ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -14. முண்டகச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

மல் கொண்டு வகுத்தனைய சிகரத் திண் தோள் வாள் அரக்கன்
குலத்தோடும் மடிய, முன்னம்,
வில் கொண்டு, சரம் தொடுத்து, புரை இல் கேள்வி
விண்ணவர்தம் துயர் தீர்த்த வீர ராமன்,
கல் கொண்ட அகலியைதன் உருவம் மீளக் கவின் கொள்ளக்
கொடுத்த திருக் கமல பாதம்
சொல் கொண்டு, துதித்து, எழுந்து துள்ளி, நாளும் தொழுமவரே,
எழு பிறவித் துவக்கு அற்றாரே.1.-கடவுள் வணக்கம்

மல்கொண்டு – வலிமையென்ற குணத்தைக் கொண்டு,
வகுத்(த)து அனைய- இயற்றப்பட்டதுபோன்ற, சிகரம்- மலையொத்த,திண்
தோள் – வலிய தோள்களையுடைய,வாள் அரக்கன் – (சந்திரகாசமென்னும்)
வாட்படையையுடைய இராட்சதனாகியஇராவணன், குலத்தோடுஉம் –
குலத்துடனே, மடிய – இறந்திடுமாறு, முன்னம் – முன்பு, வில்கொண்டு –
(கோதண்டமென்ற) வில்லினால்,சரம் தொடுத்து – அம்பை எய்து, புரைஇல்
கேள்வி விண்ணவர்தம் துயர் தீர்த்த-குற்றமற்ற நூற்கேள்வியையுடைய
தேவர்களின் துன்பத்தைப் போக்கியருளிய, வீரம் ராமன்-வீரகுணத்தைக்
கொண்ட ஸ்ரீராமனுடைய, கல் கொண்ட அகலியை கல்வடிவத்தைப் பெற்ற
அகலிகை, தன் உருவம் – நிஜவடிவத்தை, மீள – மறுபடியும், கவின்கொள்ள –
அழகுபொருந்தப்பெறுமாறு, கொடுத்த-, திரு கமலம் பாதம் – சிறந்த
தாமரைமலர் போன்ற திருவடிகளை,சொல்கொண்டு – சொல்லினால்,
துதித்து-புகழ்ந்து, (அங்ஙனம் புகழ்வதனாலான களிப்பினால்),எழுந்து துள்ளி –
துள்ளியெழுந்து, நாள்உம்-பிரதிதினமும், தொழுமவர்ஏ – தொழுபவர்களே,
எழு பிறவி – ஏழுவகைப்பட்ட பிறவிகளிலே, துவக்கு-சம்பந்தம்,
அற்றார்-நீங்கினவராவர்;(எ – று.)

     ஸ்ரீராமனதுதிருவடிகளைப்புகழ்ந்து துள்ளியெழுமவர், அகலிகை
சாபவிமோசனம்பெற்று நிஜவடித்தை யடைந்தாற்போல, தமக்கு நேர்ந்துவரும்
பிறவித்துயர் நீங்கி மீளாவுலகமாகிய நற்கதி சேர்வரென்பதாம்.
ஸ்ரீராமனுடைய கமலபாதத்துக்கு அகலியை தன்னுருவமீளக் கவின்கொள்ளக்
கொடுத்த, என்ற அடைமொழி கொடுத்தது, கருத்துடையடைமொழியாம்.
ஆன்மாவிற்கு வரக்கூடிய ஏழுபிறவிகளாவன – தேவர் மக்கள் விலங்கு புள்
ஊர்வன நீர்வாழ்வன தாவரம் என இவை.

     இதுமுதல் இருபதுகவிகள் – பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து
ஆறாஞ்சீர்கள்காய்ச்சீர்களும், மற்றவை மாச்சிர்களுமாகி வந்த கழிநெடிலடி
நான்கு கொண்ட எண்சீராசிரிய விருத்தங்கள்

இப் பால், வெஞ் சிலை விசயன் துறக்கமீதில் இந்திரன்தன்
அருகு இருப்ப, இமையோர் ஊரில்,-
அப் பால், நல் தவம் புரியும் தழல் கூர் வேள்வி
அந்தணர்தம் குழாம் சூழ, அழகு ஆர் மண்ணில்
ஒப்பு ஆரும் இலாத மட மயிலினோடும், உயர் வனத்தினிடை,
நாளும், ஒருநாள் போல,
தப்பாமல் அறம் வளர்க்கும் நீதி வேந்தும், தம்பியரும்,
புரிந்தது இனிச் சாற்றுகிற்பாம்:2.-கவிக்கூற்று: அருச்சுனன் இந்திரனருகிலினிதிருப்ப,
தருமன் ஆரணியத்திற்புரிந்ததைக் கூறுவோ மெனல்

வெம்சிலைவிசயன் – கொடிய வில்லையுடையஅருச்சுனன்,
இப்பால் – இங்கு, துறக்கம்மீதில்-விண்ணுலகில்,-இமையோர்ஊரில் –
தேவர்களின் வாழிடமான அமராவதிநகரில், இந்திரன்தன் – இந்திரனுடைய,
அருகு – சமீபத்திலே, இருப்ப – இராநிற்க,-அப்பால்- அங்கு, அழகு ஆர்
மண்ணில் – அழகுநிரம்பிய பூலோகத்தில், நல் தவம் புரியும் – சிறந்த
தவத்தைச் செய்பவர்களாய், தழல் கூர் வேள்வி அந்தணர்தம் –
அக்கினிமிகுதியாக எரிகின்ற யாகங்களைப்புரியும் பிராமணர்களுடைய, குழாம்
– கூட்டம், சூழ – சூழ்ந்திருக்க,-மடம்மயிலினோடுஉம்மயில்போன்ற
சாயலையுடையளான திரௌபதியுடனே, உயர் வனத்தினிடை – பெரு
வனத்தினிடையிலே, நாள்உம் – பிரதிதினமும், ஒருநாள்போல-,தப்பாமல்-
தவறாமல்,அறம் வளர்க்கும் – தருமத்தை நடத்துகின்ற, ஒப்பு ஆர்உம்
இலாத-ஒத்தவராக எவரையும் பெறாமையையுடைய,நீதிவேந்துஉம் – நியாயநெறி
தவறாத யுதிட்டிரமகாராஜனும், தம்பியர்உம்-,புரிந்தது – செய்ததை, இனி-,
சாற்றுகிற்பாம் – சொல்வோம்;(எ-று.)

     அருச்சுனன்சுவர்க்கலோகத்தில் அமராவதிநகரில் இந்திரனருகிலே
இனிதிருப்ப, பூலோகத்திலே யுதிட்டிரன் தருமபத்தினி திரௌபதியுடனே
யிருந்து இல்லறத்தை ஒருநாள் நடத்துவது போலவே எந்நாளும் தவறாது
நடத்துபவனாய்த்தம்பியரோடும் செய்த செயல் இனிக் கூறப்படுமென்பதாம்.
வேள்வியில் அவிசினால்அக்கினி மிகவும் வளர்க்கப்படு மாதலால், ‘தழல்
கூர்வேள்வி’என்றது.  விசயனின்பமெய்தி என்றும், புரிந்துஎன்றும்
பிரதிபேதம்.     

விறல் விசயன்தனைப் பிரிந்த வருத்தம் மேன்மேல் விஞ்ச,
ஒரு தஞ்சம் அற வெம்பி, அம் பொன்
சிறகு இழந்த பறவை என, துணைவரோடும் திறல் வேந்தன்
சிந்தனை உற்று இருந்த காலை,
‘பொறை, அறிவு, நிறை, தருமம், உடைய வாய்மைப் போர் வேந்தே!
அஞ்சல்!’ எனப் புகழ்ந்து, வாழ்த்தி,
மறை ஒரு பொன் வடிவுகொடு வந்தது என்ன, மா முனியும்,
இமைப்பினிடை வந்துற்றானே.3.-யுதிட்டிரன்அருச்சுனனைப்பிரிந்த வருத்தத்தோடு
சிந்தனைகொண்டுதம்பியருடனிருக்கையில்
ரோமசமுனிவன் அங்குவந்தடைதல்

விறல் விசயன்தனை- வலிமையுள்ள அருச்சுனனை,பிரிந்த
வருத்தம்-,மேல்மேல் விஞ்ச-,ஒரு தஞ்சம் அற-(அந்த வருத்தத்தைப்
போக்கும்) பற்றுக்கோடு ஒன்றும் இல்லாமல், வெம்பி – மனங்கன்றி, அம்
பொன் சிறகு இழந்த பறவை என- அழகிய பொன்போலருமையான
சிறகையிழந்த பறவையைப்போல, துணைவரோடுஉம்-
(அருச்சுனனையொழிந்தவீமன் முதலிய) தம்பிருடனே, திறல் வேந்தன் –
வலிமையையுடைய யுதிட்டிராசன், சிந்தனைஉற்று – சிந்தனைகொண்டு,
இருந்த காலை-இருந்தபோது,-மாமுனிஉம் – (உரோமசனென்ற) சிறந்த
முனிவனும்,-‘மறைஒரு பொன் வடிவு கொடு வந்தது என்ன-வேதமே ஒரு
அழகிய வடிவத்தை யெடுத்துக்கொண்டு வந்ததென்று கருதுமாறு, பொறை
அறிவு நிறை தருமம் உடைய வாய்மை – பொறுமையும் அறிவும் நிறைந்த
தருமமும் உடைமையாகக்கருதும் சத்தியமும் ஆகிய இவற்றையுடைய,
போர்வேந்தே – போர்செய்யவல்ல அரசனே!  அஞ்சல் – (அருச்சுனனைப்
பிரிந்த வருத்தத்தால்) அஞ்ச வேண்டா,’என – என்று சொல்லியவண்ணம்,
புகழ்ந்து வாழ்த்தி- (அந்தத் தருமனைத்)துதித்து வாழ்த்துக்கூறி,-
இமைப்பினிடை – இமைக்கும் நேரத்திற்குள், வந்துஉற்றான்-
(சுவர்க்கலோகத்திலிருந்து தருமனிருக்கும் வனத்துக்கு) வந்து சேர்ந்தான்;(எ-று.)

     ‘விசயன்செய்தியையெல்லாம் தருமனுக்கு உரைத்தி’என்று
தேவேந்திரன் கூறியவுடனே, தாமதமின்றி அந்த உரோமசமுனிவன்
தருமனிருக்குமிடம் வந்து, அப்போது அத்தருமன் சிந்தனையைமுகத்தில்
தேக்கி யிருந்ததனால்அஞ்சலென்று தேற்றிப் புகழ்ந்து வாழ்த்தின னென்க.
புகழ்ந்து வாழ்த்தி வந்துற்றான்என்ற இடத்து விகுதிபிரித்துக் கூட்டி,
வந்துற்றுப் புகழ்ந்து வாழ்த்தினனென்னலாம்: இனி, வரும்போதே
தருமனைப்புகழ்ந்து வாழ்த்தியவண்ணம் அம்முனிவன் வந்தானென்பார்
இவ்வாறு கூறினாரென்பாருமுளர். இமைப்பினுடன் என்றும் பாடம்.

வந்த பெருங் கடவுள் முனி வரவு நோக்கி, வாள் வேந்தும்
தம்பியரும் மகிழ்ச்சி கூர்ந்து,
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க, சென்று, எதிர் போய்,
வணங்குதலும், சிதைவு இலாத
அந்த முனிவரனும், அவர்க்கு அன்பால், துன்பம் அணுகாத
அந்தம் இலா ஆசி கூறி,
புந்தியுடன் அளித்த செழும் புனித கோலப் புலித் தவிசின்
இருந்து, அடைவே புகன்றான் எல்லாம்:4.-வந்தமுனிவனைத்தருமன் முதலியோர் வணங்க,
அம்முனிவன் ஆசிகூறிஇருக்கையி லமர்தல்

வந்த-,பெருங் கடவுள் முனி – பெருமைபெற்ற
தெய்வத்தன்மையுள்ள உரோமசமுனிவனது, வரவு – வருகையை, நோக்கி –
பார்த்து,-வாள் வேந்துஉம் – வாட்படையையுடையயுதிட்டிர ராசனும்,
தம்பியர்உம் – தம்பிமாரான வீமன் முதலியோரும், மகிழ்ச்சிகூர்ந்து –
மகிழ்ச்சி மிகுந்து,-சிந்தை- மனத்திலும், விழி மலரொடு-மலர்போன்ற
கண்களிலும், பேர் உவகை மிக்கமகிழ்ச்சி, பொங்க – அதிகரிக்க, சென்று –
நடந்து, எதிர்போய் – (அம்முனிவனுக்கு) எதிராகப்போகி, வணங்குதலும் –
வணங்கினவுடனே,-சிதைவு இலாத – அழிவில்லாத, அந்த முனிவரன்உம் –
அந்த உரோமசனென்ற இருடிச்சிரேட்டனும், அவர்க்கு-அந்தப்
பாண்டவர்க்கு, அன்பால் – மனப்பிரீதியோடு, துன்பம் அணுகாத –
துன்பம்சேராத, அந்தம் இலா – அளவில்லாத [மிகப்பல],ஆசி-
வாழ்த்துக்களை,கூறி-சொல்லி,-புந்தியுடன்-மனப்பூர்வமாக,அளித்த-
(தருமன்) கொடுத்த, செழும் புனிதம் கோலம் புலி தவிசின்-சிறந்த
பரிசுத்தமான அழகிய புலித்தோலாசனத்தில், இருந்து-,அடைவே-,
எல்லாம்-,புகன்றான்-;(எ-று.)

     உரோமசமுனிவன்அடைவேபுகன்றவை இவை யென்பது மேலிற்
செய்யுளில் விளங்கும்.  அருச்சுனனது பிரிவினால்பாண்டவர்க்குக்
காமியவனவாசம் இன்னாதாக,தருமன் தம்பியருடன் அங்குநின்றும்
அப்பாற்செல்ல நிச்சயித்துத் தௌமியமுனிவனிடம் தெரிவித்துக்கொள்ள,
அம்முனிவன் பல புண்ணிய தீர்த்தங்களையும்ஆச்சிரமங்களையும்
கூறாநிற்கையில்லோமசமுனிவன் இந்திரன்மொழியையனுசரித்து அருச்சுனன்
பாசுபதம் பெற்றமை முதலியகூறி, இந்திரன்கூறிய செய்தியையுந்
தெரிவித்தானென்று வியாசபாரதம் கூறும். ‘துன்பமகலமிக’என்றும் பாடம்

“வாள் விசயன் புரவிசயன்தன்னை நோக்கி மன்னு தவம்
புரிந்ததுவும்; மகிழ்ச்சி கூர்ந்து, அவ்
வேள் விசயம் தவிர்த்த பிரான் அருளால், வேண்டும் விறல்
படைகள் அளித்ததுவும்; விபுதர்கோமான்
நாள் விசயம் பெறக் கொடுபோய், உம்பர் ஊரில், நளி மகுடம்
புனைந்ததுவும்; நாளும் தன் பொன்
தோள் விசயம் தொலைத்த திறல் அவுணர் சேனை சுடு சரத்தால்
தொலைத்ததுவும்; சூழ்ந்த யாவும்;5.-இரண்டுகவிகள்- ஒருதொடர்: உரோமசன்
அருச்சுனுடைய செய்திகளைச்சொல்லி, இந்திரன்
விருப்பின்படிதான்வந்தமை தெரிவித்தல்

வாள்விசயன்-ஒளிபொருந்திய அருச்சுனன், புரம் விசயன்
தன்னைநோக்கி – திரிபுரத்தைவென்றவனாகியசிவபிரானைக்குறித்து,மன்னு
– நிலைபெற்ற,தவம் – தவத்தை, புரிந்ததுஉம் – செய்ததையும், மகிழ்ச்சி
கூர்ந்து – மகிழ்ச்சிமிகுந்து, அ வேள் விசயம் தவிர்த்த பிரான் – அந்த
மன்மதனுடைய வெற்றியைப் போக்கிய சிவபிரான், அருளால் – அருளோடு,
வேண்டும்-(அருச்சுனன்) விரும்பிய, விறல் படைகள்-வலிமையுள்ள
படைக்கலங்களை,அளித்ததுஉம் – கொடுத்ததையும், விபுதர்கோமான் –
தேவர்கட்குத் தலைவனானஇந்திரன், உம்பர் ஊரின் கொடு போய் –
தேவலோகத்து அமராவதிக்குக் கொண்டுபோய், நாள்-நல்ல நாளிலே,
விசயம் பெற – வெற்றிபெறுமாறு, நளி மகுடம் புனைந்ததுஉம்- சிறந்த
கிரீடத்தைத் தரிப்பித்ததையும், நாள்உம் – பலகாலும், தன் – இந்திரனது,
பொன் தோள் விசயம் தொலைத்த- அழகிய தோள்வலிமையாற்
பெறலாகும் வெற்றியை யொழித்த, திறல் – வல்லமையையுடைய, அவுணர் –
(நிவாதகவசர் காலகேயர் என்ற) அசுரரின், சேனை- தொகுதியை,
(அருச்சுனன்), சுடு சரத்தால் – எரிக்கவல்ல அம்புகளைக்கொண்டு,
தொலைத்ததுஉம்- ஒழித்ததையும், சூழ்ந்த யாஉம் – மற்றுமுள்ள
எல்லாவற்றையும்,-(எ-று.)-‘வரைவழியேவருவதுவும்’என மேலே தொடரும்.

     சிவபிரான்துவத்திலிருக்கையில்உமையினிடம்காதல்
விளைவிக்கும்பொருட்டுத் தேவர்களின் தூண்டுதலால் அப்பிரான்மீது
மன்மதன் மலரம்பைத் தொடுக்க, அப்போது அச்சிவபெருமான் தன்
நெற்றிக் கண்ணினால்அந்த மதனனையெரித்தானாதலால்,
‘வேள்விசயந்தவிர்த்தபிரான்’என்றார். சூழ்ந்தயாவும் என்றது-ஊர்வசியாற்
காதலிக்கப்பட்டுச் சாபம்பெற்றுச் சாபவிமோசனமும் பெற்றமையைக்
காட்டுமென்னலாம்.  நளிர்மகுடம் என்றும் பாடம்.

தன் அருகே அமரர் எலாம் இனிது போற்ற, தனஞ்சயன்
அங்கு இருந்ததற்பின், தயங்கும் சோதி
மன்னும் எழில் காந்தர்ப்பம் என்னும் நாம வரை வழியே
வருவதுவும்; மருவு காதல்
உன்னுடைய பெருந் துயரம் தணியுமாறும் உரைத்தருள்க’
என உம்பர் கோமான் உன்பால்
என்னை விடுத்தனன்; வந்தேன்’ என்றான்-எல்லா உலகும்
முடிந்திடு நாளும் ஈறு இலாதான்.

தனஞ்சயன் – அருச்சுனன், தன் அருகுஏ – தனது
சமீபத்திலிருந்து, அமரர்எலாம் – தேவர்கள் யாவரும், இனிது போற்ற –
இனிமையுறத் துதிக்க, அங்கு – அத்தேவலோகத்தில், இருந்ததன் பின் –
சிலகாலந் தங்கியிருந்தபிறகு,-தயங்கும்சோதி-விளங்குகின்ற ஒளியையும்,
மன்னும் எழில்-பொருந்திய அழகையுமுடைய, காந்தர்ப்பம் என்னும் நாமம்
வரை வழிஏ – காந்தர்ப்பமென்று போர்கொண்ட மலையின்வழியாக,
வருவதுஉம் – (திரும்பிப் பூலோகத்துக்கு) வரப்போவதையும்,-மருவுகாதல்
– (அவ்வருச்சுனனிடம்) பொருந்திய அன்பையுடைய, உன்னுடைய-,
பெருந்துயரம் – (அவ்வருச்சுனனுடைய பிரிவினாலாகிய)மிக்க துன்பம்,
தணியும் ஆறுஉம் – ஆறியிருக்குமாறும், உரைத்தருள்க – சொல்வாயாக,
என – என்று சொல்லி, உம்பர்கோமான் – தேவேந்திரன், உன்பால் –
உன்னிடத்து, என்னை-,விடுத்தனன்-அனுப்பினான்: (அதனால்),
வந்தேன்-,என்றான்- என்று (தான்) வந்த வரலாற்றைக் கூறினான்:
(யாவனென்னில்),-எல்லாஉலகுஉம் முடிந்திடும் நாள்உம் ஈறு இலாதான் –
உலகம்யாவும் அழிந்திடும் பிரளய காலத்தும் தனக்கு இறுதிவரப்
பெறாதவனானஅந்த ரோமசமுனிவன்;(எ-று).

     அருச்சுனன்தான் எந்தக் கருத்தோடு சென்றானோஅந்தக் கருத்து
முற்றி முன்னிலும் பலமடங்கு மேன்மை பெற்றுள்ளானாதலால்,அந்நிலையை
நினைந்துநீ துயரம் தவிர்ந்து நிற்க என்று உன்னிடம் சொல்லுமாறு
என்னைவிடுத்தானென்பது,’உன்னுடையபெருந்துயரந்தணியுமாறு
முரைத்தருள்க’என்றதன் கருத்து.  தணியுமாறும் என்ற உம்மை-விடயம்
விளங்குமாறு கூறுவதன்றி என்று எச்சப்பொருளைத்தரும்: இனி, இசை
நிறையாகவுமாம்.  

மா முனிதன் மொழி கேட்டு, புரை இல் கேள்வி மன்னவனும்
தம்பியரும் வருத்தம் மாறி,
காமியம் என்று உரைபெறு சீர் வனத்தை நீங்கி, கடவுள்
முனிதன்னொடும் அக் கணத்தின் ஏகி,
நாம மதுகர தீர்த்தம் முதலா உள்ள நல் தீர்த்தம்
எவற்றிலும் போய், நானம் ஆடி,
தாம மதி தவழ் சிகரத்து இந்த்ர நீல சயிலத்தின் சுனைகெழு
தண் சாரல் சார்ந்தார்.7.-நான்குகவிகள்-முனிவன்மொழியால் பாண்டவர்
வருத்தமாறிப்புறப்பட்டு, உரோமசன்காட்டப்
பலதீர்த்தங்களிலும்நீராடிக் காந்தர்ப்பமலையில்தங்குதல்
கூறும்.

மாமுனி தன் – சிறந்த உரோமச முனிவனுடைய, மொழி-
வார்த்தையை, கேட்டு-,புரை இல் கேள்வி – குற்றமற்ற
நூற்கேள்வியையுடைய, மன்னவன்உம்-யுதிட்டிரராசனும், தம்பியர்உம்-
தம்பிமார்களும், வருத்தம் மாறி-(தம்) வருத்தந்தணிந்து,-
கணத்தின்-அந்தப்போதில் தானே, காமியம் என்று உரை பெறு சீர்
வனத்தை நீங்கிஏகி-காமியமென்று சொல்லப்படுகிற சிறந்த வனத்தை
விட்டுப்போய், கடவுள் முனி தன்னோடுஉம்-தெய்வத்தன்மையையுடைய
அந்த உரோமச முனிவனுடனே, நாமம்-பிரசித்தமான, மதுகரதீர்த்தம் முதல்
ஆ உள்ள – மதுகர தீர்த்தம் முதலாகவுள்ள, நல் தீர்த்தம் எவற்றின்உம்-
சிறந்த தீர்த்தங்களெல்லாவற்றிலும், போய்-சென்றடைந்து, நானம் ஆடி-
ஸ்நானம் செய்து, தாமம் மதி தவழ் சிகரத்து-ஒளி பொருந்திய சந்திரன்
ஊர்ந்து செல்லுகின்ற சிகரத்தையுடைய, இந்த்ரகீலசயிலத்தின்-
இந்திரகீலமலையின்,சுனைகெழு – சுனைபொருந்திய,தண் சாரல்-குளிர்ந்த
சாரலை,சார்ந்தார்-;(எ-று.)

     கடவுண்முனிதன்னோடும்ஏகி என்றதனால்,அம் முனிவன் இன்னது
இது என்று காட்டிச் செல்லப் பாண்டவர் சென்றனரென்பது,
பெறப்படுமென்பர்.  லோமச முனிவர் இந்திரன் கூறிய செய்தியைச்
சொன்னபின் யுதிஷ்டிராதியரை யழைத்துக் கொண்டு தீர்த்தயாத்திரை
செய்து வருமாறு அருச்சுனன் கூறியதைத் தெரிவிக்க, லோமசர்
முதலியவரோடு யுதிஷ்டிரர் தீர்த்தயாத்திரைசெய்தா ரென்று வியாசபாரதம்
கூறும்.  இந்திரநீலசயிலத்தின் என்று பிரதிபேதம். 

அக் கிரியின் புதுமை எலாம் அடைவே நோக்கி, அங்கு
உள்ள அருவி நறும் புனலும் ஆடி,
‘தக்க புகழ் விசயன் அருந் தவம் புரிந்த சாரல் இது’ என்று,
தவ முனிவன் சாற்ற,
மிக்க களி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி, விசயனைக் கண்டனர்
போல விரும்பிக் கண்டு,
தொக்க முனி கணத்தொடும் போய், தசாங்கன் என்னும்
தொல்லை முனி தபோவனத்தின் சூழல் சார்ந்தார்

அகிரியின் – இந்திரகீல பருவதத்தின், புதுமை எலாம் –
அதிசயங்களையெல்லாம், அடைவுஏ – முறையாக, நோக்கி – பார்த்து,
அங்கு உள்ள – அம்மலையிலுள்ள,அருவி ஸ்நானஞ்செய்து, ‘தக்கபுகழ்
விசயன் – தகுதியான புகழடைந்த அருச்சுனன், அருந்தவம் புரிந்த-,சாரல்
– தாழ்வரை, இது-,’என்று-,தவம் முனிவன் – தவத்தையுடைய அந்த
உரோமசமுனிவன், சாற்ற-சொல்ல,-மிக்ககளி உவகை நிகழ் நெஞ்சர் ஆகி-
மிக்க பெருமகிழ்ச்சி பொருந்திய மனத்தை உடையவராய், (பாண்டவர்,
விசயனைகண்டனர் போல-அருச்சுனனையேநேரிற் கண்டனர் போல,
விரும்பி கண்டு-(அவ்விடத்தை) அன்புகொண்டுபார்த்து, தொக்க –
(தம்முடன்) கூடியிருந்த, முனிகணத்தொடுஉம்-முனிவர் கூட்டத்துடனே,
போய்-,தசாங்கன் என்னும் தொல்லைமுனி-தசாங்கனென்று
பேர்படைத்தபழமையான முனிவனுடைய, தபோவனத்தின் – தவஞ்செய்யும்
வனத்தின், சூழல் – பிரதேசத்தை, சார்ந்தார்-;(எ-று).

     அருச்சுனன்தவஞ்செய்த இடத்தை அவனைப்போலப்பாண்டவர்
கண்டன ரென்றதனால்,பாண்டவர்க்கு அருச்சுனனிட மிருந்த
அன்புமிகுதிவிளங்கும். புதுமை – பண்பாகுபெயர்.  களியுவகை –
ஒருபொருட்பன்மொழி.  

அங்கு உள்ள தபோதனர்தம் பாதம் போற்றி, அவர் உரைத்த
ஆசியும் பெற்று, அப் பால் ஏகி,
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும், யாறும், எப் புனலும்,
தப்பாமல் இனிதின் ஆடி;
வங்கம் எறி கடல் கடைந்து, வானோர்க்கு எல்லாம் மருந்து
விருந்து அருளிய மந்தரமும் காட்டி;
கங்கை நதி குதி பாயும் சிகரச் சாரல் காந்தர்ப்பம் எனும்
வரையும காட்டினானே.

அங்குஉள்ள – அந்த இந்திரகீலமலையிலிருக்கின்ற,
தபோதனர்தம் – முனிவர்களுடைய, பாதம் – பாதங்களை,போற்றி –
துதித்து, அவர் உரைக்கும் – அம்முனிவர் அருள் கொண்டு கூறும்,
ஆசிஉம் – வாழ்த்துக்களையும்,பெற்று-,அப்பால் ஏகி-அப்புறம் போய்,
எங்கு உள்ள-சென்ற பலவிடங்களிலுமுள்ள, கடவுள் நெடும் புனல்உம்-
தெய்வீகம் பொருந்திய சிறப்புப் பெற்ற அருவித்தீர்த்தங்களிலும், யாறுஉம்-
நதிகளிலும், எப்புனல்உம் – (மடுமுதலாகவுள்ள) எல்லாத்தீர்த்தங்களிலும்,
தப்பாமல்-ஒன்றுவிடாமல், (பாண்டவர்), இனிதின் ஆடி – இனிது ஸ்நானஞ்
செய்து நிற்க,-(உரோமசமுனிவன்), வங்கம் எறி கடல்
கடைந்துவானோர்க்குஎல்லாம் மருந்து விருந்து அருளிய மந்தரம்உம்
காட்டி – அலைவீசுகிறகடலைக்கடைந்து தேவர்கள் யாவர்க்கும்
அமிருதத்தை விருந்துணவாகத்தந்த மந்தரமாலையைக்காட்டி, (பிறகு
அருச்சுனன் சுவர்க்கலோகத்திருந்துஇறங்கப்போகின்ற), கங்கை நதி குதி
பாயும் சிகரம் சாரல் காந்தர்ப்பம் எனும் வரைஉம்-கங்காநதி குதித்துப்
பாயப்பெற்ற சிகரத்தையும் தாழ்வரையையுங்கொண்ட காந்தர்ப்பமென்கிற
மலையையும்,காட்டினான்-;(எ-று.)

     மேலேமந்தரமுங்காட்டி வரையுங்காட்டினானென்றுவருவதனால்,
இந்தப் பாண்டவர்கள் நீராடியதும் ‘இதுஇந்தத் தீர்த்தம்,  இது இந்தத்
தீர்த்தம்’என்று அந்தக் கடவுள் முனிவன் காட்டக்கண்ட தீர்த்தங்களிலேயே
யென்பது பெறப்படும்.  காட்டினவன் உரோமசனே யென்பது மேற்கவியால்
விளங்கும்.  ஆடி=ஆட;பிறகருத்தாவின் வினையைக்கொண்டு முடிதற்கு உரிய
செயவென்னும் வாய்பாட்டு வினையெச்சமாகத்திரிக்க.  கந்தமாதன வரையும்
என்று பாடமிருப்பின் நலம்.  

அந்த உயர் கிரியின் நெடுஞ் சாரல்தோறும் அருந் தவம் செய்
முனிவரரை அடைவே காட்டி,
‘இந்த வனம்தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர்-ஐம்பது
யோசனை என்று எடுத்துக் காட்டி,
கந்தன் என எக் கலையும் வல்ல ஞானக் கடவுள் முனி
விசாலயன் ஆலயமும் காட்டி,
‘உந்து நெறிச் செங்கோலாய்! இதனில் ஓர் ஆண்டு இருத்தி’
என, உரோமசனும் உரைத்திட்டானே.

அந்தஉயர் கிரியின்-அந்த ஓங்கிய காந்தர்ப்பமலையின்,
நெடுஞ் சாரல் தோறுஉம்-நீண்ட தாழ்வரைதோறும், அருந்தவஞ் செய் –
அருமையான தவத்தைச் செய்கின்ற, முனிவரரை- இருடிச் சிரேட்டரை,
அடைவுஏ காட்டி – முறையே இன்னாரின்னாரென்று தெரிவித்து, இந்த வனம்
தனக்கு – இந்தத் தபோவனத்துக்கு, எமை ஆள்உடையவன் குன்றம் –
எம்மையடிமையாகவுடைய சிவபெருமானுடைய கைலாசமலை,ஈர் ஐம்பது
யோசனைஎன்று எடுத்துக் காட்டி – நூறுயோசனைதூரத்தி லுள்ளதாகும் என்று
எடுத்துச் சொல்லி,-கந்தன்என கலைஉம்வல்ல ஞானம் கடவுள் முனி –
முருகக்கடவுளென்று சொல்லும்படி எல்லா வித்தைகளிலும்
வல்லவனானபேரறிவுபடைத்த தெய்வவிருடியாகிய, விசாலயன் –
விசாலயனென்ற முனிவனின், ஆலயம்உம் – இருப்பிடத்தையும், காட்டி-,
உரோமசன்உம்-,நெறி உந்து – நன்னெறியிற் செலுத்துகின்ற, செங்கோலாய் –
செங்கோலையுடயவனே! இதனில் – இந்தக் காந்தர்ப்பமலையிலே,ஓர் ஆண்டு
இருத்தி என-ஒரு வருஷகாலம் தங்கியிருப்பாயென்று, உரைத்திட்டான் –
சொன்னான்;(எ-று.)

அம் முனிவன் மொழிப்படியே, வரம்பு இல் கேள்வி அறன்
மகனும், தம்பியரும், அரிவையோடும்,
எம் முகமும் தம் முகமா, இலையும் காயும் இனிய கனியுடன்
அருந்தி, இருக்கும் நாளில்,
மைம் முகில் வாகனன் கனக முடிமேல் அம் பொன் வனச
மலர் ஒன்று தழல்-மயில் முன் வீழ,
செம்மலரைச் செங் கண் மலர்தன்னால் நோக்கி, செய்ய
மலர்க் கரத்து ஏந்தி, சிந்தித்தாளே:11.-பாண்டவர்காந்தர்ப்பகிரியின் வனத்திலிருக்கையில்
பொன்மலரொன்றுவீழ்ந்ததைக் கையிற்கொண்டு
திரௌபதிசிந்தித்தல்

அமுனிவன் மொழி படியே – அந்த உரோமசமுனிவனது
வார்த்தையின்படியே, வரம்பு இல் கேள்வி அறன்மகன்உம் – அளவில்லாத
நூற்கேள்விகளையுடையதருமபுத்திரனும், தம்பியர்உம் – வீமன்
முதலியோரும், அரிவையயோடுஉம் – திரௌபதியுடனே, எ முகம்உம் –
அக்காட்டினிடம் முழுவதும், தம் முகம் ஆ – தமது சொந்தவிடத்தை
யொத்துத் தம் வயத்திலிருக்க, இலைஉம்காய்உம் இனிய கனியுடன் அருந்தி
– இலைகளையும்காய்களையும்சுவையினிய பழங்களையும்உண்டு,
இருக்கும் நாளில்-(அவ்வனத்தில்) வாழ்ந்திருக்கும் நாட்களிலொருநாள்,-மை
முகில் வாகனன் கனகம் முடிமேல் – கருநிறமுடைய மேகத்தை
வாகனமாகவுடைய இந்திரனது பொன்னாலாகியகிரீடத்தையணிந்த சிரசின்
மேலிருத்தற்கு உரிய, அம்பொன் வனசம் மலர் ஒன்று – அழகிய
பொன்மயமானதொரு தாமரைப்பூ, தழல் மயில் முன் –
நெருப்பினின்றவதரித்த மயில்போலுஞ் சாயலையுடையதிரௌபதியினெதிரில்,
வீழ – வீழ்ந்திட,-(அவள்)செம் மலரை – சிவந்த அந்தப் பூவை, செம்
கண் மலர்தன்னால்-(தனது)செந்தாமரைமலர்போன்ற கண்களினால்,நோக்கி
– பார்த்து, செய்ய மலர் கரத்து ஏந்தி – சிவந்த தாமரைமலர்போன்ற (தன்)
கையிலே யெடுத்துக்கொண்டு, சிந்தித்தாள் – (அதைக் குறித்து வியப்புடன்
பின்வருமாறு) என்ணுபவளானாள்;(எ-று.)

     இந்திரனுக்குமேகத்தை வாகனமாகக் கூறுதல், புராணங்களின்
கொள்கை.  முடி என்பது, மயிர்முடியப்படுவதென்னுங் காரணம்பற்றித்
தலைக்கும்,அதிலணியப்படுதல்பற்றி ஆகுபெயராய்க் கிரீடத்துக்கும்
பெயராம். இங்கே, முடி – கிரீடம்.  வனசம்-வநஜம்;நீரிற் பிறப்பதென்று
காரணக்குறி.  வியாசபாரதத்தில் இம்மலரைக் குறிக்குமிடத்து ‘ஸௌகந்திகம்’
என்றும், ‘பத்மம்’என்றும் கூறப்பட்டுள்ளது: இத்தொடர்கட்கு –
தாமரையினத்தைச் சேர்ந்த செங்கழுநீர் மலரென்று ஒரு சாராரும்,
நல்லமணமுடைய தாமரையென்று மற்றொருசாராரும் பொருள்
கூறுகின்றனர்.  ஆதலால், இப்பாடலிலுள்ள வனசம் என்பதற்குத்
தாமரையென்று பிரசித்தமாயுள்ள பொருளைவிட்டு,124, 125-ஆம்
பாடல்களால் முறையே  “பொற்றருநண்பின் வழங்கி”என்றும், “அண்ணற்
றருப்பெற்ற பின்”என்றும் வருவதற்கு ஏற்ப, ‘வனசம்- வனத்திலுண்டாகும்
கேட்டுப்பூ’என்று பொருளுரைத்தல் சிறவாதெனத் தோன்றுகின்றது;
இந்நூலில் 84-ஆம் பாடலில் “கந்தவான்பொழிலும் நன்னீர்க்கடிமலர்த்தடமும்”
என்று வருவதும், 138-ஆம் பாடலில் “வாவிச் செழுந்தாமமலர்நல்கி”என்று
வருவதும், ‘நீர்ப்பூ’என்று கொள்ளவேண்டு மென்பதனையேவற்புறுத்தும்:
ஆதலால், 124, 125-ஆம் பாடல்களிலுள்ள தரு என்பது – மலர்க்கொடியையே
காட்டுமென்று கொள்ளுதலே ஏற்கு மென்க.  கனகமுடிமேல் வனச மலர்
என்பதற்கு – சுவர்க்கலோகத்திலுள்ள பூப்போன்ற பூஎன்று
கருத்துக்கொள்ளினுமாம். மை முகில் வாகனன் கனக முடிமேல் வனசம்
என்பது – இந்திரனது முடிமேலுள்ள வனசம் என்றவாறு. மயில் – ஆகுபெயர்.
முன் – இடமுன்.  செய்ய – குறிப்புப் பெயரெச்சம்.  

இந்த மலர் உலகு அனைத்தும் ஈன்ற கோல எழில் மலரோ?
இரவி திருக் கரத்தில் வைகும்
அந்த மலரோ? அமுதில் பிறந்த பாவை அமர்ந்து உறையும்
அணி மலரோ? அவனிதன்னில்
எந்த மலரும் கருக, கமழாநின்றது, எங்கு எங்கும் இதன்
மணமே!’ என்று போற்றி,
கந்தவகன் மைந்தனுக்கு, கனலோன் நல்கும் கனங்குழை
சென்று, உவகையுடன் காட்டி, சொல்வாள்:12.-அம்மலரைக்கண்டுமனத்தினாற்போற்றியதிரௌபதி
வீமனுக்குக் காட்டிச்சொல்லலுறுதல்.

இந்தமலர்-,உலகு அனைத்துஉம்ஈன்ற கோலம் எழில்
மலர் ஓ – உலகமுழுவதையும் உண்டாக்கிய மிக அழகிய (திருமாலின்
நாபித்) தாமரைமலரோ?  இரவி திரு கரத்தில் வைகும் அந்த மலர் ஓ –
சூரியனுடைய கையிலிருக்கின்ற அந்த மலர்தானோ? அமுதின் பிறந்த
பாவை அமர்ந்து உறையும் அணி மலர் ஓ-திருப்பாற்கடலில் தோன்றிய
திருமகள் மனம் விரும்பி வாழ்கின்ற அழகிய அந்த மலர்தானோ? அவனி
தன்னில் – பூமியிலேயுள்ள, எந்த மலர்உம் – எந்த தாமரைப்பூவும், கருக –
(தனக்கு முன்னே) கருகித் தோன்றும்படி, எங்கு எங்குஉம் – எல்லாவிடத்தும்,
இதன் மணம்ஏ கமழாநின்றது-இந்த மலரின் நறுமணமே வீசாநின்றது’,
என்று போற்றி -என்று (அதன் நறுமணங் குறித்துச் சிந்தித்துக்) கொண்டாடி,-
கனலோன்நல்கும் கனம்குழை-அக்கினியினால் தரப்பெற்றவளும்
பொற்குழையுடையவளுமான திரௌபதி,-உவகையுடன் சென்று – (அபூர்வமான
மலரைக்கண்டதனாலான)வியப்புடனே போய், கந்தவகன் மைந்தனுக்கு –
காற்றின் குமாரனானவீமசேனனுக்கு, காட்டி – (அம்மலரைக்) காட்டி,
சொல்வாள்-(பின்வருமாறு) கூறுபவளானாள்;(எ-று.)- அதனைமேற்கவியிற் காண்க.

     சிறப்புற்றதிருமாலினுந்தித்தாமரை, செங்கதிரோன்கரத்துத் தாமரை,
திருமகளுறையுந்தாமரை என்ற இவைகள் தெய்த்தாமரைமலர்களாதலால்,
திரௌபதி தன்முன்வீழ்ந்த வனசமலரை, அவற்றோடொக்குமென்று
கருதினாள். ‘எந்தமலருங்கருக’என்றதனால்,இந்த மலரின்
நறுமணத்துக்குமுன் மற்றை மலரின் மணம் கருகித் தோன்றுமென்று
இலக்கணைவழக்காகக்கூறியதென்க: இனி, அம்மலரின் செந்நிறத்தைக்
குறித்தபடியுமாம்.  அமுது-பாற்கடலுக்கு, இலக்கணை.கந்தவ்ஹன்-
நறுமணத்தைத்தாங்குபவன்: காற்றுக்குக் காரணக்குறி. கனங்குழை-
அன்மொழித்தொகை.

இம் மலருக்கு ஒரு மலரும் அவனிதன்னில் எதிர் இல்லை!’
என்று, இதழ் ஆயிரத்தின் மிக்க
அம் மலரைக் கைம்மலரில் கொடுத்து, ‘ஈது ஒக்கும் அணிமலர்
நீ எனக்கு அருள வேண்டும்’ என்ன,
செம் மலையின் திகழ் சிகரத் திண் தோள் வீமன் தெய்வ
முனி புங்கவன்தன் திருத் தாள் போற்றி,
மென் மலரைத் திருமுன்பு வைத்து நின்று, வினவினான்;
அவனும் எதிர் விளம்புவானே:13.-திரௌபதிஇதையொத்தமலரைத்தருக என்று வீமன்
கையிற் கொடுக்க,அவன் அதுகுறித்து உரோமசனை
வினவுதல்.

இமலருக்கு ஒரு மலர்உம் அவனிதன்னில் எதிர் இல்லை
என்று – ‘இந்தப்பூவுக்குஒரு பூவும் பூமியிலே ஒப்பானது இல்லை’என்று
கூறி, இதழ் ஆயிரத்தின் மிக்க அ மலரை கை மலரில் கொடுத்து –
ஆயிரமிதழ்களோடு கூடிச் சிறந்த அந்தப்பூவை (வீமசேனனது)
செந்தாமரைமலர்போலுங் கையிலே கொடுத்து, ஈது ஒக்கும் அணி மலர் நீ
எனக்கு அருளவேண்டும் என்ன – ‘இம்மலரையொத்தஅழகிய மலரை நீ
எனக்குக் கருணைசெய்துகொடுக்கவேண்டும்’என்று (திரௌபதி)
பிரார்த்திக்க,-செம்மலையின்திகழ் சிகரம் திண் தோள் – அழகியதொரு
மலையிலேவிளங்குகிற கொடுமுடிபோன்று வலிய தோள்களையுடைய,
வீமன்-வீமசேனன், தெய்வம் முனிபுங்கவன்தன் திரு தாள்போற்றி-
தெய்வத்தன்மையையுடைய அந்த உரோமசனென்ற இருடிச்சிரேஷ்டனது
திருவடிகளைவணங்கி, மெய் மலரை திரு முன்பு வைத்து நின்று –
உண்மையான அந்தமலரை (அம்முனிவனது) சந்நிதனத்திலே வைத்துவிட்டு
நின்றுகொண்டு, வினவினான்- (‘இதன்வரலாறு யாது?’என) அவனைக்
கேட்டான்;அவன்உம் எதிர் விளம்புவான் -அம்முனிவனும் (அவ்வினாவுக்கு)
விடை கூறுபவனானான்; (எ-று.)-அதனைமேலே காண்க.

     உலகமெங்கும்அகப்படாத இந்த மலரின் சிறப்பை நோக்குமிடத்து
‘இதுமாயையினாலாகியமலரோ?’என்று ஐயங்கொள்ள இடமுண்டாதலின்,
அதனையொழித்தற்கு’மெய்ம்மலர்’என்றான்: மலரென்றால்இதுவே மலர்,
மற்றையவை மலரல்லவென்னும் பொருளும் இத்தொடரில் தோன்றும்.
அம்மலர் என எடுத்து, அழகிய பூவென்றுங் கொள்ளலுமாம்.
செம்மலையென்பதை-செம்பொன் மலையெனக்கொள்வாருமுளர்.  அவனி
– அவநி: மன்னவராற் பாதுகாக்கப்படுவதென்று காரணப்பொருள்படும்
வடசொல்.  புங்கவன் என்பதற்கு – ஆண்பசு [எருது]போன்றவனென்று
பொருள்: சிங்கம், புலி, யானை,காளைஇச்சொற்கள் மனிதனுக்கு
வரும்போது சிறப்புப்பொருளையுணர்த்துதல், மரபு.  

என் பலவும் யாம் உரைப்பது, இந்தப் பூவின்
இயல்பினையும், பெருமையையும்? இயக்கர்தங்கள்
மன் பதியில் உளது; அன்றி, வரம்பு இலாத வான் உலகில் உளது;
என்னின், மற்றும் உண்டோ?
உன் பிறருக்கு இது கோடற்கு எளிதோ? மாயன் உம்பர் பதி
புகுந்து, ஒரு பைந்தோகைக்கு ஈந்த
பின்பு, இதனைக் கண்டு அறிவார் இல்லை’ என்று பேசினான்-
யாவரொடும் பேச்சு இலாதான்.14.-உரோமசன்அம்மலரைப்பற்றிக் கூறுதல்.

யாம்-,இந்த பூவின்-,இயல்பினையும்-,பெருமையையும்-,
பலஉம் – பலபடியாக, என்உரைப்பது-?(இப்பூ),-இயக்கர்தங்கள்
மன்பதியில் – யட்சர்கட்குத் தலைவனானகுபேரனுடைய நகரான
அளகையிலே, உளது-;அன்றி – அல்லாமல், வரம்பு இலாத – (சிறந்த
பொருள்களில் இன்னதுதான் உள்ளது என்று) வரையறுத்துச்
சொல்லமுடியாத, வான் உலகில் – தேவலோகத்தில், உளது –
கிடைப்பதாகும்;என்னின் – இவ்வாறானால்,மற்றுஉம் உண்டுஓ – மேலும்
சொல்லவேண்டுவது உண்டோ?  உன் பிறருக்கு – உன்னைக்காட்டிலும்
வேறுபட்டவர்க்கு,  இது-இம்மலர், கோடற்கு-கொண்டு வருதற்கு, எளிதுஓ-
எளிதாகுமோ?  மாயன்-ஸ்ரீக்ருஷ்ணபகவான், உம்பர்பதிபுகுந்து-
தேவலோகத்திலே புகுந்து, ஒரு பைந் தோகைக்கு – ஒப்பற்ற இளைய
மயில்போன்ற சாயலையுடையளானசத்தியபாமைக்கு, ஈந்த-
(பாரிசாதமரத்தையே) தந்த, பின்பு-,இதனை- இதுபோன்ற சிறந்த
புஷ்பத்தை, கண்டு அறிவார் இல்லை-,என்று-,பேசினான்- கூறினான்:
(யாவனென்னின்),-யாவரொடுஉம் பேச்சு இலாதான் – எவரோடும்
பேசுதலில்லாத உரோமசமுனிவன்;(எ-று.)

     இதனால்,இந்தப்பூ அளகையிலுள்ள தென்றும், உன்னாற்கொள்ள
முடியுமென்றும், இது வானுலகத்திலுள்ள தெய்வப்பூவோடொப்பது என்றும்
கூறியவாறாயிற்று: முதலில் இயக்கர் தங்கள் பதியிலுள்ளது என்றுகூறி,
பிறகு ‘வானுலகிலுள்ள’என்று கூறினான். இதனால்,’கிடைப்பதற்குஅரிய
இந்தப்பூப்போன்ற சிறந்த மலர்வானுலகிலுள்ளது’என்று கருத்துக்கொள்ள
வேண்டுமேயின்றி இதுவே வானுலகத்திலுள்ளது என்று கொள்ளுதல் இயலாது.

     இங்ஙன்சிறந்த வானுலகத்து மலரை ஸ்ரீக்ருஷ்ணபகவான்
சத்தியபாமைக்குத் தந்ததை மூன்றாமடிகூறிற்று: மாயவன் மலரைப்
பைந்தோகைக்கீந்த சரிதை வருமாறு:-கண்ணன்நரகாசுரனையழித்தபின்பு
அவனால்முன்பு கவரப்பட்ட (இந்திரன் தாயான அதிதிதேவியின்)
குண்டலங்களைஅவ்வதிதிதேவிக்குக் கொடுக்கும்பொருட்டுச்
சத்தியபாமையுடனே கருடன் தோள்மேலேறித் தேவலோகத்துக்குச் செல்ல,
அங்கு இந்திராணி சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களையும்செய்தும்
தேவர்க்கேயுரியதென்று தான் சூடியிருந்த பாரிசாதப்பூவைப் போன்ற
பூவைக் கொடாமலிருக்க, சத்தியபாமை அந்தப்பூவில் விருப்புற்றவளாய்,
‘இவ்வகைமலரைத் தரும் இந்தப் பாரிசாதத்தருவைத் துவாரகைக்குக்
கொண்டு போகவேண்டும்’என்ன, ஸ்ரீகிருஷ்ணன் அந்தத்தருவை வேரொடு
பெயர்த்துக் கருடன் தோள்மேல் வைத்தருள, அப்போது இந்திராணி
தூண்டிவிட்டதனால்வந்து மறித்துப் போர் செய்த இந்திரனைச்சகலதேவ
சைனியங்களுடன் சங்கநாதத்தாலே பங்கப்படுத்திப் பின்பு பாரிஜாத
மரத்தைத் துவாரகைக்குக் கொண்டுவந்து சத்தியபாமை வீட்டுப் புறங்கடைத்
தோட்டத்தில் நாட்டியருளின னென்பது.  

இயக்கர் பதிதனில் உளது’ என்று இசைத்த மாற்றம்
இன்புறக் கேட்டு, ஒருகாலும் ஈறு இலாத
வயக் கொடு வெஞ் சராசனமும், வன் போர் வாகை மறத்
தண்டும், கரத்து ஏந்தி, ‘மடந்தை! நெஞ்சில்
துயக்கம் அற, இக் கணத்தில் தெய்வ போக சுரபி மலர்
அளித்திடுவன்’ என்று சொல்லி,
சயக் கரடம் உறு தறுகண் சயிலம் அன்ன சதாகதி-மைந்தனும்,
இமைப்பில் தனிச் சென்றானே.15.-உரோமசமுனிவனால்அளகையிலுள்ளதாக வறிந்து
வீமன் அம்மலரைக்கொணருமாறு செல்லுதல்

சயம்- வெற்றியையும், கரடம் – மதத்தையும், உறுதறுகண் –
மிக்க அஞ்சாமையையுமுடைய, சயிலம் – மலைபோன்றயானையை,அன்ன-
ஒத்த, சதாகதி மைந்தன்உம் – வாயுகுமாரனானவீமனும்,-இயக்கர்பதிதனில்
உளது என்று இசைத்த  மாற்றம் – யக்ஷர்களுடைய ஊராகிய அளகாபுரி
பட்டணத்தில் (இம்மலர்) இருக்கிறதென்று (உரோமச முனிவன்)
சொன்னவார்த்தையை, இன்பு உற கேட்டு-மகிழ்ச்சிமிகக் கேட்டு, ஒரு
கால்உம் ஈறுஇலாத-ஒருபொழுதும் அழிதலில்லாத, வய கொடு
வெம்சராசனம்உம்-வலிமையையும் மிக்க கொடுமையையுமுடைய வில்லையும்,
வல் போர் வாகை – வலிய போரில் வெற்றிமாலைசூடுதற்குரிய, மறம்
தண்டுஉம் – வலிமையையுடைய கதாயுதத்தையும், கரத்து ஏந்தி – கைகளிலே
எடுத்துக்கொண்டு, மடந்தை நெஞ்சில் துயக்கம் அற-மனைவியான
திரௌபதியினது மனத்திலேயுள்ள தளர்ச்சியொழியும்படி, தெய்வம் போகம்
சுரபி மலர் இ கணத்தில் அளித்திடுவன் என்று சொல்லி –
‘தேவர்கள்அநுபவிப்பதற்குரிய நறுமணத்தையுடைய இதுபோன்ற
பூவை இந்தக் கணப்பொழுதிலேயே (சென்று) கொணர்ந்து கொடுப்பேன்’
என்று சொல்லி, இமைப்பின்-ஒருமாத்திரைப் பொழுதிலே, தனி – தனியாக,
சென்றான்- புறப்பட்டுப் போனான்;(எ-று.)

     முனிவனதுவார்த்தையைக்கேட்டதும் வீமன் எளிதில்
அளகாபுரிக்குப்போய் அவ்வகை மலரைக் கொண்டுவந்து கொடுக்கலாமென்று
கருதி மகிழ்ந்ததனால்,’இன்புறக்கேட்டு’என்றார். வீமன் கதைக்குச்
சத்துருகாதினி என்றுபெயர்;பகைவரைக் கொல்வது என்று பொருளாம்.
சராசனம்=ஸராஸநம்: அம்புகளைத்தள்ளுவதென்று அவயவப் பொருள்படும்.
தைவபோகஸு ரபி என்ற வடசொற்றொடர்திரிந்துவந்தது. சயம் என்பதை
ஜயமென்பதன் திரிபாகக் கொள்ளாமல், ஸயமென்ற வடசொல்லின் திரிபு
எனக் கொண்டால், (துதிக்)கை என்று பொருளாம். வலிமையும் பருமையும்
கம்பீரமான தோற்றமும் மதநீரருவி பெருகுதலும் அழித்தற்கருமையும்பற்றி,
யானைக்குமலையுவமை. யானையை ‘சயக்கரடமுறுதறுகட்சயிலம்’என்றது –
வெளிப்படை;பிறகுறிப்பின் பாற்படும்.  ஸதாகதி-எப்பொழுதுஞ்
சஞ்சரித்தலுடையவன்.  இங்கே வீமனை ‘சதாகதிமைந்தன்’என்று பெயராற்
கூறினது – பிதுஸ்ஸதகுணம் புத்ர:’ என்றவாறு தந்தையாகிய வாயுவினும் பல
மடங்கு அதிகமாக விரைந்து நடந்துசெல்லும் வல்லமையுள்ளான்
மைந்தனானவீமனென்பதற்கு: கருத்துடையடைகொளி
தனிச்சென்றான்என்றதனால், இவன் அசகாய சூரனென்பது விளங்கும்

கைக் காற்றும், தொடைக் காற்றும், மூச்சுக் காற்றும், கனக
மணி வரை போலக் கவின்கொள் சோதி
மெய்க் காற்றும், பரந்து எழுந்து, வனத்தில் உள்ள வெற்பும்
நெடுந் தரு அனைத்தும் ஒடிந்து வீழ,
எக் காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என, சென்றான்-
இன வளைகள் எண் இல் கோடி
செய்க் காற்றும் செழுந் தரளம் நிலவு வீச, சேதாம்பல்
பகல் மலரும் செல்வ நாடன்.16.-வீமன்விரைந்து சென்றதன் வருணனை

செய்க்கு – கழனிகளிலே, எண் இல் கோடி – அளவில்லாத
[அநேக]கோடிக் கணக்காகிய, இனம் வளைகள்- கூட்டமாகிய சங்குகளும்,
ஆற்றும் செழு தரளம்-(அவைகளாற்) பெறப்பட்ட மிகுந்த பெரிய
முத்துக்களும், நிலவு வீச – சந்திர காந்தி போன்ற குளிர்ந்த
வெள்ளொளியை வீசுதலால், சேது ஆம்பல் பகல் மலரும் – (அதனைச்
சந்திரனொளியென்றேகருதி மயங்கிச்) செவ்வாம்பற் பூக்கள் (உண்மையான
சந்திரனொளியில்லாத)பகற்பொழுதிலேயே மலர்தற்கிடமான, செல்வம் நாடன்
– (நிலவளம் நீர் வளம் முதலிய பல வளங்களையுமுடைமையால்)மிக்க
செல்வத்துக்குக் காரணமான குருநாட்டையுடைய வீமசேனன்,-கைகாற்றுஉம்
– கைகள் வீசுதலினாலுண்டாகிறகாற்றும், தொடை காற்றுஉம் – தொடைகள்
வீசுதலினாலுண்டாகிறகாற்றும், மூச்சு காற்று உம் –
பெருமூச்சுவிடுகிறதினாலுண்டாகிறகாற்றும், கனகம் மணி வரை
போல் கவின் கொள் சோதி மெய் காற்றுஉம் – பொன்மயமான அழகிய
மகாமேரு மலைபோலஅழகு பொருந்திய ஒளியையுடைய உடம்பு
அசைவதனாலுண்டாகியகாற்றும், (ஆகிய இவையெல்லாம்), பரந்து எழுந்து-
பரவியெழுவதனால்,வனத்தில் உள்ள வெற்பு நெடுந் தரு அனைத்துஉம்
ஒடிந்து வீழ – (அவன் செல்லும் வழியில்) காடுகளிலுள்ள மலைகளும்
உயர்ந்த மரங்களும் ஆகிய எல்லாம் முறிந்து விழும்படியாகவும்,-எ
காற்றுஉம் உடன்று எழுந்து உகாந்த காலம் என – (அதனைக்கண்டு
எல்லோரும்) எல்லாக்காற்றுக்களும் மோதியெழப்பெறுகிற பிரளயகாலம் இது
என்று சொல்லும்படியாகவும், சென்றான்-(வடதிசையிற்)போனான்;

     முதலிரண்டடிகளால்,வீமசேனனது அளவில்லாத வலிமை
விளங்குகின்றது, ‘கனகமணிவரைபோல’என்ற உபமானத்தால் வீமனது நிறம்
பொன்னிறமென்பது அறிக. காற்றும் என்றதை-பலதிசைக் காற்றுக்களாகக்
கொள்க.  சருவசங்கார காலத்தில் ஒருசேரப் பலகாலம் பெருங்காற்று
அடிக்க, அதனால்அநேக உயிர்கள் அழியுமென்பது, புராணங்களின்
கொள்கை.  செய் – கழனியென்னும் பொருளதாதலை’நன்செய்’,’புன்செய்’
என வழக்கிலும் காண்க.  மிகுந்த நீர்வளமுள்ள இடங்களில்
தங்கும்படியான சங்குகளும் ஆம்பல்களும் கழனிகளிலேயுள்ளனவாகக்
கூறினது, அந்நீர்வளத்தை உணர்த்துதற்கென்க.  சங்கு, முத்துப்
பிறக்குமிடங்களில் ஒன்று.  சந்திரனைக்கண்டமாத்திரத்தில்
மலருந்தன்மையுடைய ஆம்பல்மலர்கள் வெள்ளியசங்குகளையும்
முத்துக்களையும்பார்த்துச் சந்திரனொளியெனமயங்கினவாகக்கூறினது,
மயக்கவணி.  வனவசாஞ் செய்யும் வீமனை’செல்வநாடன்’என்றது, இனித்
துதியோதனர் நூற்றுவரையுங் கொல்லும் இவன் அவர்களது நாடு
முழுவதுக்கும் உரியவனென்னுங் கருத்தால்.   

இலங்கை நகர் தன்னில் விறல் இராம தூதன் இகல் அரக்கன்
சோலை எலாம் இறுத்தவாபோல்,
நிலம் குலுங்க, வரை குலுங்க, வனத்தில் உள்ள நெடுந்
தருக்கள் யாவையும் வேருடன் நேராக்கி,
விலங்கினொடு புள் இனமும் உடையத் தாக்கி, மெய்ந் நடுங்கி,
தடுமாறி, வெம்பி உள்ளம்
கலங்கி விழ, கனம் அதிர்வ போல ஆர்த்து, காஞ்சனப் பேர்
எழில் வனமும் கடந்திட்டானே-17.-வீமன்விரைந்துசென்று காஞ்சனவனத்தையுங் கடந்
திடுதல்

இலங்கை நகர் தன்னில் – இலங்காபுரியிலே, விறல்
இராமதூதன் – வெற்றிபொருந்திய ராமதூதனாகியஅநுமான், இகல்
அரக்கன் சோலைஎலாம்-மாறுபாட்டையுடைய அரக்கனான
இராவணனுடைய (அசோகவனிகையென்ற) சோலைமுழுவதையும், இறுத்த
ஆ போல் – முறித்த விதம்போல,-நிலம்குலுங்க-பூமி அசையவும்,
வரைகுலுங்க-மலைசலிக்கவும்,வனத்தின்உள்ள நெடுந்தருக்கள் யாவைஉம்-
காட்டிலுள்ள பெரிய மரங்கள் எல்லாவற்றை
யும், வேருடன்-,நேர் ஆக்கி-அழித்து,-விலங்கினொடு-மிருகங்களினுடனே,
புள் இனம்உம்-பறவைக் கூட்டங்களும், உடைய-அழியும்படி, தாக்கி-மோதி,
மெய் நடுங்கி உள்ளம் வெம்பி தடுமாறி கலங்கி விழ கனம் அதிர்வ போல
ஆர்த்து-உடல்நடுங்கி உள்ளம் கரிந்து தடுமாற்றமடைந்து கலங்கி விழும்படி
மேகம் இடிப்பது போலப் பேராரவாரஞ்செய்துகொண்டு, காஞ்சனம் பேர்
எழில் வனம்உம் – காஞ்சனமென்று பேரையுடைய பெரிய அழகிய
வனத்தையும், கடந்திட்டான்-;(எ-று.)

     இந்தவீமசேனன் செல்லும் விசையினால்,நிலங்குலுங்குதல் முதலியன
நிகழலாயின என்க.  அடையத் தாக்கி என்று பிரதிபேதம்.

அவ் வனத்தை இகந்து, அனந்த காதம் ஏகி, அங்கு இடைவிட்டு,
உத்தரத்தின் அப்பால் ஏகி,
மெய் வனப்பும் அடல் வலியும் மிகுத்த வாகை வீமன் எனும்
பேர் திசையின் விளக்கும் வீரன்,
மை வனப்பினுடன் படியும் சினைக் கை வாச மலர்ப் பொழிலின்
ஒரு மருங்கே, மத்த மாவின்
கை வனப்பும், தழை செவியும், மருப்பும், சேரக் கவின்
அளிக்கும் குலைக் கதலிக் காடு கண்டான்18.-வீமசேனன்கதலிவனத்தைக் காணுதல்

மெய்வனப்புஉம் – உடலழகும், அடல் வலிஉம்-(பகைவரை)
அழிக்க வல்ல உடல் வலிமையும், மிகுத்த-மிக்குள்ள, வாகை-
வெற்றியையுடைய, வீமன் எனும் பேர் திசையின் விளக்கும்வீரன் –
வீமனென்கிற (தன்) பெயரைத் திக்குகளில் விளங்கச் செய்பவனாகியஅந்த
வீரன்,-அவனத்தை இகந்து – அந்தக் காஞ்சன வனத்தைவிட்டு, அனந்தம்
காதம் ஏகி – பல காததூரஞ்சென்று, அங்கு இடைவிட்டு-
அவ்விடத்தைவிட்டு, உத்தரத்தின்-வடதிசையாக, அப்பால் ஏகி-
அப்புறஞ்சென்று,-மை-மேகம்,வனப்பினுடன்-அழகிய நிறத்தோடு, படியும்-
தங்கப்பெற்ற, சினை-கிளைகளின்,கை-பக்கங்களிலே, வாசம் மலர் –
நறுமணமுள்ள மலர்களைக்கொண்ட,பொழிலின் – சோலையின்,
ஒருமருங்கே – ஒருபக்கத்திலே, மத்தம்மாவின்- மதம் பிடிக்குந்
தன்மையுள்ள யானையின்,கை வனப்புஉம்-கையினழகும், தழை செவிஉம் –
தழைந்த காதுகளும், மருப்புஉம்-தந்தங்களும், சேர-சேர்தலால், கவின் –
அழகை, அளிக்கும் – தருகின்ற, குலைகதலி காடு – குலைபொருந்திய
கதலீவனத்தை, கண்டான்-;(எ-று.)

    பின்னிரண்டடிகள் – கதலீவனத்தின் தன்மையைக் கூறுவன.
கதலீவனமென்பதனை,கதலிக்காடு என்றார். தூரத்திலிருந்து காணும்போது
தழைந்தஇலைகள்யானைக்காதுகளையும்,அடித்தண்டு நிலம்படியும்
யானைக்கைகளையும்,குலைகள்யானைமருப்புக்களையும் போலுதலால்,
கதலிவனம் ‘மத்தமாவின்கைவனப்பும்தழைசெவியும் மருப்புஞ்சேரக்
கவினளிக்குங் குலைக்கதலிக்காடு’எனப்பட்டது.  பலபொழில்கள்சுற்றியிருக்க
அவற்றினிடையே இந்தக் கதலிக்காடு இருப்பதுஎன்பதனை,’பொழிலினொரு
மருங்கே கதலிக்காடு’என்பது, விளக்கும்.

அக் கதலி வனம்தனக்குக் காவல் ஆய அடல் அரக்கர்
அநேகருடன் அடு போர் செய்து,
மிக்க தலம் குருதியினால் வெள்ளம் ஆக்கி, வெகுண்டவர்தம்
ஆவியையும் விண்ணில் ஏற்றி,
திக்கு அதலம் முதலாம் எவ் உலகும் ஏங்க,
சிங்கநாதமும் செய்தான்; செய்த காலை,
உக்க, தலைமணி உரக ராசற்கு; என்றால், உம்பர் படும்
துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ?19.-வீமன்கதலீவனத்துக் காவலரை உயிரொழித்துக்
கர்ச்சித்தல்

அகதலி வனம் தனக்கு – அந்தக்கதலிவனத்துக்கு, காவல்
ஆய – பாதுகாவலைச்செய்துகொண்டிருந்த,அடல் அரக்கர் அனேகருடன்
– வலிமை பொருந்திய ராட்சசர்பலரோடும், அடு போர் செய்து –
(அவருயிரை) அழிக்கவல்ல போரைச் செய்து,-மிக்கதலம் – பூமியின்
பெரும்பகுதியை, குருதியினால்வெள்ளம் ஆக்கி –
இரத்தவெள்ளம்பரவும்படிசெய்து, வெகுண்டவர்தம் ஆவியைஉம் –
(தன்னோடு)கோபித்துப்பொருத அரக்கரின்உயிர்களையும்,விண்ணில் ஏற்றி
– வீரசுவர்க்கத்தை யடையுமாறுசெய்து, திக்கு – கீழைத்திக்கிலிருப்பதாகிய,
அதலம்முதல்ஆம்-அதலம்முதலான, எ உலகுஉம்-எந்த உலகமும், ஏங்க-
ஏக்கமடையும்படி, சிங்கநாதமும் செய்தான்-;செய்த காலை- அப்படிச்
சிங்கநாதஞ் செய்தபோது, (அந்தஒலியின் அதிர்ச்சியினால்),உரகராசற்கு-
ஆதிசேஷனுக்கு, தலைமணி – சிரசிலிருக்கும் மாணிக்கம், உக்க-சிந்தின;
என்றால்-இவ்வாறுநிகழ்ந்ததானால்,-உம்பர்படும் துயரம்-
மேலுலகத்திலுள்ளவரான தேவர்கள் படுகின்ற துயரத்தை, எம்மால்-,
உரைக்கல் ஆம்ஓ-சொல்ல முடியுமோ?  (எ-று.)

    எல்லாப்பாரத்தையுங்கீழிருந்துசுமக்கும் ஆதிசேஷனது முடிமணியே
வீமன்செய்த சிங்கநாதத்தால் உக்கதென்றால்,எப்போதும் சுகத்தையே
யனுபவித்துக்கொண்டிருக்குந் தேவர்கள் மேனோக்கியெழுந்தன்மையுள்ள
அந்தச் சிங்கநாதவொலியால் மிகவும் வருந்தினார்களென்பதுசொல்லாமலே
விளங்கு மெனத் தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணிபடக் கூறினார்

வரை கலங்க, வனம் கலங்க, கலங்குறாத மண் கலங்க,
விண் கலங்க, மகர முந்நீர்த்
திரை கலங்க, திசை கலங்க, ஈறு இலாத செகம் கலங்க,
உகம் கலங்க, சிந்தை தூயோர்
உரை கலங்க, உளம் கலங்க, துளங்கி மெய்யில் ஊன் கலங்க,
விலங்கொடு புள்இனங்கள் யாவும்
நிரை கலங்க, உலகின் உயிர் படைத்ததம்மில் நிலை
கலங்காதன உண்டோ, நிகழ்த்தின் அம்மா!20.-வீமன்செய்தசிங்கநாதத்தால் யாவும் கலங்குதல்

வரைகலங்க – மலைகள்நிலைகுலையவும்,வனம் கலங்க –
காடுகள் நிலைகலங்கவும்,கலங்குறாதமண் – அசையுந் தன்மையில்லாத
இந்தப்பூமியும், கலங்க-,விண் கலங்க-,மகரம் முந்நீர் திரை கலங்க –
சுறாமீனைக்கொண்ட கடலின் அலைகலங்கவும், திசை கலங்க –
திக்குக்கள் கலங்கவும், ஈறுஇலாத – முடிவில்லாத [மிகப்பலவான],செகம் –
உலகங்களெல்லாம், கலங்க-,உகம் கலங்க – காலமும்நிலைகலங்கவும், –
சிந்தைதூயோர் உரை கலங்க – மனந்தூய்மையரான பெரியோரின்பேச்சுங்
கலங்கவும்,-உளம்கலங்க – (அவர்களுடைய) மனமுங் கலங்கவும்,-துளங்கி
மெய்யில் ஊன் கலங்க – அசைதலுற்று உடம்பிலுள்ள தசை கலங்கவும்,
விலங்கொடு புள் இனங்கள் யாஉம் – மிருகங்களோடு
பறவைக்கூட்டங்களெல்லாமும், நிரை கலங்க – கூட்டங் கூட்டமாய்க்
கலங்கவும்,-(இங்ஙன்),-உலகின்- உலகிலே, உயிர் படைத்த தம்மின் –
உயிர்படைத்தபொருள்களில், நிகழ்த்தின் – சொல்லுமிடத்து, நிலைகலங்காதன
உண்டுஓ-?  [இல்லை];(எ-று.)

     அம்மா -வியப்பிடைச்சொல்: ஒருவனுடைய சிங்கநாதத்தால் இங்ஙனம்
எல்லாம் நிலைகலங்கலாயிற்றேஎன்று வியந்தவாறு.
சொற்பொருட்பின்வருநிலையணி. உலகத்திலே உருவத்தையும்
பெயரையும்படைத்த எல்லாப்பொருட்கும் உயிருண்டென்பது
வேதாந்திகளின்கொள்கை யாதலால், ‘வரைகலங்க’என்று தொடங்கிய கவி,
‘உலகினுயிர்படைத்ததம்மினிலைகலங்காதனவுண்டோ’என்று முடித்தார்

அந்த ஓதை, அப் பொழிலிடைத் தவம் புரிந்தருளும்
மந்தராசலம் அனைய தோள் மாருதி கேட்டு,
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய்,
முந்த மற்று அவன் வரு நெறி அதனிடை முன்னி,21.-ஆறுகவிகள்- குளகம்: அவ்வொலிகேட்ட அநுமான்
வீமசேனன் செல்லும்வழியிலிருத்தல்

அபொழிலிடை – அந்தக் கதலிவனத்திலே, தவம்
புரிந்தருளும் – தவஞ்செய்துகொண்டிருந்தருளுகிற, மந்தர அசலம் அனைய
தோள் மாருதி – மந்தரமலையையொத்ததோள்களையுடையஅனுமான்,
அந்த ஓதை – (வீமசேனனாலுண்டான)அந்தப்பேரொலியை, கேட்டு –
செவியுற்று, விந்தம் அன்ன திண் புயஅசலம் வீமனுக்கு எதிர்போய் –
விந்திய கிரியையொத்த வலிய தோள்களாகிய மலைகளையுடைய
அவ்வீமசேனனுக்கு எதிரிற்சென்று, முந்த அவன் வரும் நெறியதனிடை
முன்னி – முதலில் அவன் வருகிற வழியில் நெருங்கி,-(எ-று.)-‘நீட்டி’என
அடுத்த கவியோடு தொடரும்.

     தவம்புரிதல்,இந்தக்கற்பாந்தத்தில் பிரமனது பதவியைப்
பெறுதற்கென்க.  தவமாவது – தன்உயிருக்குவருந் துன்பங்களைப்
பொறுத்துப் பிறஉயிர்களைஓம்புதலாதலின்’புரிந்தருளும்’ எனப்பட்டது;
இனி, ‘அருள்’துணைவினையெனினுமாம்;பெரியோர்களின் செயலைக்
கூறுமிடத்து ‘அருள்’என்பதைத் துணைவினையாகச்சேர்த்துக் கூறுதல்,
மரபு.  மந்தரமலைபாற்கடலைக்கடைந்து கலக்கினது
போல் அனுமானது வலியபெரியதோள்கள் போர்க்கடலைக் கலக்கியதென்பார்
‘மந்தராசலமனையதோள்’என்றார். மாருதி – மாருதனது மகனென்று
பொருள்;மாருதன் – வாயுதேவன்.  கேசரி யென்னும் வானரவீரனது
மனைவியானஅஞ்சநாதேவியினிடத்து வாயுதேவனுக்குப் பிறந்தவன்
அநுமானென்க: இப்பெயர் – பீமசேனனுக்கும்  வழங்கும். வீமனது
தோள்வலிமை அநுமானது வடிவத்தைக்கண்ட மாத்திரத்தில் இனி
அடங்குதலால், அதற்கு, அகத்தியரது வடிவத்தைக் கண்டமாத்திரத்தில்
அடங்கிய விந்திய மலையைஉவமை கூறினாரென்க;இல்லாவிட்டால்,
புயாசலம் என வலிமைக்கு உவமை கூறுதலோடு ‘விந்தமன்ன’என்ற
உவமையுங் கூறியதற்குப் பயனின்றாம். இனி, விந்தாசலம் அன்ன
திண்புயம் வீமன் என மொழி மாற்றினுமாம்.

     இதுமுதல்இருபத்தொன்பது கவிகள் – பெரும்பாலும் முதற் சீரும்
ஐந்தாஞ்சீரும் மாச்சீர்களும், மற்றை மூன்றும் விளச்சீர்களுமாகிய
கலிநிலைத்துறைகள்

வெற்பு இரண்டினில் வேலை முன் கடந்த தாள் நீட்டி,
பொற் புயாசலம் இரண்டையும் இரு வரை போக்கி,
அற்ப வாழ்வுடை அரக்கன் மா நகர் அழல் ஊட்டும்
சிற்ப வாலதி திசை எலாம் சென்று நின்று ஓங்க,

வெற்பு இரண்டினில் – இரண்டுமலைகளிலே,முன்-(இராம
தூதனாகஇலங்கையிற்சென்ற) முற்காலத்தில், வேலைகடந்த – கடலைக்
கடந்த, தாள் – பாதங்களை,நீட்டி-,பொன் புயாசலம் இரண்டைஉம் –
பொன்போலழகிய மலைபோன்றகைகளிரண்டையும், இரு வரை போக்கி –
இரண்டுமலைகளிலேசெலுத்தி, அற்பம் வாழ்வுஉடை – அற்பமான
வாழ்க்கையையுடைய, அரக்கன் – இராவணனுடைய, மா நகர் – பெரிய
நகரை, அழல் ஊட்டும்-அழலையுண்ணுமாறு[எரிக்குமாறு]செய்த, சிற்பம் –
தொழில்செய்வதில் திறமையுள்ள, வாலதி – (தன்) வால், திசைஎலாம் –
திக்குகளிலெல்லாம், சென்று – போய், நின்று இருந்து, ஓங்க-ஓங்கா நிற்க,-
(எ-று.)-‘இருந்தனன்’என மேற்கவியில் முடியும்.

     இதனால்,அப்போது பேருருவுகொண்டிருந்தனன் அநுமான் என்பது,
பெறப்படும்.  இவன் இராமதூதனாய்இலங்கைபுக்கு அந்நகரையெரியூட்டியமை
பிரசித்தம். சிற்பம்-சிறுமை என்றாருமுளர்.   

எம்பிரான் தனக்கு ஒழிய-நமக்கெல்லாந் தலைவரான
திருமாலொருவருக்கே யல்லாமல், வேறு யாவர்க்குஉம் தெரியா – வேறு
ஒருவர்க்கும் கட்புலப்படாத [தெய்வத்தன்மையுடைய],செம்பொன் மா மணி
குண்டலம்-சிவந்த பொன்னாலாகியசிறந்த இரத்தி
னங்களைப்பதித்த இரண்டு குண்டலங்கள், இரு புறம் திகழ – இரண்டு
பக்கங்களிலும் விளங்க,-விம்பம்மால் வரை மீது – வட்டவடிவமான
பெரியதொரு மலையின்மேல்,ஒருமேருஏ ஒக்கும் அம்பொன் மால் வரை
இருந்து என – மகாமேருமலையையேபோல்வதொரு அழகிய
பொன்மயமான பெரியமலைதங்கியிருந்தாற்போல, அநுமான் இருந்தனன்-
அனுமான் வீற்றிருந்தான்;(எ-று.)

     “காஞ்சநாத்ரிகமநீயவிக்ரஹம்[பொன்மலைபோலழகியதிரு
மேனியையுடையவன்]” என்றபடி அநுமான் பொன்மலைபோல்பவனாதலால்,
மலையின்மேல்அநுமான் இருந்ததற்கு, மால்வரைமீது இருக்கும்
மேருவேயொக்கும் மற்றொருமால்வரையை யொத்திருந்த தென
இல்பொருளுவமை கூறினார்.

     இங்கே ‘எம்பிரான்’என்றது – விஷ்ணுவின் ஏழாவது
திருவவதாராமான ஸ்ரீராமனை.திரிவிக்கிரமாவதாரஞ்செய்த
திருமாலையொழியவேறெவர்க்குங் கண்ணுக்கெட்டாத குண்டல மென்றும்
முன்னிரண்டடிகட்கு உரைக்கலாம்: இங்ஙனங்கொள்ளின், மிக்க ஓங்கிய
வடிவுடன் அநுமான் இருந்தானென்க.  இவ்வநுமான் குழந்தைப்பருவத்தில்
இளஞ்சூரியனைக்கனிந்த பழமென்று கருதிப் பிடிக்கப் பாய்ந்தபொழுது,
அதனையறிந்துசினந்த இந்திரனது வச்சிராயுதத்தினாலடிக்கப்பட்டுச்
சிதைந்து வீங்கிய கன்னமுடைய னாதலால்,இவனுக்கு ஹநுமானென்று
திருநாமம். அனுமான்=ஹநுமாந்: வடசொற்றிரிபு: இதற்குக் கன்னத்தில்
வேறுபாடு உடையவன் என்பது பொருள்;ஹநு – கன்னம்:மாந்- வடமொழிப்
பெயர் விகுதி.  விம்பம்=பிம்பம்:வட்டமென்று பொருள். மேரு வென்பது
பொன்மயமான தாய்ப் பூமியின்மத்தியிலுள்ளதொரு மலை.

குகைத் தடங் கிரி அனைய தோள் கொட்டி, ஆர்த்து, உரப்பி,
நகைத்து, நாகமும் நாகமும் நடுங்கிட நடந்து,
மிகைத்த வாள் அரிபோல் வரும் வீமன்,-முன் கண்டு,
திகைத்து நின்றனன்-மறமையும் திறமையும் உடையான்.24.-ஆரவாரஞ்செய்துகொண்டு செல்லும் வீமன் தன்
முன்னே அநுமானைக்கண்டு திகைத்து நிற்றல்.

குகை-குகைகளையுடைய,தட-பெரிய, கிரி அனைய-
மலையையொத்த,தோள்-தோளை,கொட்டி-தட்டி, ஆர்த்து-
ஆரவாரஞ்செய்துகொண்டும், உரப்பி-அதட்டிக்கொண்டும், நகைத்து –
சிரித்துக்கொண்டே, நாகம்உம் – வானுலகும், நாகம்உம் – பாதாளலோகமும்,
நடுங்கிட-,மிகைத்த-(வலிமையினால்)மேம்பட்ட, வாள் அரி போல் –
கொடிய சிங்கம்போல, நடந்துவரும் – (கம்பீரமாக) நடந்து செல்லுகின்ற,
வீமன்-,மறமைஉம் – வீரகுணத்தையும், திறமைஉம் – சாமர்த்தியத்தையும்,
உடையான் – உடையவனாகியஅநுமானை,முன் – முன்னிடத்திலே, கண்டு
– (தான் போகமுடியாமல் குறுக்கிட்டிருப்பதைப்) பார்த்து, திகைத்து
நின்றனன்-;(எ-று.)

     கிரிக்குக்குகை, இயற்கையடைமொழி, ‘நகைத்துநாகமு நடுங்கிட
நடந்தனனடந்து’என்று பிரதிபேதம். 

அண்டர், தானவர், அரக்கரும், அணுகுறா வனத்தில்
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட, ஆர்த்து,
மண்டி மேல்வரும் மானுடன் ஆர் அடா?’ என்றான்-
சண்ட வாயுவின் தனயனை, மற்று அவன் தமையன்.25.-அனுமான்வீமனைக்கண்டு’நீயார் அடா?’என்று
வினவுதல்.

சண்டம் வாயுவின் தனயனை- உக்கிரமான வாயுவினது
குமாரனானவீமனைநோக்கி, அவன் தமையன் – (வரும்வழியிலிருந்த)
அவனது முன்னவனானஅனுமான், ‘அண்டர்தானவர் அரக்கர்உம்
அணுகுறாவனத்தில்-தேவர் அசுரர் இராக்கதர் என்னும் இவர்களும்
கிட்டவரவொண்ணாதஇக்கதலிவனத்திலே, எண் திசாமுகம் எங்கண்உம்
இரிந்திட ஆர்த்து – எட்டுத்திக்குகளினிட முழுவதும் அஞ்சியோடும்படி
ஆரவாரித்து, மண்டி மேல் வரும் – நெருங்கி எதிரில் வருகிற, மானுடன்
மனிதனே! (நீ), ஆர் அடா – யாரடா?’ என்றான்என்று வினவினான்:
(எ-று)-மற்று-அசை.

     இங்ஙனம்அனுமான் தோன்றினது, வீமசேனன் வழியிடையில்
யாதோரிடையூறுமின்றி இனிது காரியம் முடித்துச் செல்ல வேணுமென்னும்
விருப்பத்தினாலேயேயென்பது, முதனூலில் விளங்கும்.  அண்டர்-
அண்டகோளத்தின் மேலிடத்திலுள்ளவர்.  எண்டிசாமுகம்-நான்கு
பெருந்திசையும் நான்கு கோணத்திசையும்.  தமையன்-தம்ஐயன்
எனப்பிரித்துத் தமது தலைவனெனக்கொண்டுகாரணப் பெயராக்குக

தம்முன் ஆகிய வானரம் சாற்றிய உரை கேட்டு,
‘எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார் கொல்?’
என்று இசைத்தான்-
தெம் முன் ஆயினும், செவ்வி மென் போக மா மகளிர்-
தம் முன் ஆயினும், நாத் தவறா அடல் வீமன்26.-வீமன்’நீயார்?’என்று அவ்வனுமானைமாறு
வினாவுதல்

தெம்முன் ஆயின்உம் – பகைவரின் முன்பானாலும்,செவ்வி
மெல் தேகம் மா மகளிர்தம் முன் ஆயின்உம்-அழகிய மென்மையான
சரீரத்தையுடைய சிறந்த பெண்களது முன்பானாலும்,நா தவறா-நாக்கினாற்
சொல்லும்வாய்மை தவறுதலில்லாத, அடல் வீமன்-வலிமையுடைய
வீமசேனன்,-தம்முன்ஆகியவானரம் சாற்றிய உரை கேட்டு-தனக்குத்
தமையனானஅனுமான் சொன்ன வார்த்தையைச் செவியுற்று, எம் முன்
ஆகி வந்து இருந்த நீ யார் கொல் என்று இசைத்தான்-எமக்கு எதிரிற்
பொருந்தி வந்திருந்த நீ யாவனோ? என்று அவனைஎதிர் வினவினான்;
(எ-று.)

     “மனமெண்ணுகினும்,மெய்மையலதுரையாநா”என்றாற்போன்ற
நாவின்தூய்மை இயல்பை யுணர்த்துவதற்கு, ‘நாத்தவறா’எனப்பட்டது.
“விவாககாலத்திலும் மகளிரூடல்தீர்த்தலிலும் உயிர்காத்தற் பொருட்டிலும்
எல்லாப் பொருளையும்ஒருங்கே இழக்க நேருகையிலும் பொய்மைகூறலுந்
தகும்” என்ற நீதி நூலின் விலக்கும் இவனிடத்து இன்றென்பார்,
‘தெம்முனாயினுஞ்செவ்விமென்தேக மாமகளிர், தம்முனாயினும்
நாத்தவறாவடல்வீமன்’என்றார்: இத்தொடரில், இவன் வீரர்களையும்
மகளிர் போலவே எளிமையாகக் கருதுபவனென்ற கருத்துந்தோன்றும்.
இங்கு, அடல் வீமன் என்றது, சத்தியத்தின் திண்மையை விளக்குதற்கென்க.
தம்முன் – தமதுமுன் பிறந்தவன்: முன் – காலவாகுபெயர்.  வாநரம்
என்னும் வடசொல்லுக்கு – மனிதன்போல வடிவுள்ளதென்று பொருள்.
தெவ்+முன்=தெம்முன்.  போகமாமகளிர் என்று பிரதிபேதம்.

‘துன்னும் வெஞ் சிலை வலிகொலோ? தோள் இணை வலியோ?
என்னை, ‘நீ, புகல், ஆர் அடா!’ என்பது இங்கு எவனோ?
உன்னை நீ அறியா நெறி உணர்வு இலா மனிதா!
மன்னும் வால்தனைக் கடந்து போ, வல்லையேல்’ என்றான்.27.-‘என்வாலைக்கடந்துபோ, பார்ப்போம்’என்று
அநுமான் கூறுதல்.

இங்கு- இவ்விடத்திலே, என்னை-என்னைநோக்கி,நீ ஆர்
அடா புகல் என்பது – ‘நீயாரடா?  சொல்’என்று (நீ) கேட்பது, துன்னும்
வெம் சிலைவலி கொல் ஓ-(உன்னிடம்) பொருந்தின கொடிய வில்லின்
வல்லமையினாலோ? தோள் இணைவலிஓ – (வேறு உவமையில்லாத
ஒன்றோடொன்றொத்த)இரண்டு தோள்களின் வலிமையினாலோ? எவன்ஓ
– இன்னும் எந்தக் காரணத்தினாலோ? உன்னைநீ அறியா நெறி உணர்வு
இலா மனிதா – உன்னுடைய தன்மையை நீ யறியாத வழியறியாத மனிதனே!
வல்லைஏல்- (நீ) வலிமையுடையையாவையானால்,மன்னும் வால்தனை
கடந்து போ – (இங்குப்) பொருந்தின (எனது) வாலைத்தாண்டிப்போ’,
என்றான்- என்று (வீமனைநோக்கி அனுமான்) கூறினான்;

     நான் வினாவியதற்குஉன்னைஇன்னானென்றுதெரிவிக்காமல் மாறாக
‘நீயார்?’ என்று என்னைஅலட்சியமாக வினவுகின்றாயே? இதற்குக்
காரணம் நீ உன்னைவலியவனாகநினைத்திருப்பதன்றோ? அங்ஙனம்
உண்மையில் வலியவனாயிருப்பின்என் வாலைக்கடந்து செல், பார்ப்போம்
என்று அநுமான் கூறினனென்க.  உன்னைநீ யறியா என்ற தொடரில்,
உன்னைஎன் தம்பி யென்று அறிந்து கொள்ளாத என்ற பொருளும்
அடங்கியுள்ளது.  ‘அறியாநெறி’என்றெடுத்து, அறியாத நிலைமையையுடைய
[புத்தியில்லாத],மனிதனே!  என்று உரைப்பாருமுளர்.  முதனூலுக்கு ஏற்ப
‘வால்தனைக்கடந்து’என்பதற்கு – (என்) வாலைஅப்பாற் கிடக்க விட்டு
என்று கருத்துக்கொள்ளுதலும் ஏற்கும்.  வல்லை-வன்மையென்னும்
பண்பினடியாப் பிறந்த முன்னிலைக்குறிப்புமுற்று.  நீயறியாய் என்று
பிரதிபேதம்.     

உரம் கொள் வீமன் அம் மாருதி உரைத்த சொல் கேளா,
‘வரம் கொள் வார் சிலை இராகவன் மாப் பெருந் தூதன்,
தரங்க வாரிதி தாவும் என் தம்முன், வால் அன்றி,
குரங்கின் வால் இது கடப்பது இங்கு அரியதோ? கூறாய்!”28.-அநுமான்வாலையன்றிச்சாதாரணமான குரங்கின்
வாலைக்கடத்தல் எனக்கு அரிதேயோ?  என்று வீமன்
கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்) உரம்கொள் வீமன் – வலிமையைக் கொண்டுள்ள
வீமசேனன்,-அமாருதி உரைத்த சொல் கேளா – அந்த அநுமான் சொன்ன
வார்த்தையைக் கேட்டு, வரம் கொள் வார் சிலைஇராகவன் மா பெரு
தூதன் – (அகத்திய முனிவனிடத்தினின்று) வரமாகப் பெற்ற கட்டமைந்த
நீண்ட (கோதண்டமென்னும்) வில்லையுடையஸ்ரீராமனது சிறந்த பெரிய
தூதனாகிய,தரங்கம் வாரிதி தாவும் என் தம்முன் – அலைகளையுடைய
கடலைக்கடந்திட்ட எனது தமையனானஅனுமானினது, வால் அன்றி –
வால் மாத்திரம் கடப்பதற்கு அரியதேயல்லாமல், குரங்கின் வால் இது
கடப்பது இங்கு அரிய ஓ-சாதாரணக் குரங்காகிய உனது இந்த வாலைக்
கடப்பது எனக்கு இப்போது அருமையானதோ?  கூறாய்-சொல்லு;(எ-று.)-
‘என்றுதன்றிருத்துணைவனின்றிசைத்ததுகேட்டு’என்று மேலே தொடரும்.

     உரம் – தேகபலமும், ஆயுதபலமும்.  விசுவகருமனால் நிருமிக்கப்பட்டுச்
சிவபிரானைச்சயித்துப் பின்பு திருமாலின் கையிலிருந்தது பரசுராமன் பக்கல்
வந்து பல அரசர்களையும்வென்று பின்னர் இராமபிரானிடம் அவராற்
கொடுக்கப்பட்டதொரு வில் உண்டு: அதனை அவரிடத்திலிருந்து  பெற்றுச்
சென்ற வருணன் பின்பு கரன் முதலிய இராட்சதர்களின் வதத்தின் பொருட்டு
அகத்திய மகாமுனிவர்மூலமாக அவ்விராகவமூர்த்திக்கே கொணர்ந்து
கொடுத்தன னென்ற வரலாறுபற்றி, ‘வரங்கொள்வார்சிலையிராமன்’என்றது.
தசரத சக்கரவர்த்தியின் திருக்குமாரனானஸ்ரீராமன் தந்தையின்
சொல்லைக்காக்கவேணுமென்று கானகஞ் சேர்ந்து பஞ்சவடியில் வசிக்கும்போது
தன்னைமணந்துகொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்தித்த சூர்ப்பணகையின்
செவிமுதலிய உறுப்புக்களையறுப்பித்தான்: பின்னர் அவளுக்காகப் பரிந்து
வந்த கரன் முதலிய கொடிய இராக்கதர் பலரையும் கொன்றொழித்தானாக,
பின்பு சூர்ப்பணகையினால்தூண்டப்பட்டு இராவணன் பெருங்காதல் கொண்டு
சீதையைக் கவர்ந்து சென்றான். கவர்ந்து சென்ற சீதையைத்
தேடும்பொருட்டு வாநர ராசனானசுக்கிரீவன் வாரை வீரர்
களைஆங்காங்குத் தூதனுப்புகையில் தென்திசையில் இரண்டு வெள்ளம்
வானரசேனையுடன்அனுப்பப்பட்ட அங்கதன் ஜாம்பவான் நீலன் அநுமான்
முதலியோரில் அனுமான் கடல்கடந்து இலங்கையை யடைந்து சீதையைத்
தேடிக் கண்டு செய்தி சொல்லி அடையாள மோதிரத்தைக் கொடுத்துத்தேற்றி
அவளிடம் செய்தியும் சூளாமணியும் பெற்றுக்கொண்டு மீண்டு வந்து
இராமனிடம் அச்செய்தியைச் சொல்லினான்:அதுபற்றி,
‘இராகவன்மாப்பெருந்தூதன்தரங்கவாரிதி தாவும் என்தம்முன்’
எனப்பட்டான்.  வாரிதி-வடசொல்;நீர் தங்குமிடமென்று பொருள்.

என்று தன் திருத் துணைவன் நின்று இசைத்தது கேட்டு,
‘நன்று, நன்று! நீ நவின்றது நன்று!’ என நகையா,
‘துன்று வார் சிலை மனிதனைச் சுமந்து, தோள் வருந்தும்
புன் தொழில் சிறு குரங்கையோ, என்னொடும் புகல்வாய்?’29.-வீமன்கூறியது கேட்ட அநுமான் மனிதனைச்சுமந்த
அக்குரங்கை என்னோடுஒப்பச்சொல்லலாமோ?  எனல்.

என்று-,தன் திரு துணைவன்- தனது சிறந்த
உடன்பிறந்தோனானவீமசேனன், நின்று – எதிர்நின்று, இசைத்தது-
சொன்னதை, கேட்டு-,’நன்றுநன்றுநீ நவின்றது நன்று’என நகையா-
நன்றாயுள்ளதுநீ கூறுவது நன்றாயுள்ளதுஎன்று ஏளனமாகச் சிரித்து,-துன்று
வார் சிலைமனிதனை-(நாணி)நெருங்கிய நீண்ட வில்லையேந்திய
மனிதனானராமனை,சுமந்து – தாங்கி, (அதனால்),தோள் வருந்தும்-
தோள்வருத்தமடைந்த, புல்தொழில் சிறு குரங்கைஓ –
அற்பத்தொழிலையுடையசிறியகுரங்கையா,என்னொடுஉம்புகல்வாய் –
என்னிடத்துப் பாராட்டிச் சொல்வாய்?  (எ-று.)-என்றுதான்
வேறொருவானரன்போலத்தோன்றும்படி வீமனிடம் கூறினானனென்க.நன்று
நன்றிதுநவின்றதுவென மிகைநகையா என்று பிரதிபேதம்.

குரக்கு நாயகன் அவ் உரை கூறலும், கேட்டு,
தரைக்கு நாயகன் தடம் புயம் குலுங்கிட நகையா,
‘அரக்கர் நாயகன் ஊர் அழல் ஊட்டி, இவ் அகிலம்
புரக்கும் நாயகன்தன்னையோ, இழித்து நீ புகல்வாய்!’30.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: வீமன் மிகச்சிரித்து
இராகவ அநுமார்களின்பெருமைகளைச்சொல்ல,அநுமான்
மீண்டும் வினாதல்.

குரங்குநாயகன் – வானரசிரேட்டனானஅனுமான், அ உரை
– (புன்றொழிற்குரங்கையோஎன்னொடும்புகல்வாய்என்ற) அந்த
வார்த்தையை, கூறலும் – சொன்னவுடனே,-கேட்டு-தரைக்கு நாயகன் –
பூமிக்குத் தலைவனானவீமசேனன், தட புயம்-, (தனது) பெரிய தோள்கள்,
குலுங்கிட – குலுங்கும்படி, நகையா – பெருஞ்சிரிப்புச் சிரித்து,-அரக்கர்
நாயகன் ஊர் – ராட்சதர் தலைவனானஇராவணனுடையஊரை, அழல் ஊட்டி –
நெருப்புக்கு இரையாக்கி,- இ அகிலம் புரக்கும் நாயகன் தன்னைஓ –
இந்தஉலகத்தையெல்லாம் இடர்தீர்த்துப் பாதுகாப்பவனான
அனைவர்க்குந்தலைவனானஸ்ரீராமனையா, இழித்து-(ஒருமனிதனென்று)
தாழ்மையாக, நீ புகல்வாய்-நீ சொல்லுவாய்? (எ-று.)

    ரட்சணகர்த்தாவாகிய திருமாலே ஸ்ரீராமனாகத்திருவவதரித்து
வந்திருக்கையில் அப்பிரானைச்சாதாரணமனிதன்போற் பேசுவது இழுக்கு
என்பான் 

பின்னும், வார் சிலை இராகவன் பெருமையும், அனுமான்
மன்னு தோள் இணை வலிமையும், மாருதி சாற்ற,
அன்ன போழ்தினில், அகம் மகிழ்ந்து, அருளுடன் நோக்கி,
‘என்ன காரியம் வந்தது, இங்கு? யார் கொல் நீ?’ என்றான்.

என்றுகூறி),-பின்உம்- மேலும், வார் சிலைஇராகவன்
பெருமைஉம் – நீண்ட வில்லையேந்தியஸ்ரீராமனுடைய பெருமையையும்,
(அந்த ஸ்ரீராமனைத்தாங்கிய), அனுமான் – அனுமானுடைய, மன்னு –
நிலைபெற்ற,தோள் இணைவலிமைஉம்-இரண்டு தோள்களின்
வலிமையையும், மாருதி-வாயுகுமாரனானவீமசேனன், சாற்ற – சொல்ல,-
அன்னபோழ்தினில்-அப்போது, (அனுமான்), அகம் மகிழ்ந்து-மனஞ்
சந்தோஷித்து, அருளுடன் நோக்கி-(அந்த வீமசேனனைக்)கருணைகொண்டு
கடாட்சித்து, ‘இங்குவந்ததுஎன்ன காரியம்-இங்கு வந்தது என்ன
காரியத்தைக் கருதியோ?  நீ யார் கொல்-நீ யாவனோ?’என்றான்-என்று
மீண்டும் வினவினான்.

தாம மாருதி உரைத்த சொல் தம்பியும் கேட்டு,
‘நேமி மா நிலம் புரக்கும் நல் நீதி வேல் தரும
நாம நாயகற்கு இளையவன், நரனுக்கு மூத்தோன்,
வீமன், வாயுவின் புதல்வன் யான்’ என்றனன், விறலோன்.32.-வீமசேனன்தன்னைஇன்னானென்றுதெரிவித்தல்

தாமம் மாருதி – ஒளியுடன்கூடிய அநுமான், உரைத்த –
சொன்ன, சொல் – சொல்லை,தம்பிஉம் – அவர் தம்பியாகிய வீமசேனனும்,
கேட்டு-,’நேமிமா நிலம் புரக்கும்-வட்டவடிவாகவுள்ள பெரிய
இந்நிலவுலகத்தைப் பாதுகாக்கின்ற, நல் நீதி – சிறந்த நீதியையுடையனான,
வேல்-வேற்படையையுடைய, தருமன் நாமம் நாயகற்கு – தருமனென்று
பேருள்ள தலைவனுக்கு,இளையவன்- அடுத்த தம்பியாவேன்: நரனுக்கு
மூத்தோன் – அருச்சுனனுக்கு முன்பிறந்தவன்: வீமன் – வீமசேனனென்பது
என் பெயர்: யான் வாயுவின் புதல்வன்-‘,என்றனன் – என்று
(தன்னைஇன்னானெனத்)தெரிவித்தான்: (யாவனென்னில்),-விறலோன்-
வலிமையை யுடையவனாகியவீமசேனன்;(எ-று.)

     இதனால்,முதலில் ‘யார்கொல்நீ’என்ற அநுமான் வினாவிற்கு
விடையிறுத்தவாறு.  தாமம் – வெற்றிமாலையுமாம்.  

அன்ன வாசகம் அவன் உரைத்தலும், இகல் அனுமான்,
கன்ன பாகமும் சிந்தையும் முந்துறக் களித்து,
‘மின்னு வார் சிலை இராகவன் மெய்ப் பெருஞ் சீர்த்தி
சொன்னவாறு நன்று! உனக்கு இது ஆர் சொற்றவர்?’ என்றான்33.-அனுமான்வீமனைநோக்கி’ஸ்ரீராமன்புகழை உனக்கு
யார் சொன்னவர்?’என்று வினவல்.

அன்ன வாசகம் – அவ்வார்த்தையை, அவன்-அந்த வீமன்,
உரைத்தலும் – சொன்னவுடனே,-இகல் அநுமான்-பராக்கிரமத்தையுடைய
அநுமான்,-கன்னபாகம்உம்-காதின் பகுதியும், சிந்தைஉம் – மனமும், முந்துற
– முற்பட, களித்து-மகிழ்ச்சியடைந்து,-மின்னு வார் சிலைஇராகவன் மெய்
பெருஞ் சீர்த்தி – மின்னுகின்ற நீண்ட விற்படையையுடைய
இராமபிரானுடைய உண்மையான பெரியமிக்க புகழை, சொன்ன ஆறு-(நீ)
சொல்லியவகை, நன்று-இனிது:உனக்கு-, இது-இந்தராகவன் பெருஞ்
சீர்த்தியை, ஆர் சொற்றவர்-சொன்னவர் யாவர்?என்றான்- என்று
வினாவினான்;(எ – று.)

     கன்னபாகம் =கர்ணபாகம்:வடசொற்றொடர். “சீர்த்திமிகுபுகழ்”
என்பது, தொல்காப்பியம்.  

‘வரத்தினால் அரு மறையினால் வார் சிலை பயிற்றும்
பரத்துவாசன் முன் பகர்தரக் கேட்டனன், பலகால்,
திரத்தினால் உயர் இராகவன் சிலை வலி’ என்றான்-
உரத்தினால் ஒரு வீரரும் ஒப்பு இலா உரவோன்.34.-பரத்துவாசன்சொல்லக் கேட்டுளேனென்று
வீமசேனன்விடையிறுத்தல்.

உரத்தினால்- வலிமையிலே, ஒரு வீரரும்-, ஒப்புஇலா –
(தனக்கு) உவமையாகப் பெறாத,உரவோன் – வலிமையையுடையவனாகிய
வீமசேனன்,-‘திரத்தினால்உயர் – உறுதிப்பாட்டினால்மேம்பட்ட, இராகவன்
– இராமபிரானுடைய, சிலைவலி – வில்லின் வல்லமையை, வரத்தினால்-
மேன்மையாக, அரு மறையினால்-அருமையானவேத மந்திரங்களோடு, வார்
சிலை- நீண்டவில்லை,பயிற்றும்-பழக்கிய, பரத்துவாசன் – துரோணன்,
முன் – முன்பு, பகர் தர – சொல்ல, பலகால் கேட்டனன்-பலமுறை
கேட்டுள்ளேன்’,என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     பாண்டவர்க்குவில்வித்தை பயிற்றுவித்த ஆசிரியனாகியதுரோணன்
பரத்துவாசகுமார னாதலால்அவன் ‘வார்சிலைபயிற்றும் பரத்துவாசன்’
எனப்பட்டான்: ஆகவே, பரத்துவாசன், என்பது – பரத்வாஜன் என்பதன்
விகாரம்.  துரோணன் பரத்துவாச குமாரனென்பதை”
பரதநாதவேதபரத்துவாசனென்பான், விரத வேள்விதன்னின்
மேனகையாலான, சுரததாது வீழ்ந்த துரோண கும்பந்தன்னில், வரதனொருவன்
வந்தான் வசிட்டமுனியோடொப்பான்” என்று ஆதிபருவத்தில் வந்தது
கொண்டும் அறியலாம்.    

குந்தி கான்முளை கூறிய வாசகம் கேட்டு,
புந்தியால் உயர் அஞ்சனை புதல்வனும் புகல்வான்:
‘சிந்து சீகரச் சிந்து முன் கடந்து, செந் தீயால்
உந்து வாள் வலி நிருதர் ஊர் ஒருங்கு சுட்டவனும்,35.-இரண்டுகவிகள்-ஒருதொடர் : அநுமான் தன்னைத்
தெரிவித்தல்.

குந்தி கான்முளை- குந்தியின் குமாரனானஅந்தப்
பீமசேனன், கூறிய – சொன்ன, வாசகம் – வார்த்தையை, கேட்டு-, புந்தியால்
உயர் – அறிவினால்மேம்பட்ட, அஞ்சனைபுதல்வன்உம்-
அஞ்சனாதேவியின்புதல்வனானஅனுமானும், புகல்வான் – (பின் வருமாறு)
சொல்பவனானான்:-‘சிந்துசீகரம் – (அலைகளின்மூலமாகத்) தெறிக்கின்ற
நீர்த்திவலைகளையுடைய,சிந்து – கடலை,முன் கடந்து-, செந் தீயால் –
(அரக்கர் தன் வாலிற் கொளுத்திய) செந்நிறத் தீயைக்கொண்டு,-உந்து-
மேலெறிகின்ற, வாள் வலி – வாட் படையின் வலிமையையுடைய, நிருதர் –
அரக்கருடைய, ஊர்-இலங்காபுரியை, ஒருங்கு – ஒருசேர, சுட்டவன்உம் –
எரியுமாறு செய்தவனும்,-(எ-று.)-‘சிந்தைசெய்பவனும்’என்று மேலே
தொடரும்.

     கான்முளைஎன்பது – சந்ததி முளைப்பதற்குக்காரணமானது என்ற
காரணம்பற்றி, மகவைக் காட்டும்.  அநுமான் வீமன் என்ற இருவரும் வாயு
புத்திரராயினும், ஒருத்தர் குந்தியின் புதல்வரும், மற்றொருத்தர்
அஞ்சனையின்புதல்வரும் என்ற வேறுபாடு உடைமையால், அத்தன்மையை
இந்தச் செய்யுளில் விளக்கினார்

அந்த வார் சிலை இராமனுக்கு அடிமையாய், என்றும்
சிந்தையால் அவன் திருப் பதம் சிந்தைசெய்பவனும்,
உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவனும்,
இந்த வாழ்வுடை அனுமனே’ என்றனன்-இகலோன்.

அந்த வார் சிலைஇராமனுக்கு அடிமை ஆய் – அவ்வாறு
(உன்னாற்புகழ்ந்து) கூறப்பட்ட நீண்ட வில்லையுடையஇராமனுக்கு
அடியவனாகி,என்றுஉம் – எப்பொழுதும், சிந்தையால் – மனத்தினால்,
அவன் திரு பதம் சிந்தை செய்பவன்உம் – அவனது திருவடிகளைத்
தியானஞ் செய்பவனும், உந்தை ஆகிய வாயுவுக்கு உற்பவித்தவன்உம் –
உனது தந்தையான வாயுதேவனுக்குப் பிறந்தவனும், இந்த வாழ்வு உடை
அனுமன்ஏ – இந்த வாழ்க்கையையுடைய அனுமானாகியநானே’,என்றனன்
– என்று கூறினான்:(யாவனென்னில்),-இகலோன் – வலிமையையுடைய
ஆஞ்சனேயமூர்த்தி;

     இந்த வாழ்வுடை- உனக்கு எதிரிற் காணப்படும் இவ்வுடலின்
தோற்றத்தையுடைய என்றபடி.  இது, தன்னைப்பிறன் போல் வைத்துக்
கூறியது.  அந்த-அசுரச்சுட்டு, பிரசித்தியைக் காட்டிற்று.  அடிமை –
அடியவனுக்குப் பண்பாகுபெயர்.  உந்தை – உன் தந்தை என்பதன் மரூஉ.

என்ற வாசகம் இரு செவிக்கு அமுது எனக் கேட்டு,
துன்று நெஞ்சினில் உவகையன், துதித்தனன், துள்ளி,
‘என்றும் யாம் முயல் தவப் பயன் இருந்தவா!’ என்னா,
சென்று, இறைஞ்சினன், திரைக் கடல் கடந்த சேவடிமேல்.37.-வீமன் அநுமானைவணங்குதல்.

என்ற வாசகம் – என்று (அனுமான்) சொன்ன வார்த்தை,
இரு செவிக்கு அமுது என – (தனது) இரண்டு காதுகளுக்கும்
அமிருதம்போலிருக்க, (வீமன்), கேட்டு-, நெஞ்சினில்துன்று உவகையன் –
மனத்தில் மிக்குப்பொருந்தின மகிழ்ச்சியையுடையவனாய்,துதித்தனன் –
(அவ்வனுமானைத்)தோத்திரஞ்செய்து, துள்ளி-ஆனந்தக் கூத்தாடி,
‘என்றுஉம்யாம் முயல் தவம் பயன் இருந்த ஆ(று) என்னா-எப்பொழுதும்
[பலகாலமாக]நாம் முயன்றுசெய்த நற்றவத்தின் பயன் இருந்தவிதம்
(என்னே!)’என்று அதிசயித்துக்கூறி, சென்று – அருகிற்போய், திரை கடல்
கடந்த சே அடிமேல் இறைஞ்சினன் – அலைகளையுடையகடலைத்
தாண்டியிட்ட (அவ்வனுமானின்) சிவந்த திருவடிகளின்மேல் விழுந்து
வணங்கினான்;   (எ-று.)

     செவிக்கு அமுதுஎன – அமிருதம் நாவுக்கு இனிமை தருவது போல
‘அவ்வனுமான்நானே’என்று சொன்னவார்த்தை காதுக்கு இனிமைசெய்ய.
துள்ளுதல்-மகிழ்ச்சிபற்றிய மெய்ப்பாடு.  பல பிறப்புக்களிற் பலகாலஞ்செய்த
பெருந்தவமாகிய காரணம் இருந்தாலன்றி அனுமானுடைய தரிசனம்
கிடைக்காதென்ற கருத்தால், வியந்தான். 

தம்பியைத் துணைத் தாழ் தடக் கைகளால் எடுத்து,
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து,
‘பம்பு செந் தழற் கானிடைப் பதமலர் சிவப்ப,
எம்பி! நீ தனி நடந்தவாறு என்கொல்?’ என்று இசைத்தான்.38.-‘இங்குவந்தகாரணம் என்ன?’என்று வீமனை
அநுமான் வினாவுதல்.

தம்பியை – (அவ்வாறு வணங்கிய தன்) தம்பியாகிய
வீமனை,(அனுமான்), தாழ் தட துணைகைகளால் எடுத்து-(முழங்காலளவும்)
நீண்டு தொங்குகின்ற பெரிய (தனது) இரண்டு கைகளாலும் (அன்புடன்)
எடுத்து, வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து-
(வெற்றிப்பூமாலையணிந்திருந்தலால்) வாசனைபொருந்தின அழகிய பெரிய
மலையோடொத்த(தனது) மார்பிலே அழுந்தத் தழுவி,-‘எம்பி-என்தம்பியே!நீ-,
செம் தழல் பம்பு கானிடை – செந்நிறமுள்ள தீப்பொருந்திய இக்காட்டிலே,
பதம் மலர் சிவப்ப – தாமரை மலர்போன்ற (உனது) கால்கள்
செந்நிறமடையும்படி, தனி நடந்த ஆறு – (வேறு துணையில்லாமல்)ஒன்றியாய்
நடந்துவந்தது, என்கொல – என்னகாரணத்தாலோ?’என்று இசைத்தான் – என்று
வினாவினான்;(எ-று.)

     கைகள்முழந்தாள்வரை நீண்டிருத்தல், உத்தம புருஷலக்ஷணம்.
வம்புசேர்மணிமால்வரைமார்புஎன்பதற்கு – (உலகத்தில் இதுவரை யில்லாமற்)
புதுமையாய்ப் பொருந்தினதொரு ரத்தின மயமான பெரியமலைபோன்ற
மார்பு என்று உரைத்தலுமாம்.  செந்தழல்-காட்டுத்தீ.  எம்பி-அண்மைவிளி

தாயத்தாரும் வல் வஞ்சனைச் சகுனியும் கூடி,
மாயத்தால், ஒரு கவறுகொண்டு, எங்கள் மண்கொண்டு,
நேயத்தால், நெடுங் கானகம் நேர்ந்தனர்’ என்றான்-
சீயத்தால் அரசு இழந்திடும் சிம்புள் ஏறு அனையான்.39.-கானகத்தையடைந்த காரணத்தை வீமசேனன்
கூறுதல்.

சீயத்தால்-சிங்கத்தினால்,அரசு இழந்திடும்- தலைமையொழியப்
பெற்ற, சிம்புள்ஏறு அனையான்-ஆண்சரபத்தை யொத்தவனாகியவீமசேனன், –
நேயத்தால்-(அனுமானிடத்து) அன்புடன்,-‘தாயத்தார்உம்-(துரியோதனன்முதலிய)
பங்காளிகளும், வெவ்வஞ்சனைசகுனிஉம்-கொடிய வஞ்சகக்குணத்தையுடைய
சகுனியும், கூடி-ஒன்றுசேர்ந்து, மாயத்தால் – மோசவழியால், ஒரு கவறு
கொண்டு – ஒப்பற்ற சூதாட்டத்தை மேற்கொண்டு, எங்கள் மண் கொண்டு –
எங்கள் இராச்சியத்தையும் பறித்துகொண்டு, நெடுங்கானகம்-நீண்ட
காட்டினிடத்தை, நேர்ந்தனர் – (எங்கட்கு வசிக்குமாறு) தந்தார்கள்,
‘என்றான்-என்று கூறினான்; (எ-று.)

     ‘கானிடைப்பதமலர்சிவப்பத் தனி நடந்தவாறு என்கொல்’என்ற
வினாவை,’கானகத்தில்நடந்தவாறு என்கொல்,’என்றும் ‘தனிநடந்தவாறு
என்கொல்?’என்றும் இரண்டாகப் பிரித்துக் கொண்டு, முதல் வினாவிற்கு
இச்செய்யுளால் விடையிறுத்து, அடுத்தவினாவுக்குஅடுத்த செய்யுளால்
விடையிறுக்கப்படும்.  சரபம்-இரண்டு தலைகளையும்சிறகுகளையும்கூரிய
நகமுள்ள எட்டுக் கால்களையும்மேல்நோக்கிய கண்களையுமுடையதொரு
மிருகவிசேடம்:இதனைப்பறவை யென்றலும் உண்டு.  இது, சிங்கத்தை
எளிதிற் கொல்லுந் திறமுடையது.  இவ்வாறு சிறப்புப் பொருந்திய சரபம்
சிங்கத்தினால்தன்தலைமையொழியப்பெற்றாற்போலத்துரியோதனாதியரால்
தலைமையொழியப்பெற்றோம்பாண்டவராகிய நாங்களென்று வீமன்
கூறுகின்றானென்க. இவ்வுவமையால், தமக்கு இந்நிலைமைநேர்ந்தது
விதிவசத்தாலென்று கூறியவாறு.  சரபமாய் வந்த சிவபிரானை
நரசிங்கமூர்த்தியான திருமால் அடக்கி னமையையுட்கொண்டுஇவ்வுவமை
கூறினார்போலும், “வேள்குன்ற சரபத்தைப் பிளந்த சிங்கவேள்குன்றத்தினார்க்கு”
என்றார், பிள்ளைப் பெருமாளையங்கார். வில்லிபுத்தூரார் வைணவராயினும்
பிறன்கோட்கூறலாகச் சிவபிரானைமேன்மையாகக் கூறுவர்.  

திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லெனச் செல்ல,
சுகந்த புட்பம் ஒன்று யாம் உறை வனத்தினில் தோன்ற,
தகைந்த அப் புது மலர்தனைத் தழல்-மகள் காணா,
‘அகைந்த இத் துணை மலர் எனக்கு அருளுதி’ என்றாள்.40.-இதுவும் அடுத்தகவியும்-ஒரு தொடர்:தான் மலரின்
பொருட்டுவந்ததைச்சொல்ல, அநுமான்கூறத்
தொடங்குதல்.

திக் அந்தம் எட்டின்உம்-திக்குகளினெல்லைகளெட்டிலும்,
தன் மணம் ஒல்லென செல்ல – தன் பரிமளம் விரைவாகச் சென்று
பரவும்படி, சுகந்தம் புட்பம் ஒன்று – நல்ல வாசனையுடையதொருமலர்,
யாம் உறை வனத்தினில் தோன்ற – நாங்கள் வசிக்கின்ற காட்டிலே வந்து
காணப்பட, தகைந்த அ புதுமலர் தனை-(காண்பாரதுகண்ணையும்
மனத்தையுந் தன்னிடத்தொழிய வேறிடத்திற் செல்லவொட்டாது) தடுத்திட்ட
அந்தப்புதுமையான பூவை, தழல் மகள் காணா-அக்கினியினிடத்தே
அவதரித்த குமாரியான திரௌபதி கண்டு, வகைந்த இ துணைமலர் எனக்கு
அருளுதி என்றாள்-சிறப்புப்பொருந்தின இத்தன்மையான மலர்களை
எனக்கு (த்தேடிக்கொண்டுவந்து) கொடுத்தருளுவா யென்று (என்னை
நோக்கிக்) கூறினாள்;(எ-று.)

     தகைந்த-பெருமைபெற்ற என உரைத்தலுமாம்:விரிந்த என்று
பொருளுரைப்பாருமுளர்.  நான்காமடியில், அகைந்த என்று பிரித்து, எழுந்த
என்று உரைத்தாருமுளர்.  புதுமலர் – இதுவரை காணப்படாத மலர்:
அதிசயிக்கத்தக்க மலர். 

ஆதலால் இவண் யானும் இன்று அணுகினன்’ என்று,
நீதியால் உயர் தம்முனை நெடுந்தகை போற்ற,
கோது இலாத அக் குரிசிலும் குமரனை நோக்கி,
‘தீது இலாய்! இது கேட்க!’ எனச் செப்புவன் மாதோ:

ஆதலால் – ஆகையினால்,இவண் – இவ்விடத்தில்,
இன்று-இப்பொழுது, யான்உம் அணுகினன் – நானும் வந்த சேர்ந்தேன்,
என்று-என்று சொல்லி, நீதியால் உயர்தம்முனை- நியாயத்தாற் சிறந்த
தமையனானஅநுமானை,நெடுந்தகை-பெருமைக்குணமுடைய வீமன்,
போற்ற-துதிக்க,-கோது இலாத அ குரிசில்உம்-குற்றமில்லாத பெருமையிற்
சிறந்த அவ்வனுமானும், குமரனைநோக்கி-இளையவனானவீமனைப்பார்த்து,
தீது இலாய் இது கேட்க என – குற்றமில்லாதவனே! (யான் சொல்லும்)
இவ்வார்த்தையைக் கேட்பாயாக என்றுகூறி, செப்புவன் – (சிலவார்த்தைகள்)
கூறுபவனானான்;(எ-று.)-அதனைஅடுத்த கவிகளிற் காண்க.

     நெடுந்தகை -பண்புத்தொகையன்மொழி.  இலாய் – விளி. கேட்கென,
அகரவீறு-தொகுத்தல்.  மாதுஓ-ஈற்றசை.   

அரு நிதிக் கிழவன்தனது அளகை மா நகரில்,
மரு மிகுத்த நீள் மஞ்சன வாவியின் கரையில்,
தரு மலர்ப் பெருஞ் சோலையில் தங்கும், அம் மலர்; சென்று,
உரிமை உற்று, அது கோடல், மற்று உம்பர்க்கும் அரிதால்.42.-மூன்றுகவிகள்-அநுமான் வார்த்தை:
அம்மலருள்ள இடம்முதலியவற்றைக் கூறுதலைத்
தெரிவிக்கும்.

அருநிதி கிழவன்தனது அளகை மா நகரில்-அருமையான
நிதிகளுக்குத் தலைவனானகுபேரனது (இராசதானியான) பெரிய
அளாகபுரியிலே, மலர் தரு பெரு சோலையில்- மலர்மரங்களையுடைய
பெரியதொரு சோலையிலே,மரு மிகுந்த நீள் மஞ்சனம் வாவியின்
கரையில்-வாசனையைமிகவீசுகிற பெரிய நீராடுதற்குரிய தடாகத்தினது
கரையிலே, அம் மலர் – அந்த அழகிய பூ, தங்கும்-பொருந்தியுள்ளது;
சென்று-(அங்குப்) போய், உரிமை உற்று-சுதந்திரம்பெற்று, அது கோடல்-
அம்மலரைப் பெறுதல், உம்பர்க்குஉம் அரிது – மேலுலகத்திலுள்ள
தெய்வத்தன்மையுடைய தேவர்களுக்கும் அருமையானது;(எ-று.)

     ‘பாடக்கிரமத்தினும்பொருள்கொள்ளும்முறை வலியுடைத்து’என்ற
நியாயத்தை யனுசரித்து, மூன்றாமடியைமுன்னும், இரண்டாமடியை
அதன்பின்னும் எடுத்துக்கொண்டு பொருள் உரைக்கப்பட்டது.  வாவியின்
கரை என்றது-நீர்நிலையின் நடுவரையிற் செல்ல வேண்டாவென்றற்கு.  இனி,
இக்கவியின் இரண்டு மூன்றாமடிகளைஉள்ளபடியே பொருள்கூறி, இம்மலர்
‘கோட்டுப்பூவேயாகும்,நீர்ப்பூவன்று’என்று சாதிப்பாரு முளர்.
குபேரனுக்கு ‘நிதிபதி’என்று வடமொழியிற் பெயராதலால், அவனை
‘அருநிதிக்கிழவன்’என்றார். குபேரனது உத்தியானவனம், சைத்திரரத
மெனப்படும்;அது-சாதியொருமை.  மற்று, ஆல்-அசைகள்.  

ஈறு இலா இகல் அரக்கரோடு இயக்கர்தம் காவல்-
கூறும் வாசகம் பொய்ப்பவர், கூர் தவம் முயலும்
பேறு இலாதவர், பேர் அருள் இலாதவர், பிறிதும்
ஆறு இலாதவர் தமக்கும்,-அங்கு அணுகுதல் அரிதால்.

இகல்- வலிமையையுடைய, ஈறுஇலா – இறுதியில்லாத
[மிகப்பல],அரக்கரோடு-அரக்கருடனே, இயக்கர்தம் – இயக்கருடைய,
காவல் – காவலைக்கொண்ட,அங்கு – அவ்விடத்திலே,-கூறும் வாசகம்
பொய்ப்பவர்-சொன்னசொல் தவறுபவர்க்கும், கூர்தவம் முயலும்
பேறுஇலாதவர்-மிக்க தவத்திலே முயலுகின்ற பாக்கியமில்லாதவர்க்கும், பேர்
அருள் இலாதவர் – பெருமைபெற்ற கருணையில்லாதவர்க்கும்,பிறிதுஉம்
ஆறு இலாதவர் தமக்குஉம்-மற்றும் நன்னெறியிலே செல்லமாட்டாதவர்க்கும்,
அணுகுதல் – நெருங்குவது, அரிது-முடியாது;(எ-று.)-ஆல் -ஈற்றசை:
தேற்றமுமாம்.

அறிவும், வாய்மையும், தூய்மையும், அன்பும், இன் அருளும்,
பொறையும், ஞானமும், கல்வியும், புரி பெருந் தவமும்,
நெறியும், மானமும், வீரமும், நின்ன; ஆதலினால்
பெற, உனக்கு அரிது ஆயது ஏது?’ என்றனன், பெரியோன்.

அறிவுஉம் – புத்தியும், வாய்மைஉம் – சத்தியமும்,-
தூய்மைஉம்-மனச்சுத்தியும், அன்பும்-,இன் அருள்உம் – இனிய
கருணையும்,பொறைஉம்-பொறுமையும், ஞானம்உம்-கல்வியறிவும்,
கல்விஉம்-,புரி பெருந்தவம்உம் – செய்கின்ற மிக்கதவமும், நெறிஉம்-
நீதியும், மானம்உம்-ரோஷமும், வீரம்உம்-பராக்கிரமமும், நின்ன-
நின்னிடத்திலுள்ளன: ஆதலினால்-,உனக்கு பெற அரிது ஆயது ஏது-
உனக்குப்பெறுதற்கு அருமையாயிருப்பது எது?  என்றனன்-என்று
கூறினான்:(யாவனெனில்),-பெரியோன்- பெருந் தோற்றமுள்ளவனாகிய
அநுமான்;(எ-று.)-பெரியோன் மூத்தோனெனினுமாம்.

     இதனால்,அறிவு முதலியவற்றைப் பெற்றுள்ள உன்னால்அந்தமலர்
பெறுதற்கு எளிதேயென்று கூறியவாறு.  அறிவு என்பது-இயற்கையறிவையும்,
ஞானம் என்பது – கல்வி கேள்விகளினாலாகியசெயற்கையறிவையுங்
காட்டுமென்க.  நின்ன – பலவின்பால்முற்று.        

முன்னவன் புகல் உறுதி கூர் மொழி எலாம் கேட்டு,
பின்னவன் தொழுது, இவை இவை பேசினன் பின்னும்:
‘மன்னர் மன்னவன் அறம் உண்டு; மறம் உண்டு; வழக்கே
உன்னின், உன் அருள் உண்டு; திண் தோள் உரம் உண்டால்;45.-இரண்டுகவிகள்-ஒருதொடர்: ஏற்றதுணை
இருத்தலால்யாவர்காத்தாலும் மலரைக் கவர்வே னென்று
வீமன் கூறுதல்.

முன்னவன் – தமையனாகியஅநுமான், புகல் – கூறிய, உறுதி
கூர்-நிச்சயம்மிக்க, மொழிஎலாம் – வார்த்தைஎல்லாவற்றையும், கேட்டு-,-
பின்னவன்-தம்பியாகிய வீமன், தொழுது – (அநுமானை)வணங்கி, இவை
இவை-இவ்விவ்வார்த்தைகளை,பின்னும் பேசினன்-மேலும் பேசலானான்:
மன்னர் மன்னவன் – அரசர்க்குட் சிறந்தவனானதருமபுத்திரனுடைய, அறம்
– தருமம், உண்டு – இருக்கிறது:மறம் உண்டு – ரோஷம் உள்ளது:
வழக்குஏ உன்னின்-முறைமையாக ஆலோசித்தால்,-உன் அருள் உண்டு-
(உன்னுடைய) கருணையுண்டு: திண் தோள் உரம் உண்டு – என்னுடைய
வலியதோளின் வலியும் உள்ளது;(எ-று.)

     இவையெல்லாம்மலரைக்கொணர்தற்குத் துணையாகுமென்றவாறு.
‘திண்டோளுரமுண்டு’என்று தன்தோள்வலிமையைச் சொல்லுவதால்,
மறம்என்பது-ரோஷத்தை யென்க.  

தேவர் காக்கினும், தெயித்தியர் காக்கினும், சிறந்த
மூவர் காக்கினும், முறை முறை மொழிந்த மூஉலகில்
யாவர் காக்கினும், இக் கணத்து இயக்கர் ஊர் எய்தி,
காவின்மேல் பயில் கடி மலர் கவருவேன்’ என்றான்.

தேவர் காக்கின்உம்-தேவர்கள் காவல்புரிந்தாலும், தெயித்தியர்
காக்கின்உம்-அசுரர்கள் காவல் புரிந்தாலும், சிறந்த மூவர் காக்கின்உம்-
தேவர்களுட் சிறந்த (சிவன் விஷ்ணு பிரமன் என்ற) திரிமூர்த்திகள் காவல்
புரிந்தாலும், முறைமுறை மொழிந்தமூ உலகில்-முறைமுறையே சொல்லப்பட்ட
மூவுலகத்திலும், யாவர் காக்கின்உம்-எப்படிப்பட்ட மேன்மையுடையோர்
காவல்புரிந்தாலும், இ கணத்து – இந்நொடியுலேயே, இயக்கர் ஊர் எய்தி –
இயக்கரின் ஊரையடைந்து, காவின்மேல்-சோலையிலே,பயில்-இருக்கின்ற,
கடிமலர்-நறுமணமுள்ள மலரை, கவருவேன் – பறித்துக்கொண்டு வருவேன்,
என்றான்- என்றுகூறினான்;(எ-று.)

     உம்மைகள் -சிறப்புப்பொருளன. மோனைநோக்கி,’தெயித்தியர்’என
வந்தது. 

ஆண்டு, அவன் புகல் உறுதியும் ஆண்மையும் கேட்டு,
நீண்ட தோள் வய மாருதி நெடிது உவந்தருளி,
பாண்டவன்தனைப் பண்புறப் பரிவினால் நோக்கி,
‘வேண்டும் நல் வரம் வேண்டுக, ஈண்டை நீ!’ என்றான்.47.-அநுமான்’நீவிரும்பிய வரத்தைக் கேள்’எனல்.

ஆண்டு- அப்போது, அவன் – அந்த வீமசேனன், புகல் –
கூறிய, உறுதிஉம் – உறுதியுள்ள வார்த்தையையும், ஆண்மைஉம் – வீரந்
தோற்றுஞ் சொல்லையும்,கேட்டு-,-நீண்டதோள்வய மாருதி – நீண்ட
தோள்களையும்வலிமையையுமுடைய அனுமான், நெடிது உவந்தருளி – மிக
மகிழ்ந்து,-பாண்டவன்தனை-பாண்டுகுமாரனாகியஅந்த வீமசேனனை,
பண்புஉற – நல்லதன்மைகள் பொருந்துமாறு, பரிவினால்நோக்கி-
அன்போடு பார்த்து, ‘ஈண்டை- இப்பொழுது, வேண்டும் – (உன் மனம்)
விரும்புகின்ற, நல் வரம் – சிறந்த வரத்தை, நீ-,வேண்டுக – கேட்டுப்
பெற்றுக் கொள்வாயாக’,என்றான்- என்று கூறினான்,(எ-று.)

     ஆண்மை -ஆண்மைதோன்றக் கூறுஞ் சொற்களுக்கு ஆகுபெயர்.
வயம் என்று பிரித்தால், வெற்றியென்று பொருள்.  

‘நெடிய கானகம் நீங்கி, யாம் நெறியின் நேரலரைக்
கடிய வெஞ் செருப் புரி பெருங் குருதி வெங் களத்தில்,
அடிகள் ஆங்கு எழுந்தருளி வந்து, அருச்சுனன் தடந் தேர்க்
கொடியின்மீது நின்று, உவந்து, கூத்து ஆடுதிர்’ என்றான்.48.-போரில்அருச்சுனன் தேர்க்கொடிமீது எழுந்தருளிக்
கூத்தாடுமாறு வீமன்வரம் வேண்டுதல்.

 யாம்- நாங்கள், நெடிய கானகம் நீங்கி – (காட்டில்
வசிக்கவேண்டிய நாட்களையெல்லாம்வசித்துக் கழித்து இந்த) நெடிய
காட்டை விட்டுப்போய்,-நெறிஇல் நேரலரை – நன்னெறியிற்
செல்லுதலில்லாத (எம்) பகைவரை, கடிய வெம் செரு புரி பெருங் குருதி
வெம் களத்தில் – மிகக்கொடிய போரைச் செய்தற்கு இடனானதும்மிக்க
இரத்தவெள்ளம் பாயப்பெற்றதுமான கொடிய போர்க்களத்திலே, ஆங்கு –
அப்போது, அடிகள் – பெரியோரே!  எழுந்தருளிவந்து-,அருச்சுனன் தட
தேர் கொடியின்மீது – அருச்சுனனுடைய பெரிய  தேரின் கொடிமீது,
நின்று-,உவந்து – மகிழ்ந்து, கூத்தாடுதிர் – கூத்தாடுவீராக, என்றான்-என்று
(வீமன் அனுமானிடம்) வரம் வேண்டினான்;(எ-று.)

     நெறியின் -முறைமையாக, செருப்புரி எனினுமாம்.

நீட்டும் அவ் வரம் அவனுக்கு நேர்ந்தனன், அனுமான்;
மீட்டும் நல் வரம் ஒன்று முன் வேண்டினன், வீமன்;
‘ஈட்டும் மா நிதி இலங்கை தீ இட்ட நாள், இசைந்த
மோட்டு உருத்தனைக் காட்டுக!’ என்று இறைஞ்சினன்,
முதல்வன்.49.-அவ்வரத்தைவீமனுக்கு அனுமான்தர, இலங்கையில்
தீயிட்டபோதுகொண்ட உருவத்தைக் காட்டுமாறு
வீமன் வேண்டுதல்.

நீட்டும்-(வீமன்) கேட்ட, அ வரம் – அந்தவரத்தை,
அவனுக்கு – அந்த வீமசேனனுக்கு, அனுமான்-,நேர்ந்தனன்-(தந்ததாக)
உடன்பட்டுக் கூறினான்: முதல்வன் – (வீரரில்) மேம்பட்டவனான,வீமன்-,
மீட்டுஉம் – மறுபடியும், ‘ஈட்டும்- மிகுதியாகச் சேர்க்கப்பட்டுள்ள, மா நிதி-
மிக்க செல்வத்தையுடைய, இலங்கை-இலங்கையிலே, தீ இட்ட நாள் –
நெருப்பு வைத்த காலத்தில், இசைந்த – கொண்டிருந்த, மோடு உருதனை-
பருத்த உருவத்தை, காட்டுக – காட்டுவாயாக,’என்று-,இறைஞ்சினன் –
வணங்கினவனாகி,-நல்வரம் ஒன்று – சிறந்த ஒரு வரத்தை, முன்-
அவ்வனுமானெதிரே, வேண்டினன்-;(எ-று.)

     இறைஞ்சினன் -முற்றெச்சம். காட்டுகென்று – வியங்கோளின்
அகரவீறு தொகுத்தல்.  ‘இலங்கைதீயிட்ட நாள்’என்றபோதிலும்,
கடல்கடந்த வுருவத்தைக் காட்டு என்று வினாவியதாகக்கருத்துக்
காணலாம்: அப்போது பேருருக்கொண்டமையே பிரசித்தம்

என்று, அடல் வீமன் இசைத்திடும் முன்னம்,
ஒன்றி, இவ் ஏழ் உலகங்களும் ஒன்றாம்
மன்று உள தார் புனை வாமனனைப்போல்,
நின்று நிமிர்ந்தனன், நித்தமும் உள்ளான்.50.-உடனேஅனுமான் திரிவிக்கிரமனைப்போல்
பேருருக்கொள்ளுதல்.

என்று-,அடல் வீமன் – வலிமையையுடைய வீமசேனன்,
இசைத்திடும் முன்னம்-சொல்லுதற்கு முன்பு [சொன்னவுடனேஎன்றபடி],-
நித்தம்உம்உள்ளான் – எப்போதும் உள்ளவனான[சிரஞ்சீவியாகிய]
அநுமான்,-இஏழ் உலகங்கள்உம் ஒன்றி ஒன்றுஆம் – இந்த
ஏழுலகங்களிலும் பொருந்தி ஒன்றாகவுள்ள,மன்று உள தார் புனை
வாமனனைபோல் – வாசனையுள்ளமாலையையணிந்தவாமனனைப்போல,
நின்று நிமிர்ந்தனன் – எழுந்து நின்று உயரலானான்;(எ-று.)

     மன்று -மன்றல்: மன்றம் எனவும் வரும்.  வாமனன் என்பது
திருமாலின் ஐந்தாமவதாரம்: அவன் மகாபலிபக்கல் சென்று தன் காலடியில்
மூவடிமண் கொடுக்குமாறு அவ்வரசனிடத்து வேண்டிப் பெற்றுத்
திரிவிக்கிரமனாகிப்பேருருவெடுத்து மண்ணெல்லாம் ஓரடியாகவும்,
விண்ணெல்லாம் மற்றோரடியாகவும்அளந்து மற்றோரடிமண்கொடுப்பதாக
அந்த மகாபலியைச் சிறைவைத்தானென்ப.  பிரமசாரியான வாமனனுக்குத்
தார் இல்லையாயினும், திருமாலாயிருக்கும் நிலையில்தார் உண்டு என்க.

     இதுமுதல்முப்பத்திரண்டு கவிகள் – பெரும்பாலும் ஒன்று
மூன்றாஞ்சீர்கள்விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களுமாகிவந்த
கலிவிருத்தங்கள்.

படியினது எல்லை, பதத்தினது எல்லை;
மடியினது எல்லை, அவ் வானினது எல்லை;
அடியினது எல்லை, அளப்பரிது; என்றால்,
முடியினது எல்லை மொழிந்திடல் ஆமோ?51.-அநுமானதுபெருந்தோற்றம்.

பதத்தினது – அடிவைப்பினுடைய, எல்லை- பரப்பளவு,-
படியினது எல்லை- பூமியின் பரப்பின் அளவாகும்: மடியினது எல்லை-,
அ வானினது எல்லை- அந்த வானினெல்லையளவாகும்: அடியினது –
காலின், எல்லை-,அளப்பு அரிது – அளத்தற்கு முடியாது, என்றால்-,
முடியினது – சிரசின், எல்லை-,மொழிந்திடல் ஆம்ஓ – சொல்லுதற்கு
முடியுமோ?  (எ-று.)

     பதம் என்றது -நிலத்தில் கால் ஊன்றுகின்ற பகுதி.  அடி என்றது –
உடம்பின் காலில் ஒருகூறாய்,அதனால்கால் என்று வழங்குதற்கு உரியதாய்
முழங்காற்குக் கீழ்ப்பட்டுள்ள பாகம்.  அந்தக்கால் சாதாரணமாகக் கண்ணாற்
காணுதற்கு எளியது: அப்பகுதியே கண்ணாற் காணமுடியாதென்பது
திண்ணமாதலால், முடியினதெல்லையைப்பற்றிச்சொல்லமுடியுமோ?
முடியாதென்கிறார்: தொடர்நிலைச்செய்யுட்பொருட்பேறணி.  

அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில்
சுந்தர வாலதி சுற்றிய தோற்றம்,
முந்திய நீள் உடல் வாசுகி, முன் நாள்,
மந்தர வெற்பை வளைத்தது மானும்.52.-அநுமானுடம்பைச்சுற்றிய வாலின் தோற்றம்.

அந்தரம் எங்குஉம் அடக்கிய மெய்யில்-ஆகாயத்தினிட
முழுவதையும் தன்னதாக்கிக்கொண்ட (அநுமானுடைய) உடம்பிலே, சுந்தரம்
வாலதி சுற்றிய தோற்றம் – அழகிய வால் சுற்றிக்கொண்டிருந்த காட்சி,-
முன்நாள்-(தேவாசுரர்கள் பாற்கடலைக்கடைந்த) முற்காலத்தில், மந்தரம்
வெற்பை – மந்தரமென்ற மலையை,முந்திய வாசுகி நீள் உடல் – விரைவு
பொருந்திய வாசுகியின் நீண்ட உடலானது, வளைத்தது-
சுற்றிக்கொண்டிருந்ததை, மானும் – ஒக்கும்;(எ-று.)

     அநுமானுக்குமந்தரமலையும்,அவனுடலைச்சுற்றியவாலுக்கு அந்த
மந்தரமலையைச்சுற்றிய வாசுகியினுடலும் உவமையெனக் காண்க.  

நீள் அகல் வானம் நெருங்க, மருங்கே
தோள் புறம் வாலதி சூழ்தர நிற்போன்,
நாளொடு, தாரகை, ஞாயிறு, முதலாம்
கோள் அணி சூழ்வரு குன்றமும் ஒத்தான்53.-அநுமானுடலின்வருணனை

நீள்அகல் வானம் – நீண்ட பரந்த வானம், மருங்கு நெருங்க
– பக்கத்தில்தானே நெருங்கவும், தோள் புறம் – தோளினிடத்தே, வாலதி
சூழ்தர-வால் (வட்டமாகச்) சூழவும், நிற்போன்-நிற்பவனாகியஅனுமான்,-
நாளொடு -(அசுவினி முதலிய) நட்சத்திரங்களுடனே, தாரகை –
(மற்றுமுள்ள) நட்சத்திரங்களும், ஞாயிறு முதல்ஆம் கோள் – சூரியன்
முதலிய நவக்கிரகங்களும், அணி – முறையாக, சூழ்வரு –
பிரதட்சிணஞ்செய்கின்ற, குன்றம்உம் – மேருமலையையும்,ஒத்தான் –
ஒத்திருந்தான்;(எ-று.)

     சிரசுவானத்திலே நெருங்க, தோளினிடத்து வாலதி சூழ்தர நிற்கும்
அனுமான், தன்சிகரம் வானத்து நெருங்கத் தோட்பகுதியிலே நாள் தாரகை
கோள் என்ற இவை சூழ்ந்து வரப்பெறும் மேருமலையைப்போன்றனன்
என்க.  

இவ் வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய, திண்
மெய்வகை கொண்டது கண்டு, வியந்தார்-
மை வகை சேர் அகல் வானவர் எல்லாம்.54.-வானவர்அனுமானுருவைக்கண்டு வியத்தல்.

முன்னம் இலங்கை எரித்தான் – முன்பு இலங்காபுரியை
யெரித்தவனாகியஅனுமான்,-இ வகை – இவ்வாறு, பை வரு நாகர் பணம்
சுளிய – படம்பொருந்திய நாகலோகத்துள்ளவரான அஷ்டமகாநகர்களின்
படங்கள் (சுமை மிகுதியாற்)சுருங்க, திண் – வலிய, மெய்வகை – உடம்பின்
வடிவத்தை, கொண்டது – கொண்டதை, மை வகை சேர் அகல் வானவர்
எல்லாம் – மேகங்களின் வகை சேர்தற்கு இடமான அகன்ற வானுலகத்தவரான
தேவர்களெல்லாம், கண்டு-,வியந்தார் – ஆச்சரியமடைந்தார்;

     அநுமானது வலியபேருருவத்தின் சுமை பூமியின் கீழிருந்து தாங்கும்
நாகர்களின் படங்களையழுத்துவதனால்,அவை சுருங்குமென்க.
சம்வர்த்தம் முதலாக மேகங்கள் எழுவகைப்படுமாதலால்,
‘மைவகைசேரகல்வான்’என்றது.  நாகர் பணங்கள் சலிக்க என்று
பிரதிபேதம்.     

மேல் அளவாது, விளங்கிய சொல் மெய்ந்
நூல் அளவாகிய நுண் அறிவோர்போல்,
மால் அளவு அன்றி வணங்குதல் இல்லான்
கால் அளவு அல்லது, கண்டிலன்,-வீமன்.55.-வீமன்அநுமானைக்காலிளைவுக்குமேற்
காணமாட்டாமை.

மேல்அளவாது – மேலெழுந்தவாறு போகாமல் [ஆழ்ந்து
ஊடுருவிப்போய்],விளங்கிய – (அதனால்புத்திக்குத்) தெளிவாகத் தெரிந்த,
சொல்- (பல அருமையான விஷயங்களைச்)சொல்லுகின்ற, மெய் நூல் –
தத்துவ சாஸ்திரங்களின், அளவு ஆகிய – அளவிலே பொருந்திய, நுண்
அறிவோர் போல் – நுட்பமான அறிவையுடையவர்போல,-வீமன்-,-மால்
அளவு அன்றி வணங்குதல் இல்லான் – (ஸ்ரீராமபிரானாகிய)திருமாலின்
பெருமையை (வியந்து அவனை)அன்றி (வேறொருகடவுளை)
வணங்குதலில்லாத அந்த அநுமானுடைய, கால் அளவு அல்லது –
காலினளவையன்றி, கண்டிலன் – மேலே காணமாட்டாதவனாயினான்;

    நுண்ணறிவோர்போல மாலளவன்றி வணங்குதலில்லான் என்று
கூட்டாது, நுண்ணறிவோர் பரம்பொருளின் திருவடிகளிலேயே பக்தி
செலுத்துபவராதல்போல, வீமனும் காலளவே கண்டனன் என்று உரைத்தலும்
ஒன்று.  மேலளத்தல் – ஆழ்ந்து நோக்காது நுனிப்புல் மேய்ச்சலாக
அறிதல்.  “கற்றநூலளவேயாகுமா நுண்ணறிவு”,”கற்றனைத்தூறுமறிவு”
என்பன காண்க.

அருக்கனின் மும் மடி ஆர் ஒளி வீசும்
உருக் கிளர் மேனியை ஊடுற நோக்கா,
வெருக்கொடு, தாள்மிசை வீழ்ந்தனன், ‘மீண்டும்
சுருக்குக!’ என்று, துதித்தனன்,-வீமன்.56.-வீமன்அந்த அநுமானது சோதிமேனியைக் கண்
கொண்டுபார்க்கமுடியாது சுருக்கிக் கொள்ளுமாறு
வேண்டுதல்.

அருக்கனின்- சூரியனைக்காட்டிலும், மும் மடி – மூன்று
மடங்கு மிகுதியாக, ஆர் ஒளி வீசும் – மிக்க பேரொளியை வீசுகிற,-உரு
கிளர் மேனியை – உருவத்தோடு விளங்குகின்ற உடலை,ஊடு உற நோக்கா
– உள்ளுறப் பார்க்கமுடியாமல், வீமன்-,-வெருகொடு-(புத்தியில்)
அச்சமடைந்து, மீண்டுஉம் தாள்மிசை வீழ்ந்தனன் – மறுபடியும் (அந்த
அநுமானது) பாதங்களில் வீழ்ந்து, சுருக்குக என்று துதித்தனன்-இந்தப்
பேருருவத்தைச்) சுருக்கிக் கொள்வாயாக என்று தோத்திரஞ் செய்தான்;
(எ-று.)

     கீழ் 49-ஆங்கவியில் “மோட்டுருத்தனைக்காட்டுக என்றிறைஞ்சினன்
முதல்வன்” என்று பேருருவைக் காட்டுமாறு அனுமானைவீமன்
இறைஞ்சினமை கூறப்பட்டதனால்,’மீண்டும்தாண்மிசை வீழ்ந்தனன்’
என்றது.    

அந்தமும் ஆதியும் அற்றவருக்கு அம்
செந்தமிழ் செய்து திரட்டினரைப்போல்,
அந்தர வானும் அகண்டமும் ஒன்றா
உந்திய மேனி ஒடுக்கினன் அம்மா!57.-அநுமான்தன் மேனியை யொடுக்கிக் கொள்ளுதல்.

அந்தம்உம் ஆதிஉம் அற்றவருக்கு – ஆதியந்தமில்லாத
கடவுளின் திறத்திலே, அம் செந் தமிழ் செய்து – அழகிய செந்தமிழ்ப்
பிரபந்தத்தை யியற்றி, திரட்டினரை போல் – தொகுத்துள்ள
ஞானியரைப்போல, அந்தரம் வான்உம் அகண்டம்உம் – அந்தரமென்று
சொல்லப்படும் வானத்தையும் இந்த நிலவுலகத்தையும், ஒன்றுஆ உந்திய –
ஒன்றாகச்செலுத்திய, மேனி – (தன்) மேனியை, ஒடுக்கினன் – சுருக்கிக்
கொண்டான்;

     கடவுள்ஞானமுள்ளபெரியோர் அக்கடவுளின் திறத்துப் பக்திப்
பாடல்கள் பல பாடித் திரட்டினும் தாம் அடங்கி நிற்பது போலஇவனும்
அடங்கிநின்றானென்பதாம்.  அந்தமுமாதியுமற்றவருக்கு அம்
செந்தமிழ்செய்து திரட்டினர் என்றது – நம்மாழ்வாரைக் குறிக்குமென்னலாம்:
இனி முதலாழ்வார்களைக்காட்டு மென்னவுமாம்: வேறுவகை
கூறுவாருமுளர்.  தமிழ்-திவ்யபிரபந்தத்திற்குக் காரணவாகுபெயர்.  அம்மா –
வியப்பிடைச்சொல்: பேருருவை இவன் வேண்டியமாத்திரத்து ஒடுக்கினமை
பற்றியது.    

இந்திரசாலம் இயற்றினரைப்போல்,
மைந்தொடு தொல்லையில் வடிவு கொள் பொழுதத்து,
‘அந்தம் இலாய்! அடியேன் பிழை எல்லாம்
புந்தி உறாது, பொறுத்தருள்!’ என்றான்58.-தன்பிழையைப் பொறுக்குமாறு வீமன் அநுமானிடம்
வேண்டுதல்.

இந்திரசாலம் இயற்றினரை போல் – மாயவித்தை
செய்தவரைப்போல, மைந்தொடு – (தன்) வலிமையுடனே, தொல்
லையில்வடிவு கொள் பொழுதத்து – பழமையான (தன்) வடிவை அநுமான்
கொண்டபோது,-(அந்தஅநுமானைநோக்கி வீமசேனன்), அந்தம் இலாய் –
அழிவில்லாதவனே [சிரஞ்சீவியே!]அடியேன் பிழைஎல்லாம் – நான்
உன்னைப்பற்றிஅலட்சியமாகக் கருதிச்செய்த பிழையையெல்லாம்,
புந்திஉறாது- மனத்திற்கொள்ளாமல், பொறுத்தருள் – பொறுத்தருள்வாய்,
என்றான்-; (எ-று.)

     அநுமானைச்சாதாரண குரங்கெனக் கருதி முந்துறப் பேசியது
முதலியவற்றை மனத்திற்கொண்டு, வீமசேனன், இங்ஙனம் அபராதக்ஷாமணம்
செய்துகொள்ளுகின்றனன்.   

திருவடிதன் இரு சேவடியில் போய்
மரு வடி தார் புனை மாருதி தொழவே,
அருள் வடிவாகி, அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று, உரைசெய்வான்:59.-அனுமான்பாதங்களில் வீமன் விழ, அவன்
கூறலுறுதல்.

திருவடிதன் – அனுமானுடைய, இரு சே அடியில்-இரண்டான
செவ்விய பாதங்களில், போய்- கிட்டி, மரு வடி தார் புனைமாருதி –
வாசனையைவெளிப்படுத்துகின்ற மாலையையணிந்தவாயுகுமாரனான
வீமசேனன், தொழ – தண்டனிட,-அருள்வடிவு ஆகி அகண்டம்உம்
எங்குஉம் ஒரு வடிவு ஆனவன் – அருளே ஒரு வடிவு எடுத்தாற்போலப்
பேரருளுடையவனாகிப்பூமி முழுவதும் எல்லாவிடத்தும் அமையுமாறு
ஒப்பற்ற பேருருவெடுத்த அந்த அனுமான், உற்று – மனம்பொருந்தி,
உரைசெய்வான் – (பின்வருமாறு) பேசுவானானான்;(எ-று.)-அனுமான்
பேசுவதை மேற்செய்யுளிற் காண்க.

     திருவடி என்பது- அனுமானுக்கு வைஷ்ணவ சம்பிரதாயத்தில்
வழங்கும்பெயர்: இவர் இராமபிரானுக்கு வாகனமாகி அப்பிரானது
திருவடிகளையேந்தினவராதலால், இப்பெயர் பெறுவர், மாருதி விழவே
என்றும் அருவடிவாகி என்றும் பிரதிபேதம்.  

உன் அருகே பயில் உம்பியரோடும்,
மின் அருகே பயில் வேந்தொடும், வாழ்வுற்று,
என் அருகே வருக!’ என்றனன்-என்றும்
தன் அருகு ஏதம் உறாத தவத்தோன்.60.-அனுமான்அருளியது.

)என்றுஉம் – எப்போதும், தன் அருகு-தன் சமீபத்திலும், ஏதம்
– குற்றமென்பது, உறாத- பொருந்தப்பெறாத,தவத்தோன் –
தவத்தையுடையவனாகியஅநுமான்,-(வீமனைநோக்கி), ‘உன்அருகு –
உனது சமீபத்திலே, பயில் – பழகுகின்ற, உம்பிய ரோடுஉம் –
உனதுதம்பிமாரோடும், மின் அருகு பயில் – மின்னல் போன்ற திரௌபதிதன்
னருகே (அக்கினிகாரியத்தின் பொருட்டுப்) பொருந்தப்பெற்ற, வேந்தொடுஉம்
– யுதிட்டிரராசனோடும்,வாழ்வுஉற்று – (இவ்வுலகில் வாழவேண்டியநாள்
முழுவதிலும்) வாழ்ந்திருந்து, (பிறகு), என் அருகு வருக-,என்றனன் – என்று
கூறினான்;(எ-று.)

     மின் -உவமையாகுபெயர். வேந்து – பண்பாகுபெயர்.  

அங்கு அவன் அம் மொழி கூறலும், ‘ஐயா!
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே;
பங்கய மா நிதி வாழ் பதி எய்த,
சங்கை இல் நல் நெறி சாற்றுக!’ என்றான்.61.-இயக்கரூர்க்குச்செல்லவழிகூறுமாறு
வீமன் அநுமானைவேண்டுதல்.

அங்கு- அப்போது, அவன் – அந்த அனுமான்,- அ மொழி
– அவ்வார்த்தையை, கூறலும் – சொன்னவுடனே,-(வீமசேனன்அனுமானை
நோக்கி),-‘ஐயா! நின் உயர் இன் அருள் எங்கண்உம் உண்டு ஏ-
உன்னுடைய உயரிய இனிய அருள் (எனக்கு) எங்கும் உள்ளதன்றே!
(ஆதலால்), பங்கயம் மா நிதி வாழ் – பதுமநிதியுள்ளதான, பதி – ஊரை,
எய்த – அடைதற்கு, சங்கை இல் நல் நெறி – சந்தேகிக்க வேண்டுவது
இல்லாத நல்ல வழியை, சாற்றுக – சொல்வாயாக’,என்றான்-;(எ-று.)

     பங்கயமாநிதி- பதுமநிதி: இது நவநிதிகளுள் ஒன்று: குபேரன்
நவநிதி நாயக னாதலால்,அங்குப் பதுமநிதியும் உள்ளதென்க. 

என்றலும், ‘இந்த வனத்தினது எல்லை
ஒன்றிய யோசனை ஓர் இரு நூறு
சென்றபின், யோசனை சிற்சில சென்றால்,
மன்றல் மலர்ப் பொழில் வாவியில் மன்னும்62.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்: அநுமான்
வாசமலருள்ளஇடத்திற்குச் செல்லும் நெறிகூறி
அம்மலரைக்கொள்ளுதற்கு உரிய உபாயத்தையும்
கூறுவது.

என்றலும்-என்று (வீமன் அநுமானை)வினாவியவுடனே,-இந்த
வனத்தினது – இந்தக்கதலீ வனத்தின், எல்லை- எல்லையினின்றும்,ஒன்றிய
ஓர் இருநூறு ஓசனைசென்றபின் – பொருந்திய இருநூறு யோசனைதூரங்
கடந்து சென்றபின்பு, யோசனைசில் சிலசென்றால்-(பின்னுஞ்)
சிலயோசனைதூரம்கடந்து போனால்,(அங்கு, மன்றல் மலர் –
நறுமணமுள்ள இதுபோன்ற மலர், பொழில் வாவியின் – சோலையிலுள்ள
நீர்நிலையிலே,மன்னும்-பொருந்தியிருக்கும்;(எ-று.)

    மன்றல்மலர்ப்பொழில் என்று பாடமுரைத்து, மன்றல் மலரைக்கொண்ட
பொழிலானது, வாவியின் – வாவியோடு, மன்னும் என்பாருமுளர்.
ஓசனை=யோசனை: நாற்காததூரம்: மரூஉமொழி.  

அப் பொழில் காவல் அரக்கர் அநேகர்;
எப் பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்;
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால்,
செப்பிய மா மலர் சென்று, உறலாகும்

அபொழில் காவல் – அந்தச் சோலையைப்
பாதுகாத்தலையுடைய,அரக்கர் அனேகர் – அனேகராட்சசர் (உளர்):
(அவர்கள்),-எபொழில்உம்-எல்லாவுலகத்தையும், திறைகொள்ளும் –
திறையாகக் கொள்ளுகின்ற [தின்றுகொல்லவல்ல],எயிற்றார்-
பற்களையுடையவர்: அவர் ஆவி – அந்த அரக்கரினுயிரை, துப்புடன் –
வலிமையுடனே, தொலைத்தால்- அழித்தால், செப்பிய-(நீ) கூறிய, மா மலர்
– சிறந்த மலரை, சென்றுஉறல் ஆகும்- போய்ப் பெறலாகும்;(எ-று.)

     காவலர்அக்கர் என்று பிரிக்கவும் இடனுண்டு: அங்ஙன் பிரிப்பின்,
அக்கர் – யக்கர் என்னவேண்டும்.    

அல்லது, நீடு அளகாபதிதானும்
மெல்லியலும் பொழில் மேவிய போது,
நல் உறவு ஆகி நயத்தொடு சென்றால்,
மல்லல் மலர் தருவோடு வழங்கும்.’

அல்லது – இவ்வாறு கொள்ளாவிடின், நீடு
அளகாபதிதான்உம்-பெருமை பொருந்திய அளகைக்குத் தலைவனாகிய
குபேரனும், மெல்இயல்உம்-அவனது (மனைவியாகிய)பெண்ணும், பொழில்
மேவிய போது – அந்தச் சோலையிலேவந்து தங்கியபோது,
(அவர்களோடு), நல் உறவு ஆகி – நல்ல நட்புறவுபூண்டு, நயத்தொடு –
வணக்கத்தோடு, சென்றால்- (அவரிருக்கு மிடத்துக்குப்) போனால்,
(அவன்), மல்லல் மலர் – வளப்பம்பொருந்திய அந்த மலரை, தருவோடு –
(அதுதோன்றிய) கொடியுடனே, வழங்கும்-கொடுப்பான்;    (எ-று.)

     இது, சமாதானவழியாற் பூவைக்கொள்ள உபாயங்கூறியது.  தருவோடு
கற்பகதருவோடு என்று கூறுவாருமுளர்: இனி இந்த மலர்
கற்பகதருவினுடையதென்றும், குபேரனிடமும்உள்ளதென்றும் ஒரு சாரார்
கொள்கின்றனர்.    

உறுதியும், ஒன்னலர் ஊக்கமும், ஏகும்
நெறியினது எல்லையின் நீர்மையும், நெறியில்
குறிகளும், யாவையும், அன்பொடு கூறி,
அறிவுடையான் விடை அன்பொடு அளித்தான்.65.-நெறிமுதலிய கூறிய அநுமான் வீமனுக்கு
விடை கொடுத்தல்.

உறுதிஉம் – (மலரைப் பெறுதற்கு உரிய) நல்ல உபாயங்களையும்,
ஒன்னலர் ஊக்கம்உம் – பகைவர்களது கலங்காத் திண்மையையும், ஏகும்
நெறியினது எல்லையின்நீர்மைஉம்-செல்ல வேண்டும் வழியினது அளவின்
தன்மையையும், நெறியில் குறிகள்உம் – வழியிலுள்ள அடையாளங்களையும்,
யாவைஉம் – மற்றுமுள்ள எல்லாவற்றையும், அன்பொடுகூறி-அன்புடனே
சொல்லி,-அறிவு உடையான் – (ஐயந்திரிபில்லாத) ஞானத்தையுடைய
அனுமான்,-அன்பொடுவிடை அளித்தான் – அன்புடனே (தம்பிக்கு) விடை
கொடுத்தனுப்பினான்;(எ-று.)

     அனுமான்இளமையிற் சூரியனிடத்து எல்லா நூல்களையும்ஐயந்திரிபு
அற ஓதி உணர்ந்த உயர்வுதோன்ற, அவனை’அறிவுடையான்’என்றார்.
இனி, அறிவு உடையான் – என்றுந் தனது இயற்கையறிவு
கெடாதவனென்றுமாம். விடை – விடுத்தல்: ஐ – தொழிற்பெயர்விகுதி.
ஒன்னலர் – ஒன்றலர்: மரூஉ: எதிர்மறை வினையாலணையும்பெயர்;
சேராதவர் என்பது பொருள்.

மொய்ம்புடை மாருதி தாள் இணை முன்னா,
‘வெம்பிய கானிடை மேவிய பயன், இங்கு,
எம்பெருமான்! உனை எய்தினன்’ என்னா,
நம்பியும் நாழிகை ஒன்றில் நடந்தான்.66.-வீமன்அநுமானுக்கு முகமன்கூறிச் செல்லுதல்.

நம்பிஉம் – ஆடவரிற் சிறந்த வீமனும், மொய்ம்பு உடை
மாருதி தாள் இணைமுன்னா- வலிமையையுடைய அனுமானது இரு
திருவடிகளைத்தியானித்துக்கொண்டு, ‘எம்பெருமான்- எமது தலைவனே!
வெம்பிய கானிடை மேவிய பயன் – வெப்பம் பொருந்திய காட்டிலே (நான்)
வந்ததன் பயனாக,உனைஇங்கு எய்தினன்-உன்னைஇவ்விடத்திலே
அடைந்தேன்,’என்னா-என்று(உபசார வார்த்தை) கூறி, நாழிகை ஒன்றில்
நடந்தான் – ஒரு நாழிகைப்பொழுதினுள்ளே நடந்துசென்றான்;(எ-று.)

     நாழிகை -இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம்;நாடிகா என்னும்
வடமொழிச் சிதைவென்பர். மொய்ம்புஉடைமாருதி – (பகைவருடைய)
வலிமையை அழிக்குந்தன்மையுள்ள அனுமான் என்றுமாம்.  எம்பெருமான் –
அண்மைவிளி.  

அக்கணம் ஆசுவின் ஆசுகன் மைந்தன்
மிக்கு உயர் விஞ்சையர் நாட்டிடை விட்டு,
திக்கு உறை நாகர் திரண்டு துதிக்கும்
சக்கர நாகம் அதன் புடை சார்ந்தான்.67.-சக்கரமலையின்புறத்தைவீமசேன னடைதல்.

அகணம்-அந்தக்ஷணத்திலே, ஆசுவின் – விரைவாக,
ஆசுகன் மைந்தன் – வாயுகுமாரனாகியவீமசேனன்,-மிக்கு
உயர்-மிகச்சிறந்த,விஞ்சையர் நாடு-வித்தியாதரர்நாட்டை, இடைவிட்டு-
கடந்து, திக்குஉறை நாகர்-திக்குக்களில்வாழ்கின்ற தேவர்கள், திரண்டு-,
துதிக்கும்-(தன்னைத்)துதிக்கின்ற, சக்கரநாகம் அதன்புடை-சக்கரமலைக்குப்
பக்கத்திலே, சார்ந்தான்-சேர்ந்தான்.

தவா மறைவாணர் தவம் புரியும் தண்
கவானுடை நீள் குகரத்து உயர் கலை சேர்
உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு ஒக்கும்
திவாகர மால் வரை சேர்ந்திடும் எல்லை,68.-திவாகரமலையெல்லையைக்குறுகல்.

ஆறுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)தவா-அழிதலில்லாத, மறை-வேதங்களைக்கொண்டு,வாணர்-
வாழ்ச்சிபெறுபவரான முனிவர், தவம் புரியும் – தவஞ்செய்கின்ற, தண்-
குளிர்ந்த, கவான்உடை-பக்கத்தையுடையதும், நீள்குகரத்து-நீண்ட
குகைகளையுடையதும்,உயர் கலைசேர் உவா மதி சூழ்வரும் ஓங்கலொடு
ஒக்கும் – மிக்க[பதினாறான]கலைகள்சேர்ந்தபூர்ணிமைச்சந்திரன்
சூழ்ந்துவரப்பெற்ற (மேரு) மலையோடுஒப்பதுமான,திவாகரம் மால் வரை-
திவாகரமென்ற பெருமலையை,சேர்ந்திடும் எல்லை- சேரும்போது,-(எ-
று.)-“அரித்துவசன்றனைநோக்கி அரக்கன் இவை கட்டுரை செய்வான்”
என எழுபத்து மூன்றாங்கவியில் முடியும்.

     சந்திரனைக்கூறியது, சூரியனுக்கும் உபலட்சணம். மேருமலையைச்
சூரியன் முதலிய கிரகங்கள்  சுற்றிவருகின்றன என்பதும், சூரியன்
மேருமலையைச்சுற்றி வருவதால்தான் பகலும் இரவும் உண்டாகின்றன
என்பதும் நூற்கொள்கை.  மதிக்குக்கொடுத்த அடைமொழியால்
சிறப்புப்பொருள் பெறப்படுவதாகத் தெரியவில்லை. 

அஞ்சன மேகமொடு ஆலம் அளாவி,
வஞ்சனை கொண்டு, வகுத்தன மெய்யான்;
குஞ்சிகள் வானினிடைக் கொடி ஓடி,
செஞ் சுடர் கால்தருகின்ற சிரத்தான்;69.-இதுமுதல்நான்குகவிகள்-புண்டரீகனென்னும்
அரக்கனது வருணனை.

அஞ்சனம் மேகமொடு – கறுத்த மேகத்தோடு, ஆலம்-
விஷத்தை, அளாவி-கலந்து வஞ்சனைகொண்டு – வஞ்சனைக்குணத்தையும்
உடன்சேர்ந்து, வகுத்து அன-படைக்கப்பட்டாற்போன்ற, மெய்யான் –
உடம்பையுடையவனும்,-குஞ்சிகள்- (செம்பட்ட) மயிர்கள், வானின் இடை-
ஆகாயத்திலே, கொடி ஓடி-மின்னற் கொடிபோலப் போய், செஞ்சுடர்-
செந்நிற ஒளியை, கால் – வெளிப்படுத்துதலை,தருகின்ற-செய்கின்ற,
சிரத்தான் – சிரத்தையுடையவனும்,-  (எ-று.)

     இதனால்புண்டரீகவரக்கனுடைய உடம்பினிறம் சிரசு வஞ்சனைக்
குணம் என்ற இவை கூறப்பட்டன;விஷத்தைக் கருநிறமுடையதென்ப.
மேகமொடு, அஞ்சனம்-மையையும் எனவுமாம்.  கொடியோடி – நீளமாகப்
போய் எனினுமாம்.  கால் – முதனிலைத்தொழிற்பெயர். 

குளிர் வரை ஒன்றிய நீள் குகரம்போல்
அளவு இல் பெரும் பகு வாய் அதில், மதியின்
பிளவு எனலா வளையும், பிறழும், தண்
இள நிலவு என்ன இலங்கும், எயிற்றான்;

குளிர் வரை ஒன்றிய – குளிர்ந்த மலையிலேபொருந்திய, நீள்
குகரம் போல்- நீண்ட குகைபோலே, அளவுஇல் பெரு – அளவில்லாது
மிகப்பெரிய, பகுவாய்அதின் – பிளவுபட்ட வாயிலே, மதியின் பிளவு எனல்
ஆ வளையும்-சந்திரனுடையபிளவு [பிறைச்சந்திரன்]என்று சொல்லுமாறு
வளைந்துள்ள,பிறழும் – விளங்குகின்ற, தண் இள நிலவு என்ன இலங்கும்
– குளிர்ந்த பிறை போல வெள்ளொளி வீசுகிற, எயிற்றான்- கோரப்பற்களை
யுடையவனும்,-(எ-று.)

     வளையும்எயிறு, பிறழும் எயிறு, இளநிலவென்ன விலங்கும் எயிறு
என்க.  இள நிலவு-இலக்கணையால்,பிறைச்சந்திரனாயிற்று.

ஆறு-இரு காதம் அகன்று உயர் தோளான்;
நூறு-இரு காதம் நொடிக்குள் நடப்பான்;
ஏறு உடையான் முதல் யாவர்கள் எனினும்,
மாறொடு காதி மலைந்திட வல்லான்

ஆறுஇரு காதம் அகன்று உயர் தோளான் – பன்னிரண்டு
காததூரம் விலகி உயர்ந்துள்ள தோள்களையுடையவனும்,நொடிக்குள்நூறு
இருகாதம் நடப்பான்-நொடிப் போதிற்குள் இருநூறு காததூரம் நடக்கும்
வல்லமையுடையவனும், ஏறு உடையான் முதல் யாவர்கள் எனின்உம்
மாறொடுகாதி மலைந்திடவல்லான் – ரிடபத்தை வாகனமாகவுடையவனான
சிவபிரான் முதல் யாவர் எதிர்த்துவந்தாலும் (அவரோடு) மாறுபாடுகொண்டு
மோதிப் போர்புரியும் வல்லமையையுடையவனுமாகிய,-(எ-று.)

     ஆறிருகாதம்,நூறிருகாதம்-பண்புத்தொகைகள். ஏறுடை யானைக்
கூறியது – சங்காரமூர்த்தி யாதலால்.  அகன்றிடு என்றும் பாடம். 

எண் திசையும் திறை கொண்டு, இகலோடும்
புண்டரிகப் பெயர் நாடு பொறித்தோன்;-
திண் திறல் மாருதி, சேய் வருவானைக்
கண்டனன், அங்கு அழல் கான்றிடு கண்ணான்.

இகலோடுஉம் – (தன்) பராக்கிரமத்தினால்,எண்திசைஉம்-
எட்டுத் திக்கிலும்,  திறை கொண்டு-வரிப் பொருளைப்
பெற்றுக் கொண்டு,புண்டரிகன் பெயர் நாடு பொறித்தோன் –
புண்டரீகனென்ற (தன் பெயரை நாட்டில் எழுதிவைத்திருப்பவன்,-திண்திறல்
மாருதி சேய் வருவானை- மிக்க வலிமையுடைய வாயுபுத்திரனான
வீமசேனன் வருபவனை,கண்டனன்-கண்டு, அங்கு- அப்போது, அழல்
கான்றிடு கண்ணான்-நெருப்பைவெளிப்படுத்துகின்ற
கண்களையுடையவனாய்,-(எ-று.)

    மாருதிசேய்-மாருதியென்னப்படுகிற சேய்என்று இருபெயரொட்டு:
சேய்என்பது குமாரன் என்ற வடசொல்போலத் தமிழில் வழங்குவது என்க:
இது செம்மைநிறமுடைய முருகக்கடவுளைமுதலிற் காட்டி, பிறகு
இலக்கணையால்அவன்போல் அழகு வலிமை முதலியனவுள்ள மைந்தனைக்
காட்டும்.  இனி மாருதி-வாயுகுமாரனானவீமன், சேய்வருவானை-
சேய்மையில் வருபவனைஎன்றுமாம்.  கண்டனன்-முற்றெச்சம்.  கண்ணான்
என்பதைக் குறிப்பு முற்றாகமுடித்தலும் ஒன்று.  

உருத்து, முகில் குலம் உருமுடன் மட்க,
சிரித்து, இதழ் கவ்வி, எயிற்று இணை தின்று, ஆங்கு
அரித் துவசன்தனை நோக்கி, அரக்கன்
கருத்துடன் நின்று, இவை கட்டுரை செய்வான்:73.-புண்டரீகனென்றஅவ்வரக்கன் வீமசேனனை
நோக்கிக்கூறலுறுதல்.

முகில் குலம் – மேகங்களின் கூட்டம், உருமுடன்-இடியுடனே,
மட்க-மங்கும்படி, உருத்து சிரித்து – சினங்கொண்டு சிரித்து, இதழ் கவ்வி-
(பற்களால்) உதட்டைக் கடித்தும், எயிறு இணைதின்று-இரண்டு
கோரப்பற்களைமென்றும், ஆங்கு-அப்போது, அரி துவசன் தனைநோக்கி-
சிங்கக் கொடியை யுடையவனானவீமசேனனைப்பார்த்து, அரக்கன்-அந்தப்
புண்டரீகனென்ற இராட்சதன், நின்று-இருந்தவண்ணம்,கருத்துடன்-
மனப்பூர்வமாக, இவை-இவ்வார்த்தைகளை,கட்டுரை செய்வான்-உறுதிச்
சொற்களாகக் கூறுபவனானான்;(எ-று.)-புண்டரீகனென்னும்அரக்கன்
கூறுவனவற்றை மேற்கவியிற் காண்க.

     சிரித்தல்இதழ்கவ்வுதல் எயிற்றிணைதின்னுதல்- சினக்குறி.  வீமன்
தனது பலபராக்கிரமங்கட்கு அறிகுறியாகச் சிங்கத்தைத் துவசத்திற்
கொண்டனன்போலும்.  உட்குடன்மட்க என்று பிரதிபேதம்

யான் உறை கானகம் என்று, இமையோரும்,
தானவர்தாமும், இதற்கிடை சாரார்;
மானுடன் நீ! இவண் வந்தது, சுவையாம்
ஊன் இடவோ? இஃது உரைத்திடுக!’ என்றான்.74.-புண்டரீகவரக்கன்கூறிய உரை.

இமையோர்உம்-இமையாக்கண்ணராகியதேவரும், தானவர்
தாம்உம் – அசுரர்களும், யான் உறை கானகம் என்று – நான் வசிக்கின்ற
காடு என்ற காரணத்தினால்,இதற்குஇடை – இந்தக் காட்டினிடத்தில், சாரார்
– சேரமாட்டார்கள்:(அப்படியிருக்க), மானுடன் நீ-மனிதனாகியநீ, இவண் –
இந்தக் காட்டினிடத்தே, வந்தது-,-சுவைஆம்-உருசிபொருந்திய, ஊன்-
மாமிசத்தை, இடஓ – (எனக்குக்) கொடுப்பதற்குத்தானோ?:இஃது –
இந்தக்காரணத்தை, உரைத்திடுக – சொல்வாயாக,’என்றான்-
என்றுகூறினான்;(எ – று)-உரைத்திடுகென்றான்-தொகுத்தல்.

வென்றி அரக்கன் விளம்புதல் கேளா,
குன்றன தோள்கள் குலுங்க நகைத்து, ஆங்கு,
‘உன்தனது ஆவியும் உண்டிட வந்தேன்’
என்றனன், முன்னம் இடிம்பனை வென்றோன்75.-உன்னுயிரையுண்ணவே வந்தேனென்று வீமன்
மாறு கூறுதல்.

வென்றி அரக்கன்-வெற்றிபொருந்திய ராட்சதனாகிய
புண்டரீகன், விளம்புதல் – கூறியதை, கேளா – கேட்டு,-குன்று அன
தோள்கள் குலுங்க நகைத்து – மலையையொத்ததோள்கள் அசையும்படி
சிரித்து,-ஆங்கு – அப்போது, ‘உன்தனது ஆவி உம் உண்டிடவந்தேன் –
உன்னுடைய உயிரையும் உண்ணும் பொருட்டு வந்துள்ளேன்,’என்றனன் –
என்று கூறினான்:(யாவனென்னில்),-முன்னம் இடிம்பனைவென்றோன்-
முன்பு இடிம்பாசுரனைவென்று ஒழித்தவனாகியவீமசேனன்;(எ – று.)

     ஆவியும் என்பது- எச்சவும்மை:உன்வலியையொழிப்பதன்றி
ஆவியையும் உண்ண என்க:இனி, எச்சப்பொருளோடு உயர்வு
சிறப்புப்பொருளது என்றுகொண்டு, முன்னம் இடிம்பனாவியையுண்டதன்றி
உன்னாவியையும்என்று பொருள்காணினுமாம். 

மற்று அது கூற, மறத்தொடு அரக்கன்
உற்று, எதிர் ஓடி, உறுக்கிய போது, அக்
கொற்றவனும் கதை கொண்டு உடன் மண்டிப்
பற்றினன், வந்தவன் ஆவி பறிப்பான்.76.-இரண்டுகவிகள்-வீமன் புண்டரீகன் என்ற இருவரும்
பொருதமை கூறும்.

அதுகூற – அவ்வார்த்தையை (வீமசேனன்) சொல்ல,-மற்று
– பின்பு, அரக்கன் – புண்டரீகனென்ற ராட்சதன், மறத்தொடு –
வலிமையோடு, உற்று – பொருந்தி, எதிர் ஓடி – (வீமனுக்கு) எதிரே போய்,-
உறுக்கிய போது-கோபித்த சமயத்தில்,- அ கொற்றவன்உம் –
வெற்றிபொருந்திய அந்த வீமனும்,-கதை கொண்டு – கதாயுதத்தைக் (கையிற்)
கொண்டு, வந்தவன் ஆவி பறிப்பான் – எதிர்வந்தவனான
புண்டரீகனென்பானுடைய உயிரைக் கவரும்பொருட்டு,உடன் மண்டி – சேர
நெருங்கி, பற்றினன் – (போரில்) மூண்டான்;(எ – று.)-மற்று – வினைமாற்றுமாம்.

குன்றொடு குன்று அமர் கூடுவதேபோல்
நின்று, நெடும் பொழுதாக மலைந்தும்,
வன் திறலும், தம வாகுவின் வலியும்,
ஒன்றும் இளைத்திலர்,-ஒத்த உரத்தார்.

குன்றொடுஒருமலையுடனே,குன்று – மற்றொருமலை,
அமர் கூடுவது ஏ போல்-போருக்குப் பொருந்துவது போல,-நின்று நெடும்
பொழுது ஆக மலைந்துஉம்- நிலையாகப்பொருந்தி நெடுநேரமாகப்
போர்செய்தும்,-ஒத்த உரத்தார்-சமமான வலிமையையுடையரான
அவ்விருவரும், வல் திறல்உம் – கொடியவலியும், தம வாகுவின் வலிஉம்-
தம்முடைய தோள் வலியும், ஒன்றுஉம் இளைத்திலர்-சிறிதும்
இளைத்தாரில்லை;(எ – று.)

     தம் -ஆறனுருபுஏற்ற பெயர்.    

எல்லை இலா அமர் இங்கு இவர் இவ்வாறு
ஒல்லையின் மோதி உடன்றிடு போழ்தில்,
தொல்லையில் ஓர் முனி சொல்லிய சாபம்
மல்லல் அரூபி வழங்கியது அன்றே;78.-அப்போதுஅசரீரி சொல்லலுறல்.

இங்கு – இவ்விடத்து, இவர் – வீமனும் புண்டரீகனென்ற
அரக்கனும், இவ்வாறு-இவ்வகையாக, எல்லைஇலா அமர்-முடிவில்லாத
போரை, ஒல்லையின்- விரைவாக, மோதி – தாக்கி, உடன்றிடு போழ்தில் –
பொருகின்ற சமயத்தில்,-தொல்லையில்- முற்காலத்தில், ஓர்முனி –
ஒருமுனிவன், சொல்லிய-, சாபம் – சாபத்தை, மல்லல் – வலிமைபொருந்திய,
அரூபி – அசரீரியானது, வழங்கியது – சொல்லிற்று;(எ – று.)-அன்றே-
ஈற்றசை.

    அசரீரிசொல்வது தவறாதாதலால் ‘மல்லலரூபி’எனப்பட்டது.
அரூபி – ரூபமற்றது:அசரீரியென்றபடி.      

ஒன்றினும் ஆவி உனக்கு இவன் ஒல்கான்;
துன்றிடு தோள்மிசை தோமரம் ஏவி,
கொன்றிடுவாய், இனி; வாயு குமாரா!’
என்றது, வானினிடத்து அசரீரி.79.-அசரீரிசொல்லிய வார்த்தை.

வானினிடத்து – ஆகாயத்தினிடத்தே, அசரீரி-அசரீரியானது,
‘இவன்- இந்த அரக்கன், ஒன்றின்உம் – வேறு எந்த வகையினாலும்,
உனக்கு-உன்னால்,ஆவி ஒல்கான்-உயிரொழியான்:இனி-, துன்றிடு-
நெருங்கிய, தோள்மிசை  – தோள்மீது, தோமரம்-தோமரத்தை, ஏவி –
செலுத்தி, வாயுகுமாரா-! கொன்றிடுவாய் – கொல்வாய்,’என்றது-என்று
கூறிற்று;(எ – று.)

     இது வானத்திலேசரீரமில்லாததாய்க் கேட்கப்படுதலால்,
ஆகாயவாணியென்றும், அசரீரியென்றும் கூறப்படும்.  தோமரம்-படையென்ற
பொருளில் வந்தது:  சிறப்புப்பெயர்பொதுப்பொருளது:”தொட்ட
கொடுங்கதை தோளுறுமுன்னர்…விழுந்தான்”(81) என மேல் வருவதால்
இங்ஙன்கொள்ளவேண்டும்.  தோளில் படை செலுத்தப்பட்டால்
உயிரிழக்குமாறு இவனுக்கு முனிவன் சாபமென்க. 

அங்கு அசரீரி அரற்றிய மாற்றம்
சங்கை உறாது சமீரணி கேட்டு,
பங்கய நாம நிசாசர பதிதன்
துங்க வயப் புயமேல் கதை தொட்டான்.80.-வீமசேனன்புண்டரீகவரக்கனுடைய தோள்மேற்
கதையை ஏவுதல்.

அங்கு-அவ்விடத்து, அசரீரி-ஆகாயவாணி, அரற்றிய-
உரக்கச்சொன்ன, மாற்றம்-வார்த்தையை, சமீரணி-வாயுகுமாரனான
வீமசேனன், சங்கை உறாதுகேட்டு – சங்கை கொள்ளாமல் செவியேற்று,
பங்கயநாம நிசாசரபதி தன்-புண்டரீகனென்று பேருள்ள அரக்கனுடைய,
துங்கம் – உயர்வாகிய, வயம்-வெற்றிபொருந்திய, புயமேல் – தோளின்மீது,
கதை தொட்டான் – கதைகொண்டு மோதினான்;(எ – று.)

    அசரீரிவார்த்தையில் நம்புதல்கொண்டு புயமேற் கதையைக்
தொட்டானென்பார் ‘சங்கையுறாதுகதை தொட்டான்’என்றார்.
சமீரணி=ஸமீரணி:ஸமீரணனுடையகுமாரன்என்று அவயவப் பொருள்:
ஸமீரணன்- வாயுதேவன்.  அரற்றிய சாபம் என்று பிரதிபேதம்.

தொட்ட கொடுங் கதை தோள் உறும் முன்னர்ப்
பட்டு, உளம் நொந்து பதைத்து, அடல் வஞ்சன்
வட்ட நெடுங் கடலூடு மருத்து அன்று
இட்ட பெருங் கிரி என்ன, விழுந்தான்.81.-வீமன்கதைமேலேதீண்டுதலும் புண்டரீகன்
வீழ்ந்திடுதல்.

தொட்ட – (வீமசேனன்) தாக்கிய, கொடுங் கதை-கொடிய
தண்டாயுதமானது, தோள் உறும் முன்னர் – தோளிற் படுதற்குமுன்னமே
[தோளிற்பட்டவுடனே],-பட்டு – (கதை) தீண்டுதலால், உளம் நொந்து-
மனம்வருந்தி, பதைத்து-துடித்து, அடல் வஞ்சன் – வலிமையையுடைய
வஞ்சனைக்குணமுடையவனாகியஅந்தப்புண்டரீகராட்சதன்,- வட்டம் நெடுங்
கடலூடு – வட்டவடிவாகவுள்ள பெரிய கடலிலே, மருத்து – வாயுதேவன்,
அன்று – முற்காலத்தில், இட்ட-கொண்டு செலுத்திய, பெருங் கிரி என்ன –
பெரியமலைபோல,விழுந்தான்-;(எ-று.)

     முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள்போல இறகுடை
யனவாயிருந்து அவற்றால்உலகமெங்கும் பலவிடத்தும் பறந்து திரிந்து
தமக்கு விருப்பமான இடங்களின்மே லுட்கார்ந்து அவ்விடங்களையும்
அவற்றிலுள்ள பிராணிகளையும்பாழாக்கிவருகையில் அத்துன்பத்தைப்
பொறுக்க மாட்டாத முனிவர் தேவர் முதலியோரது வேண்டுகோளால்
தேவேந்திரன் தனது வச்சிராயுதத்தினால்அவற்றைச் சிறகறுத்துத்
தள்ளிவருகையில் மைநாகமென்னும்மலைவாயுதேவனது உதவியால்
ஓடிச்சென்று கடலினுள்ளே ஒளிந்த தென்பது கதை;இம்மலை
அவ்வாயுகுமாரனானஅனுமான் இராமபிரானது நியமனத்தின்படி
சீதாபிராட்டியைத் தேடும் பொருட்டு இலங்கைக்குச் செல்லுதற்குக் கடலைத்
தாண்டும் பொழுது இடைவழியிலே அக்கடலினின்று அவருக்கு உதவிக்
கைம்மாறுசெய்யக் கருதி முயன்ற தென்பதை, இராமாயணத்திற் காணலாம்.
முன்னொருகால்வாயுதேவனுக்கும் ஆதிசேக்ஷனுக்கும் தமக்குள்
யார்பலசாலியென்று விவாத முண்டாக அதனைப்பரீக்ஷித்தறியும்பொருட்டு
வாயுதேவன் மேருமலையின்சிகரத்தைப் பெயர்த்துத்தள்ளுவ தென்றும்
ஆதிசேக்ஷன் அதுபெயரவொட்டாமற் காத்துக்கொள்வ தென்றும் ஏற்பாடு
உண்டாகி, அங்ஙனமே இருவரும் தத்தம் வலிமையைக் காட்டத்
தொடங்கியபொழுது, ஆதிசேக்ஷன் தனது ஆயிரம்படங்களாலும்
மேருமலையின்ஆயிரஞ் சிகரங்களையுங்கவிந்து பெயரவொட்டாமற்
பலநேரங் காக்க, பின்பு வாயுதேவன் தன்வலிமையால்
அம்மலைச்சிகரங்கள்மூன்றைப்பெயர்த்துக் கொண்டுபோய்த் தென்திசையில்
தள்ளிவிட்டா னென்றும், அவற்றுள் கடலினிடையே தள்ளப்பட்டதொரு
சிகரத்தின்மீதே இலங்கைத்தீவு ஏற்பட்ட தென்றும், அச்சிகரமே
திரிகூடமென்றும் திரிகோணமென்றும் பெயர்பெறு மென்றுங் கூறுவதொரு
கதையையுங் கொள்ளலாம்.  வட்டம்-வருத்தம்.  

ஏற்றத்தோடு இகலி, இவ்வாறு இடை வழிஅதனில் வந்து,
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர்த் திண் திறல்
அரக்கன்தன்னை,
பாற்றுக்கும், பகு வாய்ப் பேய்க்கும், பருந்துக்கும்,
வருந்துகின்ற கூற்றுக்கும்,
விருந்து செய்து, அக் கொற்ற வேல் குரிசில் போனான்.82.-அரக்கனைக்கொன்றபின்வீமன் அப்பாற்செல்லல்.

அகொற்றம் வேல் குரிசில் – வெற்றியுடைய
வேலாயுதத்தையுடைய பெருமையிற்சிறந்த அவ்வீமன், இ ஆறு-இந்தப்படி,
ஏற்றத்தோடு – பெருமையுடனே, இகலி – போர் செய்து, இடைவழியதனில்
வந்து சீற்றத்தோடு எதிர்ந்த வெம்போர் திண்திறல் அரக்கன் தன்னை-
நடுவழியிலேவந்து கோபத்துடனே எதிர்ப்பட்ட கொடிய போரையும் மிக்க
வலிமையையுமுடைய புண்டரீகனென்னுமிராக்கதனை,வருந்துகின்ற
பாற்றுக்குஉம் பகு வாய் பேய்க்கும்உம் பருந்துக்குஉம் கூற்றுக்குஉம்
விருந்து செய்து – (பசியால்) வருந்துகிற கழுகுகளுக்கும் திறந்த
வாயையுடையபேய்களுக்கும் பருந்துகளுக்கும் யமனுக்கும் விருந்துணவாக
அளித்து [கொன்றுவிட்டு],போனான்- அப்பாற் சென்றான்;(எ – று.)

     பெரியவடிவமாதலால், இத்தனைக்கும்உணவாம்.  வருந்துகின்ற
என்பதைப் பிறவற்றிற்குங் கூட்டுக;பகுவாய் என்பதையும் அப்படியே
கூட்டலாம்.  வருந்துகின்ற என்பதற்கு -(இவ்வரக்கனுயிரையுணவாகக்
கொள்ளவேண்டுமென்னும் அவாவால்)வருந்துகிற என்றும் கூறுவர்.
கூற்றுவருந்துவது இதுவரையில்இவ்வரக்கனையுண்ணமுடியாமையால் என்க.
வழியிடை – இடைவழியெனமுன்பின்னாகமாறினது, இலக்கணப்போலி.

     இதுமுதல்இருபத்தைந்துகவிகள்-பெரும்பாலும் முதற்சீரும்
நான்காஞ்சீரும் விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய
கழிநெடிலடி நான்கு கொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்;இவற்றில்மூன்று
ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும். 

எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி,
புண்டரீகன்தன் நாடு பொருக்கென நோக்கி, அப்பால்
தெண் திரை அளித்த தெய்வச் செல்வ மா நிதிகள் ஓங்கும்,
அண்டர் மா நகரும் ஒவ்வா, அளகை மா நகரம் கண்டான்.83.-வீமன்அளகாபுரியைக் காணுதல்.

எண் திசை அமரர் போற்றும் – எட்டுத்
திக்குக்களிலுமுள்ள (இந்திரன் முதலிய) தேவர்களாற் புகழப்படுகின்ற, மால்
இந்து வரை-பெரிய சந்திரசைலமென்னும்மலையை,சென்று எய்தி – போய்ச்
சேர்ந்து, புண்டரீகன் தன் நாடு பொருக்கென நெருக்கி – புண்டரீகனென்னும்
அரக்கனுடைய நாட்டின் எல்லையைவிரைவாகக் கடந்து, அப்பால் –
அதன்பின்பு, தெள் திரை அளித்த தெய்வம் செல்வம் மா நிதிகள் ஓங்கும் –
தெளிவான அலைகளையுடையபாற்கடலாற் பெறப்பட்ட தெய்வத்தன்மையுள்ள
செல்வம்நிறைந்த பெரியநிதிகள் சிறந்திருக்கப்பெற்ற, அண்டர் மா நகர்உம்
ஒவ்வா அளகை மா நகரம் – தேவர்களுடைய பெரிய அமராவதிநகரமும்
(தனக்கு) ஒப்பாகப்பெறாதசிறந்த அளகாபுரியை, கண்டான் – பார்த்தான்;(எ-று.)

     எண்திசையமரர்- அஷ்டதிக்குப் பாலகர்;அவராவார் –
கிழக்கிலிருந்து முறையே இந்திரன், அக்கினி, யமன், நிருருதி, வருணன்,
வாயு, குபேரன், ஈசாநன்என்பவர்.  இந்து – சந்திரன்;வடசொல்.  வரை –
மலை. சந்திரசைலம் – புண்டரீகனது நாட்டுக்கு
வடதிசையெல்லையாகவுள்ளது. பொருக்கென – விரைவுக்குறிப்பு
இடைச்சொல்.  புண்டரீகன்றனாடும்பொருக்கெனநோக்கியென்ற பாடத்துக்கு
– பிரமலோகத்தையும் விரைந்துபார்த்து என்று உரைத்து, மிகவோங்கிய
மலையிலேறியதனால்பிரமலோகமும் பார்க்கலாயிற்றென்க.  நிதிகள் –
சங்கநிதி பதுமநிதி முதலியன. அண்டர் + மாநகர் =அண்டமாநகர்;
உயர்திணையீறுவிகாரப்பட்டது. உம்மை – உயர்வு.  அளகை – குபேரன்நகரம். 

அந்த மா நகரின் தென்பால் அகல் விசும்பு உற
நின்று ஓங்கும்
விந்தமாம் என்ன நின்று, விளங்கு தோள் வீமசேனன்,
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி, அந்தக்
கந்த வான் பொழிலும், நல் நீர்க் கடி மலர்த்
தடமும், கண்டான்.84.-வீமன் தான்நாடிவந்த மலர்ப்பொழிலையடைதல்.

அகல் விசும்பு உற நின்று ஓங்கும் – (முன்னொரு
காலத்தில் மலையரசனாகியஇமவானோடுபகைத்துச் சூரியசந்திராதியரது
கமனமுந் தடைப்படும்படி) பரந்த ஆகாயத்தை யளாவ உயர்ந்துநின்ற,
விந்தம் ஆம் என்ன-விந்தியபருவதத்தை யொக்கும் (இது) என்னும்படி,
நின்று விளங்கு – நிலைபெற்றுவிளங்குகின்ற, தோள் – புயங்களையுடைய,
வீமசேனன்-, முந்தை மாருதி நண்போடு மொழி வழி எய்தி – முன்பு
அனுமான் (தன்னிடத்து) அன்புடனே சொன்ன வழியிற் சேர்ந்து, அந்த மா
நகரின் தென்பால்-அந்தப்பெரிய அளகாபுரியின் தென்புறத்திலே, கந்தம்
வான் அந்த பொழில்உம் – பரிமளத்தையுடைய உயர்ந்த (தான்
குறித்துவந்த) அச்சோலையையும்,நல் நீர் கடிமலர் தடம்உம்-(அதிலுள்ள)
சிறந்தநீரையும் வாசனையுடையபூக்களையுமுடையதடாகத்தையும்,
கண்டான்-பார்த்தான்;   (எ – று.)

    விந்தம்=விந்த்யம்:வடமொழித்திரிபு.  இங்கே ‘அகல்விசும்புற
நின்றோங்கும்விந்தம்’என்றது -அகத்தியமகாமுனிவரால் அடக்கப்படுவதற்கு
முன்பு அம்மலைஎழுந்த நிலையை. முந்தை – ஐயீற்றுடைக்குற்றியலுகரம்.
முந்தை மாருதி என்பதற்கு – பழமையான அனுமா னென்றும்,
தனக்குமுன்பிறந்த அனுமா னென்றும் பொருள் கொள்ளலாம்.  கடி –
உரிச்சொல்.  தெற்கு+பால்=தென்பால்;[நன்- உயிர்-35.]   

ஆயிடைக் குறுகும் எல்லை,-அப் பொழில் துப்பின் காப்போர்;
சேயிடைப் பரந்த மார்பர்; சேணிடைக் கடந்த தோளர்;
வாயிடைப் பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர்; வஞ்சத்
தீயிடைச் சோரி தோய்ந்து திரண்டெனச் சுழல் செங் கண்ணர்;85.-நான்குகவிகள் -அப்பொழிலைக்காப்பவரின்
வருணனை.

அஇடை குறுகும் எல்லை- (வீமன்) அவ்விடத்தைச்
சேருமளவில், அ பொழில் துப்பின் காப்போர் – அந்தச் சோலையை
வலிமையாற் காப்பவர்களும், சேய் இடை பரந்த மார்பர் – நெடுந்தூரம்
பரவின மார்பையுடையவர்களும், சேண் இடை கடந்த தோளர் –
ஆகாயத்தினிடத்தையுங் கடந்து உயர்ந்த தோள்களையுடையவர்களும்,
வாயிடை பிறைகள் என்ன வளைந்தவாள் எயிற்றர் – வாயிலே
பிறைச்சந்திரர்போல வளைந்துள்ள ஒளியையுடையகோர
தந்தங்களையுடையவர்களும், வஞ்சம் தீயிடை சோரி தோய்ந்து திரண்டு என
சுழல் செம் கண்ணர் – வஞ்சனையையுடைய நெருப்பிலே இரத்தமானது
தோய்ந்து திரண்ட உருப்பெற்றாற்போலச் சுழல்கின்ற சிவந்த
கண்களையுடையவர்களும்,-(எ-று.)-ஆயிடைக் குறுகுமெல்லைஎன்றதொடர்
‘சோலையெல்லாம்மொய்த்தார்’என, மேல் 89-ஆங் கவியில் முடியும்.
அப்பொழில் துப்பிற்காப்போர் என்பது முதலியன அரக்கர்க்கு விசேடணம்.

     பிறைகள் எனப்பன்மையாகக் கூறினது, இல்பொருளுவமை. சொரிவது
சோரி, ஏதுப்பெயர். ‘தீயிடைச்சோரி தோய்ந்து திரண்டு’ என்ற உவமை –
மிக்கசெந்நிறத்தையும், பயங்கரத் தன்மையையும் விளக்குதற்கு.
வாயிடைஎயிற்றர் என இயையும்.  சுழல் கண்-விழிசுழலுங்கண்.  தீக்கு
வஞ்சனை-அருகிலுள்ளபொருள்களையெல்லாந்தன்வயத்த தாக்கல்: இனி,
வஞ்சம் என்னும் அடைமொழியைக் கண்ணுக்கும் இயைக்கலாம்.
அ+இடை=ஆயிடை: நீண்ட சுட்டின்முன் யகரந்தோன்றிற்று: [நன்- உயிர்
-13]சேய்-சேய்மையென்னும் பண்புப்பெயர் ஈறுபோயிற்று.  இடை – இடம்.
பிறைவா ளென்ன என்றும் பாடம். 

சூழ் இருட் பிழம்பு நஞ்சு தோய்ந்தன்ன துவக்கர்; உன்னின்
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார்;
வாழி மந்தரம் மத்தாக, வாசுகி கயிறா, மாயோன்
ஆழி நீர் கடைந்த நாளும் அமுது எழக் கடைந்த வீரர்;

சூழ்இருள் பிழம்பு – (உலகத்தைச்) சூழ்ந்து நிறைந்திருக்கிற
இருளின் திரளும், நஞ்சு – விஷமும், தோய்ந்து அன்ன – (ஒன்றோடொன்று)
கலந்தாற்போன்ற, [மிகக்கரிய],துவக்கர் -உடம்பையுடையவர்களும், உன்னின் –
ஆராய்ந்து நோக்குமிடத்து, நாழிகை ஒன்றின்-ஒருநாழிகைப்பொழுதினுள்ளே,
எல்லா உலகைஉம் நலியும் – உலகங்களையெல்லாம் வருத்தவல்ல, ஈட்டார் –
வலிமையுடையவர்களும், மந்தரம் மத்து ஆகி-மந்தரகிரி மத்தாயிருக்க, வாசுகி
கயிறு ஆ – வாசுகியென்னும் பாம்பைக் கடைகயிறாக(க்கொண்டு), மாயோன் –
மாயையையுடைய திருமால், அமுதுஎழ – அமிர்தமுண்டாகும்படி, ஆழி நீர்
கடைந்த நாள்உம் – கடல் நீரைக் கடைந்தகாலத்திலும், கடைந்த –
(உடனிருந்து) கடைந்த, வீரர்-வீரத்தன்மையுடையவர்களும்,-(எ-று.)வாழி-
அசை.

     துவக்கு=த்வக்: வடமொழித்திரிபு;தோலின்பெயரான இது,
சினையாகுபெயராய், உடம்பைக் குறிக்கும்: “தோல்வற்றிச்,சாயினிஞ்
சான்றாண்மைகுன்றாமை”என்றவிடத்து ‘தோல்’என்பது போல.  ஈடு –
தேகவலிமை மத்து-மந்தம் என்னும் வடமொழித் திரிபு.  கடைகயிறாகிய
வாசுகியென்னும் பாம்பின் தலையைப்பிடித்துநின்ற அசுரர்க்கும் வாலைப்
பிடித்துநின்ற தேவர்க்குங் கடைதற்கேற்ற ஆற்றலில்லாமையைக் கருதித்
திருமால் இரண்டுவடிவங் கொண்டுஇருபக்கத்திலும்நின்று
திருப்பாற்கடலைக்கடைந்தருளின ரென்க. இவ்வரக்கர் அங்கு அசுரர்க்கு
உதவியாய்க் கடைந்தன ரென்ப.  பின் இரண்டடியால், இக்காவலாளரின்
நீண்டஆயுளுடைமையும், மிக்க வலியுடைமையும் உணர்த்தப்பட்டன.  நீர்-நீர்
வடிவமான[திரவரூபமான] பால். 

மறத்தொடு வஞ்சம் மானம் நண்பு என வளர்த்து, நாளும்,
அறத்தொடு பகைக்கும் நெஞ்சர்; பிலத்தினும் அகன்ற வாயர்;
புறத்தினில் முகத்தர்; மார்பில் புழை முழை மூக்கர்; இன்ன
திறத்தினர்; குஞ்சிச் செந் தீச் சிரத்தினர்;
வரத்தின் மிக்கோர்;

மறத்தொடு – பாவத்துடனே, வஞ்சம்-வஞ்சனையையும்,
மானம் – அகங்காரத்தையும், நண்பு என – (தமக்குச்) சினேகமாக, வளர்த்து
– விருத்திசெய்து, நாள்உம்-தினந்தோறும், அறத்தொடு பகைக்கும்-
தருமத்துடனே மாறுகொள்கின்ற, நெஞ்சர்-மனத்தையுடையவர்களும்,
பிலத்தின்உம் அகன்ற வாயர் – பெருங்குகையைக்காட்டிலும் விசாலமான
வாயையுடையவர்களும், புறத்தினில் முகத்தர்-முதுகிலே
முகத்தையுடையவர்களும், மார்பில் புழை முழை மூக்கர் – மார்பிலே
பெருந்துளையையுடையமலைக்குகைபோன்ற மூக்கையுடையவர்களும்,
இன்ன திறத்தினர் – இவை போன்ற பலவகை விகாரங்களை
யுடையவர்களும், குஞ்சி செம் தீ சிரத்தினர்-தலைமயிர்முடியாகியசிவந்த
நெருப்பைத் தலையிலுடையவர்களும்,வரத்தின் மிக்கோர்-சிறந்தவரங்களால்
மிகுந்தவர்களும்;

     மறத்தொடுவஞ்சம் மானம் நண்பென வளர்த்து என்பதற்கு-
அதருமத்தைத் தமக்குப் பெருமையாகவும் வஞ்சனையைத்தமக்குச்
சினேகமாகவும் வளர்த்து என முறைநிரனிறைப்பொருள்கோளாக்கியு
முரைக்கலாம். ஆன நண்பு என எடுத்து – தக்கதுணையெனினுமாம். பிலம் –
பாதாளவழியுமாம்.  மார்பில் மூக்கர் என்க.  குஞ்சி-ஆண்மயிர்

கரங்கள் ஆயிரத்தர்; நண்ணும் கால்கள்
ஆயிரத்தர்; குஞ்சிச்
சிரங்கள் ஆயிரத்தர்; பூழைச் செவிகள் ஆயிரத்தர்; வென்றி
உரங்கள் ஆயிரத்தர்; ஊழி தவம் முயன்று உரிமை பெற்ற
வரங்கள் ஆயிரத்தர்; மிக்க மறைகள் ஆயிரத்தர் மன்னோ;

கரங்கள் ஆயிரத்தர் – ஆயிரங்கைகளையுடையவரும்,
நண்ணும் கால்கள் ஆயிரத்தர்-பொருந்தின ஆயிரங்கால்களையுடையவரும்,
குஞ்சி சிரங்கள் ஆயிரத்தர் – மயிர்முடியையுடைய
ஆயிரந்தலைகளையுடையவரும், பூழை செவிகள் ஆயிரத்தர்-
பெருந்துளையையுடையஆயிரங்காதுகளையுடையவரும், வென்றி உரங்கள்
ஆயிரத்தர் – சயத்தைவிளக்குகின்ற ஆயிரம்மார்புகளையுடையவரும், ஊழி
தவம் முயன்று-நெடுங்காலந் தவத்தை முனைந்துசெய்து,உரிமை பெற்ற-
(தமக்கு) உரியவனாக அடைந்த, வரங்கள் ஆயிரத்தர்-ஆயிரம்வரங்களை
யுடையவரும், மிக்க மறைகள் ஆயிரத்தர் – பயன்
மிகுந்தஆயிரம்மந்திரங்களையுடையவரும்,-(எ-று.)-மன்,ஓ – ஈற்றசை.

     இங்கே ஆயிரம்என்றது – மிகப் பலவென்னும் பொருளையுணர்த்தும்.
பூழை-புழையென்பதன் நீட்டல்.  வென்றி உரங்கள் ஆயிரத்தர் –
வெற்றியைத்தரும் பலவகை வலிமைகளையுடையார் எனவுமாம்.  ஊழி-
யுகம் கற்பம் முதலிய காலத்தின் பேரெல்லையைக்குறிக்கும்.  

வைத் தாரை வாளம், வில், வேல், மழு, எழு, திகிரி, சூலம்,
கைத் தாரைபடக் கொண்டு, என்றும், கண்
இமையாது காப்போர்;
மைத் தாரை மாரி ஒப்பார்;-மானுட நாற்றம் கேட்டு,
மொய்த்தார், அக் கடவுள் வாச மொய்ம் மலர்ச்
சோலை எல்லாம்.89.-அப்போதுஅக்காவலாளர் மானுடநாற்றத்தை
யறிந்துதிரளுதல்.

வை-கூர்மையாகிய, தாரை-நுனியையுடைய, வாளம்-
வாளாயுதத்தையும், வில் – வில்லையும்,வேல் – வேலையும்,மழு-
மழுவையும், எழு வளை தடியையும், திகிரி-சக்கரத்தையும், சூலம்-
சூலத்தையும், கை-(தமது) கைகளிலே, தாரை பட – ஒழுங்கு பொருந்த,
கொண்டு-ஏந்திக்கொண்டு, என்றுஉம்-எப்பொழுதும், கண் இமையாது
காப்போர் – விழித்தகண் மூடாமற் காவல் செய்பவர்களும், தாரை மை மாரி
ஒப்பார் – நீர்ப்பெருக்கை யுடைய கரியமேகத்தை (நிறத்தில்) ஒப்பவர்களும்
(ஆகிய அரக்கர்கள்), மானுடன் நாற்றம் கேட்டு-மனிதனது கந்தத்தையறிந்து,
அ கடவுள் வாசம் மொய் மலர் சோலைஎல்லாம் – தெய்வத்தன்மையுள்ள
பரிமளமுடைய அடர்ந்த பூக்களையுடையஅந்தச்சோலையினிடம்
முழுவதிலும், மொய்த்தார்-சூழ்ந்து நெருங்கினார்கள்;    (எ-று.)

     மனிதகந்தத்தை மோந்து உணருந்தன்மையர் அரக்கரென்க.  நாற்றங்
கேட்டு என மூக்கின் வினையைச்செவியின் வினையாகக்கூறியது, ஓர்
மரபுவழுவமைதி;புலன்மாறிவந்த வழக்கு எனப்படும்: “நாற்றங்கேட்டலுந்
தின்ன நயப்பது”என்றார்கம்பரும்.  கடவுள் வாசம் – மற்றை
மலர்களெல்லாவற்றினுஞ் சிறந்திருக்கும் பரிமளம்.  கடவுட்சோலையென்றும்
இயைக்கலாம்.  மழு – பரசு என்னும் படை.   

மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல்
முகக்கும் நீலக்
கொண்டலின் குமுறி ஆர்த்து, குறுகிய, கொடிய நீசர்,
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி-தனயன் தன்னைக்
கண்டனர், சூல பாசக் காலனைக் கண்டது அன்னார்90.-பொழிற்காவலாளர்வீமனைக்காணுதல்.

எங்குஎங்குஉம்-(அச்சோலையின்)எல்லாவிடங்களிலும்,
மண்டி – நெருங்கி, மேல் மேல்-வரவர, மறி கடல் முகக்கும்
நீலம் கொண்டலின்குமுறி ஆர்த்து குறுகிய – அலைகள்மடங்குகின்ற
கடல்நீரை மொண்டு பருகிய நீலநிறமுள்ள காளமேகம்போலக் கர்ச்சித்து
ஆரவாரித்துக்கொண்டு சமீபித்த, கொடிய நீசர்-கொடுந்தன்மையுள்ள
அதமர்களான அவ்வரக்கர்கள், சண்டம் வேகத்தின் எய்தும் – உக்கிரமான
வேகத்துடனே வருகின்ற, சதாகதி தனயன் தன்னை-வாயுகுமாரனான
வீமனை,சூல பாச காலனைகண்டது அன்னார்-சூலாயுதத்தையும்
காலபாசத்தையும் ஏந்திய யமனைக்கண்ட தன்மையை யொத்தவர்களாய்,
கண்டனர்-பார்த்தார்கள்;(எ-று.)

     விரைவில்வீமன் இவ்வரக்கர்க்கு இறுதியை விளைத்தலால்,சூலபாச
காலனைக்கண்டதன்னாரென உவமை கூறினார். கொண்டல்- நீர்கொண்டது
எனக் காரணப்பெயர்.  நீசர் – குணந்தொழில்களில் இழிவுடையோர்.
பாசம் – கயிற்று வடிவான ஓர் நமனாயுதம்;இது, உயிர்களைக்கட்டியிழுத்துக்
கொண்டுபோவது. 

எற்ற!’ என்பாரும், ‘சூலத்து எறிய!’ என்பாரும், ‘எய்திப்
பற்ற!’ என்பாரும், ‘ஆவி பறிக்க!’ என்பாரும், ‘யாக்கை
சுற்ற!’ என்பாரும், ‘சென்னி துணிக்க!’ என்பாரும், ஆகி,
உற்றனர், அரக்கர் நூறாயிரர், உருத்து, உரைக்கலுற்றார்91.-வீமனைநோக்கிஅவர்கள் அதட்டிக் கடுமையாகச்
சொல்லிப் பின்னுங்கூறலுறுதல்.

உற்றனர் அரக்கர் நூறு ஆயிரர்-வந்துநெருங்கினவர்களான
அந்த லட்சம் ராக்ஷசர்கள், எற்ற என்பார்உம்-(இம்மனிதனை)அடிக்க
என்பவர்களும், சூலத்து எறிய என்பார்உம்-சூலாயுதத்தால் வீசி மோதுக
என்பவர்களும், எய்தி பற்ற என்பார்உம் – (அருகிற்) சென்று பிடிக்க
என்பவர்களும், ஆவி பறிக்க என்பார்உம்-உயிரை வாங்குக என்பவர்களும்,
யாக்கை சுற்ற என்பார்உம் – இவனுடம்பைக் கட்டுக என்பவர்களும்,
சென்னி துணிக்க என்பார்உம்-தலையைவெட்டுக என்பவர்களும், ஆகி-
ஆய். உருத்து உரைக்கல் உற்றார்- கோபித்துச் சொல்லத்
தொடங்கினார்கள்;(எ-று.)-அதனை,மேலிற்கவியிற் காண்க.

     எற்ற, எறிய,பற்ற, சுற்ற – அகரவீற்று வியங்கோள்கள். பறிக்க,
துணிக்க – ககரவீற்று வியங்கோள்கள்.  

இந்திரன் முதலா உள்ள இமையவர் தாமும், இந்தக்
கந்த வான் சோலை கண்ணால் காணவும் கருதி நைவார்;
வந்தது என், மதி இலாத மானுடா? உன்தன் ஆவி
சிந்து முன் செப்புக!’ என்னாத் தெழித்தனர்,
தீயோர் எல்லாம்.92.-வீமனைஅரக்கர்கள் அதட்டி வினாவுதல்.

இந்திரன்முதல் ஆ உள்ள இமையவர்தாம்உம் – இந்திரன்
முதலாகவுள்ள தேவர்களும், இந்த கந்தம் வான் சோலைகண்ணால்
நோக்கஉம் கருதி நைவார் – வாசனையையுடையஉயர்ந்த
இச்சோலையைக்கண்களாற் பார்த்தற்கு நினைத்தாலும்(நம்மால்)
வருந்துவார்கள்: (அங்ஙனமிருக்க), மதி இலாத மானுடா – அறிவில்லாத
மனிதனே!  வந்தது என் – (நீ இங்கே) வந்த காரணம் என்ன?  உன்தன்
ஆவி சிந்தும் முன் செப்புக – உனது உயிர் (எம்மால்) அழிதற்குமுன்பு
சொல்லுக,’என்னா- என்றுகூறி, தீயோர் எல்லாம் – கொடிய அவ்வரக்கர்
யாவரும், தெழித்தனர் – (வீமனை)அதட்டினார்கள்;(எ-று.)

     இமையவர்தாமும், உம்மை – உயர்வுசிறப்பு.  நோக்கவும் என்ற
உம்மை – இழிவுசிறப்பு.  ‘கண்ணால்’என்ற அவசியமில்லாத பதம்,
அவர்கள் கண்கள் இச்சோலையைப்பார்த்தற்கேற்ற சிறப்புடையன
அல்லஎன்னும் இழிவை யுணர்த்தும்: அன்றி, மனத்தால் நோக்குதலினும்
வேறுபாடு தோன்ற, ‘கண்ணால்நோக்க’என்றதாகவுங் கொள்ளலாம்

அருள் இலா அரக்கர், இவ்வாறு, அகங்கரித்து,
அரற்றும் இந்தப்
பொருள் இலா உரைகட்கு எல்லாம் உத்தரம்
புகலான் ஆகி,
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு
இலங்க நக்கான்-
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும்
சிவனைப் போல்வான்.93.-அவ்வரக்கரின்பொருளில்லாச் சொல்லைக்கேட்டு
வீமன் சிரித்தல்.

தெருள் இலா-தெளிந்த அறிவில்லாமல் (தன்னையெதிர்த்துப்)
பொருத, மதனை- மன்மதனை,முன்னம் – முன்னொருகாலத்திலே,
எரித்திடும் – (உடம்பை) எரித்த, சிவனை-பரமசிவனை,போல்வான்
ஒப்பவனாகிய[பேராற்றலுடைய]வீமன்,-அருள்இலா அரக்கர் –
கருணையில்லாதஇராக்கதர்கள், அகங்கரித்து –  செருக்குக் கொண்டு, இ
ஆறு அரற்றும்-இந்தவிதமாகப் பிதற்றுகின்ற, இந்த பொருள் இலா
உரைகட்கு எல்லாம் – பயனில்லாத இப்பேச்சுகளுக்கெல்லாம், உத்தரம்
புகலான் ஆகி – விடைகூறாதவனாய்,இருள் இலா முத்தம் அன்ன அரும்பு
எயிறு இலங்க – கருநிறமில்லாத [மிக்கவெள்ளொளியையுடைய]
முத்துக்களையொத்தமுல்லையரும்புபோன்ற (தனது) பற்கள் சிறிது
வெளிவிளங்கும்படி, நக்கான் – சிரித்தான்;(எ-று.)

    இருளில் ஆம் முத்தம் – இருளில் விளங்குதலைக்கொண்ட
முத்தமுமாம்.  அழித்தற்றொழிலுடைமையாலும், சிரித்துப்பகை
வரையழித்தலாலும், சிவனை ஈண்டு உவமைகூறியது.  இங்கே, சிரிப்பு –
வீரத்துஎழுந்த வெகுளிநகை.  சிவபிரானது திவ்வியசக்தியை
இத்தன்மையதென உணராது மற்றவர்களைப்போலவே அப்பிரானையும்
வசப்படுத்தலாமெனக் கருதின அவிவேகத்தைப் பற்றி, ‘தெருளிலாமதன்’
என்றது.  மானுடனான வீமனை அலட்சியப்படுத்தி அவ்வரக்கர் கூறியபடி
நிகழாமல் வீமனே அவர்களை வெல்லுதலால் அவருரை பொருளிலாவுரை
யாகும்.  

தனித மேகம்போல் ஆர்க்கும் நுமது உயிர் சரத்தின்
சாய்த்து, இப்
புனித வான் பொழிலில் வாசப் புது மலர் கொய்ய வந்தேன்;
குனி தவர் கொண்டு, முன் நும் குலம் கரிசு அறுத்த வீரன்
மனிதனோ, வான் உளானோ? மறத்திரோ?’ வஞ்சர்!’ என்றான்.94.-வீமன்கூறிய மறுமொழி.

தனி தம் மேகம் போல் – இடியையுடைய மேகங்கள் போல
ஆர்க்கும் – ஆரவாரிக்கிற, நுமது – உங்களுடைய, உயிர்-பிராணனை,
சரத்தின் – (எனது) அம்புகளால், சாய்த்தி – ஒழியச் செய்து, புனிதம் வான்
பொழிலில் – பரிசுத்தமாகவுள்ள சிறந்த இச்சோலையிலே,வாசம் புது மலர்
கொய்ய – பரிமளத்தையுடைய புதிதாய்மலர்ந்த பூக்களைப்பறித்தற்கு,
வந்தேன்-;முன் – முன்காலத்திலே [திரேதாயுகத்திலே],குனி தவர்
கொண்டு – வளைந்த(கோதண்டமென்னும்) வில்லைக்கொண்டு, நும் குலம்
– உங்கள் கூட்டத்தை [ராக்ஷசசமூகத்தை],கரிசு அறுத்த – குற்றம் நீங்க
அழித்த, வீரன் – வீரத்தன்மையுள்ள இராமபிரான், மனிதன்ஓவான்
உளான்ஓ-மனிதனோதேவனோ? [தேவனல்லன்,மனிதனேயன்றோ];
வஞ்சர் – வஞ்சனையுடையவர்களே! மறத்திர்ஓ-(அதனை)மறந்து
விட்டீர்களோ?’என்றான்- என்று (அரக்கரை நோக்கி வீமன்) கூறினான்;
(எ-று.)

     இராமன் மனிதனாயினும்இராவணாதிராக்ஷசர்பலரை வேரறுத்ததுபோல,
நானும் மனிதனாயினும்அரக்கராகிய உங்களையெல்லாம் அழித்திட வல்லே
னென்றவாறாம். கொடிய அரக்கராகிய உங்களை ஒழித்தபின்பே
சோலைபரிசுத்தமாகு மென்பான், ‘நுமதுயிர்சரத்திற்சாய்த்தி’ என்றதன்பின்
‘புனிதவான்பொழில்’என்றான். ஸ்தநிதம் – வடசொல். சாய்த்தி-பிறவினை
வினையெச்சம். ‘சாய்த்து’என்றும் ‘கருவறுத்த’ என்றும் பாடங்கள் உண்டு.
குனி தவர்-வினைத்தொகை.முன் உம் என்றும் பிரிக்கலாம்

மா விந்தம் அனைய பொன்-தோள் மாருதி
வாய்மை கேட்டு,
‘ பூ இந்த வனத்தில் நீயோ பறித்தி!’ என்று
அழன்று, பொங்கி,
‘நா, இந்த உரை தந்து, இன்னும் இருப்பதோ,
நரனுக்கு?’ என்னா,
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின்
குழாத்தின் சூழ்ந்தார்.95.-இதுமுதல்ஆறுகவிகள் – அரக்கர் வீமனைச்சூழ்ந்து
கொண்டு பொரஅவ்வீமன் அவர்களையழித்தமைகூறும்.

மாவிந்தம் அனைய- உயர்ந்த விந்தியமலையையொத்த,
பொன் தோள் – அழகிய புயங்களையுடையமாருதி – வாயுகுமாரனான
வீமனது, வாய்மை – வாயிலிருந்து வந்த வார்த்தையை, கேட்டு-(அரக்கர்கள்)
செவியுற்று, ‘நீஓ இந்த வனத்தில் பூ பறித்தி- நீயா இச்சோலையில்மலர்
கொய்திடுவாய்!’என்று – என்றுகூறி, அழன்று பொங்கி – சீற்றங்கொண்டு
எழுந்து, இந்த உரை தந்து இன்னும் நரனுக்கு நா இருப்பதுஓ என்னா-‘இப்
பேச்சுப்பேசிஇதன்பின்பும் இந்த மனிதனுக்கு நாக்குத் துணிக்கப்படாமலிருப்பது
தகுதியோ!’என்றுங் கூறி, கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின்
குழாத்தின் – கண்ணபிரான் (குடையாக) எடுத்துப்பிடித்த கோவர்த்தன
மலைமீது(சூழ்ந்த) மேகக்கூட்டம் போல, சூழ்ந்தார்-(வீமனைச்)
சூழ்ந்துகொண்டார்கள்;(எ-று.)

    திருவாய்ப்பாடியில் ஆயர்களெல்லாருங் கூடி மழையின் பொருட்டாக
இந்திரனையாராதித்தற்கென்று சமைத்தசோற்றைக் கண்ணன் அவனுக்கு
இடாதபடி விலக்கிக் கோவர்த்தனமலைக்குஇடச்சொல்லித் தானே ஒரு
தேவதாரூபமாய் அமுதுசெய்தருள, அவ்விந்திரன் பசிக்கோபத்தாலே
புஷ்கலாவர்த்தம்முதலிய மேகங்களுக்கும் கண்ணனுக்கு இஷ்டரான
இடையருக்கும் இடைச்சியர்க்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழுநாள்
இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணன் கோவர்த்தனமென்னும்
மலையைஎடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத்தடுத்து எல்லா
வுயிர்களையும்இடையூறு சிறிதுமின்றிக் காத்தருளின னென்பது கதை.
கோவிந்தன் என்னும் வடசொல்லுக்கு – உயிர்களைக்காப்பவனென்றும்,
பசுக்களைக்காப்பவனென்றும், பூமியைக் காப்பவனென்றும் பொருள்
கொள்ளப்படும்.  பருமையும் வலிமையும் பற்றிக் கோவர்த்தனத்தை
வீமன்வடிவுக்கும், கருமையும் பருமையும்பற்றி மேகத்தை அரக்கர்க்கும்
உவமை கூறினார்.நீயோ, ஓகாரம் – இழிபு.  கோவிந்தன்றடுத்த என்று
பிரதிபேதம்.    

வானகம் மறைய வீசி, வான் படைக் கலங்கள், வால-
சேனனே முதலா உள்ள சேனையின் தலைவர் ஆர்த்தார்;
கானுடைத் தொடையலானும் காலனுக்கு ஆவி அன்ன
தானுடைத் தண்டம் ஏந்திப் புகுந்தனன், சலிப்பு இலாதான்.

(அப்பொழுது), வாலசேனன்ஏ முதல்ஆ உள்ள –
வாலசேனனென்பவனை ஆதியாகவுடைய, சேனையின் தலைவர் – இராக்கத
சேனைத்தலைவர்கள், வான் அகம் மறைய – ஆகாயத்தினிடம் முழுவதும்
மறைபடும்படி, வான் படைக்கலங்கள் வீசி-சிறந்த ஆயுதங்களை
வீசியெறிந்துகொண்டு, ஆர்த்தார் – ஆரவாரித்தார்கள்; சலிப்பு இலாதான்-
(போர் செய்வதில்) வெறுத்தலில்லாதவனான, கான்உடை தொடையலான்உம்-
வாசனையையுடையமாலையையுடையவீமனும், காலனுக்கு ஆவி அன்ன
தான் உடைதண்டம் ஏந்தி-யமனுக்கு உயிரையொத்து உதவுவதான தான்
உரிமையாகக் கொண்டுள்ள (சத்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தை
எடுத்துக்கொண்டு, (அவ்வரக்கர் கூட்டத்தில்), புகுந்தனன்-;(எ-று.)

     வாலசேனன் -பாலஸேநன் என்னும் வடசொல்லின் திரிபு:
இளையோர்குழாத்தையுடையவனென்று பொருள்.  யமனாற்
கொல்லத்தகாதவர்களையும்கொன்று தருதலால், யமனுக்கு இது
இன்றியமையாத துணைஎன்பார்’காலனுக்குஆவியன்ன தண்டம்’என்றார்.

தண்டினால், அவர்கள் விட்ட படை எலாம் தகர்த்து, மீள
மண்டினான், உழுவை கண்ட வாள் உகிர் மடங்கல் ஒப்பான்;
மிண்டினார் உடலம் யாவும் மெய் தலை தம்மின் ஒன்றக்
கிண்டினான்; மூளைச் சேற்றில் கிடத்தினான்,
படுத்து மன்னோ.

உழுவைகண்ட-புலிகளை(த்தன்னைச்சூழ்ந்துநெருங்கிப்
போர்செய்ய)ப் பார்த்த, வாள் உகிர் மடங்கல்-வாளாயுதம் போலக்
கூர்மையான நகங்களையுடையசிங்கத்தை, ஒப்பான் – போல்பவனாகிய
வீமன்,-தண்டினால்-(தனது)கதாயுதத்தாலே,அவர்கள் விட்ட படைஎலாம்
தகர்த்து – அவ்வரக்கர்கள் வீசின ஆயுதங்களையெல்லாம்உடைத்திட்டு,
மீள மண்டினான்-மறுபடிமிகநெருங்கினவனாய்,மிண்டினார்உடலம் யாஉம்
– (தன்னை)நெருங்கிச் சூழ்ந்த அரக்கர்களின் உடம்புகளையெல்லாம்,மெய்
தலைதம்மின்ஒன்ற-உடம்பும் தலையும்(கீழே விழுந்து) தமக்குட்சேரும்படி,
கிண்டினான்கீண்டெருத்து, மூளை சேற்றில் படுத்து கிடத்தினான் –
(அவர்களின்) மூளைகளாகிறசேற்றிலே தள்ளி விழுந்து கிடக்கச் செய்தான்;

     தண்டு -தண்டம்;வடசொல் விகாரம்.  பலத்திற்குறைந்த அரக்கர்க்குப்
புலிகளும், ஆற்றலில் மிக்க வீமனுக்குச் சிங்கமும் உவமையாம்.
மூளையென்றது, தலையினின்றுவழிந்த ஒருவகை நிணத்தை. மன், ஓ –
ஈற்றசைகள்.     

தாக்கினான், சிலரைத் தண்டால்; தடக் கையால் சிலரை வானில்
தூக்கினான்; கறங்கின் நின்று சுழற்றினான், சிலரை; எற்றி
நூக்கினான், சிலரை; தாளால் நொறுக்கினான், சிலரை; வாளால்
வீக்கினான், சிலரை; ஆவி வேறு இட்டான், சிலரை;-வீமன்.

வீமன்-,சிலரை – சில அரக்கர்களை,தண்டால் – (தனது)
கதையினால்,தாக்கினான்- மோதியடித்தான்;சிலரை-,தட கையால் – பெரிய
(தனது) கைகளால், வானில் தூக்கினான்- ஆகாயத்தையணுகத்
தூக்கிப்பிடித்தான்; சிலரை-,நின்று – (தான்) நிலைநின்று,கறங்கின்
சுழற்றினான்- காற்றாடிபோலச்சுழலச்செய்தான்;சிலரை-,எற்றி நூக்கினான்-
(கையால்) அடித்துத் தள்ளினான்;சிலரை-,தாளால் நொறுக்கினான்- காலால்
மிதித்துத் துவைத்தான்;சிலரை-,வாளால் வீக்கினான் –
வாளாயுதத்தினால்வெட்டினான்;சிலரை-,ஆவி வேறு இட்டான் –
(உடம்பினின்றும்) உயிர் வேறாம்படிசெய்தான்;(எ-று.)

பிடித்தனன், சிலரை; அள்ளிப் பிசைந்தனன், சிலரை; மண்ணில்
அடித்தனன், சிலரை; அங்கம் அகைத்தனன், சிலரை; எண்ணம்
முடித்தனன், சிலரை; போக முகிழ்த்தனன், சிலரை; கண்டம்
ஒடித்தனன், சிலரை; அஞ்ச உறுக்கினன், சிலரை மன்னோ.

வீமன்), சிலரை-,பிடித்தனன் – (தன்கையால் ஒரு பிடியாகப்)
பிடித்தான்;சிலரை-,அள்ளி பிசைந்தனன் – ஒருங்கு எடுத்துப் பிசைந்தான்,
சிலரை-, மண்ணில் அடித்தனன்-நிலத்தில் மோதினான்;சிலரை – அங்கம்
அகைத்தனன்-அவயவங்களைஒடித்தான்;சிலரை-,எண்ணம் முடித்தனன் –
(அவர்கள்கொண்ட) எண்ணத்தைப் பாழாக்கினான்;சிலரை-,போக முகிழ்த்தனன்
– அழிந்துபோம்படி ஒடுக்கினான்;சிலரை-,கண்டம் ஒடித்தனன்-கழுத்தை
முறித்தான்;சிலரை-, அஞ்ச உறுக்கினன் – பயப்படும்படி அதட்டினான்;(எ-று.)

    இச்செய்யுளிலும் இதற்குமுந்தின செய்யுளிலும் சிலரையென வந்த
சொல்லும்பொருளும் மீண்டும் பலவிடத்தில் வந்தது, சொற்பொருட்பின்
வருநிலையணி. போகம் முகிழ்த்தனன் என்று பிரித்து – வீரசுவர்க்க
இன்பம் அரும்பச்செய்தன னெனினும் அமையும்.  மன், ஓ-ஈற்றசை.

கரக் கழுந்து அதனினானும், கன வரைத் தோளினானும்,
வரக் கொடுங் கதையினானும், மராமரப் பணையினானும்,
உரக் கடுங் காலினானும், ஒருக்கினான்; உரைப்பது என்னோ?-
அரக்கரை என்றால், பின்னை விடுங்கொலோ,
அனுமன் பின்னோன்?

கரம்கழுந்து அதனினான்உம்- (தனது) கைகளாகிய
தண்டங்களாலும், கனம் வரை தோளினான்உம்- பெரிய மலைகள்போன்ற
(தனது) தோள்களாலும், வரம் கொடு கதையினான்உம்- சிறப்பான கொடிய
(தனது) கதாயுதத்தாலும், மராமரம், பணையினான்உம்- மராமரமென்னும்
மரத்தினது கிளைகளாலும்,உரம் கடுகாலினான்உம்- வலிமையையுடைய
கடுமையான (தனது) கால்களாலும், ஒருக்கினான்-(அரக்கர்களைவீமன்)
அழியச்செய்தான்;உரைப்பது என்ஓ-(இனி நாம்) சொல்லவேண்டுவது யாது
உளது? அரக்கர் என்றால்- (வந்து எதிர்ப்பவர்) இராக்கதராயிருந்தால்,
பின்னை- பின்பு, அனுமான் பின்னோன்-அனுமானதுதம்பியானவன்
[வீமன்],விடும்கொல் ஓ – (அவர்களைஉயிரோடு) விட்டிடுவானோ?
[விடானென்றபடி];(எ-று.)

     தன்னையெதிர்த்துப் பொருதுவந்த இராவணன்மகனானஅக்ஷகுமாரன்
முதலிய சிறந்த இராக்கத வீரர் பலரையும் விடாமல் விரைவிற்
கொலைசெய்தஅநுமான்போலவே, அவன் தம்பியாகிய வீமனும்
தன்னையெதிர்த்தஅரக்கர் பலரையும் விடாது பலவகையால் அழியச்செய்தா
னென்றவாறாம். இங்கு வீமனை’அனுமன்பின்னோன்’என்றது –
கருத்துடையடைகொளியணியாம்.  கரக்கழுந்ததனினானும்- கையிலுள்ள
தனுர்த்தண்டத்தாலும் என்றுமாம்.  ஒருக்கினான்,ஒருங்கு என்பதன்
பிறவினையானஒருக்கு – பகுதி: ஒருக்குதல்-ஒடுங்கச்செய்தல்.  அரக்கரை,
ஐ-சாரியை 

இப்படி எதிர்ந்த சேனை யாவையும், இமைக்கும் முன்னம்,
துப்புடன் தொலைத்து, வாயு சுதன் நின்ற உறுதி நோக்கி,
மைப் படி வரைகள் போல்வார், வாள் எயிற்று
அரக்கர், பின்னும்,
கைப் படை கொண்டு, நூறாயிரர் ஒரு கணத்தில் சூழ்ந்தார்.101.-வீமனைவேறு இலட்சம் அரக்கவீரர் மீண்டும்
சூழ்தல்.

இப்படிக்கு – இந்தவிதமாய், எதிர்த்த சேனை யாவைஉம் –
(தன்னை) எதிர்த்த சேனைகள் எல்லாவற்றையும், இமைக்கும் முன்னம் –
கண்ணைமுடித்திறக்கும்பொழுதினுள்ளே, துப்புடன் தொலைத்து-வலிமையுடனே
கொன்று, வாயு சுகன் நின்ற-வாயுகுமாரனான வீமன் சலியாது நிலைநின்ற,
உறுதி – உறுதியை, நோக்கி-பார்த்து,-மை படி வரைகள் போல்வார் –
மேகங்கள்படிந்த மலைகள்போலப் பெரியகரிய வடிவமுடையவராகிய, வாள்
எயிறு அரக்கர்-ஒளியையுடைய கோரதந்தங்களையுடைய இராக்கதர்கள்,
பின்னும் நூறாயிரர்-வேறுமொரு லக்ஷம்பேர், கை படை கொண்டு – கைகளில்
ஆயுதங்களை யேந்திக்கொண்டு, ஒரு கணத்தின்-ஒரு கணப்பொழுதினுள்ளே,
சூழ்ந்தார்-(வீமனைவந்து) சூழ்ந்தார்கள்; (எ-று.)

     இப்படிக்கு என்பதில், கு-சாரியை. இமைக்குமுன்னம்-விரைவு விளக்கும்.
இப்படியெதிர்ந்தசேனை என்றும் பாடம்.   

அவர் வெகுண்டு, அழன்று, மேன்மேல்
அலை கடல் போல ஆர்த்து,
பவர் கொண்ட பனகம் என்ன, சூழ்வரும் பரிசு பாரா,
கவர் கொண்ட தொடையலானும் கதை ஒழிந்து,
இலங்கு செங் கைத்
தவர் கொண்டு, நெடு நாண் அண்டம் தகர்தரத் தழங்க
ஆர்த்தான்.102-அரக்கர்சூழ்ந்ததைக்கண்டு வீமன் வில்லையெடுத்து நாணியைத்தெளிதல்

அவர்-அவ்விராக்கதர்கள், வெகுண்டு அழன்று – மிகவுங்
கோபித்து, மேல்மேல்-மேலேமேலே (இடைவிடாமல்), அலைகடல் போல
ஆர்த்து-அலையலைக்கின்ற கடல்கள்போல ஆரவாரஞ்செய்து, பவர் கொண்ட
பனகம் என்ன – நெருங்குதலைக் கொண்ட பாம்புகள்போல, சூழ்வரும் –
(தன்னைச்) சூழ்ந்துவருகிற, பரிசு-விதத்தை, பாரா-பார்த்து,-கவர் கொண்ட
தொடையலான்உம்- (காண்போர்மனத்தைக்) கவருந்தன்மையைக் கொண்ட
(மிகஅழகிய) பூமாலையையுடைய வீமனும், கதை ஒழிந்து – கதாயுதத்தைநீங்கி,
இலங்கு செம்மை-விளங்குகின்ற சிவந்த (தனது) கையிலே, அவர் கொண்டு –
வில்லையேந்திக்கொண்டு, நெடு நாண் – நீண்டவில்காணியை, அண்டம்
தகர்தர தழங்க-அண்டகோளங்கள் (அதிர்ச்சியாற்) பிளவுபடுமாறு முழங்கும்படி,
ஆர்த்தான் – (கைவிரலால்) தெறித்து ஆரவாரித்தான்; (எ-று.)

     வெகுண்டு அழன்று-ஒருபொருட்பன்மொழி. பவர்என்பதைப் பவன்
என்பதன் உயர்வுப்பன்மையாகக் கொண்டு, பவர்கொண்டபனகம் என்பதற்கு –
சிவபிரானால் ஆபரணமாகக்கொள்ளப்பட்ட நாகங்கள் போல என்று
உரைப்பாரு முளர். பனகம்-பந்நகம்; வடசொல்லிகாரம்: கால்களால்
நடவாததென்றும், வளைவாகச்செல்வதென்றும் பொருளுரைப்பர்; முந்தின
பொருளுக்கு பத்நக என்றும், பிந்தினபொருளுக்கு பந்நக என்றும் பிரிக்க.
இனி, பல்+நகம் என்பவை புணர்ந்த பன்னகம்என்ற தொடர்
விகாரப்பட்டுவந்ததாகக்கொண்டு, பலமலைகள் என்பாரு முளர். கவர் –
முதனிலைத்தொழிற்பெயர்

அன்ன நாண் ஓதை, எங்கும், அண்டமும்,
பொதுளத் தாக்க,
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து
உயங்கி வீழ,
துன்னும் வாய் நஞ்சு கக்கி, சுழன்று, மண்
சுமக்கும், கொற்றப்,
பன்னகாதிபனும், உள்ளம் பதைத்து, வெம்
படங்கள் சோர்ந்தான்.103.- தெறித்த நாணொலியால் விளைந்தமை.

அன்ன நாண் ஓதை – அந்த வில்நாணியின் ஓசையானது
எங்குஉம்-எல்லாவிடத்திலும், அண்டம்உம் – எல்லவண்டங்களிலும், பொதுள
– நெருங்கும்படி, தாக்க-(போய்ப்பாவி) மோத, (அவ்வதிர்ச்சி யாற்பயந்து),
மன்னும் நாகங்கள் எட்டுஉம்-(எட்டுத்திக்குக்களிலும்) நிலை பெற்ற
எட்டுயானைகளும், மதம் புலர்ந்து – மதநீர்வறண்டு, உயங்கி வீழ –
மயங்கிச்சோர்ந்தவிழ, மண் சுமக்கும் கொற்றம் பன்னக அதிபன்உம் –
பூமியைக்சுமக்கின்ற வெற்றியையுடைய நாகங்களுக்கரசனான ஆதிசேஷனும்,
உள்ளம் பதைத்து-மனம்நடுங்கி, தன்னும் வாய் நஞ்சு கக்கி-நெருங்கின
வாய்களினின்று விஷத்தை வெளியிட்டு, சுழன்று-தலைசுழன்று, வெம்படங்கள்
சோர்ந்தான்-பயங்கரமான படங்கள் சாய்ந்து விழுந்தான்; (எ-று.)

     நாணோதை அண்டமெங்குந் தாக்க, நாகங்கள்வீழ,பன்னகாதிபனுக்கு
சோர்ந்தானென்க. நாகங்கள் எட்டு-கிழக்கு ஆதி முறையே ஐராவதம்,
புண்டரிகம், வாமகம், குமுதம், அஞ்சநம், புஷ்பந்தம், சார்வபௌமம்,
சுப்பீரதீபம் என்பன. நகம்-அசையாதது: மலை; அதில் வாழ்வது; நாகம்:
யானை; தத்திதாந்தவடசொல். பன்னகாதிபன் படங்கள் சோர்ந்தான்.
உயர்திணைதொடர்ந்த அஃறிணைச்சினைப்பெயர் அவ்வுயர்திணைமுடியையே
பெற்ற திணைவழுவமைதி; (நன்-பொது-27.) அகண்டமும் பொதுள என்றும்
பாடம்.   

உரம் படச் சரங்கள் மேன்மேல் உறுக்கி,
வெல் வீமன் உந்த,
சிரங்களில், தோளில், மார்பில், கண்களில்,
செருகச் சென்று,-
கரன் படைக் குழாத்து, முன்னம் காகுத்தன்
திர் கொள் கூர் வாய்ச்
சரம் பட, தளர்ந்தது என்ன,-தளர்ந்தது, அத் தளர்வு
இல் சேனை.104.-வீமனெய்த சரத்தால் அரக்கச்சேனை தளர்ந்தமை.

 

வெல் வீமன் – வெற்றியையுடைய வீமசேனன், உறுக்கி –
கோபித்து, சரங்கள் – பாணங்களை, உரம் பட – வலிமை பொருந்த,
மேல்மேல்-மேலேமேலே, உந்த-பிரயோகிக்க, (அவ்வம்புகள்), சிரங்களில் –
(அரக்கர்களுடைய) தலைகளிலும், தோளில்-தோள்களிலும், மார்பில் –
மார்புகளிலும், கண்களில். கண்களிலும், சென்று செருக – போய்த்தைத்தலால்,
அ தளர்வு இல் சேனை – (இதுவரையிலுந்) தளர்ச்சியில்லாதிருந்த அந்த
இராக்கதசேனையானது, கரன் படை குழாத்து – கரனுடைய
சேனைக்கூட்டத்திலே, முன்னம்-முற்காலத்தில், காகுத்தன்-ஸ்ரீராமபிரானது,
கதிர்கொள் கூர் வாய் சரம்-ஒளியைக்கொண்ட கூர்மையான நுனியையுடைய
அம்புகள், பட-படுதலால், தளர்ந்தது என்ன-(அச்சேனை) தளர்ச்சிபெற்றது
போல, தளர்ந்தது-(தான்) தளர்ச்சிபெற்றது; (எ-று.)

     கரன் என்னுஞ் சொல்லுக்கு-கொடியவ னென்று பொருள்; இவன்
இராவணனுக்கு உடன்பிறந்த முறையாகும் ஒராக்கன்: இவனை இராவணன்
சூர்ப்பணகைக்குப் பாதுகாவலாகத் தண்டகாரணியத்தில் ஜகஸ்தாநத்தில்
பலசேனைகளோடு வைத்திருந்தான்; கோதாவரிதீரத்திற் பஞ்சவடியில்
வசித்திருந்த இளையபெருமாள் சூர்ப்பணகையை மூக்கு முதலிய
சிலஉறுப்புக்களை யறுத்திட்டதை யறிந்து, அதுகாரணமாக இவன் தூஷணன்
திரிசிரன் என்பவர்களோடும் பதினாலாயிரங்கோடி சேனைத்தலைவர்களோடும்
இராமபிரானை வந்துஎதிர்த்து மிகவிரைவில் மிகஎளிதில் அவ்வெம்பரெுமானாற்
கொல்லப்பட்டுக் கூட்டத்தோடு ஒழிந்துபோனா னென்பது வரலாறு. காகுத்தன்
– காகுத்ஸ்தன் என்னும் வடமொழித் திரிபு; ககுத்ஸ்தனென்பவனது வமிசகுமார
னென்று பொருள்: சூரியகுலத்தரசனாகிய புரஞ்சயனென்பவன்
எருதுவடிவங்கொண்டுவந்த இந்திரனை வாகனமாகக் கொண்டு அவனது
முசுப்பின்மே லேறிச்சென்று போர்செய்ததனால், ககுத்ஸ்தனென்று
பெயர்பெற்றான்: ககுஸ்த்தன்-எருதுமுசுப்பின்மேலிருப்பவன்: ககுத்-திமில்,
ஸ்தன்-இருப்பவன்.

சக்கரம், சூலம், பாசம், தண்டம், வேல், கப்பணம், வாள்,
முற்கரம், கணையம், விட்டேறு, எழு, கொழு,
முசுண்டி, குந்தம்,
எக் கரங்களினும் ஏந்தி, யாவரும் இவன்மேல் ஏவி,
அக் கணம்தன்னில், மீண்டும் அகங்கரித்து,
ஆர்த்த காலை,105.-இதுவும், மேற்கவியும்-சூளகம்: மீண்டும் அரக்கர் பொர,
அவரை வீமன் அழித்தமை.

அ கணம் தன்னில் – அந்த க்ஷணத்திலே, மீண்டும்-மறுபடியும்,
யாவர்உம் – எல்லோரும், அகங்கரித்து – செருக்குக்கொண்டு
(தளர்ச்சியொரிந்து), சக்கரம்-சக்கரத்தையும், சூலம்-சூலத்தையும், பாசம் –
பாசாயுதத்தையும், தண்டம்-கதையையும், வேல்-வேலையும், கப்பணம் –
கப்பணிமென்னும் முள்ளாயுதத்தையும், வாள்-வாளையும், முற்காம் –
இருப்புலக்கையையும், கணையும்-வளை தடியையும், விட்டேறு-எறியீட்டியையும்,
எழு-இருப்புத்தடியையும், கொழு-இருப்புக்கொழுவையும், முசுண்டி –
முசுண்டியென்னும் ஆயுதத்தையும், குந்தம்-பேரீட்டியையும், எக்
கரங்களின்உம்-எல்லாக்கைகளிலும், ஏந்தி-எடுத்து, இவன்மேல் ஏவி-இவ்வீமன்
மேற் பிரயோகித்து, ஆர்த்த காலை-ஆரவாரித்தபொழுது,-(எ-று.)-
ஆர்த்தகாலை துணித்துச் சிரித்தன னென மேற்கவியோடு இயையும்.

     ‘கப்பணம்-இரும்பால் ஆனைநெருஞ்சிமுள்ளாகப் பண்ணியது’ என்பர் நச்சினார்க்கினியர். முற்காம்-முத்கரம் என்னும் வடசொற் சிதைவு. கணையம் என்பதில், அம்-சாரியையாயின், அம்பென்க. கொழு என்பதைக் கொழுமையென்னும் பண்புப்பெயரின் விகாரமாக்கி, முகண்டிக்கு அடைமொழியென்னலுமாம்.

அப் படைத் தொகைகள் எல்லாம் அறுத்து அறுத்து,
அவர்கள் தம்தம்
மெய்ப் படச் சரங்கள் சிந்தி, சிரங்கள் வெவ்வேறது ஆக்கி,
இப்படிக்கு அரக்கர் சேனை யாவையும் துணித்து, மீண்டும்
செப்படிப்பவரின் நின்று, சிரித்தனன்,-சிங்கம் போல்வான்

சிங்கம் போல்வான்-சிங்கத்தையொப்பவனாகிய வீமசேனன், அ
படை தொகைகள் எல்லாம்-அந்த ஆயுதங்களின் கூட்டங்களை யெல்லாம்,
அறுத்து அறுத்து – துண்டுதுண்டாக்கி, அவர்கள் தத்தம் மெய்பட –
அவ்வவ்வரக்கர்களது உடம்புகளிற் படும்படி, சரங்கள் சிந்தி-பாணங்களைப்
பிரயோகித்து, சிரங்கள் வெவ்வேறாது ஆக்கி – (அவர்கள்) தலைகளை
(அவர்களின் உடம்புகளின்று) வேறுவேறாகச்செய்து, இப்படிக்கு அரக்கர்
சேனை யாவைஉம் மீண்டுஉம் துணித்து – இவ்விதமாக
இராக்கதர்சேனைகளையெல்லாம் மறுபடியும் அழித்து, செப்படிப்பவரின்
நின்று-செப்படிவித்தை செய்பவர்போல (ச் சிறிதும் சிரமமில்லாமல் இவ்வளவு
தொழிலையுஞ் செய்து) நின்று, சிரித்தனன்-சித்தான்; (எ-று.)

     இங்குக் கூறிய உவமையால் வீமனுக்கு அரக்கரைவென்றமை ஒரு
வினோதமாக இருந்ததன்றிச் சிறிதும் சிரமமின்மை வெளியாம். இந்த நகை,
வீராட்டகாசமெனப்படும். வேறு+வேறு=வெவ்வேறு; இது, மருஉவில் அடங்கும்.
செப்படிவித்தை-மாயவித்தை: ஜாலம்:கண்கட்டிவிததை; செப்பிடுவித்தை
யென்றும் வழங்கும். வெவ்வேறவாக்கிஎன்றிருப்பின்நலம்

அந்த வயப் படை அவ்வாறு ஆதல் கண்டு,
கந்த மலர்ப் பொழில் காக்கும் காவலாளர்,
புந்தி மயக்கு உற நொந்து, புகுந்த எல்லாம்
முந்தி, இயக்கர் பிரானுக்கு, ஓடி, மொழிந்தார்:107.-அரக்கர் சேனை யொழியவே, பொழிற்காவலர்
குபேரனுக்கு நிகழ்ந்தமை மொழிதல்.

வய-வலிமையுடைய, அந்த படை அந்த இராக்கத சேனையும்,
அ ஆறு ஆதல்-அப்படியாயி எதை (எளிதில் அழிக்கப் பட்டதை), கண்டு –
பார்த்து, கந்தம் மலர் பொழில் காக்கும் காவலாளர்-வாசனையையுடைய
பூக்களையுடைய அச்சோலையைப் பாதுகாக்கின்ற காவற்காரர்கள்,-புத்தி
மயக்கு உற – (தங்கள்) அறிவுமயக்கத்தை யடைய, நொந்து-வருந்தி, முந்தி
ஓடி-விரைந்துசென்று, இயக்கர் பிரானுக்கு-யக்ஷர்களுக்கரசனான குபேரனுக்கு,
புகுந்த எல்லாம் மொழிந்தார்-நடந்த செய்திகளையெல்லாங் கூறினார்கள்;
(எ-று.)

     முந்தி ஓடி-ஒருவரினும் ஒருவர் முற்பட்டுச்சென்று. மயக்கு-முதனிலை
திரிந்த தொழிற்பெயர்.

     இதுமுதற் பதினெட்டுக்கவிகள்-பெரும்பாலும் முதலிரண்டுசீர்கள்
விளச்சீர்களும், மற்றவை மாச்சீர்களு மாகிய நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள்.  

எம் பெருமான்! இது கேட்டி!’ என்று இறைஞ்சி,
‘வம்பு அவிழ் சோலையிடத்து ஒர் மனிதன் வந்து,
பம்பிய சேனையிடத்து, ஏழ் மதமும் பாயும்
உம்பலின், வாவி புகுந்து, உழக்குகின்றான்.’108.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமன் செய்கையைக்
காவலாளர் கூற,குபேரன் வெகுளல்.

‘எம்பெருமான்- எங்கள் தலைவனே! இது கேட்டி (யாம்
சொல்லும்) இதனைக்கேட்பாய்,’என்று – என்றுகூறி, (சோலைக்
காவற்காரர்), இறைஞ்சி – (குபேரனை)வணங்கி, ‘வம்புஅவிழ் சோலை
இடத்து – வாசனைவீசுகிற (நமது) பூஞ்சோலையினிடத்திலே,ஓர் மனிதன்
வந்து – ஒரு மநுஷ்யன் வந்து, வாவி புகுந்து – (அச்சோலையிலுள்ள)
பொய்கையிலு மிறங்கி, பம்பிய சேனைஇடத்து – நெருங்கிப்பொருத (நமது)
சேனையினிடத்திலே,ஏழ் மதம்உம் பாயும் உம்பலின் – எழுவகை
மதங்களும் பாயப்பெற்றதோ ராண்யானைபோல,உழக்குகின்றான்-
கலக்குகின்றான்;(எ-று.)-‘என்றுஇசைத்தல் கேட்டு’என மேலே தொடரும்.

     ஏழ்மதம் -இரண்டு கண்கள், இரண்டு கன்னங்கள், இரண்டு
துதிக்கைத் துளைகள்,ஆண்குறி என்னும் ஏழிடங்களினின்று பாய்வன.
இனி, வாவி புகுந்து ஏழ்மதமும் பாயும்உம்பலின் பம்பிய சேனையிடத்து
உழக்குகின்றான்என அந்வயித்து, ஒருபெரிய நீர் நிலையிலிறங்கிமிக்க
மதத்தையுடைய யானைஅதனைக்கலக்குமாறு போல நிறைந்த நமது
சேனையிற்புகுந்து அதனைக்கலக்குகிறான் என்றும் பொருள்  கொள்ளலாம்

என்று, அவர் வாய் கை புதைத்து, இசைத்தல் கேட்டு,
குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு,
கன்றிய சிந்தையன், அங்கி கால் செங் கண்ணான்,
ஒன்றிய மங்குலின் நீடு உருத்து, உரைத்தான்:

என்று-,அவர்-அக்காவற்காரர், வாய் கை புதைத்து – (தமது)
வாயைக் கையால் மறைத்துக்கொண்டு, இசைத்தல்-சொன்னதை, கேட்டு –
(குபேரன்) செவியுற்று, குன்றுடன் ஒன்று புயம் குலுங்க நக்கு –
மலைகளோடொத்த(தனது) தோள்கள் குலுங்கும்படி (வெகுளியாற்
பெருஞ்சிரிப்புச்) சிரித்து, கன்றிய சிந்தையன் – தபித்த மனமுடையவனும்,
அங்கி கால் செம் கண்ணான்- நெருப்பையுமிழுஞ் சிவந்த
கண்களையுடையவனுமாய்,ஒன்றிய மங்குலின் நீடு உருத்து – (நீரோடு)
பொருந்தின மேகம் (இடியைக் கொள்ளுமாறு) போல மிகக்
கோபங்கொண்டு, உரைத்தான்-(சில வார்த்தைகளைச்)சொல்பவனானான்;
(எ-று.)-அவற்றைமேற்கவியிற்காண்க.

     வாய் கைபுதைத்தல்-பெரியோர்களிடத்துத் தமது வணக்கத்தை
விளக்குவது.  கோபத்தால் மிகச் சிவந்த கண்களின் மிக்க
பயங்கரத் தன்மையையஅங்கிகால்செங்கண்ணானென்றுவருணித்தார்.
சிந்தையன், கண்ணான்- குறிப்புவினைமுற்றெச்சங்கள்

தன் துணை நின்ற சங்கோடணனை நோக்கி,
வன் திறல் கூர் அடல் வேக மனிதன்தன்னை,
சென்று, அவன் ஆவி செகுத்தல் செய்யாது, இன்னே
துன்று புயங்கள் துவக்கி, எய்தச் சொன்னான்.110.-வந்தமனிதனைப்பிடித்துக்கொணருமாறு குபேரன்
சங்கோடணனென்பானுக்குக் கூறல்.

(குபேரன்),-தன்துணைநின்ற சங்கோடணனைநோக்கி –
தனக்கு அருகில் நின்ற சங்கோடணனென்னுஞ் சேனைத்தலைவனைப்
பார்த்து, சென்று – போய், வன் திறல் கூர் அடல்வேகம் மனிதன் தன்னை
– மிகுந்த பலம்பொருந்தின கொடிய வேகத்தையுடைய மனிதனை,
அவன்ஆவி செகுத்தல் செய்யாது-அவனுடைய உயிரை அழித்தல்
செய்யாமல், இன்னே – இப்பொழுதே, துன்று புயங்கள் துவக்கி –
வலிமைமிக்க தோள்களைக்கட்டி, எய்த-கொண்டுவரும்படி, சொன்னான்-
கட்டளையிட்டான்;(எ-று.)-தன்துணைநின்ற – தனக்குத் துணையாய்நின்ற
என்றுமாம்.

அந்த இயக்கர் பிரானும் அக் கணத்தில்
வந்து, நிதிக் கிழவன்தன் பாதம் மன்னி,
துந்துபி கொட்ட, அளப்பு இல் சேனை சூழ,
உந்தி, இமைப்பில் மலர்த் தண் சோலை உற்றான்11.-சங்கோடணன்சேனையுடன்சோலையடைதல்.

அந்தஇயக்கர் பிரான்உம்-யக்ஷசேனைக்குத்தலைவனான
அச் சங்கோடணனும், அ கணத்தில்-அந்தக்ஷணத்திலேயே, வந்து-
கிட்டவந்து, நிதிக் கிழவன் தன்பாதம் மன்னி-நிதிகளுக்கு உரிய
தலைவனானகுபேரனது  திருவடிகளைஅடைந்து [தெண்டனிட்டு],துந்துபி
கொட்ட-(போருக்குரிய) துந்துபிவாத்தியங்கள் அடிக்கப்படவும், அளப்பு இல்
சேனைசூழ-அளவில்லாத சேனைகள்(தன்னைச்)சூழ்ந்து வரவும், உந்தி-
(அச்சேனைகளைச்)செலுத்திக் கொண்டு, இமைப்பின்-ஒரு மாத்திரைப்
பொழுதினுள்ளே, மலர் தண் சோலைஉற்றான்-குளிர்ந்தஅந்தப்
பூஞ்சோலையையடைந்தான்;(எ-று.)-துந்துபிகொட்ட-பேரிகைமுழங்

மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை, இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்,-
துன்னு படைக் கடலோடும், பொங்கிச் சூழ்ந்தார்-
மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்.12.-இயக்கர்தலைவர்வீமனைவளைந்துகொள்ளல்.

)மின்னி முழக்கி இடிக்கும் மேகம் போல்வார்-மின்னு
தலைச்செய்துஆரவாரித்து இடியிடிக்கின்ற மேகங்களைத்தனித்
தனி யொப்பவரான,இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர்-யக்ஷர்களுடைய
மரபிலே நன்குமதிக்கப்படுகிற சேனைத்தலைவர்கள்,துன்னு படை
கடலோடுஉம்-நெருங்கிநின்ற (தமது) சேனாசமுத்திரத்துடனே,பொங்கி-
(போரில்) ஊக்கம்மிக்கு, மன்னு குருக்கள் குலத்து மன்னர் மன்னன்
தன்னை-நிலைபெற்றகுருவென்னும் அரசனது மரபிலே பிறந்த
அரசர்களுக்கெல்லாந் தலைவனானவீமசேனனை,சூழ்ந்தார்-
வளைந்துகொண்டார்கள்;(எ-று.)

    குரு-சந்திரகுலத்துப் பிரசித்திபெற்ற ஓரரசன்-  வீமனை’குருக்கள்
குலத்து மன்னர்மன்னன்’என்றது, அவனது பெருந்தகைமையை விளக்க.
படைக்கடல்-கடல்போற் பரவிய சேனை. மன்னு-(அவ்விடத்தில்) வந்து
சேர்ந்த, மன்னன் என்றுமாம்.  படைக்கலமோடும் என்று பிரதிபேதம்.

மான அரக்கர் குலத்தை வானில் ஏற்றி,
ஊனொடு இரத்தம் உகுக்கும் சோலையூடே,
தானை வளைத்திட, நின்ற சாப வீரன்,
யானைஇனங்கள் வளைக்கும் யாளி போன்றான்113.-இயக்கரிடைநின்றவீமன் வருணனை.

மானம் அரக்கர் குலத்தை வானில் ஏற்றி-
அகங்காரத்தையுடைய இராக்கதர்கூட்டத்தை (முன்னே போரிற்கொன்று)
வீரசுவர்க்கத்திற் சேரச்செய்துவிட்டு, ஊனொடுஇரத்தம் உகுக்கும்
சோலையூடே-(அவ்வரக்கர்களது)தசையுங் குருதியுஞ் சிந்திக்கிடக்கப்பெற்ற
அச்சோலையிலே,தானைவளைத்திட-(இப்பொழுது)இயக்கர்சேனை
(தன்னைச்)சூழ்ந்திட, நின்ற-(அதனிடையிலே) நின்ற, சாபம் வீரன்-வில்லில்
வல்ல வீரனானவீமன், யானைஇனங்கள் வளைக்கும்யாளி போன்றான்-
யானைக்கூட்டங்களாற்சூழப்படும்யாளியைப் போன்றான்;(எ-று.)

     யாளி-யானையைக்கொல்வதும்,சிங்கம்போல்வதும்,
துதிக்கையுடையதுமாகியதொரு மிருகவிசேடம்.  பல யானைகள்ஒருங்கு
சூழ்ந்தும் ஒருயாளியை ஒன்றும் ஊறுசெய்யமாட்டாமல் அதனால்தாம்
அழிக்கப்படுவதுபோல, பல  இயக்கர்கள் கூடிவளைத்தும்வீமனையாதும்
நலிவுசெய்ய இயலாது அவனால்தாம் மேல் அழிதல் பற்றி, இவ்வுவமை
கூறப்பட்டது.  யாளி-சிங்கமென்றுங் கொள்ளலாம்.  யுத்தகளத்திற்
பின்வாங்காமற் போர்செய்துநின்று பகைவரால் இறந்தவர் வீரசுவர்க்கமடைவ
ரென்னும் நூற்றுணிபால், ‘அரக்கர்குலத்தை வானிலேற்றி’என்றார்.

விண்ணில் இயக்கர் படைக் கலங்கள் வீசி,
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில்,
வண்ண வரிச் சிலை கோலி, வாயு மைந்தன்,
துண்ணென உட்க, வடிச் சரங்கள் தொட்டான்.114.-தன்னைவளைந்தஅரக்கர்மேல் வீமன் சரங்களை
வீசுதல்.

விண்ணில் – ஆகாசமார்க்கத்திலே, எண் இலர் இயக்கர் –
அளவிறந்தவரான [அநேக]யக்ஷர்கள்,படைக்கலங்கள் வீசி-ஆயுதங்களை
மேல் எறிந்துகொண்டு, சுற்றும் வளைத்து-(தன்னைச்)சுற்றிலும் சூழ்ந்து,
எதிர்ந்தபோதில்-(தன்னை)எதிர்த்தபொழுது,-வாயுமைந்தன் – காற்றின்
மகனானவீமன், வண்ணம் வரி சிலைகோலி-அழகிய கட்டமைந்த வில்லை
வளைத்து,துண்ணென உட்க-(அவர்கள்) திடுக்கிட்டு நடுங்கும்படி, வடி
சரங்கள் தொட்டான்-கூர்மையான அம்புகளை(அவர்கள்மேல்) எய்தான்;

     துண்ணென -அச்சக்குறிப்பிடைச்சொல்.  தொட்டான், தொடு-பகுதி.
சுற்றும்-சுற்றிலும்;எப்புறத்தும்.    

தொட்ட சரங்கள் துளைத்து, மார்பும் தோளும்
முட்ட, விசும்பினது எல்லை எங்கும் மூட,
பட்டது ஒழிந்து, படாத சேனை எல்லாம்
கெட்டன; பட்டது உரைக்க உண்டோ, கேட்கின்?115.-இயக்கசேனைகளிற்சிலசேனையொழியச்சில
நிலைகெட்டுஓடுதல்.

தொட்ட சரங்கள்-(வீமனாற்)பிரயோகிக்கப்பட்ட அம்புகள்,
மார்புஉம் தோள்உம் துளைத்து- (அவ்வியக்கர்களது) மார்பையுந்
தோள்களையுந்தொளைசெய்து,விசும்பினது எல்லைஎங்குஉம் முட்ட மூட
– ஆகாயத்தினிடம் முழுவதிலும் பொருந்தும்படி பரவி மறைக்க, பட்டது
ஒழிந்து-(அவ்வியக்கர் சேனைகளுள்)இறந்தது தவிர, படாத சேனை
எல்லாம் – இறவாத சேனைகள்பலவும், கெட்டன-உறுதிநிலைகெட்டு
முதுகிட்டோடின;பட்டது-(அச்சேனைகள்அப்போது) அடைந்த
நிலைமையை,கேட்கின் – வினாவினால், உரைக்க உண்டுஓ – (நம்மாற்)
சொல்ல வகையுண்டோ?  [இல்லை];

     ஒழிந்து -ஒழிய, எச்சத்திரிபு, ஓ-எதிர்மறை.

மன் அளகாபதி சேனை நாதன் மார்பில்
தன் அடையாளம் உற, தண்டாலே தாக்க,
மின் இடை நாகம் வெருக் கொண்டென்ன மீண்டான்,
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான்.116.-சங்கோடணன்புறங்கொடுத்தல்.

மன்அளகாபதி சேனைநாதன்மார்பில்-பெரிய அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது படைத்தலைவனாகியசங்கோடணனது மார்பிலே, தன்
அடையாளம் உற தண்டாலே தாக்க-தனது தழும்பு படும்படி (வீமன்)
கதாயுதத்தாலே அடிக்க,-தன்எதிர் வீரர் இலாத சங்கோடணன்தான் –
தனக்கு எதிரில் எந்த வீரரும் (இது வரையிற் போரில்) நிற்கப்பெறாத
அச்சங்ககோடணன்,-மின்னிடைநாகம் வெரு கொண்டு என்ன – (மேகம்)
மின்னுகையில் பாம்பு (இடிக்கு) அச்சங்கொண்டாற்போல, மீண்டான் –
(அஞ்சிப் புறங்கொடுத்துத்) திரும்பினான்;(எ-று.)

     தன் எதிர்வீரர் இலாத – தனக்கு ஒப்பானவீரர் எவரையும்பெறாத
என்றும் உரைக்கலாம்.  மின் – இலக்கணையால்இடியைக் காட்டிற்று.
இடியொலியைக் கேட்பினும் நாகம் அஞ்சியொடுங்கும்.    

கருத்தொடு சென்று, அளகேசன் பாத கமலம்
சிரத்தினில் வைத்து, இவை நின்று செப்பலுற்றான்-
‘உருத்திரன் மானுட உருவம் கொண்டது; அன்றேல்,
வரத்து இவன் மானுடன் அல்லன்; மன்ன!’ என்றே.117.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: வீமனோடு
சமாதானஞ்செய்துகொள்ளும்படி சங்கோடணன்
குபேரனுக்குக் கூறுதல்.

சென்று – போய், அளகேசன் பாதகமலம் – அளகாபுரிக்கு
அரசனானகுபேரனது திருவடித்தாமரைமலர்களை,கருத்தொடு-மனத்தில்
அன்புடனே, சிரத்தினில் வைத்து-(தனது) தலையின்மேற்கொண்டு
[சாஷ்டாங்கமாகத்தெண்டனிட்டு],நின்று-(அருகில்) நின்று, இவை –
இவ்வார்த்தைகளை,செப்பல் உற்றான்-கூறத்தொடங்கினான்:-(அவை
யாவையெனின்), ‘மன்ன-அரசனே! உருத்திரன் மானுட உருவம் கொண்டது
– (அழித்தற்றொழிற்கடவுளான)சிவபெருமான் இம்மனித
வடிவத்தைக்கொண்ட தன்மையாதல்வேண்டும்;அன்றுஏல் – அவ்வாறன்றி,
வரத்து இவன்-மேன்மையுடைய இவ்வீரன், மானுடன் அல்லன்-சாதாரண
மனிதனாகமாட்டான்,’என்று – என்றுகூறி,-(எ-று.)-என்றான்என
மேற்கவியில் தொடரும்.

    அளகா+ஈசன்=அளகேசன்: உருத்திரன்=ருத்திரன்: [நன்-பத-21,22].
வரத்து-வருதலையுடையஎன்றுமாம்;தொழிற்பெயர்

பண்புடன், இக் கணம், வேண்டும் நிதிகள் பலவும்
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின்,
விண் புகும் இப் புரம்; வேந்த!’ என்றான்-மெய்யில்
புண் புக, உட்கி, உழைக்கும் வேழம் போல்வான்

வேந்தே-அரசனே! பண்புடன்-நற்குணத்துடனே, இ கணம்-
இந்தக்ஷணத்திலே, அவற்கு எதிர் சென்று-அம்மனிதனுக்கு எதிரிற்போய்,
வேண்டும் நிதிகள் பலஉம்-(அவன்) விரும்பும் பலவகைச் செல்வங்களையும்,
நண்பொடு-சினேக வகையால், நல்காய் என்னின்-(நீ)கொடாதொழிவையானால்,
இ புரம் – இந்த நகரத்துப் பிராணிவர்க்கம்முழுவதும், விண் புகும் – (இறந்து)
மேலுலகத்தையடையும்,’என்றான்-என்று(குபேரனைநோக்கிக்) கூறினான்:
(யாரென்னில்), மெய்யில் புண் புக உட்கிஉழைக்கும் வேழம் போல்வான்-
(தன்) உடம்பில் விரணமுண்டாக (அதனால்)ஒடுங்கி வருந்துகின்ற யானையை
ஒப்பவனாகியசங்கோடணனென்னுஞ்சேனைத்தலைவன்;(எ-று.)

     சங்கோடணன்இயற்கையில் மிக்கஉடல்வலிமையையும் அடங்காப்
பெருஞ் சீற்றத்தையும் கம்பீரமான தோற்றத்தையு முடையவனாதலாலும்,
இப்பொழுது வீமன் கதையால் மார்பிலடிபட்டு வலியொடுங்கினமையாலும்,
புண்புகவுட்கியுழைக்கும்வேழம் இவனுக்கு உவமை கூறப்பட்டது.  நல்காய்-
முன்னிலையொருமை யெதிர்மறைமுற்று; எதிர்மறை ஆகாரம் புணர்ந்து
கெட்டது.  புரம்-இடவாகுபெயர்.  உட்கியிளைக்கும்என்று பிரதிபேதம்

கோதில் இயக்கன் யாவும் கூறக் கேட்டு,
தாதை, உருத்திரசேனன் தன்னை நோக்கி,
‘மாதர் மலர்ப் பொழிலூடு வந்த மனித்தன்
ஏதில் அருத்தியன் என்னக் கேட்டி!’ என்றான்.119.-வீமன்விருப்பத்தையறிய உருத்திரசேனனென்னும்
மகனைக்குபேரன் விடுத்தல்.

கோதுஇல் இயக்கன்-குற்றமில்லாத (சங்கோடணனென்னும்)
அந்த யக்ஷன், யாஉம் கூற-இவையெல்லாவற்றையுஞ் சொல்ல, கேட்டு-,
உருத்திரசேனன் தன்னைநோக்கி-ருத்திரசேனனென்னும் (தனது) இளைய
குமாரனைப்பார்த்து, தாதை-(அவனது) தந்தையான குபேரன், ‘மாதர்
மலர்ப்பொழிலூடுவந்த மனித்தன் – (கண்பார்க்கு) விருப்பத்தை
விளைக்கின்ற(நமது) பூஞ்சோலையிலேவந்த மனிதனை,ஏதில் அருத்தியன்
என்ன கேட்டி-எந்தப் பொருளில் விருப்பமுடையவ னென்று (நீ போய்க்)
கேட்பாய்,’என்றான்-என்றுகூறினான்;(எ-று.)

     ருத்திரசேனனென்பதற்கு – கொடுமையான
சேனைகளையுடையவனென்றுபொருள். மனித்தன்-மனிதன் என்பதன்
விரித்தல்.

தந்தை உரைத்தருள் வாய்மை தலைமேல் கொள்ளா,
மைந்தனும், அப் பொழிலூடு சென்று மன்னி,
சிந்தி, அரக்கர் சிரங்கள் குன்றம் செய்து,
கந்தனின் நிற்கும் மறத்தினானைக் கண்டான்.120.-உருத்திரசேனன்வீமனைச்சென்றுகாணுதல்.

தந்தை – (தனது) பிதாவான குபேரன், உரைத்தருள-
(அன்போடு) சொல்லிய, வாய்மை-வார்த்தையை, தலைமேல்-கொள்ளா-
தலையின்மேற்கொண்டு [கௌரவித்து],மைந்தன்உம் – குமாரனான
உருத்திரசேனனும், அ பொழிலூடு சென்று மன்னி – அந்தச்
சோலையினிடத்திற்போய்ச் சேர்ந்து, அரக்கர் சிரங்கள் சிந்தி குன்றம்
செய்து கந்தனின் நிற்கும் மறத்தினானை-இராக்கதர்களதுதலைகளை
அறுத்துத் தள்ளி மலைபோலக்குவித்து முருகக் கடவுள்போல
(ப்பராக்கிரமங்கொண்டு) நிற்கிற வலிமையையுடைய வீமனை,கண்டான் –
பார்த்தான்;(எ-று.)

     வாய் -வாயிலிருந்துவருஞ் சொல்லுக்கு ஆகுபெயர்;மை –
பகுதிப்பொருள்விகுதி.  தலைமேற்கொள்ளுதல்- சிரசாவகித்தல்.
“தந்தைசொல்மிக்க மந்திரமில்லை”என்றவாறு பிதிருவாக்கியத்தை நன்கு
மதித்தமை தோன்ற, ‘தந்தையுரைத்தருள்வாய்மை தலைமேற்கொள்ளா’
என்றது.    

கண்டு, மருத்து அருள் காளைதன்னை நோக்கி,
‘வண்டும் இடைப் பயிலாத காவில் வந்து,
மிண்டும் அரக்கர் குலத்தை வீணே ஆவி
கொண்டு படுத்தனை; யார் நீ? கூறுக!’ என்றான்.121.-உருத்திரசேனன்வீமனைவினாவுதல்.

கண்டு- (அங்ஙனம்) பார்த்து, (உருத்திரசேனன்), மருத்து
அருள் காளைதன்னைநோக்கி – வாயுதேவன் பெற்ற குமாரனான
வீமனைப்பார்த்து, ‘வண்டுஉம்இடை பயிலாத காவில் வந்து-வண்டுகளும்
உள்ளிடத்திலே வந்து நுழையப்பெறாத[மிக்ககாவலையுடைய]
இச்சோலையிலே(நீ) வந்து, மிண்டும் அரக்கர் குலத்தை-(அங்குக் காவலாக)
நெருங்கியுள்ள இராக்கதர்கூட்டத்தை, வீணே ஆவி கொண்டு படுத்தனை-
வீணாய்உயிரை (உடம்பினின்றுங்) கொண்டு [கொன்று]அழித்தாய்;நீ யார்
கூறுக-நீ யார் சொல்வாயாக,’என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     காளை-இளவெருது;வீமனுக்கு உவமையாகுபெயர்.  ‘வண்டும்’என்ற
சிறப்பும்மை, அதற்குப் பூவிடத்துரிய தன்மையை விளக்கும்.  காக்கப்படுவது,
கா;காரணக்குறி.  

நின் அளகாபதி மைந்தர் சாபம் நீக்க,
முன் மருதூடு தவழ்ந்த வாகை மொய்ம்பற்கு
இன் அருள் மைத்துனன்; மண்ணில் யாரும் போற்றும்
மன்னவன்; வீமன்; மருத்தின் மைந்தன்’ என்றான்.122.-வீமசேனன்உருத்திரசேனனுக்குத் தன்னைத்
தெரிவித்தல்.

நின்அளகாபதி மைந்தர் சாபம் நீக்க – உனது தந்தையான
இந்த அளகாபுரிக்கு அரசனானகுபேரனது குமாரர்களின் சாபத்தை
ஒழித்தற்பொருட்டு, முன் – முன்னொருகாலத்திலே, மருது ஊடு தவழ்ந்த –
மருத மரங்களினிடையே தவழ்ந்து சென்ற, வாகை மொய்ம்பற்கு-(வெற்றிக்கு
அறிகுறியான) வாகை மரப்பூமாலையைச்சூடிய தோள்களையுடைய
கண்ணபிரானுக்கு, இன் அருள் மைத்துனன் – இனிய கருணைக்கு
விஷயமான மைத்துனனாவேன்: மண்ணில் யார்உம் போற்றும் மன்னவன் –
நிலவுலகத்தில் எல்லோரும் புகழும் அரசகுலத்தவனாவேன்; வீமன் –
வீமனென்னும் பெயருடையேன்: மருத்தின் மைந்தன் – வாயுகுமாரனா
வேன் (யான்),’என்றான்-என்று(வீமன்) கூறினான்,  (எ-று.)

     கண்ணன்குழந்தையாயிருக்குங் கலாத்தில் துன்பப்படுத்துகின்ற பல
விளையாடல்களைச்செய்யக் கண்டு கோபித்த யசோதை
ஒருநாள் கிருஷ்ணனைத்திருவயிற்றிற் கயிற்றாற்கட்டிஓருரலிலே பிணித்துவிட,
கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை
மருதமரத்தின் நடுவேஎழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று
இழுக்கப்பட்டபடியினால்அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில், முன்
நாரத சாபத்தால் அம்மரங்களாய்க் கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னுங்
குபேரபுத்திர ரிருவரும் சாபந்தீர்ந்து சென்றன ரென்பது கதை;அத்தை
மகனைமைத்துனனென்பது முற்காலத்து வழக்கம்.  கண்ணனது தந்தையான
வசுதேவருக்குக் குந்தி உடன்பிறந்த முறையாதல் பற்றி, வீமன் கண்ணனுக்கு
மைத்துனனாவன். மைத்துனன், மன்னவன், வீமன், மருத்தின் மைந்தன் –
தன்மையிற் படர்க்கை

மாயவன், அற்புதன், நாதன், கண்ணன், வையம்
தாயவன், மைத்துனன் ஆகின், ஐய! தனி நீ
ஏய வனத்தினில் வந்தது என்கொல்?’ என்றான்;
தூயவன், உற்றன யாவும் தோன்றச் சொன்னான்.123.-வீமனைஉருத்திரசேனன் அங்குவந்த
காரணம்வினாவ,வீமன் கூறினமை.

ஐய-ஐயனே!நீ-, மாயவன் – மாயையுடையவனும், அற்புதன் –
ஆச்சரியகரமான குணஞ் செயல்களையுடையவனும்,நாதன் – (யாவர்க்குந்)
தலைவனும்,வையம் தாயவன் – உலகங்களைஅளவிட்டவனும் ஆகிய,
கண்ணன் – க்ருஷ்ணபகவானுக்கு, மைத்துனன் ஆகின் – அத்தைமைந்தனாவையானால், தனி – தனியே, ஏய வனத்தினில் வந்தது –
பொருந்தின இச்சோலையில்வந்திட்டது, என்கொல்-என்ன காரணத்தாலோ?’
என்றான்- என்று வினவினான்:(அப்பொழுது), தூயவன்- பரிசுத்தகுணமுடைய
வீமன், உற்றன யாஉம்-நடந்த செய்திகளையெல்லாம், தோன்றச்சொன்னான்-;

    அற்புதன்-அத்புதன்;கண்ணன்-க்ருஷ்ணன்:வடசொற்றிரிபுகள்.
வாமனனானதிருமால் பலிசக்கரவர்த்தியினிடம் மூவடி மண்பெற்றுத்
திரிவிக்கிரமனாகிஆகாயத்தையளவி வளர்ந்து, ஓரடியால் மண்ணையும்
மற்றோரடியால்விண்ணையும்அளந்து மூன்றாமடிக்காகஅவன் சொன்னபடி
அவன் தலைமேற்காலைவைத்துஅவனைப்பாதாளத்திலழுத்தி அடக்கினா
னாதலால்,’வையந்தாயவன்’என்றது.  தாயவன்-தா-பகுதி:இதுவே
உகரச்சாரியை பெற்றுத் தாவு என நிற்பது.  ஏய – ஏய் என்னும்
பகுதியடியாப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்;ய் என்னும் இறந்தகால
இடைநிலைவரத்தனிக்குறிலைச்சாராதபகுதியீற்றுகரங் கெட்டது

மற்று அவன் அவ் உரை கூற, மகிழ்வொடு அம் தண்
பொன்தரு நண்பின் வழங்கி, ‘போக!’ என்று அருளி,
வெற்றி உருத்திரசேனன் மீண்டு வந்து, ஆங்கு
உற்றது, தாதைதனக்கு உரைத்து, இருந்தான்.24.-வீமன் வேண்டியமலரை அவனுக்குக் கொடுத்து
அனுப்பிவிட்டு,உருத்திரசேனன் நிகழ்ந்த செய்தியைத்
தாதையிடங் கூறல்.

அவன்-அவ்வீமன், அ உரை கூற-அந்தவார்த்தைகளைச்
சொல்ல, வெற்றி உருத்திரசேனன்-சயத்தையுடைய ருத்திரசேனன்,
மகிழ்வொடு – மகிழ்ச்சியுடனே, அம் தண் பொன் தரு-அழகிய குளிர்ந்த
பொன்போலருமையான மலர்களை,நண்பின்-சினேக வகையால், வழங்கி –
(அவ்வீமனுக்குக்) கொடுத்து, போகு என்று அருளி -‘நீபோவாய்’என்று
அன்போடு சொல்லி, மீண்டு வந்து – திரும்பிவந்து, ஆங்கு உற்றது –
அங்கு நடந்தசெய்தியை, தாதை தனக்கு – (தன்) தந்தையான குபேரனுக்கு,
உரைத்து – சொல்லி, இருந்தான் – வீற்றிருந்தான்;     (எ – று.)

     தரு -நீர்க்கொடி மலர்க்கு ஆகுபெயர்.  ஒருசாரார் இக்கவியிலும்
அடுத்த கவியிலும் ‘தரு’என்றதனால்,வீமன் விரும்பிவந்த மலர் கோட்டுப்பூஎன
விளங்கும் என்ப. பொற்றரு நண்பின்வழங்கி என்றதனால், வனசமலரை
யீந்தா னென்பது தானே பெறப்படு மென்பாரும் உண்டு. பல அரக்கரும் சில
இயக்கரும்போல உருத்திரசேனன் வீமசேனனோடு போர்செய்து
தோல்வியடையாமையின், அவனைவெற்றியுருத்திர சேனனென்றார்.

அண்ணல்-தருப் பெற்ற பின், அந்த வய
மீளி,-அக் காவினில்,
தண் நித்திலப் பொய்கை படிவுற்று, இன் அமுது அன்ன
தண்ணீர் குடித்து,
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு, இருந்து,
அங்கு இளைப்பாறினான்-
மண்ணுக்கும் விண்ணுக்கும் மறலிக்கும் உறவான
வடி வாளினான்.125.-தான் வேண்டியமலரைப் பெற்றபின், வீமன்
அங்குள்ளபொய்கையில் நீராடி இளைப்பாறுதல்.

மண்ணுக்கும்உம்-பூலோகத்துக்கும், விண்ணுக்கும்உம்-
தேவலோகத்துக்கும், மறலிக்குஉம் – யமனுக்கும், உறவு ஆன –
(துணையாய்)உதவுவதான, வடி வாளினான்-கூர்மையான
வாளாயுதத்தையுடையவனான,அந்த வயம் மீளி – வெற்றியையுடைய
வீரனானஅவ்வீமன், அண்ணல் தரு பெற்ற பின்-பெருமையையுடைய
அப்பூவைப் பெற்றபின்பு, அ காவினில் தண் நித்திலம் பொய்கை படிவுற்று –
அந்தச் சோலையிலுள்ளகுளிர்ந்த முத்துப்போலத் தொளிவான நீரையுடைய
நீர்நிலையிலேநீராடி, இன் அமுது அன்ன தண் நீர் குடித்து –
இனிமையான தேவாமிருதத்தை யொத்த [நற்சுவையுள்ள]குளிர்ந்த
(அப்பொய்கையின்) நீரைப் பருகி, எண் அற்ற கழுது ஆடல் அதுகண்டு –
அளவிறந்த பேய்கள் (அப் போர்க்களத்திற்) கூத்தாடுதலைப்
பார்த்துக்கொண்டு, அங்கு இருந்து-அச்சோலையில்தங்கி, இளைப்பு
ஆறினான்-(போர்செய்த)சிரமம் தணிந்துநின்றான்:(எ-று.)-‘கழுகாடல்’
என்றும் பாடம்.

     வீமன்வாள்மண்ணுக்கும் விண்ணுக்கும் உறவாதல் –
பூலோகத்தவர்க்கும் தேவலோகத்தவர்க்கும் தீங்கிழைக்கின்ற அரக்கர்
முதலிய கொடியவர்பலரை அழித்து நல்லோர்களைக்காத்திடுதலாலும்,
அது யமனுக்கு உறவாதல் – அவனது கொலைத்தொழிலைத்தான்
மேற்பூண்டு நடத்துதலாலு மென்க.  அளவிறந்த பேய்கள் வந்து ஆடுதல்,
தமக்கு மிக்க தசையுணவு கிடைத்ததனாலாகியகளிப்பின் மிகுதியாலாகும்.
மறல்-கொடுமை:அதையுடையவன், மறலி.

     இதுமுதற் பதினான்குகவிகள்- பெரும்பாலும் முதல் நான்கு சீரும்
மாங்காய்ச்சீர்களும், ஈற்றுச்சீரொன்று மாங்கனிச்சீருமாகிய நெடிலடி
நான்குகொண்ட கலிநிலைத்துறைகள். 

இவ்வாறு இவன் செய்கை; இவன் வந்தது அறியாமல்,
எழில் கூர் வனத்து
அவ்வாறு பயில்கின்ற அருள்வாரிதான் உற்ற அது கூறுவாம்:
கை வார் கதைக் காளையைக் கண்ணுறச் சூழல் காணாது, முன்
செவ் வாய் மடப் பாவை நின்றாளை, ‘நீ கூறு’
எனச் செப்பினான்.126.-வீமனைக்காணாதுதருமபுத்திரன் திரௌபதியை
வினாவல்.

இவன் செய்கை-இவ்வீமனது செய்தி, இ ஆறு-இவ்விதமாம்;
எழில் கூர் வனத்து – அழகுமிக்க காட்டிலே, அ ஆறு பயில்கின்ற –
அவ்விதமாகப் பொருந்தி வசிக்கிற, அருள் வாரி – கருணைக்கடலான
தருமபுத்திரன், இவன் வந்தது அறியாமல் – இவ்வீமன் (இங்ஙனம் இங்கு)
வந்ததையுணராமல், உற்ற அது-அடைந்த அக்கவலையை,கூறுவாம்-
சொல்லத் தொடங்குவோம்:கை வார் கதை காளையை- கையில் நீண்ட
கதாயுதத்தையுடைய இளவீரனானவீமனை,சூழல் – (தாம்)
வசிக்குமிடத்திலே, கண்உற காணாது- கண்களிற்படும்படி காணாமல்,
(தருமபுத்திரன்), முன் செம் வாய் மடம் பாவை நின்றாளை- எதிரில்நின்ற
சிவந்த வாயையுடைய இளையசித்திரப்பதுமைபோலழகிய திரௌபதியை
(நோக்கி), நீ கூறு என செப்பினான்-(வீமன்சென்றஇடத்தை) நீ
சொல்வாயென்று வினவினான்;(எ-று.)

     எழில்கூர்வனம்என்றது, இங்கே காந்தர்ப்பமலையைச்சார்ந்த
காட்டை.  அவ்வாறு என்ற சுட்டு, கீழ்ப் பதினோராங்கவியில்
“அம்முனிவன்மொழிப்படியே வரம்பில் கேள்வி யறன்மகனுந்
தம்பியருமரிவையோடு, மெம்முகமுந் தம்முகமா விலையுங்காயு
மினியகனியுடனருந்தி யிருக்கு நாளில்”என்றதைச் சுட்டும்.  வாரி-
வடசொல்:கடலுக்கு ஆகுபெயர்.  மடம் – ஒரு பெண்மைக்குணமாகவுமாம்;
இது-மற்றைப் பெண்குணங்களுக்கும் உபலக்ஷணம். 

வான் நின்று மலர் ஒன்று தன் முன்பு மின்
போல வந்துற்றதும்,
தான் நின்று, ‘இம் மலர் போல மலர் தேடி நீ
இன்று தருக!’ என்றதும்,
தேன் நின்ற தொடையானும் அளகேசன் நகர்
மீது தனி சென்றதும்,
கான் நின்ற குழலாளும், மன்னற்கு முன்
கட்டுரைத்தாள்அரோ.127.-திரௌபதிநிகழ்ந்தன உரைத்தல்.

வான்நின்று-ஆகாயத்திலிருந்து, மலர் ஒன்று – ஒரு பூ,
மின்போல-மின்னல்போல (விளக்கமுடையதாய்), தன் முன்பு – தனது
எதிரில், வந்துஉற்றதுஉம்-வந்து விழுந்ததையும், தான்நின்று-தான்(வீமன்முன்
சென்று) நின்று, நீ இ மலர்போல மலர் தேடி இன்று தருக என்றதுஉம் – ‘நீ
இந்தப் பூவைப்போல இருக்கும் பூவைத்தேடி இன்றே கொணர்ந்து
கொடுக்கவேண்டும்’என்று சொன்னதையும், – தேன் நின்ற தொடையான்உம் –
தேன் இடைவிடாதுநின்ற பூமாலையையுடைய வீமசேனனும், அளகேசன்
நகர்மீது-குபேரனது நகரமாகிய அளகையை நோக்கி, தனி சென்றதுஉம் –
ஒன்றியாய்ப் போனதையும், (ஆகிய இவற்றை), கான் நின்ற குழலாள்உம் –
பரிமளம் இடைவிடாதுநின்ற கூந்தலையுடைய திரௌபதியும், மன்னற்கு முன் –
தருமராசனெதிரிலே, கட்டுரைத்தாள் – திறம்படக் கூறினாள்;(எ – று.)

     ‘இம்மலர்போலுமலர்’எனப் பாடங் கொள்ளலாம்.  தனிவேறு
துணையில்லாமல். கான்-செயற்கைமணத்தோடு இயற்கை மணமும்;உத்தம
சாதிமகளிரின் கூந்தலில் இயற்கை நறுமணமுண் டென்றல், மரபு.  அரோ-
ஈற்றசை.      

கருமத்தின் வடிவான மட மங்கை இவ்வாறு கழறாத முன்,
உருமுத் துவசன் மைந்தன் முன் போக, அன்போடும்
உளம் நொந்துளான்,
மருமத்து வேல் தைத்த புண்மீது கனல் உற்றது
என, மாழ்கினான்-
தருமத்தின் உரு ஆகி, எழு பாரும் நிலையிட்ட
தனி ஆண்மையான்.128.-அருச்சுனன்பிரிவால் மனம்நொந்திருந்த தருமன்
வீமன் பிரிவால்பின்னும் வருந்துதல்.

கருமத்தின் வடிவு ஆன – ஊழ்வினையினது
உருவத்தையொத்த, மட மங்கை-பேதைமைக்குணத்தையுடைய இளம்
பெண்ணானதிரௌபதி, இ ஆறு கழறாதமுன் – இந்தப்படி சொல்லும்முன்னே
[சொன்னவுடனேயென்றபடி],உருமு துவசன் மைந்தன் – இடியின்
வடிவத்தையெழுதின கொடியையுடைய இந்திரனது குமாரனான அருச்சுனன்,
முன் போக – முன்னே (தன்னைவிட்டு) நீங்கிச் சென்றதனால், அன்போடுஉம்
உளம் நொந்து உளான்-(அவனிடத்துள்ள) அன்பினால்
மனம்வருந்தியுள்ளவனான, தருமத்தின் உரு ஆகி எழு பார்உம்
நிலைஇட்ட தனி ஆண்மையான்-அறத்தின் வடிவமாய் எழுவகைத்
தீவுகளாகிய பூமி முழுவதும் அழியாது நிலைநிறுத்தினஒப்பில்லாத
பராக்கிரமத்தையுடைய தருமபுத்திரன், மருமத்து வேல் தைத்த புண்மீது
கனல் உற்றது என மாழ்கினான்-மார்பிலேவேலாயுதம் தைத்தபுண்ணின்மேல்
நெருப்புப் பொருந்தியதுபோல மிகவருந்தினான்

வாளிப் பரித் தேர் மன் இவ்வாறு துயர் எய்தி,
மனனம் செய,
கூளிக் குழாம் வானின்மிசை உய்த்தது என்ன,
கொடித் தேரின்மேல்
காளக் கருங் கொண்டல்போல் வந்து, வீமன்
தரும் காளை, முன்,
ஆளிப் பெருங் கொற்ற வெற்றித் திருத்தாதை
அடி மன்னினான்.129.-அப்போதுதருமன் நினைக்கக்கடோற்கசன்
வந்துசேர்தல்.

வாளி பரி தேர் மன்-அம்புபோல விரைந்து செல்கின்ற
குதிரைகளைப்பூட்டிய தேரையுடைய தருமராசன், இ ஆறு துயர் எய்தி-
இந்தப்படி துன்பமடைந்து, மனனம் செய – (கடோற்கசனை)
நினைத்தல்செய்திட,-வீமன்தரும் காளை- வீமசேனன் பெற்ற குமாரனான
அக்கடோற்கசன், கூளி குழாம் வானின்மிசை உய்த்தது என்ன – பேய்களின்
கூட்டம் ஆகாசமார்க்கத்திலே கொண்டுவந்து செலுத்திய தென்று
(கண்டோர்) சொல்ல, கொடி தேரின்மேல்-(பேய்களைக்குதிரைகளாகப்
பூட்டப்பட்டுள்ள) துவசத்தையுடைய (தனது) இரதத்தின்மேல், காளம் கரு
கொண்டல் போல்-கார்காலத்துக் கரிய நீர்கொண்ட மேகம்போல, வந்து-
(விரைவில்) வந்து, முன் – முதலில், ஆளி பெரு கொற்றம் வெற்றி திரு
தாதை-சிங்கம்போன்ற சிறந்த வலிமையையும் சயத்தையுமுடைய சிறந்த
(தனது) பெரிய தந்தையான தருமனது, அடி-பாதங்களில், மன்னினான்-
சேர்ந்தான்;(எ-று.)

     தருமபுத்திரன்நினைத்தமாத்திரத்திற்கடோற்கசன் எதிரில் வந்து
வணங்கினானென்பதாம்.  மநநம் – வடசொல்.  கூளி-பேய்;”வாணிருத
சேகரன்றனது தேரின்மேற், பந்தி பந்தி பதினாயிரம்பதின்மடங்கு கூளிகள்
பரிக்கவா, னுந்தி”என்பர், மேல் மணிமான்வதைச் சருக்கத்தும், மேல்
மணிமான்வதைச் சருக்கத்தினிறுதியில் “துணங்கைகொண்டலகை கோடி
வானின்மிசை துள்ளி யூரு மிரதத்தின்மே, லிணங்கி”என வருதலால்,
இங்கே கூளியென்பதற்குப் பெருங்கழுகென்று உரைத்தல் பொருந்தாது.
காலம் – காளம்:லகரத்துக்கு ளகரம் போலி;இனி, ஒருபொருட்பன்மொழியாய்,
காளக்கரு – மிகக்கரிய என்றுங் கொள்ளலாம். வீமசேனன் மற்றைப் பாண்டவர்
நால்வரையுங் குந்தியையுந் தோளிலேந்திக் கொண்டு அரக்குமாளிகையினின்று
தப்பிச் செல்லுகையில், இடிம்பவனமென்னும் பெரிய காட்டை யடைந்து,
அங்குத் தன்னை வந்து எதிர்த்த இடிம்பனென்னும் அரக்கனைக் கொன்று
தள்ளி, அவ்வரக்க னுடன்பிறந்தவளாகிய இடிம்பி யென்பவள்
தன்னைக்காதலித்து மணஞ்செய்யக் கருதினாளைச்சேர்ந்து, அவளிடம்
கடோற்கசனென்னும் மகனைப்பெற்றான்:அவன் பின்பு தனது தாதையான
வீமனையும், மற்றை அவனுடன் பிறந்தவரையும் விட்டுப் பிரிந்து
செல்லுகையில் அன்போடு வணங்கி அவர்கள் தன்னைவேண்டிய காலத்து
நினைக்கும்படியாகவும், அங்ஙனம் நினைத்தமாத்திரத்தில் தான் வந்து
உதவுவதாகவும் வாக்குத்தத்தஞ் செய்துபோயின னென்பது, கீழ் ஆதிபருவத்து
வரலாறாம். என நற்கொடி என்று பிரதிபேதம்

மின் தாரை பட வெண் நிலா வீசு மேகம்கொல் என
வந்து, முன்
நின்றானை முகம் நோக்கி, நீதிக்கு ஒர் வடிவாம் மன்
இவை கூறுவான்:
‘உன் தாதை தமியேனொடு உயவாமல், ஒரு வாச
மலர் கொண்டிடச்
சென்றான்’ என, சிந்தை நொந்து, அன்புடன் பின்னும்
இவை செப்புவான்:130.-வந்தகடோற்கசனிடத்து வீமன் சென்றிருப்பதைக்
கூறித் தருமன்பின்னும் உரைக்கலுறுதல்.

மின் தாரை பட – மின்னலின் ஒழுங்குபொருந்த, வெள்
நிலா வீசும்-வெண்மையான சந்திரகாந்தியையும் வீசுகின்ற, மேகம் கொல்
என – மேகமோ என்று உவமை கூறும்படி, முன் வந்து நின்றானை-
(செம்மயிர் முடிபொருந்த வெண்மையான கோர தந்தங்களி னொளியுடனே
கரியநிறத்தனாய்)எதிரில்வந்து நின்ற கடோற்கசனை,முகம் நோக்கி –
முகத்தைப் பார்த்து,-நீதிக்கு ஓர் வடிவு ஆம் மன் – நியாயங்களினது
ஒப்பற்ற உருவத்தையொத்த தருமராசன்,-இவை கூறுவான் –
இவ்வார்த்தைகளைச்சொல்பவனாய்,’உன்தாதை – உனது தந்தையான
வீமன், தமியேனொடுஉயவாமல் – என்னோடுஆராயாமல், ஒரு வாசம்
மலர் கொண்டிட – நறுமணத்தையுடையதொருபூவைக் கொணர்தற்பொருட்டு,
சென்றான் – (அளகாபுரிக்குப்) போய்விட்டான்,’என-என்று கூறி,-சிந்தை
நொந்து – மனம் வருந்தி, அன்புடன் – பிரீதியுடனே, பின்னும் – மீண்டும்,
இவை செப்புவான் – இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;,(எ-று.)-அவற்றை
மேற்கவியிற் கூறுகிறார்.

     செம்பட்டமயிருக்கு மின்தாரையையும், வெள்ளெயிற்றுக்கு
வெண்ணிலாவையும், கரிய பெரிய வடிவத்துக்குக் காளமேகத்தையும் உவமை
கூறினார்.நீதிக்கு ஓர்வடிவாம் நிருபன் – நீதி தவறாதஅரசனென்றபடி;கீழ்
“தருமத்தினுருவாகி”என்பதற்குங் கருத்து இவ்வாறே.  தனக்கு
இரண்டுகைகள் போன்ற வீமஅருச்சுனர் இருவரையும் பிரிந்ததனாலாகிய
எளிமைதோன்ற, ‘தமியேன்’என்றான். உயவாமல், உயவு – பகுதி: இது
உசாவு என்பதன் மரூஉ.  வடியா நிருபன் என்றும், உரையாமலென்றும்
பாடம்.     

எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன்,
யாம் இயக்கேசன் ஊர்
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி, விரைவோடு
வருவோம்’ எனா,
வெம்புற்ற பைங் கானினிடை, மின்னும், இளையோரும்,
உடன் மேவவே,
கம்பிக்கும் நெஞ்சோடு அவன் தேரின்மீது அக்
கணத்து ஏறினான்.131.-வீமனுக்குஇடையூறு நேரும்முன் அங்ஙன்
நேராதிருக்க நாம்அளகை செல்வோமென்று தருமன்
அவன் தேரிலேறுதல்.

‘எம்பிக்கு- எனது தம்பியான வீமனுக்கு, ஒர் இடையூறுவந்து
எய்தும்முன் – யாதாயினுமொரு தீங்கு நேர்தற்கு முன்னமே,-
(நேராதிருக்கும்படி), யாம்-நாம், இயக்கேசன் ஊர் -யக்ஷராஜனான
குபேரனது அளகாநகரத்திலுள்ள, வம்பு உற்ற – பரிமளம் மிக்க, மலர் –
பூக்களையுடைய,வாவி – பொய்கையை, விரைவோடு சென்று எய்தி-
விரைவிற் போயடைந்து, வருவோம்-மீண்டுவருவோம்’எனா- என்று
(கடோற்கசனைநோக்கிக்) கூறி, வெம்பு உற்ற பைங்கானின் இடை – தாபம்
பொருந்தின பசுமையான அந்தக்காட்டில், மின்உம்-மின்னற்கொடிபோன்ற
திரௌபதியும், இளையோர்உம்- (தனது) தம்பிமாரான நகுலசகதேவர்
இருவரும், உடன் மேவ – பிரியாது வசிக்க, கம்பிக்கும் நெஞ்சோடு –
(வீமனைப்பற்றின கவலையால்)நடுங்குகின்ற மனத்துடனே, அவன் தேரின்
மீது-அந்தக் கடோற்கசனது இரதத்தின்மேல், அ கணத்து-அந்த
க்ஷணத்திலேயே, ஏறினான்- (தருமபுத்திரன்) ஏறினான்;(எ-று.)

     தருமன்அளகைக்குச் செல்லக் கடோற்கசனொடு
தேரின்மீதேறினனென்பதாம்.  மேல் 138-ஆங் கவியில் “அன்றந்த
விடம்விட்டிமைப்போதி லத்தேரின் மிசையேறியே, மின்றந்த
விடையாளுமிளையோருமுறைகானினிடை மேவினான்”என வருதலால்,
இச்செய்யுளின் மூன்றாமடிக்கு- திரௌபதியும் நகுலசகதேவரும்
அக்காட்டினின் தன்னுடன்வர எனப் பொருள் கூறலாகாது. 

கரக் கும்ப கம்பக் கடா யானை மன்னன்
கருத்தோடு சென்று,
அரக்கன் தடந் தேரில் அவனோடும் நீடு
அந்தரத்து ஏகினான்-
பரக்கும் பெரும் புண்யமும் பாவமும், தாவில்
பகிரண்டமும்
புரக்கும் பரஞ்சோதியும் பொங்கும் மா
மாயையும், போலவே.132.-தருமன்கடோற்கசனோடுதேரில் அந்தரவழியாயச்
செல்லுதல்.

பரக்கும் பெரு புண்யம்உம் பாவம்உம் (போல)-
பரவுந்தன்மையுள்ள பெரிய நல்வினையின்வடிவமும் தீவினையின்
வடிவமும் போலவும், தா இல் பகிர் அண்டம்உம் புரக்கும் பரம்சோதிஉம்
பொங்கும்மா மாயைஉம் போல – அழிதலில்லாத (இந்த அண்டத்தை
மாத்திரமேயன்றி மற்றை) வெளியிலுள்ள அண்ட கோளங்களையும்காக்குந்
தன்மையுள்ள (எல்லா வொளிகளினும்) மேம்பட்ட ஒளிவடிவமான
பரப்பிரமமும் (பலவகையாகப்) பரிணமிக்குந் தன்மையுள்ள பெரியமாயையின்
வடிவமும் போலவும்,-கரம்கும்பம் கம்பம் கடாம்யானைமன்னன்-
துதிக்கையையும் மத்தகத்தையும் அசையுந்தன்மையையும்
மதநீர்ப்பெருக்கத்தையுமுடைய ஆண் யானைக்குஒப்பான தருமராசன்,
கருத்தோடு சென்று-விருப்பத்துடனே போய், அரக்கன் தட தேரில்-
இராக்கதனாகியகடோற்கசனுடைய பெரியதேரின் மேலே, அவனோடு-
அக்கடோற்கசனுடனே, நீடு அந்தரத்து-நீண்ட ஆகாயவழியிலே, ஏகினான்-
சென்றான்;

     தருமூர்த்தியும்க்ஷத்திரியதேஜசையுடையவனுமான யுதிட்டிரனுக்கு
நல்வினையின்வடிவமும் ஒளிவடிவமான பரமான்மாவும், அரக்கமகனான
கருநிறமுடைய கடோற்கசனுக்குத் தீவினையின்வடிவமும் மாயையும்
உவமையெனக் காண்க.  கும்பம் – குடம் போன்ற வடிவமுடையது;
மத்தகத்துகுக்குக் காரணக்குறி: உவமவாகுபெயர்.  கம்பம்-வடசொல்:
எப்பொழுதும் அசைந்துகொண்டிருத்தல் யானையின்இயல்பு; இனி, கம்பம்
என்பதற்கு-கட்டுத்தறியிற் கட்டிவைத்தற்குரிய என்றும்,  கட்டுத்தறியை
முறிக்குந் தன்மையுள்ள என்றும்,  தூண்கள் போன்ற கால்களையுடைய
என்றும் பொருள் கொள்ளலாம்.  பாவம் மாயை என்ற இவற்றைக்
கருநிறமுடையன என்றல் நூல்மரபு.  உவமையணி. 

கான் எல்லை செல்லாது, கதிரோன் நெடுந் தேர்
என, கங்கை சேர்
வான் எல்லை உற ஓடி, ஒரு நாலு கடிகைக்குள்,
வயம் மன்னு தேர்
ஊன் எல்லை இல்லாது புக மண்ட, மிக
மண்டும் உதிரத்துடன்,
தேன் எல்லை இல்லாது உகுக்கும் பெருஞ் சூழல்
சென்று உற்றதே.133.-தருமகடோற்கசரேறினதேர் குபேரன்சோலையை
யடைதல்.

வயமன்னுதேர்-வலிமைபொருந்தின அத்தேரானது,-கான்
எல்லைசெல்லாது – அக்காட்டினிடத்திலே [பூமியில்]செல்லாமல்,
கதிரோன் நெடு தேர் என-ஆயிரங்கிரணங்களையுடையவனான
சூரியனதுபெரியஇரதம்போல, கங்கை சேர் வான் எல்லைஉற- தேவகங்காநதி
பொருந்தின ஆகாயத்தினிடத்திலே பொருந்த, ஓடி – விரைந்து, ஒரு நாலு
கடிகைக்குள்-நான்கு நாழிகைக்குள்ளே, ஊன் எல்லை இல்லாது மண்டி புக
மிக மண்டும் உதிரத்துடன்,-(கொல்லப்பட்டவீரர்களது) தசைகள் அளவில்லாது
நெருங்கிக் கிடக்க (அவற்றினின்று) மிகுதியாகப் பெருகுகிற இரத்தத்துடனே,
(பூக்களினின்று) தேன் எல்லைஇல்லாது உகுக்கும் பெரு சூழல் – மதுவை
அளவில்லாற் சொரிகின்ற பெரிய அக்குபேரன் சோலையினிடத்தை, சென்று
உற்றது – போய்ச்சேர்ந்தது; (எ-று.)

    கடிகை – இருபத்துநான்கு நிமிஷங்கொண்ட நேரம். உதிரம் –
வடசொற்றிரிபு. சூழல்-சூழ்ந்துள்ளதெனக் காரணக்குறி.

ஆனைக் குழாம் நூறும் அரி ஏறு எனப் பொங்கி,
அளகேசன் வெஞ்
சேனைக் குழாம் நூறி, அதனூடு பயில்
வாயு-சிறுவன்தனை,
தானைப் பெருங் கொற்ற மன் கண்டு, தான்
உற்ற தளர்வு ஆறினான்;
ஏனைத் திருத் தாதையைக் கண்டு, தேர் நின்று
இழிந்து, இன்புறா,134.-இதுவும்,மேற்கவியும்-குளகம்: தருமன் வீமனைக்
கண்டு தளர்வுஆற,கடோற்கசன் தந்தையைக் கண்டு
இன்புறல்.

ஆனைகுழாம் நூறும் அரி ஏறுஎன – யானைக்கூட்டத்தை
யழிக்கின்ற ஆண்சிங்கம்போல, பொங்கி அளகாஈசன் வெம்சேனைகுழாம்
நூறி-கோபித்துக் குபேரனது கொடிய சேனைக்கூட்டத்தை அழித்து,
அதனூடு பயில்-அச்சோலையினிடத்திலேதங்கியுள்ள, வாயு சிறுவன்தனை-
காற்றின் மகனானவீமனை,தானைபெரு கொற்றம் மன் – சேனைகளையுஞ்
சிறந்த வெற்றியையுமுடைய யுதிட்டிரராசன், கண்டு-பார்த்து, தான் உற்ற
தளர்வு ஆறினான்- தான் அடைந்திருந்த மனக்கவலைத்தளர்ச்சி
நீங்கினான்;(கடோற்கசன்), ஏனை- மற்றை, திரு தாதையை – (தனது)
சிறந்த தந்தையான வீமனை,கண்டு-பார்த்து, இன்புஉறா-மகிழ்ச்சியடைந்து,
தேர்நின்று இழிந்து – தேரினின்றும் இறங்கி,-(எ-று.)-‘அடிமன்ன’என
மேலைக்கவியில் இயையும்.

     அதனூடு என்றது,கீழ்க்கவியில் ‘சூழல்’என்றதை நோக்கின சுட்டு.
ஏனையென்னும்இடைச்சொல், வினைமாற்றுப்பொருளது.   

மைக் காள முகில் அன்ன மகனும் தன் அடி மன்ன,
வய வீமனும்
கைக் கானின் நறை வாச மலர் கொண்டு, அறன் காளை
கழல் நல்கியே,
முக் காலும் வலம் வந்து, முறையோடு தொழுவானை,
முகம் நோக்கி நின்று,
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும்
இவை கூறுவான்135.-தன்னைவாசமலரோடு வணங்கிய வீமனைக்கண்டு
தருமன் கூறலுறுதல்.

மைகாளம் முகில் அன்ன-அஞ்சனத்தையும்
காளமேகத்தையும் (நிறத்தில்) ஒத்த, மகன்உம் – (தனது) குமாரனான
கடோற்கசனும், தன் அடி மன்ன-தனது பாதங்களிற் பொருந்தி வணங்க,
வயம் வீமன்உம் – சயத்தையுடைய வீமசேனனும், கானில் நறை வாசம்
மலர் கைகொண்டு-அச்சோலையிலுள்ளதேனையும்மணத்தையுமுடைய
பூக்களைக்கைகளில் எடுத்துக்கொண்டு வந்து, அறன் காளைகழல் நல்கி-
தருமபுத்திரனது பாதங்களிலேயிட்டு அருச்சித்து, முக் கால்உம் வலம்வந்து-
மூன்று தரம் பிரதக்ஷிணஞ்செய்து, முறையோடு – சாஸ்திரவிதிப்படியே,
தொழுவானை-(சாஷ்டாங்கமாக)நமஸ்கரிப்பவனை,முகம் நோக்கி நின்று –
முகத்தைப் பார்த்துநின்று, நா வந்தது எக் கால்உம் இசையாத
இசையோன்உம்-வாயில் வருகிற வசைச்சொற்களைஎப்பொழுதுங்
கூறுதன்மையில்லாத கீர்த்தியையுடைய யுதிட்டிரனும், இவை கூறுவான் –
(அப்போது) இவ்வார்த்தைகளைச்சொல்பவனானான்;(எ-று.)-அவை
மேற்கவியிற் கூறப்படும்.

     வீமன் தொழுவானை-தொழுவானாகியவீமனையென்க.  எக்காலும் –
பிறர் தீங்குசெய்த காலத்திலு மென்றபடி.  எக்காலும் நாவந்ததிசையாத
இசையோன்-ஒருபொழுதிலுங் கண்டபடி கடுஞ்சொல்லைக்கூறி யறியாத
பொறுமைக் குணத்தின் பெருமையையுடையவ னென்றபடி.

என் ஏவலால் அன்றி, இமையோரும் எய்தாத
இக் காவில், நீ
மின் ஏவலால் வந்து, விரகாக வினை செய்த
இது மேன்மையோ?
உன் ஏவல் புரிவாரும் உளர் உம்பிமார்’ என்று
உருத்தான்அரோ-
தன் ஏவலால் இந்த உலகு ஏழும் வலம் வந்த
தனி ஆழியான்.136.-தன்கட்டளையின்றிப்பெண்வார்த்தையால்
தனித்துவந்துபொருததுபற்றித் தருமன் வீமனைச்
சினத்தல்.

இமையோர்உம்எய்தாத இ காவில்-தேவர்களும்
நுழையக்கூடாத [மிக்ககாவலையுடைய]இந்தச் சோலையிலே,நீ-,என்
ஏவலால் அன்றி-எனது அனுமதியினாலல்லாமல், மின் ஏவலால்-மின்னற்
கொடிபோன்ற திரௌபதியினது கட்டளையால்,விரகுஆக வந்து-
கபடமாகவந்து, வினைசெய்த- (போர்முதலிய) தொழில்களைச்செய்த,  இது
– இச்செய்கை, மேன்மைஓ – சிறப்பாமோ?  உன் ஏவல் புரிவார்உம்
உம்பிமார் உளர்-(தங்கள் தமையனான)உனது கட்டளையைச்
செய்பவர்களும் உன் தம்பியர் இருக்கின்றனரன்றோ?’என்று –
என்றுசொல்லி, உருத்தான்-கோபித்தான்: (யாரென்னில்), தன் ஏவலால்
இந்த உலகு ஏழ்உம் வலம் வந்த தனி ஆழியான்-தனது கட்டளையால்
இந்த ஏழு தீவுகளையுடையஉலக முழுவதிலுஞ் சூழ்ந்துவருந் தன்மையதான
ஒப்பற்ற ஆஜ்ஞா சக்கரத்தையுடைய தருமன்;(எ-று.)

     உனதுதம்பியராகிய அருச்சுனனாதியர்உன்ஏவற்படி நடக்க, எனது
தம்பியாகிய நீமாத்திரம் எனது ஏவலின்றி யொழுகுவது
தகுதியோவென்றவாறு.  மின்ஏவலால் வந்து விரகாக என்றது,
தையல்சொற்கேட்ட இழிதகைமையை விளக்கும் ‘மின்’என்றது அவளுடைய
தேக காந்தியிலே ஈடுபட்டு வீமன் அங்ஙனஞ்செய்தானென்பதை
யுணர்த்துதற்கு.  விரகு-தந்திரம்.  ஆணையைச்சக்கரமென்றல், மரபு.
இவ்வுலகம் ஏழுதீவுகளையுடைமைபற்றி ‘உலகேழும்’என்றார்: ஆகவே,
இங்கு உலகுஎன்பது தீவுஎன்று அதன் ஏகதேசத்தை யுணர்த்திற்றென்க:
“மாயோன்மேயகாடுறை யுலகமும்”என்ற இடத்துப்போல.  அரோ-ஈற்றசை.

என்று இந்த உரை கூறி, முனிவு ஆறி,
இறையோனும், இகலோனுடன்
சென்று, அம் தண் மலர் வாவி படிவுற்று,
வாசத் திருத் தார் புனைந்து,
அன்று அந்த இடம் விட்டு, இமைப்போதில்,
அத் தேரின்மிசை ஏறியே,
மின் தந்த இடையாளும் இளையோரும் உறை
கானினிடை மேவினான்.137.-தருமன்முனிவாறித் தாம் வசித்திருந்த காட்டை
மீண்டடைதல்.

என்றுஇந்த உரை கூறி-என்று இந்த வார்த்தைகளைச்
சொல்லி, முனிவு ஆறி – (உடனே) கோபந்தணிந்து, இறையோன்உம் –
(யாவர்க்குந்) தலைவனானதருமனும், இகலோனுடன் சென்று –
வலிமையையுடைய வீமனுடனேபோய், அம் தண் மலர் வாவி படிவுற்று –
அழகிய குளிர்ந்த பூக்களையுடையஅப்பொய்கையிலே நீராடி, வாசம் திரு
தார் புனைந்து- வாசனையையுடையஅழகிய (அப்பொய்கையிலுள்ள)
மலரைச் சூடி, அன்று – அப்பொழுதே, அந்த இடம் விட்டு-அவ்விடத்தை
நீங்கி, இமைப்போதில் – ஒரு நொடிப்பொழுதிலே, அ தேரின்மிசை ஏறி –
அந்தக் கடோற்கசனது இரதத்தின்மே லேறிக்கொண்டு, மின் தந்த
இடையாள்உம் இளையோர்உம்உறை கானினிடை மேவினான்-
மின்னலையொத்தஇடையையுடைய திரௌபதியும் (தனது) இளைய
தம்பிமாரான நகுலசகதேவரும் வசிக்கின்ற அக்காட்டில் வந்திட்டான்;

     இகலோன் -கடோற்கச னென்பாரு முளர்.  மின் தந்த இடை, தந்த-
உவமவுருபு.  தார் என்னும் மாலையின்பெயர்,அதற்குக்கருவியான பூவுக்கு
இங்கே காரியவாகுபெயர். 

மேவி, பெருந் தெய்வமுனி பாதமலர் சென்னிமிசை
வைத்து, மென்
காவிக் கயல் கண் இணைச் சேயிதழ்ப் பாவை
களி கூரவே,
வாவிச் செழுந் தாம மலர் நல்கி, ஒல்காது வலி
கூரும் நல்
ஆவிக்கு இன் அமுதான நிருதற்கு விடை அன்று
அளித்தான்அரோ.138.-தருமன்உரோமசனைவணங்கி, திரௌபதிக்கு
மலரளித்து,கடோற்கசனுக்கு விடைதந்தனுப்புதல்.

(யுதிட்டிரன்), மேவி – வந்துசேர்ந்து, பெரு தெய்வம் முனி
பாதம் மலர் சென்னிமிசை வைத்து – சிறப்புள்ள தேவ விருடியான
உரோமசமகாமுனிவனது திருவடித்தாமரைப் பூவைத்(தனது) தலைமேற்
கொண்டுவணங்கி, மெல் காவி கயல் இணைகண் சேய் இதழ் பாவை
களிகூர – மென்மையான நீலோற்பல மலரையும் கயல்மீனையும்போன்ற
ஒன்றோடொன்றொத்தகண்களையும் சிவந்தஅதரத்தையுமுடைய
சித்திரப்பதுமைபோலழகிய திரௌபதி களிப்பு மிகும்படி, வாவி செழு தாமம்
மலர் நல்கி-அப்பொய்கையிலிருந்து கொணர்ந்த அழகிய மாலையாகத்
தொடுத்தற்குரிய பூக்களை(அவளுக்கு)க் கொடுத்து, ஒல்காது வலி கூரும் –
தளர்ச்சியில்லாமல் வலிமைமிகுந்த, நல் ஆவிக்கு இன் அமுது ஆன – சிறந்த
(தனது) உயிருக்கு இனிமையான அமிருதத்தையொத்து உதவின, நிருதற்கு –
அரக்கனாகியகடோற்கசனுக்கு, அன்று – அப்பொழுது, விடை அளித்தான் –
அனுமதி கொடுத்தனுப்பினான்; (எ-று.)-அரோ- ஈற்றசை.

     இங்கே,’வாவிச்செழுந்தாமமலர்நல்கி’என்றதனால்,வீமன்
கொண்டுவந்தது நீர்ப்பூவேயென்பது தெளிவாம்.  கீழ்க்கவியிலிருந்து
தொடர்ச்சியாய், பிரதானனானதருமன் உரோமசமுனிவரை
வணங்கியதையும், திரௌபதிக்குப் பூவளித்ததையும், கடோற்கசனுக்கு
விடையளித்ததையும் கூறியதிலேயே வீமன் உரோமசமுனிவரை வணங்கியது
முதலியவையும் அடக்கப்படவேண்டும், கீழ்க்கவியில் ‘மேவினான்’என
முடித்து, இக்கவியில் ‘மேவி’என எடுத்துத் தொடர்ச்சிப்படுத்துக்
கூறினமையின்.  இக்கவியில் பாதமலர் சென்னிமிசை வைத்தல், மலர்
நல்குதல், விடையளித்தல் என்னும் வினைக்கெல்லாம்கீழ்க்கவியில்
‘இறையோன்’என்றதனாற்குறித்த யுதிட்டிரனே எழுவாயாதல் ஏற்கும்.
தருமபுத்திரனிடத்து வீமசேனன்தான் தேடிய மலர்களைக்கொடுத்ததனால்,
திரௌபதியினிடம் தருமனே அம்மலர்களைக்கொடுத்தா னென்க.  இனி,
இக்கவியில் வீமனெனத் தோன்றாஎழுவாய்வருவித்தல்வேண்டு
மென்பாருமுளர்.  நல்லாவி யென்றது, எவர்க்கும் உயிரினுமினியது
வேறின்றாதலின். தருமபுத்திரனது உயிர்த்துணைவனானவீமனது
க்ஷேமத்தை அறிதற்குக் கடோற்கசனே ஆபத்பந்துவாய் உதவினமையின்,
‘நல்லாவிக்கின்னமுதானநிருதன’என்றது. சேய்தழற் பாவை என்றும்
பாடம்.   

மின் புரை மருங்குல் மின்னும், வேந்தரும், அந்தக் கானில்
அன்புடை முனிவன் கூற, அவன் மலர்ப்பாதம் போற்றி,
துன்பமும் துனியும் மாறி, நாள்தொறும் தோகைபாகன்
தன் பெருங் கதையும் கேட்டு, தங்கினர் என்ப மாதோ.139.-பாண்டவர்அங்குத்தானே திரௌபதியுடன்
தங்கியிருத்தல்.

மின்புரை மருங்குல் மின்உம்-மின்னலையொத்த
இடையையுடைய திரௌபதியும், வேந்தர்உம் – (அருச்சுனனொழிந்த)
பாண்டவர்களும், அன்பு உடை முனிவன் கூற – (யாவரிடத்தும்)
அன்பையுடைய உரோமசமுனிவன் ( பல தரும நெறிகளை)உபதேசிக்க (க்
கேட்டு), அவன் மலர் பாதம் போற்றி-அம்முனிவனுடைய
தாமரைமலர்போன்றதிருவடிகளைவணங்கி, துன்பம்உம் துனிஉம் மாறி-
துன்பங்களும் கவலையும்ஒழிந்து, நாள்தொறுஉம் – தினந்தோறும்,
தோகைபாகன்தன் பெரு கதைஉம் கேட்டு-தோகையுள்ள மயில்போலுஞ்
சாயலையுடையஉமாதேவியைஇடப்பாகத்திற் கொண்ட சிவபிரானது  சிறந்த
சரித்திரத்தையுங் கேட்டுக்கொண்டு, அந்த கானில்-அக்காட்டிலே, தங்கினர்-
தங்கியிருந்தார்கள்;(எ-று.)-என்ப- அசை.  மாது, ஓ – ஈற்றசை.

     தோகைபாகன்தன் பெருங்கதை-திரிபுரசங்காரம் போல்வன.  தோகை
– மயிலிறகு;இங்கே இருமடியாகுபெயர்.  தோகைபாகன் பெருங்கதை
கேட்டது-பாசுபதம்பெற அருச்சுனன் அப்பிரானைக்குறித்துச்
சென்றிருத்தலினாலாகும். உம்மையால், பிற புண்ணிய சரித்திரங்களையுங்
கொள்ளலாம்.  முன்னே ‘மின்புரைமருங்குல்’என வந்ததனால்,பின்பு
‘மின்’என்றது – பெண்ணென்னுமாத்திரையாய் நின்றது.

     இக்கவி -கீழ் எண்பத்திரண்டாங் கவிபோன்ற அறுசீர்க்கழி
நெடிலடியாசிரிய விருத்தம்.

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading