இராமபிரானும் கண்ணபிரானுமாய் அவதரித்த பெருமான்றானே
திருவரங்கம் பெரிய கோயிலில் கண் வளர்ந்தருளுகிறான்;
ஜாயமாநகால கடாக் ஷமில்லாமையா லன்றோ நீங்கள் இழக்கிறது! என்று
க்ஷேபித்துக் கூறுவது இப்பாட்டு.
ஒருவில்லா லோங்கு முந்நீர் அனைத்துல கங்க ளுய்ய
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவ கனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திரு வரங்க மென்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக் கின்றீரே.
பதவுரை
ஒரு வில்லால்–சார்ங்கம் என்கிற ஒரு வில்லாலே
ஓங்கு முந்நீர் அடைத்து-கொந்தளிக்கின்ற கடலை அணை கட்டி
உலகங்கள் உய்ய –லோகமெல்லாம் வாழும்படி
செருவிலே–போர்க் களத்திலே
அரக்கர் கோனை –இராவணனை
செற்ற–முடித்தருளின
நம் சேவகனார்–நமக்குத் தலைவரும் மஹாவீரருமான பெருமாள்
மருவிய –பொருந்தி வாழ்வதற்கு இடமான
பெரிய கோயில்–பெருமை தங்கிய கோயிலாவது
மதிள் திருஅரங்கம்–ஸப்த ப்ராகாரங்கள் சூழ்ந்த ஸ்ரீ ரங்கக்ஷேத்ரம்
என்னா –என்று சொல்ல மாட்டாத
கருவிலே திரு இலாதீர்–கர்ப்ப நிர்ப் பாக்யர்களே!
காலத்தை–(பகவதநுபவத்துக்காகக் கண்ட) காலத்தை
கழிக்கின்றீர்–பாழே போக்குகிறீர்களே!
விளக்க உரை
இராமபிரான் ஸமுத்ரராஜனை அடைக்கலம்பற்றி வழிவிட வேணுமென்று வேண்டிக் கொண்ட விடத்தும்
அவன் வந்து முகங்காட்டாதொழிய,
“ஒரு மீன்படுகுட்டம் நம்மை அஸமர்த்தராக நினைத்துவிட்டது; இனி ஒரு கைபார்க்குமத்தனை” என்று துணிந்து
இளையபெருமாளை நோக்கி “வில்லைக்கொண்டுவா” என்று நியமித்தருளின பின்பு
ஸமுத்ரராஜன் அஞ்சி நடுங்கி ஓடி வந்து முதுகைக்காட்டித் தன்மீது அணைகட்டிப் போகும்படி அமைந்தனனாதலால்,
ஒரு வில்லாலோங்கு முந்நீரடைத்து என்கிறார்.
ஓங்கு என்றது-
கடலின் இயற்கையான கொந்தளிப்பைக் கூறுகிறபடி யன்று;
இராமபிரான் சீற்றத்தாலே கையும் வில்லுமாய் நின்ற வீரவுறப்பைக் கண்டு கீழ் மண் கொண்டு மேல் மண்ணெறிந்து
காலிலே விழுமாபோலே திருவடிகளளவும் வந்து வெள்ளங் கோத்தபடியைக் கூறுவதாம்.
உலகங்களை யெல்லாம் வாழ்விக்கக்கருதிய பெருமாள் தனித்தனியாக ஒவ்வொருவருடைய இருப்பிடத்திற்குஞ் சென்று
அவர்களை வாழ்விப்பது அரிய காரிமென்றெண்ணி ஸதுபாயம் சிந்தித்து இராவணனொருவனைக் கொன்றுவிட்டால்
உலகங்களையெல்லாம் வாழ்வித்தவாறாம் என்று அறுதியிட்டு ராவணஸம்ஹாரம் செய்தருளினனென்ற கருத்துத்தோன்ற
“உலகங்களுய்யச் செருவிலே அரக்கர்கோனைச் செற்ற” என்கிறார்.
பல்லாயிரம் பசுக்களை மேய்ப்பவனான கண்ணபிரான் ஒவ்வொரு பசுவுக்கும் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்ற
வேண்டிய அருமையை நோக்கி ப்ருந்தாவனத்தைப் பசும்புற்காடாக ஸங்கல்பித்து
அவ்வரிய காரியத்தை எளிதில் நிறைவேற்றிக்கொண்டாற்போலவும்.
நம்மாழ்வாரொருவரை அவதரிப்பித்து நாட்டையடங்கலும் எளிதில் திருத்தினாற்போலவும்
இராவணனொருவனைக் கொன்று உலகங்களையெல்லாம் எளிதில் வாழ்வித்தானாய்த்து.
நம் சேவகனார் மருவிய பெரியகோவில்-
ராவண வதம்பண்ணி வினையற்ற பின்பும் அப்போதை யநுபவத்தை இழந்த பிற்பாடர்க்கும் உதவுகைக்காக
வன்றோ கோவிலிலே வந்து கண்வளர்ந்தருளுகிறது.
“ மாமுனிவேள்வியைக் காத்து அவபிரதமாட்டிய வடுதிறலயோத்தி யெம்மரசே! அரங்கத்தம்மா” என்ற
ஒற்றுமை நயமும் நோக்கத்தக்கது.
மதிள் திருவரங்கம்-
ராமாவதாரத்திற்போலே இங்கும் சில ஆபத்து விளையுமோ என்றஞ்சித்
திருமங்கையாழ்வார் போல்வாரான மங்களாசாஸந பரர்கள் காப்பாக இட்ட மதிளையுடைய ஸ்ரீரங்கம்.
கருவிலே திருவிலாதீர்-
ஜாயமாநம் ஹி புருஷம் யம் பச்யத் மதுஸூதந:-ஸாத்விகஸ் ஸது விஜ்ஞேய: ஸ வை மோக்ஷார்த்தசிந்தக:” என்றபடி
கர்ப்பவாஸ ஸமயத்தில் எம்பெருமான் ஸத்வகுணத்தைச் செழிப்பிப்பதற்காகச் குளிரநோக்குவதொரு நோக்குண்டு;
அதனைப் பெறாதவர்களன்றோ நீங்கள்;
பெற்றிருந்தீர்களாகில் இத்தகைய விசிகித்ஸைகள் உங்களுக்குப் பிறவாவே.
காலத்தைக் கழிக்கின்றீரே–
“பழுதே பலபகலும் போயின வென்றஞ்சியழுதேன்” என்று ஞானிகள் கதறியிருப்பதைக் கேட்டு வைத்தும்
நீங்கள் காலத்தைப் பாழே போக்குறீர்களே பாவிகாள்! என்று வயிறெரிகிறார்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply