ஸ்ரீ.வில்லிபாரதம் – இரண்டாம் பாகம் -13. நிவாத கவசர் காலகேயர் வதைச் சருக்கம்- ஸ்ரீ.உ.வே.சே.கிருஷ்ணமாசாரியர் ஸ்ரீ உ.வே.வை.மு.கோபாலகிருஷ்ணமாசாரியர் உரைகள்

அவ் வரம் தனக்கு நல்கும் அன்னை தாள்
வணங்கும் வென்றிக்
கை வரு சிலையினானைக் கடவுளர்க்கு இறைவன் கொண்டு,
மொய் வரு சுரர்கள் சூழ, முதன்மை சேர் சுதன்மை எய்தி,
வெவ் அரி முகத்த பீடம் விளங்க, வீற்றிருந்த காலை,1.*-உருப்பசியினிடம்வரம்பெற்றஅருச்சுனனை
யுடன்கொண்டுஇந்திரன் சுதன்மையில் வீற்றிருத்தல்.

இதுவும், மேற்கவியும்- ஒரு தொடர்.

     (இ – ள்.) அவரம்-(பேடிவடிவம் தான் வேண்டுங்காலத்தில் ஒரு
வருஷகாலம் வந்தடையும் என்ற) அந்த வரத்தை, தனக்கு நல்கும்-தனக்குக்
கொடுத்த, அன்னை-தாயாகியஊர்வசியினது, தாள் – பாதங்களை,
வணங்கும் – நமஸ்கரித்த, வென்றி கை வரு சிலையினானை- ஜயத்தைத்
தருகின்ற (தன்) கையிற் பொருந்திய (காண்டீவமென்னும்) வில்லையுடைய
அருச்சுனனை,கடவுளர்க்கு இறைவன் – தேவர்களுக்கு அரசனான
இந்திரன், கொண்டு – அழைத்துக்கொண்டு, மொய் வரு சுரர்கள் சூழ –
நெருங்கி வருகின்ற தேவர்கள் (தன்னைச்)சுற்றிலுமிருக்க, முதன்மை சேர்
சுதன்மை எய்தி – (சபாமண்டபங்களெல்லாவற்றினுந்) தலைமைபெற்ற
சுதர்மை என்னுந் தேவசபாமண்டபத்தை அடைந்து, வெவ் அரி முகத்த
பீடம் விளங்க – கொடுந்தன்மையையுடைய சிங்கத்தினது முகம்அமைந்துள்ள
ஆசனம் விளங்குதலடையும் படி, வீற்றிருந்த காலை-(அவ்வாசனத்தில்)
பெருமையாக இருந்தபொழுதில்,-(எ-று.) -இக்கவியில் ‘காலை’என்பது,
மேற்கவியில் ‘காட்டினான்’என்பதோடு முடியும்.

     அருச்சுனனதுவமிசபிதாவாகிய புரூரவசக்கரவர்த்திக்கு
மனைவியாயிருந்ததனால்,ஊர்வசி அருச்சுனனுக்குத் தாய்முறையாயினாள்
அன்றியும், தந்தையாகிய இந்திரனது வைப்பாட்டியாகையாலும்,
அருச்சுனனுக்கு ஊர்வசி மாதாவாவ ளென்பர்.  ‘தாள்வணங்கும்’
என்றதனால்,அவளது அடியிணைகளில்தனது முடி படும்படி
சாஷ்டாங்கமாக விழுந்து தெண்டனிட்டன னென்க.  அருச்சுனன்
அக்கினிபகவானுக்குக் காண்டவ வனத்தை இரையாகக் கொடுத்த காலத்தில்,
அவனுக்கு அக்கினியினால்,நான்கு வெள்ளைக்குதிரைகள்பூட்டியதொரு
தேரும், குரங்குக் கொடியும், காண்டீவமென்னும் வில்லும், அம்புகள்
குறைதலில்லாத அக்ஷய தூணீரமும் அளிக்கப்பட்டன என்று அறிக.
கைவருதல்-கை பழகுதலுமாம்.  கடவுளர் – (இவ்வுலக சம்பந்தத்தைக்)
கடத்தலையுடையவர். சுதன்மை-ஸு தர்மா என்னும்  வடமொழியின்  திரிபு;
நல்லதருமமுடையது  என்று பொருள்:இனி, முதன்மைசேர் சுதன்மையெய்தி
என்பதற்கு – சிறப்புப்பெற்ற நற்புத்திரனையுடையனாந்தன்மையை(இந்திரன்)
அடைந்து என்று உரைப்பாருமுளர்:சுதன்-மகன்.  அரிமுகத்தபீடம் –
சிங்கந்தாங்குவதுபோல அதன் முகமும் கால்களும் அமைத்துச் சித்திரித்துச்
செய்யப்பட்ட ஆதனம்.  சிங்காதனத்தில் வீற்றிருப்பதனால்இந்திரனுக்கு
விளக்கம் உண்டாவது என்ப தன்றிக்கே, இந்திரன் வீற்றிருத்தலினால்
ஆதனத்திற்கு விளக்கம் உண்டாவது என, தேவேந்திரனது சிறப்பை
உணர்த்தினார்;கம்பராமாயணத்தில் “புனைமணிமண்டபம் பொலிய
வெய்தினான்”என்பதனோடுஇதனைஒப்பிடுக.  தனக்கு – அருச்சுனனுக்கு;
இந்திரனுக்காக என்றும் உரைப்பர்.  நல்கும், வணங்கும்-இயல்பினால்
இறந்தகாலம் எதிர்காலமாக வந்த காலவழுவமைதி;[நன்-பொது-33.]இனி,
உம்விகுதி காலமுணர்த்தாமல் தன்மையுணர்த்திற்றெனினும் அமையும்.

     இது முதல்29-கவிகள்-பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ்சீரும்
விளச்சீர்களும், மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய
கழிநெடிலடிநான்குகொண்ட அறுசீராசிரியவிருத்தங்கள்.  இவற்றில் மூன்று
ஆறாஞ்சீர்கள்தேமாச்சீர்களாகவே நிற்கும்.   

தூண் தகு தோளின் மொய்ம்பால் நம் வலி தொலைத்து,
மேல்மேல்
மூண்டு எழும் அவுணர் தம்மை இவன் அன்றி முடிப்பார்
யார்?’ என்று
ஆண் தகை அமரர்க்கு எல்லாம் அவன் செயல்
அடைவே சொல்லி,
‘காண்டவம் எரித்த வீரன் இவன்!’ எனக் காட்டினானே.2.-நம்பகைவரையொழிக்க வல்லவன் இவனேயென்று
இந்திரன்தேவர்கட்கு அருச்சுனனைக்காட்டுதல்.

ஆண் தகை – ஆண்மைக்குணமுள்ள இந்திரன், ‘தூண்தகு
தோளின் மொய்ம்பால்-தூண்களோ என்னத்தக்க புஜங்களின் பலத்தினால்,
நம் வலி தொலைத்து-நமதுபலத்தை அழித்து, மெல் மேல் மூண்டு எழும்-
மேலே மேலே (போருக்கு) முயன்று எழுந்து வருகின்ற, அவுணர் தம்மை-
அசுரர்களை,முடிப்பார்-ஒழிக்கவல்லவர், இவன் அன்றி-இவ்வருச்சுனனே
யல்லாமல், யார்-யாவர் உளர்? [எவருமில்லையன்றோ?],’என்று-
,அமரர்க்கு எல்லாம்-தேவர்கள் யாவர்க்கும், அவன் செயல் அடைவு ஏ
சொல்லி-அவ்வருச்சுனனது செய்தியை முறைப்படச் சொல்லி,-காண்டவம்
எரித்த வீரன் இவன் என காட்டினான்-(நமது)காண்டவ வனத்தை (முன்பு)
எரியச் செய்த வீரத்தன்மையுள்ளவன் இவன் தா னென்றுஞ் சொல்லிச்
சுட்டிக்காண்பித்தான்;(எ-று.)

     இக்கவியால்,அமரரையும் அசுரரையும் ஒருபடிப்பட வெல்லவல்ல
அருச்சுனனது ஆற்றல் வெளியாகின்றது.  தோளின் மொய்ம்பு –
ஆறாம்வேற்றுமைத்தொகை;இன் – சாரியை ‘மொய்ம்பால்’என்றவிடத்து,
‘முன்பால்’என்றும் பாடமுண்டு;முன்பு – வலிமை.  ஆண் தகைமை –
பௌருஷம். தூண்-தோளுக்கு, திரண்டு உருண்டு நீண்ட தன்மையாலும்,
வன்மையாலும் உவமம்.  தகுஎன்பதை உவமவுருபாகக்கொண்டும்
உரைக்கலாம்.  மொய்ம்பால் தொலைத்துஎன்றாவது,மொய்ம்பால்
முடிப்பார் என்றாவதுஇயைக்க, மொய்ம்பான் எனப் பிரித்து,
தோள்வலிமையுடையவனாகியஎன்று உரைத்து, இவன் என்பதற்கு
விசேஷணமாக்கினும் அமையும்.  ‘நம்’எனப் பன்மையாகக் கூறினான்,
மற்றைத் தேவர் யாவரையும் உளப்படுத்தி.  மென்மேல் – மேன்மேல்:
அடுக்குத்தொடர், இடைவிடாமைப் பொருளது.  வினாவடியாப்பிறந்த யார்
என்னும் பலர்பாற் குறிப்புமுற்று, எதிர்மறைப்பொருள் தந்தது.  ஆண்டகை
– பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை;தகை – தகுதி,
சற்குணம்;இது தொழிலடியாப் பிறந்ததாயினும், பொருளாற் பண்புப்பெயர்.
இதை அமரர்க்கு அடைமொழியாக்கிவிட்டு, கீழ்க்கவியில்
‘கடவுளர்க்கிறைவன்’என்பதையே, ‘காட்டினான்’என்பதற்கு
எழுவாயாக்கினும் அமையும்.  செயல்-வெற்றிச்செய்கை:வரலாறுமாம்.

    காண்டவமெரித்த வீரனிவனெனக்காட்டியது, தேவர்களாகிய நம்மினுஞ்
சிறந்த வீரமுடையான் இவன் என்பதைத் தெரிவித்தற்கு.  கிருஷ்ணனும்
அருச்சுனனும் ஒருநாள் பூம்பந்தேறிட்டு விளையாடச்செய்தே,
அக்கினிபகவான் மிகப் பசித்துவந்து, ‘இந்திரனதுகாவற்காடாய் யாவர்க்கும்
அழிக்கவொண்ணாதபடியாய்நிலவுலகத்தில் இருக்கின்ற
காண்டவவனமென்னும் பூந்தோப்பை அதிலுள்ள சராசரங்களுடனே எனக்கு
விருந்திடவேண்டும்’என்று வேண்ட, கிருஷ்ண அருச்சுனர்கள் அங்கேபுக்கு
ஒதுங்கியிருக்கின்ற அசுரர் முதலிய துஷ்டர்களைஅழித்தருள
வேண்டுமென்னும் நோக்கத்தால் ‘நீஅதனைப்புசி’என்று இசைந்து
அளிக்க, உடனேநெருப்புப் பற்றி எரித்தது என்பது, கதை.  அங்ஙனம்
எரித்திடுவதை அறிந்த இந்திரன் அக்கினியை அவிக்கும் பொருட்டு ஏழு
மேகங்களையும்ஏவ அவையனைத்தும்ஒருங்கே எழுந்துவந்து பெய்த
அடைமழை முழுவதையும் அருச்சுனன் அம்புக் கூட்டங்களைக்கொண்டு
அமைத்த பெரும்பந்தரினால்தடுத்துவிட்டானென்பதையும், அதுகண்டு
சினந்து தேவசைனியத்துடனே வந்து பொருத இந்திரனைப்பார்த்தன்
புறமிட்டோடச் செய்தன னென்பதையும் கீழ்க் காண்டவதகனச் சருக்கத்துக்
காண்க. 

அவ் உரை கேட்ட தேவர் அகம் மகிழ்ந்து,
அவனுக்கு அன்பால்
திவ்விய மறையின் மிக்க தெக்கிணை பலவும் செய்தார்;
செவ்விய தாதைதானும் சேண் நதித் தூ நீர் ஆட்டி,
விவ் விரவாத வாசத் தாமமும் விழைந்து சூட்டி,3.-இரண்டுகவிகள் -ஒருதொடர்:தேவர்கள்
அருச்சுனனைச்சம்மானிக்க, இந்திரன்
கற்பகப்பூமாலைசூட்டிமுடிகவித்தல்

அஉரை – அந்த (இந்திரனது) வார்த்தையை, கேட்ட –
செவியுற்ற, தேவர் – தேவர்கள், அகம் மகிழ்ந்து – மனஞ் சந்தோஷித்து,
அவனுக்கு – அவ்வருச்சுனனுக்கு, அன்பால் – அன்பினால்,திவ்வியம்
மறையில் மிக்க தெக்கிணைபலஉம் செய்தார் – தெய்வத்தன்மையுள்ள
வேதங்களில் (சுரரல்லாதார்க்குச் செய்யத்தக்கனஎன்று) மிகுதியாகச்
சொல்லியுள்ள பலவகைச் சன்மானங்களையுஞ்செய்தார்கள்;செவ்விய
தாதை தான்உம் – நற்குணங்களையுடைய(அருச்சுனனது) தந்தையாகிய
இந்திரனும், சேண் நதி தூ நீர் ஆட்டி – ஆகாசகங்காநதியினது
பரிசுத்தமான தீர்த்தத்திலே (அருச்சுனனை)ஸ்நானஞ்செய்வித்து, வி
விரவாத வாசம் தாமம்உம் விழைந்து சூட்டி – வண்டுகள் மொய்க்காத
வாசனையையுடைய(கற்பகப்பூ) மாலையையும்(அவனுக்கு) விரும்பி
அணிவித்து,-(எ-று.)-மேற்கவியில் ‘கவித்தான்’என்பதோடு முடியும்.

     தேவலோகத்துப்பூமாலையில்வாட்டமும் வண்டுமொய்த்தலும்
இல்லையெனஅறிக.  இனி, இரண்டாம் அடிக்கு – சிறந்த
வேதமந்திரங்களைக்கொண்டுமிகுந்த ஆசீர்வாதங்களைச்செய்தார்கள்
என்றும் பொருள் கொள்ளலாம்.  வேதத்துக்குத் தெய்வத்தன்மையாவது-
செய்யத்தக்கனவும் தகாதனவுமாகிய நன்மை தீமைகளைவிதி விலக்குகளால்
தவறாமல்தெரிவித்து யாவராலுஞ் சத்தியமான சிறந்த பிரமாணமென்று
அங்கீகரிக்கப்படுதல்.  மறை-மறைந்த பொருளையுடையது. ‘அகமகிழ்ந்து’
என்னும் சினையின்வினை,’செய்தார்’என்னும் முதலின்வினையைக்
கொண்டது;[நன்வினை- 29.]தெக்கிணை- தக்ஷிணா,பலவும், உம்மை –
முற்றுப் பொருளது.  செவ்வி – பண்புப்பெயர்;இ – விகுதி:வி-
விகுதியெனவுமாம்.  மூன்று நான்காம் அடிகளிலுள்ள உம்மை இரண்
டும்-இறந்தது தழுவியஎச்சப்பொருளன.  சேண் – வானம் ‘தூய்நீர்’
எனவும் பாடம்.  வி-வடசொல், பறவைப் பொதுப் பெயர்: இது இங்கே,
சிறப்பாய் வண்டு என்னும் ஒருசாதிப் பறவையைக் குறித்தது.  அகமென்னும்
உள்ளிடப் பெயர், அங்கு இருக்கின்ற மனத்திற்கு ஆதலால்
இடவாகுபெயர்.

ஆயிரம் கதிரும், திங்கள் அனந்தமும், அடங்க, மேல்மேல்
காய் கதிர் விரிவது, யார்க்கும் கருத்து உறக் காண ஒண்ணாச்
சேயொளி தவழ்வது ஆகி, திசைமுகன் தனக்கு நல்கும்
மா இருங் கிரண ரத்ந மவுலியும் கவித்தான், அன்றே.

ஆயிரம் கதிரும், திங்கள் அனந்தமும், அடங்க, மேல்மேல்
காய் கதிர் விரிவது, யார்க்கும் கருத்து உறக் காண ஒண்ணாச்
சேயொளி தவழ்வது ஆகி, திசைமுகன் தனக்கு நல்கும்
மா இருங் கிரண ரத்ந மவுலியும் கவித்தான், அன்றே.

ஆடையும், கலனும், தெவ்வை அடும் திறல் படையும் நல்கி,
ஏடு அவிழ் அலங்கலான் ஓர் ஆசனத்து இருத்தி, என்றும்
தேடுதற்கு அரிய தூய அமுது, செம் பொற் கலத்தில்,
கூட உண்டு, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம்
சிறப்பும் செய்தான்.5.-அருச்சுனனுக்குத்தேவேந்திரன் சிறப்புச்செய்தல்.

ஏடுஅவிழ் அலங்கலான் – பூவிதழ்கள் மலர்கின்ற
மாலையையுடையஇந்திரன்,-ஆடைஉம்-வஸ்திரங்களையும்,கலன்உம் –
ஆபரணங்களையும்,தெவ்வை அடும் திறல் படைஉம் – பகைவரைக்
கொல்லவல்ல வலிமையையுடைய ஆயுதங்களையும்,நல்கி-
(அருச்சுனனுக்குக்) கொடுத்து,-ஓர்ஆசனத்து இருத்தி – (தான்)
இருக்கின்றதொரு ஆசனத்தில் தானே (அவனையுங்கூட) இருக்க வைத்து,
என்றுஉம் தேடுதற்கு அரிய தூய அமுது – எந்நாளுந் தேடியடைதற்கு
அருமையான பரிசுத்தமான அமிருதத்தை, செம்பொன் கலத்தில் – சிவந்த
பொன்னினாலாகியபாத்திரத்திலே, கூட உண்டு – அவனுடனே ஒக்க
இருந்து நுகர்ந்து, அமரர்க்கு எல்லாம் குரிசில் ஆம் சிறப்புஉம் செய்தான் –
தேவர்களெல்லோருக்கும் அரசனாகின்றசிறப்பையும் (அருச்சுனனுக்குச்)
செய்து வைத்தான்;(எ-று).

     தேவேந்திரன்தன்குமாரனானஅருச்சுனனுக்குத் தன்னாசனத்தில்
அருத்தாசனங் கொடுத்து அவனைக்கூடவைத்துக்கொண்டு அமிருதபானம்
பண்ணி அவனையும்அமுதுசெய்வித்து அவனைத்தேவர்களுக்கு
இளவரசாக்கினானென்பதுகருத்து.  இனி, அமரர்க் கெல்லாங்குரிசில்-
தேவேந்திரன், ஏடவி ழலங்கலான்-அருச்சுனனை,ஓராசனத்திருத்தி-
வேறொருஆசனத்தில் இருக்கவைத்து, அமுது கூட உண்டு –
அமிருதம்போல மிக வினிய உணவை அவனோடுபுசித்து, ஆம் சிறப்பும்
செய்தான்-தக்க சன்மானத்தையுஞ் செய்தான் என உரைப்பாருமுளர்.  கலன்
– கலம்: மகரனகரம் மாறி வருஞ்சொல்: இங்கே, கலன் – அணிகலன்.
‘மந்த்ரத்துடனடற்படையுநல்கி’என்ற பாடத்துக்கு – அஸ்திரம் சஸ்திரம்
என்னும் இருவகை ஆயுதங்களையும்அளித்தமை கூறினாரென்க: இன்னும்
இதிலே எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவன என்னும் பலவகைப்
படைகளும் அடங்கும்.  (அஸ்திரம்- மந்திரத்துடனே பிரயோகிக்கப்படுகின்ற
ஆயுதமென்றும், சஸ்திரம்-மந்திரமின்றிக்கேவிடப்படுகின்ற ஆயுத மென்றும்
வேறுபாடு அறிக; அத்திரம் – கைவிடு படை, சத்திரம் – கைவிடாப்படை
எனவும் வேறுபாடு கூறுவர்) கலம் – உண்கலம்.  குரிசில் – பெருமையிற்
சிறந்தவன்;ஆண்பாற் சிறப்புப்பெயர்:[நன்- பெயர் 69.] 

அன்னது நிகழ்ந்த காலை, அவன் திருத் தேவி கண்டு,
துன்னிய கோபச் செந் தீ விழி உக, சில சொல் சொன்னாள்-
‘மன்னிய புவியில் வைகும் மானுட மன்னன் வந்து, உன்-
தன்னுடன் ஒக்க உண்ணத் தக்கதோ? உரைத்தி!’ என்றே.6.-அதுகண்டுஇந்திராணி, ‘ஒருமானுடனோடுஒக்கஉண்
ணுதல் தகுமோ?’ என்று சினந்து கூறுதல்.

அன்னது நிகழ்ந்த காலை- அத்தன்மையதான செய்கை
நடந்தபொழுதில்,-அவன்திரு தேவி – அவ்விந்திரனது அழகிய
மனைவியானஇந்திராணி,-கண்டு- (அதனைப்)பார்த்து, துன்னிய கோபம்
செம் தீ விழி உக – பொருந்திய கோபத்தினாலாகியசிவந்த நெருப்புப்பொறி
கண்களின் வழியே சிந்தாநிற்க, ‘மன்னியபுவியில் வைகும் – பொருந்திய
பூலோகத்திலே வசிக்கின்ற, மானுட மன்னன் – மனிதனாகியஓரரசன், வந்து
– (இங்கே) வந்து, உன்தன்னுடன் ஒக்க உண்ண தக்கதுஓ – உன்னுடனே
ஒக்க இருந்து உண்ணுதல் தகுதியுடையதோ?  உரைத்தி – சொல்வாய்,’
என்று-,சில சொல் சொன்னாள்- (இந்திரனைநோக்கிச்) சில சொற்களைக்
கூறினாள்;(எ-று.)

     கோபச்செந்தீவிழியுக என்பதற்கு-கோபமிகுதியால்நெருப்புப் போல
கண்கள் மிகச்சிவக்க என்று கருத்து.  புவி என்னுஞ்சொல், வடமொழியில்
ஏழாம்வேற்றுமை.  மானுடன்=மாநுஷன்.  மானுட மன்னன் – உயர்திணைப்
பெயரீறு விகாரமாயிற்று;[நன்-உயிர்-9]உண்ணத்தக்கதோ –
உண்ணத்தகுமோ;தகாதென்னும் பொருளைத்தந்ததனால்,ஓகாரம் –
எதிர்மறை.  செந்தீவிழியுகப்பொறாதுசொற்றாள்என்றும் பாடம்

என்றலும், கடவுள் வேந்தன், இரு புயம் துளங்க நக்கு,
‘மன்றல் அம் துளப மாயோன் மைத்துனன்; எனக்கு மைந்தன்;
கொன்றை அம் சடையானோடும் அமர் புரி குரிசில்தன்னை,
‘நன்றி இல் மனிதன்’ என்று இங்கு இகழ்வதோ
நங்கை?’ என்றான்7.-இந்திரன்அருச்சுனனது பெருமையைச் சுட்டிக்காட்டி
மானுடனென்றுஇவனையிகழலாகா தெனல்

என்றலும் – என்று (இந்திராணி) சொன்னவளவில்,-கடவுள்
வேந்தன் – தேவராசனானஇந்திரன், இரு புயம் துளங்க நக்கு – (தனது)
இரண்டுதோள்களும் குலுங்கும்படி பெருஞ்சிரிப்புச் சிரித்து, (அவளை
நோக்கி), ‘நங்கை- பெண்களுட் சிறந்தவளே!  மன்றல் அம் துளபம்
மாயோன் மைத்துனன் – வாசனையையுடையஅழகிய திருத்துழாய்
மாலையையுடையஸ்ரீகிருஷ்ண பகவானது அத்தைகுமாரனும், எனக்கு
மைந்தன் – என்னுடைய மகனும், கொன்றை அம் சடையானோடுஉம்அமர்
புரி குரிசில் தன்னை- கொன்றைப்பூமாலையையுடையஅழகிய
(கபர்த்தமென்னுஞ்) சடையையுடைய பரமசிவனுடன் போர்செய்த
வீரனுமாகிய இவ்வருச்சுனனை,நன்றி இல் மனிதன் என்று – (தேவர்களுக்கு
உரிய) சிறப்பு இல்லாத சாதாரண மனிதனென்று எண்ணி, இங்கு இகழ்வதுஓ –
இவ்வாறு (நீ) நிந்திப்பது முறையோ?’என்றான்- என்று கூறினான்;(எ-று.)

     கடவுள் -சாதியொருமை: இங்கே, கடவுளர் என்று பொருளாதலின்;
இனி, தேவனாகியஅரசன் என இருபெயரொட்டுப் பண்புத்தொகையாக்கி
யுரைத்தலுமாம்.  இங்கே, சிரிப்பு – இந்திராணி அருச்சுனனைஇகழ்ந்தது
காரணமாகவும் உண்டாயிற்று: “எள்ளலிளமைபேதைமை மடனென்,
றுள்ளப் பட்ட நகை நான்கென்ப” என்றார், ஆசிரியர் தொல்காப்பியனார்.
துளபம் – துளஸீ: இது-அதனாலாகியமாலைக்குக்கருவியாகுபெயர்.
மாயோன்-மாயையையுடையவன்; மாயையாவது – கூடாததையுங்
கூட்டுவிக்குந் திறம்: அகடி தகடநாசாமர்த்தியம்;பிரபஞ்ச காரணமான
பிரகிருதியுமாம்: இனி, மாயன் – ஆச்சரியகரமான குணங்களையும்
செயல்களையும்உடையவனென்றுமாம்: கருநிறமுடையவன் என்றும்
கொள்ளலாம்.  மாயன்-மாயோன் எனச் சிறுபான்மை விகுதியீற்றயலகரம்
ஓவாயிற்று.  மைந்து – இளமை, அழகு, வலிமை;அதனையுடையவன்-
மைந்தன்.  கொன்றை என்னும் மரத்தின்பெயர், அதன் பூவினாலாகிய
மாலைக்குஇருமடியாகுபெயர்.  நங்கை – பெண்பாற் சிறப்புப் பெயர்: இது
– அண்மைவிளியாதலின், இயல்பாய்நின்றது;[நன்- பெயர் 56.]
மன்றலந்துளபம், கொன்றையஞ்சடை என்றவற்றில், அம்-
சாரியையெனவுமாம். சடையானோடும்என்றதில், உம்மை-உயர்வு சிறப்பு;
அசைநிலையாகவுமாம்.

     பாசுபதம்பெறத் தவநிலைநின்றஅருச்சுனனைஅழிக்கத்
துரியோதனனேவலால் மூகாசுரன் பன்றி வடிவாய்வந்தான்.  அவன் மேல்
வேடவடிவாய்வந்த சிவபெருமான் அம்பெய்தான்.  அது அப்பன்றியைப்
பிளக்குமுன்னே அருச்சுனன் அம்பொன்று எய்துவராகத்தை விழுத்தினான்.
அது காரணமாக அவ்விருவர்க்கும் போர் உண்டாயிற்று.  அப்போரிற்
பரமசிவன் எதிரியது வில் நாணியை அறுக்க, பார்த்தன் அவ்விற்கழுந்தால்
கடவுளது முடியில் அடித்தா னென்பது, கீழ்ச்சருக்கத்துக் கதை

ஆங்கு அது கேட்ட தேவர் அடி பணிந்து, ‘அரிய வேந்தே!
பூங்கொடி தருவோடு அன்று புவியினில் கவர்ந்த வீரற்கு
ஓங்கு மைத்துனனே ஆகில், இதனின் மற்று உறுதி உண்டோ?
ஈங்கு இவன் புகுந்த சூழ்ச்சிக்கு ஏது உண்டாகும்’ என்றார்.8.-சிறப்புக்குஅருச்சுனனேற்றவனேயென்றுஅமரர்கள்
சொல்லி, அவனைவரவழைக்கக் காரணம்
இருக்கவேணுமே யெனஇந்திரனைவினாவல்

ஆங்குஅது கேட்ட – அப்பொழுது (இந்திரன் சொன்ன)
அவ்வார்த்தையைச் செவியுற்ற, தேவர் – தேவர்கள், அடிபணிந்து-
(இந்திரனது) பாதங்களைவணங்கி, (அவனைநோக்கி), அரிய வேந்தே-
கிடைத்தற்கு அரிய எம்மரசனே! (இவ்வருச்சுனன்), பாதங்களை வணங்கி,
(அவனை நோக்கி), ‘அரிய வேந்தே – கிடைத்ததற்கு அரிய எம்மரசனே!
(இவ்வருச்சுனன்), பூ கொடி-மலரையுடைய கொடிபோன்ற சத்திய பாமைக்காக,
தருவோடு – பாரிஜாததருவை வேரோடு, அன்று-முற்காலத்தில், புவியினில்
கவர்ந்த வீரற்கு-(இங்கிருந்து) கவர்ந்து பூலோகத்துக் கொண்டுவைத்த
வீரனாகிய கண்ணபிரானுக்கு, ஒங்குமைத்துனன்ஏ ஆகில் – சிறந்த
மைத்துனானவனானால், இதனில் மற்று உறுதி உண்டுஒ-இதைக்காட்டிலும்
விசேஷம் வேறுஉள்ளதோ?இவன் ஈங்கு புகுந்த சூழ்ச்சிக்கு ஏது
உண்டாகும்-இவ்வருச்சுனன் இங்கேவந்த ஆலோசனைக்குக் காரணமொன்று
உள்ளதாயிருக்குமே,’ என்றார்-என்று வினாவினார்கள்.

     ஏழாம்வேற்றுமை யிடப்பொருளுணரநின்ற அங்கு இங்கு என்னும்
இடைச்சொற்கள், சுட்டுநீண்டு ஆங்கு ஈங்கு என நின்றன. வேந்து –
அரசத்தன்மை; அரசனுக்குப் பண்பாகுபெயர்: ஏ-விளியுருபு. பூங்கொடி –
பூக்களையுடைய கொடி என விரித்தால், இரண்டனுருபும் பயனும் உடன்தொக்க
தொகையும் அழகாகிய கொடி என விரித்தல், பண்புத்தொகையுமாம்:
இச்சொல்-சத்தியபாமைக்கு உவமவாகுபெயர். பூங்கொடி-காமவல்லியென்ற
பூங்கொடியை, தருவோடு-கற்பகத்தருவுடனே எனினுமாம். தரு-வடசொல்.
உறுதி-நன்மை:அதனைத் தருவதனை உறுதி என்றது காரியவாகுபெயர்.
அமரர்வேந்தேஎன்றும் பாடம்.

     கண்ணன் நரகாசுரனைச் சங்கரித்தபின்பு, அவனால் முன்னே கவர்ந்து
போகப்பட்ட இந்திரன்தாயான அதிதிதேவியினதுகுண்டலங்களை அவளுக்குக்
கொடுப்பதற்காகப் பெரிய திருவடியின்மேற் சத்தியபாமையையுட்காருவித்துத்
தாமும் உட்கார்ந்துகொண்டு தேவலோகத்திற்குச் செல்ல, அங்க இந்திராணி
சத்தியபாமைக்குச் சகல உபசாரங்களைச் செய்தும் தேவர்க்கே யுரிய
பாரிஜாதபுஷ்பம் மானிடப்பெண்ணாகிய இவளுக்குத் தகாதென்று
சமர்ப்பிக்கவில்லை யாதலின், அவள் அதனைக்கண்டு விருப்புற்றவளாய்ச்
சுவாமியைப்பார்த்து ‘பிராணநாயகனே! இந்தப்பாரிஜாததருவைத்
துவாரகைக்குக்கொண்டுபோக வேண்டும்’ என்றதைக் கண்ணன்
திருச்செவிசார்த்தி, உடனே அந்தவிருட்சத்தை வேரோடுபெயர்த்துப் பெரிய
திருவடியின் திருத்தோளின்மேல் வைத்தருளி, இந்திராணி தூண்டிவிட்டதனால்
வந்து மறித்துப் போர்செய்த இந்திரனைச் சகலதேவசைனியங்களுடன்
சங்கநாதத்தினாலே பங்கப்படுத்தி, பின்பு வணங்கின அவனது
பிரார்த்தனைப்படியே பாரிஜாதமரத்தைத் திருத்துவாரகைக்குக்கொண்டுவந்து
புறங்கடைத்தோட்டத்தில் நாட்டியருளினாரென்பது கதை

தேவர்தம் உரையும், தேவி செப்பிய உரையும், கேட்டு,
தா வரும் புரவித் திண் தேர்த் தனஞ்சயன்
தொழுது சொன்னான்-
‘யாவரும் பரவும் உன்தன்னுடன் ஒர் ஆசனத்து இருந்து,
மேவரு முடியும் சூடப் பொறுக்குமோ, விமல?’ என்றே.9.-அருச்சுனன் நிகழ்ந்ததுகண்டு
எனக்கு இவ்வகைச் சிறப்புத் தகுமோ எனல்.

தேவி செப்பிய உரைஉம்-இந்திராணி சொன்ன (ஆக்ஷேப)
வார்த்தையையும், தேவர்தம் உரைஉம்-(இந்திராதி) தேவர்கள் சொன்ன
(சமாதான) வார்த்தையையும், தா வரும்புரவி திண் தேர்தனஞ்சயன்-தாவிப்
பாய்ந்துவருகின்ற குதிரைகளைப் பூட்டிய வலிய தேரையுடைய அருச்சுனன்,
கேட்டு-, தொழுது-(இந்திரனைக்) கைகூப்பி அஞ்சலிசெய்து, (அவனைநோக்கி),
‘விமல-குற்றமற்றவனே! யாவர்உம் பரவும் உன்தனுடன்-மூவுலகத்தாருந்
துதிக்கின்ற உன்னுடனே, ஓர் ஆசனத்து இருந்து-(மனிதனொருவன்)
ஏகாசனத்திலே வீற்றிருந்து, மேவரு முடிஉம் சூட-பொருந்திய (உன்)
கிரீடத்தையுந் தரிக்க, பொறுக்கும்ஒ-தகுமோ?’ என்று சொன்னான்-; (எ-று.)

     பொறுக்குமோ-இந்திராணி பொறுப்பளோ எனினுமாம்: செய்யுமென்முற்று,
பெண்பாலிற் சென்றது; (நன்-வினை-29.) செப்பிய, செப்பு-தெலுங்கினின்றும்
வந்து வழங்கிய திகைச்சொல். தா-தாவு என்பதன்விாகரம்; தாவி
என்பதன்விகாரமாகக் கொள்ளினுமாம். தாவரு, மேவரு என்றவற்றில்,
வரு-துணைவினை; இனி, தாவு அரு, மேவு அரு எனப்பிரித்து –
தாவிச்செல்கின்ற அருமையான குதிரை, விரும்பிப்பெறுதற்கு அருமையான
கிரீடம் என்று உரைப்பினும் பொருந்தும். தனஞ்சயன்-செல்வத்தைச்சயித்தவன்;
தருமபுத்திரர் ராஜசூயயாகஞ் செய்யவேண்டிய பொழுது அவர்கட்டளையால்
அருச்சுனன் வடதிசையிற்சென்று பல அரசர்களைவென்று அவர்கள்
செல்வத்தைத் திறமையாகக் கொணர்ந்ததனால், அவனுக்கு இப்பெயர் வந்தது.
(பல்குனன், பார்த்தன், கிரீடி, சுவேதவாகனன், பீபத்ஸு, விஜயன், கிருஷ்ணன்,
சவ்வியசாசி, தனஞ்சயன், பாதசாஸனி, நரன் என்பன-இவனது மறுபெயர்களாம்.

அவன் உரை மகிழ்ந்து கேட்டு, ஆங்கு, அமரருக்கு
அதிபன் சொல்வான்;
‘புவனம் மூன்றினுக்கும் உன்னைப்போல் ஒரு
வீரன் உண்டோ?
சிவன் அருள் படையும் பெற்றாய்! செந் தழல்
அளித்த தெய்வக்
கவன வாம் பரியும், தேரும், கணையும், கார்முகமும்,
பெற்றாய்!10.-இதுழதல் ழன்றுகவிகள்-ஒருதொடர்:இந்திரன் அருச்சுனனிடத்து
அவன்பெற்ற மேன்மையையெல்லாஞ்சொல்லி, குருவான தனக்கு
ஒருவாரம் தரவேணுமென்று கேட்டல்

அவன் உரை-அவ்வருச்சுனனுடைய (விநயமான) வார்த்தையை,
அமரக்கு அதிபன்-தேவேந்திரன், கேட்டு-, மகிழ்ந்து-களித்து, ஆங்கு –
அப்பொழுது, சொல்வான்-(சிலவார்த்தைகள்) சொல்லுபவனானானன்,
(என்னவென்றால்), புவனம் மூன்றினுக்குஉம் உன்னைபோல்ஒருவீரன்
உண்டுஒ-(சுவர்க்கம் மத்தியம் பாதாளம் என்னும்) மூன்றுலோகங்களிலும்
உன்னைப்போல் ஒரு வீரன் உளனோ? (இல்லை); (நீ), சிவன் அருள்
படைஉம் பெற்றாய் – பரமசிவன் கொடுத்தருளிய பாசுபதம்முதலிய
ஆயுதங்களையும் பெற்றாய்; (அன்றியும்), செம் தழல் அளித்த-செந்நிறமுள்ள
அக்கினிதேவன் கொடுத்த, தெய்வம்-தெய்வத்தன்மையை
யுடைய, கவனம் வாம்பரிஉம்-விரைந்துசெல்லும் நடையையுடைய
தாவுமியல்புள்ள குதிரைகளையும்,தேர்உம்-தேரையும், கணைஉம் –
அம்புகளையும், கார்முகம்உம் – (காண்டீவமென்னும்) வில்லையும்,
பெற்றாய்-;(எ-று.)

     மூன்றினுக்கு -உருபுமயக்கம்;உம்மை – இனைத்தென்றறிபொருளில்
வந்த முற்றும்மை. சிவன் என்பதற்கு – (தன் அடியார்களுக்கு) மங்களத்தைச்
செய்பவனென்றுபொருள்;சிவம் – சுபம்.  தழலளித்த என்பதைத்
தேர்முதலியவற்றுக்குங் கூட்டுக. வாவும் பரி என்றது, வாம்பரி எனச்
செய்யுமெனெச்சம் ஈற்றுமிசை யுகரம் மெய்யுடன் கெட்டது.

பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த
வரம் மிகும் மறையும், கொற்ற வான் பெரும்
படையும், பெற்றாய்!
அரு மறை முறையே பார்க்கின், அமரர் மற்று
உன்னின் உண்டோ?
திரு வரும் வின்மை வீர! செப்புவது ஒன்று கேளாய்:

மேலும்), பிரமன்ஏ முதல் ஆ எண்ணும் – பிரமன் முதலாக
எண்ணப்படுகிற, பேர் பெறும் தேவர் – புகழைப் பெற்ற தேவர்கள், ஈந்த –
கொடுத்தருளிய, வரம் மிகு மறைஉம் – வரங்களாக மிகுந்த
மந்திரங்களையும்,கொற்றம் வான் பெரு படைஉம் – வெற்றியைத்தருகின்ற
உயர்ந்த பெரிய ஆயுதங்களையும்,பெற்றாய்-;அரு மறை முறைஏ
பார்க்கின்-(அறிவதற்கு) அருமையான வேதங்களிற் கூறிய முறையின்படியே
நோக்குமிடத்து, உன்னின் மற்று அமரர் உண்டுஓ – உன்னைக்காட்டிலும்
(சிறந்த) தேவர்கள் வேறு உளரோ?  [இல்லை];திரு வரும் வின்மை வீர-
ஜயலக்ஷ்மி வந்தடைதற்குக் காரணமான வில்லின் தொழிலில்
வல்லமையுள்ளவனே!  செப்புவது ஒன்று கேளாய்-(யான்) சொல்வதொரு
வார்த்தையைக் கேட்பாயாக;(எ-று.)-அதுமேற்கவியிற் கூறுகின்றார்.

     பிரமன் முதலியதேவ ரீந்த மறையும் படையும் – பிரமாஸ்திரம்
முதலியன.  ஜாதியொன்றைக் கொண்டே யன்றிக் கல்வி குணம்
முதலியவற்றால்ஒருவனைநன்குமதிக்க வேண்டுமென்பது நூற்றுணிபு
என்பான், ‘அருமறைமுறையே பார்க்கி னமரர்மற்றுன்னிணுண்டோ’
என்றான். ஈந்த – இழிந்தோனேற்றற்கு வரும் வினை: [நன்-பொது-56.]
வரம் மிகு-சிறப்புமிக்க என்றுமாம்.  வின்மை – வில்லின்தன்மை. அருமறை
– (அளவிடுவதற்கு) அருமையான வேதமென்றுமாம்.

கற்றவர், கலைகள் யாவும் கசடு அறக் கற்பித்தோர்கள்
பெற்றிடக் கொடுக்கும் செல்வம் உண்டு” என்று
பெரியோர் சொல்வர்;
கொற்றவ! உனக்கு நானும் கூறும் நல் குருவே ஆகும்;
உற்றவாறு எனக்கு நீயும் ஒரு வரம் தருக!’ என்றான்.

கற்றவர்- (நல்லாசிரியர்பக்கல்) கல்வி கற்ற மாணாக்கர்கள்,
கலைகள்யாஉம் கசடு அற கற்பித்தோர்கள் பெற்றிட – கல்விகள்
பலவற்றையும் குற்றம் நீங்க(த் தமக்கு)க் கற்றுக் கொடுத்தஅவ்வாசிரியர்கள்
பெறும்படி, கொடுக்கும் – (அவர்களுக்குக்) கொடுக்கவேண்டிய, செல்வம் –
குருதட்சிணையாகியதொருபொருள், உண்டு உள்ளது’, என்று-,பெரியோர்-
(அறிவிற்)பெரியவர்கள், சொல்வர்-; ‘கொற்றவ-வெற்றியையுடையவனே!உனக்கு
– நானும்-,கூறும் நல் குருஏ ஆகும் – (வில்வித்தையை) உபதேசித்த நல்ல
ஆசிரியனேயாவேன்: (ஆனதுபற்றி), உற்ற ஆறு – பொருந்திய
முறைமைப்படியே, எனக்கு-, நீயும்-,ஒரு வரம் தருக- (யான்)
வேண்டுவதொருவரத்தைக் கொடுக்கக்கடவை,’என்றான்- என்று (இந்திரன்)
கூறினான்;(எ-று.)

     கீழ்ஐந்தாங்கவியில் ‘அடற்படைநல்கி’என்றதனால்,இந்திரன்
அருச்சுனனுக்குக் குருவாயினான். குரு என்னும் வடசொல்லுக்கு –
(அஜ்ஞாநமாகிய மனத்தின்) இருளைப்போக்குபவனென்றுபொருள்: கு –
இருள், ரு – ஒழிப்பவன்.  கல்விக்குக் குற்றமாவது – ஐயந்திரிபுகள்;
ஐயமாவது-இதற்குப் பொருள் இதுவோ அதுவோ என்று பலபடக்கருதும்
சந்தேகம்: திரிபாவது – ஒன்றன்பொருளைவேறொன்றாகத்துணியும்
விபரீதம்.    

தந்தை சொல் மகிழ்ந்து கேட்டு, தனுவினுக்கு ஒருவன் ஆன
மைந்தனும், ‘தேவர்க்கு, ஐய! மானுடர் செய்வது உண்டோ?
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக!’ என்று அவனும் செப்ப,
இந்திரன்தானும், மீண்டும் இன்னன பகரலுற்றான்13.-தேவர்கட்குமானுடர் செய்வதொன்றில்லையாயினும்
மனத்திலுள்ளதைக்கூறுக என்று அருச்சுனன்
வினாவல்

தந்தை சொல் – பிதாவாகிய இந்திரனுடைய வார்த்தையை,
தனுவினுக்கு ஒருவன் ஆன மைந்தன்உம் – வில் வித்தையில்
ஒப்பற்றவனானகுமாரனாகியஅருச்சுனனும், கேட்டு-, மகிழ்ந்து-,’ஐய-
தந்தையே! தேவர்க்கு மானுடர் செய்வது உண்டுஓ – (மனிதர்களுக்குத்
தேவர்கள் வரங்கொடுப்பது மரபேயன்றித்) தேவர்களுக்கு மனிதர்கள்
செய்யக்கடவதொரு உதவி உள்ளதோ?  [இல்லையன்றோ](ஆயினும்),
சிந்தையில் நிகழ்ந்தது ஒன்று செப்புக-(உன்) மனத்திற் கருதிய ஒரு
காரியத்தைச்சொல்லுவாயாக’,என்று-,அவன்உம் – அவ்வருச்சுனனும்,
செப்ப – சொல்ல,-இந்திரன்தான்உம்- இந்திரனும், மீண்டுஉம் – மறுபடியும்,
இன்னன – இவ்வார்த்தைகளை,பகரல் உற்றான்- சொல்லத்
தொடங்கினான்;(எ-று.)-அவற்றைமேல் மூன்றுகவிகளாற் கூறுகின்றார்.

     தனுவினுக்கு -உருபுமயக்கம்.  செப்புகஎன்னும் வியங்கோள்
வினைமுற்றின்ஈற்றுஅகரம் தொக்கது: வியங்கோளுக்கு இவ்விகாரம்
பெரும்பாலுஞ் செய்யுட்களில் வரும்.

ஆழி நீர் அழுவத்து என்றும் உறைபவர்; ஆழியானும்,
ஊழியின் நாதன்தானும், உருப்பினும், உலப்பு இலாதோர்;
ஏழ்-இரு புவனத்து உள்ளோர் யாரையும் முதுகு காண்போர்;
கோழியான்தனக்கும் தோலா அவுணர்;-முக் கோடி உண்டால்.14.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்:
நிவாதகவசரின்சிறப்பைக் கூறி அவர்களையழிக்குமாறு
தேவேந்திரன்வரம்வேண்டுதலைத்தெரிவிக்கும்.

ஆழிநீர் அழுவத்து – கடல்நீரி னிடையிலேயுள்ள
(தோயமாபுரமென்னும்) நாட்டிலே, என்றுஉம் – எப்பொழுதும், உறைபவர் –
வாசஞ் செய்பவர்களும், ஆழியான்உம் – (அசுரர்களைஅழித்தலில்வல்ல)
சக்கராயுதத்தையுடைய திருமாலும், ஊழியின் நாதன் தான்உம் –
(எல்லோருடைய) காலத்துக்குந் தலைவனாகியயமனும், உருப்பின்உம் –
கோபித்து அழிக்கத் தொடங்கினாலும்,உலப்பு இலாதோர்-
அழிதலில்லாதவர்களும், ஏழ் இரு புவனத்து உள்ளோர் யாரைஉம் –
பதினான்குஉலகங்களிலுள்ளவ ரெல்லோரையும், முதுகு காண்போர் –
(போரிற்) புறங்காண்பவர்களுமாகிய, கோழியான் தனக்குஉம் தோலா
அவுணர் – (தேவசேனாதிபதியாகிய)கோழிக்கொடியையுடைய
சுப்பிரமணியக்கடவுளுக்குந் தோல்வியடையாத அசுரர்கள், மு கோடி –
மூன்றுகோடி பேர், உண்டு – உளர்;(எ-று.)

     எல்லாப்பிராணிகளுக்கும் அவரவர் வினைக்குஏற்பஆயுட்காலத்தை
வரையறைசெய்து முடித்தல்பற்றி யமனுக்குக் காலனென்று ஒரு பெய
ராதலால், அதன் பொருள்பற்றி, ‘ஊழியினாதன்’என்றார். இனி, சங்காரக்
கடவுளாகிய உருத்திரமூர்த்தி என்று உரைத்தால், மேற் பதினாறாங்கவியில்
“கற்றவர்வணக்கினாற்குங்கடக்கரும் வலியின் மிக்கோர்” என்பதனோடு
கூறியது கூறலா மென அறிக.  ஆழி என்னுஞ் சொல்லுக்கு –
கடலைக்குறிக்கும்போது,ஆழ்ந்துள்ளது அல்லது (உலகங்களைப்
பிரளயகாலத்தில்) அழிப்பது என்று பொருள்;சக்கரத்தைக் குறிக்கும் போது,
வட்டவடிவாகவுள்ளது அல்லது (பகைவர்களை)அழிப்பது என்று பொருள்:
அழுவம் – நீர்ப்பரப்பு:இங்கே, கடலிடை நாடு.  திருமாலினது
சக்கரத்துக்குச் சுதரிசனமென்று பெயர். உம்மைகள் ஆறனுள், முதலாவதும்
ஐந்தாவதும் – முற்றுப்பொருளன;மற்றவை – உயர்வுசிறப்பு. இரண்டாவதும்,
மூன்றாவதும்-உயர்வுசிறப்புப்பொருளோடு எண்ணுப்பொருளையும்உணர்த்தின:
முதுகு காணுதல்-புறங்காட்டிப் பின்னிடைந்தோடும்படி வெல்லுதல்.

தவாத போர் வலியின் மிக்க தவத்தினர்; சாபம் வல்லோர்;
சுவாதமே வீசி, எல்லா உலகையும் துளக்குகிற்போர்;
விவாதமே விளைக்கும் சொல்லர்; வெகுளியே
விளையும் நெஞ்சர்;-
நிவாத கவசத்தர் என்னும் பெயருடையக் கொடிய நீசர்.

நிவாதகவசத்தர் என்னும் பெயர் உடை – நிவாதகவசர்
என்னும் பேரையுடைய, கொடிய – கொடுந்தன்மையுள்ள, நீசர்-கீழோராகிய
அவ்வசுரர்கள்,-தவாதபோர் வலியின் – அழியாத யுத்த சாமர்த்தியத்துடனே,
மிக்க தவத்தினர் – மிகுந்த தவவலிமையுடையவர்கள்; சாபம் வல்லோர் –
வில்வித்தையில் வல்லவர்கள்;சுவாதம்ஏ வீசி – மூச்சுக்காற்றையே
பெரிதாகவிட்டு, எல்லா உலகைஉம் – உலகங்களெல்லாவற்றையும்,
துளக்குகிற்போர்-நடுங்கச் செய்யவல்லவர்கள்; விவாதம்ஏ விளைக்கும்சொல்லர்
– போரையேயுண்டாக்குகின்ற கொடுஞ்சொற்களையுடையவர்கள்;வெகுளிஏ
விளையும்நெஞ்சர் – கோபமே மேன்மேலுண்டாகின்ற மனத்தையுடையவர்கள்;
(எ-று.)

     தவாத என்னும்பெயரெச்சத்தில், தபு என்பதன் மரூஉவாகிய தவு –
பகுதி.  போர்வலி – போரில்வல்லமை.  சுவாதம் – ஸ்வாஸம்;வடசொல்.
விவாதம்-சொற்கலகம், தருக்கம், வழக்காடுதல்.

மற்று அவர் எனக்கு நாளும் வழிப்பகை
ஆகி நிற்போர்;
கல் தவர் வணக்கினாற்கும் கடக்க அரும்
வலியின் மிக்கோர்;
செற்றிட, நின்னை அன்றி, செகத்தினில் சிலர்
வேறு உண்டோ?17
வெற்றி வெஞ் சிலை கொள் வீர! இவ் வரம்
வேண்டிற்று’ என்றான்.

மற்று- மேலும், அவர் – அவ்வசுரர்கள், எனக்கு-,நாள்உம்
– தினந்தோறும், வழி பகை ஆகி நிற்போர்-பரம்பரையாக (த்தொன்று
தொட்டு)ப் பகைவர்களாய் நிற்பவர்கள்;(அன்றியும்), கல் தவர்
வணக்கினாற்குஉம்கடக்க அரும் வலியின் மிக்கோர் – மகாமேருமலையை
வில்லாக வளைத்துக்கையிற்கொண்ட (அழித்தற்றொழிற்கடவுளாகிய)
சிவபிரானுக்கும் வெல்லுதற்கு அருமையான வலிமையில் மிகுந்தவர்கள்;
(அத்தன்மையரானவர்களை),செற்றிட – அழித்துவிடுதற்கு, நின்னைஅன்றி-
உன்னையேயல்லாமல்,செகத்தினில் – உலகத்தில், வேறு சிலர் உண்டுஓ-
வேறாகியசிலபேர் (வல்லவர்) உளரோ?  [எவருமில்லை];வெற்றி வெம்
சிலைகொள் வீர – ஜயத்தைத் தருகின்ற (பகைவர்க்குப்) பயங்கரமான
காண்டீவ வில்லைக்(கையிலே) கொண்ட வீரனே!  இ வரம் வேண்டிற்று –
(அவ்வசுரர்களைநாசஞ் செய்தலாகிய)  இந்தவரமே (யான் உன்னைத்
தரும்படி) வேண்டியது, என்றான்- என்று இந்திரன் கூறினான்;(எ-று.)

     மற்று – வினைமாற்று;அசையாகவுங் கொள்ளலாம். நாளும், உம்மை
– தொறுப்பொருளது.  கல் – அதன் மயமான மலைக்குக்கருவியாகுபெயர்.
கடக்கரு – வினையெச்சவீறு,தொகுத்தல்.  “ஈறுபோதல்” [நன்-பத-9]
என்ற இலேசினால்,அருமையென்னும் பண்புப்பெயர் ஈற்று ஐகாரம்மாத்திரங்
கெட்டு ‘அரும்’என நின்றது.

     மேருகிரிபரமசிவனுக்கு வில்லானது, திரிபுரசங்காரகாலத்தில்:
தாரகாசுரனது புத்திரர்களாகிய வித்யுந்மாலி, தாரகாக்ஷன், கமலா
க்ஷன் என்னும் மூவரும்மிக்க தவஞ்செய்து, மயனென்பவனாற்சுவர்க்க
மத்திய பாதாள மென்னும் மூன்றிடத்திலும் முறையே பசும்பொன்
வெண்பொன் கரும்பொன்களால் அரண்வகுக்கப்பட்டு ஆகாயமார்க்கத்திற்
சஞ்சரிக்குந் தன்மையையுடைய மூன்று பட்டணங்களைப்பெற்று,மற்றும் பல
அசுரர்களோடும் அந்நகரங்களுடனே தாம்நினைத்தஇடங்களிற்
பறந்துசென்று பல இடங்களையும்பாழாக்கி வருகையில், அத்துன்பத்தைப்
பொறுக்கமாட்டாத தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளால்,
சிவபெருமான், பூமியைத் தேராகவும், சந்திரசூரியர்களைத்
தேர்ச்சக்கரங்களாகவும், நான்குவேதங்களைக்குதிரைகளாகவும், பிரமனைச்
சாரதியாகவும், மகா மேருவை வில்லாகவும், ஆதிசேஷனை நாணாகவும்,
விஷ்ணுவை வாயுவாகிய சிறகமைந்து அக்கினியை முனையாகவுடைய
அம்பாகவும், மற்றைத் தேவர்களைப்பிற போர்க்கருவிகளாகவும்
அமைத்துக்கொண்டு, யுத்தசன்னத்தராகிச் சென்று போர்செய்ய யத்தனித்து,
புன்சிரிப்புச்செய்து அசுரரனைவரையும்பட்டணங்களோடு எரித்தருளின
ரென்பது, புராணகதை.

செரு’ என்ற மாற்றம் கேட்டு, சிந்தையில் உவகை பொங்க,
மரு ஒன்றும் அலங்கல் மார்பும், வாகு பூதரமும், பூரித்து,
உரு ஒன்றும் மதனை ஒப்பான், ஒருப்பட்டான்;
உரைப்பது என்னோ?
திரு ஒன்றும் வண்மை வீரன் மறுக்குமோ, தேவர் கேட்டால்?17.-அருச்சுனன்இந்திரன்வேண்டுகோட்கு
உடன்படுதல்.

உருஒன்றும் மதனைஒப்பான்-ரூபம் பொருந்திய மன்மதனை
ஒப்பவனாகியஅருச்சுனன், செரு என்ற மாற்றம் கேட்டு-போர் என்ற
வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், சிந்தையில் உவகை பொங்க – மனத்திற்
களிப்பு மிக, மரு ஒன்றும் அலங்கல்-வாசனைபொருந்திய பூமாலையையுடைய,
மார்புஉம் – தனதுமார்பும், வாகு பூதரம்உம் – மலைகள்போன்றதோள்களும்,
பூரித்து-பருக்கப்பெற்று, ஒருப்பட்டான் – (அவ்வசுர வதத்திற்குச்)
சம்மதித்தான்; உரைப்பது என்னோ – சொல்லவேண்டுவதென்ன? திரு ஒன்றும்
– ஜயலக்ஷ்மி கூடியிருக்கப்பெற்ற, வண்மை – ஈகைக்குணத்தையுடைய, வீரன் –
மகாவீரனாகஉள்ளவன், தேவர் கேட்டால் – (தன்னினுஞ் சிறந்த) தேவர்கள்
(வரமொன்று) வேண்டினால்,மறுக்கும்ஓ – (மாட்டேனென்று)
தடுத்துப்பேசுவானோ? [பேசானென்றபடி];(எ-று.)

     சுத்தவீரனாதலால்,யுத்தமென்றவளவில் அருச்சுனனுக்கு மனத்தில்
மகிழ்ச்சி கிளர்ந்தது.  மார்புந்தோளும் பூரித்தால், மகிழ்ச்சி பற்றிய
மெய்ப்பாடு.  ‘மருவொன்றுமலங்கல்’என்பதை வாகுவுக்குங் கூட்டுக.
அருச்சுனன் அசுரர்களைஅழித்தற்கு அமைந்தான் என்னும் பொருளை
‘திருவொன்றும்வண்மை வீரன் மறுக்குமோ தேவர் கேட்டால்’என்பது
சமர்த்தித்து நிற்றலால்,  தொடர்நிலைச்செய்யுட்குறியணி: சிறப்புப்பொருளும்
பொதுப்பொருளும் ஆகாததால், இது- வேற்றுப்பொருள்வைப்பணி யன்று.
வாகுபூதரம் என்ற தொடரை-தோள்களாகிய மலைகள்என உருவகமாக்கி
உரைத்தற்கு இங்கே இயைபின்று.  (மேலுங்கீழும் வளர்ந்துநின்று) பூமியைத்
தாங்குவதுபற்றி, பூதரம் என்று மலைக்குக்காரணப்பெயர்.  ‘உருவொன்றும்
மதன்’என்றது – பரமசிவனது நெற்றிக்கண்ணின் நெருப்பினால்உடம்பு
எரிக்கப்பட்டு அழிந்து அனங்கனாதற்குமுன்னேஅங்கத்தோடு கூடியுள்ள
மன்மதனை;பின்பு அங்கத்தோடுகூடிவந்த மன்மத னென்றால்,இல்
பொருளுவமை;இனி உருஒன்றுஉம் மதனைஒப்பான் என்பதற்கு –
ரூபமொன்று மாத்திரத்தால் மன்மதனையொப்பவன் என்று உரைத்து,
வில்லின்தொழிலில் அவனினும் மிக்கவனெனக் கருத்துக்கொள்ளுதலும்
அமையும்.  மதன்=மதநன் அல்லது மந்மதன்.  ஒருப்படுதல் – உடன்படுதல்.
வண்மையாவது – ஏற்றார்க்குமாற்றாதுவரையறையின்றிக் கொடுத்தல்.

     ஒருகாலத்தில்திருக்கைலாயத்திற் பரமசிவனார்சனகர் முதலிய
நால்வர்க்கு யோகநிலைமையைஉணர்த்துதலின் நிமித்தம் தாம்
யோகஞ்செய்துகொண்டிருந்தார்.  அப்போது பிரமனேவலால் மன்மதன்
மலரம்புகளைஎய்து அக்கடவுளின் தவத்தைக் கெடுக்கலுற்றான்.
அக்கடவுள் சினந்து நெற்றிக்கண்ணைவிழிக்க, அந்த மன்மதன் அதன்
நெருப்புக்கு இரையாய் உடம்பு எரிந்து சாம்பரானானென்பதும்: உடனே
மன்மதன் மனைவியாகியரதீதேவி தன் கணவன் எரிக்கப்பட்டதனால்
மிகவருந்திச் சிவபிரானைஅடைந்து பிரார்த்திக்க, அவர் அவளுக்குமாத்திரம்
ரூபமுடையவனாகவும்மற்றையோர்க்கு ரூபமில்லாதவனாகவும்இருக்கும்படி
அருள்செய்தனரென்பதும் புராண கதைகள்

காற்று எனக் கடிய, வேகக் கனல் எனக் கொடிய, என்றும்
மேல் திசை எல்லை எல்லாம் வீதிபோய் ஒல்லை மீள்வ,
கூற்றமும் முகிலும் உட்கக் குமுறும் வெங்
குரலும், மேன்மேல்
சீற்றமும் திறலும் மிக்க, தீக் கதி செலாத, தூய,18.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:அருச்சுனனுக்குப்
போர்க்குவேண்டுவன தந்து இந்திரன்
விடைகொடுத்துப் பொருதற்கு அனுப்புதலைக்கூறும்

காற்று என கடிய – காற்றுப்போல வேகமுள்ளவையும், வேகம்
கனல் என கொடிய – உக்கிரமாக அக்கினிபோல(ப் பகைவர்களை
யழிக்குங்) கொடுந்தன்மையுள்ளவையும், என்றுஉம் – எப்பொழுதும், மேல்
திசை எல்லைஎல்லாம் – ஆகாயமாகிய திக்கின் இடம்முழுவதிலும்,
வீதிபோய் – ஒழுங்காகச்சென்று, ஒல்லை-விரைவில்,மீள்வ –
திரும்புவனவும், கூற்றம்உம் முகில்உம் உட்ககுமுறும் வெம் குரல்உம் –
(யாவர்க்கும் பயங்கரனான)யமனும் (இடியிடிக்கின்ற) மேகமும் அஞ்சும்படி
கனைக்கின்றகொடிய கண்டத் தொனியிலும், மெல்மேல் சீற்றம்உம்-
மேலேமேலே அதிகப்படுகின்ற கோபத்திலும், திறல்உம் – பலத்திலும், மிக்க-
மிகுந்துள்ள வையும், தீ கதிசெலாத – கெட்டநடை நடவாதனவும், தூய-
தூய்மையுள்ளவையுமாகிய,-(எ-று.)-‘பரி’என மேலைக்கவியோடுஇயையும்.

     கடிய, கொடிய,தூய என்னும் பலவின்பால் வினையாலணையும்பெயர்கள்,
‘பரி’ என்னும் பால்பகா அஃறிணைப்பெயருக்குவிசேஷணமாம். வென்று எனப்
பிரித்து – (போமிடங்களிலெல்லாம்) வெற்றிகொண்டு எனவுமாம். பத்துத்
திக்குக்களுள் ஒன்றாதலால், வானத்தை ‘மேற்றிசை’என்றார். மேற்றிசை
எல்லை எல்லாம் வீதி போய் – (இந்திரன் திக்காகிய கிழக்கிலிருந்து)
மேற்குத்திக்கினிடம் முழுவதிலும் ஆகாயவீதியிலே நேராக ஓடி என்றும்
உரைக்கலாம். ஒல்லை- விரைவுப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;
வல்லை,வல்லே என்பனவும் இவ்வாறே.  கூற்றம், அம்-சாரியை.  கூற்று –
(பிராணிகளின் உடம்பையும் உயிரையும் வேறுபிரித்துக்) கூறுபடுத்துங்
கடவுள்.  ‘தேவர்களைஇருதிணைகளாலுங்கூறலாம்’ஆதலின், ‘கூற்றம்’
என்றான். உத்தம அச்சுவலக்ஷணம் முழுவதும் அமைந்தன வென்பார்,
‘தூய’என்றார்

ஆயிரம் பத்து வெம் போர் அடல் பரி பூண்ட தேரும்,
மா இருங் கலையின் மிக்க மாதலிதனையும் நல்கி,
காய் இருங் கிரணச் செம் பொற் கவசமும்
கொடுத்து, பின்னர்,
வேய் இருந் தெரியலாற்குச் சுரபதி விடையும் ஈந்தான்.

வெம்போர் – கொடுமையான யுத்தத்திற்குஉரிய, அடல் –
வலிமையையுடைய, ஆயிரம் பத்து பரி – பதினாயிரம்குதிரைகளை,பூண்ட,
– பூட்டியுள்ள, தேர்உம் – (தனது) இரதத்தையும் மா இரு கலையில்மிக்க –
மிகவும் பெரிய குதிரை நூலுணர்ச்சியிற் சிறந்த, மாதலிதனைஉம்- மாதலி
என்னும் (தனது) தேர்ப்பாகனையும்நல்கி – கொடுத்து,-காய்இரு கிரணம் –
சுவலிக்கின்ற மிக்க ஒளியினையுடைய,செம் பொன் கவசம்உம் – சிவந்த
பொன்னினாலாகியதொருகவசத்தையும், கொடுத்து-,பின்னர் – பின்பு,
சுரபதி – தேவேந்திரன், வேய் இரு தெரியலாற்கு – அணிந்த பெரிய
(கற்பகப் பூ) மாலையையுடையஅருச்சுனனுக்கு, விடைஉம் ஈந்தான்-
(போருக்குச் செல்லுதற்கு) உத்தரவையுங் கொடுத்தான்;

     போர்க்குச்செல்ல, தேவேந்திரன், அருச்சுனனுக்குத் தேர் முதலியன
கொடுத்து விடையுங் கொடுத்தானென்க. “விவ்விரவாதவாசத் தாமமும்
விழைந்து சூட்டி”என்று கீழ்க்கூறியதற்கு ஏற்ப, ‘வேயிருந்தெரியலான்’
என்றார்;அன்றியும் போருக்கு உரிய தும்பைப்பூமாலையைஇப்பொழுது
அணிந்துள்ளவ னென்றுமாம்.  தெரியல் – விளங்குவது: மாலை. கலை-
குதிரையோட்டுங்கல்வி.  கிரணரத்நகவசம் என்றும் பாடம். 

விடை’ என, தொழுது போந்து, வெஞ் சிலை
வினோத வீரன்,
சுடு சரத் தூணி கொற்றப் புயத்தினில் துதையத் தூக்கி,
இடு மணிக் கவசம் மெய்யில் எழில் உறப்
புனைந்து, தன்னை,
திடமுடைச் சிங்கம் அன்னான், செருத் தொழில்
கோலம் செய்தான்.20.-விடைபெற்றஅருச்சுனன் போர்க்கோலம் புனைதல்.

திடம் உடை சிங்கம் அன்னான்-வலிமையையுடையஆண்
சிங்கத்தை யொத்தவனாகிய,வெம் சிலைவினோதம்வீரன் – கொடிய
வில்லின் தொழிலையேபொழுதுபோக்காகவுடைய வீரனாகியஅருச்சுனன்,
விடை என-(உனக்கு) நியமனம் என்று (இந்திரன் சொல்லி) விடுப்ப,
தொழுது-அஞ்சலிசெய்து, போந்து-புறப்பட்டு [சபையைவிட்டுவெளிவந்து],
சுடு சரம்தூணி-(பகைவர்களை)அழிக்கின்ற அம்புகளையுடைய
தூணீரங்களை,கொற்றம் புயத்தினில்-வெற்றியையுடைய தோள்களிலே,
துதைய தூக்கி-அழுந்தக் கட்டி,-இடுமணி கவசம்-பதித்துள்ள
இரத்தினங்களையுடையகவசத்தை, மெய்யில்-உடம்பிலே, எழில்உற-
அழகுமிக, புனைந்து-தரித்து,-(இவ்வாறு),தன்னை-,செருதொழில் கோலம்
செய்தான்-போர்த்தொழிலுக்கு உரிய அலங்காரத்தைச் செய்து கொண்டான்;
(எ-று.)

     அருச்சுனன்சவ்வியசாசி யாதலால், ‘தூணீரங்களைத்தோள்களிற்கட்டி’,
என்றது.  சுடு சரம் – நெருப்பில்வைத்துக் காய்ச்சி வடித்துக் கூர்செய்த
அம்பு என்றுமாம்.  தூணி – பாணப்புட்டில்.  தூக்கி – தொங்கவிட்டு.
சிங்கம் நடை வலிமை நோக்குத் தைரிய காம்பீரியங்களால் உவமை

மோது போர் தனக்கு வேண்டும் முரண் படை
பலவும் கொள்ளா,
கோதை வில் தடக் கை வீரன் கொடி மணித்
தேர்மேல் கொண்டு,
‘மாதலிப் பெயராய்! அந்த வஞ்சர் எத் திசையர்?’
என்றான்;
சூதனும், அவனுக்கு, அன்னோர் இயல்பு எலாம்
தோன்றச் சொல்வான்:21.-அருச்சுனன்நிவாதகவசரைக்குறித்துவினவ, மாதலி
அவர்களியல்பைக்கூறலுறுதல்

கோதை – நாணியையுடைய, வில் – காண்டீவத்தையேந்திய,
தட – பெரிய, கை – கையையுடைய, வீரன்-அருச்சுனன், மோது
போர்தனக்கு வேண்டும் – (பகைவர்களைத்)தாக்குகின்ற யுத்தத்திற்கு
அவசியமான, முரண் படை பலஉம் – வலிமையையுடைய ஆயுதங்கள்
பலவற்றையும், கொள்ளா-எடுத்துக்கொண்டு,-கொடிமணி தேர் மேல்
கொண்டு-துவசத்தையும் மணிகளையுமுடைய(அவ்விந்திரனது)
தேரின்மேலேறிக்கொண்டு, (சாரதியை நோக்கி), ‘மாதலிபெயராய் –
மாதலியென்னும் பேருள்ளவனே!  அந்த வஞ்சர் – வஞ்சனையையுடைய
அந்த நிவாதகவசர்கள், எ திசையர்-எந்தத்திக்கிலே யுள்ளவர்கள்?’
என்றான்-என்றுவினாவினான்: சூதன்உம் – அத்தேர்ப்பாகனும், அவனுக்கு
– அவ்வருச்சுனனுக்கு, அன்னோர்இயல்பு எலாம் – அவ்வசுரர்களுடைய
(இருப்பிடம் முதலிய) தன்மைகளையெல்லாம்,தோன்ற – விளங்க,
சொல்வான் – சொல்வானானான்,  (எ – று.)-அதுமேற்கவியிற் காண்க.

     கோதை -கைக்கவசமுமாம்; “பூப்புனைமாலையும்மாலைபுனை
மாதரும், தோற்புனைவின்னாண்டொடர்கைக் கட்டியுங், கோச்சேரன்பெயிர்
மயிர் காற்றுங் கோதை”என்பது திவாகரமாதலின்.  மணி – அடிக்கும்மணி;
கண்டை: இது – அழகிற்காகவும், வெற்றியை விளக்குதற்காகவுந் தேரிற்
கட்டப்படும்;இனி மணித்தேர்-இரத்தினங்களைப்பதித்ததேர் எனவும்,
உறுதியமைந்த தேர் எனவுமாம்.  சூதன் – ஸூதன்;வடசொல்.
எத்திசைக்கேயென்றான்என்று பிரதிபேதம்.

தோயமாபுரம் என்று உண்டு, தொடு கடல் அழுவத்து ஒன்று;
மாய மா புரமே ஒக்கும்; அப் புரம் அதனில் வாழ்வோர்
தீயவர்’ என்று செப்பி, சித்திரசேனன்தன்னை,
‘தூய நல் நெறி காட்டு’ என்று, சூதன் தேர் தூண்டும் எல்லை,22.-நிவாதகவசரின்இயல்பைக்கூறிவிட்டு மாதலி
தேர்தூண்டுதல்

இதுவும், மேற்கவியும் – ஒருதொடர்.

     (இ-ள்.)’தொடுகடல் அழுவத்து-(சகரசக்கரவர்த்தியினது
புத்திரர்களால்) தோண்டப்பட்ட கீழ்கடலினது பரப்பிலே, தோயமாபுரம்
என்று – (நீரிடையேயுள்ள பெருநகரமாதலால்) தோயமாபுரமென்று பேர்
கூறப்பட்டு, ஒன்று – ஒரு நகரம், உண்டு – உளது;(அது), மாயம் மா புரம்
ஏ ஒக்கும்-வஞ்சனையமைந்ததொருபெரிய பட்டணத்தையே ஒக்கும்;அ
புரம் அதனில் வாழ்வோர்-அந்நகரத்தில் வாழ்பவர்கள், தீயவர் –
கொடுந்தன்மை யுடையவர்கள்,’என்று செப்பி-என்று (அருச்சுனனுக்குச்)
சொல்லி, சித்திரசேனன் தன்னை-சித்திரசேனனென்பானொருகந்தருவனை
நோக்கி, தூய நல் நெறி காட்டு என்று-குற்றமில்லாத நல்ல வழியைக்
காண்பிப்பா யென்றுஞ்சொல்லி, சூதன்-மாதலி, தேர் தூண்டும் எல்லை-
தேரைச் செலுத்துமளவில்,-(எ-று.)-“வானவமகளிரெல்லாம் நக்கார்”என
மேற்கவியில் முடியும்.

     சூரியகுலத்தில்தோன்றிய சகரனென்னும் அரசன் தனது
மூத்தமனைவியின் மகனும் மிகுந்த துர்க்குணமுடையவனுமாகிய
அஸமஞ்சனென்பவனைக்காட்டுக்குத் துரத்திவிட்டு அவன் மகனாகிய
அம்சுமான் என்பவனோடும்தனது இளையமனைவியின்மைந்தர்
அறுபதினாயிரவரோடும்அரசாண்டு வருகையில் அசுவமேதயாகஞ்செய்யத்
தொடங்கிப் பூமிப்பிர தக்ஷிணத்தின் பொருட்டு நல்லிலக்கணமமைந்தவொரு
குதிரையைச் செலுத்த, அதனைஇந்திரன் மாயையாற்கவர்ந்து
பாதாளலோகத்தில் தவஞ்செய்துகொண்டிருந்த கபிலமகாமுனிவரது புறத்திலே
ஒளித்துவைக்க, அது தேடும்பொருட்டுச் சென்ற சகரகுமாரர்கள்
மண்ணுலகத்தும் விண்ணுலகத்துங் காணாமற்கலங்கிப் பூமியை
வடகீழ்த்திசையில் நூறு யோசனைவிஸ்தாரம் தமது கைந்நகங்களால்
தோண்டிப் பள்ளமாக்கி அதன் வழியாய்ப் பாதாளஞ் சென்றனரென்றும்,
அவர்கள் தோண்டிய அப்பள்ளமேநீரால்நிறைந்து கடலாகிச் சாகரமெனப்
பெயர் பெற்றதென்றுங் கூறப்படுங் கதையையுட்கொண்டு, ‘தொடுகடல்’
எனப்பட்டது.  சித்திரசேனன் – அருச்சுனனுக்குத் தேவலோகத்திலே
சங்கீதவித்தை பயிற்றுவித்த ஆசிரியன். 

மொய் திறல் கடவுளோர் முப்பத்து முக்கோடியாலும்
செய்து அமர் தொலைக்க ஒண்ணாத் தெயித்தியர்
சேனைதன்னை,
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து!’ என்று நக்கார்-
மை தவழ் கருங் கண், செவ் வாய், வானவர்
மகளிர் எல்லாம்.23.-‘தேவர்களால்வெல்லமுடியாத அசுரரை ஒருநரன்
வெல்லவல்லனோ?’என்று வானவமகளிர் சிரித்தல்.

மொய்திறல் – மிகுந்த வலிமையையுடைய, கடவுளோர்
முப்பத்துமுக்கோடியால்உம்-முப்பத்துமுக்கோடி தேவர்களாலும், அமர்செய்து
தொலைக்கஒண்ணா-போர்செய்துஅழிக்க முடியாத, தெயித்தியர் சேனை
தன்னை-அசுரர்களுடையசேனையை,ஒரு மனிதன் – (சேனாபலமில்லாமல்
தனியனான)மனிதனொருவன்,எய்து – அம்பெய்து, வெல்வது-சயிக்க
முயல்வது, ஏழைமைத்து-அறிவில்லாமையையுடையது,’என்று – என்று
சொல்லி, மைதவழ் கரு கண் – மைபொருந்திய (இயற்கையிற்) கருமையான
கண்களையும்,செவ் வாய் – சிவந்த வாயையுமுடைய, வானவ(ர்) மகளிர்
எல்லாம்-தேவமாதர்களெல்லாரும், நக்கார்-சிரித்தார்கள்;(எ-று.)

     முப்பத்துமுக்கோடி – மூன்றாகியபத்தும், அதனோடுகூடிய
மூன்றுமாகிய கோடியென்க.  முப்பத்து முக்கோடியாவார்-ஆதித்தியர்
பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும்,வசுக்கள் எண்மரும்,
அசுவினீதேவர் இருவரும் ஆகிய முப்பத்துமூவரையுந் தலைவராகக்
கொண்டு அத்தனைகோடியாக உள்ளவர்கள்.  தெயித்தியர் – தைத்யர்
என்பதன் விகாரம்: (காசியபமுனிவரது மனைவிமார்களுள்)திதி என்பவளது
மக்களென்று பொருள்.  ஏழைமைத்து – ஒன்றன்பாற் குறிப்புமுற்று.  மை –
அஞ்சனம்.  கருங்கட் செவ்வாய் – முரண்டொடை. 

மங்கையர் வாய்மை கேட்டு, மணிக் குறு முறுவல் செய்து,
கங்கைஅம் பழன நாடன் கடி மதில் வாயில் செல்ல,
அங்கு அவன் தன்னைக் கண்ட அணி கழல்
அமரர் எல்லாம்,
‘மங்குல் வாகனன்!’ என்று எண்ணி, கதுமென
வந்து, தொக்கார்.24.-கோபுரவாயிலில்அருச்சுனன் வருகையில்
தேவேந்திரனென்றுதேவர்கள் திரளுதல்.

கங்கை அம் பழனம் நாடன் – கங்காநதியின் நீர் பாய்கின்ற
கழனிகளையுடையகுருநாட்டையுடையவனாகியஅருச்சுனன்,-மங்கையர்
வாய்மை கேட்டு-(அவ்வாறு சொல்லிச் சிரித்த) தேவஸ்திரீகளின்
வார்த்தையைச் செவியுற்று, மணி குறு முறுவல்செய்து – அழகிய
புன்சிரிப்பைச் செய்து, கடி மதில் வாயில் செல்ல –
காவலையுடையமதிலினிடையேயுள்ள கோபுரத்துவாரத்திற்
சென்றுசேர,-அங்குஅவன் தன்னைகண்ட-அவ்விடத்திலே அவனைப்
பார்த்த, அணி கழல் அமரர் எல்லாம் – (காலில்)தரித்த வீரக்கழலையுடைய
தேவர்களெல்லோரும், மங்குல் வாகனன் என்று எண்ணி-(அவனை)
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரனென்றே நினைத்து,கதுமென வந்து
தொக்கார் – விரைவிலே (அருகில்) வந்து கூடினார்கள்;(எ-று.)

     வடிவொப்பமையினாலும்,மாதலி தேரூர அவ்விந்திரன் தேர் மீது
செல்லுதலாலும் தேவர்கள் மங்குல்வாகனனென்று கருதினர்: இது,
மயக்கவணி. கங்கையம்பழனம், அம்-நீர்;இனி, கங்கை பாயப்பெற்ற
அழகிய கழனி யென்றுமாம்.  மங்கையர்-இளம்பருவமுடைய மகளிர்:
மங்கைப் பருவத்துக்கு வயதெல்லை,பன்னிரண்டு முதற் பதின்மூன்றளவும்.
வாய் – அதிலிருந்து வருகிற சொல்லுக்கு இடவாகுபெயர்:மை – பகுதிப்
பொளுணர்த்தும் விகுதி.  முறுவல் – சிரிப்பு: தன்னைப்பிறர் இகழ்ந்தமை
காரணமாக உண்டாயிற்று. மணிக் குறுமுறுவல் செய்து – முத்துப்போலப்
புன்சிரிப்புச்செய்து என்றுமாம்;சிரிக்குங்காலத்துப் பற்களின் வெள்ளொளி
சிறிது வெளித் தோன்றுவதால்.  குருநாட்டின் எல்லை,கங்காநதி
வரையிலும்போலும்.  கடி – பலபொருளுணர்த்தும் உரிச்சொல்.  இல்வாய்
என்பது வாயில் என மாறியது: இலக்கணப் போலி. இங்கே, நகரத்துவாயில்.
அணி கழல் – அழகுசெய்யுங்கழலெனவுமாம். கழல் – வீரர்காலணி:
இந்திரனுக்கு மேகம் வாகனமென்பது, கவிமரபு.  கதுமென –
விரைவுக்குறிப்பு.   

கார்க் கோல மேனியானைக் கண்ட பின், ஐயம் நீங்கி,
‘போர்க்கோலம் இவனுக்கு எவ்வாறு இசைந்தது? புகறி’ என்று,
தேர்க்கோலம் செய்வான்தன்னைச் செப்பினர்;
அவனும், போற்றி,
‘வார்க் கோல புரத்து வைகும் அவுணரை
வதைத்தற்கு’ என்றான்.25.-தேவர்கள்வினாவ,அருச்சுனன் போர்க்கோலங்
கொண்டகாரணத்தை மாதலி கூறுதல்

(அங்ஙனம்வந்து தொக்க தேவர்கள்),-கார்கோலம்
மேனியானை- காளமேகம்போன்ற அழகிய திருமேனிநிறத்தையுடைய
அருச்சுனனை,கண்ட பின் – (அருகிற்) பார்த்தபின்பு, ஐயம் நீங்கி –
(இந்திரனோஎன்று கீழ் நிகழ்ந்த) சந்தேகம் ஒழிந்து, ‘இவனுக்கு-
இவ்வருச்சுனனுக்கு, போர் கோலம் – யுத்தத்திற்கு உரிய அலங்காரம், எ
ஆறு இசைந்தது-யாது காரணமாகப் பொருந்திற்று? புகறி – சொல்வாய்’,
என்று-,தேர் கோலம் செய்வான்தன்னை- தேருக்கு உரிய அலங்காரத்தைச்
செய்பவனாகியமாதலியைநோக்கி, செப்பினர் – வினாவினார்கள்;அவன்உம் –
அந்த மாதலியும், போற்றி – (அருச்சுனனது சிறப்பை யெடுத்துப்) புகழ்ந்து,
வார் கோலம் புரத்து வைகும் அவுணரை வதைத்தற்கு என்றான் –
நீரிடையேயுள்ளஅழகிய தோயமாபுரத்தில் வாழ்கின்ற
அசுரர்களைக்கொல்லுதற்பொருட்டு (அமைந்தது) என்று கூறினான்;(எ-று.)

     “சேயிருவிசும்பிடைத்திரியுஞ்சாரணர், நாயகனிவன்கொலென்றயிர்த்து
நாட்டமோ, ராயிர மில்லையென்றைய நீங்கினார்” என்றார் கம்பராமாணத்தும்.
போற்றி-தேவர்களைவணங்கி என்றுமாம். தேர் கோலம் செய்வான் – தான்
முன்னிடத்திலே சாரதியாக வீற்றிருத்தலால் தேருக்கு அழகுசெய்து
நிற்பவனென்றுமாம்

என்று, அவன் உரைத்த மாற்றம் இன்புறக் கேட்டு, நெஞ்சில்
துன்றிய உவகை தூண்ட, சுருதியால் ஆசி சொல்லி,
‘வென்று மீள்க!’ என்று வாழ்த்தி, விரைவினில் வீரன்தன்னை,
‘சென்றிடுக!’ என்று, தேவர் தத்தமில் சிறப்பும் ஈந்தார்.26.-பகையைவிரைவில்வென்று மீளுமாறு தேவர்கள்
அருச்சுனனைவாழ்த்திச் சன்மானித்து அனுப்புதல்.

தேவர்-தேவர்கள்,-அவன் – மாதலி, என்று உரைத்த
மாற்றம் – இவ்வாறு சொன்ன வார்த்தையை, இன்புஉற – (செவிக்கு) இன்பம்
மிக, கேட்டு-,-நெஞ்சில்துன்றிய உவகை தூண்ட – மனத்திலே மிகுந்த
மகிழ்ச்சி தூண்டுதலினால்,சுருதியால் ஆசி சொல்லி – வேதமந்திரங்களைக்
கொண்டு (அருச்சுனனுக்கு) ஆசீர்வாதங்களைச்சொல்லி, வென்று மீள்க
என்று வாழ்த்தி – (அசுரர்களைச்)சயித்துத் திரும்பிவருவாயாக என்று
வாழ்த்துச் சொல்லி, வீரன் தன்னை- வீரனாகியஅவனை,விரைவினில்
சென்றிடுக என்று – துரிதத்திற் புறப்பட்டுப் போவாயாக என்றுஞ் சொல்லி,
தத்தமில் சிறப்புஉம் ஈந்தார் – தங்கள் தங்களுக்கு இயன்றவளவிற்
சன்மானங்கள் பலவற்றையும் (அவனுக்குச்) செய்தார்கள்;(எ-று.)

     தம்பகைவர்களைவெல்லச் செல்லுகிறானென்றதனால்,நெஞ்சில்
களிப்பு நிறைந்தது.  ‘தேவதத்தமுஞ்சிறப்பினீந்தார்’என்னும் பாடத்துக்கு-
தேவதத்தமென்னுஞ் சங்கத்தையும் வெற்றிச் சிறப்புக்குத்
துணைக்கருவியாம்படிதந்தார்கள் என்று பொருள்: இது,
காண்டவதகனகாலத்து அக்கினி கொடுத்தது என்றலும் உண்டு

சம்புவன், சம்புமாலி, எனும் பெயர்த் தனுசர்தம்மை
உம்பர்கோன் வதைத்த அந்நாள் ஊர்ந்தது, எவ்
உலகும் ஏத்தும்
தும்பைஅம் சடையான் வெற்பைத் துளக்கிய சூரன் மாள,
விம்ப வார் சிலை இராமன் வென்ற நாள் ஊர்ந்தது, இத் தேர்.27.-இதுவும்மேற்கவியும் – ஒருதொடர்:தேவர்கள்
கூறுவது.

ஆதலால் இத் தேர்மேல் கொண்டு, அடல்
புனை அவுணருக்குப்
பேதியாக் கவசம் பெற்று, பிறங்கு பொன்
முடியும் பெற்றாய்;
கோதிலாய்! எங்கள் நெஞ்சில் குறை எலாம்
தீர்த்தி!’ என்றார்-
போதில் வாழ் அயனும் ஒவ்வா வாய்மொழிப்
புலவர் எல்லாம்.

ஆதலால் – ஆகையினால்,கோது இலாய் – குற்றமில்லாதவனே!
இ தேர் மேல் கொண்டு – இந்தத் தேரின்மேல் ஏறிக்கொண்டு, அடல்புனை
அவுணருக்கு பேதியா கவசம் பெற்று – வலிமைபொருந்திய அசுரர்களுக்குப்
பிளக்கமுடியாத கவசத்தையும் பெற்று, பிறங்கு பொன் முடிஉம் பெற்றாய் –
விளங்குகின்ற சுவர்ணமயமானகிரீடத்தையும் பெற்ற நீ, எங்கள் நெஞ்சில்
குறை எலாம் தீர்த்தி – எங்கள் மனத்திலுள்ள குறைமுழுவதையுந் தீர்ப்பாய்,
என்றார் – என்று சொன்னார்கள்:(யாவரெனின்), போதில் வாழ் அயன்உம்
ஒவ்வா – (திருமாலினது நாபித்தாமரை) மலரில் வாழ்கின்ற பிரமனும்
ஒப்பாகாத, வாய் மொழி – வாயிலிருந்து வருஞ் சொற்களையுடைய,புலவர்
எல்லாம் – தேவர்கள் யாவரும்;

     இது, தங்கள்மனக்குறையைத் தீர்க்குமாறு தேவர்கள் அருச்சுனனை
வேண்டியது.  பெற்றாய்- வினையாலணையும்பெயர். குறை – அசுரர்களை
வெல்ல வேண்டுதல்.  அயன் – அஜன்;இதற்கு – திருமாலினிடத்துத்
தோன்றியவனென்று பொருள். ‘மொழி’என்றவிடத்து ‘வாய்’என
வேண்டாது கூறினார்,அருள்கொண்டு கூறினாலும்வெகுண்டுகூறினாலும்
அவ்வப்பயன்களைப்பயந்தேவிடுகின்ற சாபாநுக்கிரக சக்தியுடையதெனத்
தாம் வேண்டியதன் சிறப்பை முடித்தற்கு. இப்படிப்பட்ட நிறைமொழிகளின்
சிறப்பைக் கருதியே, ‘அயனுமொவ்வா’என்னும் அடைமொழி கொடுத்தது.

வீரனும் உவகை தூண்ட, விண்ணவர் மலர்த்தாள் போற்றி,
சாரதி தடந் தேர் தூண்ட, தபனனில் விசும்பில் சென்றான்-
கார் நிறக் குன்றம் ஒன்றைக் கனக வான் குன்று
ஒன்று ஏந்தி,
சீர் உறப் பறந்து, வானில் திசை உறச் செல்வது ஒத்தே29.-இதுவும்,மேற்கவியும் – குளகம்.  விசும்புவழியாத்
தேர்மீது சென்றஅருச்சுனன் கடற்கரை சார்தலும்
மாதலியை நோக்கிச்சில கூறலுறுதல்.

வீரன்உம் – அருச்சுனனும்,-உவகைதூண்ட – மகிழ்ச்சிமிக,
விண்ணவர் மலர் தாள் போற்றி – அந்தத் தேவர்களது தாமரைமலர்போலும்
பாதங்களைவணங்கி,-சாரதி தட தேர் தூண்ட – மாதலி பெரிய தேரைச்
செலுத்தாநிற்க, (அத்தேரின்மீது), தபனனில் – சூரியன்போல, விசும்பில் –
ஆகாயமார்க்கத்தில், சென்றான்- போனான்;(அந்தத் தேரானது), கனகம்
வான் குன்று ஒன்று – பொன்மயமான பெரிய மலையொன்று,கார் நிறம்
குன்றம் ஒன்றை – கருமைநிறமுடையதொரு மலையை,ஏந்தி-
எடுத்துக்கொண்டு, சீர் உற – அழகுமிகு,  வானில் – ஆகாயத்திலே, திசை
உற- (மேற்குத்) திக்கை நோக்க, பறந்து செல்வது – விரைந்து போவதனை,
ஒத்து – போன்று,-(எ-று.)-‘போய்க்குறுகலும்’என மேற்கவியோடு முடியும்.

     அருச்சுனனுக்குச்சூரியனுவமை – ஒளிக்கும் மிகவிரைந்து செல்லுந்
தேரிலேறி வானத்தில் மேற்குத் திசையை நோக்கிச் செல்லுதற்கு மென்க.
பின்னிரண்டடி – இல்பொருளுவமை.  கார் நிறக்குன்றத்துக்கு –
அருச்சுனனும், கனகவான்குன்றுக்கு-பொன்மயமான தேரும் உபமேயமாம்.
கனகவான் குன்று – மேருமலையென்னலாம். விண்ணவர் –
விண்ணிலுள்ளவர்;விண் – வானம்.  எல்லாமலர்களுள்ளுந் தாமரை
சிறத்தல்பற்றி, மலர் எனப்பட்டது.  தடந்தேர்- உரிச்சொற்புணர்ச்சி.
தபனன்-தபிப்பவன்;தபித்தல் – சுடுதல். வான் – பெருமை யுணர்த்தும்பொழுது
உரிச்சொல்;இனி, பெயர்ச்சொல்லாய், வானத்தையளாவுங் குன்றென்றுமாம்

திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்,
குரகதத் தடந் தேர் போய்க் குறுகலும்,
மரகதக் கொண்டல், மாதலிக்கு அன்பினால்,
விரகுறச் சில மாற்றம் விளம்பினான்

குரகதம் தட தேர் – குதிரைகளைப்பூட்டியுள்ள பெரிய
அவ்விரதமானது, திரை கொழித்திடும் சிந்துவின் சூழலில்-அலைகளை(க்
கரையில்) மோதுகின்ற கடலையடுத்த இடத்திலே, போய் குறுகலும்-போய்ச்
சேர்ந்தவளவில்,-மரகதம் கொண்டல் – பச்சையிரத்தினமும் காளமேகமும்
போன்ற அருச்சுனன், மாதலிக்கு – தேர்ப்பாகனைநோக்கி, அன்பினால்-
அன்புடனே, விரகு உற – அறியும்படி, சில மாற்றம் விளம்பினான்- சில
வார்த்தைகளைக்கூறினான்;(எ-று.)-அது மேற்கவியிற் கூறுகிறார்;

     சூழல் -சூழ்ந்துள்ள இடம்.  குரகதம் – குளம்புகளால் நடப்பது
என்று பொருள்;ஒற்றைக்குளம்புள்ளது என்று கருத்து.  மரகதக்கொண்டல்
என்ற தொடர்மொழி – உவமையாகுபெயராய் அருச்சுனனுக்கு வந்தது.
அன்பினால்- மூன்றாமுருபு,அடைமொழிப் பொருளிலே வந்தது;
அன்புடையவனாய்என்று கருத்து.

     இதுமுதல்இருபத்தேழு கவிகள் – பெரும்பாலும் முதற்சீர் மாச்சீரும்,
ஈற்றுச்சீர் விளச்சீரும், மற்றிரண்டும் மாச்சீரும் விளச்சீரும் விரவியும் வந்த
அளவடி நான்கு கொண்ட கலிவிருத்தங்கள்.

இப் புரத்தில் அவுணர் இயல்பு எலாம்
செப்பு, எனக்குத் தெரிதர’ என்றலும்,
அப் புரத்தவர் ஆண்மையும், தோற்றமும்,
செப்பலுற்றனன், திண் திறல் தேர்வலான்31.-தோயமாபுரத்துஅவுணரியல்பைக் கூறுமாறு
அருச்சுனன் வினவ,மாதலி கூறலுறல்.

இபுரத்தில் அவுணர் இயல்பு எலாம் – இந்த நகரத்திலுள்ள
அசுரர்களது தன்மை முழுவதையும், எனக்கு-,தெரிதர-விளங்கும்படி,
செப்பு-சொல்வாயாக’,என்றலும்-என்று (அருச்சுனன்) சொன்ன வளவில்,-
அ புரத்துஅவர் ஆண்மைஉம்-அந்நகரத்திலுள்ள அவ்வசுரர்களது
பராக்கிரமத்தையும், தோற்றம்உம்-காட்சியையும், திண் திறல் தேர்வலான் –
மிகுந்த வலிமையையுடைய தேர்செலுத்துந் தொழிலில் வல்லவனாகிய
மாதலி, செப்பல் உற்றனன்-சொல்லத்தொடங்கினான்;(எ-று.)-அது
மேலெட்டுக்கவிகளாற் கூறுகின்றார்.

      தோற்றம் – தோன்றற்பாடு: தொழிற்பெயர்; வலிமையுமாம். திண்திறல் –
ஒருபொருட்பன்மொழி. 

தெழித்த சொல்லினர்; சீற்ற வெந் தீ உக
விழித்த கண்ணினர்; விண் முகிலைக் கவின்
அழித்த மேனியர்; ஆழ் வெம் பிலத்தையும்
பழித்து அகன்ற பெரும் பகு வாயினார்;32.-எட்டுக்கவிகள்-தோயமாபுரத்தசுரரியல்பை
மாதலிகூறுவன.

பத்துக்கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) (அவ்வசுரர்கள்),-தெழித்தசொல்லினர் – அதட்டிக் கூறுகின்ற
சொற்களையுடையவர்;சீற்றம் வெம் தீ உக விழித்த கண்ணினர்-கோபத்தாற்
கொடிய நெருப்புச்சிந்த விழிக்கின்ற கண்களையுடையவர்;விண் முகிலை
கவின் அழித்த மேனியர்-(தமது கருநிறத்தால்) ஆகாயத்திற்செல்கின்ற
காளமேகத்தை நிறங்கெடச்செய்த உடம்பை யுடையவர்;ஆழ்
வெம்பிலத்தைஉம் பழித்து அகன்ற பெரு பகு வாயினார்-ஆழ்ந்து
பயங்கரமாகவுள்ள பிலத்துவாரத்தையும் (தமக்கு ஒப்பாகாதென்று) நிந்தித்து
(அதனிலும்) பரந்த பெரிய திறந்த வாயையுடையவர்;(எ-று.)

     தெழித்தல் – பேரொலிசெய்தலுமாம்.  விண்முகிலைக்கவின் அழித்த
மேனியர் என்பதற்கு – நீர்கொண்டமேகத்தினுங் கரிய உடம்புள்ளவர் என்று
கருத்து.  சொல்லினர் முதலிய பயனிலைகளுக்கெல்லாம்’அவ்வசுரர்கள்’
எனத் தோன்றாஎழுவாய்வருவிக்க;அன்றி இவற்றை, மேல்38-ஆம்
கவியிலுள்ள ‘மூன்றுகோடியசுரர்’என்பதற்கு விசேஷணமாகக் கொள்ளினும்
அமையும்.  பிலம் – பாதாளவழி.  பகுவாய் – பேழ்வாய் 

மண்ணும், நீரும், அனலும், மருத்துடன்,
விண்ணும், வேண்டின், விரைவின் முருக்குவார்;
எண்ணெய் ஊட்டி, இருள்-குழம்பால் எழில்
பண்ணி, யாக்கை வகுத்தன்ன பான்மையார்;

)மண்உம் – பிருதிவியும், நீர்உம்-அப்புவும், அனல்உம்-
அக்கினியும், மருத்துடன்-வாயுவும், விண்உம் – ஆகாசமும், (ஆகிய
பஞ்சமகாபூதங்களையும்),வேண்டின்-(அழிக்க), விரும்பினால்,விரைவின்-
சீக்கிரத்தில், முருக்குவார் – அழிக்கவல்லவர்: இருள் குழம்பால்-இருளாகிய
குழைசேற்றினால்,எழில் பண்ணி – வளர்ச்சி பெறச் செய்து, எண்ணெய்
ஊட்டி-(மேலே) எண்ணெயைத் தடவி, வகுத்து அன்ன-அமைத்தாற்
போன்ற, யாக்கை பான்மையார்-உடம்பின் தன்மையையுடையவர்;(எ-று.)

     லயகாலத்தில்நிலம் நீரிலும், நீர் நெருப்பிலும், நெருப்புக் காற்றிலும்,
காற்று விசும்பிலும் ஒடுங்கு மென்பது நூல்வழக்காத
லால், ‘மண்ணுநீருமனலு மருத்துடன் விண்ணும்’ என வைத்தார்.
மேனியினது கருமையும் வழுவழுப்பும் மினுமினுப்பும்பற்றி,
‘எண்ணெயூட்டியிருட்குழம்பாலெழில் பண்ணியாக்கை வகுத்தன்னபான்மையார்’
என்றது: தற்குறிப்பேற்றம்.  எழிலாவது – வளர்ந்தமைந்த பருவத்தும் இது
வளர்ந்து மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்.

மல் புயாசலத்தின் வலியால், இகல்
சற்ப ராசன் தலைச்சுமை மாற்றுவார்;
அற்ப வாழ்வுடை அம்போருகத்தர்தம்
கற்ப கோடி கடையுறக் காண்குவார்;

மல்- மற்போரிற்பயின்ற, புய அசலத்தின் – மலைபோலும்
(தமது) தோள்களின், வலியால்-பலத்தினால்,இகல் சற்பராசன் தலைசுமை
மாற்றுவார்-(கீழிருந்து பூமியைத் தாங்குகின்ற) வலிமையையுடைய
பாம்புகளுக்கு அரசனாகியஆதிசேஷனது தலையின்பாரத்தைத் (தாம்
பூமியைத் தாங்கித்) தவிர்க்க வல்லவர்: அற்பம் வாழ்வு உடை
அம்போருகத்தர்தம் – மிகச் சிறிய வாழ்நாளையுடையபிரமர்கள் பலரது,
கற்பம் கோடி-ஆயுள்நாள் பலவற்றை, கடை உற-முடிவுபோக, காண்குவார்
– பார்க்குந் தன்மையுள்ளவர்;(எ-று.)

     மல்தொழிலாவது- ஆயுதமின்றிக்கே கை கால் முதலிய
உறுப்புக்களினாற்போர்செய்தல்.  புஜ + அசலம்=புஜாசலம்: தீர்க்கசந்தி:
அது புயாசலம் எனத் திரிந்தது.  அசலம் – சலியாதது.  சற்பம் – ஸர்ப்பம்:
எதுகை நோக்கிய விகாரம்.  சுமை-சுமக்கப்படுவது: ஐ – செயப்படுபொருளீறு.
மற்றை யெல்லாப் பிராணிகளுடைய வாழ்நாளினும் பெரிதாகிய பிரமனது
ஆயுளும் இவ்வசுரர்களது தீர்க்காயுசை நோக்குமிடத்துச் சிறிதாகத்
தோன்றுமென்பார், ‘அற்பவாழ்வுடை யம்போருகத்தர்’என்றார். வாழ்வு-வாழும்
நாளுக்குத் தொழிலாகுபெயர். அம்போருகம்=அம்போருஹம்: தாமரை;நீரில்
முளைப்பதுஎன்று பொருள்: இது-காரணங் கருதியபொழுது அல்லி ஆம்பல்
குவளைநெய்தல் முதலிய நீர்ப்பூங்கொடிகள் பலவற்றிற்குஞ் செல்லுதலாலும்,
காரணங் கருதாதபொழுது இடுகுறியளவாய்த் தாமரைக்கே செல்லுதலாலும்
காரணவிடுகுறிப்பெயர். இக்கொடியின் பெயர், அதன்மலருக்குப்
பொருளாகுபெயர்; முதலாகுபெயரெனினும் ஒக்கும்: இதுபோல்வனவற்றை
முதலுக்குஞ் சினைக்கும்பொதுவென்பாரு முளர்.  அம்போருகமலரில்
உதித்தவர், அம்போருகத்தர். கற்பம் – பிரமனாயுள்;பெரியதொரு
காலவரையறை. கோடி – இங்கே, மிகப்பலவாகிய எண்ணிற்கு ஒன்று எடுத்துக்
காட்டியவாறு.   

பாழி ஆடக வெற்பில், படர் சிரம்
கீழது ஆக, கிளர் மூச்சு அடக்கி, நின்று,
ஊழி நாளும் தவம் முயன்று, ஓங்குவார்;
ஆழி நீரும் அளவிடும் தாளினார்;

பாழி- வலிமையையுடைய, ஆடகம் வெற்பில் –
பொன்மலையாகியமகாமேருவிலே, பட – பொருந்த, சிரம் கீழது ஆக –
தலைகீழாக,நின்று-,கிளர் மூச்சு அடக்கி – மேன்மேல் இடைவிடாது
வருகின்ற சுவாசத்தைப் (பிராணாயாமத்தாற்)பந்தனஞ்செய்து, ஊழிநாள்உம்
– கற்பகாலம் வரையிலும், தவம் முயன்று – தவத்தைச் செய்து, ஓங்குவார் –
(தாந்தாம் வேண்டிய வரங்களைப்பெற்று)உயர்ச்சிபெறுபவர்;ஆழி நீர்உம்
அளவிடும் தாளினார்- கடலின் நீரையும் அளவிட்டுத் தாண்டவல்ல
(நீண்ட) கால்களையுடையவர்;(எ-று.)

     ஆடகம் -ஹாடகம்;இது – நால்வகைப் பொன்களுள் ஒன்று.
அவை – ஆடகம், கிளிச்சிறை, சாதரூபம், சாம்பூநதம் என்பன.  கீழது –
கீழுள்ளது;குறிப்பு  வினையாலணையும்பெயர்; அ-சாரியை.  படர் சிரம்
என்றும்  பாடம்.  

ஏதி, சூலம், எழு, மழு, ஈட்டியின்
சாதி, சக்கரம், தாங்கும் தடக் கையார்;
மோது போர் எனின், மொய்ம்புடன் முந்துவோர்;
ஓதம் ஏழும் உடன் உண்டு, உமிழுவோர்;

ஏதி- வாளும், சூலம் – சூலமும், எழு – வளைதடியும், மழு
– பரசுவும், ஈட்டியின் சாதி – ஈட்டியின் வகைகளும், சக்கரம் – சக்கரமும்,
(ஆகிய ஆயுதங்களை),தாங்கும் – தரிக்கின்ற, தட கையார் – பெரிய
கைகளையுடையவர்;மோது போர் எனின் – (பகைவர்களைத்)தாக்குகின்ற
யுத்தமென்று பேர்சொன்ன மாத்திரத்தில், மொய்ம்புடன் – வலிமையுடனே,
முந்துவோர் – முற்பட்டு வருபவர்;ஓதம் ஏழ்உம் – ஏழு கடல்களையும்,
உடன் – ஒருசேர, உண்டு – குடித்து, உமிழுவோர் – மீண்டும்
வெளியிற்காலும் ஆற்றலுடையவர்; (எ-று.)

     ஏதி – ஹேதி: இவ்வாயுதப் பொதுப்பெயர், சிறப்பாய்
வாளையுணர்த்திற்று. சூலம் – முத்தலைவேல். எழு – இருப்புத்தூணுமாம்.
மழு – ஒருவகைக் கோடாலி, எரியிரும்புப்படையுமாம். ஈட்டி – ஒருவகைவேல்.
ஈட்டியின் சாதி என்றது – பேரீட்டி, சிற்றீட்டி, எறியீட்டி என்னும் அதன்
வகைகளை. சாதி – ஜாதி.  உண் என்னும் பகுதி-உண்பன தின்பன பருகுவன
நக்குவன எனத் தனித்தனி எடுத்துப் பகுத்துக் கூறுமிடத்துச் சிறப்புவினையும்,
அங்ஙனங் கூறாதவிடத்துவாயால் நுகரப்படும் பொருளெல்லாம் உணவு
எனப்படுமாகலின் பொதுவினையுமாமாதலால், இங்கே, ‘ஓதமேழும்பருகி’
என்னாமல் ‘உண்டு’ எனப்பட்டது. உமிழுவோர், உ-சாரியை

‘கூரும் நல் உரை கூறினும், கூற்றுடன்
கார்தொறும் இடி சேர்ந்தன்ன காட்சியார்;
தேர்தொறும் செருச் செய்யும் அத் தேவரைப்
போர்தொறும் புறங்கண்டு அன்றிப் போகலார்;

கூரும்நல் உரை கூறின்உம் – மிக்க நல்ல வார்த்தைகளைச்
சொல்வதானாலும்,கூற்றுடன் கார்தொறுஉம் இடி சேர்ந்து அன்ன
காட்சியார் – யமனும் மேகந்தோறுந் தோன்றுகின்ற இடியுஞ்
சேர்ந்தாலொத்த தோற்றமுடையவர்: தேர்தொறுஉம் செரு செய்யும் அ
தேவரை- (தத்தமது) இரதங்களிலே (ஏறி வந்து) போர்செய்கின்ற அந்தத்
தேவர்களை,போர்தொறுஉம் – ஒவ்வொரு யுத்தத்திலும், புறம் கண்டு
அன்றி – முதுகுகாட்டியோடச் செய்தல்லாமல், போகலார் – (போர்க்
களத்தினின்று மீண்டு) போகாதவர்;(எ-று.)

     நல்லசொற்சொல்லும்பொழுதும் கண்டத்தொனியால் யமனும்
இடியுஞ்சேர்ந்த தொப்ப ரெனவே, தீயசொற் சொல்லும் பொழுது
உள்ளதன்மை சொல்லவேண்டாதாயிற்று.  அத்தேவர் என்றதில் அகரச்சுட்டு
– அமிருதமுண்டதனால்அழியாவலிபெற்ற தேவர்களது சிறப்பை
யுணர்த்திற்று:இனி, அழகிய தேவ ரெனினுமாம். பெரும்பாணுற்றுப்படையில்
“அவ்வாய்வளர்பிறை”என்பதற்கு – ‘அழகியஇடத்தையுடைய வளரும்
பிறை’என்று ஆசிரியர் நச்சினார்க்கினியர்உரையெழுதிப்போந்ததனால்
அம் என்பதற்குப்போல,  அ என்பதற்கும் அழகிய என்னும்பொருள்
உண்டென்று உணர்க.  

மூன்று கோடி அசுரர்; முகில் எனத்
தோன்றும் மேனியர்; தோம் அறும் ஆற்றலர்;
ஏன்று போர் பொரின், எவ் எவ் உலகையும்
கீன்று, சேரக் கிழிக்கும் எயிற்றினார்;

மூன்றுகோடி அசுரர் – மூன்றுகோடி என்னுந் தொகையுள்ள
அவ்வசுரர்கள், முகில் என தோன்றும் மேனியர் – மேகம்போல(ப்
பெரிதாக)த் தோன்றுகின்ற உடம்பையுடையவர்;தோம் அறும் ஆற்றலர் –
குற்றமில்லாத வலிமையுடையவர்;ஏன்று போர்பொரின்-எதிர்த்துப் போர்
செய்தால், எ எ உலகைஉம் – எந்த எந்த உலகங்களையும்,கீன்று – கீறி.
சேர – ஒருசேர, கிழிக்கும் – கிழிக்கவல்ல, எயிற்றினார்-பற்களையுடையவர்;
(எ-று.)

     இங்கே,’முகிலெனத்தோன்றுமேனியர்’என்பது, கீழ் 32 – ஆம்
கவியில் ‘விண்முகிலைக்கவினழித்தமேனியர்’என்பதனோடுகூறியது
கூறலென்னுங் குற்றமாகாமைப்பொருட்டு, அங்கே கருமைக்கும், இங்கே
பெருந் தோற்றத்துக்கும் உவமைகூறியதென வேறுபாடுகொள்க.
தோம்=தோஷம்.  ஆற்றல் – ஆற்று என்னும் பகுதியின் தொழிற்பெயர்.
ஏன்று, கீன்று-ஏல்,கீல்-பகுதிகள்.  ஏன்று என்பது, ஏற்றுஎனவும் வரும்.
கீலுதல்-கிண்டுதல், பிளத்தல்.  ஆற்றலுக்குக் குற்றமாவது, தோல்வி

செப்பு உரத்தினில், செஞ் சடை வானவன்
முப்புரத்தை முனிந்த அந் நாளினும்,
தப்பு உரத்தர்; சதமகன்தன்னை வென்று,
இப் புரத்தை இவர் கவர்ந்தார்’ எனா,

இதுமுதல் மூன்றுகவிகள்- குளகம்.

     (இ-ள்.)செப்பு-(யாவராலுஞ் சிறப்பித்துச்) சொல்லப்படுகின்ற,
உரத்தினின்-வலிமையையுடைய, செம் சடை வானவன்-சிவந்த
சடையையுடைய சிவபெருமான், மு புரத்தை-திரிபுரத்தை, முனிந்த அ
நாளின்உம் – கோபித்து எரித்த அக்காலத்திலும், தப்பு-(தாம் எரியாமல்)
தப்பிப் பிழைக்கும்படியான, உரத்தர் – வலிமையுடையவர்களாகிய, இவர்-
இவ்வசுரர்கள், சதமகன் தன்னைவென்று-இந்திரனைச்சயித்து, இ புரத்தை-
இந்தத் தோயமாபுரத்தை, கவர்ந்தார்-(அவனுடைய ஆளுகையினின்றும்)
அபகரித்துத் தமதாக்கிக் கொண்டார்கள், எனா-என்று(அருச்சுனனுக்குச்)
சொல்லி,-(எ-று.)-இக்கவியில்’எனா’என்பதும், மேற்கவியில் ‘போக்கி’
என்பதும், அதன் மேற்கவியிலுள்ள ‘நடத்தினன்’என்னும் வினைமுற்றைக்
கொண்டு முடியும்.

     ஸ தமகன்-நூறு(அசுவமேத) யாகங்களைச்செய்து இந்திர பதவி
பெறுதலால் வந்த பெயர்;சதம்-நூறு, மகம்-யாகம். 

தீது இலாத் திறல் சித்திரசேனனைக்
‘கோது இலாத குனி சிலை வீரற்கு
மோது போர் தர, மொய்ம்புடை வஞ்சர்பால்
தூது போக!’ எனப் போக்கி, தொலைவு இலான்40.-அருச்சுனனோடுபொரவருமாறு மாதலி
அவ்வசுரரிடத்துச்சித்திரசேனனைத்தூதனுப்புதல்.

தொலைவுஇலான் – (போருக்குத் தேர்செலுத்துவதாகிய
தன்தொழிலிற் சிறிதுங்) குறைவுபடுதலில்லாத மாதலி,-தீது இலா திறல்
சித்திரசேனனை- குற்றமில்லாத வலிமையையுடைய சித்திரசேனனென்னுங்
கந்தருவனைநோக்கி,’கோதுஇலாத-குற்றமில்லாத, குனி சிலை- வளைந்த
காண்டீவவில்லையுடையவீரற்கு-வீரனாகியஅருச்சுனனுக்கு, மோது போர்
தர – தாக்கிச்செய்கின்ற யுத்தத்தைக் கொடுக்கும்படி, [அருச்சுனனுடனே
எதிர்த்துவந்து போர்செய்தற்கு],மொய்ம்பு உடை வஞ்சர் பால் –
வலிமையையுடைய வஞ்சகராகிய அசுரரிடத்து, தூது போகு-தூது
செல்வாயாக,’என – என்றுசொல்லி, போக்கி – (அவனைமுன்னே)
அனுப்பிவிட்டு,-(எ-று.)

     இனி,மொய்ம்பு உடை வஞ்சர் -(பகைவரது) வலிமையை உடைக்கின்ற
[அழிக்கின்ற]மாயையையுடையவர் எனவுமாம்: பால்- ஏழனுருபு.
சித்திரசேனனென்னுஞ் சொல்லுக்கு – பலவகைச் சேனையுடையவனென்று
பொருளாம்.  இவன், விசுவாவசு என்னுங் கந்தருவனது குமாரன்: சங்கீத
பரதங்களில் வல்லவன்: அருச்சுனனுக்குஇசைநாடகங்களைக்கற்பித்துக்
கொடுத்தவன். 

விண்ணின்மீது விரைவுறும் தேரினை
மண்ணின்மீது நடத்தினன், மாதலி;
அண்ணலும், தன் அருஞ் சிலை நாணியின்
துண்ணென் ஓதை தொடரத் துரத்தினான்.41.-விண்ணிற்செல்லுந்தேரைப் பூமியில் மாதலி
செலுத்த, அருச்சுனன்நாணோசையெழுப்புதல்.

மாதலி – அந்த இந்திரன்சாரதி, விண்ணின்மீது விரைவு உறும்
தேரினை-ஆகாயத்திலேவேகமாகச் செல்லுதலைப்பொருந்திய இரதத்தை,
மண்ணின்மீது-பூமியின்மேலே, நடத்தினன்-(மந்தகதியாகச்) செலுத்தினான்:
அண்ணல்உம்- பெருந்தன்மையுடைய அருச்சுனனும்,-தன்அரு சிலை-
(பெறுதற்கு) அரிய தனதுவில்லினது, நாணியின்-நாணினது, துண்ணென்
ஓதை-(கேட்போர்க்கு) அச்சத்தை விளைக்கின்றஓசை, தொடர –
(சித்திரசேனனைத்தொடர்ந்து) செல்லும்படி, துரத்தினான்-(அவ்வோசையை)
விரைவிற் செலுத்தினான்;(எ-று.)

     வில்நாணியைக்கைவிரலால் தெறித்துப் பகைஞர் செவியிற்படும்படி
பேரோசையைவிளைத்தானென்பதாம்.  தொடரத் துரத்தினான்என்றதனால்
பின்னே புறப்பட்ட ஓசை முந்திச்சென்றமை பெறப்படும்: ஆனதுபற்றியே,
43-ஆங் கவியில் தூதர்க்குமுன் நாணோசைசெவிப்புகுந்தமை
கூறப்படுகின்றது.  விண்ணின்மீது, மீது – ஏழனுருபு.  அண்ணல் –
ஆண்பாற்சிறப்புப்பெயர். துண்ணெனல் – அச்சக்குறிப்பு.  துரத்து – துர
என்பதன் பிறவினை: து – பிறவினைவிகுதி.  

தேரின் ஆர்ப்பு ஒலியும், சிறு நாண் எனும்,
காரின் ஆர்ப்பு ஒலியும், கலந்து, எங்கணும்,
பாரும், மேல் திசையும், பகிர் அண்டமும்,
சேரும் நால்-திசையும், செவிடு ஆக்கவே,42.-தேரொலியோடுநாணொலிசேர்ந்துதிசையெங்கும்
பேரொலியாதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.)தேரின் – (அருச்சுனன் ஏறிவந்த) இரதத்தினது, ஆர்ப்பு
ஒலிஉம்-ஆரவாரமாகிய ஓசையும், சிறு நாண் எனும் காரின்-(அவன் கை
வில்லினது) சிறிய நாணியென்கிற மேகத்தினது, ஆர்ப்பு ஒலிஉம்-
(இடிபோன்ற) ஆரவாரமாகிய ஓசையும், பார்உம் – பூமியிலும், மேல்
திசைஉம்-ஆகாயத்திலும், சேரும் நால் திசைஉம்-பொருந்திய நான்கு
திக்குக்களிலும், பகிர் அண்டம்உம் – (ஆக இவ்வண்டத்தில்மாத்திரமே
யன்றி) வெளியண்டங்களிலும், எங்கண்உம்-எவ்விடத்தும், கலந்து –
சென்றுசேர்ந்து, செவிடு ஆக்க-(அங்கங்கேயுள்ள எல்லாப் பிராணிகளையும்
அதிர்ச்சி மிகுதியால்) செவிடுகளாகச்செய்ய,-(எ-று.)-‘புக’எனமேற்கவியில்
தொடரும்.

     ஆர்ப்பொலி -இருபெயரொட்டுப் பண்புத்தொகை: ஆர்ப்பு-
பேரிரைச்சல்.  பகிரண்டம் – வடசொற்றொடர். நாற்றிசை-கிழக்கு, தெற்கு,
மேற்கு, வடக்கு என்பன;தென்கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு
என்னும் கோணத்திசை நான்கும் இவற்றில் அடங்கும்.  செவிடு-
செவிப்புலனற்றது: உறுப்புக் குறை எட்டினுள் ஒன்று.

அந்த ஓசை அவுணர் செவிப் புக,
முந்த ஓடி முடுகி, முறுவலித்து,
‘இந்திரன் பொர வந்தனன்’ என்று, தம்
சிந்தை கன்றி, விழியும் சிவந்திட்டார்.43.-ஓசையைக்கேட்டஅசுரர் இந்திரன்
பொரவருகிறானென்றுசினங்கொள்ளுதல்.

அந்தஓசை-தேரோசையோடு சேர்ந்த அந்த நாணோசை,
முந்த – (சித்திரசேனனுக்கு) முற்பட, ஓடி – விரைந்து சென்று, அவுணர்
செவி புக-அவ்வசுரர்களது காதிலே நுழைய, – (அவர்கள்), முடுகி-(தம்மில்)
திரண்டு, முறுவலித்து – சிரித்து, இந்திரன் பொர வந்தனன் என்று-
தேவேந்திரன் (தம்மோடு) போர் செய்தற்கு வந்தானாகுமென்று கருதி,
(கோபத்தால்), தம் சிந்தை கன்றி-தங்கள் மனம் வெதும்பி, விழிஉம்
சிவந்திட்டார்-(கண்களும்) சிவக்கப்பெற்றார்; (எ-று.)

    தேவேந்திரன்தேரில் மாதலி பாகனாகச்செலுத்தத்தேர்
அதிர்ந்துவரும்போது, அவுணர், தோற்ற தேவேந்திரனே மீளவும் பொர
வருகின்றானென்றுகருதிச் சினந்தனரென்க.  இங்கே முறுவலித்தல் –
வீரத்திலெழுந்த வெகுளி நகை.  ‘விழி’ என்னும் அஃறிணையெழுவாய்
‘சிவந்திட்டார்’என்னும் உயர்திணைமுற்றைக்கொண்டதனால்,விழியும்
சிவந்திட்டார்: திணைவழுவமைதி;இதற்கு “உயர்திணைதொடர்ந்த
பொருள்முத லாறும், அதனொடுசார்த்தினத்திணைமுடிபின” என்னுஞ்
சூத்திரம், விதி.  

போய தூதனும், செம் பொன் புரிசை சூழ்
தோயமாபுரம்தன்னில் துதைந்த அம்
மாய வஞ்சர் மறுக, வெம் புண்ணின்மேல்
தீயை ஒப்பன சில் உரை சொல்லுவான்:44.-சித்திரசேனனென்றதூதுவன் சில சொல்லுதல்.

போயதூதன்உம் – (முன்னே புறப்பட்டுச்) சென்ற தூதுவனான
சித்திரசேனனும்,-செம்பொன் புரிசை சூழ் – சிவந்த பொன்னினாலாகிய
மதில்கள் சூழ்ந்துள்ள, தோயமாபுரந்தன்னில்-பெரிய தோயமாபுரத்திலே,
துதைந்த-நிறைந்த, அ மாயம் வஞ்சர்-
மாயையினாற்செய்யும் வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள், மறுக-மனம்
வேறுபடும்படி, வெம் புண்ணின்மேல் தீயை ஒப்பன – மிக வருத்துகின்ற
விரணத்தின்மேல் வைத்த நெருப்பை ஒப்பனவாகிய, சில் உரை-சில
வார்த்தைகளை,சொல்லுவான் – சொல்பவனானான்(எ-று.)-அது
மேற்கவியிற் கூறுகின்றார்.

     முன்னேதேர்நாணிகளின் தொனிகளைக்கேட்டுத் தேவராசன்
போருக்கு வருகிறானென்றெண்ணிச்சீற்றங்கொண்ட அவ்வசுரர்களுக்கு
மனிதனொருவன்போர்க்கு வந்துள்ளானென்று தூதன் சொல்லும் வார்த்தை
அவ்வருத்தத்தின்மேல் மிகவருத்தத்தை மூட்டு மாதலால், ‘புண்ணின்மேல்
தீயையொப்பன’என்றார்:”இயம்பியசொல்மருமத்தி னெறிவேல் பாய்ந்த,
புண்ணிலாம் பெரும்புழையிற்கன னுழைந்தாலெனச் செவியிற் புகுதலோடும்”
என்றார்கம்பரும். போய, யகரவொற்று-இறந்தகாலவிடைநிலை. மாயம்-
ஒருமந்திரசக்தி.  

ஒரு குலத்தினில் வேந்தும் ஒவ்வாது உயர்
குருகுலத்தில் குனி சிலை வீரற்குத்
தருக யுத்தம்; திறலுடைத் தானவர்
வருக, மற்றும் வரூதினிதன்னொடும்.’45.-அருச்சுனனோடுபொரவருமாறு அவுணரிடம்
தூதன் கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)’ஒருகுலத்தினில் வேந்துஉம் ஒவ்வாது – எந்தக் குலத்திற்
பிறந்த எவ்வரசனும் ஒப்பாகாமல், உயர் – சிறந்துள்ள, குரு குலத்தில் குனி
சிலைவீரற்கு – குருகுலத்திற்பிறந்த வளைந்தவில்லையுடைய அருச்சுனனுக்கு,
திறல் உடை தானவர் – வலிமையுடைய அசுரர்கள், யுத்தம் தருக – போரைக்
கொடுப்பாராக;மற்றுஉம் – மேலும், வரூதினி தன்னொடுஉம்வருக –
சேனையோடும்வருவார்களாக;'(எ-று.)

     அசுரர்களே! நீங்கள் உண்மையாகப் போர்செய்யுந்
திறமையையுடையீராயின் சேனையோடுவந்து எங்கள் அருச்சுனனோடு
போர் செய்து வெல்லுங்கள், பார்ப்போம் என்றான். குரு என்பவன்,
சந்திரகுலத்திற் பிறந்த பிரசித்திபெற்ற ஓரரசன்: இவனால்,அக்குலம்
‘குருகுலம்’என்றும், அந்நாடு ‘குருக்ஷேத்திரம்’என்றும், அக்குலத்தவர்
‘கௌரவர்’என்றும் பேர்கொண்டமை காண்க.  தானவர் – தனுவின்
மக்கள், தத்தி தாந் தநாமம்; இது, முன்னிலையிற்படர்க்கைவந்த
இடவழுவமைதி;  அண்மைவிளியுமாம். 

என்று தூதன் இசைத்தது கேட்டலும்,
‘நன்று!’ எனக் கை புடைத்து, நகைத்திடா,
கன்று நெஞ்சினர், கண்கள் செந் தீ உக,
துன்று கோபத்துடன், அவர் சொல்லுவார்:46.-அதுகேட்டஅசுரர் ஏளனஞ்செய்து சொல்லலுறல்

என்றுதூதன் இசைத்தது கேட்டலும் – இவ்வாறு தூதுவன்
சொன்ன வார்த்தையைக் கேட்டமாத்திரத்தில், அவர் – அசுரர்கள்,-கன்றும்
நெஞ்சினர் – வெதும்பின மனத்தையுடையவராய், கண்கள் செம் தீ உக –
கண்களிலிருந்து சிவந்த நெருப்புப்பொறி சிந்த, துன்று கோபத்துடன் –
மிகுந்த கோபத்தோடே, நன்று என – (நீ சொன்னவார்த்தை)
நன்றாயிருந்ததென்றுசொல்லி, கை புடைத்து நகைத்திடா – கைகொட்டிச்
சிரித்து, சொல்லுவார் – (சில வார்த்தைகளைச்)சொல்லுபவரானார்கள்;
(எ-று.)-அவற்றை மேல்நான்குகவிகளிற் காண்க.

     நன்று -இகழ்ச்சிக்குறிப்பு.  நெஞ்சினர் – குறிப்புவினைமுற்றெச்சம்;
[நன்- வினை-32.]கோபத்துடன், உடன் – மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு;விசேஷணப்பொருளது. 

பூசை ஒன்று புலியின் குழாத்துடன்
ஆசை கொண்டு, பொர வந்து, அழைப்பதே!
வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் ஒரு
நாசம் வந்து புகுந்தது!’ எனா, நகா,47.-இதுமுதல்மூன்று கவிகள் – ஒருதொடர்:ஒரு
மானுடன் பொரவருவதுகுறித்து அலட்சியமாகச்சொல்லி,
அவுணர் சீறுதல்.

பூசைஒன்று – (ஒருதுணையுமில்லாமல்தனித்து நின்ற) ஒரு
பூனை, புலியின் குழாத்துடன்- புலிக்கூட்டத்துடனே, பொர –
போர்செய்தற்கு, ஆசை கொண்டு – விருப்பங்கொண்டு, வந்து அழைப்பது
ஏ – (துணிந்து) வந்து கூப்பிடுவதா?  வாசவன் பெரு வாழ்வுக்கு எலாம் –
இந்திரனது பெரிய வாழ்க்கைகளெல்லாவற்றுக்கும், ஒரு நாசம் வந்து
புகுந்தது – ஒரு அழிவு வந்துநேர்ந்தது, எனா- என்று சொல்லி, நகா –
சிரித்து;(எ-று).-“என்றுகொதித்திட்டார்”(49) என்று முடியும்.

     பலபராக்கிரமங்களில்லாத மனிதனொருவன்அவற்றில் மிகுந்த
அசுரர்திரளோடு பொரவிரும்பி அழைப்பதா என்னும்
பொருளைத்தந்ததனால்,முன்னிரண்டடி, ‘பிறிதுமொழிதல்’என்னும்
அலங்காரம்: இது, ஒட்டணியென்றும் சொல்லப்படும்: வடநூலார்
‘அப்ரஸ்துதப்ரசம்ஸாலங்காரம்’என்பர்:உபமேயத்தைக் கூறாமல்
உபமானத்தாற் பெறவைத்தல் இவ்வணியின் இலக்கணமாம்.  பூனை
புலிக்கூட்டத்தைப் போருக்கு அழைத்தல் இல்பொருளுவமை.  அழைப்பதே
என்பதில் ஏகாரம்-வினாவகையால்,வியப்பைஉணர்த்திற்று. அருச்சுனனை
இந்திரன்மைந்தனென்று அறிந்து, ‘இந்திரன்வாழ்வுக்கெலாம் நாசம் வந்தது’
என்றார். வாசவன் – அஷ்ட வசுக்களுக்குத் தலைவன்: அல்லது, எல்லா
ஐசுவரியமு முடைய வன்;வசு – செல்வம்.  புகுந்தது – தெளிவுபற்றிய
காலவழுவமைதி;[நன்- பொது – 33.]   

வரை உளானும், மலரின் உளானும், வெண்
திரை உளானும், செகுப்ப அரு நம்முடன்
தரை உளான் வந்து போர் பொரத் தக்கதோ!
‘உரை உளார்’ என்று உரையீர், உணரவே.

வரைஉளான்உம் – (கைலாச) கிரியிலுள்ள சிவனும், மலரின்
உளான்உம் – தாமரைமலரிலுள்ள பிரமனும், வெள்திரை உளான்உம் –
வெண்மையான பாற்கடலிலுள்ள திருமாலும், (என்னும் திரிமூர்த்திகளும்),
செகுப்பு அரும் – (கூடிவந்து பொருதாலும்) அழித்தற்கு முடியாத, எம்முடன்
– எங்களுடனே, தரை உளான் – பூமியிலுள்ளானொருமனிதன், வந்து போர்
பொர தக்கதுஓ – வந்து போர்செய்யத் தகுமோ?  [தகாதன்றோ];உரை
உளார் என்று – (இங்ஙனம் அலட்சியமாகப் பேசும்) பேச்சுடையார்கள்
என்று, உணர உரையீர் – (உம்வீரனுக்குத்) தெரியச் சொல்வீராக;(எ-று.)

     தூதனாகியசித்திரசேனனொருவனைநோக்கி ‘உரையீர்’எனப்
பன்மையாற் கூறியது, இகழ்ச்சிபற்றி:பால்வழுலமைதி;ஒருமைப் பாலிற்
பன்மைப்பால் வந்தது: [நன்- பொது – 28.]உரைஉளார் – பேசுந்திறமுடைய
தூதுவரே! என்று உணர உரையீர் – இவ்வாறு (அருச்சுனனுக்குத்) தெரியும்படி
சொல்லுங்கள் எனவுமாம்.  வரை என்னும் கணுவின் பெயர் –
சினையாகுபெயராய் மூங்கிலைக்குறித்து, அது பின் தானியாகுபெயராய்
மூங்கில்விளையும்மலைக்குவருதலால், இருமடியாகுபெயர்.  அலரின் எனப்
பிரித்தல். மோனைத்தொடைக்குக் பொருந்தாது.  திரை யென்னும்
அலையின்பெயர் – கடலுக்குச் சினையாகுபெயர்.இனி, வெண் திரை –
வெண்மையாகிய அலைகளையுடையதெனஅன்மொழித்தொகையுமாம். பொர –
தொழிற்பெயர்த்தன்மைப்பட்டு எழுவாயாயிற்று.  நம்முடன் என்றும்,
தக்கனோஎன்றும், இன்றுரையீரென்றும் பாடம்.

தனுசர் தானைதனை மதியாது, ஒரு
மனுசன் வந்து, மலைய மதிப்பதோ!
அனுசரும், கொலை ஆடல் அவுணரும்,
குனி செயும், சிலை!’ என்று கொதித்திட்டார்.

தனுசர்தானைதனைமதியாது – அசுரசேனைகளை ஒருபொருளாக
எண்ணாமல்,ஒரு மனுசன் வந்து மலையமதிப்பதுஓ- மனிதனொருத்தன்வந்து
(அதனோடு)போர் செய்ய எண்ணுவதோ? அனுசர்உம் –
இளையோராகியஅசுரர்களும், கொலைஆடல் அவுணர்உம் – (பகையைச்)
கொல்லுதற்றொழிலிற்பயிற்சியையுடைய (மூத்தோராகிய) அசுரர்களும், சிலை-
(தங்கள் தங்கள்) வில்லை,குனி செயும்- வளைத்தலைச்செய்யுங்கள், என்று –
என்று (தம் இனத்தாரை நோக்கிக்) கூறி, கொதித்திட்டார்-(அசுரர்கள்)
கோபித்தார்கள்;(எ-று).

    செயும்-ஏவற்பன்மை.  அனுசரும் அவுணரும் சிலைகுனியும்-
முன்னிலையிற்படர்க்கைவந்தஇடவழுவமைதி.  குனி – முதனிலைத்
தொழிற்பெயர்.  தம்பியரென்று பொருளுள்ள அநுசரென்பது, இங்கு
இளையோரைக்காட்டிற்று.  

செங் கண் நாகக் கொடியவன், செல்வமும்
தங்கள் நாடும் கவர, தரிப்பு அற,
பொங்கு கானில் புகும் சிலை வீரனோ,
எங்களோடும் எதிர்க்க வந்து, எய்தினான்!’50.-தமதுசெல்வநாடுகளைப்பகை கவரக்கொடுத்த
வில்வீரனாஎம்மை எதிர்க்க வருபவ னென்று அவுணர்
ஏளனமாக் கூறுதல்.

இரண்டு கவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.) செம்கண் நாகம் கொடியவன் – (கோபத்தாற்) சிவந்த
கண்களையுடையபாம்பின்வடிவத்தை யெழுதிய துவசத்தையுடைய
துரியோதனன், தங்கள் நாடுஉம் செல்வம்உம் கவர – தங்களது தேசத்தையும்
மற்றைச் செல்வங்களையும்பறித்துக்கொள்ள, தரிப்பு அற – நிற்பதற்கும்
இடமில்லாமல், பொங்கு கானில் புகும்-(வெப்பம்) மிகுந்த காட்டிற் சென்ற,
சிலைவீரன் ஓ – வில்வீரன்தானோ,எங்களோடுஉம் எதிர்க்க வந்து
எய்தினான் – எங்களுடன் எதிர்த்துப் போர்செய்தற்கு வந்து சேர்ந்தான்?

     செங்கண்என்பதை-நாகத்துக்காயினும், கொடியவனுக்காயினும் இயைக்க.
“நாகக்கொடியவன்” என்றது-அவன்கொடியே அவனது கொடுந்தன்மையையும்,
நன்றியறிவின்மையையும், நா இரண்டுடைமையையும், வக்கிரகதியிற்
செல்லுதலையும்குறிப்பிக்கு மென்றற்குப் போலும். நாகக்கொடியவன் –
நாகம்போலக் கொடுந்தன்மையை யுடையவ னென்றுமாம். ‘தங்கள்’என்றது,
தருமன் முதலியோரையும் உளப்படுத்தி. தரிப்பு – தரிக்குமிடம்;
தொழிலாகுபெயர்: தரித்தல் – தங்குதல். இங்கே ‘வீரன்’என்றது, இகழ்ச்சி

என்று கூறி, இகல் அசுராதிபர்,
துன்று சேனைக் குழாம் புடை சூழ்வர,
சென்று, உகாந்தத் திரைக் கடல் ஆர்ப்பபோல்,
ஒன்ற, யாரும் ஒருங்கு சென்று உற்றனர்.51.-சேனைசூழப்பேராரவாரஞ்செய்துகொண்டு அவுணர்
திரளுதல்

என்றுகூறி-,இகல் அசுர அதிபர் – வலிமையையுடைய
அசுரத் தலைவர்கள்,யார்உம் – எல்லோரும், துன்று சேனைகுழாம் புடை
சூழ்வர – நெருங்கிய சேனைகளின்கூட்டம் பக்கங்களிற் சூழ்ந்து வரும்படி,
உக அந்தம் திரை கடல் சென்று
ஆர்ப்ப போல -யுகமுடிவு காலத்தில் அலைகளையுடையகடல்கள் பொங்கி
வெளியெழுந்து ஆரவாரிப்பனபோல (ஆரவாரித்து), ஒன்ற – நெருங்க,
ஒருங்கு – ஓரிடத்தில், சென்று உற்றனர்-வந்து கூடினார்கள்; (எ-று.)

     உகாந்தம்=’யுகாந்தம்’:என்றது, பிரளயத்தை. ஒன்ற-ஒருசேர என்றபடி,
ஆர்ப்ப-பலவின்பால் வினையாலணையும்பெயர்;ஆர்ப்பது என்னுந்
தொழிற்பெயரின் விகாரமாகவுமாம். 

ஆனை, தேர், பரி, ஆள், எனும் நால்வகைத்
தானையோடும் எழுந்தனர், தானவர்;
வானும், மண்ணும், திசையும், மற்று எண் பெறும்
ஏனை லோகமும், எங்கும் நடுங்கவே,52.-அசுரர்போருக்குப் புறப்படுதல்

வான்உம் – தேவலோகமும், மண்உம் – பூலோகமும்,
திசைஉம் – திக்குக்களும், மற்று எண் பெறும் ஏனைலோகம்உம்-இன்னும்
(இவற்றுடன் வைத்து) எண்ணப்பெறுகின்ற மற்றையுலகமாகிய பாதாளமும்,
எங்குஉம் – எல்லாவிடமும், நடுங்க-(அதிர்ச்சியால்) நடுக்க மடையும்படி,
ஆனை-கஜம்,தேர்-ரதம், பரி-துரகம், ஆள்-பதாதி, எனும்-என்கின்ற, நால்
வகை தானையோடுஉம்-சதுரங்கசைனியத்துடனே, தானவர்-அசுரர்கள்,
எழுந்தனர்-(போருக்குப்) புறப்பட்டார்கள்;(எ-று.)

     ஆனை-யானையென்பதன் மரூஉ;மதத்தாற் கதஞ்சிறந்து தானும்
போர்செய்யும் யானையைமுதலில் வைத்துக் கூறினார்;கம்பரும்
“கசரததுரகமாக்கடல்கொள் காவலன்” என இவ்வாறு கூறியிருத்தல்
காண்க: இது, தமிழர்வழக்கு;வடநூலார், ‘ரதகசதுரகபதாதி’என
முறைப்படுத்திக் கூறுவர்.  

சங்கும், பேரியும், தாரையும், சின்னமும்,
துங்க மா முழவும், துடி ஈட்டமும்,
அம் கண் மா முரசும், உக அந்தத்தில்
பொங்கும் வேலை ஒலியின் புலம்பவே53.-அப்போதுபலவகை வாச்சியங்க ளொலித்தல்.

இதுமுதல் மூன்றுகவிகள் – குளகம்.

     (இ-ள்)சங்குஉம் – சங்கங்களும், பேரிஉம் – பேரிகைகளும்,
தாரைஉம் சின்னம்உம் – தாரை திருச்சின்னம் என்னும் ஊதுகருவிகளும்,
துங்கம் மா முழவுஉம் – உயர்ந்த பெரிய மிருதங்கங்களும், துடி ஈட்டம்உம்
– உடுக்கை முதலிய பறைகளின் கூட்டமும், அம் கண் மா முரசுஉம் –
அழகிய அடிக்குமிடத்தையுடைய பெரிய முரசங்களும், (ஆகப் பலவகை
வாத்தியங்கள்), உகம் அந்தத்தில் பொங்கும் வேலைஒலியின் – யுகமுடிவு
காலத்திற் கிளர்ந்தெழு கின்ற கடல்களின்ஓசைபோல, புலம்ப – ஒலிக்கவும்,-
(எ-று.)- இச்செய்யுளில் ‘புலம்ப’என்பதும், மேற்செய்யுளில் ‘மிடைய’என்பதும்,
அதன் மேற்கவியிலுள்ள ‘வளைத்தார்’என்பதோடு முடியும்.

     சங்கு, முரசு -வடசொற்றிரிபுகள்.  முழா என்னுங் குறியதன் கீழ்
ஆக்குறுகி உகரமேற்று, ‘முழவு’என நின்றது;[நன்- உயிர் – 22.]கண்-
வாச்சியத்தில் அடிக்கப்படும் இடம்;வாரினாற்கட்டப்படுகிற கண்களுமாம்.
புலம்பல் – ஒலித்தல்;இனி, புலம்ப-(மேல் நிகழும் அசுரநாசத்தைக் கருதி)
அழ என்றுமாம்.  பிரளய காலத்திற் கடல்பொங்கி உலகை யழிக்கு
மென்பது, நூற்றணிபு

சூலம், நேமி, எழு, மழு, தோமரம்,
கோலும் வார் சிலை, குந்தம், கொடுங் கணை,
நாலு தானை நடுவும் சுடர் அயில்,
வேலும், வாளின் விதமும், மிடையவே54.-அசுரர்களின்பலவகைப்போர்க்கருவிகள்
நெருங்குதல்

சூலம்-சூலங்களும், நேமி – சக்கரங்களும், எழு – வளை
தடிகளும், மழு – பரசுகளும், தோமரம் – தோமரங்களும், கோலும் வார்
சிலை- வளைதற்குஉரிய நீண்ட விற்களும், குந்தம் – ஈட்டிகளும், கொடு
கணை- கொடிய அம்புகளும், நாலு தானைநடுஉம் சுடர் அயில் வேல்உம்
– நால்வகைச் சேனையின்நடுவிலும் விளங்குகின்ற கூர்மையையுடைய
வேல்களும், வாளின் விதம்உம்-வாட்களின் வகைகளும், (ஆகிய பலவகை
ஆயுதங்கள்), மிடைய – நெருங்கவும்-(எ-று.)

     தோமரம்என்று-இருப்புலக்கைக்கும், கைவேலுக்கும், பேரீட்டிக்கும்
பெயர்.  நாலு – நான்கு என்பதன் திரிபு.  காத்தற்றொழிலன்றி
அழித்தற்றொழில்பூண்ட முக்கட்கடவுட்குங் கூற்றுவனுக்குஞ் சூலவேல்
படையாதலாலும் முருகற்கு வேல் ஆயுதமாதலாலும், சான்றோர்வேலையே
சிறப்பப் பெரும்பான்மை கூறுதல்பற்றி, அதற்கு’நாலுதானைநடுவுஞ்சுடர்’
என்னும் விசேஷணங்கொடுத்தார்;இனி, இவ்வடைமொழியை வாளுக்குங்
கூட்டுதலும் ஒன்று.  வாள்-ஈர்வாள், உடைவாள், எறிவாள் எனப் பலவகைப்
படுதலால், ‘வாளின்விதம்’என்றது.

முந்து கோப அசுரர் முடுகு தேர்,
உந்து வீரன் ஒரு தனித் தேரினை
வந்து சூழ, வளைத்தார்-மது மலர்க்
கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தினே.55.-அருச்சுனன்தனித்தேரை
அசுரர்தேர்களெல்லாம் சுற்றிக்கொள்ளுதல்.

முந்துகோபம் அசுரர் – முன்கோபத்தையுடைய அசுரர்கள்,
முடுகு தேர் – விரைந்துசெல்கின்ற தங்கள் தேர்களெல்லாம், உந்து வீரன்
ஒரு தனி தேரினை- (மாதலியாற்) செலுத்தப்படுகின்ற அருச்சுனனது
ஒப்பில்லாத வேறு துணையில்லாததேரொன்றை, வந்து சூழ-வந்து சுற்றி
நிற்க,-மதுமலர் கொந்து சூழ் வரி வண்டின் குழாத்தின் – தேனினையுடைய
பூங்கொத்தைச் சுற்றிலும் மொய்க்கின்ற இசைப்பாட்டையுடைய வண்டுகளின்
கூட்டம்போல, வளைத்தார்- (அருச்சுனனைச்)சூழ்ந்துகொண்டார்கள்;
(எ-று.)

     “அத்தினகர மகரமுனையில்லை”என்ற சூத்திரத்து ‘அகரமுனை’
என்றதன் உபலக்ஷணத்தால், ‘குழாத்தின்’என்பதில் குலாம் என்பதன்
மவ்வீறொற்றழிந்துநின்ற ஆகாரத்தின் முன் அத்துச்சாரியையின்
முதலகரங்கெட்டது;உபலக்ஷணமாவது – ஒருமொழி, ஒழிந்த தன்
இனங்களையுங்குறிப்பது:[நன்-பொது-7.]முந்துதோயவசுரர் என்று
பிரதிபேதம்.   

நீல மால் வரை ஒன்றின் நெருக்கி, வீழ்
கால மா முகில் என்ன, கடியவர்,
கோலும் வார் சிலைக் கொண்டல் அன்னான்மிசைச்
சூலம், நேமி, சுடு சரம், தூவினார்.56.-அவுணர்அருச்சுனன்மேற் கணைதூவுதல்.

நீலம் மால் வரை ஒன்றில் – நீலநிறமுள்ள பெரியதொரு
மலையின்மேல்,நெருக்கி – (ஒன்றோடொன்றுதம்மில்) நெருக்குண்டு, வீழ் –
இறங்குகின்ற, காலம் மா முகில் என்ன – கார்காலத்துக் கரிய
மேகங்கள்போல, கடியவர் – கொடுந்தன்மையுடைய அசுரர்கள், கோலும்
வார் சிலை- வளைந்தநீண்ட வில்லையுடைய,கொண்டல்
அன்னான்மிசை-மேகம்போன்றஅருச்சுனன் மேலே, சூலம் –
சூலாயுதங்களையும்,நேமி – சக்கரங்களையும்,சுடுசரம் – (பகைவர்களை)
அழிக்கின்ற அம்புகளையும்,தூவினார்-பெய்தார்கள்;(எ-று.)

     நீலமலை- அருச்சுனனுக்கும், காலமுகில்கள் – அசுரர்களுக்கும்
உவமை.  நீலவரை – இந்திர நீலரத்தினமயமானதொரு மலையென
இல்பொருளுவமையுமாம்.  மால் – உரிச்சொல்.  மா-பெரிய என்றுமாம்.
‘சிலைக்கொண்டலன்னான்’என்றதனால்,அருச்சுனனது காண்டீவத்துக்கு
இந்திரவில் உவமையா மென அறிக.  “விற்கொண்டமழையனான்” என்றார்
கம்பரும். அருச்சுனனது பெருமை வலிமை அழித்தற்கருமை பற்றி
மலையையும்,அசுரர்களது கருமை பெருந்தோற்றம் ஆரவாரம் அம்புமழை
பொழிதல் பற்றி முகிலையும்உவமை கூறினார்.

அக் கார்முக வீரனும், அங்கு அவர்தம்
மைக் கார் முகில் என்ன வழங்கிய திண்
மெய்க் காய் கணை சாபம் விசித்து, விடா,
நக்கான், இவை, நின்று, நவின்றனனே:57.-அருச்சுனனும்அவர்கள்மீது கணைதூவுதல்

அகார்முகம் வீரன்உம் – வில்வீரனாகியஅவ்வருச்சுனனும்,
அங்கு-அப்பொழுது, அவர்தம்-அவ்வசுரர்களது, மை கார் முகில் என்ன
வழங்கிய-கரிய கார்காலத்து மேகமென்று (உவமை) சொல்லப்பட்ட, திண்
மெய்-வலிய உடம்புகளை,காய்-அழிக்கும்படியான, கணை-அம்புகளை,
சாபம் விசித்து – வில்லிற் பதியவைத்து, விடா-(அவர்கள்மேற்) பிரயோகித்து,
(அவர்களைநோக்கி), நக்கான்-சிரித்து, நின்று-(சலியாமல் எதிர்) நின்று,
இவை நவின்றனன்-இவ்வார்த்தைகளைக்கூறினான்;(எ-று)-அவற்றை
மேலிரண்டுகவிகளிற் கூறுகின்றார்.

     கார்-பெய்யும்பருவத்துக்கு ஆகுபெயர். எதுகைநயம்நோக்கி
‘மெய்க்காய்’என வலி மிக்கது.

     இதுமுதற்பதினெட்டுக்கவிகள் – பெரும்பாலும் எல்லாச்சீர்களும்
மாச்சீர்களாகிய அளவடி நான்குகொண்ட கலிவிருத்தங்கள்.

திக்கு ஓடிய நும் திறலும், புகழும்,
தொக்கு ஓடி உடற்று படைத் தொகையும்,
கைக் கோடிய வெஞ் சிலையின் கணையால்,
முக் கோடியும், இன்று, முருக்குவனால்!58.-இரண்டுகவிகள்- அருச்சுனனுடைய வீரவாதம்

இதுமுதல்நான்குகவிகள் – ஒரு தொடர்.

     (இ-ள்) நும் -உங்களுடைய, திக்கு ஓடிய – எல்லாத்திசைகளிலும்
பரவிய, புகழ்உம்-கீர்த்தியையும், திறல்உம் – யுத்த சாமர்த்தியத்தையும்,
தொக்கு ஓடி உடற்று படை தொகைஉம் – திரண்டு விரைந்துவந்து
(பகைவர்களைப்)பொருது அழிக்கின்ற சேனைகளின்கூட்டத்தையும், மு
கோடிஉம் – மூன்று கோடியென்னுந் தொகையையும், கை-(எனது)
கையிலுள்ள, கோடிய-வளைந்த,வெம் – கொடிய, சிலையின்- வில்லினின்று
(எய்யப்படுகிற), கணையால்- அம்புகளினால்,இன்று – இப்பொழுதே,
முருக்குவன் – அழிப்பேன்;(எ-று.)

    புகழாவது-இம்மைப்பயனாய்இவ்வுலகத்தில் நிகழ்ந்து என்றும்
இறவாமல் நிற்குங் கீர்த்தி.  படை – ஆயுதமுமாம்.

முன் போர்தொறும் வந்து, முனைந்து, வெரீஇ,
வென் போகிய விண் உறை வீரர் அலேன்;
பொன் போலும் நும் மேனி பொடிச் செய்திடா,
பின் போகுவன்!’ என்று இவை பேசலுமே,

முன்- முன்னே, போர் தொறுஉம் – யுத்தங்கள் தோறும்,
வந்து-எதிர்த்துவந்து, முனைந்து-(உங்களோடு)பொருது, வெரீஇ-பயந்து,
வென் போகிய-முதுகுகொடுத்துத் தோற்றோடிப்போன,விண் உறை வீரர்
அலேன்-தேவலோகத்தில் வசிக்கின்ற வீரர்கள் போன்றவனல்லேன், (யான்);
(எத்தன்மையனெனின்), பொன் போலும் நும் மேனி-பொன்போலருமையான
உங்களுடம்பை, பொடி செய்திடா-தூளியாகச் செய்து விட்டு, பின்-அதன்
பின்பு, போகுவன்-(இங்கு நின்றும்) மீள்வேன், என்று இவை பேசலும் –
என்று இவ்வீரவாதங்களை(அருச்சுனன்) சொன்ன வளவில்,-(எ-று.)-இது,
மேல் 61-ஆம் கவியிலுள்ள ‘இசைத்தலும்’என்பதனோடுதொடரும்.
வென்போகியவரை ‘வீரர்’என்றது, இகழ்ச்சி.

தழல் வந்தருள் பாவை தடந் துகிலும்,
குழலும், கவர்தந்து, அடல் கூரும் உமக்கு
அழல் துன்றிய கானம் அளித்தவரை,
கழல் வெஞ் சிலை வீர! கடிந்திலையே!’60.-அசுரர்கள்அருச்சுனனைநோக்கி இகழ்ந்துகூறுதல்

தழல்வந்தருள் பாவை – அக்கினியிலே அவதரித்தருளிய
சித்திரப்பிரதிமைபோலழகிய (உங்கள் மனைவியாகிய)திரௌபதியினது, தட
துகில்உம் – பெரிய சேலையையும்,குழல்உம் – கூந்தலையும்,கவர்தந்து –
(உங்கள் முன்னிலையில்)பிடித்து இழுத்து அவிழ்த்து, அடல் கூறும்
உமக்கு-வலிமை மிகுந்த உங்களுக்கு, அழல் துன்றிய கானம் அளித்தவரை
– தீ நிரம்பிய காட்டை இடமாகக்கொடுத்த துரியோதனாதியரை,கழல்
வெம்சிலைவீர-வீரக்கழலையும்கொடிய காண்டீவத்தையுமுடைய வீரனே!
கடிந்திலைஏ- (நீ) அழித்தாயில்லையே;(எ-று.)

     ‘உன்வீரம்என்னவீரம்’ என்று இகழ்ந்தார். உனக்கும் உனது
உடன்பிறந்தவர்களுக்கும் மனைவிக்கும்பெரும் பரிபவங்களைச்
செய்தவர்களைஅழிக்க வல்லமையில்லாத உனக்கு வீரவாதம் முழங்க
என்ன வாயுண்டு என்றவாறு: இனி உனக்குத் தீங்கு செய்தவர்களைவிட்டு
உனக்கு நேரில் ஒரு தீங்குஞ்செய்யாத எங்கள்மீது போருக்குஎழுவது
வீரமன்று என்று கருத்துக்கொள்வாருமுளர்.  பாவை – உவமையாகுபெயர்.
‘கடந்திலை’என்றும் பாடம். 

என்னா, அசுரேசர் இசைத்தலுமே,
மன் ஆகவ வீரனும், வார் சிலை நாண்
தன் ஆகம் உறத் தழுவ, தழல் வாய்
மின் ஆர் கணை வி, வெகுண்டனனே.61.-ஐந்துகவிகள்- அருச்சுனனுக்கும் அசுரர்க்கும்
கடும்போர் விளையஅசுரர்பொருதற்கு அஞ்சினா ரென்று
கூறும்.

என்னா- என்று, அசுர ஈசர் – அசுரத்தலைவர்கள்,
இசைத்தலும் – சொன்னவளவிலே,-மன்ஆகவம் வீரன்உம் – நிலைபெற்ற
போரில்வல்ல அருச்சுனனும், வார் சிலைநாண்-நீண்ட வில்லின் நாணி, தன்
ஆகம் உற தழுவ-தனது மார்பை நன்றாகப்பொருந்தும்படி, (அதனைமிக்கு
இழுத்து), தழல் வாய் மின் ஆர் கணைதூவி – நெருப்புப்போற் கொடிய
நுனியையுடைய (ஒளியால்) மின்னல்போன்ற அம்புகளை(அவர்கள்மீது)
சொரிந்து, வெகுண்டனன் – கோபித்தான்;(எ-று.)

     அசுரர்கள்போலவார்த்தையாலன்றிச் செய்கையினால்தனது
கோபத்தை வெளிக்காட்டினானென்பார், ‘கணைதூவி வெகுண்டனன்’
என்றார்:இனி, வெகுண்டு கணைதூவினன் என விகுதி பிரித்துக்
கூட்டுவாரு முளர். 

பொய்த் தானவர், போர் அரி அன்னவன்மேல்
மொய்த்தார், முகில் செங் கதிர் மூடுவபோல்;
வைத்தாரை வடிக் கணை, வாள், மழு, வேல்,
உய்த்தார், வரைமேல் உருமேறு எனவே

முகில் – மேகங்கள், செம் கதிர்-சிவந்த கிரணங்களையுடைய
சூரியனை,மூடுவ போல் – மறைப்பனபோல,  பொய்தானவர்-
வஞ்சனையையுடையஅசுரர்கள், போர் அரி அன்னவன மேல் – யுத்தத்திற்
சிங்கத்தையொத்த அருச்சுனன்மேலே, மொய்த்தார்-நெருங்கி, வை தாரை
வடி கணை-கூர்மையானநுனியையுடைய நெருப்பிற்
காய்ச்சியடிக்கப்படுதலையுடையஅம்புகளையும்,வாள்-வாட்களையும்,மழு-
மழுக்களையும்,வேல்-வேல்களையும்,வரை மேல் உரும்ஏறு என-
மயைின்மேல்விழுகின்ற பேரிடிகளைப்போல,உய்த்தார்-செலுத்தினார்கள்;
(எ-று.)

    பொய்த்தானவர் என்பதற்கு-(இனி விரைவில் அழிதலினாற்)
பொய்யாகும் அசுர ரென்றுமாம். முகில் செங்கதிர் மூடுதல், விரைவில்
மூட்டம் வாங்குமென்று தெரிவித்தற்கு வந்த உவமை. வை-உரிச்சொல்: ஏறு
– ஆண்பெயர்;பெரியதை ஆணென்றல், ஒருமரபு:’ஆணலை’என்பதுங்
காண்க.  அரியன்னவன் – யானைமுதலிய பெருவிலங்குகளையும்
அழிக்கவல்ல மிருகேந்திரனாகியசிங்கம்போலப் பெரும்பகைவர்களையும்
அழிக்கவல்ல பெருவீரன்; இனி,பகையொடுக்குவதில் திருமால்
போன்றவனென்றுமாம்.  உருமுற்றெனவே என்று பிரதிபேதம்.

என்முன்; அவன் என்முன்’ எனா, எவரும்
முன்முன் வர, முந்த முருக்கினனால்-
தன்முன் ஒரு வீரர் தராதலமேல்
வில் முன்னின் நிலா விறல் வில் விசயன்.

வில்முன்னின் – வில்வித்தையைப்பற்றி ஆலோசிக்குமிடத்து,
தராதலம் மேல்-நிலவுலகத்திலே, தன் முன்-தனக்கு
எதிரில், ஒரு வீரர்நிலா-ஒருவீரரும் நிற்கப்பெறாத,விறல் வில் விசயன்-
வெற்றியைத் தருகின்ற வில்லையுடையவிசயனென்னும் ஒரு பெயரையுடைய
அருச்சுனன்,-எவர்உம்-அசுரர்கள்பலரும், என்முன் அவன் என்முன்
எனா-அவ்வருச்சுனன்எனக்கு முன்னே (போர்செய்க) எனக்குமுன்னே
(போர்செய்க) என்று சொல்லிக் கொண்டு, முன் முன் வர-ஒருவர்முன்னே
ஒருவர் தன்னைஎதிர்த்து வந்துகொண்டிருக்க,-(அவர்களையெல்லாம்),
முந்த-முற்பட முருக்கினன்-கொன்றுகொண்டே வந்தான்;(எ-று.)

     இலாஎனப்பிரித்து – விற்போர் விஷயத்தில் ஒரு வீரரையும்
தன்னினுஞ் சிறந்தவராக உடையவனாகாதஎன்று உரைப்பாருமுளர்

ஒரு தேர்கொடு வீரன், உடன்றவர்தம்
கரி, தேர், பரி, ஆள், அணி கையற, முன்
நிருதேசரை வென்றவன் நேர் என, மேல்
வரு தேர் அணிதோறும் மலைந்திடவே,

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)வீரன்-அருச்சுனன், ஒரு தேர் கொடு-(தனது) ஒரு
தேரின்மீதிலிருந்து கொண்டே, மேல் வரு தேர் அணிதோறுஉம்
உடன்றவர்தம்-மேன்மேல் வருகின்ற தேர்வரிசைகளிலெல்லாமிருந்து
போர்செய்த அசுரர்களுடைய, கரி தேர் பரி ஆள் அணி – கஜ ரத துரக
பதாதியாகிய சதுரங்க சைனியம்,கையற – அழியும்படி,-முன்நிருத ஈசரை
வென்றவன் நேர் என-முன்னே (இராவணாதி)ராக்ஷசத்தலைவர்களைச்
சயித்த ஸ்ரீராமபிரான் உவமையென்னும்படி, மலைந்திட-போர்செய்ய,-(எ-
று.)-‘மலைந்திட’என்பது வருங்கவியில் ‘குளித்திடலால்’என்பதனோடு
தொடரும்.

     ஒரு தேர் கொடுஎன்றது – பகைவர்கள்தேர் பலவற்றைத்தான்
அழித்தும் தன் தேருக்குச் சிறிதும் அவர்களால் அழிவு நேராமற் காத்து
என்றபடி. கொடு – கொண்டு: விகாரம்.  நிருதர்-நைர்ருதர்:
வடமொழித்திரிபு: நிருருதி என்னும் திக்பாலகியினது மரபில் தோன்றியவர்.   

வீரன் சரம் வஞ்சகர் மெய்ம் முழுதும்
கூரும்படி சென்று, குளித்திடலால்,
ஆரும் பொர, அஞ்சினர்; அப்பொழுதில்
தேர் உந்தினர், எண்ணில் தெயித்தியரே.

)வீரன் சரம்-அருச்சுனனது பாணங்கள், வஞ்சகர் மெய்
முழுதுஉம் – வஞ்சனையையுடையஅசுரர்களது உடம்பு முழுவதிலும்,
கூரும்படி – மிகும்படி, சென்று குளித்திடலால்-போய்த்தைத்து
முழுகிவிட்டதனால்,ஆர்உம் பொர அஞ்சினர் – (தானவர்கள்) எவரும்
எதிர்த்துப் போர் செய்தற்குப் பயப்பட்டார்கள்;அ பொழுதில்-
அந்தச்சமயத்தில், எண் இல் தெயித்தியர் – கணக்
கில்லாததிதிமக்களாகிய அசுரர்கள், தேர் உந்தினர்-தேரை எதிரிற் செலுத்தி
வந்தார்கள்;(எ-று.)-தைத்தியர்என்ற இது-தயித்தியர் எனப் போலிபெற்று,
மோனைப்பொருத்தம்நோக்கி, தெயித்தியர் எனத் திரிந்துநின்றது

என்னே, ஒரு மானுடனுக்கு எவரும்
கொன்னே அடல் ஆண்மை கொடுக்கும்அதோ!
இன்னே, இவன் ஆவி அழித்து, இமையோர்
முன்னே வய வாகையும் முற்றுவமால்!’66.-போர்செய்யஅஞ்சிய தானவரைநோக்கி அஞ்சாதவர்
கூறியது

மூன்றுகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)என்னே – (இது) என்ன செய்கை?  ஒரு மானுடனுக்கு –
மனிதனொருவனுக்கு,எவர்உம் – (அசுரர்கள்) யாவரும், கொன்னே –
வீணாக,அடல் ஆண்மை – பல பராக்கிரமங்களை,கொடுக்குமதுஓ –
இழப்பது தகுதியோ?  இன்னே – இப்பொழுதே, இவன் ஆவி அழித்து –
இவனது உயிரை உடம்பினின்று ஒழித்து, [கொன்றுஎன்றபடி],இமையோர்
முன்னே-தேவர்களது முன்னிலையிலே,வயம் வாகைஉம் – வெற்றிக்கு
அடையாளமான வாகைப்பூமாலையையும்,முற்றுவம் – குறைவின்றி
அணிவோம்;(எ-று.)-‘என்றுகூறி’என வருவிக்க.  ஆல் – அசை:
தேற்றமுமாம்.

    என்-எவனென்னும் அஃறிணைமுற்றின்விகாரம்;ஏ-சாரியை. கொன் –
பயனின்மைப்பொருள் குறிப்பதோர் இடைச்சொல்;இமையாக்கண்ணராகலின்,
‘இமையோர்’என்றார்: இவ்வினையாலணையும்பெயரில்எதிர்மறை யாகாரம்
புணர்ந்து கெட்டது: விகுதிமுதலாகாரம் ஓவாயிற்று.  இனி, இமையில்
(மூடாமையாகிய) விசேஷமுடையவரென்றுமாம். முன், இங்கே-இடமுன்.
வாகை என்னும் மரத்தின்பெயர், இங்கே, இருமடியாகுபெயர்.  வென்றோர்
வாகைமாலைசூடுவரென்பது, தமிழர்மரபு.  முற்றுவம் – நீங்களும் யாமும்
என முன்னிலையாரைத்தம்மோடு உளப்படுத்தி அதற்கு உரிய அம்விகுதி
பெற்றுவந்த தன்மைப்பன்மைமுற்று;[நன்- வினை- 13.] 

காளப் புயல் என்ன நிறம் கரியார்,
மீளப் படைகொண்டு, விரைந்து, வெகுண்டு,
ஆளித் திறல் மொய்ம்பனை, அங்கு அடலால்,
வாளக் கிரி என்ன, வளைந்து, எவரும்,67.-இதுமுதல்ஐந்துகவிகள் – தானவருடன்
அருச்சுனனுக்குக்கடும்போர் விளைய, அவன்
அவர்களொழியுமாறுபிரமாஸ்திரந் தொடுத்தமை கூறும்

காளம் புயல் என்ன-கரிய (கார்காலத்து) மேகம் போல, நிறம்
கரியார் – கருமைநிறத்தையுடையவர்களாகிய, எவர்உம்-
தைத்தியர்களெல்லோரும், மீள படைகொண்டு-(முன் எடுத்து வந்தவை
போதாமல்) மறுபடியும் பல ஆயுதங்களைஎடுத்துக்கொண்டு, விரைந்து-
துரிதமாக வந்து, வெகுண்டு – கோபித்து, ஆளி திறல் மொய்ம்பனை-
சிங்கத்தைப்போன்ற சாமர்த்தியத்தையும் வலிமையையுமுடைய
அருச்சுனனை,வாளம் கிரி என்ன-சக்கர வாளமலைபோல,வளைந்து-
(இடைவிடாமற்) சூழ்ந்துகொண்டு, அங்கு-அப்பொழுது [அவ்விடத்தில்],
அடலால் – போர்செய்ததனால்,-(எ-று.)-‘ஆர்த்தார்’என வருங் கவியோடு
இயையும்.

     என்ன -உவமவுருபு.  மீள – (பகைவன்) பின்னிடையஎன்றுமாம்.
வாளக்கிரி – ஏழுதீவுகளையுஞ்சூழ்ந்த ஏழு சமுத்திரங்களுக்கும் அப்புறத்தில்
பூமிக்குக் கோட்டைமதில்போலச் சுற்றியிருப்பதொரு மலை

ஆர்த்தார்; அகல் வானமும் ஆழ்கடலும்
தூர்த்தார், சுடர் வெம் படைகொண்டு, எவரும்
தேர்த் தானவர்; வான் உறை தேவரும் மெய்
வேர்த்தார், ‘இனிமேல் விளைவு ஏது!’ எனவே.

தேர்தானவர் எவர்உம் – (முன்னே போர்செய்ய அஞ்சிய)
தேரின்மீதுள்ள தானவர்களெல்லாரும், ஆர்த்தார் – அஞ்சாது பல
(தைத்தியர்கள் பொருதலைநோக்கி ஆனந்தத்தால்) ஆரவாரித்தார்கள்;
சுடர் வெம்படை கொண்டு – (அருச்சுனன் மீது எறிந்த) ஒளியையுடைய
கொடிய ஆயுதங்களால், அகல் வானம்உம் – பரந்த ஆகாயத்தையும், ஆழ்
கடல்உம் – ஆழ்ந்த கடலையும்,தூர்த்தார் – நிறைத்தார்கள்;(அதுகண்டு),
வான் உறை தேவர்உம் – ஆகாயத்திலிருந்து போர்காண்கின்ற தேவர்களும்,
இனி மேல் விளைவுஏது என-இனிமேல் (அருச்சுனனுக்கு) உண்டாகும்
அபாயம் யாதோவென்று சங்கித்து, மெய்வேர்த்தார்-உடம்பு
வேர்வையடைந்தார்கள்;(எ-று.)

    மெய்வேர்த்தல்-அச்சம்பற்றிய மெய்ப்பாடு. இனியென்பது, எதிர்காலப்
பொருள்குறிப்பதோர் இடைச்சொல்.  விளைவு- உண்டாதல்: உண்டாகுஞ்
செயலுக்குத் தொழிலாகுபெயர்.  

கூற்று ஒப்பன பல் படை கொண்டு, அவன்மேல்
சீற்றத்தொடு எறிந்தனர், தீயவரும்;
ஆற்றல் சிலை வீரனும், அவ் அவ் எலாம்
மாற்றி, சர மாரி வழங்கினனால்.

தீயவர்உம் – கொடிய அசுரர்களும், கூற்று ஒப்பன-
(நாசத்தைச் செய்தலால்) யமனைஒப்பனவாகிய, பல் படை-பல ஆயுதங்களை,
கொண்டு – (கைகளில்) எடுத்து, அவன் மேல் – அவ்வருச்சுனன்மீது,
சீற்றத்தொடு – கோபத்துடனே, எறிந்தனர் – வீசினார்கள்; ஆற்றல்
சிலைவீரன்உம்-வலிய வில்லையுடையஅருச்சுனனும், அவ் அவ்எலாம்-அந்த
அந்த ஆயுதங்களையெல்லாம், மாற்றி- (தான் விடும் அம்புகளால்) விலக்கி,
சரம் மாரி வழங்கினன்-(அவர்கள்மீதும்) பாணவருஷத்தைப் பொழிந்தான்;(எ-று.)

     அடுக்கிவந்தஅவ் என்பது – சுட்டடியாப்பிறந்த பலவின்பாற் பெயர்.

அவன் விட்ட சரங்கள் அறுத்து, அணி தேர்
கவனப் பரி பாகு கலக்கம் உற,
பவனத்துடன் அங்கி பரந்ததுபோல்,
துவனித்து, அவர் வெம் படை தூவுதலும்,

இதுவும், மேற்கவியும் – ஒரு தொடர்.

     (இ-ள்.)அவர்-அசுரர்கள், அவன் விட்ட சரங்கள்-அருச்சுனன் எய்த
அம்புகளை,அறுத்து-(தாங்கள் விடும் ஆயுதங்களால்) துணித்துத்தள்ளி,
துவனித்து-ஆரவாரஞ்செய்து, அணி தேர் – (அவனது) அழகிய தேரும்,
கவனம் பரி-விரைந்த நடையையுடைய குதிரைகளும், பாகு – சாரதியும்,
கலக்கம் உற – கலங்கு தலையடையும்படி, பவனத்துடன் அங்கி பரந்தது
போல் – காற்றோடுநெருப்புப் பரவியதுபோல [மிகவும்அதிகமாக விரைவிற்
பரவும்படி],வெம் படை தூவுதலும்-கொடிய ஆயுதங்களை,(அவன்மேற்)
சொரிந்தவளவில், (எ-று.)-‘படையைத்தொட்டான்’என மேற்கவியோடு
இயையும்.

     பாகு – யானைதேர் குதிரைகளைச்செலுத்துந் தொழில்;அது,
இங்குப் பாகனுக்குப் பண்பாகுபெயர்.  அங்கி=அக்நி.  துவனித்து-த்வநி
என்னும் வடமொழிப் பெயர்ச்சொல்லடியாகப் பிறந்த வினையெச்சம்.

கட்டு ஆர் முது கார்முக வீரனும், முன்
கிட்டா, உலகோர் புகழ் கேழ் கிளர் சீர்
முள் தாமரைமேல் முனிவன் படையைத்
தொட்டான், அசுரேசர் தொலைந்து உகவே.

கட்டுஆர்-கட்டு அமைந்த, முது கார்முகம்-பழமையான
காண்டீவத்தையுடைய, வீரன்உம் – அருச்சுனனும், முன் கிட்டா-
(அவர்களுக்கு) எதிரில் நெருங்கி, அசுர ஈசர் தொலைந்துஉக-அவ்வசுரத்
தலைவர்கள்அழிந்து விழும்படி, உலகோர் புகழ் –
எல்லாவுலகங்களிலுமுள்ளார் யாவருந் துதிக்கின்ற, கேழ் கிளர் – ஒளி
விளங்குகின்ற, சீர்-சிறப்பையுடைய, முள் தாமரை மேல் முனிவன்-
முள்ளையுடையதாமரைமலரின் மீது தோன்றிய பிரமதேவனது, படையை –
அஸ்திரத்தை, தொட்டான்-பிரயோகித்தான்;(எ-று.)

     முதுகார்முகம் -மிகப்பழையதாயிருந்தும் எந்தப்போரிலுந் துணிபடாத
வலிமை யுடையதென்றபடி. 

காற்றாய், மிக மண்டு கடுங் கனலாய்,
கூற்றாய், அவர் ஆவி குடித்து, உகு செஞ்
சேற்றால், ஒரு பாதி சிவந்தது, பார்,
ஏற்றான் ஒரு பங்கு என, எங்கணுமே.72.-பிரமாஸ்திரத்தினால்போர்க்களம் பட்ட நிலை

(அப்பிரமாஸ்திரம்),-காற்று ஆய் – (விரைந்து செல்லுதலால்)
காற்றையொத்தும், மிக மண்டு கடு கனல் ஆய் – (எரிப்பதனால்)
மிகுதியாகப் பற்றியெரிகின்ற கொடிய நெருப்பையொத்தும், கூற்று ஆய்-
(கொல்லுதலால்) யமனையொத்தும், அவர் ஆவி குடித்து-அவ்வசுரர்களது
உயிரைப் பருகிவர,-உகுசெம் சேற்றால்-(அவர்களுடம்பினின்று)சிந்துகின்ற
சிவந்த இரத்தக்குழம்பினால்,பார்-(யுத்த) பூமி, ஏற்றான்ஒரு பங்கு என –
ருஷபத்தை வாகனமாகவுடைய சிவபிரானது ஒரு பாகம்போல, ஒரு பாதி
எங்கண்உம் – ஒரு பாதியிடம் முழுவதும், சிவந்தது-செம்மை நிறமடைந்தது;
(எ-று.)

     ஆய் -உவமவுருபு.  குடித்து = குடிக்க: எச்சத்திரிபு.  செஞ்சேறு –
செந்நீர்ச்சேறு.  ஒருபாதி – அசுரர்களுள்ள பாகம் மாத்திரம்;
அருச்சுனனுள்ள பாகத்தில் இரத்தம் இல்லையென்க. ஏறு என்னும்
ஆண்மைப்பெயர் பசுவிற்கு உரியதாதலை,”எருமையுமரையும்பெற்ற
மன்ன”என்னுந் தொல்காப்பியத்தால் அறிக.  அர்த்தநாரீசுவரனாகிய
சிவனது  உருவத்தில் தானாகியவலப்பாகம் சிவந்தும், பார்வதியாகிய
இடப்பாகம் கறுத்தும் இருத்தலால், ‘ஏற்றானொருபங்கென’என்றார். இனி,
ஏற்றானொருபங்கெனஎன்பதற்கு – (மாவலிபக்கல் மூவடி) மண்ணைஇரந்த
திருமாலினது வலப்பாகம்போல என்றும் உரைக்கலாம்;”பிறைதங்கு
சடையானைவலத்தே வைத்து”எனப் பெரியார் பணித்தார்.  ஏற்றான்-
பிக்ஷாடனஞ்செய்தவனெனச் சிவபிரானுமாம். 

நூறாயிர தேர் அணி நூறியும், மேல்
ஆறாத சினத்துடன், அக் கணை போய்,
மாறாய், அவர் மார்பமும், வாள் முகமும்
சீறா, எதிர் சென்று, செறிந்ததுவே.73.-பிரமாஸ்திரம் படுத்திய பாடு

அ கணை- அந்தப்  பிரமாஸ்திரம்,-நூறுஆயிரம் தேர்
அணி – இலட்சம் தேரின்வரிசைகளை,நூறிஉம்-பொடியாக்கியும், மேல்
ஆறாதசினத்துடன்-அதன்பின்புந் தணியாத கோபத்துடனே, போய்-சென்று,
மாறு ஆயவர்-பகையான அசுரர்களது, மார்பம்உம்-மார்பையும், வாள்
முகம்உம்-ஒளியையுடைய முகத்தையும் (நோக்கி), சீறா-கோபித்து,எதிர்
சென்று-(அம்மார்பு முகங்களின்) எதிரிற் போய், செறிந்தது-(அவற்றில்)
அழுந்திற்று;

     நூறாயிரதேர்= நூறாயிரந்தேர்: செய்யுளாதலின் விகாரம் பெற்று
வந்தது. மாறு – மாற்றார்க்குப்பண்பாகுபெயர். இனி, மாறுஆய் –
பகையுடையதாய், அவர்-அவ்வசுரர்களுடைய என்றும் உரைக்கலாம்.
வாள்-உரிச்சொல்.  

குருகோடு இயையும் குருதிக் கடல்வாய்,
ஒரு கோடி தயித்தியர் ஆர் உயிர் உண்டு,
அருகு ஓடிய வாளி அடர்ப்பது கண்டு,
இரு கோடியும் உற்றன, மற்று-இவன்மேல்74.-இருகோடியசுரர்திரண்டுஅருச்சுனனோடுபொர
நெருங்குதல்

அருகுஓடிய வாளி-(அவ்வசுரர்களது) சமீபத்திலே
விரைந்துசென்ற அந்த அஸ்திரம், குருகோடு இயையும் குருதி கடல்வாய்-
(கழுகு முதலிய புலாலுண்ணும்) பறவைகளோடு பொருந்திய
இரத்தசமுத்திரத்திலே, ஒரு கோடி தயித்தியர் ஆர்உயிர் உண்டு-ஒருகோடி
அசுரர்களது அருமையான உயிரை (உடம்பினின்று எடுத்து) உட்கொண்டு,
அடர்ப்பது-அழித்துவருவதை, கண்டு-பார்த்து, இருகோடிஉம்-(அசுரர்களது
மற்றை) இரண்டுகோடித் தொகையும், இவன்மேல்-அருச்சுனன்மேலே,
உற்றன-வந்து நெருங்கின;(எ-று.)-மற்று-அசைநிலை;வேறு என்னும்
பொருள தாக்கி, மற்றிருகோடி யென இயைத்தலுமாம்

இருண்டது, மண்ணும் விண்ணும்; எல்லை எண்
திசையும், எங்கும்,
புரண்டது, குருதி வெள்ளம், ஊழி வெங்
கடலின் பொங்கி;
முரண் தகு தேரோன்தன்னை மொய்த்த வெம்
பனிபோல் மூடித்
திரண்டது, திருகி மீண்டும், திறலுடைத்
தகுவர் சேனை.75.-இதுமுதற்பதினான்குகவிகள்- பலவகைப் படைகள்
கொண்டு அருச்சுனனும்அசுரசேனைகளும்பொர,
அசுரசேனைதேய்ந்தமை கூறும்

மண்உம் – பூமியும், விண்உம்-ஆகாயமும், எல்லை
எண்திசைஉம் – எட்டுத்திக்குகளின் எல்லைகளும்,இருண்டது – (தனித்தனி
இறந்துபோன அசுரர்திரளால்) இருட்சியடைந்தது;குருதி வெள்ளம்-
(அவர்களது) இரத்தப்பெருக்கம், ஊழி வெம் கடலின்-பிரளயகாலத்துக்
கொடிய கடல்போல, பொங்கி (மேன்மேல்) அதிகப்பட்டு, எங்குஉம்-
எவ்விடத்தும், புரண்டது-(அளைகளோடு)பரவிற்று;திறல் உடை தகுவர்
சேனை-வலிமையையுடைய(மற்றை இருகோடி) அசுரர்களுடைய சைனியம்,
முரண் தகு தேரோன் தன்னை-வலிமைபொருந்தியதேரையுடைய சூரியனை,
மொய்த்த-(சுற்றிலும்) நெருங்கி மறைத்த, வெம் பனி போல்-கொடிய பனி
போல, (முரண் தகு தேரோன் தன்னை)- வலிமைபொருந்திய தேரையுடைய
அருச்சுனனை,மூடி-மறைத்து, மீண்டுஉம் – மறுபடியும், திருகி திரண்டது-
சுற்றிலும் வளைந்துகூடிற்று.(எ-று.)

     சூரியனைமொய்த்த பனி-இடையூறொன்றுஞ்செய்யமாட்டாமைக்கும்
விரைவிலழிதற்கும் உவமை.

     இது முதல்இருபத்து மூன்று கவிகள்-இச்சருக்கத்தின் முதற்
கவிபோன்ற அறுசீராசிரிய விருத்தங்கள்

எங்கு, எங்கே, எங்கே, வல் வில் மனிதன்?’ என்று,
எதிர்ந்தோர் யார்க்கும்,
அங்கு, அங்கே அங்கே ஆகி, அவரொடும் அடு
போர் செய்தான்-
சங்கு அங்கு ஏய் செங் கை நல்லார் விடுத்தன
சுரும்பின் சாலம்,
‘கொங்கு எங்கே, எங்கே?’ என்று தனித்தனி
குடையும் தாரான்.

வல்வில் மனிதன் – வலிய வில்லையுடையமனுஷ்யன்,
எங்கு எங்கே எங்கே – எவ்விடத்துள்ளான் எவ்விடத்துள்ளான்?’என்று
சொல்லி, (தனித்தனி தேடிக்கொண்டு, எதிர்ந்தோர் யார்க்குஉம் –
எதிர்த்துவந்த அசுரர்களனைவர்க்கும்,அங்கு அங்கே அங்கே ஆகி –
அவரவர் கருதிய அந்தந்த முன்னிடத்திலே சென்று, அவரொடுஉம் –
அவர்களுடனே, அடு போர் செய்தான் – கொல்லுகின்ற யுத்தத்தைப்
பண்ணினான்;(யாரென்னில்), சங்கு-சங்கவளையல்கள்,அங்கு-
முன்னிடத்தில், ஏய் – பொருந்தப்பெற்றுள்ள, செம் கை –
சிவந்தகைகளையுடைய,நல்லார் – அழகிய பெண்கள், விடுத்தன-
தூதனுப்பியவையாகிய, சுரும்பின் சாலம் – வண்டுகளின் கூட்டம், கொங்கு
எங்கே எங்கே என்று – தேன் எவ்விடத்தே (உள்ளது) எவ்விடத்தே
(உள்ளது) என்று, தனி தனி – தனியேதனியே, குடையும் – ஆராய்ந்து
உண்கின்ற, தாரான் – பூமாலையையுடையஅருச்சுனன்;(எ-று.)

    பின்னிரண்டடிகளால், கண்ட மகளிர் யாவராலுங் காதலிக்கப்படுகின்ற
அருச்சுனனது கட்டழகு கூறப்பட்டது.  தேனெங்கேயெங்கேயென்று
தேடிவருகின்ற வண்டுகளுக்கெல்லாம் திருப்தியாகத் தேனைக் கொடுக்கின்ற
மாலையையுடையவன் போரெங்கே யெங்கேயென்று தேடிவருகின்ற
அசுரர்க்கெல்லாம் திருப்தியுண்டாம்படி போரைக் கொடுத்தான் என
ஒருவகைச் சாதுரியந் தோன்றக் கவி கூறினார். சங்கு – அதனாலாகிய
வளைக்குக்கருவியாகுபெயர். நல்லாள் என்று இலக்குமிக்குப் பெயராதலால்,
நல்லார் என்பது – பெரும்பாலும் மகளிரையே யுணர்த்தும்.  குடையுந் தார்-
பெயரெச்சம் இடப்பெயர் கொண்டது: குடைதற்கிடமான மாலையென்க

கார்முகக் கொண்டல் அன்னான்மிசைக் கடுங்
கணைகள் ஏவி,
தேர்முகத்து இயக்கம் மாற்றி, திதி மைந்தர் வெம்
போர் செய்ய,
போர்முகத்து ஒருவர் ஒவ்வாப் புரி சிலை
வீரன்தானும்,
கூர் முகப் பகு வாய், மாயோன், கொடுங் கடும்
பகழி கோத்தான்.

திதிமைந்தர்-திதி என்னும் காசியப முனிவர் மனைவியது
புத்திரர்களாகிய அசுரர்கள், கார்முகம் கொண்டல் அன்னான்மிசை-
வில்லையுடையமேகம்போன்ற அருச்சுனன் மேலே, கடு கணைகள்ஏவி –
கொடிய அம்புகளைப்பிரயோகித்து, தேர் முகத்து இயக்கம் மாற்றி-(அவனது)
தேரினது முன்செல்லுதலைத்தடுத்து, வெம் போர் செய்ய-கொடிய
யுத்தத்தைப்பண்ண, போர்முகத்து ஒருவர் ஒவ்வா- போர்களத்திலே ஒருவரும்
(தனக்கு) ஒப்பாகப் பெறாத,புரி சிலை வீரன்தான்உம்-கட்டமைந்த
வில்லையுடையஅருச்சுனனும், கூர் முகம்- கூர்மையாகிய நுனியையும்,
பகுவாய்-பிளவுபட்ட வாயையுமுடைய, கொடு- கொடிய, கடு-வேகத்தையுடைய,
மாயோன் பகழி-திருமாலினது அஸ்திரத்தை, கோத்தான்-தொடுத்தான்; (எ-று.)

    மாயோன்பகழி-வைஷ்ணவாஸ்திரம்.  விரைவுணர்த்தும் ‘கடி’என்னும்
உரிச்சொல், கடும் எனத் திரிந்தது.

விண்ணிடத்து அசனி நாகர்மேல் வெகுண்டிடுவது என்ன,
எண்ணுடைச் சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி,
வண்ண வில் படை இராமன் வாரிதி வெள்ளம் வீத்த
பண் எனப் படுத்தது-அந்தப் பைந் துழாய்ப் பரமன் வாளி.

பைதுழாய் பரமன்-பசிய திருத்துழாய் மாலையையுடைய
யாவரினுஞ் சிறந்த திருமாலைத்தெய்வமாகவுடைய, அந்த வாளி-அந்த
அஸ்திரம் ஒன்று,-விண்ணிடத்துஅசனி-மேகத்தினிடத்தே தோன்றுகிற இடி
ஒன்றுதானே, நாகர்மேல் – பாதாள லோகத்திலுள்ள சர்ப்பசாதியார்
பலர்மேலும், வெகுண்டிடுவது என்ன-கோபித்திடுவதுபோல, எண் உடை
சேனைவெள்ளம் எங்கண்உம் – (இரண்டுகோடி யென்னுங்) கணக்கையுடைய
சேனைக்கூட்டம்எவ்விடத்தும், தான்ஏ  ஆகி-தானே சென்று நின்று, வண்ணம்
வில் படை இராமன்-அழகிய கோதண்டமென்னும் வில்லைஆயுதமாகவுடைய
ஸ்ரீராமபிரான், வாரிதி வெள்ளம் வீத்த-கடல் நீர்வெள்ளத்தை ஒழியச்செய்த,
பண் என-விதம்போல, படுத்தது- (அசுரசேனையை)அழித்தது;(எ-று.)

     விண்மேகத்துக்கு இடவாகுபெயர்.  நாகராவார் – படமும் வாலு
முடையராய் மனுஷ்யரூபமும் தெய்வப்பிறப்புமான தொரு சர்ப்பசாதியார்.
பாம்புகள் இடியோசையைக் கேட்ட மாத்திரத்தில் அஞ்சி அழியு மென்பது,
நூற்றுணிபு;எண் உடை-“எண்பதுகோடிநினைந்தெண்ணுவன”எனக்
கூறியுள்ளவாறு பல எண்ணங்களையுடையஎன்றுமாம்.  வாரிதி-
நீர்தங்குமிடம்: வாரி-நீர்.  இராவணனாற்கவர்ந்துபோகப்பட்ட சீதாபிராட்டி
இலங்கையிலிருக்கிற செய்தியை அனுமான் சென்று அறிந்துவந்து சொன்ன
பின்பு, இராமபிரான் வானரசேனையுடனேபுறப்பட்டுச் சென்று
கடற்கரையையடைந்து கடலைக்கடக்கஉபாயஞ்  சொல்லவேண்டுமென்று
வருணனைப்பிரார்த்தித்து அங்குத் தருப்பசயனத்திலே படுத்து ஏழுநாள்
வரையிலே பிராயோபவேசமாகக் கிடக்க, கடலரசனாகியவருணன்
அப்பெருமானது மகிமையை அறியாமல் உபேக்ஷையாயிருக்க, சக்கரவர்த்தித்
திருமகனார்அதனைக்கண்டுகோபங்கொண்டு வானரர் நடந்து செல்லும்படி
கடலைவற்றச் செய்வே னென்றுஆக்கிநேயாஸ்திரத்தை எடுத்துத்தொடுத்து
விடுக்கத் தொடங்கினமாத்திரத்தில், மிக வெப்பங்கொண்டவனாய்வருணன்
அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவரைச் சரணமடைந்து அணைகட்டுதற்கு
உடன்பட்டா னென்பது, ஸ்ரீ ராமாயண கதை. 

தசையும் வெம் பிணமும் துன்ற, தனித்தனி பெருகி, எல்லாத்
திசைதொறும் குருதி நீத்தம் திரைக் கடல் சென்று மண்ட,
அசைவு இலா அவுணர் மீண்டும் அந்தரத்து ஒளித்து நின்று,
விசைய வில் விசயன்தன்மேல் வெகுண்டு, வெம்
படைகள் விட்டார்.

(அந்த அஸ்திரத்தினால்),தசைஉம் – சதைகளும்,
வெம்பிணம்உம் – பயங்கரமானபிணங்களும், துன்ற – (எங்கும்) நிறைய,
குருதி நீத்தம் – இரத்தவெள்ளம், எல்லாம் திசைதொறுஉம் –
திக்குக்களெல்லாவற்றிலும், தனி தனி பெருகி – தனியே தனியே வழிந்தோடி,
திரை கடல் சென்று மண்ட – அலைகளையுடையகடல்களிலே போய்ச்சேர,
(அதன் பின்பு), அசைவு இலா அவுணர்-(அழிந்தவர்போக) அழிதலில்லாத
அசுரர்கள், மீண்டுஉம்-மறுபடியும், அந்தரத்து ஒளித்து நின்று –
(மாயையினால்)ஆகாயத்திலே மறைந்து நின்று, விசையம் வில் விசயன்
தன்மேல்-வெற்றியைத் தருகின்ற வில்லையுடையஅருச்சுனன்மேலே,
வெகுண்டு – கோபித்து, வெம் படைகள் விட்டார்-கொடிய ஆயுதங்களை
எறிந்தார்கள்;(எ-று.)

விட்ட வெம் படைகள் எல்லாம் விண்ணிடைச்
சுண்ணம் ஆக,
கட்டழகு உடைய வீரன், மகேந்திரக் கணையால் வீக்க,
எள்-துணைப் பொழுதில் வஞ்சகர் எழிலியின் படை மேல் வீச,
வட்ட வார் சிலையினானும், மண்டு அழற் படையால் மாற்ற,

இதுவும், மேற்கவியும்-குளகம்.

     (இ-ள்.)விட்ட வெம் படைகள் எல்லாம் – வீசிய கொடிய ஆயுதங்கள்
யாவும், விண்ணிடை-ஆகாயத்தில்தானே [தன்மேல்விழுதற்கு முந்தியே],
சுண்ணம் ஆக – பொடியாய்ப் போம்படி, கட்டு அழகு உடைய வீரன்-
மிகுந்த அழகையுடைய அருச்சுனன், மகேந்திரன் கணையால்-சிறந்த
இந்திரனைத்தெய்வமாகவுடைய மகேந்திராஸ்திரத்தால், வீக்க-அழிக்க,-
வஞ்சர் -வஞ்சனையுள்ளஅசுரர்கள், எள் துணைபொழுதில்-
எள்ளளவுகாலத்தில் [கணப்பொழுதினுள்ளே],எழிலியின் படை மேல் வீச-
(வருணணைத்தெய்வமாகவுடைய) மேகாஸ்திரத்தைப் பிரயோகிக்க, வட்டம்
வார் சிலையினான்உம்- வட்டவடிவமாக வளைந்தநீண்ட வில்லையுடைய
அருச்சுனனும், மண்டு அழல் படையால் – பற்றியெரிகின்ற அக்கினியைத்
தெய்வமாகவுடைய ஆக்நேயாஸ்திரத்தால், மாற்ற – (அதனை)விலக்க,-(எ-
று.)-‘ஏவ’என மேலிற்கவியில்தொடரும்.

     என் – மிக்கசிறுமைக்கு எடுத்துக் காட்டுவதொரு அளவை.

மண்டி மேல் எழுந்து, இங்கு எல்லா உலகையும்
மடிக்கும் மாயச்
சண்ட வாயுவின் பேர் வாளி, தானவர் அவன்மேல் ஏவ,
அண்டமும் துளங்க, ஓங்கும் அரு வரைப் பகழி விட்டான்-
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர்
விசயன் என்பான்.

இங்கு – இப்போர்க்களத்தி லிருந்துகொண்டே, மேல்
எழுந்து – மேலே வீசி, மண்டி-நெருங்கி, எல்லா உலகை உம் –
உலகங்களெல்லாவற்றையும், மடிக்கும் – அழிக்கவல்ல, மாயம் –
தீங்குசெய்தலையுடைய,சண்டம் – உக்கிரமான, வாயுவின் பேர் வாளி –
வாயுவின் பெயரையுடைய பெரிய வாயவியாஸ்திரத்தை, தானவர் –
அசுரர்கள், அவன்மேல் ஏவ – அருச்சுனன் மீது பிரயோகிக்க,-எண் திசை
முழுதுஉம் – எட்டுத்திக்குக்கள் முழுவதிலும், தன் பேர் எழுது –
(கீர்த்தியினால்)தனது பேரை எழுதிய, போர் – போரில்வல்ல, விசயன்
என்பான் – அருச்சுனனென்று சிறப்பித்துக் கூறப்படுபவன், -அண்டம்உம்
துளங்க ஓங்கும் – உலகவுருண்டையிலுள்ளார் யாவரும் (கண்டு) நடுங்கும்
படி உயர்ந்துள்ள, அருவரை பகழி – (அழித்தற்கு) அரிய மலைமயமான
சைலாஸ்திரத்தை, விட்டான் – (அவ்வாயவ்யாஸ்திரத்துக்கு எதிராக)
விடுத்தான்;(எ – று.)

     மலைகாற்றைத் தடுத்தலினால்,வாயுவின் அஸ்திரத்திற்குச்
சயிலஅஸ்திரம் மாறாகுமென்க.  தானவர், தைத்தியர் என்பவற்றிற்குப்
பொருள் வேறுபாடு உண்டாயினும், அவ்வேறுபாட்டைக் கருதாமற்
பொதுப்படக் கூறுதலும், ஒருகவிசமயமாம்.  ‘என்பான்’எனச்
செயப்படுபொருள் வினைமுதல்போலக்கூறப்பட்டது.  அண்டருந்துளங்க
என்றும் பாடம்.

காற்றும் வெங் கனலும், காரும் இடியும்,
கல்மழையும், எங்கும்
தோற்றிய இருளும் மின்னும், திசைதொறும்
சூழ்ந்து பொங்க,
கூற்றும் வாய் குழறி அஞ்ச, கொடிய மா மாய வாளி
ஆற்றல் சால் அரி அன்னான்மேல் எறிந்து,
அடல் அவுணர் ஆர்த்தார்.

அடல் அவுணர் – வலிமையையுடைய அசுரர்கள்,-
காற்றுஉம் – வாயுவும், வெம் கனல்உம் – வெவ்விய அக்கினியும், கார்உம் –
மேகமும், இடியும்-, கல்மழைஉம் – சிலாவருஷமும், எங்குஉம் தோற்றிய
இருள்உம் – எவ்விடத்துங் காணப்பட்ட அந்தகாரமும், மின்உம் –
மின்னலும், திசைதொறுஉம் – எல்லாத்திக்குக்களிலும், சூழ்ந்து பொங்க –
சுற்றிலும் நிறையவும்,- கூற்றுஉம் – யமனும், வாய் குழறி அஞ்ச – பயந்து
வாய் குளறவும், கொடிய மா மாயம் வாளி – கொடுந்தன்மையையுடைய
பெரிய  மாயைவடிவமான மோஹாஸ்திரத்தை, ஆற்றல் சால் அரி
அன்னான்மேல்- வலிமைமிகுந்த சிங்கத்தை யொத்த அருச்சுனன் மேலே,
எறிந்து – பிரயோகித்து,-ஆர்த்தார் – (இனிவெல்லலாமென்னும் உறுதியால்)
ஆரவாரஞ்செய்தார்கள்; (எ – று.)-வாய்குழறியஞ்ச – விகுதி பிரித்துக்
கூட்டப்பட்டது.

கல்மழை சொரிந்து, வேகக் கனல்மழை வீசி, எங்கும்
மின் மழை சிந்தி, மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி,
செல் மழை சிதறி, எல்லாத் திசைதொறும் பரந்து, கொற்ற
வில் மழை பொழிவான்தன்னை வளைந்தது, வெய்ய மாயை.

வெய்ய மாயை – கொடிய அந்த மாயையானது,- கல் மழை
சொரிந்து – சிலாவருஷத்தைப் பொழிந்துகொண்டும், வேகம் கனல் மழை
வீசி – உக்கிரமான அக்கினிவருஷத்தைப் பெய்துகொண்டும், எங்குஉம் –
எவ்விடத்தும், மின் மழை சிந்தி – மின்னலின் மழையைச்
சொரிந்துகொண்டும், மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – மிகுந்த இடியின்
மழைகளைத்தள்ளிக்கொண்டும், செல் மழை சிதறி – மேகத்தினின்று
பெய்யும் நீர்மழையை வர்ஷித்துக்கொண்டும், எல்லாத் திசைதொறுஉம்
பரந்து – திக்குக்களெல்லாவற்றிலும் பரவி, கொற்றம் வில் மழை பொழிவான்
தன்னை- வெற்றியைத்தருகின்ற வில்லினின்றும் அம்புமழையைச்
சொரிகின்ற அருச்சுனனை,வளைந்த- சூழ்ந்துகொண்டது;(எ-று.)

     எங்கும் என்பதனைப்பிறவற்றுக்குங் கூட்டுக.

கோது இலா இரதம் ண்ட குரகதக் குழாமும் உட்கி,
சூதனும் தடந் தேர் ஊரும் தொழில் மறந்து, உயங்கி வீழ,
தாது அவிழ் அலங்கலானும் மற்று அவன்தன்னைத் தேற்றி,
தீது இலா அமோக பாணம், சிந்தையால் தொழுது, விட்டான்.

அம்மோஹாஸ்திரத்தால்), கோது இலா இரதம் பூண்ட –
(தனது) குற்றமில்லாத தேரிற் பூட்டப்பட்டுள்ள, குரகதம் குழாம்உம் –
குதிரைக் கூட்டமும், உட்கி – அஞ்சி, சூதன்உம்-சாரதியாகிய மாதலியும், தட
தேர் ஊரும் தொழில் மறந்து – பெரிய இரதத்தைச் செலுத்துகின்ற
செய்கையை மறந்து, உயங்கி வீழ – மயங்கி (த் தேரின் முன்னிடத்தே)
விழ,-தாது அவிழ் அலங்கலான்உம் – பூந்தாதுகள் சொரியப்பெற்ற
மாலையையுடையஅருச்சுனனும், அவன் தன்னைதேற்றி – அப் பாகனை
மயக்கந் தெளியச் செய்து, தீது இலா – குற்றமில்லாத, அமோக பாணம் –
(மாயையை நீக்கவல்ல) அமோஹாஸ்திரத்தை, சிந்தையால் தொழுது –
மனத்தால் வணங்கி [அதற்குரியதேவதையைத் தியானித்து],விட்டான் –
(மோஹாஸ்திரத்திற்கு எதிராக) விடுத்தான்;(எ – று.)

    கீழ்ப்பத்தொன்பதாங்கவியில் “ஆயிரம்பத்து வெம்போரடற் பரி
பூண்டதேர்”என்றாராதலால்,இங்கே குரகதக்குழாம்என்றார். ‘குலாம்’
என்னும் பாடத்துக்கு, குலம் என்பதன் விகார மென்க.
அமோகபாணத்துக்குத் தீதாவது – மாயையை முழுவதும் போக்கமாட்டாமை;
அக்குற்றமில்லாத தென்க. யோக பாணம் என்றும் பாடம்

மாய வல் இருளை எல்லாம், வான் கதிர்ச் செல்வன் என்ன,
சேய அப் பகுவாய் வாளி திசைதொறும் கடிந்த எல்லை,
ஆய அம் முறைமை தப்பா அறம், பொருள், இன்பம், முற்றும்
தூயவர் இதயம் என்னத் தொலைந்தது, சூழ்ந்த மாயை.

சேய – (பகைவரிரத்தந் தோய்தலாற்) சிவந்துள்ள, பகுவாய்-
பிளப்புள்ள வாயையுடைய, அ வாளி – அந்த அமோஹாஸ்திரம்,-வான்
கதிர் செல்வன் என்ன – ஆகாயத்திலே விளங்குகின்ற கிரணங்களையே
செல்வமாகவுடைய சூரியன்போல, மாயம்வல் இருளைஎல்லாம் –
(மோஹாஸ்திரத்தின்) மாயையாலாகிய வலிய [அழித்தற்குஅரிய]
அந்தகாரம் முழுவதையும், திசை தொறுஉம்-எல்லாத் திக்குக்களிலும், கடிந்த
எல்லை- நாசஞ் செய்தவளவில்,- ஆய அ முறைமை தப்பா – (நூல்களிற்
கூறியது) ஆகிய அந்த நல்லொழுக்க நெறி தவறாமல்,அறம் பொருள்
இன்பம் முற்றும் – தருமம் அர்த்தம் காமம் என்னம் மூன்று
புருஷார்த்தங்களையும்குறைவற நுகர்ந்து (வீடுபேற்றின் பொருட்டுத்) துறந்த,
தூயவர் – பரிசுத்தகுணமுடையவர்களது, இதயம் என்ன – மனத்திலே
(மாயை ஒழிதல்) போல, சூழ்ந்த மாயை தொலைந்தது- (அருச்சுனனை)
வளைந்துகொண்டமாயை (அவ்விடத்தே) ஒழிந்தது;(எ – று.)

     சேய -குறிப்புப்பெயரெச்சம்;செம்மை – பகுதி:சேய்மை என்னும்
பண்பின் அடியாப்பிறந்த தெனக் கொண்டு, தூரத்திலுள்ளவெனப்
பொருளுரைத்து, அமோஹாஸ்திரம் தூரத்திலிருந்துகொண்டே சூரியன்
இருளைப்போக்குவதுபோலமாயையை ஒழித்ததுஎனக் கருத்துக்கொள்ளலும்
ஒன்று.  வல்லிருள் என்பது – சூரியன் சந்திரன் அக்கினி என்னும்
முச்சுடர்களுக்கும் அழியாத இருள் என்றபடி. இல்லறநெறியால்
அறிவுமுதிர்ந்துழியல்லது துறக்கப்படாமையின், ‘ஆயவம்முறைமைதப்பா
வறம்பொருளின் பமுற்றுந் தூயவர்’என்றார்,துறந்தாரை;இதுபற்றியன்றே
‘துறவறமாவது- மேற்கூறிய இல்லறத்தின் வழுவாதொழுகி அறிவுடையராப்
பிறப்பினையஞ்சி வீடுபேற்றின்பொருட்டுத் துறந்தார்க்கு உரித்தாய அறம்’
என்றார்,பரிமேலழகரும்.  தூயவர் – மனமாசு நீக்கியவர்;மெய்யுணர்வு
பெற்றவர்.  அவர்கள் மனத்தில் ஒழியும் மாயையாவது – விபரீதஞானம்.
அறமாவது – மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன
ஒழிதலும்.  பொருளாவது – அறவழியாற் சேர்க்கப்பட்ட மணி பொன்
முதலியன.  இன்பமாவது-ஒருகாலத்து ஒரு பொருளால் ஐம்புலன்களும்
அநுபவித்தற் சிறப்புடையதான காமவின்பம்

வஞ்ச வாள் அவுணர் வெம் போர் மறந்து,
மெய்ம் மயங்கி, மீண்டும்
நெஞ்சினில் அறிவு தூண்ட, நிரை நிரை தடந் தேர் தூண்டி,
செஞ் சரம், சூலம், விட்டேறு, எழு, மழு, திகிரி, வாளம்,
அஞ்சனக் குன்று அன்னான்மேல் எறிந்து, உடன்
ஆர்த்த காலை,

இதுவும் மேலைக்கவியும்- குளகம்.

     (இ – ள்.) வஞ்சம் – வஞ்சனையையும்,வாள் – ஆயுதங்களையுமுடைய,
அவுணர் – அசுரர்கள், வெம் போர் மறந்து – கொடிய போர்த்தொழிலை
மறந்து, மெய் மயங்கி – உடம்பு மயங்கியிருந்து, மீண்டுஉம் -மறுபடியும்,
நெஞ்சினில் அறிவு தூண்ட – மனத்திலே அறிவு உண்டாகி ஏவியதனால்,நிரை
நிரை – வரிசை வரிசையாக, தட தேர் – பெரிய தேர்களை,தூண்டி –
செலுத்திவந்து, செம் சரம் – (பகைவ ருதிரந் தோய்தலாற்) சிவந்த
அம்புகளையும்,சூலம்-சூலங்களையும்,விட்டேறு – வேல்களையும்,எழு –
வளைதடிகளையும்,மழு – மழுக்களையும்,திகிரி – சக்கரங்களையும்,வாளம் –
வாள்களையும்,அஞ்சனம் குன்று அன்னான் மேல-மைம்மயமான
மலையையொத்தஅருச்சுனன்மேலே, எறிந்து – வீசி, உடன் – ஒருசேர,
ஆர்த்த காலை- ஆரவாரித்தபொழுது, (எ-று.)-இதில் ‘காலை’என்பது,
மேற்கவியில் ‘காணொணாது,”காணலாம்’என்பவற்றோடு முடியும்.

     வாள் -இங்கே, ஆயுதப்பொதுவாய் நின்றது;இது – அவுணர்க்குச்
சாதியடை:இனி, வாள்போலுங் கொடிய அவுணரென்றுமாம்.  வெம்போர்
மறந்து மெய்ம்மயங்கியதற்குக் காரணம் – தாம் அருச்சுனன்மீது
பிரயோகித்த மாயை அவன் பிரயோகித்த அமோஹாஸ்திரத்தால்
அவன்பாற்சென்று பயன்படாமல் தம்பால் மீண்டு வருதலா லாகும்.
விட்டேறு – ஈட்டியென்பாருமுளர்.

கடுஞ் சிலை விரைவும், வீரன் கைத்தொழில்
விரைவும், மேன்மேல்
விடும் கணை விரைவும், எண்ணில், விபுதர்க்கும்
காண ஒணாதால்;
கொடுந் தொழில் அசுரர் மெய்யில் குளித்த செஞ் சரமும்,
அன்னோர்
படும் படும் துயரும், எங்கும் காணலாம், பார்
உளோர்க்கும்.

எண்ணில் – ஆலோசிக்குமிடத்து,-வீரன் – அருச்சுனனது,
கடு சிலைவிரைவுஉம் – கொடிய வில்லினது (அம்பெய்யும்) வேகமும், கை
தொழில் விரைவுஉம்-(அம்பை எடுத்தல் தொடுத்தல் விடுத்தல் முதலிய)
கையாற் செய்யுந் தொழிலினது வேகமும், மேல்மேல் விடும் கணை
விரைவுஉம்-ஒன்றன்மேலொன்றாகவிடப்படுகிற அம்புகள் செல்லும்
வேகமும், விபுதர்க்குஉம் – விசேஷ புத்தியையுடைய (மேலுலகத்தில்
வாழ்கிற இமையாக்கண்ணராகிய) தேவர்களுக்கும், காண ஒணாது- பார்க்க
முடியாது;கொடு தொழில் அசுரர் மெய்யில் குளித்த செம் சரம்உம்-கொடிய
தொழில்களையுடையஅசுரர்களது உடம்பிலே மூழ்கிய சிவந்த
அம்புகளையும்,அன்னோர்படும் படும் துயர்உம் – அவ்வசுரர்கள்
(அதனால்)மிகுதியாக அனுபவிக்கின்ற துன்பங்களையும்,எங்குஉம் –
எவ்விடத்தும், பார் உளோர்க்குஉம் – நிலவுலகத்திலேயுள்ள (சிற்றறிவினரும்
இமைக்குங்கண்ணரு மாகிய) மனிதர்களுக்கும், காணல் ஆம் – பார்த்தல்
கூடும்;(எ – று.)

     இக்கவியை “மாலுமக்கணம் வாளியைத் தொட்டதுங், கோலவிற்கால்
குனித்ததுங் கண்டிலர், காலனைப்பறித்தக்கடியாள்விட்ட, சூல மற்றன
துண்டங்கள் கண்டனர்” என்னுங் கம்பராமாயணக் கவியோடு ஒப்பிடுக.
எண் இல் எனப்பிரித்து, அளவிறந்த தேவரென்றுமாம்.  படும்படும் –
அடுக்கு, மிகுதிபற்றியது

ஆய்ந்த நூல் அறிஞர்க்கு ஈந்த அரும் பொருள் என்ன,
மேன்மேல்
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது, எங்கும்,
மாந்தர் கைக் கொடாத புல்லர் வனப்பு இலாச்
செல்வம் போல,
தேய்ந்தது, வஞ்ச நெஞ்சத் திறலுடைத் தனுசர் சேனை.

வேந்தர் கோன் பகழி – அரசர்களுக்குட் சிறந்தோனாகிய
அருச்சுனனது அம்பு,-நூல் ஆய்ந்த அறிஞர்க்கு ஈந்த-சாஸ்திரங்களை
ஆராய்ந்த அறிவையுடைய பெரியோர்களுக்குத் தானஞ்செய்த, அரு
பொருள் என்ன – (பெறுதற்கு) அரிய செல்வம்போல, ஒன்று கோடி ஆய் –
ஒன்றுதானே மிகப் பலவாய், எங்குஉம் – அப்போர்க்களம் முழுவதிலும்,
மேல்மேல் விளைந்தது- மேலேமேலே பெருகிற்று;வஞ்சம் நெஞ்சம் –
வஞ்சனையையுடையமனத்தையும், திறல் உடை – வலிமையையுமுடைய,
தனுசர்சேனை-அசுரர்களுடையசேனையானது,மாந்தர் கை கொடாத –
எந்த மனிதருடைய கையிலுந் தானஞ்செய்யாத, புல்லர் – கீழ்மக்களுடைய,
வனப்பு இலா செல்வம்போல – அழகில்லாத பொருள் போல, தேய்ந்தது –
குறைந்தது;(எ-று.)

     அறிவுஒழுக்கங்களினாற்சிறந்த ஸத்பாத்திரங்களில் தானஞ்
செய்யப்பட்ட பொருளின் பயன் மிகவும் பெரியதா மென்பதை
“இனைத்துணைத்தென்பதொன்றில்லைவிருந்தின், றுணைத்துணைவேள்விப்
பயன்”,”அறப்பயனுந்,தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால்,
வான்சிறிதாப் போர்த்து விடும்,””பார்த்தெதிர்,வியந்தவர் வெருக்கொள
விசும்பினோங்கினா, னுயர்ந்தவர்க்குதவிய வுதவி யொப்பவே”
என்பவற்றால்அறிக.  அங்ஙனந் தானஞ்செய்யாத லோபியினது செல்வம்
அழிந்துவிடுமென்பது “கொடுப்பதூஉந்துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய,
கோடியுண்டாயினுமில்”,”கிளைஞர்க்குதவாதான் செல்வமும், ***உள்ளன
போலக் கெடும்”என்பனகொண்டு அறியப்படும்;இதுபற்றியே, கீழ்
இராயசூயச் சருக்கத்தில் “இடாதவன்றனமெனக்கரந்தனர்களேனை
மன்னவர்கள்யாருமே”என்றதும்.  மாந்தர் -ஒருமையில்லாமல்
எப்பொழுதும் பன்மையிலேயே வரும் பெயர்;இதுதொல்காப்பியனார்
கொள்கை.  ஒருமையிலும் வரு மென்கின்றனர்,இக்காலத்து ஒரு
சாரார். 

படாது ஒழி அவுணர், ‘மீண்டும் பரிபவப் படுத்தாய், எம்மை;
அடா! இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும்’ என்னா;
கடாமலை வயவன்மீது கடும் படை பலவும் விட்டார்;
தொடா, நெடும் பகழிதன்னால் சூரனும் துணித்து வீழ்த்தி,89.-இதுவும்,மேற்கவியும் – குளகம்:இறந்தவர்போக
எஞ்சினவர்போர்க்குவர, அவர்களைஅருச்சுனன்
கண்டதுண்டமாக்குதல்

படாது ஒழி அவுணர் – (கீழ் இறந்தவர்கள் போக)
இறவாமல் தப்பிய அசுரர்கள், (அருச்சுனனைநோக்கி), ‘எம்மை
மீண்டுஉம்பரிபவப்படுத்தாய் – எங்களைமறுபடியும் அவமானப்படுத்தினாய்;
அடா-! இனி-., உன்னை-,இன்னே – இப்பொழுதே, ஆர் உயிர் குடித்தும் –
அருமையான உயிரைப் பருகுவோம்,’என்னா – என்று சொல்லிக்கொண்டு, –
கடாம் மலைவயவன்மீது – மதசலத்தையுடைய மலைபோன்றவலிமையையுடைய
அருச்சுனன்மேலே, கடு படை பலஉம் விட்டார் – கொடுமையான ஆயுதங்கள்
பலவற்றையும் எறிந்தார்கள்; சூரன்உம் – அருச்சுனனும், நெடு பகழி தொடா –
நீண்ட பாணங்களைத் தொடுத்து, தன்னால்- அதனால்,துணிந்து வீழ்த்தி –
(அவர்கள் எறிந்த ஆயுதங்களைப்)பிளந்து தள்ளி,-(எ – று.)-
‘கண்டங்கண்டான்'(90) என முடியும்.

     கீழ் 74-ஆங்கவியில் ஒருகாற் பரிபவப்படுத்தியது கூறியதனால்,
இங்கே ‘மீண்டும்பரிபவப்படுத்தாய்’என்றார். இனி, மீண்டும் விட்டார்
என்றும் இயைக்கலாம்.  அடா – முன்னிலையிடைச்சொல்:இகழ்ச்சிதோன்ற
நின்றது.  ஆருயிர் குடித்த லென்பது – ஒருசொல் தன்மைப்பட்டு,
கொல்லுதலென்னும் பொருளதாய், உன்னைஎன்னுஞ் செயப்படுபொருளுக்கு
முடிக்குஞ் சொல்லாயிற்று.  யானையை’மலை’என்றது – பெருமையும்,
வலிமையும், நீர்ப்பெருக்கமும் பற்றி.  யானை- வீரனுக்கு, நடை வலிமை
காம்பீரியங்களால் உவமை.  வயவன் – வய என்ற உரிச்சொல் பகுதி.  இனி,
வயம் பகுதியெனக் கொண்டு, ஜயத்தையுடையவனென்றாகவுமாம். தொடா –
இறந்தகால வினையெச்சம்:இனி, எதிர்மறைப் பெயரெச்சமாகக் கொண்டு
இதுவரையில் ஒருகாலத்தும் எடுத்துத் தொடுக்காத அம்புகளால் எனவுமாம்.

உரங்களும், தோளும், கண்ணும், உதரமும், அதரத்தோடு
சிரங்களும், தாளும், நாளும், செய் தவம் முயன்று பெற்ற
வரங்களும், மறையும், மேன்மேல் வான் படைக்
கலங்கள் வீசும்
கரங்களும், சரங்கள் கொண்டு, கணத்திடைக்
கண்டம் கண்டான்.

(அருச்சுனன் அசுரர்களுடைய), உரங்கள்உம் –
மார்புகளையும்,தோள்உம் – தோள்களையும்,கண்உம்-கண்களையும்,
உதரம்உம் – வயிறுகளையும்,அதரத்தோடு – வாய்களையும்,சிரங்கள்உம் –
தலைகளையும்,தாள்உம்-கால்களையும்,நாள்உம் – ஆயுள் நாளையும்,
செய் தவம் முயன்றுபெற்ற வரங்கள்உம் – செய்தற்கு உரிய தவத்தைச்
செய்து பெற்ற வரங்களையும்,மறைஉம்-மந்திரங்களையும்,மேல் மேல்
வான் படைக்கலங்கள் வீசும் கரங்கள்உம்-(இடைவிடாமல்)
ஒன்றன்மேலொன்றாகச்சிறந்த ஆயுதங்களைஎறிகின்ற கைகளையும்,
சரங்கள் கொண்டு – (தனது) அம்புகளினால்,கணத்திடை – நொடிப்பொழுதிலே,
கண்டம் கண்டான் – பல துண்டுகளாகச் செய்தான்; (எ- று.)

     ‘செய்தவமுயன்றுபெற்ற’என்னும் அடைமொழியை மறைக்கும்
கூட்டுக.  படைக்கலம் – சேனைக்கருவியெனக்காரணப்பெயர்:
படுத்தற்றொழிற்குக்கருவியெனினுமாம்.  கொண்டு – மூன்றாம்வேற்றுமைச்
சொல்லுருபு.  கண்டங் காணுதலாவது – பயன்படாதபடி அழித்தல்.

அற்றன குறைகள் எல்லாம், அவயவம் பொருந்தி, மீண்டும்
உற்றன; மூன்று கோடி சேனையும், உருத்து எழுந்த;
வெற்றி வேல் குமரன் அன்ன விசயனும் கை சலித்து,
‘மற்று இதற்கு என் செய்வேன்?’ என்று,
இனைவுடன் மதிக்கும் ஏல்வை,91.-அற்றகுறைஅவயவத்தோடு கூடியதனால்முக்கோடி
யசுரச்சேனையும்மீண்டும் போர்க்குவர, அருச்சுனன்
சிந்தை கொள்ளல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ – ள்.)அற்றன குறைகள் எல்லாம் – அவயவங்களறுபட்ட
குறையுடம்புகளெல்லாம், அவயவம் பொருந்தி மீண்டுஉம் உற்றன –
(அறுக்கப்பட்ட) அவ்வவ்வுறுப்புக்களோடு கூடி மறுபடியும் போர்செய்யப்
பொருந்தினவாய், மூன்று கோடி சேனைஉம்- முக்கோடியசுர சைனியமும்,
உருத்து எழுந்த – கோபித்து (அருச்சுனன்மீது) எழுந்தன;(அதுகண்டு),
வெற்றிவேல் குமரன் அன்ன விசயன்உம் – ஜயத்தைத்தருகின்ற
வேலாயுதத்தையுடைய சுப்பிரமணியனையொத்த அருச்சுனனும், கை சலித்து
– கை தளர்ந்து, மற்று இதற்கு என் செய்வேன் என்று – இனி இதற்கு யாது
செய்வேன் என்று, இனைவுடன்- வருத்தத்துடனே, மதிக்கும் ஏல்வை-
ஆலோசிக்குஞ் சமயத்தில்,-  (எ – று.)-‘அசரீரியுரைத்தது’ என மேலிற்
கவியோடு இயையும்.

     உற்றன -முற்றெச்சம்.  மற்று – இங்கே, பின் என்னும் பொருளது.
இனைவு- தொழிற்பெயர்:வு-விகுதி.

‘வென்றி கொள் வீர வாகை வேக வில் விசய! கேளாய்:
தென் திசை மறலிபால் இத் தீய வஞ்சகர் முன் பெற்ற
வன் திறல் படையும், மிக்க வரமும், மெய்
வலியும், உண்டால்’
என்று, அசரீரி பின்னும் இன்னவை உரைத்தது அம்மா:92.-இரண்டு கவிகள்- அசரீரி அசுரர்களின் வரத்தையும்
அவர்களைக்கொல்லவேண்டிய உபாயத்தையும் கூறுவன.

அசரீரி – அரூபியாகிய  ஆகாசவாணி,-(அருச்சுனனை
நோக்கி), ‘வென்றிகொள் – ஜயத்தை யடைவதற்குக்காரணமான, வீரம் –
பராக்கிரமத்தைக் குறிக்கின்ற, வாகை-வாகைப்பூ மாலையையும்,வீரம் வில் –
வலிய வில்லையுமுடைய,விசய – அருச்சனனே! கேளாய் – (யான் சொல்வதைக்)
கேட்பாயாக:தென்திசை மறலிபால் – தெற்குத் திக்குப்பாலகனாகிய
யமனிடத்தில், இ தீய வஞ்சகர் – கொடிய வஞ்சனையையுடையஇந்த
அசுரர்கள், முன் பெற்ற – முற்காலத்தில் பெற்ற, வன் திறல் படைஉம் – மிக்க
வலிமையையுடையஆயுதங்களும், மிக்க வரம்உம் – மிகுந்த வரங்களும்,
மெய் வலிஉம் – தேகபலமும், உண்டு – உள்ளன, என்று – என்றுகூறி,
பின்னும் – மீண்டும், இன்னவை – இவ்வார்த்தைகளை,உரைத்தது –
சொல்லிற்று;(எ-று.)-அவைமேற்கவியிற்கூறுகின்றார்.

     மறல் – கொலைத்தொழில்;அஃது உடையவன், மறலி: இ – பெயர்
விகுதி, பெற்ற என்பதை, வரம் மெய்வலி இவற்றுக்குங்  கூட்டுக.  அசரீரி –
சரீரம் அற்றது.  அம்மா – இடைச்சொல்: ஈற்றசை:
வியப்புப்பொருளதாகவுமாம்.  ஆல் – தோற்றம். 

வெய்ய வெம் படைகட்கு எல்லாம் விளிகிலர்;
மெய்ந் நூறு ஆகக்
கொய்யினும், உருவம் மீண்டும் கூடுவர்; குறிப்பின் நின்று
கையில் நாவுடன் வாய் சென்று கலந்திடும்
கணத்தின், அம்பால்
எய்திடுக!’ என்று, வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே.

இவ்வசுரர்கள்),-வெய்யவெம் படைகட்கு எல்லாம் – மிகவுங்
கொடிய ஆயுதங்களனைத்துக்கும்,விளிகிலர்-இறக்கமாட்டார்கள்;மெய் நூறு
ஆக கொய்யின்உம் – உடம்பை நூறு துண்டாக அறுத்தாலும், உருவம்
மீண்டுஉம் கூடுவர் – வடிவம் முன்போலவே மறுபடியும் பொருந்தப்பெறுவர்:
(இவர்களை),இனாவுடன்- பரிகாச வார்த்தையுடனே, கை வாய் சென்று
கலந்திடும் கணத்தின் – கையானது வாயைச்சென்று கூடுகின்ற சமயத்தில்,
குறிப்பில் நின்று – கவனத்தோடு இருந்து, அம்பால் எய்திடுக –
அம்புகளினால்எய்வாயாக, [அப்பொழுதுஅம்பெய்தால் அழிந்துவிடுவர்],
என்று-,வீரற்கு – அருச்சுனனுக்கு, உறுதிஉம் – (பகைவரைக் கொல்லுதற்கு)
நல்ல உபாயத்தையும், இசைத்தது – (அசரீரி) சொல்லிற்று;(எ-று.)-அன்றே-
ஈற்றசை.

     வெய்ய வெம் -ஒருபொருட்பன்மொழி.  விளிதல் இறத்தலாதலை,
“உலகின்,விளிநோக்கி யின்புறூஉங் கூற்று”என்ற விடத்துங் காண்க.
உருவம் – ரூபம்.  இனா- நகைச்சொல்.  கையில் நாவுடன் வாய்சென்று
என்றுபிரித்து, நாவுடன் வாயிற் கை சென்று கலந்திடுங் காலத்து எனினுமாம். 

வானிடத்து அரூபி சொன்ன வாசகம் மனத்தில் கொள்ளா,
தேனுடைத் தெரியல் வீரன் தேரினைத் திரிய ஓட்டி,
கானிடைக் கடவுள் வேடன் தரும் கணை கரத்தில் கொண்டு,
தானுடைத் தனுவில் பூட்டி, அநுப்படச் சமைந்தது ஓரார்,94.-அருச்சுனன்தேரைத் திரியவோட்டிப் போர்க்குச்
சித்தனாக,அவுணர் வீரன்புறங்கொடுத்தானென்று
கருதுதல்.

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்)வானிடத்து – ஆகாயத்தினிடத்திலே, அரூபி – அசரீரியாகிய
ஆகாயவாணி, சொன்ன-,வாசகம்-வார்த்தையை மனத்தில்கொள்ள-மனத்திலே
(செயற்பாலதென்று) கொண்டு,-தேன் உடை தெரியல் வீரன் – தேனினையுடைய
மாலையையுடையஅருச்சுனன்,- தேரினை-ரதத்தை,திரிய ஓட்டி-திரும்பச்
செலுத்தி, கானிடை கடவுள் வேடன் தரும் கணைகரத்தில் கொண்டு
(கைலாசகிரியைச் சார்ந்த) தவவனத்திலே சிவபிரானாகியவேடன் தனக்குத்
தந்தருளிய பாசுபதாஸ்திரத்தைக் கையிலே எடுத்து, தான் உடை தனுவில்
பூட்டி – தான் உடைத்தாயிருக்கின்ற வில்லிலே தொடுத்து, அனு பட
சமைந்தது – பிற்பட்டுப் போர்செய்யச் சித்தனாயிருந்ததை,ஓரார்-(அசுரர்கள்)
அறியாதவர்களாய்,-(எ-று.)-‘ஆவலங்கொட்டியார்த்தார்’என அடுத்த
கவியோடு இயையும்.

     அருச்சுனனுக்குப்பாசுபதந் தருங் காலத்துப் பரமசிவன் வேட வடிவம்
பூண்டு வந்ததனால்,’கடவுள்வேடன்’என்றார். அனுப்படச்சமைதலாவது
-“ஊக்கமுடையானொடுக்கம்பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து”
என்றவாறு போர்செய்கின்ற ஆட்டுக்கடா தன்பகைகெடப் பாய்தற்பொருட்டு
பின்னே கால்வாங்குந் தன்மைபோல வலிமிகுதியுடைய அரசன் தன்
பகைவர் மேற் செல்லும்பொருட்டுக் காலம்பார்த்துப் பின்னடைந்திருத்தல்.
அனுப்படுதல் – பின்படுதல்;அனு – பின்னென்னும் பொருள் தருவதோர்
வடமொழி யிடைச்சொல்.  அனுப்பட என்பதற்கு – பின்புறமாகக் கணை
வெளிப்பட என்று பொருள் கூறுதலும் உண்டு: இவன் பின்புறமாக
வாளிதொடுத்ததை 17 – ஆம்போர்ச்சருக்கத்து 225- ஆங் கவியிலுமறிக.
ஓரார் என்றதனால்,தம்முன் நிற்கமாட்டாமல், அருச்சுனன் தோற்றுப்
புறங்கொடுப்பதாகக் கருதினார்அவுணர் என்க. மனத்திற் கொள்ளுதல் –
அங்கீகரித்தல்.  

தானவர் சமுகத்தோடு சமர் புரிந்து, ஆற்றாது, அஞ்சி,
மானவன் முதுகு தந்தான்!’ என்று, வாள் அசுரர் எல்லாம்
வேனில் வேள் அனையான்தன்மேல் வெகுண்டு,
வெங் கடலின் பொங்கி,
ஆன தம் கை வாய் சேர்த்தி, ஆவலம் கொட்டி, ஆர்த்தார்.95.-அருச்சுனன்புறங்கொடுத்ததாகக் கருதியதனால்
அவுணர் ஆவலங்கொட்டியார்த்தல்

மானவன்- மனிதன்’தானவர் சமுகத்தோடு – அசுரர்
கூட்டத்துடனே, சமர் புரிந்து – போர்செய்து, ஆற்றாது-முன்
நிற்கமாட்டாமல், அஞ்சி – பயந்து, முதுகு தந்தான் – புறங்கொடுத்தான்,’
என்று – என்று எண்ணிக்கொண்டும் சொல்லிக் கொண்டும், வாள் அசுரர்
எல்லாம் – ஆயுதங்களையுடையஅசுரர்கள் யாவரும்,-வேனில்வேள்
அனையான்தன்மேல்- வசந்தகாலத்துக்குரிய மன்மதனையொத்துஅழகிய
அருச்சுனன்மேலே, வெகுண்டு – கோபித்து, வெம் கடலின் பொங்கி –
கொடிய (பிரளயகாலத்துக்) கடல்போலச் சீறியெழுந்து, ஆன தம் கை வாய்
சேர்த்தி – பொருந்திய தத்தமது கையைத் தத்தம்  வாயினிடத்துச் சேர்த்து,
ஆவலம் கொட்டி ஆர்த்தார் – இகழ்ச்சியொலியை யுண்டாக்கி
ஆரவாரித்தார்கள்;(எ-று.)

     சமுகம்-ஸமூஹம்;வேனில் – இங்கே, சித்திரை மாதமும்
வைகாசிமாதமுமாகிய இளவேனிற்பருவம்.  மன்மதனுக்கு வேனிற்காலத்திலே
போர்த்தொழிற்கண்ணே ஊக்கமுங்  களிப்பும் உண்டாதல்பற்றி, அப்பொழுது
அவனுடம்பு பூரித்து அழகுசிறந்து  விளங்குமாதலால்.  ‘வேனில்வேள்’
என்றார். வேள் – யாவராலும் விரும்பப்படுங் கட்டழகுடையவன்;அல்லது
ஆடவர்க்கும்மகளிர்க்கும் ஒருத்தருக்கொருத்தர் விருப்பத்தை விளைப்பவன்.
‘வேனில்வேள்’என்றது, குமரவேளைவிலக்கிநின்றது.  ஆவலங்கொட்டி
யார்த்தலாவது – தோற்றவர்க்கு அவமானந் தோன்ற வென்றவர் வாயினால்
ஒருவகைச் சத்தத்தையெழுப்பி ஆரவாரித்து ஆடுதல்.  செருக்குத்தோன்ற
ஒலிசெய்தலுமாம்.  ஆவலம்-‘சீழ்க்கை’,’வீளை’என்பன போல்வதொரு
கொக்கரிப்பு என உணர்க.  கனலிற்பொங்கி என்று பிரதிபேதம்.

உரம்பட்ட வஞ்சர் சேனை ஒருப்பட்ட உறுதி நோக்கி,
திரம் பட்ட சிலைக் கை வீரன் சிலீமுகம் தெறித்தபோது, அச்
சரம் பட்ட தனுசர் அங்கம், சங்கரன் செங் கை அம்பால்
புரம் பட்ட பரிசு பட்டு, பொடிந்தன, பொடியாய் மன்னோ96.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தால்
அவுணரங்கம்பொடியாதல்

உரம்பட்ட – வலிமைமிகுந்த, வஞ்சர் – வஞ்சகராகிய
அசுரர்களது, சேனை-,ஒருப்பட்ட – (தான் கருதியபடியே
அவமதிப்பொலியோடு கையை வாயிலேவைத்து) ஒருமைப்பட்ட, உறுதி –
நன்மையை, நோக்கி – பார்த்து,-திரம்பட்ட சிலைகை வீரன் –
உறுதிபொருந்திய வில்லையுடையகையையுடைய அருச்சுனன்,-சிலீமுகம்
தெறித்தபோது – அம்பை எய்தமாத்திரத்தில்,- அ சரம் பட்ட தனுசர்
அங்கம் – அந்த அம்பு படப்பெற்ற அசுரர்களது உடம்புகள், சங்கரன் செம்
கை அம்பால் புரம் பட்ட பரிசு பட்டு – சிவபிரானது சிவந்த
கையினாலெய்யப்பட்ட(திருமாலாகிய) அம்பினால்திரிபுரம் அடைந்த
தன்மையை யடைந்து, பொடி ஆய் பொடிந்தன – நீறாயொழிந்தன;(எ-று.)-
மன், ஓ -ஈற்றசைகள்.

     ஒருப்படுதல் -ஒருங்கே தன்மனப்படியாதல்.  திரம்-ஸ்த்திரம்.
சிலீமுகம் – ஸிலீமுகம்:கூர்மையை முனையிலேயுடையதென்று பொருள்.
இங்கே, பாசுபதம்.  பொடிதல்-தூளாதல்

உருத்தது, மிகவும்; அண்டம் உடைந்திட, உடன்று பொங்கிச்
சிரித்தது; தனுசர் மெய்யும் சிந்தையும் சேரப் பற்றி,
எரித்தது; தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து,
தரித்தது, மீண்டும்;-அந்தச் சங்கரன் செங் கை வாளி.97.-அருச்சுனனெய்தபாசுபதாஸ்திரத்தின் செய்கை

சங்கரன் செம் கை – சிவபிரானது சிவந்தகையாற்
கொடுக்கப்பட்ட, அந்த வாளி – அந்தப் பாசுபதாஸ்திரமானது,-
மிகவும் உருத்தது -மிகவுங் கோபித்துச் சென்று, உடன்று-பகைத்து, பொங்கி
– கொதித்து, அண்டம் உடைந்திட-(அதிர்ச்சியால்) அண்டகோளம்
உடையும்படி, சிரித்தது – நகைத்து, தனுசர் – அசுரர்களது, மெய்உம்-
உடலையும்,சிந்தைஉம்-மனத்தையும், சேர பற்றி எரித்தது – ஒருசேரப் பற்றி
யெரியச்செய்து, தூ நீர் ஆடி – பரிசுத்தமாகிய நீரிலே முழ்கி,
இவனிடந்தன்னில் – அருச்சுனனிடத்திலே, மீண்டும் வந்து தரித்தது –
திரும்பவும் வந்து தங்கிற்று;(எ-று.)

     உருத்தது,சிரித்தது, எரித்தது – முற்றெச்சங்கள்

துவசத்தொடு தேர் களம் வீழ, சுடர் நிவாத
கவசத்தொடு மெய் கடல் வீழ, கடுகி, அற்றைத்
திவசத்து, இவறா, அர மங்கையர் வீழச் சென்றார்-
அவசத்துடன், அந்தகன் ஊரில், அசுரர் எல்லாம்.98.-அசுரரெல்லாம்இறந்து வீரசுவர்க்கஞ் சேர்ந்தமை

அசுரர் எல்லாம் – அசுர்கள் யாவரும்,-துவசத்தொடுதேர்
களம் வீழ – கொடிகளுடனே (தமது) தேர்கள் போர்க்களத்தில் விழவும்,
சுடர் நிவாத கவசத்தொடு மெய் கடல் வீழ-விளங்குகின்ற காற்றும்
உட்புகவொண்ணாதகவசத்துடனே (தமது) உடம்புகள் கடலிலே விழவும்,
அரமங்கையர் இவறாவீழ- தெய்வப்பெண்கள் பெருவிருப்பங்கொண்டு
(தம்மேல்) வந்து விழவும், அவசத்துடன்-(தம்) வசத்திலில்லாமல், அற்றை
திவசத்து – அன்றைத்தினத்தில், கடுகி – விரைந்து, அந்தகன் ஊரில் –
யமலோகத்தில், சென்றார்- போனார்கள்;(எ-று.)

     யுத்தத்திற்புறங்கொடாமற் போர்செய்து இறந்தவர்கள் உடனே
தெய்வப்பெண்கள் கையைப்பற்றிக் கொண்டு வீர சுவர்க்கத்திற்
செல்கின்றனர் என்பது நூல்மரபாதலின், ‘இவறாவரமங்கையர்வீழ’
என்றார்;அங்ஙனஞ் செல்லுங்காலத்து யமபுரத்தின் வழியாகவே
செல்லவேண்டுதலால், ‘அந்தகனூரிற்சென்றார்’எனப்பட்டது.
அவசத்துடன் என்றது-விதிவசப்பட்டு: அல்லது அருச்சுனனெய்த அம்பின்
வசப்பட்டு: அன்றிக்கே, தேவதா ஸ்திரீகளது பாணிக்கிரகணத்தாலாகிய
ஆனந்தத்தினால்மனம் பரவசப்பட்டு என்றவாறாம்.
அன்று+திவசம்=அற்றைத் திவசம்.  [நன்- உயிர் -34,35]திவஸம் –
வடசொல்.  இவறா,இவறு – பகுதி;இவறல் – ஆசைப்பெருக்கம்.

     இதுமுதற் பதினாறுகவிகள்- பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
புளிமாங்கனிச்சீரும், மற்றை நான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்குகொண்டு வந்த கலிநிலைத்துறைகள்

ஆர்த்தார்; அணி கூர் அலர் மா மழையால் விசும்பைத்
தூர்த்தார்; துதித்தார்; மதித்தார்; நனி துள்ளுகின்றார்;-
‘போர்த் தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்
தீர்த்தான் இவன்’ என்று, அகல் வான் உறை
தேவர் எல்லாம்.99.-அருச்சுனனைப்பற்றியதேவர்களின்
கொண்டாட்டம்

அகல்வான் உறை தேவர் எல்லாம் – பரந்த மேலுலகத்தில்
வசிக்கின்ற தேவர்கள் யாவரும்,-‘இவன்- இவ்வருச்சுனன், போர்
தானவர்தம் செருக்கால் படு புன்மை எல்லாம்-யுத்தத்தில்வல்ல அசுரர்களது
கர்வத்தால் (நாம் இதுவரையிலும்) அனுபவித்துவந்த துன்பங்களனைத்தையும்,
தீர்த்தான் – நீக்கினான்,’என்று – என்று எண்ணியுஞ் சொல்லியும், ஆர்த்தார்
– ஆரவாரஞ்செய்து, அணி கூர் அலர் மா மழையால்-அழகுமிக்க சிறந்த
கற்பகப்பூமாரியால், விசும்பை தூர்த்தார்- ஆகாயத்தை நிறைத்து, துதித்தார் –
(அருச்சுனனைப்)புகழ்ந்து, மதித்தார்- கௌரவித்து, நனி துள்ளுகின்றார்-
(ஆனந்தத்தால்) மிகவுங் குதிக்கின்றவரானார்;(எ-று.)-வெகுநேரம்ஆனந்தக்
கூத்தாடியமை தோன்ற ‘துள்ளுகின்றார்’என்றார்.

கூரும் படையும், குடையும், கொடியும், கொழித்து,
தேரும், கரியும், பரியும், திரைதோறும் உந்தி,
ஊரும் குருதிக் கடல் பொங்கி, உவர்க் கடல்மேல்
போரும் பொரப் போய், அணியோடு புகுவ போலும்.100.-இரத்தப்பெருக்கின் வருணனை.

ஊரும்- (கடலைநோக்கிச்) செல்லுகின்ற, குருதி கடல்-
இரத்தசமுத்திரமானது,-கூரும்- மிகுந்த, படைஉம்-ஆயுதங்களையும்,
குடைஉம் – குடைகளையும்,கொடிஉம் – துவசங்களையும்,கொழித்து –
முன்னே செலுத்தி வருதலினாலும்,-தேர்உம்- தேர்களையும்,கரிஉம் –
யானைகளையும்,பரிஉம் – குதிரைகளையும்,திசைதோறும்உம் – எல்லாத்
திக்குகளிலும், உந்தி – அலைத்துத்தள்ளுதலினாலும்,-உவர்கடல் மேல் –
உப்புக் கடலின்மீது, பொங்கி – (தனக்கு ஒப்பாகமாட்டாதென்று)
சீறியெழுந்து, போர் உம் பொர – யுத்தத்தையுஞ் செய்யும்பொருட்டு,
அணியோடு போய் புகுவ-சைனியத்துடனே மேற்சென்று சேர்வதை,
போலும்-ஒக்கும்;(எ-று.)

     அருச்சுனனால்வெட்டி வீழ்த்தப்பட்ட அசுரரின் உடலிலிருந்து
பெருகும் குருதியின் கடல், படை குடை கொடிகளைக்கொழித்தலாலும்
தேர் முதலியவற்றைத் திசைதோறும் உந்துவதாலும் உவரிக்கடல்மீது பொரச்
செல்வது போலுமென்றவாறு.  தற்குறிப்பேற்றவணி.  திரைதோறும் என்றும்
பாடம்.    

தத்திக் குருதிக் கடல் பொங்க, தனித்தனி நின்று,
எத் திக்கினும் வெம் பிணக் குன்றம் எழிலொடு ஓங்க,
பத்திப்பட, மேல் பருந்தின் குலம் பந்தர் செய்ய,
கொத்துற்ற தண் தார்த் திறல் கோதண்ட வீரன் நின்றான்101.-போர்களத்துஅருச்சுனன் வெற்றியோடு நிற்றல்.

குருதிகடல் – இரத்தவெள்ளம், தத்தி பொங்க – பாய்ந்து
பெருகவும்,-எதிக்கின்உம் – எல்லாத் திசைகளிலும், வெம் பிணம் குன்றம்
– மலைபோன்றகொடிய பிணக்குவைகள், தனி தனி நின்று – வெவ்வேறாக
நின்று, எழிலொடு ஓங்க-எழுச்சியோடு உயர்ந்து தோன்றவும்,-பருந்தின்
குலம்-பருந்துகளின் கூட்டம், மேல் – ஆகாயத்திலே, பத்தி பட – வரிசை
வரிசையாக, பந்தர் செய்ய – (நிழலின் பொருட்டுப்) பந்தல்
போகட்டாற்போல இடைவிடாது பரவவும்,-கொத்துஉற்ற தண் தார் திறல்
கோதண்டம் வீரன் – பூங்கொத்து நிறைந்த (தேனினாற்)குளிர்ந்த
மாலையையணிந்தவலிமையையுடைய வில்லையுடையஅருச்சுனன்,
நின்றான்- (போர்க்களத்திலே) நின்றான்;(எ-று.)

    கோதண்டமென்னும் இராமனது வில்லின் பெயரால் அருச்சுனனது
காண்டீவத்தைக் கூறினார்,’துஷ்டநிக்கிரகசிஷ்டபரிபாலனத்தில் இவன்
இராமன் போல்வான்’என்னுஞ்சிறப்புத் தோன்றுதற்கு.  பக்தி – பங்க்தி.

மின்போல் நுடங்க இடை, வேல்விழி நீர் ததும்ப,
பொன்போல் உருவம் கருகும்படி பூழி போர்ப்ப,
அன்போடு, அவுணர் மட மாதர் அரற்றும் ஓதை,
‘என் போலும்?” என்னின், இடிபோல் வந்து
இசைத்தது, எங்கும்.102.-அசுரமங்கையரின் அரற்றொலி

அவுணர் மடம் மாதர் – (இறந்துபோன) அசுரர்களின்
மனைவிமார்களாகியஇளையமகளிர், இடை – (தங்களது) இடுப்பு,
மின்போல் நுடங்க – கொடிமின்னல்போலத் துவளவும்,- வேல் விழி –
வேலாயுதம் போன்ற கண்கள், நீர் ததும்ப-கண்ணீர் நிறையவும்,
பொன்போல் உருவம் கருகும்படி – பொன்னையொத்தநிறமமைந்த மேனி
கறுக்கும்படி, பூழி போர்ப்ப – புழுதி மூடவும், (வந்து விழுந்து புரண்டு),
அன்போடு – (கணவர்பாலுள்ள) அன்புடனே, அரற்றும் – கதறியழுகின்ற,
ஓதை-ஓசை,-என் போலும் என்னின் – எதனையொக்குமென்றால்,
இடிபோல் – இடியோசையைப்போல, எங்கும் வந்து இசைத்தது –
எவ்விடத்துஞ் சென்று ஒலித்தது;(எ-று.)

     இடைக்கு மின்உவமை – ஒளியும் மெல்லிதாயிருத்தலும் பற்றியும்,
விழிக்கு வேலுவமை – கூர்மையுங் காமநோயையுண்டாக்கி ஆடவரை
வருத்தலும் பற்றியும், உருவத்துக்குப் பொன் உவமை – நிறமும் அருமையும்
பற்றியும் என்க.  மின் – மின்னுவது, வினைமுதற் பொருள்விகுதி புணர்ந்து
கெட்டது.  அன்பாவது – உறவினரிடத்து மனமகிழ்ச்சி நிகழ்த்திப்
பிணிப்பித்து நிற்கும் நேயம்.  வன்போடு எனப்பிரித்து – வலிய
துன்பத்தோடு என்று உரைக்கலாம். மடம்-அழகும், பேதைமை யென்னும்
பெண்மைக்குணமும் ஆகவுமாம்.  

இவ்வாறு அவுணர் மட மாதர் இரங்கி, ஏங்க,
மை வாள் விழியின்வழி அஞ்சன வாரி பாய,
தெவ் ஆறிய பின்னரும், தீர்ந்தில,-தீர்ந்த அன்றே,
கை வார் சிலையான் கடுங் கோபமும், கண் சிவப்பும்.103.-அசுரமாதரின்புலம்பலால் அருச்சுனன் சினந்தீர்ந்து
இரக்கங்கொள்ளுதல்.

தெவ் ஆறிய பின்னர்உம் – பகைவர்களாகிய அசுரர்கள்
ஒழிந்தபின்பும், தீர்ந்தில – நீங்காதவையாகிய, கை வார் சிலையானகடு
கோபம்உம் – கையில் நீண்ட வில்லையுடையஅருச்சுனனது
பெருங்கோபமும், கண்சிவப்புஉம் – (அதனாலாகிய)கண்ணின் செம்மையும்,-
இ ஆறு அவுணர் மடம் மாதர் இரங்கி ஏங்க – இவ்விதமாக இளைய
அசுரமகளிர் துக்கித்து அழவும், மை வாள் விழியின் வழி – (அவர்களது)
மையிட்ட வாளாயுதம் போன்ற கண்களின்வழியே, அஞ்சனம் வாரி –
மையைக் கரைத்துவருகின்ற கண்ணீர், பாய – பெருகவும், (கண்டதனால்),
அன்றே தீர்ந்த-அப்பொழுதே தணிந்தன;(எ – று.)

     இதனால்,அருச்சுனனுக்குத் தேவர்களின் வேண்டுகோளாற்
பகைவர்கள்பக்கல் உண்டாயிருந்த ஆறாக்கோபத்தையும்,இயல்பாயுள்ள
பேரருளுடைமையையும் வெளியிட்டார்.  விழிக்கு வாளுவமை – கூர்மையும்
ஆடவரை வருத்தலும் பற்றி.  தெவ்-பகைமையுணர்த்தும் உரிச்சொல்;
பகைவர்க்குப் பண்பாகுபெயர்.  விழியின் வழி  – கண்களினின்று
ஒழுகுகின்ற என்றுமாம். 

அன்னார் நகரத்து அழகும், தொல் அரணும், நோக்கி,
மின் ஆரும் வேலான் விறல் மாதலிதன்னை, ‘மீண்டும்
நல் நாகர் ஊரில் தடந் தேரை நடாத்துக!’ என்னச்
சொன்னான்; அவனும், துனை தேர் நனி தூண்டும் எல்லை,104.-தேரைநாகரூர்க்கு நடத்துக என்று அருச்சுனன்
கூறல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ – ள்.)மின் ஆரும் வேலன் – ஒளிநிரம்பிய வேலாயுதத்தையுடைய
அருச்சுனன்,-அன்னார்நகரத்து அழகுஉம் – அவ்வசுரர்களது
தோயமாபுரத்தின் அழகையும், தொல் அரண்உம் – பழமையான (மதிலும்
கடலகழியுமாகிய) அரண்களையும்,நோக்கி – பார்த்து, (பின்பு), விறல்
மாதலி தன்னை- ஜயத்தையுடைய தேர்ப்பாகனைநோக்கி, நல் நாகர்
ஊரில்-நல்ல தேவர்களது நகரத்திலே, தட தேரை – பெரிய இரதத்தை,
மீண்டு நடாத்துக – திரும்பச் செலுத்துவாயாக, என்ன – என்று,
சொன்னான்-;அவன்உம் – மாதலியும், துனைதேர் – (இயல்பிலே)
விரைந்துசெல்லுந் தேரை, நனி தூண்டும் எல்லை- நன்றாகச்
செலுத்திவருமளவில்,- (எ-று.) ‘காணாவினவ’ என மேற்கவியோடு இயையும்.
மின் ஆரும் – மின்னலையொத்த என்னவுமாம்.  நடாத்துக=நடத்துக.

செம் பொற் புரிசை திகழ் கோபுரச் செம்பொன் மாடத்து
அம் பொற் கொடி சேர் நகர், அந்தரத்து, ஒன்று காணா,
வம்பின் பொலி தார்த் தடந் தேர் விடும் மாட்சியானை,
விம்பத் திறல் வார் சிலை வீரன் வினவ, அன்னான்,105.-அந்தரத்தில்ஓரூரைக்கண்டு அருச்சுனன்
மாதலியை வினவுதல்.

விம்பம் – வட்டமாக வளைதலையுடைய,திறல் –
வலிமையுள்ள, வார் – நீண்ட, சிலை- வில்லைக்கொண்ட,வீரன் –
அருச்சுனன்,-செம் பொன் புரிசை – சிவந்த பொன்னினாலாகிய
மதில்களிலும், திகழ் கோபுரம் – விளங்குகின்ற கோபுரங்களிலும், செம்பொன்
மாடத்து – சிவந்த பொன்னின்மயமான வீடுகளிலும், அம்பொன் கொடி –
அழகிய பொன்னினாலாகியகாம்பையுடைய வெற்றித்துவசங்கள், சேர் –
பொருந்தியுள்ள, நகர் ஒன்று – பட்டணம் ஒன்றை, அந்தரத்து –
ஆகாயத்திலே, காணா- பார்த்து,-வம்பின் பொலி தார் – வாசனையோடு
விளங்குகின்ற வெற்றிமாலையையணிந்த,தட தேர் விடு மாட்சியானை-
பெரியதேரைச்செலுத்துகின்ற பெருமைக்குணமுடைய மாதலியை, வினவ –
(இதன் வரலாறு யாதென்று) கேட்க,-அன்னான்- அவன்,-(எ-று.)-
‘கூறுவானானான்’என வினைவருவித்து முடிக்க.  அது மேல் ஐந்து
கவிகளிற் கூறுகின்றார்.

     இரண்டாம்அடியில், பொன்-அதனாலாகியதுவசதண்டத்துக்குக்
காரணவாகுபெயர். 

மன்னும் தனுச குல மாதரில் வஞ்ச நெஞ்சக்
கன்னங் கரிய குழல் காலகை, காமர் சோதிப்
பொன் அம் கொடிபோல் எழில் கூர் நுண் இடைப் புலோமை,
என்னும் பெயரார் இருவோர் உளர்; என்றும் உள்ளார்;106.-ஐந்துகவிகள் -அந்தரத்துத்தோன்றிய
இரணியபுரத்தைப்பற்றி மாதலிகூறுதலைத்தெரிவிக்கும்

மன்னும் – நிலைபெற்ற,தனுச குலம் மாதரில் –
அசுரகுலத்து மகளிருள், வஞ்சம் நெஞ்சம் – வஞ்சனையையுடைய
மனத்தையும், கன்னங்கரிய குழல் – மிகவுங்கறுத்த கூந்தலையுமுடைய,
காலகை – காலகையும், காமர் சோதி – விரும்பப்படுகிற [அழகிய]
ஒளியையுடைய, பொன் அங் கொடி போல் – அழகிய பொற்கொடிபோல,
எழில் கூர் நுண் இடை – அழகு மிக்க மிகச் சிறியதான இடையையுடைய,
புலோமை – புலோமையும், என்னும் பெயரார் – என்கிற பேருள்ளவர்களும்,
என்றும் உள்ளார் – எப்பொழுதும் இறவாமற்பிழைத்துள்ளவர்களுமாகிய,
இருவோர்-இரண்டு பேர், உளர்-உண்டு;(எ – று.)

     ‘கன்னங்கரிய’என்றது – மிகு கறுப்பின் குறிப்பாய் வழங்கி
வருவதொரு சொல்விழுக்காடு.  என்றும் உள்ளார் – (புகழினால்)
எப்பொழுதும் நிலைபெற்றுள்ளவரென்றுமாம். 

அம் மாதர் தந்தைதனை நோக்கி, அனந்த காலம்
செம் மால் வரையில் தவம் செய்தனர்; செய்த நாளில்,
மைம் மான் விழியார்தமக்கு அந்த வனச வாணன்
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான்;

அமாதர் – அப்பெண்களிருவரும், தந்தைதனைநோக்கி –
(படைத்தற்கடவுளாதலால் யாவர்க்கும்) பிதாவாகிய பிரமதேவனைக்குறித்து,
அனந்த காலம் – அளவிறந்த காலம், செம் மால் வரையில்-சிவந்த பெரிய
மேருமலையிலேயிருந்து, தவம் செய்தனர் – தவத்தைப் பண்ணினார்கள்:
செய்த நாளில் – (அங்ஙனம்) பண்ணிய காலத்தில், மை மான் விழியார்
தமக்கு-அஞ்சனமிட்ட மான் பார்வையொத்த கண்களையுடைய
அம்மகளிர்க்கு, அந்த வனசம் வாணன் – தாமரை மலரில் வாழ்கின்ற
அப்பிரமன், (பிரசன்னனாகி),எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள்
ஈந்தான் – என்போலியராற் சொல்லுதற்கு முடியாத பலவரங்களைத்தந்தான்:
(எ-று.)

     செம்பொன்வரையென்பார், ‘செம்மால்வரை’என்றார். மான் –
அதன் பார்வைக்கு முதலாகுபெயர்.  வநஜம் – நீரிற் பிறப்பது;வநம் – நீர்.

தம் மக்கள் ஆய அசுரேசர், அதிதி தந்த
அம் மக்கள்தம்மால் அழியாமையும், ஆடகத்தால்
மும்மைப் புரம்போல் விசும்பு ஊர்தரும்
மொய்ம்பின் இந்தச்
செம்மைப் புரமும், கொடுத்தான், அத் திசை முகத்தோன்.

தம் மக்கள் ஆய – தம்மிருவரது புத்திரர்களாகிய, அசுர
ஈசர் – அசுரத்தலைவர்கள்,அதிதி தந்த அ மக்கள் தம்மால் – அதிதி
யென்னும் காசியபர்மனைவிபெற்ற புத்திரர்களாகிய அத்தேவர்களால்,
அழியாமைஉம் – அழிவடையாதிருத்தலாகிய வரத்தையும், ஆடகத்தால் –
பொன்னாலாகிய,மும்மை புரம் போல் விசும்பு ஊர்தரு மொய்ம்பின் –
திரிபுரம்போல ஆகாயத்திலே பறந்து செல்லும் வலிமையையுடைய, இந்த
செம்மை புரம் உம் – அழகுள்ள இந்த இரணிய நகரத்தையும், அத்திசை
முகத்தோன் – நான்கு முகங்களையுடைய அப்பிரமன், கொடுத்தான் –
(அப்பெண்களுக்குத்) தந்தான்;(எ – று.)

     அதிதியின்மக்களாதலால், தேவர்களுக்கு ‘ஆதித்தியர்’என்றும்,
‘ஆதிதேயர்’என்றும் பெயர்கள் உண்டு.  அம் மக்கள்-அழகிய மக்கள்
என்றுமாம்.    

பொன் காலும் மெய்யர், பொறி கால் பொலங் குண்டலத்தர்,
முன் காலனையும் சமர் மோதி முருக்கும் மொய்ம்பர்,
மின் கால் படையர், விடம் காலும் விழியர், வெம் போர்
வன் காலகேயர் எனும் பேர் திசை வைத்த வீரர்,

வெம் போர் வல் – கொடிய போரிலே வல்ல, காலகேயர்
எனும் பேர் திசை வைத்த – (காலகையின் மக்களாதலால் வந்த) காலகேயர்
என்னும் (தமது) பேரை எல்லாத்திசைகளிலும் பரவவைத்த, வீரர்-வீரர்கள்,-
பொன் காலும் மெய்யர் – பொன்னொளியைவீசும் உடம்புள்ளவர்;பொறி
கால் பொலம் குண்டலத்தர் – ஒளியை வீசுகின்ற பொன்னினாலாகிய
குண்டலங்களையுடையவர்;முன்-விரைந்து சென்று, காலனைஉம்-
யமனையும்,சமர் மோதி – போரில் தாக்கி, முருக்கும் – அழிக்கவல்ல,
மொய்ம்பர் – வலிமையையுடையவர்;மின் கால் படையர் – ஒளியை வீசுகிற
ஆயுதங்களையுடையவர்;விடம் காலும் விழியர் – (கோபமிகுதியால்)
விஷத்தை வெளிப்படுத்துகிற கண்களையுடையவர்;(எ-று.)

‘வரு முப்பொழுதும் மறை அந்தணர் அம் கை வாரி,
உருமுப் புயல்போல், கவர்வோர்; முன் உகாந்த நாதன்
பொரு முப்புரத்தில் உறை தானவர்போலும் வீரர்;
இரு-முப்பதினாயிரம் வஞ்சகர் இங்கும் உண்டால்.’

 வரு- (மாறிமாறி) வருகின்ற, மு பொழுதுஉம் – (காலை
நடுப்பகல் மாலைஎன்னும்) மூன்று காலங்களிலும், மறை அந்தணர் –
வேதம் வல்ல பிராமணர்கள், அம் கை-(தமது) அகங்கைகளால்
(சந்தியாவந்தனத்தில்) எடுத்துவிடுகின்ற, வாரி – (அர்க்கியப்பிரதான)
ஜலத்தை, உருமு புயல்போல் – இடியையுடைய மேகங்கள் (கடலினீரை
முகந்து பருகுதல்) போல, கவர்வோர் – பறித்துக்கொள்பவர்களும், முன் –
முன்னே, உக அந்தம் நாதன் – யுகமுடிவுகாலத்துக்குத் தலைவனாகிய
சிவபிரான், பொரு – போர்செய்து அழித்த, மு புரத்தில் உறை
தானவர்போலும் – திரிபுரத்தில் வசித்த அசுரர்கள்போன்ற, வீரர் –
வீரர்களும் ஆகிய, இரு முப்பதினாயிரம்வஞ்சகர் – வஞ்சனையையுடைய
அறுபதினாயிரவர்அசுரர்கள், இங்குஉம் – இவ்விரணியபுரத்திலும், உண்டு –
உளர்;(எ-று.)-ஆல் – தேற்றம்.

     வருமுப்பொழுது -ஒன்றன்பின் ஒன்றாகவருகின்ற பிராதஸ்ஸந்தியை,
மத்தியாஹ்நம், ஸாயம்ஸந்தியை என்னும் திரிகாலம்.  அந்தணர் – அழகிய
தண்மையை [குளிர்ந்தஅருளை]உடையவர் என, பிராமணர்க்குக்
காரணவிடுகுறிப்பெயர்:இனி, அந்தத்தை அணவுவார் – அந்தணர்:என்றது
– வேதாந்தத்தையே பொருளாக மேற்கொண்டுபார்ப்பார் எனினுமாம்.
சருவசங்காரகாலத்து அழித்தற்றொழில்செய்யுங்கடவுளாதலால், உருத்திரனை
‘உகாந்தநாதன்’ என்றார்.    

தன் தேர் வலவன் மொழி கேட்டு, தயங்கும் நீலக்
குன்றே அனையான், கொடும் போர் வஞ்சினங்கள் கூறி,
‘இன்றே இவர் ஆவியும் தென்புலத்து ஏற்றி, பின்னர்
அன்றே, இனி நான் அமராவதி செல்வது!’ என்றான்.11.-மாதலியின்சொற்கேட்ட அருச்சுனன் அவரை
முடித்த பின்பேஅமராவதி செல்வேனென்று வஞ்சினங்
கூறல்

தன் தேர் வலவன் மொழி கேட்டு – (இங்ஙனம்) தனது
தேர்ப்பாகனாகியமாதலி சொன்ன வார்த்தையைச் செவியுற்று, தயங்கு நீலம்
குன்றுஏ அனையான்- விளங்குகின்ற நீலநிறமுள்ள மலையையேயொத்த
அருச்சுனன், கொடு போர் வஞ்சினங்கள் கூறி – கொடிய யுத்தத்துக்கு உரிய
பல சபதங்களைச்சொல்லி,’இன்றுஏ-இப்பொழுதே,இவர் ஆவிஉம்-
இவ்வசுரர்களது உயிரையும், தென் புலத்து ஏற்றி-தென்திசையிலுள்ள
யமலோகத்திற் சேரச்செய்துவிட்டு, பின்னர் அன்றுஏ-பின்பன்றோ,இனி-,
நான்-, அமராவதி – சுவர்க்கலோகத்துள்ள நகரத்துக்கு, செல்வது –
போவது’,என்றான்- என்று பிரதிஜ்ஞை செய்தான்;(எ-று.)

     அமராவதி -அமரர்களையுடையதுஎனத் தேவேந்திரனது
இராசதானிக்குக் காரணக்குறி.   

இந்தப் புரத்தின் மிசைத் தேரினை ஏவுக!’ என்னாக்
கந்தற்கு உவமை தகு திண் திறல் காளை கூற,
சிந்தைக்கும் முந்தும் தடந் தேரைத் தனுசர் வைகும்
அந்தப் புரத்தில் விடுத்தான், மற்று அவனும் மாதோ.112.-அருச்சுனன்அந்நகர்மீது தேரை யேவுக என்ன,
மாதலி அங்ஙனேசெய்தல்

இந்தபுரத்தின்மிசை – இந்நகரத்தின் மேலே, தேரினை
ஏவுக – தேரைச் செலுத்துவாயாக,’ என்னா- என்று, கந்தற்கு உவமை தகு
திண் திறல் காளை- (எல்லா வீரர்களுக்கும் உபமானமாகச்
சொல்லப்படுகிற) முருகக்கடவுளுக்கும் உபமானமாகத்தக்க மிக்க
வலிமையையுடைய வீரனானஅருச்சுனன், கூற-சொல்ல,-அவன்உம்-
மாதலியும், சிந்தைக்குஉம் முந்தும் தட தேரை – மனத்தினும் விரைந்து
செல்லுந் தன்மையுடைய பெரிய இரதத்தை, தனுசர் வைகும் அந்த புரத்தில்
– அசுரர்கள் வசிக்கின்ற அவ்விரணியபுரத்திலே, விடுத்தான்-செலுத்தினான்;
(எ-று.)

    கந்தன்=ஸ்கந்தன்.  உபமேயத்தினும் உபமானம் சிறந்திருத்தல்வேண்டு
மென்பது அலங்கார நூலாரது துணிபாதலால், அருச்சுனனது சிறப்புத்
தோன்ற, ‘கந்தற்குவமைதகுதிண்டிறற்காளை’என்றார். காளை-
உவமவாகுபெயர்.  நினைத்தமாத்திரத்தில் எவ்வளவு தூரத்திலுள்ள
பொருளினிடத்துஞ் சென்று சேரு
தல்பற்றி, மனம்மிக்கவிரைவுக்கு உவமை கூறப்படும்.  மற்று – அசை.
‘மற்றவன்’என எடுத்து – தேரிலுள்ளவரிருவருள் வீரனொழியப்பாகனாய்
நின்றவன் எனினுமாம்.  

தேர் ஆரவாரத்துடனே, திண் சிலை வலான்தன்
போர் ஆரவாரச் சிலை நாண் ஒலி மீது போக,
ஆர் ஆரவாரத்து இடி கேட்ட அரவம் ஒத்தார்-
கார் ஆரவாரம் எனப் பொங்கும் அக் காலகேயர்.113.-தேர்நாணொலிகளைக்கேட்டுக்காலகேயர்
திடுக்கிடுதல்

திண் சிலைவலான் தன் – வலிய வில்லில்வல்ல
அருச்சனனது  தேர் ஆரவாரத்துடனே – தேரின்பேரொலியோடே, போர்
ஆரவாரம் சிலைநாண் ஒலி – போரிற் கொண்டாட்டத்தையுடைய
வில்லினது நாணியின் ஓசையும், மீது போக – அந்நகரத்தின்மேற்செல, கார்
ஆரவாரம் என பொங்கும் அக்காலகேயர் – மேகத்தினது கிளர்ச்சிபோல
மேலெழுந் தன்மையையுடைய அந்தக் காலகேயர்கள், ஆர் ஆரவாரத்து
இடி கேட்ட – நிறைந்த ஒலியையுடைய இடியைச் செவியுற்ற, அரவம் –
நாகங்களை,ஒத்தார் – போன்றார்கள்;[திடுக்கிட்டார்என்றபடி] ;  (எ-று.)

     இரண்டாம்அடியில் ‘பேராரவாரம்’என்னும் பாடம்,
மோனைத்தொடைக்குப்பொருந்தாது.  

இந்த ஓதை, எழிலி ஏழும் ஊழி நாள் இடித்து எழும்
அந்த ஓதையோ? அது அன்றி, ஆழி பொங்கும் ஓதையோ?
கந்தன் வானின்மீது தேர் கடாவுகின்ற ஓதையோ?
எந்த ஓதை?’ என்று அயிர்த்து, உயிர்த்து, வஞ்சர் யாவரும்,114.-ஓசையைப்பற்றிக் காலகேயர் பலவாறு சங்கித்தல்

இதுமுதல்,நான்குகவிகள் – குளகம்.

     (இ – ள்.)வஞ்சர் யாவர்உம் – வஞ்சகராகிய அசுரர்களெல்லோரும்,
இந்த ஓதை – இவ்வோசை,-எழிலிஏழ்உம் ஊழிநாள் இடித்து எழும் அந்த
ஓசை ஓ – ஏழுமேகங்களும்  யுகாந்த காலத்தில் இடி யிடித்தலாலுண்டாகின்ற
அவ்வோசையோ?  அது அன்றி – அதுவல்லாமல், ஆழி பொங்கும் ஓதை
ஓ – (அக்காலத்தில்) கடல் மேற்பொங்குவதனாலுண்டாகும்ஓசையோ?
(அல்லது), கந்தன் வானின் மீது தேர் கடாவுகின்ற ஓதை ஓ –
(தேவசேனாதிபதியாகிய)சுப்பிரமணியமூர்த்தி ஆகாசமார்க்கத்திலே தேரைச்
செலுத்திவருகிற ஓசைதானோ? எந்த ஓசை – (இவ்வோசைகளுள்)
எவ்வோசையாம்?  என்று அயிர்த்து அயிர்த்து – என்று பலவாறு சங்கித்து,-
(எ-று.)-‘தெழித்து’என மேற்கவியோடு தொடரும்.

     ஏழுமேகங்களாவன- சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலாவர்த்தம்,
சங்காரிதம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன; இவை முறையே
மணி, நீர், பொன், பூ, மண், கள், தீ இவற்றைப் பொழிவன.  சருவசங்கார
காலத்தில் மேகங்களேழும் ஒருங்கேயெழுந்து அவ்வவற்றிற்கு உரிய
மழையை இடைவிடாது பொழிந்து உலகங்களைஅழிக்கு மென்பதும், கடல்
பொங்கியெழுந்து உலகை மூடு மென்பதும், நூற்கொள்கை.  அயிர்த்து
அயிர்த்து – அடுக்கு, மிகுதிபற்றியது அயிர்த்துயிர்த்து என்றும் பாடம்.

     இதுமுதற்பதினேழுகவிகள் – பெரும்பாலும் ஏழாஞ்சீர் கூவிளச்சீரும்,
மற்றையாறும் மாச்சீர்களுமாகி வந்த எழுசீராசிரிய விருத்தங்கள்

தெழித்து, உரப்பி, எயிறு தின்று, வைது, செய்ய கண்கள் தீ
விழித்து, மீசை நுனி முறுக்கி, வெய்ய வீர வாள் உறை
கழித்து, எழுந்து பொங்குகின்ற காளகூடம் என்னவே,
கொழித்து, அழன்று, ‘மண்ணும் விண்ணும் இன்று கோறும்,
நாம்’ எனா,115-மூன்றுகவிகள் – காலகேயர் சினந்து போர்க்குப்
பரபரப்புக்கொண்டுவருவதைத் தெரிவிக்கும்

தெழித்து – கோபங்கொண்டு, உரப்பி – அதட்டி, எயிறுதின்று
– பற்களைக்கடித்து, வைது – வசைமொழிகளைச்சொல்லி, செய்ய கண்கள்
தீ விழித்து – சிவந்த கண்கள் (கோபத்தால்) நெருப்புச்சிந்த
விழித்துப்பார்த்து, மீசை நுனி முறுக்கி-மீசையினுடைய நுனியை (க்கையால்)
திருகி, வெய்ய வீரம் வாள் உறை கழித்து – கொடிய வலிமையையுடைய
வாளைஉறைநீக்கியெடுத்து, எழுந்து-(தத்தமிருப்பிடத்தைவிட்டு) எழுந்து,
பொங்குகின்ற காளகூடம் என்னஏ – (பாற்கடலிற்) கொதித்தெழுந்த
காளகூடமென்னும் பெருவிஷம்போல, கொழித்து – (தீயை) வீசி, அழன்று –
சீறி, ‘மண்உம்- நிலவுலகத்தாரையும், விண்உம் – வானுலகத்தாரையும்,
இன்று – இப்பொழுது, நாம்-,கோறும் – கொல்வோம்,’எனா-
என்றுசொல்லி,-(எ-று.)-‘ஓடுவாரும்'(116) என மேலே தொடரும்.

     ‘உரப்பியெயிறுதின்று வைது கண்கடீவிழித்து’என்பது வரையில்
சினத்தின்செயல்.  மீசை முறுக்குதல் முதலியன, வீரத்தின்செயல்.  மீசை –
மிசை [மேலிடத்து]உள்ளது: இது, மேல் உதட்டின் மீதுள்ள மயிரைக்
காட்டும்.  உறை – படைக்கூடு;இது, ஆயுதம் உறுதற்கு இடமாதல்பற்றி
வந்த பெயர்.  உறுதல் – பொருந்துதல், விழித்தல் -உருட்டிப்பார்த்தல்

ஓடுவாரும், அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல்
நாடுவாரும், ‘நமர்கள் ஆண்மை நன்று, நன்று!’ எனா நகைத்து,
ஆடுவாரும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் ஆயுதம்
தேடுவாரும், எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே,

அந்தஓதை எதிர் – அவ்வோசையுண்டான இடத்துக்கு
எதிர்நோக்கி, ஓடுவார்உம் – ஓடுபவர்களும், உடன்று – பகைத்து, உறுக்கி –
கோபித்து, நாடுவார்உம் – (அவ்வோசையுண்டாதற்குக்காரணத்தை)
ஆராய்பவர்களும், நமர்கள் ஆண்மை நன்று நன்று எனா- நம்மவர்களது
பராக்கிரமம் மிகநன்றாயிருந்ததுஎன்று, நகைத்து ஆடுவார்உம் – (தம்மில்)
சிரித்துப் பேசுபவர்களும், அமரர் வாழ்வு பாழ்படுத்தும் – தேவர்களது
வாழ்க்கையைப் பாழாக்கிவருகிற, ஆயுதம் – ஆயுதங்களை,தேடுவார்உம் –
தேடி யெடுப்பவர்களும், எண் இறந்த தேர்கள் ஏறுவார்உம் – அளவில்லாத
தேர்களில் ஏறுபவர்களுமாய்,-(எ-று.)-‘உந்திமுந்தினார்’என,
மேலிற்கவியில் முடியும்.

     ஆய் என்னும்வினையெச்சம்,வருவிக்கப்பட்டது.  நம்மவர்
பராக்கிரமம் பிறர் அஞ்சாது வந்து எதிர்க்கும்படியாயிற்றேயென்று, இகழ்ச்சி
தோன்ற ‘நன்றுநன்று’என்றார்;பிறகுறிப்பு.  ஆடுதல் – வார்த்தையாடுதல்.
‘உறுக்கிமேல்’என்று பிரதிபேதம். 

கூளி கோடி உய்ப்ப, குஞ்சரங்கள் கோடி உய்ப்ப, பேர்
ஆளி கோடி உய்ப்ப, வாயு கதிகொடு அந்தரத்தின்மேல்
வாளி போதும் வாசி கோடி கோடி உய்ப்ப, வாவு தேர்
ஓளியாக வானின் எல்லை மறைய உந்தி, முந்தினார்

கூளிகோடி உய்ப்ப – பலபெருங்கழுகுகள் இழுத்துப் பறந்து
செல்வனவும், குஞ்சரங்கள் கோடி உய்ப்ப – பலயானைகள்இழுத்துச்
செல்வனவும், பேர் ஆளி கோடி உய்ப்ப – பெரிய சிங்கங்கள் பல
இழுப்பனவும், வாயு கதி கொடு – காற்றுச்செல்லும் வேகத்தைப் பெற்று,
அந்தரத்தின்மேல் – ஆகாயத்திலே, வாளி போதும் – அம்புபோல நேர்
செல்லுகின்ற, வாசி கோடி கோடி – மிகப் பலவாகிய குதிரைகள், உய்ப்ப –
இழுப்பனவுமாகிய, வாவு தேர் – தாவிச் செல்லுகின்ற தேர்களை,ஓளி ஆக
– ஒழுங்காக, வானின் எல்லைமறைய – ஆகாயத்தின் எல்லைமறையும்படி,
உந்தி-செலுத்தி, முந்தினார்- முற்பட்டு வந்தார்கள்;(எ-று.)

     அந்த அசுரர்களின் தேர்கள் கூளி முதலியவைகளால் ஈர்க்கப்பட்டுச்
சென்றன என்க.  கூளி பூதமுமாம்.  குஞ்சரம் – மத்தகங்களுக்குக்
கீழிருக்கின்ற குழிகளுள்ள தென்றும், காட்டுப் புதர்களிற் சஞ்சரிப்பதென்றும்
காரணப்பொருள்படும்.  வாளி போதல்-வட்டமா யோடுதலுமாம்.  வாசி –
வாஜி; வடசொல்.  ஆயதேர் என்று பிரதிபேதம்

அந்தகன் பொரற்கு நம்மை வல்லன் அல்லன்;
அபயம் முன்
தந்த இந்திரன் தனக்கும் ஒக்கும் அன்ன தன்மைதான்;
கந்தன் என்னில், ஆறு-இரண்டு கண்கள் கைகள்
இல்லை; மேல்
எந்த வீரன், நம்மொடு, இன்று, எதிர்க்கும் இந்த வீரனே118.-அவ்வசுரர்கள்மனத்தில் அருச்சுனனைபற்றி
நிகழும் எண்ணம்

அந்தகன் – யமன், நம்மை-,பொரற்கு – போர் செய்து
எதிர்ப்பதற்கு, வல்லன் அல்லன் – சமர்த்தனல்லன்;அபயம் முன் தந்த –
(நம்மால்) முன்னே அபயங்கொடுக்கப்பட்ட, இந்திரன் தனக்குஉம் –
தேவேந்திரனுக்கும், அன்ன தன்மை – (நம்மோடு பொரமாட்டாத)
அத்தன்மை, ஒக்கும் – பொருந்தும்; (ஆதலால் இவன் யமனும்
இந்திரனுமல்லன்);கந்தன் என்னில் – முருகக்கடவுள் என்போமென்றால்,
ஆறு இரண்டு கண்கள் கைகள் இல்லை-(ஆறுமுகனாதற்குத்தக)
பன்னிரண்டு கண்களும் அத்தனை கைகளும் இல்லை: (ஆதலால்
அவனுமல்லன்) இன்று நம்மொடு எதிர்க்கும் இந்த வீரன் – இப்பொழுது
நம்முடனே எதிர்க்கிற இவ்வீரன், மேல் எந்த வீரன் – இம்மூவருமல்லாத
எந்த வீரனோ? (எ-று.)-என்றுஐயப்படுதலும் தெளிதலுமானார்கள்அவுண
ரென்க.

     அபயந்தருதல் -பயப்படாதேயென்று வாக்குதத்தஞ் செய்தல்.
மேல்-வேறென்னும் பொருள்பட நின்ற இடைச்சொல்

எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப, வெயில் மணிக்
குண்டலங்கள் அழகு எறிப்ப, மகுட கோடி குலவி மேல்
மண்டி எங்கும் வெயில் எறிப்ப, வஞ்சர்தம் வனப்பு எலாம்
கண்டு கண்டு, அருச்சுனன் கருத்து நொந்து கூறுவான்:119.-அவ்வசுரர்களின்வனப்பைக்கண்டு அருச்சுனன்
கருத்துநொந்துகூறலுறுதல்

எண்தயங்கும் எயிறு – வலிமைமிக்க பற்கள், வெள் நிலா
எறிப்ப – வெண்மையான சந்திரகாந்திபோன்ற ஒளியை வீசவும், வெயில்
மணி குண்டலங்கள் – சூரியகாந்தியை யொத்து விளங்குகின்ற இரத்தின
குண்டலங்கள், அழகு எறிப்ப – அழகை வீசவும், மகுடம் கோடி –
கிரீடத்தின் நுனி, குலவி – விளங்கி, மேல் மண்டி – மேலே பொருந்தி,
எங்கும்-, வெயில் எறிப்ப – சூரியனொளிபோன்றஒளியை வீசவும், வஞ்சர்
தம் வனப்பு எலாம் – வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களின் இவ்வழகுகளை
யெல்லாம், கண்டுகண்டு – நன்றாகப்பார்த்து, அருச்சுனன்-,கருத்து
நொந்து – மனம் வருந்தி, கூறுவான் – (சில வார்த்தை) சொல்வானானான்;
(எ-று.),-கண்டுகண்டு- அடுக்கு, மிகுதிப்பொருளது.

கன்னல் வேளை வென்ற இக் கவின் படைத்த காட்சியும்,
மின்னு பூண் விளங்கு மார்பும், விபுதருக்கும் இல்லையால்;
என்ன பாவம், இவரை ஆவி ஈடு அழிப்பது!’ என்று போர்
மன்னர் மன்னன் முன் உரைத்த வாய்மையும் குறிப்புறா,120.-அருச்சுனன் அவ்வசுரரின்வனப்பைக்
கண்டு இவர்களைக்கொல்லவேணுமேயென்று நொந்து
கூறுதல்.

இதுமுதல் நான்குகவிகள் – ஒருதொடர்.

     (இ-ள்.)’கன்னல்வேளைவென்ற – கரும்புவில்லையுடைய
மன்மதனைச்சயித்த, இ கவின் படைத்த காட்சிஉம் – அழகுபெற்ற
இத்தோற்றமும், மின்னு பூண் விளங்கும் மார்புஉம் – பிரகாசிக்கிற
ஆபரணங்கள் விளங்குகிற மார்பும், விபுதருக்குஉம்  இல்லை-
(இவ்வசுரர்களுக்கு இருப்பதுபோலத்) தேவர்களுக்கும் இல்லை;ஆல் –
ஆதலால், இவரை – இவர்களை,ஆவி ஈடு அழிப்பது – உயிரின் வலியை
நாசஞ்செய்வது [கொல்லவேண்டுவது],என்ன பாவம் – (முற்பிறப்பிற்செய்த)
என்ன தீவினையின்பயனோ?’என்று – என்று சொல்லி, போர் மன்னர்
மன்னன் – போரில் வல்ல அரசர்களுக்குட் சிறந்தவனானஅருச்சுனன்,
முன் உரைத்த வாய்மைஉம் – (இவர்களைக்கொல்வேனென்று) முன்னே
சொன்ன சபத வார்த்தையையும், குறிப்புறா-மனத்திற்கருதி,-(எ-று.)-
‘குறிப்புறா’என்பது, மேல் 123- ஆம் கவியில் ‘செவிக்கொளா’
என்பதனோடுமுடியும்.

     முன் உரைத்தவாய்மை – கீழ் நூற்றுப்பதினோராங்கவியிற் காண்க.

வில் வளைத்து நின்ற நீல வெற்பர் ஒன்றை விண்ணிடைச்
செல் வளைத்தது என்ன வந்து, தீய வஞ்சர் யாவரும்,
மல் வளைத்த சிகர வாகு கிரியின்மீதும், மார்பினும்,
கொல் வளைத்த பகழி தூவி, இன்ன நின்று கூறுவார்121.-அருச்சுனன்மீதுபகழிதூவி அவ்வசுரர்கள்
கூறலுறுதல்

வில்வளைத்துநின்ற – வில்லைவணக்கிநின்ற, நீலம்
வெற்பர் ஒன்றை – ஒரு நீலமணிமலையை,விண்ணிடை-ஆகாயத்திலே,
செல் வளைத்ததுஎன்ன – மேகங்கள் சூழ்ந்ததுபோல, தீய வஞ்சர்
யாவர்உம் – கொடிய வஞ்சனையுடையஅசுரர்களனைவரும், வந்து –
வந்து (அருச்சுனனைவளைத்துக்கொண்டு),மல் வளைத்த- மற்போரை
மிகப்பயின்ற, சிகரம் கிரி வாகுவின்மீதுஉம்-சிகரத்தையுடைய மலைகள்
போன்ற (அவனது) தோள்களிலும், மார்பின்உம் – மார்பிலும், கொல்
வளைத்தபகழி தூவி -கொல்லனால்நிருமிக்கப்பட்ட அம்புகளைச்
சொரிந்து, நின்று – நிலைநின்று,இன்ன கூறுவார்-இவ்வார்த்தைகளைச்
சொல்லுவார்கள்;(எ-று.)-அவை மேற்கவியிற் காண்க.

     கொல் -இரும்பைக் காய்ச்சி யடித்துச் செய்யும் வேலை;
கொல்லனுக்கு இங்கு ஆகுபெயர்.  செல் – செல்லுவது: மேகத்துக்குக்
காரணக்குறி.  சிகரவாகுகிரியின் – உருபுபிரித்துக் கூட்டப்பட்டது.  வெற்பர்,
அர் – சாரியை.   

உழுவை கண்ட உழைகள் போல, ஓடி ஓடி, மேருவின்
முழைதொறும் புகுந்த தேவர் ஏவல்கொண்டு, மொய்ம்புடன்,
இழிவு இல் சந்தனம் கடாவி, இங்கு வந்தது என் அடா?-
புழுவில் ஒன்றும் ஒன்று பூதலத்து உளான் ஒருத்தன் நீ!’122.-அருச்சுனனைஇரணியபுரத்தசுரர்
அலட்சியப்டுத்திப்பேசுதல்

புழுவில் ஒன்றும் – புழுக்களிலே சேர்ந்த [புழுக்களில்
ஒன்றையொப்ப எங்களால் மதிக்கப்படுகிற],ஒன்று பூதலத்து உளான்-
பொருந்திய நிலவுலகத்திலே யுள்ளவனாகிய,ஒருத்தன் நீ – (வேறு
துணையில்லாத)நீ ஒருவன், உழுவை கண்ட உழைகள் போல – புலியைப்
பார்த்த மான்கள்போல, ஓடி ஓடி -(எங்களைக்கண்டுபயந்து) மிகுதியாக
ஓடி, மேருவின் முழைதொறுஉம் புகுந்த – மேருமலையின்குகைகள்தோறும்
புகுந்து ஒளித்த, தேவர் – தேவர்களது, ஏவல்கொண்டு – ஏவுதலினால்,
மொய்ம்புடன் – வலிமையுடனே, இழிவு இல் சந்தனம் கடாவி –
குற்றமில்லாததொரு தேரைச் செலுத்தி, இங்கு வந்தது-,என் அடா –
யாதடா?  (எ-று.)

     என்னடா என்பது- இகழ்ச்சிதோன்ற நின்றது.  சந்தனம்=ஸ்யந்தநம்:
வடமொழி. பூதலத்துளானொருத்தன்நீ – முன்னிலையிற்படர்க்கை வந்த
இடவழுவமைதி.  ‘புழுவிலொன்றுமன்று’என்றும் பாடம்.

என்று, காலகேயர் நின்று, இசைத்த சொல் செவிக்கொளா,
‘நன்று! காலகேயர் சொன்ன வாய்மை நன்று!’ எனா நகைத்து,
‘ஒன்று காலம் வந்தது, இங்கு உருத்து, நான் உடன்று, உமைக்
கொன்று, காலன் ஊரில் உங்கள் ஆவியும் கொடுக்கவே.’123.-அருச்சுனன்மறுமொழி.

என்று- இவ்வாறு, காலகேயர்-,நின்று – எதிரில் நின்று,
இசைத்த – சொன்ன, சொல் – வார்த்தையை, செவி கொளா –
காதிலேகொண்டு [கேட்டு],-(அருச்சுனன்),-காலகேயர்சொன்ன வாய்மை
நன்று நன்று எனா-காலகேயர்கள்சொன்ன வார்த்தை மிகவும்
நன்றாயிருந்ததென்றுஎண்ணி, நகைத்து – சிரித்து, (அவர்களைநோக்கி),
‘நான்-,இங்கு-இப்போர்க்களத்தில், உருத்து – கோபித்து, உடன்று பகைத்து,
உமை கொன்று – உங்களைக்கொலைசெய்து,உங்கள் ஆவிஉம்-
உங்களுடைய உயிரையும், காலன் ஊரில் – யமபுரத்திலே, கொடுக்க –
செலுத்துதற்கு, ஒன்று காலம் – பொருந்திய காலம், வந்தது – வந்துவிட்டது,’
(எ-று.)-‘என்றுமறுமொழி கூறினான்’என வருவித்து முடிக்க

காலகேயர், விசயன் நின்று கட்டுரைத்த உறுதி கேட்டு,
ஆலகாலம் என உருத்து, அழன்று, பொங்கி, அயில் முனைச்
சூலம், நேமி, பாலம், வெய்ய சுடு சரம், துரத்தினார்-
நீல மேனி செம்புண் நீரினால் நிறம் சிவக்கவே124.-அருச்சுனன்கூறியது கேட்டுக் காலகேயர்
படைவிடுதல்

காலகேயர்-,விசயன் நின்று கட்டு உரைத்த உறுதிகேட்டு –
அருச்சுனன் அஞ்சாமல் நின்று திடமாகச் சொல்லிய உறுதிவார்த்தையைச்
செவியுற்று, ஆலகாலம் என – (பாற்கடலில் தோன்றிய)விஷம்போல, உருத்து
– கோபித்து, அழன்று – கொதித்து, பொங்கி – மேலெழுந்து,-நீலம்மேனி-
அருச்சுனனது நீலநிறமுள்ள உடம்பு, செம் புண் நீரினால்-
விரணங்களினின்றும் பெருகுகின்ற சிவந்த இரத்தத்தால், நிறம் சிவக்க –
செம்மைநிற மடையும்படி, அயில் – வேல்களையும்,முனை-கூர்
நுனியையுடைய, சூலம் – சூலங்களையும்,நேமி-சக்கரங்களையும்,பாலம்-
மழுக்களையும்,வெய்ய சுடு சரம்-கொடிய (பகைவரை) வருத்துகிற
அம்புகளையும்,துரத்தினார்- (அவன்மீது) பிரயோகித்தார்கள்;(எ-று.)

    ஆலகாலம்=ஹாலாஹலம். பாலம்=பிண்டிபாலம். 

விண் சுழன்று, திசை சுழன்று, வேலையும் சுழன்று, சூழ்
மண் சுழன்று, வரை சுழன்று, வானில் நின்ற வானுளோர்
கண் சுழன்று, யாதினும் கலங்குறாத கலைவலோர்
எண் சுழன்று, மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே!125.-அவுணருடையஆயுதவேகத்தின் வருணனை.

(அவர்கள் ஆயுதங்களைமேல் வீசிய வேகத்தால்),
விண்சுழன்று-ஆகாயங் கலங்கி, திசை சுழன்று – திக்குக்கள் நிலைதடுமாறி,
வேலைஉம்சுழன்று – கடலுஞ் சுழற்சிபெற்று, சூழ் மண் சுழன்று –
(அக்கடல்) சூழ்ந்த பூமி சுற்றி, வரை சுழன்று – மலைநிலைபெயர்ந்து,
வானில் நின்ற வான் உளோர் கண் சுழன்று – ஆகாயத்திற் பொருந்திய
சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்களது இமையாக்கண்கள் திகைப்படைந்து,
யாதின்உம் கலங்குறாதகலைவலோர்எண் சுழன்று – எந்தக்
காரணத்தினாலும்நிலைமாறுதலில்லாதநூல்வல்ல யோகியர்களது மனமுஞ்
சலித்து, மற்றுஉம் உள்ள யாவைஉம் – இன்னும் உள்ள எல்லாப்
பொருள்களும், சுழன்ற-சுழற்சிபெற்றன;(எ-று.)-சொற்பின்வருநிலையணி

அவர் விடுத்த படைகள் யாவும் அழிய, வானுடைக் கணைக்
கவர் தொடுத்து, விலகி, மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர, சரம் துரத்தினான்-
‘தவரினுக்கு இராகவன்கொல்!’ என வரும் தனஞ்சயன்126.-அருச்சுனன்அவர்கள் படைக்கலங்களுக்கு விலகி,
அம்புபொழிதல்

தவரினுக்கு – வில்வித்தையில், இராகவன் கொல் என –
ஸ்ரீராமபிரானோஎன்று சொல்லும்படி, வரும் – அவதரித்த, தனஞ்சயன் –
அருச்சுனன்,-அவர்விடுத்த – அவ்வசுரர்கள் (தன்மேல்) எறிந்த, படைகள்
யாஉம் – ஆயுதங்களனைத்தும்,அழிய – அழியும்படி, வானிடை –
ஆகாயத்திலே, கணை- அம்புகளை,கவர் தொடுத்து – ஒன்று பலவாம்படி
விடுத்து, விலகி – (அவர்களின் ஆயுதங்களுக்குத் தான் இலக்காகாமல்)
நீங்கி, மீள – பின்பு, அவர்கள் காயம் எங்கண்உம்-அவர்களுடம்பு
முழுவதிலும், துவர் நிறத்த குருதி – சிவந்த நிறத்தையுடைய இரத்தம்,
சோர்தர-வழியும்படி, சரம் துரத்தினான்-அம்புகளைஎய்தான்;(எ-று.)

    கவர்தொடுத்தலாவது – ஒன்றிலிருந்து பலதோன்ற விடுதல்.  துவர்
நிறத்த – பவழம்போன்ற நிறத்தையுடைய என்றுமாம்.  கணைக்கவர்-
இரட்டையம்பு என்று உரைப்பாருமுளர்.  தவர் – வில்.  இராகவன் –
ரகுமகாராசனது குலத்தில் அவதரித்தவனென்று பொருள்

பார்த்தன் எய்த வாளி மெய் படப் படப் பதைத்து, மீது
ஆர்த்து எழுந்து, நகரினோடும் அந்தரத்தின் எல்லை போய்,
வார்த் தரங்க வேலையூடும் மண்ணினூடும் மறைய, அத்
தூர்த்தர் செய்த வஞ்ச மாயை சொல்லல் ஆகும் அளவதோ127.-அருச்சுனனம்புபடவேஅவுணர் ஆகாயத்தி
லெழுந்து பூமி நீர்இவற்றில் தம் பட்டணத்தோடு
மறைந்துமாயைபுரிதல்

பார்த்தன் எய்த வாளி – அருச்சுனன் எய்த அம்புகள், மெய்
பட பட – (தம்) உடம்பில் மிகுதியாகப் படுவதனால்,அ தூர்த்தர் –
வஞ்சகர்களாகிய அவ்வசுரர்கள், பதைத்து – வருந்தி, ஆர்த்து ஆரவாரித்து,
மீது எழுந்து – மேலே கிளம்பி, நகரினோடுஉம்- (தங்கள்)
பட்டணத்துடனே, அந்தரத்தின் எல்லைபோய் – ஆகாயத்தினிடத்தே
சென்று, வார் தரங்கம் வேலையூடுஉம் – நீரலைகளையுடைய
கடலினிடத்தும், மண்ணினூடுஉம் – பூமியிலும், மறைய – மறைவாக (நின்று),
செய்த-,வஞ்சம் மாயை-வஞ்சனையுள்ளமாயையானது, சொல்லல் ஆகும்
அளவதுஓ – சொல்லுதற்குக்கூடிய அளவையுடையதோ?  [அன்றென்றபடி].

     பார்த்தன் -பிரதையின் மகன் என்றுபொருள்: பிரதை – குந்தி;இது
– அருச்சுனனுக்குக் காரணக்குறி

அண்ணல் தேரின் முன்னது ஆகும்; அளவு இறந்த தேரொடும்
விண்ணின்மீது திசை அளக்கும்; வெற்பின்மீது
பொலியும்; எக்
கண்ணும் ஆகும்; அக் கணத்தில் மீளவும் கரந்திடும்;-
எண்ணல் ஆவது அன்று, அது அன்று இயற்றும்
இந்த்ரசாலமே128.-அவுணரின்இந்திரஜாலம்

(அவ்வசுரர்களோடு கூடிய இரணியபுரமானது),-அண்ணல்
தேரின் முன்னது ஆகும் – (ஒருகால்) அருச்சுனனது தேருக்கு எதிரில்
உள்ளதாய்க் காணப்படும்;(உடனே), அளவு இறந்த தேரொடுஉம் –
கணக்கில்லாத தேர்களுடனே, விண்ணின் மீது – ஆகாயத்திலே, திசை
அளக்கும் – (முழுவதும் பரவி) எல்லாத்திக்குக்களையும்அளவிடும்;
வெற்பின்மீது பொலியும் – (மற்றொருகால்)ஒருமலையின்மேலேவிளங்கும்;
எ கண்உம் ஆகும் – (வேறொருகால்)எவ்விடத்துங் காணப்படும்;அ
கணத்தில் – அந்த க்ஷணத்தில்தானே, மீளஉம் கரந்திடும்-திரும்பவும்
மறைந்து விடும்;அது அன்று இயற்றும் – அன்றைத்தினத்தில்
அவ்விரணியபுரம் செய்த, இந்த்ர சாலம் – மகாமாயையானது, எண்ணல்
ஆவது அன்று – நினைப்பதற்குங்கூடியதன்மையுடையதன்று;

     எண்ணலாவதன்றுஎன்றதனால்,சொல்லலாவதுஞ் செய்யலாவது
மன்றென்பது தானே பெறப்படும்.  இந்திரசாலமாவது – உள்ளதை
இல்லாததாகவும் இல்லாததை உள்ளதாகவும்ஒன்றை மற்றொன்றாகவும்
அற்புதங் காட்டுவதொரு மாயவித்தை: ஆன்மாவை மயங்கச்செய்வதென்பது,
இத்தொடர்க்குப் பொருள். அது-அப்புரத்திலுள்ளார்க்கு, இடவாகுபெயர்

அந்த வஞ்சர் புரியும் மாயை வகை அறிந்து, அருச்சுனன்
சிந்தை கன்றி, விழி சிவந்து, தெய்வ வாகை வில்லையும்
மைந்துடன் குனித்து, வாளி வாயு வேகமுடன் விடுத்து,
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான்.129.-தன்ஒற்றைவில்லைக்கொண்டுஅருச்சுனன்
எங்குஞ் சரமாரிபொழிதல்

அந்தவஞ்சர் புரியும் – வஞ்சனையையுடையஅவ்வசுரர்கள்
செய்கின்ற, மாயை வகை – மாயையின் விதத்தை, அறிந்து-,அருச்சுனன்-,
சிந்தை கன்றி – மனங் கொதித்து, விழி சிவந்து – கண்கள் செம்மை
நிறமடைந்து, தெய்வம் வாகை வில்லைஉம்- தெய்வத்தன்மையையும்
வெற்றிமாலையையுமுடையகாண்டீவத்தையும், மைந்துடன் குனித்து –
பலத்தோடு வளைத்து,வாளி – அம்புகளை,வாயு வேகமுடன் – காற்றை
யொத்த வேகத்துடனே, விடுத்து – தொடுத்து, எந்த எந்த உலகுஉம்-
(அந்நகரஞ் செல்லுகின்ற) எல்லா இடங்களையும்,அப்பு மாரி ஆ
இயற்றினான்- பாணவர்ஷமயமாகச் செய்தான்;(எ-று.)

     அப்பு மாரி -அம்புகளின் மழை;வேற்றுமையில் மென்றொடர்
வன்றொடராயிற்று. மாரியால் என்றும் பாடம்

தனித மேகம் அன்ன தேரும் ஒன்று; தா இல் குன்றுபோல்
குனிதரும் கடுப்பின் மிக்க கொடிய வில்லும் ஒன்று: மேல்
கனிவுறும் சரக் குழாம் விசும்பின் எல்லை காட்டும்; ஓர்
மனிதன் வின்மை நன்று, நன்று!’ எனா மதித்து, வஞ்சரே,130.-அருச்சுனன்திறனைஅவுணர்மதித்துக் கூறல்

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.)வஞ்சர் – அசுரர்கள்,-‘தனிதம்மேகம் அன்ன –
இடியையுடைய மேகத்தையொத்த, தேர்உம் ஒன்று – (எதிரியினது) தேர்
ஒன்றுதான்: தா இல் குன்று போல் – அழிதலில்லாத மேருமலைபோல,
குனிதரும் – வளைந்த,கடுப்பில் மிக்க – (அம்பெய்யும்) வேகத்தில் மிகுந்த,
கொடிய வில்உம் ஒன்று – பயங்கரமான வில் ஒன்றுதான்: (இங்ஙனாகவும்),
மேல் கனிவு உறும் – மிக முதிர்தலைப்பெற்ற, சரம் குழாம் – அம்புகளின்
கூட்டங்களை,விசும்பின் எல்லை- ஆகாயத்தினிடம் முழுவதும், காட்டும் –
பரவுமாறு செய்கிற, ஓர் மனிதன் வின்மை – ஒருமனிதனது விற்றொழிலின்
திறம், நன்று நன்று – நன்றாயிருந்ததுநன்றாயிருந்தது,’எனா- என்று,
மதித்து – சிறப்பாக எண்ணி,-(எ-று.)-(சொரியாப்பிளிறினர்’என முடியும்.

    தனிதம்=ஸ்தநிதம்: வடமொழி.  தனிதமேகமன்னதேர் என்றது –
ஆகாயத்தில் விரைந்து செல்லுதலும் பேராரவாரமும் பற்றி.  திரிபுர சங்கார
காலத்தில் மகாமேருகிரி சிவபிரானுக்கு வில்லாகியிருந்ததனால்,
‘தாவில்குன்றுபோற்குனிதரும் வில்’என்றார். தா – உரிச்சொல்.
‘கண்டுபோர்”கட்டுபோர்’என்றும் பாடம். 

புருவ வில் வளைவுற, விழி கனல் பொதுள,
கரு முகில் அனையவர் கடுகினர் முடுகி,
சர மழை, இடி மழை, தழல் மழை, சொரியா,
பெரு மழை என நனி பிளிறினர் எவரும்.131.-அவுணர்அம்புமழைபொழிந்து கர்ச்சித்தல்

கருமுகில் அனையவர்- கறுத்த மேகத்தையொத்தவர்களாகிய,
எவர்உம் – எல்லா வசுரர்களும்,-புருவம்வில் வளைவுஉற – (தங்கள் தங்கள்)
புருவமாகிய வில் (கோபத்தால் மேல் நெறித்து) வளைதலையடையவும், விழி
கனல் பொதுள-கண்களில் நெருப்பு நிறையவும், முடுகி கடுகினர்-மிகவும்
வேகமாக வந்து, சரம் மழை – அம்பு மழையையும், இடி மழை –
இடிமழையையும், தழல் மழை – நெருப்பு மழையையும், சொரியா-பொழிந்து,-
பெருமழை என – பெரிய மேகம்போல, நனி பிளிறினர் – மிகுதியாகக்
கர்ச்சித்தார்கள்: (எ-று.)-புருவம்- ப்ரூ என்னும் வட மொழித்திரிபு.

     இதுமுதற்பதின்மூன்றுகவிகள் – பெரும்பாலும் ஈற்றுச்சீரொன்று
புளிமாச்சீரும், மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய அளவடிநான்குகொண்ட
கலிவிருத்தங்கள்;இவற்றில் ஈற்றெழுத்து ஒன்று ஒழிய மற்றையெழுத்துக்கள்
பெரும்பாலும்  குற்றெழுத்துக்களாகவே வந்தது, குறுஞ்சீர்வண்ணம்.
இடையிடையே வந்த ஐகாரக் குறுக்கங்களும் மாத்திரை யொப்புமையால்
குற்றெழுத்தோடு ஒப்பவே கொள்ளப்படும். 

இவர் உயிர் கவர்தர, இடம் இது’ எனவே,
நவை அறு திறலுடை நகு சரம் உகையா,
அவரவர் அகலமும், அணி கிளர் கரமும்,
தவருடன் விழ விழ, ஒரு தனி பொருதான்132.-அருச்சுனன்அம்புசெலுத்திப் பொருதல்

அப்பொழுது அருச்சுனன்), ‘இவர்உயிர் கவர் தர –
இவ்வசுரர்களின் உயிரை வாங்குவதற்கு, இடம்-தக்கசமயம், இது –
இதுவாம்,’என – என்று எண்ணி,-நவை அறு திறல் உடை – குற்றமற்ற
வலிமையையுடைய, நகு சரம் – விளங்குகின்ற அம்புகளை,உகையா-
செலுத்தி,-அவர்அவர்-அவ்வசுரர்களின், அகலம்உம் – மார்பும், தவருடன்
– (பிடித்த) விற்களுடனே, அணி கிளர் கரம்உம் – அழகுவிளங்குகின்ற
கைகளும், விழவிழ – மிகுதியாக விழும்படி, ஒரு தனி பொருதான்-
ஒப்பில்லாதபடி தனியனாய்நின்று போர்செய்தான்;(எ-று.)

     கவர்தல் -கொள்ளைகொள்ளுதல்.காலமும் இடமாதல்பற்றி, இங்கே
‘இடம்’எனப்பட்டது.  இனி, முதலிரண்டடிக்கு – இவருயிரை யொழித்தற்கு
இடம் இதுவென்னும்படி (மார்பில்) அம்பு செலுத்தி யென்றுமாம்.  அம்பின்
வலிக்குக் குற்றமாவது-குறித்த இலக்கிற்சென்று படாமையும், பட்டும் அதனை
அழியாமையுமாம்.  நகுசரம் – வினைத்தொகை;இதில், பகைவரது
கிளர்ச்சியை நோக்கிப் பரிகசித்துச் சிரிக்கின்ற அம்பு என்னும் பொருளுந்
தொனிக்கும்.  ஒருதனி – தன்னந்தனி என்றாற்போலமிகுதனியுமாம்.
உதையா என்றும் பாடம்.  

அவன் விடும் அடு கணை அடையவும், நொடியில்
பவனனது எதிர் சருகு என நனி பறிய,
கவனமொடு எழு பரி ரத கதி குலைய,
துவனியொடு எறி படை எதிர் எதிர் தொடவே133.-அருச்சுனனதுகணையைவிலக்கி, அவுணர்
எதிராகப் படைதொடுத்தல்

இதுவும், மேற்கவியும் – குளகம்.

     (இ-ள்.) அவன்விடும்-அருச்சுனன் எய்கின்ற, அடு கணை
அடையஉம் – கொல்லுகின்ற அம்புகளெல்லாமும், நொடியில் –
நொடிப்பொழுதினுள்ளே, பவனனது எதிர் சருகு என-காற்றுக்கு எதிரிலே
அகப்பட்ட சருகுகள்போல, நனி பறிய – மிகவும் மீண்டு செல்லும்படியும்,-
கவனமொடு எழுபரி – விரைந்த நடையோடு செல்லுகிற குதிரைகளைப்
பூட்டிய, ரதம் – (அருச்சுனனது) தேரினுடைய, கதி – செல்லுகை, குலைய-
கெடும்படியும்,-துவனியொடு- ஆரவாரத்துடனே, எறி படை –
பிரயோகித்தற்குரிய ஆயுதங்களை,எதிர் எதிர் – எதிரே எதிரே, தொட –
(அசுரர்கள்) தொடுக்க,- (எ-று.)-‘மகபதிமகனும்அவுணரும் பொருதனர்’என
வருங் கவியோடு இயையும்.

     நொடி -இயற்கையில் ஒருவன் ஒருமுறை கையை நொடித்தற்கு
வேண்டும் பொழுது.  பவனன் – அசுரர் எய்யும் அம்புக்கும், சருகு –
அருச்சுனன் எய்யும் அம்புக்கும் உவமை.  சருகு – உலர்ந்த இலை. பரிய
என்றும் பாடம். 

வரி சிலை விறலுடை மகபதி மகனும்,
எரி விழி அவுணரும், முறை முறை இகலி,
பொருதனர்-ரகுபதி புதல்வனும் அடு போர்
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே.134.-அருச்சுனனுடன்அவுணர் கடும்போர் விளைத்தல்.

வரிசிலைவிறல் உடை – கட்டமைந்த
வில்லின்வலிமையையுடைய, மகபதி மகன்உம் – இந்திரகுமாரனான
அருச்சுனனும், எரி விழி அவுணர்உம் – நெருப்பைச் சிந்துகின்ற
கண்களையுடையஅசுரர்களும், முறை முறை – கிரமந்தப்பாமல், இகலி-
பராக்கிரமித்து,-ரகுபதிபுதல்வன்உம் – ரகுகுலத்துக்குத் தலைவனான
தசரதசக்கரவர்த்தியினது திருமகனானஸ்ரீராமபிரானும், அடு போர்
நிருதர்உம் – கொல்லுகின்ற போர்த்தொழிலில் வல்ல இராக்கதர்களும், எதிர்
பொரும் – எதிர்த்துச்செய்த, அமர் – போர், நிகர் என – ஒப்பு என்னும்படி,
பொருதனர் – போர்செய்தார்கள்;

     முறைமுறைஎன்பதற்கு – இவர்விட்ட ஆயுதங்களைஅவன் தான்விடும்
அம்புகளால் விலக்கி இவர்கள் மேலும் அம்பெய்தலும், அவன் எய்த
அம்புகளைஇவர்கள் விலக்கி அவன்மீதும் படையெறிதலும் ஆக இங்ஙனம்
மாறி மாறி என்னும் பொருள் கொள்ளலாம். ‘ரகுகுல புதல்வனும்’என்றும்
பாடம். 

இப் படைகளின் உயிர் அழிகிலர், இவர்’ என்று,
அப் படைகளை ஒழிதர, அடல் அடையார்
மெய்ப் புகும் விறலது, விடையவன் அருளும்
கைப் பகழியை மனன் உற நனி கருதா,135.-இதுமுதல்ஆறு கவிகள் – அருச்சுனன்
பாசுபதத்தைத்தியானித்து அவுணர்மீது எறிய, அவர்கள்
சிரங்கள் சிதறியமைகூறும்

இதுமுதல்நான்குகவிகள் – குளகம்.

     (இ-ள்.)’இவர்- இவ்வசுரர்கள், இ படைகளின்-(சாதாரணமான) இந்த
அம்புகளினால்,உயிர் அழிகிலர் – இறக்கமாட்டார்கள்,’என்று – என்று
(அருச்சுனன்) எண்ணி, அ படைகளைஒழி தர-அந்த அம்புகளைஎய்தல்
நீங்க-,அடல் உடையார் மெய் புகும் விறலது -வலிமையையுடைய
அப்பகைவர்களது உடம்பில் உருவச்சென்று தொழில்செய்யும்
வலிமையையுடையதாகிய, விடையவன் அருளும்-(முன்னே தனக்குச்)
சிவபிரான் அளித்த, கை பகழியை – கையில் வரச் சித்தமாகவுள்ள
அஸ்திரத்தை, மனன் உற-மனம்பொருந்த, நனி கருதா – மிகுதியாகத்
தியானித்து,-(எ-று.)மகிழா என மேலே இயையும்.

     அடல் உடையார்என்பதற்கு – தங்கள் வலிமை யொழியாதவர் என்று
முரைக்கலாம்.  விடையவன் – ருஷபத்தை வாகனமுங்
கொடியுமாகவுடையவன்: அவனருளும் பகழி – பாசுபதம்.  வைப்பகழி
யென்னும் பாடத்துக்கு, கூர்மையுடைய அம்பென்க.  ஒழி தரக் கருதா
என்க.   

முச் சிரம் உடையது, மூ-இரு திரள் தோள்
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண்
நச்சு அரவு அனையது, நகம் இறும் முனைவாய்
வச்சிரம் அனையது, வருதலும் மகிழா

(தியானித்தமாத்திரத்தில்), மு சிரம் உடையது – மூன்று
தலைகளையுடையதும்,மூ இரு திரள் தோள் – திரண்டுள்ள ஆறு
தோள்களையுடைய,அச்சிரமுடன் – உடம்புடனே, எதிர்-காணப்படுகிற,
அழல் பொழி தறுகண் நஞ்சு அரவு அனையது- நெருப்பைச் சொரிகின்ற
அஞ்சாமைதோன்றுகிற கொடுங் கண்களையும்விஷத்தையுமுடைய பாம்பை
யொத்ததும், நகம் இறும்-மலைகள்அறுபடுதற்குக் காரணமான, முனைவாய்
– கூர்மையையுடைய நுனியைக்கொண்ட, வச்சிரம்-வச்சிராயுதத்தை,
அனையது-ஒத்ததுமாகியஅப்பாசுபதாஸ்திரம், வருதலும் – முன்னே வந்த
வளவில், மகிழா – (அருச்சுனன்) மகிழ்ச்சியடைந்து,-(எ-று.)-பரவி விட
என்க.

     நெடுங்காலம்நிலைத்துவாழாமல்விரைவில் அழிதல்பற்றி உடம்பிற்கு
அசிரம் என்று பெயர்: ந+சிரம்=அசிரம்: வடமொழிச்சந்தி;ந –
எதிர்மறையுணர்த்தும்:சிரம் – வெகுகாலம்.  இங்கே, அசிரமென்பது –
எதுகைப்பொருத்தம் நோக்கி ‘அச்சிரம்’என விரித்தல் விகாரம்பெற்றது;
இனி, நிலையற்றதென்றபொருளதான அஸ்திரம் என்பதன் திரிபு
எனினுமாம்.  நச்சரவு – தவறாமற்கொல்லுதற்கும், வச்சிரம்-கூர்மை
வலிமைகளுக்கும் உவமை.  வச்சிரம்-இந்திரனாயுதம்.
முற்காலத்தில்மலைகளெல்லாம்பறவைகள் போலச் சிறகுகளுடையனவாகி
அவற்றாற்பறந்துதிரிந்து பலவூர்களின்மீதும் உட்கார்ந்து ஆங்காங்குள்ள
உயிர்களைஅழித்துவர, அதனைஅறிந்த தேவேந்திரன் சினந்து சென்று,
தனது வச்சிராயுதத்தால் அவற்றின் இறகுகளைஅறுத்துத்
தள்ளிவிட்டானென்பது கதை யாதலால், வச்சிரத்துக்கு ‘நகமிறுமுனைவாய்’
என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டது.  நகம் – நடவாதது என
மலைக்குக்காரணக்குறி.  ‘அச்சுரமுடன்’என்றும் பாடம். 

பசுபதி அருளிய பகழி முன் வரலும்,
விசயனும் நறை விரி மலர்கொடு பரவி,
திசைதொறும் அமர் புரி திறலுடை வடி வேல்
அசுரர்தம் உடல் உக, அடலுடன் விடவே,

பசுபதி அருளிய பகழி – சிவபிரான் கொடுத்தருளிய அந்த
அஸ்திரம், முன் வரலும் – எதிரில் வந்த அளவில்,-(அதனை),விசயன்உம் –
அருச்சுனனும், நறை விரி மலர்கொடு – தேனொழுகுகின்ற பூக்களினால்,
பரவி – அருச்சித்து, திசைதொறுஉம் – (தன்னைச்சுற்றிலும்) எல்லாத்
திக்குக்களிலுமிருந்து, அமர் புரி, – போர் செய்கின்ற, திறல் உடை –
வலிமையையுடைய, வடி வேல்-கூர்மையையுடைய வேலாயுதத்தையுடைய,
அசுரர்தம் – அசுரர்களது, உடல் உக – உடல் அழியும்படி, அடலுடன் –
வலிமையுடனே, விட – பிரயோகிக்க,-(எ-று.)-போய்ப்புக்கதுஎன்க.

    பசுபதி-ருஷபத்துக்குத் தலைவன்: அல்லது, உயிர்களுக்குத்
தலைவன்;பசு என்னும் வடமொழி இப்பொருள்களையுணர்த்துதலை”பசு
ஏறு சீவன் ஆவாம்”என்னும் நிகண்டினால்அறிக.  ‘பசுபதியருளிய
பகழிமுன்வரலும்’என்றது அநுவாதம்;தொடர்ச்சியை விளக்க வந்தது.
நறைவிரிதல்-வாசனைவீசுதலுமாம்.      

அக் கணை விசையுடன் அகல் வெளிமிசை போய்,
நக்கது, பிறை எயிறு இள நிலவு எழவே;
முக்கணும் அழல் உக, முரணொடு முடுகிப்
புக்கது, தனுசர்தம் உடல் பொடிபடவே.

அ கணை- அந்த அஸ்திரம், விசையுடன் – வேகத்துடனே,
அகல் வெளிமிசை-பரந்த ஆகாயத்திலே, போய்-சென்று, பிறை எயிறு இள
நிலவு எழ-இளஞ்சந்திரன்போன்ற பற்களினின்றும் இளமையான
நிலாப்போன்ற வெள்ளொளி தோன்றும்படி, நக்கது-சிரித்து, மு கண்உம்
அழல் உக – (தனது) மூன்றுகண்களினின்றும் நெருப்புச் சிந்தும்படி,
முரணொடு-வலிமையுடனே,தனுசர் தம் உடல் பொடிபட-அசுரர்களது
உடம்பு தூளாம்படி, முடுகி புக்கது-உக்கிரமாய்ப் பிரவேசித்து: (எ-று.)

     எயிற்றுக்குப்பிறையுவமை, வளைவுக்கும்ஒளிக்கும் வெண்மைக்கு
மென்க.  சிரிக்குங் காலத்துப் பற்களின் வெள்ளொளி சிறிது
வெளித்தோன்றுதலால், ‘நக்கதுபிறையெயிறிளநிலவெழவே’என்றார்.
முக்கணும் என்பதற்கு – மூன்றுமுகம்படைத்த அந்த அஸ்திரத்துக்கு
ஒவ்வொரு முகத்திலும் மூன்றுகண்களிருந்தன என்க.  முக்கணும், உம்-
முற்றுப்பொருளது.     

மாருதம், விசையுடன் வடவனல் கொளுவி,
கார்தொறும் நிரை நிரை கடிகுவது அதுபோல்,
தேர்தொறும் அமர் புரி அவுணர்கள் தேகத்து,
ஓர் ஒரு கணை, ஒரு நொடியினில், உறவே,

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)மாருதம் – காற்றானது,விசையுடன்-வேகத்துடனே, வட
அனல் கொளுவி – வடவாமுகாக்கினியைத் துணையாகக்கொண்டு, கார்
தொறுஉம் – மேகங்களிலெல்லாம், நிரை நிரை – வரிசை வரிசையாக,
கடிகுவது அதுபோல் – அழிவையுண்டாக்குகிற அத்தன்மைபோல,
தேர்தொறுஉம் அமர் புரி அவுணர்கள் தேகத்து – தேர்களிலெல்லாமிருந்து
போர்செய்கின்ற அசுரர்களது உடம்புதோறும், ஓர் ஒரு கணை-ஒவ்வொரு
அம்பு, ஒரு நொடியினில்-ஒரு நொடிப்பொழுதிலே, உற-(அந்த
அஸ்திரத்தினதுதிவ்விய சக்தியால்) பொருந்த,-(எ-று.)-சிதறி,பொதுள,
கஞலின என்க.

     படபாநலம்என்னும் வடமொழி, தமிழில் ‘வடவனல்’எனச் சிதைந்து
வழங்கிற்று;அது, கடலினிடையே பெண்குதிரையொன்றின் முகத்திலுள்ளதும்,
மழை முதலியவற்றால்வருகிறநீரினாற்கடல் பொங்காதபடி அந்நீரை
உறிஞ்சுவதும், யுகாந்தகாலத்தில் அங்கு நின்று எழுந்து உலகங்களை
யொழிப்பதுமாகிய தீ;படபா-பெண்குதிரை, அநலம் – நெருப்பு.  வடவனல்
என்பதற்கு – வடக்கிலுள்ள அக்கினி யென்று உரைப்பாருமுளர்.  மிக
விரைவிலழித்தற்கு, காற்று நெருப்போடு சேர்தலைஉவமை கூறினார்.
கொளுவுதல்-கூட்டிக்கொள்ளுதல்.  கடிகுவது, கு-சாரியை.

மகபதி அரி சிறை வரை நிகர் எனவே,
திகைதொறும் அவுணர்கள் சிரம் நனி சிதறி,
புகையொடு தெறு கனல் அகல் வெளி பொதுள,
கக படலமும் முறை கஞலின, களமே.

(அவ்வம்புகளினால்),மகபதி அரி சிறை வரை நிகர் என-
இந்திரனால்அறுக்கப்பட்ட இறகுகளையுடையமலைகள்ஒப்பென்னும்படி,
திகைதொறுஉம் – எல்லாத்திக்குக்களிலும், அவுணர்கள் சிரம் – அசுரர்களது
தலைகள்,நனி சிதறி-மிகவுஞ் சிந்தி, தெறு கனல் – (அகப்பட்டவற்றை)
அழிக்கின்ற நெருப்பு, புகையொடு – புகையுடனே, அகல் வெளி – பரந்த
ஆகாயவெளியிலே, பொதுள – நிறையாநிற்க,-ககபடலம்உம் –
(கழுகுமுதலிய புலாலுண்ணும்) பறவைகளின் கூட்டமும், களம் –
போர்க்களத்தில், முறை-ஒன்றன்பின் ஒன்றாக,கஞலின-நெருங்கின;(எ-று.)

     க கம்என்பதற்கு – ஆகாயத்திற் செல்லுவதென்று பொருள்;கம்-
ஆகாசம். ககபடலம் – பலவினீட்டத்தற்கிழமைப்பொருளில் வந்த ஆறாம்
வேற்றுமைத்தொகை;வடமொழித்தொடர்.   

ஆடின அறுகுறை, அலகைகளுடன் நின்று;
ஓடின திசைதொறும், உகு குருதியின் நீர்;
நீடின பிணமலை, நிரை நிரை; நெறி போய்த்
தேடின, கதிர்களும், மிசை வழி செலவே.141.-படுகளச்சிறப்பு.

அறுகுறை-தலையற்றஉடற்குறைகள், அலகைகளுடன்-
பேய்களுடனே, நின்று-ஒக்கநின்று, ஆடின-ஆனந்தக்கூத்தாடின: உகு
குருதியின் நீர்-(இறந்த உடம்புகளினின்று) பெருகுகின்ற இரத்த
வெள்ளங்கள், திசை தொறுஉம்-எல்லாத்திக்குக்களிலும், ஓடின-பெருகின;
பிணம் மலை-மலைபோன்றபிணக்குவியல்கள், நிரை நிரை – வரிசை
வரிசையாக, நீடின-உயர்ந்தன;(அவ்வுயர்ச்சியினால்),கதிர்கள்உம்-
(சூரியசந்திரர்முதலிய) சோதிகளும், மிசை வழி செல – ஆகாயமார்க்கத்திற்
செல்லுதற்கு, நெறி-வழியை, போய்-மேலே சென்று, தேடின-;(எ-று.)

    அறுகுறை-கபந்தம்.  கோபத்தோடு விரைந்து போர்செய்து நின்ற
வீரர்களது உடம்புகள் தலையறுபட்டபின்பும்பதைபதைத்துக் கைகால்கள்
துடிப்பனவற்றை ‘ஆடினவறுகுறை’என்றார். பிணங்களைத்தின்னும்
பொருட்டு வந்த பேய் கூட்டங்கள் தமக்கு மிகுந்த இரை இங்குக்
கிடைத்ததென்று களித்து  நர்த்தனஞ்செய்தலால், ‘அலகைகளுடனின்று’
எனப்பட்டது.  பின்னிரண்டடி-உயர்வுநவிற்சி. 

மா தவம் மிகு திறல் அசுரரை மறலிக்கு
ஓதனம் இடும் அவன் ஒரு சிலை வலி கண்டு,
ஆதபன் அருணனின் அணி கிளர் உயர் தேர்ச்
சூதனும், விசயனது இணை அடி தொழுதான்142.-அருச்சுனனதுசிலைவலிகண்டுமாதலி அவனை
வணங்குதல்.

மாதவம்-பெரிய தவத்துடனே, மிகு திறல்-மிக்க
வலிமையையுமுடைய, அசுரரை – அசுரர்களை,மறலிக்கு – யமனுக்கு,
ஓதனம் இடும் அவன் – விருந்துணவாகக் கொடுத்து வருகின்ற
அருச்சுனனது, ஒரு சிலைவலி – ஒப்பற்ற வில்லினது வலிமையை, கண்டு –
பார்த்து,-ஆதபன்அருணனில் – சூரியனது சாரதியாகிய அருணன்போல,
அணி கிளர் – அழகுமிக்க, உயர் தேர் சூதன்உம் – உயர்ந்த தேரின்
பாகனானமாதலியும், விசயனது இணைஅடி தொழுதான் –
அவ்வருச்சுனனது இரண்டு பாதங்களிலும் விழுந்து வணங்கினான்;(எ-று.)

     மறலிக்குஓதனமிடுதல் – கொன்று யமலோகத்திற்கு அனுப்புதல்.
ஓதனம் – சோறு.  ஆதபன் – நன்றாகத்தபிப்பவன்.  அருணனில், இல் –
ஐந்தனுருபு. ஒப்புப்பொருளது.  கண்டு தொழுதான் என இயையும்

தள்ளினர், தம துயர்; ‘சலம் இனி இலது’ என்று,
உள்ளினர், விசயனது உறுதியும் உரனும்;
அள்ளினர் அமுது என அகம் நனி மகிழா,
துள்ளினர், இமையவர், சுரபதி, முதலோர்143.-அருச்சுனனால்தமதுபகை நீங்கினமைகண்டு
தேவர் அகமகிழ்தல்

சுரபதி முதலோர் – தேவராசனானஇந்திரன் முதலியவராகிய,
இமையவர் – தேவர்கள், தமது உயர் சலம்-தங்களது மிக்க பகை, இனி
இலது என்று – இனிமேல் இல்லையென்னும்படி,தள்ளினர் –
ஒழித்தவர்களாய், விசயனது உறுதிஉம் உரன்உம் – அருச்சுனனது
பராக்கிரமத்தையும் பலத்தையும், உள்ளினர் – நினைத்து,அமுது அள்ளினர்
என – அமிருதத்தைப் பானஞ் செய்தவர்போல, அகம் நனி மகிழா – மனம்
மிகவும் மகிழ்ந்து, துள்ளினர் – ஆனந்தக்கூத்தாடினர்;(எ-று.)

     சுரபதிமுதலோர் இமையவர் ‘இனி,சலம் [பகை]இலது’என்று
உள்ளினராய், தம – தம்முடைய, துயர் – துயரத்தை, தள்ளினர்-போக்கி,-
விசயனதுஉறுதியும் உரனும் அகத்தால் அமுது என அள்ளினராய்
நனிமகிழாத் துள்ளின ரென்றலும் ஒன்று

தேன் அமர் கமலத்து ஓங்கும் திசைமுகன் வரத்தினாலோ,
மானவன் விசயன் உய்த்த வடி நெடுஞ் சரத்தினாலோ,
தானவர் தானை எல்லாம் மடிந்த அத் தளர்வினாலோ,-
போனது, கரந்து, வஞ்சர் இரணியபுரமும் மன்னோ!144.-அவ்வுணரின்இரணியபுரம் கரத்தல்

தேன்அமர்-தேன் பொருந்திய, கமலத்து-(திருமாலினது
நாபித்) தாமரை மலரிலே, ஒங்கும்-சிறப்பாக வீற்றிருக்கின்ற, திசைமுகன் –
பிரமன், (அசுரர்களுக்குக் கொடுத்திருந்த), வரத்தினால்ஓ-வரம்முடிந்து
விட்டதனாலோ? (அல்லது), மானவன் விசயன் உய்த்த – மனிதனாகிய
அருச்சுனன் உபயோகித்த, வடி நெடு சரத்தினால்ஓ- கூர்மையான நீண்ட
அம்பின் தன்மையாலோ?  தானவர் தானைஎல்லாம் – (தன்னிடத்தில் பல
நாளாய் வாசஞ்செய்து கொண்டிருந்த) அசுரர்களது கூட்டம் யாவும், மடிந்த
– இறந்ததனாலாகிய,அ தளர்வினால்ஓ- அந்த வருத்தத்தாலோ?  வஞ்சர்
இரணியபுரம்உம் – வஞ்சகர்களாகிய அவ்வசுரர்களது இரணியபுரமென்னும்
அந்நகரமும், கரந்துபோனது-மறைந்து போய்விட்டது, (எ-று.);மன், ஓ –
ஈற்றசைகள்.

     ஆதியிற்பிரமன் கொடுத்திருந்த வரத்தின்படியே அருச்சுனனெய்த
அம்பால் அசுரர்கள் அழிந்தமாத்திரத்தில் தானும் மறைந்து போன
அவ்விரணியபுரமானது, தன்னில் நெடுங்காலமாக வசித்திருந்த அசுரர்கள்
வேரோடு அழிந்தார்களென்னுந் தளர்ச்சியால் தானும் உடனழிந்தது
போன்றது என்றவாறு.  ஒரு காரியத்துக்குப் பலகாரணங்களைக்கூறி
இன்னதென்று துணியாமல் ஐயத்தோடு நிறுத்தியதனால்,
ஐயவேதுத்தற்குறிப்பேற்றவணி.  மானவன் என்பதற்கு-மானத்தையே
முக்கியகுணமாகவுடையவ னென்றும் பொருள் கொள்ளலாம்.  மடிந்த
தளர்வு-பெயரெச்சம் காரணப் பொருளது.

     இதுமுதற்பதினெட்டுக் கவிகள்-இச்சருக்கத்தின் முதற்கவி போன்ற
அறுசீராசிரிய விருத்தங்கள். 

வாள் நகை தளவம் வாங்கும் அவுணர்தம் மகளிர் தெய்வப்
பூணொடு குழைகள் வாங்க, புனை வய வாகை வாங்கும்
நாண் உயர் தனுவின் வாங்கி, நயந்து இளைப்பாறி நின்றான்-
தூணொடு பறம்பு வாங்கும் சுடர் மணிக் கடகத் தோளான்145.-அருச்சுனன்வில்லினின்று நாணியைக் கழற்றி
இளைப்பாறியிருத்தல்

தூணொடு- தூண்களையும்,பறம்பு – மலைகளையும்,
வாங்கும்-ஒக்கின்ற, சுடர் மணி கடகம் தோளான்-விளங்குகின்ற
இரத்தினங்களைப்பதித்த கடகமென்னும் அணியை யணிந்த
தோள்களையுடையஅருச்சுனன், – வாள் நகை – (தமது) ஒளியையுடைய
பற்களுக்கு, தளவம்-முல்லையரும்புகளும், வாங்கும்-தோற்கும்படியான,
அவுணர்தம் மகளிர் – அசுரப் பெண்கள், தெய்வம் பூணொடு-
தெய்வத்தன்மையையுடைய [சிறந்த]ஆபரணத்துடனே, குழைகள்-
காதணிகளையும்,வாங்க-கழற்றிவிடும்படி, புனைவயம் வாகை வாங்கும்-
அணிதற்குரிய வெற்றியைக் குறிக்கின்ற வாகைப் பூமாலையைச்சூடிய, உயர்
தனுவின் – உயர்ந்த வில்லினின்றும், நாண்-நாணியை, வாங்கி-இறக்கிவிட்டு,
நயந்து-மகிழ்ந்து, இளைப்புஆறி நின்றான்- (தேரினின்று இறங்கிச்) சற்றுச்
சிரமம் தீர்ந்து நின்றான்;(எ-று.)

     தளவு-அரும்புக்குமுதலாகுபெயர்: அம்-சாரியை. பல்லுக்கு
முல்லையரும்புஉவமை – வெண்மைக்கும், அழகுக்கு மென்க.  ‘வாணகை
தளவம் வாங்கும்’என்னும் அடைமொழி, அசுரமாதரது இயற்கையழகை
விளக்கி நின்றது.  தெய்வப்பூண் – விசுவகருமன் மயன் முதலிய
தேவத்தச்சர்களால் நிருமிக்கப்பட்ட ஆபரணம்: தெய்வப்பூண் வாங்க –
மாங்கலியத்தை யிழக்க வென்றபடியுமாம்.  கணவனையிழந்தவர் காதோலை
நீக்க வேண்டுமென்பது, நூற்றுணிபு.  மாங்கலியத்தை நீக்குதல் பிற்காலமரபு.
ஈற்றடியில், வாங்கும்-உவமவுருபு: “பாம்புருவடங்கவாங்கிய நுசுப்பின்”
என்ற விடத்துப் போல.  பறம்பு-சிறப்புப்பெயர் பொதுப்பொருளில் வந்த
தென்னலாம்: பாரியென்ற வள்ளலின் மலை,பறம்பு எனப் பெயர் பெறும்.

பார் கொண்டது, அசுரர் மெய்யில் பரந்த செங்
குருதி வெள்ளம்;
கார் கொண்ட விசும்பு கொண்டது, அவர் பிணக்
காயம்; வானோர்
ஊர் கொண்டது, உரிமையோடும் அவர் உயிர்,
மீண்டும்; என்றால்,
தார்கொண்ட அமரர்க்கு எவ்வாறு இவன் பகை
தடிந்தது அம்மா!146.-அருச்சுனனாற்கொல்லப்பட்ட அவுணரைப் பற்றிய
கவிக்கூற்று.

அசுரர் – (இறந்துபோன) அசுரர்களது, மெய்யின் உடம்பில்
நின்றும், பரந்த-பரவிய, செம்-சிவந்த, குருதி வெள்ளம்-இரத்த
வெள்ளமானது, பார் கொண்டது – பூமி முழுவதையும் தனதாகக் கொண்டு
பரவிற்று: அவர் பிணம் காயம் – அவர்களது பிணமாகிய உடம்பு,
கார்கொண்ட விசும்பு கொண்டது – மேகங்கள் பரவிய ஆகாயமுழுவதையும்
(தனக்கு) இடமாகக் கொண்டு உயர்ந்து குவிந்தது;அவர் உயிர்-அவர்களது
உயிர், மீண்டும்-மறுபடியும், வானோர்ஊர் – தேவலோகத்தை,
உரிமையோடுஉம்-சுவாதந்திரியத்துடனே, கொண்டது-(இடமாகக்) கொண்டது,
என்றால்-என்றுசொன்னால். தார் கொண்ட அமரர்க்கு-கற்பகப்
பூமாலையைச்சூடிய தேவர்களுக்கு, இவன்-அருச்சுனன், பகை தடிந்தது-
பகைவர்களைஒழித்தது, எவ்வாறு-எப்படி?  அம்மா-ஆச்சரியம்! (எ-று.)

     இறந்தபின்பும்அவ்வசுரர்களது இரத்தம் பூமியிலும், உடம்பு
ஆகாயத்திலும், உயிர் சுவர்க்கத்திலும் வியாபித்தனவாதலின் இவன்
அவர்களைஒழித்தானென்பது எவ்வாறு?  என வஞ்சப்புகழ்ச்சியணி
மூலமாக அருச்சுனனது சிறப்பை எடுத்துக்கூறியவாறு.  பிணக்காயம்-
இருபெயரொட்டுப் பண்புத்தொகை: உயிர் நீங்கினதாகிய உடம்பென்க

இவ் வகை அசுர சேனை யாவையும் இரிய நூறி,
கொய் வரும் வரி வில் வீரன் குரகதத் தேர்மேல்
கொண்டான்;
வை வரும் முனைவேல் சித்ரசேனன், வாசவனுக்கு ஓடி,
நைவரு துயரம் நீங்க, நவின்றனன், புரிந்த எல்லாம்.147.-அருச்சுனன்சுவர்க்கஞ் செல்லத் தேரேறுகையில்,
சித்திரசேனன்முந்திச்சென்று அவ்வருச்சுனன் செய்த
செயலெல்லாஞ்சொல்லல்

கொய்வரும்-(பகைவர் தலைகளை)அறுத்து வருதலையுடைய,
வரி வில்-கட்டமைந்த வில்லையுடைய,வீரன்-அருச்சுனன், இ வகை –
இந்தவிதமாக, அசுரசேனையாவைஉம் – அசுரர்களது
சேனைகளெல்லாவற்றையும்,இரிய – கெடும்படி, நூறி – அழித்து, குரகதம்
தேர் மேல் கொண்டான்-(ஊருக்கு மீளும்பொருட்டுக்) குதிரைகளைப்
பூட்டிய (தனது) தேரின்மேலேறினான்: (அப்பொழுது), வை வரு முனை
வேல்-கூர்மை பொருந்திய நுனியுள்ள வேலாயுதத்தையுடைய, சித்ரசேனன் –
சித்திரசேனென்னுங் கந்தருவனாகியதூதன், புரிந்த எல்லாம்-(அருச்சுனன்)
செய்த செயல்களையெல்லாம்,வாசவனுக்கு-இந்திரனுக்கு, நைவரு துயரம்
நீங்க-மனந்தளர்கின்ற துன்பம் நீங்கும்படி, ஓடி நவின்றனன் – முன்னே
விரைந்துபோய்ச் சொன்னான்;(எ-று.)

     கொய்வு அரும்எனப்பிரித்து, பகைவரால் துணித்தற்கு அருமையான
வில்லெனவுமாம்.  புரிந்த – பெயர்.  இங்கே ‘தேர்மேற்கொண்டான்’
என்றதனால்,கீழ் 145ஆம் கவியில் ‘இளைப் பாறி நின்றான்’என்றவிடத்து
‘தேரினின்றுஇறங்கி’என வருவிக்க.

சித்திரசேனன் மாற்றம் செவிக்கு அமுதாகக் கேட்டு,
பத்தி கொள் விமானச் சோதிப் பைம் பொன் மா
நகரி கோடித்து,
எத் திசையவரும், ஏனை இமையவர் குழாமும், சூழ,
வித்தக விசயன்தன்னை விபுதர்கோன் எதிர்கொண்டானே.148.-செய்தியுணர்ந்தஇந்திரன் நகரை யலங்கரிப்பித்து
அருச்சுனனைஎதிர்கொள்ளல்

விபுதர் கோன் – தேவராசனானஇந்திரன்,-சித்திரசேனன்
மாற்றம் – சித்திரசேனனது வார்த்தையை, செவிக்கு அமுது ஆக-காதுக்கு
அமிருதத்தை யொப்ப, கேட்டு-,பத்தி கொள் விமானம் சோதி-
வரிசையாயிருத்தலைக்கொண்டுள்ள விமானங்களின் ஒளியோடுகூடிய,
பைம்பொன் மா நகரி – பசும் பொன்மயமான பெரிய (தனது) அமராவதி
நகரத்தை, கோடித்து-(தனது பரிஜனங்களைக்கொண்டு) அலங்கரித்து, எ
திசையவர்உம்-எல்லாத் திக்குப் பாலகர்களும், ஏனைஇமையவர்
குழாம்உம்-மற்றைத் தேவர்கூட்டமும், சூழ-(தன்னைச்)சுற்றியிருக்க,
வித்தகம் விசயன் தன்னை- ஞானத்தையுடைய அருச்சுனனை,எதிர்
கொண்டான்-எதிரில் வந்து அழைத்துப்போவானானான்.(எ-று.)

     தேவாமிருதம்நாவுக்கு இனிமைதருவதுபோலத் தூதன் சொல்
செவிக்கு இனிமைதருவ தென்பார், ‘சித்திரசேனன்மாற்றஞ்
செவிக்கமுதாகக்கேட்டு’என்றார். அலங்கரிக்கும் விதத்தை “பூழிகளடக்கிச்
செம்பொற் பூரணகும்பம் வைத்து, வாழையுங் கமுகு நாட்டி மணியொளித்
தீபமேற்றிச், சூழ வன்பதாகை கட்டித் தோரணம் பலவு நாற்றி, யேழுயர்
மாட மூதூ ரெங்கணுங் கோடித்தாரே”என மேல் நிரைமீட்சிச் சருக்கத்திற்
கூறுவதனால்அறிக.  எத்திசையவர்-அஷ்டதிக் பாலகர்களுள் அக்கினி,
யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும்
தன்னையொழிந்தஎழுவரும்.  எதிர்கொள்ளுதல், மரியாதை

கின்னரமிதுனம் இன் சொல் கீதங்கள் இனிது பாட,
துன்னி எங்கு எங்கும் சேரத் துந்துபிக் குழாம்
நின்று ஆர்ப்ப,
பன்னஅரும் மறைகள் தெய்வ முனிவரர் பகர்ந்து வாழ்த்த,
மன்னவர் மன்னன்தன்னை வாசவன் தழுவிக் கொள்ளா149.-எதிர்கொண்டஅருச்சுனனைஇந்திரன் தழுவுதல்

இதுவும், மேற்கவியும்- குளகம்.

     (இ-ள்.)கின்னர மிதுனம் – கின்னரமிதுனங்கள், இன்சொல் கீதங்கள் –
இனிமையான சொற்களையுடையஇசைப்பாட்டுக்களை,இனிது பாட –
(கேட்டற்கு) இனிமையாகப் பாடவும், துந்துபி குழாம் – தேவமுரசங்களின்
கூட்டம், சேர-ஒருசேர, எங்கு எங்குஉம் துன்னி -எவ்வெவ்விடத்தும்
நெருங்கி, நின்று – நிலைநின்று, ஆர்ப்ப – ஆரவாரிக்கவும்,-தெய்வம்முனிவரர்
– தெய்வத்தன்மையையுடைய சிறந்த இருடிமார், பன்ன அரு மறைகள்-
சொல்லுதற்கு அருமையான வேதமந்திரங்களை,பகர்ந்து – சொல்லி,
வாழ்த்த – ஆசீர்வதிக்கவும்,-வாசவன்- இந்திரன், மன்னவர் மன்னன்
தன்னை- அரசர்கட்குட் சிறந்தவனானஅருச்சுனனை,தழுவிக்கொள்ளா –
அணைத்துக்கொண்டு,-(எ-று.)-‘கடகரிப்பிடரின்வைத்து’என வருங்
கவியோடியையும்.

     கின்னரமிதுனம்- ஒரு தேவசாதி; இதனை,”நன்னரம்புடைய
தும்புருவோடு நாரதனுந் தந்தம் வீணைமறந்து, கின்னரமிதுனங்களுந்
தந்தங் கின்னரந் தொடுகிலோ மென்றனரே”எனப் பெரியார்
பணித்ததனாலும்அறிக.  கின்னரங் கொண்டு பாடி ஆணும் பெண்ணும்
ஒன்றையொன்று பிரியாது திரிதலாலே கின்னரமிதுனமெனப் பெயர்;
மிதுனம்-ஆணும் பெண்ணுமான இரட்டை

கையுடைக் கயிலை அன்ன கட கரிப் பிடரின் வைத்து,
மையுடைக் கொண்டல்வாகன், நகர் வலம் செய்த போதில்,
மெய்யுடைக் கலைகள் வல்லான் விஞ்சையன்
ஒருவன் கண்டு,
‘பொய்யுடைத் தலத்தோர்க்கு இன்ன பொறுக்குமோ?
புனித!’ என்றான்.150.-யானைப்பிடரில்வைத்து அருச்சுனனை
ஊர்வலஞ்செய்ய, ஒருவிஞ்சையன் ‘மானுடனுக்குஇது
தகுமோ?’எனல்

மைஉடை கொண்டல் வாகன் – கருமை நிறத்தையுடைய
மேகத்தை வாகனமாகவுடைய இந்திரன், கை உடை கயிலைஅன்ன –
துதிக்கையையுடைய கைலாசகிரியையொத்த, கடம் கரி – (ஐராவதமென்னும்)
மதயானையினது,பிடரின் – பிடரியின்மேலே, வைத்து – (அருச்சுனனை)
வீற்றிருக்கச் செய்து, நகர் வலம் செய்த போதின்-அமரவாதிப்
பட்டணத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து வந்தபொழுதில்,-மெய்உடை கலைகள்
வல்லான் – உண்மைப்பொருள்களையுடையசாஸ்திரங்களில்  வல்லவனாகிய,
விஞ்சையன் ஒருவன் – வித்யாதரனொருத்தன்,கண்டு – (அதனைப்)
பார்த்து, (பொறுக்காமல் இந்திரனைநோக்கி),’புனித-பரிசுத்த
குணங்களையுடையவனே!பொய் உடை தலத்தோர்க்கு-
நிலையில்லாமையையுடையபூலோகத்திலுள்ளவர்களுக்கு, இன்ன-
இப்படிப்பட்ட சிறப்புக்கள், பொறுக்கும்ஓ – தகுமோ? [தகா],’என்றான்-
என்று சொன்னான்;(எ-று.)

     கையுடைக்கயிலைஎன்றது – இல்பொருளுவமை.  பிறமலைகளைக்
கூறாமற்கயிலையைஉவமை கூறியது, ஐராவதத்தினது வெண்மை நிறத்தை
விளக்க.  கயிலையன்னகரி என்றது, இந்திரன் யானைக்குக்குறிப்பு,
விஞ்சை-வித்யா. 

விஞ்சையன் உரைத்த மாற்றம் விபுதர்கோன்
செவியில் சென்று,
நஞ்சு எனப் புகுதலோடும், நயனங்கள் செந் தீக் கால,
‘நெஞ்சினில் அறிவு இலாதாய்! நீ இது கேட்டி!’ என்னா,
மஞ்சு எனக் கரிய மெய்யான் மனம் கனன்று,
இனைய சொல்வான்:151.-இந்திரன்சினந்து அவ்விஞ்சையனுக்கு
மறுமொழி கூறலுறுதல்

விஞ்சையன் உரைத்த மாற்றம் – (இங்ஙனம்) வித்யாதரன்
சொன்ன வார்த்தை, சென்று – போய், விபுதர் கோன் செவியில்-
தேவேந்திரனது காதுகளிலே, நஞ்சு என புகுதலோடும்-விஷம்போல
(வருத்தத்தை யுண்டாக்கிக் கொண்டு) பிரவேசித்த மாத்திரத்தில்
[அதனைக்கேட்டஅளவிலென்றபடி],மஞ்சு என கரிய மெய்யான் –
மேகம்போலக் கறுத்த உடம்பையுடைய இந்திரன், நயனங்கள் செம் தீ கால
– கண்கள் சிவந்த நெருப்பை உமிழும்படி (மிகக் கோபித்து
அவ்விஞ்சையனைநோக்கி), ‘நெஞ்சினில்அறிவு இலாதாய்-மனத்திற்
புத்தியில்லாதவனே! நீ இது கேட்டி-நீ (யான் சொல்லும்) இதனைக்
கேட்பாயாக’,என்னா- என்று சொல்லி, மனம் கனன்று – நெஞ்சு
கொதித்து, இனையசொல்வான்-இவ்வார்த்தைகளைக்கூறுவானானான்;
(எ-று.)-அவற்றை, மேல் இரண்டு கவிகளிற் கூறுகின்றார்.

     இந்திரனதுநிறம் கருமையாதலைக்கம்பராமாயணத்தில்
“வில்லாலொளிர்மேகமெனப்பொலிவா

ஆதி நாயகன், மா மாயன், அமரர்தம் துயரும் ஏனைப்
தல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி,
சீதைதன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல,
ஓத நீர் உலகில், மீண்டும் அருச்சுனன்
உருவம் கொண்டான்.152.-இரண்டு கவிகள்- ஒருதொடர்:இந்திரன்,
அருச்சுனனைமானுடனெனலாகாதென்று காரணத்துடன்
கூறித்தன்கோயிலிற் கொண்டுபுகல்

ஆதிநாயகன்-முதற்கடவுளாகிய, மா மாயன் – சிறந்த
திருமால்தானே,-அமரர்தம் துயர்உம்-தேவர்களது துன்பத்தையும், ஏனை-
மற்றை, பூதலம் மடந்தைக்கு உற்ற புன்மை உம்-பூமிதேவிக்கு நேர்ந்த
துன்பத்தையும், தீர்ப்பான் – நீக்க, எண்ணி – நினைத்து,-சீதைதன்
கொழுநன் ஆன திண் திறல் இராமன்போல-சானகிப்பிராட்டிக்குக்
கணவனானமிக்க வலிமையையுடைய ஸ்ரீராமபிரானாகஅவதரித்ததுபோல,
ஓதம் நீர் உலகில் – கடலினீர் சூழ்ந்த நிலவுலகத்தில், மீண்டுஉம் –
மறுபடியும், அருச்சுனன் உருவம் கொண்டான் – அருச்சுனனது ரூபமாக
அவதரித்தான்;(எ-று.)

     ஆதிநாயகன்என்றது – யாவர்க்கும் முதல்வராகிய
திரிமூர்த்திகளுள்ளும் தலைவனென்றவாறு.  முன்னெருகாலத்தில் தேவர்க
ளெல்லோரும்இராவணன் முதலிய ராக்ஷசர்களின் உபத்திரவம்
பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமஹாவிஷ்ணுவை வணங்கி வேண்ட, அவர்
அவர்களுக்கு அபயப்பிரதானஞ்செய்து பூமியில் இலட்சுமணன் பரதன்
சத்துருக்கனன் என்கிற மூன்று தம்பிகளுடனே அயோத்தியரசனாகிய
தசரதசக்கரவர்த்திக்குத் திருமகனாய்த்திருவவதரித்தார்.  அவர்தாம்,
ஸ்ரீராமபிரான், சனக மகாராசர் ஒருகால் யாகஞ்செய்யச் சாலை
யமைப்பதற்காகப் பூமியை உழுதபொழுது பூமியினின்று
கலப்பையுழுபடைச்சாலில் தோன்றினாள். அதனால்,’சீதை’எனப் பெயர்;
சீதை – ஸீதா:உழுபடைச்சால்.  ஏககாலத்தில் பூமியில் துஷ்ட அசுரர்களும்
கெட்ட அரசர்களும் பலர் தோன்றி விண்ணுலகத்தார்க்கும்
மண்ணுலகத்தார்க்கும் பல வருத்தங்களைஇழைத்து வருகையில் பூமிதேவி
தன்மேலிருக்கின்ற அக்கொடியவர்களாலுண்டான மிகுந்தபாரத்தைப்பொறுக்க
மாட்டாதவளாய்த் துன்பமுற்றுப் பிரமன் முதலான தேவர்கள் முகமாக
ஸ்ரீமந்நாராயணனைத்துதிசெய்துபிரார்த்திக்க, அவ்வெம்பெருமான்
பூபாரத்தைத் தீர்க்கும்பொருட்டுக் கிருஷ்ண பலராமர்களாகவும்
அருச்சுனனாகவும்திருவவதாரஞ் செய்தாரென்பது சரிதை.  அருச்சுனன்
இந்திரனது அமிசமாய்ப் பிறந்தவனாயினும்,அவன் திருமாலின்
அமிசமுமாதலை,கண்ணபிரான் அருச்சுனனைநோக்கி “உன்னையான்
பிரிவதில்லையொருமுறைபிரிந்து மேனா,ணன்னிலா வெறிக்கும் பூணாய்
நரனுநாரணனு மானோம்,””பின்னொருபிறப்பின் யாமே யிராமலக்குமப்பேர்
பெற்றோ,மிந்நெடும் பிறப்பி னீயும் யானுமா யீண்டு நின்றோம்”
என்பதனாலும்அறிக

ஆதலால், ‘மனிதன்’ என்று, இவ் அருச்சுனன்தன்னை,
இன்னே,
நீதியால், அமரர் யாரும் நெஞ்சினில் இகழல்’ என்று,
மாதர்கள் வீதிதோறும் மலர் மழை சொரிந்து வாழ்த்த,
கோதிலா அமரர் கோமான், கொண்டு, தன்
கோயில் சேர்ந்தான்.

ஆதலால் – விஷ்ணுவின் அவதாரமாகையால், இ
அருச்சுனன் தன்னை- இவ்வருச்சுனனை,இன்னே-இப்பொழுது, மனிதன்
என்று-சாதாரணமானுடனென்று கருதி, நீதியால்-(அம் மனிதனுக்குரிய)
முறைமையால், அமரர் யார்உம் – தேவர்களனைவரும்நெஞ்சினில் இகழல்
– மனத்தில் அலட்சியஞ் செய்யவேண்டாம், என்று – என்றுசொல்லி,-கோது
இலா அமரர் கோமான் – குற்றமில்லாத தேவேந்திரன்,-மாதர்கள் – தெய்வப்
பெண்கள், வீதிதோறுஉம் – எல்லா வீதிகளிலும், மலர் மழை சொரிந்து –
மலர்களைமழைபோலப் பொழிந்து, வாழ்த்த – மங்கலவாழ்த்துக் கூறாநிற்க,
கொண்டு – (அருச்சுனனை)அழைத்துக்கொண்டு, தன் கோயில் சேர்ந்தான்
– தனது அரண்மனையைஅடைந்தான்;(எ-று.)

     இகழல் – எதிர்மறை வியங்கோள்.  “பயனில்சொற்பாராட்டுவானை,
மகனெனல்”என்றவிடத்து ‘எனல்’என்பதுபோல.  கோ+இல்=கோயில்;
அரசனது வீடு. 

அரிமுகக் கனக பீடத்து, அண்ணலை இருத்தி, அண்டர்
இரு புடை மருங்கும் நிற்ப, இந்திரன் இருந்த பின்னர்,
மருவு பொன் தடந் தேர் ஊரும் மாதலிதன்னை நோக்கி,
‘புரி சிலை விசயற்கு உற்ற போர்த் தொழில் புகல்,
நீ!’ என்றான்.154.-அருச்சுனனுடன்ஆசனத்தமர்ந்தபின் இந்திரன்
மாதலியை நோக்கிவிசயற்குற்ற போர்த்தொழிலைநீ புகல்க
எனல்.

இந்திரன்-, அரி முகம் கனகம் பீடத்து – சிங்கத்தின்
வடிவந்தோன்றச் சித்திரித்துச் செய்யப்பட்ட பொன்மயமான ஆசனத்தில்,
அண்ணலைஇருத்தி – அருச்சுனனைவீற்றிருக்கச் செய்து,-அண்டர் –
தேவர்கள், இருபுடை மருங்குஉம் – இரண்டு பக்கங்களினிடங்களிலும், நிற்ப
– நின்றுகொண்டிருக்க, இருந்த பின்னர் – (தானும் அவ்வாசனத்தில்) உடன்
வீற்றிருந்தபின்பு,-மருவு பொன் தட தேர் ஊரும்-பொருந்திய பொன்மயமான
பெரிய தேரைச் செலுத்துகிற, மாதலிதன்னைநோக்கி – மாதலியைப் பார்த்து,
‘நீ-,புரி சிலைவிசயற்கு உற்ற – கட்டமைந்த வில்லையுடைய அருச்சுனனுக்கு
நேர்ந்த, போர் தொழில் – யுத்தத் தொழிலின் விதத்தை, புகல்-சொல்வாய்’,
என்றான்-என்றுசொன்னான்;

     அரிமுகப்பீடம்- சிங்காதனம்.  மருவு – யாவராலும் விரும்பப்படுகிற,
பொன் எனவுமாம்.  

மற்று அவன் தொழுது போற்றி, ‘வானவர் குழுவுக்கு எல்லாம்
கொற்றவ! என்னால் இன்று கூறலாம் தகைமைத்து அன்றால்;
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும், உடனே, சேர
இற்றது கண்டேன்; பின்னர், வில்லின் நாண்
இடியும் கேட்டேன்!155.-மூன்றுகவிகள் -ஒருதொடர்:மாதலிஅருச்சுனன்
திறனைவியந்து கூற, தேவர் பலரும் அருச்சுனனுக்குப்
படைகளும் வரங்களும்உவந்து ஈதல் கூறும்.

அவன் – அந்த மாதலி, தொழுது – (இந்திரனை)வணங்கி,
போற்றி – துதித்து, ‘வானவர்குழுவுக்கு எல்லாம் கொற்றவ-தேவர்கள்
கூட்டத்துக்கெல்லாம் அரசனே! (அருச்சுனனுக்கு நிகழ்ந்த போர்த்தொழில்),
என்னால்இன்று கூறல்ஆம் தகைமைத்து அன்று – என்னால் இப்பொழுது
சொல்லுதற்குக் கூடிய தன்மையையுடையதன்று:(ஆயினுஞ் சிறிது
சொல்லுவேன்):மூன்றுகோடி அசுரர்உம்-(தோயமாபுரத்திலுள்ள
நிவாதகவசராகிய) முக்கோடியசுரர்களும், எதிர்உற்று-(அருச்சுனனுக்கு)
எதிரிலே வந்து, உடனே-, சேர-ஒருசேர, இற்றது – அழிந்ததை, கண்டேன்-
பார்த்தேன்:பின்னர்-பின்பு, வில்லின் நாண் இடிஉம் கேட்டேன் –
(அருச்சுனனது) வில்லின் நாணியின் இடிபோன்ற ஓசையையுஞ்
செவியுற்றேன்;(எ – று.)

     இதில்,அசுரரழிதலாகிய காரியத்தை முன்னும், வில்லின் தொழிலாகிய
காரணத்தைப் பின்னும் நிகழ்ந்தனவாகச் சொல்லியதனால்,
மிகையுயர்வுநவிற்சியணி.  இதில், காரணகாரியங்களின் முன்பின்நிகழ்தலாகிய
முறைபிறழ்வு, காரியவிரைவைத் தெரிவிக்க வந்தது.  மற்று-அசை.  இடி-
உவமையாகுபெயர்.   

ஆயது நிகழ்ந்த பின்னர், அயன் அருள் வரத்தினாலே
ஏய வாள் வலியின் மிக்க இரணியபுரத்துளோரைத்
தீய வெம் பகழி ஒன்றால் செற்றனன், இமைப்பில், முற்றும்;
மாயமோ? மனிதன் வில்லின் வன்மையோ? தெரிந்தது இல்லை!’

ஆயது நிகழ்ந்த பின்னர் – ஆகிய அச் செய்கை
நடந்தபின்பு, அயன் அருள் வரத்தினால்ஏஏய – பிரமன் கொடுத்தருளிய
வரத்தினாலேபொருந்திய, வாள் வலியின் மிக்க-ஆயுதபலத்தினால்மிகுந்த,
இரணியபுரத்து உள்ளோரை-இரணியபுரத்திலுள்ள காலகேயர்
அறுபதினாயிரவரை,தீய வெம் பகழி ஒன்றால்-மிகவுங்கொடிய அஸ்திரம்
ஒன்றினால்,இமைப்பின் – நொடிப் பொழுதினுள்ளே, முற்றுஉம் – முழுதும்,
செற்றனன் – அழித்தான்:(அங்ஙனமழித்தது), மாயம்ஓ –
மாயையினாலாகியதோ? மனிதன் வில்லின் வன்மைஓ – மனிதனாகிய
அருச்சுனனது வலிய வில்லின் பலத்தாலாகியதோ? தெரிந்தது இல்லை-
எனக்குத் தெரியவில்லை;    (எ- று.)

     ஏய-ஏய்என்னும் பகுதியடியாகப் பிறந்த இறந்தகாலப் பெயரெச்சம்:
யகரவிடைநிலைபகுதிக்கும் விகுதிக்குமிடையிலே புணர்ந்து கெட்டது:இனி,
இதனைச்செயவெனெச்சமாகக் கொண்டு, பொருந்தவெனவுரைத்து, மிக்க
வென்பதனோடுஇயைத்தலுமாம்.  தீய வெம்-ஒருபொருட் பன்மொழி.
இமைப்பு-ஒரு மனிதன் இயல்பாகக் கண்களின் இமைகளைஒருகால்
மூடித்திறந்தற்கு வேண்டும்பொழுது. 

என்றுகொண்டு, உயர் தேர்ப் பாகன் இசைத்தன
யாவும் கேட்டு,
வன் திறல் அமரர் கோமான் மனம் மகிழ்ந்து இருந்தபோதில்,
துன்றிய அமரர் யாரும், தனித்தனி, சுருதியோடும்
வென்றிடு படையும், மற்றும் வேண்டுவ பலவும், ஈந்தார்.

உயர் தேர் பாகன் – சிறந்த ரதசாரதியான மாதலி, என்று
கொண்டு இசைத்தன – என்று சொல்லியவையாகிய, யாஉம்-
எல்லாவற்றையும், கேட்டு-, -வல் திறல் அமரர் கோமான் – மிக்க
வலிமையையுடைய தேவேந்திரன், மனம் மகிழ்ந்து இருந்த போதில் –
இதயஞ் சந்தோஷித்திருந்த சமயத்தில்,-துன்றிய அமரர் யார்உம்-
(அங்குவந்து) நெருங்கியுள்ள தேவர்களனைவரும்,தனித்தனி –
தனியேதனியே, சுருதியோடுஉம் – வேதமந்திரங்களுடனே, வென்றிடு
படைஉம்-(பகைவரை) வெல்லுதற்கு ஏற்ற ஆயதங்களையும்,மற்றுஉம்
வேண்டுவ பலஉம்-இன்னும்வேண்டுவன பலவற்றையும், ஈந்தார்-
கொடுத்தார்கள்;(எ – று.)

     கொண்டு – அசை: “என்றுகொண்டினையகூறி” என்னுங்
கம்பராமாயணக்கவியிற்போல.  இனி, உட்கொண்டு [கருதி]என உரைத்தலும்,
கேட்டுக்கொண்டு என இயைத்தலுமாம். வேண்டுவசாரியை
பெறாதபலவறிசொல்.    

தேவர்பால் வரமும், எல்லாச் சிறப்பும், இன்
அருளும், பெற்ற
காவலன், கடவுள் வேந்தன் கழல் இணை பணிந்து, போற்றி,
‘தா வரும் புரவித் தானைத் தருமன் மா மதலை பொன்-தாள்
மேவர வேண்டும்; இன்னே விடை எனக்கு அருளுக!’ என்றான்158.-அருச்சுனன்தருமரிடஞ் செல்ல விடை கேட்டல்.

தேவர்பால் – தேவர்களிடத்தில், வரம்உம் – வரங்களையும்,
எல்லாம் சிறப்புஉம் – மற்றை எல்லா மேன்மைகளையும்,இன் அருள்உம்-
இனிய கருணையையும்,பெற்ற-, காவலன்-அரசனாகியஅருச்சுனன், கடவுள்
வேந்தன்-தேவராசனானஇந்திரனது, கழல் இணை-திருவடிகளிரண்டையும்,
பணிந்து-வணங்கி, போற்றி-துதித்து, ‘(யான்),தாவரும்-தாவிவருகின்ற, புரவி
தானை-குதிரைச்சேனையையுடைய,தருமன்மா மதலை-யமனதுசிறந்த
குமாரராகிய யுதிட்டிரரது, பொன் தாள்-அழகிய திருவடிகளை,
மேவரவேண்டும்-அடையவேண்டும்:(ஆதலால்), இன்னே-இப்பொழுதே,
எனக்கு-, விடை அருளுக-உத்தரவு கொடுத்தருள்வாயாக,’என்றான்-என்று
சொன்னான்:(எ – று.)

    காவலன்-காத்தற்றொழிலையுடையவன்:அன்றிக்கே காத்தலில்
வல்லவன். கழல்-வீரர்காலணி:பாதத்திற்குத் தானியாகு பெயர். தா அரும்
எனப்பிரித்து – (அசுவநூலிற்கூறிய) குற்றம் இல்லாத புரவி யென்றுமாம்.
புரவி-மற்றை மூன்று அங்கங்களுக்கும் உபலக்ஷணம்.  பொன் தாள் –
பொற்கழலணிந்ததாளென்றுமாம்.  வேண்டும்-ஒருவகை
வியங்கோள்வினைமுற்று

மைந்தன் அங்கு உரைத்த மாற்றம் மனன் உற
மகிழ்ந்து கேட்டு,
தந்தையும், ‘இன்னம் சில் நாள் தங்குக, இங்கு’ என்று ஏத்தி,
செந் திரு அனைய தோற்றத் தெய்வ மென் போக மாதர்
ஐந்தொடு ஆயிரரும், வேறோர் அம் பொன்
மாளிகையும் ஈந்தான்159.-சிலநாள்அங்குத் தங்கியிருக்குமாறு சொல்லி
இந்திரன்அருச்சுனனுக்கு மாளிகைமுதலியன ஈதல்

மைந்தன் – (தன்) மகனாகியஅருச்சுனன், அங்கு-
அவ்வாறு, உரைத்த-சொன்ன, மாற்றம் – வார்த்தையை, தந்தைஉம்-
பிதாவாகிய இந்திரனும், மனன்உற-மனத்திலே பொருந்தும்படி, மகிழ்ந்து
கேட்டு-மகிழ்ச்சியுடனேசெவியுற்று,-‘இங்கு-இவ்வுலகத்தில்,இன்னம் சில
நாள் தங்குக – இன்னுஞ் சிலதினந் தங்குவாயாக,’என்று -என்று சொல்லி,
ஏத்தி-புகழ்ந்து, செம் திரு அனையதோற்றம்-செம்மைநிறமுடைய
இலக்குமியை யொத்த அழகிய காட்சியையும், மெல்-(மெய் வாய்
கண்மூக்குச் செவி யென்னும்ஐம்பொறிகளாலும் அனுபவிக்கப்படுகிற ஸ்பரிசம்
ரசம் ரூபம் கந்தம் சப்தம் என்னும் ஐவகை) மென்மைகளையுமுடைய,போகம்-
சுகானுபவத்திற்குஉரிய, தெய்வம் மாதர் – தெய்வப்பெண்கள், ஐந்தொடு
ஆயிரர்உம்-ஐயாயிரம்பேரையும், வேறு ஓர் அம்பொன் மாளிகைஉம்-
அழகிய பொன்னினாலாகியதொருவேறு தனி வீட்டையும், ஈந்தான் –
(அருச்சுனனுக்குக்) கொடுத்தான்;

    தெய்வமாதர்-தேவஸ்திரீகள்.  போகமாதர் – பொதுமகளிர்;போகம்-
கலவிச்சிற்றின்பம்.  “சாயல்மென்மை”என்னுந்தொல்காப்பியச் சூத்திரவுரையைக்
கொண்டு, மென்மையென்பது சுவையொளியூறோசைநாற்றமென்னும்
ஐவகையையும் உணர்த்து மென அறிக

வரோதயம் ஆன தெய்வ வான் படை மறைகள் பின்னும்
புரோசனப் பகைவற்கு ஈந்து, புரந்தரன் இருந்த பின்னர்,
சரோருகர் அண்டம் விண்டால், ஒரு மயிர் சலிக்கும் முன்கை
உரோமச முனியை நோக்கி, உரைத்தனன், உற்ற எல்லாம்;160.-இங்ஙன் அருச்சுனனுக்குத் தந்தபின் தேவேந்திரன்
உரோமசரிடத்துஅருச்சுனன் பெருமையைக் கூறல்

புரந்தரன் – இந்திரன்,-வர உதயம் ஆன-சிறந்த
உற்பத்திக்கிரமத்தையுடையவையாகிய, தெய்வம் –
தெய்வத்தன்மையையுடைய, வான்-சிறந்த, படை-ஆயுதங்களையும்,மறைகள்
– மந்திரங்களையும்,பின்னும் – மீண்டும், புரோசனன் பகைவற்கு –
புரோசனன் என்பவனுக்கு பகைவனாகியஅருச்சுனனுக்கு, ஈந்து-கொடுத்து,
இருந்த பின்னர்-வீற்றிருந்தபின்பு,-சரோருகர் அண்டம் விண்டால்-
பிரமதேவர் படைத்த அண்டகோளம் ஒருகால் அழிந்தால், ஒருமயிர்
சலிக்கும்-ஒருமயிர் உதிர்கின்ற, செம் கை- சிவந்த கையையுடைய,
உரோமசமுனியை நோக்கி – ரோமசர் என்னும் ரிஷியைப் பார்த்து, உற்ற
எல்லாம் – நடந்த செய்கைகளையெல்லாம்,உரைத்தனன்-சொன்னான்;
(எ -று.)

    வரோதயம்-குணசந்திபெற்ற வடமொழிப்புணர்ச்சி.  உதயம் –
உதித்தல்;தோற்றம். கீழ் ஐந்தாங்கவியில் “தெவ்வையடுந்திறற்படையு
நல்கி”என்றதனைநோக்கி, இங்கே ‘பின்னும்ஈந்து’என்றார். புரோசனன்
என்பவன் – திருதராஷ்டிரனது மந்திரி:இவன், வாரணாவதமென்னும்
நகரத்தில் அரக்கினாற்செய்து பாண்டவர்களுக்கு இடமாகக்
கொடுக்கப்பட்ட மாளிகையில் அவர்களுக்குத் துணையாகத்
துரியோதனனால்அனுப்பிவைக்கப்பட்டவன்: இவன் தனது எசமானனது
கட்டளைப்படி,பாண்டவர்களும் குந்திதேவியும் தூங்குகின்ற சமயத்தில்
அவ்வீட்டில் நெருப்புப் பற்றவைத்து அவர்களையெரித்து அழித்து
விடுவதற்கு இருந்தான்:அவ்வஞ்சனையைவிதுரராலறிந்து பீமசேனன்
ஒருநாளிரவில் அந்தப்புரோசனன் முதலியோர் தூங்குகையில்
தீப்பற்றவைத்துவிட்டுத் தாயையும் உடன்பிறந்தவர்களையும்
எடுத்துக்கொண்டு சுரங்கத்தின் வழியாய்த் தப்பி வெளிச்சென்றான்.
இச்சரித்திரத்தையுட்கொண்டு, அருச்சுனனை’புரோசனப்பகைவன்’
என்றாரென்க;இதற்கு வேறு கதை பொருத்தமாகக் கூறுவராயிற் கொள்க.
சரோருகர்-தாமரை மலரில் வாழ்பவர்.  ஸரோருஹம் – பொய்கையில்
முளைப்பது;தலைமைபற்றிவந்தகாரணப்பெயர்.  ரோமஸர் – (உடம்பில்)
மிக்க மயிருடையவர் என்பது பொருள்.  ஒவ்வொரு பிரளயத்திற்கு இவரது
உடம்பினின்று ஒவ்வொரு மயிர் உதிரு மென்றும், இங்ஙனம் உடம்புமயி
ரெல்லாம் உதிர்ந்தபின்பு இவருக்கு ஆயுள்முடியுமென்றும் கூறுப;இது
பற்றியே, “எல்லாவுலகுமுடிந்திடு நாளு மீறி லாதான்”என்பர், மேல்
புட்பயாத்திரைச்சருக்கதிலும், ஒரு காலத்திற் பிரமதேவன்
எல்லாவுலகங்களையும்படைத்திட்டுத் தன்னைப்போலமிக்க
ஆயுளையுடையார்வேறு ஒருவரும் இல்லையென்று பெருஞ்செருக்குக்
கொள்ள, அக்கருவத்தை ஒழித்தருளத் திருவுளங்கொண்டு திருமால்
பிரமனைஉரோமச மகாமுனிவரிடம் அழைத்துப் போக, அங்குப் பேசிக்
கொண்டிருக்கையில் அம்முனிவர் ‘பிரமர்களென்றுசிலர்
நீர்க்குமிழிகள்போலே கணந்தோறுந் தோன்றி மறைபவராயிருப்பர்கள்’
என்று கூறவே, பிரமன் செருக்கொழிந்தன னென்பது, ஒருவரலாறு:இதனை
“நான்முகனாள்மிகத்தருக்கை யிருக்கு வாய்மை நலமிகுசீ ருரோமசனால்
நவிற்றி”என்னும் பெரியதிருமொழியாலும் அறிக.  இம்முனிவர்,
ஸ்ரீமகாவிஷ்ணுவின் அமிசமெனப் படுவர்.  (இவர் பெயர் லோமஸரெனவும்
வழங்கும்.) படைக்கலன்கள் பின்னும் என்றும் பாடம்.

‘வரி சிலை விசயன் வந்து, வான் தவம் புரிந்தவாறும்,
அரிவை ஓர் பாகன் அன்பால் அவற்கு அருள் புரிந்தவாறும்,
இரிய என் பகையை எல்லாம் இவன் தனி தடிந்தவாறும்,
தருமனுக்கு உரைத்தி’ என்ன, தபோதன முனியும் போனான்.161.-இந்திரன்அருச்சுனன்பால் நிகழ்ந்தவற்றைத்
தருமனுக்கு உரைக்குமாறுசொல்ல, உரோமசரும் போதல்

வரி- கட்டமைந்த, சிலை-வில்லையுடைய,விசயன்-
அருச்சுனன், வந்து – (யுதிட்டிரனைவிட்டு) வந்து, வான் – சிறந்த, தவம் –
தவத்தை, புரிந்த – செய்த, ஆறுஉம் – விதத்தையும், அரிவை –
உமாதேவியாகிய மனைவியை,ஓர் பாகன் – (தனது) ஒரு பக்கத்தில்
[வாமபாகத்தில்]உடைய சிவபிரான், அன்பால்-பிரீதியினால்,அவற்கு –
அவ்வருச்சுனனுக்கு, அருள்புரிந்த ஆறுஉம்-கருணைசெய்தவிதத்தையும்,-
இவன்- இவ்வருச்சுனன், என்பகையை எல்லாம் – எனது பகைவர்கள்
யாவரையும், இரிய – கெடும்படி, தனி – தானொருவனாக,தடிந்த ஆறுஉம்-
அழித்த விதத்தையும், தருமனுக்கு – யுதிட்டிரனுக்கு, உரைத்தி –
சொல்வாய்’,என்ன – என்று (இந்திரன்) சொல்ல,-தபோ தனம் முனிஉம் –
தவத்தையே செல்வமாகக் கொண்டுள்ள அவ்வுரோமச முனிவரும்,
போனான்- (காமியவனத்துக்குச்) சென்றார்;(எ – று.)

     அரிவை-இங்கே,பருவப்பெயராகாமற் பெண்ணென்னுமாத்திரையாய்
நின்றது.  தந்தையே மைந்தனாகப்பிறக்கிறானென்னும்நூல் வழக்குப்பற்றி,
தருமபுத்திரனை’தருமன்’என்றார். ‘அரிவையோர்பாகன்’என்பதிலுள்ள
கதை:-பிருங்கியென்னும்மகாமுனிவர் பரமசிவனைமாத்திரம்
பிரதக்ஷிணஞ்செய்யக் கண்ட பார்வதீதேவி ‘முனிவர்என்னைப்
பிரதக்ஷிணஞ்செய்யாமைக்கு ஏது என்ன?’என்றுவினவ, உருத்திரமூர்த்தி
‘இஷ்டசித்திபெறவிரும்புபவர் உன்னையும்மோக்ஷம்பெற விரும்புபவர்
என்னையும்வழிபடுவர் என்ன, அதுகேட்ட தேவி, பெருமானோடு
பிரியாதிருக்குமாறு தவம்புரிந்து வாமபாகம் பெற்றாரென்பது.

     பாசுபதம்பெற்றபின் சுவர்க்கலோகத்துக்கு அருச்சுனனையழைத்துச்
சென்று அஸ்திராதிகளைக்கொடுத்து ஊர்வசியின் சாபத்தையும் வரமாக
மாற்றியபின், தேவேந்திரன்,நிவாதகவசர் முதலிய அசுரரை
நாசஞ்செய்வித்தற்காக அந்தச்சுவர்க்கலோகத்திலேயே அருச்சுனனை
யிருத்திக் கொண்டு, அவ்வருச்சுனனது பிரிவினால்வருந்தும் தருமன்
முதலானோரைச்சமாதானப்படுத்துமாறு ரோமசமுனியை விடுத்தானென்று
வியாசபாரதம் கூறும்.  

———————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading