சாபத்தாலும், சாபமொழிதன்னால் வளரும் தவத்தாலும்,
கோபத்தாலும், பேர் படைத்த கொடிய முனிவன் துருவாசன்,
தீபத்தால் மெய் வகுத்தனையான், திகழ் பல் முனிவர் புடை சூழ,
ஆபத்தால் வந்து அடைந்தவர்போல், அடைந்தான்,
அந்த அடவியின்வாய்.1.-துருவாசமுனிவன்பாண்டவரிருந்த காட்டில்
வந்தடைதல்.
சாபத்தால்உம் – சாபத்தைக் கொடுப்பதனாலும், சாபம்
மொழிதன்னால் வளரும் தவத்தால்உம் – (அங்ஙனம் பிறருக்குக்
கொடுக்கின்ற) சாபமொழியினாலே வளர்கின்ற தவத்தினாலும்,
கோபத்தால்உம்-கோபத்தினாலும், பேர் படைத்த-பிரசித்திபெற்ற, கொடிய-
கொடுமையையுடைய [கண்டவர் அஞ்சத்தக்க], முனிவன்-இருடியும்,
தீபத்தால் மெய் வகுத்து அனையான்-தீபத்தைக்கொண்டு உடம்பைச்
செய்திட்டாற்போல ஒளிவடிவாய் விளங்குபவனுமாகிய, துருவாசன்-,-திகழ்
பல் முனிவர் புடை சூழ-(தன்னைப்போலவே பிரமதேஜசினால்) விளங்குகிற
பல இருடியர் (தன்னைச்) சுற்றிவர, ஆபத்தால்-பெருந்தீங்கு நேரிட்டதனால்,
வந்து அடைந்தவர்போல்-வந்து சேர்ந்தவர்போல, அந்த அடவியின் வாய்-
அந்தக் காட்டிலே, அடைந்தான்-(பாண்டவரை) வந்து சேர்ந்தான்; (எ-று.)
துருவாசமுனிவன் செந்நிறமுள்ளவ னாதலால், ‘தீபத்தால் மெய்
வகுத்தனையான்’ என்றார்: இனி, கோபாக்கினி சொலிக்கின்ற
மேனியையுடைமையால் இவ்வாறு கூறியது எனினுமாம். பன் முனிவர்
என்றதை, முதனூலிற்கு ஏற்ப, சீடரான பதினாயிரம் முனிவரைக்
காட்டுமென்னலாம். மிக்க பசியினால் விரைந்துவந்தானென்பார்
‘ஆபத்தால்வந்தடைந்தவர்போல் அடைந்தான்’ என்றார்.
மற்றைமுனிவர்க்குப் பிறரைச்சபித்தலால் தவங் குறையும்:
துருவாசமுனிவனோசபிக்கச்சபிக்கத் தவம்வளருமாறு வரம்
பெற்றுள்ளதனால் பெருங்கோபமுடையனாய்ச்சபிக்கும்இயல்புள்ளவ
னென்ப.
இதுமுதல்இச்சருக்கமுடியுமளவும் பதினேழுகவிகள்-பெரும்பாலும்
மூன்று ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கழிநெடிலடி நான்குகொண்ட அறுசீராசிரிய விருத்தங்கள்.
அரு மா தவப் பேறு ஆனது எமக்கு அம்மா!’
என்னச் செம்மாந்து,
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சித் தலைமேல்
அடி வைத்து, ‘எம்
பெருமான்! இங்கே எழுந்தருளப் பெற்றேம்’ என்னப்
பெரிது உவந்து, அங்கு,
அரு மா முனியைப் பூசித்தார்; அவனும் புகன்றான்,
ஆசிஅரோ.2.-பாண்டவர் வந்ததுருவாசமுனிவரின் அடிபணிந்து
முகமன்கூற, அன்னான்அவர்கட்கு ஆசிகூறுதல்.
அரு- செய்தற்குஅரிய, மா தவம் – சிறந்த தவத்தின்,
பேறு-பயன், எமக்கு-, ஆனது-வாய்த்தது:அம்மா – ஆச்சரியம்!’என்ன-
என்று, செம்மாந்து,-துருவாசமுனிவர் தம்மிடத்து வந்ததுகுறித்துப்)
பெருமிதங்கொண்டு,-மா குரு மரபோர் ஐவர் உம்-சிறந்த
குருவமிசத்தவரைவரும்,-தம் குஞ்சி தலைமேல்- தம்முடைய
மயிர்முடியையுடைய சிரசின்மேல், அடி – (துருவாசமுனிவருடைய)
திருப்பாதங்களை,வைத்து-, ‘எம்பெருமான்-எமதுபெருமானே! இங்கே
எழுந்தருள பெற்றேம்-(நீர்) இங்கே யெழுந்தருளும் பாக்கியத்தை
யடைந்தோம்,’என்ன-என்று, பெரிது உவந்து-மிகவும் மகிழ்ந்து சொல்லி,
அங்கு – அப்போது, அரு மா முனியை-(கிடைப்பதற்கு) அரிய சிறந்த
அம்முனிவரை, பூசித்தார்-:அவன்உம் – அந்த முனிவனும், ஆசி –
வாழ்த்தை, புகன்றான்- (பாண்டவர்க்குக்) கூறினான்;(எ-று.)
செம்மாத்தல்-அந்தப்பெரியோர் எழுந்தருளப் பெறும் பாக்கியத்தைக்
கருதியதனாலாகியது. குஞ்சித் தலைமேல்அடிவைத்து-தமது சிரசின்மேல்
முனிவருடைய பாதங்களையிருக்குமாறுவைத்து என்க:அடிமேல் குஞ்சித்
தலைவைத்துஎனினுமாம். பேறு-பெறப்படுவது:செயப்படுபொருள்விகுதி
புணர்ந்துகெட்டு முதனீண்ட பெயர்:பயன் என்பது பொருள்.
இட்ட தவிசின்மிசை இருத்தி, எரி கான் வந்த
இளைப்பு ஆற்றி,
தொட்ட கழற் கால் உதிட்டிரன் கைதொழுது துதிப்ப,
துருவாசன்,
வட்ட மணித் தேரவன் உச்ச வானத்து அடைந்தான்;
யாம் அருந்தப்
பட்ட உணவு இங்கு அமுது செயப் பருவம் இது’
என்று உரைசெய்தான்.3.-யுதிட்டிரன்உபசரிக்க, துருவாசன்
‘சூரியனுச்சிக்குவந்துவிட்டதனால்யாம் உண்ணுங்காலம்
இது’எனல்.
இட்ட-போகடப்பட்டிருந்த, தவிசின் மிசை-ஆசனத்தின்
மேலே, இருத்தி-உட்காரவைத்து, எரி கான்-எரியுந்தன்மையுள்ள காட்டிலே,
வந்த-வந்ததனாலான,இளைப்பு-சிரமத்தை,ஆற்றி-தணியச் செய்து,-கழல்
தொட்ட கால் உதிட்டிரன் – வீரக்கழலையணிந்தபாதங்களையுடைய
தருமபுத்திரன்,-கைதொழுது-கைகூப்பி,துதிப்ப -தோத்திரஞ் செய்யா
நிற்கையில்,-துருவாசன்- அந்தத் துருவாசமுனிவன்,-வட்டம் மணி
தேரவன்-வட்டவடிவமாக இருப்பவனும் அழகியதேரின்மீதுவருபவனுமாகிய
சூரியன், வானத்து உச்சம் அடைந்தான்-வானத்திலேஉச்சியையடைந்திட்டான்:
யாம்-, இங்கு-இவ்விடத்திலே, அருந்தப்பட்ட-உண்பதற்கு ஏற்ற, உணவு-
உண்டியை, அமுதுசெய-உண்ண(த்தக்க,) ஆரணியபருவம் – காலம், இது-
இதுவாகும்’, என்று-,உரைசெய்தான்-;(எ-று.)
மூங்கில்போன்ற சிலசெடிகள் ஒன்றோடொன்றுஇழைவதால் எரியும்
இயல்பினது காட்டினிடம் என்க. அமுதுசெய என்பதன்பின் பெயரெச்சம்
வருவிக்க, அமுதுசெய்தல்-உண்ணல்
மூத்தோன், ‘குளித்து வருக!’ என, முனிவருடன்
அம் முனி தடத்துப்
போய்த் தோய்வதற்கு ஆங்கு எழுந்தருள, புரசைக் களிற்று
முரசு உயர்த்தோன்,
‘வாய்த்தோன் வரவுக்கு என் புரிவோம்?மதிப்பீர்!’ எனத்
தன் தம்பியர்க்கும்,
வேய்த்தோள் வேள்வி மடந்தைக்கும், உரைத்து, ஆங்கு
அவரை வினவினனால்.4.-முனிவனைநீராடிவருக என்று அனுப்பிவிட்டு,
‘இவனைஉண்பிக்க யாது செய்வது?’என்று
யுதிட்டிரன்ஆலோசித்தல்
மூத்தோன்-பாண்டவர்களுட்பெரியோனானதருமபுத்திரன்,
‘குளித்துவருக- நீராடிவருவீராக,’என – என்றுகூறவே,-ஆங்கு-
அப்போது, அ முனி – அந்தத் துருவாசமுனிவன், முனிவருடன்-
(தம்முடன்வந்த) இருடியரோடும், தடத்து போய் – நீர்நிலையிருக்குமிடஞ்
சென்று, தோய்வதற்கு-நீராடுவதற்காக, எழுந்தருள-சென்றிருக்க,-
புரசைகளிறு -புரசையையுடைய மதயானைச்சேனையையுடையனாகி,முரசு
உயர்த்தோன் – முரசவாத்தியத்தை(க் கொடியில்) உயரவெழுதியவனான
யுதிட்டிரன்,-‘வாய்த்தோன்- தவவாய்ப்பையுடையவனானதுருவாச
முனிவனுடைய, வரவுக்கு-(உண்ணுமாறு) வரப்போவதற்கு, என் புரிவோம் –
(யாம்) என்னசெய்வோம்? மதிப்பீர் – ஆலோசிப்பீராக,’என – என்று,
தன் தம்பியர்க்குஉம்-தனது தம்பிமாரானவீமன் முதலியோரிடத்தும், வேய்
தோள் வேள்வி மடந்தைக்குஉம்-மூங்கில்போன்ற தோள்களையுடையவளாய்
வேள்வித்தீயினின்று தோன்றியவளான திரௌபதியினிடத்தும், உரைத்து-
சொல்லி, ஆங்கு-அங்கே, அவரை-,வினவினன்-உபாயங்கூறுமாறு
கேட்டான்;(எ-று.)
உணவுக்காலம்என்று துருவாசமுனிவன் கூறியவுடனே, நீராடி வருக
என்று தந்திரமாக அனுப்பிவிட்டு, யுதிட்டிரன் ‘நீராடிவந்தால்
இம்முனிவர்க்கு எவ்வாறு உணவுஇடுவது?’என்று சிந்தை கொண்டவனாய்,
இம்முனிவனுக்கு உணவுஇட என்னஉபாயஞ்செய்யலாமென்று
ஆலோசித்துக்கூறுமாறு தன் தம்பிமார் முதலியோரை வினாவினனென்க.
ஆல்-அசை. புரசை – யானைக்கழுத்திடுகயிறு.மதியீரென்றும் பாடம்
மேவார் உரைக்க இவன் வந்தது அல்லால், பிறிது வேறு இல்லை;
ஆ, ஆ! இதற்கு இன்று என் செய்வேம்? ஆமாறு ஆக! நாம் எழுந்து,
கோ ஆனவனும் பல படையும் குன்றச் சென்று, பொருது, இமைப்பில்
சாவா நிற்பது உறுதி, இனி’ என்றான்-வன் தாள் சமீரணியே5.-வீமன்தன்கருத்தைக் கூறுதல்.
அதுகேட்டதும்),-வன்தாள் சமீரணி – கொடிய
முயற்சியையுடைய வாயுகுமாரனானவீமசேனன்,-‘மேவார்-(தமது)பகைவர்,
உரைக்க – சொல்ல, (அச்சொல்லைக்கேட்டுக்கொண்டு), இவன்வந்தது
அல்லால்-இம்முனிவன் வந்தானேயல்லாமல், (இவன் வருவதற்கு), வேறு
பிறிது-வேறாகமற்றொருகாரணம்,இல்லை;ஆஆ- ஐயோ! ஐயோ!இதற்கு-இவ்வாறு
இவன்வந்ததற்கு, இன்று-இப்போது, என் செய்வேம் -(நான்சொல்லுவது தவிர
வேறுஉபாயம்) என்ன செய்யவல்லோம்? (இங்ஙனம் ஏவிய
துரியோதனாதியர்க்கு), நாம்-,ஆம்- பொருந்திய, மாறுஆக-பகையாக,
எழுந்து-புறப்பட்டு, சென்று-போய்,-கோ ஆனவன்உம்-ராஜராஜனான
அத்துரியோதனனும், பல படைஉம் – (அவனுடைய) பலசேனைகளும்,குன்ற –
ஒழிந்து போம்படி, பொருது – போர்செய்து, இமைப்பில்-இமைப்பொழுதிற்குள்,
சாவா நிற்பது – (நம்முயிரும்) மாயநிற்பது, இனி – இப்போது, உறுதி-(நாம்)
செய்யத்தக்க சிறந்தசெயல்,’என்றான்- என்று தன் கருத்தைத் தெரிவித்தான்;
(எ-று.)
கொடியமுயற்சியில் எப்போதுங் கருத்துச்செல்பவனாதலால்,வீமன்
அதற்குஏற்ப, நம்மீது இம்முனிவனைஏவிய நம்பகைவரைப் பழிவாங்குமாறு
கொன்றுவிட்டு நாமும் உயிர்மாய்வதே செய்யத் தக்க செயலென்றான்:
நீராடிவந்த முனிவனுக்கு உணவளிக்காவிட்டால் அவன் சாபத்திற்கு
இலக்காய்ச் சாகவேண்டிவருமாதலால், பகை முடித்து இறந்திடுவோ
மென்றானென்க. ஆஆ – இரக்கக் குறிப்பிடைச்சொல். சமீரணி-
வாயுபுத்திரன்:சமீரணன்-வாயு.
சுருதிக் கடவுள் அனையானைச் சுனை நீர் படிந்து
வரச் சொல்லி,
கருதிப் பிற நாம் புரியும் அது கடனோ?’ என்றான்,
கழல் விசயன்;
‘மருதிற்கு இடை போமவன் விரைந்து வருமாறு அழைமின்’
என மொழிந்தான்-
ஒரு திக்கினும் வெம் பரி ஏற்றுக்கு ஒத்தோர் இல்லா
உரவோனே.6.-விசயன்வீமனதுபேச்சை ஆட்சேபிக்க,
நகுலன் க்ருஷ்ணனைவிரைந்துவரவழைக்குமாறு சொல்லல்.
கழல் விசயன் – வீரக்கழலையணிந்தஅருச்சுனன், ‘சுருதி
கடவுள் அனையானை- வேதத்தினாற்புகழப்படுகிற கடவுள் போலப்
பெருமைவாய்ந்த துருவாசமுனிவனை,சுனைநீர் படிந்து வர சொல்லி-
சுனைநீரிலேநீராடிஉண்ணுதற்கு வரும்படி சொல்லிவிட்டு, நாம்-, பிற கருதி
– (மனத்தில்) வேறாகஎண்ணமிட்டு, புரியுமது-செய்யுஞ் செயல், கடன்ஓ-
முறைமையானது ஆகுமோ?’என்றான்-என்றுகூறினான்:(பின்பு), ஒரு
திக்கின்உம் – ஒரு திக்கிலும், வெம்பரி ஏற்றுக்கு-வேகமுள்ள குதிரையிலேறிச்
சவாரி செய்வதற்கு, ஒத்தோர் இல்லா – தன்னோடொத்தவரைப்பெறாத,
உரவோன் – மனவலிமையுடைய நகுலன்,- ‘மருதிற்குஇடை போம் அவன் –
இரட்டை மருதமரங்களினிடையேசென்ற ஸ்ரீக்ருஷ்ணனை,விரைந்துவரும்
ஆறு – (இங்கே) விரைந்துவரும்படி, அழைமின்-அழையுங்கள்’,என
மொழிந்தான்-என்று (அப்போதுநேரஇருக்கும் ஆபத்தினின்று
தப்புவதற்குஉபாயங்) கூறினான்; (எ- று.)
கோவானவனும்பலபடையும் குன்றச்சென்றுபொருது
இமைப்பிற்சாவாநிற்பது உறுதி என்று கூறிய வீமசேனன்பேச்சை
அருச்சுனன்முறைமையன்றேஎன்று ஆட்சேபிக்க, நகுலன் ஸ்ரீக்ருஷ்ணனை
அழைத்துவந்தால்நமக்கு நிகழக்கடவ இடரனைத்துந்தீருமாதலால்
அவனைவிரைவில்வர வழையுங்களென்றான். ஒத்தோரில்லா எனவே,
மிக்கோரில்லாமைபெறப்படும். சாபத்தினால்இரட்டைமருதமாகிக் கிடந்த
குபேரபுத்திரர்களின் சாபத்தை நீக்க ஸ்ரீக்ருஷ்ணன் அவற்றினிடையே
தவழ்ந்தானென்க.
யாதே ஆக, இந்த விபத்து ஏகும் பொழுதைக்கு
இசை அளிகள்
தேதே என்னும் பசுந் துளபத் திருமால்தன்னைச் சிந்தியும்; இப்
போதே வரும், இங்கு அவன்; வந்தால், போம் இக் கவலை’
எனப் புகன்றான்,
சாதேவனும்; அங்கு அவன் இசைத்த சொல்லுக்கு
இசைந்தான் தருமனுமே.7.-சகதேவன் கூறியஉபாயச்சொல்.
சாதேவன்உம்-, ‘இந்தவிபத்து-இப்போது(நமக்கு) வரக்கடவ
ஆபத்து, யாதுஏ ஆக – எதுவாகவிருந்தாலும் இருக்கட்டும்:ஏகும்
பொழுதைக்கு – (இது) செல்லும் போதுக்கு [நீங்கவேண்டமேயானால்
என்றபடி],இசை அளிகள்-பாடல்பாடும் வண்டுகள், தே தேஎன்னும்-
தேதேஎன்று ஒலிக்கின்ற, பசுந் துளபம்-பசிய திருத்துழாயையணிந்த,
திருமால் தன்னை- திருமாலினவதாரமாகிய க்ருஷ்ணனை,சிந்தியும் –
தியானியுங்கள்:(சிந்தித்தால்), அவன் இங்கு இப்போதுஏ வரும் –
அத்திருமால் இவ்விடத்து இப்போதே வருவான்:வந்தால்-(அங்ஙன்)
வருவானாயின்,இ கவலைபோம்-இந்தக்கவலைநீங்கும்,’என – என்று,
புகன்றான்- (தன் ஆலோசனையைக்)கூறினான்:தருமன்உம் –
தருமபுத்திரனும், அங்கு-அப்போது, அவன் – அந்தச் சகதேவன், இசைத்த
– சொன்ன, சொல்லுக்கு-, இசைந்தான் – உடன்பட்டான்;(எ – று.)
நகுலன்ஸ்ரீக்ருஷ்ணனைவிரைந்துவருமாறு அழையுங்களென்று
சொல்ல, சகதேவன் ‘அவ்வமலன்நினைத்தமாத்திரத்தில்இங்குவந்திடுவான்:
வந்திட்டானாயின்,எதுவாயிருந்தாலும்விபத்து ‘நீங்கும்என்றனனென்பதாம்.
நடந்து செல்லும்போது மார்பின்மாலைசலிக்குமாதலால், அப்போது
மாலையில்மொய்த்திருக்கும் வண்டுகள் எழுந்து தேதேயென்று
ஆளத்திவைக்கு மென்க
என்னே, என்னே! ஆதவன் வான் இடையும் கடந்தான்;
முனிவன் வரும்
முன்னே நுகர்ந்தாம் சாக பல மூலம், பல பேர்
முனிவரொடும்;
கொன்னே முனியும் முனிக்கு இனி என்கொல்லோ
புரிவது?’ என நின்ற
மின் நேர் இடையாள் நடுநடுங்கி, ‘விளைவது என்னோ?’
எனப் பயந்தாள்.8.-திரௌபதி’முனிவன்வந்திடுவானே:என்செய்வது?’
என்றுநடுங்கிநிற்றல்.
நின்ற மின் நேர் இடையாள் – நிலைத்துநிற்பதொரு
மின்னலுக்கு உவமையான இடையையுடைய திரௌபதி,-‘ஆதவன் –
சூரியன், வான் இடைஉம் கடந்தான் – ஆகாயத்தின்நடு விடத்தையுங்
கடந்திட்டான்:[உச்சிப்போதும்கழிந்திட்டதென்றபடி]:முனிவன் வரும்
முன்னே – இந்தத் துருவாசமுனிவன் (நம்மிடத்துக்கு) வருவதற்குமுன்னமே,
பல பேர் முனிவரொடுஉம் – பல பெரியஇருடியருடனே,சாக பல மூலம் –
இலைகாய் கிழங்குகளைக் கொண்ட உணவை, நுகர்ந்தாம்-உண்டிட்டோம்;
என்னே என்னே-இது என்ன தகாதசெயல்! கொன்னே முனியும் முனிக்கு –
இயற்கையாகக்கோபிக்குந் தன்மையுள்ள துருவாசமுனிவனுக்கு, இனி –
இப்போது, புரிவது – செய்யத்தக்கது,-என்கொல்ஓ-?’என – என்று எண்ணி,
‘விளைவதுஎன்ஓ – இப்போது விளையப்போவதுஎதுவோ?’என – என்று
சொல்லி, நடுநடுங்கி – உடம்பு மிகவும்நடுக்க லெடுத்து, பயந்தாள் –
அச்சங்கொண்டுநின்றாள்; (எ- று.)
சூரியனைத்துதித்துஅவனருளால் தருமன்பெற்ற அட்சயபாண்டம்
ஒருநாளுக்கு ஒருமுறை வேண்டும் உணவுகளையெல்லாம்
அளிக்கவல்லதாதலாலும், அவ்வாறு ஒருமுறை அட்சயபாண்டத்தினுதவியால்
அதிதியரோடு தாம் உண்டுவிட்டபடியாலும், இங்ஙனம் திரௌபதி
கூறலானாளென்க. முனிவர்கள்வரக்கூடியமாத்தியான்னிக்காலம் கடந்தபின்
நாம் உண்டிருந்தால் நாம் இப்படி இடர்ப்பட வேண்டா என்பாள்
‘முனிவன்வருமுன்னே நுகர்ந்தாம்’என்றாள். நின்ற மின்னேரிடை –
இல்பொருளுவமை.
தப்பு ஓதாமல், தம்பியர்க்கும் தருமக் கொடிக்கும் இதமாக,
அப்போது உணரும்படி உணர்ந்தான், அசோதை மகனை
அறத்தின் மகன்;
‘எப்போது, யாவர், எவ் இடத்தில், எம்மை நினைப்பார்’
என நின்ற
ஒப்பு ஓத அரியான், உதிட்டிரன்தன் உளப்போதிடை
வந்து உதித்தானே.9.-தருமன் நினைக்கஸ்ரீகிருஷ்ணன் இருதயகமலத்தினின்று
வெளிப்படல்.
தப்புஓதாமல் – (எவர்மீதும்) ஒருபிழையையும் சொல்லி
நோவாமல், தம்பியர்க்குஉம் தருமம் கொடிக்குஉம் – தம் தம்பிமார்க்கும்
தருமத்தின் வடிவாகிக்கொடிபோல் மெல்லியவளான திரௌபதிக்கும், இதம்
ஆக – நன்மையுண்டாம்படி, அறத்தின் மகன் – தருமபுத்திரன், அப்போது
உணரும்படி – அந்தவேளையில்(அந்தஸ்ரீக்ருஷ்ணன்தம்மை) அறியும்படி,
அசோதை மகனைஉணர்ந்தான் – யசோதை வளர்த்தமகனாகிய
ஸ்ரீக்ருஷ்ணனைத்தியானித்தான்; எ போது யாவர் எ இடத்தில் எம்மை
நினைப்பார்என நின்ற ஒப்பு ஓதுஅரியான்-எந்தவேளையில்யாவர் எந்த
இடத்தில் எம்மை நினைக்கப்போகிறார்களென்றுஅதனையே
எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒப்புப்பொருள் ஓதுதற்குச்
சொல்லமுடியாதபடியுள்ள அந்த ஸ்ரீக்ருஷ்ணன், உதிட்டிரன்தன் –
(தன்னைத்தியானித்த)தருமபுத்திரனுடைய, உளம் போதிடை –
இதயகமலத்தினிடத்திலிருந்து, வந்து – வெளிப்பட்டு வந்து, உதித்தான் –
தோன்றினான்;(எ – று.)
“என்னடியார்க்கென்செய்வனென்றே யிருத்திநீ”என்றவாறு திருமால்
தன்னடியார்க்குத் தான் ஏதாவது உதவுமாறு நேர்படுமா?என்று அதனையே
எதிர்பார்த்திருப்பவ னாதலால்,அவனை’எப்போதியாவரெவ்விடத்தில்
எம்மை நினைப்பாரெனநின்றஒப்போதரியான்’ என்றார். ‘முன்னேநுகர்ந்தாம்’
என்று திரௌபதியும், ‘மேவாருரைக்க விவன்வந்ததல்லாற் பிறிதுவேறில்லை’
என்று வீமசேனனும், ‘சுனைநீர்படிந்துவரச்சொல்லிக்கருதிநாம் பிறபுரியுமது
கடனோ?’என்று விசயனும் கூறியதுபோல இந்தத்தருமன் ஒருவர்மீதும்
குற்றங் கூறவில்லையென்பார்’தப்போதாமல்’என்றார்.
திருக் கண் கருணை பொழிய வரும் திருமால் அவரைத்
தேற்றி, ‘முதல்
அருக்கன் உதவும் பாண்டத்தின் அன்னம் உளதோ”
என வினவ,
முருக்கின் இதழைக் கருக்குவிக்கும் முறுவல் செவ் வாய்த்
திரௌபதியும்
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டெடுத்தாள்; கொடுத்தாள்,
இறைவன் கை.10.-ஸ்ரீக்ருஷ்ணன்வினவ, திரௌபதி சோற்றுப்பருக்கை
யொன்றிருந்ததைஅப்பிரான்கையிற்கொடுத்தல்.
திரு கண்-(தன்னுடைய) அழகிய கண்களினின்று, கருணை
பொழிய – கருணைவெளிப்பட்டுச்சொரிய,வரும்-(அப்போது) வந்த,
திருமால்-ஸ்ரீக்கிருஷ்ணன், அவரை – அந்தப்பாண்டவரை, தேற்றி-துயரம்
மாற்றி,-‘முதல்- முன்பு [ஆரணியவாசஞ்செய்ய ஆரம்பித்த காலத்தில்],
அருக்கன்-சூரியபகவான், உதவும்-உதவிய, பாண்டத்தின்-அட்சய
பாண்டத்திலே, அன்னம் உளதுஓ-சோறு உள்ளதா?’என வினவ-,-
முருக்கின் இதழை கருக்குவிக்கும் செம்முறுவல் வாய் திரௌபதிஉம்-
(செந்நிறமுள்ள) பலாசமலரையும் கருநிறமுள்ளதென்று சொல்லுமாறு
மிகச்சிவந்துள்ளமந்தகாசத்தோடு கூடிய வாயையுடையதிரௌபதியும்,
இருக்கும் முறை ஓர் அன்னம் கண்டு – ஒட்டிக்கொண்டிருக்கும் முறையில்
ஒரு சோற்றுப்பருக்கையிருந்ததுகண்டு, எடுத்தாள்-எடுத்து, இறைவன்
கைகொடுத்தாள்-கடவுளமிசமான அந்த ஸ்ரீக்ருஷ்ணன் கையிற்கொடுத்தாள்;
(எ-று.)-அன்னம் என்பதற்கு – உண்ணுதற்கு உரியபொருள் எனப்பொருள்
கொண்டு,முதனூலுக்கு ஏற்பக் கீரைத்துணுக்கையைக் காட்டுமென்றலும்
உண்டு.
அந்த அன்னம் சதுர் மறையும் அன்னம் ஆகி
அருள் செய்தோன்,
முந்த உலகம் முழுது உண்ட முளரி இதழினிடை
வைத்தான்;
வந்து சுனையில் வந்தனை செய் மறையோர் எவரும்,
வாரிதி முன்
தந்த அமுது உண்டவர் போலத் தாபம் தணிந்து
தண்ணென்றார்.11.-அந்தச்சோற்றுப்பருக்கையை ஸ்ரீக்ருஷ்ணன்
தன்வாயிற்கொள்ள,நீராடச்சென்ற முனிவர்
உண்டவர்போலத்திருப்தியடைதல்
அந்த அன்னம்-அந்தச் சோற்றுப்பருக்கை, சதுர் மறைஉம்-
நான்குவேதங்களையும்,அன்னம் ஆகி – அன்னப்பறவை வடிவமாய்,
அருள்செய்தோன்-அருளிச்செய்தவனாகியதிருமாலினமிசமாகிய அந்த
ஸ்ரீக்ருஷ்ணன்,-முந்த – முன்பு [பிரளயகாலத்தில்],உலகம் முழுது உண்ட-
உலகங்களையெல்லாம்உட்கொண்டருளிய, முளரி இதழின்இடை –
தாமரையிதழ்போன்ற (தனது) வாயிலே, வைத்தான்-இட்டுச்சுவைத்தான்: வந்து
-(தருமனுள்ள இடத்து) வந்து, சுனையில்-சுனையிலே(நீராடிவிட்டு),
வந்தனைசெய்- மாத்தியான்னிகசந்தியின் வந்தனையைப்புரிகின்ற, மறையோர்
எவர்உம்- இருடியரெல்லாரும், வாரிதி – பாற்கடல், முன் தந்த – முன்பு
தன்னிடத்திலுண்டாக்கிக்கொடுத்த, அமுது – தேவாமிருதத்தை,
உண்டவர்போல-உட்கொண்டவர்போல, தாபம் தணிந்து – பசிக்கனலாலாகிய
வெப்பம் நீங்கி, தண்ணென்றார்- உடல் குளிரப் பெற்றார்கள்;(எ-று.)
பசியாயிருக்கையில் உடம்பில் சாடராக்கினியால் வெப்பம் உண்டாதல்,
இயல்பு. அரக்கர் பிரமதேவனிடத்தினின்று பறித்துச் சென்ற வேதங்களைத்
திருமால் மீட்டுவந்து ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு மீண்டும் அருளியதை
யுட்கொண்டு ‘சதுர்மறையுமன்னமாகியருள்செய்தோன்’என்றார்.
உதரம் குளிர்ந்து, வடிவு குளிர்ந்து, உள்ளம் குளிர்ந்து,
மறை நாறும்
அதரம் குளிர்ந்து, கண் குளிர்ந்து, ஆங்கு அரு
மா முனிவன் அதிசயித்து,
‘மதர் அஞ்சனக் கண் திரு வாழும் மார்போன்
மாயா வல்லபத்தால்,
இதரம் கடந்தான் உதிட்டிரன்’ என்று இவன்பால்,
மீண்டும், எய்தினனால்.12.-க்ருஷ்ணனால்யுதிட்டிரன் தீமையினின்று
தப்பினாரென்றுநிச்சயித்துத் துருவாசன் தருமனிடம்
மீண்டு வருதல்.
)உதரம் குளிர்ந்து – (பசிக்கனல் அவிந்தமையால்) வயிறு
குளிர்ந்து, வடிவு குளிர்ந்து – கோபவடிவமும் மாறி, உள்ளம் குளிர்ந்து –
மனங்குளிர்ந்து, மறை நாறும் அதரம் குளிர்ந்து-வேதம் வெளிப்படுகின்ற
வாயும் குளிர்ந்து, கண் குளிர்ந்து ஆங்கு-கண்களிலும் வெப்பமானபார்வை
மாறி(க் குளிர்ந்த பார்வை தோன்றிய) அப்போது, அரு மா முனிவன்-
பிறர்க்கரிய பெருமையையுடைய துருவாசமுனி, அதிசயித்து – வியப்படைந்து,
‘மதர்அஞ்சனம் கண் திரு வாழும் மார்போன்-மதர்த்த மைதீட்டப்பெற்ற
கண்களையுடையதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனுடைய, மாயா
வல்லபத்தால் – மாயையின் திறனால்,உதிட்டிரன் – தருமபுத்திரன், இதரம் –
தீங்கினின்றும், கடந்தான் – தப்பினான்’,என்று-என அறுதியிட்டு, இவன்
பால் – (தான் உண்ணவருவதாகச் சொல்லிச்சென்ற) இந்தத்
தருமபுத்திரனிடத்தில், மீண்டுஉம்-மறுபடியும், எய்தினன்-வந்துசேர்ந்தான்;
(எ-று.)
இதரம்-(நன்மையைக்)காட்டிலும்வேறானது:தீங்கு;பகையென்றும்,
மரணமென்றுங்கொள்வாருமுளர். சொற்பொருட்பின்வருநிலை
உண்டோம், உண்டோம், உம்பருக்கும் உதவா
ஓதக் கடல் அமுதம்;
கண்டோம் உன்னால், எவ் உலகும் காணா முகுந்தன்
கழல் இணைகள்!
வண்டு ஓலிடும் தார்ப் பேர் அறத்தின் மகனே! உன்னை
அரசு என்று
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார்,
குவலயத்தில்?13.-துருவாசமுனிவன்தருமனைப்பாராட்டிப்பேசுதல்.
மூன்று கவிகள் -ஒருதொடர்
(இ-ள்.) வண்டு- வண்டுகள், ஓலிடும் – (தேனைக்குடித்து
அந்தக்களிப்பால்) ரீங்காரஞ்செய்கின்ற, தார் – குவளைமலர்மாலையையணிந்த,
பேர் அறத்தின் மகனே – பெருமைபெற்ற தருமனுடைய குமாரனே!
உம்பருக்குஉம் உதவா-தேவர்கட்கும் (எளிதிற்) கிடைக்கப்பெறாத,ஓதம் கடல்
அமுதம் – பெருக்கைக்கொண்ட பாற்கடலினின்றுதோன்றிய அமுதம்போன்ற
உணவை, உண்டோம்உண்டோம்-உண்டவர்போலப்பெருந்திருத்தி
யடைந்தோம்:எ உலகுஉம் காணாமுகுந்தன் கழல் இணைகள்.
எந்தஉலகத்தவருங்காணக் கிடைத்தற்கு அரிய முகுந்தனுடைய
உபயபாதங்களை, உன்னால்-, கண்டோம் – தரிசிக்கப்பெற்றோம்;
உன்னை-,அரசுஎன்று – அரச னென்று, கொண்டோர் அல்லால் –
ஏற்றுக்கொண்டு பாராட்டுபவரேயல்லாமல், எதிர்ந்தோரில் – மாறுபட்டவரில்,
குவலயத்தில் யார் ஏ வாழ்வார் – இந்தப்பூமியில் வாழ்பவர் எவர்தாம்?
[எவருமிலர்];
துரியோதனன்உன்னைஅரசுஎனக் கொள்ளாது எதிர்தலால் அவன்
கெடுவான்என்றபொருளைச்சாமானியமாகக் கூறியஇது தெரிவிப்பதனால்,
இச்செய்யுள் – பிறிதினவிற்சியணி. பாண்டவ பட்சபாதியான ஸ்ரீக்ருஷ்ண
பகவான் வந்திருத்தலையறிந்துஅப்பிரானிடத்து அச்சத்தினால்,துருவாச
முனிவன் வலுவில் இவ்வாறு கூறுகின்றானென்க.
‘நென்னல் புயங்க கேதனன்தன் நிலயம்தன்னில்
தீம் பாலும்
கன்னல் கட்டி முதல் பல தீம் கனி நெய்யுடனே
இனிது அருந்தி,
இன்னல் பசி தீர் பொழுதத்தில், “என்பால் வரம்
கொள்க!” என உரைப்ப’
முன்னர்ப் பலவும் உரையாமல் ஒன்றே மொழிந்தான்,
முடி வேந்தன்:14.-இரண்டுகவிகள்-துருவாசன் தான் வந்த
காரணத்தைத்தெரிவித்தலைக்கூறும்.
நென்னல்-நேற்று, புயங்க கேதனன் – பாம்புக்கொடியைக்
கொண்டவனானதுரியோதனன், தன் நிலயம்தன்னில் – தன்னுடைய
வாழிடத்தில் [அரண்மனையிலே],தீம் பால்உம் – இனியபாலும், கன்னல்
கட்டிமுதல் – கருப்பஞ்சாற்றுக்கட்டிமுதற்கொண்டு, பல தீங் கனி-பல இனிய
பழங்களும், நெய்யுடனே-, இனிது அருந்தி – இனிதுஉண்டு,-இன்னல் பசி-
கொடுமையையுடையபசியை, தீர் பொழுதத்தில் – (யான்) நீங்கியபொழுதில்,-
‘என்பால்- என்னிடத்து, வரம்கொள்க-வரத்தைப் பெற்றுக்கொள்வாய்,’என
உரைப்ப – என்று (யானே) சொல்ல,-.முன்னர் – முதலில்தானே, பலஉம்
உரையாமல் – பலவிஷயங்களையும்சொல்லாமல், ஒன்றுஏ – ஒரு
சொல்லையே,முடி வேந்தன் – கிரீடாதிபதியான அந்தத் துரியோதனன்,
மொழிந்தான்-;(எ-று.)-துரியோதனன் மொழிந்த ஒன்று மேலைக்கவியிற்
கூறப்படும். எனவினவ என்றும் பாடம்.
முன்னமேஇன்னவரங்கேட்கவேணுமென்று அறுதியிட்டிருந்ததனால்,
பலவுரைக்காமல் ஒன்றேமொழிந்தான் துரியோதன னென்க.
எம் இல் துய்த்த ஓதனம்போல் எம்மோடு இகலி
வனம் புகுந்தோர்
தம் இல் சென்று நாளை நுகர்; இதுவே எனக்குத் தரும்
வரம்” என்று,
உம்மின் செல்வம் உடையவன்போல் உரைத்தான்; அதனால்
உயர்ந்தோர்கள்-
தம்மில் சிறந்தோய்! வந்தனம் யாம்’ என்றான், அந்தத்
தவ முனியே.
எம்மில்- எம்மிடத்து, துய்த்த – நுகர்ந்த, ஓ தனம் போல்
– உணவுபோல, எம்மோடு – எம்முடனே, இகலி – மாறுபட்டு, வனம்
புகுந்தோர்தம்மில் – வனம்புகுந்த பாண்டவரிடத்தில், நாளைசென்று-
நாளைக்குப்போய்,நுகர் – உண்பாய்:இதுஏ எனக்கு தரும் வரம் – இதுவே
எனக்குக் கொடுக்கவேண்டிய வரமாகும்’,என்று-, உம்மில்- (எல்லாச்செல்வமுந்
தரவல்ல திருமாலினருட்செல்வத்தைப் பெற்ற) உம்மைக்காட்டிலும்,
செல்வம்உடையான்போல் – மிக்க பொருள் படைத்தவன்போல, உரைத்தான் –
(துரியோதனன் அறியாமையாற்) கூறினான்:அதனால்-,உயர்ந்தோர்கள் தம்மில்
சிறந்தோய் – உயர்ந்தவர்களிற் சிறந்தவனே! யாம் வந்தனம் – யாம்
(உன்னிடத்து விருந்தாக)வந்தோம், என்றான்-என்று(தான் வந்த காரணத்தைத்)
தெரிவித்தான்:(யாவனென்னில்),-அந்த தவம் முனி – அந்தத்தவமுள்ள
துருவாசமுனிவன்;(எ-று.)
ஒருகால்துருவாசமுனிவன்பதினாயிரவர்சீடர்களுடனே
துரியோதனனனிருக்குமிடத்துச் சேர்ந்தானாக,துரியோதனன் அம்முனிவரிடத்து
அச்சத்தினால்தானே இரவும்பகலும் சோர்வின்றி உபசரிக்க, முனிவன்
அங்குத்தானே வசிப்பவனாய்அகாலத்தில் உணவுவேண்டுவதும்
நீராடிஉண்ணவருகிறேனென்றுசொல்லி எமக்குப்பசியில்லையென்பதுமாகி
இவ்வாறெல்லாம் நிகழ்த்தவும் துரியோதனன் அம்முனிவனைஉபசரிக்க,
அதனால்முனிவன்மகிழ்ந்து ‘வேண்டும்வரம்கேட்பாய்’என்ன,
‘வனத்தில்வசிக்கும்எமது தமையனாரிடத்தும்யாவரும்உண்டு
திரௌபதிஇளைப்பாறும்போது எம்மிடத்துவிருந்தினராக இருந்ததுபோலவே
விருந்தினராக வேணுமென்பதுவே யான் வேண்டும்வரம்’என்று
துரியோதனன்கேட்டுக்கொள்ள, ‘அப்படியே’என்று இசைந்து
தருமபுத்திரனிடம் யாவரும் உண்டு திரௌபதி இளைப்பாறும்போது
துருவாசமுனிவன் சீடரோடும் விருந்தினனாகவந்தா னென்ற விவரத்தை
முதனூலினாலறிக. யாவரும்உண்டு இளைப்பாறும்போதுவிருந்தினனாகச்
சீடரோடும் துருவாசமுனிவன் சென்றால்அப்போது இம்முனிவனைப்
பாண்டவரால் உபசரிக்க முடியா தாகையால் பாண்டவர்கள்
இம்முனிவன்சாபத்திற்குஇலக்காகி நாசமாய்விடுவார்களென்பது துரியோதனன்
கர்ணாதியருடன்சேர்ந்து செய்திருந்த துராலோசனையாகும்.
பரம் கொண்டு உலகம் முழுதும் இசை பரப்பிப் புரப்பான்
பாண்டு எனும்
உரம் கொண்டு உயர்ந்தோன் அளித்தருளும் உரவோய்! நீ
இங்கு உனக்கு ஆன
வரம் கொண்டிடுக’ என, முனியை வணங்கி, ‘பகைத்தோர்
மாற்றங்கள்
திரம் கொண்டு ஒன்றும் கொள்ளாதி!’ என்றான், வளையாச்
செங்கோலான்.16.-தருமனைவரங்கேட்குமாறு துருவாசமுனிவன்
வேண்ட, தருமன்வரங்கேட்டல்.
உலகம்முழுதுஉம்-உலகம்முழுவதையும்,பரம்கொண்டு-
தாங்குந்தொழிலைமேற்கொண்டு, இசை பரப்பி – கீர்த்தியை (உலக
முழுவதிலும்) பரவச்செய்து, புரப்பான்-பாதுகாக்குந்தன்மைவாய்தவனான,
பாண்டு எனும் – பாண்டுஎன்கிற, உரங்கொண்டு உயர்ந்தோன்-
வலிமையினால்மேம்பட்டவனானஅரசன், அளித்தருளும் – பெற்ற,
உரவோய்-வலிமையுள்ளவனே! நீ-, இங்கு – இப்போது, உனக்குஆன-
உனக்குவிருப்பமான, வரம் – வரத்தை,கொண்டிடுக-(என்னிடம்)
பெற்றுக்கொள்க,’என – என்றுசொல்ல,-வளையாசெங்கோலான் –
நீதிநெறிதவறாதசெங்கோலையுடையவனானதருமபுத்திரன், முனியை-
துருவாசமுனிவனை,வணங்கி-, ‘பகைத்தோர்-(எம்மைப்)பகைத்தவரான
துரியோதனாதியரின்,மாற்றங்கள்-வார்த்தைகளை,திரம்கொண்டு-
உறுதியாகக்கொண்டு, ஒன்றுஉம் கொள்ளாதி-ஒருசிறிதும் (எம்மீது) மாறுபாடு
கொள்ளாதிருப்பாய்,’என்றான்- என்று வரம்வேண்டினான்;(எ-று.)
வளையாச்செங்கோலானாதலால்,துரியோதனாதியர்அழியுமாறு வரம்
வேண்டினானில்லையென்க. திரங்கொண்டென்றுங் கேளாதி என்றும்பாடம்.
அன்னோன் மொழி கேட்டு, அம் முனியும் அடைந்தான்,
தன் பேர் அருந் தவக் கான்;
முன்னோன் ஆன முகுந்தனும் தன் முந்நீர்த் துவரை
நகர் புக்கான்;
பின்னோர் வணங்க, பேர் அழலில் பிறந்தாள் மகிழ,
பேர்அருட்குத்
தன்னோடு ஒருவர் நிகர் இல்லான் இருந்தான் அந்தத் தனிவனத்தே.17.-துருவாசமுனிவனும்ஸ்ரீக்ருஷ்ணனும்
தந்தமிடத்துக்குச்செல்ல, தருமன் தம்பியரோடும்
திரௌபதியோடும்வனத்துத் தனியிருத்தல்.
அன்னோன்மொழி கேட்டு – அந்தப் தருமபுத்திரனுடைய
வார்த்தையைக் கேட்டு, அ முனிஉம்-அந்தத்துருவாசமுனிவனும், தன் பேர்
அருந் தவம் கான்-தனக்குரிய பெரிய அரியதவத்திற்குஉரியகாட்டை,
அடைந்தான்-;முன்னோன்ஆன முகுந்தன் உம்-(யாவர்க்கும்)
முற்பட்டவனானதிருமாலினமிசமான ஸ்ரீக்ருஷ்ணனும், தன்-தன்னுடைய,
முந்நீர் துவரைநகர் – கடலினாற்சூழப்பட்டுள்ளதுவாரகாபுரியை, புக்கான்-
அடைந்தான்;பேர் அருட்கு தன்னோடுஒருவர்நிகர் இல்லான்-
மிக்ககருணைக்குத்தன்னோடுஒருத்தரும்ஒப்பானவரைப் பெறாதவனான
தருமன்,பின்னோர்வணங்க-தம்பிமார் வணங்கவும், பேர் அழலில்
பிறந்தாள்-பெருமைபெற்றயாகாக்கினியிலே தோன்றினவளான திரௌபதி,
மகிழ-மகிழ்ச்சியடையவும், அந்த தனிவனத்தே-ஒப்பற்றஅந்தவனத்திலே,
இருந்தான்-தங்கியிருந்தான்;(எ-று.) வந்தவர்கள்சென்றிட்டதனால்வனத்தே
தனியிருந்தானென்றாரெனினுமாம்.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply