நீர் சொல்லுகிற எம்பெருமானொழிய வேறொரு தேவதையும் புகலன்றாகில்,
உலகில் பல பல தேவதைகள் அவ்வவர்களால் கொண்டாடப்படுவதற்கும்,
அக்கொண்டாட்டத்திற்கு ஏற்ப அத்தேவதைகள் பயன் அளித்து வருவதற்கும் என்ன காரணம்?
பயன் கொடுக்கிற சக்தி வாய்ந்த தேவதைகளைப் பற்றுவதால் என்ன பாதகம் விளையும்?
என்று சில மாந்தர் கேட்க;
அவர்களுக்கு விடை அளிக்கிற பாட்டு இது.
நாட்டினான் தெய்வ மெங்கும் நல்லதோ ரருள் தன் னாலே
காட்டினான் திருவரங்கம் உய்பவர்க் குய்யும் வண்ணம்
கேட்டிரே நம்பி மீர்காள். கெருடவா கனனும் நிற்க
சேட்டை தன் மடிய கத்துச் செல்வம் பார்த் திருக்கின் றீரே.
பதவுரை
எங்கும்–எல்லாவிடங்களிலும்
தெய்வம் –(அம்மன் பிடாரி முதலான தாமஸ) தேவதைகளை
நாட்டினான்–(ராஜஸர்க்கும் தாமஸர்க்கும் ஆஸ்ரயிக்கலாம்படி எம்பெருமான்) நிலை நிறுத்தி யிருக்கிறான்
உய்பவர்க்கு–உஜ்ஜீவிக்க விரும்புமவர்கட்கு
உய்யும் வண்ணம்–உஜ்ஜீவிக்கலாம்படி
நல்லது ஓர் அருள் தன்னாலே–தனது ஒப்பற்றதொரு க்ருபையினால்
திரு அரங்கம்–அரங்கமாநகரை
காட்டினான்–காண்பித்தருளினான்
நம்பிமீர்காள்–‘நமக்கு ஒன்றாலும் குறையில்லை’ என்று நினைந்திருப்பவர்களே!
கேட்டிரே –(நான் சொல்வதைக்) கேட்டீர்களா?
கெருட வாகனன் நிற்கவும் –கருடனை வாஹநமாகவுடைய பெருமான் விளங்கா நிற்கச் செய்தேயும்
(தேவதாந்தரங்களைப் பற்றுகிற நீங்கள்)
சேட்டைதன் மடியகத்து–மூதேவியிடத்தினின்றும்
செல்வம் பார்த்து இருக்கின்றீர் ஐஸ்வர்யம் பெற நினைத்திருக்கிறீர்கள் போலும்
விளக்க உரை
ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களும் அமைந்த சேதநர்கட்கெல்லாம்
அவரவர்களுடைய ருசிக்குத் தக்கபடி காரியஞ்செய்பவன் எம்பெருமானாதலால்
ராஜஸருடையவும் தாமஸருடையவும் ருசிக்கு ஏற்ப அக்குணங்களுள்ள
அம்மன் பிடாரி முதலிய க்ஷுத்ரதேவதைகளை எம்பெருமான்றானே ஒவ்வொரு பேரிட்டு நாட்டினான்.
“யே ஹ்யந்யதேவதாபக்தா: யஜந்தே ச்ரத்தயான்விதா:-தேபி மாமேவ கௌந்தேய! யஜந்த்யவிதிபூர்வகம்” என்ற கீதையின்படியும்,
ஆகாசாத் பதிதம் தோயம் யதா கச்சதி ஸாகரம் – ஸர்வ தேவநமஸ்கார: கேசவம் ப்ரதி கச்சதி’ என்ற வசநப்படியும்
அந்த க்ஷூத்ரதேவதைகளைக் குறித்துச்செய்யும் வணக்கவழிபாடுகள் யாவும்
அத்தேவதைகட்கும் ஆத்மாவான ஸ்ரீமந்நாராயணனிடத்திற் போய்ச் சேர்ந்துவிடுமே யன்றி அவர்களுக்கே உரியனவாகமாட்டா.
ராஜப்பிரதிநிதிகள் ஒவ்வோரிடங்களிலும் ப்ரஜைகளிடத்தில் பணங்களை (கப்பம்) வசூல் செய்து
அவற்றைப் பிரதாந ராஜனிடத்தில் சேர்ப்பது போல வாய்த்து இத்தேவதைகளின் தொழிலும் .
“இறுக்குமிறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன்மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வநாயகன்றானே” என்றும்
“ அவரவர் விதிவழி யடைய நின்றனரே” என்றும் நம்மாழ்வாரு மருளிச்செய்தார்.
நல்லதோரருள்தன்னாலே” என்பதை
“நாட்டினான்” என்ற வினைமுற்றோடே கூட்டி அந்வயிக்கவுமாம்.
சாஸ்த்ர விஸ்வாஸத்துக்கு இசையாதவர்களை வேதமானது அவர்களுடைய ருசிக்கீடாக
அபிசாரம் முதலிய ஹிம்ஸைசளையும் கூறிப் படிப்படியாக நல்வழி சேர்த்துக்கொள்ளுமாறு போல,
எம்பெருமானும் அந்ய சேஷத்வத்துக்கு இசையாத ராஜஸ தாமஸ ப்ரக்ருதிகளை
அவர்களுடைய குணாநுகுணமாகப் பணியும்படி ராஜஸதாமஸ தேவதைகளைப் பரம க்ருபையாலே ஆங்காங்கு நாட்டி,
பிறகு கால கதியிலே ஸத்வம் தலையெடுத்து உஜ்ஜீவிக்கும் விரகு தேடுவார்க்கு உஜ்ஜீவநோபாயமாகத்
தான் திருவரங்கம் பெரியகோயிலிலே வந்து சாய்ந்தருளினன் என்கிறார்.
அந்த க்ஷூத்ரதேவதைகள் க்ஷுத்ரமான பலன்களைக் கொடுக்கவல்லனவே யன்றி,
மோக்ஷமாகிய உத்தம புருஷார்த்தத்தைக் கொடுக்க அவற்றுக்கு சக்தி இல்லை;
அது உள்ளது எம்பெருமானொ ருவனுக்கேயாம்;
இந்த தத்துவமறியாமல் முமுக்ஷுக்களாயிருப்பார் ஸ்ரீமந்நாராயணனைத்தவிர்த்து இதர தேவதைகளை ஆஸ்ரயிப்பது
எங்ஙனே சொல்லலாயிருந்ததெனில்;
ஐஸ்வர்யத்தைப் பெறா விரும்பின ஒருவன் அதனைத் தரவல்ல மஹாலக்ஷ்மியை உபாஸனை செய்ய வேண்டியிருக்க,
அவளது திருவடிகளிற் புகாமல், உள்ள செல்வத்தையும் துடைக்கவல்ல மூதேவியைப் பற்றிப் பணியும்
மூடனது செயலோடு ஒப்பிடலாமாயிருந்தது என்கிறார்.
இங்கு உபமேயமான அம்சத்தையும் உபமாநமான அம்சத்தையும் தனித்துச் சொல்லாமல்
ஒரு போக்காகச் சொன்னது முற்றுவமை:
தேவதாந்தரங்கள் பக்கல் பரமபுருஷார்த்தத்தைப் பெற நினைக்கை,
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கை என்று இரண்டு பொருளில்லை;
இதுவே அது, அதுவே இது என்ற கருத்துத் தோன்றும்.
சேட்டை-மூத்தவள் என்னும் பொருளதான ‘ஜ்யேஷ்டா’ என்ற வட சொல்விகாரம்.
மூதேவி யென்பவள் பிராட்டிக்கு முற்பிறந்தவள்.
தாரித்திரியம, துரத்ருஷ்டம், உறக்கம், சோம்பல், மூடத்தனம் முதலியவை உள்ளவனை ‘மூதேவி’ என்று நிந்திப்பது ப்ரஸித்தம்.
ஆகையாலே மூதேவி யென்பவள் ஸகல அஸ்லீலங்களுக்கும் மூலஸ்தாநம்.
——————————————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A.ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே .சரணம்.
Leave a Reply