அரவ வெங் கொடியோன் ஏவலின்படியே, ஐவரும்
ஆறு-இரண்டு ஆண்டு,
துருபதன் அளித்த பாவையும் தாமும், சுருதி
மா முனிகணம் பலவும்,
பரிவுடன், மலரும், பலங்களும், கிழங்கும், பாசடைகளும்,
இனிது அருந்தி,
ஒரு பகல் போலக் கழித்தனர், அறிவும் ஒடுங்கிய
புலன்களும் உடையோர்.2.-பாண்டவர் பன்னிரண்டியாண்டு வனவாசம் கழித்தமை.
வெம் அரவம் கொடியோன் ஏவலின் படி ஏ – வெவ்விய
பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனனுடைய கட்டளையின்படியே,
ஆறு இரண்டு ஆண்டு – பன்னிரண்டுவருஷகாலம், ஐவர் உம் –
பஞ்சபாண்டவர்களும்,- துருபதன் அளித்த பாவைஉம் – துருபதன்
(வேள்வியின் மூலமாகப்) பெற்ற பிரதிமைபோன்றவளாகிய திரௌபதியும்,
தாம்உம் – தாங்களும், சுருதி மா முனி கணம் பல உம் – வேதங்களில்வல்ல
சிறந்த இருடியர்கூட்டம்பலவுமாக, (இருந்து),-பரிவுடன் – மனத்திலன்போடு,
மலர்உம் – புஷ்பங்களும், பலங்கள்உம் – பழங்களும், கிழங்குஉம்-, பசு (மை)
அடைகள் உம் – பசிய இலைகளும், இனிது அருந்தி – இனிமையாக உண்டு,-
அறிவு உம்- விவேகமும், ஒடுங்கிய புலன்கள்உம் உடையோர்-அடங்கிய
ஐம்பொறிகளையுமுடையவராய், ஒருபகல்போல கழித்தனர் – ஒருபகலைப்
போலப் போக்கினார்கள்; (எ – று.)
பாண்டவர்கள்அறிவையும் அடங்கிய பொறிகளையுமுடையவராதலால்,
காட்டிற்கிடைத்த மலர்முதலிய உணவுகளை மனத்திருத்தி யோடு உண்டுஒரு
வருத்தமு மின்றிப் பன்னிரண்டு வருஷங்களை, ஒருநாளைக் கழிப்பதுபோலத்
திரௌபதியுடனே எளிதிற்கழித்தன ரென்பதாம். காட்டில் வசித்தபோது
இருடியர் கணமும் இவருடனுறைவதாயிற்றென்க.
தொல் அறக் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்
தன் துணைவரை நோக்கி,
‘கல் அமர் கிரியும், கானமும், இடமாக் கழித்தனம்;
ஒழிந்தன, காலம்;
எல்லை ஓர் ஆண்டும் யாவரும் உணராது இருப்பதற்கு
ஆம் இடம் யாதோ?
சொல்லுமின்’ என்றான்; என்றலும், தொழுது, சுரபதி
மகன் இவை சொல்வான்;3.-அஜ்ஞாதவாசத்தைஎங்குச்செய்யலா மென்று தருமன்வினாவ,
அருச்சுனன்கூறலுறுதல்.
தொல் அறம் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்-பழமை
யான தருமத்திற்கு உரிய கடவுளாகிய யமன் அருளோடு உண்டாக்கிய
குமாரனாகிய யுதிட்டிரன், தன் துணைவரை நோக்கி – தன்
தம்பிமாரைப்பார்த்து,-‘கல் அமர் கிரிஉம் கானம்உம் இடம் ஆ கழித்தனம்-
கற்கள் பொருந்திய மலைகளையும் காட்டையும் இடமாகக்கொண்டு
காலங்கழித்தோம்: காலம்-(காட்டிற்கழிக்கவேண்டிய) காலவெல்லையான
பன்னிரண்டியாண்டுகளும், ஒழிந்தன – கழிந்திட்டன; எல்லை (-இனிக்
கழிக்கவேண்டிய) காலவெல்லையான,ஓர் ஆண்டு உம்-ஒரு வருஷகாலமும்,
யாவர்உம் உணராது இருப்பதற்கு – எவராலும் அறியப்படாமல்
வாசஞ்செய்வதற்கு, ஆம்-ஏற்றதான, இடம்-, யாதுஓ – எதுவோ? சொல்லுமின்
– (நீங்கள்) சொல்லுங்கள்,’ என்றான்-; என்றலும் – என்று (யுதிட்டிரன்)
வினாவியவுடனே, தொழுது – வணங்கி, சுரபதி மகன் –
தேவேந்திரனருளாற்பிறந்த குமாரனாகிய அருச்சுனன், இவை சொல்வான் –
இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ – று.)-அருச்சுனன் கூறுவதை
மேலிரண்டு கவிகளிற்காண்க.
‘யாவருமுணராதிருப்பதற்காமிடம்’ என்றதனால், அஜ்ஞாத வாசத்திற்கு
ஏற்ற இடம் என்றவாறாயிற்று. தேவர்கட்கெல்லாம் தலைவனான
இந்திரனுடைய அருளாற் குந்தீதேவியினிடம் தோன்றியவ னாதலால்,
அருச்சுனன் ‘சுரபதிமகன்’ எனப்பட்டான். ‘தோன்றல் தன் துணைவரை
நோக்கி’ என்றமையால், அஜ்ஞாதவாசஞ் செய்வதற்காகத் தருமன்
ஆலோசனைபுரிந்தது துணைவரைத்தவிர வேறு எவர்க்கும் தெரியாமலே
யென்பது பெறப்படும்: முதனூலில், ‘பன்னிரண்டு வருஷம் வனவாசஞ்செய்து
கழித்தோம்: இனி, ஓரியாண்டு ஒருவருக்கும் தெரியாது
கழிக்கவேண்டுமாதலால், நும்மிடத்து விடைபெற்றுக் கொள்ளுகிறோம்’ என்று
யுதிஷ்டிரன் உடனிருந்தமுனிவர் முதலியோரிடத்து விடைபெற்றுக்கொண்டு,
தாம் வசித்திருந்த ஆச்சிரமத்துக்குக் குரோசதூரம் அப்பாற்சென்று
தம்பிமாருடனும் திரௌபதியுடனும் தௌமிய முனிவருடனும் இருந்து
ஆலோசித்தனனென்று உள்ளது.
நீதியும் விளைவும் தருமமும் நிறைந்து, நிதிகள்
மற்று யாவையும் நெருங்கி,
ஆதியின் மனுநூல் வழியினின் புரப்பான் அவனியை,
மனு குலத்து அரசன்;
மாதிரம் முழுதும் அவன் பெரும் புகழே வழங்குவது;
அமரரும், வேள்வி
வேதியர் பலரும், உறைவதும் அவணே;-விராடர் கோன்
மச்ச நாடு, ஐயா!4.-இரண்டுகவிகள் ஒருதொடர்:விராடநகரமே அஜ்ஞாதவாசஞ்
செய்வதற்கு ஏற்றதென்று அருச்சுனன் தெரிவித்தமை கூறும்.
நீதிஉம் – முறைமையும், விளைவுஉம்-, தருமம் உம்-தானமும்,
நிறைந்து-, நிதிகள்-செல்வங்களும், மற்றுயாவைஉம்-மற்றுமுள்ள தானியம்
முதலானவைகளும், நெருங்கி-, அமரர்உம்-தேவர்களும், வேள்வி வேதியர்
பலர்உம்-யாகஞ்செய்கின்ற பிராமணர்கள் பலரும், உறைவதுஉம்-வசிப்பதும்.
அவண்ஏ – அவ்விடத்திலேயே: (அது),-ஐயா-! விராடர்கோன் மச்சநாடு –
விராடராஜனுடைய மச்சதேசமாகும்; அவனியை – அந்தப்பூமியை, ஆதியின்
மனுநூல் வழியினில் – முற்காலத்தினின்று வருகின்ற மனுநூலின் வழியினால்,
புரப்பான்-பாதுகாப்பவன், மனுகுலத்து அரசன் – மனுகுலத்துத் தோன்றிய
அரசன்: அவன் பெரும் புகழ்ஏ – அந்த விராடராஜனுடைய பெருங்கீர்த்தியே,
மாதிரம் முழுதும் வழங்குவது – திக்குக்களில் எங்குஞ்சொல்லப்படுவதாகும்;
(எ – று.)
நெருங்கிஉறைவது என இயையும்: இனி, நெருங்கியென்பதை எச்சத்திரிபு
ஆகக்கொண்டு, நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்று யாவையும் நெருங்க
மனுநூல் வழியினிற் புரப்பான் என்று இயைப்பினுமாம்: மனுநூல் தவறாமற்
புரப்பதனால் அவ்வரசனிடத்து நீதிமுதலியன நிறைந்து நிதிகண்மற்றுயாவையும்
நெருங்குமென்க. நீர்வளத்தால் மச்சம் இடையறாது இருத்தல்பற்றி, அந்நாடு,
மச்சநாடு எனப் படுவதாயிற்று.
ஆங்கு அவன் நகரி எய்தி, மற்று இன்றே ஐவரும்
அணி உருக் கரந்து,
தீங்கு அற உறைவது அல்லது, வேறு ஓர் சேர்வு
இடம் இலது’ எனச் செப்ப,
தேங்கிய அருளுக்கு இருப்பிடம் ஆன சிந்தையான்,
சிந்தையால் துணிந்து,
பாங்கு உறை அரசர் யாரையும், ‘தம்தம் பதிகளே
செல்க!’ எனப் பகர்ந்தான்.
இன்றுஏ – இன்றைத்தினமே, அவன் நகரி எய்தி – அந்த
விராடமன்னவனுடைய நகரியை யடைந்து, ஐவர்உம்,- நாம் ஐந்துபேரும், அணி
உரு கரந்து-அழகிய (நம்) வடிவத்தை மறைத்துக்கொண்டு, தீங்கு அற-
(யாதொரு) தீமையுமில்லாமல், உறைவது-வசிப்பதுவே (செய்யத்தக்கது):
அல்லது-இதுவல்லாமல், வேறு ஓர் சேர்வு இடம்-சேர்தற்கு ஏற்ற வேறோரிடம்,
இலது-இல்லை, என-என்று, செப்ப-(அருச்சுனன்) கூற,-தேங்கிய அருளுக்கு
இருப்பு இடம் ஆன சிந்தையான் – அருளுக்குத் தேங்கியிருக்கும் இடமான
மனத்தையுடைய தருமபுத்திரன், சிந்தையால் துணிந்து-(தன்)மனத்தினால்
(அவ்வாறே செய்வதாக) நிச்சயித்து,-பாங்குஉறை அரசர் யாரைஉம்-(தன்)
பக்கத்திலேயே வசிப்பவரான அரசர்களெல்லாரையும் பார்த்து, தம்தம் பதிகள்ஏ
செல்க என – ‘தங்கள் தங்களுடைய ஊருக்குச் செல்வீர்களாக’ என்று,
பகர்ந்தான்-சொன்னான்; (எ – று.)
அருச்சுனன் சொன்ன ஆலோசனை தன்மனத்திற்கு ஏற்றிருந்ததனால்,
தருமபுத்திரன், அவ்வாறே செய்வதாக நிச்சயித்துப் பிறகு ஆலோசனையிடத்தை
விட்டுச்சென்று வனத்தில் தன்னோடிருந்தவர்களையெல்லாம் இனித் தாம்
அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டியிருப்பதனால் தங்கள் தங்களுடைய
உறைவிடத்துச் செல்லுமாறுவிடைகொடுத்தனுப்பின னென்பதாம். அரசர்
யாரையும் என்பதற்கு – அரசரையும் மற்றுமுள்ளாரையும் என்றும் உரைக்கலாம்.
ஆலோசனை செய்யுமிடத்தில், யுதிஷ்டிரன், ‘பன்னிரண்டு வருடம் வனவாசம்
கழித்தோம். இனி, அஜ்ஞாதவாசம் எங்கு எப்படிச் செய்வது?’ என்று கவலை
கொண்டு கூற, அப்போது அருச்சுனன், ‘தருமக்கடவுளின் வரத்தால்
அஜ்ஞாதவாசஞ் செய்வது நமக்கு இனிது இயலும்: அதைப்பற்றிக் கவல
வேண்டா: பாஞ்சாலம் மச்சம் சால்வம் முதலிய பல நாடுகள் இருக்கின்றன:
இவற்றில் மனத்திற்குப் பிடித்த ஒரு தேசத்தில் வசிக்குமாறு நிச்சயித்துக்கொள்க’
என்ன, யுதிஷ்டிரன் மச்சதேசமே வாசத்துக்கு ஏற்ற இடம் என்று நிச்சயித்து,
‘அங்கு நான் வேறு தொழிலின்றிக் கங்கன்என்ற பேருடனே துறவி
வேஷம்பூண்டு அரசசபையில் வசிப்பேன்: வினோதத்திற்குச் சூதாட்டம்
ஆடுவேன்: மற்றும் சோதிடம் சகுனம் நீதி வேதாந்தம் முதலியன
சொல்லிக்கொண்டு மன்னவனுக்கு உத்ஸாஹமூட்டிக் காலங்கழிப்பேன்’ என்று
தன்செயலையும் கூறினான். பிறகு வீமசேனன் முதலிய ஒவ்வொருவரையும்
நோக்கித் தனித்தனியே ‘அங்கு நீர் என்னதொழிலைச் செய்து கொண்டு
ஓரியாண்டு கழிப்பீர்?’ என்று வினவ, ஒவ்வொருவரும் இன்னஇன்ன தொழிலைச்
செய்துகொண்டு இருப்போம் என்று பதில் கூறினார் என்று முதனூலிலுள்ளது
முனிவராய் உள்ள தபோதனத்தவரை முடி உறத்
தனித்தனி வணங்கி,
கனிவுறும் அன்பால், ‘என்று நான் உம்மைக் காண்பது!’
என்று, அவர் மனம் களிப்ப,
இனியன உரைகள் பயிற்றி, யாவரையும் ஏகுவித்து,
‘இற்றை நாள் இரவில்
தினகரன் எழுமுன் செல்வம், அச் செல்வம் திகழ்தரு
நகர்க்கு’ எனச் செப்பா,6.-இருடியருக்குத் தருமபுத்திரன்விடைகொடுத்தனுப்புதல்.
இதுவும் அடுத்தகவியும் – ஒருதொடர்.
(இ -ள்.) முனிவர் ஆய் உள்ள – இருடியரான, தபோவனத்தவரை –
தபோவனத்தில் வசிப்பவரை, முடி உற – (தனது) கிரீடம்
(அவர்கள்பாதங்களிலே) பொருந்தும்படி, தனித்தனி வணங்கி – தனித்தனியே
வணக்கஞ்செய்து,-கனிவு உறும் அன்பால் – மனக் கசிவுபொருந்திய அன்போடு,
‘நான் உம்மை காண்பது-, என்று-(மீண்டும்) எப்போதோ?’ என்று-, அவர் மனம்
களிப்ப – அம்முனிவர்களுடைய மனம் மகிழ்ச்சியடையும்படி, இனியன உரைகள்
பயிற்றி – இனிமையான வார்த்தைகளைச் சொல்லி,- யாவரைஉம் ஏகுவித்து –
எல்லோரையும் (தங்கள் தங்களுடைய வாழிடத்திற்குச் செல்லுமாறு
விடைகொடுத்து) அனுப்பிவிட்டு, ‘இற்றை நாள் இரவில் – இன்றைத்தினம்
இராத்திரிப்போதில், தினகரன் எழும் முன் – சூரியன் உதிப்பதற்குமுன்னே, அ
செல்வம் திகழ்தரு நகர்க்கு – செல்வம் விளங்குகின்ற அந்த அழகிய
பட்டணத்திற்கு, செல்வம் – போவோம்,’ என செப்பா-என்று சொல்லி,-
(எ – று.)- “வளநாடடைந்தனன் பாண்டவர் தலைவன்” என அடுத்த
செய்யுளோடு முடியும்.
தினகரன்- தன்னுதயத்தாற் பகலையுண்டாக்குபவன் எனக்காரணக்குறி,
செல்வமச்செல்வம் – பிராசம். தபோதனத்தவரை யென்றும் பாடம்
கல்கெழு குறும்பும், சாரல் அம் கிரியும், கடி கமழ்
முல்லை அம் புறவும்,
மல்கு நீர்ப் பண்ணை மருதமும், கடந்து, வன்னியில்
பிறந்த மா மயிலும்,
வில் கெழு தடக் கை இளைஞரும் தானும் விராடர் கோன்
தனிக் குடை நிழலில்,
பல் குல மாக்கள் வாழ்வு கூர் வளநாடு அடைந்தனன்,
பாண்டவர் தலைவன்.7.-தருமன் தம்பியரோடும் திரௌபதியோடும்மச்சநாட்டை
யடைதல்.
பாண்டவர் தலைவன் – பாண்டவர்கட்குள் முதல்வனான
தருமபுத்திரன்,-வன்னியில் பிறந்த மா மயில்உம் – அக்கினியில் தோன்றிய
சிறந்தமயில்போன்ற திரௌபதியும், வில்கெழு தட கை இளைஞர்உம் –
வில்பொருந்திய பெரியகைகளையுடைய தம்பிமாரும், தான்உம்-, கல்கெழு
குறும்புஉம் – கல்லொடுவிளங்குகின்ற காடும், சாரல் அம் கிரிஉம் –
தாழ்வரையோடு கூடிய அழகிய மலையும், கடிகமழ் முல்லைஉம்-மணம்
வீசுகின்ற முல்லைநிலமும், புறவுஉம் – கொல்லைகளும், மல்குநீர் பண்ணை
மருதம்உம் – மிக்க நீர்வளம்பொருந்திய விளைநிலத்தோடுகூடிய மருதநிலமும்,
கடந்து-, விராடர்கோன் தனிகுடை நிழலில் – விராடராசனுடைய ஒப்பற்ற
குடைநிழலிலே, பல்குலம் மாக்கள் வாழ்வுகூர் வளம் நாடு – பலகுலத்தவரான
மனிதரும் வாழ்ச்சிபெருகுகின்ற மச்சநாட்டை, அடைந்தனன்-; (எ – று.)
குறிஞ்சியும் முல்லையும் திரிந்தது பாலையாகு மாதலின் இங்குப் பாலை
நிலத்தை ‘கல்கெழுகுறும்பு’ என்றாரென்னலாம். புறவு – முல்லையைச் சார்ந்த
நிலம். முதலிரண்டடிகளில் நெய்தல் தவிர, மற்றைய நான்குநிலங்களும்
கூறப்பட்டன. துரோணாசாரியரால் தன்மாணவனைக்கொண்டுவென்று கட்டி
அவமதித்து விடப்பட்ட பாஞ்சால ராசனான யாகசேனன் தன்னைவென்ற
துரோணன்மாணவகனான அருச்சுனனுக்குவிவாகஞ்செய்து தரும்படி ஒரு
புத்திரியையும், துரோணாசாரியரைக் கொல்லும்படி ஒரு புத்திரனையும்
பெறுமாறு யாசஉபயாசரைக் கொண்டு யாகஞ்செய்விக்க, அந்த வேள்வித்
தீயினின்றும் திருஷ்டத்யும்நனும் திரௌபதியும் தோன்றியன ரென்ற சரித்திரம்
பற்றி, திரௌபதியை, ‘வன்னியிற்பிறந்த மாமயில்’ என்றார். பாண்டவர்
தலைவன் மயிலும் இளைஞரும் தானும் மச்சநாடடைந்தனன்- சிறப்பினால் பல
பால்விரவி ஒருமுடிபு ஆயின. [நன். பொது. 27] முல்லையம் புறவும் என்று
பாடமிருக்கலாம்.
தராதலம் முழுதும் உடைய கோமகனும், தம்பியர்
நால்வரும், திருவும்,
இராவிடை, விரைவின், ஆறு இடைக் கடந்து, ஓர்
எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப,
கராம் உலாவரு பைந் தடமும் வண் காவும் கனக
வான் புரிசையும் சூழ்ந்த
விராடன் மா நகரி எல்லை புக்கு, ஒரு பால், மயான
பூமியினிடை விரவா,8.-பிறகு பாண்டவர் விராடனதுநகரியினெல்லையிற் புக்கு
மயான பூமியிடைச் சேர்தல்.
மூன்றுகவிகள் – ஒரு தொடர்.
(இ -ள்.) தராதலம் முழுதுஉம் – பூமிமுழுவதையும், உடைய –
உடைமையாகக்கொண்டு ஆளத்தக்க, கோ மகன்உம் – இராசகுமாரனாகிய
தருமபுத்திரனும், தம்பியர் நால்வர்உம் – அவனுடைய தம்பிமார் நான்குபேரும்,
திருஉம் – திருப்போன்றவளான திரௌபதியும், இராவிடை –
இராத்திரிப்போதில், விரைவின் – விரைவாக, இடை ஆறு – (மற்றும்
விராடன்நகரத்தையடையச் செல்லவேண்டிய) இடைவழியை, கடந்து-, -கராம்
உலாவரு பைந் தடம்உம் – முதலை உலாவுகின்ற புது நீருள்ள தடாகமும்,
வண் காஉம் – வளப்பம் பொருந்திய சோலையும், கனகம் வான்புரிசைஉம் –
பொன்மயமான பெரியமதிலும், சூழ்ந்த – சூழ்ந்திருக்கப்பெற்ற, விராடன் மா
நகரி – விராடனுடைய பெரிய நகரியின், எல்லை – எல்லையிலே, ஓர்
எண்ணம்உம் இருக்கை உம் வாய்ப்ப – தம்முடைய ஒப்பற்ற எண்ணமும்
இருப்பும் நேர்படுமாறு, புக்கு-, ஒருபால்- (அந்நகரியின்) ஒருபகுதியான,
மயானபூமியினிடை – மயானபூமியினிடத்தை, விரவா – பொருந்தி,-(எ – று.)-
ழுநண்ணாழு என அடுத்த கவியோடு தொடரும்.
தம்முடையஓரெண்ணமும் என்றது – அவர்கள் இன்னின்ன
தொழிலினராய் இவ்வாறு அவ்யாண்டைப் போக்கவேணுமென்று கொண்ட
ஆலோசனையை. இருக்கை – தாம் மேற்கொள்ளுந் தொழிலுக்கு ஏற்ற
இருப்பிடம். கராம் – க்ராஹம் என்ற வடசொல்லின் திரிபு
யாமள மறையால் யாவரும் பணிவாள், எழு வகைத்
தாயரில் ஒருத்தி,
சாமள வடிவோடு அந் நகர் வாழ்வாள், சங்கு தண்டு
அங்கையில் தரிப்பாள்,
கோமள வல்லிக் கொடி நிகர் காளி கோயிலின் முன்னர்,
ஓர் வன்னி,
நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் நலம் பெறு,
பாதவம் நண்ணா,9.-இரண்டு கவிகள்-அங்குஒருகாளிகோயிலைச்
சார்ந்திருந்தவன்னிமரத்தில், பாண்டவர், தம்முடைய படைக்கலம்
முதலியவைகளை வைத்தமை தெரிவிக்கும்
யாமளம் மறையால் – யாமளமென்று சொல்லப்படுகிற வேத
மந்திரப்பகுதியைக் கொண்டு, யாவர்உம் பணிவாள் – எல்லாராலும்
வணங்கப்படுபவளும், எழு வகை தாயரில் ஒருத்தி – ஸப்தமாதாக்களில்
ஒருத்தியும், சாமளம் வடிவோடு அ நகர் வாழ்வாள் – கருநிற வடிவத்தோடு
அந்நகரில் வசிப்பவளும், சங்கு தண்டு அம்கையில் தரிப்பாள் – சங்கத்தையும்
தண்டாயுதத்தையும் அழகிய கையில் தரிப்பவளுமான, கோமளம் வல்லி கொடி
நிகர் காளி – அழகிய வல்லி யென்று பேர்பூண்ட கொடியை
யொத்திருப்பவளான காளியென்பவளின், கோயிலின் – கோயிலுக்கு, முன்னர் –
முன்புறத்திலே, நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் – நம்மால்
அளவிடமுடியாத [மிக்க] பலகிளையோடு (பொருந்தி), நலம் பெறு – அழகு
பொருந்திய, ஓர் வன்னி பாதவம் – ஒரு வன்னிமரமானது, (இருப்பதை),
நண்ணா-கிட்டி,-(எ – று.)- “ஒளித்து ஒரு விரகால் வைத்தனராகி” என அடுத்த
கவியோடு தொடரும்.
யாமளம்என்பது – அதர்வணவேதத்தின் ஒருபகுதியென்றும், அது-
காளிஸ்தோத்ரம் முதலியவற்றைக் கொண்ட தென்றுங் கூறுவர்.
எழுவகைத்தாயர் – ப்ராஹ்மீ மாஹேஸ்வரீ கௌமாரீ வைஷ்ணவீ மாஹேந்த்ரீ
வாராகீ மஹாகாளீ எனப்படுவர். சாமளம் = ஸ்யாமளம்: வடசொல். வன்னி =
வஹ்னி. பாதவம் = பாதபம்: அடியாற் பருகுவதெனக் காரணப்பொருள்படும்
வடசொல். வாழ்வாள் பலபடைதனது கைத்தரிப்பாள் என்றும்பாடம்
தத்தம படையும், கவசமும், அனைத்தும், தனித்தனி
ஐவரும் தரித்த
மெய்த் திறலுடைய யாவும், அத் தருவின் கோடரத்து
ஒளித்து, ஒரு விரகால்,
வைத்தனர் ஆகி, யாவரும் உணரா-வகை அரு
மறைகளும் பயிற்றி,
முத் தலை வடி வேல் காளியை வணங்கி, முன்னினார்,
புரி தொழில் முற்றும்.
தனித்தனி – தனித்தனியே, ஐவர்உம் – பஞ்ச பாண்டவர்களும்,
தரித்த – பூண்டிருந்த, தம் தம படைஉம் – தங்கள் தங்களுடைய
ஆயுதங்களையும், கவசம்உம் – கவசங்களையும், அனைத்துஉம் – ஆடை
முதலியவற்றையும், மெய் திறல் உடைய யாஉம் – உண்மையான
வலிமையையுடைய மற்றுமுள்ளவற்றையும், அ தருவின் கோடரத்து – அந்த
வன்னிமரத்தின் பொந்திலே, ஒரு விரகால் – ஒப்பற்ற உபாயத்தினால், ஒளித்து
வைத்தனர் ஆகி – ஒளித்து வைத்தவராய்,- யாவர்உம் உணராவகை – எவரும்
அறியாதபடி, அருமறைகள் உம் பயிற்றி – அருமையான மந்திரங்களையுஞ்
சொல்லி, வடி முத்தலைவேல் காளியை வணங்கி – கூரிய திரிசூலத்தையேந்திய
காளிகாதேவியை வணங்கிவிட்டு, புரி தொழில் முற்றுஉம் முன்னினார் – (தாம்)
செய்யவேண்டிய தொழில் முழுவதையும் ஆலோசித்தார்கள்; (எ – று.)
கீழ் உருக்கரந்துறையவேணுமென்று தீர்மானித்த பாண்டவர், இப்போது
இன்னார்இன்னார் இன்னஇன்ன உருக்கொண்டு இன்னின்ன தொழில்
புரியவேணுமென்று மேல்நிகழ்த்தவேண்டிய, யாவற்றையும் ஆராய்ந்து
தீர்மானித்தன ரென்க. வெற்றிதரக்கூடிய மங்கை யாதலால், காளியை
வணங்கினர். மெய்த்திறலுடையயாவும் என்றது – அட்சயபாண்டம்
போன்றவற்றைக் காட்டுமென்னலாம். ஒருவிரகால் ஒளித்துவைத்தன ரென்றது-
அஜ்ஞாதவாசஞ் செய்யுங்காலம் முற்றுமளவும் தாம் வைத்த பொருள்களில்
எதுவும் கெடாதவாறு இருக்கும்படி வைத்தமையைத் தெரிவிக்கும். தமக்குஉரிய
படைக்கலங்களோடு நகரிற்சென்றால் தம்மை நாட்டவ ரஞ்சுவதோடு
மறைந்துறைதற்கு இடையூறுமா மென்ற காரணத்தால், ஆயுதங்களையெல்லாம்
வன்னிமரத்தின்மீது மறையவைத்து மந்திரத்தாற் பிறர் கவராதபடி
ரட்சையுமியற்றினர்பாண்டவ ரென்க. நாணியைக் கழற்றிவிட்டு நீட்டிய
காண்டீவம்போன்ற அவ்வவர்களுக்குரிய விற்களையும் மற்றுமுள்ளவற்றையும்
வெயில் மழை முதலியவற்றால் நலிவுநேரிடாதபடியும் மானுடர் அண்டாதபடியும்
தோலைக்கொண்டு சுற்றச்செய்து பொதிந்து யுதிஷ்டிரன் நகுலன் மூலமாக
மரத்தின் மீது அவற்றை வைத்தன னென்றும், ஒருவருஷம் முற்றுமளவும்
அவற்றைப் பாதுகாக்குமாறும், அருச்சுனனுக்காவது தனக்காவது மீண்டும்
பெறநினைக்கையில் பெறமுடியுமாறும் தேவர்களைக் குறித்து அபிமந்திரித்தும்
வைத்தனனென்றும், காளிஸ்தோத்ரங்கூறப்பட்டதென்றும் விவரங் காண்க
தம்பியர் வணங்கித் தனது தாள் இணையில் தங்க,
ஓர் தாபத வடிவும்,
உம்பரும் வியப்பக் கங்கன் என்று உரைக்கும் ஒரு
திரு நாமமும், தரித்து,
வெம் பரிதியினும் செம்மை கூர் வடிவம் வெண் புரி
நூலொடு விளங்க
ஐம் புலன் மகிழச் சென்று கண்டு, இறை வந்து அடி தொழ,
ஆசியும் உரைத்தான்.11.-தருமன் துறவியுருக்கொண்டுநிற்க, அவனை வணங்கி
விராடன் ஆசிபெறுதல்.
தம்பியர் வணங்கி தனது தாள் இணையில் தங்க-
தம்பிமார்கள்வணங்கித் தன்னுடைய திருவடித்தாமரைகளில் தங்கவும்,
உம்பர்உம் வியப்ப -தேவர்களும் அதிசயிக்கவும், ஓர் தாபதம் வடிவு உம்-
ஒப்பற்றதுறவிவேஷத்தையும், கங்கன் என்று உரைக்கும் ஒரு திருநாமம்உம்-
கங்கனென்று சொல்லும் ஒருபெயரையும், தரித்து-தாங்கிக்கொண்டு,
(யுதிஷ்டிரன் வேத்தவை சார்ந்தானாக),- வெம்பரிதியின்உம் செம்மை கூர்
வடிவம்-வெம்மை பொருந்திய சூரியனைக் காட்டிலும் செந்நிறம்மிக்க
(அவ்யுதிஷ்டிரனது) வடிவம், வெண் புரிநூலொடு விளங்க –
வெண்மைபொருந்திய முப்புரிநூலுடனே விளங்காநிற்க, ஐம்புலன் மகிழ கண்டு
-(தன்னுடைய) பஞ்சேந்திரியங்களும் மகிழ்ச்சிகொள்ளுமாறுஅம்முனிவனை(ச்
சேய்மையிற்) கண்டு, வந்து -(தன்னிடத்தினின்று புறப்பட்டு) வந்து, இறை –
விராடராசன், சென்று -(துறவியிருக்கு மிடத்துப்) போய், அடிதொழ –
(அத்துறவியை)வணங்க, ஆசிஉம் உரைத்தான் – (அம் மன்னவனுக்கு
அந்தத்துறவியும்) வாழ்த்துங் கூறினான்; (எ – று.)
தருமன்விராடநகரத்தில் வேத்தவையிற்புகுமுன் தாபதவடிவு கொள்ள,
அவனைத் தம்பியர் வணங்கினர்: பின்னர் விராடனவைக்கு அவ்யுதிஷ்டிரன்
சென்றானென்க. அங்ஙன் உம்பரும் வியப்பத் தருமன்
தாபதவுருக்கொண்டபோது கங்கனென்ற பெயரைச் சூடினமை, இரண்டாமடியிற்
பெறப்படும். இனி, நால்வர் சூழவிருந்து வணங்காவிடின் மதிப்பு
உண்டாகாதாதலால், தருமன் தாபதவுருக்கொண்டு வேத்தவைக்குச் சென்றபோது
தம்பியர் வணங்கிச் சூழஇருந்தனரென்பாரு முளர்: அது, தனித்தனியே,
சபைக்குத் தம்பியர் செல்வதாகக் கூறுவதோடு முரணாம். புலன்-பொறிக்கு
இலக்கணை. வந்து – அசையுமாம். ஆசி=ஆஸிஸ்: வடசொல்.
‘யார் ஐயா நீவிர்? எங்கு நின்று இவண் மற்று
எழுந்தருளியது?’ என வினவ,
‘பாரை ஆளுடைய உதிட்டிரன் பாங்காய்ப் பயின்றனன்;
அவன் பெரு வனத்தில்
சேரு நாள் உடன் போய்த் திரிந்தனன்; நின்பால் சில பகல்
வைகுமாறு எண்ணி,
வீர வார் கழலாய்! வந்தனன்’ என்றான்-வேள்வியால்,
கேள்வியால், மிக்கோன்12.-தாபதவுருக்கொண்ட தருமனைவணங்கிய விராடனது
வினாவும், அதற்கு அத்தருமன் இறுத்த விடையும்.
ழுஐயா-! நீவிர் யார்-? எங்குநின்று இவண் எழுந்தருளியது-
எவ்விடத்தினின்று இங்கு வந்தது? என வினவ – என்று
(தாபதவுருக்கொண்டிருந்த தருமபுத்திரனை விராடராசன்) விசாரிக்க,-
வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – யாகஞ்செய்தலிலும்
சிறந்தநூற்கேள்வியைப் பெரியோரையடுத்துக்கேட்டலிலும் மிக்கவனான அந்தத்
தருமபுத்திரன்,- (விராடனைநோக்கி),- ழுவீரம் வார் கழலாய் – வீரத்திற்கு
அறிகுறியாகத் தரித்த நீண்ட கழலைப் பூண்டவனே! பாரை ஆள் உடைய –
பூமியையாளுதலையுடைய, உதிட்டிரன் – தருமபுத்திரனுக்கு, பாங்குஆய் –
தோழனாய், பயின்றனன் – பழகியிருந்தேன்: அவன் பெரு வனத்தில் சேரும்
நாள் – அவன் பெரிய காட்டிலே சேரும்நாளிலே, உடன் போய் திரிந்தனன் –
அவனுடன் கூடவே போய்த் திரிந்தேன்: நின்பால் சில் பகல் வைகும் ஆறு
எண்ணி வந்தனென் – உன்னிடத்துச் சிலநாள் தங்கும்படி யெண்ணி இப்போது
வந்துள்ளேன்,ழு என்றான் – என்று விடை கூறினான்; (எ – று.)
பாங்கு- அருகில் எனினுமாம். இங்குத் தருமபுத்திரன் விராடனிடத்துக்
கூறுவதில் மெய்ம்மைப் பொருள் தோன்றுமாறும் அமைந்திருத்தல் காண்க:
அதுவருமாறு:-உதிட்டிரன் அவன் – யுதிஷ்டிரனாகிய அன்னான், பாங்குஆய் –
சௌக்கியமாக, பயின்றனன் – (நாட்டில்) தங்கியிருந்தவன்,- பெருவனத்தில்
சேரும்நாள்-, உடன் – தன்துணைவரோடு, போய்-(நாட்டை விட்டுச்)சென்று,
திரிந்தனன்-: (அவன்), நின்பால் சில்பகல் வைகுமாறு எண்ணி-, வந்தனன் –
வந்துள்ளா னென்பது. மற்று-அசை.
மன் முனி மொழிந்த வாய்மை கேட்டு, அந்த மனுகுல
மன்னனும் மகிழ்ந்து,
தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சியும், உணர்வும், தகைமையும்,
உவகையில் தோன்ற,
‘என் மனைவயின் இன்று எய்திய பயன் யான் ஏழ்-எழு
பிறப்பினும் புரிந்த
நன்மையின் விளைவே; வேண்டுநாள் ஈண்டு நண்ணுதிர்!’
என நனி நவின்றான்.13.-மன்னவன் மனமுவந்து அந்தமுனிவனை வரவேற்றல்.
மன் முனி – அரசனாய்ப்பிறந்து துறவிவேடத்தைக் கொண்டுள்ள
யுதிஷ்டிரன், மொழிந்த-சொன்ன, வாய்மை-உண்மையான சொல்லை, கேட்டு-,
அந்த மனுகுலம் மன்னன்உம்-மனுகுலத்துத் தோன்றிய அரசனாகிய அந்த
விராடமன்னவனும்,-மகிழ்ந்து-, தன் மனம் நெகிழ்ந்த நெகிழ்ச்சிஉம்-(அந்த
முனிக்கோலத்தையுடைய தருமபுத்திரன் விஷயத்தில்) தன்மனம் இளகியிருக்கும்
நிலைமையும், உணர்வுஉம்-(அவனைப் பற்றிய) நல்லுணர்ச்சியும், தகைமைஉம் –
பாராட்டும், உவகையில் – (அந்த விராடராசன் வெளிக்காட்டிய)
மகிழ்ச்சியில்தானே, தோன்ற – வெளிக்குத் தெரியாநிற்க:- ழுஇன்று-
இன்றைத்தினம், என் மனைவயின் – என் வீட்டிலே, எய்திய – (நீர்) வந்து
சேரப்பெற்றதனாலான, பயன்-நல்விளைவு,-யான்-,ஏழ் எழுபிறப்பின்உம் –
எழுவகைப்பட்ட எழுபிறப்பிலும், புரிந்த – செய்துள்ள, நன்மையின்-
நல்வினையின், விளைவுஏ-பயனேயாம்: வேண்டும் நாள் – (நீர் இங்கே)
வசிக்கவேண்டும் என்று நினைக்கிற நாள், ஈண்டு நண்ணுதிர்-இங்குத்தானே
வாசஞ்செய்மின்,ழு என-என்று, நனி நவின்றான்-இனிதாகக் கூறினான்; (எ – று.)
விராடராசனதுமுகத்தில்தோன்றிய குறிப்பு, அந்தமன்னவனுடைய
மனமகிழ்ச்சி முதலியவற்றை வெளித்தோற்றுவித்ததென்க; ழுஅகத்தினழகு
முகத்தில் தெரியும்ழு என்ற பழமொழி இங்குக் கருதத்தக்கது. ஏழெழு பிறப்பு –
விலங்கு புள் தெய்வம் மானுடம் ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என்னும்
ஏழுபிரிவினையுடையனவும், ஒருபிராணி செய்த புண்ணியபாவங்கள்
தொடர்தற்கு உரியனவுமான ஏழுபிறப்புக்கள்.
தண்டினுக்கு ஒருவன், புய வலிக்கு ஒருவன், தனுவினுக்கு
ஒருவன், என்று உரைக்கும்
திண் திறல் பவன குமரனும் சில் நாள் சென்றபின்,
தெள் அமுது அனைய
உண்டியைக் குறித்துக் கற்ற தன் கல்வி உரிமையைக்
குறித்து, ‘அடு தொழிற்கு
மண்டலத்து அரசே! ஒருவன் யான், வீமன் மடையன்’
என்று, அரசவை வந்தான்.14.-வீமன், சமையற்காரனென்றுசொல்லிக்கொண்டு
விராடனவையைச் சேர்தல்.
ழுதண்டினுக்கு ஒருவன் – தண்டாயுதத்தையேந்திப் பொருவதில்
ஒப்பற்றவன்; புயம் வலிக்கு ஒருவன் – தோள்வலியில் ஒப்பற்றவன்:
தனுவினுக்கு ஒருவன்-தநுர்வித்தையிலும் ஒப்பற்றவன்,ழு என்று -, உரைக்கும் –
(உலகத்தாராற்) சொல்லப்படுகின்ற, திண் திறல் – மிக்கவலிமையையுடைய,
பவனகுமரன்உம் – வாயுபுத்திரனாகிய வீமசேனனும்,-சில் நாள் சென்ற பின் –
(தருமபுத்திரன் விராடனையடைந்து) சிலநாள் கழிந்தபிறகு, தெள் அமுது
அனைய உண்டியை குறித்து கற்ற – தெள்ளிய அமிருதம் போன்று இனிய
உணவைச்சமைத்தலைக் குறித்து(த் தான்) கற்றுள்ள, தன் கல்வி உரிமையை
குறித்து – தன்னுடைய பாகசாஸ்திரத்திலேயுள்ள வல்லமையைச்
சொல்லிக்கொண்டு, ழுமண்டலத்து அரசே – பூமண்டலத்துக்குத் தலைவனே! அடு
தொழிற்கு – சமைக்குந்தொழிலில், ஒருவன் யான் – ஒப்பற்ற
திறமைபடைத்தவன் நான்: வீமன் மடையன்-,ழு என்று – என்று
சொல்லிக்கொண்டு, அரசுஅவை – ராஜசபையை, வந்தான் – வந்துசேர்ந்தான்;
(எ – று.)
தண்டாயுதப்போர் முதலியவற்றில் ஒப்பற்ற வீமன் ழுபாக[சமையல்]
சாஸ்திரத்தில் தான் நிகரற்றவன்: வீமன்மடையன்ழு என்று தன்னைத்
தெரிவித்தான் என்க. வீமன்மடையன் என்ற தொடர் – வீமனுடைய
மடையனென்று பொருள் படுதலோடு வீமனாகிய மடைய னென்றும்
பொருள்படுவது காண்க.
வந்து, தன் தம்முன் மலரடி முன்னி, மலர்க்கையால்
முடியின்மேல் வணங்கி,
‘ஐந்து பல் வகையில் கறிகளும், வெவ்வேறு அறு சுவை
மாறுமாறு அமைப்பேன்;
வெந் திறல் மல்லும் புரி தொழில் உடையேன்; விருதுடைப்
பலாயனன், என் பேர்;
இந்திரன் உலகுதன்னிலும் எண்ணில், என் தொழிற்கு
எதிர் இலை’ என்றான்.15.-சேர்ந்த வீமன்தன்திறமையை விளங்கக் கூறுதல்.
வந்து-, தன் தம்முன் – தனது தமையனுடைய, மலர் அடி –
தாமரைமலர் போன்ற திருவடிகளை, முன்னி – தியானித்தபடியே, மலர்
கையால் – தாமரைமலர்போன்ற கைகளினால், முடியின் மேல்வணங்கி –
சிரசின்மீது வைத்து வணங்கி [சிரசின்மேல் இருகையும் வைத்துக் குவித்து
வணங்கி], ழுபல் கறிகள்உம் – பலவகைப்பட்ட கறிகளையும், ஐந்து வகையின் –
ஐந்துவகைக்குள், வெவ்வேறு அறுசுவை மாறும்ஆறு – ஆறுசுவைகளும்
வெவ்வேறாக மாறிமாறி வரும்படி, அமைப்பேன்-; வெந் திறல் –
கொடியதிறமையோடு, மல்உம் – மற்போரும், புரி – செய்கின்ற, தொழில்-
தொழிலை, உடையேன் -; விருதுஉடை – புகழ்பெற்ற, பலாயனன் என் பேர் –
பலாயனனென்பது என்னுடைய பேராகும்: எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,
இந்திரன் உலகு தன்னில்உம் – இந்திரலோகத்திலும், என் தொழிற்கு – என்
தொழிலைச் செய்வதற்கு, எதிர் – ஒப்பானவர், இலை-,ழு என்றான்-; (எ – று.)
ஐந்து வகையாகக் கறிகளையமைத்தல் – உண்பன கடித்துத்தின்பன
பருகுவன மெல்லுவன நக்குவன ஆகப் பக்குவஞ்செய்தல். அறுசுவை –
கைப்பு புளிப்பு கார்ப்பு உவர்ப்பு துவர்ப்பு தித்திப்பு என்பன.
மேலுலகத்திலிருப்பவை சிறந்தனவாயிருக்கு மென்றகொள்கைபற்றி, இந்திரனுலகு
தன்னிலு மென்தொழிற் கெதிரிலையென்கின்றான்: தன்னுடையாற்றலை
யுணராரிடத்துத் தன்னைப் புகழ்தல் தக்கதே யாதலால், இங்ஙனம் புகழ்ந்து
கூறினா னென்க. வல்லன்என்று முதனூலிற் பேர் கூறப்பட்டுள்ளது.
வீமன்வணங்கியது தருமனையேயென்பார் ழுதம்முன் மலரடி முன்னிவணங்கிழு
என்றார்.
என்றபோது அவனை விராடனும் மகிழ்வுற்று, இரு கையும்
சென்னிமேல் இருத்தி,
பொன் திகழ் மணிப் பூண், மென் துகில், பலவும், புரவி
போதகங்களும், வழங்கி,
‘இன்றுதொட்டு எமக்கு மெய்ப் பெருஞ் சுற்றத்து ஒருவன் நீ’
என்று, அடு தொழிற்கு
நின்றவர் எவர்க்கும் தலைவனாம் உரிமை நிலைபெற
வழங்கினன் மாதோ.16.-அவ்வீமனையும் விராடராசன் வெகுமதிசெய்து
தன்னிடத்துக்கொள்ளல்.
என்ற போது – என்று (வீமசேனன்) சொன்னபோது, அவனை
– அந்தப்பலாயனனென்றவீமனை, விராடன்உம் – விராடராசனும், மகிழ்வுஉற்று
– மகிழ்ச்சிபொருந்தி, இரு கைஉம் – (தன்) இரண்டுகைகளையும்,
சென்னிமேல்இருத்தி – (அந்தவீமசேனனுடைய) சிரசின்மேலிருக்க வைத்து.-
பொன் திகழ் மணி பூண் (பலஉம்) – பொன்னினாலும் இரத்தினங்களினாலும்
விளங்குகின்ற ஆபரணங்கள் பலவற்றையும், மெல் துகில் பலஉம் –
பலவகைப்பட்ட மெல்லிய ஆடைகளையும், புரவி போதகங்கள்உம் –
குதிரைகளையும் யானைக்கன்றுகளையும், வழங்கி – கொடுத்து,- ழுஇனறு
தொட்டு – இன்றுமுதல், எமக்கு-, நீ-, மெய் பெருஞ் சுற்றத்து ஒருவன் –
உண்மையான பெருஞ் சுற்றத்தாரி லொருத்தனாவாய்ழு, என்று – என்று
(முகமன்) கூறி,-அடு தொழிற்கு நின்றவர் எவர்க்குஉம் – (தன்னிடத்துச்)
சமையல்தொழிலில் அமர்ந்து நிற்பவரெல்லார்க்கும், தலைவன் ஆம் –
தலைவனாகின்ற, உரிமை – உத்தியோக முறைமையையும், நிலைபெற –
நிலையாக, வழங்கினன் – (அந்தப் பலாயனனுக்குக்) கொடுத்தான்; (எ – று.)
பலவும்என்பது பூண்என்பதனோடும் கூட்டப்பட்டது. இருகையும்
சென்னிமேலிருத்தியது – நீ என்னிடத்து ஒதுங்கிவாழலா மென்பதைக்
குறிப்பிக்கும். இனி, தன்தலையின்மேல் தன்இருகைகளையும் வைத்து விராடன்
வீமனை அஞ்சலிசெய்தா னென்றல், இந்நிலையில் ஏலாதென்க. போதகம் –
யானைக்கன்று: வடசொல். ஒருவன் நீ – முன்னிலையிற் படர்க்கைவந்த
இடவழுவமைதி. மாதோ – ஈற்றசை. ஐம்பெருஞ்சுற்றத்து என்ற பாடத்துக்கு,
ஐம்பெருஞ்சுற்றங்களாவார் – மந்திரியர் புரோகிதர் சேனாபதியர் தூதர்
சாரணர்என்ற இவர்.
நீடிய சிலைக் கைத் தேவர்கோன் மதலை-நிருத்த நல்
அரங்கினில், முன் நாள்,
வாடிய மருங்குல், பணைத்த பூண் கொங்கை, வாள்
தடங் கண்கள் வார் குழைமேல்
ஓடிய வதனத்து, உருப்பசி பணியால் உறுவதற்கு ஓர்
யாண்டு அமைந்த
பேடியின் வடிவம் தரித்தனன்,-ஆண்மைக்கு இமையவர்
எவரினும் பெரியோன்!17.-உருப்பசி தந்த சாபத்தால் அருச்சுனன் ஒருவருடம்தாங்கவேண்டிய பேடிவடிவத்தைக் கொள்ளுதல்.
நீடிய சிலை கை – நீண்டவில்லையேந்திய கையையுடைய
தேவர்கோன் மதலை – தேவேந்திரனுடைய புதல்வனான அருச்சுனனாகிய,
ஆண்மைக்கு இமையவர் எவரின்உம் பெரியோன் – வீரத்தன்மையில்
தேவர்கள் யாவரினும் மேம்பட்டவன்,- நிருத்தம் நல் அரங்கினில் – நாட்டியம்
ஆடுதற்கு அமைந்த சிறந்த நாடகசாலையில், முன் நாள் – முற்காலத்தில்,
வாடிய மருங்குல் பணைத்த பூண்கொங்கை வாள் தடங் கண்கள் வார்
குழைமேல் ஓடிய வதனத்து உருப்பசி – துவளுகிற [மெல்லிய] இடையையும்
பருத்த ஆபரணங்களையணிந்த தனங்களையும் வாள்போன்ற விசாலமான
கண்கள் நீண்டகாதணிமே லோடப்பெற்ற முகத்தையுமுடையளாயிருந்த
உருப்பசி யென்ற தேவமாதின், பணியால் – ஏவலினால் [சாபத்தினால்], ஓர்
யாண்டு உறுவதற்கு அமைந்த – ஒருவருஷகாலம் தங்கும்படி பொருந்திய,
பேடியின் வடிவம் – பேடிவடிவத்தை, தரித்தனன் -; (எ – று.)
ஆண்மைக்கு எவரினும் பெரியோன்பேடியாயினான்: இது என்ன
வியப்பு! எனஅதிசயந்தோன்றக் கூறியவாறு. அருச்சுனன் சிவபிரானை
நோக்கித்தவம்புரிந்து பாசுபதம் பெற்றுப் பகைவென்ற பின், தேவேந்திரன்
அவ்வருச்சுனனைத் தன்னுலகத்திற்கு இட்டுக் கொண்டுபோய்ப் பெருஞ்சிறப்புச்
செய்து தனிவிடுதி யளித்திருந்தானாக, உருப்பசி நடித்த புதுநாடகத்தைக் கண்டு
அவ்வருச்சுனன் புகழ்ந்து தன்விடுதியிலிருக்கையில், சூரியாஸ்தமனமாகி
நிலாத்தோன்றிய போது தனிப்பட்ட அவ்விடுதிக்கு உருப்பசி வந்தாள்:
அவளைக் கண்ட அருச்சுனன், ழுநீ ஆயுவின் பாரியையாயிருந்தவளாதாலால்,
எனக்கு மாதாவின் வருக்கத்தைச் சேர்ந்தவ ளன்றோழு என்று அவளைப்
பணிந்தான்: உடனே அவள் வெகுண்டு ழுஇரவிடை யாடவர் புகலா மொழி
புகன்றாய்: நீ பேடிய ரியல் பாகுகழு என்றுகூறித் தன் கோயிலிற் புகுந்தாள்:
மறுநாள் பொழுது விடிந்ததும், செய்தியுணர்ந்த தேவேந்திரன் தேவர் புடைசூழ
அவளிருக்குமிடம் சேர, அவளும் தேவேந்திரனைப் பதம்பணிந்தாளாக,
தேவர்கள் ழுஇந்தப் பேடிஉருவம் இந்த அருச்சுனனுக்கு வேண்டும்போது
ஒருவருடம் வந்திருக்குமாறு அருள்புரிகழு என்று அவளிடத்து வேண்ட,
அங்ஙனமே அன்னாள் வரந்தந்தன ளென்பது, அருச்சுனன்
றவநிலைச்சருக்கத்துக் கூறிய சரிதை யாகும்.
வாயுவின் மதலை சென்று கண்டதற்பின், மற்றை நாள்
ஒற்றை வெண் கவிகைச்
சேயொளி மகுடச் சென்னியான் இருந்த பேர் அவை
சிறப்புறச் சென்று,
தூய வெண் புரி நூல் முனி திருக் கழலில் ஒரு புடை
தோய்தரத் தலை சாய்த்து,
‘ஏய வெஞ் சிலைக் கை அருச்சுனன் கோயில் இருப்பது
ஓர் பேடி நான்’ என்றான்.18.-பேடிவடிவம்படைத்த அருச்சுனன் விராடராஜசபை சென்று
அருச்சுனன் கோயிலிலிருந்த பேடி யென்று தன்னைத் தெரிவித்தல்.
வாயுவின் மதலை – வாயுபுத்திரனான வீமசேனன், சென்று –
போய், கண்டதன் பின் – (விராடனைப்) பார்த்து (அங்கு) அமர்ந்தபின்பு,
மற்றைநாள்-,-ஒற்றை வெள் கவிகை-ஒற்றைவெண்கொற்றக்
குடையையும், சேய் ஒளி மகுடம் – செந்நிற வொளியையுடைய
கிரீடத்தையுந்தரித்த, சென்னியான் – முடியையுடையவனாகிய விராடன், இருந்த
– தங்கியுள்ள, பேர் அவை – பெருஞ்சபை, சிறப்புஉற – சிறப்படையும்படி,
சென்று-, தூய வெள் புரிநூல் முனி திரு கழலில் – பரிசுத்தமான
வெண்மையையுடைய முப்புரி நூலையணிந்த துறவியாகிய தருமபுத்திரனுடைய
சிறந்த பாதங்களில், ஒரு புடை – ஒருபகுதியில், தோய்தர-படியும்படி,
தலைசாய்த்து – தலையைவணங்கி, (அருச்சுனன் பிறகு மன்னவனை நோக்கி),-
ழுஏய வெம் சிலை கை – ஏவுந்தன்மையுள்ள கொடிய வில்லைத்தரித்த கைகளை
யுடைய, அருச்சுனன் கோயில் – அருச்சுனனுடைய அரண்மனையிலே,
இருப்பது – இருத்தலையுடைய, ஓர் பேடி நான் – ஒருபேடியாவேன் யான்,ழு
என்றான் – என்று (தன்னைத்) தெரிவித்தான்; (எ – று.)
நான்அருச்சுனன்; இப்போது கோயிலில் [ராஜகிருகத்தில்] வசித்தற்குரிய
பேடிவடிவம் படைத்துள்ளேன் என்று ஒருபொருளும் இதில் தோன்றுதல்
காண்க. பேடி – பெண்ணுறுப்புமிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம்.
நாதமும், இயலும், மேதகு நட நூல் நவில்தரும்
அரங்கினுக்கு உரியேன்;
பேதையர் தமக்கு நடம் பயிற்றுவிப்பேன்; பெயர்
“பிருகந்நளை” என்ப;
ஆதிப! நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி
வந்து அடைந்தேன்;
வேதமும் உலகும் உள்ள நாள் அளவும் விளங்குக,
நின் மரபு!’ என்றான்.19.-இதுவும் அது.
ழுநாதம்உம் – இன்னொலியான சங்கீதமும், இயல்உம் -(பாடுதற்கு
உரிய) பாடலும், மேதகு – மேம்படுகின்ற, நடம் நூல் – நடனசாஸ்திரத்தில்,
நவில்தரும் – கூறியபடி யமைந்துள்ள, அரங்கினுக்கு – நர்த்தன
சாலையிலாடுவதற்கு, உரியேன் – உரியவள்: (அன்றியும்), பேதையர் தமக்கு –
மகளிர்க்கு, நடம்-நர்த்தனத்தை, பயிற்றுவிப்பேன் – பழக்குவித்தற்கு வல்லேன்:
பெயர்-(என்னுடைய) பெயர், பிருகந்நளை என்ப – பிருகந்நளையென்று
சொல்வார்கள்: ஆதிப – தலைவனே! நினது செல்வம் மா நகரில் –
உன்னுடைய வளப்பமுள்ள நகரத்தில், இருப்பதற்கு-வசிப்பதை, எண்ணி-
நினைத்து, வந்து அடைந்தேன்-; வேதமும்-, உலகும்-, உள்ள நாள்
அளவுஉம்-இருக்கும்நாள் வரையிலும், நின் மரபு-உனதுகுலம், விளங்குக-,ழு
என்றான்-; (எ – று.)
நர்த்தனஞ்செய்யும்போது சங்கீதமும் பாடலும் உடன்
வேண்டியிருத்தலால்,ழுநாதமுமியலு மேதகுநடம்ழு எனப்பட்டது.
வித்தகன் என எக் கலைகளும் பயின்ற விராடனும்,
பேடிதன் மொழி கேட்டு,
‘இத் திறம் உடையார் வேலை சூழ் உலகின் இல்லை’
என்று, இனிது உரைத்தருளி,
அத் தகவு உடையாள் மகிழ்வுறக் கலனும், ஆடையும்,
வேண்டுவ வழங்கி,
‘உத்தரைதனக்குப் பாங்கி, நீ!’ என்று ஆங்கு, உரிய தன்
மகளுழை விடுத்தான்.20.-விராடன் பிருகந்நளையைக் கொண்டாடி,
உத்தரையென்ற தன்மகளுக்குப் பாங்கியாக அவளிடத்து விடுத்தல்.
வித்தகன் என – வல்லவனென்று, எ கலைகள்உம் பயின்ற-
எந்தக்கலைகளிலும் கற்றுவல்லவனான, விராடனும்-, பேடி தன் மொழிகேட்டு –
அந்தப் பேடியின் பேச்சைக்கேட்டு, ழுஇ திறம் உடையார்-(நடன நூலில்)
இவ்வளவு வல்லமைபெற்றவர், வேலை சூழ் உலகின் – கடலினாற் சூழப்பட்ட
இந்தப் பூலோகத்தில், இல்லை-,ழு என்று-, இனிது-இனிமையாக, உரைத்தருளி –
சொல்லி,- அ தகவு உடையாள் – அப்படிப்பட்ட திறமுடையளான
அந்தப்பேடி, மகிழ்வுஉற – மகிழ்ச்சியடையும்படி, வேண்டுவ – (அவள்)
விரும்பக்கூடிய, கலன்உம் – ஆபரணங்களையும், ஆடைஉம் –
வஸ்திரங்களையும், வழங்கி – கொடுத்து, ழுஉத்தரை தனக்கு – உத்தரை
யென்கிற (என்) மகளுக்கு, நீ -, பாங்கி-உயிர்த்தோழியாவாய்ழு, என்று – என்று
சொல்லி, உரிய தன் மகளுழை – (தனக்கு) உரியமகளான அவளிடத்தில்,
ஆங்கு – அப்போது, விடுத்தான் – (அந்தப்பிருகந்நளையை) அனுப்பினான்;
(எ- று.)
உரியதன்மகள் என்றது – தான் பெற்ற பெண்என்றபடி. இத்திறமுடையார்வேலைசூழுலகி னில்லை யென்றதனால், அன்னாளை
மன்னவன்பரீட்சித்தறிந்தமை பெறப்படும்.
பின்னரும் சில்நாள் அகன்றபின், நகுலன், பேர் அழகினுக்கு
வேள் அனையான்,
மின்னுடை வடி வேல் வேந்தர் கோன் விராடன் வெம் பரி
ஏறு முன்றிலின்வாய்,
மன்னிய தொழில் கூர் கம்பியும் கயிறும் மத்திகையுடன்
கரத்து ஏந்தி
உன்னயம் முதலாம் புரவி நூல் அறிவோன் உளம் நிகழ்
தருக்கொடு சென்றான்.21.-சின்னாள் கழித்து நகுலன் புரவியோட்டுவோ னுருக்கொண்டு
விராடன் குதிரையேறும் முன்றிலிற் சென்றிருத்தல்
பின்னர்உம் – பின்னும்,சில் நாள் அகன்றபின் – சிலநாள்
கழிந்தபிறகு, பேர் அழகினுக்கு-மிக்க அழகிலே, வேள் அனையான் –
மன்மதனையொத்தவனும், உன்னயம் முதல்ஆம் புரவிநூல் அறிவோன்-
உன்னயம் முதலிய குதிரையைப்பற்றிய நூல்களை யறிந்தவனுமாகிய, நகுலன் -,
மின் உடை – ஒளியையுடைய, வடி வேல் – காய்ச்சியடிக்கப்பட்ட
வேலாயுதத்தையுடையனான, வேந்தர் கோன்விராடன் – அரசர்க்கரசனான
விராடன், வெம் பரி ஏறும் – விரும்பத்தக்க குதிரையிலேறுகின்ற,
முன்றிலின்வாய்-முற்றத்திலே, மன்னிய தொழில் கூர் – (தான் இப்போது)
மேற்கொண்ட குதிரையோட்டுந்தொழிற்கு ஏற்ற, கம்பிஉம் – கடிவாளமும்,
கயிறும் -, மத்திகையுடன் – குதிரைச்சம்மட்டியுடனே, கரத்து – கையிலே,
ஏந்தி -, உளம் நிகழ் தருக்கொடு – மனத்திற்பொருந்திய மேம்பாட்டுடனே,
சென்றான்-; (எ – று.)
தனக்குக் குதிரைநூலில் நன்கு பயிற்சியுண்டு என்ற உறுதி தோன்றுமாறு
குதிரைசெலுத்துதற்குஏற்ற கருவியுடனே விராடராசன் குதிரையேறும்
முன்றிலிலே நகுலனானவன் சென்றிருந்தனனென்பதாம். தருக்கு – செருக்கு:
இங்குக் குதிரை நூலில் வல்லவனென்று தன்மனத்துக் கொண்டுள்ள உறுதியான
எண்ணம். மத்திகை – குதிரையைச் செலுத்துகையில் உபயோகிக்குஞ் சாட்டை.
கம்பிஎன்பதற்கு – உளவுகோல் என்று கூறினாரு முளர்.
சென்றவன்தன்மேல் புரவிமேல் இருந்தோன், செழுந்
தடங் கண் மலர் பரப்பி,
‘வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய்! எவ் வயின்
நின்று வந்தனை நீ?’
என்றலும், அவனும் இயம்பினன்: ‘விசயற்கு இளையவன்,
நகுலன், என்று எல்லாக்
குன்றினும் தன் பேர் எழுதினோன்; அவன்தன் கொற்றம்
யார் கூறுதற்கு உரியார்?22.-இதுமுதல் மூன்றுகவிகள் – விராடராசன்வினவ,
நகுலன் தன்னை இன்னானென்று தெரிவித்தமைகூறும்.
நான்கு கவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) புரவிமேல் இருந்தோன் -குதிரையின்மேலேறியிருந்தவனான
விராடன்,-சென்றவன் தன்மேல்-(மன்னவன் குதிரையேறும் முன்றிலிலே
போய்ச்) சேர்ந்திருந்தவனான நகுலன்மீது, செழுந் தடகண் மலர் பரப்பி –
வளமுள்ள பெரிய (தன்) கண்மலரைப் பரவச்செய்து [பார்த்து], ழுவல் தொழில்
புரவி வான் தொழிற்கு உரியோய்-வலியதொழிலாகிய குதிரைசெலுத்துஞ்
சிறந்ததொழிலுக்கு உரியவனே! நீ-, எ வயின்நின்று வந்தனை-
எவ்விடத்திலிருந்து வந்தாய்?ழு என்றலும்-என்று வினாவியவுடனே,-அவன்உம்-
அந்த நகுலனும், இயம்பினன்-(பின்வருமாறு) கூறலானான்: ழுவிசயற்கு
இளையவன் – அருச்சுனனுக்கு அடுத்த தம்பியாகிய, நகுலன் என்று எல்லாம்
குன்றின்உம் தன் பேர் எழுதினோன்-நகுலனென்று சொல்லப்பட்டு
எல்லாமலையிலும் தன்பேரைத் தீட்டினவன் (ஒருவன் உளன்): அவன் தன்
கொற்றம் – அவனுடைய வெற்றியை, யார் கூறுதற்கு உரியார் – யார்
சொல்லவல்லார்? (எ – று.)
யாவரும் அறியும்பொருட்டு உயர்ந்தஇடத்தில் பேரையெழுதி வைத்தல்,
இயல்பு.
மற்று அவன்தனது வாசி மந்துரைக்குத் தலைவராய் வாழும்
மாக்களில் யான்
உற்றவன் ஒருவன்; வாம் பரி வடிவும், உரை தகு
சுழிகளும், ஒளியும்,
பற்றிய நிறனும், கந்தமும், குரலும், பல் வகைக் கதிகளும்,
பிறந்த
சொல் தகு நிலனும், ஆயுவும், உணர்வேன்; துயர் உறு
பிணிகளும் தவிர்ப்பேன்;
யான்-,-அவன் தனது -அந்தநகுலனுடைய, வாசி மந்துரைக்கு
– குதிரைகட்டுங் கொட்டிலுக்கு, தலைவர் ஆய்-, வாழும்-, மாக்களில் –
மனிதர்களுள், உற்றவன் ஒருவன் – சேர்ந்தவனான ஒருத்தன்: (யான்),-வாம் –
தாவிச்செல்லுகின்ற, பரி வடிவு உம் – குதிரையின் வடிவமும், உரை தகு –
சிறப்பித்துச்சொல்லத் தக்க,சுழிகள்உம் – நற்சுழிகளும், ஒளிஉம்-, பற்றிய
நிறன்உம் – பொருந்திய நிறமும், கந்தம்உம் – (உடலின் மணமும்,
குரல்உம் -, பல்வகை கதிகள்உம் – பலவகைப்பட்ட நடைகளும், பிறந்த –
(குதிரைகள்) தோன்றிய, சொல் தகு நிலன் உம் – சிறப்பித்துச்சொல்லப்படுகிற
தேசமும், ஆயுஉம் – ஆயுளும் ஆகியவற்றை, உணர்வேன் –
அறிந்துள்ளேன்: துயர்உறு – துன்பம் மிக்க, பிணிகள்உம் – (குதிரைக்கு
வரும்) நோய்களையும், தவிர்ப்பேன் – போக்குவேன்.
இதனால், நகுலன் அசுவசாஸ்திரத்தில் தனக்குஉள்ள வல்லமையை
விவரித்துச்சொல்லியவாறு காண்க. குதிரைகள் இன்னின்னவடிவா யிருக்கும்:
குதிரைகட்கு இன்னின்ன இடத்துச் சுழி இவ்வாறு அமைந்திருந்தால் நலனாம்:
அவற்றின்ஒளி இன்னபடியிருக்கும்: அவற்றின்நிறம் இன்னபடியிருக்கும்:
குதிரையங்கத்தினின்று இவ்வாறான மணம்வீசின் நன்றாம்: குரல்
இன்னின்னபடியிருப்பின் நலம் முதலியனவும், மற்றும் அக்குதிரைகட்கு
வருங்கொடியநோய் வகையும் அவற்றின் பரிகாரங்களும் என்பனஎல்லாம் தான்
அறிவே னென்கின்றான். வெண்மை செம்மை கருமை பொன்மை என்ற
நால்வகை நிறங்களிலும், வெள்ளி, நித்திலம், மாதுளம்போது, செம்பஞ்சி,
வண்டு, கார், அழல், உரோசனை முதலியவாகப் பலவற்றினொளி யமைதலும்,
குதிரைகள் – வநாயுபாரசீகம் காம்போசம் பாஹ்லீகம் என்றாற்போன்ற பல
தேசங்களில் தோன்றுவன வாதலும் அறிக. குதிரையின்வடிவம் முதலியன
குறித்துத் திருவிளையாடற்புராணம் முதலியவற்றிற் கூறியிருத்தல் காணலாம்.
மற்று – அசை.
மண்டலம், வீதி, கோணமே, முதலாம் வாசிகள் ஊர்
தொழில் வல்லேன்;
திண் திறல் தடந் தேர் பூண்பதற்கு உரிய செயலுடைப்
பரிகளும் தெரிவேன்;
வண்டு இமிர் அலங்கல் மாலையாய்! பாண்டு மைந்தர்
போய் வனம் புகுந்ததற்பின்,
உண்டியும் இழந்தேன்; உறுதியும் இழந்தேன்; உன் புகழ்
கேட்டு வந்து உற்றேன்.’
மண்டலம் – வட்டமும், வீதி – நேரும், கோணம்ஏ –
வளைவும், முதல் ஆம் – முதலாகிய, வாசிகள் ஊர் தொழில் –
குதிரையேறிச்செலுத்துந்தொழிலில், வல்லேன்-: திண் திறல் –
மிக்கவலிமையையுடைய, தட தேர் – பெரிய தேர்களிலே, பூண்பதற்கு – கட்டிச்
செலுத்துவதற்கு, உரிய -, செயல்உடை – செய்கையைக் கொண்ட, பரிகள்உம்-
குதிரைகளையும், தெரிவேன் – ஆராய்ந்தறிய வல்லேன்: வண்டு இமிர்
அலங்கல் மாலையாய் – வண்டுகளொலிக்கின்ற அசையுந்தன்மையுள்ள
வெற்றிமாலை பூண்டுள்ள அரசனே! பாண்டு மைந்தர் – பாண்டவர், போய் –
(நகரத்தை) விட்டுச்சென்று, வனம் புகுந்ததன் பின் – காட்டைச் சேர்ந்த பிறகு,
[பாண்டவர் வனவாசத்திற் சென்றபின் என்றபடி], உண்டிஉம் இழந்தேன் –
உண்ணும் உணவையும் இழந்தேன்: உறுதிஉம் இழந்தேன் – மனவுறுதியையும்
இழந்திட்டேன்: உன் புகழ் கேட்டு-, வந்து உற்றேன் – (இங்கே) வந்து
சேர்ந்தேன்; (எ – று.)
சிலகுதிரைகள் ஏறிச்செலுத்துதற்கு உரியனவாக, சிலகுதிரைகள் தேரிற்
கட்டியோட்டுதற்கு உரியனவா மென்பது அறிக.
என்ன, அப் புரவி ஏற்று நாயகன் வந்து, இயம்பிய இன்
மொழி கேட்டு,
மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கு நீள் நிழலாய் வயங்கு மா
மதிக்குடை மன்னன்
முன்னவர்க்கு உள்ள வரிசைகள் யாவும், மும் மடங்கு
ஆகவே வழங்கி,
அந் நகர்த் துரங்கம் அவை அனைத்தினுக்கும் அதிபதி
எனும் பதம் கொடுத்தான்.25.-விராடன் நகுலனைச் சன்மானித்து
அவனுக்குக் குதிரைகட்கு அதிபதியாகும்பதவியை யுமளித்தல்.
என்ன – என்று, அ புரவி ஏறு நாயகன் வந்து இயம்பிய –
அந்தச்சிறந்த குதிரைகட்குத் தலைவனானவன் வந்துசொன்ன, இன் மொழி –
இனியவார்த்தையை, கேட்டு – செவியேற்று,- மன்னவர்க்கு எல்லாம் ஒதுங்கும்
நீள் நிழல் ஆய் வயங்கும் – அரசர்கட்கெல்லாம் வந்து ஒதுங்குதற்கு உரிய
நீண்ட நிழலையுடையதாய் விளங்குகின்ற, மா மதி குடை – சிறந்த
சந்திரன்போன்ற வெண்கொற்றக்குடையையுடைய, மன்னன் – விராடராசன்,-
(வந்த அந்த நகுலனுக்கு), முன்னவர்க்கு – முன்னமே (தன்னிடத்துக்)
குதிரைத்தலைவராயமர்ந்திருப்பவர்க்கு, உள்ள-, வரிசைகள் யாஉம் –
சிறப்புக்களையெல்லாம், மும்மடங்கு ஆக – மூன்றுமடங்கு மிகுதியாக
அமையும்படி, வழங்கி – கொடுத்து, அ நகர் துரங்கம் அவை
அனைத்தினுக்குஉம் – அந்த அரண்மனையிலுள்ள குதிரைகள்
எல்லாவற்றுக்கும், அதிபதி – தலைவன், எனும் – என்கின்ற, பதம் –
பதவியையும், கொடுத்தான்-;
துரங்கம் – வேகமாகச் செல்வதென்று பொருள்படும் வடசொல்.
புரவியேறுநாயகன் என்று பிரதிபேதம்.
கிளை படு புரவி புரந்திடும் தாமக்கிரந்தி ஆம் பெயர்
புனை நகுலற்கு
இளையவன், நந்தகோபன் மைந்தனைப்போல், இடையர்தம்
கோலமது எய்தி,
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து, தோளில் ஓர்
தொடித் தடி தழுவி,
விளை புகழ் விராடன் வேத்தவைஅதனை வேறு ஒரு
நாளையின் அடைந்தான்.26.-சகதேவன் இடையர்கோலத்தோடு,
விராடனது சபையைச் சேர்தல்.
கிளை படு – பல பகுப்புப்பொருந்திய, புரவி – குதிரையை,
புரந்திடும் – காக்குந்தொழிலைத் தெரிந்த, தாமக்கிரந்தி ஆம் பெயர் புனை –
தாமக்கிரந்தி யென்கிற பெயர்பூண்ட, நகுலற்கு-, இளையவன்-தம்பியாகிய
சகதேவன், நந்தகோபன் மைந்தனை போல் – நந்தகோபனுடைய மகனாய்
வளர்ந்த ஸ்ரீக்ருஷ்ணனைப்போல், இடையர்தம் கோலம் அது எய்தி-
இடைக்கோலத்தைப் பூண்டு, துளை படுகுழையில் – துளைபொருந்திய ஒரு
காதிலே மாத்திரம், ஒரு குழைஅணிந்து-ஒப்பற்றகுழையென்னுங் காதணியை
யணிந்து, தோளில்-, ஓர் தொடி தடி தழுவி – ஒரு வளைவான தடியைத்
தாங்கிக் கொண்டுவிளை புகழ் விராடன் வேந்து அவை அதனை – முதிர்ந்த
புகழையுடைய விராடமன்னனுடைய இராசசபையை, வேறு ஒரு நாளையின் –
வேறொருதினத்திலே, அடைந்தான் – வந்து சேர்ந்தான்; (எ – று.)
க்ருஷ்ணனைச் சகதேவனுக்கு உவமை கூறியதனால், க்ஷத்திரியனானவன்
இடைக்கோலத்தைக் கொண்டமையும் விளங்கும். குழையணிந்து –
தளிரையணிந்து என்றலும் உண்டு. குதிரையின்வகைகளைப்பற்றி ழுமங்காளன்
சாரங்கன் கங்காநீலன் மௌவழகன் கொங்காளன் கன்னசம்பான்,
குங்குமச்சோரன் கரியான்நீலன் சாரன் குலவுமள்ளான் உரஞ்சிவந்தான்
நல்லான் பொல்லான், தங்குகருங்காற்சம்பான் என்று கூறுந்தன்மையுளழு என்று
திருவாதவூரர்புராணத்தும், ழுஉயர்கனவட்டம் போரா னுரனுளான் கொங்கான்
கங்கான், மயில்வரி நீலான் பொல்லான் மகிழ்விதை மௌவான்சேயான், நயன
வஞ்சனம் பொன் மாரி பாடல நளினி பச்சை பயமிலாமரீசி கோரம்
பட்டவர்த்தனங்கள்பாரேழு என்று திருவாலவாயுடையார்
திருவிளையாடற்புராணத்திலும், மற்றும் கல்லாடம் முதலியவற்றிலும்
கூறியிருப்பது காண்க.
ஆர்கொல், நீ?’ என்ன, அறன் மகனுடன் ஓர் ஆசனத்து
இருந்த பதியைச்
சீருற வேறோர் விரகினால் வணங்கி, செப்பினன்,
அன்ன சாதேவன்:
‘பார் கொள நினைந்து, சுயோதனன் விடுப்ப, படர் வனம்
புகுந்த பாண்டவரில்,
தார் கொள் வேல் இளையோன்தனது கோபாலன்,
தந்திரிபாலன் யான்’ என்றான்.27.-சகதேவன் தான் கொண்டகோலத்திற்குஏற்ப,
வினாவிய விராடனுக்குத் தன்னைத்தெரிவித்தல்.
(வந்த அவனை விராடராசன்பார்த்து), ழுநீ ஆர் கொல்ழு என்ன
– ழுநீ யாவனோ?ழு என்றுவினாவ,-அன்ன சாதேவன் – அந்தச் சகதேவன்,
அறன்மகனுடன் ஓர் ஆசனத்து இருந்த பூபதியை – தருமபுத்திரனுடனே
ஒரேயாசனத்திலே வீற்றிருந்த அந்தவிராடராசனை, வேறு ஓர் விரகினால்
வணங்கி – வேறொருதந்திரத்தினால் வணங்கிவிட்டு, சீர் உற –
சிறப்புப்பொருந்த, செப்பினன் – (பின் வருமாறு) கூறினான்: ழுசுயோதனன் –
துரியோதனன், பார் கொள – (பாண்டவருடைய) இராச்சியத்தைக் கவரும்
பொருட்டு, நினைந்து -, விடுப்ப – (காட்டிற்குச்செல்லுமாறு) ஏவியனுப்ப,-படர்
வனம் புகுந்த பாண்டவரில் – விசாலமான காட்டிலே சேர்ந்த பாண்டவருக்குள்,
தார் கொள் வேல் இளையோன் தனது – வெற்றிமாலையையணிந்து
வேல்தாங்கிய இளைய தம்பியாகிய சகதேவனுடைய, கோபாலன் – பசுக்களைக்
காப்பவன், யான்-: தந்திரிபாலன் – தந்திரிபாலனென்னும் பெயருடையேன்,ழு
என்றான் – என்று விடைகூறினான்; (எ – று.)
விராடன் தன்னைவணங்கினானென்று நினையாநிற்கத் தருமனை
வணங்கினானென்பார் ழுபூபதியைச் சீருற வேறோர்விரகினால் வணங்கிழு என்றார்.
ஆங்கு அவன் இவ்வாறு உரைத்தலும், அவனை, ‘அருகுற
வருக!’ என அழைத்து,
பாங்குறத் தக்க வழக்கமும் வழங்கி, ‘பல்வகை
நிரைகளும், நீயே
ஈங்கும் அப்படியே புரத்தி!’ என்று உரைத்தான்; இவனும்
அவ் அரசன் ஏவலினால்,
தீங்கு அறக் கைக்கொண்டு, அவ்வவர்க்கு எல்லாம் தகை
பெறும் செம்மல் ஆயினனே.28.-விராடன் வந்தவனை யுபசரித்துநிரைக்காவல னாக்க,
அவன் கோபாலர்க்கெல்லாந் தலைவனாதல்.
ஆங்கு – அப்போது, அவன் – அந்தச்சகதேவன், இ ஆறு
உரைத்தலும் – இப்படிச்சொன்னவுடனே, அவனை-, வருக என – வருவாயாக
என்றுசொல்லி, அருகு உற அழைத்து – சமீபத்திலேபொருந்தக் கூப்பிட்டு,
பாங்கு உற தக்க – இனிமைபொருந்தத்தகுதியான, வழக்கம்உம் –
வரிசைகளையும், வழங்கி-கொடுத்து, (அவனைநோக்கி),-ழுஅப்படி ஏ –
சகதேவனிடத்துப்போலவே, ஈங்கு உம் – இங்கேயும், பல்வகை நிரைகள் உம் –
பலவகைப்பட்ட பசுக்கூட்டங்களையும், நீயே-, புரத்தி-பாதுகாப்பாய்,ழு என்று-,
உரைத்தான் – (விராடராசன்) சொன்னான்: இவன்உம் – இந்தத் தந்திரிபாலனும்,
அ அரசன் ஏவலினால் – அந்தவிராடராசனுடைய கட்டளையினால், தீங்கு அற
– துன்பமில்லாமல், கைக்கொண்டு – (நிரைகளைத் தன்) வசத்திற்கொண்டு, அ
அவர்க்கு எல்லாம் – ஏற்கவேயிருந்த இடையர்கட்கெல்லாம், தகை பெறும் –
பெருமைபெற்ற, செம்மல் ஆயினன் – தலைவனாயினான்; (எ – று.)
வழக்கம் – கௌரவமாக வழங்கப்படுவது: வரிசை : செயப்படுபொருள்
விகுதி பெற்ற பெயர்
ஓம மக ஆர் அழலினூடு உருவு உயிர்க்கும்
மா மயில் திரௌபதியும், வண்ண மகள் ஆகி,
தே மருவு தார் முடி விராடன் இரு தோள் சேர்
கோமகளை நாடி, அவள் கோயிலிடை புக்காள்.29.-திரௌபதி வண்ணமகளாகி, விராடமன்னவனுடைய தேவியின்
கோயிலை நாடி யடைதல்.
ஓமம் மகம் ஆர் அழலினூடு- ஓமஞ்செய்த யாகத்தின்
நிரம்பிய நெருப்பினிடையிலே, உரு உயிர்க்கும் – உருவங்கொண்டு
வெளிப்பட்ட, மா மயில் – சிறந்த மயில்போன்ற, திரௌபதிஉம்-, வண்ணம்
மகள் ஆகி – மகளிர்க்கு அலங்காரஞ்செய்யும் பணிப்பெண் வடிவுகொண்டு,
தேன் மருவு தார் முடி விராடன் இருதோள் சேர்-தேன் பொருந்திய
மாலைசூடிய முடியையுடைய விராடனுடைய இரண்டுதோளையுஞ் சேர்ந்த,
கோமகளை – இராணியை, நாடி – அடையவிரும்பி, அவள் கோயிலிடை –
அந்தஇராணியின் அரண்மனையிலே, புக்காள் – புகுந்தாள்; (எ – று.)-விராடன்
தேவியின் பெயர் – சுதேஷ்ணை யென்பது.
இதுமுதற் பத்துக்கவிகள் – பெரும்பாலும் முதல்மூன்றுசீர்கள்
விளங்காய்ச்சீர்களும் ஈற்றுச்சீரொன்று மாச்சீருமாகிவந்த அளவடினான்கு
கொண்ட கலிவிருத்தங்கள்.
மது மலரின் வாழ் திருவும் வந்து தொழ உரியாள்,
நொதுமலினள் ஆகி, ஒரு நுண்ணிடை நடந்தாள்;
பதும விழியாய்!’ எனலும், வாயிலவர், பால்போல்
மதுர மொழியாள், ‘அழைமின், வாணுதலை!’ என்றாள்30.-வண்ணமகள் வந்திருத்தலைவாயில்காவலர் தெரிவிக்க,
விராடன்மனைவி உள்ளேயழைக்குமாறு கூறுதல்.
வாயிலவர் – வாயிலிலேயிருந்து பாதுகாவல் புரிபவர், சுதேஷ்
ணையைக்கிட்டி அவளைநோக்கி),-ழுபதுமம் விழியாய்-தாமரை மலர்போன்ற
கண்களையுடையவளே! மது மலரின் வாழ் திருஉம் வந்து தொழ உரியாள்-
தேனைக்கொண்ட தாமரைமலரில் வாழ்பவளாகிய இலக்குமியும்
வந்துதொழுதற்குஉரிய கட்டழகுடையவளான, ஒரு நுண் இடை-நுண்ணிய
இடையையுடையாளொருத்தி, நொதுமலினள் ஆகி-சாதாரண
மானுடப்பெண்போன்று, நடந்தாள் – வந்துள்ளாள், எனலும்-என்று
தெரிவித்தவுடனே,-பால்போல் மதுரம் மொழியாள் – பால்போல்இனிய
பேச்சையுடையவளான அந்த விராடன் மனைவி, (அங்ஙனம் சொன்ன
வாயில்காவலரை நோக்கி),-வாள்நுதலை-ஒளியுள்ள நெற்றியையுடையவளான
அந்தப்பெண்ணை, அழைமின்-(உள்ளே) அழைத்துவாருங்கள்,ழு என்றாள் –
என்று கூறினாள்; (எ – று.)
வந்தவளின் கட்டழகைக் காணும்போது பெருஞ்சிறப்பினளாயிருக்க
வேண்டுமென்று தோன்றுகின்றதாயினும், சாதாரணமான வறுமையுள்ள
பணிப்பெண்கோலத்தைப் பூண்டுள்ளா ளென்பார், மதுமலரின்வாழ்திருவும்
வந்து தொழவுரியாள் நொதுமலினளாகிநடந்தாள்ழு என்றார். நுண்ணிடை –
பண்புத்தொகையன்மொழி. வாணுதல்-அடையடுத்த சினையாகுபெயர்.
வந்தவள் இருந்தவள் மருங்கு அணையும் வேலை,
அந் தண் உபசாரமுடன் அருகுற இருத்தி,
சந்தொடு அகில் பூ இலைகள் தகவுடன் வழங்கி,
‘எந்த நகரீர்? உரைமின், யாம் உணர!’ என்றாள்.31.-அரசன்மனைவி,வந்தவளையுபசரித்துப் பின்வினாவுதல்.
வந்தவள்-(வண்ணமகளின் வடிவுகொண்டு) வந்தவளான அவள்,
இருந்தவள் மருங்கு-அரண்மனையிலேயிருந்த அரசமனைவியின் பக்கத்தில்,
அணையும் வேலை-வந்துசேர்ந்தபோது, (அரசன்தேவி),-அந் தண்
உபசாரமுடன்-அழகிய குளிர்ந்த உபசாரத்துடனே, அருகுஉற இருத்தி-(தன்)
சமீபத்திலே தங்கியிருக்குமாறு இருப்பிடந்தந்து,-சந்தொடு – சந்தனமும், அகில்
– அகில்தூபமும், பூ-புஷ்பமும், இலைகள் – வெற்றிலைகளும், தகவுடன் –
சிறப்பாக, வழங்கி-தந்து, ழு(நீர்), எந்த நகரீர்-எந்தநகரத்தீர்? “யாம் உணர
உரைமின்- நாங்கள் அறியும்படி சொல்லுங்கள்,ழு என்றாள் – என்று
வினவினாள்; (எ – று.)
எளியவள் போன்று வந்தவளையும் விராடன் மனைவி
உபசரித்தனளென்றமையால், அவளது தருக்கின்மைமுதலிய நற்பண்புகள்
வெளியாம்.
தான் விரத மாயை புரி சகுனி பொரு சூதால்,
கான் விரதமாக உறை காவலர்கள் கோயில்,
மான் விரத நோக்கியர் மருங்குற இருந்தேன்;
யான் விரதசாரிணி எனும் பெயரினாளே.32.-மூன்றுகவிகள்-ஒருதொடர்:வந்தவள் தன்னை
இன்னாளென்று தெரிவித்து, ழுதான் வந்த நோக்கத்தையும்
தெரிவித்தல்.
தான்-சுயமாக, விரதம் மாயை புரி-விரஸமான [திருப்தி
விளைக்காது வெறுப்பைவிளைக்கிற] வஞ்சனையைச் செய்கின்ற, சகுனி-
சகுனியென்பான், பொரு-ஆடின, சூதால் – சூதாட்டத்தால், கான் விரதம் ஆக
உறை-காட்டில் வசித்தலை விரதமாகக் கொண்டு வாழ்ந்த, காவலர்கள் –
அரசர்களாகிய பாண்டவர்களின், கோயில் – அரண்மனையிலே, மான் விரதம்
நோக்கியர்-மான்கள் (தோற்று) ஒழிவதற்குக்காரணமான கண்ணழகையுடைய
(அப்பாண்டவரின்) இராணிமாரின், மருங்கு-சமீபத்திலே, உற-பொருந்த,
இருந்தேன்-: யான்-,-விரதசாரிணி எனும் பெயரினாள் – விரதசாரிணியென்ற
பேரையுடையேன்; (எ – று.) விரதசாரணியென்று பிரதிபேதம்.
இந்தச்செய்யுளில் திரிபு என்னும் சொல்லணி காண்க. விரதம் என்பது
முதலடியில் விரஸமென்ற வடசொல்லின் திரிபும், இரண்டாமடியில் வ்ரதமென்ற
வடசொல்லின் திரிபும் ஆம்: மூன்றாமடியில் விரதம் என்பது-ஒழிந்திடுகை
யென்ற பொருளுள்ள வடசொல். “யான் விரதசாரிணி யெனம் பெயரினாள்-
தன்மையிற் படர்க்கைவந்த இடவழுவமைதி.
பூசுவன, சுற்றுவன, பூண்பன, முடிப்ப,
தேசொடு வனப்பு நனி திகழும்வகை அணிவேன்;
வாசவனொடு ஒத்த மனுகுல அரசன் மனைவி!
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம்
பூசுவன – (உடம்பிற்) பூசுதற்கு உரிய கலவைச்சாந்து
முதலியனவும், சுற்றுவன – சுற்றிக்கட்டவேண்டிய மாலை முதலியனவும்,
பூண்பன – பூணுதற்கு உரிய ஆடையணிகலன்களும், முடிப்ப –
முடிக்கவேண்டிய கூந்தல்தார் முதலியனவும், தேசொடு வனப்பு நனி திகழும்
வகை-ஒளியோடு அழகும் மிகவும் விளங்கும்படி, அணிவேன்-அலங்காரமுறச்
செய்வேன்; வாசவனொடு ஒத்த மனுகுலம் அரசன் மனைவி –
இந்திரனோடொத்தவனும் மனுகுலத்துத் தோன்றியவனுமானவிராடராசனுடைய
மனைவியே! உனக்கு-, ஏசுஅற – குற்றமில்லாமல், எலுவை ஆகுவது –
தோழியாக அமையவேண்டு மென்பது, என் எண்ணம் –
என்கருத்தாம்; (எ – று.)
எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில்,
கந்தருவர் காவல் புரி கற்புடையள் ஆனேன்;
இந்துநுதலாய்! மனிதர் யார் முகமும் நோக்கேன்;
வந்தனன், நின் மாளிகையின் வைகும் வகை’ என்றாள்.
எந்தை மனையில்-எந் தந்தையினுடைய வீட்டில், பயில்-
வாழ்ந்த, இளம்பருவம் நாளில்-இளம்பருவத்தினத்தில் (தொடங்கி), கந்தருவர்
காவல் புரி – கந்தருவர் (யாதொருதீங்கும் வராமற்) காவல் செய்கின்ற, கற்பு
உடையள் ஆனேன் – கற்பையுடையவளானேன்; இந்து நுதலாய் – சந்திரன்
போன்ற முகத்தையுடையவளே! மனிதர் யார் முகம்உம் நோக்கேன் –
எந்த மனிதருடையமுகத்தையும் கண்ணெடுத்துப் பாரேன்: நின் மாளிகையின்
வைகும் வகை – உன்வீட்டிலே தங்கிவாழும்படி, வந்தனென் – (இப்போது)
வந்துள்ளேன், என்றாள்-என்று கூறினாள், (அந்த வண்ணமகள்); (எ – று.)
கீழிரண்டுகவிகளால், தான் இன்னாளென்பதையும், தனக்குத் தெரிந்த
தொழிலையும், தான் அங்குவந்ததன் நோக்கத்தையும் தெரிவித்தவள், இந்தச்
செய்யுளினால், தான் வலியோராற் பாதுகாக்கப்படும் கற்புடையளென்பதைக்
கூறுகிறாள். ழுஉனக்குஎலுவையாளுவதெனெண்ணம்ழு என்று கீழ்க்கவியிற்
கூறியதனால், ழுநின்மாளிகையின் வைகும்வகை வந்தனென்ழு என்று இங்குக்
கூறியது-அனுவாதமென்க: நான் உன்மாளிகையில் வண்ணமகளாக
வாழ்வேனென்றாலும், என்கற்பிற்கு இழுக்கமுண்டாக்க எவராலும் ஆகாதென்று
கூறியவாறு.
வண்ண மகள் கூறியவை மகிழ்வினொடு கேட்டு,
துண்ணென வெரீஇயினள், சுதேட்டிணை விரும்பி,
‘விண்ணவர்கள் பாவையரின் மேவுதி; எனக்குக்
கண் இணையும் நீ! உனது காவல் எனது உயிரும்.’35.-வண்ணமகள்கூறியதுகேட்டுச்சுதேஷ்ணை
தன்னிடத்து வண்ணமகளாகஇருக்குமாறு பணித்தல்.
இரண்டுகவிகள் – ஒருதொடர்.
(இ -ள்.) துண்ணென வெரீஇயினள் – (வந்தவளைக்கண்டதும்)
திடுக்கிட்டு அஞ்சினவளான, சுதேட்டிணை -, -வண்ணமகள்-, கூறியவை-
சொன்னவற்றை, மகிழ்வினொடு கேட்டு – மகிழ்ச்சியோடு செவியேற்று,
விரும்பி-(அவளிடத்து) அன்புபாராட்டி, (அவளைநோக்கி) ழு(நீ), விண்ணவர்கள்
பாவையரின்-தேவமாதர்போல், மேவுதி-இனிது தங்கியிருப்பாய்: எனக்கு
கண்இணைஉம்நீ – நீ எனக்கு இரண்டுகண்களையும் போல்வாய்: எனது
உயிர்உம்-என்பிராணனும், உனது காவல் – உன்காவற்கு (உட்பட்டது); (எ-று.)
பேரழகினளாகிய திரௌபதியைக் கண்டதும், ழுஒருகால் அரசன்
நம்மையுபேட்சித்து இவளை மணந்துகொண்டுவிடுவானோ?ழு என்று
சங்கைகொண்டாளென்று முதனூலிற் கூறியிருப்பதற்கு ஏற்ப, ழுதுண்ணென
வெரீஇயினள்ழு என்றது. இனி, ழுகந்தருவர் காவல்புரி கற்புடையளானேன்ழு
என்று கூறியதைக் கேட்கவே, நம்மிடத்து இவள்வசிக்கும்போது,
இவள்கற்புக்குக் கீசகன் முதலியோர் தீங்கிழைக்க முயலாமலிருக்கவேணுமே
என்று கருதித் துண்ணென வெரீஇயினளென்றதெனவுமாம். கந்தருவர்காவல்புரி
கற்புடையேனென்று கீழ்க்கூறியதனால், தெய்வமகளோ எனக்கருதி
வெரீஇயினள் என்பாரு முளர்.
அன்னை எனுமாறு நெறியான முறை கூறி,
‘என் அருகு இருத்தி’ என, எரியின் வரு மின்னும்,
மின் அனைய நுண் இடை விராட பதி தேவிக்கு
எந் நலமும் நாள்தொறும் இயற்றினள், இருந்தாள்.36.-வண்ணமகளாகிய திரௌபதிசுதேஷ்ணையினிடம்
அன்னாட்கு வேண்டியவற்றைச்செய்துகொண்டிருத்தல்.
அன்னை எனும் ஆறு – தாய்என்று கருதுமாறு, (மிக்க
அன்போடு), நெறி ஆன முறை – நீதிக்குஏற்ற முறையுள்ள வார்த்தைகளை?
கூறி – சொல்லி, ழுஎன் அருகு இருத்தி – என்னுடைய சமீபத்தில்தானே
இருப்பாய்,ழு என – என்று (அந்தச் சுதேஷ்ணை) கூற,-எரியின் வரு மின்உம் –
அக்கினியினின்று தோன்றிய மின்னல்போன்றவளான அந்தத்திரௌபதியும்,
மின்அனைய நுண்இடை விராடபதி தேவிக்கு-மின்னல்போன்ற நுண்ணிய
இடையையுடைய விராடராசனின் மனைவிக்கு, எ நலம் உம் – எப்படிப்பட்ட
[மிகச்சிறந்த] அழகிய கோலத்தையும், நாடொறு உம் – தினந்தோறும்,
இயற்றினள் – செய்தவளாய், இருந்தாள் – வசித்துவந்தாள்; (எ – று.)
திரௌபதியாகிய வண்ணமகள், சுதேட்டிணைக்கு ஆடை அணிகலன்
கூந்தல்முதலியவற்றை இனியவாகப்புனைந்துகொண்டு வசித்து வந்தன
ளென்பதாம். இயற்றினள் – முற்றெச்சம்.
மை வரு தடங் கண் மட மானும், மதி மரபோர்
ஐவரும் மறைந்தனர்கள்ஆய் உறையும் நாளில்,
மெய்வரு வழாமொழி விராடபதி திரு நாடு
உய்வு அரு பெருந் திருவொடு ஓங்கியதை அன்றே37.-பாண்டவர் மச்சநாட்டில்மறைந்து தங்கியிருந்தபோது
அந்நாடு மிகவுஞ்செழித்திருத்தல்
மை வரு தட கண் மடம் மான்உம் – கருநிறம் பொருந்திய
பெரியகண்களையும் மடப்பத்தையுமுடைய மான்போன்ற பார்வையையுடைய
திரௌபதியும், மதி மரபோர் ஐயவர்உம் – சந்திர குலத்தவரான
பாண்டவரைவரும், மறைந்தனர்கள் ஆய்-, உறையும் – வசித்துவந்த, நாளில்
– அக்காலத்திலே,-மெய் வரு – உண்மையே வருகின்ற, வழா – (ஒருபோதும்)
தவறாத, மொழி – பேச்சையுடைய, விராடபதி திருநாடு-விராடராசனுடைய
சிறந்த மச்சநாடானது, உய்வு அரு – நீங்குதலில்லாத, பெருந் திருவொடு –
மிக்கசெல்வத்தோடு, ஓங்கியது – மேன்மையுற்றிருந்தது; (எ – று.)
உத்தமோத்தமரான பாண்டவர் வசித்தலால், அந்நாடு எந்நாட்டினும்
மேம்பட்டிருந்த தென்பதாம். மறைந்தனர்களாயுறைதல் – அஜ்ஞாதவாசஞ்
செய்தல். அன்றே – ஈற்றசை. ஓங்கியதை என்பதில், ஐ – சாரியை
குருக்கள் அவன் ஊரினிடை குருநிலனொடு ஒப்புற்று
இருக்கும் வழி, மா மழையும் எவ் விளைவும் விஞ்சி,
தருக்கினுடன் யானை முதல் தானைகளும் விஞ்சி,
செருக்கும் உடன் விஞ்சியது; செப்ப அரிது, அம்மா!38.-இதுவும் அது.
குருக்கள் – குருவமிசத்தவரான பாண்டவர்கள், அவன் ஊரி
னிடை -அந்தவிராடனுடைய நகரத்திலே, குருநிலனொடு ஒப்பு உற்று – குரு
நிலத்தில் வசிப்பதுபோன்று [தமக்குஉரியஊரில் வாழ்வதுபோன்று], இருக்கும்
வழி-(இனிது) வசிக்கும்போது,-மாமழைஉம்-மிக்க மழையும், எ விளைவுஉம் –
எப்படிப்பட்ட [பலவகையான] விளைவும், விஞ்சி – மிகுந்து,-யானை முதல்
தானைகள்உம் தருக்கினுடன் விஞ்சி – [நாட்டின்செழிப்பினால் நன்கு
போற்றப்படுவதனால்) யானைமுதலிய சேனைகளும் தருக்கு மிக்கு,
(ஊர்முழுவதும்), செருக்குஉம் – வளமும், உடன் விஞ்சியது – ஒருசேர
[எங்கும்] மிக்கிருந்தது: (அதனால் அந்தஊரின் தன்மை), செப்ப அரிது –
(இன்னபடியிருந்ததென்று) சொல்லுதற்கு முடியாது; (எ – று.)
அம்மா- வியப்பிடைச்சொல்: பாண்டவர்கள் அஜ்ஞாதவாசஞ்
செய்வதனால், அவ்வூர் வாய்கொண்டு சொல்ல முடியாதபடி அவ்வளவு
செழிப்பு விஞ்சியது குறித்து வியந்தவாறு.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply