ஸ்ரீ பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் ஸ்ரீ திரு நறையூர் நம்பி மேக விடு தூது–

தனியன்

போதுமண வாளணங்கு புல்லுநறை யூர்நம்பி
மீதுமண வாளரருண் மேகவிடு – தூதுதனைச்
சொல்லுவார் கேட்போர் துதிப்பாரிம் மேதினிமேல்
வெல்லுவா ரெல்லாம் விரைந்து.

காப்பு
நம்மாழ்வார்

நாரணனை யெவ்வுயிர்க்கும் நாயகனை யண்டாண்ட
பூரணனை நாகணையிற் புண்ணியனை – வாரணமுன்
வந்தானை யேத்தி மறையா யிரந் தமிழாற்
றந்தானை நெஞ்சே தரி.

திருமங்கையாழ்வார்

நாட்டியசீர்த் தென்னறையூர் நம்பி திருவடிக்கே
சூட்டியதோர் மேகவிடு தூதுக்குக் – கூட்டம்
பொலியன்ப ரேத்தும் புனலாலி நாடன்
கலியன் பரகாலன் காப்பு.

நூல்

கலிவெண்பா
மேகத்தை விளித்தல்

சீர்கொண்ட செங்கமலச் செல்வத் திருமகளு
நீர்கொண்ட வேலை நிலமகளு – மேர்கொண்ட 1

காந்தண் மணிக்கடகக் கையா லடிவருடப்
பாந்தண் மணிச்சுடிகைப் பாயன்மேற் – சேர்ந் துறங்குஞ் 2

செங்கண்மா லுந்தித் திருத்தா மரைப்பிறந்த
வங்கண்மா ஞாலத் தனைத்துயிர்க்குந் – தங்காமும் 3

மாரி வழங்குதன் மாறாமே கைம்மாறு
காரிய மென்று கருதாமே – பாரிற் 4

றுளிக்கின்ற தண்ணந் துளியமுத நல்கி
யளிக்கின்ற கொண்மூ வரசே – களிக்கின்ற 5

மேலுலக மேறி விரிஞ்சனா மம்படைத்து
நாலு திசைமுகமு நண்ணுதலான் – மாலுமாய் 6

நீலநிற மாகி நிறைகமலக் கண்ணாகிக்
கோல வளையாழிக் கொள்கையாற் – சூலம் 7

விரவிய பாணியால் மின்னையிடந் தாங்கி
யரவ மணியு மழகால் – வரமளிக்கு 8

மெத்தே வருக்கு மிறைவராய் மேலாய்
முத்தே வருநிகரா மூர்த்தியே – மைத்தகன்ற 9

வானத்து ளேபிறந்து வானத்து ளேதவழ்ந்து
வானத்து ளேவளரும் வானமே – வானத்து 10

வேலைவாய் நீரருந்தி வெற்பி லரசிருந்து
சோலைவாய்க் கண்படுக்குந் தோன்றலே – ஞாலமிசைத் 11

மேகத்தின் சிறப்புரைத்தல்

தானமும் மெய்யுந் தருமமுங் கல்வியு
மானமுந் தானமு மாதவமு – நானக் 12

கருங்கொண்டை மங்கையர்தங் கற்புநிலைநிற்ப
தருங்கொண்ட லேயுனைக்கொண் டன்றோ – நெருங்குமுவ 13

ராழிநீர் துய்யவமுத நீரானதுவும்
வாழிநீ யுண்ட வளமன்றோ – தாழுமடி 14

தந்துயர்கூறி மேகத்தை வேண்டுதல்

யாவுஞ் சிந்தாமணியு மம்புயமுஞ் சங்கமுங்
காவும் பணியவுயர் கார்வேந்தே – நாவினாற் 15

சாதகமும் தோகைத்தனி மயிலும்போலவே
மேதகையை நின்வரவை வேட்டிருந்தேன் – பூதலத்துப் 16

பல்லுயிருங் காக்கும் பரமா முனக்கெனது
புல்லுயிருங் காக்கில் புகழன்றோ – வல்லதொரு 17

சீருயிரு மேகமே செங்கண்மாற் காளானேன்
ஆருயிரு மேகமே யல்லவோ – பேரரவ 18

நீலமஞ்சே கேட்டியா னின்னையல்லா தென்னையிந்தக்
காலமஞ்சே லென்பாரைக் காணகிலேன் – ஓலமரு 19

விண்மாரியே பெருமாள் வேரித்துழாய் வேட்டென்
கண்மாரி பெய்வதெல்லாங் கண்டாயே – தண்மை 20

விளையும் பயோதரமே வெம்பாத செம்பொன்
அளையும் பயோதரமே ஆனேன் – கிளைபிரியாக் 21

கோலமழையே குயில்மாரனையங்குக்
காலமழையாமல் காப்பாரார் – நீலநிற 22

மங்குலுக்கு வேந்தே மலர்க்கண் புதைத்தனைய
கங்குலுக்கு நெஞ்சங்கரைகின்றேன் – இங்கு 23

நடந்தகனமே முலையினாலுந்தரள
வடந்தகனமே செய்து மாய்த்தேன் – விடந்திரண்ட 24

திங்களெழிலிக்குச் சிலைமாரவேள் முனியில்
எங்களெழிலிக்கரசே யென்செய்கேன் – மங்கலமா 25

மிந்திரவில் வாங்கி யெழுகின்ற மைப்புயலே
வந்திரவில் வாடை வருத்துங்காண் – அந்தரத்து 26

விண்ணே யுனக்கிவற்றை விண்டுரைத்தே னல்லாதெ
னுண்ணேய வேட்கை யெவர்க்கோதுவேன் – கண்ணழலால் 27

வேட்கைபிறர்க் குரையேனென்றல்

வெந்தானிலத்துக்கு வீறாகத் தாங்குதலால்
மந்தானிலத்துக்கும் வாய்திறவேன் – அந்த 28

குருத்தத்தை மாரன்குரகதாமா மென்றே
வருத்தத்தை யங்குரைக்க மாட்டேன் – கருத்துள்ள 29

மாதண்டலைவாய் மதுகரத்துக்கும வன்றன்
கோதண்ட நாணென்று கூறேனான் – மூதண்ட 30

கோளக்குயிற் கெல்லாங் கோவே யவன்றனது
கானக்குயிற்குங் கழறேனான் – நாளொன்றில் 31

அன்புருவுக்கு மரசனுட லீர்வித்த
புன்புறாவுக்கும் புகலேனான் – மென்புரத்து 32

கோம்பிக்குடல் பனிக்கும் கொச்சை மடமஞ்ஜைக்கும்
சோம்பித் தளரும் துயர் பணியேன் – றேம்பிரச 33

நிற்கின்ற பூவைக்கு நீள்குழலார் சொல்லியதே
கற்கின்ற பூவைக்குங் கட்டுரையேன் – பொற்கால் 34

வெறிப்பதுவும் வீட்டன்னம் வெண்பாலு நீரும்
பிறிப்பதுபோல் நட்புப் பிரிக்குங் – குறிப்பறிந்து 35

காதலா லுள்ளக் கவலையது கேட்க
வோதலாகா தென்றுரையேனான் – ஆதலால் 36

உள்ளே புழுங்குவதன்றி யோருவருக்கு
விள்ளே னுனக்கு விளம்பினேன் – தெள்ளியநூல் 37

இரக்கந் தோன்ற வுரைத்துத் தூதுவேண்டல்

ஓதுவாரெல்லாம் உதவுவாரொப் புரைக்க
வேதுவாய் நின்ற வெழிலியே – பூதலத்து 38

பெய்யுதவியும் புரிந்தால் பேச்சுதவியுஞ் சிறிது
மெய்யுதவியும் புரிய வேண்டாவோ – துய்ய 39

அடலாழி யானடிக்கே அன்பாயகாதல்
கடலாழி மூய்கினேன் கண்டாய் – உடல்வாழ 40

விம்முகிலே சந்தாக மீளத் திருமால்பால்
மைம்முகிலே சந்தாகமாட்டாயோ – பெய்மதவேள் 41

தண்ணப்பஞ் செய்வதெல்லாந் தாமோதரனடிக்கீழ்
விண்ணப்பஞ் செய்தருள வேண்டாவோ – வெண்ணத்தின் 42

சீதரனை நீயிரந்து தெய்வத் துழாய் கொணர்ந்தென்
ஆதரவு தீர்த்தருள லாகாதோ – கேதகைக்கு 43

மின் கேள்வனாக்கிய நீவிண்ணோர் பெருமானை
என் கேள்வனாக்கினா லேலாதோ – முன்கேட்டு 44

மெள்ளரிய தாமம் எனக்குதவா யேலுனக்கு
வள்ளலெனும் நாமம் வழுவாதோ – தெள்ளுகடன் 45

ஞாலத் துளவமே நல்லிளமை போகாமல்
கோலத்துளவமே கொண்டுதவாய் – சீலத்தா 46

லூனா யுடலாயுறு துணையாய்த் தெய்வமா
யானா மருந்தா யென்னாருயிராய் – ஆனாத 47

நெஞ்சமாய்க் கண்ணாய் நினைவாய் வினையேற்கு
தஞ்சமாய்நின்ற தனிமுதலே – பஞ்சவர்க்காய் 48

மெய்த்தூது சென்றவரை வெல்லவே வெண் சங்கம்
வைத்தூது செங்கமல மாயோன் பால் – இத்தூது 49

நல்லதெனக்காரே நடந்தருள வேண்டுநீ
அல்லதெனக்காரே யருள் செய்வார் – சொல்லித் 50

தருதுமெனக் கந்தரமே சாற்றாயே லுய்யக்
கருதுமெனக் கந்தரமே கண்டாய் – பெரிது 51

தூது சென்றார் சிலரை எடுத்துக்காட்டல்

மெனைத் தோன்றியோ துயரமெய்தினார் பார் மேல்
தோன்றியோ தூதுழன்றார் – நினைத்தார் 52

தமது பிறப்பறுக்கும் தாயாகி மேனாள்
அமுதிற் பிறந்தாள் பாலன்றோ – நமது 53

கருமஞ்சனை யவர்க்கா காய் கதிரைப் பாய்ந்து
பொருமஞ்சனை சிறுவன் போனான் – தரணிதனில் 54

மீது பரவை விடமுண்டவ னன்றோ
மாது பரவைமனை வந்தான் – ஆதலால் 55

ஓதுமிவரில் உயர்ந்தாரிலை யென்றே
தூது புரிந்தோரை தொகுத்துரைத்தேன் – ஆதலால் 56

தேனின்புறத் தூது தெய்வத் துளவினன்பால்
யானின்புறத் தூது எழுந்தருளாய் – வானிற் 57

றிவலை பிலிற்றி வருந்தெய்வமே நீயென்
கவலையறத் தூது போங்காலை – குவலயத்தி 58

பாற்கடலிற் பரமன் பெருமையும் நிலைமையும்

லெம்பிரானூரு மவர்பெயரு மெற்பயின்ற
தம்பிரான் செய்தமையுஞ் சாற்றக்கேள் – உம்பரில் 59

பன்னிருவர் மான்றேர் பரிதிக் கடவுளரு
மன்னிருவர் தெய்வ மருத்துவரும் – ஒன்னலரைப் 60

பாயும் விடையர் பதினொருவருந் திசையில்
காயுங் கடாஆ யானைக் காவலரும் – தூயகதிர் 61

வெண்ணிலா விட்டுவிளங்குங் கலா மதியும்
எண்ணினத் தாரகை யீட்டமும் – கண்ணி 62

லருடரு மாஞானத் தகுந்தவர் நாகர்
தெருடரும் விஞ்சையர் சித்தர் – கருடர் 63

அரக்கரி யக்கரவுணர் முதலோர்
பரக்கும் கணங்கள் பலரும் – பெருக்கரு 64

நீரேழுமேழு நினது பெருங்கணமும்
பாரேழு மேழு பருப்பதமும் – ஈரே 65

ழடுக்கும் புவனமு மாடகமால் வெற்பு
மெடுக்கு மரவரசு மெல்லாம் – தொடுக்கத்தான் 66

முண்டக நாபிமுளைக்குஞ் சதுமுகனோ
டண்ட வளாக மடங்கலுந் தான் – கண்டளித்து 67

முன்னிய வண்ண முடித்து விளையாடும்
தன்னிக ரில்லாத் தனி முதல்வன் – அன்னமாய் 68

மீனாகி ஆமையாய் வெள்ளேனமாய் மடங்கல்
மானாகி மாயையாய் வாமனமாய் – ஆனாத 69

மானிடராய் பாய்பரியாய் வாழு மடியவர்க்கு
தானிட ராற்றப் புகுந்த தம்பிரான் – மேனாளிற் 70

பைந்நாகப் பள்ளிமேல் பங்கயங்கள் பூத்தொளிரும்
மைந்நாகம்போல் கண்வளருநாட் – பொன்னாய 71

வன்ன முளரிமலர்த்தவிசில் வீற்றிருக்கும்
அன்ன முணர்த்த வுணராமையால் – என்னையல்லால் 72

இந்நித்திரை மடந்தை எய்தலுமாயிற் றோவென்
றுன்னித்திரை மடந்தை யூடினளால் – அந்நிலையே 73

திருமகள் சுகந்த வனம் வருதல்

காயத்திரியுங் கலைமகள் சாவித்திரியும்
ஆயத் தெரிவைய ராமாங்கு வர – நேயத்தார் 74

கோலத்தார் கைதொழுது கூரிலைய முக்கவட்டுச்
சூலத்தாளே வற்றொழில் கேட்ப – ஞாலத்து 75

மானிட மங்கைவடி வாகவந் துறையும்
கானிடம் யாதென்று கண்சாத்தி – யானா 76

யோசனையோர் நாற்றிசையும் முத்தித்
தலமாஞ் சுகவனந்தன்னுள் – அலமாற 77

வான்றிகழுங் கங்கை முதல் மங்கைமார் மார்கழியில்
தோன்றிய முற்பக்கத் துவாதசியில் – தேன்றிகழும் 78

கூந்தனனை குடைந்தாடலான திக்கு
வேந்தனென நாமம் விளம்பியே – பாய்ந்த 79

திருமணி முத்தாறலைக்குந் தீரத்தினின்ற
மருமருவுவஞ்சியின் கீழ்வைக – வருகைமா 80

வானமே தாவிவளரும் மகிழடியின்
ஞான மேதாவியெனு நன்முனிவன் – தானெய்திச் 81

மேதாவி திருமகளைத் தமக்கு அருமகளாகப் போற்றல்

செய்ய கமலத்துச் செய்யவளைக் கண்டுவந்தே
யையர் பயந்தெடுத்த வன்னையார் – துய்யபெய 82

ரூரேதெனப் பெயருமூருமிலை தந்தைதாய்
நீரேயென முனிவன் நெஞ்சுருகி – பாரேத்த 83

மன்னிள வஞ்சியின் கீழ்வந்துறைதலால் பெயரும்
என்னிள வஞ்சியரே என்றுரைத்து – தன்றுழையி 84

லானவர முனிவனவ் வனத்துள் கொண்டிருப்ப
வானவர் தோலாவலி தோற்று – தானவரால் 85

எம்பெருமான் மானிட வடிவாய் மாமகளைத் தேடி வருதல்

விண்ணாடிழந்து விரிஞ்சகனோடு கூப்பிடுநாட்
டண்ணாந்துழாய் மாதவனுணர்ந்து – நண்ணார் 86

மிடைகிடைத்துமென்று விடைகொடுத்து பின்னர்
கிடைகிடைத்தச் செந்துவர் வாய்க்கிள்ளை – யடைகொடுத்த 87

புண்டரீகமாளிகைமேல் பூவைதணந்தமையும்
அண்டரெல்லா மாற்றலகன் றமையும் – கண்டருளிச் 88

செந்திருவை நாடுவான் தெய்வ வடிவகற்றி
யைந்துருவமாகி யவனியின்மேல் – வந்தருளி 89

ஆடல்பறவை யரசன கல்விசும்பு
திசையனைத்துந் தேடியணாள் – நீடும் 90

சுகந்தவன நோக்கித் துணையாய் செல்வி
யுகந்த வனமீதென்றுணர்ந்து – புகுந்தருள 91

மேதாவி அதிதிகளை ஆராதித்தல்

மேதாவிகண்டு விருந்தளிப்ப வெவ்வுயிர்க்கு
மாதாவினல்லான் மகிழ்ந்த கற்பின் – போதார் 92

முருகுவளை மொய்கழலை முன்றிதனிற்கண்டு
பெருகுவளை முன்கை பிடிப்பத் – திருமகளும் 93

காதலால்வந்த நம்பி கைபிடித்தா னென்றலறி
கோதிலா மாமுனியைக் கூவுதலும் – வேதியனும் 94

கண்புகையச்செய்யக் கதிர்புகைய கார் வெளிற
விண்புகைய வாய்துடிப்ப மெய்பதற – மண்புகைய 95

எம்பெருமான் ப்ரஸந்நனாதலும் முனிவர் துதித்துத் தம்மகளை மணஞ் செய்து கொடுத்தலும்

வந்தான் கரகநீர் வாங்கிச் சபிப்பதற்கு
முந்தாமுன் சங்காழி முன்காட்டச் – சிந்தை 96

மயங்கினான் அஞ்சினான் வாய்குழறிப் பார்மேல்
முயங்கினான் செங்கை முகிழ்த்தான் – தியங்கி 97

அழுதான் துளவின்மா லஞ்சலென வானோர்
விழுதாமரைத் தாளில் வீழ்ந்து – முழுது 98

மறியாமை செய்தேன் அதுபொறுத்தியென்ன
எறியாழியம்மா னிரங்கிச் – செறிதுழாய் 99

கோதைமணம் புணர்ந்த வக்கொண்டலுமப் புண்டரீக
மாதைமணம் புணர்ந்து வைகியபின் – நீதி 100

வாக்குவரமளித்து வீடருளி எம்பெருமான் சுகந்தகிரிமேல் அமர்தல்

யறந்திறம்பா நேமியானவ் வனஞ்சேர்கைக்கும்
பிறந்தார்கள் வீடுபெறற்கும் – சிறந்த மலர் 101

மாமாதின் பேரே வழங்குகைக்கும் கேட்டவர
மாமாதவனுக் கருளியபின் – பூமாதை 102

பாமாதுள்ளிட்டார் பணிந்துவிடை கொடுபோய்
தேமாமலரோன் செவிபடுப்ப – நாம 103

மறையாளனவ் வனத்து வந்தரசனீழல்
முறையாய வேள்வி முடித்து – பொறையார்ந்த 104

பாதாரவிந்தம் பணிந்தேத்தப் பாற்கடலில்
சீதாரவிந்தத் திருவினொடும் – பூதலத்தோர் 105

பேறுபெறவே பஞ்சபேரவடிவுகந்து
வீறுபெற மாமுனிக்கு வீடருளி – கூறரிய 106

ஞாலத்தெழுபத்து நான்கு சதுரயுகம்
நீலத்தடவரை போனின்றபிரான் – மேலைச் 107

திருக்காவிரிவளனும் திருநறையூர்ச் சிறப்பும்

சிகரக் குடகிரியில் சென்றிழிந்து கீழை
மகரக் கடல் வயிறு மட்டும் – அகலிடத்தில் 108

பாரங்கிழித்துப் பரவி மதகிடறி
யாரஞ்சுருட்டி யகிலுருட்டி – நார 109

நுரையெறிந்து வித்துருமக் கொத்து நுடங்கி
திரையெறிந்து முத்தஞ் சிதறி – கரையில் 110

கொழிக்குங் காவேரி குதித்தோடப் பாய்ந்து
சுழிக்குங் காவேரித் துறையான் – வெழிற்கருகி 111

யோங்கிப் பகலிருளை உண்டாக்கி மேகரும்பை
தாங்கிப் புயறடுத்த தண்டலையும் – தேங்கமலப் 112

பூமிசை யன்னம் பொருந்தி வலம்புரியும்
நேமியு மேந்திய நீள்கயமும் – காம 113

ருளமகிழ வெண்ணிலா வொண்கதிரைக் கன்னல்
வளமதனை ஈன்ற வயலும் – அளவின்றி 114

தன்னையே போலத் தழைப்பத் தரணிக்கோ
ரன்னையே போல வருள்செய்வான் – மன்னு 115

மருநறையூர் வீதி மணிமாடக் கோயில்
திருநறையூர் வாழ்வாசு தேவன் – இரணியனைப் 116

நம்பியின் சிறப்புரைத்தல்

பாரிலுரங் கிழித்த பன்னகத்தான் பன்னகத்தான்
வாரிநிகர் வண்ணத்தான் வண்ணத்தான் – ஆரிடத்தும் 117

தண்ணளியான் தண்ணளியான் தாழ்ந்தவசைக் கரத்தான்
கண்ணினழகார் முகத்தான் கார்முகத்தான் – விண்ணுலகில் 118

நல்லசுரர்க் கண்ணியான் நாறுதுழாய்க் கண்ணியான்
புல்லசுரர்க்குக் கொடியான் புட்கொடியான் – தொல்லிலங்கை 119

வஞ்சனை யங்கறுத்தான் வாய்ந்த வடிவங்கறுத்தான்
கஞ்சனை முன்சிவந்தான் கண்சிவந்தான் – துஞ்சுந் 120

திரையான் மலரிந்திரையான் கவிகை
வரையான் செழுந்துவரையான் – திரையார் 121

மங்கையான் வேதநியமங்கையான் சென்னியிலோர்
கங்கையான் சூடிய காற்கங்கையான் – பங்கயக்கை 122

ஆரணன் கேசவன் ஆழியான் அச்சுதன்
காரண னெம்பெருமான் காகுத்தன் – நாரணன் 123

யாதவன் கண்ண னிருடிகேசன் முகுந்தன்
மாதவன் கோவிந்தன் வைகுந்தன் – சீதரன் 124

மாயன் அனந்தன் மதுசூதனன் திருமால்
ஆயன் முராரி அருளாளன் – தூயகழல் 125

தேவாதிதேவன் திருநாயகத்தேவன்
றவாவிடர் கெடுத்த தம்பிரான் – ஓவாப் 126

படந்திகழு மாடரவப் பாய்க்கிடந்து மேலா
மிடந்திகழ் வைகுந்தத்திருந்து – நடந்து 127

பொறையூ ரடிக்கமலம் பூத்தோயவந்து
நறையூரி னின்றருளும் நம்பி – மறையூரு 128

நம்பி திருவிழாக் கோலங்கொண்டு மண்டபத்து அமர்தலும் வானவராதியோர் வந்து பணிதலும்

மாயிரம் பேழ்வாய் அனந்தன் பணாடவிமேல்
மாயிரு ஞாலம் மகிழ்ந்திறைஞ்ச – சேயிருந்தார் 129

அண்டர்குழாமும் அருந்தவரீட்டமும்
தொண்டர் குழாமுந் தொழுதேத்தப் – பண்டைத் 130

திருவாய்மொழியும் திருமொழியும் வேதாத்
துருவாய் மொழியுந் தழைப்ப – வருவாத 131

திங்களு நாளுந் திருவிழா நின்றோங்க
மங்கல வெண்சங்கம் வாய்பிளிற – வங்கமர்ந்து 132

நன்பஞ்சேர் நாடகக்கானம்பிக்கு நாயகிதன்
இன்பஞ்சேர் நாளிலினி தொருநாள்- அன்பமர்ந்து 133

தன்னிசையாற் புள்வேந்தன் சாமவேதம்பாடும்
இன்னிசையால் பள்ளியெழுந்தருளி – மன்னி 134

சிலம்பு திரைமோது திருமணி முத்தாற்றி
னலம்பு திருமஞ்சனமாடி – நலம்பரவு 135

சேலைகளைந்தணிந்து தெய்வ பசுந்துளப
மாலை புதியவகைசூடிக் – கோல 136

துயங்கு திருவாராதனைக் கொண்டபின்னர்
இயங்கு கடற்சங்கமிசைப்பப் – பெயர்ந்ததோர் 137

திருந்து மணிமண்டபத்துச் சிங்கஞ்சுமந்த
வருந்தவிசினேறியருளி – பொருந்தியநூல் 138

வேதமும்வேதாந்தமெய்த்த திருவாய்மொழியு
நாதமுங் கேட்டு நயந்துருகி – யோது 139

மருவை வடவரை அம்பொற்குவட்டிற்
றருணமவுலிதயங்க – திருநாம 140

மிட்டவதனத்தெழுதிய கத்தூரி
வட்டமதியின் மறுவேய்ப்பக் – கிட்டரிய 141

தேங்குழைக்கீழ்க் கற்பகத்தில் செம்பாம்பு சூழ்ந்ததென
பூங்குழைக்கீழ்வாகுபுரிதயங்க – வாங்கிற் 142

பதிக்குங் கவுத்துவமும் மார்பும் பருதி
உதிக்குமரகதக்குன்றொப்ப – குதித்தொருநாட் 143

கால்வீழ்ந்தகங்கை விலங்கிக்கடிமார்பின்
மேல்வீழ்ந்ததென்ன முந்நூல்விட்டிலங்க – சூல்வீங்கு 144

கொண்டலின்கீழ்தோன்று குடதிசையில்செக்கரென
விண்டிலங்கு பொன்னாடை மெய்யசைய – தொண்டரெல்லாம் 145

பற்றிக்கழல வடபாதாரவிந்தத்தின்
வெற்றிக்கழலின் வெயிலெறிப்பட – மற்றுந்தான் 146

வேண்டும்பலகலனுமேகவடிவிற்கேற்ப
பூண்டுகளபம்புயத்தணிந்து – நீண்டகடற் 147

பெண்ணாடியதன் பெரியதிருவடியைக்
கண்ணாடிமண்டிலத்தில் கண்சாத்தி – வண்ணத் 148

திருமருங்குக் கேற்பதொரு சிற்றுடைவாள்வீக்கி
யிருமருங்கும் ஐம்படையுமேந்தித் – திருமறுகில் 149

போதரலுநாற்கடல்சூழ் பூதலத்தும் வானத்தும்
மாதரரம்பையர்கள் வந்தீண்டிப் – பாதம் 150

தொழுவார்வளைகலைநாண் சோர்வார் மயலா
யழுவார்முலை பசலையாவார் – குழுவாகி 151

தலைவி தனது குறையுரைத்தல்

யம்மாதர் நிற்பயருவினையேன் கைதொழுதேன்
விம்மாவெதும்பாமெலிவானேன் – எம்மானுக் 152

கென்னெஞ்சுமென்கலையுமென்னாணுஞ் சங்குமவன்
தன்னெஞ்சறியத்தனிதோற்றேன் – பின்னுமொரு 153

விண்ணப்பமுண்டென்று மெய்ந்நடுங்கிக் கைகூப்பி
வண்ணத்துகிலொதுக்கி வாய்புதைத்துன் – கண்ணுதலாம் 154

வீரன்சிலையிறுத்தவேந்தே வினைவிளைக்கு
மாரன் சிலையிறுக்க வாராயோ – பாரமலை 155

யன்றெரித்தகையால் அழல்வீசியதென்றல்
குன்றெடுத்தபோது குறையாமோ – நின்றெரிக்கும் 156

செய்யகதிர்மறைத்த சீராழியால் மதியின்
வெய்யகதிர்மறைக்க வேண்டாவோ – கையசைக்கு 157

முன்னநீவாயடங்கு முந்நீரையென்பொருட்டால்
இன்னநீவாயடக்கிலேலாதோ – பன்னகத்தின் 158

பூமரமேழுந்துளைத்த போர்வாளிபுன்குயில்வாழ்
மாமரமொன்றுந்துளைக்கமாட்டாதோ – சேமலைந்து 159

மாவாய்பிளந்த மரகதமே வம்புரைப்பார்
நாவாய்பிளந்தால் நவையாமோ – பூவாய்த்த 160

தூயகுருந்தொசித்த தோளாய் செவிவெதுப்பு
மாயர்குழலொசித்தால் ஆகாதோ – மாயமாங் 161

காதிச்சுழல்காற்றைக்காய்ந்த நீவாடையா
வாதிச்சுழல்காற்றை மாற்றாயோ – மோதிவரு 162

மண்ணாறுநீங்கவழிகண்டநீயெனது
கண்ணாறுநீங்கவழிகாட்டாயோ – தண்ணார்ந்த 163

தாதுதிரும்பைந்துழாய் தாராயேல் கண்ணனென
வோதுதிருநாம மாசுண்ணாதோ – வீதிருக்க 164

நீநெடுமாலானநிலை நின்சேவடிதொழுது
நாணெடுமாலாகவோ நம்பியே – மாநிலத்து 165

பாவையர்கைச்சங்கம் பறிப்பதற்கு நின்சங்கம்
தீவகமோ நேமித்திருமாலே – மேவத் 166

திருக்கடைக்கண் சாத்தாய் திருவாய்மலராய்
யருட்கடலே என்னுமளவின் – மருக்கமலை 167

தலைவி தனது மையலுரைத்தல்

நாதன்சிறிதேநகைகோட்டி வெண்கோட்டு
மாதங்கமீதே மறைதலால் – சீதரன்தனா 168

வையம்புதைக்குமலர்கருதி மாரவேள்
எய்யம்புதைக்குமிலக்கானேன் – செய்யநிறப் 169

பீதகவாடைக்கும் பெரியதிருவரை
பாதகவாடைக்கும் பரிவானேன் – ஆதலால் 170

அந்திக்கமலனணையுங் கொலென்றிருந்தேன்
உந்திக்கமலத்துளமானேன் – கொந்துற்ற 171

கொய்துழாய்மார்பகலம்கூடுங் கொலோவெனவே
கைதுழாய்மண்சுழித்துக் கைசோர்ந்தேன் – எய்தி 172

யயனாலுங்காணவரியான்கரிய
புயனாலுங்காணாமல் பூண்டேன் – வியமாரன் 173

தாதைதிருப்பவளந்தான் வேட்டிளந்தென்றல்
ஊதைதிருப்பவளமொல்கினேன் – மாதுவரை 174

ஆயன்பவனிதொழுதன்றுமுதல் இன்றளவும்
தூயநயனந் துயினீங்கி – யாயொறுக்க 175

பந்துகழன்மறந்து பாவைகிளிதுறந்து
சந்துபனிநீர் தனத்தகற்றி – வெந்துயரால் 176

போதக்கழலணிந்து பூவிழிந்து நீரிழிந்து
காதற்சிறையிருத்தல் கண்டாயே – மாதுளபத் 177

தலைவி தூது செல்ல மேகத்திற்குத் துணிவு கூறல்

தாரானை வேட்கையெல்லாந் தந்தானை மும்மதமும்
வாரானை யன்றழைக்க வந்தானை – காரானை 178

மெய்யானை யன்பருக்குமெய்த்தானைகண்கைகால்
செய்யானை வேலையணைசெய்தானை – வையமெல்லாம் 179

பெற்றானைக்காணப் பெறாதானைக் கன்மழையில்
கற்றானைக்காத்த தொருகல்லானை – யற்றார்க்கு 180

வாய்ந்தானை செம்பவளவாயானை மாமடியப்
பாய்ந்தானை ஆடரவப்பாயானை – பூந்துவரை 181

மாமாலைக் கண்டந்திமாலைவருமுன்னமே
தேமாலைவாங்க நீசெல்லுங்கால் – பூமாயன் 182

முன்னந்தடுத்த முளரித்திருக்கரத்தால்
இன்னந்தடுக்குமென்றெண்ணாதே – நின்னுடைய 183

தீமுழக்கின் மிக்கதெனச் செங்கண்மால் கைச்சங்கின்
வாய்முழக்கங்கேட்டு மயங்காதே – நீமருவும் 184

வானச்சிலையின் வனப்புளதென்றெம்பெருமான்
கூனற்சிலைகண்டுகூசாதே – மேனிலத்து 185

மின்சோதியெல்லாம் விழுங்குமென்று நாந்தகத்தின்
நன்சோதிகண்டு மிகநாணாதே – நின்சோதி 186

மையழகினீலமணியழகிலெம்மான்றன்
மெய்யழகு நன்றென்றுவெள்காதே – துய்யமணி 187

தலைவி தன்செய்தி கூற உபாயமுரைத்தல்

யாரக் கபாட மணிக்கோயில் வாசலெல்லா
சேரக் கடந்து திருமுன்போய் – தூரத்தில் 188

நின்றுவணங்கி நெடிதேத்தி வாய்புதைத்து
சென்று பெருமான்திருச் செவியில் – துன்றுகடல் 189

தையற்கரசே யுன்னார்வேட்டொருபேதை
மையற்கரைசேருமாறறியாள் – மெய்யுருகி 190

கொம்பனையாளோர் விரகங்கொண்டாளதுதன்னை
யெம்பெருமான் கேட்டருளாயேதென்னில் – அம்பரமும் 191

மட்புலனுமுண்டுமிழ்ந்த மாயோனுருவமல்லால்
கட்புலனும் வேறுருவும் காணற்க – புட்புளத்து 192

மூர்த்திபுகழேமுகப்பதல்லான் மற்றொருவர்
கீர்த்திசெவிமடுத்துக் கேளற்க – நீர்த்தரங்கப் 193

பூவெடுத்த வெண்கோட்டுப்புண்ணியனையல்லாதென்
நாவெடுத்துவேறு நவிலற்க – கோவெடுத்து 194

கங்கையுலவும்கழலினாற் கல்லாதென்
செங்கைத்தலைமிசை போய்ச்சேரற்க – பங்கயத்தாள் 195

தாங்குந் திருத்துழாய்தாம மணமல்லாதென்
மூக்கும் பிறிதுமணமோவற்க – மாக்கடல்போல் 196

அஞ்சனவண்ணனடிக்கமலமல்லாதென்
நெஞ்சமுமொன்றை நினையற்க – செஞ்சுணங்கோ 197

டிங்கெழுந்த கொங்கையெழுபிறப்பு மெம்பெருமான்
கொங்கணைந்த தோளல்லால் கூடற்க – மங்கைநல்லீர் 198

என்று வருந்தியிருந்தாளவளுக்குன்
மன்றல்கமழ்தார் வழங்கென்று – நின்றிரந்து 199

மாலைபெற்று வாவென்றல்

பண்டுளவத்தாமரையாள் பற்றுந்திருமார்பின்
வண்டுளவத்தார் வாங்கிவா. 200

ஸ்ரீ அழகிய மணவாளர் அடியிணை வாழ்க
மேகவிடுதூது முற்றிற்று

—————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளைப்பெருமாள் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வஞ்சுள வல்லி ஸமேத ஸ்ரீ திரு நறையூர் நம்பி திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading