தமில்லை? ஏன்னா ஒரு சித்த விருத்தி இல்லாம இவற்றோட சம்பந்தம் இருக்க முடியாது. என் கண், என் காதுன்னு ஒரு எண்ணம் இருந்தாதானே அவற்றோட சம்பந்தம் இருக்க முடியும்? அந்த எண்ணங்களே இல்லாம போயிடும்.
பின்னே என்னதான் மிஞ்சி இருக்குன்னு பார்த்தா, சித்தத்தோட சம்ஸ்காரம் – இவ்வளோ நாள் பயிற்சி செய்ததால இருக்கிற பண்பு- மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்குமாம்.

அட! பர வைராக்கியத்திலே எல்லாம் விட்டுப்போயிடும்ன்னு சொன்னாபோல இருக்கேன்னா, ஆமாம், முந்தைய சம்ஸ்காரம் எல்லாம் விட்டுடும்; ஆனா இப்ப பழகுகிற பர வைராக்கியம் ஒரு சம்ஸ்காரத்தை உண்டு பண்ணுமே? அது மிஞ்சும். இது கொஞ்சம் விசேஷமானதால் இது வேற ஒரு சித்தத்தை –எண்ண ஓட்டத்தை- தோற்றுவிக்காது. இதுக்கு அடுத்தபடியான மோக்ஷத்தில இந்த சித்தம் கூட இல்லாம போயிடும். அந்த சித்தத்தோட ஒட்டிக்கொண்டு இருக்கிற சம்ஸ்காரமும் போயிடும்.

ப⁴வ ப்ரத்யயோ விதே³ஹ ப்ரக்ரு«தி லயாநாம் || 19||

பவ பிரத்யயம்:
அவித்தையை காரணமாக உடைய ஸமாதியானது தேகமற்றவர்களுக்கு, பிரக்ருதியில் லயமடைந்தவர்களுக்கு உண்டாகிறது.
ரத்தம், மாம்சம், மேதஸ், எலும்பு, மஜ்ஜை ஆகியன உள்ளவர் தேகம் உடையவர். இது நாமெல்லாம். இந்திரியங்கள், பஞ்ச பூத தன் மாத்திரைகள், (ஆகாசம் முதலான பஞ்சபூதங்கள் ஸ்தூலமாக உண்டாகும் முன் இருக்கிற ஸூக்ஷ்ம நிலை) அஹங்காரம், மகத்துவம் இவற்றை உடையது ஸூக்ஷ்ம சரீரம். இந்திரன் முதலான தேவர்கள் இப்படி இருக்காங்க. இந்த இந்திரியங்கள், அஹங்காரம் எல்லாம் இருக்கிறதாலேதான் இவங்களுக்கும் நம்ம மாதிரி கோப தாபங்கள், ஆசைகள் எல்லாம் இருக்கு. இவர்களோட புண்ணியம் அனுபவிச்சு தீர்ந்ததும் திருப்பி சம்சாரத்திலே கிடக்க வேண்டியதுதான். (தேவர்களும் கடவுளும் வேற வேறன்னு தெரியும்தானே?)

சரி, பிரக்ருதியில் லயம் அப்படின்னா என்னது?
இந்த உலகங்கள் எல்லாம் எதுலேந்து வந்ததோ அந்த மூலப்பொருள் ப்ரக்ருதி. ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் எல்லாமே இதுலிருந்து வந்தவையே. இவற்றோட பலவித சேர்க்கையால உலகத்தில பார்க்கிற விஷயங்கள் எல்லாம் உருவாச்சு. இந்த மூலப்பொருளோட லயம் ஆகமுடியும். ப்ரக்ருதி என்பதே மாயை ஆனதால் இதுவும் அவித்தையாக சொல்கிறாங்க.

உபாசனா காலத்திலே இந்திரியங்களை, பஞ்சபூத தன் மாத்திரைகளை, அஹங்காரத்தை, புத்தி தத்துவத்தை ஆன்மாவாக உபாசிக்கிறதுண்டு. பிரக்ருதியையும் உபாசிக்கிறதுண்டு. ஆன்மாவுக்கு ரூபம்ன்னு ஒண்ணு தெரியாதில்லையா! அப்போது அந்த அந்த தத்துவத்தில் பல மன்வந்தர காலம் லயமாக இருப்பர். இந்திரிய உபாசனை செய்தவர்களுக்கு அந்த இந்திரியத்துக்கு அபிமானி தேவதையின் சொரூப ப்ராப்தி கிட்டும். (விவரங்கள் பின்னாலே விபூதி பாதத்திலே வரும்.)

நம் உண்மை சொரூபத்தை தெரியாம மறைக்கிறது ஆவரண சக்தி. இதில் பல மட்டம் இருக்கு. பிரக்ருதியை உபாசிக்கிறவங்க இந்த மறைப்பில் பல மட்டங்களை கடந்து பிரகிருதியின் மறைப்பு வரை போய் பிரக்ருதியாவே ஆகிடுவாங்க. மனசையும் அனுபவத்தையும் இவங்களால் உற்பத்தி செய்து கொள்ள முடியும். ஆனாலும் மாயை விடலை இல்லையா? ஒரு நூறாயிரம் வருஷங்கள் ஆனா பிறகு தேவர்களாகி திருப்பி உழல வேண்டியதுதான்.
இரண்டிலேயும் மறு பிறப்பு இருக்கு. அதனால முமுக்ஷுக்கள் இந்த வகை ஸமாதியை விரும்புவதில்லை.

ஶ்ரத்³தா⁴ வீர்ய ஸ்ம்ரு«தி ஸமாதி⁴ ப்ரஜ்ஞா பூர்வக இதரேஷாம் || 20||

உபாய பிரத்யயம்: விதேஹ லயர், பிரகிருதி லயர் ஆகியோரை விட வேறானவர்களுக்கு ஶ்ரத்தையும் அதனால் தாரணையும், அதனால் த்யானமும், அதனால் த்யானிக்கப்பட்டதின் சாக்ஷாத்காரத்தால் ஸமாதியும் இது வலுப்பட்டு ஸம்ப்ரக்ஞாத ஸமாதியும் நிகழ உபாயம் உண்டாகிறது. இந்த உபாயங்கள் வேண்டும் என்று குருவை அண்டுதலும், அவரால் உபதேசிக்கப்பட்டது இதற்கு அனுசரனையாக உள்ள யுக்திகள் – இவற்றை விஷயமாக கொண்ட சித்தத்தின் தெளிவே ஶ்ரத்தை ஆகும். அம்மா குழந்தையை பாதுகாக்கிறது போல ஶ்ரத்தை அப்பியாசம் செய்கிறவங்களை எல்லா இடையூறுகளிலிருந்தும் காப்பாற்றும்.
இந்த ஶ்ரத்தை பயிற்சி செய்வோருக்கு தாரணையில் ஈடுபாட்டை உண்டாக்கும். இதுவே வீர்யம். அதால் த்யானிக்கிற தத்துவத்தில் நிலைப்பாடு உண்டாகும். இது ஸ்ம்ருதி. இது முறையே ஸமாதி, ஸம்ப்ரக்ஞாத ஸமாதி, அஸம்ப்ரக்ஞாத ஸமாதி என கொண்டுவிடும்.

தீவ்ர ஸம்°வேகா³நா மாஸந்ந​: ||21||

உபாயத்தை அனுஷ்டிப்பதில் தீவிர வேகமுள்ளவருக்கு ஸமாதி கிடைப்பது தாமதமற்றதாகிறது.

ம்ரு«து³ மத்⁴யாதி⁴ மாத்ரத்வாத்ததோ’பி விஶேஷ​: || 22||

உபாய அனுஷ்டானத்தில் தீவிர வேகத்திலும் உள்ள வேகமானது ம்ருது தீவ்ரம், மத்திய தீவ்ரம், அதி மாத்ர தீவ்ரம் என வகைப்படும். இதனால் ஸமாதியிலும் அதன் பலன் கிடைப்பதிலும் வேறுபாடு உண்டாகும்.
அடுத்து திடுதிப்பென்று ஒரு திருப்பம் வருகிறது!

ஈஶ்வர ப்ரணிதா⁴நாத்³வா || 23||

ஈஸ்வரனுடைய பக்தி விசேஷத்திலிருந்தோ [மிக விரைவில் ஸமாதி லாபம் உண்டாகிறது.]
முன்னே பார்த்தது எல்லாம் ஜீவனின் முயற்சியில் செய்தவை. இப்போது ஈஸ்வர பக்தியால் மிக விரைவில் ஸமாதி உண்டாகும் என சொல்லப்படுகிறது. இந்த வழியில் க்லேசங்கள் ஏதும் இரா. ஆகவே இது சுலபமாக சாத்தியமாகும்.

க்லேஶ கர்ம விபாகாஶயைரபராம்ரு«ஷ்ட​: புருஷ விஶேஷ ஈஶ்வர​: || 24||

ஈஸ்வரனின் சொரூபம்: அவித்யை, அஸ்மிதை, ராகம், துவேஷம், அபிநிவேஷம் ஆகிய ஐந்தாலும்; தர்மம், அதர்மம் இவற்றாலும்; தர்ம பலன்களான ஜன்மம், ஆயுள், போகம் இவற்றாலும்; சித்தாரூடமான சம்ஸ்காரங்களாலும்; முக்காலத்திலும் சம்பந்தம் பெறாதவனும், ஜீவனை விட வேறானவனும் ஆனவன் ஈஸ்வரன். ஜீவன் என்ன முயற்சி செய்தாலும் ஈஸ்வரனாக முடியாது.

முக்காலத்திலும்ன்னு சொல்லி இருக்கு இல்லையா? அதனால ஒரு வேளை ஜீவன் ரொம்ப முன்னேறி ஈஸ்வரனுக்கு நிகரான சக்திகளை பெற்றாலும் ஈஸ்வரனாக முடியாது. பிரகிருதி சம்பந்தம் இல்லாம கைவல்ய நிலையிலே இருந்தாக்கூட ஒரு காலத்திலே க்லேசங்களோட இருந்ததால ஈசனாக முடியாது. பிரகிருதி லயமடைந்தாலும் வியவகாரிகங்களிலே (நடைமுறையிலே) பந்தம் இருக்கும்; தேவர்களும் மனிதர்களும் போல் போகம் அனுபவிக்கிறது தெரியும்; தாக்ஷ்ணிக பந்தம் இருக்கும். யோக சித்தாந்தப்படி கைவல்ய நிலை அடைந்தவர் முன்னரே இந்த பந்தங்களை அனுபவிச்சுட்டு அப்புறமே கைவல்ய நிலை அடைந்தவர். ஈஸ்வரனுக்கோ முக்காலங்களிலும் பந்தங்களில்லை.
ஜீவனுக்கு புருஷன் என்று பெயர். க்லேசங்கள் அந்தக்கரணத்தை சார்ந்தவை. இந்த அந்தக்கரணமே ஜீவனோட முக்கிய லக்ஷணம். ஆகவே ஜீவனுக்கு அந்தக்கரணத்தோட க்லேசங்களால உண்டாகும் சுக துக்கங்களுடைய சம்பந்தம் உண்டு. ஈஸ்வரனோ தன் சங்கல்பத்தாலேயே எதையும் சாதிக்க வல்லவன்.

தத்ர நிரதஶயம் ° ஸர்வஜ்ஞ்ய பீ³ஜம் || 25||

எல்லாவற்றையும் அறிந்திருப்பதற்கு (ஞானத்திற்கு) காரணமான அறிவின் உயர்வு-தாழ்வு தன்மை ஈஸ்வரனிடத்தில் முடிவற்றதாகிறது. (நிரதிசயம்).
உலகத்திலே மக்கள் ஒருவரை விட ஒருவர் அறிவு அதிகமுள்ளவர் குறைவுள்ளவர் என்று உள்ளது. ஆனால் ஈஸ்வரனுடைய அறிவு எதனுடனும் ஒப்பிடமுடியாதது.
ஈஸ்வரன் சர்வக்ஞன், தயை உள்ளவன். அப்படியானால் ஜீவர்களை ஏற்றத்தாழ்வுடன் படைப்பானேன் என்று கேள்வி எழும். ஒரு குயவன் பானை செய்ய முக்கியம். மண்ணும் முக்கியம். குயவன் என்னத்தான் கெட்டிக்காரனாக இருந்தாலும் மண் நன்றாக இல்லையானால் பானை நன்றாக இராது. மண்ணை பிசையும் நீர் உப்பு நீராக இருந்தால் பானை சரியாக வராது. அது போல ஈஸ்வரன் சிருஷ்டிக்கு காரணம் ஆனாலும் அந்த அந்த ஜீவனின் முன் பிறவியில் சம்பாதித்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவியை தருவார். (இப்படி ஈஸ்வரன் சிருஷ்டிக்கு நிமித்த காரணம் மட்டுமே என்பர்.) பின்னே தயை எங்கே வந்தது என்றால் சாஸ்திரங்களை கொடுத்து இருக்கிறார். அதன் மூலம் வைராக்கியமும் தன்னிடம் பக்தியும் ஏற்பட்டு உபாசிக்கிறவர்களுக்கு பிரகிருதியின் பந்தத்தை நீக்கி கைவல்யம் அளிப்பார்.

ஸ ஏஷ​: பூர்வேஷாமபி கு³ரு​: காலேநாநவச்சே²தா³த் || 26||

அந்த ஈஸ்வரன் ஆதியில் உண்டான பிரம்மா முதலானவர்களுக்கும் குருவாக இருக்கிறார். காலத்தால் ஆயுளின் அளவு கூறப்படாமல் இருக்கிறார்.

தஸ்ய வாசக​: ப்ரணவ​: || 27||

பிரணவமானது அவருக்கு வாசகமாகும். (பெயராகும்.)
பிரணவம் என்பது பகவானின் மங்களகரமான சுபத்தை செய்யும் குணத்தை குறிக்கும். எப்படி ஒரு குழந்தை தன்னை “அம்மா” என்று அழைப்பதால் அன்னை மகிழ்வாளோ அது போல பகவான் தன்னை குறிக்கும் பிரவணத்தை கூறி தன்னை உபாசிப்பவன் மீது சந்தோஷம் கொண்டு அவனுக்கு கைவல்யம் முதலான நன்மைகளை செய்கிறார்.

தஜ்ஜபஸ்தத³ர்த² பா⁴வநம் || 28||

அந்த பிரணவத்தை ஜபிப்பது, அதன் பொருளான பரமாத்மாவை அடிக்கடி மனதில் இருத்தி த்யானிப்பது ப்ரணிதானம் எனப்படும்.

ஜபம் என்பதன் பொருள் மந்திரத்தின் அக்ஷரங்களை மனதில் வாங்கி மனோ விருத்தியை ஆவிருத்தி செய்வதே. அப்போது பிரணவத்தின் பொருளான பரம்பொருளையும் அடிக்கடி மனத்தால் த்யானித்து வர வேண்டும். இது ப்ரணிதானம். உபாம்சு ஜபம் எனவும் சொல்வர். இதற்கு முன் படி வாசிக ஜபம்.

தத​: ப்ரத்யக் சேதநாதி⁴ க³மோ’ப்யந்தராயா பா⁴வாஶ்ச || 29||

ஈஸ்வர ப்ரணிதானத்தால் தேகம் முதலானவற்றை விட வேறாக அறியப்படுகின்றவனும் சேதனனுமான ஜீவனுடைய உண்மையான அறிவும் உண்டாகிறது; வியாதி முதலான யோகாப்யாச தடைகளின் நிவிருத்தியும் உண்டாகிறது.

எந்த வஸ்துவை த்யானிக்கிறோமோ அதன் உண்மையான ஞானம் அல்லவா உண்டாக வேண்டும்? பரமாத்மாவை த்யானிக்க ஜீவனுக்கு தன் சொரூப ஞானம் எப்படி உண்டாயிற்று? ஜீவனும் ஈஸ்வரனும் ஒன்று இல்லையானாலும் யோக சித்தாந்தப்படி அவற்றின் சொரூபம் ஒன்றே. (அத்வைத சித்தாந்தத்தில் கூடஸ்தனும் பிரம்மமும் வேறில்லை என்பது போல)

வ்யாதி⁴ ஸ்த்யாந ஸம்°ஶய ப்ரமாதா³”லஸ்யா’ விரதி ப்⁴ராந்தி த³ர்ஶாநா’ லப்³த⁴ பூ⁴மிகத்வாநவஸ்தி² தத்வாநி சித்த விக்ஷேபாஸ்தே’ந்தராயா​: || 30||

யோகாப்யாசத்துக்கு விக்கினங்கள்:
வியாதி = வாதம், பித்தம், சிலேஷ்மம் என்ற தாதுக்களின் அன்னரசமான ரத்தத்தின் இந்திரியங்களுடைய இயற்கைக்கு மாறான நிலையும்,
ஸ்த்யான = கர்மம் செய்வதற்கு சித்தத்தின் நிலையும்
சம்சயம் = சந்தேகங்கள்
பிரமாத = யோகங்களை அனுஷ்டிக்காமல் இருப்பது
ஆலச்ய = சோம்பல், எதிலும் பிரவ்ருதி இல்லாமல் இருத்தல்.
அவிரதி = விஷயத்தில் ஆசை
பிராந்தி தர்சன = சாஸ்திரம் கூறியதை தவறாக புரிந்துகொள்ளுதல்.
அலப்த பூமிகத்வ = ஸமாதியின் கீழ் படியை அடையாமல் இருப்பதும்
அனவஸ்தி தத்வானி = கிட்டிய ஸமாதி நிலையில் சித்தம் நிலை பெறாமை.
சித்த விக்ஷேபா = மனத்தை அலைக்கழிக்கிற தோஷங்கள்
இவற்றில் எவை உண்டோ அவை யோகத்துக்கு விக்கினங்களாம் .

து³​:க² தௌ³ர் மநஸ்யாங்க³மே ஜயத் வஶ்வாஸப்ரஶ்வாஸா விக்ஷேப ஸஹபு⁴வ​: || 31||

துக்கம், (ஆத்யாத்மிக, ஆதி பௌதிக ஆதி ஸத்விக துன்பங்கள்.)
தௌர் மநஸ்ய =ஆவலுக்கு தடையேற்பட்ட காலத்தில் மனதில் உண்டாகும் கலக்கமும்.
அங்க³மே ஜயத்வ = சரீரத்தின் அவயங்களின் ஆட்டமும்
ஶ்வாஸ = இஷ்டமில்லாவிட்டாலும் வெளிக்காற்று உள் செல்லுதலும்
ப்ரஶ்வாஸா = இஷ்டமில்லாவிட்டாலும் உள் காற்று வெளி செல்லுதலும்
ஆகிய இந்த நான்கும் சித்தத்தின் சலன தன்மையுடன் உண்டாகின்றவை.
இந்த விக்கினங்களை தவிர்க்க நல்ல உபாயம் பிரணவம் முதலான மஹா மந்திர ஜபங்களும், இவற்றின் பொருளான பரமாத்மாவை மனதில் இருத்துவதும்தான்.

தத் ப்ரதிஷேதா⁴ர்த²மேகதத்த்வாபா⁴யாஸ​: || 32||

அந்த விக்கினங்களை தவிர்க்க ஏதாவது தத்துவம் ஒன்றில் மனதை நிறுத்தி த்யானம் செய்வதே.
சூத்திரம் 29 இல் ஈஸ்வர ப்ரணிதானம் விக்கினங்களை போக்கும் எனச்சொல்லப்பட்டது. அந்த திட பக்தி, வைராக்கியம் இல்லையெனில் என்ன செய்வது? ஏதேனும் ஒரு மூர்த்தியில் மனதை நிறுத்தி தாரணை, த்யானம் செய்து வர வேண்டும். வேறு வஸ்துவிடம் லயித்த மனது வியாதி முதலான துக்கங்களை உணராது.

மைத்ரீ கருணா முதி³தோபேக்ஷாணாம்° ஸுக² து³​:க² புண்யாபுண்ய விஷயாணாம்° பா⁴வநாதஶ் சித்த ப்ரஸாத³நம் || 33||

சுக துக்கமுள்ளவர்கள், புண்ய அபுண்யம் செய்பவர்கள் விஷயத்தில் முறையே சிநேகம், கருணை, தயை, உதாசீனம் ஆகியன கொள்ள சித்தத்தில் தெளிவு உண்டாகிறது.

சித்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடில் அசூயை முதலான குணங்கள் அங்கே குடி ஏறி விடும். பின் அவ்விடத்தில் ஸமாதி உண்டாகாது.
அதற்கு என்ன வழி? பிறருக்கு துக்கத்தை தரக்கூடாது. முடிந்த வரை மற்றவர் துக்கத்தை போக்க வேண்டுமென சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும். அப்படிச் செய்ய மற்றவருக்கு உபகாரம் செய்கிறோமோ இல்லையோ அபகாரம் செய்யாது இருப்போம்.

மற்றவருக்கு – சுகமாக இருப்பவரிடம் நட்பு வேண்டும். துக்கமுள்ளவரிடம் கருணை வேண்டும். புண்ய சீலர்களிடம் ப்ரீதி இருக்க வேண்டும். புண்யம் செய்யாதவரிடம் உதாசீனம் இருக்க வேண்டும். (அப்போதுதான் வெறுப்பு இல்லாதிருக்கும். எனக்கு மிகவும் பயனானது இது.)
இப்படி செய்ய ரஜோ தமோ குணங்கள் போய் சத்வம் பெருகும்.

ப்ரச்ச²ர்த³நவிதா⁴ரணாப்⁴யாம்° வா ப்ராணஸ்ய || 34||

பிராண வாயுவை, யோக சாஸ்திரத்தில் சொல்லியபடி (உள்ளே இருக்கும் காற்றை) வெளிவிடுதல், அல்லது உள்ளிழுத்து அடக்கி வைத்தல் (கும்பகம்) இவற்றாலாவது தெளிவு ஏற்படும்.
இங்கே ரேசகம் என்று சொல்லியிருந்தாலும் பூரகம், கும்பகம், ரேசகம் மூன்றும் அடங்கிய பிராணாயாமம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என பாஷ்யங்கள் சொல்கின்றன.
மனத்தெளிவுக்கு வேறு உபாயங்களும் உள்ளன.

விஷயவதீ வா ப்ரவ்ரு«த்திருத்பந்நா ஸ்த²திநிப³ந்தி⁴நீ || 35||

யோக சாஸ்திரங்களில் சொல்லிய விஷயங்களில் பிரவ்ருத்தியை உண்டான மனது தெளிந்த நிலைக்கு சாதனமாகிறது.

தாரணை, த்யானம், ஸமாதி மூன்றுக்குமே ஸம்யமம் எனப்பொதுப் பெயர். இவற்றை எவ்விடத்தில் வைத்து பயிற்சி செய்தால் என்ன பிரவ்ருத்தி (ஈடுபாடு) ஏற்படுகிறது என்பது இருக்கிறது. மூக்கின் நுனியில் சித்தத்தை வைத்து சம்யமம் செய்ய திவ்ய வாசனை அனுபவம் ஏற்படும்;  நாக்கின் நுனியில் வைக்க ருசி அனுபவம்; உள் மோவாய்க் கட்டையில் ரூபம். நாக்கின் நடுவில் தொடுதல்; நாக்கின் மூலத்தில் சப்தம். இப்படி ஒவ்வொரு இடத்தில் பிரவ்ருத்தி ஏற்பட்டு அங்கே சித்தம் நிலைபெறுகிறது.
சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் செல்ல சந்தேகங்கள் நீங்கும். சந்தேகமும் பயமும் நீங்க சாஸ்திரங்கள் உபதேசித்த விவேகம் –க்யாதி முதலியவற்றின் பலனில் நம்பிக்கை ஏற்படும். இந்த நம்பிக்கை அந்த வழியில் திடமான பிரவ்ருத்தியை உண்டாக்கும்.

வேறு உபாயங்களும் உண்டு.

விஶோகா வா ஜ்யோதிஷ்மதி || 36||

துக்கம் ரஜோ குணத்தின் பரிணாமம். அந்த துக்கம் விலகிய அதிக சாத்விக பிரகாசம் உள்ளதாக இருக்கிற பிரவ்ருத்தி மனதை நிலை பெறச்செய்கிறது.

வீதராக³விஷயம்° வா சித்தம் || 37||

விலகிய ஆசையை உடையவர்களின் சித்தத்தை விஷயமாக உடைய சித்தம் நிலை பெறுகிறது.
அதாவது யாருடைய சித்தம் ஆசையை விட்டுவிட்டதோ, அவர்களை இடைவிடாமல் த்யானிக்கிற சித்தம் நிலைபெறும். வியாசர், சுகர் முதலானோர் அப்படிப்பட்ட சித்தத்தை உடையவர்கள்.

 ஸ்வப்ந நித்³ராஜ்ஞாநாலம்ப³நம்° வா || 38||

ஸ்வப்னத்திலும் சுசுப்தியிலும் அறியப்பட்ட வஸ்துவை த்யானம் செய்கிற சித்தம் நிலைத்து நிற்கிறது.
பகவானை ஆராதனை செய்வதாக கனவு காண்கிறோம். அப்படியே விழித்து அந்த காட்சியை மனதில் இருத்தினால் சித்தம் நிலைபெறும். அது போல் சுசுப்தியில் ஏற்படும் சுகானுபவத்தை மனதில் இருத்தினாலும் சித்தம் நிலைபெறும்.

யதா²பி⁴ மதத⁴யாநாத்³வா || 39||

தனக்கு பிடித்த ரூபத்தை த்யானம் செய்வதால் சித்தம் நிலைபெறும்.
34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்) இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்). இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).
பரமாணு பரம மஹத்த்வாந்தோ’ஸ்ய வஶீகார​: || 40||

ஸூக்ஷ்ம விஷயத்தில் பிரவேசித்த இந்த சித்தத்திற்கு பரமாணு முதல் பரம மஹத்தானதை முடிவாக கொண்ட எல்லா விஷயங்களிலும் தடங்கல் இல்லாமை ஏற்படுகிறது.
இதுவே சித்தம் நிலைபெற்றதற்கு சோதனை.

க்ஷீண வ்ரு«த்தேபி⁴ ஜாதஸ்யேவ மணே க்³ரஹீத்ரு« க்³ரஹண க்³ராஹ்யேஷு தத் ஸ்த²த த³ஞ்ஜநதா ஸமாபத்தி​: || 41||

க்ஷீணமடைந்த (நலிவுற்ற) ராஜஸ, தாமஸ வ்ருத்திகளை உடைய சித்தத்திற்கு இயற்கையில் சுத்தமான மணி போன்ற கிரகிப்பவன் – ஆத்மா- விடத்திலும், கிரகிக்கும் சாதனமான இந்திரியங்களிடத்திலும், கிரகிக்கப்படும் விஷயங்களிடத்திலும் சாக்ஷாத்காரம் உண்டாகிறது.

இதை ஸமாபத்தி என்றும் சொல்வர்.

பச்சை புல்வெளியில் லயித்த சித்தத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் இருந்தபோது ஒரு மாடு அதன் மீது ஓடியதால் அவர் அலறினார். அவர் முதுகில் குளம்புகளின் சுவடுகள் உண்டானதாக கதை. இது புல்வெளியுடன் ஏற்பட்ட ஏகாக்ரத்தையால் உண்டானது. இது கிரகிக்கப்பட்ட விஷயத்தில் உண்டானதால் கிராஹ்ய ஸமாதி.
இது போல இந்திரியங்கள் (10) மனஸ், புத்தி, அகங்காரம் என 13 வித அஹம் தத்துவங்களுடன் ஏகாக்ரம் (ஒன்றுதல்) ஏற்படலாம். விஷயத்தை கிரகிக்கும் சாதனத்தில் ஸமாதி என்பதால் இதை கிரஹண ஸமாதி என்பர்.
இதையும் தாண்டியது ஆன்மா. இதில் ஏற்படும் ஸமாதி கிரஹீத்ரு ஸமாதி ஆகும்.
சாக்ஷாத்காரம் இப்படிப்பட்ட ரூபங்கள் உள்ளது.

தத்ர ஶப்³தா³ர்த²ஜ்ஞாந விகல்பை​: ஸம்°கீர்ணா ஸவிதர்கா ஸமாபத்தி​: || 42||

முன் சொல்லிய ஸமாதிகளுள் சப்தம், அர்த்தம், அர்த்தத்தைப்பற்றிய ஞானம் இவற்றின் பேதம் தெரியாமல் இருக்கும் நிலைக்கு ஒப்பான சாக்ஷாத்காரம் ஸவிதர்க்கம் எனப்படும்.

கோ என்ற சம்ஸ்க்ருத சப்தம் ஒரு சொல். அதற்கு பசு என்பது பொருள். கோ என்று கேட்கும் போது அது நம் புத்தியில் ஒரு ஞானத்தை உண்டாக்குகிறது. ஒரு சொல்லின் சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக சம்பந்தப்படுத்தி அறிவது விகல்ப ஞானம். இதற்கு ஒப்பானதே ஸவிதர்க்க ஸமாதி. இதில் சப்தம், பொருள், ஞானம் மூன்றும் ஒன்றாக கலந்ததாகவே கொள்ளப்படும்.

ஸ்ம்ரு«தி பரிஶுத்³தௌ⁴ ஸ்வரூப ஶூந்யே வார்த² மாத்ர நிர்பா⁴ஸா நிர்விதர்கா || 43||

சங்கேதம் (குறிப்பு) என்ற சக்தி-ஞானம் விலகியபோது ஸமாதி பிரக்ஞையானது தனக்குரிய க்ராஹகத்வம் என்ற பிரக்ஞா ரூபத்தால் இல்லாதது போல ஆகி, அபேதமற்ற பசு முதலிய க்ராஹ்யத்தோடு (அர்த்தத்தோடு) மட்டும் பிரகாசிக்கின்ற ஸமாதியானது நிர்விதர்க்க ஸமாதி எனப்படுகிறது.
எளிமையாக சொல்ல: நினைப்பில் சுத்தி ஏற்பட்டு சுய ரூபத்தில் உள்ளபோது வேறுபாடில்லாமல் பொருள் மட்டுமே உணரப்படும்போது அது நிர்விதர்க்கம் ஆகும்.
ஒவ்வொரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் இறைவன் ஒருவித குறிப்பை உலகை படைக்கும்போதே ஏற்படுத்தி உள்ளார். சப்தம், பொருள், அறிவு மூன்றும் வேறானாலும் அவற்றை ஒன்றாக அறிவதற்கு சங்கேதம் என்ற சக்தி காரணமாகும். இது இல்லாதபோது பொருள் மட்டுமே தோற்றத்தை அடைந்து நிற்கும். இந்த ஸமாதி நிர்விதர்க்க ஸமாதி. (இந்த சங்கேதம் இருக்கும்போது அது ஸவிதர்க்க சமாதி; நேற்று பார்த்தோம் இல்லையா?)

மேற்கண்ட இரண்டும் ஸ்தூல விஷயமான ஸமாதியை விளக்குகின்றன.

ஏதயைவ ஸவிசாரா நிர்விசாரா ச ஸூக்ஷ்ம விஷயா வ்யாக்²யாதா || 44||

முன் கூறப்பட்ட ஸ்தூல விஷயமுடைய ஸவிதர்க்க, நிர்விதர்க்க ஸமாதியை கொண்டே பரமாணு முதலிய ஸூக்ஷ்ம வஸ்துக்களை விஷயமாக உடைய ஸவிசாரம், நிர்விசாரம் என்று சொல்லப்படும் சமாபத்தி (ஸமாதி) தெளிவாக உபதேசிக்கப் பட்டதாகிறது.

ஸ்தூல சமாசாரம் எளிதாக புரிகிறது. ஒரு குடம் என்றால் அது ஸ்தூலமாக இருப்பதால் எளிதாக புரிகிறது. ஸூக்ஷ்ம வஸ்துக்கள் அப்படி புரிவதில்லை.
பெயர்களும் ரூபங்களும் (உருவங்களும்) நிரம்பியுள்ள இவ்வுலகத்தில் கீழ் மட்ட ஸவிசார, நிர்விசார ஸமாதிகளை புரிந்து கொள்வதே கடினம்.
ஸூக்ஷ்ம ஸமாதி ஸவிசாரம், நிர்விசாரம் என இரு வகைப்படும். இதை வகைப்படுத்த விஷயமாவது (parameter) பரமாணு மட்டுமில்லை; பஞ்ச தன் மாத்திரை முதல் ப்ரக்ருதி வரை உள்ள தத்துவங்களும் கூட. இவை ஸூக்ஷ்ம மானதால் ஸூக்ஷ்ம ஸமாதி என பெயர் வந்தது.

ஸூக்ஷ்ம விஷயத்வம்° சாலிங்க³பர்யவஸாநம் || 45||

மேற்கூறிய ஸமாதிக்கு ஸூக்ஷ்மமான விஷயத்தை உடைய தன்மையும் பிரதானத்தை முடிவாக உடையது.

ஸூக்ஷ்மமானவை யாவை?
பரமாணுக்கள் ஐந்து வகைப்படும். பஞ்ச தன் மாத்திரைகளில் ஒவ்வொரு தன் மாத்திரையும் அதனதன் பரமாணுவுக்கு முக்கிய காரணம் ஆகும். மற்றதன் பரமாணுவுக்கு அங்கமாகும். (வேதாந்தத்தில் பஞ்சீகரணம் பற்றி அறிந்தவருக்கு இது புரிய சுலபமாக இருக்கும். ஆனால் வேறானது.)

பரமாணுக்கள் ஐந்து.

௧.பார்த்திவம். ௨.ஆப்யம். ௩.தைஜசம் ௪.வாயவ்யம். ௫.நாபசம்
முக்கிய காரணங்கள்: ௧.பார்த்திவம். – கந்தம் (வாசனை). அங்கம்: ரசம் ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௨.ஆப்யம். – ரசம்.- அங்கம்: ரூபம் ஸ்பர்சம் சப்தம்
௩.தைஜசம் – ரூபம் அங்கம்: ஸ்பர்சம் சப்தம்
௪.வாயவ்யம்.- ஸ்பர்சம் அங்கம்: சப்தம்
௫.நாபசம் – சப்தம்.

இந்த பரமாணுக்கள் காரியங்கள். அதாவது (result) ரிசல்ட். இவற்றுக்கு காரணம் (cause) தன் மாத்திரைகள். பரமாணுக்கள் மிக சிறியன ஆயினும் ஸ்தூலமானவை.

தா ஏவ ஸபீ³ஜ​: ஸமாதி⁴​: || 46||

முன் சொன்ன அனைத்தும் பந்தத்திற்கு சாதனமான க்ராஹ்யத்தை (பற்றை) உடைய ஸமாதி ஆகும்.
அதாவது அது ஸமாதி ஆனாலும் ஒரு விஷயத்தை பற்றி நிற்கிறது.
ஸவிதர்க்கமும் நிர்விதர்க்கமும் பருப்பொருளை பற்றி நிற்கிறது. ஸவிசாரமும் நிர்விசாரமும் ஸூக்ஷ்ம பொருளை பற்றி இருக்கின்றன. இவை நான்காலும் மோக்ஷம் கிடைக்காது. இவை நான்கும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிகள் எனப்படும்.

41 – 45 சூத்திரங்களில் ஸமாதி வகைகள் விளக்கப்பட்டன. க்ரஹீத்ரு, க்ரஹணம். க்ராஹ்யம் – அதாவது பற்றுவோன், பற்று, பற்றப்பட்டது இவற்றை கொண்டு பிரிக்கப்பட்டது.

க்ராஹ்யத்தில் பற்றப்பட்டது ஸ்தூலமா இல்லை ஸூக்ஷ்மமா என்பதை வைத்து பிரிக்கப்பட்டது. ஸ்தூலத்தில் ஸவிதர்க்கம், நிர்விதர்க்கம் என இரண்டு வகை ஆயிற்று. ஸூக்ஷ்ம ஸமாதியில் ஸவிசாரம், நிர்விசாரம் என இரண்டு வகை ஆயிற்று. பற்றுதல், பற்றுவோன் என்பனவற்றை விஷயமாக கொண்டு சவிகல்பம், நிர்விகல்பம் என இரண்டு வகை ஆயிற்று.
மேலும் க்ரஹணத்தை மட்டும் கொண்ட ஸமாதியில் ஆனந்தத்துடன் – ஸானந்தம்; ஆநந்தம் மட்டும் (கேவல ஆநந்தம்) என இரண்டு வகை ஆயிற்று.

மூன்றாவதாக க்ரஹீத்ரு ஸமாதியில் அஸ்மிதை உடன் கூடியது, ஸாஸ்மிதை. அஸ்மிதை மட்டுமே கேவல அஸ்மிதை என இரண்டு வகை ஆயிற்று. சப்தம் ஆனது அர்த்தம், ஞானம் இவற்றுடன் கூடிய போது ஸவிகல்பம் என்றும், சப்தம் அர்த்தத்தை விட்டு ஞானத்துடன் மட்டும் கூடிய போது நிர்விகல்பம் என்றும் ஆயிற்று.

நிர்விசார வைஶாரத்³யே’த்⁴யாத்ம ப்ரஸாத³​: || 47||

நிர்விசார ஸமாதிக்கு ஆதிக்யம் உண்டாகும் போது கிலேச வாசனைகள் இல்லாத சித்தத்தில் தெளிவு ஏற்படுகிறது.
நிர்விசார ஸமாதியை பழக ரஜோ, தமோ குணங்கள் நீங்கி சத்வம் மேலிடும். அதனால் அவித்தை முதலான கிலேசங்களின் வாசனை நீங்கும், இப்படிப்பட்ட சித்தத்தில் அறிவு உண்டாகும். இந்த ஞானம் உண்டானவன் ஆன்மாவை எல்லாவற்றிலும் சிறந்ததாக கண்டு கொள்கிறான். அப்படி ஞானம் வராதவர்களைப் பார்த்து இவன் துக்கப்படுகிறான்.
இப்படிப்பட்ட நிர்விசார ஸமாதி சித்திக்கவே ஒவ்வொரு சாதகனும் முயற்சி செய்ய வேண்டும்.

ரு«தம்ப⁴ரா தத்ர ப்ரஜ்ஞா || 48||

சித்தத்தெளிவு ஏற்பட்ட போது உண்டாகும் அறிவு ருதம்பரா எனப்படும்.

இந்த நிர்விசார ஸமாதியில் சத்தியமான வஸ்துவின் தோற்றமே கிடைப்பதால் ருதம்பரா என்ற பெயர் இந்த பிரக்ஞைக்குப் பொருத்தம். இத்தகைய நிலை தர்மமேக ஸமாதிக்கு இட்டுச்செல்லும்.

ஶ்ருதாநுமாந ப்ரஜ்ஞாப்⁴யா மந்யவிஷயா விஶேஷார்த²த்வாத் || 49||
ஶ்ருத அநுமாந ப்ரஜ்ஞாப்⁴யாம் அந்ய விஷயா விஶேஷார் த²த்வாத்

சப்தத்தாலும் அனுமானத்தாலும் உண்டாகிற பிரக்ஞையை விட இது வேறானது. அது சாமான்யமானது. இந்த ருதம்பரா பிரக்ஞை அவற்றுக்கு எட்டாததை விஷயமாக உடையது.
ஞானம் பிரமாணங்களால் உண்டாகும். இவற்றில் சப்தமும், அனுமானமும் சாமான்ய ஞானத்தையே தரும். மலையில் புகை என்றால் அது மலையில் புகை இருக்கிறது என்ற சாமான்ய ஞானத்தையும், அங்கே ஏதோ எரிகிறது, அதனால் புகை வருகிறது என்ற சாமான்ய ஞானமும் கிடைக்கும். ஏன் புகை? எப்படிப்பட்ட நெருப்பு? எப்படி வந்தது போன்ற விசேஷ ஞானம் கிடைக்காது.

பிரத்யக்ஷம் என்பது இன்னொரு பிரமாணம். இது இரு வகை. சாமான்ய ப்ரத்யக்ஷம், யோக பயிற்சியால் உண்டாகும் ப்ரத்யக்ஷம்.

சாமான்ய ப்ரத்யக்ஷம் புலன்களால் ஏற்படுகிறது. இதன் வீச்சு குறைவானது. புலன்களில் குற்றம் இருந்தால் அது ஞானத்தை பொய்யாக்கி விடுகிறது. ஒரு புலன் அறிவதை மற்றொன்று அறிவதில்லை. அதனால் அப்படியே உண்மை ஞானம் கிடைத்தாலும் விசேஷமான ஞானம் ஒன்றும் முழுமையாக கிடைப்பதில்லை.

யோக ப்ரத்யக்ஷ ஞானம் அப்படி இல்லை. அது இந்திரியங்களை சார்ந்து இல்லை. ப்ரக்ருதி வரை உள்ள ஸூக்ஷ்ம வஸ்துக்களை க்ரஹிக்கும். புதையல் போன்ற மறைந்துள்ளவற்றையும் கிரஹிக்கும். வேறு தேசம், லோகம் இவற்றிலுள்ளதையும் கிரஹிக்கும். அகவே இந்த யோகஜ ப்ரத்யக்ஷ ஞானத்தை ருதம்பரா அல்லது சத்தியமான பிரக்ஞை என உபதேசிக்கிறார்.

இயற்கையில் சுத்த சத்வ புத்தி எல்லாவற்றையும் பிரகாசப்படுத்தக்கூடியது. ஆனால் தமோ குணத்தால் மறைக்கப்பட்டு இருப்பதால் அது இந்திரியங்கள் அறிவதை மட்டுமே பிரகாசப்படுத்துகிறது. யோகப்பயிற்சியால் தமோ குணம் விலக இந்திரியங்கள் துணை இல்லாமலே அனைத்தையும் யோகி அறிகிறான்.
இப்படி மேலான நிலைக்கு செல்லாமல் தாழ்ந்த நிலையிலேயே இருப்பவர்களை கண்டு ருதம்பரா பிரக்ஞன் சோகப்படுகிறான்.

தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ’ந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴ || 50||
தஜ்ஜ: ஸம்°ஸ்காரோ அந்ய ஸம்°ஸ்கார ப்ரதிப³ந்தீ⁴

மேற்கூறிய ருதம்பரா பிரக்ஞையால் உண்டான நிரோத சம்ஸ்காரமானது வேறு வ்யுத்தான சம்ஸ்காரத்துக்கு தடை செய்வதாக ஆகிறது.

வெளியில் உள்ள சப்தம் முதலான விஷயங்களையே சித்தம் பற்றி செல்கிறது. இது பல ஜன்ம பழக்கம் ஆகும். இது வ்யுத்தான சம்ஸ்காரம் எனப்படும். தத்துவ பழக்கம் பெற வைராக்கியம் முதலான சாதனங்கள் உள்ளன. இந்த தத்வ பழக்கம் இதை தடை செய்யும். ருதம்பரா பிரக்ஞா ஏற்படில் இது முழுதும் தடை செய்யப்பட்டதாகும். அவித்தை முதலிய க்லேசங்கள் குறைந்து சித்தம் விவேக க்யாதியை அடைந்து செய்ய வேண்டிய காரியம் ஏதுமில்லாததாய் காரணத்தில் லயம் அடைந்து விடும். இந்த நிலையில் யோகியின் சித்தம் தன் காரியம் என்று எதையும் செய்ய சக்தி இல்லாமல் ஆகிவிடுகிறது. இப்படி…..

அஸம்ப்ரக்ஞாத ஸமாதி:
தஸ்யாபி நிரோதே⁴ ஸர்வநிரோதா⁴ந்நிர்பீ³ஜ: ஸமாதி⁴: || 51||

ஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் சம்ஸ்காரத்தினுடையதும் அதன் பிரக்ஞையின் உடையுதுமான நிரோதம் (தடை) உண்டான போது, எல்லாம் தடை செய்யப்பட்டதால் தன்னிலை மாறுவதற்கு ஏதுமில்லாத அஸம்ப்ரக்ஞாத ஸமாதி உண்டாகிறது.

யோக சாஸ்திரம் கேட்டலும், பொருளை மனனம் செய்வதும், புருஷனை மட்டும் த்யானம் செய்யும் பழக்கமான தர்மமேக ஸமாதியை உண்டாக்கும். பின் பர வைராக்கியம் என்ற பிரக்ஞையின் தெளிவு ஏற்பட்டு தர்மமேக ஸமாதியில் ருசி உண்டாகும். புருஷனை மட்டும் த்யானிக்க அதன் சாக்ஷாத்காரம் ஏற்படுகிறது; நிர் பீஜ யோகம் சித்திக்கிறது. [அதாவது சித்தம் முளை விடுவதில்லை.] இதுவே பழக, வேலையில்லாமல் சித்தம் அதன் காரணமான பிரக்ருதியில் ஒடுங்கிவிடும். செய்ய வேண்டிய காரியம் ஏதும் இருந்தால்தானே சித்தம் அதன் காரணத்தை விட்டு கிளம்பிப்போகும்? இப்படிப்பட்ட நிலை அடைந்த பின் செய்ய ஏதுமில்லை. யோகி புருஷனின் ஸ்வரூப மாத்திரத்தில் நிலை பெற்று முக்தனாகிறான்.

ஸமாதி பாதம் முடிந்தது.
——————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading