ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -26. சஞ்சயன் தூதுச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

நஞ்ச நாகம் உயர்த்த மீளி தன் நகர் புகுந்துழி, நண்பு அறக்
கஞ்ச மாமனை வென்றவன் செயல் கண்ணிலானொடு உரைத்தபின்,
வஞ்ச மைந்தரொடு உயவி, மீளவும், மண் கொடாத குறிப்பினன்,
‘சஞ்சயன்தனை வருக!’ என்று இரு தாள் பணிந்து, இவை சாற்றுவான்:திருதராட்டிரன் பாண்டவரிடத்துத்  தூதனுப்புமாறுசஞ்சய
முனிவனை வருவித்துக் கூறத்தொடங்குதல்.

நஞ்சம் – விஷத்தையுடைய,நாகம் – பாம்பை யெழுதின
கொடியை, உயர்த்த – உயர நிறுத்தின, மீளி – வலிமையிற் சிறந்த
துரியோதனன், தன் நகர் புகுந்த உழி – (துவாரகையினின்று) தனது
அத்தினாபுரியைச் சேர்ந்தபொழுது, நண்பு அற கஞ்ச மாமனை வென்றவன்
செயல் – உறவுமுறை சிறிதும் பாராட்டாமல் கம்சனாகிய தனது மாமனை
அழித்திட்டவனான ஸ்ரீகிருஷ்ணனது செய்தியை [இருவர்க்கும்
ஒவ்வொருவகையில் உதவிசெய்ய உடன்பட்டதை], கண் இலானொடு உரைத்த
பின் – பிறவிக்குருடனான திருதராட்டிரனோடு சொன்னவுடனே – (அத்தந்தை)
– வஞ்சம் மைந்தரோடு மீளவும் உயவி – வஞ்சனைக் குணத்தையுடைய
தன்மக்கள் நூற்றுவருடனே மறுபடியும் ஆலோசித்து, மண் கொடாத
குறிப்பினன் – (அவ்வாலோசனையிலும்) இராச்சியபாகத்தை (ப்
பாண்டவர்களுக்கு)க் கொடுத்தலில்லாத கருத்தையே தேர்ந்தவனாய், (பின்பு)
சஞ்சயன்தனை வருக என்று – சஞ்சயமுனிவனை வருவாயாக வென்று
(வரவழைத்து உபசரித்து), இரு தாள் பணிந்து – (அவனது) உபயபாதத்தை
வணங்கி, இவைசாற்றுவான் – இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ –
று.) – அவற்றை மேல் இரண்டு கவிகளிற் காண்க.

     நாகம் – (கால்களால்) நடவாததென்றும்,மலைகளில் அல்லது (சந்தன)
மரங்களில் வாசஞ்செய்வ தென்றும் காரணப் பொருள் கூறப்படும்; நகம் –
நடத்தலில்லாதது;  மலையும், மரமுமாம்.  கண்ணனைப்பெற்ற தாயான
தேவகியினது உடன்பிறந்த முறையாகுபவனாதலால், கஞ்சன் கண்ணனுக்கு
மாமனாவன்.  தன்னைக்கொல்லப் பிறந்த தேவகிபுத்திரன் யசோதையினிடம்
ஒளித்து வளர்தல் முதலிய விருத்தாந்தங்களை ஆதியோடந்தமாக நாரதர்
சொல்லக்கேட்டு, கம்சன் அதிககோபங்கொண்டு கிருஷ்ணனைக் கொல்ல
நிச்சயித்து வில்விழாவென்கிற வியாஜம் வைத்து அவனை மதுரைக்கு
வரவழைத்துப் பலவகையில் வதைக்க வழி தேடுகையில், சபையில்
கிருஷ்ணபகவான் வேகமாக எழும்பிக் கஞ்சனது மஞ்சத்தின்மேலேறி அவனது
கிரீடங் கழன்று கீழே விழும்படி அவனைத் தலைமயிர் பிடித்துத் தரையில்
தள்ளி அவன்மேல் தான் விழுந்து அவனைக் கொன்று ஒழித்தனனென்பது
கதை.  மகாவஞ்சகனாகிய கஞ்சனையும் வென்ற மாயவனது உதவி
பாண்டவர்க்கு இருத்தலால், அவர்களை இந்த வஞ்சமைந்தரால்
வெல்லலாகாதென்பது தோன்ற ‘கஞ்சமாமனை வென்றவன்’ என்றார். 

குருகுலத்து அரசர்க்கு உறும் தொழில் கூறும்
நற் குரு ஆதலால்,
இரு குலத்தினும் உற்பவித்தவர் என்றும் நின்
சொல் மறுத்திடார்,
பெருகு உலைக்கனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற
பிணக்கு அறுத்து,
ஒரு குலத்தவர் உததி சூழ் புவி ஆளுமாறு இனி
உட்கொளாய்!இதுவும் மேற்கவியும் – ஒரு தொடர்: திருதராட்டிரன்
சிலகூறிச் சஞ்சயமுனிவனைப் பாண்டவரிடம் தூதனுப்புதல்.

(நீ) குருகுலத்து அரசர்க்கு- குருவென்னும் அரசனது மரபிலே
பிறந்த மன்னர்களெல்லோருக்கும், உறும் தொழில் கூறும் (செய்யத்) தக்க
காரியங்களை (முன்னமே ஆராய்ந்து) சொல்லியருளுகின்ற, நல் குரு ஆதலால்
– சிறந்த ஆசிரியனாகையால், இரு குலத்தினும் உற்பவித்தவர் – (என் குலம்
என் தம்பியான பாண்டுவின் குலம் என்னும்) இரண்டு குலத்தினும் பிறந்த
குமாரர்யாவரும், என்றும் நின்சொல்மறுத்திடார் – எப்பொழுதும் உனது
வார்த்தையைத் தடுக்கமாட்டார்கள்; (ஆதலால், நீ பிரவேசித்து), உலை
பெருகுகனல் அன்ன பிள்ளைகள் பேசுகின்ற பிணக்கு அறுத்து – (கொல்லனது)
உலைக்களத்திலே வளர்ந்தெரிகின்ற அக்கினியைப் போன்ற
(உக்கிரத்தன்மையையுடைய) பாண்டவரும் துரியோதனாதியரும் ஆகிய
சிறுவர்கள் (தனித்தனிப்) பேசுகிற மாறுபாடான வார்த்தைகளை ஒழித்து, ஒரு
குலத்தவர் உததி சூழ் புவி ஆளும் ஆறு – (இவ்விருவகையாருள்) ஒரு
குலத்து இராசகுமாரர்கள் தாமே கடல் சூழ்ந்த நிலவுலகம் முழுவதையும்
அரசாளும்படி, இனி – இப்பொழுது, உள்கொளாய் – திருவுள்ளத்திற்
கொண்டருள்வாய்; (எ – று.)- இது, திருதராட்டிரன் சஞ்சயனை நோக்கிச்
சொல்வது.

    ‘நற்குரு’ என்றது – தீமையையொழித்து எப்பொழுதும் நன்மையையே
செய்தருளும் ஆசாரியமூர்த்தி யென்றபடி.  கோபாக்கினியின் ஆவேசத்தால்
ஒருவரையொருவர் ஒழித்திடுதற்குச் சீறுகின்றன ரிவரென்பான் ‘பெருகுலைக்
கனலன்ன பிள்ளைகள்’ என்றான்.  பிள்ளை – இளைமைப்பெயர்; இது
உயர்திணையிளமைக்கு உரியதாதல், ‘தவழ்பவைதாமுமவற்றோரன்ன’ என்ற
தொல்காப்பியச் சூத்திரங்கொண்டு கொள்ளப்படும்.  உததி – நீர்
தங்குமிடமெனக் காரணப்பெயர்.  உலைக்கனலன்னபிணக்கு
எனஇயைத்தலுமாம்.  சஞ்சயன் நினைத்தமாத்திரத்திலே தனது கருத்துத்
தவறாமல் நிறைவேறிவிடுமென்ற கருத்தால், ‘உட்கொளாய்’ என்றான்

அறத்தின் மைந்தனும், இளைஞரும், புவி ஆசை அற்று,
அகல் அடவியின்
புறத்து இருந்து, தவம் செயும்படி பரிவு உரைத்தருள்,
போய்’ என,
செறுத்திடும் திருதராட்டிரன் தன சிந்தை ஒப்பன செப்பினான்;
மறுத்திலன், பெரு முனியும்; மற்று அவர் பாடிவீடு உற
மன்னினான்.

அறத்தின் மைந்தனும் -யமதருமராசனது குமாரனான
யுதிட்டிரனும், இளைஞரும் – அவன் தம்பிமாரான வீமன் முதலிய நால்வரும்,
புவி ஆசை அற்று – இராச்சிய பாகத்திலுள்ள ஆசை நீங்கி, அகல் அடவியின்
புறத்து இருந்து தவம் செயும்படி – விசாலமான காட்டுப் பக்கங்களிலே தங்கித்
தவத்தைச் செய்யுமாறு, போய் – (நீ அவர்களிடஞ்) சென்று, பரிவு உரைத்தருள்
– அன்புள்ள வார்த்தைகளை (அவர்களுக்கு)ச் சொல்லியருள்வாய், என –
என்று, செறுத்திடும் திருதராட்டிரன் – (பாண்டவர்களை) அழிக்குங் கருத்துள்ள
திருதராஷ்டிரமகாராசன், தன சிந்தை ஒப்பன செப்பினான் – தனது
எண்ணங்களுக்கு இசைந்தவையான வார்த்தைகளைச் சொன்னான்; (சொல்ல),
பெருமுனியும் – மகிமையுள்ள சஞ்சயமுனிவனும், மறுத்திலன் –
(அவ்வார்த்தைகளைத்) தடுக்காதவனாய், மற்று – பின்பு, அவர்பாடி வீடு உற
மன்னினான் – அப்பாண்டவர்களதுபடைவீடாகிய உபப்பிலாவியத்தை அடைதலைப் பொருந்தினான் [அடைந்தா னென்றபடி]; (எ- று.)

     குளிர்ந்தநிழலையும் நீரையும் வேண்டிய சுவையினிய
காய்கனிகிழங்குகளைத் தரவல்ல விருக்கவருக்கத்தையுமுடைய நல்லதொரு
காட்டின் அகத்தில் இனிமையாக வசித்துக் காலங்கழிப்பாராயின் அதுவும்
கண்ணிலாவரசன் கருத்துக்கு ஒவ்வாதாதலால், அவர்கள் கண்டவிடங்களிலும்
அலைந்து வருந்தவேண்டு மென்பான், ‘அகலடவியின் புறத்திருந்து’ என்றான்
போலும்.  தசிந்தை யொப்பன – தனது கவலைக்கு ஏற்றவை யென்றுமாம்.
‘தனசிந்தையொப்பன’ எனவே, இவன் சொன்னவார்த்தைகள் உலகத்தா ரெவர்
கருத்துக்கும் ஒப்பனவல்லவென்பது அருத்தாபத்தியால் விளங்கும்.  இவற்றை
மறுக்காததற்குக் காரணம் முனிவனது பெருந்தன்மையேயாதல்வேண்டு
மென்பது தோன்ற ‘பெருமுனி’ என்றா ரென்க.  முனிக்குப் பெருமையென்ற
அடைமொழி கொடுத்ததனால், திருதராட்டிரனுக்குப் பெருந்தன்மை யில்லை
யென்பது தொனிக்கும்.  தருமத்தினின்றுந் தவறினவர்களுக்குத் தகுந்த
தண்டனை செய்து தருமத்தைக் காத்தலால், யமனுக்குத் தருமனென்று பெயர்;
‘அறம்’ என்ற பெயருக்குங் காரணம் இதுவே.  ‘தேவர்களை இருதிணையாலுஞ்
சொல்லலாம்’ என்ற நியாயம் பற்றி, ‘அறம்’ எனக் கூற்றுவன அஃறிணையாகக்
கூறப்பட்டான்.  செறுத்திடும் என்பதற்கு – (நல்லோர் யாவராலும் மிக்க
பொறாமையை யுடையவனென்று) வெறுக்கப்படுகிற என்றும் உரைக்கலாம்.
‘எண்பது கோடி நினைந் தெண்ணுவன’ என்றபடி திருதராட்டிரன் நினைக்கும்
எண்ணங்கள் மிகப்பலவாதலால், சிந்தை இங்கே பன்மையாயிற்று.  மற்றவர்
என எடுத்து, எதிர்திறத்தவரான பாண்டவரென்றலுமாம்.  பாடிவீடு – பாசறை;
பகைமேற்செல்பவர் உறையுமிடம்.  பரிவுரைத்தல் – இதோபதேசம்.  பாடிவீடு
உற மன்னினான் – பாடிவீட்டின் சமீபமாகச் சேர்ந்தனனென்க.

சென்ற அம்முனி செலவு அறிந்து, எதிர்சென்று, தத்தம
சென்னி, தாள்
ஒன்ற வைத்து, வணங்கி, ஆசி உரைக்கும் மெய்ப் பயன்
உற்ற பின்,
மன்றல் அம் துளவோனும், நல் அறன் மைந்தனும்,
திறல் அனுசரும்,
துன்று பொன்-தவிசினில் இருத்த, இருந்து, சில்
உரை சொல்லுவான்:சஞ்சயன் பாண்டவரிடம் சென்று பேசத்தொடங்குதல்.

மன்றல் அம் துளவோனும் -பரிமளத்தையுடைய அழகிய
திருத்துழாய் மாலையையுடைய கண்ணபிரானும், நல் அறன் மைந்தனும் –
நற்குண நற்செய்கைகளையுடைய தருமபுத்திரனும், திறல் அனுசரும் –
வலிமையையுடைய (அவனது) தம்பிமாரான (வீமன் முதலிய) நால்வரும், சென்ற
அ முனி செலவு அறிந்து – (அத்தினாபுரியினின்று புறப்பட்டு) வந்த அந்த
சஞ்சயமுனிவனது வருகையை உணர்ந்து, எதிர்சென்று – எதிர்கொண்டுபோய்,
தத்தம் சென்னிதாள் ஒன்ற வைத்து வணங்கி – தங்கள் தலையை
(அம்முனிவனது) திருவடிகளிலே பொருந்த வைத்து நமஸ்கரித்து, ஆசி
உரைக்கும் மெய் பயன் உற்றபின் – (அம்முனிவன்)ஆசீர்வாதங் கூறுதலாகிய
உண்மையான பிரயோசனத்தைத் (தாங்கள்) அடைந்தவுடனே துன்று பொன்
தவிசினில் இருத்த – தகுந்ததொரு பொன்மயமான ஆசனத்தின் மேலே
(அம்முனிவனை) எழுந்தருளச்செய்ய, இருந்து – (அவன் அச் சுவர்ணபீடத்தில்)
வீற்றிருந்து, சில் உரை சொல்லுவான் – சில வார்த்தைகளைச்
சொல்பவனானான்; (எ – று.)- அவற்றை மேல் ஐந்து கவிகளிற் காண்க.

     சென்றஅம்முனி செலவு, செல்லுதல் – இங்கு தன்மைக்கு வந்தது.
சென்னி தாள் ஒன்ற வைத்து – தமது சிரசின்மேலே அவன் பாதத்தைப்
பொருந்த வைத்து, வணங்கி – சாஷ்டாங்கமாகத் தண்டன் சமர்ப்பித்து,
நிறைமொழி மாந்தரான முனிவரது சொல் தவறாது பயன் தருமாதலால்,
‘ஆசியுரைக்கும் மெய்ப்பயன்’ என்றது.  பொன் துன்று தவிசு என மாற
இயைத்து, பொன்னினாலமைந்த ஆசன மெனினுமாம்.  சில் உரை –
குளிர்ச்சியான வார்த்தை என்றலும் ஒன்று. ஆசியுரைக்கு மெய்ப்பயன்
உற்றபின் – நிச்சயமாய்ப் பலிக்கும்படி அம்முனிவனால் ஆசீர்வசனஞ்
சொல்லப்பெற்ற பின்பு என்க.

புடவி ஆளுதல் விட்டு, நல் நெறி புரியும்
மா தவர்தம்மின், நீர்
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர்; ஆதலால்,
நலம் ஆனதே;
மடவியார் நிலை அற்ற செல்வம் மகிழ்ந்து, வாழ்
தினம் மாறினால்
விடவி ஆர் அழல் உற்றென, பெரு நரகில் ஆழ்வுற வீழ்வரால்.இதுமுதல் ஏழு கவிகள் – ஒரு தொடர்:
ஐந்துகவிகள் – சஞ்சய முனிவன் வார்த்தை.

நீர் – நீங்கள், புடவிஆளுதல் விட்டு – (அரசர்களாய்ப்)
பூலோகத்தை அரசாள்வதை யொழித்து, நல் நெறி புரியும் மாதவர் தம்மின் –
நல்ல கதியை (ப் பெற) விரும்புகிற மிக்கதவத்தையுடைய முனிவர்கள்போல,
அடவி ஆளவும் வல்லிர் ஆயினிர் – காட்டை இடமாகக்கொண்டு வசிக்கவும்
வல்லவரானீர்கள்; ஆதலால் – ஆகையால், நலம் ஆனதே – (உங்களுக்கு
இப்படியானது) நன்மையைத்தருவதான காரியமே; மடவியார் –
அறியாமையையுடைய கீழ் மக்களோ வெனின், – நிலை அற்ற செல்வம்
மகிழ்ந்து – (எவரிடத்தும்) நிலை பெறுதலில்லாத பொருளையே (முக்கியமாகக்
கருதி அது கிடைத்த மாத்திரத்தில்) மிகமகிழ்ச்சிகொண்டு, வாழ் தினம்
மாறினால் – (தமது வாழ்) நாள் கழிந்தால், விடவி ஆர் அழல் உற்று என –
மரங்கள் பெரு நெருப்பில் விழுந்தாற்போல, பெரு நரகில் – பெரிய
நரகங்களிலே, ஆழ்வு உற வீழ்வர் – அழுந்தும்படி விழுந்து வருந்துவர்:  (எ
– று.)- ஆல் – ஈற்றசை; தேற்றமுமாம்.

     பாண்டவர்தவத்தவர்க்குரிய காடாட்சியிற் பழகியதை இதனாற்
கொண்டாடுகின்றான்.  மடவியார் நிலையற்ற செல்வம் மகிழ்ந்து என்பதற்கு –
இளம்பெண்களையும் நிலையில்லாப் பொருளையுமே உகந்து என்றும் பொருள்
கொள்ளலாம்.  விடவியாரழலுற்றென என்பதை விடு அவி ஆர் அழல் உற்று
என எனப்பிரித்து, சொரியப்பட்ட நெய்யையுடைய பெரு நெருப்பில்
விழுந்தாற்போலஎன்றும் உரைப்பர்.  நிலை – நிலைத்தல் என முதனிலைத்
தொழிற்பெயரென்றாவது, நிற்றல் என ஐ விகுதி பெற்ற
தொழிற்பெயரென்றாவது கொள்க. வாழ்தினம் – உயிர் உடம்போடு கூடி
வாழும் ஆயுள்நாள். விடபம் – மரக்கிளை, அதனையுடையது – விடபீ;
விடவிஎன வந்தது திரிபு.        

உற்ற யோனிகள்தம்மில் உற்பவியாமல், மானுட உற்பவம்
பெற்று, வாழுதல் அரிது; மற்று அது பெறினும், மாயை
செய் பெரு மயக்கு
அற்ற ஞானியர் ஆய், விளங்குதல் அரிது; வீடு உறும்
அறிவு பின்
பற்றுமாறு அரிது; இங்கு உனக்கு இவை பண்பினோடு
பலித்தவே!

உற்ற – (எழுவகையாகப்) பொருந்தின, யோனிகள் தம்மில் –
பிறப்புக்களில், உற்பவியாமல் – (வேறொருபிறவியிற்) பிறவாமல், மானுட
உற்பவம் பெற்று – மனிதசன்மத்தையே யடைந்து, வாழுதல் – வாழ்வது,
அரிது- (உலகத்தில்) அருமையானது; அது பெறினும் – அந்த
மனிதப்பிறப்பையடைந்தாலும், மாயை செய் பெரு மயக்கு அற்ற ஞானியர்
ஆய் விளங்குதல் – மாயையினாலுண்டாக்கப்பட்ட பெரிய (அறியாமையென்கிற)
மயக்கம் நீங்கின தத்துவஞானமுடையவர்களாய் விளங்குவது, அரிது –
அருமையானது; இஃது – கீழ்க்கூறிய தவமானது, பின் வீடுஉறும் அறிவு பற்றும்
ஆறு – இவ்வுடம்பு நீங்கினபின் முத்தியைப்பெறுதற்குக் காரணமான
அத்தத்துவஞானம் உண்டாகும் வழியாம்; இங்கு இவை உனக்கு பண்பினோடு
பலித்த – இங்குக்கூறிய இம் மூன்றும் உனக்கு இயற்கையாகப் பலித்துள்ளன;
(எ – று.)

     மானுடராகவாழ்ச்சி, தத்துவஞானம், அந்தத் தத்துவ ஞானத்திற்குக்
காரணமான தவம் இம்மூன்றும் இயற்கையாகத் தருமபுத்திரனுக்குத்
தோன்றியுள்ளமையைச் சஞ்சயன் இதனாற் பாராட்டுகின்றான்.  பாண்டவர்க்குப்
பொதுவாக உள்ள நற்குணங்களைக் கூறிவிட்டு, அரசனாகுபவன்
தருமனேயாதலால், இனி, தருமனை நோக்கியே கூறுகின்றான்.  இம்மை மறுமை
வீடு என்னும் மூன்றனுள், வேண்டியதை வேண்டியவாறு முயன்று பெறுந்
தன்மை மக்கட் பிறப்புக்கு மாத்திரமே உள்ளதாதலாலும்.  தேவர் முதலிய
மற்றையெந்தப் பிறப்புக்கும் அப்படிப்பட்ட சிறப்பு இல்லை யாதலாலும்,
‘மானுடவுற்பவம் பெற்று வாழுதலரிது’ என்றது.  உறுப்புக் குறையாகப் பிறத்தல்,
பிறந்தும் அற்ப ஆயுளாய் அழிதல் இப்படிப்பட்ட குறைகளை ஒழித்தற்கு,
‘பெற்று வாழுதல்’ என்றார்.

    “அரியது கேட்கின் வரிவடிவேலோய், அரிதரிது மானிடராதலரிது,
மானிடராயினுங் கூன் குருடு செவிடு, பேடுநீங்கிப் பிறத்தலரிது, பேடு நீங்கிப்
பிறந்தகாலையும், ஞானமுங்கல்வியும் நயத்தலரிது, ஞானமுங் கல்வியும் நயந்த
காலையும், தானமுந்தவமுந்தான் செயலரிது, தானமுந்தவமுந்தான்
செய்வராயின், வானவர் நாடு வழி திறந்திடுமே” என்ற ஒளவையார்
பாடலையும், “அரிதாற் பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே”,
“காமனன்னதோர் கழிவனப் பறிவொடுபெறினும், நாமநாற்கதி நவைதரு நெறிபல
வொருவி, வாமனூனெறி வழுவறத்தழுவினரொழுக, லேமவெண்குடை
யிறைவமற்றி யாவதுமரிதே” என்ற சீவகசிந்தாமணியையும் இங்கே அறிக.

     மற்று- வினைமாற்று:  மாயை செய் பெருமயக்கு – அவித்தை
எனப்படும்; அது – திரிபுணர்வு, விபரீத ஞானம்.  ஞானமாவது – பிறப்பு
வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களால் அன்றி
உண்மையாக அறியும் மெய்யுணர்வு.  வீடு – (எல்லாப்பற்றுக்களையும்) விட்டு
அடையுமிடமெனக் காரணப்பெயர்; முக்தி – (உயிர்கள் மீண்டு வாராது சென்று
சேரத்தக்க) வீடாகவுள்ளது என்றும் கருத்துக் கொள்ளலாம்.  இஃது என்பதில்,
ஆய்தம் உயிர்போலொலித்தது.  ‘உமக்கு’ என்ற பாடத்துக்கு –
வீமனாதியோரையும் உட்படுத்திய தென்க.  பலித்த – முற்று.  மயக்கு –
மயங்கு என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர்.  அறிவு பின்பற்றும் ஆறு
என எடுத்து, ஞானத்தையனுசரிக்கும் வழியெனலுமாம்.  

திகந்த எல்லை உறப் பெரும் புவி செல்ல நேமி
செலுத்தும் நும்
அகந்தையோடு அமர் ஆட எண்ணல்! அரவ
கேதனன் உங்களோடு
உகந்து வாழ ஒருப்படான்; இனி உற்ற தாயமும்,
உரிமையும்,
இகந்து, மா தவம் முயறலே கடன், ஈறு இலா உலகு எய்தவே..

திக் அந்தம் எல்லை உற – திக்குக்களின் முடிவான
இடமளவும் பொருந்தவும், பெரு புவி செல்ல – பெரிய பூலோகம் முழுதிலும்
பரவவும், நேமி செலுத்த – (ஆஜ்ஞா) சக்கரத்தைச் செலுத்தும்படி, அரசு ஆள
– (நீங்கள்) இராச்சியத்தை ஆளுதற்கு, நும் அகந்தையோடு – உங்களது
செருக்குடனே, எண்ணில் – நினைத்தால், அ அரவ கேதனன் –
பாம்புக்கொடியையுடைய அத்துரியோதனன், உங்களோடு உகந்து வாழ
ஒருப்படான் – உங்களுடன் மகிழ்ச்சியாய்க் கலந்து வாழ்வதற்கு
உடன்படமாட்டான்; (ஆதலால்), இனி – இனிமேல், உற்ற தாயமும் உரிமையும்
இகந்து – (உங்களுக்குப்) பொருந்தியுள்ள இராச்சியபாகத்தையும் அதன்
அரசாட்சியுரிமையையும் விட்டு, ஈறு இலா உலகு எய்த மாதவம் முயறலே –
அழிதலில்லாத முத்தியுலகத்தைப் பெறும் பொருட்டுப் பெரிய தவத்தைச்
செய்வதுவே, கடன் – (உங்களுக்குக்) கடமையாம்; (எ – று.)

     நீர்,நிலையில்லாத அரசாட்சியை விரும்பி ஆளக் கருதினால்
துரியோதனனோ உங்களுடன்கூடி வாழ உடன்படான்; செருக்குக் கொண்டு
போர் புரிதலோ தகுதியன்று; ஆதலால் அக்கருத்தை விட்டு நிலையான
பெருநாடு பெறும்படி வனத்திற் சென்று தவமியற்றுதலே தகுதியென்கிறான்.
எல்லா வுலகங்களும் அழியும் பிரளய காலத்திலும் நித்தியமான
முத்தியுலகத்துக்கு அழிவு இல்லை யாதலாலும், அந்தமிலின்பத்தை
யுடைமையாலும், பரமபதத்தை ‘ஈறிலாவுலகு’ என்றது.  ‘நேமி செலுத்தும் நும்
அகந்தையோ டமராட எண்ணல்’ என்ற பாடத்துக்கு – ஆஜ்ஞாசக்கரத்தைச்
செலுத்தவேண்டுமெனக் கருதும்  உமது செருக்குடனே போர்செய்ய
நினையாதொழிக என்று பொருள்.  எண்ணல் -எதிர்மறை வியங்கோள்.
அகந்தை – அகங்காரம்; அதாவது – தானல்லாத உடம்பை யானென்றும்,
தன்னோடு இயைபில்லாத பொருளை எனதென்றும் கருதி,
அவற்றினிடத்துச்செய்யும் அபிமானத்தை எனக்கொள்ளுதல் பொருந்தும்;
எனவே, அகந்தையோடு – (நீங்காத) அபிமானத்துடனென்றபடி.  

பராசரன் குலம் ஆகினும், பெறு பயன் இறுக்கிலர்,
பாரிலே;
துராசர், அன்பு இலர், என் சொல் இன்று சுயோதனாதியர்
கைக் கொளார்;
சராசரங்கள் அனைத்தும் ஆகிய சுகனையே நிகர்
தன்மையாய்!
நிராசர் நின் அளவில் குறித்தவை உறுதி என்று இனி
நீ கொளாய்!

பராசரன் குலம் ஆகினும் -பராசர முனிவனது குலத்திலே
பிறந்தவர்களாயிருந்தாலும், சுயோதன ஆதியர் – துரியோதனன் முதலியோர்,
பெறு பயன் – (இம்மனிதசன்மத்தாற்) பெறத்தகுந்த (நல்லொழுக்கமாகிய)
பயனை, பாரிலே – இவ்வுலகத்திலே, இறுக்கிலர் – கடமையாகச்
செய்துமுடித்தாரில்லை;  துராசர் – கெட்ட பேராசையையுடையவர்கள், அன்பு
இலர் – (உயிர்களிடத்துச்சிறிதும்) அன்பில்லாதவர்கள்; (ஆதலால்), என் சொல்
இன்று கைக்கொளார் – எனது வார்த்தையை இப்பொழுது ஏற்றுக்
கொள்கிறாரில்லை; சர அசரங்கள் அனைத்துமாகிய சுகனையே
நிகர்தன்மையாய் – இயங்குதிணைப் பொருள்களும்
நிலைத்திணைப்பொருள்களும் ஆகிய எல்லாவற்றின் சொரூபமான சுக
முனிவனையே ஒத்த குணத்தையுடையவனே! நிராசர் – (பொருள்களிற்)
பற்றில்லாத பெரியோர்கள், குறித்தவை – சித்தாந்தமாகக் கூறியுள்ள தத்துவ
அருத்தங்களை, உறுதி என்று – (உயிருக்கு) நன்மையைத் தருவன என்று, இனி
– இனிமேல், நின் அளவில் நீ கொளாய் – உன் மட்டில் நீ கொள்ளக்கடவாய்;
(எ – று.)-‘கொள்வாய்’ என்றும்பாடம்.

     தத்துவத்தை உள்ளபடி முழுதும் உணர்ந்தபராசர முனிவனது சிறந்த
மரபில் தோன்றியும், இவர்கள் தாம் பொருள்களின் உண்மையைச் சிறிதும்
உணர்ந்து ஒழுகாமை மாத்திரமேயன்றி, உணர்ந்தவர் சொன்னாலுங்
கேட்டிலரென்னும் இகழ்ச்சிமிகுதிதோன்ற முதலிரண்டடிகளால் கூறினார்;
துரியோதனாதியர் கேளாவிட்டாலும் நீயாயினுங் கேட்டு நடப்பது
தகுதியென்பான், ‘நின்னளவில் உறுதியென் றினிநீ கொளாய்’ என்றார்.  வியாச
குமாரனான சுகன் போலவே, வியாசகுலத்திற் பிறந்த நீயும் உடனே
உலகப்பற்றையொழித்து உயர்பதம் பெற முயல்வது தகுதியென்பார்.
‘சுகனையே நிகர் தன்மையாய்’ எனத் தருமனை விளித்தார்; தருமன் அறிவு
ஒழுக்கங்களில் மிக்கவ னென்க.  பயன் நிறுக்கிலர் எனப்பதம் பிரித்து
நல்லொழுக்கமாகிய பெறத்தக்க பயனைச்செய்து நிலைநிறுத்துகின்றாரில்லை
என்பாருமுளர்.

     சுகமுனிவர், பிறந்தபொழுதேஇயற்கையிற் பற்றுக்களனைத்தையு
மொழித்துப் பரம்பொருளை நோக்கித் தனியே சென்றதைக் கண்டு அவரது
தந்தையான வியாசர் அவரது பிரிவைப் பொறுக்க மாட்டாமல் பின்தொடர்ந்து
சென்றுஅன்போடு ‘மைந்தா!’ என்று அழைத்தவளவில், அரணியத்திலுள்ள
மரம் முதலியன எல்லாம் ‘ஏன்’? என்று விடை தந்தன என்ற வரலாற்றால்,
‘சராசரங்களனைத்துமாகிய சுகன்’ என்றதென அறிக. இதனால்
வேதவியாசபகவானினும் மேம்பட்ட ஞானமுடையவன் சுகமுனியென்பதும்,
சுகமுனிவன் பகவானது அம்சமாதலால் சராசரங்களெல்லாம் அவனது
சொரூபமாமென்பதும் அறிக; இனி எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறம்பும்
நிறைந்துள்ள இறைவனை ஒற்றுமையுறப் பாவனை செய்தலால், சுகன்
சராசரங்களனைத்துமாவன் என்றலும் ஒன்று.  இந்தச் சுகனே பாகவத புராண
சரித்திரத்தைப் பரீட்சித்து மகாராசனுக்குக் கூறுபவன்.

     பராசரன் – வியாச முனிவரது தந்தை;வசிஷ்டமகாமுனிவரது புத்திரனான
சக்தி முனியின் மைந்தன்; தத்துவ ஞானத்தில் மிகச் சிறந்தவன்;
எல்லாப்புராணங்களுள்ளுஞ் சிறந்த ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை மைத்திரேய
முனிவனுக்கு அருளிச்செய்தவன்; அன்றியும், ஸ்மிருதிகளெல்லாவற்றினும்
கலியுகத்திற்குச் சிறந்ததெனப்படுகிறதொரு ஸ்மிருதியை இயற்றினவன்.  வியாசர்
மூலமாக உற்பவித்த குலமாதலால், திருதராட்டிரன் பாண்டு இவர்களது குலம்
‘பராசரன் குலம்’ எனப்பட்டது.  சரம் – சஞ்சரிப்பவை, அசரம் –
சஞ்சரியாதவை.  எழுவகைப் பிறப்பினுள், தேவர், மக்கள், விலங்கு, பறவை,
ஊர்வன, நீர்வாழ்வன இவ்வாறும் சரமும், ஸ்தாவரம் – அசரமுமாம்.  சரம்,
ஜங்கமம் இயங்குதிணைப்பொருள், இயங்கியற்பொருள் என்பனவும், அசரம்,
ஸ்தாவரம், நிலைத்திணைப்பொருள், நிலையியற்பொருள் என்பனவும் – ஒரு
பொருளன.  நிராசர் என்றது – முற்றத்துறந்த முனிவர்களை.

‘பாரில் ஆசையும், நின் இராச பதத்தில் ஆசையும்,
மன்னு வெம்
போரில் ஆசையும், நேய மங்கையர் போகம் அன்பொடு
புதிது உணும்
சீரில் ஆசையும், விட்டு, நல் நெறி சேர உன்னுதி,
நீ!’ எனத்
தூரில் ஆசை அறத் துறந்தருள் சுருதி மா முனி
சொல்லவே.

பாரில் ஆசையும் -பூமியினிடத்திலுள்ள ஆசையையும், நின்
இராசபதத்தில் ஆசையும் – உனது இராச்சியாதிகாரத்திலுள்ள ஆசையையும்,
மன்னு வெம் போரில் ஆசையும் – பொருந்தின கொடிய யுத்தஞ்செய்தலிலுள்ள
ஆசையையும், நேயம் மங்கையர் போகம் அன்பொடு புதிது உணும் சீரில்
ஆசையும் – அன்புள்ள மாதர்களது கலவியின்பத்தை அன்புடனே புதிது
புதிதாக அனுபவிக்கும் பெருமையில் உண்டாகும் ஆசையையும், விட்டு –
(முழுவதுந்) துறந்து, நீ -, நல்நெறி சேர – எல்லா (வழிகளிலுஞ்) சிறந்த முக்தி
மார்க்கத்தை அடைவதற்கு, உன்னுதி – மனத்தில் நினைத்திடுவாய், என –
என்று, தூர் இல் ஆசை அற துறந்தருள் சுருதி மாமுனி – அடங்குதலில்லாத
ஆசையை முழுவதும் ஒழித்தருளிய வேதம் வல்ல பெரிய சஞ்சய முனிவன்,
சொல்ல – (தருமனைநோக்கிச்) சொன்னவளவில்-(எ – று.)- ‘எனக்கனன்றிவை
பேசினான்’ என மேல் பன்னிரண்டாம் கவியோடு குளகமாய் முடியும்.

     “அற்றதுபற்றெனி லுற்றதுவீடு””பற்றற்றகண்ணே பிறப்பறுக்கும்”
என்றபடி எல்லாப் பற்றுக்களையும் ஒழித்தே முத்திநெறி சேர வேண்டுதலால்
‘விட்டு நன்னெறிசேர வுன்னுதி’ என்கிறான்.  மண்ணாசை, பொன்னாசை,
பெண்ணாசை என்ற மூன்றாசைகளையும் முறையே கூறுவார், இடையில் மண்
பொன்களைப் பெறுதற்குக் காரணமான போரிலாசையையுங் கூறினார்.  தம்
பக்கல் எல்லா நற்குணங்களும் அமைந்தவரே பிறர்க்கு உபதேசித்தற்குத்
தக்கவராதலால், அவ்வமைதி தோன்ற, ‘தூரிலாசையறத் துறந்தருள் சுருதி
மாமுனி’ என்றார்.  இராசபதம் – அரசனாயிருக்கும் நிலை; அரசாட்சிச்
செல்வம்.   நேயம் – இது போலியாய் நேச மென்றும் வழங்கும்.  தூரில் –
தூர்தலில்லாத:  தூர் – முதனிலைத் தொழிற் பெயர்; இனி ஆசை தூரிலற என
இயைத்து ஆசை வேரோடு ஒழிய என்றும் உரைக்கலாம்; “ஆர்வ வேரரிந்து”
என்றார் சிந்தாமணியாரும்.  “அருளிலார்க் கவ்வுலகமில்லை”
“அறனுமருளுடையான் கண்ணதேயாகும்” எனத் துறவறத்திற்குச் சிறந்த
அருளை உடையதாயிருத்தலை விளக்க ‘துறந்தருள்’ என்றார்

செம்மை, அல்லது, விரகு இலாது தெரிந்த மேதகு
சிந்தையான்,
மும்மையும் தெரி முனி உரைத்த சொல் முன்னி, ஒண்
குறு முறுவல் செய்து,
‘இம்மையே வசை நிற்க, வீடு உற எண்ணி, நீ புகல்வு, என்னினும்,
வெம்மை ஏழ் நரகும் தனித்தனி வீழ்வதே நலம், மிகவுமே;இதுவும், அடுத்த கவியும் – தருமன் கூறும் உத்தரம்.

செம்மை -(பொருள்களின்) நன்மையையும், அல்லது –
நன்மையல்லாத தீமையையும், விரகு இலாது – மாறுபாடில்லாமல், தெரிந்த –
(உள்ளபடி பகுத்து) அறிந்த, மேதகு சிந்தையால் – மேன்மை பொருந்தின
மனத்தினால், மும்மையும் தெரி – மூன்று காலத்து வரலாறுகளையும் அறிந்த,
முனி – சஞ்சய முனிவன், உரைத்த – சொன்ன, சொல் – வார்த்தையை,
(தருமபுத்திரன்),- முன்னி – (கேட்டு) மனத்திற் கொண்டு, ஒள் குறு முறுவல்
செய்து – ஒள்ளிய புன்சிரிப்பைச் செய்து, ‘நீ புகல்வு – நீ (இங்ஙனஞ்)
சொல்லுதல், இம்மையே வசை நிற்க – இப்பிறப்பில் இவ்வுலகத்திலே பழி
நிலைநிற்க, வீடு உற எண்ணி – முத்தி பெறுதலைக் கருதியே, என்னினும் –
ஆயினும், (இங்குப் பழி நிற்க வீட்டுலகத்தையடைதலினும்), வெம்மை ஏழ்
நரகும் தனித்தனி வீழ்வதே மிகவும் நலம் – கொடுமையையுடைய ஏழ்வகை
நரகங்களிலுந் தனித்தனியே விழுந்து வருந்துவதே மிகவும் நன்மையாம்; (எ –
று.) – ‘முறுவல் செய்து’ என்பது.  அடுத்த கவியில் ‘பேசினான்’ என்பதோடு
குளகமாக முடியும்.

     “வசையொழிய வாழ்வாரே வாழ்வாரிசையொழிய, வாழ்வாரே
வாழாதவர்” என்றார் தெய்வப்புலமைத் திருவள்ளுவனாரும்.  செம்மையென
வந்ததனால், அல்லது – தீமையாயிற்று.  விரகு – வஞ்சனை.  புன்சிரிப்புச்
செய்யுங்காலத்து வெள்ளியபற்களினொளி சிறிது வெளித்தோன்றுதலால்,
‘ஒண்குறு முறுவல்செய்து’ என்றது. ஏழ்நரகம் – அள்ளல், ரௌரவம்,
கும்பிபாகம்,கூடசாலம், செந்துத்தானம், பூதி, மாபூதி எனப்படும்: தமப்பிரபை,
இமப்பிரபை, தூமப்பிரபை, வாலுகப்பிரபை, சாகரப்பிரபை, இரத்தப்பிரபை,
அழற்பிரபை என்றும், அவையாவன – இருள், குளிர், புகை, மணல்,
துயிலாமை, இரத்தம், தீ என்றுங் கூறுவாருமுளர். செம்மையல்லது –
உம்மைத்தொகை -ஒண்குறு முறுவல் – பண்புத்தொகை பன்மொழித்தொடர்.
ஏழ் என இது மெய்யீற்றுப் பெயரென்பது ஆசிரியர் தொல்காப்பியனார்
கொள்கை; ஏழு என முற்றியலுகரவீ்ற்றுப் பெயரென்பது – நன்னூலார்
மதம். 

நின் அறத்தினின் நீர்மைதன்னை விளங்குமாறு நிகழ்த்தினும்,
மன் அறத்தினை விட்டு, நல் அறம் மன்னர் ஆனவர்
முயல்வரோ?
என் அறத்தினின்நின்று, தெவ்வரை இரு விசும்பினில் ஏற்றினால்,
பின் அறத்தினில் நினைவு கூரும்’ எனக் கனன்று, இவை பேசினான்.

நின் – உனக்கு உரிய,அறத்தின் – துறவறத்தினது, இன்
நீர்மைதன்னை – இனிமையான தன்மையை, விளங்கும் ஆறு – நன்றாகத்
தெரியும்படி, நிகழ்த்தினும் – (நீ) கூறினாலும், மன்னரானவர் – அரசர்கள், மன்
அறத்தினை விட்டு – ராஜதர்மத்தை நீங்கி, நல் அறம் முயல்வரோ – சிறந்த
துறவற வழியையே அடையப் பிரயத்தனப்படுவார்களோ? (படாரன்றோ!), என்
அறத்தினில் நின்று – எனக்குரிய ராஜதருமத்திலே தவறாமல் நிலைத்து நின்று,
தெவ்வரை – பகைவர்களை, இரு விசும்பினில் ஏற்றினால் – பெரிய வீர
சுவர்க்கத்திலே சேரச்செய்தால் [கொன்றால் என்றபடி], பின் – அதன்
பின்புதான், அறத்தினில் நினைவு கூரும் – துறவறத்தில் எண்ணம் மிகும், என
– என்று, இவை – இவ்வார்த்தைகளை, கனன்று – கோபங்கொண்டு, பேசினான்
– (சஞ்சயனோடு) சொன்னான், (யுதிட்டிரன்); (எ – று.)

    போரிற் பின்வாங்காமற் பகைவராலிறந்தவர் வீரசுவர்க்கமடைவரென்பது
நூற்றுணிபு.  துறவறம் முத்திபெறுதற்குரிய சிறந்த உபாயமாதலால்,
நல்லறமெனப்பட்டது.  இராசதருமத்தினின்று பகை யொழித்தபின்பே
மனத்திற்குநிச்சலத்தன்மை தோன்றித் துறவறத்திற்குச் செல்லுமாதலால்,
சஞ்சயமுனிவனே!உன்னுபதேசத்துக்கு என்மனம் இப்போது இடங்கொடாது
என்று மறுத்தவாறு. தெவ் – பகைமை யுணர்த்தும் உரிச்சொல்;
“தெவ்வுப்பகைமை” என்பதுதொல்காப்பியம்; அதனையுடையவர் தெவ்வர்.
விசும்பு – ஆகாயம்.   

முனியும், அப் பெரு முரசு உயர்த்தவனும், புகன்றன
முன்னி, ‘நாம்
இனி உரைப்பது கடன்’ என, துணை விழி சிவப்பு
எழ, எழிலியின்
தனிதம் உற்று எழு உருமின் வெஞ் சினம் மூள, மற்று
இவை சாற்றுவான்-
கனி எனத் தினகரனை வௌவிய கடவுள் மாருதி துணைவனே:அதுகேட்டு வீமன் கூறத்தொடங்குதல்.

தினகரனை – சூரியபகவானை(நோக்கி), கனி என – ஒரு
பழமென்று கருதி, வவ்விய – (கையாற்) கவர்தற்குத் தொடங்கின, கடவுள் –
தெய்வத்தன்மையுடைய, மாருதி -வாயுகுமாரனான அனுமானது, துணைவன் –
தம்பியான வீமசேனன், – முனியும் – சஞ்சயமுனிவனும், அ பெரு முரசு
உயர்த்தவனும் – பெரிய பேரிகையின் வடிவமெழுதிய கொடியை (வெற்றிக்கு
அறிகுறியாக) உயர எடுத்த அத்தருமபுத்திரனும், புகன்றன – சொன்ன
வார்த்தைகளை, முன்னி – ஆலோசித்து, இனி நாம் உரைப்பது கடன் என –
இனிமேல் நாமும் – பேசுவது கடமையாமென்று நிச்சயித்து, துணை விழி
சிவப்ப எழ – (தனது) இரண்டு கண்களிலும் செந்நிறம் மிகுதியாக
உண்டாகும்படி, வெம் சினம் மூள – கொடிய கோபம் உண்டாகி வளராநிற்க,
எழிலியின் தனிதம் உற்றன உருமின் – மேகத்தினது முழக்கத்தைப்
பொருந்தினவான இடிகளைப்போல, இவை சாற்றுவான் – இந்த
வார்த்தைகளைக் கூறுபவனானான்; (எ – று.)- அவற்றை, மேல் நான்கு
கவிகளிற் காண்க.

     மருத்- வாயு; அவனது குமாரன் மாருதி: தத்திதாந்தநாமம்.  சிவபிரானது
அம்சமாதலாலும், இராமபிரானது பூர்ண கருணைக்கு விஷயமானவனாதலாலும்,
இனிப் பிரமபட்டம் பெறுதற்கு உரியவனாதலாலும் அனுமான் ‘கடவுள் மாருதி’
எனப்பட்டான்.  தாய் வேறாயினும் வீமன் அனுமான் என்ற இருவரும்
வாயுவின் மக்களாதலால், வீமனை ‘மாருதி துணைவன்’ என்றது.  தினகரனைக்
கனியென வவ்விய மாருதியினது துணைவனெனவே, வீமனும்
தமையன்போலவே பல பராக்கிரம சௌரிய தைரிய வீரியங்களிற் சிறந்தவன்
என்று குறிப்பித்தபடியாம்.  தனிதம் என்னும் இடியின் பெயர் – பின் ‘உரும்’
என வருதலால், முழக்க மாத்திரத்தை யுணர்த்திற்று.  தினகரன் – (தனது
சேர்க்கையாற் பகலையும் நீக்கத்தால் இரவையுந் தந்து) நாளைச் செய்பவன்.

எமக்கு நீ பிரமப் பெருங் குரு; எங்களோடு
எதிர் ஆகுவார்-
தமக்கும் ஒக்கும்; ஒர் உழையிலே அருள் சார
ஓதுதல் தக்கதோ?
அமர்க்கு, நென்னல், உலூக நாமனொடு அறுதியிட்டனன்;
அரவுஇனம்
சுமக்கும் மேதினி ஆளுவோர் வினை வேறுபட்டது சொல்வரே?இது முதல் ஐந்து கவிகள் – ஒரு தொடர்;அவற்றுள், முதல்
நான்கு கவிகள் – வீமன் வார்த்தை.

 நீ -, எமக்கு -எங்களுக்கு, பிரமம் பெரு குரு –
தத்துவப்பொருளை உபதேசிக்குஞ் சிறந்த ஆசிரியன்; எங்களோடு எதிர்
ஆகுவார் தமக்கும் ஒக்கும் – (இத்தன்மை) எங்களுடன் பகைவர்களாயுள்ள
துரியோதனாதியர்களுக்கும் ஒத்ததே; (அப்படியிருக்க), ஓர் உழையிலே அருள்
சார ஓதுதல் தக்கதோ – ஒரு இடத்திலே [பட்சபாதமாகத் துரியோதனாதியர்
பக்கலிலே] கருணைபொருந்த இங்ஙனம் பேசுதல் (உனக்குத்) தகுதியோ?
[அன்றென்றபடி]; நென்னல் உலூகநாமனொடு அமர்க்கு அறுதி இட்டனன் –
நேற்று உலூகனென்னும் பேருள்ள முனிவனோடு (துரியோதனன்) போர்
செய்தற்குத் துணிந்து சொன்னான்; அரவு இனம் சுமக்கும் மேதினி ஆளுவோர்
– பாம்பின் கூட்டத்தால் தாங்கப்படுகிற நிலவுலகத்தை அரசாளும் மன்னர்கள்,
வினைவேறுபட்டது சொல்வரோ – (மனம் ஒன்றாயிருக்கத்) தொழில் வேறுபட்ட
வார்த்தையைச் சொல்வார்களோ? [சொல்லமாட்டார்கள் என்றபடி.] (எ – று.)

    “மனம்வேறு சொல்வேறு மன்னுதொழில்வேறு, வினைவேறு பட்டவர்பால்
மேவும் – மனமே, மனமொன்று சொல்லொன்று வான்பொருளுமொன்றே,
கனமொன்று மேலவர் தங்கண்” என்றபடி திரிகரணங்களும் ஒத்திராமல்
மனத்திலொன்றும் காரியத்திலொன்றும் சொல்லிலொன்றுமாக இருத்தல்
அதமரியற்கையாம்.  எப்பொழுதும் யாரிடத்தும் நடுவுநிலைமை தவறுதல்
சிறிதுந் தகாதாதலால், ஒருழையிலே ‘அருள்சாரவோதுதல் தக்கதோ’ என்றான்
– பிரமம் – வேதமும் ஒழுக்கமும் மந்திரமும் தவமும் ஞானமும் கடவுளுமாம்.
பிரமகுரு – இரண்டாம்வேற்றுமையுருபும் பயனுமுடன் தொக்கதொகை:
உவமைத்தொகையாய், பரம்பொருளோடொத்த குரு என்றுமாம்.  அரவினம்
என்றது – அஷ்ட மகா நாகங்களை:  அவை – அநந்தன், கார்க்கோடகன்,
குளிகன், சங்கபாலன், தக்ஷகன், பதுமன், மகாபதுமன், வாசுகி என்பன.
ஆயிரந் தலைகளையுடைய சர்ப்பராசனான ஆதிசேஷன் கீழிருந்து
அத்தலைகளால் பூமியைத் தாங்காநிற்க, இந்த எட்டுப்பாம்பும் எட்டுத்திக்கிலு
மிருந்து பூமியை உடன் தாங்கும்:  இவ்வஷ்ட நாகங்கள் காசியப
முனிவனுக்கும் அவன் மனைவிமார் பலருள் கத்துரு என்பவளுக்கும்
பிறந்தவை.           

‘இடக் கண் ஆக, வலக் கண் ஆக, இரண்டும்
ஒக்கும்’ எனாமலே,
பிடர்க்கணே மதியான கண்-இலி பெற்றி அல்லன பேசினான்;
கடற்பெரும் படை கூடி, நாளை அணிந்த வெய்ய
களத்தில், நான்
அடல் கடுங் கதையால் அடித்திடும் அதிசயந்தனை,
ஐய! கேள்:

பிடர்க்கணே மதி ஆன கண்இலி – பின்னிடத்திலே
புத்தியுள்ள பிறவிக்குருடனான திருதராட்டிரன், இடக்கண் ஆக வலக்கண் ஆக
இரண்டும் ஒக்கும் எனாமலே – இடக்கண்ணேயாயினும் வலக்கண்ணேயாயினும்
இவ்விரண்டுகண்களும் (ஒன்றோடொன்று வேறுபாடின்றித் தமக்குள்) சமமாம்
என்று நினையாமலே, பெற்றி அல்லன பேசினான் – (தனக்குப்)
பெருமையல்லாத வார்த்தைகளைச் சொன்னான்.  (அது நிற்க).  நாளை –
நாளைக்கு, கடல்பெருபடைகூடி அணிந்த வெய்யகளத்தில் – கடல்போன்ற
பெரிய சேனைகள் சேர்ந்து முறையே வகுக்கப்பட்டு நின்ற கொடிய
யுத்தகளத்திலே, நான்-, அடல் கடு கதையால் அடித்திடும் – வெற்றியையுடைய
கொடுமையான கதாயுதத்தால் (பகைவர்களை) அடிக்கப்போகிற, அதிசயந்தனை
– வியப்பை, ஐய – ஐயனே! கேள் – கேட்பாயாக; (எ – று.)

    திருதராட்டிரன் தன் புத்திரர் இன்பமும் நாங்கள் துன்பமும் அடையுமாறு
எங்களை நாட்டையிழந்து காட்டில் வசிக்கக்கருதி, முன்பு “உன்னுணர்வு
உனக்கேயுள்ளது உன் பெருந்துணைவரான கொன்னுனை வேலோர்
வென்றுகொண்டன கொடுத்தலொல்லார், பின்னுறவுரிமையாவும் பெறுதி
நின்பெருமைக்கேற்ப, முன்னுளோர் பலருஞ்செய்த முறைமையே முன்னுக’
என்று கூறியதல்லாமல் இப்பொழுதும்நாங்கள் நாட்டிற்பற்று ஒழியும்படி
உன்னுடன் கூறியனுப்பியது சிறிதும் அறநெறியன்று என்றான். இனித்
தன்மக்களுக்கு என்னால் நேரும் அபாயத்தைக் கருதாது தன்மக்கள்
இராச்சியம் பெறும் உபாயத்தையே கருதுதலால், பிடர்க்கணே மதியான
கண்ணிலியெனப்பட்டான். சத்துருகாதிநியென்னும் வீமனது கதையின்
பெயருக்குப் பகைவரைக் கொல்வதென்பது பொருளாதலால்,
அக்கருத்துத்தோன்ற, அடற்கடுங்கதை யெனப்பட்டது. ஆக என்னுஞ் சொல்
இரண்டும் – விகற்பப்பொருளன.  இது – இடைச்சொல்லின்பாற்படும்.

உவந்து நீ மொழி தவம் அருந் தவம் அல்ல; ஒன்னலர்
உடல் உகும்
சிவந்த சோரியில் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய்,
நடமாடும் அக்
கவந்த கானகம் மேவி, ஊடு உறு தீய வெவ் வினை
களைவதே,
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு! இது சாலுமே!

 நீ உவந்து மொழி தவம் -நீ மனமகிழ்ந்து உபதேசித்த
தவவொழுக்கங்கள், அரு தவம் அல்ல – (எங்களுக்கு) அருமையான (சிறந்த)
தவமல்ல; ஒன்னலர் – பகைவர்களது, உடல் – (அடிபட்ட) உடம்பினின்று,
உகும் – பெருகுகிற, சிவந்த சோரியில் – செந்நிறமுடைய இரத்தத்திலே, மூழ்கி
– நீராடி,-மாழ்கு சிரங்கள் போய் நடம் ஆடும் – அழிகிற தலைகள் நீங்கிக்
கூத்தாடுகிற, கவந்தம் – உடற்குறைகளாகிய, அ கானகம் – அந்தப்
போர்க்களமாகிய காட்டில், மேவி – பொருந்திநின்று, ஊடு உறு தீய
வெவ்வினை களைவதே – இடையிலே நேர்ந்த மிகவுங்கொடிய
(பகைவர்களாகிய) செய்கைகளை நீக்குவதே, தவந்தனில் தலை ஆன வீடு உறு
தவம் – (நீ சொல்லுந்) தவத்தினுஞ் சிறந்ததான வினைநீங்குதல் பெறுதற்குரிய
தவமாகும்; எமக்கு இது சாலுமே – எங்களுக்கு இத்தவமே அமையும்; (எ-று.)

     “நீமொழிதவம் அருந்தவமல்ல: ஒன்னலர்வினை களைவதே தலையான
தவம்” என்று தவத்தினில் அத்தன்மையை மறுத்துப் பகைவெல்வதில்
அத்தன்மையையேற்றிக் கூறியது அபநுதியணியாம்:  இந்தவணி
உருவகவணியை அங்கமாகப் பெற்றுவந்தது.  பகைவினை களைவதே தவம்
என்பதற்கேற்ப, மூழ்குதலும், கானகமேவுதலும், வினைகளைதலும், வீடுறுதலும்
கூறப்பட்டன.   முனிவர்க்கே சிறந்தது, அவ்வினை களைந்து வீடுறுந்தவம்;
அரசராகிய எங்களுக்கோ, இவ்வினை களைந்து வீடுறு தவமே மிகச்சிறந்தது
என்றான்.  நீராடுதலும், வனவாசஞ்செய்தலும் தவத்திற்கு உறுப்பாவதுபோல,
இரத்த வெள்ளத்தில் ஆழ்தலும், தலையற்ற உடற்குறைகளினிடையே
இருத்தலும், போர் வெற்றிக்கு உறுப்பாமென்க.  கோபாவேசத்தோடு விரைந்து
போர்செய்து நின்ற வீரர்களது உடல்கள் பகைவரால் தலையறுபட்டபின்பும்
சிறிது நேரம் கீழ்விழாது நின்றவாறே பதைபதைத்துக் கைகால்கள்
துடிப்பனவற்றை, ‘மாழ்குசிரங்கள் போய் நடமாடு மக்கவந்த கானகம்’ என்றார்.
சேனையில் மிகப்பலவுயிர் இறந்த பொழுது ஒரு கவந்தம் எழுந்து நின்று
ஆடுமென்பதை இங்குக் குறித்ததாகவுங் கொள்ளலாம், காட்டில்அடர்ந்துள்ள
மரங்கள் காற்றில் அசைதல் போலப் போர்க்களத்தில் தொகுதியாக ஆடுங்
கவந்தங்கள் அசைதலால், கவந்த கானகமென உருவகப்படுத்தப்பட்டது.
இரத்தம் – செந்நீரெனப்படுதலால், ‘சோரியின் மூழ்கி’ என்றது பொருந்தும்

போரது ஆகிய பூமிசாலையில், வேலை சூழ்தரு பூமியின்
பாரமான சுயோதனாதியர் என்னும் நூறு பசுப் படுத்து,
ஈரம் ஆன தயாமனத்தொடு இராயசூய மகம் செயும்
வீர மா முனிதன்னை வெங் கள வேள்வியும் புரிவிப்பனே!’

போர் பூமியது ஆகிய -யுத்தகளமாகிய, சாலையின் –
யாகசாலையிலே, வேலை சூழ்தரு பூமியின் பாரம் ஆன சுயோதன ஆதியர்
என்னும் – கடல்சூழ்ந்த நிலவுலகத்திற்குப் பெருஞ்சுமையான துரியோதனன்
முதலியோராகிய, நூறு பசு – நூறு பசுக்களை, படுத்து – கொன்று, ஈரம் ஆன
தயா மனத்தொடு இராயசூயமகம் செயும் வீர மா முனி தன்னையும்
களவேள்வியும் புரிவிப்பன் – குளிர்ச்சியான  அருளோடு கூடிய மனத்துடனே
(முன்பு) ராஜசூயமென்னும் பெரிய யாகத்தையுஞ் செய்த
வீரத்தன்மையையுடைய சிறந்த இராசவிருடியாகிய யுதிட்டிரனை (இப்பொழுது)
களவேள்வியாகிய இவ்யாகத்தையுஞ் செய்விப்பேன்; (எ – று.)

     ஏதாவது ஒரு யாகத்தைச்செய்துமுடித்தபின்பு கொடுக்கப்படுந் தக்ஷிணை
முதலிய தானமும் அவபிரதஸ்நானமும் போல யுத்தகளத்தில் போரில்
பகைவரைக் கொன்று வென்றபின் செய்யுந் தானம் முதலிய சில பரிகாரத்
தொழில்கள் வேள்வியெனப்படும்; இது சிந்தாமணியிலும், புறநானூற்றிலுங்
கண்டது.  உருவகவணி.  சுயோதனாதியரென்னும் பசு என உருவகத்தில்
உயர்திணை அஃறிணையோடு மயங்கிற்று; திணைவழுவமைதி.  யாகத்திற்
கொல்லப்பட்ட பசுக்கள் நற்கதி பெறுவதாக நூல்களிற்
கூறப்பட்டிருத்தல்போலப் போரிற் கொல்லப்பட்டவர் வீரசுவர்க்கம் பெறுதல்
மரபு.  விவேக மில்லாமல் ஆகாரம், நித்திரை, பயம் முதலியவற்றை
மாத்திரமேயுடைய துரியோதனாதியர் விலங்குபோலுதலால்,
‘சுயோதனாதியரென்னும் பசு’ என்றான்.  இராயசூயம் அரசர்களனைவரையும்
வென்று அவர்தருந் திறைப் பொருள்கொண்டு செய்யப்படுவதொரு
பெருவேள்வி.  மிகக்கனமான மலை முதலிய பாரங்களையெல்லாம் பொறுக்கும்
பூமிக்குப் பாவிகளைச் சுமத்தலே பொறுத்தற்கரிய பாரமாம் என்பது நூற்றிணிபு;
“அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொலுரைப்பான்
பொறை” எனத் திருக்குறளிலுங் காண்க.  ஈற்றடி – இரண்டு செயப்படுபொருள்
வந்தவினை.  

நேமியான் இவை சொன்ன வீரனை, ‘நிற்க!’ என்று நிறுத்தி, உள்
காமியாத முனிக்கு நல் உரை கட்டுரைத்தனன்; ‘இவர்கள் இப்
பூமி ஆளுதல், அவர்களுக்கு அமர் உலகம் ஏறுதல், புரி தவம்;
யாம் யாதும் உரைத்தும் என் பயன்? நீ எழுந்தருள்!’ என்னவே,சஞ்சயமுனிவனை நோக்கிக் கண்ணன் கூறுதல்.

இவை சொன்ன வீரனை -(என்று) இத்தன்மையான
வார்த்தைகளைச் சொன்ன வீரனாகிய வீமனை, நேமியான் – சக்கராயுதமுடைய
கண்ணபிரான், நிற்க என்று நிறுத்தி – (இவ்வளவோடு) பேச்சொழிவாயென்று
சொல்லிப் பேசாது நிறுத்திவிட்டு, ‘இவர்கள் – இந்தப் பாண்டவர்களுக்கு, இ
பூமி ஆளுதல் – இந்த நிலவுலகத்தை அரசாளுதலும், அவர்களுக்கு –
அத்துரியோதனாதியர்களுக்கு, அமர் உலகம் ஏறுதல் – (இவர்களாற் போரிற்
கொல்லப்பட்டுத்) தேவலோகத்து வீரசுவர்க்கத்திற்சென்று சேர்தலும், புரிதவம் –
செய்யுந்தவமாம்; (ஆதலால், அவற்றைத் தடுத்திடுதற்கு), யாம் யாதும்
உரைத்தும் பயன் என் – நாம் எந்தத் தருமத்தை உபதேசித்தாலும்
பிரயோசனம் என்ன? [ஒன்றும் பயன்படாது]; (ஆகையால்), நீ எழுந்தருள் – நீ
புறப்பட்டுச் செல்வாய்,’ என்ன – என்று, உள் காமியாத முனிக்கு – மனத்தில்
(யாதொரு பொருளையும்) விரும்புதலில்லாத சஞ்சயமுனிக்கு, நல் உரை
கட்டுரைத்தனன் – நல்ல வார்த்தைகளை ஒழுங்காகக் கூறியருளினான்; (எ-று.)

     கண்ணன் முக்காலமும் உணர்ந்த முழுமுதற்கடவுளாதலால், ‘இவர்கள்
இப் பூமியாளுதல் அவர்களுக்கமருலக மேறுதல் புரிதவம்’ என முடிவை
முன்னமே கூறினான்.  திருதராட்டிரனது வேண்டுகோளால் தருமனிடம் வந்து
இவ்வாறு கூறினது மாத்திரமே யொழியச் சஞ்சயனுக்குத் தனக்காகத்
துரியோதனாதியரிடம் விருப்பும் பாண்டவரிடம் வெறுப்பும் இல்லையென்பார்,
‘உட்காமியாத முனி’ என்றார்.  இங்கே, காமம் வெகுளி மயக்கம் முதலிய
மற்றைக் குற்றங்களுக்கும் உபலட்சணம்.  அமரருலகம் என்பது,
அமருலகமென விகாரப்பட்டது;  “அன்றேயாள்வாரமருலகே” என்றார்
திருமங்கைமன்னனும்.  நரகம் போலன்றித் தேவருலகம் மேலுள்ளதாதலால்,
ஏறுதல் என வேண்டிற்று.  யாம் என்ற முன்னிலையுளப்பாட்டுத்
தன்மைப்பன்மையால், தன்னையும் சஞ்சயனோடு சேர்த்து அவனைச்
சாந்தப்படுத்தியவாறு.  உள் என்னும் உள்ளிடத்தின் பெயர் அங்குள்ள
மனத்திற்கு இடவாகுபெயர்.  

இருந்த பேர் அவை விட்டு, மற்று அவர் இதயம்
இப்படி என நினைந்து,
அருந் தவக் கடல் மீள, அத்தினபுரி அடைந்து, அவனிபனுடன்
பரிந்து, அறன் தரு காளை சொற்றதும், வீமன் நின்று பகர்ந்ததும்,
குருந்து ஒசித்தருள் முகில் உரைத்ததும், உண்மை
ஆம் வகை கூறினான்.சஞ்சயமுனிவன் திரும்பிச்சென்று திருதராட்டிரனுடன்
செய்திகூறுதல்.

அரு தவம் கடல் -(பிறராற் செய்தற்கு) அருமையான
தவத்துக்குக் கடல்போன்ற சஞ்சய முனிவன், அவர் இதயம் இப்படி என
நினைந்து – பாண்டவர்களது உள்ளக்கருத்து இத்தன்மையதென்று
ஆலோசித்துக்கொண்டு, இருந்த பேர் அவை விட்டு – (தான்) சென்றிருந்த
பெரிய சபையை நீங்கி, மற்று – பின்பு, மீள அத்தினபுரி அடைந்து – மறுபடி
அத்தினாபுரியைச் சேர்ந்து, அறன் தரு காளை பரிந்து சொற்றதும் –
யமதருமராசன் பெற்ற புத்திரனான யுதிட்டிரன் (இராச்சியத்தில்)
விருப்பங்கொண்டு சொன்ன வார்த்தையையும், வீமன் நின்று பகர்ந்ததும் –
வீமசேனன் (கோபத்தோடு) நின்று சொன்ன வார்த்தையையும், குருந்து
ஒசித்தருள் முகில் உரைத்ததும் – குருந்தமரத்தை முறித்தருளின
மேகம்போன்ற கண்ணபிரான் கூறியருளிய வார்த்தையையும், அவனிபனுடன் –
திருதராஷ்டிர மகாராசனுடனே, உண்மை ஆம் வகை கூறினான் –
உண்மையாகிய வகையிலே சொல்லியருளினான்; (எ – று.)

     வந்த பிரயாணம் பயன்படாமல் உடனேமீண்டு சென்றமை தோன்ற,
‘மீள அத்தினபுரியடைந்து’ எனப்பட்டது.  நீர் நிரம்பின கடல்போலத் தவம்
நிரம்பின முனிவனென்பார், ‘தவக்கடல்’ என்றார்.  படி – வகையென்னும்
பொருள்தரும் இடைச்சொல்.  அறன் என்பதை இறுதிப்போலிபெற்ற
தெய்வமுணர்த்தும் அஃறிணைப்பெய ரென்றாவது, அறம் என்னும்
அஃறிணையின்மேற் பிறந்த உயர்திணைப்பெயரென்றாவது கொள்க.  காளை –
இளவெருது; இது இங்கே யுதி்ட்டிரனுக்கு உவமவாகுபெயர்; இது – வீரனுக்கு
நடை வலிமை காம்பீரியங்களால் உவமையாம்.  கம்சனாலேவப்பட்டு வந்த
அசுரர்களுள் ஒருவன் அழகியதொரு குருந்த மரத்தின் வடிவங்கொண்டு
கண்ணன்மேல் விழுந்து அவனைக் கொல்வதாக இருக்கையில், அம்மரத்தைக்
கண்ணபிரான் விளையாட்டாக முறித்தருளினானென உணர்க. 

——————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading