ஸ்ரீ.வில்லிபாரதம் – மூன்றாம் பாகம் -37. ஒன்பதாம் போர்ச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

பேர் ஆறு மூழ்கி, மறை நூல் பிதற்றி, மிடறும்
பிளந்து, பிறவித்
தூர் ஆறுமாறு நினையாமல், உங்கள் தொழிலே
புரிந்த சுமடீர்!
ஓர் ஆறு பேத சமயங்களுக்கும் உருவாகி
நின்ற ஒருவன்
ஈர்-ஆறு நாமம் உரைசெய்து, மண்கொடு இடுவார்கள்
காணும் இமையோர்.கடவுள் வாழ்த்து

பேர் ஆறு மூழ்கி – பெரிய புண்ணியநதிகளிலே நீராடியும்,
மறைநூல்பிதற்றி மிடறுஉம் பிளந்து – வேதசாஸ்திரங்களை ஓதிக் கண்டம்
வருந்தியும், பிறவிதூர் ஆறும்ஆறு நினையாமல் – பிறப்புக்கு வேராகிய கருமம்
ஒழியும்விதத்தைஎண்ணாமல், உங்கள் தொழில்ஏ புரிந்த – உங்கள் காரியங்களையே
செய்துகொண்டிருந்த, சுமடீர் – அறிவில்லாதவர்களே! ஓர் ஆறு பேதம்
சமயங்களுக்குஉம்- ஒரு ஆறுவகைப்பட்ட மதங்களுக்கும், உரு ஆகி நின்ற –
(அததற்குஏற்றதெய்வ) வடிவமாய் நின்ற, ஒருவன்-ஓப்பற்ற திருமாலினது, ஈர்
ஆறு நாமம்-பன்னிரண்டு திருநாமங்களை, உரைசெய்து-சொல்லி, மண் கொடு
இடுவார்கள் -திருமணை யெடுத்துத் தரித்துக்கொள்பவர்கள் தாமே, இமையோர் –
முத்திபெற்றவராவர்; காணும் – (இதனை) அறியுங்கள்; (எ-று.)

     முத்திபெறுவதற்கு ஏதுவான தத்துவஞானத்தைப்பெற்று
பிரபத்திமார்க்கத்தையும் அதற்குஏற்ற அநுஷ்டாநத்தையும் பெறாமல், பாவந்தீர்ந்து
புண்ணியமுண்டாகும் வழியையே ஆராய்ந்த வண்ணம் புண்ணியதீர்த்தங்களில்
ஸ்நானஞ்செய்தல் வேதசாஸ்திரங்களைப் படித்தல் முதலிய நற்செய்கைகளைச்
செய்தல் பயனற்ற தென்பதாம், மறைநூல் – இருபெயரோட்டு: இனி வேதங்களும்
சாஸ்திரங்களு மென உம்மைத் தொகையுமாம், சாஸ்திரங்களின் சார மறியாமல்
அவற்றைக் கற்றலின் இழிவை விளக்குதற்கு ‘பிதற்றிமிடறும் பிளந்து’ என்றார்.
தூர்-வேர்; பிறவித்தூர்-ஆசையென்றுங்கொள்ளலாம்: என்றது, அவித்தையை;
“அவாவென்ப வெல்லாவுயிர்க்கு மெஞ்ஞான்றும், தவாஅப் பிறப்பீனும் வித்து”
என்ற திருக்குறளைக் காண்க. உங்கள் தொழிலே புரிந்த என்றது, உயிர்க்கு
உறுதிதேடாமல் உடம்புக்கு உறுதி தருவனவாகிய உண்பன உடுப்பன முதலிய
பொருள்களையே தேடிச் சம்பாதித்தலை.    

     பேதசமயங்கள்-ஒன்றோடொன்று மாறுபட்ட மதங்க ளென்றுமாம்.
ஓராறுபேதசமயங்கள்-வைஷ்ணவம் சைவம் சாக்தம் சௌரம் காணபதம்
கௌமாரம் என்னும் ஆறும் வைதிகமத மென்றும்; கபிலமதம் கணாதமதம்
பதஞ்சலிமதம் அக்ஷபாதமதம் வியாசமதம் ஜைமிநிமதம் என்னும் ஆறும்
வேதாந்தமதமென்றும்; பௌத்தம் ஜைநம் பைரவம் காளாமுகம் லோகாயதம்
சூநியவாதம் என்னும் ஆறும் புறச்சமயமென்றும் கூறப்படும். இவற்றிற் கெல்லாம்
ஏற்ற அந்தந்தத்தெய்வமாய்த் திருமால் வீற்றிருக்குந் தன்மை, கீழ்
முதற்போர்ச்சருக்கத்துக் கடவுள்வாழ்த்தில் “இறைஞ்சுவாரிறைஞ்சப்பற்பல்
தேவருமாகி” என்றவிடத்துக் கூறப்பட்டது. ஈராறுநாமம்– கேசவன், நாராயணன்,
மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்ரமன், வாமநன், ஸ்ரீதரன்,
இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன் என்பவை. இந்தத் துவாதசநாமங்களை
முறையேசொல்லி உடம்பில் பன்னிரண்டிடத்தில் முறையே திருமணிட்டுக்
கொள்ளுதல், ஸ்ரீவைஷ்ணவ சம்பிராயதம்: அது- துவாத சோர்த்துவபுண்ட்ர
மெனப்படும். காணும் – தேற்றமுமாம். திரு வாய்மொழியில்
“அயர்வறு மமரர்க ளதிபதி யவனவன்” என்றவிடத்து, ‘அமரர்கள்’ என்றதுபோல,
இங்கே ‘இமையோர்’ என்றது – முத்தியுலகத்தில் நிரதிசய ஆநந்தமனுபவிக்கும்
நித்திய சூரிகளைக் குறிக்கும். தன்னை நெற்றியிலே தரித்த பிராணிகளனைத்தையும்
இறுதியிற் கருமமொழித்து மீளுதலில்லாத முத்தியைப் பெறுவிப்பது
திருமண்காப்பென்னும் ஊர்த்துவபுண்ட்ரக்குறி யென்கிற மகிமையை “என்றும்
நான்முகன் முதல்யாரும் யாவையும், நின்ற பேரிருளினை நீக்கி நீணெறிச், சென்று
மீளாக்குறி சேரச் சேர்த்திடு, தன் திரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே” எனக் கம்பர்
கூறுவர். சுமடீர் – சுமடர் என்பதன் ஈற்றயல் திரிந்த விளி.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும் ஏழாவது புளிமாச்சீரு மாகிய
எழுசீராசிரியவிருத்தங்கள்.
      

முன் போர் உடைந்து, தனது இல் அடைந்த முடி
மன்னன், முன்னை இரவில்
தன் போலும் மாமன்அவனோடு கேடு தரு
தம்பியோடு கருதி,
‘பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை!’
என்று பேச, அவனும்
மின்போல் இறந்த இளையோர்கள் பாடு வினவா
இருந்த பொழுதே,2.- இதுமுதல் ஏழுகவிகளில், எட்டாம்போர்நாளிரவில் துரியோதனன்
படைவீட்டில் நடந்ததொருசெய்தியைத்தெரிவிக்கிறார்.

இதுமுதல் ஐந்துகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) முன் – முன்னே [எட்டாம்போர்நாள் மாலைபொழுதில்], போர்
உடைந்து-யுத்தத்தில் (வீமன்முன்) தோற்று, (பின்பு). தனது இல் அடைந்த – தன்
படைவீட்டை யடைந்த, முடி மன்னன் – கிரீடாதிபதியான துரியோதனராசன்,
முன்னை இரவில் – முன்னிராத்திரியிலே, தன் போலும்  மாமனவனோடும்-
(தீக்குணம் தீத்தொழில்களில்) தன்னையொத்த மாமனாகிய சகுனியோடும், கேடு தரு
தம்பியோடு-(தமக்கும் பிறர்க்கும்) தீங்கை விளைக்கிற தம்பியான துச்சாதனனோடும்,
கருதி-ஆலோசித்து, பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச-
(முன்பகற்பொழுது முழுவதும் தானஞ்செய்து) பின்பகற்பொழுதில்
தானமொழிபவனான கர்ணனை விரைந்துசென்று அழைத்துவா என்று
(துச்சாதனனை நோக்கிச்) சொல்ல, அவன்உம் – (அவ்வாறு துச்சாதனனால்
அழைத்துக் கொண்டுவரப்பட்ட) கர்ணனும், மின் போல் இறந்த இளையோர்கள்
பாடு வினவா இருந்த பொழுது – மின்னல்போல (நிலையில்லாமல்) இறந்துபோன
தம்பி மார்களின் தன்மையைப் பற்றி(த்துரியோதனனை) விசாரித்திருந்த சமயத்து,-
(எ-று.)

     முன்னையிரவு-இராத்திரியின் முன்பாகம். “முற்பகல் முழுவதிலும்
தானஞ்செய்து பிற்பகலில் தானமொழிதல் கர்ணனது இயல்பாதலை”அடுத்ததானமும்
பரிசிலு மிரவலர்க் கருளுடன் முற்பகலளவுங், கொடுத்து” என்றதனாலும் அறிக.
தன்போலும் வேறு உவமைபெறாத என்றுமாம்.  

மா வில் எடுத்து, என் இளையோர்கள் கந்தவகன்
மைந்தன் முன்பு, சிவன் முன்
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது
அல்ல; அனிகக்
கோ வில் எடுத்து என்? மறை நாலும் வல்ல குரு
வில் எடுத்து என்? இனிமேல்,
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும்; நினையாரும்
வாகை புனையார்.’

என் இளையோர்கள்-எனது தம்பிமார்கள் (இருபதுபேர்), கந்தவகன்
மைந்தன் முன்பு-வாயுகுமாரனானவீமனுக்கு எதிரில், மா வில் எடுத்து – பெரிய
வில்லை யேந்தி (ப் போர்செய்து), சிவன் முன் பூ வில் எடுத்தமதன் ஆன ஆறு-
சிவபிரானெதிரிலே புஷ்ப வில்லையெடுத்துப்போர்செய்த மன்மதன்போல் (எளிதில்)
அழிந்த விதம் புகல்கிற்பது  அல்ல – சொல்லுந்தரமுடையதல்ல; அனிகம் கோ-
(எனது) சேனைத்தலைவனாகிய பீஷ்மன், வில் எடுத்து – வில்லையெடுத்துப்
போர்செய்து, என்-என்னபயன்? மறை நால்உம் வல்ல குரு வில் எடுத்து என்-
நான்குவேதங்களையும், வல்ல ஆசிரியனான துரோணன் வில்லையெடுத்துப்
பொருது என்ன பயன்? இனி மேல்-,நீ-,வில் எடுக்கில் – வில்லையெடுத்துப்
போர்செய்தால், அனைவேம்உம் உய்தும்-நாங்கள் எல்லோரும் பிழைப்போம்;
நினையார்உம் வாகை புனையார்-பகைவர்களும் வெற்றிமாலை சூடமாட்டார்கள்:(எ-
று.) -இது-கர்ணனை நோக்கித் துரியோதனன் கூறுவது.

     ‘பூவில்லெடுத்த’ என்ற, ‘புஷ்பதந்வா’ என்னும் மன்மதனது
வடமொழிப்பெயரின் பொருள்பற்றி: காமநூலென்னும் பூவிசேடம் காமனுக்கு
வில்லாமென்று தமிழ்நூலிலும், மன்மத தந்திரமென்னும் புஷ்பம் மன்மதனுக்கு
வில்லா மென்று வடநூலிலுங் கூறுமாறு உணர்க; இனி, பூ வில் எடுத்த –
புஷ்பபாணங்களையுடைய கரும்புவில்லைத் தரித்த என்றுமாம்

என்னும் சொல் அண்ணல் செவி ஏற, நெஞ்சம் எரி ஏற,
வெய்தின் மொழிவான்:
‘முன் உந்தை தந்தை உரைசெய்த மேன்மை அறியாய்கொல்?
அம் பொன் முடியாய்!
தன் உந்து தேரும், வரி வில்லும் உண்டு, சரம் உண்டு;
நாளை அவனே
உன்னும் களத்தில் அவர் வானம் ஆள, உலகு
ஆளுவிப்பன் உனையே.

என்னும் சொல்-என்று (துரியோதனன்) சொன்னவார்த்தை,
அண்ணல் செவி ஏற-பெருமையையுடைய கர்ணனது காதில் பட, (அதனைக்
கேட்டவுடனே), (அக்கர்ணன்), நெஞ்சம் எரி ஏற- மனத்தில் கோபாக்கினி மிக,
வெய்தின் – கடுமையாக, மொழிவான் – சொல்லுவான்; (என்னவென்றுஎனில்.)-
முன்-முன்னே [அணிவகுத்தபொழுது],  உந்தைதந்தை-உனதுதந்தை
யான
திருதராட்டிரனது (பெரிய) தந்தையான வீடுமன், உரை செய்த-(என்னை
அர்த்தரதனாகச்) சொன்ன, மேன்மை-செருக்கை, அறியாய்கொல் –
அறிந்திலையோ? அம் பொன் முடியாய் – அழகிய  பொன்னினாலாகியகிரீடத்தை
யுடையவனே! தன் – அவ்வீடுமனது, உந்து தேர்உம்-செலுத்தப்படுகிற தேரும், வரி
வில்உம் – கட்டமைந்த வில்லும், உண்டு – உள்ள; சரம் உண்டு – அம்புகள்
உள்ளன; அவன்ஏ – அவ்வீடுமனே, நாளை-நாளைக்கு [இனி மேல் என்றபடி],
உன்னும் களத்தில் -கருதிச்செய்யும்போரிலே, அவர் வானம் ஆள-
(பாண்டவராகிய) அப்பகைவர்கள் (இறந்து) வீரசுவர்க்கமடைய, உனைஏ உலகு
ஆளுவிப்பன் – உன்னையே உலகமாளும்படி செய்வான்; (எ – று.)-இதுவும்,
மேற்கவியும் கர்ணனது மறுமொழி. பின்னிரண்டடி -பிறகுறிப்பு. பி-ம்:
செவியேறவெய்தினிடிபோலதிர்ந்து.       

வில் கவ்வு வாளி அடல் ஐவர்மீது விட அஞ்சி,
வீரர் எதிரே
புல்கவ்வுமாகில், விரைவோடு கங்குல் புலரா முன்
வந்து பொருவேன்;
சொல் கவ்வையாக நினையற்க! கொன்று சுரர் நாடு
அளிப்பன், இனி உன்
சில் கவ்வை தீர அவருக்கும் நின்ற திருமாலினுக்கும்!’ எனவே,

வில் கவ்வு வாளி – வில்லில்தொடுக்கிற அம்புகளை, அடல்
ஐவர்மீதுவிட-வலிமையையுடைய பஞ்சபாண்டவர்கள்மேற் செலுத்துதற்கு, அஞ்சி –
பயந்து,(அவ்வீடுமன்), வீரர் எதிரே- பலவீரர்கள் முன்னிலையிலே, புல் கவ்வும்
ஆகில் -(தனது தோல்வி தோன்ற வாயினால்) புல்லைக் கௌவியெடுப்பானனால்,
விரைவோடு வந்து – (நான்) துரிதமாக வந்து, கங்குல் புலரா முன் – இராத்திரி
கழிந்து விடிவதற்குமுன்னமே, பொருவேன் – [உன்பக்கத்துப்] போர்செய்வேன்;
சொல் – (எனது) சொல்லை, கவ்வை ஆக நினையற்க-வீணொலியாக
நினையாதிருப்பாயாக; இனி உன் சில் கவ்வை தீர- இனிமேல் உனது சில
கவலைகள் நீங்கும்படி, அவருக்குஉம்-அப்பாண்டவர்களுக்கும், நின்ற
திருமாலினுக்குஉம் – (அவர்களுக்கு உதவியாய்) நின்ற கண்ணனுக்கும், கொன்று
சுரர் நாடு அளிப்பன் – கொன்று வீரசுவர்க்கத்தைக் கொடுத்திடுவேன், என-
என்று(கர்ணன்) சொல்ல,- (எ-று.) “இம்மொழி சென்று கங்கைக்சுதனுக்கு
உரைக்கவென” என அடுத்த கவியோடுதொடரும்.

     கவ்வு, கவ்வை=கௌவு, கௌவை: முதற்போலி, தோற்றவர் வாயினாற் புல்லைக்கவ்வுதல், மரபு.கௌவை – துன்பமும். பழி மொழியுமாம்

துச்சாதனா! இம் மொழி சென்று கங்கை சுதனுக்கு
உரைக்க’ எனவே,
நச்சு ஆடு அராவை அனையானும் அங்கு ஒர் நொடி
உற்ற போழ்தில் நடவா,
எச் சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்தனக்கு
நடு ஓர்
அச்சாணி ஆன அவனுக்கு இவன் சொல் அடைவே
புகன்றனன்அரோ.

(என்று கர்ணன் சொன்ன வார்த்தையைக்கேட்டுத் துரியோதனன்
தனது அடுத்த தம்பியை நோக்கி; ‘துச்சாதனா – துச்சாசனனே! இ  மொழி –
இந்தக் கர்ணண்வார்த்தையை, சென்று – (நீ) போய், கங்கை சுதனுக்கு உரைக்க –
வீடுமனுக்குச் சொல்வாயாக,’  என-என்று சொல்ல,- நஞ்சு ஆடு அராவை
அனையான்உம் – விஷத்தையுடையதும் (படமெடுத்து) ஆடுந் தன்மையதுமான
பாம்பை யொத்த கொடிய அத்துச்சாசனனும், அங்கு – அவ்வீடுமனுள்ளவிடத்தில்,
ஒர் நொடி உற்ற போழ்தின் – ஒரு நொடியளவு பொருந்தினபொழுதிலே, நடவா –
சென்று சேர்ந்து,-சாபம் மன்னும் – விற்கள்பொருந்திய, அணி – அழகிய, எ யூகம்
ஆன – எல்லாச்சேனைகளுமாகிய, இரதந்தனக்கு – தேருக்கு, நடு – நடுவிலே,
ஓர் அச்சு ஆணி ஆன – ஒரு அச்சாணியையொத்த, அவனுக்கு – அவ்வீடுமனுக்கு,
இவன் சொல் – இந்தக்கர்ணனது வார்த்தையை, அடைவே புகன்றனன்-ஓழுங்காகச்
சொன்னான்; (எ-று.) -அரோ – ஈற்றசை. இது-கர்ணன் கூறியதை வீடுமனிடம்
தெரிவிக்குமாறு துரியோதனன் துச்சாதனனிடஞ் சொல்ல, அவன் அங்ஙனே
கூறியதைத் தெரிவிக்கும்.

வியூகத்தையே இரதமாக உருவகஞ்செய்து, வீடுமனை அச்சாணியாக
உருவகஞ்செய்தார். அச்சு – சக்கரங்கோக்கும் மரம். ஆணி – அச்சக்கரம்கழலாமல்
அச்சின்நுனியில் செருகுவது. அந்த ஆணி தான் ஒன்றாய் ஓரிடத்திலிருந்து
கொண்டே மிகப் பெரிய தேர்முழுவதுக்கும் ஆதாரமாயிருத்தல் போல, வீடுமன்
தான் ஒருவனாய் ஓரிடத்திலிருந்து கொண்டே வில்முதலிய ஆயுதங்களையுடைய
பெரியசேனை முழுவதுக்கும் ஆதாரமாயிருந்து நடத்தும்
வலிமையையுடையவனென்க.

பேரன் புகன்ற மொழி கேள்விசெய்து, பெரியோன்
முகிழ்த்து நகையா,
‘வீரம் புகன்று என், இனி நான் உமக்கு? விசயற்
செறுத்தல் முடியாது;
“ஈரம் துறந்த ஒரு நூறு பேரை மகுடம்
துணிப்பல்!” எனவே
நேர் அன்று அவைக்கண் உரைசெய்த வாய்மை
நிறைவேறும், நாளை உடனே.

இதுமுதல் எட்டுக்கவிகள் – குளகம்.

     (இ-ள்.) பேரன் புகன்றமொழி-பௌத்திரனான துச்சாசனன்
சொன்னவார்த்தையை கேள்வி செய்து – கேட்டலைச்செய்து (கேட்டு), பெரியோன்
– பெரியபாட்டனான வீடுமன், முகிழ்த்து நகையா-சிறிதாகக்சிரித்து [புன்சிரிப்புச்
செய்து], ‘இனி – இப்பொழுது, நான்-, உமக்கு – உங்களுக்கு, வீரம் புகன்று-
வீரவாதமானவார்த்தையைச் சொல்லுதலால், என் – என்னபயன்? விசயன்
செறுத்தல் – அருச்சுனனைக் கொல்லுதல், முடியாது – (எவர்க்கும் எப்பொழுதும்)
ஆகாது; ஈரம் துறந்த – (மனத்தில்) இரக்கமில்லாத, ஒரு நூறு பேரை –
(துரியோதனாதியர்) நூற்றுவரையும், இனி-, மகுடம் துணிப்பல் –
தலையறுத்திடுவேன், என-என்று, நேர் – (யாவர்க்கும்) எதிரிலே, அன்று-
(திரௌபதியைத் துகிலுரிந்த) அக்காலத்தில் உரை செய்த – (வீமன்)சொன்ன,
வாய்மை-சபதவார்த்தையும், நாளை உடனே-இனி விரைவிலேயே, அமர்க்கண்-
போரில், நிறைவேறும் – தவறாமல் நடந்துவிடும்;(எ-று.)-இப்பாட்டில், ‘நகையா’
என்பது, “குன்றுவிடைநல்கி” என அடுத்த கவியில் தொடரும். இதுவும் அடுத்த
கவியும், அது கேட்ட வீடுமன் பதில்கூறி விடைகொடுத்தமையைத் தெரிவிக்கும்.

பாட்டன்பெயரைப் பௌத்திரனுக்கு இடுவது பெரும்பாலும் உலகமர
பாதலால், அம்மகன்மகனுக்கு, பேரன் என்பது-காரணப் பெயர், வீமன் செய்த
சபதத்தை “பாஞ்சாலிக் கரசவையிற்பழுதுரைத்தோனுடலெனது படையா மேழி,
போஞ்சாலி னிணஞ்சொரியத் துணைவரொடு குலமாளப்பொருவன் யானே எனக்
கீழ்ச் சூதுபோர்ச்சருக்கத்திற் காண்க. மகுடம் – தலைக்கு, தானியாகுபெயர்.
பி – ம்:
துணிப்பனினியென்.

ஒரு நாளும் நீவிர் பொறுமின்கள்; உம்மை உலகு
ஆளுவிக்க வருவோர்
வரு நாள் தொடங்கி அமர் செய்து, தெவ்வை மடிவிப்பர்,
சொன்ன வகையே;
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி, நுமரோடு
இயைந்து குழுமி,
பெரு நாள் இருந்து, நனி வாழ்திர்!’ என்று, விடை நல்கி
விட்ட பிறகே,

ஒரு நாள்உம் நீவிர் பொறுமின்கள் – (இன்னும்) ஒருநாள்
மாத்திரம்நீங்கள் பொறுத்துக்கொண்டிருங்கள்; உம்மை உலகு ஆளுவிக்க
வருவோர் -உங்களை உலகத்தையாளும்படி செய்ய (த் துணையாய்) வருபவர்,
வரு நாள்தொடங்கி – (அவ்வொருநாள்கழித்ததபின்)வருகிற நாள் முதல், அமர்
செய்து -போர்செய்து, சொன்ன வகைஏ – (தாம்) சொன்ன விதமாகவே, தெவ்வை
மடிவிப்பர்- பகைவர்களை அழித்திடுவார்; (அதன்பின் நீங்கள்), குரு நாடுஉம் –
இந்தக்குருநாட்டையும் மற்றை வளம் நாடும்உம் – வளங்களையுடைய
மற்றைநாடுகளையும், எய்தி – (உங்களுக்குஉரியவையாக) அடைந்து, நுமரோடு
இயைந்து – உங்களுடைய  பந்துமித்திரர்களோடு சேர்ந்து, குழுமி – கலந்து, பெரு
நாள் இருந்து- பலகாலம் (உயிரோடு) இருந்து, நனி வாழ்திர்-நன்றாக வாழ்வீர்,’
என்று – என்றுசொல்லி, விடைநல்கி – (துச்சாதனனுக்கு) விடைகொடுத்து,
விட்டபிறகு – (அவனை) அனுப்பின பின்பு,-(எ-று.)-“கண்ணுந் துயின்று” என
அடுத்தகவியோடு தொடரும்.

     இந்த எட்டுநாளும் பொறுத்தீர்கள்: இன்னும் ஒருநாள் பொறுங்கள்:
பத்துநாளில் நான் அழிவேன், அதன்பின் உங்ளைக் காப்பவர் காக்கட்டும்:
அவர்கள் பகைவரை அழிக்கட்டும்; நீங்கள் அரசாண்டு வெகுகாலம் க்ஷேமமாக
வாழுங்களென்றன னென்பதாம். ஒருநாளும். உம் – இறந்ததுதழுவிய எச்சத்தோடு
இழிவுசிறப்பு, நீவிர் – முன்னிலைப்பன்மைப்பெயர்: இது முதல்
வேற்றுமைக்குமாத்திரமே வரும். ‘வருவோர்’ என்றது கர்ணனை;
இகழ்ச்சிப்பன்மை;   

கண்ணும் துயின்று, துயிலும் உணர்ந்து, சிறுகாலை
உள்ள கடனும்
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி, இகல்
மன்னர் சூழ வரவே,
மண்ணும் குலுங்க, வரையும் குலுங்க, எழு தூளி
மாதிரமும் மால்
விண்ணும் புதைக்க, அடல் ஆகவத்தின் மிசை
சென்று புக்கு, விரகால்,9.-இதுவும் அடுத்தகவியும்-வீடுமன்துயின்றெழுத்து
போர்க்களங்குறுகி அணிவகுத்துநின்றமை கூறும்.

கண்உம் துயின்று-கண்மூடியுறங்கி, (இராத்திரி கழிந்தபின்), துயில்உம்
உணர்ந்து – தூக்கமும் விழித்து, சிறு காலை உள்ள கடன்உம்-உதயகாலத்திற்
செய்யவேண்டிய (சந்தியா வந்தனம் முதலிய) கடமைகளையும், எண்ணும் கருத்தின்
வழிஏ – நினைத்தற்குக் கருவியான மனத்தின் வழியாக [மனவமைதியோடு], இயற்றி
– செய்துமுடிந்து,-(பின்பு), இகல் மன்னர் சூழ வர-வலிமையையுடைய அரசர்கள்
(தன்னைச்) சுற்றிலும் வரவும், (அந்தப் பாரத்தினால்), மண்உம் குலுங்க
(அசலையாகிய) பூமியும் நடுங்கவும், வரைஉம் குலுங்க-(அசலமாகிய) மலைகளும்
சலிக்கவும், எழு தூளி மாதிரம்உம் மால் விண்உம் புதைக்க – மேற்கிளம்பின
புழுதிதிக்குக்களையும் பெரியஆகாயத்தையும் மூடவும், அடல் ஆக வத்தின்மிசை-
கொடிய போர்க்களத்திலே, சென்று புக்கு-போய்ச் சேர்ந்து, விரகால் – தந்திரமாக,-
(எ-று.)-“மானவுரவோன்-அணிசெய்து” என மேற்கவியோடு தொடரும்.

நாகம் குறித்த கொடி மன்னர் மன்னை நடுவே
நிறுத்தி, அடைவே
பாகங்கள்தோறும் ஒரு கோடி மன்னர் பகதத்தனோடு
நிறுவி,
பூ கம்பம் ஆக, இனமோடு அலம்புசனும் முன்பு
போக, ஒரு பேர்
யூகம் சருப்பதோபத்ரம் ஆக அணி செய்து,
மான உரவோன்,

நாகம் – பாம்பின்வடிவத்தை, குறித்த-எழுதிய, கொடி –
துவசத்தையுடைய, மன்னர் மன்னை – ராஜராஜனான துரியோதனனை, நடுஏ
நிறுத்தி – சோம  மத்தியிலே நிற்கச்செய்து, அடைவுஏ – முறையே, பாகங்கள்
தோறும்- எல்லாப்பக்கங்களிலும், ஒரு கோடி மன்னர் – ஒருகோடி அரசர்களை,
பகதத்தனோடு- பகதத்தனுடனே, நிறுவி – நிற்கச்செய்து, பூகம்பம் ஆக-
(அதிபாரத்தால்) பூமியில் நடுக்கமுண்டாம்படி, இனமோடு-(தன்) கூட்டமாகிய பல
அரக்கர்களோடு, அலம்புசன்உம்-அலம்புசனென்னும் இராக்கதனும், முன்பு போக –
(சேனையின்) முன்னே செல்லும்படி, சருப்பதோபத்ரம் ஒரு பேர் யூகம் ஆக –
ஸர்வதோபத்ரமென்னும் ஒரு பெரிய படைவகுப்பாக, அணி செய்து –
(சேனைகளை) அணி வகுத்து, மானம் உரவோன்-பெருமையையும்
வலிமையையுமுடைய வீடுமன்,-(எ-று.)-“அமர்க்கண் நின்றான்” என அடுத்த
கவியோடு தொடரும்.

     சருப்பதோபத்ரம் – வடசொல்திரிபு; அதாவது – நாற்புறத்திலும் எங்கு நின்று
பார்த்தாலும் ஒரேவிதமாகக் காட்சிதோன்றும்படி சேனையை வகுத்தவியூகம்; இது-
சித்திரகவிகளில் ஒன்றாகவும் வழங்கும். ஒன்பதாநாட்போரின் தொடக்கத்தில் சில
உத்பாதங்கள் உண்டானதாக முதனூலிற் கூறியுள்ளது; அதை இப்பாட்டில்,
‘பூகம்பமாக’ என்றதனால் குறிப்பித்தார் போலும்.

நின்றான், அமர்க்கண் அவர் அங்கு நிற்க, இவர் இங்கு,
‘நென்னல் நிருதன்
கொன்றான்’ என, தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை
நீடு கொலை செய்து,
ஒன்றாக மன்னர் பலர் ஆவி கொண்ட உரவோனும்,
உம்பர் பகை போய்
வென்றானும், மற்றை இளையோரும், ஒன்றின் ரகு அற்ற
கோவும், முதலோர்,11.- மூன்றுகவிகள்-யுதிட்டிரன்பக்கத்தார் போர்க்களங்குறுகி
அணிவகுத்துநின்றமை கூறும்.

அமர்க்கண் நின்றான் – போர்க்களத்தில் நின்றிட்டான்; அவர்
அங்குநிற்க – அந்தத்துரியோதனன் பக்கத்தவர்கள் அவ்வாறுநிற்க,-இங்கு –
இப்பக்கத்தில்,கென்னல்-நேற்று, நிருதன்-(அலம்புசனென்னும்) இராக்கதன்,
கொன்றான் என-(இராவானைக்) கொன்றிட்டா னென்று, தன் மதலைக்கு – தனது
(தம்பியின்)மகனான இராவானுக்காக (இரங்கி), (அதற்குஈடாக), ஒர் எண்மர்
எழுவோரை (துரியோதனன் தம்பிமார்களுள்) ஒருஎட்டுப்பேரையும் (மற்றும்)
ஏழுபேரையும், நீடுகொலை செய்து-பெருங்கொலைசெய்து [ஒருங்கே அழித்து],
ஒன்று ஆக -(அவர்களோடு) ஒருசேர, மன்னர் பலர் ஆவி கொண்ட-(மற்றும்)
பலஅரசர்களதுஉயிரைக் கவர்ந்த, உரவோன்உம்-வலிமையையுடைய வீமனும்,
உம்பர் பகை -தேவர்களுக்குப் பகைவரான நிவாதகவசகாலகேயர்களை, போய்
வென்றான்உம் -சென்று சயித்த அருச்சுனனும், மற்றை இளையோர்உம் –
மற்றைத்தம்பியரான நகுலசகதேவரும், ஒன்றின் விரகு அற்ற – ஒருவகையிலும்
வஞ்சனையில்லாத, கோஉம் -தலைவனான தருமனும், முதலோர் –
முதலியவர்களாகிய. இவர் -இந்தப்பக்கத்தார்,- (எ – று.) -“களத்தினிடைவந்து”
என வருங் கவியோடுதொடரும்.

     ஒன்றின்விரகற்ற – மனம் மொழி மெய் என்னுந்திரிகரணங்களின் சிந்தை
சொல் செயல் என்னும் மூவகைத்தொழிலிலும் வஞ்சனையில்லாத.   

மற்று உள்ள மன்னர் புடை போத, முன்னர் மழைமேனி
மாயன் வரவே,
உற்று உள்ள வீரரொடு சேனை நாதன் அணி நிற்க, ஒண்
கொய் உளை மா
முன் துள்ள, எங்கும் எழு பூழி துள்ள, முரசங்கள்
துள்ள, மிகவும்
செற்று உள்ளம் மேவு கனல் துள்ள, வந்து செரு வெங்
களத்தினிடையே,

மற்று உள்ள மன்னர் – மற்றுமுள்ள அரசர்கள் பலர், புடை
போத -பக்கங்களில் வரவும், மழை மேனி மாயன்-நீல மேகம் போலுந்
திருமேனியையுடைய கண்ணன், முன்னர்வர – முன்னேசெல்லவும், உற்றுள்ள
வீரரொடு – கூடப்பொருந்தியுள்ள வீரர்களுடனே, சேனை நாதன் – (தன்)
சேனைத்தலைவனான திட்டத்துய்மன், அணி நிற்க – படை வகுப்பின் முன்னே
நிற்கவும், ஒள்கொய் உளை மா – பிரகாசமான கத்திரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய
குதிரைகள், முன் துள்ள-முன்னேகுதித்துச் செல்லவும், எழு பூழி – மேலேழுகிற
புழுதி, எங்கும் துள்ள – எல்லாவிடத்தும் பரவவும், முரசங்கள்-யுத்தபேரிகைகள்,
மிகஉம் துள்ள-மிகுதியாக ஒலிக்கவும், செற்று உள்ளம் மேவு கனல்-கோபித்து
மனத்திற்பொருந்திய தீ [கோபாக்கினி], துள்ள – மூண்டெரியவும்,- வெம் செரு
களத்தினிடைவந்து-கொடிய போர்க்களத்திலே வந்து,-(எ-று.)-“அமராடலுற்ற
பொழுது” என வருங் கவியோடு தொடரும். சொற்பொருட்பின்வருநிலையணி.

செம் பற்பராக, முடி, மா மதாணி, செறி தொங்கல்,
வாகு வலயம்,
பைம் பற்ப ராக மலர் வல்லியோடு திருமேனி
சோதி பயில்வான்,
வெம் பற்ப ராக வரை யூகமாக, முறையால் அணிந்து,
வெயில் கால்
அம் பற்ப ராக பதி என்ன நிற்க, அமர் ஆடல்
உற்ற பொழுதே,

செம்-சிவந்த, பற்பராகம் – பதுமராகத்தினங்களைப் பதிக்கப்பெற்ற,
முடி-கிரீடமும், மா-சிறந்த, மதாணி-பதக்கம், செறி-பொருந்திய, தொங்கல்-
ஆரங்களும், வாகு வலயம் – தோள்வளைகளும், பை-குளிர்ந்த, ராகம் பற்பம்
மலர்-செந்தாமரைப்பூவிலே (வீற்றிருக்கிற), வல்லியோடு – பூங்கொடி போல்மெல்லிய
திருமகளுடனே, திரு மேனி-(தன்னுடைய) அழகிய வடிவத்தில், சோதி பயில்வான் –
ஒளிவிளங்கப்பெற்றவனாகிய கண்ணபிரான்,-வெம்,-(பகைவர்களுக்குப்)
பயங்கரமானதும், ராகம் – (தம்மவர்க்கு)  ஆசையை (வளர்ப்பதும்), வரை-
மலைபோல (எதற்குஞ் சலியாததுமாக வுள்ள), பற்பயூகம் ஆக-பத்மயூகமாக,
முறையால்-ஒழுங்காக, அணிந்து-(பாண்டவசேனையைப்) படைவகுத்து,-வெயில்
கால்-உஷ்ண கிரணத்தை வீசுகிற, அம் பற்பம் ராகம் பதி என்ன – அழகிய
தாமரைக்கு அன்புள்ள கணவனான சூரியன்போல, நிற்க-விளங்கிநிற்க,-அமர்
ஆடல் உற்ற பொழுது – (எதிரிகளோடு) போர்செய்யத் தொடகினபொழுது,- (எ-
று.)-“அலம்புசன் வந்தனன்” என அடுத்த கவியோடு முடியும்.

     எம்பெருமானது திருமேனியில் கிரீடம் முதலிய ஆபரணங்களும்
இலக்குமியும் விளங்குந் தன்மையை முன் இரண்டடிகளில் விவரித்தார்.
சூரியனைக்கண்டமாத்திரத்தில் மலர்தலும், காணாதபொழுது குவிதலுமாகிய
இயல்புபற்றித்தாமரைக்குச் சூரியனைக் கணவ னென்றல், மரபு. முதலடியில்,
பற்பராகம் -பத்மராகம் என்னும் வடமொழித் திரிபு; நவரத்தினங்களுள்
மாணிக்கத்தின்வகைகளில் ஒன்று, பதுமம் – செந்தாமரைமலர் போன்ற, ராகம் –
செந்நிறமுள்ளதுஎன்று காரணப்பெயர். மதாணி – பேரணிகலனென்பர்.
பாஹு வலயம்-வடசொற்றொடர். பின் மூன்று அடிகளிலும், பற்பம் – என்னும்
வடமொழித் திரிபே,ராகம் என்னும் வடசொல்லுக்கு – இரண்டாம் அடியில்
செந்நிறமென்றும், மூன்றாம்அடியில் ஆசையென்றும், நான்காம் அடியில்
அன்பென்றும் பொருள். பைம்பற்பம்-வாடாமல் பசுமையாகவுள்ள தாமரை
யென்றுமாம். வல்லி-கொடிபோன்றபெண்ணுக்கு உவமவாகுபெயர். மூன்றாமடியில்
பற்பராகவரையூகம் என்றே எடுத்து- பற்பராகமணிதோன்றுதற்குஇடனாக
வரைவடிவான வியூகம் [அசலவியூகம்]என்றலும் ஒன்று.    

இந்திரனும் ஏனை இமையோர்களும் நடுங்க,
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர, அதிரா,
வெந் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்
வந்தனன், அலம்புசன், வலம் புனை புயத்தான்.14.-வீமனுடன்பொர அலம்புசன் வருதல்.

வலம் புனை புயத்தான்-பலத்தைக்கொண்ட
தோள்களையுடையவனாகிய, அலம்புசன்-அலம்புசனென்னும் அரக்கன்,-
இந்திரன்உம் ஏனை இமையோர்கள்உம் நடுங்க – தேவேந்திரனும்
மற்றைத்தேவர்களும், நடுக்கமடையவும், அந்தரம்உம் எண் திசை உம் நின்று
அதிர-மேலுலகமும் எட்டுத்திக்குக்களும்மிக அதிர்ச்சி பெறவும், அதிரா-
கர்ச்சனைசெய்துகொண்டு, வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்-
கொடியபோருக்கு (அடையாளமாகத் தும்பைப்பூ) மாலை சூடிய வீமனுடனே
போர்செய்வதற்கு, வந்தனன்-,(எ – று.)-வலம் – வடசொல் திரிபு.

     இதுமுதல் பதினைந்து கவிகள்-கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் ஐம்பதாங்கவி
போன்ற கலிவிருத்தங்கள்.       

செருவில் வெருவா நிருத சேகரன், வயப் போர்
மருவு சுடர் வாளினுடன், வந்த நிலை காணா,
இரவி வரு தேர் அனைய தேரின்மிசை இழியா,
‘உரும் உரும்’ எனா, விரைவின் ஓடி எதிர் வந்தான்.15.-அலம்புசன்வருவதுகண்டு வீமன் தேரினின்று இறங்கி
அவ்வரக்கனெதிரே யோடுதல்.

செருவில் வெருவா – போரில் அஞ்சாத, நிருதசேகரன் –
அரக்கர்களுக்குமுடியணிபோலச்சிறந்தவனான அலம்புசன், வய போர் மருவு-
வலியபோரைச்செய்தற்குப்பெருந்திய, சுடர் வாளினுடன் – ஒளியையுடைய
வாளாயுதத்துடனே,வந்த- (தன்னையெதிர்த்து) வந்த, நிலை-நிலைமையை, காணா-
பார்த்து,-(வீமன்)இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா-சூரியன் வருகிற
தேரையொத்த(தன்) தேரின் மேல் நின்றுஇறங்கி, உரும் உரும் எனா-(காண்பவர்)
இடி இடிஎன்றுசொல்லும்படி, விரைவின் எதிர் ஓடிவந்தான் – வேகமா
(அவ்வரக்கனது)எதிரில்ஓடிவந்தான்;(எ-று.)-அடுக்கு-அச்சம்பற்றியது –
இரவிவருதேர்தடைப்படாதுவிரைந்துசெல்லுதற்கு உவமை.

யாளி ஒர் இரண்டு இகல் புரிந்தது என இகலா,
மீளிமையினாலும் வலியாலும் விறல் மிக்கோன்,
வாளின்மிசை வாளதனை வைத்து, அடல் அரக்கன்
தோளில் ஒரு தோள் நிலன் உறும்படி துணித்தான்.16.-வீமன் அலம்புசனுடைய ஒருதோளைத் துணித்தல்

(இவ்விருவரும்), யாளி லுர் இரண்டு இகல்புரிந்தது என – ஓர்
இரண்டுயாளிகள் (ஒன்றோடொன்று) போர்செய்ததுபோல, இகலா –
(தம்மில்)போர்செய்ய,-(பின்புஅப்போரில்), மீளிமையினால்உம் வலியால்உம் விறல்
மிக்கோன் – பராக்கிரமத்தாலும் தேகபலத்தாலும் சிறப்புமிகுந்த வீமன்,
வாளின்மிசைவாள் அதனை வைத்து- (அப்பகைவனது)  வாளின் மேல்(தன்)
வாளை வைத்து, (தாக்கி அதைத் துணித்து), அடல் அரக்கன்தோளில் ஒரு தோள்
நிலன் உறும்படி துணித்தான்-கொடிய அவ்விராக்கதனது தோள்களில்
ஒருதோளையும் தரையிலே விழும்படி வெட்டித் தள்ளினான்; (எ-று.)-யாளி –
சிங்கம், வேறொருவிலங்குமாம்.

அற்ற திரள் தோள் துணிய, அச்சம் அறவே நின்று,
உற்றுழியும், வாள் உரகம் என்ன உளன் ஆகி,
மற்றை ஒரு தோளின்மிசை தட்டி, ‘இனி மற்போர்
பற்றுக!’ என, வீமன் உடல் பற்றுபு புகுந்தான்.17.- அலம்புசன் ‘மற்போர்புரிக’ என்று வீமனை நெருங்குதல்.

அந்த – (இவ்வாறு வீமனால்) அறுக்கப்பட்ட, திரள்தோள் – திரண்ட
(தனது) ஒரு தோள், துணிய – துண்டித்து, விழவும், (அவ்வரக்கன்), அச்சம் அறஏ
நின்று – பயமில்லாமலே சலியாமல்நின்று, உற்றஉழி உம் – (அத்)துன்பம்
நேர்ந்தவிடத்தும், வாள் உரகம் என்ன உளன் ஆகி – கொடியபாம்புபோல (ச்
சீற்றத்தை)உடையவனாய், மற்றை ஒரு தோளின் – மற்றொரு தோளினால், மிசை
தட்டி-(உடம்பின்)மேல் தட்டிக்கொண்டு, இனிமல் போர் பற்றுக என-‘இனி
மற்போர்தொடங்குவாயாக’ என்று (வீமனை நோக்கிச் சொல்லி), வீமன் உடல்
பற்றுபு புகுந்தான் – அவ்வீமனது உடம்பைத் தொடர்ந்து நெருங்கினான்; (எ-று.)

     உற்றுழி, பற்றுகென-தொகுத்தல் விகாரம், பற்றுபு செய்பு என்னும்
வாய்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம், ‘பு’ விகுதியே இறந்தகாலங் காட்டும்.
உளனாகி – கையையுடையவனாயென்பாருமுளர்.   

குத்துவர்; திரிப்பர்; இரு குன்று அனைய
தோள் கொண்டு
ஒத்துவர்; வயப் புலிகள் என்ன உடன் ஓடித்
தத்துவர்; உரத்தொடு உரம் மூழ்க, முது தகர்போல்,
மொத்துவர்; சினத்தொடு எதிர் முட்டுவர், சிரத்தால்.18.-வீமனும் அலம்புசனும் கடுமையாக மற்போர்புரிதல். 

(இவ்விருவரும் ஒருவரையொருவர்),  குத்துவர் – (கையால்)
குத்துவார்கள்; திரிப்பர் – (எடுத்து)ச் சுழற்றுவார்கள்; இரு குன்று அனைய தோள்
கொண்டு – இரண்டுமலையையொத்த தோளால், ஒத்துவர் – மோதுவார்கள்; வய
புலிகள் என்ன – வலிமையையுடைய புலிகள்போல, உடன் ஓடி-விரைந்து ஓடிவந்து,
உரத்தொடு உரம் மூழ்க-மார்போடு மார்பு அழுத்து, தத்துவர் -பாய்வார்கள்;
சினத்தொடு – கோபத்தோடு, மொத்துவர் – அடிப்பார்கள் முது தகர்போல் –
பெரிய ஆட்டுக்கடாக்கள்போல, சிரத்தால் எதிர் முட்டுவர் – தலையால் எதிரில்
தாக்குவார்கள்; (எ-று.) எதிர்க்கும்போது இருவர் தோளும் இருகுன்றனைய
என்றபடி.

மல் வலி அழிந்து, பிறை வாள் எயிறு அரக்கன்,
‘வில் வலி அறிந்திடுதும்!’ என்று வில் எடுத்தான்;
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்;
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார்.19. அரக்கன் மற்போரில் தோற்று வில்லெடுக்க,
இருவரும் விற்போர் புரிதல்.

 மல் – (அங்ஙனஞ்செய்து) மற்போரில், பிறை வாள் எயிறு அரக்கன்
– பிறைச்சந்திரன்போன்ற கூர்மையான பற்களையுடைய அலம்புசன், வலி அழிந்து-
பலமொடுங்கி, வில் வலி அறிந்திடுதும் என்று – ‘(இனி) விற்போரில் (நமக்குள்ள)
வலிமையை அறிவோம்’ என்று சொல்லி, வில் எடுத்தான் –
(அவ்வொற்றைக்கையில்) வில்லை யெடுத்துக்கொண்டான்; கல்வலியதோள்
விடலை- கற்போல்வலிமையுடைய தோள்களையுடைய வீரனான வீமனும், கன்றி –
கோபித்து, வில் எடுத்தான்-; (உடனே), தொல் வலியினோடு – பழமையான
[முதிர்ந்த] பலத்துடனே, இருவர்உம்-இந்தஇரண்டு பேரும், கணை தொடுத்தார்-
அம்புகளைத் தொடுத்தார்கள்; (எ – று.)

     ஒருகையற்று மற்றொருகையில் வில்லையேந்திய அரக்கன் பற்களால்
அம்பையெடுத்துத் தொடுத்து விடுத்தா னென அறிக; அதைக்குறிப்பிக்கவே,
‘எயிறரக்கன்’ என்றார்: முதற்போர்ச்சருக்கத்தின் 28 ஆம் பாட்டை இங்கே
காண்க.எயிறரக்கன் – சிறுபான்மை வேற்றுமையில் உயிர்த்தொடர் றகர வொற்று
இரட்டாதுநின்றது. விடலை – ஆண்பாற்சிறப்புப்பெயர்.  

கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்துப்
பிணைபட விழுந்த செயல் கண்டு, நனி பேதுற்று,
‘இணை இலது, இவர்க்கு; இனி, இரண்டு அனிகினிக்கும்
புணையும் இவர்’ என்றனர், புரந்தரனொடு இமையோர்.20.-வீமஅலம்புசரின் போர்த்திறனைத் தேவர்கள் கொண்டாடுதல்.

கணைகள் அவை – (இரண்டுபேரும் பிரயோகித்த) அம்புகள்,
ஒன்றினுடன் ஒன்று எதிர்கடித்து- ஒன்றோடொன்று எதிரிலே கௌவிக்கொண்டு,
பிணை பட விழுந்த – இரண்டும் ஒரு படியாகக் கீழ்விழுந்திட்ட, செயல் –
செய்கையை, கண்டு – பார்த்து, நனி பேது உற்று-மிகுதியாக
மதிமயக்கத்தையடைந்து [திகைத்து], புரந்தரனொடு இமையோர் – (போர்காண
வானத்து வந்த) இந்திரனும் (மற்றைத்) தேவர்களும், ‘இவர்க்கு இனிஇணை
இலது -இவ்விருவர்க்கும் வேறு உவமையில்லை; இரண்டு அனிகினிக்கும்உம் –
இரண்டுசேனைகளுக்கும், புணைஉம் – (போர்க்கடலைக்கடக்கத்)
தெப்பமாகவுள்ளவர்களும், இவர் – இவர்களே,’ என்றனர் – என்றுசொல்லிக்
கொண்டாடினார்கள்; (எ-று.)-பிணைபட – ஒன்றோடொன்றுகலக்க

மலையினையும் வாசுகியையும் பொருவும் நாணும்
சிலையும் அற, மேல் ஒரு செழுங் கணை தொடுத்தான்-
தொலைவு இல் பகையான பகன் மார்பும், இரு தோளும்,
குலைகுலையுமாறு நனி குத்தி, உயிர் கொண்டான்.21.-இதுமுதல்ஐந்துகவிகள்-வீமஅலம்புசர்புரிந்த கடும்போரில்
வீமனால் அரக்கனுயிரழிய மற்றையரக்கர்கள் கெட்டமையைக் கூறும்.

தொலைவு இல் – அழிதலில்லாத, பகை ஆன –
பலஉயிர்களுக்குப்) பகைவனான), பகன்-பகாசுரனது,மார்புஉம்-, இரு தோள் உம்-,
குலைகுலையும் ஆறு – நடுநடுங்கி அழியும்படி, பலகுத்தின் – (ஆயுதமில்லாமல்)
பல கைக்குத்துக்களால், உயிர்கொண்டான்-அவனுயிரை(முன்பு) பறித்தவனான
வீமன், (அவன் தம்பியான அலம்புசனது), மலையினைஉம் வாசுகியைஉம்
பொருவும் சிலை உம் நாண்உம் – (சிவபிரானுக்கு வில்லாகிய) மேருவையும்
(வில்நாணியாகிய) வாசுகியையும் ஒத்த வில்லும் நாணியும், அற-துணிபடும்படி,
மேல்- அவனெதிரிலே, ஒரு செழு கணை தொடுத்தான் – சிறந்த ஒரு அம்பைச்
செலுத்தினான்; (எ-று.)

     இரண்டாம்போர்ச்சருக்கத்து “மேருவை வளைத்து நெடு வாசுகி பிணித்து”
என்றது காண்க. இனி, முதலடிக்கு – மந்தர மலையையும் அதைச் சுற்றிக்
கடைகயிறான வாசுகியையும் ஒத்த எனப்பொருள் கொள்ளுதலும் ஒன்று.
மலையினைப் பொருவும் சிலையும், வாசுகியைப் பொருவும் நாணும் என
மாறவேண்டுதலால், பெயர்களும் பெயர்ப்பயனிலைகளுமாய் நின்ற
எதிர்நிரனிறைப் பொருள்கோள். குலைகுலைதல்- இரட்டைக்கிளவி, குத்து –
முதனிலைத் தொழிற்பெயர்.  பி – ம்: நனிகுத்தி

மந்தரமும் மந்தரமும் என்ன அமர் மலைவான்,
‘அந்தரம் இது அல்ல’ என, அந்தர நெறிப் போய்,
கந்தர நெடுங் கிரி கரத்தினில் எடுத்து, அச்
சுந்தரன் வயங்கு திரள் தோள்தனில் எறிந்தான்.

மந்தரம்உம் மந்தரம்உம் என்ன – இரண்டுமந்தர மலைகள்(இருந்து
அவை ஒன்றோடொன்று போர்செய்தாற்)போல,அமர் மலைவான்-(வீமனுடன்)
போர்வெய்பவனான அலம்புசன், இது அந்தரம் அல்ல என-இப்படிப் போர்செய்தல்
(வெல்வதற்கு) உபாய மன்றென்று கருதி, அந்தரம் நெறி போய்-ஆகாச மார்க்கத்திற்
சென்று, கந்தரம் நெடு கிரி – மேகங்கள் தவழும்படியான பெரிய ஒருமலையை,
கரத்தினில் எடுத்து-ஒற்றைக்கையில் எடுத்து, அ சுந்தரன் வயங்கு, திரள்
தோள்தனில் எறிந்தான் – அழகிய அந்த வீமனது விளங்குகிற வலியதோளின்மேல்
வீசியெறிந்தான்; (எ – று.)

     மந்தரமும் மந்தரமு மென்ன – இல்பொருளுவமை; இருவரும் வலிமையில்
ஒத்தவரென்பதை விளக்கும். இதல்ல – ஒருமைப்பன்மைமயக்கம். இது அந்தரமல்ல
என – இந்தப்பூமி(நாம் போர் செய்தற்கு ஏற்ற) இடமல்லவென்று எண்ணி
எனினுமாம். சுந்தரம்-நீரைத்தரிப்பது: மேகம்: வடசொல். இனி, சுந்தரம் –
குகையுமாம். பி – ம்: எடுத்துச்.    

எறியும் அளவில், குரிசில் இளவல் திருமைந்தன்,
குறியினொடு வெஞ் சிலை குனித்து, அருகு நின்றான்,
பொறியிலவன் வீசிய பொருப்பு ஒர் அணு ஆகி
முறியும்வகை, பல் பகழி, முகில் என, விடுத்தான்.

எறியும் அளவில்-(அரக்க) மலையை வீமன்தோளில்) வீசிய
அளவில்,-குறியினொடு வெம் சிலை குனித்து அருகு நின்றான் – (வீமனுக்குத்
துணைசெய்யுங்) கருத்தோடு கொடியவில்லைவளைத்து அவனருகில் நின்றவனாகிய,
குரிசில் இளவல் திரு மைந்தன் – அவ்வீமராசனது தம்பியான அருச்சுனனது சிறந்த
புத்திரனான அபிமந்யு, பொறியில் அவன் வீசிய பொருப்பு ஓர் அணு ஆகி முறியும்
வகை-(வீமனது) தோளில் அவ்வரக்கன் எறிந்த அந்தமலை ஒரு சிறுபொடியாய்
அழியும்படி, பல் பகழி-பல அம்புகளை, முகில் என- மேகம் (மழைபொழிவது)
போல, விடுத்தான் – செலுத்தினான்; (எ-று.)

    குறியினொடு – இலக்கை எதிர்நோக்கி என்னவுமாம். பொறி இலவன்
எனஎடுத்து,(ஒருதோளாகிய) உறுப்பில்லாதவ னென்றும், அறிவற்றவனென்றும்,
(இனிவாழும்,விதிஇல்லாதவனென்றும் கொள்ளினுமாம்.  

வில் அபிமன் வெங் கணைகள், விசையொடு
அவன் எறியும்
கல் அசலம் நீறு படுவித்த திறல் கண்டே,
‘கொல்ல இனி வேண்டும்’ என, வெய்யது ஒரு
கூர் வேல்
வல் அடல் அரக்கன் அகல் மார்பின்மிசை விட்டான்.

வில் அபிமன் வெம் கணைகள்-விற்போரில்வல்ல அபிமனது
வெவ்விய அம்புகள், விசையொடு-வேகத்தோடு, அவன் எறியும் கல் அகலம் நீறு
படுவித்த – அவ்விராக்கதன்(தன்மேல்) வீசின கல்மலையைப் பொடிபடச்செய்த,
திறல்-வல்லமையை, கண்டு – பார்த்து,- (வீமன்), இனி கொல்லவேண்டும் என-‘இனி
இவ்வரக்கனைக் கொன்றுவிடவேண்டும்’ என்று கருதி, வெய்யது ஒரு கூர் வேல் –
கொடியதொரு கூர்மையையுடைய வேலாயுதத்தை, வல் அடல் அரக்கன் அகல்
மார்பின்மிசை விட்டான்-மிகுந்தவலிமையையுடைய அலம்புசனது பரந்த
மார்பின்மேல் எறிந்தான்;(எ-று.)

     அசலத்திற்குக் கல்என்ற அவசியமில்லாத அடைமொழி கொடுத்தது. அதன்
உறுதியைக் குறிக்கும். வல் அடல் – ஒரு பொருட்பன்மொழி, விட்டான் என்பதற்கு
– (வீமன்) தோன்றா எழுவாயாதலை, மேல்27 – ஆம் பாட்டால் அறிக. விசையொடு
நீறுபடுவித்த என இயையும்; விரையொடு எறியும் என இயைப்பினும்மையும். 

விட்ட வடி வேல் உருவ, வேல் உருவும் முன்னே
பட்டு அவனும் வீழ, இரு பாலும் வரு சேனை
முட்டவும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய்,
கெட்டனர், நிசாசரர்கள்; கிரிகள் என வீழ்ந்தார்.

விட்ட – (வீமன்) எறிந்த, வடி வேல் – கூர்மையான வேலாயுதம்,
உருவ – (அவ்வரக்கனுடம்பைத்) துளைக்க, வேல் உருவும் முன்ஏ – அவ்வேல்
(அங்ஙனம்) ஊடுருவுதற்கு முன்னே [ஊடுருவினவளவிலே என்றபடி], அவன்உம் –
அந்த அலம்சுனும், பட்டு வீழ – இறந்து கீழ்விழ, இருபால்உம் வரு
சேனைமுட்டஉம் – (அவ்வரக்கனது) இரண்டு பக்கத்திலும் உடன்வந்த
சேனைமுழுவதும், இவன் கணை முனைக்கு எதிர் இலக்கு ஆய் – இவ்வீமனது
அம்புநுனிக்கு எதிர்ப்பட்ட லக்ஷ்யமாகி,நிசாசரர்கள்-(அச்சேனையிலுள்ள பல)
இராக்கதர்கள், கெட்டனர் – அழிந்தவர்களாய், கிரிகள் என வீழ்ந்தார்-(சிறகு
அறுபட்ட) மலைகளைப்போல விழுந்திட்டார்கள்; (எ-று.)

    நிசாசரர் – இராத்திரிகாலத்திற் சஞ்சரிப்பவர்; காரணப் பெயர்; நிசிசாரெனவும்
வரும்:வடசொல்: அரக்கர்க்குப்பகலினும் இரவில் வலிமை மிகுதி, முட்டவும் –
நெருங்கித்தாக்கவும் எனினுமாம். முட்ட=முற்ற ஆய் -ஆக எனத் திரித்தலுமாம்.

ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர்,
மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி,
ஊறுபட வெங் கதை கொடு அன்று
அவன் உடைக்க,
சேறு படும் மூளைகள் தெறித்தன சிரத்தால்.

ஆறு படி நூறு படி ஆயிரம் அரக்கர் – அறுநூறாயிரம்
இராக்கதர்களும், மாறுபடு பாடை வட மன்னர் ஒரு கோடி – (ஒருவரோடொருவர்)
பேதப்பட்ட பாஷைகளையுடைய வடதேசத்திலுள்ள அரசர்கள் ஒரு கோடிபேரும்,
ஊறு பட – காயப்படும்படி, அவன் – அவ்வீமன், அன்று-அப்பொழுது, வெம்
கதை கொடு,-கொடியகதாயுதத்தால், உடைக்க – பிளக்க,- (அவர்களுடைய),
சிரத்தால் – (பிளந்த) தலைகளால், சேறு படும் மூளைகள் தெறித்தன-
சேறாகப்பொருந்திய மூளைகள் வெளிச்சிந்தின;

     படி – அளவு, மடங்கு – ஆறுபடி நூறு – ஆறளவுகொண்ட நூறு: அறுநூறு:
அவ்வளவு கொண்ட ஆயிரம் – ஆறுபடிநூறு படியாயிரம் [அறுநூறாயிரம்],
படிதல்-அமைதல்என்பாருமுளர். பாடை-பா பி-ம்: மூளைகடிறந்தனர். 

முன் பகலில் மைந்தனை முருக்கிய அரக்கன்
பின் பகலில் வீழ, வடி வேல்கொடு பிளந்தான்;
சொல் பகல் இலான் இளவல்’ என்றனர், துதித்தார்,
அல் பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம்.27.-தேவர்கள் வீமனைப் புகழ்தல்.

 (அப்பொழுது), அல்  பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் –
(இவ்வுலகிற்போல) இராத்திரியும் பகலுமில்லாத சுவர்க்கலோகத்தில் வாழ்கிற
தேவர்கள் யாவரும், ‘முன் பகலில்-முந்தினநாளிலே, மைந்தனை – அருச்சுனன்
மகனான இராவானை, முருக்கிய-கொன்ற, அரக்கன்-அலம்புசன், பின்பகலில்-
அடுத்தநாளிலே, வீழ-இறந்துவிழும்படி, சொல் பகல் இலான் இளவல்-(சொன்ன)
சொல் மாறுதலில்லாத தருமனுக்குத் தம்பியான் வீமன், வடிவேல் கொடு பிளந்தான்
– கூர்மையான வேலாயுதத்தால் (அவனைப்) பிளந்திட்டான்,’ என்றனர் – என்று
சொல்லி, துதித்தார்-(வைரந்தீர்த்த வீமனது திறமையைக்) கொண்டாடினார்கள்;(எ-று.)

     சூரியனது உதய  அஸ்தமனங்களாலாகிய பகல் இரவு என்னும்
காலவேறுபாடுகள் அச்சூரியமண்டலத்துக்கு மிகமேலுள்ள தேவலோகத்தில்
இல்லையாதலால், ‘அற்பகலிலா வுலகு’ எனப்பட்டது. மூன்றாமடியில், பகல்-பகுதல்:
தொழிற்பெயர்: பகு – பகுதி, அல் – விகுதி. முற்பகல், பிற்பகல் என்பன-இங்கே,
ஒருபகலின் முன்பின்பகுதியை உணர்த்துவன அல்ல: “முற்பகல் செய்தான் பிற்பகல்
தன்கேடு, பிறன்கேடு தன்கேடு பிற்பகற்கண்டுவிடும்” என்ற திருக்குறள் இங்குக்
காணத்தக்கது     

காசியர்கள், சேதியர்கள், மாளவர், கலிங்கர்,
பூசலிடை ஏழு பதினாயிரவர் பொங்கி,
கேசவன் நடாவு கிளர் தேர் கெழு சுவேத
வாசி உடையான் விசயன் வாளியின் மடிந்தார்.28.-அருச்சுனன்பாற் பல மன்னர் மடிதல்.

காசியர்கள் – காசிநகரத்தாரும், சேதியர்கள்- சேதிநாட்டாரும்,
மாளவர் – மாளவதேசத்தவரும், கலிங்கர்-கலிங்க நாட்டவரும் ஆகிய, ஏழு
பதினாயிரவர் – ஏழு பதினாயிரம்பேர், பூசலிடை – போரிலே, பொங்கி –
உக்கிரமாகஇருந்து (கடும்போர்செய்து),-கேசவன் நடாவு-கண்ணன் செலுத்துகிற,
கிளர்தேர்-விளங்குகிற தேரில், கெழு-பொருந்திய, சுவேதவாசி உடையான்-
வெள்ளைக்குதிரைகளையுடையவனாகிய, விசயன் – அருச்சுனனது. வாளியின் –
அம்புகளால், மடிந்தார் – இறந்தார்கள்: (எ-று.)

     நான்குவெள்ளைக்குதிரைகள் பூட்டியதொரு சிறந்ததேர், அக்கினிதேவனால்
அருச்சுனனுக்குக் காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது:
இவ்வெள்ளைப்பரிகளை யுடைமையால், ‘சுவேத வாகநன்’ என்று அருச்சுனனுக்கு
ஒருபெயர். ஸ்வேதவாஜு – வட மொழித்தொடர். கெழு-சாரியையுமாம். 

துரகத் தடந் தேர்த் தனஞ்சயன் கை வரி வெஞ்
சாபம் சொரி கணையால்
உரகத் துவசன் பெருஞ் சேனை ஒரு சார் உடைய,
ஒரு சாரில்
சருகு ஒத்து அனில குமரன் கைத் தண்டால் உடைய,
கண் சிவந்து,
கருகி, திருகி, மேல் நடந்தான், கங்காநதியாள்
திருமைந்தன்.29. தம்சேனை அழிதல்கண்டு வீடுமன் சினந்து போர்க்குச் செல்லுதல்.

துரகம் – குதிரைகள்பூட்டிய, தட – பெரிய, தேர் –  தேரையுடைய,
தனஞ்சயன் – அருச்சுனனது, கை-கையிற்பிடித்த, வரி – கட்டமைந்த, வெம் சாபம்
– கொடிய வில்,  சொரி-பொழிந்த, கணையால் – அம்புகளால், உரகம் துவசன்
பெரு சேனை-பாம்புக் கொடியனான துரியோதனனது பெரியசேனை, ஒரு சார்-
ஒருபக்கத்தில், உடைய – அழியவும்,-ஒரு சாரில் – மற்றொருபக்கத்தில்,
அனிலகுமரன் கை தண்டால் – வாயுகுமாரனான வீமனதுகையிலுள்ள கதாயுதத்தால்,
சருகு ஒத்து – (பெருங்காற்றிற்பட்ட) உலர்ந்த இலைகள்போல, உடைய –
துரியோதனசேனைகள்) அழியவும்,- (கண்டு), கங்காரகநதியாள் திரு மைந்தன் –
கங்கைநதியின் சிறந்தபுத்திரனான வீடுமன், (கோபத்தால்,) கண் சிவந்து-கண்கள்
செந்நிறமடைந்தும், கருகி – முகங்கறுத்தும், திருகி – மாறுபட்டு, மேல் நடந்தான் –
(எதிரிகள்) மேல் போருக்குச் சென்றான்; (எ-று.)-கருகி – மனந்தவித்து என்றுமாம்.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் – கீழ் நான்காம்போர்ச் சருக்கத்தின்
இருபத்து மூன்றாங்கவிபோன்ற அறுசீர்க்ககழிநெடிலடி ஆசிரியவிருத்தங்கள்-

பட்டக் களிற்றுப் பாய் புரவிப் பைம் பொன்
தடந் தேர்ப் பாஞ்சாலர்,
திட்டத்துய்மன் முதலானோர், சிகண்டியுடனே
எதிர் தோன்ற,
வட்டக் கவிகை வீடுமனும், மன்னற்கு இளைய
காளையரும்,
எட்டுத் திக்கின் காவலரும், அவரோடு எய்தி
இகல் செய்தார்.30.-வீடுமன்முதலோர் பாஞ்சாலர் முதலானாரோடு பொருதல்.

(அப்பொழுது), பட்டம் களிறு-நெற்றிப்பட்டத்தையுடைய
யானைகளையும், பாய் புரவி – பாய்ந்துசெல்லுங் குதிரைகளையும், பைம் பொன்
தடதேர் – பசும்பொன்னாலாகிய பெரிய தேர்களையுமுடைய, பாஞ்சாலர் –
பாஞ்சாலதேசத்து அரசர்களாகிய, திட்டத்துய்மன் முதலானோர் – திருஷ்டத்யும்நன்
தலியவர், சிகண்டியுடன்ஏ எதிர் தோன்ற – சிகண்டியோடு எதிரில் வர,-வட்டம்
கவிகை வீடுமன்உம் – வட்டவடிவமான குடையையுடைய பீஷ்மனும், மன்னற்கு
இளைய காளையர்உம் – துரியோதனராசனுக்குத் தம்பியான வீரர்களும், எட்டு
திக்கில் காவலர்உம் –  எட்டுத்திசையினின்றும் (வந்துள்ள மற்றும் பல)
அரசர்களும், அவரோடு எய்தி இகல் செய்தார் – அவர்களோடு நெருங்கிப்
போர்செய்தார்கள்;(எ-று.)

வரி வெஞ் சிலைக் கைக் கௌரவர்க்கு முதல் ஆம்
முதல்வன் வடிக் கணைகள்
தெரியும் கணத்தில், தெரியாமல் தேரும் தாமும்
சிலர் பட்டார்;
கரியும் தாமும் சிலர் பட்டார்; கலி வாய் மதுகைக்
கால் வேகப்
பரியும் தாமும் சிலர் பட்டார்; படாதார் உண்டோ
பாஞ்சாலர்?31.-வீடுமன்கணையால் பாஞ்சாலரிற்பலர்
தமதுவாகனங்களோடு படுதல்.

வரி – கட்டமைந்த, வெம் – கொடிய, சிலை-வில்லையேந்திய,
கை -கையையுடைய, கௌரவர்க்கு முதல் ஆம் முதல்வன் – (அக்காலத்திலுள்ள)
குருகுலத்தார்க்குள் மூத்தவனான சிறந்த வீடுமன், வடி கணைகள் – கூர்மையான
அம்புகளை,தெரியும் கணத்தில்-ஆராய்ந்து விடும்பொழுதே,-(பகைவர்களில்),
தெரியாமல் – (அழிவது) தெரியாமல், தேர்உம் தாம்உம் சிலர் பட்டார்-தேர்களும்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கரிஉம் தாம்உம் சிலர் பட்டார்- யானைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; கலுழ் வாய் மதுகை கால் வேகம் பரிஉம்
தாம்உம் சிலர் பட்டார்-நுரையையுடைய வாயையுடையனவும்
வலிமையையுடையனவும் காற்றுப்போன்ற வேகத்தையுடையனவுமாகிய குதிரைகளுந்
தாங்களுமாகச் சிலர் அழிந்தார்கள்; (இவ்வாறு), பாஞ்சாலர்-பாஞ்சால தேசத்தாருள்,
படாதார் உண்டுஓ – (வீடுமன்முன்) பங்கப்படாதவர்கள் உளரோ? [யாவரும்
பங்கப்பட்டனர்]; (எ-று.)-கால்வேகம்-கால்களின் விசையுமாம். ‘கலிவாய்’  என்ற
பாடத்துக்கு ஒலி அல்லது செருக்கு வாய்ந்த பரி என்க: “கலிமான்” என்று
குதிரையைக் கூறுதல் காண்க.

நீயும் ககனம் குடியேற, நின் பேர் உடலம்
நீள் நிலத்தில்
தோயும்படி, நிற் பொர நின்றேன்!’ என்றே சொல்
ஆயிரம் சொல்லி,
சேயும் தனக்கு நிகர் இல்லாச் சிகண்டி கடுங்
கால் சிலை வாங்கி,
காயும் கணைகட்கு இலக்கு ஆனான், காமன்
கணைக்கும் கலங்காதான்.32.-வீடுமன் சிகண்டியின்கணைக்கு இலக்காதல்.

 (அப்பொழுது), சேய்உம் தனக்கு நிகர் இல்லா – முருகக்கடவுளும்
(பலபராக்கிரமங்களில்) தனக்கு ஒப்பாகப்பெறாத, சிகண்டி-, (வீடுமன்முன் வந்து),
‘நீஉம் ககனம் குடி ஏற – நீயும் மேலுலகத்தை அடையவும், நின் பேர் உடலம் –
உனது பெரிய உடம்பு, நீள் நிலத்தில் தோயும்படி – பெரியபூமியிலே விழும்படியும்,
நின் பொர – உன்னைப் போர்செய்து அழிக்க, நின்றேன் – வந்துநின்றேன்’, என்று-
, சொல் ஆயிரம் சொல்லி – மிகப்பலவான வீரவாதங்களைச் சொல்லிக்கொண்டு,
கடு கால் சிலை, வாங்கி- பயங்கரமான விற்கழுந்தை வளைத்து, காயும் –
கோபித்துஎ றிகிற, கணைகட்கு – அம்புகளுக்கு,-காமன் கணைக்குஉம் கலங்காதான்
– மன்மதனது அம்புக்கும் சலியாத வீடுமன், இலக்கு ஆனான் – குறியானான்:
(எ-று.)

     சிகண்டி வீரவாதஞ்செய்து வீடுமன்மேல் கொடிய அம்புகளை எய்தன
னென்பதாம். காமன்கணைக்கும், உம் – உயர்வுசிறப்பு; 
அது -எல்லாவுயிர்களையும்
தன்வசப்படுத்துகிற மன்மதபாணத்தின் போராற்றலை விளக்கும். காமன் கணைக்கும்
கலங்காதான், என்றது, எந்தமகளிரையும் விரும்பி மணஞ்செய்யாத வீடுமனது
விரதவுறுதியை விளக்கும்,

வில்லோன் சரங்கள் பட நகைசெய்து, அவன்மேல்
தனது வில் வளையாத்
தொல்லோன் நின்ற நிலை கண்டு, துச்சாதனன் தன்
சுடு சரத்தால்
பல்லோர் வியப்ப, தங்கள் குலப் பகைவன்
சேனாபதி இளவல்
செல்லோடு அணவு நெடுங் கொடியும், தேரும்,
சிலையும், சிதைவித்தான்.33.- அப்போது துச்சாதனன் அம்பெய்து
சிகண்டியின் கொடி தேர் வில் இவற்றைச் சிதைத்தல்.

வில்லோன் – வில்லில்வல்லவனான சிகண்டியினது,  சரங்கள் –
அம்புகள், பட – (தன்மேற்) படவும், தொல்லோன் – பெரியவனான வீடுமன், நகை
செய்து-சிரித்துக்கொண்டு, அவன் மேல் தனது வில்வளையா-அச்சிகண்டியின்மேல்
(எதிர்த்தற்குத்) தனது வில்லை வளைக்காமல், நின்ற-, நிலை-நிலைமையை, கண்டு-,
துச்சாதனன்,-, தன் சுடு சரத்தால் – தனது வெவ்விய அம்புகளால், பல்லோர்
வியப்ப – (காண்பவர்) பலரும் அதிசயிக்கும்படி, தங்கள் குலம் பகைவன் சேனாபதி
இளவல் – தங்கள்குலத்துக்குப் பகைவனான தருமனது சேனைத்தலைவனாகிய
திட்டத்துய்மனுடைய தம்பியான அந்தச்சிகண்டியினது, செல்லோடு அணவு
நெடுகொடிஉம் – மேகத்தோடுபரிசிக்கிறநீண்ட துவசத்தையும், தேர்உம் – தேரையும்,
சிலைஉம் – வில்லையும், சிதைவித்தான் – அழியச்செய்தான்; (எ-று.)

     பெண், முன்புபெண்ணாயிருந்தவன், பெண்பெயருடையான்,
பெண்வடிவுகொண்டவன் என இவர்மீது அம்புதொடுப்பதில்லை யென்பது,
வீடுமனது விரத மாதலால் முதலிற் பெண்ணாகப் பிறந்து பின்பு யக்ஷனது அருளால்
ஆண் தன்மையைப் பெற்ற சிகண்டியுடன் வீடுமன் போர்செய்யவில்லை யென்க.
நகைசெய்தது – அவன் இயற்கையில் ஆண்தன்மையில்லாத இழிவைக் கருதி
யென்க. முதனூலில் சிகண்டியைத் திட்டத்துய்மனது தமையனென்று கூறியுள்ளதற்கு
ஏற்ப, ‘தங்கள்குலப்பகைவன் சேனாபதி யிளவல்’ என்பதற்கு –
அன்மொழித்தொகையாக, திட்டத்துய்மனைத் தம்பியாகவுடையவ னென்று
பொருள்கொள்ளலுமாம். செல்-செல்லுவது, காரணக்குறி, பி- ம்.செல்லோடளாவு.

இவனோ இலக்கு ஆம், என் பகழிக்கு” என்பான்
போல, எம் குலத்தில்
அவனோ செங் கைச் சிலை வீழ்த்தான்; அரசன்
தம்பிக்கு அழிந்து, இவனும்
தவனோதயத்தில் இருள் என்னச் சாய்ந்தான்’ என்று
தனஞ்சயன் தன்
பவனோதயத் தேர் நடு விட்டான்; பணியார் தாமும்
புறமிட்டார்.34.- சிகண்டிதோற்றது கண்டு அருச்சுனன்தேரைச் செலுத்திவர
எதிரிகள் புறமிடல்.

(அதுகண்டு), ‘எம் குலத்திலவன்ஓ – எங்கள் குலத்தில் மூத்தவனான
வீடுமனோ, என் பகழிக்கு இவன்ஓஇலக்கு ஆம் என்பான் போல – ‘எனது
அம்புகளுக்கு (இயற்கையில்) ஆண்மையில்லாத இச்சிகண்டியோ ஏற்ற குறியாவன்’
என்று இகழ்பவன்போல, செம் கை சிலை வீழ்த்தான் – (சிகண்டியோடு)
போர்செய்யாமல் சிவந்த கையிற்பிடித்துள்ள (தன்) வில்லைக் கீழே போட்டான்;
(பின்பு), இவன்உம் – இச்சிகண்டியும், அரசன் தம்பிக்கு அழிந்து –
துரியோதனராசனது தம்பியான துச்சாதனனுக்குத் தோற்று, தவன(ன்) உதயத்தில்
இருள் என்ன – சூரியனது உதயகாலத்தில் இருள்கெடுதல்போல், சாய்ந்தான் –
உறுதிநிலைகெட்டான்,’ என்று – என்று அறிந்து, தனஞ்சயன்- அருச்சுனன், தன் –
தனது, பவன(ம்) உதயம் தேர்-காற்றுவருதல் போன்ற (வேகத்தையுடைய) தேரை,
நடு விட்டான் – (எதிரிகளின் சேனை) மத்தியிலே செலுத்தினான்; (அப்பொழுது)
பணியார் தாம் உம் புறம் இட்டார் – பகைவர்களும் புறங்கொடுத்து ஓடினார்கள்;

     ‘இவனோ’ என்பது முதல் ‘சாய்ந்தான்’ என்றது வரையில் அருச்சுனன்
எண்ணும் எண்ணம்; அதனுள், ‘இவனோ இலக்காம் என்பகழிக்கு’ என்றது,
வீடுமன்மனத்திற் கருதியதை; தபநோதயம், பவநோதயம்-குணசந்திபெற்ற
வடமொழித் தொடர்கள். பணியார்-வணங்காதவர்-பி-ம்: அழிந்தவனும்

பார்த்தன் கணையால் பட்டவரை, பங்கேருகத்தோன்
பல கோடி
நாத் தந்திலனே, எண்ணுதற்கு; நாம் ஆர் புகல?
தே மாலை
மாத் தந்திகளும், புரவிகளும், துணியத் துணிய,
வழி சோரி
நீத்தம்தன்னால், வடவை முக நெருப்பு ஒத்தது,
கார் நெடு வேலை,35.- கவிக்கூற்று: அருச்சுனன் வென்ற சிறப்பு.

(அப்பொழுது) பார்த்தன் கணையால்- அருச்சுனனுடைய
அம்புகளால், பட்டவரை – இறந்தபகைவர்களை, எண்ணுதற்கு – கணக்கிட்டுச்
சொல்லுதற்கு, பங்கேருகத்தோன் – தாமரை மலரில் வாழும் பிரமன், பலகோடி நா
தந்திலன்ஏ – அநேக கோடி நாக்குக்களைக் கொடுத்தானில்லையே! நாம் புகல
ஆர்-(ஒருநாக்கையுடைய) நாம் (அவர்களை எண்ணிச்) சொல்லுதற்கு யார்?
(சொல்லத்தரமுடையோமல்லோம் என்றபடி); தேன் மாலை – தேனையுடைய
பூமாலைகளைத் தரித்த, மா தந்திகள்உம் – பெரியயானைகளும், புரவிகள்உம்-
குதிரைகளும், துணிய துணிய – மிகுதியாக வெட்டுப்பட, வழி-
(அவற்றினின்று)பெருகுகிற, சோரி நீத்தந்தன்னால்- இரத்தவெள்ளஞ் சென்று
பாய்தலால், கார் நெடு வேலை – கருநிறத்தையுடைய பெரியகடல், வடவை முகம்
நெருப்புஒத்தது-படபாஎன்னும் பெண்குதிரையின் முகத்தினின்று வெளிப்படும்
நெருப்புபோலச் செந்நிறமடைந்தது; (எ-று.)

     மிகப்பலவாகிய நாக்குக்கள் இருந்தால்மாத்திரத்திரமே அப்போர்த்திறத்தைச்
சொல்லுதல்கூடு மென்பது, முன்னிரண்டடிகளின் கருத்து, கருங்கடல் குருதியாற்
சிவந்தது என்பது, பின்வாக்கியத்தின் கருத்து: பிறிதின்குணம்பெறலணி,
பங்கேருஹம் – சேற்றில் முளைப்பது; வடசொல்: 

மன்னும் சேனை படக் கண்ட வாட் சந்தனுவின்
திருமைந்தன்,
பின்னும் தனது சிலை ஏந்தி, பேணார் எவரும்
பின் காட்ட,
துன்னும் பகழி மழை பொழிந்து, துரக்கும் பொழுது,
விராடபதி
என்னும் குரிசில்தனக்கு இளையோன், இராமற்கு
இளையோன் எனத் தக்கோன்,36.-மூன்றுகவிகள் – வீடுமன் கடும்போர்புரியச்
சதாநீகன் வந்தெதிர்த்து உயிரொழிந்தமை கூறும்.

 மன்னும் – நிலைபெற்ற, சேனை – (தம்பக்கத்துச்) சேனை, பட-
(அருச்சுனனால்) அழிய, கண்ட-, வாள் சந்தனுவின் திருமைந்தன் –
ஆயுதப்பயிற்சியில் வல்ல சந்தனுமகாராசனது சிறந்தபுத்திரனான  வீடுமன்,-பின்உம்
தனது சிலை ஏந்திமீண்டும் தன்னுடைய வில்லை வளைத்து, பேணார் எவர்உம்
பின்காட்ட – பகைவர்கள்எல்லோரும் புறங்காட்டி அழியும்படி, துன்னும் பகழி
மழை பொழிந்து –  நெருங்கிய அம்புமழையைச் சொரிந்து, துரக்கும் பொழுது –
(எதிர்ப்பக்கத்துச் சேனையை) ஓட்டுகிற  சமயத்தில், விராடபதி என்னும் குரிசில்
தனக்கு இளையோன் – விராடதேசத்தரசனென்கிற வீரனுக்குத் தம்பியும், இராமற்கு
இளையோன் என தக்கோன் – இராமபிரானுக்குத் தம்பியாகிய இலக்குமண னென்று
சொல்லத்தக்கவனும்,-(எ-று.)- (ஆகிய) “சதானிகன்” என அடுத்த கவியோடு
தொடரும்,

     சிகண்டி எதிரில் வந்தபொழுது, வீடுமன் தன்கைவில்லைக்கீழ் எறிந்ததனாலே,
‘பின்னுந் தனது சிலை யேந்தி’ என்றார். இலக்குமணன்-போர்த்திறத்துக்கும்,
தமையனுக்குக் கீழ்ப்படிந்திருக்குந் தகுதிக்கும் உவமை.    

பண்ணும் பரிமான் தேர் உடையான், படைத் தேர்
மன்னர் பலர் சூழ,
எண்ணும் சிலைக் கைச் சதானிகன், வந்து, எதிர்
ஊன்றுதலும், எண் திசையும்
மண்ணும் திகைக்கும்படி மலைந்தான்-மன் பேர்
உயிருக்கு ஆர் உயிரும்
கண்ணும் போல்வான், கருதலர்க்குக் கடுங் கால்
எழுப்பும் கனல் போல்வான்.

பண்ணும்-அலங்கரிக்கப்பட்ட, பரி மான் – குதிரைகளைப் பூட்டிய,
தேர் உடையான்- இரதத்தையுடையவனும் ஆகிய, எண்ணும் சிலை கை
சதானிகன்-(யாவரும்) நன்குமதிக்கும் வில்லையேந்திய கையையுடைய
சதாநீகனென்பவன், படை தேர் மன்னர் பலர் சூழ- சேனைகளையுடைய
ரதாதிபதிகளான அரசர்கள்பலர்(தன்னுடன்)சூழ்ந்துவர, எதிர் வந்து ஊன்றுதலும் –
வீடுமனெதிரில் வந்து(போருக்கு) நின்றவளவில்,-மன் பேர் உயிருக்கு-(உலகத்தில்)
நிலைபெற்ற மிகுந்த பிராணிகளுக்கெல்லாம், ஆர் உயிர்உம்
கண்உம் போல்வான்-அருமையான உயிரையும் கண்ணையும் ஒத்து
அன்புக்குஇடமானவனும், கருதலர்க்கு-பகைவர்களுக்கு, கடு கால் எழுப்பும் கனல்
போல்வான்-மிகுந்தகாற்றினால் வளர்க்கப்பட்ட அக்கினியை யொத்து
அழிவுசெய்பவனு மாகிய வீடுமன், எண் திசைஉம் மண்உம் திகைக்கும்படி –
எட்டுத்திக்கிலுள்ளாரும் பூலோகத்தவரும் (கண்டு)  பிரமிக்கும்படி, மலைந்தான்-
போர்செய்தான்; (எ-று.)

     திசை, மண்-ஆகுபெயர். எவர்க்கும் உயிரினும் சிறந்தது வேறுஇன்று
ஆதலாலும், எல்லாவுறுப்புக்களினும் கண் சிறத்தலாலும், அன்பு வைக்கப்படுதலில்
அவற்றை வீடுமனுக்குஉவமை கூறினார்.   

உற்றுச் சமரில் வில் எடுத்த உரவோன்தன்னை
உடலோடும்
அற்றுச் சென்னி வேறு ஆகி வீழத் துணித்தே,
அம்பு ஒன்றால்
செற்று, கங்கை மகன் நிற்ப, சேரார் ஓட,
தேரோனும்
இற்றுத் தெறித்த மகுடம் என வீழ்ந்தான்,
புணரிக்கிடை அந்தோ!

சமரில்-போரில், உற்று-எதிரில்வந்து, வில்எடுத்த-வில்ஏந்திப்
பொருத,உரவோன் தன்னை-வலிமையையுடைய சதானிகனை, கங்கை மகன்-
வீடுமன்,உடலோடுஉம் சென்னி அற்று வேறு ஆகி வீழ-உடம்புந்தலையும்
அறுபட்டுத்தனித்தனிவிழும்படி, அம்பு ஒன்றால் துணித்து – ஒருபாணத்தால்
துண்டுபடுத்தி,செற்று-அழித்து, நிற்ப-(வெற்றியோடு) நிற்க,-(அதுகண்டு), சேரார்
ஓட-(மற்றைப்)பகைவர்கள் பயந்துஓட, (அச்சமயத்தில்) தேரோன்உம்-(சிறந்த)
தேரையுடைசூரியனும், இற்று தெறித்த மகுடம் என-(தலைதுணிபட்டுவிழுகையில்)
கழன்று சிதறிவிழுந்த (அச்சதானிகனது) கிரீடம்போல, புணரிக்கு இடை வீழ்ந்தான்-
மேல்கடலிடையிலே விழுந்தான் [அஸ்தமித்தான்]; (எ-று.)-அந்தோ-ஐயோ: ஹந்த
என்னும் வடமொழிச் சிதைவான இது-சதானிகன் இறந்ததற்குக் கவி இரங்கியதைத்
தெரிவிக்கும்.

     இப்பாட்டின் ஈற்றடி-சூரியாஸ்தமனவருணனை. எப்போதும் தேர்மீதே
வருவதனால், சூரியனுக்கு ‘தேரோன்’ என்று ஒருபெயர் கொடுத்தார்.

திலத்தின் சின்னம் பட முன்னம் சிவேதன் உயிர் கொண்டு
உடல் சிதைத்தான்;
தலத்தில் கனக முடி சிந்தச் சரத்தால் அழித்தான்,
சதானிகனை;
வலத்தில் திகிரிதனை உருட்டும் மான் தேர் மச்சத்து
அவனிபர்தம்
குலத்திற்கு இவனே கூற்று’ என்றார், கூற்றும் குலையும்
கொலை வேலார்,39.-இருதிறத்துச்சேனாவீரரும் சுவேதனையும் சதாநீகனையும்
அழித்ததுகுறித்து வீடுமனைப்பற்றிக் கூறியது.

(அப்பொழுது), கூற்றுஉம் குலையும்கொலைவேலார்-யமனும்
அஞ்சும்படியான கொலைத்தொழிலைச்செய்யும் வேலையுடைய (இரண்டுபக்கத்து)
வீரர்களும், (‘வீடுமன்), மு ன் ன ம் – முன்னே [முதல்நாட்போரில்], திலத்தின்
சின்னம் பட-எள்ளின் காய் பிளப்பதுபோலத் துண்டுபடும்படி, சிவேதன் உடல்
கொண்டு உயிர் செகுத்தான்-சுவேதனது உடம்பை (இலக்காக)க் கொண்டு
அவனுயிரை ஒழித்தான்; (இன்றைக்கு), கனகம முடிதலத்தில் சிந்த-பொற்கிரீடமணிந்த
தலை தரையிலேசிதறிவிழும்படி, சதானிகனை-, சரத்தால் அழித்தான்-அம்பினாற்
கொன்றான்;(ஆதலால்), வலத்தில் திகிரிதனை உருட்டும்-வலிமையால்
ஆஜ்ஞாசக்கரத்தைச்செலுத்துகிற, மான் தேர் மச்சத்து அவனிபர்தம்-குதிரைகள்
பூண்ட தேரையுடைய மத்ஸ்யதேசத்து அரசர்களது,குலத்துக்கு-,இவன்ஏ கூற்று-
இவ்வீடுமனே  யமனாவன்,’ என்றார்-என்று  சொன்னார்கள்; (எ-று.)

     வீராடனதுமைந்தனையும் அவன்தம்பியான சதாநீகனையும் வீடுமனொருவனே
கொன்றிட்டதுபற்றி, இங்ஙன்கூறினார். திகிரி-தேர்ச்சக்கரமுமாம். பி-ம்:
சிதைத்தான்.   

சேந்த நெடுங் கண் முரி புருவத் திட்டத்துய்மன்
சேனையொடும்,
சார்ந்த நிருபர் ஐவரொடும், தானும் தன் பாசறை
அடைந்தான்;
பாந்தள் உயர்த்த அரசுடனும், பைம் பொற் கவரி
மதிக்கவிகை
வேந்தருடனும், போய்ப் புகுந்தான், தன் பாசறையில்
வீடுமனும்.40.-இருதிறத்துச் சேனாபதியரும் தம்மவரோடு பாசறைபுகுதல். 

சேந்த-(கோபத்தாற்) சிவந்த, நெடு கண்-நீண்ட கண்களையும்,
முரி-(கோபத்தால்) நெறித்த, புருவம்-புருவங்களையுமுடைய, திட்டத்துய்மன்-,
சேனையொடுஉம்-(பாண்டவ)சைனியத்துடனும், சார்ந்த நிருபர் ஐவரொடுஉம்-
(தலைவராகப்) பொருந்திய பாண்டவராசர் ஐந்துபேரொடும், தானும்-, தன்
பாசறைஅடைந்தான்-தனதுபடைவீட்டைச் சேர்ந்தான்; வீடுமனும்-, பாந்தள் உயர்த்த
துவசனுடன் – பாம்பை உயரத்தில் எழுதிய கொடியையுடைய துரியோதனனோடும்,
பை பொன் கவரி – பசும் பொன்னாலாகிய காம்பையுடைய சாமரங்களையும், மதி
கவிகை – பூர்ணசந்திரன் போன்ற வெண்கொற்றக்குடையையு முடைய,
வேந்தருடன்உம் – அரசர்களுடனுன்,தன் பாசறையில் போய் புகுந்தான்-தனது
படைவீட்டிற் போய்ச்சேர்ந்தான்; (எ-று.)

     சேந்த – சிவந்த: மரூஉ; பொன் – பொற்காம்புக்குக் கருவியாகுபெயர்.
‘பைம்பொற்கவரி மதிக்கவிகை’ என்பதை, மத்திம தீபமாகப் பாந்தளுயர்த்த
துவசனுக்குங் கூட்டுக.   

சென்ற பரிதி, ஆயிரம் பொற் சிகரப் பொருப்புக்கு
அப் புறத்து
நின்ற இருளை இப் புறத்து நீங்காவண்ணம் குடியேற்றி,
ஒன்ற உலகம் உற்ற துயில் உணர்த்துவான்போல்,
உதயம் எனும்
குன்றமிசைநின்று, அனைவரையும் கரத்தால் எழுப்ப,
குணக்கு எழுந்தான்.41.-மறுநாள் சூரியோதயவருணனை.

சென்ற பரிதி – (முந்தினநாள் மாலைப்பொழுதில்) அஸ்தமித்த
சூரியன், ஆயிரம் பொன் சிகரம் பொருப்புக்கு அ புறத்து நின்ற இருளை –
பொன்மயமான ஆயிரங்கொடுமுடிகளையுடைய மேருகிரிக்கு வடபுறத்தில் நின்ற
இருட்டை, இ புறத்து நீங்கா வண்ணம் குடி ஏற்றி – (அவ்விரவில்) இத்தென்புறத்தில்
நீங்காதபடி தங்கச்செய்து, (அவ்விரவு கழிந்த பின்பு), உலகம் ஒன்ற உற்ற துயில்
உணர்த்துவான் போல்-உலகத்து உயிர்களெல்லாம் ஒருசேர அடைந்த தூக்கத்தை
(ஒழித்து) விழிக்கச் செய்பவன் போல, உதயம் எனும் குன்றம்மிசை நின்று
அனைவரைஉம் கரத்தால் எழுப்ப- உதயகிரியென்கிற மலையின்மேல் (தான்)
நின்றுகொண்டு எல்லோரையும் (தன்) கைகளால் [கிரணங்களால்]  எழுப்பும்படி,
குணக்கு எழுந்தான் – கீழ்திசையில் தோன்றினான் [உதித்தான்]; (எ-று.)

பூமிமத்தியிலுள்ள மகாமேருகிரிக்கு இப்புறத்தில் இருட்பொழுதாம் பொழுது,
அப்புறத்தில் பகற்பொழுதாதலை இருளைக்குடியேற்றியதாகவும்,  உதயகாலத்திற்
சூரியகிரணம் உலகத்தில் விளங்க எல்லாப்பிராணிகளும் துயிலொழிந்து எழுதலைச்
சூரியன் தன்கைகளால் உலகத்து உயிர்களைத் தொட்டுத் துயிலெழுப்புவதாகவும்
வருணித்தார். இத்தற்குறிப்பேற்றணிக்கு, கரம் என்ற சொல்லின் சிலேடை
அங்கமாக நின்றது.

——————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading