வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின் பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.
பதவுரை
அரங்கமாநகருளானே!-;
வெறுப்பொடு–(பகவத்விஷயத்தைகு கேட்கவும் பொறாத) வெறுப்போடு கூடிய
சமணர் –க்ஷபணர்களும்
முண்டர் –சைவர்களும்
விதிஇல் –பாக்கியஹீனரான
சாக்கியர்கள்–பௌத்தர்களும்
நின்பால்–உன் விஷயத்திலே
பொறுப்பு அரியனகள்–பொறுக்க முடியாத சில வார்த்தைகளை
பேசில்–சொல்லுவார்களாகில்
அதுவே நோய் ஆகி–அந்த நிந்தைகளைக் கேட்டதே வியாதியாய்
போவது–முடிந்து போவது
(உத்தமம் அங்ஙனன்றியே)
எனக்கு –(பகவத் விரோதிகளின் ஸத்தையையும் பொறாத) எனக்கு
குறிப்பு அடையும் ஆகில்–இலக்கு வாய்க்குமாகில்
(அதற்கு மேல்)
கூடுமேல்–(எனக்கு சக்தியும்) கூடுமாகில்
ஆங்கே–உன்னை நிந்தித்த அவ்விடத்திலேயே
தலையை அறுப்பதே–அவன் தலையை அறுத்துத் தள்ளுகையே
கருமம் கண்டாய் –செய்யத் தக்கது காண்
விளக்க உரை
வெறுப்போடு-
ஒரு காரணத்தை முன்னிட்டன்றியே நிஷ்காரணமாக எம்பெருமானுடைய பெருமை என்றால்
சிவீலென்று திரஸ்கரிக்கையாகிற வெறுப்போடுகூடிய புறச்சமயிகள்,
ஸாத்விகர் காது கொடுத்துத் கேட்கப்பெறாத உன் விஷயமான தூஷணங்களைப் பேசும்போது
அப்பேச்சுக்கள் ஒரு ஸாத்விகன் காதில் விழுந்தால்,
அவன்றான் மெய்யே ஸாத்விகனாகில் அந்த க்ஷணத்திலேயெ தன்னடையே உயிர் துறக்க வேணும் என்கிறார்-
முன்னிரண்டடிகளால்.
உயிர்துறப்பதறகு நோய் முதலிய சில வியாஜங்கள் நேரவேண்டுமே என்று சிலர் நினைக்கக் கூடுமென்றெண்ணி
“போவதே நோயதாகி” என்கிறார்.
பகவந் நிந்தையைக் கேட்பதற்கு மேற்பட்ட நோய்கூட உலகத்திலுண்டோ? என்பது கருத்து.
விஷ்ணு த்வேஷிகள் சொல்லுகிற தூஷணங்களை அநுவதிக்க வேண்டுமானால்
அவற்றைத் தாம் முன்னம் நெஞ்சால் நினைத்தாக வேண்டு மாதலால்
அங்ஙன் நினைப்பதையும் கொடிய பாவமாகக் கருதி “பொறுப்பரியனகள்” என்று ஸமுதாயமாகச் சொல்லுகிறார்.
“சமணர்முண்டர்” –
சமணராகிய முண்டர் என்றும் உரைப்ப.
விதியில்-
“தைவம் திஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸ்த்ரீ நியதிர் விதி:” என்ற அமரகோஸத்தின் படி-
விதியாவது-பாக்யம், – அத்ருஷ்டம்
“அன்பாக்கியேத்தி அடிமைப்பட்டேனுனக்கு, என்பாக்கியத்தாலினி” என்றபடி
எம்பெருமான் பெருமையைப் பேணுவதற்கு எவ்வளவோ அத்ருஷ்டம் வேண்டுமாதலால்
அப்படிப்பட்ட அத்ருஷ்டமற்றவர்கள் சாக்கியர் என்கிறார்.
“போவதே நோயதாகி” என்பதற்கு
வேறு வகையாகவும் பொருள் கூறலாம்.
“குரோர்யத்ர பரிவாதோ நிந்தாவாபி ப்ரவர்த்ததே, கர்ணௌ தத்ர பிதாதவ்யௌ கந்தவ்யம் வா ததோந்யத;
“(பெரியோரைப்பற்றி நிந்தை நடக்குமிடத்தில் காதுகளை மூடிக் கொள்வதாவது, சடக்கென அப்பால் செல்வதாவது செய்யவேணும்)
என்ற சாஸ்திரப்படி விலகிச்செல்வது நன்று என்கிறாராகவுமாம்.
தூஷணை கேட்கப்பொறாமல் முடிந்துபோனாலும் விலகிப்போனாலும்
தூஷித்தவனுக்கு என்ன பிராயச்சித்தம் செய்தாயிற்றென்று ஒரு கேழ்வி பிறக்கக்கூடுமாதலால்,
அவ்விஷயத்தில் தம்ஸித்தாந்தத்தை அருளிச்செய்கிறார்-
குறிப்பெனக்கு இத்யாதியால்.
குறிப்பு-லக்ஷ்யம்
அதாவது
தூஷித்த பேர்வழி. அவன் தூஷித்து விட்டு ஓடிப்போய்விடாமல் என் முன்னே நிற்பானாகில் என்றபடி.
கூடுமேல்-
அவன் முன்னே நின்றுகொண்டிருந்தாலும் அவனை அஞ்சாது கொலைசெய்யும்படியான வல்லமை தனக்கு வேணுமே;
தாம் ஒருவனைக் கொல்ல முயன்று அவனால் தாம் கொலையுண்பாருமுண்டே;
அங்ஙனன்றி, நினைத்தபடி செய்து நிறைவேற்றவல்ல வல்லமையும் வாய்க்குமாகில் என்றபடி.
மரணதண்டனையானது ஒரு கொலை செய்தவர்களுக்குக் சிக்ஷையாக அரசாங்கத்தாரால் விதிக்கப்பட்டிருக்கிதே யொழிய,
பகவந் நிந்தை பண்ணினவர்களுக்குக் கொலையை ஸிக்ஷையாக எங்கும் விதித்ததில்லை;
காமகாரத்தாலே விதியை மீறிக் கொலைசெய்யில் தமக்கு அநர்த்தமேயன்றோ பலிக்கக்கூடுமென்று
ஸங்கித்துக் கூடுமேல் என்கிறார்;
அதாவது-
அரசாங்கத்தாரும் நமது ஸித்தாந்தத்திற்கு உடன்படக்கூடுமேல் என்றபடி என்பதாக
இக்காலத்தோர் பொருள் கூறுப.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply