ஸ்ரீ திரு மாலை-17–விரும்பி நின்று ஏத்த மாட்டேன் –ஸ்ரீ P.B.A. ஸ்வாமிகள் அருளிய -வியாக்யானம் –

தரித்ரனுக்கு நித்ய பாயஸம் கிடைத்தாற்போலே, ஒருவகை யோக்யதையு மில்லாத
கல்நெஞ்சனான எனக்கு
அழகிய மணவாளன் ஸேவை ஸாதிக்கப் பெற்ற பாக்கியத்தை நான்
என்னவென்று சொல்லுவேன் என்று தடுமாறுகின்றனர்.

விரும்பி நின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்பு போல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

பதவுரை

விரும்பி நின்று–ஆதாரத்தோடே ஒருபடிப்பட நின்று
ஏத்த மாட்டேன்–ஸ்தோத்ரம் பண்ண மாட்டாதவனா யிரா நின்றேன்;
விதி இலேன்–(கை கூப்புதல் முதலிய) காயிக வ்யாபாரங்களும் செய்யப் பெறாதவனாயிரா நின்றேன்,
மதி ஒன்று இல்லை–(‘ஈச்வரன் ஒருவன் உண்டு என்கிற) ஒரு அறிவும் (எனக்கு) இல்லை;
(இப்படிப்பட்ட என்னுடைய)
இரும்பு போல் வலிய நெஞ்சம்–இரும்பைப் போல் கடினமான கல் நெஞ்சானது
இறை இறை உருகும் வண்ணம்–கொஞ்சம் கொஞ்சமாக உருகும்படி;
சுரும்பு அமர்-வண்டுகள் பொருந்திய
சோலை சூழ்ந்த–சோலைகளாலே சூழப்பட்ட
மா அரங்கம்–மாட்சிமை தங்கிய ஸ்ரீரங்கத்தை
கோயில் கொண்ட–இருப்பிடமாகத் திரு வுள்ளம் பற்றின
கரும்பினை–பரம யோக்யனான எம்பெருமானை
என் கண் இணை–எனது இரண்டு கண்களும்
கண்டு கொண்டு –பார்த்த வண்ணமாய்
களிக்கும் ஆறு ஏ –மகிழ்ச்சி யடைகிற விதம் என்னே?
(என்று ஆச்சர்யப்படுகிறபடி.)

விளக்க உரை

மனஸ்ஸு, வாக்கு, காயம் என்ற மூன்று வகை யுறுப்புகளில் ஒன்றினாலும்
நான் பகவத் விஷயத்தில் அந்வயிக்கப் பெறவில்லை;
சிறிது காலமாகிலும் ஒருபடிப்பட நிலைத்து நின்று உண்மையான அன்புடன் ஸ்தோத்ரஞ் செய்யுமவனல்லேனாதலால்
வாய் படைத்த பயன் பெற்றிலேன்;

(“நின் தலையைத் தாழ்த்து இருகை கூப்பென்றால் கூப்பாது பாழ்த்த விதி” என்றபடி)

ஒரு அஞ்சலியும் நேராகச் செய்யமாட்டாதவனாகையால் காயம் படைத்த பயனும் பெற்றிலேன்;
எம்பெருமானுடைய ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி இவற்றைப்பற்றி விஸேஷமாகச் சிந்திக்க மாட்டாமற் போனாலும்
‘எம் பெருமான் ஒருவன் உண்டு’ என்று அவனுடைய ஸத்தையையாகிலும் சிந்திக்கலாமே;
அதுவும் சிந்தித்திலேனாதலால் மனம் படைத்த பயனும் பெற்றிலேன்.

இனி மேலாவது மநஸ்ஸைத் திருத்திக்கொள்ளக்கூடுமோ வென்று பார்த்தாலும்
அதற்கும் யோக்யதையில்லாதபடி மனம் கல்லாய்க் கிடக்கிறது.

(“இரும்புபோல் நெஞ்சம்” என்னுமளவே போதுமாயிருக்க,
‘வலிய’ என்று விபேஷித்ததற்குக் கருத்து யாதெனில்;
“இரும்புபோல்”என்று சொன்னவுடனே நமது நெஞ்சுக்கு இரும்பை உவமை கூறியது ஒக்குமாவென்று ஆராய்ந்தார்;
இரும்பை நெருப்பிலே காய்ச்சி நிமிர்த்துக் கொள்ளலாம்;
நமது நெஞ்சு ஒருபடியாலும் ஸர்வசக்தனாலும் நிமிர்த்தமுடியாதிருத்தலால் இவ்வுபமாநம் ஒவ்வாது
வேறு எவ்வுபமாநமும் எலாது என்றெண்ணி, வலிய என்றார்.
ஸாமாந்யமாக, ‘கடினமான நெஞ்சு’ என்னலாமேயொழிய,
இன்னதுபோல் கடினமானதென்று சொல்ல முடியாதென்க.)

இத்தகைய கல் நெஞ்சம் கரையும்படி யாயன்றோ எம்பெருமான் கோயிலிலே கண் வளர்ந்தருள்வது!.
சோலைவாய்ப்பு அமைந்த அரங்கமாநகரில் அமர்ந்த நாதனை என் கண்கள் கண்டு
களிக்கும் விதத்திற்கு நான் என்ன பாசுரமிடுவேனென்கிறார்.

உபநிஷத்திலே “ ரஸோ வை ஸ:” என்று எம்பெருமானை ரஸமயனாக ஓதியிருப்பதால்
இவரும் (‘கரும்பு போன்றவனை’ என்னாமல்) கரும்பினை என்று ஸாக்ஷாத் கரும்பாகவே கூறுகின்றார்.

உருகும் வண்ணம் என்பது –
கோயில் கொண்ட என்பதனொடு அந்வயிக்கும் ;
கண்டு கொண்டு என்பதனோடு இசையுமென்பாருமுளர்.

——————————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading