சேய பங்கயச் சிறு விரல் அங்கையில் திரட்டிய நறு வெண்ணெய்
ஆயர் மங்கையர் இட இட, அமுது செய்து, ஆடிய திருக்கூத்தும்,
நேயமும், குறு முறுவலும், புரிந்து பார்த்தருளிய நெடுங் கண்ணும்,
மாயவன் திருவடிவமும், அழகும், என் மனத்தை விட்டு அகலாவே.1.-கடவுள் வணக்கம்.
ஆயர் மங்கையர் – இடைக்குலத்தவரான மகளிர், திரட்டிய
நறு வெண்ணெய் – (தயிரைக் கடைந்ததனால்)திரளத் தோன்றிய நறிய
வெண்ணெயை, சேய பங்கயம் சிறு விரல் அம்கையில்-செந்நிறமுள்ள
தாமரையிதழை யொத்த சிறியவிரல்களையுடையஅழகிய கையிலே, இட இட
– வைக்குந்தோறும், அமுது செய்து – உண்டு, ஆடிய-(அம்மகிழ்ச்சிதோன்ற)
ஆடிய, திருக்கூத்தும்-,-(அந்த ஆயமங்கையரை), நேயம்உம் – அன்பையும்,
குறுமுறுவல்உம்-சிறிதே தோன்றுகின்ற புன்சிரிப்பையும், புரிந்து-(வெளியிலே)
காட்டிக்கொண்டு, பார்த்தருளிய-கடாட்சித்தருளின, நெடு கண்உம் – நீண்ட
கண்களும், மாயவன் – விசித்திரசக்தியையுடைய அந்த ஸ்ரீக்ருஷ்ணனது,
திருவடிவம்உம் – திருமேனியும், அழகுஉம் – (முடிவில்லாததான) ஓரழகும்,
என் மனத்தை விட்டு-, அகலா – (ஒருபொழுதும்) நீங்கமாட்டா;(எ – று.)
மாயவன்என்பதை திருக்கூத்துமுதலியவற்றோடும்சேர்க்கலாம்:
மாயவனுடைய திருக்கூத்தும் கண்ணும் வடிவமும் அழகும்
என்மனத்தைவிட்டுஅகலா என்க:எப்போதும் மாயவனுடைய திருக்கூத்து
முதலியவற்றைத்தியானிப்பேன் என்றவாறு. “எங்ஙனேயோ”என்று
தொடங்கும் திருவாய்மொழிப்பதிகம் இங்கு நினைவுக்குவருகின்றது.
இதுமுதற் பதினைந்துகவிகள் – முதற்சீர் மாச்சீரும், ஆறாஞ்சீர்
காய்ச்சீரும், மற்றவை விளச்சீருமாகிவந்த கழிநெடிலடி நான்கு கொண்ட
அறுசீராசிரிய விருத்தங்கள்
வண்டு சிந்திய மதுத் துளி முகில் பொழி மழைத் துளியொடும் சேர்ந்து,
கண்டு சிந்தையும் நயனமும் உருகு பைங் கானிடை, கழி கேள்வி
விண்டுசிந்தன் என்று ஒரு முனி அருந் தவ விபினம் மேவினராகி,
கொண்டு சிந்தனை அற இருந்தனர், குலக் குந்தி முன் பயந்தோரே.2.-பாண்டவர்விஷ்ணுசித்தமுனிவரின் ஆச்சிரமத்தை
யடைந்துஇனிதிருத்தல்.
வண்டு சிந்திய – (பூவிலிருந்து தேனையெடுக்கும்போது)
அவ்வண்டுகளாற் சிந்தப்பட்ட, மது துளி – தேன்துளி, முகில் பொழி மழை
துளியொடு – மேகங்கள்பொழிகின்ற மழைத்துளிகளுடனே, சேர்ந்து –
சேர்ந்திருத்தலாலே, நயனம்உம் சிந்தை உம் கண்டு உருகு-(தம்முடைய)
கண்களும் மனமும்(அவ்வழகினைக்)கண்டு (மகிழ்ச்சியால்)
உருகுதற்குஇடனான,பைங் கானிடை – பச்சைப்பசேரென்றுள்ள காட்டிலே,
கழிகேள்வி-மிக்க நூற்கேள்விகளையுடையவனான,விண்டுசிந்தன் என்ற
ஒருமுனி-விஷ்ணுசித்த னென்ற ஒரு முனிவனது,அருந் தவம் விபினம் –
(செய்தற்கு)அரிய தவத்திற்கு ஏற்றதான காட்டை, மேவினர்ஆகி –
அடைந்தவர்களாய்,-குலம் குந்தி முன் பயந்தோர்-சிறந்த குந்தியென்பவளால்
முன்பு பெறப்பட்டவரான பாண்டவர்கள்,-சிந்தனைஅற – கவலையில்லாமல்,
இருந்தனர்-;(எ – று.)
சேர்ந்து-சேர;எச்சத்திரிபு. தவ விபினம் – தபோவனம். கொண்டு –
அசை. குலம் – உயர்குலத்தையுடைய எனினுமாம்.
ஆண்டு, மற்று அவர் உறைதருகாலையில், அரவ வெங் கொடியோனும்,
மூண்டு அழற் பொறி கன்றிய மனத்தினர் மூவரும், உடன் முன்னி,
‘மீண்டும் இப் புவி வேண்டுவர், இருக்கின்; நாம் விரகுடன் முற்கோலிப்
பாண்டு புத்திரர்க் கோறும்’ என்று, அருள் இலாப் பாவியர் துணிந்தாரே.3.-துரியோதனாதியர்ஆலோசித்துப்
பாண்டவரைக்கொல்லத் துணிதல்.
ஆண்டு- அந்த விஷ்ணுசித்தமுனிவருடைய தபோவனத்தில்,
அவர் – அந்தப்பாண்டவர், உறைதரு காலையில்- வசிக்கும்போது,-வெம்
அரவம் கொடியோன்உம் – கொடிய பாம்பைக் கொடியிலே யுடையவனாகிய
துரியோதனனும், அழல் பொறி மூண்டு கன்றிய மனத்தினர் மூவர்உம் –
நெருப்புப் பொறி பறக்கும் படி பற்றி யெரிகின்ற மனத்தையுடையவரான
(துச்சாதனன் சகுனி கர்ணன் என்ற) மூவருமாகிய, அருள் இலா பாவியர் –
கருணையென்பதுசிறிதுமில்லாத தீவினையாளரானஅந்நால்வரும்,-உடன்
முன்னி – ஒருசேர இருந்து ஆலோசித்து,-‘இருக்கின்- (பாண்டுபுத்திரர்)
உயிரோடு இருப்பாரானால்,மீண்டுஉம் – மறுபடியும், இ புவி –
இந்தப்பூமியை, வேண்டுவர்-(தாம் அரசு புரியுமாறு) விரும்புவர்:
(ஆகையால்),-நாம்-,முன் கோலி-(வனவாச அஜ்ஞாதவாசங்களைஅவர்கள்
முடித்துவிட்டு வெளிப்பட்டுவருவதற்கு)முன்னமே ஆலோசித்து, விரகுடன் –
தந்திரமாக, பாண்டுபுத்திரர் கோறும் – (அந்தப்)பாண்டவர்களைக்
கொன்றுவிடுவோம்’,என்று-,துணிந்தார்-;(எ-று.)- மற்று – அசை.
அடைதருகாலைஎன்று பிரதிபேதம்.
‘காளமாமுனிதனைக் கொடு வருக!’ என, கலந்த நீற்று ஒளி கூரும்
தூள மா முனி ஒருவனோடு, அறிவு இலாச் சுயோதனன் உரைசெய்ய,
வாள மா நிலம் முழுதுடை மன்னன்இல் வந்தனன், விரைவில் போய்,
மீள மா மறை வேள்வி கூர் முனியொடும், விடுத்த மா முனி அம்மா.4.-துரியோதனன்காளமாமுனியை வேறொருமுனிவனால்
வரவழைத்தல்.
அறிவுஇலா-நல்லறிவைப்பெற்றிராத,சுயோதனன்-,
‘காளாமாமுனிதனைகொடு வருக-காளமாமுனிவனையழைத்துவருவாயாக’
என-என்றுசொல்லி,கலந்த-உடம்பிற்பொருந்திய, நீறு-திருநீற்றின், ஒளி-
கூரும்-மிகுதற்குக் காரணமான,தூளம்-நீரிற்குழையாமல்
உடம்பிலேயணிதலையுடைய,மா முனி ஒருவனோடு-சிறந்தஒரு
முனிவனுடனே,உரைசெய்ய-சொல்ல,-விடுத்தமாமுனி-அனுப்பப்பட்ட
அந்தச்சிறந்த முனிவன்,-விரைவில்போய்-,-வாளம் மா நிலம் முழுதுடை
மன்னன் – வட்டவடிவமாகியபெரிய பூமி முழுவதையும் தனதாகவுடைய
மன்னவனானஅந்தத்துரியோதனனுடைய, இல்-மனையிலே,மா மறை
வேள்வி கூர் முனியொடுஉம்-பெருமைபொருந்திய வேதத்திற் கூறப்படும்
யாகத்தைப் புரிவதில் மிக்கவனானகாள மாமுனிவனுடனே, மீள வந்தனன்-;
(எ-று.)-அம்மா-ஈற்றசை.
தூளம் -உத்தூளனம்:விபூதியை நீரிற்குழையாமல் வரியாக வன்றி
உடம்பிலே யணிதல். தூளமாமுனி என்றே பெயருமாம்.
ஒரு முனிக் கணங்களுக்கும் முன் செய்கலா உயர்வுடை உபசாரம்
பெரு முனிக்கு அளித்து, இறைஞ்சி, ‘நீ புரி தவப் பெருமையால் வளர்கின்றது,
இரு நிலப் பரப்பு எங்கும், என் ஆணையே; என்னை நீ ஈடேற்றத்
திருவுளத்து அருள்செய்குக!’ என, அவன் சேவடிகளில் வீழ்ந்தான்.5.-காளமாமுனிபாதங்களில் துரியோதனன் விழுந்து
தன்னையீடேற்ற வேண்டுதல்.
ஒருமுனிக் கணங்களுக்குஉம்-முனிக்குலங்களில் ஒருத்தர்க்கும்,
முன் செய்கலா-முன்செய்திராத, உயர்வு உடை- மேன்மையையுடைய,
உபசாரம்-உபசாரத்தை, பெரு முனிக்கு-பெருமை பெற்ற
அந்தக்காளமாமுனிவனுக்கு, அளித்து – அன்போடுசெய்து, இறைஞ்சி –
வணங்கி,’நீ-,புரி-செய்த,தவம்பெருமையால்-தவத்தின் பெருமையால், இரு
நிலம் பரப்புஎங்குஉம் – பெரிய பூமியின்பரப்பு முழுவதும், என்
ஆணைஏவளர்கின்றது – என்னுடைய கட்டளையே மேன்மையுறச்
செல்கின்றது;நீ-, என்னை-,ஈடுஏற்ற – (வரவிருக்கின்ற ஆபத்தினின்று)
கரையேற்றும்படி, திருவுளத்து – (உமது) மேன்மை பொருந்திய மனத்திலே,
அருள் செய்குக – கருணைபுரிவீராக,’என-, அவன்-அந்தக்காள
மாமுனிவனுடைய, சேஅடிகளில்-செம்மையான பாதங்களில், வீழ்ந்தான்-;(எ-று.)
தவப்பெருமையையுடைய உம்முடைய திருவருளால்தான் நான்
உலகமுழுவதும் என்னாணையைச்செலுத்துகிறேனென்றுஉபசார
வார்த்தையாகக்கூறுவான் ‘நீபுரிதவப்பெருமையால்வளர்கின்றது இருநிலப்
பரப்பெங்கும் என்னாணையே’என்றான். ஒரு முனிக்குலங்களுக்கும்
என்றும் பாடம்.
நன் கலா விதம் அனைத்தையும் தெரிக்கும் நல் நாவுடை முனி, ‘என்னை
என்கொலாம் இவண் அழைத்தது இன்று?’ என, அவன் இருந்த மாமனை நோக்க,
தன் கல் ஆம் மனம் தோன்ற, அச் சகுனி, அத் தவ முனிவனைப் போற்றி,
‘மின் குலாவரு வேணியாய்! நீ இவன் வெம் பகை களைக!’ என்றான்.6.-தன்னைஅழைத்த காரணத்தைக் காளமாமுனிவன்
வினாவ,சகுனி ‘பகைகளைக’என்றல்
நல்-சிறந்த, கலா விதம் அனைத்தையும்- சாஸ்திரங்
களின்வகைகளையெல்லாம்,தெரிக்கும்-உரைக்கவல்ல,நல் நா உடை-சிறந்த
நாவினையுடைய,முனி-காளமாமுனிவன், ‘என்னை-,இன்று – இன்றைக்கு,
இவண் – இவ்விடத்தில், அழைத்தது-, என்-என்னகாரணம் பற்றியோ? என
– என்றுவினாவ,அவன் – அந்தத் துரியோதனன், இருந்த-அங்கிருந்த,
மாமனைநோக்க – சகுனியைப் பார்க்க,-அச்சகுனி-,-தன் – தன்னுடைய ,
கல் ஆம் மனம் தோன்ற – கல்லைப்போன்ற (வன்மையுடைய)
நெஞ்சத்தின் தன்மை (பிறர்க்குப்) புலனாகும்படி,அ தவம் முனிவனை
போற்றி – அந்தத் தவத்தையுடைய காளாமாமுனிவனைப்பாராட்டி, ‘மின்
குலாவரு வேணியாய் – மின்னல்போல் விளங்குகின்ற
ஜடையையுடையமுனிவனே! நீ-, இவன் – இந்தத் துரியோதனனுடைய, வெம்
பகை-கொடிய பகைவரை, களைக-போக்குவாயாக,என்றான்-என்று
கூறினான்;(எ – று.)
முதலடியில்கலா-ஆவீறு ஐயாகாத வடசொல். என்கொலாம், கொல்
ஆம்-அசைகள். கலா-கல்லாத, படியாத [மூடத்தன்மையையுடைய],மனம்
என்றுமாம். அவணிருந்த மாமனைஎன்றும்பாடம்.
கொடுத்து மா நிலத்து இன் இசை வளர்க்கும் அக் கொடிய பாவியும, ‘ஐவர்
விடுத்த பார் இனம் வேண்டுவர், இருக்கின்; அவ் வேந்தரை விண் ஏற்றற்கு
அடுத்த ஓமம் வஞ்சகங்களால் இயற்றுதிஆயின், இவ் எழு பாரும்
கொடுத்தி நீ, நிலை பெற, அரவு எழுதிய கொடியவன்தனக்கு’ என்றான்.-7.-கன்னன் ‘பாண்டவரைக்கொல்லஅபிசாரயாகஞ்
செய்க’எனல்.
மாநிலத்து – இந்தப்பூமியிலே, கொடுத்து – தானஞ் செய்து,
இன் இசை வளர்க்கும் – இனியபுகழை மிகுதியாக அடைகின்ற,அ
கொடியபாவிஉம்-அந்தக்கடுந்தீவினையினனானகர்ணனும், ‘ஐவர்-
பஞ்சபாண்டவர், இருக்கின் – (உயிரோடு) இருப்போராயின், விடுத்த-
(சூதுபோரிலிழந்து) விட்டிட்ட, பார்-பூமியை, இனம்-இன்னும், வேண்டுவர்-
(தமக்கு) வேணுமென்று கேட்பார்கள்;அ வேந்
தரை-அந்தப்பாண்டவராசரை, விண் ஏற்றற்கு-வானுலகில் ஏறச்
செய்வதற்கு[கொல்லுதற்கு],அடுத்த – ஏற்ற, ஓமம்-யாகத்தை,
வஞ்சகங்களால்-பகைவர் அறியாதவகைகளால், இயற்றுதி ஆயின்-
செய்வாயானால்,அரவு எழுதிய கொடியவன்தனக்கு – பாம்பின்வடிவம்
எழுதப்பெற்ற கொடியையுடையவனானதுரியோதனனுக்கு, இ எழு பார்உம்-
ஏழுதீவுகளான இந்தப் பூமிமுழுவதையும், நீ-, நிலைபெற கொடுத்தி-
நிலையாகக்கொடுத்தவனாவாய்’,என்றான்- என்று கூறினான்;(எ – று.)
கொடுக்குங்குணத்தால் இசைபெற்றோனாயினும்,(பாண்டவர் திறத்து)
மனத்திலே தீவினையேயெண்ணுபவ னென்பார். ‘கொடுத்தின்னிசை
வளர்க்குங் கொடிய பாவி’என்றார். பிறருக்குத் தெரியாமல்
அபிசாரவோமஞ்செய்யவேணு மென்பான், ‘ஓமம்வஞ்சகங்களாலியற்றுதி’
என்றான். கொடியவன்-கொடுமையையுடையவனென்ற பொருளும்
தொனிக்கும்.
கன்னன் வாசகம் கேட்டபோது, இரண்டு தன் கன்னமும் நெருப்புற்றது
என்ன வேவ, ஐம் புலன்களும் நெஞ்சமும் இடியின்வாய் அரவு ஒத்தான்;
பின்னை யாது அவன் உரைப்பது? ‘தவங்களும் பெருந் தகைமையும் பொன்றி,
முன்னர் ஏழ்-எழு பிறப்பில் நல் வினைகளும் முடிந்த, இன்று’ என முன்னி,8.-கன்னனுடையவாசகம் கேட்டதும், முனிவன்
நடுநடுங்கி, தன்நல்வினைகளெல்லாம்முடிந்தனவாமென்று
கருதுதல்.
கன்னன் வாசகம் கேட்ட போது – கர்ணனுடைய
வார்த்தையைக் கேட்டசமயத்தில், தன் இரண்டு கன்னம்உம் – தன்னுடைய
இரண்டு காதுகளும்,நெருப்புஉற்றது என்ன-நெருப்புப்பட்டதையொப்ப, வேவ
– வேகாநிற்க,-ஐம்புலன்கள்உம் – (தன்) பஞ்சேந்திரியங்களும், நெஞ்சம்உம்-
மனமும், இடியின்வாய் அரவு – இடி யரவங்கேட்ட பாம்பை, ஒத்தான் –
ஒப்பநடுங்கப்பெற்றான்:பின்னை- (மேலே சொல்லப்போவது தவிர)
வேறாக,யாதுஅவன் உரைப்பது-அம்முனிவன் என்ன சொல்லமுடியும்?
‘தவங்கள்உம்- (நான் இது வரையிலும் செய்த தவங்களும், பெரு
தகைமைஉம்-(என்னடைய) பெருமைக்குணமும், பொன்றி-அழிந்து,
(அம்மாத்திரத்தோடு நில்லாமல்), முன்னர் – முன்பு நேர்ந்த, ஏழ்
ஏழுபிறப்பின் – எழுவகையாகவுள்ள ஏழு பிறவிகளிற்செய்துள்ள, நல்
வினைகள்உம்- (என்னுடைய) புண்ணியச்செயல்களும், இன்று – இன்றோடு,
முடிந்த – ஒழிந்துவிட்டன,’என முன்னி – என்றுநினைத்து,-(எ-று.)-
‘என்றான்'(10) என்க.
சொன்னதைக்கேட்டவை முதன்முதலிற் காதுகளே யாதலால்
அவைபட்ட கடும்பாட்டை முதலிற் கூறி, பிறகு காதுகளுட்பட்ட
பஞ்சேந்திரியங்களும் அவைகட்கு ஞானம் வரும் வாயிலான நெஞ்சமும்
வருந்தியமையைக் கூறுகின்றார். புலன்-பொறிக்கு இலக்
கணை. இடியைக்கேட்ட அரவம் நடுங்குமென்பது, நூற்கொள்கை. இப்போது
இந்தத்துரியோதனாதியரின்தூண்டுதலால், தான் செய்யப்போகின்ற
தீவினையால், இந்தப்பிறவியின் நன்மையேயன்றி ஏழேழ் பிறவியின் நன்மையும்
கெடுமென்று கருதினான்முனிவ னென்க.
எண் வகைப் பெருந் திசையினும் நினது பேர் இசை இலாத் திசை இல்லை;
மண் அனைத்தும் நின் தனிக் குடை நிழலிலே மனு முறைமையின் வாழும்;
கண்ணல் உற்றது இக் கருமம், நீ எக் குறை கண்டு? வெங் கழற் காலாய்!
விண்ணகத்து நான் ஏற்றுதல் புரியினும் வீவரோ, வீவு இல்லார்?9.-இரண்டுகவிகள் -நீ கூறியவாறு அபிசாரவோமஞ்
செய்தால்எனக்குஅன்றிப் பாண்டவர்க்கு அழிவு
நேராதென்று முனிவன்கூறல்.
எண்வகை பெருந் திசையின்உம்-எட்டுவகைப்பட்ட
பெருந்திக்குக்களிலும், நினது – உன்னுடைய, பேர் இசை இலா-
மிக்ககீர்த்தியையுடையதாகாத, திசை-திக்கானது, இல்லை-;மண்
அனைத்துஉம்-பூமிமுழுவதும்,நின்-உன்னுடைய, தனி குடை நிழலிலே –
ஒப்பற்ற குடைநிழலின்கீழே (தங்கி), மனு முறைமையின் – மனுநூலிற்கூறிய
முறைவழுவாமல், வாழும் – வாழ்ச்சியடையாநின்றுள்ளது:எ குறைகண்டு-
எந்தக்குறையைக் காண்பதனால்,இ கருமம்-(பகைவரை
அபிசாரத்தாலொழித்தலாகிய) இந்த(த்தீ)ச்செயலை,நீ-, கண்ணல்உற்றது-
எண்ணுதற்குப்பொருந்தியது? வெம் கழல் காலாய் – விரும்பத்தக்க
கழலையணிந்தபாதங்களையுடையவனே!நான்-, (பாண்டவர்களை),விண்
அகத்து-சுவர்க்கலோகத்திலே, ஏற்றுதல் புரியின்உம் –
ஏற்றுதற்குரியதொழிலைச்செய்தேனானாலும்,வீவு இல்லார் –
அழிதற்குரியஊழ்இல்லாதவராகிய அந்தப் பாண்டவர், வீவர்ஓ-
இறப்பார்களோ? [இறக்கமாட்டார்கள்என்றபடி];(எ-று.)
எண்வகைப்பெருந்திசை-கிழக்குமுதலியநான்குபிரதான திக்குக்களும்,
தென்கிழக்குமுதலிய நான்குமூலைத்திக்குக்களும், அங்கதேசத்துக்கு
அதிபதியான கர்ணனை’மண்ணனைத்தும்நின் தனிக்குடை
நிழலிலேவாழும்’என்றது-இவனதுவலிமையையே சிறப்புறக்கொண்டு
துரியோதனன் நிலவுலகாட்சிபுரிவதனாலாகும். பாண்டவர்கள்
உயிரோடிருத்தலால் யாதொருகுறையுமில்லாது நீங்கள் இனிதிருக்க,
அவர்களையொழிக்கவேண்டுமென்று கருதுதற்குக் காரணமில்லையே
யென்பது, மூன்றாம்அடியின்கருத்து.
தொடங்கி யான் புரி தீவினை, என்னையே சுடுவது அல்லது, கொற்ற
மடங்கல் போல்பவர் தங்கள்மேல் செல்லுமோ? மாயவன் இருக்கின்றான்;
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி,
விடங்களால் உயிர் ஒழிப்பவர்க்கு ஒத்து, நான் வீவதே மெய்’ என்றான்.
(உமதுசொற்கேட்டு), யான்-, தொடங்கி-ஆரம்பித்து’புரி –
செய்கின்ற, தீவினை- தீச்செயல், (அதன்பயனால்),என்னைஏ சுடுவது
அல்லது – என்னையேஎரித்தொழிப்பதல்லாமல், கொற்றம் மடங்கல்
போல்பவர் தங்கள்மேல் – வெற்றிபொருந்தியசிங்கத்தை யொப்பவர்களாகிய
பாண்டவர்கள் மீது,செல்லும்ஓ-(பயனைவிளைக்குமாறு)செல்லவல்லதோ?
[செல்லவல்லதன்று];(ஏனெனில்), மாயவன் இருக்கின்றான்-(தீவினைப்பயன்
அந்தப்பாண்டவர்கட்கு நிகழாத வாறுபாதுகாக்க) ஸ்ரீக்ருஷ்ணன்
இருக்கின்றான்:இடம் கொள் பார் அகம் பெறுவதற்கு – விசாலமாகவுள்ள
பூமியினிடத்தை (ப்பாண்டவர்கட்குக்கொடாமல் நமக்கேஉரியதாக)
ப்பெறும்படி, எண்ணும்-ஆலோசிக்கின்ற, நின்-உன்னுடைய, இச்சையின்படி-
விருப்பத்தின்படி, ஏகி-(நான்) சென்று, விடங்களால்-, உயிர் ஒழிப்பவர்க்கு
ஒத்து-(தம்) உயிரை மாய்த்துக்கொள்பவரைப்போன்று, நான்-, வீவது ஏ-
சாவதே, மெய் – உண்மையாய் நிகழும் செயலாகும், என்றான்-;
உன்சொற்கேட்டுப் பாண்டவர்களைஅபிசாரயாகம் செய்து
கொல்லமுயன்றேனேயானால்ஸ்ரீக்ருஷ்ணபகவான் தீவினைப்பயனை
நணுகவொட்டாது செய்தற்குப்பாண்டவர்பக்கல்உள்ளதனால்”தன்வினை
தன்னைச்சுடும்”என்றவாறு அத்தீவினைப்பயன்என்னையேசுட்டு
என்னுயிரை அழிப்பது திண்ண மென்று காளமாமுனிவன் பதில்கூறினா
னென்பதாம். உயிரொழிபவரொத்து என்ற பாடம் ஏற்கும்
அசைவு இலா மனத்து அருந் தவ முனிவனை அனைவரும் பணிந்து, ஏத்தி,
இசையுமாறு செய்து, ஓம வான் பொருள்களுக்கு யாவும் வேண்டுவ நல்க,
திசை எலாம் முகம் உடையவன் நிகர் தவச் செல்வனும் சென்றான்; வெவ்
வசையினால் மிகு கொடிய கோல் அரசனும் மகிழ்ந்து, தன் மனை புக்கான்.11.-யாவரும்பணிந்துவேண்டி முனிவனைஅபிசாரவோமம்
செய்யஇசையுமாறுசெய்தல்.
அசைவு இலா மனத்து – சலித்தலில்லாத மனத்தை
யும்,அருந் தவம்-(பிறக்குக்குச்செய்தற்கு) அரிய தவத்தையுமுடைய,
முனிவனை- காளமாமுனிவனை,அனைவர்உம்- (துரியோதனன் கர்ணன்
சகுனி துச்சாதனன் என்ற) நால்வரும், பணிந்து – வணங்கி, ஏத்தி –
புகழ்ந்து, இசையும் ஆறு செய்து-(அபிசாரவேள்வியையியற்றுவதற்கு)
உடன்படும்படி செய்து, ஓமத்துக்கு வேண்டுவ வான் பொருள்கள் யாஉம்
நல்க-வேள்விக்கு வேண்டுவனவாகிய சிறந்த பொருள்கள் எல்லாவற்றையும்
தர,-திசை எலாம் முகம்உடையவன் நிகர் தவம் செல்வன்உம் –
நான்குதிக்கையும் நோக்கிய நான்குமுகங் களையுடையவனான
பிரமதேவனையொத்தஅந்தத் தபோதனனும், சென்றான்- (அபிசாரவேள்வியைச்
செய்யும்படி)போனான்:வெவ்வசையினால்மிகு – (உலகத்தாரின்) கொடிய
பழிப்பினால்மிகப்பெற்ற, கொடியகோல் அரசன்உம் –
கொடுங்கோலரசனானதுரியோதனனும், மகிழ்ந்து-(இனித்தன்கருத்துமுற்றுமென்ற
எண்ணத்தினால்) மகிழ்ச்சியடைந்து, தன்மனைபுக்கான்-தன்
அரண்மனைக்குச்சென்றான்; சலிப்பில்லாதமனமுடைய அந்தமுனிவனும்
துஷ்டர்களான அந்நால்வர் பணிந்தேத்துதலினால்மனஞ்சலித்
தனனென்பார்’அசைவிலாமனத்தருந்தவ முனிவனைஇசையுமாறுசெய்து’
என்றார். இருடி என்றபொருளில் தபோதனனென்று ஒருசொல்இருத்தலால்,
‘தவச்செல்வன்’என்றது. ஓமவான் பொருள்களுக்கு என்றஇடத்து உருபு
பிரித்துக்கூட்டப்பட்டது.
போன மா முனி தன் தபோவனத்து ஒரு புடை, மிடை நெடுங் கள்ளிக்
கானமானது புகுந்து, பாரிடங்களும் கழுகு இனங்களும் துன்றி,
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து, எரி வெயில் கழை முத்தம்
வான் எலாம் நெடுந் தாரகைபோல் எழும், மால் வரைப் புறம் சார்ந்தான்12.-முனிவன்அபிசாரவோமஞ்செய்ய வரைப்புறஞ்
சார்தல்.
போன-புறப்பட்டுச்சென்ற, மா முனி-சிறந்தஅந்தக்
காளமாமுனிவன், தன் தபோவனத்து-தன்னுடைய தவச்சாலையில்,ஒருபுடை-
ஒருபக்கத்திலே, மிடை-நெருங்கிய, நெடுங் கள்ளிக்கானம் ஆனது-நீண்ட
கள்ளிக்கானமாகிய இடத்திலே, புகுந்து-,பாரிடங்கள்உம்-பூதங்களும், கழுகு
இனங்கள்உம்-கழுகின் கூட்டங்களும், துன்றி-நெருங்கப்பெற்று, யானை
ஓடிட நரி துரத்திடு-யானையஞ்சியோடும்படிநரியானது ஓட்டவல்ல, நிலத்து-
(பாலை)நிலமாகிய, எரி வெயில் எரிகின்ற வெயிலினால்,கழை முத்தம்
வான் எலாம் நெடுந்தாரகை போல் எழும் – மூங்கிலிருந்து முத்துக்கள்
ஆகாயமெல்லாம் பெரிய நட்சத்திரங்கள்போல மேலேயெழுகின்ற, மால்
வரை புறம்-பெரியமலையின்பக்கமாகிய இடத்தை, சார்ந்தான்-;(எ-று.)
பாலைநிலத்தில்யானைவலிகுன்றிடு மாதலால், அதனைநரி
துரத்திடும் என்றார்:எரிகின்றதுபோன்றவெயிலால் வேய்பிளக்க,
அவ்வேயினின்று முத்துக்கள் தாரகைபோல வானத்தி லெழு மென்க
அண்டர் யாவரும், மானுட முனிவரும், அகலிடந்தனில் மற்றும்
கண்ட கண்டவர் யாவரும், வெருவர, கடும் பலி பல நல்கி,
உண்டியால் வளர்ந்து, ஆர் அழல் கோளகையூடு உறும்படி, ஓம
குண்டம் எவ்வளவு அவ்வளவு இந்தனம் கொடுந் தருக்களில் சேர்த்தான்.13.-முனிவன்பலிகொடுத்து அக்கினியை வளர்த்தல்.
அண்டா யாவர்உம் – தேவர்களெல்லாரும், மானுடம்
முனிவர்உம் – மனுஷ்யவர்க்கத்தைச்சேர்ந்த இருடியரும், அகலிடந்தனில்
மற்றும் கண்ட கண்டவர் யாவர்உம் – பெரியபூமியிலே மற்றுங்
காணப்பட்டமானுடர்யாவரும், வெருவர-அஞ்சும்படி, கடும் பலி பல நல்கி-
கொடியபலபலிகளைக்கொடுத்து,-உண்டியால்- (தன்னில்இடப்பட்ட)பொருளால்,
ஆர் அழல்-நிரம்பிய அக்கினியானது, வளர்ந்து-, கோளகையூடு –
வானமண்டலத்தினிடையே, உறும்படி – போய்ப்பரவும்படி, ஓமகுண்டம் எ
அளவு – ஓமகுண்டம் எவ்வளவு பரப்பாகவுள்ளதோ, அ அளவு –
அவ்வளவுக்கும், (எரிவதற்கேற்ற), இந்தனம் – விறகுகளை,கொடுந் தருக்களில் –
வளைவாய்வளருந்தன்மையுள்ள மரங்களிலிருந்து, சேர்த்தான்-;(எ – று.)
அக்கினிச்சுவாலைஓங்கிவளரும்படி ஓமகுண்டம் எவ்வளவு
கொள்ளுமோ அவ்வளவு விறகுகளையும்அக்குண்டத்திற் சேர்த்தன
னென்பதாம். கொடுந் தருக்கள்-வேம்புபோல்வன என்றலும் உண்டு
மிக்க மந்திர யாமளம் முதலிய வேத மந்திரம்தம்மில்,
தக்க மந்திரம் தெரிந்துகொண்டு, ஆசு அறு சடங்கமும் தப்பாமல்,
தொக்க மந்திரம் ஒன்றினுக்கு ஓர் எழு சுருவையின் நறு நெய் வார்த்து,
ஒக்கமந்திரம் அனைத்தினும் கொடுமை கூர் ஓமமும் புரிந்தானே.14.-முனிவன்வேதமந்திரத்தோடு நெய்வார்த்து
ஓமஞ்செய்தல்.
வேதம்மந்திரம் தம்மில் – வேதமந்திரங்களுக்குள்ளே, தக்க
– (கருதியபயனைவிளைக்குந்)தகுதியுள்ள, மந்திரம்-மந்திரமாகி, மிக்க –
(அபிசாரத்துக்கு) மேம்பட்ட, யாமளம் முதலிய மந்திரம் – யாமளம்
முதலியவற்றிலுள்ள மந்திரங்களை,தெரிந்துகொண்டு-,-ஆசு அறு-குற்றமற்ற,
சடங்கம்உம்-(அவ்வேள்விக்குஉரிய) சடங்குகளும், தப்பாமல் – தவறாதபடி
(இயற்றி), தொக்க-கூடிய, மந்திரம் ஒன்றினுக்கு – ஒருமந்திரத்துக்கு, ஓர் எழு
சுருவையின் நறுநெய் வார்த்து – ஓரேழுதரம் நெய்த்துடுப்பினால்
நறுமணமுள்ள நெய்யை ஓமஞ்செய்து, ஒக்க மந்திரம் அனைத்தின்உம்-
(அபிசாரத்துக்கு) ஏற்றனவான மந்திரமெல்லாவற்றிலும், கொடுமை கூர் –
கொடுமை மிகுந்த, ஓமம்உம்-ஓமத்தையும், புரிந்தான்-செய்தான்;(எ – று.)
யாமளம்என்பது, அதர்வணவேதத்தின் பகுதியானதென்பர்;அது,
அபிசாரம்முதலியசடங்குகளுக்கு எடுத்தது. அபிசாரசடங்குக்குத் தப்பாதபடி
சேர்ந்துள்ள மந்திரம்என்றுமாம். ஒரு அபிசாரமந்திரத்துக்கு ஏழுமுறை
நெய்த்துடுப்பினால்நெய்வார்த்து மந்திரோச்சாரணத்துடன் ஓமமும்செய்தா
னென்பது பின்னிரண்டிடயிற் கூறிய பொருள்.
தன் தன் இச்சையின் அன்றி, ஏழ் கடலுடைத் தராதலம்தனை ஆளும்
மன்தன் இச்சையின் புரியும் அவ் வேள்வியில், வந்துறு பெரும் பூதம்
சென்று, எயிற்று இள நிலவு எழ, துணை விழி தீ எழ, வெயில் வாய் கார்க்
குன்று எனப் பொலிந்து எழுந்தது; முனிவனும் கூசி, மெய் குலைந்திட்டான்15.-அவ்வோமத்தீயினின்று ஓர்பூதம்தோன்ற
முனிவனும் உடல் குலைதல்.
தன் தன் – தன்னுடைய, இச்சையின் அன்றி –
இச்சையின்படியல்லாமல், ஏழ் கடல் உடை தராதலந்தனைஆளும் –
ஏழுகடலையும்ஆடையாகக்கொண்ட பூமியை அரசுபுரிகின்ற, மன் தன் –
துரியோதன வரசனுடைய, இச்சையின் – விருப்பின்படியே, புரியும் –
செய்கின்ற, அ வேள்வியின் – அவ்யாககுண்டத்தினின்று, உறு பெரும் பூதம்
– மிக்க பெருந்தோற்றமுடைய பூதமொன்று,-வந்து – தோன்றி, எயிறு-
கோரப்பற்களினின்று, சென்று – வெளிப்போய், இள நிலவு எழ – இளநிலா
வீசவும், துணைவிழி – இரண்டு கண்களினின்று, தீ எழ – நெருப்புப்பொறி
பறக்கவும், வெயில் வாய் கார் குன்று என – வெயில்பொருந்திய
கருநிறமலைபோல,பொலிந்து – விளங்கி, எழுந்தது – வெளிப்பட்டது:
முனிவன்உம் – (அபிசாரயாகஞ்செய்து பூதத்தையுண்டாக்கிய)
காளமாமுனியும், கூசி – அஞ்சி, மெய் குலைந்திட்டான்- உடல்
நடுங்கினான்;(எ – று.)
வேள்வி -இங்கே குண்டத்துக்கு ஆகுபெயர். கருநிறமுடைய
பூதத்தினிடத்துத் தீப்புறப்படும் விழிக ளிருத்தலால், அதற்கு, ‘வெயில்வாய்
கார்க்குன்று’என்று உவமைகூறினார். பூமியாகிய பெண்ணுக்குக் கடலை
ஆடையாகக் கூறுவர்
இப் பால் இவ்வாறு ஓமம் செய்து, இவன் இப் பூதம் இனிது எழுப்ப,
அப் பால் இருந்த வன சரிதர் ஐவர்க்கு அமைந்தவாறு உரைப்பாம்:
முப் பாலினுக்கும் முதற் பாலாய், மும்மைப் புவனங்களும் காக்கும்,
தப்பா வாய்மை அறக் கடவுள் அறிந்தான், எண்ணம் தப்புவிப்பான்.துரியோதனன்அபிசாரவேள்வி செய்விப்பதை
யறிந்து, யமராஜன்பாண்டவர்களைஆபத்தினின்று தப்பச்
செய்விப்பவனாதல்.
இபால்-(துரியோதனனுள்ள)இவ்விடத்தில், இவன்-இக்
காளமாமுனிவன், இ ஆறு-இப்படி, ஓமம் செய்து-யாகத்தைச் செய்து, இ
பூதம்-இப்படிப்பட்ட பூதத்தை, இனிதுஎழுப்ப-இனிதாக (யாககுண்டத்தினின்றும்)
எழுமாறுசெய்ய,-அ பால்-அங்கு[வனத்தில்],இருந்த – வசித்திருந்த, வனசரிதர்
ஐவர்க்கு-காட்டில் திரிபவராகிய பஞ்சபாண்டவர்க்கு, அமைந்த ஆறு –
நேர்ந்தநிலைமையைப்பற்றி, உரைப்பாம்-(இனிச்)சொல்லுவோம்: முபாலினுக்கு –
(அறம் பொருள் இன்பம் என்னும்) மூன்று பகுதிக்குள், முதல் பால் ஆய்-
முதற்பகுதியான தருமசொரூபியாய், மும்மை புவனங்கள்உம் காக்கும் –
(மேல் கீழ் நடு என்னும்) மூன்றிடங்களிலுமுள்ள உலகங்களையும்
பாதுகாக்கின்ற, தப்பா வாய்மை – தவறாதசத்தியத்தையுடைய,
அறக்கடவுள்-தருமராஜன் எனப்படுகிற யமன், அறிந்தான்-
(துரியோதனனுடைய சூழ்ச்சியை) அறிந்தவனாய்,எண்ணம் தப்புவிப்பான் –
(அந்தத்துரியோதனனுடைய) எண்ணத்தினின்றும் பாண்டவர்களைத்தப்பச்
செய்விப்பானானான்;(எ – று.)-பாண்டவர் களைத்துரியோதனன்எண்ணப்படி
பூதத்தால் அழிந்திடாதவாறுயமதருமன் தப்பச்செய்தலைமேலே காண்க.
யமதருமராஜனும்உலகிலுள்ளாரை அவரவர்கள்செய்த தீவினைக்
கேற்பப் பட்சபாதமில்லாமல் தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுபவ
னாதலால்,அக்கடவுளை’மும்மைப்புவனங்களுங்காக்கும்தப்பாவாய்மை
யறக்கடவுள்’என்றாரென்னலாம். முதலிரண்டடிகள்-கவிக்கூற்று.
உரைப்பாம் – கவிகட்குஉரிய தனித்தன்மைப்பன்மை.
ஓமம்=ஹோமம்:அக்கினியில் அவிசுசொரிதலையுடையவேள்விக்கு,
ஆகுபெயர். எழுப்ப-செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சம்: ‘எழு’
என்பதன் பிறவினையான ‘எழுப்பு’ – பகுதிவனசரிதர் என்ற வடசொற்றொடர்
– காட்டிற்சஞ்சரித்தலையுடையவர் எனக் காரணப்பொருள்படும். ஐவர் –
தொகைக்குறிப்பு. வனசரிதர்ஐவர் – வனசரிதராகிய ஐவர் என
இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அறம் பொருள் இன்பம் என்ற மூன்றும்
‘முப்பால்’எனப்படும். மும்மைப் புவனம் என்றவிடத்து, மும்மையென்பது –
எண்ணின் தன்மையைக் காட்டாமல் “தெரிமாண்டமிழ்மும்மைத்தென்னம்
பொருப்பன்” என்றஇடத்துப்போல எண்ணின்மேல் நின்றது.
தீவினைசெய்வோர்களைத்தண்டித்துத் தருமத்தை நிலைநாட்டுதலால்,
யமதருமராஜன் ‘அறக்கடவுள்’எனப்படுவான். அறிந்தான்-முற்றெச்சம்.
இதுமுதல்ஆறுகவிகள் – பெரும்பாலும் மூன்று ஆறாஞ்சீர்கள்
காய்ச்சீர்களும், மற்றை நான்கும் மாச்சீர்க்ளுமாகிவந்த கழிநெடிலடி
நான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.
தன் மைந்தனும் அத் தம்பியரும் சரியாநின்ற தபோவனத்து,
நன் மைந்தரில் ஓர் முனி மைந்தன் நன்னூலுடன் பூண் அசினத்தை
வில் மைந்தரையும் மதியாமல், விரைந்து, உள் புகுந்து, விசைத்து, அகல் வான்
தொல் மைந்தனைப்போல், ஓர் உழைகொண்டு ஓடிற்று; என்னால் சொல உண்டோ?17.-பாண்டவரிருக்கும் வனத்தில் பார்ப்பனச்சிறுவனது
மான்தோலைஒருமான் எடுத்துச்செல்லுதல்.
தன் மைந்தன்உம்-தனது புத்திரனாகியயுதிஷ்டிரனும், அ
தம்பியர்உம்-(வீமன் அருச்சுனன் நகுலன் சகதேவன் என்ற அவனுடைய)
அந்தத் தம்பிமார்களும், சரியாநின்ற சஞ்சரித்துக்கொண்டிருக்கிற,
தபோவனத்து – (அந்தத்) தபோவனத்துள் (வாழ்கின்ற), நல் மைந்தரில்-
அழகியமைந்தர்களுக்குள், ஓர்முனிமைந்தன் ஒரு ரிஷிகுமாரன், நல்
நூலுடன்-(தனது) அழகிய பூணூலுடனே, பூண்-தரித்துக்கொண்டிருந்த,
அசினத்தை-மான்தோலை,ஓர் உழை-ஒருமானானது,வில் மைந்தரைஉம்-
வில்வீரராகிய பஞ்சபாண்டவரையும், மதியாமல்-இலட்சியஞ் செய்யாமல்,
விரைந்து உள்புகுந்து – வேகமான உள்ளேசென்று, கொண்டு-
கவர்ந்துகொண்டு, அகல் வான் தொல்மைந்தனைபோல்.
பரந்துள்ளஆகாயத்தின் பழமையாகிய மைந்தனைப்போல [காற்றைப்போல],
விசைத்து ஓடிற்று – விரைவுகொண்டு ஓடிற்று:என்னால் சொல உண்டுஓ –
(இவ்வாறுநிகழ்ந்த விசித்திரத்தன்மை பற்றி) என்னாற் சொல்லுதற்கு
உள்ளதோ? [சொல்லமுடியாதென்றபடி];(எ – று.)
பாண்டவர்கள்வில்லேந்தினவர்களா யிருக்கையிலும், ஒரு மானானது
அஞ்சாது விரைந்துஉட்புகுந்து முனிகுமாரன் பூண்டிருந்த
மான்தோலைக்கவர்ந்துகொண்டுகண்ணுக்குத் தெரியாது மாயமாய் ஓடிற்று
என்றால்,அந்தவிசித்திரத்தன்மையை யான் என்னவென்று சொல்லுவது?
என்றவாறு.
ஆகாசத்தின்னின்றும் வாயு தோன்றியதாக வேதங்களில் கூறப்படுவதனால்,
காற்றை, ‘வான்தொல்மைந்தன்’என்றார். ‘வான் றொன்மைந்தனைப்போல்ஓடிற்று’
என்றவிடத்தில், ‘காற்றாய்ப்பறந்தது’ என்று வழங்கும் உலகவழக்குக்
கருதத்தக்கது. ‘சொலவுண்டோ’ என்றஇடத்துள்ள ஓகாரம் –
சொல்லமுடியாதுஎன்று எதிர்மறைப்பொருளைத் தரும். சரியாநின்ற-நிகழ்காலப்
பெயரெச்சம். பூணசினம்-வினைத்தொகை. மைந்தர்-இளமை, வலிமை, வீரம்,
அழகு என்ற இவற்றை யுடையவர். தபோவநம், முநி, அஜிநம் – வடசொற்கள்.
மைந்தரையும், உம்மை – உயர்வுசிறப்பு.
மறை வாய்ச் சிறுவன், ‘கலைத்தோலை மான் கொண்டு ஓடி, வான் இடையில்
பொறைவாய்ப் புகுந்தது; அபயம்!’ எனப் புகுந்து, ஆங்கு அமுது, புலம்புதலும்,
நறைவாய்த் தொடையல் அறன் மகனும், இளைய வீரர் நால்வரும், தம்
துறைவாய்ச் சிலையோடு அம்பு ஏந்தித் தொடர்ந்தார் அதனை, சூழ் புலிபோல்,18.-முனிகுமாரன்முறையிட, பாண்டவர்கள் மானைத்
தொடர்ந்துசெல்லுதல்.
மறைவாய் சிறுவன்-வேதத்தை வாயினாற்கூறிக்
கொண்டிருப்பவனாகியமுனிகுமாரன், ஆங்கு புகுந்து-(பாண்டவ ரிருக்கின்ற)
அவ்விடத்தில்வந்து, ‘கலைதோலை-(நான்பூணூலுடன் பூண்டிருந்த)
மான்தோலை,மான்-ஒருமானானது,கொண்டு-கவர்ந்து கொண்டு, ஓடி-
விரைந்துசென்று, வானிடையில்-நெடுந்தூரத்தில், பொறைவாய்-
மலையினிடத்தில்,புகுந்தது – ஒளித்துக்கொண்டது:(ஆதலால்), அபயம் –
(யான்) பயப்படாதே என்று காக்கவேண்டியபொருளாவேன்,’என –
என்றுசொல்லி, அழுது புலம்புதலும்-கண்ணீரைப்பெருகவிட்டுக்
கதறிமுறையிட்டவளவில், – நறைவாய்-தேனைத்தன்னிடத்திலுடைய,
தொடையல்-மாலையையணிந்த,அறன் மகன்உம் –
தருமனுடையபுத்திரனாகியயுதிஷ்டரனும், இளையவீரர் நால்வர்உம்-
(அவனது) தம்பிமார்களாகிய நான்குவீரர்களும், தம்-தம்முடைய, துறை வாய்
சிலையோடு-விற்கூறுபாட்டிற்பொருந்துதலையுடையவிற்களுடனே, அம்பு –
அம்புகளையும்,ஏந்தி-தாங்கிக்கொண்டு, அதனை- அம்மானை,சூழ் –
சூழ்ந்து கொள்ளுதற்குத்தொடர்கிற, புலி போல்-புலிகளைப்போல,
தொடர்ந்தார்-தொடர்ந்தார்கள்;(எ-று.)
சிறுவன்ஆங்குப்புகுந்துஅபயம் என அழுது புலம்புதலும், மகனும்
நால்வரும் சிலையோடுஅம்பேந்தி, புலிபோல் அதனைத்தொடர்ந்தார்
என்க.
முனிகுமாரன்பிரமசாரி யாதலால், தனதுபிரமசரியநிலைக்குஏற்றபடி
வேதத்தை ஓதிக்கொண்டிருக்கின்றன னென்பார், அவனை’மறை
வாய்ச்சிறுவன்’என்றார். பொறை-(பூமியைப்) பொறுப்பது [சுமப்பது]என
மலைக்குக்காரணப்பெயர்:’ஐ’என்னும் கருத்தாப் பொருள்
விகுதிபெற்றபெயர்:’தரணீதரம்’முதலிய வடமொழிப் பெயர்களாலும் மலை
பூமியைத் தாங்குதலாதல் பெறப்படும். பொறைவாய், வாய்-ஏழனுருபு.
நறைவாய், வாய் – ஏழாம்வேற்றமை யிடப்பொருளுணர நின்ற இடைச்சொல்.
தொடையல் என்பதில், அல் – சாரியை. தொடை-(பூக்களைக்கொண்டு)
தொடுக்கப்படுவது என மாலைக்குக்காரணப்பெயர்;தொடு-பகுதி, ஐ-
செயப்படுபொருள்விகுதி. தீவினைசெய்தோர்களைநரகத்திலே தண்டித்துத்
தருமத்தை நிலைநிறத்துதலால்,யமதருமராஜனை’அறன்’என்றார்:அறன்-
அறத்தைக் காப்பவன். நால்வர்என்பதில், வ் – பெயரிடைநிலை. துறை-
விற்களைஉபயோகிக்கவேண்டிய வழி. நான்காமடியில், வாய்-வாய்த்தல்:
முதனிலைத்தொழிற்பெயர். வாய்ச்சிலை- வாய்த்தலையுடையசிலைஎன
இரண்டாம்வேற்றுமை யுருபும்பயனும் உடன்தொக்கதொகை. சூழ்புலி-
வினைத்தொகை.
அகப்பட்டதுபோல் முன் நிற்கும்; அருகு எய்தலும், கூர் ஆசுகம்போல்
மிகப்பட்டு ஓடும்; தோன்றாமல், வெளிக்கே ஒளிக்கும்; விழி இணைக்கு
முகப்பட்டிடும்; ஈண்டு ஐவரும் தம் முரண் தோள் வன்மை தளர்வு அளவும்
தகைப்பட்டு ஒழிந்தார்; அதில் ஆசை ஒழிந்தார், இந்த்ரசாலம் எனா.19.-ஓடியமானின்செயலால் தளர்ந்து பாண்டவர்
அதைத் தொடர்தலில்ஆசையொழிதல்.
தோலைக்கவர்ந்துகொண்டுசென்ற மான்),- அகப்பட்டதுபோல் –
(கையில்) அகப்பட்டுவிட்டதுபோல், (பாண்டவர்களின் அருகிலே), முன்
நிற்கும்-முன்னே வந்துநிற்கும்:(அந்தப் பாண்டவர்கள்), அருகு-(தன்)
சமீபத்தில், எய்தலும்-வந்து சேர்ந்தவுடனே, கூர் ஆசுகம் போல்-கூரிய
அம்புபோல, மிக பட்டு ஓடும்-மிகப்பொருந்தியோடும்: தான்றாமல் –
(கண்ணுக்குத்) தெரியாமல், வெளிக்கே-வெளியில், ஒளிக்கும் – (தன்னை)
ஒளித்துக்கொள்ளும்;மீண்டு-மறுபடியும், விழி இணைக்கும்உம்-
இரண்டுகண்களுக்கும், முகம்-எதிரில், பட்டிடும்-பொருந்திநிற்கும்;
(இவ்வாறுஅந்தமானினால்),ஐவர்உம்-பஞ்சபாண்டவர்களும், தம் –
தம்முடைய, முரண்வலிமையையுடைய, தோள் – தோள்களின், வன்மை-
பலமானது, தளர்வுஅளவும்-தளர்தலையடையும்வரையிலும்,
தகைப்பட்டுஒழிந்தார்-(தொடர்ந்து பிடிக்கமுடியாமல்) தடுக்கப்பட்டுத்
தீர்ந்தார்கள்;(பிறகு தோள்வலிமைதளர்ந்ததனால்),இந்த்ரசாலம்எனா-
(இந்த மானின்செய்கை) இந்திரஜாலம்போலுமென நினைத்து,அதில்-அந்த
மானைத்தொடர்தலில்,ஆசை ஒழிந்தார்-ஆசைநீங்கினார்கள்;(எ-று.)
இந்த்ரஜாலம்- மாயச்செய்கை:வடசொல். ஆசுகம் – விரைந்து
செல்லுவதுஎன அம்புக்குக் காரணப்பெயர். தகை – தகைதல்:
முதனிலைத்தொழிற்பெயர். எனா- செய்யாஎன்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு இறந்தகால வினையெச்சம்.
தடங் கானகமும், வானகமும், சாரல் பொருப்பும், தாழ் வரையும்,
மடங்கா வரும், போம், சூழ் போதும்,அப்போது அந்த மான் கன்று;
தொடங்கா, இவரை இளைப்பித்த தொழிலைச் சொல்லின், ஒரு நாவுக்கு அடங்காது! இன்னும், ஆயிரம் உண்டானால், அதற்கும் அடங்காதே!கவிக்கூற்று:மான்கன்று பாண்டவர்களைஇளைப்பித்த
வகையை எம்மாற்கூறவியலாதெனல்.
தடகானகம்உம்-பெரிய காடும், வானகம்உம்-ஆகாசமும்,
சாரல் பொருப்புஉம்-(மேகஞ்) சார்தலையுடையமலையும்,தாழ்வரையும்-,-
(ஆகிய இவ்விடங்களில்), அப்போது-,அந்த மான் கன்று-, மடங்கா வரும்-
திரும்பத்திரும்பவரும்:போம்-(சிறிதுநேரம் கண்ணுக்குத்தெரியாமல்
அப்பாற்)போய்விடும்:சூழ்போதும்-சிலகால் வலமாகவும் சிலகால்
இடமாகவும் சுற்றும்:தொடங்கா -(அம்மானைப்பற்றத்) தொடங்கியுள்ள,
இவரை-, இளைப்பித்த- சோர்வு அடையுமாறுசெய்த, தொழிலை-,
சொல்லின் – (நாம் எடுத்துச்)சொல்வோமேயானால்,ஒரு நாவுக்கு-இந்தஒரு
நாவினாற்சொல்லிமுடித்தற்கு, அடங்காது-(அத்தொழில்)அடங்காததாகும்:
இன்னும் ஆயிரம் உண்டானால்- இன்னும்ஆயிரம்நாக்கு உண்டானாலும்,
அதற்குஉம்-அந்த ஆயிரம்நாவுக்கும், அடங்காது-;
அதற்கு-சாதியொருமை. மடங்காவரும் போம் சூழ்போதும்
என்பவற்றைப்பெயரெச்சமெனக்கொண்டு மான்கன்றுக்குஅடை
மொழியாக்கினுமாம். தொடங்கா என்ற வினையெச்சத்தின்பின்
ஏற்றவினைச்சொல்வருவிக்கப்பட்டது.
கான் ஈது இவர்க்குத் தலை தெரியாக் கானம்; கருத்து மிகக் கலங்கிப்
பானீயத்துக்கு ஐவரும் மெய் பதையாநிற்பர்’ என அறிந்து,
தூ நீர் நச்சுச் சுனையாய், அச் சுனை சூழ்வர ஓர் தொல் மரமாய்,
யான் நீ அவன் என்று எண்ணாமல், எல்லாம் ஆனோன், இருந்தானே.21.-யமதருமன்நச்சுக்சுனையாயும்அதைச்சூழ்ந்த
மரமாயும்அமைந்திருத்தல்.
யான் நீ அவன் என்று-யானென்றும் நீயென்றும்
அவனென்றும், எண்ணாமல்- எண்ணமுடியாதபடி, எல்லாம் ஆனோன்-
எல்லாப்பொருளுமாகியிருக்கிற யமதருமன், ‘ஈதுகான்-இந்தக்காடானது,
இவர்க்கு-இந்தப்பாண்டவர்க்கு, தலைதெரியா-இடந்தெரியாத, கானம் –
காடாகும்;(இந்தக்காட்டில் அலைந்ததனால்),ஐவர்உம்- பஞ்சபாண்டவர்களும்,
கருத்து – (தம்) மனம், மிக கலங்கி – மிகவும் கலக்கமடைந்து, பானீயத்துக்கு –
பருகும் நீரைப்பெறுவதற்காக, மெய் பதையா நிற்பர் – உடல்வருந்தாநிற்
பார்கள்,’என அறிந்து-என்று ஆலோசித்து, தூ நீர்-(கண்ணுக்குத்)
தூய்மையுடையதாகத்தோன்றுகின்ற நீரைக்கொண்ட, நஞ்சு சுனைஆய்-
விஷத்தையுடைய சுனையாகவும்,அ சுனைசூழ்வர-அந்தச்
சுனையைச்சுற்றிநிற்க,ஓர் தொல் மரம்ஆய் – ஒப்பற்ற பழமையான
மரமாகவும், இருந்தான்-;(எ-று.)
காட்டில்நெடுந்தூரம் மானைத்தேடி யலைந்துதிரிந்தமையால்,
பாண்டவரைவரும் களைத்துக்குளிர்ந்தநிழலையும்தண்ணீரையும்
நாடிவருவரென்று ஆலோசித்து, யமதருமன் தொன்மரமும்
சுனையுமாயிருந்தானென்க. தொன்மரமாய் என்பதற்கு-முதனூலுக்கு ஏற்ப,
ஆலமரமாகியென்னலாம். சூரியன் யமன் வருணன் முதலிய கடவுளரை
முதற்கடவுள்போல வைத்துக்கூறுதல் வேதவழக்காதலாலும்,
இந்நூலாசிரியரும் சிவன் சூரியன்முதலிய கடவுளரை அவ்வாறு
கூறியிருத்தலாலும், இங்கே யமனை’யானீயவனென்றெண்ணாமல்
எல்லாமானோன்’என்றார்: கீழ் “மும்மைப்புவனங்களுங்காக்கும்
அறக்கடவுள்”என்றதும் இத்தன்மைபற்றியதேயென்னலாம். யான் நீ
அவனென்றெண்ணாமல்எல்லாமானோன்-உலகத்துப்பொருள்கள்
தன்மையாகவோ முன்னிலையாகவோபடர்க்கையாகவோ பேதப்படுத்தி
வழங்குதற்கு உரியன;கடவுளோ அங்ஙனம் அன்றி எல்லாத்தன்மையும்
பெற்றிருப்பன் என்றவாறு. பானீயம்-பருகுதற்குஉரியது என்று பொருள்படும்
வடமொழிப்பெயர்.
‘எண்ணாமல்’என்ற எதிர்மறைவினையெச்சம்’ஆனோன்’ என்பதிலுள்ள
ஆதல்என்பதோடு முடியும். பதையா-பதைத்து: உடன்பாட்டு
இறந்தகாலவினையெச்சம்.நஞ்சு+சுனை=நச்சுச்சனை: வேற்றுமைத்தொகையில்
மென்றொடர்வன்றொடராயிற்று.
தருமனும் தம்பிமாரும், தாலுவும் புலர்ந்து, தாகத்து
உருகிய மனத்தர் ஆகி, உடல் தளர்ந்து அயரும் ஆங்கண்,
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி, ‘இன்னே
மரு வரும் புனல் கொண்டு, ஓடி வருதி நீ, விரைவின்!’ என்றான்.22.-தருமன்நீர்கொணருமாறு சகதேவனைஅனுப்புதல்.
தருமன்உம்-யுதிஷ்டிர ராசனும், தம்பிமார்உம் – (வீமன்
முதலிய அவனது) தம்பியரும், தாலுஉம் புலர்ந்து – (தமது) நாவும் வறண்டு,
தாகத்து – நீர்வேட்கையினால்,உருகிய மனத்தர்ஆகி – (உறுதியற்று)
நீர்ப்பண்டம்போலுருகின மனத்தையுடையவராய், உடல் தளர்ந்து – உடம்பு
சோர்ந்து, அயரும்-வருந்துகின்ற, ஆங்கண் – அச்சமயத்தில்,-எரிஉறு
கானம் போல்வான்-தீப்பிடித்த காடுபோல்பவனாகிய[மிகவும்
வெப்பமடைந்தவனாகிய]தருமபுத்திரன்,-இளவலைநோக்கி-(தனது இறுதித்)
தம்பியாகிய சகதேவனைப்பார்த்து, ‘நீ-,இன்னே – இப்போதே, மருவு
அரு-(இங்குக்) கிடைத்தற்கு அரிய, புனல்-நீரை, கொண்டு-எடுத்துக்
கொண்டு, விரைவின்- விரைவாக, ஓடிவருதி – ஓடிவருவாய், என்றான்-
என்று கட்டளையிட்டான்;(எ-று.)
பாவத்தொழிலைச்செய்தாரைத் தண்டித்துத் தருமத்தைநிலை
நாட்டுதலால், யமனுக்கு ‘தருமன்’என்றுஒருபெயர்: அறன் என்றது போல:
யுதிஷ்டிரன் குந்திதேவியினிடத்தில் யமதருமராசனது அருளால் தோன்றியவ
னாதலால்,தருமபுத்திரன் எனப்படுவான்: ஆகவே, இங்கே ‘தருமன்’
என்பது-தருமபுத்திரன் என்பதன் நாமைகதேசம்: இனி, ‘தந்தையே
மகனாகப்பிறக்கின்றான்’என்ற நூற்கொள்கைபற்றி, யுதிஷ்டிரனைத்
தந்தையின் பெயரிட்டு ‘தருமன்’என்றுகூறினாரென்பாரு முளர். காட்டில்
மானைத்தேடி அலைந்துதிரிந்ததனால்மிக்க வெப்பம்
அடைந்திருத்தல்பற்றி, தருமபுத்திரனை,’எரியுறுகானம்போல்வான்’
என்றார். இளவல்-சகதேவனைக்குறிக்குமென்பது, மேற்கவியாற்
பெறப்படும்.
இதுமுதல்இருபத்துநான்கு கவிகள் – முதற்சீரும்நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றையநான்கும் மாச்சீர்களுமாகிவந்த
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தங்கள்.
அக் கணத்தினில், சாதேவன் அடவிகள்தோறும் தேடி,
எக்கணும் காணான் ஆகி, என்று தோய் குன்று ஒன்று ஏறி,
மிக்க வண் சீத வாச விரி சுனை ஒன்று காணா,
புக்கனன்; பருகலுற்றான், பொலிவு அறப் புலர்ந்த நாவான்.23.-நீர்கொணரச்சென்றசகதேவன்
நச்சுப்பொய்கையையடைந்து நீர் பருகுதல்.
அகணத்தினில்-அப்பொழுது, சாதேவன்-சகதேவன், பொலிவு
அற புலர்ந்த நாவான்-விளக்கம்நீங்க [ஈரமற]வறண்ட
நாவையுடையவனாய்-அடவிகள்தோறுஉம் – காடுகள்தோறும், தேடி-நாடி,
எக்கண்உம்-எவ்விடத்திலும், காணன்ஆகி-(ஜலத்தைப்) பாராதவனாய்,
என்று தோய் குன்று ஒன்று-சூரியன்படிகின்ற [மிகவோங்கிய]
மலையொன்றின்மீதுஏறி-,அவண்-அவ்விடத்தில், சீதம் வாசம் மிக்கு விரி
சுனைஒன்று-குளிர்ச்சியும் நறுமணமும்மிக்குப் பரந்துள்ள சுனையொன்றை,
காணா-கண்டு,புக்கனன்-புகுந்து, பருகல் உற்றான்-(நீரைக்)குடிக்கலானான்;
(எ-று.)
‘மிக்கதாகங்கொண்டதருமபுத்திரனால்நீர் கொணருமாறு ஏவப்பட்ட
சகதேவன் முதன்முதலில் தான் சுனையின்நீரைக்கொண்டு செல்லாது,
நீரைப்பருகியது தகுதியோ?’என்று உண்டாகும் வினாவைச்
சமர்த்திப்பதற்காக, சகதேவனை’பொலிவுஅறப்புலர்ந்தநாவான்’என்றார்:
இங்ஙனம் சமர்த்திக்குங் கருத்துடன் அடைமொழி வந்ததனால்,பொலிவு
அறப்புலர்ந்த நாவான் என்பது-கருத்துடையடைமொழியணியாம்.
என்றுதோய் குன்று -மலையின்ஓங்கியிருக்குந்தன்மையை விளக்கவந்த
தொடர்புயர்வு நவிற்சியணி:ஸம்பந்தாதிஸயோக்தி எனப்படும்
செழும் புனல் உதரம்தன்னில் சேரும் முன், ஆவி பொன்றி,
விழுந்தமை அறிவுறாது, மீளவும் நகுலன்தன்னை
அழுங்கினன் ஏவ, சென்று, ஆங்கு, அவனும் அப் பரிசின் மாய்ந்தான்;
எழும் படை விசயன்தன்னை ஏவினன்; அவனும் போனான்24.-தருமபுத்திரன்சகதேவன்செய்தியை யுணராமல்
நீர்கொணருமாறு நகுலனையும்அருச்சுனனையும்
பின்னும் அனுப்புதல்.
செழும் புனல் – வளப்பமுள்ள நீர், உதரம்தன்னில்-(தன்)
வயிற்றில், சேரும் முன் – சேருதற்குமுன்னே, (சகதேவன்),ஆவி பொன்றி –
உயிர் ஒடுங்கி, விழுந்தமை – இறந்து வீழ்ந்திட்டதை, அறிவுறாது-
அறியாமல்,-(தருமபுத்திரன்),-அழுங்கினன்-(நீர்வேட்கையால்)
வருந்தியவனாய்,-நகுலன் தன்னை-நகுலனை,மீளஉம்-மீண்டும், ஏவ –
(நீர்கொணருமாறு) கட்டளையிட்டானாக,-அவன்உம்-அந்தநகுலனும்,
சென்றான்-(நீர்கொணரச்)சென்று, அப்பரிசின் – அந்தவிதமாக [சகதேவன்
நீர்வேட்கையால் சுனைநீரைப்பருகி இறந்தவிதமாகவே],மாய்ந்தான்-
(நீர்பருகி) உயிரொழிந்தான்: எழும் படை விசயன்தன்னை- (பகைவர்மீது)
செல்லவல்ல ஆயுதங்களையுடையஅருச்சுனனை,ஏவினன் – (பின்னும்
தருமபுத்திரன் நீர் கொணருமாறு) கட்டளையிட்டனுப்பினான்;அவன்உம் –
அந்தஅருச்சுனனும், போனான்-(நீர்தேடிக்கொணருமாறு) சென்றான்;(எ-று.)
‘சகதேவன்அந்தச்சுனைநீரைப்பருகியதனால்ஆவியொழிந்தான்’
என்ற செய்தியை, ‘செழும்புனலுதரந்தன்னில் சேருமுனாவிபொன்றி
விழுந்தமை’என அநுவாதமுகத்தாற் கூறினார்: இப்படி ஒருசெய்தியை
ஏற்கவே கூறவேண்டியஇடத்திற் கூறாதுஅநுவாதமுகத்தாற் கூறுதலும்
கவிமரபே. சென்றாங்கவனுமப்பரிசின்என்றுபிரதிபேதம்.
தம்பியர் கிடந்த தன்மை கண்டும், அத் தலைவன், மேன்மேல்
வெம்புறு கொடிய தாக மிகுதியால் விரைந்து, வாரி,
பைம் புனல் அருந்தி, அவ்வாறு இறந்தனன்; பரிதாபத்தோடு,
‘எம்பியர் என் செய்தார்?’ என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான்.25.-அருச்சுனனும்நீர்பருகி இறந்தானாக,தம்பியர்
நீர்கொண்டுவராமைகுறித்துத் தருமபுத்திரன்
வருந்திச்சோர்தல்.
அ தவைன்- அந்த அருச்சுனனாகியதலைவன்,தம்பியர்
கிடந்த தன்மை-(தனது) தம்பிமார் (சுனைநீரைப்பருகி) மாய்ந்து கிடக்கின்ற
தன்மையை, கண்டுஉம்-பார்த்தும், மேன்மேல் வெம்புறு கொடிய தாகம்
மிகுதியால்-மேலும்மேலும் தவித்தற்குக்காரணமான கொடிய மிக்க
தாகத்தினால்,பைம் புனல்-(சுனையின்)பசிய [குளிர்ந்தநீரை, விரைந்து
வாரி – விரைவுகொண்டு (கையினால்)முகந்து அருந்தி – பருகி, அ ஆறு –
(அந்தச் சகதேவன்முதலிய தம்பிய இறந்த) அந்தவிதமாகவே, இறந்தனன் –
உயிரொடுங்கினான்:இறைவன்உம் – தலைவனாகியதருமபுத்திரனும்,
பரிதாபத்தோடு-மிக்கவருத்தத்தோடு, ‘எம்பியர்-எனதுதம்பிமார், என் செய்தார்
– என்ன (இப்படிச்) செய்தார்கள்!’என்று – என்றுசொல்லி, இனைந்து- வருந்தி,
சோர்ந்தான் – தளர்ச்சியடைந்தான்;(எ-று.)
சகதேவன்முதலிய தம்பிமார் சுனைநீரைப்பருகிஉயிரொடுங்கி
விழுந்திருத்தலைக்கண்டும், அருச்சுனன், தாகத்தைத் தாங்கமுடியாமையால்,
தானும் அந்தச்சுனைநீரைப்பருகிஇறந்துபட்டான்: இங்ஙனம்
புனல்கொணரச்சென்ற மூவரும், சுனையின்நச்சுநீரைப்பருகி இறந்துபட்ட
செய்தியை யுணராத தருமன் ‘என்சொல்லைஒருசிறிதும்மீறாததம்பியர்
ஒருவரல்ல இருவரல்ல மூவரும், எனது தாகத்தின்கடுமையை
நேரேகண்டிருந்தும், விரைந்து நீர்கொணராது தாமதிக்கின்றனரே! இது
என்னே!!’என்று மிக்க பரிதாபத்தோடு வருந்திச்சோர்பவனானானென்க.
அருச்சுனன் வில்வித்தையில் மேம்பட்டுச்சிறத்தலால், அவனையும்
‘தலைவன்’என்றார்: பாண்டவருள் தருமபுத்திரன் மூத்தவனாய்த்
தலைமைபெறுதலால்,அவனை’இறைவன்’என்றார்
வீமன் அங்கு அவனைத் தேற்றி, மெலிவுறு சோகத்தோடும்
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து, அங்கு எய்தி,
சாம் முறைத் தம்பிமாரைக் கண்டு, அருந் தடத்து நீரை
ஆம் எனக் கருதாது, ‘ஆலம் ஆகும்’ என்று அகத்தில் கொண்டான்.26.-வீமன்தருமபுத்திரனைத்தேற்றி நீர் கொணரச்
சென்று சுனையைக்கண்டுஅதன்நீரை நஞ்சுஎன்று அறிதல்.
அங்கு- அப்போது, வீமன் – வீமசேனன், அவனை-அந்தத்
தருமபுத்திரனை,தேற்றி – (தான் விரைவில் நீர்கொணர்வதாகச்சொல்லிச்)
சமாதானப்படுத்தி, (பயணப்பட்டு), ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கண்உம்
திரிந்து – சுடுகாட்டையொத்துப் பற்றியெரிகின்ற காடுஎங்கும் அலைந்து,
(இறுதியில்), அங்கு எய்தி-(சுனையுள்ள)அந்தஇடத்திற்குப் போய், சாம்
முறை தம்பிமாரை கண்டு-உயிர்நீங்கியநிலையையடைந்திருந்த(அருச்சுனன்
நகுலன் சகதேவன் என்ற) தம்பிமாரைப் பார்த்து, (அதனால்),மெலிவுறு
சோகத்தோடுஉம்-மனம்மெலிதற்குக்காரணமான துக்கத்துடனே, அரு தடத்து
நீரை ஆம் என கருதாது – அருமையாகக்கிடைத்த சுனையின்நீரை(நல்ல)
தண்ணீர்என்று கருதாமல், ஆலம் ஆகும் என்று அகத்தில் கொண்டான் –
விஷத்தையுடையதாகும்என்று மனத்தில் எண்ணினான்;(எ-று.)
தம்பிமார்இறந்துகிடந்ததுகண்ட வீமசேனன், ‘இவர்கள்நீர்
வேட்கையால் இச்சுனைநீரைப்பருகியிருக்கவேண்டும்: அங்ஙனம்பருகிய
இவர் மாண்டுகிடத்தலால், இச்சுனைநீர்விஷங்கலந்திருப்பதாதல் வேண்டும்’
என்று தன்மனத்தினுள் ஊகித்தறிந்து கொண்டானென்க.
பின்னவர் மூவர் சேரப் பிணங்களாய்க் கிடத்தல் கண்ட
மன்னவன்தனக்குத் தாகம் மாறுமோ? வளர்ந்து மேன்மேல்,
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ? முன்
சொன்னவன்தானும், இந்தச் சோகமோ தொகுக்க மாட்டான்!27.-வீமன்ஒருபுறம் தாகத்தாலும் மற்றொருபுறம்
சோகத்தாலும்வருந்தல்.
இரண்டுகவிகள் -ஒருதொடர்.
(இ-ள்.)பின்னவர் மூவர் – (தன்) பின் பிறந்தவராகிய மூன்று பேரும்
[அருச்சுனனும்நகுலசகதேவரும்],சேர-ஒருசேர, பிணங்கள் ஆய்-
பிணங்களாகி, கிடத்தல்-கீழ்வீழ்ந்திருத்தலை,கண்ட-,மன்னவன்தனக்கு –
வீமசேனனுக்கு, [அவர்கள்நீர்பருகியதனால்இறந்தாரென்று
கண்டமாத்திரத்தினால்],தாகம் – நீர்வேட்கை, மாறும்ஓ –
நீங்குமோ? மேன்மேல் வளர்ந்து – (நீர்வேட்கை) மிகவும்
அதிகமாகவளர்ந்ததனால்,அவன் – அந்தவீமசேனன், என்பட்டான்
என்பது-என்ன அவஸ்தைப்பட்டானென்பதை, இயம்புதற்கு-
எடுத்துச்சொல்லுதற்கு, எட்டும்ஓ – வாசகங்கள்கிடைக்குமோ? முன்
சொன்னவன் தான்உம்-(அந்த அருச்சுனன்முதலிய மூவர்க்கும்)
முன்னவனாக[அண்ணனாக]க்கூறப்பட்ட அந்த வீமசேனனும், இந்த
சோகம்ஓ தொகுக்கமாட்டான்-(தாகத்தோடு இந்தத் தம்பிமார்
இறந்ததனாலான)சோகத்தையும் அடக்கமாட்டாதவனாய்,-(எ-று.)-
‘குளிப்பாட்டினான்’என அடுத்த கவியோடு முடியும்.
முன்சொன்னவன் தான்உம் – முதலிற்பாண்டவசரித்திரத்தை
மகாபாரதமாகக்கூறி வியாசபகவானும், இந்த சோகம்ஓ – இந்தச்
சோகச்செய்தியையோ, தொகுக்கமாட்டான் – சுருக்கிச்சொல்லமாட்டான்:
ஆதலால், யானும் சிறிதாவது கூறவேண்டு மென்பது குறிப்பெச்சமெனக்
கூறுவாரு முளர்.
குசையுடைப் புரவித் திண் தேர்க் குரக்கு வெம் பதாகையானை,
அசைவு இல் பொன் சயிலம் அன்ன ஆண்தகை மனத்தினானை,
திசை அனைத்தினும் தன் நாமம் தீட்டிய சிலையின் வெம் போர்
விசையனை, தன் கண்ணீரால் மெய் குளிப்பாட்டினானே.28.-வீமன்விழுந்துகிடக்கும் விசயனைக்கண்டு
கண்ணீர்பெருக்குதல்.
குசைஉடை-கடிவாளத்தையுடைய, புரவி-குதிரைகள் பூட்டிய,
திண் தேர்-வலிய தேரிலே, வெம் குரங்கு பதாகை யானை-துவசத்திலே
கொடிய அநுமனையுடையவனும்,அசைவு இல்பொன் சயிலம் அன்ன –
அசைத்தலில்லாத பொன்மலை[மேருமலை]யையொத்த,ஆண் தகை
மனத்தினானை- வீரனுக்குரியதகுதிப்பாட்டோடுகூடியமனத்தையுடையவனுமாகி,
திசை அனைத்தின்உம்-திக்குகளில்எல்லாம், தன் நாமம்-தனது பெயரை,
தீட்டிய எழுதிவைத்துள்ள, சிலையின்வெம் போர் விசையனை-வில்லினாற்
செய்யுங்கொடிய போரில் எப்போதுஞ் சயம்பெறுபவனானஅருச்சுனனை,
தன் கண் நீரால்-தனது கண்நீரினால்,மெய் குளிப்பாட்டினான்-
உடம்பைக்குளிக்கச்செய்தான்;(எ-று.)
குளிப்பாட்டினான்என்றவினைமுற்றிற்கு,வீமன் என்ற எழுவாய்
வருவிக்க. விசயனை மெய்யைக் குளிப்பாட்டினான்-இரண்டு
செயப்படுபொருள்வந்த வினை. வீமசேனன், விசயனைக்குறித்துக் கண்ணீர்
பெருக்குகிறதற்குக்காரணம், பெருவீரனானஅந்த அருச்சுனன் உயிர்
சோர்ந்திருந்தமையாலாகும். காண்டவவனத்தை இஷ்டப்படியுண்ணுமாறு
அநுமதிதந்த அருச்சுனனிடத்து அக்கினிதேவன் மிகமகிழ்ந்து அன்போடு
வானரப்பதாகையுள்ள தேரையும் நான்குவெள்ளைக்குதிரைகளையும்
இரண்டு அம்பறாத்தூணிகளையும்வில்லையும்தந்தானென்பது, கீழ்
ஆதிபருவத்தில் வந்த வரலாறாகும். உடம்பின் தோற்றத்தோடு மனத்தின்
தன்மையினாலும்பொன்மலைபோன்றவனென்பார்,’அசைவில்
பொற்சயிலமன்ன வாண்டகைமனத்தினானை’என்றார். விசையன்-
விசயனென்பதன் போலி.
“குரக்குவெம்பதாகையானை”என்ற தொடரில், மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்றென்க. (பதாகையில்)
வெம்குரங்கானைஎன்றுபிரித்துக்கூட்டல்.
நல் துணைச் சிறுவனோடு நகுலனை நோக்கி, ‘அந்தோ!
என் துணை இழந்தேன்!’ என்னும்; ‘என் செய்வது இனி நான்!’ என்னும்;
‘முன் துணைவனும் அக் கானில் முடிந்திடும்; மொழிய வேறு ஓர்
பின் துணை காண்கலாதேன், யாரொடு பேசுவேனே!29.-பின்னும்வீமன் நகுலசகதேவர்களைக்
கண்டுவருந்துதல்.
நல்துணைசிறுவனோடு-சிறந்ததுணையாகவுள்ளதம்பியாகிய
சகதேவனுடனே (உயிர்ஒடுங்கிக் கிடக்கின்ற), நகுலனை-நகுலன்
என்பவனையும்,நோக்கி – (வீமசேனன்) பார்த்து, (பெருந்துன்பமடைந்து),
‘அந்தோ- ஐயோ! என் துணைஇழந்தேன்-என்னுடைய துணையை
யிழந்தேனே!’என்னும் – என்பான்: ‘இனிநான் செய்வது என் – இனி
நான் செய்யவேண்டுவது என்ன?’என்னும் – என்பான்: (பின்னும்), ‘முன்
துணைவன்உம்-முற்பட்டதுணைவனாகியதருமபுத்திரனும், அ கானில்-
(அவனுள்ள) அக்காட்டில், முடிந்திடும் – (நாம் எவரும் அவனது தாகம்
தீரும்படி நீர் கொண்டு செல்லாமையால்) இறந்து விடுவான்: பின் – பிறகு,
மொழிய – பேசுமாறு, வேறு ஓர் துணைகாண்கலாதேன் – வேறு ஒருவர்
துணைவரை[உடன்பிறந்தாரை]யும்காணப்பெறாதயான், யாரொடு
பேசுவேன் – யாரோடுசம்பாஷணைசெய்வேன்? [பேசுவதற்குஒருவரும்
இல்லையே?],'(என்னும்) – என்பான்;(எ-று.)-ஏகாரம் – இரக்கம்.
முதலிரண்டடிகளில்வந்துள்ள ‘என்னும்’ என்பதை ‘பேசுவேனே’
என்பதன்பின்னுஞ் சேர்த்து இச்செய்யுளைமுடிக்க.
இதனால், வீமசேனன் தான்மாத்திரம் பிழைத்திருப்பதிற்பய
னில்லைஎன்று தானும்நீர்பருகிஉயிரைநீக்கத் தீர்மானித்தமை பெறப்படும்.
என் + துணை=எற்றுணை. “தன்னென்னென்ப வற்றின் ஈற்றுன
வன்மையோடுறழும்” என்பது, விதி.
மணி முரசு உயர்த்தோன் ஈண்டு வருதலும் கூடும்; வந்தால்,
அணிதரு நச்சுத் தோயம் அருந்தவும் கூடும்!’ என்னா,
பணி உடன் செய்வான் போலப் பரு மணல் ஏட்டில், கையால்,
துணிவுற எழுதி, அந்தத் தோயமே தானும் துய்த்தான்.30.-வீமன்மணலில் எழுதிவிட்டு அந்தச்சுனைநீரைப்
பருகுதல்.
மணிமுரசு உயர்த்தோன் – அழகிய முரசவாத்தியத்தை(க்
கொடியில்) உயரக்கட்டியவனாகியதருமபுத்திரன், ஈண்டு – இங்கே,
வருதலும் கூடும் – (ஒருகால்) வருதல்நேரிட்டாலும்நேரிடும்: வந்தால்-
(அங்ஙனம்) வந்தால், அணிதரு-(கண்களுக்கு) அழகு தருகின்ற, நஞ்சு
தோயம்-விஷமுள்ள சுனைநீரை,அருந்தஉம்கூடும் – பருகுதலும்
நேரிடலாம்,’என்னா- என்று (பின்னும் மனத்தினுள்) எண்ணி,
(வீமசேனன்),-பருமணல் ஏட்டில்-பருத்த மணலாகிய ஏட்டிலே, கையால்-
கையினால்,துணிவு-(தன்)துணிபை, உற-நன்கு விளங்குமாறு, எழுதி-,
பணியுடன்-(தருமபுத்திரனது)கட்டளையினாலே,செய்வான்போல-
தொழில்செய்வபன்போல, அந்த தோயம்ஏ-அந்தச்சுனையின்நீரையே,
தானும்-,துய்த்தான் – பருகினான்;
வீமசேனன்தான் நச்சுச்சுனையின்நீரைப்பருகிய காரணத்தை
அச்சுனையின்கரையிலுள்ளமணலாகிய ஏட்டில் விளக்கமாக எழுதிவிட்டுத்
தான்மாத்திரம் பிழைத்திருப்பதில் பயன் இல்லைஎன்ற கருத்தால் தானும்
அந்தச்சுனையின்நச்சுநீரைமிக்கமகிழ்வொடு பருகினானென்க.வீமசேனன்
நச்சுநீரைப்பருகியது தருமபுத்திரனுடைய கட்டளைஆகாதிருக்கவும்,
எப்போதும் தருமபுத்திரனுடையபணியைத் தவறாமல்செய்கின்ற அவ்வீமன்
இப்போதுமணலேட்டில் தன் துணிபையெழுதிவிட்டு நச்சுநீரைப்பருகியது,
அந்தத்தருமன் பணியை உடனேசெய்ததுபோலத் தோன்றிய தென்பார்
‘பணியுடன்செய்வான்போல…தோயமே தானுந் துய்த்தான்’என்றார். கீழ்
‘முன்துணைவன்கானில்முடிந்திடும்’என்று கூறிய வீமன் அவ்வாறு
முடிந்திடாவிடின் இங்கேவருதலும் சுனைத்தோயத்தைப்பருகுதலும்
கூடுமென்கின்றானென்க. வருதலும், அருந்தவும் என்ற உம்மைகள் –
ஐயப்பொருளோடுஎச்சப்பொருளுமுடையன
பொருப்பினும் வலிய கொற்றப் புயமுடை வீமன் என்றால்,
அருப்புடை அறலின் நஞ்சம் அஞ்சுமோ? ஆலம் என்னும்
உருப்பினை அறிந்தும், வாரி உண்டு, தன் உயிரும் வீந்தான்;
நெருப்பினும், சொல்லின், நா வேம்; நினைப்பினும், நெஞ்சம் வேமால்.31.கவிக்கூற்று.
பொருப்பின்உம்-மலையைக்காட்டிலும்,வலிய-வலிமை பெற்ற,
கொற்றம்-வெற்றியைத்தருகின்ற, புயம் உடை-புயத்தையுடைய, வீமன்
என்றால்-வீமனானாலும்,-அரும்புஉடை-சுரக்குந் தன்மையையுடைய,
அறலின்-நீரிலேயுள்ள, நஞ்சம்-விஷம், அஞ்சும் ஓ-பயப்படுமோ? ஆலம்
என்னும்-விஷமென்கிற, உருப்பினை-அஞ்சத்தக்கவெம்மையானபொருளை,
அறிந்துஉம்-தெரிந்திருந்தும்,-[அந்நீரில்நஞ்சமுள்ளதென்பதை
உணர்ந்திருந்தும்],-(வீமன்),-வாரிஉண்டு-அத்தண்ணீரைப் பருகி,
தன்உயிர்உம்-,-வீந்தான்-அழியப்பெற்றான்: சொல்லின்உம் –
(இவ்விஷயத்தைச்) சொன்னாலும்,(சொல்லுகிற நமக்கு), நெருப்பின் –
நெருப்பினால்வேவதுபோல, நா வேம் – (சொல்லுகின்ற) நாக்கும்
வெந்திடும்: நினைப்பின்உம்- (இந்நிகழ்ச்சியை) நினைத்தாலும்,
நெஞ்சம்வேம் – (நினைக்கின்ற)மனமும் வேகும்;(எ-று.)
தண்ணீரில்லாக்காட்டில் நீதிநெறி தவறாதபாண்டவர்களில் தருமன்
சகதேவன் நகுலன் அருச்சுனன் வீமன் என்கிறஇவர் அலைச்சற்பட்டு
நீர்வேட்கை விஞ்சியதும், இவர்களில் சகதேவன்முதலியோர்
ஒவ்வொருத்தராய் நச்சுநீரை யுண்டுஉயிரொழிந்ததும் ஆகிய
இந்தச்செய்தியைச் சொல்லுதலும் நினைத்தலும்பெருந்துயரை
விளைக்குமென்று,கவி, தம்நிலையைக்கூறும்முகத்தால் அப்பாண்டவர்களின்
நிலையைவிளக்குகின்றாரென்க. அருப்புஉடை- அருமையையுடைய
என்பாருமுளர். அறலின்றாகமஞ்சுமோஎன்றும் பாடம்.
ஆர் உயிர் பொன்றும்காலை, அமுதமும் விடமாம்!’ என்று
பார் உளோர் உரைக்கும் மாற்றம் பழுது அறப் பலித்த காலை,
மாருதி முதலா உள்ள மன்னவர் நால்வர்தம்மோடு
ஓர் உயிர் ஆன மற்றை ஒருவனே ஒருவன் ஆனான்.32.-வீமன்முதலியநால்வரும் உயிரொடுங்க,
தருமன் தனிப்பட்டவனாதல்.
ஆர்உயிர் – அருமையான உயிர், பொன்றும் காலை-
இறத்தற்குரிய சமயத்தில், அமுதம்உம் – அமிருதமும், விடம் ஆம்-
விஷம்ஆகும்,’என்று-,பார்உளோர் – பூமியிலிருப்பவர், உரைக்கும் –
கூறுகின்ற, மாற்றம் – சொல்லானது, பழுது அற – தவறுதலாகாதபடி, பலித்த
– பயனைவிளைத்த,காலை- இந்தப்போதில்,-மாருதிமுதல் ஆ உள்ள –
வாயுவின் குமாரனானவீமசேனனைமுதலாகவுடைய,மன்னவர்
நால்வர்தம்மோடு – ராஜகுமாரர்கள் நால்வரோடு, ஓர் உயிர் ஆன-
ஒரேஉயிராகவுள்ள, மற்றை ஒருவனே-எஞ்சி நின்ற தருமபுத்திரன் ஒருவனே,
ஒருவன் ஆனான்- தனிப்பட்டவனானான்;(எ-று.)
முரலிரண்டடிகளால், சகதேவன் முதலிய மூவர்போலவேவீமசேனனும்
இறந்தானென்று குறிப்பித்தவாறு. ‘மன்னவர்நால்வர்தம்மோடோருயிரான
மற்றையொருவன்’என்ற தொடர்-தருமபுத்திரன் தன் தம்பியரைத்
தன்னுயிர்போலக் கருதியிருந்தமையைத் தெரிவிக்கும். ‘அளவுக்குமிஞ்சினால்
அமுதமும் விஷமாம்’என்பதுபோல, ‘ஆருயிர்பொன்றுங்காலைஅமுதமும்
விடமாம்’என ஒரு லோக வசனமும் உண்டுபோலும். அமுதம் என்பது –
தேவர்உணவாகிய சாவா மருந்து. நீரே உயிர்நீக்கும் விஷமாயிற்று என்க
கட்புலனாக வேறு ஓர் யோனியும் காண்கலாத
வெட்புலம்தன்னில் சோகம் மிஞ்சவே, தாகம் விஞ்சி,
உள் புலன் அழிந்து, பின்போம் உள்ளமோடு உயங்கி வீழ்ந்தான்-
நட்பு உலந்தவரால் முன்னம் கானகம் நண்ணினானே.33.-தருமபுத்திரன்சோகமும் தாகமும் விஞ்சிச்
சோர்ந்துவிழுதல்.
நட்புஉலந்தவரால் – சிநேகத்தன்மை கெட்டவரான
துரியோதனாதியரால்,முன்னம் – முன்பு, கானகம் -காட்டை, நண்ணினான்-
அடைந்தவனாகியதருமபுத்திரன்,-(நீர்கொணரச்சென்ற தம்பியர் எவரும்
மீண்டுவராமையால்), கண் புலன் ஆக வேறு ஓர் உயிரைஉம் காண்கலாத
வெள் புலம்தன்னில் – கண்ணுக்கு விஷயமாக வேறு ஒரு பிராணியையும்
காணமுடியாத வெளியானஇடத்தில், சோகம் மிஞ்ச-துன்பம் அதிகரிக்க,
தாகம் விஞ்சி-தாகமும் அதிகரித்து, உள் புலன் அழிந்து – உள்ளே
யிருக்கும் புலனாகியஅறிவு கெட்டு, பின் போம் – இனி அழியப்போகின்ற,
உள்ளமோடு – மனத்துடனே, உயங்கி – தளர்ந்து, வீழ்ந்தான் –
உயிரொடுங்கிவிழுந்தான்;(எ-று.)
போனதம்பியர்எவரும் வராமையாலும், அன்னார்க்குநிகழ்ந்த
நிகழ்ச்சியைக் கண்டு வந்துசொல்ல ஒருவரையும் காணாமையாலும்,
வெட்டவெளியான அந்தக்காட்டில், தருமபுத்திரனுக்குச் சோகத்தோடு
தாகமும் விஞ்சி உட்புலனொடுங்கித்தளர்ந்துவீழ்ந்தா னென்க.
உட்புலனழிந்தால் பின்புஉள்ளமும்போம் ஆதலால், ‘உட்புலனழிந்தபின்
போம்உள்ளமும்’என்றது. துரியோதனன் சூழ்ச்சியால் பாண்டவர்
காட்டையடைந்தமை, வெளிப்படை.
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில், எரி செய் ஓமத்து
ஆங்கு அவண் எழுந்த பூதம், அம் முனிதன்னை நோக்கி,
‘பாங்குடன் புரியும் ஏவல் பணித்தருள்!’ என்ன, நெஞ்சில்
தீங்கு இலா முனியும் பூத அரசுடன் செப்புவானே:34.-வேள்வியில்தோன்றிய பூதம் தான் செய்யவேண்டிய
பணியைக் கூறுமாறுகாளமாமுனியைக் கேட்டல்.
ஈங்கு- இவ்விடத்தில், இவர் – இந்தபாண்டவர், உயங்கி –
உயிர் சோர்ந்து, வீந்த – அழிந்த, எல்லையில்-சமயத்தில்,-ஆங்கு –
(துரியோதனனுள்ள) அவ்விடத்தில், அவண்-அப்போது, எரி செய் ஓமத்து
[ஓமம்செய் எரியத்து]-ஓமஞ்செய்கின்றஅக்கினியினின்றும், எழுந்த –
கிளம்பிய, பூதம் – பூதமானது,-அமுனி தன்னைநோக்கி –
அந்தக்காளமாமுனியைப் பார்த்து, ‘பாங்குடன்- இனிதாக, புரியும் -(நான்)
செய்யவேண்டிய, ஏவல் – கட்டளையை, பணித்தருள்-சொல்லியருள்வாய்,
‘என்ன-என்று கேட்க-,இநெஞ்சில்தீங்கு இலா முனிஉம் – மனத்திற்குற்றதில்லாத
அந்தக் காளமாமுனிவனும், பூதம் அரசுடன்-(வேள்வித்தீயினின்றும் தோன்றிய)
அந்தப்பூதராசனுடனே, செப்புவான் – (பின்வருமாறு) கூறுபவனானான்;(எ-று.) –
காளமாமுனிவன் செப்பியதை மேற்கவியிற் காண்க. பாண்டவரின்
நிலையையறியாதமுனிவ னென்பார் ‘நெஞ்சிற்றீங்கிலாமுனி’ என்றார்
நின்றிடாது, இமைப்பில், குந்தி மைந்தராய் நெடிய கானில்
துன்றிடா வைகும் வேந்தும் துணைவரும் இருந்த சூழல்
சென்றிடா, ஒன்றாய் ஐந்து செயற்கையாம் உடலைச் சேரக்
கொன்றிடா, வருதி!’ என்று கூறிய உறுதி கேளா35.-காளமாமுனிவன்கட்டளையிடப்பூதம்கேட்டல்.
இதுவும்,அடுத்தகவியும் – குளகம்.
(இ-ள்.)’நின்றிடாது-(இங்கே)தாமதித்துநில்லாமல், இமைப்பில் –
கண்ணிமைக்கும்நேரத்திற்குள், நெடிய கானில் – கொடியகாட்டிலே,
துன்றிடா-சேர்ந்து,-குந்திமைந்தர் ஆய் வைகும்-குந்தியின் புத்திரராய்
(அங்கு)த் தங்கியிருக்கின்ற, வேந்துஉம் – தருமபுத்திரராசனும், துணைவர்உம்
– அவன்தம்பியரான வீமன்முதலியோரும், இருந்த – வாழ்கிற, சூழல் –
இடத்திலே, சென்றிடா-போய், ஒன்று ஆய்-(உயிர்) ஒன்றாகி,ஐந்துசெயற்கை
ஆம்உடலை-ஐந்துசெயற்கையாகவுள்ளஉடலை,சேர – ஒருசேர,
கொன்றிடா-கொன்றிட்டு, வருதி-(மீண்டு) வருவாயாக,’என்று-,கூறிய-
சொல்லிய, உறுதி-உறுதியானசொல்லை,கேளா-கேட்டு,-(எ-று.)-“பூதம்
முனியை நோக்கி***எனத்தொழுதேகிற்றன்றே”என அடுத்த கவியோடு
தொடர்ந்து முடியும்.
ஒன்றாய்ஐந்து செயற்கையாம்உடல்-பஞ்சபாண்டவர்க்கும் உயிர்
ஒன்றேயாயினும் உடல்ஐந்தாகி யமைந்திருக்கின்றன என்றவாறு.
ஐம் பெரும் பூதம் ஒக்கும் அப் பெரும் பூதம் சாதிச்
செம் பொனின் ஒளிரும் மேனித் தெய்வ மா முனியை நோக்கி,
‘வெம்பு கான் உறைவோர், இன்று, என் விழிக்கு இலக்கு அல்லர்ஆனால்,
எம்பிரான்! நினையே கொல்வன்’ எனத் தொழுது ஏகிற்று அன்றே.36.-பூதம்தன்துணிபை முனிவனிடங்கூறிவிட்டு,
முனிவன் கட்டளையைச்செய்யுமாறு செல்லுதல்.
ஐ பெருபூதம் ஒக்கும் – பஞ்சமஹா பூதங்களையொத்திருக்கி
[பெருந்தோற்றமுடைய], அ பெரு பூதம்-அந்தப் பெரிய பூதமானது, சாதி
செம்பொனின் ஒளிரும்-உயர்தரமானசெம்பொன் போல் விளங்குகின்ற,
மேனி-உடம்பையுடைய, தெய்வம் மா முனியை நோக்கி –
தெய்வத்தன்மையுள்ள (அந்தக்) காளமாமுனிவனைப்பார்த்து, ‘வெம்பு கான்
உறைவோர் – பற்றியெரிகின்ற காட்டில் வசிப்பவரான பாண்டவர், இன்று-
இப்போது, என் விழிக்கு-என் கண்ணுக்கு, இலக்குஅல்லர் ஆனால்-
தென்படுகிறபொருளாக ஆகாமற்போனால்,எம்பிரான்-எமது தலைவனே!
(நான்), நினைஏ கொல்வன் – உன்னையேகொல்வேன்,’என-என்று, தொழுது-
கைகூப்பிவணங்கி, ஏகிற்று – (பாண்டவரை நாடிச்) சென்றது;(எ-று.)-
அன்றே-ஈற்றசை;தேற்றமுமாம்.
அபிசாரவோமஞ்செய்து வேள்வியினின்று எழுப்பப்பட்டதாதலால்
‘என்னாற்கொல்லப்படவேண்டியவர் கண்ணுக்கு அகப்படா விட்டால், என்
வருகை வீணாகப்போகப்படாதாதலால் நான் உன்னையேகொல்வேன்’
என்று அந்தப்பூதம் சொல்லிற் றென்க. பெருந்தோற்றமுடைமைபற்றி,
ஐம்பெரும்பூதங்கள் வேள்விப்பூதத்திற்கு உவமையாயின. வலிமைபற்றிவந்த
உவமை யென்றலும் ஒன்று. சாதிச் செம்பொன்-மாற்றுயர்ந்த சிறந்த பொன்.
காளமாமுனிவன்மேனி தங்கம்போல் ஒளிர்கின்ற தென்க. இலக்கு-இங்கே,
கண்ணுக்குப் புலனாகும்வஸ்து என்ற பொருளில் வந்தது
காட்டுறு கோடை வெப்பம் களைகுவான், கரிய மேகம்
மோட்டு உருக்கொண்டு, மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி,
தோள் துணை புடை கொண்டு, எங்கும் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி,
காட்டுறை வாழ்க்கையானைக் கண்ணுறக் கண்டது அன்றே.37.-பூதம்சென்று தருமபுத்திரனைக்காணுதல்.
கரியமேகம் – கருநிறமுள்ள மேகமானது, காடு உறு –
காட்டிலே பொருந்திய, கோடை வெப்பம் – வெயிலின் வெப்பத்தை,
களைகுவான்- போக்கும்பொருட்டு, மோடு உரு கொண்டு – பருத்த
உருவத்தைக் கொண்டு, மின்னால்முளைத்தஎழும் எயிறு தாங்கி –
மின்னல்மயமாய் முளைத்துத்தோன்றியகோரப்பற்களைத்தாங்கி, தோள்
துணைபுடைகொண்டு-இரண்டுதோள்களிலும் புடைத்தலைக்கொண்டு,
எங்குஉம் சூறைபோல் மரங்கள் வீழ்த்தி-எல்லாவிடத்திலும்
பெருங்காற்றுப்போல மரங்களைவிழச்செய்துகொண்டு, காடு உறை
வாழ்க்கையானை- காட்டிலேவாழ்கின்ற வாழ்க்கையை யுடையவனாகிய
தருமபுத்திரனை,கண்-கண்களினால்,உற கண்டது-பொருந்தப் பார்த்தது;
(எ-று.)-அன்றே-ஈற்றசை.
பூதத்தை,மேகமாகஉருவகஞ்செய்தார். காட்டிலே கருநிறமுள்ள பூதம்
விளங்கும் எயிறுகளைத்தாங்கியவாறு தோள்களைத்தட்டிக் கொண்டு
மரங்களைவீழ்த்தியவண்ணஞ் சென்றது, கரியமேகம் மின்னலைத்தாங்கி
இடியிடித்துப் புயற்காற்றால்மரங்களைவீழ்த்தியவண்ணம் வந்ததுபோலு
மெனக் கருத்துக் காண்க. உருவகவணியை அங்கமாகக்கொண்டுவந்த
தன்மைத்தற்குறிப்பேற்றவணி: இங்ஙனம், வேள்வியிலெழுந்த பூதத்தைக்
கரியமேகமாக உருவகஞ்செய்தற்குக் காரணங் கூறுவார் ‘காட்டுறுகோடை
வெப்பங் களைகுவான்’என்றார். துரியோதனனேவலால் கானகத்துப்
பாண்டவர்க்கு நேரவிருந்தகொடுமையை இப்பூதம் போக்கியது காண்க.
கோடை – குடக்குஎன்ற பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
முதுவேனிலில் கோடைக்காற்று [=மேல்காற்று]வீசுதலால், அக்காலம்
கோடைக்காலமெனப்பட, பிறகு, கோடை-இலக்கணையால்,
வெயிலைக்காட்டிற்றென்னலாம்.
அந்தணன் சொன்ன வேந்தர் ஐவரில், அறனால் வந்த
மைந்தன் மற்று இவனே, ஆவி மாய்ந்ததோர் வடிவன் ஆகி,
சந்தன தருவில் சார்ந்து, சாய் முடித் தலையன் ஆகி,
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின் வடிவு சோர்ந்தான்.38.-சாய்ந்துகிடந்ததருமனைக்கண்ட பூதம் கருதியது.
இதுமுதல் ஏழுகவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.)அந்தணன் – காளமாமுனிவன், சொன்ன-(கொன்றிடுமாறு)
சொல்லிய, வேந்தர் ஐவரில்-பஞ்சபாண்டவருள், அறனால்வந்த மைந்தன்
இவனே-யம தருமனால்தோன்றியமைந்தனாகியஇந்தயுதிஷ்டிரனே, ஆவி
மாய்ந்தது ஓர் வடிவன் ஆகி – உயிரொழிந்ததாகிய ஒருவடிவத்தை
யுடையவனாய்,சந்தனம் தருவில் சார்ந்து – சந்தனமரத்திலே சாய்ந்து, சாய்
முடி தலையன்ஆகி-தொங்கிய கிரீடமணிந்த தலையையுடையவனாய்,
மந்திரம் மறந்த விஞ்சை மாக்களின்-(பலவகைவித்தைகளையுஞ்செய்யும்
வல்லமையையுண்டாக்கவல்ல) மந்திரத்தை மறந்த வித்தியாதரரைப்போல,
வடிவுசோர்ந்தான்-(தன்) உடல் சோர்ந்துகிடப்பானானான்;(எ-று.)-மற்று-
அசை.
‘அந்தணன்’என்று தொடங்கும் இந்தச்செய்யுள்முதல், அடுத்த
செய்யுளில் “மற்றிங்கென்செய்வேன்”என்பதுவரையில், பூதம் தன் மனத்துள்
முதன்முதல்எண்ணியதைத் தெரிவிக்கும். காளமாமுனிவன்
கொல்லுமாறுஏவிய பஞ்சபாண்டவருள் பிரதானனாகியதருமபுத்திரனே
ஆவிமாய்ந்தாற்போன்றவடிவினனாயிருத்தலைஅப்பூதம் கண்டு
எண்ணியவகையைக் காட்டுவது, இது. தருமன்மாய்ந்தாற்
போன்றிருக்கும்போது சந்தனதருவிற் சார்ந்து கொண்டிருந்தமை, இதனால்
அறியப்படும். ஆவிமாய்ந்தவடிவினன் ஆனதால், தருமபுத்திரனுடைய
முடித்தலைசாய்ந்திருந்த தென்க.
சிறந்த மெய்ந் நிழல்போல் சூழும் துணைவரும் சேர விட்டுத்
துறந்தனர் போலும்; யாண்டும் துப்பு இலா வெப்பம்தன்னால்
இறந்தனன் இவனும்; மற்று இங்கு என் செய்வேன்?’ என்று என்று எண்ணி,
நிறைந்த நீர்ச் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா,39.-தருமன்இறந்துபோனமைக்குஇரங்கிப் பின்பு, பூதம்
வீமன்முதலியோர்இறந்துகிடத்தலைக்காணுதல்.
சிறந்த மெய் நிழல் போல்-சிறப்பான உடம்பின்நிழல் போல,
சூழும் -(விடாமற்)சூழ்ந்திருக்குந்தன்மையுள்ள, துணைவர்உம்-(வீமன்முதலிய)
தம்பிமார்நால்வரும், சேர-ஒருசேர, விட்டு துறந்தனர் போலும்-
(இந்தத்தருமபுத்திரனை)விட்டுஅப்பாற்சென்றனர் போலும்: மற்று-பின்னும்,
இவன்உம்-இந்தத்தருமபுத்திரனும், யாண்டுஉம் துப்பு இலாவெப்பம் தன்னால்
– எங்கும்(தனக்கு)ஒப்பில்லாத வெப்பத்தினால்,இறந்தனன்-உயிர்
ஒடுங்கினான்போலும்;இங்கு-இப்போது,என் செய்வேன்-என்னசெய்யவல்லேன்?
என்று என்று எண்ணி – என்றுஇவ்வாறுபலமுறை ஆலோசித்து,-(பின்பு
அந்தப் பூதம்),-நிறைந்த நீர் சுனையின்- நிறைந்த நீரைக்கொண்டசுனையின்
கரையில், மற்றை நிருபர் நால்வரைஉம் காணா- தருமபுத்திரனினும் வேறான
(வீமன்முதலிய) நான்கு ராஜகுமாரர்களையுங்கண்டு,- (எ-று.) இச்செய்யுளிலுள்ள
‘காணா’ என்றஉடன்பாட்டெச்சம், நாற்பத்தோராங்கவியில், ‘என்றுமூண்டுமீண்டு’
என்று தொடரும்.
தருமபுத்திரன்தனியே உயிரொடுங்கி வீழ்ந்துகிடந்ததைக் கண்ட பூதம்,
தம்பிமார்கள் இவனைவிட்டுத் துறந்துசென்றாரென்றும், வெப்பத்தினால்
இந்தத்தருமபுத்திரனும் இறந்திட்டா னென்றும் முதன்முதல் கருதிற்று;பின்பு,
பாண்டவரைக் கொல்லுமாறு வந்த தாதலால், ‘பாண்டவர்களுள்மூத்தவனான
தருமபுத்திரன் இறந்துவிட்டானாக,மற்றை நால்வரையாவது கொல்வோ
மென்றால்அவர்களும்இவனைவிட்டுச்சென்றனரே! இப்போது யான்
என்செய்வது?’என்று பெரிய விசாரம் அடைந்துதிரிந்தது:அந்தநிலையில்,
பின்பு சுனைக்ரையில்,வீமன்முதலிய நால்வரும் இறந்து வீழ்ந்து
கிடத்தலைக்கண்ட தென்க. உடம்பின்நிழல் அதனைவிட்டுநீங்காது
உடனிருத்தல்போல்வீமன்முதலிய நால்வரும் தருமபுத்திரனைவிட்டுநீங்காது
உடனிருப்பவ ராதலால், ‘மெய்ந்நிழல்போற்சூழுந் துணைவர்’என்றது
பச்செனும் புனலால் மிக்க பங்கயச் சுனையும், கொல்லும்
நச்சு வெஞ் சுனையே போலும்! நால்வரும் சேர மாண்டார்,
இச் சுனை அருந்திப் போலும்! என் நினைந்து ஏது செய்தார்!
நிச்சயம்; கொடிது; கெட்டேன்! இந்த நிட்டூரம் என்னோ!40.-பாண்டவர்கள்மாண்டுகிடந்தமைக்குப் பூதம்
வருந்துதல்.
பச்செனும் புனலால்-குளிர்ந்திருக்கிற நீரினால்,மிக்க-
மிகுந்துள்ள, பங்கயம் சுனைஉம்-தாமரையையுடையஇந்தச்சுனையும்,
கொல்லும்-(மனிதர்களைக்)கொல்லுகின்ற,நஞ்சு-விஷத்தோடுகூடிய, வெம்
சுனையேபோலும்-வெப்பமுள்ள சுனையென்றேதோன்றுகிறது:நால்வர்உம் –
(வீமன்முதலிய)நால்வரும், சேர-ஒருசேர, மாண்டார்-இறந்திட்டார்:
(அங்ஙனம் இறந்தது), இ சுனை-இந்தச்சுனைநீரை, அருந்தி போலும்-
பருகியதனால் நேர்ந்ததுபோலும்: என் நினைந்து ஏது செய்தார்-எந்தச்
செயலையெண்ணி ஏதுசெய்தார்கள்?கொடிது-(இப்போது நிகழ்ந்த
செயல்)கொடுமையானது: நிச்சயம்-திண்ணம்: கெட்டேன்-; இந்த நிட்டூரம்-
இந்தக்கொடுமைநிகழ்ந்தது,என்னோ-எவ்வாறோ?(எ-று.)-பாண்டவர்நால்வர்
சுனைக்கரையில்இறந்து கிடத்தலைக்கண்டதும் பூதம் தன்னுள்நினைப்பதை,
“பச்செனும்”என்றஇச்செய்யுள் தொடங்கி,அடுத்தசெய்யுளில்”கேவலம்
அல்ல”என்பதுவரையிலுள்ள பகுதி தெரிவிக்கும்.
சுனைக்கரையில்,வீமன்முதலிய நால்வரும் ஒருசேர இறந்து
வீழ்ந்துகிடத்தலைக்கண்டதனால்,பூதம், அங்குள்ள சுனைநச்சுச்சுனை
என்றும், அந்நீரைப்பருகியதனால்வீமன்முதலிய நால்வரும் இறந்திருக்க
வேண்டும்என்றும் கருதிற்றென்க. இங்ஙனம் நச்சுநீரைப் பருகி
வீமன்முதலிய நால்வர் இறந்தமைக்குக் காரணம் தெரியாமையால்,
‘என்னினைந்துஏதுசெய்தார்’என்றது,அப்பூதம். மனத்திற்கு
விருப்பந்தராதசெயலைக்கண்டவிடத்து, ‘கெட்டேன்’என்று சொல்வது ஒரு
சொல்விழுக்காடு:இச்சொல்-அதிசயத்தோடு இரக்கத்தையும் காட்டும்:
“கேளாராயர்குலத்தவரிப்பழிகெட்டேன் வாழ்வில்லை”என்ற
பெரியார்பாசுரத்தையுங் காண்க. பச்செனல்-குளிர்ந்திருத்தற் குறிப்பு.
பங்கயம்=பங்கஜம்:சேற்றில்முளைப்பதுஎனத் தாமரைக்குக் காரணவிடுகுறி.
‘சுனையும்’என்றஉம்மை, கதைப்போக்கைத் தழுவி வந்தது. நால்வரும்,
உம்மை-முற்றுப்பொருளது. மூன்றாம்மடியில்,சுனை-சுனைநீருக்கு,
இலக்கணை. நிச்சயம், நிட்டூரம்=நிஸ்சயம், நிஷ்டூரம்என்ற வடசொற்களின்
திரிபுகள்.
காவலன் வார்த்தை கேட்டுக் காளமாமுனிவன் என்னும்
நாவலன், ஓமத் தீயில் நம்மை உற்பவித்து விட்டான்;
மேவலர் கொல்லும் முன்னே வீந்தனர்; இந்தப் பாவம்
கேவலம் அல்ல’ என்று கிளர் சினம் மூண்டு, மீண்டே,41.-பிறகு, பூதம்தன்னாற்கொல்லப்படவேண்டிய
பாண்டவர் இறந்துவிட்டமையால், சினம்மூண்டு
காளமாமுனிவனிடம்மீண்டுவருதல்.
காவலன் வார்த்தை கேட்டு – துரியோதனனுடைய
வார்த்தையைக்கேட்டு, காளமாமுனிவன் என்னும் நாவலன்-காளமா
முனிவனென்று சொல்லப்படுகிற புலவன், ஓமம் தீயின்-ஓமஞ்செய்யப்படுகிற
வேள்வித்தீயினின்று, நம்மை உற்பவித்து-நம்மை உண்டாகச்செய்து,
விட்டான்-அனுப்பினான்;(பாண்டவர்களோ), மேவலர் கொல்லும் முன்னே-
பகைவர் கொல்லுதற்குமுன்னமே, வீந்தனர்-இறந்தார்:இந்த பாவம் –
(குற்றமற்றவரைக் கொல்லவேண்டு மென்றுசெய்த) இந்தப்பாவச்செயல்,
கேவலம் அல்ல – சாமானியமானதன்று, என்று-என்று எண்ணி, கிளர் சினம்
மூண்டு – பொங்கும்சினம் மூளப்பெற்று, மீண்டு – (காளமாமுனிவனிடம்)
திரும்பிச் சென்று,-(எ-று.)-இந்தச்செய்யுளிலுள்ள ‘மீண்டு’என்ற இறந்த
காலவினையெச்சம்,மேல் 44-ஆம் கவியிலுள்ள “என்று”என்பதனோடு
இயையும்.
வேதம்வல்லவனாதலால்,காளமாமுனிவன் ‘நாவலன்’எனப்பட்டான்.
கொடியஒருவனது சொல்லைக்கேட்டுப் பிறரைக்கொல்லுமாறு
அபிசாரவோமஞ்செய்வது கொடிய தீவினையேயாகுமாதலால்,பூதம்
‘இந்தப்பாவம்கேவலமல்ல’என்று கூறிற்று. இங்ஙனம் தீச்
செயலைச்செய்தானென்பதுபற்றியே,அந்தப்பூதம் முனிவனிடம் கிளர்சினம்
மூண்டது.
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள்! நீ கலக்கம் எய்தி,
ஞாலம் கொள் நசையின், இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு,
சீலம் கொள் வாய்மையாய்! செந் தீ எழு கானில் சில் நீர்
ஆலம்கொல் பான்மையாரை யார் கொல்வான் அருளிச் செய்தாய்?42.-இரண்டுகவிகள்-பூதம்காளமாமுனிவனைக்கடிந்து
கூறுதலைக்தெரிவிக்கும்.
மூன்றுகவிகள் -ஒருதொடர்.
(இ – ள்.)சீலம் கொள் வாய்மையாய் – நல்லொழுக்கத்தைக்
கொண்டுள்ள சத்தியமுடையவனே! இல்லா நயனிதன் – இல்லாத
கண்களையுடையவனாகிய [கண்ணில்லாதவனாகிய]திருதராஷ்டரனுடைய,
மகன் – மகனாகியதுரியோதனன்,ஞாலம் கொள் நசையின்-
பூமியைக்கொள்ளவேணும் என்கிற விருப்பத்தினாற் கூறிய, சொல்-சொல்லை,
கேட்டு – செவியேற்று, காலங்கள் மூன்றுஉம் – (இறப்பு எதிர்வு நிகழ்வு
என்னும்)மூன்றுகாலங்களிலும் நிகழும் வரலாறுகளையும்,எண்ணும்-
ஆராய்ந்து அறியவல்ல, கடவுள்-தெய்வத்தன்மையுடையவனாகிய,நீ-,
கலக்கம் எய்தி-கலக்கமடைந்து, செம் தீ எழுகானில் – செந்நிறமுள்ள
நெருப்புப்பற்றியெரிகின்றகாட்டிலே, சில் நீர் ஆலம்-சிறிதாகிய
நீரில்[சுனையில்]கலந்துள்ளவிஷத்தினால்,கொல்-கொல்லப்பட்ட,
பான்மையாரை-தன்மையையுடையபாண்டவர்களை,யார்கொல்வான்
அருளிச்செய்தாய் – யாரைக் கொல்லும்படி கூறியருளினாய்-?(எ-று.)
‘எவரையாவதுகொல்லும்படி ஏவினால்,அங்ஙனம் ஏவப்பட்டவர்
கிடைக்காவிடின், ஏவியவரையே கொல்லுந்தன்மையுள்ள என் போல்வாரை
இறந்தவரைக்கொல்லும்படி நீ ஏவி அனுப்பியது தகுதியன்று’என்ற
கருத்தினால்,’ஆலங்கொல்பான்மையாரையார் கொல்வான்
அருளிச்செய்தாய்’என்றது. ‘நீமூன்றுகாலவரலாறுகளையும்
அறிபவனாயிருந்தும்,என்னைஏவுதற்கு முன்னே ‘பாண்டவர்கள்எவ்வாறு
உள்ளார்கள்?’என்று ஆராய்ந்துபாராமல் துரியோதனன்பேச்சைக் கேட்டுப்
புத்திகலங்கினாய்’என்பதைப் புலப்படுத்த, ‘காலங்கண்மூன்றுமெண்ணுங்
கடவுணீ இல்லாநயனி தன் மகன் சொற்கேட்டுக் கலக்கமெய்தி’என்றது.
ஐவரில் நால்வர் நஞ்சு நீரைப்பருகி யிறந்ததனால்,பெரும்பான்மைபற்றி
‘சின்னீராலங் கொல் பான்மையாரை’என்றது. சில் நீர் – அற்பமான
நீரையுடைய சுனை:அன்மொழித்தொகை.
நயனி-நயனங்களையுடையவன்:வடமொழி. இல்லா நயனி-இல்லாத
நயனங்களையுடையவன்:கண்ணில்லாதவன்என்பது பொருள்;இது,
வடமொழிநடை. மூன்று காலங்கள் – அக்காலங்களில் நிகழும்
வரலாறுகளுக்கு, ஆகுபெயர்.
‘பூண்ட வெள் அரவத்தோடு புனை மதி வேணியார்க்குத்
தாண்டவ நடனம் செய்யத் தக்கது ஓர் தழல் வெங் கானில்
பாண்டவர் தம்மைக் கொல்லப் பணித்தனை; ஒருகால் ஆவி
மாண்டவர், பின்னும் பின்னும் மாள்வரோ? மதி இலாதாய்!
பூண்ட-ஆபரணமாகவணிந்த, வெள் அரவத்தோடு-
வெண்ணிறமுள்ள பாம்போடு, மதி புனை-பிறைச்சந்திரனை(முடிக்கு
அணியாக) அணிந்த,வேணியார்க்கு-சடைமுடியையுடைய சிவபெருமானுக்கு,
தாண்டவம் நடனம் செய்யத்தக்கது-தாண்டவமென்கிற
நர்த்னத்தைச்செய்வதற்குஏற்றதான, ஓர்-(கடுமையில்) ஒப்பற்ற, தழல் வெம்
கானில்-நெருப்புப்போல்வெம்மையான காட்டிலே, பாண்டவர்தம்மை –
பஞ்சபாண்டவர்களை,கொல்ல – உயிர்கவருமாறு, பணித்தனை-
கட்டளையிட்டாய்:மதி இலாதாய் – அறிவுஇல்லாதவனே! ஒருகால் ஆவி
மாண்டவர்-ஒருமுறை ஆவிநீங்கினவர், பின்னும் பின்னும் மாள்வர்ஓ-?
(எ – று.)
சிவபெருமான்தாண்டவநடனஞ்செய்யத்தக்கது என்றதனால்,அந்தக்
கானகம் மயானம்போன்றதென்றபடி. தாண்டவம் – மிருதுவாய் இனிதாக
இருப்பதன்றி, இதற்குமாறாகக்கடுமையாயுள்ளநடனம்.
நீ இதற்கு இலக்கம் ஆகி நின்றனை!’ என்று, கோபத்
தீ எழப் பொடிக்கும் கண்ணும், சிரிப்பு எழும் எயிறும் ஆகி,
மூஇலைச் சூலம்தன்னால் முனிதலை துணிந்து வீழ,
ஏவலில் பழுது இல் பூதம் இவனையே எறிந்தது அன்றே!44.-பூதம்காளமாமுனியைக் கொல்லுதல்.
ஏவலில்-ஏவிய தொழிலைச்செய்வதில், பழுது இல்
தவறுதலில்லாத, பூதம் – பூதமானது, (காளமாமுனியைநோக்கி), ‘நீ-,இதற்கு
– இந்தத்தீவினைக்கு,இலக்கம்ஆகி – குறியாகி, நின்றனை-நின்றாய்,’என்று
– என்றுசொல்லி, கோபம் தீ எழ – கோபாக்கினி பொங்குமாறு, பொடிக்கும்-
தோன்றுகிற, கண்உம் – கண்களையும்,சிரிப்பு எழும் எயிறுஉம் – வெகுளிச்
சிரிப்பு வெளித்தோன்றுகிற பற்களையும்,ஆகி-உடையதாய், மூ(ன்று) இலை
சூலம்தன்னால்-மூன்றுஇலைகளைக்கொண்டசூலாயுதத்தினால்,முனிதலை
துணிந்து வீழ-முனிவனதுதலைதுண்டுபட்டுக் கீழ் விழும்படி, இவனைஏ-
இந்தக்காளமாமுனிவனையே,எறிந்தது – வெட்டியது;(எ – று.)- அன்றே-
தேற்றம்.
இலக்கம்-லக்ஷ்யம்:இது, ‘இலக்கு’எனவும் திரிந்துவரும். சிரிப்பு-
இங்கே, வெகுளிச்சிரிப்பு. நீ இதற்கு இலக்கம் ஆகி-நீ இந்தப் பூதத்திற்கு
(வீழ்த்தவேண்டிய) குறிப்பொருளாகி எனினுமாம்:இப்பொருளில், பூதம்
‘இதற்கு’என்று தன்னைப்படர்க்கையாகப்பேசிற்றென்க.
எறிந்து, அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க, கானில்
செறிந்த மா முனிவர் யாரும் தேவரோடு இரங்கி ஆர்ப்ப,
அறிந்தவர் அவனி ஆளும் அரசனை வெறுக்க, தம்மில்
பிறிந்தவர் மீண்டும் ஆவி பெற்றவா பேசக் கேண்மோ:45.-பூதம்ஓமகுண்டத்திலொளிக்க, பாண்டவர் உயிர்
பெற்றதைக்கேள்என்று கதைகூறுபவர் சொல்லுதல்.
எறிந்தது – (முனிவனைச்சூலத்தால்) தலையெறிந்தபூதம்,
மீண்டும்-, ஓமம் எரி இடை ஒளிக்க – ஓமாக்கினியிலேமறைந்து விட,
கானில் – காட்டினிடையிலே, செறிந்த – நெருங்கிய, மாமுனிவர் யார்உம் –
சிறந்தமுனிவர்களெல்லாரும், தேவரோடு-தேவர்களுடனே, இரங்கி – வருந்தி,
ஆர்ப்ப-கதறவும்,-அறிந்தவர்-(துரியோதனன் செயலே இவர்களிறப்புக்குப்
பரம்பரைக்காரணம் என்று) அறிந்தவர்கள், அவனி ஆளும் அரசனை-
பூமியை ஆட்சி புரியும் அரசனாகியதுரியோதனனை,வெறுக்க-வெறுக்கவும்,
தம்மில் பிறிந்தவர்- தம்முடம்பினின்று உயிர்நீங்கப்பெற்ற அப்பாண்டவர்,
மீண்டுஉம் – மறுபடியும், ஆவி பெற்ற ஆ – உயிர்பெற்றவகையை, பேச –
சொல்ல, கேள்-கேட்பாயாக;(எ-று.)-மோ-முன்னிலையசை.
இது,பாரதகதையை ஜநமேசயமகாராசனுக்குக் கூறும் வைசம்
பாயனரின்கூற்றாகஅமைந்துள்ளது:இனி, ‘கேண்மோ’என்பதில் ‘மோ’
என்பதை முன்னிலையசையாகக்கொள்ளாமல்,’ஓ’அசை எனக்கொண்டு,
பாரதகதையைப்படிப்பவரைக்குறித்து நூலாசிரியர் கேண்ம்[கேளுங்கள்]எனக்
கூறுகின்றாருமாம். ‘ஆர்ப்ப”வெறுக்க’என்றசெயவெனெச்சங்கள்,
பிறிந்தவரென்பதிலுள்ள ‘பிறி’என்பதனொடுஇயையும். ‘தம்மிலிறந்தவர்
மீண்டு மாவிபெற்றவா றியம்பக் கேண்மோ’என்றும் பாடம்
மூச்சு அறப் புலர்ந்து உயங்கிய முரச வெங் கொடியோன்
மாச் சினைத் தடஞ் சந்தன மகீருக நிழலில்,
வீச்சுறப் பயில் தென்றலால், மெய் உயிர் எய்தி,
நாச் சுவைப் படு ஞான நல் மந்திரம் நவிலா46.-தருமபுத்திரன்உணர்வை யடைதல்.
இரண்டு கவிகள் – ஒருதொடர்.
(இ – ள்.) மூச்சு அற – மூச்சு இல்லாமல், புலர்ந்து – வாடி, உயங்கிய
– வருந்தின, முரசம் வெம் கொடியோன் – முரசமெழுதிய வெவ்விய
கொடியையுடையனானதருமபுத்திரன், மா சினை-பெரிய கிளைகளைக்கொண்ட,
தட-பெரிய[ஓங்கிவளர்ந்த],சந்தனம் மகீருகம் – சந்தனமரத்தின், நிழலில் –
-நிழலிலே, வீசுஉற – வீசுதல் பொருந்துதலால், பயில் – (உடம்பில்மெல்லப்)
படுகிற, தென்றலால்-தென்றற் காற்றினால்,மெய் – தன்னுடலில், உயிர்-மூச்சை,
எய்தி-அடைந்து, நா சுவை படும் – நாவுக்குச்சுவைத்தல் பொருந்திய, ஞானம்
நல்மந்திரம் – நல்லறிவை வளர்க்கவல்ல மந்திரமாகிய திருவஷ்டாக்ஷரத்தை,
நவிலா – பன்முறை சொல்லி, (எ – று.)-வீட்டி, எய்தி, நினைந்தான்என
அடுத்த கவியோடு முடியும்:ஆதலால், இவை இரண்டும் – குளகம்.
மூர்ச்சையடைந்திருந்த தருமபுத்திரன், சந்தனமரத்தில்நிழலில்
அடிக்கடி தென்றல்வீசுதலால் அந்தமூர்ச்சைதெளிந்து மூச்சுவரப் பெறவே,
ஞானத்தையுண்டாக்கவல்ல மந்திரத்தைச் செபித்தன னென்பதாம்.
சீவாத்மஸ்வரூபம் பரமாத்மஸ்வரூபம் முதலியவற்றை நன்கு தெரிவிப்ப
தாதலால், திருவஷ்டாக்ஷரத்தை ‘ஞானமந்திரம்’என்றாரென்னலாம். இம்
மந்திரம் நாவுக்குச் சுவைக்கு மென்பதை, “எனக்கென்றும்,
தேனும்பாலுமமுதுமாய் திருமால்திருநாமம், நானுஞ்சொன்னேன்
நமருமுரைமின் நமோநாராயணமே”என்ற திருமங்கைமன்னன் பாசுரத்தால்
தெளியலாம்:(‘ராமநாமமேகற்கண்டு,ரஸமறியாதவனே கற்கண்டு’
என்பது,இங்கு ஞாபகத்திற்கு வருகிறது.)
மகீருகம்-மஹீருஹம்:பூமியில் முளைப்பதெனமரத்திற்குக்
காரணக்குறி. தென்றல் – தெற்கிலிருந்து வருங் காற்று. (வடக்கிலிருந்து
வருங் காற்று-வாடை என்றும், குடக்கில்[மேற்கில்]நின்று வருங் காற்று –
கோடையென்றும், குணக்கில் [கிழக்கில்]நின்று வருங்காற்று
கொண்டல்என்றும் கூறப்படும்.) உயிர் – உயிர்ப்பு:முதனிலைதிரிந்த
தொழிற்பெயர்.
இதுமுதல்பதின்மூன்றுகவிகள் – முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிவந்த நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள்.
தனைப் பயந்த நல் தரும தேவதை திருவருளால்
வினைப் பயன்களால் உறு துயர் யாவையும் வீட்டி,
சுனைப் பெரும் புனல் தாகமும் அடிக்கடி தோன்ற,
நினைப்பும் எய்தி, அத் தம்பியர் தம்மையும் நினைந்தான்.47.-தருமன்தம்பியரை நினைத்தல்.
தனைபயந்த – தன்னைப்பெற்ற,நல் – சிறந்த, தரும
தேவதை – யமதருமராசனது, திருஅருளால்-மேன்மையான கருணையினால்,
வினைப்பயன்களால்உறு- தீவினைப்பயன்களால்தோன்றுகிற,
துயர்யாவைஉம் – துன்பங்களையெல்லாம், வீட்டி – ஒழித்து, சுனைபெரு
புனல் தாகம்உம் அடிக்கடி தோன்ற – சுனையிலுள்ளமிக்கநீரைப் பருக
வேணுமென்ற ஆசையும் அடிக்கடி தோன்றாநிற்க,நினைப்புஉம்எய்தி-
முன்னே ஸ்மரணையையும்,அடைந்து,அ தம்பியர் தம்மைஉம் நினைந்தான்
– (நீர்கொணரச்சென்ற) அத்தம்பியரைப் பற்றியும் (பின்பு)நினைப்பிட்டான்;
(எ – று.)
ஸ்மரணையடைந்ததருமபுத்திரன், தாகம் தோன்றாநிற்க,
தம்பியரைநினைத்தானென்க. வீட்டி-இறந்தகாலவினையெச்சம்.
ஆன தன் மன வலியுடன், ஆண்டு நின்று எழுந்து,
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை
போன தம்பியர் சேவடிச் சுவட்டினில் போய், அத்
தூ நிறப் புனல் உண்டு வீழ் துணைவரைக் கண்டான்48.-தருமபுத்திரன்சென்று வீழ்ந்துகிடக்குந் தம்பியரைக்
காணுதல்.
கானகத்திடை நீங்கிய அறன் தரு காளை (நாட்டினின்றும்
வனவாசஞ் செய்யும்படி) காட்டினிடத்துச்சென்ற யமதருமனாற்பெறப்பட்ட
புத்திரனாகியயுதிஷ்டிரன்,-ஆன தன் மனம் வலியுடன்-பொருந்திய
தன்மனத்தின் வலிமையோடு, [மனோதைரியத்தோடு],ஆண்டுநின்று –
அவ்விடத்திலிருந்து, எழுந்து-புறப்பட்டு, போன-(நீர்கொணருமாறு
தன்கட்டளையைப்பெற்றுச்)சென்ற,தம்பியர்-தம்பிமாரின், சே அடி
சுவட்டினில்-பாதம் வைத்த அடையாளத்தின்வழியே, போய்-
தொடர்ந்துசென்று,-அ தூ நிறம் புனல் உண்டு வீழ் துணைவரை-
அந்தச்சுனையின்சுத்தமானநிறத்தையுடைய நீரைப்பருகி
வீழ்ந்துகிடக்கின்றதம்பிமாரை, கண்டான்-பார்த்தான்;(எ – று.)
ஆண்டுநின்றுஎழுந்து என்பதை, கானகத்திடைநீங்கிய என்பதனுடன்
இயைத்துப் பொருள் காண்பாரு முளர். உண்டு என்பதில்,
உண்ணுதலென்றபொதுவினை- சிறப்பாகப்பருகுதலென்ற பொருளைத்
தந்தது.
ஊறு இலாமை கண்டு, ‘உடற்றினர் இல்’ என உணர்ந்து,
‘மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார்?
சேறு இலாத வெஞ் சுரத்திடைச் செழும் புனல் நுகரும்
பேறு இலாமையின், இறந்தனர் போலும், இப் பெரியோர்!’49.-தம்பிமார்இறந்துகிடப்பதைக் குறித்துத்
தருமபுத்திரன்எண்ணமிடுதல்.
ஊறுஇலாமை-(தம் தம்பிமார் உடம்பில்) புண்படு
தலில்லாமையை, கண்டு-பார்த்து, ‘உடற்றினர்-(இவர்களைப்)போர்செய்து
அழித்தவர்,இல்-இல்லை,’என-என்று, உணர்ந்து-அறிந்து, (பின்பு),
‘மாறுஇலாதவர்- (தமக்கு) ஒப்புஇல்லாதவராகிய வீமன் முதலியவர்கள்,
எங்ஙனம்-எவ்வாறு, ஆர் உயிர்-(தமது) அருமையான உயிர், மாய்ந்தார்-
இறந்தார்?சேறு இலாத – சாரமானதன்மை யில்லாத, வெம் சுரத்திடை-
கொடிய பாலைவனத்தில்,செழு புனல் – நிலவளத்துக்குக்காரணமான
புனலை,நுகரும் – பருகுகின்ற, பேறு-பாக்கியத்தை, இலாமையின்-
உடையவராகாததனால்,இ பெரியோர்-இந்தப் பெரியவர், இறந்தனர்
போலும்-உயிரொழிந்தார் போலும்’;(எ-று.)-‘என்றுதருமபுத்திரன்
எண்ணமிட்டான்’என்று வருவித்து முடிக்க:இது, சொல்லெச்சம்
எனப்படும்.
‘ஒருகால்வீமன்முதலியோர் பகைவரால் மாய்ந்தனரோ?’என்று
சங்கித்து, ‘இவருடம்பில்ஆயுதவடு ஒன்றுமில்லாமையால், இவர்கள்
பகைவரோடுபொருது இறந்தவரல்லர்’என்று துணிந்து, பின்னர் ‘இவர்கள்
எவ்வாறு மாய்ந்தார்?’என்று ஆலோசித்து, தாகம் விஞ்சிப் பருகத்
தண்ணீர்கிடைக்காத இளைப்பினால்தான்இவர்கள் இறந்திருக்கவேண்டுமென்று
எண்ணமிட்டா னென்க. சேறு ஸார மென்ற பொருளில்வருதலை,
“சேதனமென்னுமச்சேறகத்தின்மையால்” என்றநாலடியாரிலுங் காண்க. சேறிலாத
வெஞ்சுரம் எனவே, நீர்நிழலில்லாத பாலைவனம்என்றவாறாயிற்று.
தருமபுத்திரன் தன்னிலுஞ்சிறியவரான விமன் முதலியோரை ‘பெரியோர்’
என்றது-அன்னார்உடம்பின்வலிமை முதலியவற்றாற்பெருமைபெற்றவராதலால்
அண்டகோளகை அனையது ஓர் ஆதபத்திரத்தால்
மண்டலங்கள் ஈர்-ஒன்பதும் புரந்திட வல்லான்,
சண்ட மாருதி எழுதிய தாழ் மணல் எழுத்தைக்
கண்டு, ‘நஞ்சம், இக் கயத்து அறல்’ என்பது கண்டான்50.-வீமன்எழுதியதைக் கண்டு தருமன்
செய்தியையறிதல்.
அண்டகோளகை அனையது- அண்டகோளத்தை
ஒப்பதான, ஓர் ஆதபத்திரத்தால் – ஒப்பற்ற குடையினால்,மண்டலங்கள் ஈர்
ஒன்பதுஉம்-பதினெட்டுப்பூமிகளையும்,புரந்திட-பாதுகாத்தற்கு, வல்லான்-
வல்லவனாகியதருமபுத்திரன்,-தாழ் மணல்-குழிந்த மணலிலே, சண்டம்
மாருதி – கொடுந்தன்மையையுடைய வீமசேனன், எழுதிய-எழுதியிருந்த,
எழுத்தை-, கண்டு-பார்த்து, ‘இகயத்து அறல்-இந்தச்சுனையிலுள்ளநீர்,
நஞ்சம்-விஷமாம்,’என்பது-என்பதை, கண்டான் – அறிந்தான்;(எ-று.)-
வல்லான், எழுத்தைக் கண்டு, என்பது கண்டான் என்க.
வீமன்எழுதியதைப் படித்த பின் கயத்தைக்கண்டு தருமன் அதன்
நீரையும்நஞ்சுஉள்ளதென்று அறிந்தான். அண்டகோளகை-உருண்ட
வடிவமான அண்டம். திரண்டு ஓங்கியிருத்தலில்,ஆதபத்திரத்திற்கு
அண்டகோளகை உவமையாம். ஆதபத்திரம்=ஆதபத்ரம்;வெயிலினின்று
காப்பது எனக் குடைக்குக்காரணக்குறி. மண்டலங்கள் ஈரொன்பதாவன:-
சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம்,
கன்னடம், கொல்லம், தெலுங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம்,
கடாரம், கௌடம், கோசலம், திராவிடம் என்பன. அறல் நஞ்சம் –
உடைமையையும் உடையதையும் அபேதப்படுத்திக் கூறிய உபசாரவழக்கு.
நஞ்சம், அம்-சாரியை;நஞ்சு – நைதற்கு [இறத்தற்கு]க்காரணமானதெனக்
காரணப் பொருள் உரைக்கலாம். அறல் – நீர்:மணலைஅறுத்துச்செல்வது
எனக் காரணக்குறி.
வெஞ் சமம் செய வருவர்கொல், மீண்டும்?” என்று அருள் இல்
வஞ்சகன் செய்த வஞ்சனை இது’ என மதித்து,
நஞ்ச நீர்கொடு தானும் தன் நாவினை நனைக்கும்
நெஞ்சன் ஆகி, அந் நிறை புனல் கயத்திடை நேர்ந்தான்.51.-தருமன்வீஷநிரைப் பருகச்செல்லுதல்.
வெம்சமம் செய – கொடிய போரைச் செய்வதற்கு,
மீண்டுவருவர்கொல் – மறுபடியும் (பாண்டவர்கள்) வந்துவிடுவார்
களோ? என்று – என்றஎண்ணத்தினால்,அருள் இல் வஞ்சகன் –
கருணையில்லாதவஞ்சகனாகியதுரியோதனன், செய்த-, வஞ்சனை-வஞ்சகச்
செயலாகும், இது-,’என – என்று, மதித்து – (தருமபுத்திரன்) எண்ணி,-
தான்உம் நஞ்சம் நீர்கொடு – தானும் விஷநீரைக்கொண்டு, தன் நாவினை-
தனதுநாக்கை, நனைக்கும்- ஈரமுண்டாக்கவேணுமென்று நினைக்கிற,
நெஞ்சன் ஆகி – மனத்தை யுடையவனாய்,அநிறை புனல் கயத்திடை-
நிறைந்தநீரைக்கொண்ட அந்தச்சுனையினிடத்தில்,நேர்ந்தான் –
போய்ச்சேர்ந்தான். (எ – று.)
பாண்டவர்வனவாசஞ்செய்கையில் சூழ்ச்சிசெய்து அவரைக்
கொல்லாவிட்டால்,வனவாசகாலம் நீங்கியபின் நம்முடன்பொருமாறு வருவார்:
ஆதலால், அவரை வனவாசகாலத்திற்குள் கொன்றிட வேணும் என்று
ஆலோசித்த துரியோதனன், பிறகு ‘காட்டில்பாண்டவர்
அலைந்துதிரியும்போதுஇங்குத் தண்ணீர் பருகவருவர் ஆதலால் இந்நீரை
உண்டு அவர்கள் சாகுமாறு விஷத்தைக் கலந்து வைப்போம்’என்று சூழ்ச்சி
செய்து இங்ஙனம் இந்நீரைநஞ்சமாக்கி யிருக்கவேண்டுமென்று யுதிஷ்டிரன்
தன்மனத்தில் எண்ணினான். பின்பு நம் தம்பிமார் இறந்துவிட்டதனால்
நாம்மாத்திரம் உயிர்வைத் திருப்பதிற் பயனில்லைஎன்ற கருத்தினால்,
தானும் தன்விடாய் தணிய நீர்பருகுமாறு சுனையின்கரையைஅடைந்தா
னென்க.
திருந்து நல் வரைச் செங் கையால் அள்ளிய நீரை
அருந்தும் அவ் வயின், அகல் விசும்பிடை, அசரீரி,
‘கருந் தடம் புனல் நஞ்சு; இது நுகர்வது கருதேல்!
விருந்தர் நால்வரும் என் மொழி கேட்டிலர்; வெய்யோர்!52.-இதுவும், அடுத்தகவியும்-தருமபுத்திரன்
தண்ணீரைப்பருகத்தொடங்கிய சமயத்தில்,
அசரீரிகூறுதலைத்தெரிவிக்கும்
மூன்று கவிகள் – ஒருதொடர்.
(இ-ள்.)(தருமபுத்திரன்), திருந்து நல் வரை செம் கையால்-
அழகுபொருந்திய நல்லரேகைகளைக்கொண்ட(தனது)செந்நிறக்கையினால்,
அள்ளிய-முகந்தெடுத்த, நீரை-(அந்தச்சுனையின்)ஜலத்தை,அருந்தும் –
பருகப்போகின்ற, அ வயின் – அச்சமயத்தில்,-அகல் விசும்பிடை-
பரந்தஆகாசத்திலேதோன்றிய,அசரீரி-அசரீரியானது, – (அந்தத்தருமபுத்திரனை
நோக்கி),கரு தடம் புனல்-கருநிறமுள்ள இந்தச்சுனையின்நீர்,நஞ்சு –
விஷமுள்ளதாம்:(ஆதலால்), இது-இந்நீரை, நுகர்வது கருதேல் – பருகுமாறு
எண்ணாதே:வெய்யோர்-கொடியோராகிய, விருந்தர் நால்வர்உம் –
(இவ்விடத்திற்குப்) புதியவராய் வந்த நான்குபேரும், என் மொழி கேட்டிலர் –
(இந்நீரைப்பருக வேண்டா என்று)நான் கூறிய வார்த்தையைக்
கேட்டாரில்லை:(ஆதலால்) நீரைப் பருகி உயிர்மாய்ந்தனர்); (எ – று.)
இச்செய்யுளிலுள்ள ‘அசரீரி’என்பது, அடுத்த செய்யுளிலுள்ள ‘என’
என்பதனோடுஇயையும். அசரீரி=சரீர மில்லாததெனக் காரணப்பொருள்படும்:
இதனை,ஆகாயவாணியென்று கூறுதலுமுண்டு. விருந்து-புதுமை;புதியராய்
வந்தவர், விருந்தர். ‘நால்வரென்மொழிகேட்டிலர்’என இங்கு அநுவாதமாக
வந்ததனால், சகதேவன்முதலியோர்சுனைநீரைப்பருகும்போதும் அசரீரி
தடுத்ததெனக்கொள்ளுதல் ஏற்கும்:இனி, தன்வார்த்தையைத் தருமபுத்திரன்
தள்ளாது கேட்க வேணுமென்ற கருத்தினால்,’நால்வர்என்மொழி கேட்டிலர்
வெய்யோர்’என அசரீரி கற்பித்துக்கூறுகின்ற தெனக் கொள்வாருமுளர்.
உன்னை யான் வினவு உரைதனக்கு உத்தரம் உரைத்து,
பின்னை நீ நுகர், பெறாது பெற்றனைய இப் புனலை;
அன்னைபோல் உயிர் அனைத்தையும் புரந்திடும் அரசே!
என்னையோ, பெருந் தாகம் விஞ்சிடினும், இன்று?’ எனவே,
அன்னைபோல் – தாயைப்போல், உயிர் அனைத்தைஉம்
– எல்லாவுயிர்களையும்,புரந்திடும் – பாதுகாக்கின்ற, அரசே-அரசனே!
இன்று – இப்போது, பெரு தாகம் விஞ்சிடின்உம் – மிக்கதாகம்
அதிகரித்தாலும், என்னைஓ- அதனாலென்ன?யான்-, உன்னை-,வினவு
உரை தனக்கு – வினாவுகின்றபேச்சுக்களுக்கு, உத்தரம் உரைத்து –
மறுமொழிகூறிவிட்டு, பின்னை- பின்பு, நீ-, பெறாதுபெற்று அனைய-
அடையத்தகாத பொருளை(அரிதில்) அடைந்தாற்போன்ற, இ புனலை-
இந்தநீரை, நுகர் – பருகுவாய், என-என்று, கூற,-(எ-று.)-இச்செய்யுளில்
‘என’என்பது அடுத்தசெய்யுளிலுள்ள “என்றான்”என்ற முற்றோடுமுடியும்.
பெறாது- எளிதிற்பெறப்படாதது:எதிர்மறை யொன்றன்பால்
வினையாலணையும்பெயர்.’பெற்று’என்ற இறந்தகால வினையெச்சம்-
பெற்றால்என எதிர்கால வினையெச்சப்பொருள்படுதலால் எச்சத் திரிபாம்.
பெரு நலம் பெறு மகனை அப் பேர் அறக் கடவுள்
இரு விசும்பினில் அருவமாய் இயம்பிய மாற்றம்,
திரு உளம்தனில் கொண்டு, தன் செங் கை நீர் வீழ்த்தி,
பொருவு இலா மகன், ‘புகலுவ புகறி, நீ!’ என்றான்54.-தன்னைவினவுமாறு தருமபுத்திரன் அவ்வசரீரியை
நோக்கிச்சொல்லுதல்.
அபேர் அறம் கடவுள் – அந்தப் பெருமைபெற்ற அறத்தை
நிலைநாட்டுகின்றகடவுளாகிய யம தருமராசன், பெரு நலம் பெறு மகனை-
மிக்க நற்குணம்பெற்ற புத்திரனாகியயுதிஷ்டிரனைநோக்கி, இரு
விசும்பினில் – பெரிய ஆகாயத்தில், அருவம்ஆய் – அசரீரியாய்நின்று,
இயம்பிய – கூறிய, மாற்றம் – வார்த்தையை,-பொரு இலா மகன் –
ஒப்பற்றமகனாகியஅந்தத்தருமபுத்திரன், திரு உளம்தனில் கொண்டு -(தனது)
சிறந்தமனத்திலே எண்ணி, தன் செங் கை நீர் வீழ்த்தி – தனது
செந்நிறக்கையில் அள்ளிய நீரைக் கீழே கொட்டிவிட்டு, ‘நீ-, புகலுவ –
சொல்லக்கருதியிருப்பவற்றை, புகறி – சொல்வாய்,’ என்றான் – என்று
கூறினான்; (எ-று.)
அசரீரியாய்க் கூறியது அறக்கடவுளே என்பது, இச்செய்யுளால் விளங்கும்.
அவருவம்=அருபம்: வடசொல்லின்திரிபு. புகலுவ – பலவின்பால்வினை
யாலணையும்பெயர். புகறி – முன்னிலையேவலொருமை வினைமுற்று
சொல்லும் நூல்களில் பெரியது ஏது”-‘அரிய மெய்ச் சுருதி.’
‘இல்லறத்தினுக்கு உரியது ஏது?’-‘எண்ணுடை இல்லாள்.’
‘மல்லல் மாலையில் மணம் உளது ஏது?’-‘வண் சாதி.’
‘நல்ல மா தவம் ஏது?’-‘தம் குலம் புரி நடையே.’55.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்: அறக்கடவுளின்
வினாக்களையும் அதற்குத் தருமன் கூறிய
விடைகளையும் தெரிவிக்கும்.
சொல்லும் நூல்களில் – (உலகத்திற்) சொல்லப்படுகின்ற
சாஸ்திரங்களில், பெரியது-பெருமைபெற்றது, ஏது-எது? (என்பது அசரீரியின்
வினா: இதற்க யுதிஷ்டிரன் விடை): – அரிய மெய் சுருதி –
(பிறநூல்களிற்கிடைப்பதற்கு) அருமையான மெய்ம்மைப்பொருளையுடைய
வேதமேயாகும்: இல்லறத்தினுக்கு உரியது ஏது – கிருகஸ்தாச்சிரமத்துக்கு
உரிமையான பொருள் எது? (என்பது வினா: இதற்குவிடை):-எண் உடை
இல்லாள்-(நற்குணங்களால்) மதிப்பு வாய்ந்த மனைவியே யாவன்: மல்லல்
மாலையில்-வளப்பமுள்ள பூமாலைகளில், அணம் உளது-நறுமணத்தையுடையது,
ஏது-எது? (என்பதுவினா: இதற்குவிடை):-வண் சாதி-வளப்பமுள்ள
சாதிப்பூமாலையேயாகும்: நல்ல மா தவம் ஏது-சிறந்த பெரிய தவம் எது?
(என்பதுவினா: இதற்குவிடை): – தம் குலம் பரி நடைஏ-தமதுகுலத்துக்கு ஏற்ப
அநுஷ்டித்துவருகின்ற நல்லொழுக்கமே; (எ-று.)
ஒருவர் தமதுகுலாசாரம் தவறாதுநடப்பின், அவருக்கு வேறு மாதவம்
வேண்டா என்பது, ஈற்றடியாற் பெறப்படும். சுருதி-ஸ்ருதி: எழுதாக்கிளவியாய்க்
குருசிஷ்யபரம்பரையிற் கேள்விமூலமாய் வருவது எனக் காரணப்பொருள்படும்
வடசொல். இல்லறம்-வீட்டில் மனைவியுடனிருந்து செய்யுந் தருமம்;
கிருகஸ்தாச்சிரமதருமம். சாதி ஜாஜீஎன்ற வடமொழியின் திரிபு என்பர்
ஒருசாரார்: இதனைப் பிச்சிப்பூ என்றும் வழங்குவர்
முனி குலம் தொழு கடவுள் யார்?’-‘மொய் துழாய் முகுந்தன்.’
‘நனை மணம் கமழ் குழலினர்க்கு இயற்கை யாது?’-‘உயர் நாண்.’
‘தனம் மிகுந்தவர்க்கு ஏது, அரண்?’-‘தகை பெறு தானம்.’
‘இனியது ஏது, இரு செவிக்கு?’-‘இளங் குதலையர் இன்சொல்
முனி குலம் தொழு-(உலகப்பற்றையொழித்த) இருடிகளின்
கூட்டம் வணங்குகின்ற, கடவுள்-தேவதை, யார்-யாவர்? (என்பது வினா:
இதற்குவிடை):- மொய் துழாய் முகுந்தன் – நெருங்கிய
திருத்துழாய்மாலையையணிந்த முகுந்தனாவன்; நனை மணம் கமழ் –
பூவரும்பின் மணம் வீசுகின்ற, குழவினர்க்கு-கூந்தலையுடைய மகளிர்க்க,
இயற்கை அது-இயல்பாய் அடையவேண்டிய அந்தக்குணம், யாது-எது?
(என்பது வினா: விடை):- நாண்-நாணமாகும்: தனம் மிகுந்தவர்க்கு-செல்வம்
மிக்கவர்க்கு, அரண்-பாதுகாவலாவது, ஏது-எது? (என்பது வினா:
இதற்குவிடை):- தகை பெறு – தகுதிபொருந்திய, தானம்-ஈகையாம்: இரு
செவிக்கு-(மனிதனுடைய) இரண்டுசெவிகளுக்கும், இனியது-இனிமையைத்
தருவது, ஏது-எது? (என்பது வினா: இதற்கு விடை):- இளகுதலையர்-முதிராத
மழலைச்சொற்கள் பேசுகின்ற குழந்தைகளின், இன்சொல்-இனிமையான
சொல்லாகும்; (எ-று.)
‘முனிவர்கள் தொழுங் கடவுள் முகுந்தன்’ என்றமையால்,
மோக்ஷத்தைப்பெறவிரும்புவோர் அந்தத்திருமாலையே பணிவ ரென்ற
தாயிற்று. முகுந்தன்’ என்ற வடசொல்-மோக்ஷலோகத்தைத் தருபவன் என்று
பொருள்படும். இச்செய்யுளின் நான்காம் அடியில், “குழலினிது யாழினிது
என்பதம்மக்கள், மழலைச்சொற்கேளாதவர்” என்ற திருக்குறள், கருதத்தக்கது.
துழாய்=துளஸீ: வடசொல். அரண்-ஸரணம்: வடசொல் திரிபு
நிற்பது ஏதுகொல்?’-‘நீடு இசை ஒன்றுமே, நிற்கும்.’
‘கற்பது ஏதுகொல்?’-‘கசடு அறக் கற்பதே கல்வி.’
‘அற்பம் ஆவது ஏது, அனைத்தினும்?’-‘அயல் கரத்து ஏற்றல்.’
‘சிற்பம் ஆம் இவை செப்பு’ என, செப்பினன் சிறுவன்
நிற்பது-நிலைத்துநிற்பது, ஏதுகொல்-எதுவோ? (என்பதுவினா:
இதற்குவிடை):-நீடு இசை ஒன்றுஉம்ஏ-நீண்ட கீர்த்தியொன்றும், நிற்கும் –
நிலைத்துநிற்கும்; கற்பது ஏது கொல்-கற்றுக்கொள்ளவேண்டுவது, எதுவோ?
(என்பதுவினா:இதற்குவிடை):- கசடு அற-குற்றமில்லாமல், கற்பது –
படிக்கவேண்டுவதாகிய, கல்வி-படிப்பேயாகும்; அனைத்தின்உம் –
எல்லாத்தொழிலினுள்ளும், அற்பம் ஆவது – (ஒருவனுக்குச்
சிறுமையுண்டாக்குவது, ஏது-எது? (என்பது வினா: இதற்குவிடை):- அயல்
கரத்து-பிறருடைய கையிலருந்து, ஏற்றல்-(ஒருபொருளை) யாசித்துப்பெறுதலாம்;
சிற்பம் ஆம் இவை – அருமையாகிய இக்கேள்விகளுக்கு, செப்பு-விடை
யளிப்பாய், என-என்று (யமதருமன்) வினாவ, -சிறுவன்-(அந்தயமனது)
புத்திரனாகிய யுதிஷ்டிரனும், செப்பினன்-(உடனுக்குடனே) விடையளித்தான்;
(எ-று.)
ஐம்பத்தைந்தாம்பாடல்முதல் இந்தப்பாடல்வரையில் வினாக்கட்குவிடை
உடனுக்குடனே வந்திருத்தலைக்காண்க. “ஒன்றாவுலகத்துயர்ந்தபுகழல்லால்,
பொன்றதுநிற்பதொன்றில்” என்ற குறளால், புகழென்பதொன்றுமே பூமியில்
எப்போதும் அழியாதுநிற்பதாதலையறிக. கல்விக்குக்கசடுஆவது –
ஐயந்திரிப்புகளையுடையதாதல்: ஐயமாவது – சந்தேகவுணர்வு: திரிபுஆவது –
ஒன்றை மற்றொன்றாக நினைக்கும் மாறுபாடான உணர்வு.
இவ் வகைப் பல வினவலும், இயம்பிய மகனை
அவ் வயின் பெரிது உவந்து, கண்ணினுக்கு இலக்கு ஆகி,
செவ்வயின் பொலஞ் சிலம்பு எனச் சேர்ந்து, மெய் தழுவி,
வெவ் வயின், புரி விரகு எலாம் விளம்பினன் மாதோ.58.-யமதருமன்பிரதியட்சமாக வந்து கூறுதல்.
இவகை-இவ்வாறு, பல-பலவினாக்களை,வினவலும்-
கேட்டவுடனே, இயம்பிய-(தாமதிக்காமல்)விடைகூறிய, மகனை-
யுதிஷ்டிரனை,-(யமதருமன்),-அவயின்-அப்போது, பெரியது உவந்து-
மிகவுங்கொண்டாடி, கண்ணினுக்கு இலக்கு ஆகி – (அந்த யுதிஷ்டிரனுடைய)
கண்ணுக்குப் பிரதியட்சமாகி, செவ் வயின்-அழகைத்
தன்னிடத்திற்கொண்ட,பொலம் சிலம்பு என-பொன்மயமான மேருமலை
போல, சேர்ந்து-வந்து,மெய் தழுவி-(அந்தத்தருமபுத்திரனுடைய) உடம்பை
அணைத்துக்கொண்டு,வெவ் வயின்-வெப்பமாகிய காட்டில், புரி-
செய்யவேண்டிய, விரகுஎலாம் – உபாயங்களையெல்லாம்,விளம்பினன்-
கூறினான்;(எ-று.)-மாது, ஓ-ஈற்றசைகள்.
தன்வார்த்தைக்குக் கட்டுப்பட்டு நச்சுநீரைப் பருகாதுநின்று
தான்கேட்ட கேள்விகளுக்கெல்லாம் ஏற்றவிடை அளித்ததனால்,யமதருமன்
மகனைமிகவுவந்து, கண்ணுக்கிலக்காகி மெய்தழுவினன். யமதருமன்
கோரமான கரியரூபத்துடன்வராது கண்ணுக்கினியஓங்கிய வடிவுகொண்டு
வந்தன னென்பார்,’செவ்வயிற்பொலஞ்சிலம் பெனச் சேர்ந்து என்றா
அறப் பெருங் கடவுள் என்று அறிந்து, தாதையைச்
சிறப்புடன் சேவடி சென்னி சேர்த்திய
மறப் பெரும் புதல்வனை, மகிழ்ந்து, ‘நும்பியர்
இறப்பினை ஒழிப்பதற்கு ஏது உண்டு’ எனா,59.-இதுவும் அடுத்தகவியும்-குளகம்:’உன்தம்பியரின்
மரணத்தையொழிக்கவழியுண்டு’என்று ஒருமந்திரத்தை
யமன்யுதிஷ்டரனுக்குக் கூறியது.
தன்னைத்தழுவியவன்),அறம் பெரு கடவுள்-
தருமத்தைநிலைநாட்டும்பெருமைபெற்ற யமதருமன்,’என்று-என்பதை,
அறிந்து-, தாதையை – தந்தையினுடைய, சே அடி-அழகிய திருவடிகளில்,
சிறப்புடன் – மதிப்புடனே, சென்னி – (தன்) முடியை, சேர்த்திய-சேர்த்தின
[காலில்விழுந்துவணங்கின என்றபடி],மறம் பெரு புதல்வனை-
வீரத்தையுடையபெருமைபெற்ற புத்திரனை,மகிழ்ந்து-, நும்பியர் இறப்பினை
– உனதுதம்பிமார்க்கு (இப்போது) நேர்ந்துள்ள மரணத்தை, ஒழிப்பதற்கு –
போக்குவதற்கு, ஏது-காரணம்[வழி],உண்டு-,’எனா-என்றுசொல்லி,-(எ-று.)-
“எனஅருள்செய்தான்”(60) என்க.
தாதையைசென்னியை சேர்த்திய என்பது வடமொழிநடை.
ஏது=ஹேது என்பதன்திரிபு. இரண்டாமடி – முற்றுமோனை.
இதுமுதல்இச்சருக்கம் முடியுமளவும்-மூன்றாஞ்சீர்ஒன்றுமாச்சீரும்,
மற்றவை விளச்சீர்களுமாய்வந்த அளவடிநான்குகொண்ட கலிவிருத்தங்கள்
நச்சு நீர் குடித்து உயிர் நீத்த நால்வரில்
உச்சம் ஆம் அன்புடை ஒருவன்தன்னை, நீ
இச்சையால், இம் மறை இயம்பி, எண்ணி ஓர்
அச்சம் அற்று அழை!’ என அருள் செய்தான்அரோ.
நஞ்சுநீர் குடித்து-(சுனையின்)விஷநீரைப் பருகி, உயிர்
நீத்த – (தம்) உயிரைவிட்ட, நால்வரின் – (வீமன் முதலிய) நால்வருக்குள்,
உச்சம் ஆம் அன்புஉடை ஒருவன் தன்னை- மிகுதியான அன்பையுடைய
ஒருவனைக்குறித்து,நீ-, இச்சையான்-விருப்பத்தோடு, இ மறை இயம்பி –
இந்தவேதமந்திரத்தைச் சொல்லி, எண்ணி – நினைத்து,ஓர் அச்சம் அற்று
அழை – ஓர் அச்சமில்லாமல் அழைப்பாய்,’என – என்று, அருள்செய்தான்
– கருணையோடு(அந்தமந்திரத்தைக்)கூறினான்,(அந்த யம தருமன்),
(எ-று.)
உச்சம்,இச்சா – வடசொற்கள். மூன்றாமடியும்நான்காமடியும்-
முற்றுமோனை. நஞ்சு+நீர்=நச்சுநீர்:வேற்றுமையில் மென்றொடர்க்
குற்றியலுகரம் வன்றொடர்க்குற்றியலுகரமாயிற்று.இங்கே ‘மறை’என்பது-
வேதத்தின் மிகச்சிறுபகுதியாகிய ஒரு மந்திரத்தைக் காட்டிற்று. அரோ –
ஈற்றசை.
தாதை கூறிய மறைதனைக் கொண்டே, சுதன்
ஏதம் உற்றிடாவகை, இளைய தம்பியை
ஊதை வந்து உள் புக உணர்ச்சி நல்கினான்-
வேதமும் நிகர் இலா விரத வாய்மையான்61.-தருமன்,மந்திரத்தாற் சகதேவனைஎழுப்புதல்.
தாதை கூறிய-(தன்) தந்தையாகிய யம தருமன் உபதேசித்த,
மறைதனைகொண்டு-வேதமந்திரத்தைக்கொண்டு, சுதன்- (அந்தத்தருமனுக்குப்)
புத்திரனாகிய,வேதம்உம் நிகர் இலா-வேதமும் (தனக்கு) ஒப்பாகமாட்டாத,
விரதம் வாய்மையான் – சத்தியத்தையே விரதமாகவுடையவனாகியயுதிஷ்டிரன்,
ஏதம் உற்றிடாவகை – நாசம் நேரிடாதபடி, இளையதம்பியை-இளையதம்பியின்
சரீரத்தில், ஊதை – பிராணவாயுவானது, வந்து-, உள்புக – உள்ளேபுகுமாறு
செய்து, உணர்ச்சி நல்கினான்- பிரஞ்ஞையை யுண்டாக்கினான்;
விரதவாய்மையான், மறைதனைக்கொண்டுஇளையதம்பியையுணர்ச்சி
நல்கினானென்க. இளையதம்பி என்பதற்கு-வியாசபாரதத்திற்கு ஏற்ப,
நகுலனையெனக் கூறினுமாம். புக என்பதன் பின், ‘செய்து’என ஒருசொல்
வருவிக்கப்பட்டது.வேதம்போலவே தரும
புத்திரன்சத்தியந்தவறாதவனென்பார் ‘வேதமுநிகரிலாவிரத வாய்மையான்’
என்றார். விரதவாய்மையான்-வாய்மை விரதத்தான் என விகுதிபிரித்துக்
கூட்டுக. ஊதை-ஊது என்ற வினைப்பகுதியினடியாகப்பிறந்த பெயரென்பர்.
தாதை, சுதன் – தாத:,ஸு த:என்ற வடசொற்கள் திரிபுகள்
கண்டு நின்று, அறப் பெருங் கடவுள், ‘வாயுவின்
திண் திறல் மா மகன், தேவர் கோ மகன்,
மண்டு அழல் விடத்தினால் மடிய, மா மருத்து
அண்டர் நல்கு இளவலை அழைத்தது என்?’ என்றான்.62.-சகதேவனைப்பிழைப்பித்ததுகண்டு ‘வீமார்ச்
சுனர்களைவிட்டு இவனைப்பிழைப்பிக்கக் காரணம் என்?’
என்று யமதருமன் வினாவல்.
கண்டுநின்று – (யுதிஷ்டரன் சகதேவனைப்பிழைப்பித்த
தைப்)பார்த்துநின்று, அறம் பெரு கடவுள் – யம தருமராசன், (தன்
புத்திரனைநோக்கி), ‘வாயுவின்- வாயுதேவனுடைய, திண் திறல்- மிக்க
வலிமையுள்ள, மா மகன் – சிறந்தபுத்திரனும் [வீமசேனனும்],தேவர்
கோமகன்-தேவாதிபனானஇந்திரனுக்குப் புத்திரனானஅருச்சுனனும், மண்டு
அழல் விடத்தினால்- மூள்கின்ற வெப்பத்தையுடைய விஷத்தால், மடிய –
மடிந்திருக்க, மா மருந்து அண்டர்-சிறந்த வைத்தியத்தொழிலைக்கொண்ட
அசுவினீதேவர்கள், நல்கு-பெற்ற, இளவலை-இளையதம்பியை,அழைத்தது –
உயிர்மீட்டது, என்-யாது காரணத்தினால்?’என்றான்-என்றுவினாவினான்;
(எ-று.)
‘உனக்குச்சொந்தமான தம்பிமாரும், பெருவீரருமான
வீமார்ச்சுனர்களில் ஒருவரைப் பிழைப்பிப்பதைவிட்டு மாற்றாந்தாயின்
புதல்வனாய்ச்சாதாரணவீரனானஇளையசகோதரனைப்பிழைப்பித்தது யாது
காரணம்?’ என வினாவினான்யமதருமராசனென்க. அண்டர்-தேவர்:
‘மருத்துஅண்டர்’எனவே, வைத்தியத்தொழிலையுடைய
அசுவினீதேவர்களைக்காட்டிற்று. திண்டிறல் – ஒருபொருட்பன்மொழி
குத்திரம் இலா மொழிக் குந்திக்கு யான் ஒரு
புத்திரன் உளன் எனப் புரிந்து நல்கினாய்;
மத்திரிக்கு ஒரு மகவு இல்லை;-வல்லவர்
சித்திரம் வகுத்தெனத் திகழும் மேனியாய்!’63.-அதற்குத்தருமன் கூறிய விடை.
இதுவும் அடுத்த கவியும் – ஒருதொடர்.
(இ-ள்.)வல்லவர் சித்திரம் வகுத்து என-எழுதத்தேர்ந்தவர் சித்திரம்
எழுதினாற்போல,திகழும்-விளங்குகின்ற, மேனியாய்-சரீரத்தையுடையவனே!
குத்திரம் இலா மொழி-இழிவில்லாத பேச்சையுடைய, குந்திக்கு – குந்தீ
தேவிக்கு, யான் ஒரு புத்திரன் உளன்
என – ‘யான்ஒரு புத்திரன் இருக்கிறேன்’என்று சொல்லுமாறு, புரிந்து-
மனம் விரும்பி, நல்கினாய்-(என்உயிர்போகாதவாறு) கொடுத்திட்டாய்;
மத்திரிக்கு-(எனது மாற்றாந்தாயாகிய)மாத்திரி யென்பவளுக்கோ, ஒரு மகவு
இல்லை-(யான்இவனைப்பிழைப்பிக்காவிட்டால்)ஒருபுத்திரனும் இல்லை;(எ-
று.)-ஆதலால்தான்இவனைப்பிழைப்பித்தேன் என்று வருவித்து முடிக்க.
குத்திரம்-க்ஷுத்ரம், மத்திரி-மாத்ரீ: வடசொற்சிதைவுகள்.
குந்திக்கியான் – குற்றியலிகரம்.
என்று தன் தந்தையோடு இயம்ப, தந்தையும்,
மன்றல் அம் தொடை முடி மைந்தனுக்கு, அமர்
வென்றிடு மறைகளும், வில்லொடு, ஏவு, வேல்,
என்ற பல் படைகளும், யாவும், நல்கினான்.64.-யமதேவன்தன்புத்திரனுக்குப்
பகைவரை வெல்லும்மந்திரம் முதலியன தருதல்.
என்று-,தன் தந்தையோடு-தன் தந்தையினிடத்தில், இயம்ப –
(தருமபித்திரன்) சொல்ல,-தந்தைஉம்- (அவனது) பிதாவாகிய யமனும்,
மன்றல் – வாசனையுள்ள,அம் – அழகிய, தொடை-பூமாலையை,முடி –
தலையிலணிந்துள்ள,மைந்தனுக்கு – புதல்வனாகியயுதிஷ்டிரனுக்கு, அமர்
வென்றிடு-யுத்தத்தில் வெல்லவல்ல, மறைகள்உம் -மந்திரங்களையும்,
வில்லொடு – வில்லுடனே, ஏவு வேல் என்ற – பகைவர்மீது விடத்தக்க
வேல் என்று சொல்லப்படுகிற, (இவ்வாறான),பல் படைகள்உம் – பல
ஆயுதங்களையும்,யாஉம் – மற்றும் அவன்கேட்ட எல்லாவரங்களையும்,
நல்கினான்- கொடுத்தான்;(எ-று.)
தம்பிமாரைப்பிழைப்பித்தமை ‘யாவும்நல்கினான்’என்பதனாற்
பெறப்படும். வென்றிடுமறை, ஏவுவேல் – வினைத்தொகைகள்.
வில்லொடெஃகம் வேல் என்றும்பாடம்.
கருதலன் அழைத்ததும், காளமாமுனி
புரி தழல் வளர்த்ததும், பூதம் வந்ததும்,
அருகு இவர் நச்சு நீர் அருந்தி மாய்ந்ததும்,
விரி சினத்துடன் அது மீண்டு போனதும்,65.-இரண்டுகவிகள்- ஒருதொடர்:துரியோதனன்
அபிசாரவேள்விசெய்வித்தது முதலியவற்றை
யுதிஷ்டிரனிடம்யமதேவன் தெரிவித்தல்.
கருதலன் அழைத்ததுஉம்-பகைவனானதுரியோதனன்
ஒருமுனிவனைக்கொண்டுகாளமாமுனியை) அழைப்பித்ததையும்,
காளமாமுனி புரி தழல் வளர்த்ததுஉம்-(நிர்ப்பந்தத்திற்குக்கட்டுப்பட்டு)
அந்தக்காளமாமுனிவன் ஓமஞ்செய்கின்ற அக்கினியை வளர்த்து
வேள்விசெய்ததையும், பூதம் வந்ததுஉம் – (அந்த வேள்
விக்குண்டத்திலிருந்து) பூதமொன்று வெளிப்பட்டுவந்ததையும், இவர் அருகு
நஞ்சு நீர் அருந்தி மாய்ந்ததுஉம்-இந்த உன் தம்பிமார் அருமையாய்க்கிடைத்த
விஷநீரைக்குடித்து உயிரொழிந்ததும், அது விரிசினத்துடன்மீண்டு போனதுஉம்
– அந்தப்பூதம் (முன்னமே இறந்த பாண்டவர்களைக்கொல்லுமாறு
என்னைஏவினையே! என்று) மிக்க சினத்துடனே
(தன்னையேவியகாளமாமுனிவனிடம்) திரும்பிச் சென்றதையும்,-(எ-று.)
அருகுநீர்-அருகிய நீர்: அரிதிற்கிடைத்த நீர். இனி தமக்கு அருகே
(கிடைத்த) நீர் என்றலுமாம். நஞ்சு+நீர்=நச்சுநீர்: [நன்-உயிர்.34]
முனிவனைக் கொன்றதும், முனிவன் வாய்மையில்
துனி வனத்து உழையினைத் தொடர்ந்து போயதும்,
தனி வனத்திடை விடத் தடாகம் செய்ததும்,
இனிமையின், புத்திரற்கு, யாவும் கூறினான்.
முனிவனைகொன்றதுஉம் – (தன்னையேவிய)முனிவனையே
(அந்தப்பூதம்) கொன்றிட்டதையும், முனிவன் வாய்மையின்-
ருஷிகுமாரனுடைய வார்த்தையினால்,துனி வனத்து-வெறுப்புக்கு இடனான
காட்டிலே, உழையினைதொடர்ந்து போயதுஉம்-(பாண்டவர்கள்) மானைத்
தொடர்ந்து சென்றதையும், தனி வனத்திடை – (கொடுமையால்) ஒப்பற்ற
காட்டிலே, விடம் தடாகம் செய்ததுஉம் – விஷநீரையுடைய பொய்கையை (த்
தான்) உண்டாக்கியதும், புத்திரற்கு – தன்மகனானயுதிஷ்டிரனுக்கு, யாஉம் –
எல்லாவற்யைும், இனிமையின் கூறினான்? இனிது சொன்னான்;(எ-று.)
முனிவன் க்ருஷ்ணாஜிநத்தைமான் கவர்ந்துகொண்டுபோனது
முதலியன, துரியோதனன் காளமாமுனியைக்கொண்டு செய்வித்த
அபிசாரவேள்வியினால்பாண்டவராகியநீங்கள் உயிர்மாளாதிருத்தற்
பொருட்டு யான் செய்வித்தசெயல்களே யென்பது விளங்க,
‘இனிமையின்யாவும்கூறினான்’என்றது.
நன் பெரு வனம் செறி நாள் அகன்றன;
பின் பிறர் அறிவுறாப் பெற்றி பெற்று, நீர்
துன்புறாது இரும்’ எனச் சொல்லி, ஏகினான்;-
அன்பினால் அருள் புரிந்து, அரிய தாதையே.67.-‘வனவாசங்கழித்துஅஜ்ஞாதவாசகாலத்தையும்
இனிதுகழிப்பீர்’என்று ஆசிசொல்லி யமன் சென்றிடுதல்.
நல்- நல்ல, பெரு வனம் – பெரிய காட்டிலே, செறி-
நெருங்கிக்கழிக்கவேண்டிய, நாள – நாள்கள் [பன்னிரண்டுவருஷங்கள்],
அகன்றன பின் – கழிந்தனவானபிறகு, நீர்-,-(அஜ்ஞாதவாசஞ்
செய்யவேண்டிய ஓர்யாண்டிலும்), பிறர் அறிவு உறாபெற்றிபெற்று – பிறரால்
அறியப்படாத தன்மையையடைந்து,
துன்புஉறாது- வருத்தமடையாமல், இரும் – இனிதிருப்பீர்,’என – என்று,
சொல்லி – (வாழ்த்துச்சொல்லைக்)கூறிவிட்டு, அன்பினால்அருள் புரிந்து –
அன்புடனே கருணைசெய்து,ஏகினான்- சென்றிட்டான்:(யாவனெனில்),-
அரியதாதை-(யுதிஷ்டிரனுடைய) அருமையான தந்தையாகிய யம
தருமராசன்;(எ-று.)
நல்லபாம்புஎன்பதுபோல ‘நல்வனம்’என்றார். தேவமானத்தால்
‘நாள்’என்றது. அகன்றது என்று பிரதிபேதம்.
தம்பியர் அனைவரும் தத்தம் ஆவி பெற்று,
உம்பரில் தலைவனாம் உரிய தந்தையை
வம்பு அவிழ் மலர் அடி வணங்கி, நெஞ்சுடன்
அம்பகம் மலர்ந்து, தம் அடவி எய்தினார்68.-தருமன்முதலியோர் யமனைவணங்கித்தம் வனத்தை
யடைதல்.
தம்பியர் அனைவர்உம்-தம்பிமார்கள் எல்லோரும், தம்தம் –
தங்கள் தங்களுடைய, ஆவி பெற்று – உயிரையடைந்து, உம்பரில் தலைவன்
ஆம் -தேவர்களில் தலைமைபெற்றவனாகிய,உரிய தந்தையை –
உரிமைபெற்றதந்தையாகி யமதருமனை,வம்பு அவிழ் மலர்அடி –
நறுமணம்வீசுகின்ற தாமரை மலரைப்போன்ற பாதங்களில், வணங்கி –
நமஸ்கரித்து, (மகிழ்ச்சியினால்),நெஞ்சுடன்-மனத்துடன், அம்பகம் –
கண்களும், மலர்ந்து – மலரப்பெற்று, தம் அடவி – தமக்குரிய காட்டை,
எய்தினார்- அடைந்தார்கள்;(எ-று.)
அனைவரும்ஆவிபெற்று, வணங்கி, மலர்ந்து, அடவி எய்தினார்
என்க. பிராணனைத்தந்தவனும் ஒரு தந்தையாவனாதலாலும்,யமதருமன்
போனஉயிரைத்தந்தவ னாதலாலும்,அவனை’உரியதந்தை’என்றா
ரென்னலாம்.
தீது அறக் கானிடைச் செறிந்த ஐவரும்
பேதுறத் தொடர்ந்து, ஒரு பிணைபின் போனதும்,
ஏதம் உற்று இறந்ததும், எழுந்து மீண்டதும்,
ஆழ் துயர்த் திரௌபதிக்கு அறியக் கூறினார்.69.-பாண்டவர்திரௌபதியினிடம் நிகழ்ந்தன கூறுதல்.
தீதுஅற-(வந்த) தீமைநீங்கிவிட, கானிடை – காட்டிலே,
செறிந்த – நெருங்கிச்சேர்ந்த, ஐவர்உம்-பஞ்சபாண்டவர்கள்,-பேதுஉற-
மனக்கலக்கமுண்டாக, ஒருபிணை- ஒரு பெண்மானை,பின் தொடர்ந்து
போனதுஉம்-,-ஏதம்உற்று – (அலைச்சலால்இளைப்பும்
பெருந்தாகமெடுத்தலுமாகிய) பொல்லாங்கையடைந்து, இறந்ததுஉம் – (சுனை
நீரைப்பருகி) உயிரொழிந்ததையும், எழுந்து மீண்டதுஉம்-(யமதருமராசனால்
உயிர்பெற்று) எழுந்து மீண்டுவந்த செய்தியையும்,-ஆழ்துயர்-(சென்றவர்கள்
இன்னும் வரவில்லையேயென்று) ஆழ்ந்ததுயரத்தைக்கொண்டிருந்த,
திரௌபதிக்கு-,அறிய – தெரியுமாறு [விளக்கமாக],கூறினார்-;-இறந்துமீண்டதும்
என்றும் பாடம்.
———————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply