நமனும் முற் கலனும் பேச நரகில் நின் றார்கள் கேட்க
நரகமே சுவர்க்க மாகும் நாமங்க ளுடைய நம்பி
அவனதூ ரரங்க மென்னாது அயர்த்து வீழ்ந் தளிய மாந்தர்
கவலை யுள் படுகின் றாரென் றதனுக்கே கவல்கின் றேனே.
பதவுரை
நமனும் –யமதர்மராஜாவும்
முற்கலனும்–முத்கல பகவானும் ஒருவர்க்கொருவர்
பேச–வார்த்தை யாடிக் கொண்டிருக்க
நரகில் நின்றார்கள் கேட்க –அந்த வார்த்தை நரகத்திலே பாப பலன்களை அனுபவிக்கிற பாவிகளின் காதில் பட்டவளவிலே
நரகமே–அந்த நரகந்தானே
சுவர்க்கம் ஆகும்–ஸ்வர்க்க லோகமாய்விட்டது என்று சொல்லுதற்கீடான மேன்மை வாய்ந்த
நாமங்கள் உடைய–திருநாமங்களை யுடைய
நம்பி அவனது–பரிபூரண எம்பெருமானுடைய
ஊர்–திவ்யதேசம்
அரங்கம் என்னாது–திருவரங்கமாகும் என்று சொல்லாமல்
அளிய மாந்தர்–அருமந்த மனுஷ்யர்கள்
அயர்ந்து -(ஸ்வரூபத்தை) மறந்து
வீழ்ந்து –(விஷயாந்தரப் படுகுழியிலே) விழுந்து
கவலையுள் படுகின்றார் என்று–துக்கத்திலே அகப்படுகிறார்களேயன்று
அதனுக்கே–அதற்காகவே
கவல்கின்றேன்–நான் கவலைப்படா நின்றேன்.
விளக்க உரை
திருநாமத்தின் பெருமையை நான் அறியாதிருந்தேனாகில் ஸம்ஸாரிகளைப் பற்றிக் கவலைப் படமாட்டேன்
மநுஷ்ய ஜந்மம் எளிதிற் பெறக்கூடுமாயின் நான் கவலைப்படமாட்டேன்;
இவர்கள் உஜ்ஜீவநத்திற்காகச் செய்யவேண்டிய காரியம் மிகப்பெரியதாயின் கவலைப்படமாட்டேன்.
திருநாமங்களின் மேன்மையோ சொல்லுந்திரமல்ல
பெறுதற்கு அரிதான மானிடஜந்மத்தையோ இவர்கள் பெற்றிருக்கிறார்கள்;
இவர்கள் செய்யவேண்டிய காரியமோ மிக அற்புதமானது-
‘எம்பெருமான் ஊர் திருவரங்கம்’ என்றிவ்வளவே சொல்ல வேண்டுமத்தனை இங்ஙனிருக்கவும் இவர்கள்
விஷயாந்தரப் படுகுழியிலே தலைகீழாக விழுந்து வருந்துவர்களாகில் நான் எங்ஙனே கவலைப்படாதிருக்கமுடியும்?
இவர்கள் சிறிது திருந்தினராகில் என் அநுபவத்திற்கு எவ்வளவோ துணையாகுமே! என்கிறார்.
முத்கலோபாக்கியாநம் ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே தொண்ணூறாவது அத்யாயத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன் சுருக்கம் வருமாறு:-
முத்கலனென்பவன் பெரும்பாவிகளில் தலைவன்;
அவன் ஒருநாள் கோதாநம் பண்ணும் போது ‘க்ருஷ்ணாய’ என்று சொல்லி தாநஞ்செய்தான்.
பின்பு அவன் மாண்டபிறகு யமகிங்கரர் வந்து நெருங்கி அவனை யமன் பக்கலிலே கொண்டு செல்ல,
யமன் இவனை எதிர்கொண்டு ஸம்பாவனை செய்தான்;
அது கண்ட முத்கலன், “உன்னுடைய படர்கள் என்னை நெருங்கிக் கொண்டு வாரா நிற்க,
நீ என்னை கௌரவிப்பதற்கு என்ன காரணம்?” என்று கேட்க
“உன்னுடைய மேன்மையை அவர்களும் அறிந்திலர், நீயும் அறிந்திலை,-
க்ருஷ்ண நாமத்தை நீ ஒருநாள் சொன்னாய்காண்!” என்று யமன் அதனைப் புகழ்ந்துகூற,
இப்படி ப்ரஸக்தாநுப்ரஸக்தமான இந்த ஸம்வாதம் நரகாநுபவம் பண்ணுகிறவர்களுடைய காதிலே விழுந்தவாறே
அந்த நரகந்தானே துக்காநுபவ நிலமாயிருக்க நிலைமாறி ஆநந்தாநுபவ நிலமாய் விட்டதென்றால்
இத்திருநாமத்தின் வைபவம் எப்படிப்பட்ட தாயிருக்கவேணும்?
“என்னை நீ ஸத்கரிப்பதற்குக் காரணமென்ன?” என்று முத்கலன் கேட்க,
“முன்பு நீ க்ருஷ்ணநாமம் சொன்னாய்” என்று யமன் உத்தரமுரைத்த இவ்வளவேயாய்த்துப் பிறந்தது;
யமன் தனக்குப் பாவநமாக அத்திருநாமத்தை உச்சரித்தவனல்லன்;
முற்கலன் ப்ரார்த்திக்க அவனுக்கு உபதேசித்தவனுமல்லன்;
நரகாநுபவம் செய்கிறவர்களின் காதிலே இது விழுந்து அவர்கள் உய்வுபெறவேணுமென்று நினைத்துச் சொன்னவனுமல்லன்;
இனி இதனைக் கேட்டவர்களோ பாபம்பண்ணுகிற ஸமயத்திலே அநுதபித்து மீண்டு பிராயச்சித்தம்
செய்துகொள்ள க்கூடிய காலத்திலே கேட்டவர்களல்லர்;
பாபத்தினுடைய பலன்களை அநுபவிக்கும் போதாயிற்றுக் கேட்டது.
அப்போது தானும் இச்சையோடு கேட்டாருமல்லர்; யாத்ருச்சிகமாகத் திருநாமம் செவிப்பட்டவித்தனையே:
இப்படிப்பட்ட திரு நாமமே இவ்வளவு பெருமையுடைத்தானால், பின்னை என் சொல்லவேண்டும்?
பாபபலாநுபவம் பண்ணும்போது யாத்ருச்சிகமாகத் திருநாமம் செவிப்பட்டாற் போலே
பாபம் செய்யும்போது ஒரு தடவையாவது திருநாமம் செவிப்பட்டிராதா?
அதுகொண்டு அவன் நற்கதிபெறலாமன்றோ என்னில்;
அப்போது விஷய ப்ராவண்யத்தால் வந்த செருக்கர்லே இவையொன்றும் செவிப்படா துக்காநுபவம் பண்ணும்
சமயத்தில் தான் “நல்வார்த்தை சொல்வார் ஆரேனும் கிடைப்பாரோ?” என்று
எதிர்பார்க்கிறவர்களாகையாலே செவிப்படும் என்ப.
நரகமே சுவர்க்கமாகும்-
நரகத்தையே ஸ்வர்க்கமாக்கவல்ல என்றபடி.
பாபஸ்தாநம் புண்யஸ்தாநமாக உடனே மாறிவிடக்கூடுமோவென்று சங்கிக்கவேண்டர்,
இராவணன் கையைவிட்டு நீங்கி விபீஷ ணாழ்வான் கையில் வந்தவாறே
லங்கை ‘தாமஸபுரி’ என்னும் பெயர்நீங்கி
‘ஸாத்விகபுரி ‘என்று புகழ்பெறவில்லையோ?
“ஒருவனுடைய அந்திம ஸமயத்திலே திருமந்த்ரத்தை உபதேசித்து ‘இத்தைச் சொல்லாய்’ என்ன;
அவனும் ‘ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன், ஆமாகில் சொல்லிப்பார்க்கிறேன்’ என்று இத்தை
அநேகமுறைச் சொல்லித் திருமந்த்ரந்தன்னைச் சொல்லாதே செத்துப்போனான்;
இரண்டும் அஷர மொத்திருக்கச் செய்தே சொல்ல வொட்டிற்றில்லையிறே பாப பலம்!“ என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.
அளிய மாந்தர் –
திருநாமம் சொல்லுகைக்கு உரிய நாக்குப்படைத்த அருமருந்தன்ன மநுஷ்யர்கள்.
அதனுக்கே கவல்கின்றேனே-
என் குடும்பத்தைப்பற்றி நான் கரைகின்றேனில்லை:
என்னதும் பிறரதுமான குடும்பத்தைப்பற்றியும் கரைகின்றேனில்லை;
பிறர் குடும்பம் கெட்டுப் போகிறதே! என்பதற்காகவே கரைகின்றேனென்றார்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply