ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -29. முதற் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

மே வரு ஞானானந்த வெள்ளம் ஆய், விதித்தோன் ஆதி
மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வன் ஆகி,
யாவரும் யாவும் ஆகி, இறைஞ்சுவார் இறைஞ்ச, பற்பல்
தேவரும் ஆகி, நின்ற செங்கண் மால் எங்கள் கோவே.-கடவுள் வாழ்த்து

மேவு அரு – அடைதற்கு அருமையான, ஞானம்
ஆனந்தம் வெள்ளம் ஆய் – ஞானம் ஆநந்தம் என்னும் இவற்றின் மிகுதிமயமாய்,
விதித்தோன்ஆதி மூவர்உம் ஆகி – படைத்தற்றொழிற் கடவுளான பிரமன்
முதலியதிரிமூர்த்திகளுந்தானாய், அந்த மூவர்க்குள் முதல்வன் ஆகி –
அத்திரிமூர்த்திகளுள்ளுந் தலைவனாய், யாவர்உம் யாஉம் ஆகி –
எல்லாவுயர்திணைப் பொருள்களும் எல்லா வஃறிணைப் பொருள்களுமாய்,
இறைஞ்சுவார் இறைஞ்ச பல் பல் தேவர்உம் ஆகி – (தந்தம்மை)
வணங்குதற்குரியவர்கள் வணங்கும்படி (அந்தந்த மதத்துக்குரிய) பலபல
தேவர்களின் வடிவமுமாய், நின்ற – (என்றும் அழியாது) நின்ற, செம் கண் மால் –
சிவந்த திருக்கண்களையுடைய திருமால், எங்கள் கோ – எங்களுக்குத்
தலைவனாவன்; (என்றவாறு.)

வீட்டுமபருவம் தொடங்கப்போவதால், கடவுள்வாழ்த்து முதலிற் கூறுகின்றார்.
ஞானவெள்ளமாய் என்றது – எல்லாவற்றையும் எப்பொழுதும் ஐயந்திரிபற அறியும்
அறிவின்மிகுதியையுடையவனாயென்றபடி. ஆனந்த வெள்ளமாய் என்றது.
எல்லாவின்பங்களினும் மேம்பட்ட நிரதிசயப்பேரின்பத்தையே எப்பொழுதும்
உடையவனாயென்றபடி. மனமொழிமெய்களுக்கெட்டாத பேரறிவு பேரின்பங்கள்,
இங்கு ‘மேவருஞானானந்தவெள்ளம்’ எனப்பட்டன. விதித்தோனாதிமூவருமாகி
என்றது, பிரமருத்திரர்க்கு அந்தராத்மாவாய் நின்று அவர்களைக் கொண்டு
படைத்தல் அழித்தல் தொழில்களை நிகழ்த்தித் திருமால் தானான நிலையில் நின்று
காத்தற்றொழிலைப் புரிந்தருளுதலால்; “ஆக்குமாறயனா முதலாக்கிய வுலகங்,
காக்குமாறு செங்கண்ணிறை கருணையங் கடலாம், வீக்குமாறரனாமவை வீந்தநாள்
மீளப், பூக்குமாமுத லெவனவன்பொன்னடிபோற்றி” என இந்நூலின்முதற் கடவுள்
வாழ்த்திலுங் கூறினார்: “நான்முகனை நாராயணன் படைத்தானான்முகனுந்,
தான்முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான்” என்ற சித்தாந்தத்தின்படி
திரிமூர்த்திகளுள்ளும் மற்றையிரு மூர்த்திகளுக்குங் காரணமாகிய மூர்த்தி திருமா
லாதலால், ‘அந்த மூவர்க்குண்முதல்வனாகி’ என்றார்: “முதலாவார் மூவரே
யம்மூவருள்ளும், முதலாவான் மூரிநீர்வண்ணன்” என்றார் பொய்கையாழ்

வாரும், ‘மூவர்க்குமுதல்வனாகி’ என்றபாடத்துக்கு – திருப்பாற்
கடலிலெழுந்தருளியுள்ள திருமாலின் வியூகமூர்த்திகளாகிய வாசுதேவன்
சங்கர்ஷணன் பிரத்யும்நன் அநிருத்தன் என்ற நால்வருள் பிரதான மூர்த்தியான
வாசுதேவன் பிரமவிஷ்னுருத்ரரூபிகளாய்ப் படைத்தல் காத்தல் அழித்தல்
தொழில்களைச் செய்யும் மற்றை மூவர்க்குங் காரண னாதலால், அந்நிலையைக்கருதி
அங்ஙனங் கூறிய தென்க; “மூவரா -யவர்களுக்கு முதல்வனாகிய மூர்த்தி” என்றார்
கீழ்க் கிருட்டிணன் தூதுசருக்கத்தும். “ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத்” என்றபடி சகல
சேதநாசேதங்களின் உள்ளும் புறம்பும் எம்பெருமான் வாசியறக்  கலந்து நிற்றலின்,
‘யாவரும்யாவுமாகி’ என்றது; “யாவையும் யவருந் தானாய்”, “அண்டத் தகத்தான்
புறத்துள்ளான்” என்றார் திருவாய்மொழியிலும் “தமருகந்த தெவ்வுருவ மவ்வுரு
வந்தானே, தமருகந்த தெப்பேர்மற் றப்பேர்-தமருகந்த, தெவ்வண்ணஞ் சிந்தித்
திமையா திருப்பரே, யவ்வண்ண மாழியா னாம்,” “நும்மின்கவிகொண்டு நும்நு
மிட்டாதெய்வ மேத்தினாற், செம்மின் சுடர்முடி யென்றிரு மாலுக்குச் சேருமே”
எனஆழ்வார்களருளிச்செய்தபடி உலகத்தில் அந்தந்த மதத்தவர் கொண்டாடுந்
தெய்வமெல்லாம் ‘எம்பெருமானது சொரூபமே யாதலால’் ‘இறைஞ்சுவாரிறைஞ்சப்
பற்ப றேவருமாகி’ என்றும், கடவுள் எப்பொழுதும் அழியாது நித்தியனாயிருத்தலால்
‘நின்ற’ என்றுங் கூறினார். ‘எங்கள்கோவே’ என்றார், தம்போலியரையும்
உளப்படுத்த;தம் கோத்திரத்தவரை உளப்படுத்த எனினுமாம். திருமாலின்
திருவவதாரவிசேஷமாகிய கண்ணபிரான் இங்ஙனம் தானிருக்கிற
உண்மைத்தன்மையை அருச்சுனனுக்குக் காட்டியருளுகிற செய்தி இச்சருக்கத்திற்
கூறப்படுதலால், அதற்கேற்ப இங்ஙனங்கடவுள்வாழ்த்துக் கூறினார்: மேல்
நிகழ்கிறசரித்திரத்தின் குறிப்பைச் செல்லினாலாவது பொருளினாலாவது
கருத்தினாலாவது ஒருவாறுதோன்றக் கடவுள்வாழ்த்துக் கூறுதலும் மகாகவிகளது
மரபாம்.

     பல+பல+தேவர்=பற்பறேவர் ; பலவென்பது – தன்முன் தான்வரவும்
வேறுவரவும் அகரங்கெட லகரம் விகாரப்பட்டதன்றி, வருமொழித் தகரவொற்றுத்
திரிய நிலைமொழியீற்றுலகரங் கெட்ட தென்க: [நன் -உயிர் – 20 : மெய்.34,26.]

     இதுமுதற் பதினேழுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகி வந்த அறுசீர்க்கழிநெடிலடி
யாசிரியவிருத்தங்கள்.
     

மாயை என்று ஒருத்திதன்பால் மனம்எனும் மைந்தன் தோன்றி,
தூய நல் அறிவன் தன்னைத் தோற்றம் இன்றாக்கி வைத்தான்;
தாயொடு, தந்தை, மக்கள், தாரம், என்று இவர்பால் வைத்த
நேயமும் அவன்தனாலே நிகழ்ந்தது ஓர் நினைவு கண்டாய்.2.-இதுமுதல் ஆறுபாடல்கள்-கண்ணன் அருச்சுனனுக்குத் தத்துவங்களை
உபதேசித்தமையைக் கூறும்.

மாயை என்ற ஒருத்திதன்பால் – மாயையென்ற ஒருத்தி இடத்தில்,
மனம்எனும் மைந்தன் தோன்றி – மனமென்னும் புத்திரன் உண்டாகி, தூயநல்
அறிவன்தன்னை – பரிசுத்தமான நல்ல ஞானமென்கிறவனை, தோற்றம் இன்று
ஆக்கி வைத்தான் – வெளிப்படாத படி செய்திட்டான்; தாயொடு தந்தை மக்கள்
தாரம் என்ற இவர்பால் வைத்த நேயம்உம் – தாய் தந்தை பிள்ளைகள் மனைவி
என்கிற இவர்களிடத்து வைத்த அன்பும், அவன்  தனால்ஏ நிகழ்ந்தது ஓர் நினைவு
கண்டாய் – அந்த மனமென்பவனால் உண்டானதொரு எண்ண மென்றே அறிவாய்;
(எ – று.)-இவை ஆறுபாடல்களும், பகவத்கீதையின் சுருக்கமான சாராமிசம்.

     மாயையாவது-உள்ளதை இல்லாததாகவும், இல்லாததை உள்ளதாகவும்,
ஒன்றைமற்றொன்றாகவுங்காட்டும் எம்பெருமானது ஒருசக்தி. மனம் அந்தமாயைக்கு
வசப்பட்டபோது, பொருள்களின் நிலையை உள்ளபடி அறியுந் தத்துவஞானம்
தோன்றுவதில்லை; ஆகவே, நிலையுள்ளபொருள்களை நிலையில்லாதனவென்றும்,
நிலையில்லாத பொருள்களை நிலையுள்ளனவென்றும் மாறுபட அறியும்
விபரீதஞானம் தலையெடுக்கும்; அதனாலேயே, நித்தியமான ஆத்மாவுக்கு யாதொரு
சம்பந்தமும் படாமல் அநித்தியமான தேகத்தையே பற்றிய தாய்முதலியோரிடத்துச்
சுற்றத்தவரென்ற பொய்யபிமானம் உண்டாகி நிலைநிற்கின்றது என்றதாம்.
ஒருத்திதன்பால், பால் – ஏழனுருபு. என்ற – ஈறு தொக்கது; என்றுஎனஎடுத்து
எண்ணிடைச்சொல்லுமாம். கண்டாய் என்பது — காண்பாயெனப் பொருள்படுதல்,
காலவழுவமைதி; இனி இதனை இடைச்சொல் தன்மைப்பட்டுத் தேற்றப்
பொருள்தருவ தென்றுங் கொள்ளலாம். வடமொழியில் “மாயா” என்பது
பெண்பாற்சொல்லாதலால், அதனை இங்குப் பெண்ணாகவும், மற்றை மனமும்
அறிவும் பெண்பாற்சொற்களல்ல வாதலின், அவற்றை ஆணாகவும்
உருவகப்படுத்தினார்; உருவகவணி

குயின்ற ஐம் பொறிவாய் நின்று, குறித்த ஐம் பொருளும் தானே
அயின்று, முக் குணங்களோடும், அறு வகைப் படைகளோடும்,
பயின்று, அரசாளும் அந்த மனம் எனும் பகைவன், ஆங்குத்
துயின்றபோது, ஒளித்து நின்ற தோன்றலும் தோன்றும் கண்டாய்!’

குயின்ற – (உடம்பிற்) பொருந்திய, ஐம்  பொறி வாய்- (மெய்
வாய் கண்மூக்குச் செவி  யென்னும்) பஞ்ச இந்திரியங்களி னிடமாக, நின்று –
இருந்து, குறித்த- (முறையே அப்பஞ்சேந்திரியங்களுக்கு விஷயமாக) அமைக்கப்பட்ட,
ஐம் பொருள்உம் – (ஊறு சுவை ஒளி நாற்றம் ஓசை என்னும்) ஐந்துபுலன்களையும்,
தானே அயின்று – தானே அனுபவித்து, முக்குணங்களோடுஉம்–(சத்துவம் ரஜஸ்
தமஸ் என்னும்) மூவகைக்குணங்களுடனும், அறுவகை படைகளோடுஉம்- (காமம்
கோபம் லோபம் மோகம் மதம்மாற்சரியம் என்னும்) ஆறுவகைச் சேனைகளோடும்,
பயின்று – கூடிப்பழகி, அரசு ஆளும் – அரசாட்சிசெய்கிற, அந்த மனம் எனும்
பகைவன்- கீழ்க்கூறின மனமென்கிற சத்துருவானவன், துயின்றபோது – தூங்கிய
பொழுது, ஆங்கு ஒளித்து நின்ற தோன்றல்உம் – அவனால் தோற்றமிலனாய் நின்ற
(தூயநல்லறிவனென்கிற) புருஷனும், தோன்றும் – வெளிப்பட்டுவிளங்குவான்;
(எ – று.)- ‘கண்டாய்’ என்பதற்குக் கீழ்உரைத்தவாறு உரைக்க.

பஞ்சேந்திரியங்களுக்கு வசப்பட்டு அவற்றின் புலன்களிலே
முக்குணங்களோடும் மற்றும்பல தீச்சிந்தைகளோடும் மனத்தை அதுபோகிறவழிப்படி
யதேச்சையாக விட்டிடாமல் அடக்கிவைத்தால் தத்துவஞானம் உண்டா மென்பது
கருத்து. அரிஷட்வர்க்க மென்றும் உட்பகை யென்றுங் கூறப்படுகிற காமம் முதலிய
ஆறினையும் யானை தேர் குதிரை வில் வாள் வேல் என்னும் அறுவகைப்படைகளாக
உருவகப்படுத்தினார்; மனமென்னும் பகைவன்  விவேகமாகிய அரசனைப்
போர்செய்து அடக்குதற்கு இவை துணை நிற்றாலென்க. அரசாளுதல் –
கருதியபடியெல்லாஞ்செல்லுதல். அந்த மனம் – மாயையினிடத்துத் தோன்றி
அறிவைத் தோற்றமின்றாக்கிவைத்த மன மென்றவாறு. தோன்றல் –
விளங்குந்தன்மையனான புருஷன்; இதில் அல் – கருத்தாப்பொருள்விகுதி. இது –
ஆண்பாற்சிறப்புப்பெயர். முக்குணங்களை மந்திரிகளாகக்கொள்க. மனத்தின்
தூண்டுதலாலே ஐம்பொறிகள் ஐம்புலன்களின்வழியே செல்லுதலால்,
‘பொறிவாய்நின்று பொருளாயின்று’ என்றார்; “உண்டற்குரிய வல்லாப்பொருளை,
உண்டன போலக் கூறலு மரபே” என்ற வழுவமைதியால், ‘அயின்று’ எனப்பட்டது.
போது – மரூஉ. (3)

அந்த நல் அறிவன்தன்னை அறிந்தவர் அறிஞர் ஆவார்;
தந்தையால் வகுக்கப்பட்ட சராசரப் பொருள்கள்தோறும்
வந்து, அவன், தீம்பால் நெய்போல் உயிர்க்கு உயிர்
ஆகி, வாழும்
பந்தமது உணர்ந்து, நேரே பார்க்குங்கால், பகை யார்?
நண்பு ஆர்?

அந்த நல் அறிவன்தன்னை – அந்தச் சுத்தஞான மென்கிற புருஷனை
அறிந்தவர் – (உள்ளபடி) உணர்ந்தவரே, அறிஞர் ஆவார் – புத்திமான்களாவார்கள்;
தந்தையால் வகுக்கப்பட்ட – (எல்லாப் பிரபஞ்சத்துக்கும்) பரமபிதாவான கடவுளால்
அமைக்கப்பட்ட, சர அசரம் பொருள்கள்தோறுஉம் – சஞ்சரிப்பனவும்
சஞ்சரியாதனவுமாகிய எல்லாப் பொருள்களிலும், ஆன் வந்த தீம்பால் நெய்போல் –
பசுவினிடமாக வந்த இனிய பாலினிடத்து நெய்போல, உயிர்க்கு உயிர் ஆகி வாழும்
– (சகல)  சிவாத்துமாக்களினுள்ளும் அந்தராத்துமாவாய் (மறைந்து அப்பரமான்மா)
வாழ்கின்ற, பந்தம்அது – சம்பந்தத்தை, நேரே உணர்ந்து – வழுவற அறிந்து,
பார்க்கும் கால் – ஆலோசிக்குங்காலத்து, பகை யார் நண்பு ஆர் – (ஒருவனுக்குப்)
பகைவர் எவர்? நண்பர் எவர்? [எவருமில்லை யென்றபடி]; (எ – று.)

     எல்லாச்சீவான்மாக்களிடத்தும் பரமான்மா ஒருதன்மையாகவே
பொருந்தியிருக்கையில் அவற்றில் சிலவற்றைப் பகையாகவும் சிலவற்றை நண்பாகவும்
கருதுவது மாயாகாரியமேயன்றி வேறன்று என்பதாம். பால் நெய் – விட்டுப் பிரியாது
உள்ளுறைதற்கு உவமம். சராசரம் – உம்மைத்தொகை தீர்க்கசந்தி: எழு
வகைப்பிறப்பினுள், தேவர் மக்கள் விலங்கு பறவை ஊர்வன நீர்வாழ்வன என்ற
ஆறும் – சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம், தந்தையால்- எல்லாப்பிராணிகளுக்கும்
பிதாமகனான படைத்தற் கடவுளாகிய பிரமதேவனாலென்றுமாம், பகை, நண்பு –
அவற்றையுடையார்க்குப் பண்பாகுபெயர். யார் என்றதில், வினா – எதிர்மறை
குறித்தது. ஆர்-யார் என்றதன் மரூஉ.

உம்பரும், முனிவர்தாமும், யாவரும், உணரா ஒன்றை
இம்பர், இன்று, உனக்கு நானே இசைவுற உணர்த்தாநின்றேன்;
ஐம் பெரும் பூதத்தானும் அமைந்தன உடலம், யார்க்கும்;
நம்பனும் ஒருவன்; உள்ளே ஞானியாய், நடத்துகின்றான்.

உம்பர்உம் – தேவர்களும், முனிவர்உம் – முனிவர்களும், யாவர்உம்-
மற்றும் எல்லோரும், உணரா – அறியாத, ஒன்றை-ஒரு தத்துவப்பொருளை, இம்பர்-
இவ்விடத்து, இன்று – இப்பொழுது, உனக்கு-, நானே-, இசைவு உற –
பொருந்தும்படி, உணர்த்தாநின்றேன்- அறிவிக்கிறேன்; (கேள்): யார்க்குஉம்-
எல்லாப்பிராணிகளுக்கும், உடலம்-சரீரங்கள், ஐ பெருபூதத்தான்உம் அமைத்தன-
ஐந்து பெரிய பூதங்களாலுஞ் செய்யப்பட்டன; உள்ளே- அவற்றினுள்ளே,   ஞானி
ஆய் -ஞானசொரூபியாய், நம்பன்உம் ஒருவன் – ஒப்பற்ற கடவுளொருவன்,
நடத்துகின்றான் – (இருந்து எல்லாத் தொழில்களையும் அவற்றைக்கொண்டு)
செய்விக்கிறான்; (எ – று.)

     சடைப்பூதங்களினுள்ளே மனிதன் புகுந்து அவற்றைக்கொண்டு தொழில்
நடத்துதல்போல, பகவான் சேதநாசேதநங்களினுள்ளேயிருந்து தொழில்
நடத்துகின்றன னென்க. ஐம்பெரும் பூதம் – பஞ்ச மகாபூதம்; நிலம் நீர் தீ காற்று
வானம் என்பன; பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாசம்  எனப்படும். இப்பஞ்ச
பூதங்களைப் பஞ்சீகரணம் பண்ணுதலாலேயே பிரபஞ்சப்பொருள்கள்
உண்டாகின்றன; பஞ்சீகரணம் பண்ணுதலாவது – பிருதிவியில் ஒருபாதி பிருதிவியும்
மற்றைப்பாதி அப்பு தேயு வாயு ஆகாசங்களும், இவ்வாறே, மற்றைப்பாதி அதுவும்
பாதிமற்றைநான்குமாகக் கலக்கச் செய்தல். ‘யார்க்கும்’ எனச்
சிறப்புடையுயர்திணைமேல்வைத்துக் கூறினாராயினும், அஃறிணைப் பொருள்களையும்
உபலக்ஷணத்தாற் கொள்க. நம்பன் – (யாவராலும்) நம்பிச் சரணமடையப்படுபவன்
எனக் காரணப்பெயர்; நம்பு-பகுதி, அன் – விகுதி: இனி, நம் என்பது பகுதியாக
நமக்கு இன்னானென்னும் பொருள்படுவதோர் உயர்ச்சிச்சொல்லென்றுங்
கொள்ளலாம். உணர்த்தாநின்றேன், ஆநின்று – நிகழ்கால விடைநிலை. தாம்-அசை.  

என்னை நீ புகலக் கேண்மோ! எங்கும் ஆய், யாவும் ஆகி,
மன்னிய பொருளும் யானே; மறைக்கு எலாம் முடிவும் யானே;
உன்னை யான் பிறிவது இல்லை; ஒரு முறை பிறந்து, மேல் நாள்-
நல் நிலா எறிக்கும் பூணாய்!-நரனும், நாரணனும் ஆனோம்.

நல் – அழகிய, நிலா- சந்திரகாந்தியோடொத்த காந்தியை. எறிக்கும் –
வீசுகின்ற, பூணாய் – ஆபரணங்களையுடைய அருச்சுனனே! என்னை-, புகல –
(இத்தன்மையனென்று யானே) சொல்ல, நீ-, கேண்மோ – கேட்பாயாக; எங்குஉம்
ஆய் – எல்லா விடங்களிலும் பொருந்தி, யாஉம் ஆகி – எல்லாப்பொருள்களுமாய்,
மன்னிய – அழியாதுநிலைபெற்ற, பொருள்உம்-பரம்பொருளும், யான்ஏ- நானே;
மறைக்கு எலாம் முடிவுஉம்-வேதங்களுக்கெல்லாம் முடிவான பொருளும், யானே-
உன்னை-, யான்-, பிறிவது இல்லை – (எப்பொழுதும்) விட்டுநீங்குவதில்லை;
மேல்நாள் – முற்காலத்தில், ஒருமுறை – ஒருதரம், பிறிந்து – நீங்கி, நரன்உம்
நாரணன்உம் ஆனோம் – நரநாராயணராய் அவதரித்தோம்; (எ – று,)

முன்னொருகாலத்தில் குருசிஷ்யகிரமத்தை உலகத்தில் அனைவர்க்கும்
விளக்கும்பொருட்டு நரனென்னும் சிஷ்யனும் நாராயணனென்னுங் குருவுமாகப்
பதரிகாச்சிரமத்தில் திருமால்தோன்றிச் சிஷ்யனுக்குக் குரு தத்துவப் பொருள்களை
உபதேசிப்பதாக வீற்றிருக்கின்றனர்; “நாராயணனாயுலகத்தறநூல், சிங்காமை
விரித்தவனெம்பெருமான்” என்பது பெரிய திருமொழி. அவர்கள் தாமே இங்கு
முறையே அருச்சுனனுங் கண்ணனுமாக அவதரித்தவர்; இங்கும் அருச்சுனனைச்
சிஷ்யனாக்கிக் கண்ணன் குருவாய் நின்று தத்துவம் விளக்கியருளுதல் காண்க;
இதுபற்றியே, அருச்சுனனுக்கு, நரனென்று ஒருபெயர். கேண்மோ, மோ –
முன்னிலையசை. நாரணன்- நாராயணன் என்பதன் விகாரம்; நார + அயந எனப்
பிரியும்; சிருஷ்டிப்பொருள்களுக் கெல்லாம் இருப்பிடமானவ னென்றும்,
பிரளயப்பெருங்கடலை இருப்பிடமாவுடையவ னென்றும், மற்றும் பலவாறும்
பொருளுரைப்பார். “செய்கின்ற கிறியெல்லாம் யானே யென்னும் செய்வானின்
றனகளும் யானே யென்னும், செய்துமுன் னிறந்தவும் யானே யென்னுஞ் செய்கைப்
பயனுண்பேனும் யானே யென்னும் செய்வார்களைச் செய்வேனும் யானே யென்னும்”
என்றும், “உற்றார்க ளெனக்கில்லை யாருமென்னும் உற்றார்க ளெனக்கிங்கெல்லாரு
மென்னும், உற்றார்களைச் செய்வேனும் யானே யென்னும் உற்றார்களை
யழிப்பேனும் யானேயென்னும்” என்றுந் திருவாய்மொழியிற் கூறியுள்ளவற்றின்
கருத்துக்களை இங்கே யுணர்க. கொல்பவனும் கொல்லப்படுபவனும்
கொலைத்தொழிலும் கொல்விப்பவனும் எல்லாம் நானே யாதலால், நீ உன்னைக்
கொல்பவனாகவும், சுற்றத்தவரைக் கொல்லப்படுபவராகவும் மாறுபாடாக நினைத்துப்
பந்து வதத்தைப் பற்றிச் சிறிதுஞ் சிந்திக்கவேண்டா என்று உபதேசித்துக்
கண்ணபிரான்  அருச்சுனனது மனத்தடுமாற்றத்தை யொழித்தருளுகிறார். ஏகாரங்கள்
பிரிநிலையோடு தேற்றம். மறைக்கெலாமுடிவு – வேதாந்த சித்தாந்தம். மறைமுடிவு
என்றது, வேதத்தின்பாகங்கள் இரண்டனுள் பகவானைப்பற்றிச் சொல்வதாய்ப்
பிரமகாண்டமெனப்படுகிற உபநிஷத்துக்களை. இரண்டாமடியிலுள்ள உம்மைகள்
இரண்டனுள், முன்னது – எதிரது தழுவியதும், பின்னது – இறந்ததுதழுவியதுமாம்.(6

பின் ஒரு பிறப்பின் யாமே இராம லக்குமப் பேர் பெற்றோம்;
இந் நெடும் பிறப்பில், நீயும் யானுமாய் ஈண்டு நின்றோம்;
நின்னிடை மயக்கும், இந்த நேயமும், ஒழிக!’ என்று,
தன் நிலை அவற்குக் காட்டி, தத்துவம் தெளிவித்தானே.

பின் ஒரு பிறப்பின் – பின்பு ஒரு அவதாரத்திலே. யாம்ஏ –
நாமிருவருமே, இராம லக்குமர் பேர் பெற்றோம் – ராமலஷ்மணரென்னும் பெயரை
யடைந்தோம்; இ நெடு பிறப்பில் – இந்தப் பெரிய அவதாரத்திலே, நீஉம் யான்உம்
ஆய் ஈண்டு நின்றோம் – அருச்சுனனாகிய நீயும் கிருஷ்ணனாகிய நானுமாய் இங்கு
நின்றோம்; (ஆதலால்), நின்னிடை – உன்னிடத்திலுள்ள, மயக்குஉம் –
திகைப்பையும்,இந்த நேயம்உம் – (உறவினரென்றும் நண்பினரென்றுங் கொண்ட)
இந்தஅபிமானத்தையும், ஓழிக – நீங்குவாயாக, என்று – என்று அருளிச்செய்து,
தன்நிலை அவற்கு காட்டி – தனது உண்மை நிலையான விசுவரூபத்தை
அவ்வருச்சுனனுக்குக் காண்பித்தலுஞ் செய்து, தத்துவம் தெளிவித்தான் –
உண்மையுணர்வை மனந்தெளியும்படி செய்தருளினான்;(எ-று,)

     தான் உபதேசித்த உண்மைப்பொருளை அருச்சுனனுக்குக் கட் புலனாக்கி
அவனுடைய திகைப்பைத் தீரவொழித்தற்குக் கண்ணன் தன்னிலையை அவற்குக்
காட்டியருளினான். ஒரு காலத்தில் தேவர்களெல்லோரும் இராவணன்முதலிய
இராக்கதர்களின் உபத்திரவம் பொறுக்க மாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச்
சரணமடைந்துவேண்ட, அவர் தசரதசக்கரவர்த்திதிருமகனாய்
ஸ்ரீராமனாக லட்சுமணபரத சத்துருக்கன ரென்னும் தம்பிமார்மூவருடனே
திருவவதரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளினார்.
இராமன் கண்ணனும், லஷ்மணன் அர்ச்சுனனு மாதலால், முதலடியில்
‘இராமலக்குமப்பேர்பெற்றோம்’ என்ற கிரமத்திற்குஏற்ப இரண்டாமடியில் ‘யானும்
நீயுமா யீண்டுநின்றோம்’ என முறைப்படிவைக்காதது – எதிர்நிரனிறைப்
பொருள்கோ
ளின்பாற்படும்; [நன்-பொது. 63]:  கீழ்க்கவியில் “நரனுநாரணணு
மானோம்” என்றதையும் இதனோடு சேர்க்க. லஷ்மணன் ஆதிசேஷனது
அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அம்சமுமாதல்போல, அர்ச்சுனனும்
இந்திரனது அவதாரமாதல் மாத்திரமேயன்றித் திருமாலினது அமிசமுமாவ னென
அறிக. இராமலக்குமர் – வடசொற்றிரிபு. ராமனென்பதற்கு- தன்திறத்தில் யாவரும்
மனங்களித்திருக்கப்பெற்றவ னென்பது பொருள்; சகலசற் குணங்களும்
பொருந்தினவனென்பது கருத்து. லஷ்மணனென்பதற்கு – (உத்தமபுருஷ)
லக்ஷணங்கள் பலவற்றையும் உடையவனென்றும், (பகவத்கைங்கரிய)
லஷ்மியோடுகூடியவனென்றும் பொருளாம். இராமலக்குமர்+பேர்=இராமலக்குமப்
பேர்;”சில விகாரமா முயர்திணை.” மயக்கு – மயங்கு என்னும் முதனிலைதிரிந்த
தொழிற்பெயர். மயக்காவது – பொருளல்லவற்றைப் பொருளென்று உணரும்
விபரீதஞானம்.  

தான் வணங்குநர், தன் கழல் வணங்குநர், தங்களைத்
தழீஇக் கொண்டு,
தேன் வணங்கு தார் மன்னவர் இருந்தபின், சென்று,
அவர் முகம் நோக்கி,
‘யான் வணங்கி, மா மாயனைத் தூதுவிட்டு, ‘எனது பார்
எனக்கு’ என்ன,
வான் வணங்கினும் வணங்கலா முடியினான், மறுத்து,
‘அமர் புரிக!’ என்றான்.8.-உபதேசத்தால் தெளிந்தஅருச்சுனன் ஸ்ரீகிருஷ்ணனைப் போற்றிச்
செருச்செய்யச் செல்லுதல்.

ஆங்கு – அப்பொழுது, அவன் – அவ்வருச்சுனன், தெளிந்து –
மயக்கந்தெளிந்து, தேறி – (நல்லுணர்வு) தேர்ந்து, ‘அறம் பொருள் இன்பம் முற்றி –
தருமஅர்த்தகாமமென்னும்  மூன்றுபுருஷார்த்தங்களையும் முடிய ஒழித்து,
பாங்கினால் – (பிரபத்தியாகிய பரம) உபாயத்தால், நின்னை எய்தும் –
உன்திருவடியையடைந்து உய்தலாகிய, பயன் – நல்லபிரயோசனத்தை, எனக்கு
உரைத்தாய் – அடியேனுக்கு அருளிச்செய்தாய்,’ என்று – என்று (கண்ணனை
நோக்கி உபசாரவார்த்தை) கூறி, பூ கடி கமலம் நாறும் பொன் அடிபோற்றி –
சிறந்த பரிமளமுடைய செந்தாமரைமலர் போலத்தோன்றுகின்ற அழகிய (கண்ணனது)
திருவடிகளை வணங்கி, யான் செய் தீங்கு எலாம் பொறுத்தி என்று  –   ‘நான்
செய்த குற்றங்களையெல்லாம் பொறுத்தருள்வாயாக’ என்று (அப ராதக்ஷாமணமுங்)
கூறி, செரு செயும் ஆறு பூண்டான்-போரைச் செய்யும்படி மேற்கொண்டான்;(எ -று,)

     “ஆயாவென் மைத்துனனே யாழித்தேர்ப் பாகாநான், பேயானுரைத்த
பெரும்பிழைகள் – மாயா, பொருபடைக்கை மாலே பொறுத்தருள்வாயென்று,
திருவடிக்கே வீழ்ந்தான் தெளிந்து” என்பது பாரதவெண்பா. ஆங்கு –
அவ்விடத்திலென்றுமாம்; என்றது, போர்க்களத்தில் தேர்த்தட்டை. கீதையில்
“ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ [எல்லாவுபாயங்களையும்
முற்றவிட்டு என்னையொருவனையே நீ அடைக்கலமாக அடைவாய்]” என்ற
பகவானது பிரதானமான வாக்கியத்தின் கருத்தை அனுசரித்து
‘அறம்பொருளின்பமுற்றிப் பாங்கினால் நின்னையெய்தும் பயனெனக்குரைத்தாய்’
என்பதற்குப் பொருள் கூறப்பட்டது; “பரனைநினைந் திம்மூன்றும், விட்டதே பேரின்பவீடு” என ஒளவையார் கூறியதையும் அறிக. அறம்பொருளின்பம் –
இம்மூன்றும்திரிவர்க்க மெனப்படும்:  இவற்றுள் அறமாவது-மனு முதலிய நூல்களில்
விதித்தனசெய்தலும், விலக்கியனஒழிதலுமாம்; (இன்னவை செய்யத்தக்கவை யென்றும்
இன்னவை செய்யத்தகாதவை யென்றும் நூல்களால் வரை) அறுக்கப்பட்டமைபற்றி,
அறமென்று பெயர். பொருளாவது-தருமவழியிற்சேர்க்கப்பட்ட பொன்மணி நெல்
முதலவாகும். இன்பமாவது – ஒருகாலத்து ஒருபொருளால் ஐம்புலனும்
அனுபவிக்குஞ் சிறப்புடையதான சிற்றின்பம். அறம் – இம்மைமறுமைவீடென்னும்
மூன்றையும், பொருள் – இம்மை மறுமை யென்னும் இரண்டையும், இன்பம் –
இம்மையொன்றையும் தருவதாதல், ‘அறம்பொருளின்பம்’ என்ற முறைமைக்குக்
காரணம். பொன் – ஆபரணத்துக்குக் கருவியாகுபெயர் எனினுமாம். தீங்கெலாம்-
“பலபேசி யதிபாதக மெனக்கருதி யான்மலைவு றேனினி” என்றவை

பூண்ட வெம் பரித் தேர்மீது, அப் பொய் இலா மெய்யினானும்,
பாண்டவர்தாமும் ஆகப் பகீரதி மைந்தன்தன்பால்
ஈண்டினான், எய்தி, ‘நீயே இவருடன் மலையின், மற்று உன்
காண்தகு போரின் வென்று களம் கொளத் தகுமோ?’ என்றான்.9.-பிறகுதேரின்மீதேறிக்கொண்டு கிருஷ்ணன்
பாண்டவருடன் வீடுமனைக் குறுகி, ‘நீ எதிர்ப்பின் எம்மால் வெல்ல
முடியுமோ? ‘எனல்.

(இங்ஙனம் அருச்சுனனது மயக்கத்தையொழித்து அவனைப்
போர்புரியஉடன்படுத்தினபின்பு), அ பொய் இலா மெய்யினான்உம் –
அசத்தியமில்லாதசொரூபத்தையுடைய அந்தக் கண்ணபிரானும்.-பாண்டவர் தாம்உம்
ஆக -பஞ்சபாண்டவர்கள் உடன்வர, பூண்ட வெம்பரி தேர் மீது – பூட்டிய
உக்கிரமானகுதிரைகளுயுடைய தேரின்மேலே, (சென்று), பகீரதி மைந்தன்தன்பால் –
கங்கைகுமரனான வீடுமனிடத்து, ஈண்டினான் எய்தி – நெருங்கிச்சேர்ந்து,
(அவனைநோக்கி), ‘நீஏ இவருடன் மலையின் – (யாவரினுஞ் சிறந்த) நீயே
இப்பாண்டவர்களுடன் எதிர்த்தால், காண் தகு உன்போரின்-(யாவரும் அதிசயித்துப்)
பார்க்கத்தக்க உனதுயுத்தத்தில், (இவர்கள்), வென்று – (உன்னைச்) சயித்து,
களம்கொள தகும் ஓ-போர்க்களத்தை ஆக்கிரமிக்க முடியுமோ? [முடியாதன்றோ],’
என்றான்-என்று வினவினான்; (எ – று.)

     பெரியோரைப்பணிந்து அவரனுமதியும் ஆசியும்பெற்றுப் போர் புரிதலே
வெற்றியை விளைக்கு மென்ற நூற்கொள்கை, இங்கு அறியத்தக்கது. பீஷ்மன் தான்
நினைத்தபொழுது உயிரைவிடுதல் முதலிய பெருவரங்களைப் பெற்றவனும்,
யாவராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியுமாதலால், அவனை வெல்லுதற்கு
அவனையே உபாயங் கேட்குமாறு, மாயவன் இங்ஙனஞ் சென்று வினாவினான்.
மெய்யினானும் பாண்டவர் தாமுமாக ஈண்டினான் என்றான்-பால்விரவிச் சிறப்பினால்
ஒருமுடிபுஏற்றது; பால்வழுவமைதி: [நன்.பொது.27.] இரண்டாமடியில் தாம், தன் –
அசைகள். பகீரதி – பாகீரதீஎன்ற வடசொல்லின்விகாரம். பகீரதசக்கரவர்த்தியாற்
பூலோகத்திற் கொணரப்பெற்றதுபற்றிக் கங்கைக்குப் பாகீரதியென்று பெயர்.
கங்காநதியின் பெண் தெய்வம் பிரமசாபத்தினால் மானுடமகளாய்த் தோன்றியபோது
அவ்வாறான சாபத்தினாலேயே சந்தனுவாகப்பிறந்த வருணதேவனுக்கு வீடுமன்
புத்திரனாகப் பிறந்தானாதலால், அவனை ‘பகீரதிமைந்தன்’ என்றார். ஈண்டினான் –
முற்றெச்சம். நீயே, ஏகாரம் – உயர்வுசிறப்பு. மற்று-அசை; வினைமாற்றுமாம்:
பின்புஎன்றுமாம். காண் – முதனிலைத் தொழிற்பெயர். காண்டகு –
காணுதற்குத்தக்கஎன நான்கனுருபாக விரிக்க. களம் வென்றுகொளத்தகுமோ
எனமொழிமாற்றியுரைத்தல் நேராம். ஓ-எதிர்மறை.  

மற்று அவன், ‘தருமராசன் மைந்தனே அவனிக்கு எல்லாம்
கொற்றவன் ஆகும்; என்னைக் கொல்ல, நீ உபாயம் கேண்மோ:
அற்றை வெஞ் சமரில் சீறும் அம்பை என்று ஒருத்திதானே
செற்றிட, தவமும் செய்து, சிகண்டியாய்ப் பிறந்து நின்றாள்.10.-இதுவும் அடுத்தகவியும் – வீடுமன் தன்னைவெல்லும்
உபாயத்தைக் கூறியதைத் தெரிவிக்கும்.

இது முதல் மூன்று கவிகள் – குளகம்.

     (இ – ள்.) (அதுகேட்டு), அவன் – அவ்வீடுமன், ‘(இனி), தருமராசன்
மைந்தன்ஏ – அறத்துக்குத்தலைவனான யமனது குமாரனானயுதிஷ்டிரனே,
அவனிக்கு எல்லாம் கொற்றவன் ஆகும் – பூமிமுழுவதுக்கும்
அரசனாவன்; என்னை கொல்ல-, நீ-, உபாயம் கேண்மோ-உபாயத்தைக்
கேட்பாயாக; அற்றை – அந்நாளில் [முன்னொருகாலத்தில் என்றபடி], சீறும் –
(என்மேற்) கோபித்த, அம்பை என்ற ஒருத்தி-அம்பை யென்னும்பேரை யுடைய
ஒரு பெண், வெம் சமரில்தான்ஏ செற்றிட – கொடிய போரில் தானே (என்னைக்)
கொல்லும்படி, தவம்உம் செய்து – தவத்தையும் பண்ணி, சிகண்டி ஆய் பிறந்துஉம்
நின்றாள் – சிகண்டி யென்னும்பெயருள்ள ராஜகுமாரனாய்ப் பிறந்துமிருக்கிறாள்;
(எ – று) –  இப்பாட்டில் ‘அவன்’ என்னும் எழுவாய், மேல் பன்னிரண்டாங்
கவியில் ‘என்றனன்’ என்ற வினையைக்கொண்டுமுடியும்.

பின்னிரண்டடியிற் குறித்த வரலாறு:-காசிராசனது பெண்கள் மூவரைத் தன்
தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம்புரிவிக்கும் பொருட்டுச் சுயம்வரத்தில் வீடுமன்
வலியக் கவர்ந்து தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில் அரசர்கள் பலர் எதிர்த்துவந்து
தோல்வியடைய, அவர்களுள் சிறிதுபோரில்முன்னிட்ட சாலுவனிடத்தில்
அம்பையென்பவள் மனத்தைச் செலுத்தியதனால் பிறகு வீடுமன்
அந்தச்சாலுவனிடத்திற் சேருமாறு அவளையனுப்பிவிட, அந்தச் சாலுவன் ‘பகைவன்
கவர்ந்துபோன உன்னை யான் கொள்ளேன்’ என்று மணம் மறுத்துவிட்டதனால்,
அவள் பின்பு வீடுமனை மணஞ்செய்துகொள்ளும் பொருட்டுப் பலவாறுமுயன்றும்
பயன்படாது போக, பின்னர் அவள் வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனை
மறுபிறவியிற் கொல்லும்படி சிவபெருமானிடம் வரம்பெற்று அக்கினிபிரவேசஞ்
செய்து பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதராசனிடத்திற் பெண்ணாகப்பிறந்து
சிகண்டியென்றுபெயர்பெற்று ஆணெனவழங்க வளர்ந்தனள்: பிறகு ஸ்தூணனென்ற
யட்சனால் வரமாகத் தனது பெண்தன்மையைமாற்றி ஆண்தன்மை கொடுக்கப்
பெற்றன ளென்பது.

     அற்றை வெம்சமரிற்சீறும் என்பதற்கு – யாற்றொழுக்காக, அந்நாளில் (யான்
பரசுராமனோடு) செய்த கொடிய போரில் (யானே வென்றதனாற்) கோபமுற்றஎன்றும்
உரைக்கலாம். சாலுவனால் மறுக்கப்பட்ட அம்பையென்பாள் பரசுராமனைச்சார்ந்து
தன் கருத்தைத் தெரிவிக்க, அந்த அம்பையின் வேண்டுகோளை நிறைவேற்றுவிக்கக்
கருதிப் பரசுராமன் வீடுமனோடுபொருது தோற்றன னென்க. தருமராசன் என்ற
சொற்போக்கு- ‘தந்தையையொப்பான் மைந்தன்’ என்றபடி இவனும் தருமநெறி
சிறிதுந்தவறாதவ னென்பதை விளக்கும். ஏ-பிரிநிலை. உம்மைகள் – முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவிய எச்சம்.   

‘பன்னு சீர் யாகசேனன் குமரனைப் பத்தாம் நாளில்
என் எதிர் அமரில் காட்டில், யான் படை யாவும் தீண்டேன்;
பின் அவன் வெகுண்டு செய்யும் பெருமிதம் கண்டு, மீண்டு,
கன்னனை வெல்ல நின்ற காளை கைக் கணையால் வீழ்வேன்.

பன்னு – (யாவராலும்) எடுத்துச்சொல்லப்படுகிற, சீர் -புகழையுடைய,
யாகசேனன் குமரனை – துருபதராசனது குமாரனான அந்தச் சிகண்டியை, பத்துஆம்
நாளில் – பத்தாவது யுத்த தினத்தில், அமரில் – போரில், என் எதிர் காட்டில் –
எனது எதிரில் நிறுத்திக்காட்டினால், யான்படை யாஉம் தீண்டேன் –
(பெண்ணாயிருந்து ஆணான அவனோடு போர்செய்ய) நான் ஆயுதங்களில்
எவற்றையுந் தொடவும்மாட்டேன்; பின் – பின்பு, அவன் வெகுண்டு செய்யும் –
அந்தச்சிகண்டி கோபித்துப்போர் செய்கிற, பெருமிதம் – பராக்கிரமத்தை, கண்டு –
பார்த்து, மீண்டு – பின்பு, கன்னனை வெல்ல நின்ற காளை கை கணையால்
வீழ்வேன் – கர்ணனைச் சயிக்குமாறு உறுதியாய்நின்ற இளவீரனான அருச்சுனனது
கையிலுள்ள அம்பினால் (அடிபட்டுப் போர்க்களத்தில்) விழுவேன்;

யாகசேனனென்பது, துருபதனுடைய மற்றொருபெயர். இவன் குமரனென்றது,
சிகண்டியை. பெருமிதம் – மிக்க அளவு; ஒருவன் மற்றையோரினுஞ்
சிறந்துவிளங்குதற்குத் காரணமாகுதலால், பெருமிதமென்று பராக்கிரமத்துக்குக்
காரணப்பெயர்: வீரத்தினைப் பெருமிதமென் றெண்ணினான்; என்னை?
எல்லாரோடும் ஒப்பநில்லாது பேரெல்லையாக நிற்றல் பெருமித மெனப்படும்
என்றற்கு என்பது; என உரைத்ததை அறிக. ‘கன்னனை வெல்லநின்றகாளை’
என்றது, திரௌபதியைத் துகிலுரிந்தபோது அருச்சுனன் ‘துரியோதனனுக்கு உற்ற
துணையான கர்ணனை யான் கொல்வேன்’ என்று சபதஞ் செய்துள்ளா
னாதாலென்க: கர்ணனிடத்துத் தனக்குள்ள துரபிப்பிராயத்தாலும், அருச்சுனனுக்கு
ஒரு ஆசீர்வாதமாகவும், வீடுமன் இவ்வாறு கூறினான்: இனி, நடப்பவற்றைஅறியும்
எதிர்காலவுணர்ச்சியாற் கூறினானுமாம். காளை-அது போன்றவனுக்கு
உவமவாகுபெயர்.

நின்றனை, அருளோடு ஆங்கே, நீல மா மேனியாய், நீ!
வென்றி மற்று இவரே அல்லால், வேறு யார் எய்துகிற்பார்?’
என்றனன்; என்ற போது, அப் பிதாமகன் இரு தாள் போற்றி,
நின்றவர் தம்மைக் கொண்டு, சிலைமுனி நிலையில் போனான்.12.-பின்புவீடுமன் ‘நீ இருக்கையில் வெற்றி இவர்க்கே’
என்ன, க்ருஷ்ணன் துரோணனிடஞ் செல்லுதல்.

நீலம் மா மேனியாய் – நீலநிறமுள்ள அழகிய திருமேனியை
யுடையவனே ! நீ-, ஆங்கே – அந்தப்பக்கத்திலே [பாண்டவர்திறத்திலே],
அருளொடு – கருணையுடனே, நின்றனை – (துணைசெய்ய) நின்றாய்; (ஆகையால்),
இவர்ஏ அல்லர்ல் – இப்பாண்டவர்களேயன்றி, வேறு யார்-, வென்றி – வெற்றியை,
எய்துகிற்பார் – அடையவல்லவராவர்? [எவருமில்லை யென்றபடி], என்றனன் –
என்று (வீடுமன் கண்ணனை நோக்கிக்) கூறியருளினான்; என்றபோது –
அங்ஙனங்கூறினபொழுது, (கண்ணபிரான்), அப்பிதாமகன் இரு தாள் போற்றி
நின்றவர் தம்மை கொண்டு – (தமது) பெரியபாட்டனான அவ்வீடுமனது
உபயபாதத்தை வணங்கி நின்ற பாண்டவர்களைக் கூட்டிக் கொண்டு, சிலை முனி
நிலையில் போனான்-விற்றொழிலில்வல்ல துரோணாசாரியன் நிற்கிறவிடத்துச்
சென்றான்; (எ-று.)

     நீலம் ஆம் மேனியாய் என்றும் எடுக்கலாம். மற்று – அசை.

போய், அவர் குருவின் பாதம் போற்றி, முன் நிற்ப, செங் கண்
மாயவன் அவனை நோக்கி, ‘வாகை அம் தாமம் சூட,
நீ இவர்க்கு அளித்தி ஆகில், உண்டு; அலால், நின்னை வையம்
தாயவர் தமக்கும் வேறல் அரிது’ எனச் சாற்றினானே.13.-துரோணனைக்கிட்டியதும், க்ருஷ்ணன் ‘நீ அருளினால் தான்
இப்பாண்டவர்க்கு வெற்றி’ என்று அவனிடம் கூறுதல்

அவர்-அப்பாண்டவர்கள், போய்-,குருவின் பாதம் போற்றி – (தமது)
வில்லாசிரியனான துரோணனது அடிகளை வணங்கி, முன்நிற்ப – எதிரிலே நிற்க,
(அப்பொழுது), செம் கண் மாயவன்-சிவந்த திருக்கண்களையும் மாயையையுமுடைய
கண்ணன்,-அவனை நோக்கி – அத்துரோணனைப் பார்த்து, ‘வாகை அம் தாமம் சூட
– (வெற்றிக்குரிய) அழகிய வாகைப்பூமாலையைச் சூடும்படி, நீ-, இவர்க்கு அளித்தி
ஆகில் – இப்பாண்டவர்க்குக் கருணைசெய்வாயானால், உண்டு அலால் – வெற்றி
யுண்டேயல்லாமல். நின்னை வேறல் – உன்னைச்சயித்தல், வையம் தாயவர்
தமக்குஉம் அரிது – உலகங்களை அளவிட்ட திருமாலுக்கும் அருமையானது,’ என
சாற்றினான் – என்று சொன்னான்; (எ – று.)

     துரோணன் அஸ்திரசஸ்திரங்களில் அதிசாமர்த்தியமுடையவனாய்
அனைவர்க்கும் அழித்தற்கரியனாதலின், அவனைக்கொல்ல அவனையே
உபாயங்கேட்குமாறு, மாயவன் அவனிடஞ்சென்று தோத்திரிக்கின்றானென்க. முன் –
இடமுன். குருவென்னும் வடசொல்லுக்கு – (அஜ்ஞாநமாகிய மன) இருளை
யொழிப்பவனென்று பொருள். வாகை – பூவுக்கு, முதலாகுபெயர். தாமம் –
வடசொல். வையம் தாயவர்என்றபெயர், அவ்வெம்பிரானது நினைத்தவற்றை
நினைத்தவாறே முடிக்கவல்ல ஸர்வசக்தியை விளக்கும்.

வையந்தாவிய கதை:- மகாபலியென்னும் அசுரராசன் தன் வல்லமையால்
இந்திரன்முதலியயாவரையும் வென்று மூவுலகங்களையும் தன்வசப்படுத்தி அரசாண்டு
செருக்குக்கொண்டிருந்தபொழுது, அரசிழந்ததேவர் திருமாலைச் சரண மடைந்து
வேண்ட, அவர் வாமனாவதாரமெடுத்துக் காசியபமுனிவருக்கு அதிதிதேவியினிடந்
தோன்றின பிராமணப் பிரமசாரியாகி, வேள்வியியற்றி யாவர்க்கும் வேண்டிய
அனைத்தையுங் கொடுத்துவந்த அந்தப்பலியினிடஞ் சென்று, தவஞ்செய்வதற்குத்
தன்காலடியால் மூவடி மண் வேண்டி, அது கொடுத்தற்கு இசைந்து அவன்
தத்தஞ்செய்த நீரைக் கையிலேற்று, உடனே திரிவிக்கிரமனாக
ஆகாயத்தையளாவிவளர்ந்து, ஓரடியால் மண்ணையும் ஓரடியால் விண்ணையும்
அளந்து மற்றோரடியால் அவனையும் பாதாளத்தில் அழுத்தி அடக்கினார்
என்பது.வேறல் – தொழிற்பெயர்.

மன் மகன் தருமன் வென்று, வையகம் எய்தி நிற்பான்;
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன் என்று, வானில்
வில் மகபதியை ஒக்கும் வேந்தன் முன் சொல்லின், சூரன்
தன் மகன் மகனே! பின்னைச் சாபம் ஒன்று எடுக்கிலேனே.14.-இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்; துரோணன்
தன்னை வெல்ல உபாயங்கூறியதைத் தெரிவிக்கும்.

சூரன்தன் மகன் மகனே-சூரனென்னும் அரசனது புத்திரனான
வசுதேவனது குமாரனே! மன் மகன் தருமன்-பாண்டுராசனதுபுத்திரனான யுதிட்டிரன்
தான், வென்று – (பகைவரைச்) சயித்து, வையகம் எய்த நிற்பான் – (இனிப்) பூமியை
அடையநிற்பவன்; வானில் – சுவர்க்கத்தில்வாழ்கிற, வில்-ஒளியையுடைய, மகபதியை
– தேவேந்திரனை, ஒக்கும் – போன்ற, வேந்தர் முன் – அரசர்களது முன்னிலையில்.
என் மகன் எனக்கு முன்னே இறந்தனன்  என்று சொல்லின் – என் குமாரனான
அசுவத்தாமா யானிறப்பதற்குமுன்னே (போரில்) இறந்தானென்று (தகுந்தவர்
யாராவதுசொன்னால், பின்னை – அதன்பின்பு, சாபம் என்று எடுக்கிலேன் –
வில்லென்றுகையில் எடுக்கவும்மாட்டேன் ; (எ – று)-இங்ஙனங் கூறினதனால்,
துரோணனுக்குப்புத்திரன்பக்கலுள்ள மிக்கஅன்பு விளக்ங்கும்.

     தேரில் விற்பிடித்துநிற்கையில் என்னைக் கொல்லவல்லாரில்லை யாதலால்,
நம்பத்தகுந்த புருஷனைக் கொண்டு எனக்கு மிகவும் அநிஷ்டமான
நிகழ்ச்சியொன்று நிகழ்ந்ததாகக் கூறின், கையிற்  பிடித்த சாபத்தைச் சோகத்தினால்
விட்டிடுவேன்: அப்போது என்னைக் கொல்லலா மென்று உபாயங் கூறினானென்று
வியாசபாரதம் கூறும். “என்மகனே யென்முன்னிறந்தானெனுமாற்ற, மன்னவையுட்
கேட்பிக்க வல்லையேல் – பின்னை, அடலுக வென்றிண்டோ ளம்புகவா வென்கை,
யுடலுகவா வென்ற னுயிர்” என்பது, பாரதவெண்பா. மகபதியென்னும்
வடமொழிப்பெயர்க்கு – யாகத்துக்குத் தலைவனென்று பொருள்; நூறு
அசுவமேதயாகங்களைச் செய்து இந்திரபதவி பெறுதலால், இவனுக்கு இப்பெயர்.
இந்திரன், அரசர்க்குச் செல்வத்திலுஞ் சிறப்பிலும் உவமை. சூரனது பௌத்திர
னாதலால், கண்ணனுக்கு ‘சௌரி’ என ஒரு திருநாமமுங் காண்க. சூரன் –
ஸூரனென்னும் வடமொழித்திரிபு.

என் பெருஞ் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும்,
தன் பெருஞ் சாபத்தாலும், சமரிடைத் திட்டத்துய்மன்
வன்புடன் எனக்குக் கூற்றாய் மலைகுவன்; மலைந்த அன்றே,
நின் பெருங் கருத்து முற்றும்; ஏகுவீர், நீவிர்!’ என்றான்.

 (அவ்வாறு), என் பெரு சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலான்உம்-
எனதுபெருமையையுடையவில்லைக் கையினின்று ஒழித்துவிட்டு [நிராயுதபாணியாய்]
நான்எதிரிலே நிற்பதாலும், தன்பெரு சாபத்தால்உம் – தனது [த்ருஷ்டத்யும்நனது]
பெரியவரத்தாலும், சமரிடை – போரிலே, திட்டத்துய்மன்-, வன்புடன் –
வலிமையுடனே,எனக்கு கூற்று ஆய்-எனக்கு யமனாய், மலைகுவன்-போர்செய்வான்;
மலைந்தஅன்றுஏ – (அங்ஙனம்) போர்செய்த அப்பொழுதே, நின் பெரு கருத்து
முற்றும்-உனது பெரிய எண்ணம் நிறைவேறிவிடும் [நான் இறந்திடுதல் திண்ணம்];
நீவிர்ஏகுவீர் – நீங்கள் போங்கள், என்றான் – என்று  (துரோணன் கண்ணனையும்
பாண்டவரையும் நோக்கிக்) கூறினான்; (எ-று.)

   “இற்றைக்கு மூவைந்தா நாளி லிகலமருட், கொற்றப்போர் மன்னவனே
கூசாதே -வெற்றிகொளும், பாஞ்சாலன் புத்திரன் கைப்படுவேனென்றுரைத்தான்
றான்சாயுமாறே தரித்து” என்றார் பெருந்தேவனாரும். ‘தன்பெருஞ்சாபம்’ என்றது,
தன்தந்தையான துருபதன்  துரோணனைக் கொல்லும்பொருட்டு
ஒருபுத்திரனுண்டாகவேண்டுமென்று செய்த யாகத்தில் தான் தோன்றிநின்றதை.
இதனை ‘சாபம்’ என்றது, பிறனையழித்தலாகிய பயனைத் தவறாது விளைத்தலாலாம்.
வன்புடன் – துரோணனான என்மீது தந்தை தொடங்கி வருகிற
தீராப்பகைமையுடனேயென்றும் உரைக்கலாம். பெருங்கருத்து –
துரோணனையழித்தல். பாண்டவர்க்கு வெற்றியை விளைத்தல், பூபார நிவ்ருத்தி.
சாபம் – வடசொல்திரிபு; “சாபமே சபித்தல் வில்லாம்” என்னும் நிகண்டினால்
இருபொருளு முடையதாதலை அறிக. விட்டியான்- குற்றியலிகரம். வன்பு –
பண்புப்பெயர். (பிராணிகளதுஉடம்பையும் உயிரையும் வேறுவேறாகப் பிரித்துக்)
கூறுபடுத்தல்பற்றி, யமனுக்குக் கூற்றென்று பெயர்; இனி, (பிராணிகளின்
ஆயுட்காலத்தைக்) கூறாக்கி வரையறைசெய்தல்பற்றிய பெயருமாம். யமன்
தவறாது அழித்தற்கு உவமை.

முனிவனை விடை கொண்டு ஏகி, முகுந்தனும் தாமும், முன்னம்
தனி வனம் திரிந்து மீண்டோர், தானை அம் கானில் புக்கார்-
பனி வனம் நிறைந்த பொய்கைக் கரை, நிழல் பரப்பும் தேமாங்
கனி வனம் என்ன, யார்க்கும் உதவி கூர் கருணைக் கண்ணார்.16.-யுதிஷ்டிராதியர் தம்படைத்தொகுதியைச் சேர்தல்.

(பின்பு), பனி வனம் நிறைந்த பொய்கை கரை-குளிர்ச்சியையுடைய
நீர் நிரம்பின குளத்தினது கரையிலே, நிழல் பரப்பும் – நிழலைப் பரவச்செய்கிற,
கனி தேமா வனம் என்ன – பழங்களோடு கூடிய தேமாமரத்தோப்புப்போல,
யார்க்குஉம் உதவிகூர் – யாவர்க்கும் நன்றிசெய்தல் மிகுந்த, கருணை கண்ணார்-
அருளோடுகூடிய நோக்கத்தை யுடையவர்களாகிய, முகுந்தன்உம் முன்னம் தனி
வனம் திரிந்து மீண்டோர் தாம்உம் – கண்ணபிரானும் முன்னே ஒப்பற்ற காட்டில்
அலைந்து திரும்பிவந்த பாண்டவர்களும், முனிவனை விடை கொண்டுஏகி —
துரோணனிடத்து உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று, தானை அம் கானில் புக்கார்-
அழகிய (தமது) சேனையாகிய காட்டினுள்ளே சென்றார்கள்; (எ – று.)-க்ருபன்
சல்லியன் இவர்களையும் கிட்டி யுதிஷ்டிராதியர் அவர்களாசியும்
அனுக்கிரகமும்பெற்று மீண்டனரென்று   வியாசபாரதம் கூறும்.

     தன்னிடம்வந்தவர் யாவராயினும் அவர்களின்விடாய் தணியும்படி நீர்பருகி
வீற்றிருத்தற்குத் தண்ணிழலையும் பசிதீர உண்ணுதற்கு இனியகனியையும் அளித்து
உதவும் பொய்கைக்கரை மாம் பொழில்போலப் பகைவர் நண்பர் அயலார்என்னும்
பேதங் கருதாது தம்மைவந்தடைந்தவர் யாவர்க்கும் பலவகையாலும் உதவி
செய்பவர் இவரென்பார், இங்ஙனங் கூறினார். “பயன் மர முள்ளூர்ப் பழுத்தற்றாற்
செல்வ, நயனுடை யான்கட் படின்” என்ற திருக்குறளையும், “நடுவூருள் வேதிகை
சுற்றுக்கோட் புக்க, படுபனை யன்னர் பலர்நச்சவாழ்வார்,” “அழல்மண்டு போழ்தி
னடைந்தவர்கட்கெல்லாம், நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம்போற்,
பல்லார் பயன்றுய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே, நல்லாண் மகற்குக் கடன்” என்ற
நாலடியாரையும், “பார்கெழுபழுமரம்பழுத்தற்றாகவும்” என்ற கம்பராமாயணத்தையும்
இங்கேயறிக. வநம் – வடசொல்; இது-நீரென்றும் காடென்றும் பொருள்படுதலை
“வனமே காடும் நீரு மழகும்” என்ற திவாகரத்தாலு மறிக. தேமா-தேன்போலினிய
பழங்களைத் தருவதொரு மாமரவிசேடம்; இதன் எதிர்மொழி-புளிமா.
தேன்+மா=தேமா. முனிவனை -உருபு மயக்கம். “முன்னந்தனிவனந்திரிந்து
மீண்டோர்தானையங்கானிற் புக்கார்’ என, முன்பு பலவருஷகாலங்
காட்டிலேதிரிந்து இனி வனவாசம் வேண்டாஎன்று திரும்பினவர்கள்
மீண்டுமொருகாட்டிற் பிரவேசித்தன ரென்று ஒருசமத்காரந் தோன்றக் கூறியது,
பொருத்தமின்மையணி யென்னும் அஸங்கதியலங்காரமாகும். சேனையைக்
காடென்றது, அடர்த்தியாலும் அச்சந்தருதலாலுமென்க. 

கொற்றவர் தம்மை ஏழ் அக்குரோணி வெஞ் சேனையோடும்,
பற்றுடை அசலம் ஆகும் பான்மையால் வியூகம் ஆக்கி,
‘வெற்றி தந்து அருள்க!’ என்று, ஏத்தி, விந்தையை
வணங்கி, மாயோன்
சொற்றபின், தூசியோடு தூசி சென்று உற்றது அன்றே.17.-படையை வியூகம்வகுத்தபின் பாண்டவரின்
தூசிப்படை துரியோதனன் படையுடனே எதிர்க்கச்
செல்லுதல்.

 மாயோன் – கண்ணபிரான், ஏழ் அக்குரோணி வெம் சேனையோடு
உம் – ஏழு அகௌஹிணியென்னுந் தொகையுள்ள பயங்கரமான சேனையுடனே,
கொற்றவர்தம்மை – அரசர்களை, பற்று உடை அசலம் ஆகும் பான்மையால்
வியூகம்ஆக்கி – (ஒன்றோடொன்று) தொடர்ச்சியுள்ள மலை யென்னுந் தன்மையால்
அணி வகுப்புச்செய்து, வெற்றி தந்தருள்க என்று ஏத்தி விந்தையை வணங்கி –
சயத்தைக் கொடுத்தருள்வாயாகவென்று துதித்துப் (போர்க்களத்துக்குரிய
தெய்வமாகிய) துர்க்கையை வணங்கி, சொற்ற பின் – (போர்செய்யும்படி)
சொன்னபின்பு, தூசி – முற்படை, தூசியோடு-(எதிரிகளுடைய) முற்படையுடனே,
சென்று உற்றது-(போருக்குப்) போய் நெருங்கிற்று; (எ-று.)-அன்றே – ஈற்றசை.

     ‘படைவகுப்பாவது – வியூகம்; அஃது – எழுவகையுறுப்பிற்றாய்
வகையால்நான்காய் விரியால் முப்பதாம். உறுப்பு ஏழாவன – அரம் முதல்
தோட்டியீறாயின. வகைநான்காவன – தண்டம், மண்டலம், அசங்கதம் [அஸம்ஹதம்],
போகம் என இவை. விரி முப்பதாவன – தண்டவிரி பதினேழும், மண்டலவிரி
இரண்டும், அசங்கதவிரி ஆறும், போகவிரி ஐந்தும் எனஇவை. இவற்றின்பெயர்களும்
இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும்; அவையெல்லாம் வட நூல்களுட்
கண்டுகொள்க’ என்பது, திருக்குறள் பரிமேலழகருரை. அசலவியூகமாக்குதலாவது –
நால்வகைச்சேனைகளையும் மலைபோல் வடிவு அமையும்படி ஒழுங்குபடநிறுத்துவது;
சிறுசேனையைக் கொண்டே பெரியசேனையை வென்று அழிக்கவல்லதும்,
இந்திரனால் ஏற்படுத்தப்பட்டதும், அசலமென்று பிரசித்தமானதும், வச்சிர
மென்று பெயருள்ளதுமான வியூகமாக வகுக்கப்பட்ட தென்று வியாசபாரதங்
கூறுகின்றது. ஒரு வேஷத்தை மேற்கொண்டவன் அதற்குஉரிய
குணந்தொழில்களையெல்லாம் உடையனாகவேண்டுவது இயற்கை யாதலால்,
தேவாதிதேவனான திருமால் இங்குத் தான் கொண்ட மநுஷ்யாவதாரத்துக்கேற்பத்
துர்க்கையை வணங்கின னென்க. பற்று உடை அசலம் – (பகைவர்களது) வெல்லும்
ஆசையை ஒழிக்கிற அசலவியூகம் எனவுங் கொள்ளலாம்.     

புரசை யானைப் பொரு பரித் தேருடை
அரசன் மாத் துவசத்தனஆதலால்,
குரைசெய் வான் பணைக் குப்பைகள் யாவினும்,
முரச சாலம் முழங்கின, சாலவே.18.-முரசம் முழங்குதல்.

புரசை – கழுத்திடுகயிற்றையுடைய, யானை- யானைகளையும்,
பொரு பரி – போர்செய்யவல்ல குதிரைகளையும், தேர் – இரதங்களையும், உடை-
உடைய, அரசன்-யுதிஷ்டிரராசனது, மா துவசத்தன ஆதலால் – பெருமையையுடைய
கொடியில் (தாம்) இருப்பனவாகையால், முரச காலம்-பேரிகைகளின் கூட்டங்கள்,
குரை செய்வான் பணை குப்பைகள் யாவின்உம்-ஒலித்தலைச் செய்கின்ற பெரிய
போர்ப்பறைகளின் கூட்டங்க ளெல்லாவற்றினும், சால முழங்கின- மிகுதியாக
ஒலித்தன; (எ – று.)

     பாண்டவசேனையில் இயல்பாக வெற்றிக்கு அறிகுறியாகவும் போரில்
ஊக்கத்தையுண்டாக்கி வளர்த்தற்பொருட்டும் முரசங்கள் அடிக்கப்பட்டு மிகுதியாக
முழங்குதலை, தலைவனானதருமனது கொடியில் தம்உருவம் எழுதப்
பெற்றுள்ளதென்ற செருக்கினாலாகிய களிப்பின் மிகுதியால் அதிகமாகமுழங்கினதாக
ஒரு காரணங்கற்பித்துவருணித்ததனால், இது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி. மதம்
பிடித்தகாலத்தில் யானையின்மேல் ஏறுதற்கு ஒரு ஆதாரமாக, எப்பொழுதும்
யானைக்கழுத்தில் கயிறுகட்டிவைத்தல் இயல்பு. காலாட்சேனையைஉபலக்ஷணத்தாற்
பெறவைத்தார். முரஜஜாலம் – வடசொற்றொடர்.

     இதுமுதற் பதினேழுகவிகள் – பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.  

மலர்ந்த பற்ப வனம் நிகர் பைந்துழாய்
அலங்கல் வித்தகன் ஏந்தினஆதலால்,
வலம்புரிக் குலம், ‘வாழ்வு பெற்றேம்’ எனா,
சலஞ்சலத்தொடும், சங்கொடும், ஆர்த்தவே.19.-சங்குகளொலித்தல்.

மலர்ந்த பற்பவனம் நிகர் – மலர்ந்த தாமரைக்காட்டை யொத்த,
பைந் துழாய் அலங்கல் வித்தகன் – பசுநிறமான திருத்துழாய் மாலையையணிந்த
ஞானசொரூபியான திருமாலின். வடிவமான கண்ணபிரானால், ஏந்தின – (கையிற்)
பிடிக்கப்பட்டவை, ஆதலால்-, வாழ்வு பெற்றேம் எனா-சிறப்புப்பெற்றோ மென்று
களித்து, வலம்புரி குலம் – வலம்புரிச் சங்குகளின் கூட்டங்கள், சலஞ்சலத்தொடுஉம்
– சஞ்சலமென்னுஞ் சங்குகளோடும், சங்கொடுஉம்-இடம் புரிச்சங்குகளோடும்,
ஆர்த்த –  ஒலித்தன;(எ-று.)

வலம்புரிச்சங்குகளின் மிக்க முழக்கத்திற்கு, கண்ணன்கையிலிருப்பது
நம்மினமேயென்ற களிப்பைக் காரணங் கற்பித்ததனால், இப்பாட்டும் –
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.நிகர் வித்தக னென இயையும். திருக்கண்கள்
திருக்கைகள் திருவடிகள் திருமுகம்திருவாய் திருவுந்தி முதலிய
அவயவங்களெல்லாம் செந்தாமரைமலர் போலுதலால்,திருமாலின் திருமேனிக்குத்
தாமரைக்காட்டை உவமை கூறியது; “கைவண்ணந்தாமரை வாய்கமலம் போலுங்
கண்ணிணையு மரவிந்த மடியு மஃதே” எனத்திருநெடுந்தாண்டகத்திலுங் காண்க.
பற்பவனம் – பத்மவநமென்றவடசொல்திரிபு.துழாய் – துளஸீ: வடமொழி.
அலங்கல் – தொங்கியசைவது என மாலைக்குக்காரணக்குறி: இதில், அல் –
கருத்தாப்பொருள்விகுதி. திருமாலின் கையிலுள்ளது -பாஞ்சசந்நியமென்னும்
வலம்புரிச்சங்கு. ’வலம்புரிச்சங்கு. ’வலம்புரி, சலஞ்சலம்.இடம்புரி என்பன –
சங்கின்சாதிபேதம். “இப்பி யாயிரமே சூழ்ந்த திடம்புரி யென்றுகூறு, மொப்பில்சங்
காயிரஞ்சூழுறும் வலம்புரி யென்றேதும், அப்படி யதுவுஞ் சூழ்ந்தசலஞ்சல
மாகுமற்றைத், தப்பிலாச் சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம்” என்ற
நிகண்டுசெய்யுளால், இவற்றில் ஒன்றினு மொன்று ஆயிரமடங்கு சிறந்ததென
உய்த்துணர்க. வலம்புரி – வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு.

சென்று தேர்களும் தேர்களும் சேர்ந்தன;
வென்றி வேழமும் வேழமும் ஊர்ந்தன;
நின்ற வாசியும் வாசியும் நேர்ந்தன;
வென்றி வீரரும் வீரரும் மேவினார்.20.-இருபுறத்துச்சதுரங்கசேனைகளும் ஒன்றையொன்று
எதிர்த்தல்.

பார வாளமும் வாளமும் பாய்ந்தன;
கூர வேல்களும் வேல்களும் குத்தின;
வீர சாபமும் சாபமும் வீக்கின;
தூர வாளியும் வாளியும் தோய்ந்தவே.21.-இதுமுதல்நான்குகவிகள் – இருபுறத்தவரும்
கைகலந்து பொருதலைக் கூறும்.

இட்ட தார்முடி மன்னவரோடு, எதிர்
இட்ட தார்முடி மன்னவர் எய்தினார்;
பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன்,
பட்டவர்த்தனப் பார்த்திவர் எய்தினார்.

(இருபடையிலும்), இட்ட தார் – அணிந்தமாலையையுடைய, முடி
மன்னவரோடு – கீரிடந்தரித்து அரசாளும் மகுடவர்த்தனரென்னும் அரசர்களோடு,
இட்ட தார் முடி மன்னவர் – அத்தன்மையரான மகுடவர்த்தனர், எதிர் எய்தினார்-
எதிரிற் பொருந்தினார்; பட்டவர்த்தனப் பார்த்திவர் தம்முடன் – (கிரீடமின்றி)
நெற்றிப்பட்டத்தை மாத்திரங்காட்டி அரசாளும் பட்டவர்த்தனரென்னும்
அரசர்களோடு, பட்டவர்த்தனப் பார்த்திவர் – அத்தன்மையரான அரசர்கள்,
எய்தினார் – பொருந்தினார்; (எ – று,)

     ஒத்தவீரர்கள் ஒருவரோடொருவர் எதிர்த்தல் தருமயுத்தமாதலின்,
இங்ஙனங்கூறினார்.      

மந்திரத்தவர் தம்முடன், மா மதி
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார்;
தந்திரத்தவர் தம்மிசையே செல,
தந்திரத்தவர் சாயகம் ஏவினார்.

மா மதி – சிறந்த அறிவையுடைய, மந்திரத்தவர் தம்முடன் –
மந்திரிகளுடனே, மந்திரத்தவர்-மந்திரிகள், எதிர் வந்து மோதினார் – எதிர்த்து
வந்துதாக்கினார்கள்; தந்திரத்தவர்தம் மிசைஏ செல-படைத்தலைவர்கள்மேலேயே
செல்லும்படி, தந்திரத். தவர்-படைத்தலைவர்கள், சாயகம் ஏவினார் – அம்புகளைச்
செலுத்தினார்கள்; (எ- று.)

மந்த்ரம் – ஆலோசனை, தந்த்ரம் – சேனை: அவற்றையுடையவர், மந்திரியுந்
தந்திரியுமாவர். ஸாயகம் – வடசொல். மாமதி-மத்திமதீபம்.

மண்டலீகர் தம் மார்பு உறை ஆகவே,
மண்டலீகர் தம் வாட் படை ஓச்சினார்;
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கவே,
சண்ட வார் சிலை சாமந்தர் வாங்கினார்.

மண்டலீகர்தம் மார்பு உறை ஆக – மண்டாலதிபதிகளான
அரசர்களதுமார்பு உறையாக இருக்கும்படி, மண்டலீகர்-, தம் வாள்படை
ஓச்சினார் – தங்களது வாளாயுதத்தை வீசினார்கள்; சாமந்தர்  – சாமந்தராசர்கள்,
சண்டம்வார் சிலை வாங்க- உக்கிரமான நீண்ட வில்லை வளைக்க,
(அவர்க்குஎதிரில்), சாமந்தர் சண்டம்வார்சிலை வாங்கினார்-;  (எ – று.)

     மண்டலீகன் – நாற்பதுகிராமம் ஆள்பவன்: ஒருகோடி கிராமம் ஆள்பவன்
மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன்
மண்டலீகனென்றும் ஒருசாரார் கூறுவர். ஓரு பேரரசனுக்குக் கீழ்ப்பட்டு
அவனுடையநாட்டின் கடைக்கோடியையாளுஞ் சிற்றரசர்க்கு ஸாமந்தரென்று பெயர்;
வடசொல். உறை – படைக்கூடு;  (ஆயுதங்கள்) உறுவது உறை யெனக்
காரணப்பெயர். தமதுவாள் முழுவதும் பிறரதுமார்பினுள்ளே சென்று நுழையும்படி
வீசின ரென்பார், ‘மார்பு உறையாக ஓச்சினார்’ என்றார்.    

முடி இழந்த நிருபர், முகுந்தனால்
இடி படும் தலை ராகுவொடு, ஏயினார்;
அடி இழந்தவர், ஆதபன் தேர் விடும்
தொடி நெடுங் கை வலவனின், தோன்றினார்.25.-இதுவும் அடுத்த கவியும் – அடிபட்ட வீரரின்
வருணனை.

(அவ்யுத்தத்தில்), முடி இழந்த நிருபர் – தலையறுபட்ட அரசர்கள்,
முகுந்தனால் இடிபடும் தலை ராகுவொடு ஏயினார்-திருமாலால் துணிக்கப்பட்ட
தலையையுடைய இராகுவோடு ஒத்தார்கள்; அடி இழந்தவர் – கால்களை
இழந்தவர்கள், ஆதபன் தேர் விடும் தொடி நெடுகை வலவனின் தோன்றினார் –
சூரியனது தேரைச் செலுத்துகிற தொடியென்னும் அணியையணிந்த
கைகளையுடையசாரதியான அருணன்போலக் காணப்பட்டனர்; (எ – று.)-
உவமையணி.

     ஆதபன் – நன்றாகத் தபிப்பவன்; தபித்தல் – காய்தல். தேரோட்டுவதில்
அவனுக்குள்ள கைத்திறமையை விளக்க, ‘தேர்விடுந்தொடி நெடுங்கை வலவன்’
என்றார். வலவன் – வல்லவன்; இன்-ஐந்தனுருபு, ஒப்புப் பொருளது. இராகுவொடு
என்பதில், மூன்றனுருபு – ஐந்தாவதற்குரிய ஒப்புப்பொருளில் வந்தது, உருபுமயக்கம்.
ஏயினார், ஏய்-பகுதி, இன்-இறந்தகால இடைநிலை; இப்பகுதியினடியாகச்
செயவெனெச்சம் ‘ஏய்ப்ப’ என  வருதல்காண்க.

துருவாசமுனிவரது சாபத்தால் கடலினுட்புக்கொளித்த தேவலோ
கத்துச்செல்வங்களை மீண்டும்பெறும்பொருட்டுத் திருமாலின் கட்டளையால்
தேவர்கள் அசுரர்களைத் துணைக்கொண்டு பாற்கடல் கடைகையில் உண்டான
அமிருதத்தை அத்திருமால் தாம் எடுத்து. மிக அழகிய மோகினியென்னும்
பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கி, அமரர்களுக்குப்
பங்கிட்டுக்கொடுத்தருளுகையில். இராகு வென்னும் ஓரசுரன்  தானிருத்தற்குரிய
அவுணர்கூட்டத்தைவிட்டுத் தேவர்கோட்டியினிடையிலேபுக்குக் கையேற்று
அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்தமாத்திரத்தில்,
எம்பெருமான் அவனை அகப்பையாலடித்துத் தலைவேறு உடல் வேறாக்க,
அமிருதமுண்டதனால் உயிர்நீங்காத அத்தலையும் உடம்பும், விஷ்ணுவின்
அனுக்கிரகத்தால் இராகுகேதுக்களென இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய
ஏழுகிரகங்களோடு சேர்ந்து, சிற்சிலகாலத்து, தம்மேற் கோள்சொன்ன
சூரியசந்திரர்க்குப் பகையாய் அவர்களை மறைக்கின்றன என்பது,
முன்னிரண்டடியிற்குறித்த கதை.
 படைத்தல் தொழிலில் தனக்கு உதவியாகும்
படி பிரமனாற்படைக்கப்பட்ட உபப்பிரமர் ஒன்பதின்மரில் ஒருவனாகிய
காசியபமுனிவனதுமனைவிமார்கள் பலருள் கத்துரு என்பவள், ஒருநாள்
ஆகாசமார்க்கத்தே சென்றஉச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்குதிரையைக்
கருநிறமுடையதென்றுமாறுபாடாகக் கூற, அதனைமறுத்து விநதை
வெண்ணிறமுடையதென்று உள்ளபடிகூறவே, இதுகாரணமாக இருவர்க்கும்
மாறுபாடுண்டாகி ‘யாருரை பொய்யாகிறதோஅவள் மற்றவட்கு அடிமையாகக்
கடவள்’ என்று தம்மில் சபதம் நியமித்துக்கொள்ள,கத்துரு தனது மக்களாகிய
கருநாகங்களால் அவ்வெண்பரியை மறைப்பித்துக்காட்டிவஞ்சனைவழியால்
விநதையைத் தனக்கு அடிமையாக்கி ‘நீ உன்மகனால்தேவலோகத்திலிருந்து
அமிர்தங்கொணர்ந்து என்மக்களுக்குக் கொடுக்கையில், உனதுஇவ்வடிமைத்
தன்மை ஒழியும்’ என்று விடைகூற, பின்பு விநதை தன்கணவனருளால் ஆயிரம்
வருஷகாலங்கழித்துப் பலிக்கும்படியான இரண்டுஅண்டங்களைப் பெற்று
அடைக்காத்துவருகையில், ஐந்நூறுவருஷங் கழிந்தவாறேஒருநாள் ‘பெண்புத்தி
பின்புத்தி’ ஆதலால் தனது அடிமைத்தனத்தைவிரைவில்ஒழித்தலிலே
கருத்துக்கொண்டு ஒரு முட்டையை யெடுத்து உடைக்க,அதனுள் காலம்
நிரம்பாமையால் இடைக்குக்கீழ்ப்பட்ட அவயவங்களில்லாமல்
பாதிவடிவமாயிருந்த குமாரனொருவன் தோன்றி, அருணனெனப் பெயர்பூண்டு
சூரியனுக்குச் சாரதியாயின னென்பது, பின்னிரண்டடியிற் குறித்த கதை. இவன்,
கருடனது தமையன்

பர் தங்கள் புயங்களும், மார்பமும்,
சாப வெங் கணை தைத்து உகு சோரியால்,
தீபம் என்னவும், செம் மலர்க் கோடுடை
நீபம் என்னவும், நின்றனர், ஆண்மையால்.

 பூபர் – அரசர்கள், தங்கள் – தங்களுடைய, புயங்கள்உம் –
தோள்களிலும், மார்பம்உம் – மார்பிலும், சாபம் வெம்கணை – (பகைவர்)
வில்லால்எய்த கொடிய அம்புகள். தைத்து – பாய்ந்து, உகு – (அவ்வழியே)
பெருகுகிற, சோரியால் – இரத்தத்தால், தீபம் என்னஉம் – சோதி
விருட்சங்கள்போலவும், செம் மலர் கோடுஉடை நீபம் என்னஉம் – செந்நிறமான
பூக்களைக்கொண்ட கிளைகளையுடைய (செங்) கடம்பமரம்போலவும், ஆண்மையால்
நின்றனர் – வீரத்தன்மையோடு நின்றார்கள்; (எ-று.)

     செந்நிறம்பற்றிய உவமை. போரிற் பின்வாங்காமல் எதிர்நின்று முகத்தினும்
மார்பினும் விழுப்புண்படுதலே ஆண்மைவிளங்கும் வழியாதலால், ‘ஆண்மையால்
நின்றனர்’ என்றார். தீபம்- தீபமரம்; சோதி விருக்ஷம்: இது, பகலில் தன்னொளி
தோன்றாமல் இரவில் தோன்றப் பெறுகின்றதொருமரம்; இரவெரி எனவும் படும்.
‘செந்தழலொளியிற் பொங்குந் தீபமாமரங்கள்’ என்றது பெரிய புராணம். பூபர் –
பூமியைக்காப்பவர்; வடசொல். மார்பம்-அம் – சாரியை. சொரிவது, சோரி. தீபம்,
நீபம்- வடசொற்கள். மரம் – வீரர்க்கும், கிளைகள் – அவர் அவயவங்களுக்கும்,
மலர்கள்- செந்நீருக்கும் ஒப்பாம். தைத்து = தைக்க : எச்சத்திரிபு.  

கையில் வாளி தொலைந்த பின், காய்ந்து, தம்
மெய்யில் வாளிகள் வாங்கி, வில் வாங்கினார்;
பொய் இலா மொழிப் பூபதி சேனையின்
மை இல் ஆண்மையினார் சில மன்னரே.7.-நான்குகவிகள் – போர்வீரர்களின் பெருவீரம்
புலப்படுத்தும்.

பொய் இலா மொழி-(சிறிதும்) அசத்தியமில்லாத
வார்த்தைகளையுடைய,பூபதி – யுதிட்டிரமகாராசனது, சேனையில்- சேனையிலே,
மை இல் ஆண்மையினார்- குற்றமில்லாத பராக்கிரமத்தையுடையவர்களான, சில
மன்னர் – சில அரசர்கள்,கையில் வாளி தொலைந்த பின்-(தங்கள்) கையிலிருந்த
அம்புகளெல்லாம்(பகைவர்மேலெய்து) ஒழிந்துபோனபின்பு, காய்ந்து –
(பகைவர்மேற்) கோபங்கொண்டு,தம் மெய்யில் வாளிகள் வாங்கி-தமது உடம்பில்
(பகைவரால் எய்யப்பட்டுத்தைத்துஉள்ள) அம்புகளைப் பறித்தெடுத்து, வில்
வாங்கினார்-வில்லைவளைத்துஎய்தார்கள்; (எ – று.)

     இதனால், அவர்களது கலங்காதஉறுதிநிலை விளங்கும். இது, நூழிலாட்டு;
அதாவது உடலிற்புதைந்த படையைப்பறித்துப் பகைவர்மேல் விடுதல். இது –
புறப்பொருளின் பகுதியாகிய தும்பைத் திணைக்குரிய துறைகளில் ஒன்று;
புறப்பொருள் வெண்பாமாலையில் “களங்கழுமிய படையிரிய, வுளங்கிழித்த வேல்
பறித்தோச்சின்று” எனக் கூறிய இலக்கணத்தையும், ‘மொய்யகத்து மன்னர் முரணினி
யென்னாங்கொல், கையகத்துக் கொண்டான் கழல் விடலை-வெய்ய, விடுசுடர் சிந்தி
விரையகலம் போழ்ந்த, படுசுட ரெஃகம் பறித்து” எனக் காட்டிய இலக்கியத்தையும்,
“கைவேல்களிற்றொடு போக்கி வருபவன், மெய்வேல் பறியா நகும்” என்ற
திருக்குறளையுங் காண்க. எய்தலாகிய காரியத்தை வில்வாங்குதலாகிய காரணத்தாற்
குறித்தது உபசாரவழக்கு. பொய்யில் ஆம்மொழி பூபதி என
எடுத்தால், பொய்யின்பாற்பட்ட சொற்களையுடைய ராஜராஜனான துரியோதன
னென்று ஆகும். ஆண்மை – பௌருஷம். சில – குறிப்புப்பெயரெச்சம்.

தாள் இரண்டுடைச் சிங்கம் அன்னார் சிலர்
வாள் இரண்டு ஒர் தொடையினில் வாங்கினார்-
கோள் இரண்டும் என, குறுகார் தடந்
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே.

தாள் இரண்டு உடை சிங்கம் அன்னார்-இரண்டுகால் களையுடைய
சிங்கத்தைப் போன்ற சிலவீரர், சமர்-போரில், குறுகார் தட தோள் இரண்டுஉம் –
பகைவர்களது பெரிய இரண்டு தோள்களும், கோள்இரண்டுஉம் என –
(ராகுகேதுக்களாகிய) இரண்டு கிரகங்கள் போல, துணிந்து எதிர் வீழ – அறுபட்டு
எதிரிலே விழும்படி, வாள் இரண்டு ஓர் தொடையினில் வாங்கினார்-
இரண்டுவாளாயுதங்களை ஒருவீச்சில் வீசினார்கள்; (எ-று,)

     சமகாலத்தில் எதிரியின் இரண்டுதோளும் அற்றுவிழும்படி இரண்டு
வாள்களையெடுத்து ஒருங்குவீசினரென்பதாம். இதிலும் ஊக்கமிகுதி விளங்கும்.
தாளிரண்டுடைச் சிங்கம் – இல்பொருளுவமை: எந்தப்பிராணியையுந்
தவறாதுகொல்லவல்ல தன்மையிலும், பிறர்க்கு அதிபதியாகுந்தலைமையிலும்
சிங்கமாகிய விலங்கை. யொத்த மனித ரென்க; இனி, உள்பொருளுவமையாக,
(திருமால் கொண்ட) இரண்டுகால்களையுடைய நரசிங்கமூர்த்தியை யொத்த
பராக்கிரமமுடையாரென்றுங் கொள்ளலாம். சிங்கம் – ஸிம்ஹ மென்னும்
வடமொழித்திரிபு; (யானை முதலிய பெரியவிலங்குகளையும்) இம்சிக்க [கொல்ல]
வல்லதென்று பொருள். தொடை – பிரயோகிக்குந்தரம் ஒன்று. கோளிரண்டு –
எளிதில் அற்றுவிழுதற்கு உவமை. கோள்-காலத்தை அளந்து கொள்வது என்று
காரணப்பெயர். குறுகார் – (தம்மோடு) சேராதவர்; பகைவர். ‘சமர்’ என்ற விடத்து
‘சிலர்’ என்றும் பாடம்.   

ஓடி முட்டலின், தேர்கள் உடைந்தன;
நாடி முட்டலின், நாகங்கள் வீழ்ந்தன;
கூடி முட்டலின், கொய்யுளை மாய்ந்தன;
சாடி முட்டலின், ஆள்களும் சாய்ந்தனர்.

(இருபடையிலும் ஒன்றோடொன்று), தேர்கள்-, ஓடி முட்டலின்-
விரைந்துசென்று தாக்குதலால், உடைந்தன-; நாகங்கள் – யானைகள், நாடி
முட்டலின்- தேடிச்சென்று மோதுதலால், வீழ்ந்தன – கீழே விழுந்தன; கொய்
உளை -கத்தரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகள், கூடி முட்டலின்-
நெருங்கிமோதுதலால், மாய்ந்தன-இறந்தன; ஆள்கள்உம்-காலாள்வீரரும், சாடி
முட்டலின்-மோதித்தாக்குதலால், சாய்ந்தனர்-அழிந்தனர்; (எ-று.)- சாய்ந்தன
என்றும்பாடம்.

     நாகம்-மலையில்வாழ்வதென்று பொருள்; வடசொல். நகம் – மலை,
அசையாதது, கொய்யுளை-வினைத்தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை.
‘ஆடிமுட்டலின்’ என்ற பாடத்துக்கு, ஆடுதல்-போராடல்.  

பற்றி நின்று ஒருவன் படை வாள், எதிர்
உற்றவன் தலை சிந்திட, ஓச்சினான்;
அற்ற தன் தலை கொண்டு, அவனும் தனைச்
செற்றவன் தலை சிந்திட, வீசினான்.31.-தொந்தயுத்தம்.

ஒருவன் – ஒருவீரன், வாள் படை பற்றி நின்று – வாளா
யுதத்ை(கையில்) பிடித்துநின்று, எதிர் உற்றவன் தலை சிந்திட – எதிரிற்
பொருந்தினபகைவனது தலை சிதறும்படி, ஓச்சினான்-வீசினான்; அற்ற தன்
தலைகொண்டவன்உம் – (அங்ஙனம்) தன்தலை அறுபட்ட எதிரியும்,
தனைசெற்றவன்தலைசிந்திட-தன்னை யழித்தவனது தலை சிதறும்படி, வீசினான் –
(வாளை)வீசினான்;

     தொந்தயுத்தமாக இரண்டுவீரர் வாளையேந்தி வீராவேசத்தோடு விரைந்து
போர்செய்கையில், ஒருவன் மற்றொருவன்கழுத்தில் வாளை வீசித் தலையை
யறுத்துத் தள்ள, அங்ஙனம் தலையறுகிறவனது கையில் ஓச்சின வாளும் முன்
அவன்குறித்த குறிப்படி எதிரியின்கழுத்தில் விழுந்து தலையையறுத்த தென்பதாம்;
விரைந்துதொழில்செய்பவரது உடம்பு தலையறுபட்டபின்பும் சிறிது பொழுது
முன்னையதொழிலை விடாதுசெய்தல், இயல்பு: “கைகொடு கால் கொடு தம்மின்
வெகுண்டு கவந்த மலைந்தனவே,” “தழல் விழி வாரண வீரர் முடித்தலை தடிவன
சக்கரமே, யழலுமிழ் வாள்கள் சுழற்றின மீளவு மாவன சக்கரமே,” “கருமுகில்
முட்டின பட்டவர் கட்கனல் காலுமரும்புகையே” என்பர் மேற்
பதினாறாம்போர்ச்சருக்கத்தும். சுந்தோபசுந்தர்போல இருவரும் ஒருவரால் ஒருவர்
அடிபட்டு ஒருங்குஒழிந்தனரென்க. “அடுசிலைபகழிதொடுத்து விடப்புகு மளவினி
லயமெதிர்விட்டவர் வெட்டின. ருடல்சிலவிரு துணிப்பட்டன பட்டபினொருதுணி
கருது மிலக்கை யழிக்குமே” என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளோடு இதை
ஒப்பிடுக. இனி, அவனும்- அத்தலையற்றவனும், அற்ற தன் தலை கொண்டு –
அறுந்த தனது தலையினால், தனை செற்றவன் தலை சிந்திட வீசினான் –
தன்னையழித்தவனது தலைசிதறும்படியெறிந்தானென்று உரைப்பாருமுளர்; என்றது,
தலையறுந்த முண்டம் அத்தலையைக் கையிலெடுத்து எறிந்து எதிரியின் தலையை
அழித்ததென்றவாறாம்; இது அசம்பாவிதமெனத் தோற்றலாம். 

புங்கம் மெய் புதையப் புதைய, சிலர்,
சிங்கம் என்ன, செருக்களத்து ஆடினார்-
கங்கம் இட்ட பைங் காவண நீழலில்,
அங்கை கொட்டி, அலகை நின்று ஆடவே.2.-மூன்றுகவிகள்-போர்வீரர்களின் ஆண்மைச்செயலைக் கூறும்.

கங்கம் இட்ட – கழுகுகளாற் செய்யப்பட்ட, பை காவணம் –
குளிர்ச்சியான பந்தலின், நீழலில்-நிழலிலே, அலகை- பேய்கள், நின்று-, அம் கை
கொட்டி – உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு, ஆட – கூத்தாடாநிற்க, செரு
களத்து – போர்க்களத்தில், சிலர் – சிலவீரர்கள், புங்கம் மெய் புதைய புதைய –
அம்புகளின்கூர்நுனி (தம்) உடம்பிலே மிகுதியாகத் தைத்தழுந்தவும், சிங்கம்
என்ன -சிங்கங்கள்போல, (பராக்கிரமசாலிகளாய்), ஆடினார் – போர்செய்தார்கள்;

     போரில் உயிர்நீங்கின உடல்களைத் தின்னவந்த கழுகுகள்  அகாயத்தே
இடைவிடாமற் பரவிப் பந்தல்போகட்டாற்போன்றன என்பது மூன்றாமடியின்கருத்து;
போர்க்களத்திற் பேய்கள் தங்கட்கு இரையாகப் பிணங்கள் மிகுதியாகக்
கிடைத்தலால்,வந்து மகிழ்ந்து கூத்தாடுதல் இயல்பு. புங்கம், கங்கம் – வடசொற்கள்.
பைங்காவணம்என்பதில், பசுமை – குளிர்ச்சியின்மேலது. நீழல் – நீட்டல். அங்கை
கொட்டுதலைத்தாளவொற்றாகக் கொள்க. ஆடினார் என்பதற்கு – அவற்றுடன்
கூத்தாடி நின்றார்என்றும் உரைக்கலாம்: என்றது, கோபத்தோடு விரைந்துபோர்
செய்துநின்றவீரர்களது உடல் தலையறுபட்டபின் பதைபதைத்துக் கைகால்
துடிப்பதையாம்.   

வாளி ஆயிரம் தைத்த வழி எலாம்
ஓளியாக ஒழுகும் குருதியால்,
தாள் இலான் நடத்தும் தடந் தேருடை
மீளி ஆம் என நின்றனர், வீரரே.

வாளி ஆயிரம் தைத்தவழி எலாம் – (தம்உடம்பில் பகைவர்எய்த)
பலபாணங்கள் தைத்த துளைகளொல்லாவற்றிலிருந்தும், ஓளி ஆக ஒழுகும் –
ஒழுங்காகப்பெருகுகிற, குருதியால்-இரத்தத்தால், வீரர் – சில வீரர்கள், தாள்
இலான்நடத்தும் – கால்களில்லாத அருணனாற் செலுத்தப்படுகிற, தட தேர்
உடை-பெரியஇரதத்தையுடைய, மீளி என – பெருமையிற்சிறந்த சூரியன் போல,
நின்றனர் -நின்றார்கள்; (எ-று,)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மிக்க செந்நிறமுடைமைபற்றி வந்தது.
சூரியனுக்குக் கிரணங்கள் ஆயிரமாதலால், ‘வாளியாயிரந்தைத்தவழியெலா
மொழுகுங்குருதி’ எனப்பட்டது. வாளியாயிரம் என்பதில், ஆயிரம் என்பது –
மிகப்பலவென்னுமாத்திரமாய் நிற்கும். ஓளியாக – இடைவிடாது தொடர்ச்சியான
தாரைகளாக என்றபடி. தொடைகளில்லாமைபற்றி, அருணனுக்கு வடமொழியில்
‘அநூரு’ என்று ஒருபெயர் உண்மையின், ‘தாளிலான்’ என ஒருபெயர் கூறினார்.
சூரியனுடைய ரதம் பதினாயிரம் யோசனை விசாலமுள்ள தாதலின், ‘தடந்தேர்’
எனப்பட்டது. ஆம் – ஆசை.   

வெட்டினார், படை; மெய்யில் படாமை நின்று,
ஒட்டினார், இமைப் போதினில் ஓடியே,
தட்டினார், உடலைத் தழுவிக்கொடு
கட்டினார், விழுந்தார்-சில காளையர்.

சில காளையர் – சிலவீரர்கள், வெட்டினார் – (பகைவரால்)
வெட்டப்பட்டார்கள்; ஓட்டினார் – (தாம் பகைவரைக் கொல்வதாக முன்னே)
சபதஞ்செய்தவர்களாகிய, அவர் – அவ்வீரர்கள், மெய்யின் படாமை நின்று –
அந்தச்சபதவுண்மையினின்றுந் தவறாமல் நிலைநின்று, இமை போதினில் ஓடி –
ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே விரைந்து சென்று, தட்டினார் உடலை தழுவி
கொடு- (தம்மை) வெட்டினவராகிய அவ்வீரரது உடம்பை அணைத்துக் கொண்டு,
கட்டினார் விழுந்தார் – கட்டிவிழுந்தார்; (எ-று.)

     என்றது, ஒருவரை யொருவர் கொல்வதாகப் பிரதிஜ்ஞை செய்து மிக்க
கோபாவேசத்தோடு விரைந்து தொந்தயுத்தஞ் செய்கிற இரண்டு வீரருள் ஒருவன்
மற்றொருவனை முதலில் வெட்ட, முன் தொடர்ச்சியால், உடனே
அவ்வெட்டுண்டஉடல் வெட்டினவன்மேல் சென்றுவிழுந்து அவனைத்தழுவி
யணைத்துக் கீழே தள்ளிக் கொன்று அவ்வீரவாதத்தை உண்மையாக
நிறைவேற்றிற்றுஎன்றவாறும்; இது – மிக்கவீரத்தை விளக்கும். இமை, நொடி,
மாத்திரை என்பன -ஒருபொருளான; கால நுட்பமுணர்த்தும். இப்பாட்டுக்குப்
பிறவாறு உரைப்பாராயினும்உய்த்துணர்ந்து பொருந்துமாயிற் கொள்க

கொங்கர், போசலர், போசர், சிங்களர், குகுதர்,
ஆரியர், துளுவரும்,
கங்கர், சோனகர், யவனர், சீனர், கலிங்கர்,
தத்தர், தெலுங்கரும்,
வங்கர், கோசலர், தமிழர், குண்டலர், ஒட்டர்,
மாளவர், மகதரும்,
இங்கும் அங்கும் அணிந்து நின்றவர், எதிர்
முனைந்தனர் இகலியே.35.-இருபக்கத்தைச்சார்ந்த பலதேசத்துமன்னவரும் மாறுபட்டுப்பொருதல்.

இங்குஉம் அங்குஉம் அணிந்து நின்றவர் – பாண்டவர் பக்கத்தும்
கௌரவர்பக்கத்தும் (ஆக இரண்டுபக்கங்களிலும்) அணியிற்பொருந்தி
நின்றவர்களாகிய, கொங்கர் போசலர் போசர் சிங்களர் குகுதர் ஆரியர்
துளுவர்உம் கங்கர் சோனகர் யவனர் சீனர் கலிங்கர் தத்தர் தெலுங்கர்உம் வங்கர்
கோசலர் தமிழர் குண்டலர் ஒட்டர் மாளவர் மகதர்உம் –
இந்நாட்டுவீரர்களெல்லோரும், இகலி-பராக்கிரமங்கொண்டு, எதிர் முனைந்தனர்-
எதிர்த்துப் போர்செய்தார்கள்;

     ஸ்ரீகாளஹஸ்தி, பீமேசுவரம், ஸ்ரீசைலம் என்னும் மூன்று சிவலிங்க
ஸ்தானங்களை எல்லையாகவுடைய தேசம், திரிலிங்கதேச மெனப்படும்; அதுவே
தெலுங்கு
என மருவிற்று. தமிழ்நாட்டின் எல்லையை ‘குணகடல் குமரி குடகம்
வேங்கடம், எனுநான் கெல்லையி னிருந் தமிழ்க் கடலுள்” என்றதனா லறிக.
சிங்களம்- ஸிம்ஹளம்: வடசொல். விந்தியமலைக்கும் இமயமலைக்கும் இடையிலே
கிழக்கும்மேற்கும் கடலெல்லையாகவுள்ள பூமி, ஆரியாவர்த்த மென்னப்படும்;
அதிலுள்ளவர்- ஆரியர். சிங்களம், துளுவம், கங்கம், சோனகம், சீனம் கலிங்கம்,
தெலுங்கம்,வங்கம், கோசலம், தமிழ் இவை – பதினெட்டுப் பாஷைகள்  வழங்குந்
தேயங்களினுட்பட்டவை. அணிந்து நின்றவர் – அணிவகுக்கப்பட்டு ஒழுங்குபட
நின்றவரென்க. இப்பாட்டில் முதன் மூன்று அடிகள் அடைமொழியில்லாமல்வந்தது,
ஒருஅழகாம். கோசல மென்பது-க உசல எனப் பிரிந்து, பிரமனுக்கு உல்லாசத்தை
[மகிழ்ச்சியை]த் தருவ தெனப் பொருள்படும். ‘தமிழர்’ எனப் பொதுப்படக்கூறியது,
சேரசோழ பாண்டியர் மூவரையுங் குறிக்கும் த்ரவிட மென்னும் வடமொழி,
தமிழெனத் திரிந்து நின்றது; இனி, தமியென்னும் வினைப்பகுதியடியாப் பிறந்து
தனக்கு இணையில்லாத பாஷையெனப் பொருள் தருவதென்பாரும், இனிமை
யென்னும் பொருளுணர்த்தும் தமிழ் என்னும் சொல் எல்லாப்பாஷைகளினும்
இனியதாகிய இப்பாஷைக்கு ஆகுபெயராய் வழங்கிற்றென்பாரும், மற்றைப் பல
பாஷைகளிலில்லாமல் தன்னிடத்தில் மாத்திரமே தனியாகவுள்ள ழகரமென்னும்
எழுத்தை யுடையதென அன்மொழித்தொகைக் காரணக்குறி யென்பாரு முளர்.

     இது முதற் பதினைந்து கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள்மாச்சீர்களும், மற்றை நான்கும் விளச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்கு கொண்டஎழுசீராசிரியவிருத்தங்கள்.  

விசையன் வெஞ் சிலை வீடுமற்கு எதிர் அமர்
தொடங்கலும், வெருவ, எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன, இருவர்
தம் பொரு சேனையும்;
மிசை எழும் துகளால் இமைத்தனர், மேலை
நாகரும்; வெங் கழுத்து
அசைய நின்று சுமந்து இளைத்தனர், கீழை
நாகரும் அடையவே.36.-வீடுமற்கெதிராக அருச்சுனன் போர்தொடங்கலும் இருவர்சேனையும்
வளைதல்.

விசையன் – அருச்சுனன், வெம் சிலை வீடுமற்கு எதிர் –
(பகைவர்க்குக்) கொடிய விற்போரில் வல்ல பீஷ்மனுக்கு எதிரிலே, அமர்
தொடங்கலும் – போரைச் செய்யத்தொடங்கின வளவில், இருவர்தம் பொரு
சேனைஉம்-போர்செய்யவல்ல இரண்டு திறத்தாரது சேனைகளும், எண்
திசைஉம்வெருவ – எட்டுத்திக்குக்களும் அஞ்சும்படி, ஒன்ற வளைந்துகொண்டன –
ஒன்றாக ஒருங்குசூழ்ந்துகொண்டன; (அப்பொழுது), மிசை எழும் துகளால் –
மேலெழுந்த புழுதி படுதலால், மேலைநாகர்உம் – மேலுலகத்துள்ள தேவர்களும்.
இமைத்தனர் – (தமது இமையாக்கண்களை) இமை மூடினார்கள்; கீழைநாகர்உம்
அடைய- கீழுலகத்துள்ள சர்ப்பசாதியார் எல்லோரும், நின்று சுமந்து வெம் கழுத்து
அசைய இளைத்தனர்- (அந்த மிக்கபாரத்தை) நிலைநின்று சுமந்து வெவ்விய (தமது)
கழுத்துக்கள் வருந்த இளைப்படைந்தார்கள் ; (எ – று,)

விசையன் – எதுகைநோக்கிய இடைப்போலி. என்திசை – ஆகு பெயர்.
அடையவென்பதை மேலைநாகர்க்குங் கூட்டுக. மேலை, கீழை என்பவற்றில், ஐ-
சாரியை கம்-இன்பம், அதன் எதிர்மறை-அகம்; அது, துக்கம்; அது இல்லாதது –
நாகம்; சுவர்க்கலோகம் எனக் காரணங் காண்க. சேனைமிகுதியைவிளக்குந்
தொடர்புயர்வுநவிற்சியணி இதனிற் காண்க.

உகவைதன்னொடு, வீடுமற்கு உறும் உதவியாக மகீபனும்,
சகுனி சல்லியன் இவரையும், பல தம்பிமாரையும், ஏவினான்;
மிகு கொடுஞ் சின வீமன், விந்தரன், அபிமன்,
ஆதியர், விசயனுக்கு,
இகல் நெடும் படை அரசன் ஏவலின், உதவி ஆம்
வகை எய்தினார்.37.-வீடுமனுக்கும் அருச்சுனனுக்கும் துணையாகச் சிலமன்னவர் வருதல்.

மகீபன்உம் – துரியோதனராசனும், உகவைதன்னொடு-(போரில்)
உற்சாகத்துடனே, சகுனி சல்லியன் அவரைஉம் – சகுனியும் சல்லியனும்
ஆகியவர்களையும், பல தம்பிமாரைஉம் – (தனது) தம்பியர்
தொண்ணூற்றொன்பதின்மருள் அநேகம்பேரையும், வீடுமற்கு உறும் உதவி ஆக –
பீஷ்மனுக்குமிக்க துணையாம்படி, ஏவினான்- கட்டளையிட்டனுப்பினான்; மிகுகொடு
சினம்-மிக்க பயங்கரமான கோபத்தையுடைய, வீமன் விந்தரன் அபிமன் ஆதியர் –
பீமசேனனும் விந்தரனும் அபிமந்யுவும் முதலியவர்கள், இகல்நெடு படை அரசன்
ஏவலின்-வலிய பெரிய சேனையையுடைய யுதிட்டிரராசனது கட்டளையினால்,
விசயனுக்கு உதவி ஆம் வகை எய்தினார்- அருச்சுனனுக்குத் துணையாம்படி
வந்தடைந்தார்கள்; (எ – று.)

   பலதம்பிமார் – துச்சாசனனையுந் துன்முகனையுஞ் சித்திராங்
கனையுமுள்ளிட்டார்நாற்பத்தொன்பதின்ம ரெனவும், விந்தரன் – பூதிவிந்த
னென்பவனெனவும், ‘ஆதியர்’என்றது-திட்டத்துய்மனையுஞ் சாத்தகியையும் எனவும்
பெருந்தேவனார் பாரதத்தால்விளங்கும். * பி-ம்: சல்லியனிவரையும்.

வன் பனைக் கொடிமீது பன்னிரு வாளி, மெய்க் கவசத்தின்மேல்
ஒன்பது, இப்படி ஏவி, வீடுமன் மெய்ந் நடுங்க உடற்றினான்;
மன் பரப்பொடு, சகுனி, சல்லியன், வந்த தம்பியர் அனைவரும்,
பின்படப் பல கணை தொடுத்தனன்;-வரு சதாகதி பிள்ளையே.38.-வீமன் வீடுமனுடன்பொருது அவனுக்குத் துணையாய்
வந்த சகுனிமுதலானாரையும் பின்னிடச்செய்தல்.

வரு – (அங்ஙனம் அருச்சுனனுக்குத் துணையாக) வந்த,
சதாகதிபிள்ளை-வாயுகுமாரனான வீமன், வீடுமன்-பீஷ்மனது, வன் பனைகொடி
மீது-வலிய பனைமரத்தின்வடிவமெழுதிய துவசத்தின்மேல், பன்னிருவாளி –
பன்னிரண்டுபாணங்களும், மெய் கவசத்தின்மேல் – உடம்பிலணிந்த
கவசத்தின்மேல், ஒன்பது(வாளி) – ஒன்பது பாணங்களும், இப்படி ஏவி-(ஆக)
இவ்வாறு பிரயோகித்து, மெய்நடுங்க- (அவ்வீடுமன்) உடல் நடுங்கும்படி,
உடற்றினான்- போர் செய்தான்;(அன்றியும்), மன் பரப்பொடு வந்த-மிக்க
யுத்தவேகத்துடனே (வீடுமனுக்குத் துணை)வந்த, சகுனி சல்லியன் தம்பியர்
அனைவரும்உம் -சகுனியும் சல்லியனும்(துரியோதனனது) தம்பிமார் பலருமாகிய
எல்லோரும், பின் பட-பின்னிடையும்படி,பலகணை தொடுத்தனன்- அநேக
பாணங்களை யெய்தான்; (எ – று,)

     “நினைப்பரிய கூர்வாளி நீள்வரைத்தோள் வேந்தன், பனைக் கொடிமேற்
பன்னிரண்டு பாய்ச்சி – நுனைப்பகழி, யொன்பதுகொண்டாங்கவன்ற னொண்கவசத்
திண்புறுத்தி, முன்பதிர வெய்தான் முனிந்து” என்றார் பாரத வெண்பாவிலும்.
பனைக்கொடி – தாலத்துவஜம். கவசம்-இரும்பு முதலியவற்றாலாகிய உடம்பின்மேற்
சட்டை, முதலடியிலுள்ள வாளி யென்பது, இரண்டாமடியிலும்
எடுத்துக்கூட்டப்பட்டது; அன்றி, ஒன்பது என்பதை எண்ணலளவை யாகுபெயராகக்
கொள்ளலுமாம். பரப்பு – பரபரப்பு. பின் பட- புறங்கொடுத்தோட, தோற்க. ஸதாகதி
யென்ற வடமொழிப் பெயர்க்கு – எப்பொழுதுஞ் சஞ்சரித்தலை யுடையவ னென்று
பொருள். பிள்ளை  – இருதிணைக்கும்வரும். மன்பரப்பொடு கணைதொடுத்தனன்
என இயைத்தலுமாம்.

ஏசு இலாது உயர் தன் பிதாவின் எழில் பிதாமகன்
ஏறு தேர்
வாசி நாலும் விழத் தொடுத்தனன், வாளி நால்,
அபிமன்னுவும்;
மாசு இலா விறல் உத்தரன், திறல் மத்திராதிபனுடன்
உடன்று
ஆசு இலா அடல் அப்பு மா மழை சிந்தினான்,
முகில் அஞ்சவே.39.-அபிமன்னு வீடுமனது தேர்க்குதிரையை யழித்தலும்
உத்தரன் சல்லியனோடு பொருதலும்.

அபிமன்னுவும்-, ஏசு இலாது உயர்-குற்றமில்லாமல் [மிக்க
புகழ்பெற்று] சிறந்த, தன்பிதாவின்-தனது தந்தையான அருச்சுனனது, எழில்
பிதாமகன்-அழகிய (பெரிய) பாட்டனான வீடுமன், ஏறு-ஏறியுள்ள, தேர்-இரதத்திற்
பூட்டிய, வாசி நால்உம்-குதிரைகள் நான்கும், வாளியால் விழ தொடுத்தனன் –
(தனது) அம்பினால் இறந்துகீழ்விழும்படி யெய்தான்;  மாசு இலா விறல் உத்தரன்-
குற்றமில்லாத வெற்றியையுடைய உத்தரகுமாரன், திறல்மத்திர அதிபனுடன்
உடன்று -வலிமையையுடைய மத்திரதேசத்தரசனான சல்லியனோடு பொருது,
முகில் அஞ்ச-மேகமும் அஞ்சும்படி, ஆசு இலா அடல் அம்பு மா மழை
சிந்தினான்-குற்றமில்லாத வலிமையையுடைய மிக்க பாணவருஷத்தைச்
சொரிந்தான்;  (எ-று.)

     “பேரொலிநீர்க் கங்கை பெருஞ்சிறுவன் றேர்பூண்ட, போரொலிமா
நான்கினையும் பொன்றுவித்தான்-கூரிய, வேல்வண்ணன் போர்முகத்து வெவ்வாளி
நான்கினான், மால்வண்ணன்றங்கை மகன்” என்பது வெண்பாப்பாரதம். முன்னே
உத்தரகோக்கிரகண காலத்துத் துரியோதனாதியர் சேனையைக் கண்டவளவிலே
அஞ்சிக்குதித்தோடின உத்தரகுமாரன் பின்பு அருச்சுனனருளால்
அஸ்திரசஸ்திரசாஸ்திரப் பயிற்சியில் மிகச்சிறந்தவனாயின னென்பது தோன்ற,
‘மாசிலா விறல்’ என்றார். விறலுக்கு மாசு-போரிற் பின் வாங்குதல். உடலல்-இங்கே,
போர் செய்தல். அம்பு என்னும் மென்றொடர், வன்றொடராயிற்று. ‘அப்புமழை’
என்றதில், ‘முகிலஞ்ச’ என்றதற்குஏற்ப, நீர்மழையென்ற பொருளுந் தொனிக்கும்;
அம்பு என்றும், அப்பு என்றும் வடமொழியில் நீருக்குப் பெயர். தனது
இடைவிடாப்பெருமழையும் இந்தப் பாணமழைக்கு ஈடாகாதென முகில்
அஞ்சுமென்க.அப்பு மழையென்ற தொடரை-பாணங்களாலாகிய
மழையெனவாயினும்பாணங்களாகிய மழையெனவாயினும் விரிக்க: மென்றொடர்
இருவழியிலும்வன்றொடராம். அம்புக்குக் குற்றம் – குறித்த இலக்குத்தவறுதலும்,
அவ்விலக்கைஅழியாதுவிடுதலும்.பி – ம்: ‘வாளிநால்.’ பிம் -பிரதிபேதம்

வாவி மேல்வரு புரவி வீழவும், வலவன் வீழவும்,
மற்றுளார்
ஆவி வீழவும், அவன் எடுத்த வில் அற்று வீழவும்,
அமர் செய்தான்;
‘பாவியோடு இனி வில் எடுப்பது பாவம்’ என்று,
ஒரு பார வேல்
ஏவினான், எதிர் சென்று சல்லியன்; இவனும்
வானகம் ஏறினான்.40.-சல்லியன் உத்தரனைக் கொல்லுதல்.

 (இங்ஙனம் உத்தரன் அம்புமழை பொழிந்து), வாவி  மேல் வரு
புரவி வீழஉம் – தாவிக்கொண்டு (தன்மேல்) வருகிற (சல்லியனது) தேர்க்குதிரைகள்
இறந்துவிழவும், வலவன் வீழஉம்-(அவனது) தேர்ப்பாகன் இறந்துவிழவும், மற்று
உளார் ஆவிவீழஉம் – (தேர்காப்பவர் முதலாக) மற்றும் (அவனுக்குத் துணையாக)
உள்ள வீரர்களது உயிர் அழியவும், அவன் எடுத்த வில் அற்று வீழஉம் –
அச்சல்லியன் கையிலேந்தியுள்ள வில் துணி பட்டுவிழவும், அமர் செய்தான் –
போர்செய்தான்; (அப்பொழுது), சல்லியன்-, பாவியோடு இனி வில் எடுப்பது பாவம்
என்று – இந்தப் பாவியோடு இனிமேல் வில்லெடுத்துப்போர்செய்வது
நல்லதன்றென்று கருதி, எதிர் சென்று ஒரு பாரம்  வேல்ஏவினான்-உத்தரனெதிரிற்போய் பரியதொருவேலாயுதத்தை (அவன்மேல்)
எறிந்தான்;(எறிந்தமாத்திரத்தில்), இவன்உம்-உத்தரனும், வானகம் ஏறினான்-
தேவலோகமடைந்தான்; (எ-று.)

     விற்போரில் உத்தரனை வெல்லமாட்டாமல் சல்லியன் உக்கிரமான
வேலையெடுத்து வீச, அது பட்டவளவில் உத்தரன் இறந்தானென்பதாம்.
அமர்செய்தா னென்பதை அமர்செய்ய எனவும், ஏவினானென்பதை ஏவ எனவும்
முற்றெச்சமாக்கின், ஒருவாக்கியமாம். நித்தியமாதலால் என்றும் அழியாத உயிரை
‘வீழ’ என்றது, அது உடம்பினின்று நீங்குதலை. பாவி – பாபீயென்னும்
வடமொழித்திரிபு; தீவினையுடையானென்று பொருள்: இங்கே இது
கொடியவனென்னுமாத்திரமாய் நின்றது; “அழுக்கா றென வொரு பாவி” என்ற
குறளில், ‘இருமையுங் கெடுத்தற்கொடுமைபற்றி, அழுக்காற்றினைப் பாவியென்றார்:
கொடியானைப் பாவியென்னும் வழக்குண்மையின்’ எனப் பரிமேலழக ருரைத்தவாறு
அறிக. தன்னைப் பலவகையாலும் அழித்த கொடுமைபற்றி, உத்தரனைச் சல்லியன்
பாவியென வெறுத்தனனென்க. பாவம் – பாபம்;  இதுவும், இங்கே,
நற்செய்கையன்று என்றமாத்திரமாய் நின்றது. போரிற் பின்வாங்காது
பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கம்புகுவரென்பது நூற்றுணிபாதலால்,
‘வானகமேறினான்’ என்றார். இறந்தானென்பதை  ‘வானகமேறினான்’ என
வேறொருவகையாற் கூறினதை, பரியாயவணியென்பர் தண்டியாசிரியர். கருதிய
பொருளை வெளிப்படையாகக் கூறாது அப்பொருள்தோன்ற வேறு வகையாற்
கூறுதல், இவ்வணியினிலக்கணமாம்; இதனைப் பிறிதினவிற்சியணி என்று கூறுதலும்
உண்டு.     

இன்று பட்டனன் மச்சர் கோமகன்’ என்று, தங்களில் நேரலார்
ஒன்று பட்டு, மிகைத்து எழுந்தனர் ஊழிவாய்
எழும் உததிபோல்
அன்று பட்ட கலக்கம் அப்படி, ஐவர்தம் படை; அமரின்மேல்
வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன வந்தனன், வீமனே41.-பாண்டவசேனை உத்தரனிறந்ததனாற் பெருங்கலக்க மடைய வீமன்
போர்செய்ய வருதல்.

மச்சர் கோ மகன் – (பாண்டவர்களுக்கு அரிய அஞ்ஞாத வாசத்தில்
பெரிய துணையாய்நின்ற) விராடராசனது புத்திரனான உத்தரன், இன்று பட்டனன் –
இப்பொழுது இறந்தான்,’ என்று – என்றகாரணத்தால், (மகிழ்ந்து), நேரலார் –
பகைவர்கள் [துரியோதனன் பக்கத்தார்], தங்களில் ஒன்றுபட்டு – தங்களுக்குள்
ஒன்றுசேர்ந்து, ஊழிவாய் எழும் உததிபோல் – கல்பரந்த காலத்திலே
பொங்கியெழுகிற கடல்போல, மிகைத்து எழுந்தனர்-செருக்குக்கொண்டு
கிளர்ந்தார்கள்; ஐவர்தம் படை – பாண்டவசேனை, அன்று பட்ட கலக்கம்-
(விராடகுமாரன் இறந்தானென்று) அப்பொழுது அடைந்த மனத்துயரமும், அப்படி-
அதற்கேற்றவாறேயிருந்தது; (பின்பு), வென்று பட்டம் அணிந்த வாரணம் என்ன –
(பகை) வென்று (நெற்றியில்) வீரபட்ட மணிந்த யானை போல, (பகைவர்
அஞ்சும்படி கம்பீரமாய்), வீமன் – வீமசேனன், அமரின்மேல் வந்தனன் –
போர்செய்தற்கு வந்தான்; (எ – று.)

துரியோதனன் பக்கத்தார் உத்தரனிறந்ததற்காக எவ்வளவு மகிழ்ந்தனரோ,
அவ்வளவு விசனப்பட்டார்கள் அதற்காகப் பாண்டவ சேனையா ரென்பார், ‘அப்படி’
என்றார். மச்சர்கோ-மத்ஸ்யதேசத்தார்க்கு அரசன். நேரலார்-தம்மோடு
மனமிணங்காதவர்; எனவே. பகைவராயிற்று. கற்பமுடிவுதோறுங் கடல்
பொங்கியெழுந்து உலகை மூடியழிக்கு மென்பது, நூற்கொள்கை. யானை –
வீரனுக்கு,நடைவலிமை காம்பீரியங்களால் உவமை. வாரணம் – தற்சமவடமொழி.

தாமன் மேல் வர வர உடைந்திடு தமம் எனும்படி, தண்டுடன்
வீமன் மேல் வர வர உடைந்தனர், மேவலார்கள்; வலம்புரித்
தாமன் மேல்வர வரவு கண்டு, தரிக்கிலாது எதிர் சென்றனன்-
காமன்மேல் அரன் என்ன, நெஞ்சு கனன்று,
கண்கள் சிவக்கவே.42.-வீமன் போரில் வரவே எதிரிகள் பின்னிடைய, அப்போது
துரியோதனன் வரக் கண்டு வீமன் சினத்தல்.

தாமன்-ஒளிவடிவமான சூரியன், மேல் வரவர- வானத்திலே
உயர்ந்துவரவர, உடைந்திடு – அழிந்தொழிகிற, தமம் எனும்படி- இருள்போல,
வீமன்தண்டுடன் மேல் வர வர – வீமசேனன் (தனது சத்துருகாதிநியென்னுங்)
கதாயுதத்தோடு தம்மேல் எதிர்த்துவரவர, மேவலார்கள்-எதிர்பக்கத்தார்,
உடைந்தனர்- அழிந்தொழிந்தனர்; (அப்பொழுது), வலம்புரி தாமன் –
நஞ்சாவட்டைப்பூமாலையையுடைய துரியோதனன், மேல்வர – வீமன்மேல்
எதிர்த்துவர, (வீமன்), வரவு கண்டு -(அவனது)வருகையைப் பார்த்து, தரிக்கிலாது –
சகிக்காமல், நெஞ்சு கனன்று-மனங்கோபித்து, கண்கள் சிவக்க – (அதனாற்) கண்கள்
செந்நிறமடைய, காமன்மேல் அரன் என்ன-மன்மதன்மேற் பரமசிவன் போல, எதிர்
சென்றனன் – (அத்துரியோதனன்மேல்) எதிர்த்துச் சொன்றான்; (எ – று.)

     இப்பாட்டிற்கூறிய உவமையிரண்டனுள், முன்னது-இருந்த விடந்தெரியாதபடி
உடனே அழிதற்கும், பின்னது – தவறாமல் விரைவில் எளிதில் அழிதற்கும் உவமை.
தாமம் – வடசொற்றிரிபு: இது-ஒளியும் மாலையுமாதலை “தாம மொளியுந்
தார்மாலையுமாம்” என்ற திவாகரத்தாலு மறிக. சூரியனுக்கு ‘தாமநிதி’ என்று
வடமொழியில் ஒரு பெயர். தமஸ் – வடசொல். மேவலார் –
விரும்பிச்சேராதவரென்று காரணப்பொருள். காமன் என்பதற்கு – (ஆண்பாற்கும்
பெண்பாற்கும் ஒன்றற்கொன்று) ஆசையை விளைப்பவனென்றும், (யாவருங்கண்டு)
விரும்புங் கட்டழகுடையவ னென்றும் பொருள். அரன் – ஹரன்;
இவ்வடமொழிப்பெயர், அழித்தற்றொழிற் கடவுளானமைபற்றியது: இனி,
அரனென்பதற்கு – அடியவரது அருந்துயரை அழிப்பவ னென்றும்
பொருள்கொள்ளலாம். துரியோதனனுக்கு அடையாளப்பூமாலை, நந்தியாவட்டம்.
ஒருகாலத்தில் கைலாச கிரியிற் சிவபெருமான் சனகர்முதலிய நால்வர்க்கு யோக
நிலைமையை உணர்த்துதலினிமித்தம் தாம் யோகஞ்செய்துகொண்டிருக்கையில்,
பிரமனேவலால் மலரம்புகளை யெய்து தமதுதவத்தைக் கெடுக்கலுற்ற மன்மதனைச்
சினந்து நெற்றிக்கண்ணை விழித்து அதன்நெருப்புக்கு இரையாய் உடம்பெரிந்து
சாம்பராய்ப்போம்படிசெய்தன ரென்பது ஈற்றடியிற் குறித்த கதை.

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன, எடுத்த கைத்
தண்டினால், எதிர் சென்று, தேர் அணி திரிய வன்பொடு சாடினான்;
மண்டினார் மணி முடியும், வேழமும், வாசியும், பல துணிபடக்
கெண்டினான்; முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்.43.-வீமன் துரியோதனனைச் சார்ந்தாரோடு நிகழ்த்திய கடும்போர்.

செண்டினால்-(சிவபிரான் கொடுத்தருளின) செண்டை
ஆயுதமாகக்கொண்டு அதனால், வசுகிரி-பொன்மலையாகிய மகாமேருவை,
திரித்திடு-சுழலச்செய்த, செழியன் என்ன-பாண்டியன் போல, எதிர் சென்று-
எதிர்த்துப்போய்,கை. எடுத்த தண்டினால்-(தன்) கையிலேந்திய கதாயுதத்தால்,
மண்டினார்-(துரியோதனனைச் சுற்றிலும்) நெருங்கியுள்ள அரசர்களது, தேர்
அணி- தேர்களின்வரிசைகள், திரிய – நிலைகெடும்படி, வன்பொடு சாடினான் –
வலிமையோடு அடித்து, (அவர்களது) மணி முடிஉம் – இரத்தினகிரீடமும்,
வேழம்உம்- யானைகளும், வாசிஉம்-குதிரைகளும், பல துணிபட –
அநேகந்துண்டுகளாகும்படி, கெண்டினான் – பிளந்து,முனை நின்ற பன்னக
கேதுவோடு – எதிரில்நின்ற  பாம்புக் கொடியனானதுரியோதனனுடனே, அமர்
மோதினான் – போர்செய்பவனானான்; (எ-று.)

     வஸு – செல்வம், வடசொல்; இது, இங்கே சிறப்பாய்ப் பொன்னையுணர்த்திற்று.
செழியனென்பது – செழுமையுடையவனெனப் பொருள்படும்: பாண்டியனைக்
குறிப்பது. கெண்டுதல் – கிண்டுதல், கண்டித்தல். பி – ம் : தறிய . கிண்டினான்.

     முதலடியிற் குறித்த கதை:- மலயத்துவசபாண்டியனது மகளாகிய
தடாதகைப்பிராட்டியைச் சுந்தரபாண்டியவடிவமாகி மணம் புரிந்துகொண்ட
சிவபெருமான் அவளிடம் தமக்குப்பிறந்த குமாரனாகிய உக்கிரபாண்டியனுக்கு
முடிசூட்டி அவனுக்குப் பகையாகும் கடலையும் இந்திரனையும்
மேருவையும்வெல்லுமாறு வேலும் வளையும் செண்டும் அளித்துப் போயினர்;
பின்னர் அவன் ஒருகால் தன் நகர்மேற் பொங்கியெழுந்த ஏழுகடல்களையும்
வேலெறிந்து வற்றச் செய்துவென்றான்;  ஒரு காலத்தில் தன் நாட்டிற்
பொதியமலையில் மேய்ந்திருந்த மேகங்களைப் பிடித்து அவன் தளைசெய்ய, அது
கேட்டுத் தன்னையெதிர்த்து யுத்தஞ்செய்து தேவேந்திரன்மீது வளையையெறிந்து
மகுடபங்கப்படுத்திச் சயித்தான்; மற்றொரு காலத்தில் தன்நாட்டில்
பஞ்சம்நேரிட்டபொழுது மேருகிரியையடைந்து நிதிதேடி அது
இருக்குமிடந்தெரியாமையால் அதன்மேற் செண்டைவீசி, அதற்கு ஆற்றாமல்
அம்மலையரசன் எதிரில்வந்து கொடுத்த பொருள்களை யெல்லாம் பெற்றுவந்தா
னென்பது கதை. ‘செண்டினா லிமகிரி திரித்திடு சென்னியென்ன’ என்ற
பாடத்துக்கு-ஒரு செண்டினாலே இமயமலையைத் திருப்பிய சோழன் போல என்று
பொருள்; அதற்குக் கதை வருமாறு;-பூர்வத்தில் மிக வலிமைகொண்ட
கரிகாலனென்னுஞ் சோழராசன், சேரபாண்டியர் முதலிய அரசரெவரும் இங்குத்
தன்னையெதிர்த்துப் போர்செய்யும் வல்லமையுடைய ரல்லாமையால், போரிலே
பேராசையையும் தோள்தினவையும் உடையவனாய் ‘வடதிசை பெருந்திசையாதலால்,
அங்கேயாவது பகைபெறலாம்’ என்று எண்ணிப் போர்விருப்பத்தோடு
புறப்பட்டுச்சென்று அங்கும் எதிர்ப்பவர் எவரையும் பெறாமல் அப்பாற்
செல்லுமளவிலே, இமயமலை இவனை வழிதடுப்பது போலக் குறுக்கிட்டு எதிரிற்
காணப்பட,  அதுகண்டு அவன் ‘இதுபகையாக நின்று என்னை விலக்கி
எதிரிட்டது’ என்று கருதிக் கோபங்கொண்டு அதைப் புறங்காண்பதற்காகவும்,
அதற்கு வடக்கிலுந் தனது ஆஞ்ஞை செல்லுவதற்காகவும், தனது போர்
விருப்பத்தையும் தோள்தினவையும் தணித்துத் தன்பெருவலிமையையும்
வெற்றியையும் வெளியிடுவதற்காகவும், சாத்தனனென்னுந் தெய்வத்தின் அருளால்
தான் பெற்ற ஒருசெண்டை ஆயுதமாகக்கொண்டு அந்த மலையின்மேல் எறிந்து
அதனால் அதை அடித்துத்திருப்பி அம்மலையின் மேல்புறத்திலே தனது
கொடியாகிய புலியை வெற்றிக்கு அடையாளமாக எழுதுவித்து, பின்பு
கோபந்தணிந்துமீண்டும் அக்கிரியை முன்போலவே திருப்பிச் சரி செய்து
நிறுத்தினான் என்பதாம்; இதைச் சிலப்பதிகாரத்தாலும் கலிங்கத்துப்பரணியாலும்
அறிக.     

மோதி ஆயிர பேதமாக முனைந்து, தங்களில் இருவரும்
சாதியாதன இல்லை, மீளி மடங்கல் ஏறு அன தன்மையார்;
காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் குனி கார்முகம்
சேதியா, ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து, எதிர் சிந்தினான்.44.-இதுவும் அடுத்த கவியும் – வீமன் துரியோதனனோடு நிகழ்த்திய
கடும்போரைத் தெரிவிக்கும்.

அப்பொழுது), மீளி-வலிமையையுடைய, மடங்கல் ஏறு –
ஆண்சிங்கத்தை,அன – ஒத்த, தன்மையார் – தன்மையையுடையவர்களாகிய,
இருவர்உம் – (வீமனும்துரியோதனனும் ஆகிய) இரண்டுபேரும், தங்களில் –
தமக்குள் (ஒருவரோடொருவர்)மோதி – தாக்கி, ஆயிரம் பேதம் ஆக முனைந்து –
மிகப்பலவகைகளாகப்போர்செய்து, சாதியாதன – செய்து முடிக்காத யுத்த வகைகள்,
இல்லை-: (பின்புவீமன்), காதி ஆடு அமர் புரியும் மேதினி காவலன் –
வருத்திவெல்லவல்லபோரைச்செய்யும் நிலவுலகத்தரசனான துரியோதனனது, குனி
கார்முகம் – வளைந்த வில்லை, சேதியா – துண்டுபடுத்தி, ஒருகை கொடு – (தனது)
ஒருகையால், ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – (அவன்) ஏறியுள்ள தேரைத்
தூக்கி எதிரில் வீசியெறிந்தான்; (எ – று.)

     வீரருக்குச் சிங்கவுவமை, நடை வலிமை நோக்கு தைரிய காம்பீரியங்களால்
என்க. இருவரும் சமபலமுடையவ ராதலின், இருவருக்கும் ஓருவமை கூறினார்.
சாதியாதன இல்லை – போர்த்திறமைகளெல்லாவற்றையுஞ் செய்தன ரென்பதாம் ;
இரண்டு எதிர்மறை உடன் பாட்டையுணர்த்தித் துணிவுகுறித்தன. மடங்கல் –
(பிடரிமயிர்) மடங்கு தலையுடையதெனக் காரணப்பெயராம்; பிடரி மயிருடைமை
பற்றி, சிங்கத்துக்கு வடமொழியில் ‘கேஸரீ’ என ஒருபெயர் வழங்குதலுங் காண்க.
ஏறு – ஆண்பாற்பெயர்; கருத்தாப்பொருளீறுபுணர்ந்துகெட்ட காரணக்குறி. மேதிநீ –
(திருமாலாற் கொல்லப்பட்ட மது கைடப ரென்னும் அசுரர்களது) உடற்
கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு இப்பெயர்;  மேதஸ் – நிணம்

ஆர் அழிந்தன; உருள் அழிந்தன; அச்சு அழிந்தன; வச்சிரத்
தேர் அழிந்து, கொடிஞ்சியும் பல சின்னமானது; மன்னனும்,
போர் அழிந்தனன்’ என்று, சேனை புறக்கிடாவரு பொழுதினில்,
கூர் அழிந்தது எனக் குறித்து, அணி நின்ற காவலர் கூடினர்.

 (அப்பொழுது, துரியோதனனது தேர்ச்சக்கரத்தின்), ஆர் –
இலைகள், அழிந்தன-; உருள் – சக்கரங்கள், அழிந்தன-; அச்சு – இரிசுகள்,
அழிந்தன-; வச்சிரம் தேர் அழிந்து – வச்சிரம்போல் உறுதியான தேர் சிதைந்து,
கொடிஞ்சிஉம் பல சின்னம் ஆனது – தேர்மொட்டும் பல துண்டுகளாய்விட்டது;
(அப்பொழுது), மன்னன்உம் போர் அழிந்தனன் என்று – துரியோதனனும் போரில்
தோற்றா னென்ற காரணத்தால், சேனை புறக்கு இடா வரு பொழுதினில் –
(அவனது)சேனை புறங்கொடுத்து வருகிற சமயத்தில், அணி நின்ற காவலர் –
(அவனது)சேனை வகுப்பில் நின்ற அரசர்கள் (பலர்), கூர் அழிந்தது என
குறித்து – (நமது)திறமை கெட்டதென்று கருதி, கூடினர் – ஒருங்குதிரண்டார்கள்;
(எ – று.)

     “ஆரே கூர்மையு மாத்தியு மாகுந், தேராழி யகத்திற் செறி யுறுப்புமாகும்”
என்ற திவாகரத்தாலும், “ஆர்கெழு குறடு சூட்டாழி போன்று” என்ற
சீவகசிந்தாமணியாலும், அதன் உரையாலும், தேர்ச்சக்கரத்தின் இடையிலேயுள்ள
இலைகள் ஆரெனப்படுமென விளங்கும். உருள் – சக்கரத்துக்குக் காரணப்பெயர்.
அச்சு – உருள் கோத்தமரம்; இது-அக்ஷமென்னும் வடசொல்லின் சிதைவு. வச்சிரம்-
ஒருவகையிரத்தினமென்றாவது, இந்திரனாயுதமென்றாவது, மரவச்சிர மென்றாவது
கொள்க. கொடிஞ்சி – தாமரைமலரின் வடிவமாகச் செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோருறுப்பு என்பர். சிந்நம் – வடசொல். புறக்கு – உருபுமயக்கமாக
இரண்டாம்வேற்றுமையின் பொருளில் வந்த நான்காம்வேற்றுமையென்றாவது,
இதில்கு – சாரியை யென்றாவது கொள்க. 

பரித்த தேரொடு பரிதியைச் செறி பரிதிபோல், இரு பக்கமும்
தரித்த வேலினர், தாரை வாளினர், தாம வில்லினர், ஆகவே,
விரித்த வெண்குடை மன்னர் சூழ்தர, வீமன் நிற்பது ஓர்
மேன்மை கண்டு,
எரித்த நெஞ்சொடு, விரைவில், மைத்துனர் ஆன
கொற்றவர், எய்தினார்.46.-துரியோதனனுக்குப் பக்கபலமாக அவனுடைய
மைத்துனன்மார் வருதல்.

விரித்த வெள் குடை மன்னர் – விரித்துப்பிடித்த வெண்
கொற்றக்குடையையுடைய அரசர்கள் (பலர்),- தரித்த வேலினர் – பிடித்த
வேலாயுதமுடையவர்களும், தாரை வாளினர் – கூர் நுனியையுடைய
வாளாயுதத்தையுடையவர்களும், தாமம் வில்லினர் ஆக – ஒளியையுடைய
வில்லையுடையவர்களுமாக,- பரிதியை செறி பரிதி போல் – சூரியனைச் சூழ்ந்த
பரிவேடம்போல, இரு பக்கம்உம் சூழ்தர-(தனது) இரண்டு பக்கத்திலுஞ் சுற்றிநிற்க,-
வீமன் – வீமசேனன், பரித்த தேரொடு – (தன்னைத்) தாங்கி தேருடனே, நிற்பது-
(இடையில்) நிற்பதாகிய, ஒர் மேன்மை – ஒரு கம்பீரத்தோற்றத்தை, கண்டு –
பார்த்து,எரித்த நெஞ்சொடு – பொறாமைகொண்டு தவித்த மனத்துடனே,
மைத்துனர் ஆனகொற்றவர் – (துரியோதனனுக்கு) மைத்துனன்மார்களான
அரசர்கள், விரைவின்எய்தினார் – துரிதமாக அருகுவந்துசேர்ந்தார்கள்; (எ-று.)

     பகையிருளொழித்துத் தேரின்மீது விளங்குதலால் வீமனுக்குச் சூரியனும்,
அவனைச் சூழ்ந்துநின்று விளங்குதலால் மன்னர்க்குப் பரிவேடமும் உவமை.
பரித்ததேரொடு என்பதை ‘மன்னர் சூழ்தர’ என்பதனோடும் இயைக்கலாம். பரிதி –
வடசொல்; சூரியனுக்குச் சமீபத்தில் சிலகாலங்களில் சூழ்ந்துதோன்றும் மண்டல
வடிவமான ரேகை; இதற்கு – பரிவேஷமென்றும் பெயர்; தென் மொழியில்
‘ஊர்கோள்’ எனப்படும். பக்கம் – பக்ஷம்; வடசொல். மைத்துனரான கொற்றவர் –
துரியோதனனது மனைவியான பானுமதிக்கு உடன்பிறந்த முறையாகுபவர். தாமம் –
போர்மாலைசூடிய என்றும், நாணிக்கயிற்றையுடைய என்றுங் கொள்ளலாம். பி -ம்:
மத்திரரான கொற்றவர். 

எய்து மைத்துனர் எய்து, தெவ்வரொடு எண் இல்
போர் செய, விண்ணிடைச்
செய்து பெற்றன தேரினின்றும் இழிந்துளான்,
நனி சீறினான்-
மொய் திறல் பவமானன் அன்று முருக்கும்
முக்குவடு என்னவே,
கைதவப் படை மன்னர் மா முடி சிதைய, அங்கு
ஒரு கதையினால்.47.-வீமன் கதாயுதத்தினால் வந்தவரோடு சீறி
அவரிரியப்பொருதல்.

எய்து மைத்துனர்-(இவ்வாறு) வந்த துரியோதனன்
மைத்துனன்மார்,எய்து-(பாணங்களைப்) பிரயோகித்து, தெவ்வரொடு- (வீமன்
முதலிய)பகைவர்களுடனே, எண் இல் போர் செய- அளவில்லாத பெரும் போரைச்
செய்யாநிற்க,-விண்இடை செய்து பெற்று அன தேரினின்றும் இழிந்துளான் –
தேவலோகத்திலே செய்யப்பட்டு(த் தான்) பெற்றாற்போன்ற (தனது) இரதத்தினின்று
இறங்கியுள்ளவனாய், (வீமன்),- மொய் திறல் பவமானன் அன்று முருக்கு முக்குவடு
என்னஏ – மிக்க வலிமையையுடைய வாயுதேவன் அக்காலத்தில் [முன்பு ஒரு
காலத்தில்] முறித்துத்தள்ளின (மேரு மலையின்) மூன்று சிகரங்கள்போல, கைதவம்
படை மன்னர் மா முடி சிதைய-வஞ்சனையையுடைய சேனைகளைக்கொண்ட
அவ்வரசர்களது பெரிய தலைகள் சிதறிவிழும்படி, அங்கு-அப்பொழுது, ஒரு
கதையினால் – (தனது) ஒப்பற்ற கதாயுதத்தால், நனி சீறினான் – மிகக் கோபித்து
அடித்தான்;

     மிகவலிமையுடையவனான வீமனுக்கு வாயுவும், அவனால் தள்ளப்பட்ட
மன்னர் தலைகளுக்கு மகாமேருசிகரங்களும் உவமை. வீமன் வாயு குமாரனாதலால்
அவனுக்கு வாயுவை உவமையாக்கியும், படை மன்னர் வஞ்சகனான
துரியோதனனைச் சார்ந்தவ ராதலால் அவருக்குக் கைதவம் என்ற அடைமொழி
கொடுத்துங் கூறினார். விண்ணிடைச் செய்துபெற்றனதேர்-விரைந்து செல்லுதலிலும்,
வலிமையிலும் அழகிலும், சிறப்பிலும் தேவவிமானம் போன்ற தேர்என்க. பவமாநன்,
கைதவம் – வடசொற்கள். முக்குவடு-திரிகூடம். அங்கு-அவ்விடத்து என்றுமாம். இல்
போர் – பண்புத்தொகை. அடித்தலாகிய காரியத்தை நனிசீறுதலாகிய காரணத்தாற்
கூறினார்; உபசார வழக்கு. பெற்றன-பெற்றாலன்ன, அல்லது பெற்றதன்ன. முடி-
கிரீடமுமாம். பி-ம்: எய்துமத்திரர். மூன்றாமடியிற் குறித்த கதை:-முன்ஒருகால்
வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தமக்குள் யார்பலசாலியென்று விவாதமுண்டாக,
அதனைப் பரிசோதித்தறியும்பொருட்டு வாயுதேவன் மேருமலையின் சிகரத்தைப்
பெயர்த்துத்தள்ளுவதென்றும், ஆதிசேஷன் அது பெயரவொட்டாமற்
காத்துக்கொள்வதென்றும் ஏற்பாடு உண்டாகி, அங்ஙனமே இருவரும்
தேவர்முதலியோரது முன்னிலையில் தத்தம் வலிமையைக் காட்டத்
தொடங்கியபொழுது, ஆதிசேஷன் தனது ஆயிரம் படங்களாலும் மேருமலையின்
ஆயிரஞ்சிகரங்களையுங் கவித்துக்கொண்டு பெயரவொட்டாமற் பல நேரங்காக்க,
பின்னர் வாயுதேவன்  தன் வலிமையால் அம்மலைச்சிகரங்களில் மூன்றைப்
பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில் தள்ளி விட்டானென்பது

அம்பரத்தவர் கண்டு நின்றவர் அதிசயித்திட வானின்மேல்,
இம்பர் இப்படி தெவ்வர் வெம் படை இரிய, வன்பொடு திரியவே,
‘தம்பி பட்டனன்’ என்று கொண்டு, எழு சாகரத்து எழு தழல் என,
தும்பையுற்று மிலைச்சி, ஈசன் அளித்த வில்லொடு தோன்றினான்.48.-தன்தம்பி யிறந்ததனாற் பெருஞ்சினங்கொண்டு
சுவேதன் வில்லொடு தோன்றுதல்.

 அம்பரத்தவர் – மேலுலகத்தவரான தேவர்கள், வானின்மேல் –
ஆகாயத்திலே (இருந்து), கண்டு நின்றவர் – (தனது போர்த்திறத்தைப்)
பார்த்துக்கொண்டு நின்றவர்களாய், அதிசயித்திட – ஆச்சரியப்படும்படி, இம்பர் –
இவ்விடத்திலே [போர்க்களத்தில்], தெவ்வர் வெம் படை இரிய – பகைவர்களது
கொடிய சேனைகள் பயந்தோடுமாறு, வன்பொடு – வலிமையோடு, இப்படி திரிய –
(வீமன்) இவ்வாறு [கதாயுத்தஞ்செய்து] சஞ்சரிக்க,-(மற்றொரு பக்கத்தில் சுவேதன்)
‘தம்பி பட்டனன் என்று கொண்டு – (தனது) தம்பியான உத்தரன் இறந்தா னென்று
அறிந்து, எழுசாகரத்து எழு தழல் என – பொங்குந்தன்மையதான கடலினின்று
மேற்கிளர்கிற வடவாமுகாக்கினிபோல, தும்பை உற்று மிலைச்சி – (போர்க்கு உரிய)
தும்பைப்பூமாலையை விரும்பிச் சூடிக்கொண்டு, ஈசன் அளித்த வில்லொடு –
சிவபிரான் (தனக்குத்) தந்தருளின வில்லுடனே, தோன்றினான் – (போர் செய்யப்)
புறப்பட்டான்; (எ – று,)

     அம்பரத்திற்சஞ்சரிப்பவர்-அம்பரத்தவர். ஸாகரம் – சகரசக்கரவர்த்தி
புத்திரரால் தோண்டப்பட்ட தென்று பொருள்; வடமொழித் தத்திதாந்த நாமம்:
இந்திரனால் ஒளிக்கப்பட்ட சகரசக்கரவர்த்தியின் அசுவமேதயாகக் குதிரையைத்
தேடுகையில் அவனது இரண்டாம் மனைவியின் புத்திரர் அறுபதினாயிரவர்
பாதாளஞ்செல்லுதற்கு வழியாகத் தோண்டிய பள்ளமே பின்பு நீர்நிறைந்து ஒரு
கடலாயிற்றென வரலாறு காண்க. கடலிடையிலே ஒரு பெண்  குதிரையின்
முகத்தில்எப்பொழுதும் தீப்பற்றியெரிகிற தென்றும், அது மழைநீர் முதலியவற்றால்
கடல்பொங்காதபடி அதிகநீரை அப்பொழுதப்பொழுது உறிஞ்சிநிற்ப தென்றும்,
அதுவேகல் பாந்தகாலத்தில் கடலினின்று வெளிவந்து உலகை எரித்தழிக்கு
மென்றும்நூற்கொள்கை. எழுசாகரம் என்பதற்கு- ஏழுவகையான கடலென்று
உரைப்பாருமுளர். தும்பை-அதன் பூமாலைக்கு இருமடியாகுபெயர். ஈசன் என்ற
வடசொல்லுக்கு- எல்லா ஐசுவரியமு முடையவனென்று பொருள். கோபக்கினியாற்
சொலித்தல்பற்றியும், சேனைக்கடலிடை விளங்குதல்பற்றியும், சுவேதனுக்கு
வடவைத்தீயை உவமைகூறினார்.

     சுவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது
வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து
அவன்பேரெழுதிய அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்டவுடனே
அவன் மயிலாகித் தந்தையாகிய விராடனிடம் வந்துசேர, அதனையறியாத
அவன் கோபித்துத் துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று தவஞ்செய்து
சிவபிரானருளால் சாபவிடை பெற்று வில் முதலிய ஆயுதங்களும்
கவசங்களும் பெற்றனனென்ற வரலாறுபற்றி, ஈசனளித்தவில்’ எனப்பட்டது;
‘சிவன்றன்னைநோக்கிச் சிவேதன்றவஞ்செய்தவாறு, மவன்றனருளாற் பல
வாயுதம்பெற்றவாறும்” என்றார் கீழ் வெளிப்பாட்டுச்சருக்கத்தும்

சங்குஇனங்கள் முழங்கவும், பணை முரசுஇனங்கள்
தழங்கவும்,
துங்க வெங் களிறு, இவுளி, தேரொடு தானை
மன்னவர் சூழவும்,
‘எங்கு நின்றனன், எங்கு நின்றனன், மத்திரத்து அரசு?’
என்று போய்,
அங்கு நின்ற மகீபர் வென்னிட, அவனை முந்துற
அணுகினான்.49.-சுவேதன் எதிரிட்டவரை வென்றுகொண்டு சல்லியனுள்ள
விடத்தைவினாவிச் சென்று சேர்தல்.

 (இவ்வாறு தோன்றின சுவேதன்), சங்கு இனங்கள் முழங்கஉம் –
சங்கவாத்தியங்களின் வகைகள் ஒலிக்கவும், பணை முரசு இனங்கள் தழங்கஉம் –
பெரிய பேரிகைகளின் வகைகள் ஒலிக்கவும், துங்கம் வெம்களிறு இவுளி தேரொடு
தானை மன்னவர் சூழஉம்-உயர்ந்த கொடிய யானைகளும் குதிரைகளும்
இரதங்களும் காலாட்படையும்ஆகிய சதுரங்க சைனியத்தோடு (பல) அரசர்கள்
(தன்னைச்) சூழ்ந்துவரவும்,மத்திரத்து அரசு எங்கு நின்றனன் எங்கு நின்றனன்
என்று போய் – (என்தம்பியைக்கொன்றவனான) மத்திரதேசாதிபதியாகிய சல்லியன்
எவ்விடத்துள்ளான்எவ்விடத்துள்ளான் என்றுசொல்லித் தேடிச்சென்று, அங்கு
நின்ற மகீபர்வென் இட -அவ்விடத்தில் [தான் போகிறவழியில்] நின்ற
பகையரசர்கள் புறங்கொடுத்தோடும்படி,(பொருது), அவனை முந்துற அணுகினான் –
அச்சல்லியனை முற்படக் கிட்டினான்;(எ – று.)

     அடுக்கு – கோபமும் விரைவும் பற்றியது. அரசு – அரசனுக்குப்
பண்பாகுபெயர்: இது – சொல்லால் அஃறிணையாயினும் பொருளால்
உயர்திணையாகையால், நின்றனன் என்ற ஆண்பால்முற்றைக் கொண்டது. வென் –
வெந்.           

சல்லியன் எனப் பெயர் தரித்து வரு கோமுன்,
வல்லியம் எனத் தகு சிவேதன், அமர் வல்லான்,
பல்லியம் முழக்கியது என, பலவும் வீரம்
சொல்லி, ஒருவர்க்கு ஒருவர் தொடு சிலை குனித்தார்.50.-சுவேதன் சல்லியனோடு வீரவாதஞ்சொல்ல, பிறகு
இருவருங் கைகலந்து பொருதல்.

அமர் வல்லான் – போர்செய்தலில் வல்லவனாகிய, வல்லியம் என
தகு சிவேதன் -(கொடிய பராக்கிரமத்திற்) புலியென்று சொல்லத்தக்க சுவேதகுமாரன்,
சல்லியன் என பெயர் தரித்து வரு கோ முன் – சல்லியனென்று பெயர்பெற்றுவந்த
அவ்வரசனெதிரில் பல் இயம் முழக்கியது என – பலவகைவாத்தியங்களை
முழங்கச்செய்ததுபோல, (உரத்தகுரலாக), பலஉம் வீரம் சொல்லி-
பலவகைவீரவாதங்களை யெல்லாஞ் சொன்னபின்பு, (இருவரும்), ஒருவர்க்கு ஒருவர்
தொடு சிலை குனித்தார் – ஒருவரோடொருவர் அம்புதொடுத்தற்குரிய வில்லை
வளைத்துப் போர்செய்தார்கள்;(எ-று.)

     சொல்லி – எச்சத்திரிபு. தொடுசிலை – வினைத்தொகை.

     இதுமுதற் பத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் ஈற்றுச் சீரொன்றுமாச்சீரும்,
மற்றை மூன்றும் விளங்காய்ச்சீர்களுமாகிய அளவடி நான்கு கொண்ட
கலிவிருத்தங்கள்

ஒருவரும் இவர்க்கு நிகர் இல்லை’ என உற்றே,
இருவரும் மலைந்திட, இராச குலராசன்,
‘பருவரல் கொள் மத்திரபதிக்கு உதவி ஆக!’ என்று
அரு வரையொடு ஒத்த புயர் அறுவரை விடுத்தான்.

திரண்டு – (தம்மில்) கூடி, வரு – (போருக்கு) வருகிற, மன்னர் –
பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி – திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ-
(அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு-
பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் – காளமேகத்தை, போல்வான் – ஒப்பவனான,
ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் –
பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள்
சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக –
ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் – இந்தப்பல
அம்புகளைச் சொரிந்தான்;  (எ – று.)

     கீழ்க்கவியில் ‘அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்’
என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், ‘கணைபல’
என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக-
ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர்
தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக  என ஒரு சமத்காரமுந்
தோன்றக்கூறினமை காண்க; “அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி” என்றார்
பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக

தரணிபதி தம்பியர்கள் தானையொடு வந்தே,
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்;
திரள் நறைகொள் தார் புனை சிவேதன், அவர் அந்தக்-
கரணம் வறிதாகும்வகை கணை பல தொடுத்தான்.52.-மூன்றுகவிகள் – சுவேதன் எதிர்த்துவந்தவரை
வென்றமை கூறும்.

தரணிபதி தம்பியர்கள் – (இங்ஙனம் அனுப்பப்பட்ட)
பூமிக்குத்தலைவனான துரியோதனனது தம்பிமார்கள், தானையொடு –
சேனையுடனே,இரணம் முகம் ஒன்றும் மயிலோன் என- போர்க்களத்தினிடத்தை
யடைகிறமயிலை(வாகனமுங் கொடியுமாக) உடைய முருகக்கடவுள்போல, வந்து
எதிர்த்தார்-;(அப்பொழுது), திரள் நறை கொள் தார் புனை சிவேதன் – திரண்ட
தேனைக்கொண்ட பூமாலையைச் சூடிய சுவேதன். அவர் அந்தக்கரணம் வறிது
ஆகும்வகை-அவர்களது மனம் அழியும்படி, கணை பல தொடுத்தான் – அநேக
பாணங்களை (மேன்மேல்) பிரயோகித்தான்; (எ – று.)

     தம்பியர் அறுவரும் உடலாற்பலராயினும் மனத்தால் ஒருவரேயாதலாலும்,
சுப்பிரமணியமூர்த்தி உருவம் பலவாயினுந் தாம் ஒருவரேயாதலாலும், இவ்வுவமை
ஏற்கும். முருகக்கடவுளுவமை பல பராக்கிரமங்களோடு ஆறுவடிவமாக வருதற்
கென்க. சுப்பிரமணியனது வடிவம் ஆறுகூறாகச்சென்றது, சூரபதுமனை அழித்த
பொழுதென்க; இங்கே     “அறுவேறு வகையினஞ்சுவரமண்டி” என்ற
திருமுருகாற்றுப்படை காண்க. அயிலோனெனப் பிரித்து,
வேலாயுதத்தையுடையவனெனக் கொள்ளலுமாம்; ‘வேலன்’ என்று சுப்பிரமணியனுக்கு
ஒருபெயர். வறிதாகும்வகை- வறுமையுடையதாகும்படி; எண்ணஞ் சிறிதும் இல்லாமற்
கலங்கும்படி; இடைவிடாது எய்தலின் எதிரிகளதுமனம் யாதாயினுமொன்றைச்
சிந்திக்கவுஞ் சிறிதும் அவகாச மில்லையாயிற் றென்க. ரணமென்னும் வடமொழி,
முதலில் இகரம்பெற்று,  இரணம்எனநின்றது; [நன் – பத -21.]  

முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை, ஓர் ஒன்று
இரண்டு சிலை ஆக, ஒரு வீரன் இவன் எய்தான்;
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி, உடல் மண்மேல்
புரண்டு விழ, வாளி மழை தூவு புயல் போல்வான்.

திரண்டு – (தம்மில்) கூடி, வரு – (போருக்கு) வருகிற, மன்னர் –
பகையரசர்களது, முடி-தலையை, சிந்தி – திதறி, உடல் மண் மேல் புரண்டு விழ-
(அவர்கள்) உடம்பு தரையிலே விழுந்து உருளும்படி, வாளி மழை தூவு-
பாணவருஷத்தைச் சொரிகின்ற, புயல் – காளமேகத்தை, போல்வான் – ஒப்பவனான,
ஒரு வீரன்-(சுவேதனாகிய) வீரனொருத்தன், முரண்டு எதிரும் மன்னவர் –
பகைமைகொண்டு எதிர்த்துப்போர்செய்யும் அந்தஆறு அரசர்களது, முரண் கொள்
சிலை-வலிமையைக் கொண்ட வில், ஓர் ஒன்று இரண்டு சிலை ஆக –
ஒவ்வொன்றும் இவ்விரண்டு வில்லாகும்படி இவை எய்தான் – இந்தப்பல
அம்புகளைச் சொரிந்தான்;  (எ – று.)

     கீழ்க்கவியில் ‘அவரந்தக்கரணம் வறிதாகும்வகை கணைபல தொடுத்தான்’
என்றதையே இக்கவியில் விவரித்து நன்குவிளக்கிக் கூறினராதலால், ‘கணைபல’
என்றதை இவையென அண்மைச் சுட்டாற் குறித்தார். ஓரொன்று இரண்டுசிலையாக-
ஒவ்வொன்று இரண்டு துண்டாக என்றபடி; ஒன்றை இரண்டாக்குதல் வல்லவர்
தொழிலாதலின், இதில், ஒருவில் இரண்டு வில்லாக  என ஒரு சமத்காரமுந்
தோன்றக்கூறினமை காண்க; “அறுவர் சிலையினையுமாறிரண்டு கூறாக்கி” என்றார்
பாரதவெண்பாவிலும். புரண்டு விழ-விழுந்துபுரள என விகுதிபிரித்துக்கூட்டுக

தேரும், விசை கூர் இவுளியும், செறி பனைக்கைக்
காரும், அயில் வாள் சிலை தரித்து வரு காலாள்
யாரும், வெடி பூளை வனம் என்ன, ஒருதானே,
ஊரும் ஒரு தேர் அனிலம் ஒக்கும் என, நின்றான்.

(பகைவர்களது), தேர்உம்-இரதங்களும், விசை கூர் இவுளி உம்-
வேகம்மிக்க குதிரைகளும், செறி பனை கை கார்உம்- (வலிமை)
மிக்கபனைமரம்போன்றதுதிக்கையையுடைய மேகம் போன்ற  யானைகளும், அயில்
வாள் சிலை தரித்துவரு காலாள் – வேல் வாள் வில் என்னும் ஆயுதங்களை
யேந்திவருகிறகாலாள்களும், யார்உம்-(ஆக நால்வகைச்) சேனையோரும், வெடி
பூளைவனம்என்ன-வெடித்த இலவம்பஞ்சுத்தொகுதியை யொத்திருக்க, ஒரு தான்ஏ
ஊரும்ஒருதேர் – வேறுதுணையில்லாத தான் ஒருவனே ஏறிச்செல்லும் (தனது)
இரதமொன்று, அனிலம் ஒக்கும் என (அவ்விலவம்பஞ்சுகளைப் பறக்கடிக்கிற)
காற்றையொக்கு மென்று சொல்லும்படி, நின்றான் – (வெற்றிகொண்டு) நின்றான்;
(எ – று.)

     ஒரு காலத்தில் பலபேரைப் புறங்காட்டியோடச் செய்து நிற்றற்கு, காற்று
இலவம்பஞ்சைச் சிதறச்செய்தல் உவமையெனக் காண்க. பனைக்கைக் கார்எனவே,
யானையாயிற்று. கார் – உவமையாகுபெயர். காலாள்-வேற்றுமைத்தொகை. அநிலம்-
வடசொல்.

பட்டன ஒழிந்த பல படையும் இவன் அம்பில்
கெட்ட நிலை கண்டு, உரககேதனன் உரைப்ப,
தொட்ட வரி வில்லினொடு சூறை அனிலம்போல்
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான்.55.-துரியோதனனுரைப்பச் சுவேதனை வீடுமனெதிர்த்தல்.

 

இவன் அம்பின் – இந்தச்சுவேதனது பாணங்களால், பட்டன
ஒழிந்து- இறந்தசேனைகள்போக, பல படைஉம் – (இறவாத மற்றை)
அநேகஞ்சேனைகளும்,கெட்ட – தோற்றுஓடின, நிலை – நிலைமையை, கண்டு –
பார்த்து, உரக கேதனன் -பாம்புக்கொடியனான துரியோதனன், உரைப்ப –
சொல்ல,- சூறை அனிலம் போல்விட்ட பரி மா இரதம் வீடுமன் –
பெருஞ்சுழல்காற்றுப்போல மிகவிசையாகவிடப்படுகிற குதிரைகளைப்பூட்டிய
தேரையுடைய பீஷ்மன், தொட்ட வரிவில்லினொடு – (கையிற்) பிடித்த
கட்டமைந்தவில்லினுடனே, எதிர்ந்தான் -(சுவேதனெதிரில்) வந்தான்; (எ – று.)

     ‘இவனம்பின்’ என்றது – மத்திமதீபம். சூறையனிலம்போல் எதிர்ந்தான்
எனினும்அமையும். விரதமெனப்பிரித்துரைக்கவும் இடமுண்டு.  

மத்திரனை விட்டு, மிசை வந்த மகிபதிமேல்
அத்திரமும் விட்டு, அவன் அடல் சிலை அறுத்தான்;
சித்திரம் எனும்படி திகைத்தனன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது, புலிபோல்வான்.56.-மூன்று கவிகள்-வீடுமன் சுவேதனோடு மும்மரமாகப் பொருது
இளைத்தமையைக் கூறும்

அப்பொழுது சுவேதன்), மத்திரனை விட்டு – சல்லியனை நீங்கி,
மிசைவந்த மகிபதிமேல் அத்திரம்உம் விட்டு – தன்மேல் எதிர்த்து வந்த
வீடுமராசன்மேல் அம்புகளையும் எறிந்து, அவன் அடல் சிலை அறுத்தான் –
அவ்வீடுமனது வலிமையையுடையவில்லை அறுத்துத்தள்ளினான்;  (தள்ளவே), புலி
போல்வான் – (பலபராக்கிரமங்களிற்) புலியை யொப்பவனாகிய வீடுமன், விராடன்
புத்திரன் விடும் கணை பொறாது – விராடகுமாரனான சுவேதன் விடுகிற
அம்புகளைப் பொறுக்கமாட்டாமல், சித்திரம் எனும்படி திகைத்தனன் –
எழுதுசித்திரமென்று சொல்லும்படி பிரமித்து நின்றான்; (எ – று.)

     சந்தனுவின் மூத்தகுமாரனான இவனே நிலவுலகத்துக்குஉரிய அரசனாதலின்,
மகிபதியென்றார். சித்திரம் – செயலறுதற்குஉவமை. ‘அத்திரமும்விட்டு’ என்ற
உம்மை- ‘மத்திரனைவிட்டு’ என்றதனை நோக்கிய இறந்தது தழுவிய எச்சம்

வீடுமனும் மீள ஒரு விற்கொடு, சிவேதன்
சூடு முடி வீழ, ஒரு சுடு கணை தொடுத்தான்;
கோடு சிலை வாளி பல கொண்டு, இவன், அவன் தேர்
நீடு கொடி ஆடையை நிலத்துற அழித்தான்.

(அப்பொழுது), வீடுமனும்-, மீள ஒருவில்கொடு-மறுபடி ஒருவில்லை
யெடுத்துக்கொண்டு, சிவேதன் சூடு முடி வீழ-சுவேதன் தரித்துள்ள கீரிடம்
கீழ்விழும்படி, ஒருசுடு கணை தொடுத்தான்- உக்கிரமான ஒரு அம்பை எய்தான்;
இவன் – இந்தச்சுவேதன், கோடு சிலை வாளி பல கொண்டு – வளைத்த
வில்லினின்றுஎய்த பல அம்புகளால், அவன் தேர் நீடுகொடி ஆடையை –
அவ்வீடுமனது தேரிற்கட்டிய உயர்ந்த (பனைக்) கொடிச்சீலையை, நிலத்துஉற –
தரையிலே விழும்படி,விழுத்தான் – அறுத்துத் தள்ளினான்; (எ – று.)-
நிலத்துறவழித்தான்’ என்றும் பாடம்.

     சுடுகணை – வினைத்தொகை; பகைவரை நெருப்புப்போல அழிக்க வல்ல
அம்பென்க: நெருப்பில்வைத்துக்காய்ச்சிவடித்த அம்பெனினுமாம்.

பின்னையும் அவன் தனி பிடித்த வரி சாபம்-
தன்னையும் இவன் பல சரங்கொடு துணித்தான்;
மின்னையும் நகும் பகழி வீடுமன் வெகுண்டு, ஆங்கு,
‘என்ன அமர் செய்வது இனி!’ என்று தளர்வுற்றான்.

பின்னைஉம் – (கொடிச்சீலையை யறுத்ததுமாத்திரமே யன்றிப்)
பின்னும்,இவன்-சுவேதன், அவன் தனி பிடித்து வரு சாபந் தன்னைஉம்-வீடுமன்
ஒப்பில்லாமற் கையிலேந்திவந்த அவ்வில்லையும், பல சரம்கொடு துணித்தான்-
அநேகபாணங்களால் அறுத்துத்தள்ளினான்;  மின்னைஉம்நகும் பகழி வீடுமன் –
(ஒளியால்) மின்னலையும் இகழ்ந்துசிரிக்கும்படியான அம்புகளையுடைய வீடுமன்,
ஆங்கு – அப்பொழுது, இனி வெகுண்டு என்ன அமர் செய்வது என்று தளர்வு
உற்றான் – ‘இனிமேல் (நாம் இவனோடு) கோபித்து என்ன போர்செய்வது?’ என்று
சோர்வையடைந்தான்; (எ – று.)

     வீடுமன் இரண்டுமுறை வில்லெடுக்க, அவ்விரண்டுமுறையும் அவன் வில்லைச்
சுவேதன் உடனே அறுத்ததனால், இனி இவனோடு விற்போர்செய்யமுடியா தென்று
கருதி மனந்தளர்ந்து, எங்ஙனம் போர்செய்வ தென்றனன் என்பதாம். நகுதல் –
பரிகசித்தல். ஆங்கு – அதனா லென்றுமாம். மின்னையும், உம்மை – உயர்வுசிறப்பு;
அதன் ஒளிமிகுதியை விளக்கும். பி – ம்:-பிடித்தவரிசாபம்.  

தளர்ந்த நிலை கண்டு, துரியோதனன், ‘அரும் போர்
விளைந்தது சிவேதனுடன்; வீடுமன் இளைத்தான்;
இளந்தலை உறாதபடி ஏகுமின்’ என, போய்க்
கிளர்ந்த முடி மன்னர் பலர் கிட்டினர், விரைந்தே.59.-துரியோதனன் சொல்லினால் பல அரசர் பக்கபலமாக வீடுமனைக்
கிட்டுதல்.

தளர்ந்த நிலை கண்டு – (அங்ஙனம் வீடுமன்) சோர்வடைந்த
நிலைமையைப் பார்த்து, துரியோதனன்-, (அரசர்களை நோக்கி), ‘சிவேதனுடன் அரு
போர்விளைந்தது – சுவேதனோடு பொறுத்தற்கரிய போர் உண்டாயிற்று; (அதில்),
வீடுமன் இளைத்தான்-: (ஆகையால்), இளந்தலைஉறாதபடி – (நமக்கு) இழிவு
உண்டாகாதபடி, ஏகுமின்- (வீடுமனுக்குத்துணையாகச் சுவேதனோடு போர்செய்யச்)
செல்லுங்கள்,’ என – என்று சொல்ல, (அது கேட்டு), கிளர்ந்த முடி மன்னர் பலர்-
விளக்கமுற்ற கிரீடத்தையுடைய அரசர்கள் அநேகர், விரைந்து போய் கிட்டினர் –
துரிதமாகச்சென்று (வீடுமனுக்குப் பக்கபலமாகச் சுவேதனுக்கு எதிரே
நெருங்கினார்கள்; (எ – று.)

     இளந்தலை-கீழ்மை. கிளர்ந்த என்பதை மன்னர்க்கு அடை மொழியாக்கின்,
போரில்ஊக்கங்கொண்ட என்று பொருளாம்.   

அந்த முடி மன்னவர் அநேகரையும், முன்னம்
வந்த வழி மீளவும் வரும்படி துரந்தான்-
தம் தம் வரி வில்லும், அணி தாரும், விடு தேரும்,
சிந்த, எரி கால்வன சிலீமுகம் விடுத்தே.60.-இதுவும் அடுத்த கவியும் – துரியோதனனேவலால் வந்தவரைச்
சுவேதன் வலியழித்தமை கூறும்.

(அப்பொழுது சுவேதன்), அந்த முடி மன்னவர் அநேகரைஉம் –
அவ்வாறு வந்துஎதிர்த்த கிரீடாதிபதிகளான அரசர்கள் பலரையும், தம் தம் வரி
வில்உம் அணி தார்உம் விடு தேர்உம் சிந்த -தங்கள் தங்களது கட்டமைந்த
வில்லும்தரித்தபூமாலைகளும் செலுத்துந் தேர்களும் சிதறும்படி, எரிகால்வன
சிலீமுகம்விடுத்து – (மிக்க உக்கிரத்தன்மையால்) நெருப்பை வெளிவீசுவனவான
அம்புகளைஎய்து, முன்னம் வந்த வழி மீளஉம் வரும்படி-முன்னே அவர்கள்
வந்தவழியாகவேதிரும்பிச் செல்லும்படி, துரந்தான் – ஓட்டினான்;

     முன்னம் வந்தவழி மீளவும்வரும்படி என்றது, போரிற் சிறிதும் பயன்
பெறாதவராகுமாறு என்ற கருத்தை விளக்கும். தம்தம் – அவரவரது என்க.
சிலீமுகம்-வடசொல்; கூர்மையான நுனியையுடைய தென்று பொருள்.

வெவ் அனலம் நேர் குகுர ராசனையும், வேறு ஓர்
ஐவரையும், ஏவினன்; முனைந்தனர்கள், அவரும்;
செவ் வரைகள் போல்பவர் சிரங்களும், வளைக்கும்
கை வரி விலும், துணிபட, கணை தொடுத்தான்.

 (இவ்வாறு வீடுமனுக்குத் துணையாகத் தான் அனுப்பின
அரசர்களையெல்லாம் சுவேதன் வென்று துரத்தியதை நோக்கித் துரியோதனன்),
வெவ் அனலம் நேர் – வெவ்விய அக்கினியை யொத்த [மிக்கபராக்கிரமமுடைய],
குகுரராசனைஉம்-குகுரதேசத்தரசனையும், வேறு ஓர் ஐவரைஉம் – மற்றுமொரு
ஐந்துஅரசர்களையும், ஏவினன் – (வீடுமனுக்குத் துணையாகச்சுவேதன்மீது)
அனுப்பினான்; அவர்உம் – (அங்ஙனம் அனுப்பப்பட்ட) அரசர்களும்,
முனைந்தனர்கள் – (சுவேதனையெதிர்த்துப்) போர் செய்தார்கள்; (அப்பொழுது
அச்சுவேதன்), செவ் வரைகள் போல்பவர்- அழகிய மலைகளை யொப்பவர்களாகிய
அவர்களது, சிரங்கள்உம்- தலைகளும், வளைக்கும் கை வரிவில்உம் –
வளைத்துநாணேற்றப்பட்ட கையிற்பிடித்த கட்டமைந்த விற்களும், துணிபட –
அறுபடும்படி, கணை தொடுத்தான் – அம்புகளை எய்தான்; (எ – று,)

     அநலம் – வடசொல். அரசர்க்கு மலையுவமை – எதற்குங்கலங்காத உறுதி
நிலைமைக்கும், கம்பீரமான தோற்றத்துக்கும், நெடுந்தூரத்தாரும் அறியும்
உயர்ச்சிக்கும் என்க.    

கங்கை மகன் மற்றும் ஒரு கார்முகம் வளைத்து,
சிங்கம் என, அப்பொழுது உறுக்கி, எதிர் சென்றான்;
அங்கு அவன் நகைத்து, ஒரு தன் அம்புகொடு, மீளப்
பங்கம் உற, வில் துணி படுத்தி, எதிர் நின்றான்.62.-சுவேதன் வீடுமனையெதிர்த்து மேம்படுதல்.

அப்பொழுது-. கங்கை மகன்-வீடுமன், மற்றுஉம் ஒரு கார்முகம்
வளைத்து- வேறொரு வில்லை வளைத்து, சிங்கம் என – சிங்கம்போல, உறுக்கி
எதிர்சென்றான் – கோபித்துச் சுவேதனெதிரிற் (போர்செய்யப்) போனான்; அங்கு –
அப்பொழுது, அவன் – அச்சுவேதன், நகைத்து – சிரித்து, தன் ஒரு அம்பு கொடு-
தனது ஓரம்பினால், மீள பங்கம் உற – மறுபடியும் (அவ்வீடுமன்)
அவமானத்தையடையும்படி, வில் துணி படுத்தி-(அவனது) வில்லையறுத்துத்தள்ளி,
எதிர் நின்றான் – (தனது மேன்மை தோன்ற) எதிரில் நின்றான்; (எ – று.)

     இங்கே, நகை-வீரத்தெழுந்த வெகுளிநகை; இனி, வீடுமன் கீழ் இருமுறை
வில்அறுபட்ட இழிவை நோக்கிய பரிகாசமுமாம்.

ஆன பொழுது, அந்தரம் நெருங்கி அமர் காணும்
வானவர், விராடபதி மைந்தனை மதித்தார்;
‘வேனிலவன்மேல் நுதல் விழித்தவன் அளிக்கும்
கூனல் வரி சாபம் இது கொண்டனன், வரத்தால்;63.-தேவர்கள் சுவேதன்வலிமையை மதித்தல்.

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ – ள்.) ஆன பொழுது – இவ்வாறான அச்சமயத்தில், அந்தரம் நெருங்கி
அமர் காணும் வானவர்-ஆகாயத்தில் திரண்டுநின்று போர்வினோதத்தைப்
பார்க்கிறதேவர்கள், விராடபதி மைந்தனை மதித்தார் – விராடராசனதுகுமாரனான
சுவேதனைக் கொண்டாடினவர்களாய்,-வேனிலவன்மேல் நுதல் விழித்தவன்
அளிக்கும் – மன்மதன்மேல் நெற்றிக்கண்ணை விழித்தெரித்த சிவபிரான் (தனக்குக்)
கருணையோடு கொடுத்த, கூன் நல்வரி சாபம் இரு – வளைவான சிறந்த
கட்டமைந்த இவ்வில்லை, வரத்தால் கொண்டனன்- (தான் செய்த தவத்திற்கு)
வரமாகச் சுவேதன் பெற்றான்; (எ – று,) -இப்பாட்டில் ‘மதித்தார்’ என்னும்
முற்றெச்சம், அடுத்தபாட்டில் ‘என்றனர்’ என்ற முற்றோடு முடியும்.

பூமியிற் போர்நடக்கும்பொழுது அக்காட்சியைத் தேவர்கள் வானிலிருந்து
காணுதல் இயல்பென்ப. வேனிலவன் – வேனிற்பருவத்துக்கு உரியவன்;
வேனில்என்றது – இங்கே இளவேனிலை: அது – சித்திரை வைகாசி மாதங்களாகிய
வசந்தகாலம்; அக்காலத்தில் ஆடவர்க்கும் மகளிர்க்கும் மிக்க வேட்கையை
விளைத்துப் போர்த்தொழிலில் மன்மதன் ஊக்கமிகுதலால், அவனுக்கு, வேனிலவ
னென ஒருபெயர்.

ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி கண்டால்,
வேறு அவனை வில்லவரில் வெல்ல உரியார் யார்?
மாறுபடு வெஞ் சமரில் வஞ்சனையில் அன்றிக்
கோறல் அரிது’ என்றனர், குலப் பகை முடிப்பார்.64.-வஞ்சனையால்தான் இவனை வெல்லவேணுமென்று தேவர்கள்
கூறுதல்.

 (அந்தச்சுவேதனுக்குமுன்), ஏறு அனைய வீடுமன் இளைத்தபடி
கண்டால் – ஆண்சிங்கத்தையொத்த வீடுமன்தானே (போரில்) சோர்வடைந்த
விதத்தைநோக்குமிடத்து, வில் அமரில் அவனை வெல்ல உரியார் வேறு யார் –
விற்போரில்அச்சுவேதனைச் சயிக்கத்தக்கவர் வேறு எவருளர்? [ஒருவருமில்லை
யென்றபடி];(ஆகையால்), மாறு படு வெம்சமரில் – (ஒருவரோடொருவர்)
பகைத்துச்செய்யுங்கொடியயுத்தத்தில், வஞ்சனையில் அன்றி கோறல் அரிது –
வஞ்சனைவழியிலல்லாமல் [நியாய வழியில்] (அவனைக்) கொல்லுதல் முடியாது,’
என்றனர் -என்றுசொன்னார்கள்; குலம் பகை முடிப்பார் – (தமது) இனத்துக்குப்
பகையாயிருப்பவனை ஒழிப்பவராகிய தேவர்கள்; (எ – று.)

     தேவர்கூட்டத்திற்சேர்ந்தவரான வசுக்களுக்குப் பகையாகி அவர்கள்
சாபத்தால்பூலோகத்தில் தோன்றின சுவேதனை அவ்வசுக்களில் ஒருவனான
வீடுமனைக்கொண்டு கொல்லவேண்டு மென்னுங் கருத்தோடு தேவர்கள் இங்ஙனம்
உபாயங் கூறினதனால், ‘குலப்பகைமுடிப்பார்’ என்றார். மிருகேந்திரனாகிய
சிங்கம்போல வீடுமன் எல்லாவரசர்க்கும் மேம்பட்டவனாதலாலும், சிங்கம் யானை
முதலிய விலங்குகளை எளிதில் அழித்தல்போல வீடுமன் பகைவர்களை
எளிதிலழிக்கவல்ல னாதலாலும், ‘ஏறனையவீடுமன்’ என்றது. வீடுமன்என்றதன்
இறுதியில், உயர்வு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. ‘வில்லவரில்’ என்ற
பாடத்துக்கு – வில்வீரருள் என்க. “ஆடவரம் பூண்டவரனார்தம் பாற்பெற்றுக்,
கூடமருள் வெல்லுங் கொடுஞ்சிலையா – னோடேநீ, வல்லாண்மை
செய்யில்வலிதொலையான் வஞ்சனையால், வில்லாண்மையோடொழிய வெல்,”
“வஞ்சனையாற் கொல்லிவனை வாழ்வேந்தே மற்றவன்கை, வெஞ்சிலையுண்டாக
வெலற் படான்-அஞ்சுடர்கண், மின்னுயிர்க்கும் வெள்வேல் விராடன் குலமதலை,
யின்னுயிர்க்குங் காலமிது” என்பன பாரத வெண்பா.    

ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன்
ஆகிய நராதிபதி அம் முறை அறிந்தான்;
‘வாகை வரி வில் ஒழிய, வாள், அயில்கள் என்னும்
வேகம் உறு வெம் படைகள் கற்றிலைகொல், வெய்யோய்?’65.-வீடுமன் தேவர் சொல்லையறிந்து சுவேதனைநோக்கி, ‘வில்லன்றி
வேறுபடை உனக்குத் தெரியாதோ?’ எனல்.

இதுவும், மேற்கவியும் – ஒரு தொடர்.

     (இ – ள்.) ஓகை நிகழ் – களிப்புப்பொருந்தின, எண் வகை வசுக்களில்
ஒருத்தன் ஆகிய நராதிபதி – அஷ்டவசுக்களில் ஒருவனான பீஷ்மராசன், அ
முறைஅறிந்தான் – (தேவர்கள் குறித்த) அவ்விதத்தை அறிந்தவனாய்,
(சுவேதனைநோக்கி),வெய்யோய்-பராக்கிரமமுடையவனே! (நீ), வாகை வரி வில்
ஒழிய -வெற்றிமாலையைத்தரித்த கட்டமைந்த வில்லின் தொழில்மாத்திரத்தையே
யன்றி, வாள்அயில்கள் என்னும் வேகம் உறு வெம் படைகள் கற்றிலை கொல் –
வாளும்வேலுமென்கிற உக்கிரத்தன்மை பொருந்திய வெவ்விய ஆயுதத்தொழில்களை
அறிந்தாயில்லையோ? (எ-று.)-“என்றெதிர்சிவேதனொடு இயம்புதலும்” என
அடுத்தகவியோடு இயையும்.

     அந்தத்தேவர்கள் வார்த்தையைக் கேட்டவுடனே, இனி இவனை எளிதிற்
கொல்லலாமென வீடுமன் மகிழச்சியோடு போரில் ஊக்கமிக்கதனால்,
‘ஓகைநிகழ்நராதிபதி’என்றது. அஷ்டவசுக்கள் – அத்வரன், அநலன்,  அநிலன்,
ஆபன், சோமன்,துருவன், பிரத்யூஷன், பிரபாசன் என இவர். இவர்களுட்
பிரபாசனேவீடுமனாப்பிறந்தவன். சுவேதனுக்கு ரோஷமுண்டாய் அவன் வில்லை
விட்டுவேறுபடைக்கலத்தை எடுக்கச் செய்யும்பொருட்டு வஞ்சனையாக இவ்வாறு
கூறினான்வீடுமன். சுவேதனுக்கு வெற்றி தருவது வில்லேயாதலின், அதனை
‘வாகைவில்’ எனவிசேடித்தது.  

என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும், வெள்கி,
குன்று சிலை கொண்டவன் அளித்த சிலை கொள்ளான்,
வென்றி வடி வாள் உருவி, மேலுற நடந்தான்;
நின்றவனும் வேறு ஒரு நெடுஞ் சிலை குனித்தான்.66.-மூன்றுகவிகள்-வாட்படைகொண்டு பொருஞ்
சுவேதனை வீடுமன் அம்பினாற்பொருது கொன்றமையைக் கூறும்.

என்று – என்று இவ்வாறு, சிவேதனொடு – சுவேதனுடனே, எதிர்
இயம்புதலும் – எதிரிற்சொன்னவளவிலே, (அச்சுவேதன்), வெள்கி – நாணமுற்று,
குன்று சிலைகொண்டவன் அளித்த சிலை கொள்ளான் – மகாமேருகிரியை
வில்லாகக்கொண்ட சிவபிரான் (தனக்குக்) கொடுத்தருளினவில்லைக்
கைக்கொள்ளாமல் (நீக்கி), வென்றி வடிவாள் உருவி – வெற்றியைத்தரத்தக்க
கூர்மையான வாளாயுதத்தை உறையினின்று எடுத்துச்சுழற்றி, மேல் உற நடந்தான் –
வீடுமன்மேலே பொருந்தச் சென்றான்: (அப்பொழுது), நின்றவன்உம் –  (எதிரில்)
நின்ற வீடுமனும், வேறு ஒரு நெடுசிலை குனித்தான் – (தானும் வாளையெடுக்காமல்)
மற்றொருநீண்டவில்லை யெடுத்து வளைத்தான்;  (எ-று.)

     எதிர்சிவேதனென வினைத்தொகையாக எடுத்து, எதிர்த்து நின்ற
சுவேதனென்றுங் கொள்ளலாம். தனக்கு விற்போரொழிந்த வாட்போர்
வேற்போர்களில் திறமையில்லை யென்று வீடுமன் இகழ்ந்ததனால், வெள்கினான்.
தான் கையிலுள்ளவரையில் வெற்றியைத்தரவல்ல தென்றசிறப்பு,
‘குன்றுசிலைகொண்டவனளித்த சிலை’  என்றதனால் விளங்கும்.

     மகாமேருமலையைப் பரமசிவன் வில்லாக ஏந்தியது, திரிபுரசங்கார
காலத்தி
லென்க. தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி தாரகாட்சன்
கமலாட்சன்என்னும் மூவரும் மிக்கதவஞ்செய்து மயனென்பவனால் சுவர்க்க மத்திய
பாதாளமென்கிற மூன்று இடங்களிலும் முறையே பசும்பொன் வெண்பொன்
கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற்
சஞ்சரிக்குந்தன்மையுடைய மூன்றுபட்டணங்களைப் பெற்று, மற்றும் பல
அசுரர்களோடு அந்நகரங்களுடனே தாம் நினைத்த இடங்களிற் பறந்து சென்று பல
இடங்களையும் பாழாக்கிவருகையில், அத்துன்பத்தைப் பொறுக்கமாட்டாத தேவர்
முனிவர் முதலியோரது வேண்டுகோளால், சிவபெருமான் பூமியைத் தேராகவும்,
சந்திர சூரியரைத் தேர்ச்சக்கரங்களாகவும், நான்கு வேதங்களைக் குதிரைகளாகவும்,
பிரமனைச் சாரதியாகவும், மகாமேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும்,
விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய அம்பாகவும்,
மற்றைத் தேவர்களைப் பிறபோர்க்கருவிகளாகவும் அமைத்துக்கொண்டு
யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்துப் புன்சிரிப்புச்செய்து அசுரர்
அனைவரையும் பட்டணங்களோடு எரித்தருளின ரென்பது கதை.

வாளின் எதிர் வெஞ் சிலை வளைத்து, வய வீரன்
தோள் இணையில் ஒன்று துணியக் கணை தொடுத்தான்;
காளை ஒரு கை விழவும், மற்றை ஒரு கையால்,
மீளவும் வெகுண்டு, சுடர் வாளினை எடுத்தான்.

(இங்ஙனம் வீடுமன் மாறுபாடாக), வாளின் எதிர்- (சுவேதன்
எடுத்த)வாளுக்கு எதிரிலே, வெம் சிலை வளைத்து – (தான்) கொடிய வில்லை
வளைத்து,வய வீரன் தோள் இணையில் ஒன்று துணிய – (இதுவரையில்)
வெற்றியைப்பெற்றவீரனாகிய சுவேதனது புயங்களிரண்டில் ஒன்று அறுபடும்படி,
கணை தொடுத்தான் -அம்பு செலுத்தினான்; (அப்பொழுது), காளை-சுத்தவீரனான
சுவேதன், ஒருகைவிழஉம்-ஒருகை அற்றுவிழவும், (சிறிதும் பாராட்டாமல்), மீளஉம்
வெகுண்டு -மீண்டுங்கோபங்கொண்டு, மற்றை ஒரு கையால் – வேறொருகையினால்,
சுடர் வாளினை எடுத்தான்-ஒளியையுடைய வாளாயுதத்தை யெடுத்தான்; (எ – று.)

முதலில் வலக்கையால் வாளைஎடுத்துவந்தவன் அவ்வலக்கை வீடுமனால்
அறுக்கப்பட்டவளவில் இடக்கையால் வாளை யேந்தினன் என்பதாம். அப்பொழுதும்
வில்லையேந்தாமல் வாளையே யேந்தினான், வீடுமனது பழிப்புக்கு
இடங்கொடாமைப்பொருட் டென்க. வலக்கை யற்றவர் இடக்கைவில்லில்
எயிற்றுப்படை தொடுத்தல்கூடுதலைக் கீழ் இச்சருக்கத்து இருபத்தெட்டாங்கவியிற்
காண்க.

எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம்
தொடுத்து வரு வீடுமனை, மா முடி துணிப்பான்
அடுத்து வருபோது, அவன் அழன்று, ஒரு சரத்தால்
நடுத் தகை உறாமல், அவன் நல் உயிர் கவர்ந்தான்.

எண் இல் பல பாணம் தொடுத்து வரு வீடுமனை – அளவில்லாத
அநேகம் அம்புகளை எய்துவருகிற பீஷ்மனை, மாமுடி துணிப்பான் –
பெரியதலையையறுக்கும்பொருட்டு, எடுத்த வடி வாளினொடு உம் – (ஒருகையில்)
ஏந்திய கூரிய வாளாயுதத்துடனே, அடுத்து வரு போது – (சுவேதன்)
நெருங்கிவரும்பொழுது, அவன் – அந்தவீடுமன், அழன்று – கோபித்து, ஒரு
சரத்தால் – ஒப்பற்ற அம்பினால், நடு தகை உறாமல் – இடையிலே தடைப்படாமல்,
அவன் நல் உயிர் கவர்ந்தான் – அச்சுவேதனது நல்லஉயிரை (உடம்பினின்று)
வலியவாங்கினான் [அவனைக்கொன்றான் என்றபடி], (எ -று.)

     இப்பாட்டில், நடுத்தகையுறாமல் என்றது, சிறந்தகுணமாகிய நடுவுநிலைமை
தன்பக்கல் பொருந்தாபடி என்றபொருளையும் உணர்த்தும்; தான்கூறியபடி
வில்லைவிட்டு வேறுபடைக்கலமேந்திய வீரனோடு தானும் அப்படைக்கலத்தையே
ஏந்தாது விற் கொண்டு போர்விளைத்தது, உத்தமவீரனான் வீடுமனுக்கு நடுவு
நிலைமை தவறுதலாம்; நடுவு நிலைமை – பக்ஷபாதமில்லாததன்மை. தகை –
தடையென்னும் பொருளில், முதனிலைத்தொழிற்பெயர்; மற்றொருபொருளில்,
தகை – தகுதி, சற்குணம்; இது – தொழிலடியாப் பிறந்ததாயினும் பொருளாற்
பண்புப்பெயர். வீடுமனை மாமுடிதுணிப்பான் – இரண்டுசெயப்படுபொருள்வந்த
வினை; இது வடமொழி நடை; இதனை வடநூலார் த்விகர்மகர்த்தரிப்ரயோகமென்பர்.
இனி, தமிழ்நடையாக, வீடுமனை முடியிலே துணிக்கும்பொருட்டு என்றாவது,
உருபுமயக்கமாய் வீடுமனதுமுடியைத் துணிக்க வென்றாவது கொள்ளலாம்.
வீடுமனைப்போல வஞ்சனைகருதாமல் நீதியாக மானத்தைப் பாதுகாத்து
வாட்போர்செய்து இறந்ததுபற்றி, சுவேதனுயிர் நல்லுயிரெனப்பட்டது, அப்பொழுது
உபயோகித்தது, பிரமாஸ்திரம்: “சென்று திசைவணங்கத் தெய்வப் படை நினைந்து,
துன்று நெடுஞ்சிலைநாண் தோளலைப்ப – மன்றுலகில், மன்னுயிரைத் தான்
படைத்தான் மந்திரத்தால் மற்றவன்ற, னின்னுயிரைப் போக்கினானெய்து” என்பது,
வெண்பாப்பாரதம். பி – ம்: போதவனுமற்றொரு.   

பூழி பட நிலமிசை அப் பொற் சுண்ணம் கமழ்
மேனிப் புதல்வன் வீழ,
வாழி மொழிந்து, உளம் மகிழ்ந்தார், அந்தர துந்துபி
முழங்க, வானோர் உள்ளார்;
ஊழி பெயர்ந்து, உலகு ஏழும் உள் அடக்கி, திசை
நான்கும் உகளித்து ஏறி,
ஆழி பரந்து ஆர்ப்பது என ஆர்த்தனர், அப் பெருஞ்
சேனை அரசர் எல்லாம்.69.- சுவேதன்பட்டதற்கு வானோரும் துரியோதனனும்
பக்கத்து அரசரும் மகிழ்தல்.

பொன் – பொன்நிறமான, சுண்ணம் – சுகந்தப்பொடி, கமழ் –
மணம்வீசப்பெற்ற, மேனி – (தனது) உடம்பிலே, பூழி பட – புழுதிபடிய, அ
புதல்வன்- அந்தச்சுவேதகுமாரன், நிலம்மிசை – தரையிலே, வீழ – இறந்துவிழ, –
வானோர்உள்ளார் – ஆகாயத்தில் (போர்காண) வந்துள்ளவரான தேவர்கள், வாழி
மொழிந்து- வாழ்த்துக்கூறி, அந்தரம் துந்துபி முழங்க – ஆகாயத்தில் தேவ துந்துபி
வாத்தியம்முழங்காநிற்க, உளம் மகிழ்ந்தார் – மனமகிழ்ச்சி கொண்டார்கள்; ஆழி –
கடல், ஊழி- கற்பமுடிவுகாலத்திலே, பெயர்ந்து – தன்நிலைமாறி [பொங்கி], உலகு
ஏழ்உம் உள்அடக்கி – ஏழுலகங்களையுந் தன்னுள்ளே அடங்கச்செய்து, திசை
நான்குஉம்உகளித்து ஏறி-எல்லாத் திக்குக்களிலும் கடந்துகிளர்ந்து, பரந்து-பரவி,
ஆர்ப்பது என- ஆரவாரிப்பதுபோல, அ பெரு சேனை அரசர்எல்லாம் – பெரிய
அந்தக்கௌரவசேனையிலுள்ள அரசர்கள் யாவரும், ஆர்த்தனர்-
ஆரவாரித்தார்கள்;(எ -று.)

     சிறந்தவீரன் மண்ணுலகத்தைவிட்டுத் தமதுவிண்ணுலகத்துக்கு விருந்தானதும்,
தமது இனத்தவரான வசுக்களில் ஒருவனான வீடுமன் வெற்றி கொண்டதும்,
தேவர்கள் மனமகிழ்ந்து பேரிகை கொட்டி வாழ்த்துக்கூறினதற்குக் காரணம்.
சுண்ணம் – சூர்ணமென்னும் வடமொழிச்சிதைவு. வாழி மொழிந்து – வாழியென
மொழிந்து என்க. வானோர் உளம்மகிழ்ந்தார்-“உயர்திணை தொடர்ந்த பொருள்
முதலாறும், அதனொடுசார்த்தினத்திணை முடிபின” என்ற விதிபற்றி,
அஃறிணையாகிய சினைப்பெயர் உயர்திணையாகிய முதலின் முடிபைக் கொண்ட
திணைவழுவமைதி. ஊழி-பிரமனாயுள். உலகேழ் – பூலோகம் புவர்லோகம் ஸு
வர்லோகம் மஹர்லோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் என்னும்
மேலுலகேழும், அதலம் விதலம் ஸு தலம் தராதலம் ரஸாதலம் மஹாதலம் பாதாளம்
என்னுங் கீழுலகேழுமாம். உகளித்து, உகளி-பகுதி.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் ஒன்பதுகவிகள் – பெரும்பாலும்
ஈற்றுச்சீரிரண்டும் மாச்சீரும், மற்றைநான்கும் காய்ச்சீர்களுமாகிய கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்; இவற்றில் ஆறாஞ்சீர்
தேமாச்சீராகவேநிற்கும்.  

உடைந்த தடந் தேர் உருள்கள், உகு குருதிப்
புனல்தோறும், உம்பர் வானில்
அடைந்த வயவருக்கு வழி ஆய சுடர் மண்டலத்தின்
சாயை போலும்;
மிடைந்த குடை காம்பு அற்று மிதப்பனவும், கரிய
புகர் வேற்கண்
மாதர் குடைந்த நறும் பரிமளச் செங் குங்கும நீர்-இடை
எழுந்த குமிழி போலும்.70.-இதுமுதல் மூன்றுகவிகள் – படுகளச்சிறப்புக் கூறும்.

உடைந்த தட தேர் – (போரில்) உடைப்பட்ட பெரிய தேர்களின்,
உருள்கள் – சக்கரங்கள்,-உகு குருதி புனல்தோறுஉம்- பெருகுகிற
இரத்தவெள்ளங்களிலெல்லாம், உம்பர் வானில் அடைந்த வயவருக்கு வழி ஆய
சுடர் மண்டலத்தின் சாயை போலும் – மேலுலகத்து வீரசுவர்க்கத்திற் சேர்ந்த
வீரர்களுக்குவரும் வழியாய் நடுவுதுளைபட்ட சூரியமண்டலத்தின் நிழல்களை
யொக்கும்; காம்பு அற்று மிதப்பன – காம்பு அறுபட்டு (இரத்தத்தில்)
மிதப்பனவாகிய,மிடைந்த குடைஉம் – நெருங்கியகுடைகளும்,- கரிய புகர்-
கருமையானநிறத்தையுடைய, வேல் கண் – வேலாயுதம்போன்ற கண்களையுடைய,
மாதர் -மகளிர், குடைந்த – நீராடின, நறு பரிமளம் செம்குங்குமம் நீரிடை –
நல்லவாசனையையுடைய சிவந்தகுங்குமக்குழம்போடு கலந்த நீரிலே, எழுந்த –
தோன்றிய, குமிழி – குமிழிகளை, போலும்-; (எ-று.)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. போர்க்களத்தில் அழிந்தசேனைகளின்
உடம்பினின்று பெருகிய இரத்தவெள்ளத்தில் கிடந்த தேர்ச்சக்கரங்கள்-
வீரசுவர்க்கமடைபவர் சூரியமண்டலத்தைத் துளைத்துக் கொண்டு செல்லுதலால்,
நடுவில் துவாரம்பொருந்திய அம்மண்டலத்தின் பிரதிபிம்பங்கள்
அவ்விரத்தவெள்ளத்தில் விளங்குவனவற்றைப் போலு மென்பது, முன்னிரண்டடியின்
கருத்து. உகுகுருதிப்புனல் தோறும் என்பது மத்திமதீபம். போரிற் பின்வாங்காது
இறந்தவர் வீரசுவர்க்கம் அடைந்து இன்புறுவரென்பதும், அங்ஙனம் அடைகையில்
இரவிவட்டத்தைப் பிளந்துகொண்டு அதனிடைவழியாய்ச் செல்லுவரென்பதும்
நூற்கொள்கை. கண்ணுக்கு வேல் உவமை-கூர்மைக்கும் வடிவுக்கும் வேட்கைநோய்
விளைத்து ஆடவரை வருத்துதற்கு மென்க. “மாதர் காதல்” என்ற
தொல்காப்பியத்துஉரிச்சொல்லியற் சூத்திரத்தால், மாதரென்றது – விருப்பத்தை
யுணர்த்துவதோர்உரிச்சொல்லாம்; அது – ஆகுபெயராய், விரும்பப்படும்
அழகையுடைய மகளிரைக்குறிக்கும். இரத்தம் செந்நீராதலால் ‘குருதிப்புனல்’
எனப்பட்டது. குங்குமச்செங்குழம்பு- அம்மகளிருடம்பிற்பூசியது. குமிழ்ப்பது-குமிழி:
மொக்குகள்; இ- கருத்தாப்பொருள்விகுதி.

வெங் கலங்கல் கடுங் குருதி வெள்ளத்துக் கொடி
ஆடை மிதக்கும் தோற்றம்,
செங் கலங்கல் புதுப் புனலில் விளையாடித் திரிகின்ற
சேல்கள் போலும்;
பொங்கு அலங்கல் நிருபர் தலை புனை மகுடத் துடன்
கிடப்ப, பொறி ஆர் வண்டு
தங்கு அலங்கல் வண் கனக சததள பங்கய முகுள
சாலம் போலும்.

வெம் – பயங்கரமான, கலங்கல் – கலக்கத்தையுடைய, கடு – மிக்க,
குருதி வெள்ளத்து – இரத்தவெள்ளத்திலே, கொடி ஆடை – துவசச்சீலைகள்,
மிதக்கும் – மிதந்தலைகிற, தோற்றம் – காட்சி,-செம் – செந்நிறமுள்ள, கலங்கல்-
கலக்கத்தையுடைய, புது புனலில் – புதுநீர் வெள்ளத்தில், விளையாடி திரிகின்ற-,
சேல்கள்- சேல்மீன்களை, போலும் – ஒக்கும்;  பொங்கு – விளங்குகிற, அலங்கல்-
போர்ப்பூமாலையைச்  சூடிய,நிருபர் – அரசர்களது, தலை – தலைகள், புனை
மகுடத்துடன் – அணிந்த கிரீடத்துடனே, கிடப்ப – (அவ் விரத்தத்தில்)
விழுந்துகிடப்பவை,- பொறி ஆர்வண்டுதங்கு – புள்ளிகள் பொருந்தின வண்டுகள்
மொய்த்தற்குரியனவும், அலங்கல்-ஒளிசெய்தலையுடையனவுமாகிய, வண் கனக
சததள பங்கய முகுள சாலம் போலும்- அழகிய பொன்மயமான நூற்றிதழ்த்
தாமரையரும்பின் தொகுதியை ஒக்கும்; (எ -று.)

கிரீடத்தோடுகூடிய தலைகள், அடியகன்று மேலே முறையே குறுகி
யிருத்தலால் தாமரையரும்புபோலும். வீரர்கள்முகத்தின் விளக்கத்தையும்
அவர்கள்கிரீடம் பொன்மயமாயிருத்தலையும் நோக்கி, உபமானத்தை
‘வண்கனகபங்கயம்’ என்றார். ‘வண்டுதங்கு’ என்ற உபமானத்தின் அடைமொழியை
நோக்கி, உபமேயத்தில் கிரீடத்து உச்சியில் நீலமணிகள் பதிக்கப்பட்டுள்ளன
வெனக்கொள்ளினுமாம். வண்டுக்குப்பொறிபோல நீலமணிக்கு ஒளியென்க.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. செந்நீருக்கு உவமையாதற் பொருட்டு,
செங்கலங்கற்புதுப்புனல் கூறினார். இரண்டும், வடிவுவமை. சேல்-மீனின்ஓர்சாதி.
சிறியவும் பெரியவுமாகிய கொடிச்சிலைகள், சேலினங்களை யொக்கும்
கநகஸததளபங்கஜமுகுள ஜாலம் – வடசொற்றொடர். சததள பங்கஜம் –
நூற்றிதழ்த்தாமரை. பங்கஜம்-சேற்றிற்பிறப்பது; தாமரைக்குக் காரணவிடுகுறிப்பெயர்

எண் இழந்த குருதி நதி, இரு மருங்கும், கரி, பரி,
ஆள், கரைகள் ஆக,
கண் இழந்த பறை இடையே செருகிய கால்வாய்த்
தலையின் கண்கள் போலும்;
மண் இழந்து படும் அரசர் மணிக்கலங்கள் பல
சிந்தி, வயங்கு தோற்றம்,
விண் இழந்து, பரந்த செழுங் கடலிடையே
மீன்இனங்கள் வீழ்ந்த போலும்.

எண் இழந்த – அளவில்லாத, குருதி நதி – இரத்தப் பெருக்காகிய
ஆற்றிற்கு, இரு மருங்குஉம் – இரண்டுபக்கங்களிலும், கரி பரி ஆள் –
(விழுந்துகிடக்கிற) யானைகளும் குதிரைகளும் காலாட்களும், கரைகள் ஆக –
கரைகளாய் அமைந்திருக்க, கண் இழந்த பறை – (அடிக்குமிடமாகிய)
தோற்கண்ணைஇழந்த பேரிகைகள், இடையே செருகிய – நடுநடுவே பொருந்திய,
கால்வாய்தலையின் கண்கள் போலும் – வாய்க்கால்களின் தொடக்கத்திலுள்ள
மதகின்கண்களை யொக்கும்; மண் இழந்து-நிலவுலகத்தை விட்டு (உயிர்) நீங்கி,
படும் -இறந்துவிழுந்துகிடக்கிற, அரசர்-அரசர்களது, மணி கலங்கள் பல –
அநேகம்இரத்தினாபரணங்கள், சிந்தி – (அவ்விரத்த வெள்ளத்திலே) சிதறி,
வயங்கு-விளங்குகிற, தோற்றம் – காட்சி,-மீன் இனங்கள் – நக்ஷத்திரக்கூட்டங்கள்,
விண்இழந்து – ஆகாயத்தைவிட்டு, பரந்த செழுகடலிடைஏவீழ்ந்த-விசாலமான
நீர்நிறைந்தகடலினிடத்தே விழுந்திருப்பனவற்றை, போலும்-ஒக்கும்; (எ – று.)

    முன்னது – வடிவுவமையும், பின்னது-நிறமும் ஒளியும்பற்றிய உவமையுமாம்.
செந்நிறமுள்ள இரத்தவெள்ளத்தைச் செந்நிறமுள்ள புதியயாற்றுநீர்ப்பெருக்காகவும்,
அதனிரண்டு பக்கத்தும் விழுந்துகிடக்கிற உயிர்நீங்கிய உடல்களை
அதன்கரைகளாகவும் வருணித்தார்; நடுத்தோல் கிழிந்து நீங்க இடையிடையே
விழுந்துகிடக்கிற போர்ப்பறைகளின் துவாரங்களின் வழியாய் அவ்விரத்தம்
பாய்ந்துஅப்பாற் செல்வது, ஆங்காங்குள்ள கால்வாய்த்தலைமதகு கண்களில்
அப்புதுவெள்ளம் பாய்ந்துசெல்வதை யொக்குமென்க. பல்வேறு நிறத்தனவான
இரத்தினங்களைப் பதித்த ஆபரணங்கள் அநேகம் ஆங்காங்குச் சிதறிக்கிடந்து
விளங்குதல், பல்வேறு நிறத்தனவாய் விளங்கும் நட்சத்திரங்களின்கூட்டம்போலும்.
தன்மைத்தற்குறிப்பேற்றவணி. இவ்வணிக்கு, முதலடியில் உருவகம் அங்கமாய்
வந்தது. பி – ம் : வீழ்வபோலும்.     

பட்ட நுதல் களி யானைப் பாண்டவர்தம் படைத்
தலைவன் பட்டானாக,
தொட்ட கழல் தட மகுடச் சுடர் வடி வாள் மகிபர்
எலாம் துணுக்கம் எய்தி,
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார்;
வெயிலோனும், மேல்பால் குன்றில்
கிட்ட, அவன் வடிவமும் இக் குருதியினால் சிவந்தது
என, கிளர்ந்தது அம்மா!73.-சூரியாஸ்தமன வருணனை.

பட்டம்-பெறப்பட்டத்தையணிந்த, நுதல்-நெற்றியையும், களி-
மதக்களிப்பையுமுடைய, யானை-யானைச்சேனையையுடைய, பாண்டவர்தம்-
பாண்டுகுமாரர்களது, படை தலைவன்-சேனாதிபதியான சுவேதன், பட்டான் ஆக-
இறந்தவனாய்விட,-தொட்ட கழல்- அணிந்தவீரக்கழலையும், தட மகுடம் –
பெரியகீரிடத்தையும், சுடர் வடி வாள் – விளங்குகிற கூரிய வாளாயுதத்தையுமுடைய,
மகிபர் எலாம்- (அந்தச்சேனையின்) அரசர்யாவரும், துணுக்கம் எய்தி- கலக்கத்தை
யடைந்து, விட்ட படங்கு இயல் பாடி வீடு அணைந்தார் – (தாங்கள் காலையில்)
விட்டுவந்த கூடாரம் அமைந்த பாசறையிற் போய்ச் சேர்ந்தார்கள்; (அச்சமயத்தில்),
வெயிலோன்உம் – உஷ்ணகிரணனான சூரியனும், மேல் பால் குன்றில் கிட்ட-
மேற்குத்திக்கிலுள்ள அஸ்தகிரியிற் போய்ச் சமீபிக்க, (அப்பொழுது) அவன்
வடிவம்உம்-அச்சூரியனது மண்டலமும், இ குருதியினால் சிவந்தது என –
(போர்க்களத்திலுள்ள) இவ்விரத்தந் தெறித்து அதனாற் செந்நிறமடைந்ததுபோல,
கிளர்ந்தது – செந்நிறமாய் விளங்கிற்று; (எ – று,)-அம்மா – ஈற்றசை;
மிக்கதூரத்தில்வானத்திலுள்ள சூரியமண்டலத்திலும் இவ்விரத்தம்தெறித்த
தென்பதுபற்றியவியப்பிடைச்சொல்லெனினும் அமையும்.

     நான்காமடி – ஏதுத்தற்குறிப்பேற்றவணி; என வென்னும் உருபு
தொடர்ந்துவந்தது. அந்திப்பொழுதில் மிக்குத்தோன்றகிற சூரிய மண்டலத்தின்
செந்நிறத்தை, இரத்தத்தாற் சிவந்த தென்று உத்பிரேக்ஷித்தார். யானை –
மற்றைச்சேனைகட்கும், வாள் – மற்றையாயுதங்கட்கும் உபலக்ஷணம், யானைப்
பாண்டவர் – யானைபோன்ற பாண்டவ ரென்றுமாம். விட்ட படங்கு இயல் –
தொங்கவிட்ட பெருங்கொடி பொருந்தின என்றுங் கொள்ளலாம்.    

திரு நெடுமால் முதலான தேர் வேந்தர் விராடனுழைச்
சென்று, ‘உன் மைந்தர்
இருவரும் இன்று ஒருபடியே வெஞ் சமரில் எஞ்சினர்
என்று இரங்கல், ஐயா!
பொரு முனையில் வீடுமனைப் புறங்கண்டு, நிருபர்
எலாம் பொன்ற வென்று,
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ, தொடு
சரத்தால் வீழ்ந்தது!’ என்றார்.74-இதுவும், மேற்கவியும் – புத்திரசோகமுற்ற விராடனுக்கு வேந்தர்
உபசாரங்கூறுதலைத் தெரிவிக்கும்.

திரு நெடு மால் முதல் ஆன – சிறந்த பெருமைக் குணமுடைய
கண்ணபிரான்முதலாகிய, தேர்வேந்தர் – ரதாதிபதிகளான அரசர்கள், விராடனுழை
சென்று-வீராடராசனிடத்திற்போய், ‘ஐயா- தலைவனே! உன் மைந்தர் இருவர்உம்-
(உத்தரனும் சுவேதனுமாகிய) உனதுகுமாரர் இரண்டுபேரும், இன்று-இன்றைக்கு,
ஒருபடிஏ – ஒரே வகையாக, வெம்சமரில்-கொடியபோரில், எஞ்சினர் – இறந்து
விட்டார்கள், என்று-என்றகாரணத்தால், இரங்கல் – (நீ) வருத்தப்படவேண்டாம்;
பொரு முனையில் – போர்செய்யுமிடத்தில், வீடுமனை புறம் கண்டு-பீஷ்மனை
முதுகுகாட்டியோடச்செய்து, நிருபர் எலாம் போன்ற வென்று- மற்றைப் பகையரசர்
யாவரும் அழியும்படி வெற்றிகொண்டு, விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றுஓ –
வஞ்சனையாக (வில்லை விட்டு) வாளையெடுக்கும்படி (வீடுமன்) செய்த பின்பன்றோ,
தொடுசரத்தால் வீழ்ந்தது-(அவ்வீடுமன்) தொடுத்த பாணத்தால் இறந்து விழுந்தது;
என்றார்-என்று (புகழ்ச்சி தோன்ற உபசாரமொழி) கூறினார்கள்; (எ – று,)

     இங்ஙனம் பொதுப்படக்கூறினும், ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால்,
‘பொருமுனையில் நிருபரெலாம்பொன்ற வென்றுவீழ்ந்தது’ என்பதை இருவருக்கும்,
மற்றதைச் சுவேதனுக்குமாத்திரமும் கொள்க. திருநெடுமால் – இலக்குமிகொழுநனும்,
திரிவிக்கிரமனாய் நீண்டவடிவுடையவனுமான கண்ணபிரானென்றுங்கொள்ளலாம்.
இறத்தலை எஞ்சுதலென்றசொல்லாற் குறித்தது – மங்கலவழக்கு. வீழ்ந்தது –
தொழிற்பெயர், வினைமுற்றின் தன்மைப்பட்டது; இங்ஙனம் வருவதை வடநூலார்
பாவேப்ரயோகமென்பர்.  

பேய் செய்த அரங்கு அனைய பெருங் கானில்
திரிவோர்க்கு, பெற்ற காதல்
தாய் செய்த உதவியினும், தகும் உதவி பல செய்தாய்;
சமரூடு இன்று உன்
சேய் செய்த உயிர் உதவி தேவர் எலாம் துதிக்கின்றார்;
செறிந்தோர் தம்மில்
நீ செய்த பேர் உதவி யார் செய்தார்!’ என உரைத்தான்-
நெறி செய் கோலான்.

பேய் செய்த அரங்கு அனைய – பேய்கள் (தாம்
கூத்தாடுதற்குச்செய்த) நாடகசாலையைப் போன்ற, பெருகானில் – பெரிய காட்டிலே,
திரிவோர்க்கு – அலைந்தஎங்களுக்கு. பெற்ற காதல் தாய் செய்த உதவியின்உம்
தகும் உதவி பல செய்தாய்- (மக்களைப்) பெற்ற அன்புடைய தாய்
(அம்மக்களுக்குச்) செய்யும் உபகாரத்தினும் சிறந்த அநேக உபகாரங்களை (மிக்க
அன்போடு) செய்தருளினாய்; (அதுவுமின்றி), சமரூடு – போரிலே, இன்று –
இன்றைக்கு, உன் சேய் செய்த- உனதுமக்கள் செய்த, உயிர் உதவி-(தன்தனது)
பிராணனைக் கொடுத்தலாகிய உபகாரத்தை, தேவர் எலாம் துதிக்கின்றார்-(இம்
மண்ணுலகத்து மனிதர்மாத்திரமேயன்றி விண்ணுலகத்துத்) தேவரெல்லோரும்
புகழ்கிறார்கள்; செறிந்தோர் தம்மில்-உற்ற நண்பர்களில் நீ செய்த பேர்உதவி யார்
செய்தார் – (நேராகவும் மக்கள் மூலமாகவும்) நீ செய்த பெரியஉதவிபோன்ற
உதவியை வேறு எவர்செய்தார்? [ஓருவருமில்லை யன்றோ?]’, என உரைத்தான்-
என்று உபசாரமொழிகூறினான்: (யாரெனில்),-நெறி செய் கோலான் –
நீதிமுறைமையைச் செய்யுஞ்செங்கோலையுடைய தருமபுத்திரன்; (எ – று.)

விராடன் செய்தது “காலத்தினாற் செய்தநன்றி” ஆதலின், அதற்கு ஒத்ததும்
மிக்கதும் வேறுஇல்லை யென அறிக. நெறிசெய் என்ற அடைமொழியில், தான்
நல்வழியில் நடத்தலும், குடிகளைச் சன்மார்க்கத்திற் செலுத்துதலும் ஆகிய
இரண்டும்அடங்கும். பிசாசங்கள் யதேச்சையாகத் திரியுங் கொடுங்காடென்பார்,
‘பேய்செய்தவரங்கனைய பெருங்கான்’ என்றார். யாவரன்பினும் தாயன்பு
சிறத்தலால்,’பெற்றகாதல்தாய்’ என்றார். சேய் என்ற உயர்திணைப் பெயர் – சாதி
யெருமையாய்,இரண்டு குமாரரையும் உணர்த்திற்று. உயிருதவி – “அன்பிலா
ரெல்லாந் தமக்குரியரன்புடையார், என்புமுரியர் பிறர்க்கு” என்றபடி
தம்மோடுதொடர்ச்சியுடையார்பொருட்டுத் தமதுஉயிரையு மிழந்து உதவியது.
அரசனாற் செய்யப்படும் முறைமைஒருபாற்கோடாது செவ்விய கோல்போலுதலால்,
செங்கோலென்றும், கோலென்றுங்கூறப்படும்; வடநூலாரும் தண்ட மென்பர்.
அரங்கு – ரங்கமென்னும்வடமொழித்திரிபு; நடம்பயிலிடம். இப்பாட்டில்,
திரிவோர்க்கு என்றதைத்தன்மைக்குப்படர்க்கைவந்த இடவழுவமைதி யென அறிக.
இனி, இப்பாட்டில்’நெறிசெய்கோலான்’ என்றதை – கண்ணபிரானெனக் கொண்டால்,
திரிவோர்க்குஎன்ற படர்க்கை, வழாநிலையாம்.

உன் உயிர்போல் நீ வளர்த்த உத்தரன்தன் உயிரும்,
உருத்து எழும் சிவேதன்-
தன் உயிரும் போர் அரசர்தாம் இருந்து கொண்டாடச்
சமரில் ஈந்தார்;
என் உயிரும் நினது அன்றி, யாரது, இனி? சதுர்
முகத்தோன் ஈன்ற பாரின்
மன்னுயிருக்கு உயிர் அனையாய்!’ என உரைத்தான்-
வள மலி சீர் மச்சர் கோமான்.76.-தருமபுத்திரனுக்கு விராடன்கூறும் உத்தரம்

சதுர் முகத்தோன் – நான்குமுகங்களையுடைய பிரமதேவன்,
ஈன்ற- படைத்த, பாரில் – நிலவுலகத்திலுள்ள, மன் -நிலை பெற்ற, உயிருக்கு –
எல்லாவுயிர்களுக்கும், உயிர் அனையாய் – உயிரை யொத்தவனே!
[பேரன்புடையவனே!], உன் உயிர்போல் நீ வளர்த்த, உனதுஉயிரைப்போல(ப்
பாவித்து மிக்க அன்போடு) நீ வளர்த்த உத்தரன் – உத்தரகுமாரன், தன்-
தன்னுடைய,உயிர்உம்-உயிரையும், உருத்து எழும் – (பகைவர்மேற்)
கோபித்துக்கிளம்புகிற,சிவேதன்-,தன் – தன்னுடைய, உயிர்உம்-உயிரையும்,
போர் அரசர் தாம் இருந்து கொண்டாட – போர்த்திறத்தையுடைய அரசர்கள்
இருந்து புகழும்படி, சமரில்-போரில், ஈந்தார் – கொடுத்தார்கள்; இனி-இனிமேல்,
என் உயிர்உம் நினது அன்றி யாரது-எனது உயிரும் உனக்குஉரியதேயல்லாமல்
வேறுயாருக்குஉரியது? [எவர்க்கு முரியதன்று என்றபடி]; என உரைத்தான்-என்று
(தருமனை நோக்கிக்) கூறினான் : (யாவனெனில்), வளம் மலி சீர் மச்சர் கோமான்
– எல்லா வளப்பங்களும்நிறைந்த சிறப்பையுடைய மத்ஸ்ய தேசத்தார்க்குத்
தலைவனான விராடமகாராசன்;(எ- று.)

எவர்க்கும் உயிரினும் அன்புக்கு விஷயமானது பிறிது இன்று ஆதலால்,
அதுவே சிறந்தஅன்புக்குப் பொருந்தின உவமையாக எடுத்துக்கூறப்படும்.
தருமபுத்திரன் கங்கபட்டனாக இருந்த அஞ்ஞாதவாசகாலமாகிய ஒருவருஷத்தில்
உத்தரனை மிகுந்த அன்போடு பாராட்டிவந்ததையே கொண்டு, உபசாரமாக,
‘உன்னுயிர் போல் நீ வளர்த்தவுத்தரன்’ என்றது. ‘என்னுயிரு நினதன்றியாரதினி’
என்றது, நானும் என்னாலியன்றவளவு பெரும்போர்செய்து உன் பொருட்டாகவே
உயிருதவுவேனென்றதாம்; அங்ஙனமே அவன்செய்து முடித்தலை மேற்காண்க.
தருமன்உலகத்து உயிர்களையெல்லாம் தன்னுயிர்போலவே பாவித்து நன்கு
காக்குமவனாதலாலும், எல்லாவுயிர்களின் அன்புக்கும் இடமாகுபவனாதலாலும்,
அவனை ‘சதுர்முகத்தோனீன்றபாரின் மன்னுயிருக்குயிரனையாய்’ என விளித்தான்;
இப்படிப்பட்ட சற்குணசம்பந்நனான உன்திறத்தில் நாங்கள் உயிர்துறப்பது
எங்களுக்குஉற்றதொழிலேயா மென்பது, இதனாற்போதரும். வீரர்பெருமையை
வீரரேயறிவராதலால், ‘போரரசர்கொண்டாட’ எனப்பட்டது, பி-ம்: வீந்தார்,
வீழ்ந்தார்.

முப்பொழுதும் உணர் கேள்வி முகுந்தனுடன் பாண்டவரும்
முடி சாய்த்து, ஆங்கண்
‘எப்பொழுது விடிவது?’ என நினைதரும் எல்லையில்,
வல்லே இரண்டு போரும்,
அப்பொழுது காண்டற்கு வருகின்றான் என, தடந் தேர்
அருக்கன் வந்தான்;
மைப் பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்
மாய்ந்தது அம்மா!77.-சூரியோதய வருணனை

முப் பொழுதுஉம்-மூன்றுகாலத்துச் செய்திகளையும் உணர்-அறிந்த
கேள்வி-நூற்கேள்விகளையுடைய, முகுந்தனுடன் – கண்ணபிரானுடனே,
பாண்டவர்உம்-,  ஆங்கண் – அவ்விடத்திலே [பாசறையில்], முடிசாய்த்து –
தலைசாய்த்து [படுத்து], எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையின் –
(நாம்வெற்றிகொள்ளுமாறு) எப்பொழுது உதயமாகுமென
எண்ணமிட்டுக்கொண்டிருக்கையில்,-தட தேர் அருக்கன்-பெரியதேரையுடைய
சூரியன், இரண்டுபோர்உம் காண்டற்கு அப்பொழுது வல்லே வருகின்றான் என –
இருதிறத்தாருடையபோரையும் பார்க்கும்பொருட்டு அப்பொழுது
விரைவாகவருகிறவன் போல, வந்தான் – வந்துஉதித்தான்: (அங்ஙனம் உதித்த
சூரியனது முன்பு), மை பொழுதுஉம் – இருட்பொழுதாகிய இராத்திரியும், சிவேதன்
எதிர் மத்திரத்தான் வரூதினிபோல்-சுவேதனது எதிரிலே மத்திரதேசாபதியான
சல்லியனது சேனைபோல, மாய்ந்தது- (இருந்தவிடந் தெரியாமல்)அழிந்தது; (எ-று.)-அம்மா-ஈற்றசை; அழித்தற்கரிய இருள் எளிதில் ஒழிந்தது
பற்றியவியப்பிடைச்சொல்லென்றுமாம்.

     முன்நடந்தவை, இப்பொழுது நடக்கிறவை, இனிநடப்பவை என்னும்
அனைத்தையும் அறியும் திரிகாலஞானி, திருமால். கேள்வியாவது-கேட்கப்படும்
நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல்; இது-கற்றவர்க்கு அதனாலாகிய
அறிவை வலியுறுத்துதலும், கல்லாதவர்க்கும் அவ்வறிவை உண்டாக்குதலும் ஆகிய
சிறப்புடைமையால், எடுத்துக்கூறப்பட்டது. முற்று முணர்ந்த முழுமுதற் கடவுளுக்கு
ஒருவரிடம் தாம் கேட்டறிய வேண்டுவது ஒன்றும் இன்றாயினும், ஆராத அருளாற்
கொண்ட அவதாரவிசேடத்திற்கு ஏற்பக் கண்ணன் சாந்தீபினிமுதலியோர் பக்கல்
நூற்பொருள்களைக் கற்றுங் கேட்டும் ஒழுகியதனால், பரத்துவம் சௌலப்பியம்
என்னும் அவ்விரண்டு திருக்கலியாணகுணங்களும் விளங்க, ‘முப்பொழுது
முணர்கேள்வி முகுந்தன்’ என்றார். இனி, மூன்று காலங்களிலும் உள்ளார்
அனைவராலும்கேட்டு அறியப்படும் புகழுடைய கண்ணனெனினும் அமையும்;
கேட்கப்படும் பொருள்க ளெல்லாவற்றினும் எம்பெருமான்புகழ் சிறத்தலாலும்,
செவிபடைத்ததற்குப்பயன் அதனைக்கேட்டலே யாதலாலும், அது,
கேள்வியெனப்பட்டது. முதல்நாட் போரில் தாம்  அடைந்த தோல்வி நீங்க
மறுநாள்போர்செய்யவேண்டுமென்று எழுந்த மிக்கசிந்தையால், பாண்டவர்
பக்கத்தார் பொழுதுவிடிவதை எதிர்நோக்கியிருந்தனரென்க. தேவர்கள்
தத்தம்வாகனத்தின்மீது வானத்துவந்து போர்காணுதல் இயல்பாதலாலும், சூரியன்
‘கண்’ எனப்படுவனாதலாலும்,’இரண்டுபோருங் காண்டற்கு வருகின்றானென’
என்று உத்பிரேட்சித்தார்.சுவேதனெதிர் மத்திரத்தான் வரூதினி மாய்ந்ததைக் கீழ்
(இச்சருக்கத்து)ஐம்பத்துநான்காம்பாட்டிற்காண்க. சுவேதனது சிறந்த பராக்கிரமத்தில்
ஆழ்ந்த சிந்தைஅவனிறந்த பின்பும் மீண்டதில்லையாதலால், கவி அதனை
உவமை கூறியதோடுஇச்சருக்கத்தை முடித்தார்.

     கேள்வி – தொழிலாகுபெயர். ஆங்கண் – அக்கண்என்பதன்
மெலித்தலாகியஅங்கண் என்பதன் நீட்டல்; இனி, ஆங்குஎன்ற
இடைச்சொல்லின்மேல், அண் -இடப்பொருள்காட்டும் விகுதியென்றலும் ‘ஆன்’
என்றது கண் என்பதனோடுசேர்க்கையில் திரிந்த தென்றலும் உண்டு. அர்க்கன்,
வரூதிநீ – வடசொற்கள்.   

——————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading