ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் – ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்–

ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் அத்வைத கொள்கையை இந்த  பாரத தேசமெங்கும்  நிலை நிறுத்தினார். பற்பல இடங்களில் பரவி கிடந்த நமது சனாதன தர்மத்தை அவர் ஆறு மதங்களாக தொகுத்து வழிமுறைப்படுத்தினார். இந்த சனாதன தர்மத்திற்கு மேலும் வலுவூட்டும் வகையில் பல துதிகளையும் இயற்றினார். அவற்றுள், பலராலும் தினந்தோறும் பாராயணம் செய்யப்படும் மிகவும் பிரசித்தி பெற்ற துதி “ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம்” ஆகும்.

முதலில் இந்த துதியின் பெயர் காரணத்தை அறிவோம். வடமொழியில் ‘கரம்’ என்றால் ‘கை’ என்று பொருள் (இன்று நடைமுறைத் தமிழிலும் இச்சொல் கை என்ற பொருளிலேயே வழங்கப்படுகிறது). ‘அவலம்ப’ என்றால் ‘ஆதாரம்’ அல்லது ‘தாங்குதல்’ என்று பொருள். ‘கராவலம்பம்’ என்றால் ‘நம்மைக் கை கொடுத்துத் தாங்குதல்’ அல்லது ‘நமக்குக் கை கொடுத்து உதவுதல்’ என்று பொருள் கொள்ளலாம்.

இந்த துதியில் ஆதிசங்கரர், இந்த சம்சாரத்தில் விளையும் துன்பங்களை எடுத்துக் கூறி, பகவான் ‘ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மரை’ இந்த சம்சாரத் தளையிலிருந்து காப்பாற்ற தனக்குக் கை கொடுத்து உதவும்படி வேண்டுகிறார். இதன்  மூலம், ஆதி சங்கரர் நமக்கெல்லாம் பிரதிநிதியாக பகவானிடம் வேண்டிக் கொள்கிறார்.

துதி பிறந்த வரலாறு:
இந்த துதி பிறந்ததற்கு காரணமாக ஆதிசங்கரரின் வாழ்விலிருந்து இரு வேறு நிகழ்ச்சிகள் பெரியோர்களால் வழங்கப்படுகின்றன. இவை இரண்டையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

1. மண்டன மிஸ்ரருடன் வாதிட்டது, பின்னர் கூடு விட்டுக் கூடு பாய்ந்தது:
அத்வைத கொள்கையை நிலை நிறுத்தும் பொருட்டு, ஆதிசங்கரர் பலருடன் (மற்ற கொள்கைகளை பின்பற்றுவோருடன்) வாதம் புரிந்து அவர்களை வென்றார். அவற்றுள் தலையானவர் பிற்காலத்தில் ‘சுரேஷ்வராச்சார்யார்’ என்று பெயர் பெற்று விளங்கிய மண்டன மிஸ்ரர் ஆவார். இவர் பூர்வ மீமாம்சை என்ற கொள்கையைச் சார்ந்திருந்தார்.

ஆதிசங்கரர் இவருடன் அத்வைதமே சிறந்த கொள்கை என்று வாதிட வந்தார். இந்த வாதத்தின் பொழுது, மண்டன மிஸ்ரரின் மனைவியான உபயபாரதி நடுவராக இருந்தார்.

நன்கு கற்றுத் தேர்ந்திருந்ததோடு அல்லாமல், ஆதிசங்கரர் மற்றும் தமது கணவர் வாதிடும் பொழுது அதற்கு நடுவராக இருந்தும், பின்னர் ஆதிசங்கரருடனேயே வாதிடும் அளவிற்கு நமது சனாதன தர்மத்தின் பெண்கள் அன்று விளங்கினர். ஏதோ, நமது மதத்தில் பெண்களுக்கு உரிமைகள் இல்லை,அவர்களை அடுப்படியில் வைத்து அடிமைப் படுத்த வேண்டும் என்று மனு ஸ்மிருதி கூறுவதாகப் பிதற்றுபவர்கள் இதை இருமுறை படிக்கட்டும். 

வாதத்தில் மண்டன மிஸ்ரர் தோல்வி  அடைந்தார். அன்றைய பழக்கத்தின் படி அவர் ஆதிசங்கரரைத் தமது குருவாக ஏற்று துறவறம் பூண வேண்டும். தனது கணவன் துறவறம் ஏற்பதை தாங்க வொண்ணாத உபயபாரதி, ‘கணவனும் மனைவியும் இணை பிரியாதவர்கள். ஒருவரை மட்டும் வாதத்தில் வெல்வது ஏற்க முடியாது. எனவே, தன்னையும் வாதத்தில் வெல்ல வேண்டும்’ என்று ஆதி சங்கரரிடம் கூறினாள்.

இதை ஏற்ற சங்கரர், உபயபாரதியுடன் வாதம் புரிந்தார். ஆதிசங்கரரை மறை ஞானத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி அவரிடம் கணவன்-மனைவி சேர்ந்து வாழும் இல் வாழ்க்கையைப் பற்றிய கேள்விகளைக் கேட்க, துறவியான அவரால் அதற்கு பதில் உரைக்க இயலவில்லை (அனைத்தையும் அறிந்த அவருக்கு இதற்கான பதில் தெரிந்திருப்பினும், தமது துறவறத்திற்கு களங்கம் வரும் என்பதால் நேரடியாக பதில் உரைப்பதைத் தவிர்த்தார் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும்).

இதற்கு பதில் கூறுவதற்கு தமக்கு ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ஆதிசங்கரர், தான் இல் வாழ்க்கையை மேற்கொண்ட ஒரு மனிதனின் உடலுக்குள் புகுந்து இதை அறிவதே சிறந்ததாகும் என்று தீர்மானித்தார். அவ்வாறே, வேட்டைக்கு வந்து அங்கு உயிர் நீத்த ஒரு அரசனின் உடலில் கூடு விட்டுக் கூடு பாய்ந்து உட்புகுந்தார். தமது சீடர்களிடம், தனது உடலைப் பாதுகாக்குமாறு கூறிவிட்டு அரசனின் அரண்மனைக்குச் சென்றார்.

அந்த அரசனோ ஒரு கொடுங்கோலன்;  அவனது ஆட்சியில் மழையின்றி, வளமின்றி அவன் நாடு தவித்தது (திருக்குறள் 559: முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல்). ஆதிசங்கரர் அந்த நாட்டில் கால் வைத்ததுமே, மழைப் பொழியத் துவங்கியது, வளம் பெருகியது. இந்த மாற்றங்களையும், தம்முடன் பழகுவதில் உள்ள மாற்றங்களையும் உணர்ந்த அந்நாட்டின் அரசி ஐயம் கொண்டாள்.

தமது அமைச்சருடன் ஆலோசித்த அவள், வந்திருப்பது தன் கணவன் அல்ல, வேறு ஏதோவொரு சிறந்த ஆன்மா; இவர் தமது  நாட்டை விட்டு நீங்கினால் மீண்டும் பஞ்சமும்,  துன்பமும் ஏற்படுமென்று அஞ்சினாள். எனவே, மந்திரியும், அரசியும் ஆதி சங்கரரை அரசனின் உடலிலேயே இருக்க வைப்பதற்கு திட்டம் தீட்டினர். அனைத்துப் படை வீரர்களையும் அழைத்து, நாட்டில் ஏதோவொரு துறவியின் உடல் இருந்தால், அதை உடனே எரித்துவிடுமாறு  கூறினர்.

அதன்படி, வீரர்களும் ஆதிச ங்கரரின் உடலுக்குத் தீ வைத்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் உடனே அரசனின் உடலை விடுத்து தன்னுடலுக்குள் புகுந்தார். ஆனால், அதற்குள் தீயானது அவரது கைகளை எரித்து விட்டது. தமக்கு ‘கரங்கள்’ (கைகள்) கொடுத்தருள, ஆதிசங்கரர் பகவான் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரிடம் வேண்டிய துதியே இந்த ‘கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்பது முதல் வரலாறு.

இந்த துதியின் முடிவில் கைகள் கிடைக்கப் பெற்ற ஆதிசங்கரர் உபயபாரதியிடம் வாதம் செய்ய  சென்றார். இனி தன்னால் அவரை வாதத்தில் வெல்ல முடியாது என்று உணர்ந்த உபயபாரதி வாதம் புரியாமலேயே தன் கணவர் துறவறம் பூண அனுமதி அளித்தார். அந்த உபய பாரதியே, சிருங்கேரி சாரதா பீடத்தில் இருக்கும் ஸ்ரீ சாரதாம்பிகை என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது.

2. காபாலிகன் நரபலி கொடுக்க முனைந்தது:
ஒருமுறை, ஆதிசங்கரர் அஹோபிலத்தை அடுத்த (சில இடங்களில் ஸ்ரீசைலத்தை அடுத்த) காட்டில் தவம் புரிந்து வந்தார். அவரது உயரிய லட்சணங்களைக் கண்ட ஒரு காபாலிகன் அவரைக் காளிக்கு நர பலி கொடுக்க முடிவு செய்தான் (வீரத்தில் சிறந்த அரசர்களையோ அல்லது துறவில் சிறந்தவர்களையோ நர பலி கொடுத்தால் சிறந்த பலன்கள் கிடைக்குமென்பது அவர்களது நம்பிக்கை).

அவரை தன்னால் கொண்டு செல்ல இயலாது என்று உணர்ந்த அவன், அந்த வேண்டுதலை அவரிடமே கூறினான். தன்னால் பிறருக்கு நன்மை விளையுமென்பதால் ஆதிசங்கரர் அதற்கு சம்மதித்தார்.

தனது பக்தன் துன்பப்படுவதை பொறுக்காத நரசிம்மர் ஆதி சங்கரரின் சீடர்களில் ஒருவரான பத்ம பாதருக்குள் (இவரை சனந்தனர் என்றும் அழைப்பார்கள்) ஆவேசித்து, அந்த காபாலிகனைக் கொன்று சங்கரரைக் காத்தார்.

அவ்வாறு தன்னைக் காத்த நரசிம்மரை போற்றி ஆதிசங்கரர் இயற்றியதே இந்த கராவலம்ப ஸ்தோத்திரம் என்பது  இரண்டாவது வரலாறு.

வரலாறு எவ்வாறு இருப்பினும், பகவானின் குணங்களைப் போற்றியும், இந்த சம்சாரத் தளையிலிருந்து விடுதலை வேண்டியும் ஆதிசங்கரர் இயற்றிய இந்த அரிய துதி

————–
ஸ்ரீமத் பயோநிதி நிகேதன சக்ர பாணே 
போகீந்த்ர போக மணி ரஞ்சித புண்ய மூர்த்தே |
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத 
லக்ஷ்மி நரஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் || (1)
ஸ்ரீமத் – செல்வம் நிறைந்த, பயோநிதி – பாற்கடலில், நிகேதன –இருக்கின்ற, சக்ரபாணே – (சுதர்சனம் என்னும்) சக்கரத்தை கையில் ஏந்தியவரே, போகீந்த்ர – அரவங்களின் அரசன், போக மணி – (அரவங்களின் தலையில் இருக்கும்) நாக மணி, ரஞ்சித – ஒளியினால் ஒளியூட்டப்பட்ட, புண்ய மூர்த்தே – நற்கருமமே வடிவானவரே, யோகீச – யோகங்களுக்குத் (யோகிகளுக்கு) தலைவரே, சாஸ்வத – என்றென்றும் நிலைநின்று இருப்பவரே, பவாப்தி – பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங் கடலை, போத – கடக்க உதவும் தோணி போன்றவரே, லக்ஷ்மி நரசிம்ம – திருமாமகள் துணைவரே நரசிம்மரே, மம – எனக்கு, தேஹி –அருளுங்கள், கராவலம்பம் – கைக் கொடுத்து.
செல்வங்கள் சேர் பாற்கடலில் இருப்பவரே, கையில் சுதர்சனம் என்னும் சக்கரப் படையை தாங்கி யுள்ளவரே, அரவங்களின் அரசனான ஆதிசேடன் தலையிலிருக்கும் நாக மணி உமிழும் ஒளியினால் ஒளியூட்டப்படுபவரே, நற்கருமமே  வடிவானவரே, யோகங்களுக்கும், யோகிகளுக்கும் தலைவரே, என்றென்றும் நிலை நின்று பிறப்பு, இறப்பு என்னும் இந்த பிறவிப் பெருங்கடலை கடக்க உதவும் தோணி போன்றவரே, திருமாமகள் தன்னோடு பிரியாதிருக்கும் நரசிம்மரே, எனக்கு கைக் கொடுத்து அருளுங்கள்!!!
இங்குள்ள (இந்த சம்சாரத்தில் உள்ள) செல்வங்கள் நிலையற்றவை; அங்குள்ள செல்வங்களுடன் ஒப்பிடுகையில் இவை வெறும் தூசுக்கு நிகரானவை. எனவே, செல்வம் சேர் பாற்கடலில் இருப்பவரே என்று அழைக்கிறார்.
பகவான் சக்கரம் (சுதர்சனம்), சங்கு (பாஞ்சசன்யம்), கதை (கௌமோதகம்), வாள் (நந்தகம்) மற்றும் வில் (சார்ங்கம்) ஆகிய ஐந்து ஆயுதங்களை ஏந்தியிருக்கிறார். அவர் நமது எதிரிகளை விரைந்து வந்து ஒட்டிவிடுவார் என்பதால் சக்கரம் ஏந்தியவரே என்று அழைக்கிறார் (இங்கு சக்கரம் மற்ற நான்கு ஆயுதங்களுக்கும் பிரதிநிதியாகும். சக்கரம் என்று சொல்லும் பொழுது ஐந்து ஆயுதங்களையும் சேர்த்துக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்).
நாம் அறியாமை என்னும் இருளால் சூழப்பட்டிருக்கிறோம். அவரோ, அரவின் மணியில் ஒளி வீசுகிறார். நமது அறியாமை இருளை அகற்றும் ஒளியாகவும் உள்ளார்.
நாம் நல்ல, மற்றும் தீய கருமங்களினால் தீண்டப்பட்டிருக்கிறோம். இவற்றின் வாயிலாகத் தான் நமக்கு இந்த பிறவியே ஏற்படுகிறது. அவரோ, நற்கருமமே வடிவானவர். நமது கர்ம பலன்களை அடியோடு அறுத்து நம்மைக் காப்பார்.
கர்ம, ஞான, பக்தி மற்றும் சரணாகதி ஆகிய வழிமுறைகளைக்  (யோகங்களைக்) கடைப்பிடிப்பதன் மூலம் நாம் அவரை அடைய முடியும். ஏனெனில், அவர் அனைத்து யோகங்களுக்கும், அதை முறையாகக் கடைப்பிடிக்கும் யோகிகளுக்கும் (அவர்களை) ஆணை யிட்டு வழி நடத்தும் தலைவராக உள்ளார்.
இத்தகைய நற்குணங்கள் நிறைந்த நரசிம்மப் பெருமான், என்றோ ஒரு குறிப்பிட்ட காலத்தில் தானே அவதரித்தார். அவர் எவ்வாறு இன்று நம்மைக் காப்பார்? என்ற ஐயம் எழுந்து விடாமல் இருக்க, ‘என்றென்றும் நிலை நின்று இருப்பவர்’ என்று குறிப்பிடுகிறார்.
தொடக்கமே காண முடியாத அனாதி காலமாய் சேர்த்து வைத்திருக்கும் கர்மங்களின் படி நாம் மீண்டும் மீண்டும் இந்த பிறவிப்பெருங்கடலில் பிறக்கிறோம் (இறக்கிறோம்). இந்த தொடர்ச்சியிலிருந்து பகவான் ஒரு தோணியாய் வந்து நம்மைக் கரையேற்றுகிறார்.
அத்தகைய பெருமானை நாம் நேரடியாக சென்று வேண்டுவதை விட, கருணையே வடிவான திருமகளை முன்னிட்டு வேண்டினால், வேண்டுவது கிடைப்பது திண்ணம். பெருமான் கருணையற்றவர் அல்லர். எனினும், கணக்கற்ற பிறவிகள் தோறும் நாம் அவர் கூறியதை கேட்காமல் கர்ம வினைகளால் உந்தப்பட்டு பல பாவங்களை சேர்த்திருக்கிறோம். எவ்வாறு தவறிழைத்த ஒரு குழந்தை தன் தாயை முன்னிட்டுக் கொண்டு தந்தையிடம் மன்னிப்பு கேட்குமோ, அவ்வாறே நாமும் திருமகளை முன்னிட்டுக் கொண்டு இறைவனை அடிபணிவதே சிறந்தது. எனவே, நரசிம்மரை மட்டும் வேண்டாது, திருமகளையும் சேர்த்து ‘லக்ஷ்மி நரசிம்மரின்‘ அடி பணிகிறார்  ஆதி சங்கரர்.
இந்த முதல் துதியிலேயே, ஆதிசங்கரர்  தான் வேண்டுவது தனது உடலில் உள்ள கையை அல்ல; மாறாக, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்து விடுதலையையே என்பதை தெளிவாகக் கூறுகிறார்.
இந்த துதி முழுவதும், நம் கர்ம வினை காரணமாக பிறக்கும் இந்த சம்சாரத்தை கொடிய மிருகங்கள் நிறைந்த காடாகவும், கொடிய நச்சு மரமாகவும், நஞ்சினை உமிழும் அரவாகவும், நெருப்பாகவும், நீர்ச் சுழல்கள் நிறைந்த கடலாகவும் உருவகப்படுத்தி  இதில் உள்ள துன்பங்களை நமக்கு சுட்டிக் காட்டுகிறார்.
————–

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading