கேனோ உபநிஷத் ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

கேனோ உபநிஷத்

ஸ்வாமி குருபரானந்தா உபதேசம் விளக்கம்

முகவுரை
கர்ம காண்டம்
கர்ம தத்துவம் என்பது என்ன? கர்ம காண்டத்தில் பேசப்படும் கருத்துக்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.  உடலை பிரதானமாக கொண்டு செய்யும் செயல், சொல்லை பிரதானமாக கொண்டு செய்யும் செயல் (பேசுதல், வேதம் ஓதுதல் ) மனதிலிருந்து செய்யும் செயல் ( சிந்தித்தல் – மானஸம்) என்று மூன்று நிலையிலிருந்து கர்மம் உற்பத்தியாகின்றது.  இந்த செயல்களினால் விளையும் பலன்கள் இரண்டாக பிரிக்கப்படுகின்றது. ஒன்று கண்ணுக்கு தெரியும் பலன்கள், மற்றொன்று நமக்கே தெரியாத பலன்கள்(அதிருஷ்ட பலன்) ஆகும்.  நமக்கு தெரியாத பலன்களே பாவ-புண்ணியங்கள் என்று கூறுவர்.  இந்த அதிருஷ்ட பலன்களான பாவம் துயரத்தையும், புண்ணியம் சுகத்தையும் கொடுத்து நீங்குகின்றது. இவையிரண்டும் உபாதியாக இருக்கின்ற நமது உடல் மூலமாக நமக்கு சுக-துக்கங்களை கொடுத்து அனுபவிக்க வைக்கின்றது. மேலும் உலகத்தில் படைக்கப்பட்ட அனுபவிக்கப்படும் பொருட்கள் மூலமாகவும், உபாதியும், விஷயமும் சேர்ந்திருக்கின்ற இடத்தின் மூலமாகவும், சூழ்நிலைகள் மூலமாகவும் இந்த அதிருஷ்ட பலன்கள் அனுபவிக்கப்படுகின்றது.  சுக-துக்கங்கள் கொடுக்கக்கூடிய பொருட்கள் தனித்தனியாக கிடையாது.  ஒரே பொருள் சுகமும் கொடுக்கலாம், துக்கத்தையும் கொடுக்கலாம்.

எப்படிபட்ட கர்மமானது இவையிரண்டையும் கொடுக்கிறது?
சுகத்தை தருவது புண்ணியத்தை தரக்கூடிய செயல்கள், துன்பத்தை தருவது பாவத்தை தரக்கூடிய செயல்கள். இதிலிருந்து புண்ணியத்தை தருகின்ற செயல்களையும், பாவத்தை தரக்கூடிய செயல்களையும் நாம் தெரிந்து கொள்ளலாம். தர்மத்திற்குட்பட்ட செயல்கள் புண்ணியத்தையும், அதர்மத்திற்குட்பட்ட செயல்கள் பாவத்தையும் கொடுக்கின்றது..

கர்மங்கள் மூன்று வகையாக சாஸ்திரம் பிரித்திருக்கின்றது. அவைகள்

  1. நியத கர்மங்கள்   – செய்ய வேண்டிய கர்மங்கள்
  2. நிஷித்த கர்மங்கள் –  செய்யக்கூடாத கர்மங்கள், தவிர்க்க வேண்டிய கர்மங்கள். இவைகள் நம்மையறியாமலே செய்ய வைத்துவிடும் சக்தியுடையது
  3. பிராயசித்த கர்மங்கள் – செய்த பாவ கர்மத்தின் பலனிலிருந்து விடுபட செய்பவைகள்.

தாய், தந்தை மற்றும் குரு இவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும்.  நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையெல்லாம் சாஸ்திரம் ஏன் சொல்கின்றது என்று பார்க்கும் போது பாவச் செயல்களை தவிர்ப்பதன் மூலம் கஷ்டத்திலிருந்து விடுபடவும், புண்ணிய செயல்களை செய்வதன் மூலம் சுகத்தை அனுபவிக்கவும், அல்லது பலனை அனுபவிக்காவிட்டால் மனத்தூய்மையையும் கொடுக்கும் என்ற கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.   மனத்தூய்மையே ஒருவனை ஞான காண்டத்திற்கு செல்லும் தகுதியை கொடுக்கின்றது

ஞான காண்டம்

இதில் ஞானமே பிரதானம். அழியாததும், என்றும் இருப்பதும், பூரணமானதும் போன்ற லட்சணங்களை உடைய ஒன்றை பற்றிய அறிவை கொடுக்கின்றது.  இந்த அறிவை அடைந்தவுடனே அதன் பலனை அடைந்து விடுவோம். உதாரணமாக பத்தாவது மனிதனை அறிவதும், துயரம் நீங்குவதும் ஒரே சமயத்தில் நடக்கின்றது. கர்ம ஞானம் அடைந்தால் மட்டும் போதாது, அதை செயல்படுத்தினால்தான் பலனை அடைய முடியும்.  உதாரணமாக சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய யாகத்தை செய்யும் முறையை அறிந்தால் மட்டும் போதாது, அந்த யாகத்தை செய்தால்தான் அதன் பலனை அடைய முடியும்.

இந்த நித்ய வஸ்துவிற்கு பிரம்மன் என்று பெயர்.  இதனால் நாம் அனுபவித்துக் கொண்டு இருக்கும் சம்சாரம் நீங்கி விடும்.  நான் என்பதற்கும், பிரம்மத்திற்கும் உள்ள சம்பந்தத்தை வேதம் சொல்கின்றது.

  1.      பிரம்மன் படைப்பவர்,நான் படைக்கப்பட்டவன்.  இந்த உடல் நாம் அல்ல, நமக்குள்ளே அறிவு ஸ்வரூபமாகவும், சாட்சி ஸ்வரூபமாகவும் ஆத்மா இருக்கின்றது.  இந்த ஆத்மாவும், பிரம்மனும் ஒன்றேதான் என்ற அறிவு.  இதுவே ஜீவ-ஈஸ்வர ஐக்கியம்.  இந்த ஞானத்தின் பலன் மோட்சமாகும்
  2.     ஜகத்தை பற்றிய விசாரம்,அதன் இருப்புத்தன்மை, அதன் உண்மையான நிலை என்ன என்பதையும் விவரிக்கின்றது.  இந்த ஜகத் மித்யா என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த மித்யா அறிவானது பல படிகளாக சென்றுதான் புரிந்து கொள்ள முடியும்

2.1.   இது அநித்யம்- நிலையற்றது

2.2.   அஸாரம் – இதில் எந்த ஒன்றும் சாரமாக இல்லை.  எதற்கும் ஆதாரமாக இல்லை

2.3.   துக்க ஸ்வரூபம் – துயரத்தைக் கொடுக்க கூடியது. உலகத்திலுள்ள அனைத்தும் துயரத்தைக் கொடுக்க கூடியது என்ற அறிவினால் அதை விட்டு விலகி செல்லும் அறிவை அடைவோம்.

2.4.   உதாசீனம் – இந்த உலகமும் எனது லட்சியம் அல்ல என்று அறிந்து அதை நாடி செல்லமாட்டோம், விலகியே இருப்போம்.  அப்போதுதான் அது மித்யா என்று புரியத்தொடங்கும்.  உபநிஷத் இதையே ஜகத் மித்யா என்று உரைக்கிறது. பிறகு பிரம்மன் மட்டும்தான் ஸத்யம் என்ற அறிவையும் புகட்டுகின்றது.

உபநிஷத் என்பதை உப + நி + ஷத் என்று பொருள் கொள்ளலாம்.
உப = ஆத்மா ( நமக்கு மிக அருகில் இருப்பதுஆத்மா) நாமாக இருப்பது.  ஆத்மா மீதுதான் அகங்காரம் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது.
நி – நிச்சய ஞானம்.  இறுதியான, உறுதியான அறிவு, ஆத்மாவைப் பற்றிய உறுதியான அறிவு
ஷத் – நாசத்தை செய்வது.  உறுதியான ஆத்ம ஞானத்தின் மூலமாக சம்சாரத்தை அது கொடுக்கின்ற துயரங்களை நாசம் செய்தல்

இந்த உபநிஷத் கேன என்று ஆரம்பிப்பதால் இதை கேனோபநிஷத் என்று அழைக்கப்படுகின்றது.  இது சாம வேதத்தைச் சேர்ந்தது.  இது 35 மந்திரங்களைக் கொண்டது.  நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் இரண்டு பகுதியில் ஆத்ம வித்யாவும், அடுத்த இரண்டு பகுதியில் சில உபாஸனைகள், பண்புகள் கூறப்படுகின்றன.

சாந்தி பாடம்

ஆப்யாந்து மமாங்க3னி வாக்ப்ராணஶ்சக்ஷு: 

ஶ்ரோத்ரமதோ2 ப3லமிந்த்3ரியாணி ச ஸர்வாணி 

ஸர்வ ப்3ரஹ்மைபானிஷத3ம் மாஹம் ப்3ரஹ்மநிராகுர்யாம் 

மா மா ப்3ரஹ்ம நிரகரோத3னிரதரனமஸ்த்வனியகரணம் 

மேஸ்து ததா3த்மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மஸ்தே 

மயி ஸந்து  தே மனி ஸந்து ||

இதில் சரீர இந்திரியங்களின் சக்தியும், ஆரோக்கியமும் வேண்டப்படுகின்றது, சிரத்தையை வேண்டப்படுகின்றது, இறைவனுடைய அருள் வேண்டப்படுகின்றது, ஆத்ம ஞானத்திற்கு தகுதிகள் வேண்டப்படுகின்றது.

மம அங்காணி – என்னுடைய உடலுறுப்புக்கள்
ஆப்யாயந்து – ஆற்றலை அடையட்டும், சக்தியை அடையட்டும்
வாக், பிராணஹ, சக்ஷு, ஸ்ரோத்ரம் – எல்லா கர்ம இந்திரியங்களும், ஞான இந்திரியங்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அதோ2 ப3லம் இந்திரியாணி, ஸர்வாணி  – எல்லா இந்திரியங்களும் பலமாக இருக்கட்டும்.  பிரம்ம ஞானம் வளர்வதற்காக இவைகளின் சக்தி இருக்க வேண்டும் என்று வேண்டப்படுகின்றது.
ஸர்வம் பிரம்மவோபநிஷதம் – இந்த உலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் உபநிஷத்தினால் அறியப்படுகின்ற பிரம்மனாக இருக்கின்றது.
மா அஹம் பிரஹ்மம் நிராகுர்யாம் – நான் அந்த பிரம்மத்தை நீக்காமல் இருப்பேனாக. இது சிரத்தையை காட்டுகின்றது
மா மா பிரஹ்ம நிரகரோத் – பிரம்மன் என்னை நீக்காமல் இருக்கட்டும்.

அனிரா கரணமஸ்த் – என்னால் பிரம்மன் நிராகரிக்காமல் இருக்கட்டும்

அனிரா கரணம் மே அஸ்து – பிரம்மன் என்னை நிராகரிக்காமல் இருக்கட்டும்

  • இந்த பிரம்மனிடத்தில் எனக்கு இருக்கும் நம்பிக்கை சிரத்தை என்னை விட்டு போகாமல் இருக்க வேண்டும்.
  • என்னுடைய லட்சியம் பிரம்மத்தை அடைவது என்ற குறிக்கோள் என்னை விட்டு நீங்காது இருக்கட்டும்
  • என்னுடைய முமுக்‌ஷுத்துவம் என்னை விட்டு போக வேண்டாம்
  • உதாசீன புத்தி என்னிடத்தில் வரக்கூடாது.  மோட்ச மார்க்கத்தில் எனக்கு அவநம்பிக்கை வந்து விடக்கூடாது.

மா பிரஹ்ம மா நிராகரோதி: நான் எப்பொழுதும் ஈஸ்வரனுடய கருணைக்கு தகுதியானவனாக இருக்க வேண்டும்.  ஈஸ்வரனுடைய அனுக்கிரஹம் என்றென்றும் எனக்கு கிடைக்க வேண்டும்.  மோட்சத்தை அடையும் லட்சியத்தில் மாறாமல் இருக்க வேண்டும்.
ததா3மனி நிரதே ய உபநிஷஸ்து த4ர்மாஸ்தே மயி ஸந்து தே மயி ஸந்து:
அந்த பிரம்மத்தை அறிகின்ற மார்க்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ள என்னிடத்தில் உபநிஷத்தில் என்னென்ன தகுதிகள் சொல்லியிருக்கின்றதோ அவைகள் இருக்கட்டும்
உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள தர்மங்கள், சாதன-சதுஷ்டய-சம்பத்தி என்ற தகுதிகள் என்னிடத்தில் நிலை பெறட்டும்.

  1. விவேகம் – உலகத்திலுள்ள அனைத்தும் நிலையற்றவை அவைகள் என்னுடைய லட்சியமல்ல என்று அறிந்து கொள்ளுதல்
  2. வைராக்கியம்   – இந்த லட்சியத்தில் நிலையாக இருக்க உதவுகிறது
  3. முமுக்ஷுத்வம்  – அந்த லட்சியத்தை நாடி செல்ல உதவுகிறது
  4. சம                            – மன அமைதியாக வைத்திருத்தல், கட்டுபாட்டுடன் வைத்திருத்தல்
  5. 3ம                         –  இந்திரியங்களை அமைதியாக வைத்திருத்தல்
  6. உபரதி                    –  இந்த சம, தமத்தை தொடர்ந்து கடைப்பிடிக்க உதவுவது
  7. திதிக்ஷா                –  இருமைகளை சகித்து கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல்
  8. சமாதானம்          –  நாம் அடைய நினைக்கும் லட்சியத்தில் ஈடுபாட்டுடன் இருத்தல்

———————————————————————————————————————————————-

காண்டம் – 1

மந்திரம்1

கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன: கேன ப்ராண: ப்ரத2ம: ப்ரௌதி யுக்த: |

கேஷிதாம் வாசமிமாம் வத3ந்தி சக்ஷு: ஶ்ரோத்ரம் க உ தே3வோ யுனக்தி ||

கேன இஷிதம்                            யாரால் ஆசைப்பட்டு,

ப்ரேஷிதம் மனஹ பததி       பலவந்தபடுத்தப்பட்டதாக மனது செயல்படுகிறது

கேன யுக்த                                    யாரால் பொருந்தியவனாக

ப்ரதம ப்ராணஹ ப்ரைதி      நம்முடைய மூச்சுக்காற்று செயல்பட்டு கொண்டிருக்கின்றது

கேன இஷிதாம்                         யாருடைய ஆணையால்

இமாம் வாசம் வதந்தி           இந்த வாக்கானது பேசப்படுகின்றது

தேவோ யுனக்தி                       எந்த தேவனின் ஆணையினால்

சக்ஷு ஸ்ரோத்ரம்                   கண்ணும், காதும் செயல்படுகிறது

இந்த ஸ்தூல, சூட்சும சரீரத்திற்கு வேறான ஒரு சேதன சக்தி இருக்க வேண்டும் என்று தெரிகின்றது.  இதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த கேள்வி கேட்கப்பட்டிருக்கின்றது.  அதனுடைய ஸ்வரூபம் என்ன என்பதை அறிந்து கொள்ள சிஷ்யன் நினைக்கின்றான்

  •       ஸ்தூல சரீரமானது மரணத்திலும்,முக்தி நிலையிலும், ஆழ்ந்த உறக்கத்திலும் ஜடமாகி விடுகின்றது.  எனவே வேறு ஏதோ ஒன்று சேதனமாக இருந்து கொண்டு இந்த ஸ்தூல சரீரத்தை இயக்குகிறது
  • சூட்சும சரீரமும் ஜடமாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற அறிவுடன் இருக்கின்றான்
  • மனம் ஜடம் என்று அறிந்து கொள்வது கடினம். சூட்சும சரீரமானது சூட்சும பூதத்திலிருந்து உருவானது.  சூட்சும சரீரம் அந்தக்கரணமாக இருக்கின்றது.  எந்தவொரு கரணத்திற்கும் அதை இயக்க ஒரு கர்த்தா இருந்தாக வேண்டும், அது தானாக இயங்க முடியாது.  எனவே இந்திரியங்களை, அந்தக்கரணத்தை இயக்குவதற்கு ஒரு கர்த்தா நிச்சயமாக இருந்தாக வேண்டும்,
  • தேரானது பலவிதமான பொருட்களை கொண்டு உருவாக்குகிறார்கள். ஆனால் அதில் கடவுளை வைத்து இழுத்து வீதி உலா வருகிறார்கள்.
  • இந்த கர்த்தாவானது உடலுக்கு வேறுபட்டதா அல்லது உடலோடு ஒட்டியிருக்கிறதா?இதனுடைய உண்மையான ஸ்வரூபமென்ன ?
  •       நமது சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று மனதை செயல்படுத்தி கொண்டிருக்கின்றது.
  •       ஏதோவொரு தத்துவத்தின் இருப்பினால்தான் நம் மனமானது செயல்படுகிறது?நமது புலன்களையும் வேறொரு சக்தியானது இயக்குகின்றது.
  •       நாம் உணர்வுமயமாக இருப்பதற்கு எது காரணமாக இருக்கிறது?.

இந்த வினாக்களுக்கெல்லாம் அடுத்த மந்திரத்தில் விளக்கம் தரப்படுகின்றது.

மந்திரம்2

ஶ்ரோத்ரஸ்ய ஶ்ரோத்ரம் மனஸோ மனோ

யத்3வாசோ ஹ வாசம் ஸ உ ப்ராணஸ்ய ப்ராண: |

சக்ஷுஷஶ்சக்ஷுரஹிமுச்ய தீரா:

ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||

 

ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம்         காதுக்கு காதாக இருப்பது எதுவோ

மனஸஹ மனோ யத்3                  மனதிற்கும் மனதாக இருப்பது எதுவோ

வாசோ ஹ வாசம்                           சொல்லுக்கும் சொல்லாக இருப்பது எதுவோ

ஸஹ ப்ராணஸ்ய ப்ராண          பிராணனுக்கு பிராணனாக இருப்பது எதுவோ

சக்‌ஷுஷ்2ச சக்‌ஷூஹு               கண்ணுக்கு கண்ணாக இருப்பது எதுவோ

தீரா                                                         அதுவே ஆத்மா என்று புரிந்து கொண்டிருக்கும் புருஷர்கள்

அஸ்மாத் லோகாத்3 அதிமுச்ய    இந்த உலகினின்றும் விடுபட்டு

ப்ரேத்ய                                                 உடலை கடந்து சென்று

அம்ருதா ப4வந்தி                          அழிவற்றவர்களாகிறார்கள்.


அதுதான் இவைகள் இயங்குவதற்கு காரணமாக இருக்கிறது.  இதை அறிந்த தீரர்கள் இந்த உடலின் நான் என்ற புத்தியையும், அபிமானத்தையும் விட்டுவிடுகிறார்கள். உணர்வற்ற ஜடமான இந்த உடலின் மீது நான் என்ற புத்தியை விட்டுவிடுகிறார்கள்..  இந்த மூன்று சரீரத்திற்கும் வேறான சேதன தத்துவமான ஆத்மாதான் முதல் மந்திரத்தில் கேட்ட கேள்விக்கு பதிலாகும்.

விசாரம்:
சைதன்யத்தை சார்ந்துதான் நமது உடலிருக்கிறது. ஆனால்  இது நமது அனுபவத்திற்கு முரணாக இருக்கிறது. ஒன்றுமே தெரியாத விஷயத்தை நேரிடையாக தெரிய வைத்து விடலாம்.  ஆனால் ஒரு விஷயத்தை தவறாக புரிந்து கொள்ளும் போது இரண்டு நிலைகளில் அதை புரிய வைக்க வேண்டும். உதாரணமாக கயிற்றை பார்த்து பாம்பு என்று சொல்லும்போது இதில் கயிற்றை பற்றிய அறிவும் இருக்கிறது, பாம்பும் தெரிகிறது.  இந்த விஷயத்தில் முதலில் பாம்பை அவன் எண்ணத்திலிருந்து நீக்க வேண்டும், பிறகு அது கயிறுதான் அது என்று சொல்ல வேண்டும்.

ஆத்ம தத்துவம்:
நாம் நம் உடல் உணர்வுடையதாக இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதை முதலில் மனதிலிருந்து நீக்க வேண்டும். பிறகு ஆத்மாவைப் பற்றி புரிய வைக்க வேண்டும். இந்த முறையையே அத்யாஸ-அபவாதம் என்று அழைக்கப்படுகின்றது.  ஆத்மாவின் ஸ்வரூபம் சேதனம், அனாத்மாவின் ஸ்வரூபம் ஜடம். நாம் ஆத்மாவின் உணர்வு ஸ்வரூபத்தை ஜடமான உடலில் ஏற்றி வைத்து இந்த உடல் சேதனமானது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.  உடலின் தர்மத்தை ஆத்மாவில் ஏற்றி வைத்திருக்கின்றோம்.

நம் உடலின் தர்மம் மாற்றம் அடைந்து கொண்டிருப்பது. மேலும் உடலின் எந்த பகுதி அறிவுடன் செயல்படுகின்றதோ அதற்கு பின்னே சேதனத்வம் இருக்கின்றது. காதால் கேட்கப்படும் சக்தியானது அதற்கு பின்னே இருந்து கொண்டிருக்கும் ஆத்மாவினால்தான் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. காதுக்கு காதாக இருப்பது ஆத்ம தத்துவம். கண்ணுக்கு கண்ணாக இருப்பதற்கு காரணமாக இருப்பது அதற்கும் வேறாக உள்ள ஒரு சேதன தத்துவம் அதுவே ஆத்மா என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இவைகள் நமக்கு அனுபவமாக இருந்தாலும் உண்மையான அந்த ஆத்மாவை புரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ஆகாசம் நீல வர்ணமாக அனுபவத்தில் தெரிகின்றது, ஆனால் ஆராய்ந்து பார்த்து அடையும் அறிவைக் கொண்டு அனுபவம் தவறு என்று புரிந்து கொள்கிறோம்.

காதுக்கு கேட்கக்கூடிய குணத்தையும், கண்ணுக்கு பார்க்க கூடிய குணத்தையும் கொடுப்பது சைதன்ய ஸ்வரூபமான ஆத்மாதான்.  ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரம் என்ற வாக்கியத்தில் ஸ்ரோத்ரஸ்ய என்பது ஆபாஸ சைதன்யத்தையும், ஸ்ரோத்ரம் என்பது ஸ்வரூப சைதன்யத்தையும் குறிக்கின்றது.  கண்ணாடியில் தெரியும் சூரியபிம்பத்தை வைத்து சூரியனை குறிப்பிட, சூரியனுக்கு சூரியன் என்று சொல்வது போல புலன்கள் வெளிபடுத்தும் சக்தியை ஆத்மாவினுடையது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 

  • ஆத்மா கரணங்களிலிருந்து வேறுபட்டிருப்பதை இதை வைத்து புரிந்து கொள்ளலாம்.
  • கரணங்களை வியாபித்துள்ளது தனியாக வேறெங்கும் இல்லை
  • கரணங்களுடைய செயல்களுக்கு காரணமாகவும் இருக்கிறது
  • கரணத்திலிருக்கும் சேதனத்வம் ஆத்மாவைச் சேர்ந்தது.

மந்திரம்3

ந தத்ர சக்ஷுர்கா3ச்ச2தி ந வாக்3க3ச்ச2தி நோ மனோ ந வித்3மோ நவிஜானேமோ யதை2தத3னுஶிஷ்யாத3ன்யதே3வத்தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4 |

இதி2 ஶுஶ்ரமபூர்வேஷாம் யே நஸ்தத்3வ்யாசக்ஷிரே ||

ஆத்மாவுக்கு அப்பிரமேயம் என்ற லக்‌ஷணம் கொடுக்கப்படுகின்றது. அப்பிரமேயம் என்றால் எந்த பிரமாணத்தினாலும் அறிய முடியாது.

ந தத்ர                        இந்த ஆத்மாவிடத்தில்

சக்ஷு ந கச்சதி       கண்களால் இதைப் பார்க்க முடியாது. இந்த இடத்தில் அனைத்து ஞான இந்திரியங்களாலும் ஆத்மாவை கிரகிக்க முடியாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ந வாக்3 க3ச்சதி –    சொற்களாலும் கிரகிக்க முடியாது.  இப்படி சொல்லும் போது அனைத்து கர்மேந்திரியங்களாலும் கிரகிக்க முடியாது என்று புரிந்து கொள்ள வேண்டும்,  வேத பிரமாணம் ஆத்மாவாக இல்லாததையெல்லாம் நீக்கி விடுகிறது எனவே அது தானாகவே விளங்கி விடுகின்றது, நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

ந மனஹ                     மனதாலும் கிரகிக்க முடியாது இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது ஆத்மா தானாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறது.  அதை விளக்க எதுவும் தேவையில்லை

ந வித்3மஹ              நான் ஆத்மாவை அறியவில்லை

ந விஜானீமஹ       எங்களுக்கு தெரியவில்லை, பார்க்கவில்லை

யதா2 தத்3 அனுஸி2ஷ்யாத் – இதை எப்படி விளக்குவது என்றும் தெரியாது.

 

ஆத்மாவை அனுபவிக்கப்படும் பொருளாக சிஷ்யன் நினைத்துக் கொண்டிருப்பது இந்த ஸ்லோகத்தில் தெரிகிறது.  எனவே அது அனுபவிக்கப்படும் பொருளல்ல, விஷயமல்ல அதை காட்டிக்கொடுக்கவும் முடியாது என்று குரு ஆத்மாவின் லக்ஷணத்தை தெளிவாக்குகிறார்.

 

ஆத்மா அனுபவிக்க கூடிய விஷயமுமல்ல, பொருளுமல்ல என்று புரிந்து கொள்வதே இறுதியான ஞானம்.  அனாத்மாக்களான ஸ்தூல, சூக்ஷும பஞ்ச பூதங்கள், காரண, காரிய வெளித்தோற்றத்திற்கு வந்தது, வராதது, அறிந்தது, அறியப்படாதது.

 

விதி3த3ம்:         எவையெல்லாம் அறியக்கூடியதோ, அனுபவித்து அறியபட்டதோ, பொதுவாக மனிதர்களால் அறியமுடிவது, அறிந்து கொண்டு இருப்பது.

அவிதிதம்:        யாராலும் அறிய முடியாதது, சூன்யம்.  எவையெல்லாம் விதித தத்துவமாக இருக்கிறதோ அவற்றிற்கு வேறானது.  அறியாததைக் காட்டிலும் வேறானது.

விதிதத்திற்கும், அவிதிதத்திற்கும் வேறானது ஆத்மதத்துவம்.

அன்யதேவ தத் விதிதாத்      இந்த ஆத்மா அறிந்ததைக் காட்டிலும் வேறானது.

அதோ2 அவிதிதாத் அதி4       அறியாததைக் காட்டிலும் வேறானது ஆத்மா.

 

நான் என்று அறியாமலில்லை எனவே அவிதத்தில் சேர்க்க முடியாது.  நான் என்னை அறிந்துள்ளேன் என்றால் எதன் மூலம் அறிந்தேன், எதை அறிந்தேன் என்று கேள்வி எழுகின்றது.  எனவே நான் அறிந்ததைக் காட்டிலும், அறியாததைக் காட்டிலும் வேறானவன்.  இந்த நான் ஆத்மாவை குறிக்கின்றது.

இதி ஷுஸ்ரும பூர்வேஷாம்:      இந்த தத்துவமானது இவ்விதம் எங்களுக்கு உபதேசிக்கப்பட்டது; ( எங்களுடைய குருவின் மூலமாக கூறப்பட்டது)

யே ந தத் வ்யாச சக்ஷிரே              எந்த குருமார்கள் இந்த தத்துவத்தை அறிந்திருந்தார்களோ அவர்களிடமிருந்து எங்களுக்கு உபதேசிக்கபட்ட்து.


வெளிச்சம் இருந்தால்தான் கண்ணுக்கு பார்க்கும் சக்தி உண்டு.  அது போல சிஷ்யர்களுக்கு உபநிஷத்தின் மந்திர உபதேசம் பெறுவதற்கு குரு என்கின்ற வெளிச்சம் தேவை. தண்ணீர் கொண்டு வர உதவும் பாத்திரம் போல குரு விளங்குகின்றார். எனவே குருவின் துணை மிகவும் அவசியம். குருவானவர் மந்திரத்தினுடைய சரியான பொருளை சொல்லக்கூடியவர், பரம்பரையாக சொல்லபட்டதை சொல்லக்கூடியவர்

மந்திரம்4

யத்3வாசாÅனப்யுதி3தம் யேன வாக3ப்யூத்3யதே   |

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

யத்3 வாசா அனப்யுதிதம்       –    எந்தவொரு தத்துவமானது நம்முடைய சொற்களால் விளக்கப்படாதது. ஆனால்

யேன வாக்3 அப்யூத்3யதே             –  எதனால் வாக்கு விளக்கப்படுகின்றதோ

ததே3வ ப்ரஹ்ம த்வம் வித்3தி4  –  அதுவே பிரம்ம தத்துவம் என்று அறிவாயாக.

ந இதம் யத்3 இத3ம் உபாஸதே  –  தேவதைகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அதுவே பிரம்மனல்ல.


எந்தவொரு அறிவு ஸ்வரூபம் நம் உடலுக்குள் இருந்து கொண்டு ஐம்புலன்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டிருக்கின்றது ஆனால் புலன்களால் விளக்க முடியாததாக இருக்கின்றது அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.  அதாவது ஜீவனும் பிரம்மனும் ஒன்றே என்று புரிந்து கொள்வாயாக என்று இது உணர்த்துகின்றது.  ஜீவனை பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவும், உலகத்தை பிரகாசித்துக் கொண்டிருக்கும் பிரம்மனும் ஒன்றே என்று அறிந்து கொள்ள வேண்டும்.  இதுவே உபநிஷத்தின் மையக் கருத்து.  இது ஜீவ-ஈஸ்வர ஐக்கியத்தை பேசுகின்ற மந்திரமாக இருக்கின்றது.

மாயையுடன் கூடிய நிர்குண பிரம்மன்தான் சகுண பிரம்மன்.  ஈஸ்வரன் அனைத்து படைப்புக்கும் காரணமானவர், பிரம்மன் மாயையின் துணையற்ற ஈஸ்வரன்.
நிர்குணபிரம்மன் à சகுண பிரம்மன் (மாயை + ஈஸ்வரன்) à இஷ்ட தேவதை ( நமக்கு பிடித்தமான தெய்வ ரூபம் ) à அதிஷ்டான தேவதை ( ஒவ்வொரு ஐஸ்வர்யத்திற்கும் அதிஷ்டானமாக ஒரு சாஸ்திரம் அறிமுகப்படுத்தி இருக்கின்றது )  அதிஷ்டான தேவதையை வழிபடுவதால் அடையும் பலனாக நாம் சிரத்தைய வளர்க்க வேண்டும். இதிலிருந்து ஈஸ்வரனை தியானிக்கும் நிலைக்கு செல்ல வேண்டும். பிறகு இவைகளை எல்லாம் கடந்து நிர்குண பிரம்மனை தியானித்து அடைய வேண்டும்,

மந்திரம்5
யன்மனஸா ந மனுதே யேனாÅÅஹுர்மனோ மதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
பிரம்மத்தை ஒரு பொருளாக, விஷயமாக மனதால் கிரகிக்க முடியாது,  ஆனால் மனதை எது அறிகின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்6

யச்சக்ஷுஷா ந பஶ்யதி யேன சக்ஷூம்ஷி பஶ்யதி |

ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||

கண்களால் பார்க்க முடியாது, ஆனால் எது கண்களை பார்க்கின்றதோ, அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.


மந்திரம்7
யச்சோ2த்ரேண ஶ்ருணோதி யேன ஶ்ரோத்ரமித3ம்ஶ்ருதம் |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
காதால் கேட்க முடியாதது, ஆனால் எது காதை வியாபித்து இருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

மந்திரம்8
யத்ப்ரணேன ந ப்ராணிதி யேன ப்ராண: ப்ரணீயதே |
ததே3வ ப்3ரஹ்மத்வம் வித்3தி4 நேத3ம் யதி3த3முபாஸதே ||
எதை நுகர்ந்து பார்த்து அறிய முடியாததாக இருக்கின்றதோ ஆனால் அந்த சக்தியை விளக்கி கொண்டிருக்கின்றதோ அதுவே பிரம்மன் என்று அறிந்து கொள்.

———————————————————————————————————————————————-

காண்டம் – 2

மந்திரம்1

யதி3 மன்யஸே ஸுவேதேதி த3ப்4ரமேவாபி
  நூனம் த்வம் வேத்த2 ப்3ரஹ்மணோ ரூபம் |
யத3ஸ்ய த்வம் யத3ஸ்ய தே3வேஷ்வத2 நு
  மீமாம்ஸ்யமேவ தே மன்யே விதி3தம் ||

யதி3 மன்யஸே – ஒருவேளை இவ்விதம் நினைத்தால்

ஸுவேதே இதி – நான் பிரம்மனை நன்கு அறிகிறேன்.

நான் பிரம்மனை நன்கு அறிகிறேன் என்று ஒருவேளை இவ்விதம் நினைத்தால் இப்படி நினைப்பது பிரம்மத்தை ஒரு பொருளாக அறிந்திருப்பது போல் இருக்கிறது. இது தவறான அறிவு. பிரம்மத்தை உன் ஸ்வரூபமாக நினைத்திருக்க வேண்டும்.

3ப்4ரம் ஏவ நுனம்  –  தவறாக, முழுமையற்ற ஸ்வரூபத்தைத்தான்

த்வம் வேத்த2             – நீ அறிந்திருக்கிறாய்

ப்ரஹ்ம ரூபம்            – பிரம்மத்தின் ஸ்வரூபத்தை

யத்3 அஸ்ய                 –  எந்த பிரம்மத்தின் ரூபத்தை

த்வம் தேவேத்4வத2  – மனிதரிடத்திலும், விலங்கிலும் தேவர்களிடத்திலும் வியாபித்திருக்கின்ற பிரம்மத்தை நீ பூரணமாக அறிந்திருக்கமாட்டாய்.

அதனு தே                    – ஆகவே உன்னுடைய அறிவானது

மீமாம்ஸாமேவ      – விசாரத்திற்குட்பட்டது.

மன்யே விதி3தம்     –  நான் பிரம்மனை அறிகின்றேன்.  பிரம்மன் என்னால் நன்கு அறியப்பட்டதாக  கருதுகின்றேன்.

மந்திரம்2
நாஹம்  மன்யே ஸுவேதே3தி நோ ந வேதே3தி வேத3 ச |
யோ நஸ்த3வேத3 த3த்3வேத நோ ந வேத3 ச ||
நான் பிரம்மத்தை அறிகின்றேன் என்று நினைக்கவில்லை, அதேசமயம் பிரம்மத்தை அறியவில்லை என்றும் நினைக்கவில்லை.

ந அஹம் ஸு வேத3 இதி.  நான் பிரம்மத்தை நன்கு அறிகின்றேன்

ந மன்யே –                 என்று கருதவில்லை

ந வேத3 இதி நோ வேத3   அறியவில்லை என்றும் கருதவில்லை என்று இவ்விதம் அறிகிறேன்.

யோ நஹ த்த3 வேத3      சிஷ்யர்களான எங்களுக்குள் எவனொருவன் முதலில் கூறியவாறு அறிந்துள்ளானோ அவனே பிரம்மத்தை சரியாக புரிந்து கொண்டு இருக்கின்றான்.

நோ ந வேதேதி வேத3 ச   நான் அறிகின்றேன் என்றும் கருதவில்லை, அறியவில்லை என்றும் கருதவில்லை என்று புரிந்து கொண்டுள்ளான்.

மந்திரம்3

யஸ்யாமதம் தஸ்ய மதம் மத2ம் யஸ்ய ந வே3த3 ஸ: |

அவக்ஞாதம் விஜானதாம் விக்ஞானதமவிஜானதாம் ||

யஸ்ய அமதம் தஸ்ய மதம்         யாருக்கு பிரம்மன் பொருளாக அறியப்படவில்லையோ அவருக்கு அறியப்பட்டது..

மதம் யஸ்ய ந வேத ஸஹ          யாருக்கு அறியப்பட்டதாக இருக்கின்றதோ, அவர்களுக்கு அறியப்படவில்லை.

அவக்3ஞானதாம் விஜாதம்        அக்ஞானிகளுக்கு அறியப்பட்டதாகவும்

விக்ஞானதம் அவிஜானதாம்    ஞானிகளுக்கு அறியப்படாததாகவும் இருக்கிறது

மந்திரம்4
ப்ரதிபோ3த4விதி3தம் மயம்ம்ருதத்வம் ஹி விந்த3தே |
ஆத்மனா விந்த3தே வீர்யம் வித்3யா விந்த3தேÅம்ருதம் ||

  • பிரம்மத்தை எந்த மாதிரியான விசாரத்தினால் அறிந்து கொள்ள முடியும்.
  • அது எங்கு இருக்கின்றது என்று அறிதல்.
  • எந்த மாதிரியான ஸ்வரூபத்தை உடையதாக இருக்கின்றது.
  • நம்முடைய எண்ணங்களுக்குள் ஆத்மாவை கண்டு கொள்ள வேண்டும்.
  • நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களையும் சாட்சி ஸ்வரூபமாக பார்க்க வேண்டும்.

எண்ணங்களின் மூலமாகத்தான் ஒன்றைப்பற்றிய அறிவை அடைகின்றோம்.  மனமும் அதற்குப்பின்னே உள்ள சைதன்யம்தான் அறிபவன். அறிய உதவும் கருவியை பயன்படுத்தி, அறியப்படும் பொருளை வியாபித்து அந்த பொருளாக எண்ணங்கள் உருவாகின்றது.  அந்த எண்ணத்தைத்தான் மனம் பார்க்கின்றது. அப்போது அந்த பொருளைப் பற்றிய அறிவு ஏற்படுகிறது. எண்ணத்தில் தோன்றிய அறிவும், பார்த்த பொருளும் ஒன்றாக இருந்தால் அது சரியான அறிவு.  பொருளை பார்த்த பிறகு ஏற்படும் எண்ணங்களின் மூலமாக அறிவை அடைகிறோம்.  அந்த எண்ணங்களில் தவறிருந்தால் அதுதான் அறிவாக இருக்குமேயொழிய பார்த்த பொருள் இருக்காது. (உ-ம்) கயிற்றை சில சமயம் பாம்பாக பார்த்தல்

இந்த எண்ணத்திற்கு அறிவை கொடுக்கும் சக்தி எப்படி வந்தது?

மனமும் ஜடம், அதில் எழும் எண்ணங்களும் ஜடம்.  ஜடமான எண்ணங்களினால் எப்படி அறிவை அடைகிறோம். மனம் உடலின் மீது அபிமானம் வைத்திருக்கும் உணர்வுடையதாக இருக்கிறது.  ஜடமான மனதிலிருந்து எண்ணங்களை பிரகாசப்படுத்தும் அறிவு ஸ்வரூபம் ஒன்று இருக்க வேண்டும். அதனால்தான் அறிவை அடைய முடியும்.  பானைப் பற்றிய எண்ணத்தை அறிவாக மாற்றுவதற்கு ஒரு அறிவு ஸ்வரூபம் இருந்து கொண்டு அதை அறிவாக மாற்ற வேண்டும்.

எண்ணங்களின் ஸ்வரூபம்: எத்தனை பொருட்களை பார்க்கிறோமோ அத்தனை எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. ஒவ்வொன்றும் வேறு வேறு தன்மையுடையதாக இருக்கும். எனவே தோன்றும் எண்ணங்கள் எல்லாம் தனித்தன்மையுடையதாக இருக்கும்.  இதற்கு சவிசேஷம் என்று சாஸ்திரம் விருத்தியின் ஸ்வரூபமாக கூறுகின்றது.

ஞானத்தின் ஸ்வரூபம்: சவிசேஷ எண்ணங்களை விளக்குவதற்கு, அறிவாக மாற்றுவதற்கு ஒரே ஒரு ஞானம்தான் இருக்கும்.  (உ-ம்) அறையில் இருக்கும் வெளிச்சம் வெவ்வேறு பொருட்களை காட்டிக் கொடுப்பது போல இந்த ஞானம் இருக்கின்றது.  எனவே ஞானமானது நிர்விசேஷ தன்மையுடையது.

சவிசேஷ ஞானம் = சவிசேஷ விருத்தி + நிர்விசேஷ ஞானம்.

வேற்றுமைகளான எண்ணங்களும் வேற்றுமையற்ற ஞானமும் சேர்ந்து வேற்றுமையான அறிவைக் கொடுக்கின்றது.  எண்ணங்களின் தன்மையான வேற்றுமையை ஞானத்தில் போட்டு விட்டு விதவிதமாக அறிவை அடைந்து விட்டோம் என்று நினைக்கின்றோம்.  நாம் ஒருவரை பார்க்கும் போது கோபம் வந்தால் க்ரோதம் என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது. இன்னொருவரைப் பார்க்கும் போது அன்பு கொண்டால் கருணை என்கின்ற எண்ணம் தோன்றி இருக்கிறது. நான் கோபமடைந்துள்ளேன், அன்பு கொண்டுள்ளேன் என்று எண்ணங்களின் தன்மையை நம் மீது ஏற்றிவைத்திருக்கிறோம்.  சாஸ்திரம் நிர்விசேஷமான அறிவு என்று உபதேசிக்கிறது.  இதை உணர்ந்து விட்டால் அதுவே மோட்ச நிலை.

  எண்ணங்கள் ஞானம்
1 ஜடமானது அறிவு ஸ்வரூபமானது
2 தோன்றி மறைவது (அநித்யம்) நித்யமானது-தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை
3 மாற்றத்திற்குட்பட்டது (விகாரம்) நிர்விகாரம் – மாற்றத்திற்குட்படாதது
4 பல எண்ணங்கள் ஒன்றே ஒன்றுதான்
5 சுத்த-அசுத்த குணங்களையுடையது குணங்களற்றது
6 எண்ணங்கள் மூலமாக சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம் அசம்சாரியான ஸ்வரூபம்

இதன் மூலம் அறிவது எண்ணங்களின் தன்மைகளை நான் என்று எண்ணிக்கொண்டு சுக-துக்கங்களை அனுபவிக்கின்றோம்.  நான் உணர்வுடன் இருக்கின்றேன் என்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.  இதை உணர்ந்து கொண்டு எண்ணங்களின் தன்மைகளை நானல்ல என்றும் நான் அறிவு ஸ்வரூபம், நானே ஆத்மா என்ற நிலையை அடைந்திட வேண்டும்.  நான் மனதையே பிரகாசிக்கும் சாட்சி, ஆத்மா என்ற உறுதியான நிலையை அடைய வேண்டும்.

மந்திர விளக்கம்:

பிரதி போ4தம்            ஒவ்வொரு எண்ணங்களுக்குள்ளும் வெளிப்பட்ட சைதன்யத்தை

விதிதம்                         அறிவதன் மூலம் ( அது நான் என்ற அறிவதன் மூலம்)

மதம்                               ஆத்மா அறியப்பட்டதாகிறது.

அம்ருதத்வம் ஹி விந்ததே   – இந்த ஞானத்தினால் அடையும் பலன் மரணமற்ற நிலையை அடைதலாகும்

ஆத்மனா                     ஒருமுகப்படுத்தப்பட்ட தூய்மையான மனதினால்

வீர்யம்                           உண்மையை கிரகிக்கும் சக்தியை, அதை காப்பாற்றி வைத்து இருக்கும் சக்தியை, புரிந்தது நிலை பெற்றிடும் சக்தியை.

விந்ததே                      அடைகின்றான்

வித்யயா                     ஞான பலத்தால், அறியாமையை நீக்குகின்ற பலம்

அம்ருதம் விந்ததே       மரணமற்ற நிலையை அடைகின்றான்.

சக்தியை தரும் பொருட்கள் – பணம், மந்திரம், ஔஷதம், ஆள்பலம் ( தன்னைச் சுற்றியிருப்பவர்களின் எண்ணிக்கை) இவற்றை துறக்கும் சக்தியைத்தான் பெரும் சக்தி என்று சங்கரர்  கூறுகின்றார்.

மந்திரம்5
இத3ம் சேத3வேதீ3த3த2 மத்யமஸ்தி ந சேதி3ஹாவேதீ3ன்மஹதீ விஅனஷ்டி |
பூ4தேஷு பூ4தேஷு விசித்ய தீ4ரா: ப்ரேத்யாஸ்மால்லோகாத3ம்ருதா ப4வந்தி ||
ஒருவேளை இந்தப்பிறவியில் ஆத்ம தத்துவத்தை புரிந்து கொண்டால், இந்தப் பிறவியை நன்கு பயன்படுத்திக் கொண்டவனாகின்றான்.  இவ்வாறு அறியவில்லை என்றால் பெரும் நஷ்டத்தை  அடைந்தவனாகின்றான்.

இஹ அவேதி3த் சேத் – இந்த பிறவியிலே இந்த பிரம்மத்தை அறிந்து கொண்டால்
அதஸத்யம் அஸ்தி – பிறவியெடுத்ததற்கு அர்த்தம் உண்டாகின்றது, பிறந்ததற்கு உண்மையான பலனாக இருக்கும்.
இஹ  சேத் அவேதி  – ஒருவேளை இந்த பிரம்மத்தை அறியவில்லை என்றால்
மஹத் வினஷ்டி           – அவன் மிகப்பெரிய இழப்பை அடைகிறான்.

எனவே நமக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உண்மைப்பொருளை அடைந்து இந்த பிறவி சக்கரத்திலிருந்து விடுபட்டு விட வேண்டும்.  இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்ததற்கு சமமாகும்.  சந்தனக்கட்டையை விறகு கட்டையாக பயன்படுத்துவது போல நம் சரீரத்தை பயன்படுத்தக் கூடாது. என்ற் கூறுகிறார்கள் பிரம்மத்தை அறிந்த தீரர்கள், பண்டிதர்கள், சான்றோர்கள்

பூதேஷு பூதேஷு – எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒரே ஒரு தத்துவம்தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்று அறிந்துக் கொண்டவர்கள் பிறப்பு, இறப்பற்றவர்களாகின்றார்கள்.

 

———————————————————————————————————————————————-

காண்டம்3

முகவுரை

  • கர்வத்தை நீக்க வேண்டும், எதைக் குறித்தும் நமக்கு கர்வம் வந்து விடக்கூடாது
  • நாம் அடையும் எதுவும் நிலையானதல்ல என்றுணர்ந்து கொண்டால் நமக்கு கர்வம் வராது
  • நாம் வாழ்க்கையில் அடையும் பெருமைகள் அனைத்தும் இறைவனுடைய பிரசாதமாகவும் அவருடைய கருணையால் அடைந்தது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • ஸ்ரத்தா, சாதன சதுஷ்டய சம்பத்தி ஆகிய தகுதிகளை அடைந்திட வேண்டும்.
  • தன்னை அறிவதற்கு அதை உபதேசம் செய்வதற்கு தனக்கு வேறாக உள்ள குரு தேவை,
  • பரமாத்மாவினுடைய இருப்பு எடுத்துக் காட்டப்படுகிறது. பிரமாணங்களால் அறியப்படாததாக இருக்கிறது. எனவே இது அபிரமேயம்
  • இந்த பிரம்மத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
  • இந்த பிரம்மமானது மிகவும் சூட்சுமமாக இருக்கிறது.  இதற்கு அவயவங்கள் இல்லை, குணங்களில்லாதது, அதைக் காட்டிக் கொடுக்கக் கூடிய எதுவும் இல்லாதிருப்பதால் இதன் பெருமை பேசப்படுகின்றது.
  • சொர்க்கத்தை அடைவதோ, தேவதையாக மாறுவதோ மோட்சமல்ல, அவைகள் நம்முடைய லட்சியமுமல்ல.
  • சிலவகையான தியானங்கள் சொல்லப்பட்டிருக்கின்றது.

மந்திரம்1

ப்3ரஹ்ம ஹ தே3வேப்4யோ விஜிக்3யே தஸ்ய ஹ
  ப்3ரஹ்மணோ விஜயே தே3வா அமஹீயந்த |
த ஐக்க்ஷந்தாஸ்மாகமேவாயம் விஜய: அஸ்மாகமேவாயம் மஹிமேதி ||
பிரம்மனே ( ஈஸ்வரனே ) தேவர்கள் வெற்றி அடைவதற்கு சக்தியை கொடுத்திருக்கிறது. அந்த பிரம்மத்தின் வெற்றியால் தேவர்கள் பெருமை அடைந்தனர்.  ஆனால் தேவர்கள் இந்த பெருமை எங்களைத்தான் சார்ந்தது என்று நினைத்தார்கள்

மந்திரம்2
தத்3தை4ஷாம் விஜக்3ஞோ தேப்4யோ ஹப்ராது3ர்ப3பூ4வ |
தத்ர வ்யஜானத் கிமித3ம் யக்ஷமதி ||
தேவர்கள் அடைந்த கர்வத்தை பிரம்மன் தெரிந்து கொண்டார்.  அவர்களுடைய கர்வத்தை அடக்கி உண்மையை உணர்த்துவதற்கு யட்சனாக (தெரிந்தும் தெரியாமலும் தோற்றமளிக்கும் யக்ஷ ரூபம் ) அவர்கள் முன் தோன்றியது. அந்த உருவத்தை அவர்களால் அறிய முடியவில்லை.  யார் இந்த யக்ஷன் என்று வியந்தனர்.

மந்திரம்3
தேÅக்3னிமப்3ருவன் ஜாதவேத3 ஏஜத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||
தேவர்கள் அக்னிதேவரிடம் எல்லாம் அறிந்தவரே நம்முன் காட்சியளிக்கும் இந்த யக்ஷன் யாரென்று அறிந்து வாரும் என்று கூறினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று புறப்பட்டார்.

மந்திரம்4
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி அக்3னிர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 ஜாதவேதா3 வா அஹமஸ்மீதி ||
அக்னிதேவர் யக்ஷன் அருகில் சென்றார்.  யக்ஷன் அவரை பார்த்து, நீ யார் என்று கேட்டது.  என்னை அக்னிதேவன் என்று அழைப்பார்கள். நான் எல்லாம் அறிந்தவன் என்ற புகழை உடையவனாக இருக்கிறேன் என்று பதிலளித்தார்.

மந்திரம்5
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வம்
  த3ஹேயம் யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கின்றது என்று யக்ஷன் கேட்டது. அதற்கு அக்னிதேவன் இந்த உலகத்தில் உள்ள அனைத்தையும் எரித்து விடும் சக்தியுடையவன் என்று கூறியது.

மந்திரம்6
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாக் த3க்3து4ம் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைததஶகம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||
அக்னிதேவன் முன்னே காய்ந்த புல்லை யக்ஷன் வைத்துவிட்டு இதை எரித்துவிடு பார்க்கலாம் என்று கூறினார்.  தன்னுடைய முழு சக்தியையும் பயன்படுத்தி அதை எரிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரால் புல்லை எரிக்க முடியவில்லை.  அந்த இடத்திலிருந்து உடனே திரும்பி விட்டார். என்னால் அந்த யக்ஷனை அறிந்து கொள்ள முடியவில்லை என்று கூறிவிட்டார்.

மந்திரம்7
அத2 வாயுமப்3ருவன் வாயவேதாத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமதி ததே2தி ||

பிறகு வாயுதேவர் அந்த யக்ஷனை அறிந்து கொண்டு வா என்று அனுப்பினார்கள். அவரும் அப்படியே ஆகட்டும் என்று கூறிவிட்டு சென்றார்.

மந்திரம்8
தத3ப்4யத்3ரவத்தமப்4யவத3த் கோÅஸீதி வாயுர்வா
   அஹமஸ்மீத்யப்3ரவீத்3 மாதரிஶ்வா வா அஹமஸ்மீதி ||
யக்ஷனருகில் சென்றதும் அது வாயுதேவனை நீ யார் என்று கேட்டது.  நான் வாயுதேவன், ஆகாசத்தில் தடையின்றி சஞ்சரிப்பவன் என்ற பெயர் பெற்றவனாக இருக்கின்றேன்.

மந்திரம்9
தஸ்மிம்ஸ்த்வயி கிம் வீர்யமிதி அபீத3ம்ஸர்வமாத3தீ3ய
  யதி3தம் ப்ருதி2வ்யாமிதி ||
அப்படிபட்ட உன்னிடத்தில் எத்தகைய சக்தி இருக்கிறது? அதற்கு அவர் இந்த பூமியில் உள்ள எதையும் தூக்கிவிட முடியும் என்று கூறினார்.

மந்திரம்10
தஸ்மை த்ருணம் நித3தா4வேதத்3த3ஹேதி  தது3பப்ரேயாய
  ஸர்வஜவேன தத்ர ஶ்ஶாகாதா3தும் ஸ தத ஏவ
  நிவவ்ருதே நைதத3ஶாமம் விக்3ஞாதும் யதே3தத்3யக்ஷமிதி ||

அவர் முன் புல்லை வைத்து, இதை தூக்கு பார்க்கலாம் என்று யக்ஷன் கூறினார்.  தன்னுடைய முழுசக்தியையும் பயன்படுத்தியும் அவரால் தூக்க முடியவில்லை. அவரும் அங்கிருந்து திரும்பிவிட்டார். யார் இது என்று அறிய முடியாதவனாக இருக்கிறேன்.

மந்திரம்11
அதே2ந்த்3ரமப்3ருவன் மக4வன்னேதத்3விஜானீஹி கிமேதத்3யக்ஷமிதி
  ததே2தி தத3ப்4யத்3ரவத்தஸ்மாத் திரோத3தே4 ||
தேவர்கள் இந்திரனை பார்த்து, “சக்தி பொருந்தியவரே நீங்களே சென்று அறிந்து வர வேண்டும். என்று வேண்டினார்கள்.  அவரும் அப்படியே ஆகட்டும் என்று கர்வத்துடன் யக்ஷனை அணுகினார். அதை நெருங்கியதும் யக்ஷன் மறைந்து விட்டான்.

மந்திரம்12
ஸ தஸ்மின்னேவாகாஶே ஸ்த்ரியாமாஜகா3ம்
  பஹுஶோப4மானாமுமாம்ஹைமவர்திம் தாம்
  ஹோவாச கிமேதத்3யக்ஷமிதி ||
இந்திரன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்.  யக்ஷன் மறைந்து விட்டான் என்று திரும்பி விடாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார்  அந்த நேரத்தில் ஒரு பெண் வடிவத்தில் பிரகாசமான தோற்றத்துடன் உமாதேவி காட்சியளித்தாள். அவளிடம் அந்த யக்ஷன் யார் என்று கேட்டார்.

———————————————————————————————————————————————-

காண்டம்– 4

மந்திரம்1
ஸஹ ப்3ரஹ்மேதி ஹோவாச ப்3ரஹ்மணோ வா
 ஏதாத்3விஜயே மஹீயத்4வமிதி ததோ ஹேவ
 விதாஞ்சகார ப்3ரஹ்மேதி ||
அவள் அந்த யக்ஷன் பிரம்மன் என்று கூறினாள்.  நீங்களடைந்த வெற்றி பிரம்மனுடைய பெருமையினால்தான் என்று கூறினாள்.  உமாதேவியின் உபதேசத்தின் மூலம் இந்திரன் புரிந்து கொண்டான்.

மந்திரம்2
தஸ்மாத்3வா ஏதே தே3வா அதி3தராமிவான்யான் தே3வான்
  யத3க்3னிர்வாயுரிந்த்ரஸ்தே ஹ்யேனன்னேதி3ஷ்டம் பஸ்பர்ஶு:
  தே ஹ்யேனத் ப்ரத2மோ விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷனுடன் தொடர்பு கொண்ட காரணத்தால்தான் இந்த தேவர்கள் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர்களாக கருதப்பட்டார்கள். அக்னி, வாயு, இந்திரன் இவர்கள் மட்டும்தான் யக்ஷனோடு மிக அருகில் தொடர்பு கொண்டார்கள். இதுவே பிரம்மன் என்று அறிந்து கொண்டார்கள்.

மந்திரம்3
தஸ்மாத்3வா இந்த்3ரோÅதிதராமிவன்யான் தே3வான் ஸ ஸ்யேனன்னேதி3ஷ்டம் யஸ்பர்ஶ ஸ ஹ்யேனத் விதா3ஞ்சகார ப்3ரஹ்மேதி ||
யக்ஷ ஸ்வரூபத்தை அறிந்ததால்தான், இந்திரன் மற்ற தேவர்களை விட உயர்ந்தவர் என்று கூறப்படுகிறது.  ஏனென்றால் அவர்தான் முதலில் யக்ஷனை பிரம்மனாக அறிந்து கொண்டார்.

மந்திரம்4
தஸ்யைஷ ஆத்ஶ: யதே3தத்3வித்3யுதோ வ்யத்3யுததா3 3
  இதின்ன்யமிமிஷதா3 3 இத்யதி4தை3வதம் ||
ஆதேஶ – உபதேசம்;
ஏஷ – பின்வருமாறு
உபாஸனம் – உப + ஆஸனம் = அருகில் இருத்தல்
யாரை நாம் தியானிக்கின்றோமோ அவரருகில். இருத்தல், மனதில் நினைத்து கொண்டு இருத்தல். ஒரே எண்ணமே மனதில் ஓடிக் கொண்டிருப்பதை கவனித்தல்.

உபே + ஆதானம் – எடுத்துக் கொள்ளுதல் – ஆலம்பன ஆதானம்
இஷ்ட தேவதையை தியானிப்பதற்கு லிங்கமாக ஒன்றை தேர்ந்தெடுத்து வைத்துக் கொண்டு அதன் மூலம் தியானம் செய்தல்
எதுவுமே சாதனமாக இருக்கும்போது துயரமடைவதில்லை, அதையே சாத்தியமாக கொண்டால் துயரத்தை அடைகின்றோம்.

முதல் தியானம்
ஒப்புமையற்ற பிரம்மத்திற்கு கற்பனையாக உவமை ஒன்று கொடுக்கப்-படுகிறது.  உபதேசமாக சொல்லப்படுகிறது.  மின்னலினுடைய பிரகாசத்தை ஈஸ்வரனுக்கு ஒப்பிடப்படுகிறது.  மின்னலானது தனது வெளிச்சத்தால் பொருட்களை காட்டிக் கொடுக்கின்றது.  அது மறைந்ததும் மீண்டும் இருள் சூழ்ந்து கொண்டு பொருட்கள் மறைந்து விடுகின்றது.  அதேபோல ஈஸ்வரன் ஒரு க்ஷணத்தில் ஸ்ருஷ்டியை தோற்றுவித்து பிறகு மீண்டும் தனக்குள் இழுத்துக் கொள்கிறார்.  இப்படி தியானித்தால் ஈஸ்வரனை அறியும் தகுதியை அடைவோம்.  இந்த உலகத்தில் காட்சியளிக்கும் எல்லாமே நிலையற்றவை, எனவே அதன் மீதுள்ள விவகாரத்தை விலக்கிவிட வேண்டும்.

இரண்டாவது தியானம்

இந்த உலகத்தை இருட்டாக்க வேண்டுமென்றால் நம் கண்ணை மூடிவிட்டால் போதும், கண் திறந்து விட்டால் இந்த உலகம் ஸ்ருஷ்டியாகின்றது, கண் மூடி விட்டால் அதுவே லயம் அடைந்து விடுகின்றது. எனவே கண் இமைத்தலை ஆலம்பனமாக கொண்டு ஈஸ்வரனை தியானிக்க வேண்டும்.

மந்திரம்5

அதா2த்4யாத்மம் யதே3தத்3 க3ச்ச2தீவ ச மனோÅனேன 

  சைத்து3யஸ்மரத்யபீ4க்ஷணம் ஸங்கல்ப: ||

அத்யாத்ம – ஜீவன் சம்பந்தப்பட்ட உபாஸனை.
நம்முடைய எண்ணங்களே ஆலம்பனம்.  நம்முடைய ஒவ்வொரு எண்ணங்களும் பிரம்மத்தை விளக்குகின்றது என்று தியானிக்க வேண்டும்.  ஜடமான எண்ணங்களை உணர்வுடன் இருப்பதாக எண்ணுவதற்கு காரணமாக பிரம்மன் இருப்பதை உணர வேண்டும்.  இதனால் நமது மனப்பக்குவம் அடைந்து பிரம்மத்தை அறிந்து கொள்ள உதவும்.  மனமானது எண்ணங்கள் மூலமாக சைதன்ய ஸ்வரூபத்தை அறிய உதவுகிறது.  புகையானது நெருப்பின் இருப்பைக் காட்டிக் கொடுப்பது போல மனதானது பிரம்ம ஞானத்தை அறிய உதவுகிறது.

மந்திரம்6
தத்3த4 தத்3வனம் நாம தத்3வின்மித்யுபாஸிதவ்யம்
  ஸ ய ஏததேவம் வேதா3பி4ஹைனம் ஸர்வாணி
  பூ4தானி ஸம்வாஞ்ச2ந்தி ||
பரஹ்மனை எல்லோராலும் அறியத்தக்கவர் என்று தியானிக்க வேண்டும்.  இதனால் மோட்சத்தை அடைய வேண்டும் என்ற ஆசை நம்மிடத்தில் உருவாகும்.  அதுவே நம்மை பிரஹ்மனை அடையும் செயலில் ஈடுபடுத்தும்.  இப்படியாக ஈஸ்வரனை பூஜிக்க.வேண்டும் என்று தியானித்தால் அவாந்திர-அமுக்ய பலனாக எல்லோராலும் வணங்கக்கூடியவராக இருப்போம்.
வனம் – போற்றதலுக்குரியவர்
நாம – பெயர் பெற்றவர்
உபாஸிதவ்யம் – தியானிக்கப்பட வேண்டும்.
யஹ ஏவம் ஏதத் வேத3 – யார் இவ்வாறு இதை தியானிக்கிறானோ
ஏனம் ஹ ஸ்ர்வாணி பூதானி – அவனை எல்லா ஜீவராசிகளும்
அபிஸம்வாச்சந்தி – பூஜிக்கும்

மந்திரம்7
உபநிஶத3ம் போ4 ப்3ரூஹித்யுக்தா த உபநிஷத்3
  ப்3ராஹ்மீம் வவ த உபநிஷத்3மப்3ரூமேதி ||
போ4 – குருவே!
உபநிஷத3ம் ப்ரூஹி இதி – உபநிஷத்தை எனக்கு கூறுங்கள் என்று சிஷ்யன் கேட்டான்.
தே உபநிஷத் உக்தா – உனக்கு உபநிஷத் என்னால் கூறப்பட்டது.
தே ப்ராஹ்மீம் வாவ – இதுவரை உனக்கு ப்ரஹ்மணை விளக்குகின்ற
உபநிஷதம் அப்ரூம இதி – உபநிஷத்தைத்தான் கூறினேன் என்று குரு முடித்தார்.

மந்திரம்8
தஸ்யை தபோ த3ம: கர்மேதி ப்ரதிஷ்டா:
  வேதா3: ஸர்வாங்கா3னி ஸ்த்யமாயதனம் ||
உபநிஷத்தை குருவின் மூலம் கேட்பதுதான் சரியான முறையில் அறிவை அடைய முடியும்.

தப:- தவம் –    நம்முடைய மனதை சத்துவ குணத்திற்கு உயர்த்த எடுக்கும் முயற்சி. இதை அடைவதால் ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ளும் மனதை அடைவோம்.  இப்படிபட்ட மனதினால் ஆத்ம ஞானத்தை அடைய முடியும்.  இதனால் சம்சாரத்தில் இருந்து விடுதலை அடைகிறோம்.

கர்ம           கர்ம யோகமாக செயல்களை செய்தல்

ப்ரதிஷ்டா     ஆதாரங்கள் – உபநிஷத்தை உபதேசமாக குருமுகமாக கேட்டல்

 

அந்த ப்ரஹ்ம ஞானத்திற்கு தவம், புலனடக்கம், கடமையை ஆற்றுதல் ஆகியவைகள் ஆதாரங்கள். வேதங்கள் அதனுடைய எல்லா உறுப்புக்கள்.  வாய்மை அதனுதைய இருப்பிடம் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

 

மந்திரம்9

யோ வை ஏதாமேவம் வேதா3பஹத்ய பாப்மானமனந்தே

  ஸ்வர்கே3 லோகே ஜ்யேயே ப்ரதிதிஷ்டதி ப்ரதிதிஷ்டதி ||

யஹ வா ஏவம் ஏதாம் வேத3 – யார் இவ்வாறு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ

பாப்மான அபஹத்ய – அவன் பாவங்களை நீக்கி

அனந்தே ஜ்யேயே – எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய

ஸ்வர்கே லோகே – மோக்ஷத்தில்

ப்ரதிதிஷ்டதி – நிலைபெறுகிறான்.

 

யார் இவ்வாரு இந்த உபதேசத்தை புரிந்து கொள்கிறார்களோ அவர் பாவங்கள் எல்லாம் நீங்கப்பெற்று எல்லையற்றதும், மிக உயர்ந்ததுமாகிய மோட்சத்தை அடைகிறான்.

 

ஓம் தத் ஸத்

ooo000ooo–

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading