தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –
பிழைத்தலை யான் எண்ணிப் பேசுகின்றேன் இப்பிணி மற்று ஒன்றால்
மழைத்தலை வார் குழலீர் தணியாது வருணனை முன்
அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர்
முழைத்தலை நின்று மலயா நிலம் வந்து மோதும் முன்னே –41–
(இ – ள்.) தலை – சிரசிலே,
மழை – மேகம்போன்ற,
வார் குழலீர் – நீண்ட கூந்தலை யுடையவர்களே! –
யான் பிழைத்தலை எண்ணி பேசுகின் றேன் – நான் பிழைக்கும்வழியை ஆராய்ந்து சொல்லுகின்றேன்: –
இ பிணி மற்று ஒன்றால் தணியாது – (எனக்கு நேர்ந்திருக்கின்ற) இந்தக்காதல்நோய் வேறொருபரிகாரத்தால் அடங்காது;
மலய அநிலம் முழைத்தலைநின்று வந்து மோதுமுன்னே – மலயமாருதமாகிய தென்றற்காற்று அம்மலைய பருவதத்தினது
குகையிடத்தினின்று வந்து தாக்குதற்கு முன்னமே, –
வருணனைமுன் அழைத்து அலை அங்கு அடைத்தார் அலங்காரர் அலங்கல் நல்கீர் – (சமுத்திரராசனான) வருணனை எதிரில்
வரவழைத்துக் கடலை அப்பொழுது அணைகட்டியடைத்தவரான அழகருடைய மாலையைக் கொணர்ந்து கொடுங்கள்; (எ – று.)
தலைமகனைக் களவொழுக்கத்தாற் கூடிப் பிரிந்த தலைமகள், அப்பிரிவுத் துயரை யாற்றி யடக்கும் வல்லமை யிலளாகி,
தனது நிலைமையை அன்பு டைத்தோழியர்க்கு வெளிப்படையாக வுரைத்தது இது.
தன்விருப்பத்தை நிறைவேற்றுதற்பொருட்டுத் தோழியரைக் கொண்டாடியழைப்பவளாய்
‘மழைத்தலைவார்குழலீர்’ என்று புனைந்துரைத்து விளித்தாள்.
புண்ணிற் புளிப்பெய்தாற்போல இந்நிலையில் தென்றற்காற்றுவந்து என்மேல் வீசுமா யின் யான் இறந்துபடுவேன்:
அது வீசுதற்கு முன்னமே என்தலைவனணி ந்த மாலையை எனக்குக் கொணர்ந்து கொடுத்தால்மாத்திரமே யான்
அதுகொண்டு சிறிது ஆறியிருப்பேன் என்றாள்.
அவனது பிரசாதமான திருத்துழாய் இந்நோய்த்தணித்தற்கு ஏற்ற பசுமருந்தாகிய சஞ்சீவிமூலிகை யென்ற வாறு.
முன்புஒருதலைவியினிடத்துஆராத அன்பினால் அவள்பிரிவையாற்றாது அவளைக்கூடுதற்பொருட்டுத் தன்னினுந்தாழ்ந்தவனான
ஒருவனைத் தலையால் வணங்கிக் கடலையடைத்தலாகிய செயற்கருஞ்செயலைச் செய்து அவளைச் சேர்ந்தவராகிய தலைவர்
இங்ஙனம் என்னைப் பிரிந்து உபேக்ஷித்து நிற்கின்றனரென்று இரங்குவாள்; ‘வருணனைமுன்அழைத்துஅலைஅங்கு அடைத்தார்’ என்றாள்.
‘அலங்காரர்’ என்றது, அவரது திவ்வியசௌந்தரியத்திலே தான் கொண்ட ஈடுபாட்டினால். ‘முழைத்தலைநின்று வந்து மோதுமுன்’ என்றதனால்,
தென்றற்காற்றை ஒருபுலியாகக் குறித்தவாறாம்.
‘முழைத்தலை நின்று மலயாநிலம் வந்துமுன்னே’ –
“மலயக், குன்றிற் குலமா முழையிற் குடிவாழ், தென்றற்புலியே யிரைதேடுதியோ” என்பது, கம்பராமாயணம்.
பிழைத்தற்குக்காரணமான உபாயத்தை ‘பிழைத்தல்’ என்றது, ஆகுபெயர். மகளிர்கூந்தலுக்கு மேகம் உவமை,
கருமை குளிர்ச்சிகளில். அலை – கடலுக்கு ஆகுபெயர். “அங்கு” என்று சுட்டினது, கதையை உட்கொண்டு; இராமாவதாரத்தில் என்றபடி.
அலங்கல் – தொங்கியசைதல்: மாலைக்குத் தொழிலாகுபெயர்; இதில், அல் – கருத்தாப்பொருள்விகுதி யெனினும் அமையும்.
மலயாநிலம் – தீர்க்கசந்திபெற்ற வடமொழித்தொடர். ‘மழைத் தலை வார் குழல்’ என்பதற்கு – மேகத்தின் தன்மையைத்
தன்னிடத்தே கொண்ட நீண்ட கூந்தல் என்று பதவுரை கொள்ளலுமாம்.
எம்பெருமானை இடையீடின்றிச்சேரப்பெறாதுவருந்துகின்ற ஐயங்கார் தமதுநிலைமையை அன்பர்க்கு உரைத்தல்,
இதற்கு உள்ளுறைபொருள். யான் பிழைத்தலை எண்ணிப் பேசுகின்றேன் – நான் உய்யும் ஆற்றைச் சிந்தித்து ஆய்ந்து
உணர்ந்து கூறுகின்றேன். மழைத்தலைவார்குழலீர் – எம்பெருமானைத் தலையால்வணங்கி உத்தமஅங்கமாகிய
தலை படைத்தபயன் பெற்று அதுகொண்டு சிறப்பித்துக் கூறத்தக்கவர்களே யென்றபடி.
ஒருசமயத்தில் இன்பஞ்செய்வதும் மற்றொருசமயத்தில் துன்பஞ்செய்வதுமான லௌகிக
பதார்த்தங்கள் மறைவின்றி வெளிப்பட்டு என்னை வருத்துதற்கு முன்னமே பகவத்பிரசாதமாகிய திருத்துழாயை
எனக்குக் கொணர்ந்து கொடுத்தால் யான் ஆற்றாமைதீர்ந்து ஆனந்தமடைவேன் என்பது, பிந்தினவாக்கியத்தின் உட்கோள்.
“வருணனை முன் அழைத்து அலையங்கடைத்தார்” என்றதனால், ஜீவகோடிகளில்உத்தமையான பிராட்டியைப்போலவே
எம்மையும் தம்பக்கல் சேர்த்துக்கொள்ளக்கடவர் அவரென்று குறிப்பித்தவாறு.
இனி, இச்செய்யுளுக்கு – தோழியானவள் செவிலித்தாயர்க்குத் தலைவியின் நிலைமையைக் கூறி அறத்தொடு
நின்றதாகவுந் துறைகூறலாம்;
அப்பொழுது, முதல்வாக்கியத்துக்கு – இவள்பிழைக்கும்வழியை ஆராய்ந்து யான் சொல்லுகின்றேன் என்று பொருள் காண்க.
அங்ஙனங்கொள்ளுமிடத்து – எம்பெருமானது சேர்க்கையைப் பெறாமல் வருந்துகிற ஐயங்காரது துயரத்தைத் தீர்க்கும்
வகையை அவரது அன்பர்கள் அவர்பக்கல் பரிவுடையரான ஞானிகளைக்குறித்துக் கூறுதல், உள்ளுறைபொருளாம்.
‘பிழைத்தலையான் எண்ணிப்பேசுகின்றேன்’ என்றதனால், இவரது ஆற்றாமையைத் தீர்த்தற்கு ஆப்தரது உபதேசம்
மூலமா மென்பது தோன்றும். அலங்கல்நல்கீர் – “மாலையந்தண்ணந்துழாய்கொண்டுசூட்டுமினே” என்றார் ஆழ்வாரும்.
—————
மோது ஆக வந்தனை மூட்டு இலங்கேசன் முடிந்து விண்ணின்
மீது ஆக வந்தனை வில் எடுத்தே விடை வெற்பில் நின்ற
நாதா கவந்தனைச் செற்றாய் உனை அன்றி நான் மறந்தும்
தீ ஆக வந்தனை செய்யேன் புறம் சில தேவரையே –42–
(இ – ள்.) விடைவெற்பில் நின்ற நாதா – விருஷபகிரியாகிய திருமாலிருஞ்சோலைமலையில் நின்றதிருக்கோலமா யெழுந்தருளியிருக்கிற தலைவனே!
கவந்தனை செற்றாய் – கவந்தனென்ற இராக்கதனைக் கொன்றிட்டவனே! –
மோது – (ஒருவரோடுஒருவர்) தாக்கிச்செய்வதான,
ஆகவந்தனை – போரை,
மூட்டு – வலியஉண்டாக்கிநடத்திய,
இலங்கா ஈசன் – இலங்கா புரிக்குத் தலைவனான இராவணன்,
முடிந்து – இறந்து,
விண்ணின்மீது ஆக – மேலுலகத்திற் சேரும்படி,
வில் எடுத்து வந்தனை – கோதண்டத்தைக் கையிலெடுத்துவந்தாய்;
உனை அன்றி – (இங்ஙனம் பெரும் பிழை செய்து பகை யாய்எதிர்த்தவனும் நற்கதிசேருமாறு கருணைபுரிந்த) உன்னையே (வணங்குவேனே) யன்றி,
புறம் சில தேவரை – வேறுசில தேவர்களை, நான் -,
மறந்தும் தீது ஆக வந்தனை செய்யேன் – மறந்தாயினும் தீமைநிகழுமாறு வணங்கமாட்டேன்; (எ – று.)
“மறந்தும் புறந்தொழா மாந்தர்” ஆதலால், தேவதாந்தரங்களிடத்தில் தமக்குஉள்ள உபேக்ஷையையும்,
பரதேவதையினிடத்தில் தமக்குஉள்ள அபேக்ஷையையும் இங்ஙனம் கூறி வெளியிட்டார்.
கணவனையே தெய்வமாகக் கொண்டொழுகுங் கற்புடைமகளிர்க்குப்பிறிதோராடவரது தொடர்பில்லா மலிருத்தல்
இன்றியமையாதவாறுபோல, எம்பெருமானைச்சரணமடைந்து உய்யும் பிரபந்நர்க்குத் தேவதாந்ரபஜநம் பண்ணாமை
அவசிய மென்பர் ஆன்றோர். ‘மறந்தும்’ என்பது, வந்தனைசெய்தலோடு இயையும்.
“வீழ்வார்க்குவீழ்வார்துணை” என்றாற்போல, பிணிபசிமூப்புப்பிறப்பிறப்புத்துன்பங் களினின்று தாம் உய்யமாட்டாத
பிறசிலதேவர்களை வந்தனைசெய்தால், அதனால் ஆகக்கடவது வினைத்தொடர்பேயன்றி வீடுபேறன் றாதலால், ‘தீது ஆக’ எனப்பட்டது;
ஜீவாத்மாவினது ஸ்வரூபம் நிலைகுலைய என்றவாறுமாம். புறம் – விலக்காகிய என்றபடி.
தம்மைச்சரணமடைந்தவர்களைச் சமயத்திலே கைவிடுபவர்களான வென்பது தொனி.
பகைமைக்காரணம் யாதொன்றுமில்லாதிருக்கவும், ஸ்ரீராமபத்நியான சீதையைக் காதலால் வலியக் கவர்ந்துசென்று
சிறைவைத்துவருத்திப் பின்னர் ஒருமுறைக்குஇருமுறை அப்பெருமான் தூதனுப்பவும் சமாதானத்தில்
அப்பிராட்டியைக் கொணர்ந்துவிட்டிடாமற் பெரும்போர் விளைதற்குக் காரணமாய் நின்றன னாதலால்,
இராவணனுக்கு “மோதுஆகவந்தனைமூட்டு” என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது.
நீராணாக நாற்புறமுங்கடல்சூழ்ந்த தீவிலே வசித்தலால் எவரும் வந்து நம்மைநலிவுசெய்ய
இயலா தென்னுஞ் செருக்குடையா னென்பது தோன்ற, “இலங்கேசன்” என்றார்.
அப்படிப்பட்டவனும் இறந்து பரலோகமடையும்படி வில்லெடுத்துவந்தா யென்றதில்,
ஸ்ரீராமபிரானது திவ்வியசக்தி தோன்றும். இனி, மூட்டி லங்கேசன் என்று பிரித்தும் பொருள்கொள்ளலாம்.
———–
தேவரை யாதல் மனிதரை யாதல் செழும் கவிதை
நாவரை யாமல் நவிலுகிற்பீர் நம்மை ஆளும் செம் பொன்
மேவு அரை யானை இருஞ்சோலை வேங்கடம் மெய்யம் என்னும்
மா வரையானை ஒருவனையே சொல்லி வாழுமினே –43-
(இ – ள்.) தேவரை ஆதல் – (பிற) தேவர்களைக்குறித்தாவது,
மனிதரை ஆதல் – மநுஷ்யர்களைக்குறித்தாவது,
நா வரையாமல் – நாவினால் (இன்னாரை இன்னவாறு துதிக்கலாம் இன்னாரை இன்னவாறு துதிக்கலாகாது என்னும்) வரையறை கொள்ளாமல்,
செழுங்கவிதை நவிலுகிற்பீர் – செழுமையான பாடல்களைப் பாடித் துதிப்பவர்களே! –
நம்மை ஆளும் – நம்மை யனைவரையும் (இயல்பிலே) அடிமையாகக்கொண்டுள்ள,
செம் பொன் மேவு அரையானை – மாற்றுயர்ந்த பொன்மயமான ஆடையாகிய பீதாம்பரம் பொருந்திய திருவரையையுடையவனும்,
இருஞ் சோலை வேங்கடம் மெய்யம் என்னும் மா வரையானை – திருமாலிருஞ்சோலை திருவேங்கடம் திருமெய்யம்
என்னும் பெரியமலைகளை (த் தான்எழுந்தருளியிருக்குமிடமாக)க் கொண்டவனு மாகிய,
ஒருவனையே – ஸ்ரீமந்நாராயணனொருவனையே,
சொல்லி – கவிபாடித்துதித்து,
வாழுமின் – பேரின்பவாழ்க்கை பெற்று உய்யுங்கள்.
பகவத்குணாநுபவத்தி லாசையுடைய ஐயங்கார், தேவதாந்தரங்களைக் குறித்தும் மனிதர்களைக்குறித்தும் பற்பலவாறு
கண்டபடி புகழ்ந்து கவிபாடித் தம்தம்புலமையையும் வாக்கையும் வீண்படுத்தித்திரிகிற சிலபுலவர்களைப் பார்த்து
‘இதனால் என்ன பய னுண்டாகும்? வேண்டியபயன்களை, வேண்டியவாறே பெறும்படி என்னோடொப்ப
எம்பெருமானைக் கவிபாடித் துதியுங்கள்’ என்று இதோபதேசஞ்செய்கின்றார்.
“கவிபாடலாகாது” என்றநிஷேதசாஸ்திரத்துக்கு இலக்கு – அஸத்விஷயத்திலாதலும்,
‘கவிபாடுதல்புகழ்முதலிய பலவற்றைப் பயக்கும்’ என்ற விதிசாஸ்திரத்துக்கு இலக்கு –
ஸத்விஷயத்திலாதலு மாகிய வேறுபாடு காணத்தக்கது.
முதலடியில் இரண்டிடத்து வந்த “ஆதல்” என்ற சொல், விகற்பப்பொருளது. மனிதர் – மநுஜ ரென்ற வடசொல்லின் விகாரம்;
(காசியபமுனிவனது மனைவியருள்) மநுவென்பவளிடத்துத் தோன்றியவரென்பது, அதன் பொருள்.
கவிதா – வடசொல்; கவிபாடுந் திறமென்பது, இதன்பொருள்: இலக்கணையாய், பாடலின்மேல் நின்றது.
செழுங் கவிதை – சொற்பொருட்கருத்துக்களிலும், தொடை நடை அணி துறை வகைகளிலும் சிறந்த பாடல்க ளென்க.
“நம்மை” என்றது, முன்னிலையாரையும் படர்க்கையாரையும் உளப்படுத்திய தன்மைப்பன்மை.
பொன் – பொன்னாடைக்குக் கருவியாகுபெயர். அரை – நடுவுறுப்புக்கு எண்ணலளவாகுபெயர்.
வரை என்ற கணுவின்பெயர் – அதனையுடைய மூங்கிலுக்குச் சினையாகுபெயரும்,
அது பின்பு அம்மூங்கில் விளையும் மலைக்குத் தானியாகுபெயரு மாதலால், இருமடியாகுபெயராம்.
ஒருவனையே, ஏ – பிரிநிலை. திருமெய்யம் – பாண்டிநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்று; ஸத்யகிரி யென்னும் மறுபெயருடையது.
————-
வாழும்மின் பங்கயச் சுந்தர வல்லி மணாளன் வெற்பைச்
சூழுமின் பந்தித்த தொல் வினை தீர்ந்து உய்ய தொங்கல் சுற்றும்
தாழும் இன்பஞ்சணை மேல் மடவார் தடமா முலைக்கே
வீழும் இன்பம் கருதி துன்ப யோனியில் வீழ்பவரே –44–
(இ – ள்.) சுற்றும் தொங்கல் தாழும் – சுற்றிலும் பூமாலைகள் தொங்க விடப்பெற்ற,
இன் பஞ்சு அணைமேல் – இனிமையான பஞ்சுமெத்தையின்மீது,
மடவார் தட மா முலைக்கே வீழும் – இளமகளிரது பெரிய அழகிய தனங்களிலே விரும்பிச்சேர்ந்து பெறுகிற,
இன்பம் – சிற்றின்பத்தை,
கருதி – பொருள்செய்து,
துன்பம் யோனியில் வீழ்பவரே – துன்பத்தைத்தருகின்ற பிறப்புக்களாகிய படுகுழியில் விழுந்து அழிபவர்களே! –
பந்தித்த தொல்வினை தீர்ந்து உய்ய – (உங்களுயிரைக்) கட்டுப்படுத்துகின்ற பழமையான கருமங்கள் நீங்கி (நீங்கள்) ஈடேறும்படி, –
வாழும் மின் பங்கயம் சுந்தரவல்லி மணாளன் வெற்பை சூழுமின் – (சிறிதுபொழுதேனும் நிலைநில்லாது தோன்றியவுடன் அழியும் மின்ன லன்றி)
என்றும் அழியாது நிலைபெற்றிருப்பதொரு மின்னல் (உளதாயின் அது) போன்றவளும் செந்தாமரைமலரில் வாழ்பவளும்
சுந்தரவல்லியென்னுந் திருநாமமுடையவளு மான பெரியபிராட்டியின் கணவனாகிய அழகப்பிரானது
திருமாலிருஞ்சோலைமலையைப் பிரதக்ஷிணஞ் செய்யுங்கள்; (எ – று.)
மாதரார்கயற்கணென்னும் வலையுட்பட்டழுந்திச் சிற்றின்பப்படுகுழியில்வீழ்ந்து மாறிமாறிப்பலபிறப்பும்பிறந்து
இறந்துதிரிகின்ற பேதையரைக் குறித்து, “நீங்கள் கருமமனைத்தும்ஒழிந்து பரகதிபெறுமாறு அழகரது
திருமாலிருஞ்சோலைமலையை வலஞ்செய்யுங்கள்” என்று நல்லறிவு கூறுகின்றார்;
“வலஞ்செய்துவைகல்வலங்கழியாதே,
வலஞ்செய்யுமாயமாயவன் கோயில்,
வலஞ்செய்யும்வானோர்மாலிருஞ்சோலை,
வலஞ்செய்துநாளும்மருவுதல் வழக்கே” என்றார் ஆழ்வாரும்.
“வாழும் மின்” என்றது, இல்பொருளுவமை. ஸுந்தரவல்லீ என்ற வடமொழித்தொடர்,
அழகியபூங்கொடி போன்றவ ளென்று பொருள்பட்டு உவமையாகுபெயராம்.
சுந்தரவல்லிநாச்சியாரென்பது, திருமாலிருஞ்சோலை நாச்சியாரின் திருநாமம்.
மணாளன் – மணவாள னென்பதன் மரூஉ, மடவார் – மடமையுடையவர்.
வீழ்தல் – விரும்புதலாதலை, “தாம்வீழ்வார்மென்றோட்டுயில்” எனத் திருக்குறளிலுங் காண்க.
—————-
வீழ மராமரம் எய்தார் மதி தவழ் வெற்பை நெஞ்சே
தாழ் அமர் ஆடச் சமன் குறு கான் இச் சரீரம் என்னும்
பாழ் அமராமல் பரகதி எற்றுவர் பார்க்கில் விண்ணோர்
வாழ் அமரா வதியும் நரகாம் அந்த மா நகர்க்கே –45-
(இ – ள்.) நெஞ்சே – மனமே! –
மராமரம் வீழ எய்தார் – மராமரங்கள் விழும்படி அம்பெய்தவரான எம்பெருமானுடைய,
மதி தவழ் வெற்பை – (உயர்ச்சியினாற்) சந்திரன் தவழப்பெற்ற திருமாலிருஞ்சோலைமலையை,
தாழ் – வணங்குவாய்; (அதனால் யாது பயனெனின்,) –
அமர் ஆட, சமன் குறுகான் – (வினையனைத்தும்ஒழிதலால் அந்திமகாலத்திலே) போர்செய்து வென்று உயிரைக்கவர்ந்து செல்லுதற்காக யமன் அருகில்வருதலுஞ்செய்யான்;
(அன்றியும்), இ சரீரம் என்னும் பாழ் அமராமல் – இந்தஉடம்பாகிய பாழிலே பொருந்தாதபடி (மீண்டும்பிறப்பு இல்லையாம்படி),
பர கதி ஏற்றுவர் – (அவ்வுயிரை எம்பெருமான்) பரமபதத்திற் சேர்த்தருள்வர்;
பார்க்கில் – ஆலோசித்துப்பார்க்குமிடத்து, –
விண்ணோர் வாழ் அமராவதியும் – தேவர்கள் வாழ்கின்ற அமராவதிநகரமும்,
அந்த மா நகர்க்கு நரகு ஆம் -அந்தஸ்ரீ வைகுண்ட திவ்வியநகரத்துக்குமுன்னே நரகமெனத்தக்கதாம்; (எ – று.)
மனமே! அழகரது திருமாலிருஞ்சோலைமலையை வணங்கு; அங்ஙனம் வணங்கினால், நம்மை யமன் அணுகான்;
எல்லாவுலகங்கட்கும் மேலதான பரமபதஞ் சேரலாம்;அப்பரமபதமோ, புண்ணியப்பயனாலடையுஞ் சுவர்க்கலோகத்தினும்
மிகப்பலமடங்கு மேலானது என்பதாம். தீவினைப்பயனால் நேர்வதும் மிகப்பலதுன்பங்களையே நுகருமிடமுமான நரகத்துக்கும்,
நல்வினைப்பயனால்நேர்வதும் மிகப்பலஇன்பங்களையேநு கருமிடமுமானசுவர்க்கத்துக்கும் எத்துணைவேறுபாடு உண்டோ,
அத்துணைவேறுபாடு உண்டு, சிற்றின்பங்களையே நுகருமிடமாய் மீளுமுலகாகிய அச்சுவர்க்கத்துக்கும்
எம்பெருமானருளால் நேர்வதும் பேரின்பத்தையே நுகருமிடமும் மீளாவுலகமுமான பரமபதத்துக்கும் என்பார்,
“பார்க்கில் விண்ணோர் வா ழமராவதியும் நரகாம் அந்தமாநகர்க்கு” என்றார்;
இனி, “அந்தமாநகர்க்கு” என்பதற்கு – அத்திருமாலிருஞ்சோலைத் திவ்வியதேசத்துக்கு என்று உரைத்தலும் ஒன்று, –
அப்பொழுது, தேவாதிதேவன்வாழுமிடமான அத்திருப்பதி தேவநகரத்தினும் மிகமேம்பட்ட தென்பது போதரும்.
மதிதவழ்வெற்பு – அதிசயோக்திவகையால் அம்மலையின் மிக்க உயர்வைக் கூறியது; தொடர்புயர்வுநவிற்சியணி:
“மதிதவழ்குடுமிமாலிருஞ்சோலைப்,
பதியதுவேத்தியெழுவதுபயனே” என்றார் நம்மாழ்வாரும்.
“பரிபூர்ண சந்த்ரமண்டலத்தாலே அலங்க்ருதமான சிகரங்களை யுடைத்தான திருமாலிருஞ்சோலை” என்றும்,
“சந்த்ரனானவன் தவழும்படி ஓங்கின சிகரசிகைகளையுடைத்தான திருமலை” என்றும்,
“சூற்பெண்டுகள் சுரமேறுமாபோலே சந்த்ரன் தவழ்ந்தேறாநின்றுள்ள சிகரத்தையுடைய திருமலை” என்றும் அங்கு உரைத்தனர் ஆன்றோர்.
“மாலடிமைகொண்டவனந்தரத்தும்பேர் நினைக்கவுங் கூற்றஞ்சுமே”,
“அகந்தரங்கமுற்றாரடியார்க்கு நமனஞ்சுமே” ஆதலால், ‘அமராடச்சமன் குறுகான்’ என்றார்.
“நான் மற்றவர்களுக்குப் பிரபுவல்லது, வைஷ்ணவர்களுக்குப் பிரபுவல்லேன்; எம்பெருமான் எவனுடைய இருதய
கமலத்தில் வாசஞ்செய்துகொண்டிருப்பனோ, அந்தமகாபுருஷனுடைய கடாக்ஷம் பிரஸரிக்கு மிடங்களிலெல்லாம்
நீ செல்லத்தக்கவனல்லை, நானும் செல்லத்தக்கவனல்லேன்; பதறிச்சென்றால், அப்பெருமானுடைய திருவாழியின்
தேஜோவிசேஷத்தினாலே பதராக்கப்படுவோம்; அந்தமகாபுருஷன் ஸ்ரீவைகுண்டதிவ்வியலோகத்துக்குஎழுந்தருளத்தக்கவன்” என்ற
வாக்கியங்களை, ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் யமகிங்கரசம்வாதரூபமான வைஷ்ணவப்பிரபாவத்திற் காணலாம்.
அமர் – ஸமர மென்ற வடசொல்லின் விகாரம்; சமர், சமம் என்பனவும் இது,
ஸமன் என்ற வடசொல் சமன் என விகாரப்பட்ட தென்று கொண்டால். (எல்லாவுயிர்களிடத்தும்) பக்ஷபாதமின்றி
நடுவுநிலைமைதவறாது ஒப்ப நடப்பவன் என்று பொருள்படும்; ஸமவர்த்தீ, நடுவன் என்பனவும் அவன்பெயர்களாம்.
இனி, ஸமநன் என்ற வடசொல் சமனென விகாரப்பட்டதென்று கொண்டால், (பாவிகளைத்) தண்டிப்பவ னென்பது அதன் பொருளாம்.
ஸரீரம் என்ற வடசொல், சிதிலமாவது என்று காரணப்பொருள்படுவது; ஆகவே, ‘சரீரமென்னும்பாழ்’ என்றது, பொருந்தும்.
பரகதி – எல்லாக்கதிகளினும் மேலான கதி; வடமொழித்தொடர்.
அமராவதீ என்ற வடசொல்லுக்கு – தேவர்களையுடையது என்பது பொருள்; இது, சுவர்க்கலோகத்து இராசதானி,
‘அமராவதியுந்நரகாம்’ என்றவிடத்து, நகரவொற்று – விரித்தல்விகாரம். நரகம், நகரம் என்ற வடசொற்கள் விகாரப்பட்டன.
———–
நகரமும் நாடும் புரந்தவர் நண்ணலரால் வானமும்
சிகரமும் நாடும் சிறுமை கண்டோம் மஞ்ஞை தேன் இசைகள்
பகர முன் ஆடும் பனிச்சோலை வெற்பில் நிற்பார்க்கு கஞ்சன்
தகர முன் நாள் துகைத்தார்க்கு அறிந்தீர்கள் சரண் புகுமே –46–
(இ – ள்.) நகரமும் நாடும் புரந்தவர் – பட்டணங்களையும் தேசங்களையும் ஆண்ட அரசர்கள்,
நண்ணலரால் வனமும் சிகரமும் நாடும் – பகைவர்களால் (அடித்துத்துரத்தப்பட்டுக்) காட்டையும் மலையுச்சியையும் தேடிச்செல்லும்படியான,
சிறுமை – எளிமையை,
கண்டோம் – (உலகத்திற்) பார்த்துள்ளோம்: (இங்ஙனம் செல்வம் நிலையில்லாமையால் அதிலாசையைவிட்டு), –
அறிந்தீர்கள் – (அறியவேண்டுபவற்றை) அறிந்தவர்களே! –
தேன் இசைகள் பகர – வண்டுகள் கீதங்கள்பாட,
மஞ்ஞை முன் ஆடும் – மயில்கள் எதிரிலே கூத்தாடப் பெற்ற,
பனி சோலை வெற்பில் – குளிர்ந்த திருமாலிருஞ்சோலைமலையிலே,
நிற்பார்க்கு – நின்றதிருக்கோலமாய்எழுந்தருளியிருப்பவரும்,
கஞ்சன் தகர முன் நாள் துகைத்தார்க்கு – கம்சன்அழியும்படி முற்காலத்திலே (கிருஷ்ணாவதாரத்தில்) மிதித்தவரு மான எம்பெருமானுக்கு,
சரண் புகும் – அடைக்கலம்புகுங்கள்; (எ – று.)
பகவத் பக்தியிலாழ்ந்த ஐயங்கார், பொருளாசைகொண்டு திரிகின்ற உலகத்தாரைக்குறித்து, அப்பொருளின் நிலையாமையை
எடுத்துக்காட்டி, ‘நீங்கள் எம்பெருமான் திருவடிகளைச் சரணமடைந்து உய்யுங்கள்’ என்று உபதேசிக்கின்றார்.
“உய்ம்மின்திறைகொணர்ந்தென்றுலகாண்டவ ரிம்மை யே,
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத் தாம் விட்டு,
வெம்மினொளி வெயிற்கானகம்போய்க் குமைதின்பர்கள்,
செம்மின்முடித்திருமாலைவிரைந் தடிசேர்மினோ” என்றார் ஆழ்வாரும்,
நண்ணலரால் – பகைவர்செய்யும் உபத்திரவத்தா லென்றபடி.
புரந்தவர் என்பதில், உயர்வுசிறப்பும்மை விகாரத்தால் தொக்க தென்னலாம்.
‘கண்டீர்’ என்ற முன்னிலைப்பன்மைமுற்றுப் போலவே, ‘கண்டோம்’ என்ற தன்மைப்பன்மைமுற்றும், தேற்றப்பொருள்காட்டும்.
“வண் டினமுரலுஞ்சோலை மயிலினமாலுஞ்சோலை” என்றபடி வண்டுகள் தேனை மிகுதியாக உண்டு களித்து இன்னிசைபாட,
அதற்கு ஏற்றபடி, மயில்கள் சோலையினிருட்சியாற் கார்காலமென்றெண்ணிக் களித்துக் கூத்தாடுமென,
அம்மலைச்சோலைகளின் வளங் கூறியவாறாம். மஞ்ஞை – பெயர்த்திரிசொல்.
மூன்றாமடியில், முன் – இடமுன்; நான்காமடியில், முன் – காலமுன்.
அறிந்தீர்கள் – அண்மைவிளியாதலின், இயல்பு. அறிவுடையராகிய நீங்கள் என முன்னிலைப்பன்மை வினையாலணையும்
பெயராகவுங் கொள்ளலாம். துகைத்தார்க்குச் சரண்புகுதல் – துகைத்தவரை ரக்ஷகமாகப் பற்றுதல். துகைத்தார்க்கு – உருபுமயக்கம்.
முதலிரண்டடிகளில் நகரம் னகரமாகக்கொள்ளப்பட்டது, திரிபுநயத் திற்காக.
இரண்டாமடியில், சிகரம் முன் என்று எடுத்து, மலைச்சிகரம் முதலியவற்றையும் என்றலும் ஒன்று.
————–
சரணியன் ஆகத் தனை நினைந்தாரைத் தன் போலே வைக்கும்
அரணியன் நாகத்து அணையான் அரங்கன் அழகன் எம் கோன்
இரணியன் ஆகம் இடந்தான் கதை அன்றி ஈனர் தங்கள்
முரண் இயல் நாகத்தும் புன்குரல் ஓரி முதுக் குரலே –47-
(இ – ள்.) தனை – தன்னை,
சரணியன் ஆக – சரணமடையத்தக்கவனாக,
நினைந்தாரை – எண்ணிச்சரணமடைந்தவர்களை,
தன்போல வைக்கும் -தன்னைப்போலவே வைத்தருள்கின்ற,
அரணியன் – பாதுகாப்பாகவுள்ளவனும், –
நாகத்து அணையான் – ஆதிசேஷனைச் சயனமாக வுடையவனும், –
அரங்கன் -ஸ்ரீரங்கத்திலெழுந்தருளியிருப்பவனும், –
எம் கோன் – எமது தலைவனும், –
இரணியன் ஆகம் இடந்தான் – இரணியாசுரனுடைய மார்பைப்பிளந்தவனுமான
அழகன், அழகப்பிரானுடைய,
கதை அன்றி – திவ்வியசரித்திரம் (பரகதியிற்செலுத்தும்பெருமையுடையதாய் அனைவரும் விரும் பிக்கேட்கத்தக்கதாகுமே) அல்லாமல், –
ஈனர்தங்கள் முரண் இயல் நா கத்தும் புல் குரல் – இழிவான பிறசமயத்தார் தங்களுடைய மாறுபாடுபொ ருந்திய நாவினாற் பிதற்றுகின்ற இழிவான சொற்கள்,
ஓரி முது குரலே – கிழநரி ஊளையிடுகிற பெருங்குரல்போலச் செவிக்குஇன்னாததாய் வெறுக்கத்தக்கதாம்; (எ – று.)
“கேட்பார்கள் கேசவன்கீர்த்தியல்லால் மற்றுங்கேட்பரோ,”
“நாகத் துப்பாய்ந்தான்கதையின்றி வெவ்வினைகள், துன்னப் பல்
நாகத்துப்பொய்ந் நூல் புகா என்துளைச்செவிக்கே” என்பன காண்க.
சரணியனாக – ரக்ஷகனாக என்றபடி. சரணியனாகத் தனைநினைந்தா ரைத் தன்போலவைக்கும்
அரணியன் – தன்னை நன்குமதித்துத் தியானித்தவர்களை ஸாரூப்யநிலையால் தன்னைப்போலவே
சங்கசக்கராதிகளைத் தாங்கி ஸாலோக்யத்தாற் பரமபதத்திலே இருந்து பேராநந்தமனுபவித்துக் கொண்டு
வினைத்தொடர்பும் அதனாலாகும் பிறப்பிறப்புப்பிணிபசிமூப்புத் துன்பங்களு மின்றி வாழும்படி செய்து பாதுகாத்தருள்பவன்;
“சரணமாகுந் தன தாளடைந்தார்க்கெல்லாம், மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான்,”
“மணியாழிவண்ண னுகந்தாரைத் தன்வடிவாக்கு மென்றே, துணியாழிய மறை சொல்லும்” என்பன காண்க.
எம்பெருமான் தனதுஅன்பர்க்கு முத்தியில் தந்தருள்கின்ற நிலைமைகள் – ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாயுஜ்யம் என நான்காம்;
ஸாலோக்யம் – அப்பெருமானுடைய ஸ்ரீவைகுண்டலோகத்தில் வாழ்தல்; ஸாமீப்யம் – அவனருகில் வாழ்தல்;
ஸாரூப்யம் – அவனுக்குச்சமமான ரூபத்தைப் பெறுதல்; ஸாயுஜ்யம் – அப்பரமாத்மாவோடு ஒன்றிவாழ்தல்.
அரணியன் – அரண்போல அடுத்தவர்களைக் காக்குந் தன்மையுள்ளவன்;
இப்பெயரில், அரண் – பகுதி;கோட்டை மதிள்காவல் என்பன, அதன்பொருள்; இ – சாரியை, அன் – விகுதி.
ஸ்ரீமந்நாராயணனது பரத்வத்தையே கூறுகிற வேதசாஸ்திரங்களின் சித்தாந்தத்துக்கு மாறாகத்
தேவதாந்தரங்கட்குத் தலைமைகூறுதலால், ‘முர ணியல்நா’ எனப்பட்டது. கத்துதல் – கதறுதல்;
இவ்வினைச்சொல்லாற் கூறினதும், இழிவைக் காட்டும். அச்சொற்கள் கடலோசைபோலப்
பொருளில்லாதன வென்பது பட, ‘புன்குரல்’ என்றார். முதுக் குரல் – பண்புத் தொகை.
இனி, இரண்டாம்அடியில், அரண் இயல் நாகம் என்று பிரித்து,
(“சென்றாற் குடையாம்” என்றபடி பலவாறு பணிவிடைசெய்தலால் எம் பெருமானது, திருமேனிக்குப்) பாதுகாவலாகும்
இயல்புடைய ஆதிசேஷன் என்றுஉரைத்து, நான்காம்அடியில், முரணிய நா என்றுஎடுத்து, மாறுபாடு கொண்ட நாக்கு என்றலு மொன்று
————–
முது விருந்தா வனத்து ஆநிரை மேய்த்தவர் முன் விதுரன்
புது விருந்து ஆனவர் மால் அலங்காரர் பொலாங் கழல் ஆம்
மது இருந்தாமரைக்கு ஆளாய் இரார்க்கு மது நுட்ப நூல்
எது இருந்தாலும் அதனால் விடா இங்கு இரு வினையே –48–
(இ – ள்.) முது விருந்தாவனத்து – பழமையான பிருந்தாவனத்திலே,
ஆன் நிரை மேய்த்தவர் – பசுக்கூட்டங்களை மேய்த்தவரும்,
முன் – முன்பு,
விதுரன் புது விருந்து ஆனவர் – விதுரனுக்கு அதிசயிக்கத்தக்க விருந்தின ரானவரு மாகிய,
மால் அலங்காரர் – பெருமையுடைய அழகரது,
பொலம் கழல் ஆம் – அழகிய திருவடிக ளாகிய,
மது இருந் தாமரைக்கு – தேன் கொண்ட பெரிய தாமரைமலர்களுக்கு,
ஆள் ஆய் இரார்க்கு – அடிமைப் பட்டிராதவர்களுக்கு, –
மதி நுட்பம் நூல் எது இருந்தாலும் – நுண்ணறி வையுண்டாக்குகின்ற சாஸ்திரங்களில் எது பயின்றுதேறப்பட்டிருந்தாலும்,
அதனால் – அச்சாஸ்திரத்தேர்ச்சிமாத்திரத்தால்,
இங்கு – இவ்வுலகத்தில்,
இரு வினை – இருவகை வினைகளும்,
விடா – நீங்கமாட்டா; (எ – று.)
“கற்றதனா லாய பய னென்கொல் வாலறிவன், நற்றாள்தொழாஅ ரெனின்”,
“கற்க கசடறக் கற்பவை கற்றபின், நிற்க அதற்குத்தக” என்றபடி கற்றற்குஉரிய உறுதிநூல்களைக் கற்றவர்கள்,
அக்கல்வியறிவின் பயனாக அந் நூல்களிற்கூறியபடி எம்பெருமான்திருவடிக்கு அடிமைப்பட்டால்,
கருமம் ஒழிய வீடுபெறுவரேயன்றி அநுட்டானமில்லாத வெறுங்கல்வியறிவுமாத்தி ரத்தால் வினையொழியப்பெறா ரென்பதாம்.
புது விருந்து – வருதற்கரிய விருந்து என்றபடி. பொன் + கழல் = பொலங்கழல்;
இப்புணர்ச்சி “பொன்னென்கிளவி யீறுகெட முறையின், முன்னர்த் தோன்றும் லகார மகாரம்,
செய்யுண் மருங்கிற் றொடரிய லான” என்ற தொல்காப்பியவிதியால் அமைந்தது:
பிற்காலத்தார் நிகண்டுகளில் “பொலம்” என ஒருசொல் கொண்டுள்ளதனால், பொலம் கழல் என்று பிரித்து
மகரவீற்றுப்புணர்ச்சியின்பாற் படுத்துதலு முண்டு. அன்றலர்ந்த வாடாத தாமரை யென்பார் “மதுவிருந்தாமரை” என்றார்;
அதுவே, எம்பெருமான் திருவடிக்கு நிகராவது. “கழலாம் மதுவிருந்தாமரைக்கு” என்று உருவக மாகக் கூறினாரேனும்,
தாமரைமலர்போன்ற திருவடிகளுக்கு என்பது கருத்து. எம்பெருமுானது திருவடிகளினின்று வெளிவீசுகிற கிரணங்களை
அத்திருவடித்தாமரைகளினின்று பெருகுந் தேன்பெருக்காக வேதம் ஓதும்; திருவடியின் இனிமையை மதுவென்றலும் உண்டு.
நுட்பமதி என்பது மதிநுட்பம் என முன்பின்னாகத்தொக்க தெனக் கொண்டு, “பின்மொழிநிலையல்” என்பர்.
“மதிநுட்பநூலோடுடையார்க்கு” என்றபடி இயற்கையாகிய நுண்ணறிவும் செயற்கையாகிய நூலறிவும் என்னும்
இவற்றில் எதுஇருந்தாலும் என உரைப்பினும் அமையும்.
பஞ்சுகொண்டு இழைத்து நூற்கப்படும் நூல்போலச் சொற்கொண்டுதொடுத்து அமைக்கப் படுதலாலும்,
மரம்முதலியவற்றின் கோணலைத் தீர்த்துச் செப்பஞ்செய்யும் எற்றுநூல்போல மனத்தின்கோணலைத் தீர்த்துச் செவ்வைசெய்தலா
லும், நூல்என்பது – சாஸ்திரத்துக்கு உவமையாகுபெயராகிய காரணக் குறியாம். இங்கு – இப்பிறப்பி லென்றபடி.
————-
தலைவி வெறி விலக்கிச் செவிலியர்க்கு அறத்தொடு நிற்றல்
வினை யாட்டியேன் கொண்ட வெங்காம நோய் வெறியாட்டினும் இச்
சினை ஆட்டினும் தணியாது அன்னைமீர் செய்ய பூங்கமல
மனையாட்டி நாயகன் மாலிருஞ்சோலை மலைச் சிலம்பாற்று
எனை ஆட்டி வாரும் சொன்னேன் எந்த நோயும் எனக்கு இல்லையே –49-
(இ – ள்.) அன்னைமீர் – தாய்மார்களே! –
வினையாட்டியேன் கொண்ட வெம் காமம் நோய் – தீவினையால்ஆட்டப்படுபவளாகிய யான் அடைந்தி ருக்கின்ற கொடிய இந்தக்காதல்நோயானது,
வெறி ஆட்டினும் – (முருகக் கடவுளின் விஷயமாக) ஆவேசமாடுவித்தலாலும்,
இ சினை ஆட்டினும் – உறுப்புக்களிற்குறைவில்லாத இந்த ஆட்டைப் பலிகொடுத்தலினாலும்,
தணியாது – அடங்கமாட்டாது; (பின்னைஇதற்கு என்ன பரிகாரமோ? எனின், – )
செய்ய பூ கமலம் மனை ஆட்டி நாயகன் – அழகிய செந்தாமரை மலரைத் தான்வாழுமிடமாகக்கொண்டு
ஆள்பவளான திருமகளின் கணவனாகிய திரு மாலினுடைய,
மாலிருஞ்சோலைமலை – திருமாலிருஞ்சோலைமலையிலுள்ள,
சிலம்பு ஆறு – நூபுரகங்கையென்னுந் திவ்வியநதியிலே,
எனை ஆட்டி வாரும் – என்னை ஸ்நாநஞ்செய்வித்து வாருங்கள்; (அங்ஙனம் அதில் நீராடுவித்தால்),
எந்த நோயும் எனக்கு இல்லை – எனக்குச் சிறிதுநோயும் இராது;
சொன்னேன் – (எனது நோயின் நிலையையும் அதற்குஏற்ற பரிகாரத்தை யுஞ்) சொல்லிவிட்டேன்; (எ – று.)
இச்செய்யுளுக்குத் துறைவிவரணமும், உள்ளுறைபொருளும், கீழ் 8 – ஆஞ் செய்யுளி னுரையிற் கூறியதுகொண்டு உணரலாம்.
வினையாட்டியேன் – தீவினையால் வருத்தியலைக்கப்படுபவளான யான்; இங்ஙனந் தலைவனைப்பிரிந்து
வருந்துதற்குக் காரணமான கொடிய கருமத் தையுடையே னென்று தன்னைத் தானே வெறுத்துக் கொண்டாள்.
ஆட்டி என்ற பெயரில், ஆடுஎன்பதன் பிறவினையான ஆட்டு – பகுதி; இ – செயப்படு பொருளுணர்த்தும் பெயர்விகுதி.
இப்படர்க்கைப்பெயர், ‘ஏன்’ என்ற விகுதியோடு சேர்ந்து, தன்மையொருமைக் குறிப்பு வினையாலணையும் பெயராய் நின்றது.
இது இவ்வகை ஆட்டினால் தணியாது சிலம்பாற்றிலாட்டினா லேயே தணியும் என ஒருவகைச்சமத்காரம் அமைய
‘வெறியாட்டினு மிச் சினையாட்டினுந் தணியாது சிலம்பாற்றெனையாட்டிவாரும்’ என்ற சொல் நயம் உணரற்பாலது; சொற்பின்வருநிலை.
வெறியாட்டினும், சினையாட்டி னும் என்றவற்றில், இன் – ஐந்தனுருபு, ஏது. வெறியாட்டு என்பதில்,
ஆட்டு என்பது – ஆடு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
உறுப்புக்குறையில் லாத ஆடுபலிக்குச்சிறத்தலால், ‘சினையாடு’ எனப்பட்டது;
இனி, இதற்கு – கருப்பங்கொண்ட ஆடு என்று உரைப்பாரு முளர்.
“திசைக்கின்றதே யிவள் நோய் இதுமிக்கபெருந்தெய்வம், இசைப்பின்றி நீரணங்காடு மிளந்தெய்வமன்றிது,”
“இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதலன்று அந்தோ” என்ற அருளிச்செயல்களை அடியொற்றி, ‘வெறியாட்டின் தணியாது’ எனப்பட்டது.
இச்சினையாட்டின் தணியாது – அசேதநமான ஒருபிராணி தான் இறந்து சேதநமான ஒருபிராணியை உயிர்காக்குமோ? என்றபடி;
“மசகந்தர மென்னலாய் நிலையாவுடல் வாழுயிரை, அசகந்தரவல்லதோ” என்றார் திரு வேங்கடத்தந்தாதியிலும்.
செய்யபூங்கமலமனையாட்டிநாயகன் – ஸ்ரீய:பதி. தலைவனை இப்பெய ராற்குறித்ததனால், “அகலகில்லேன் இறையும்” என்று
அத்திருமகள் அத்தலைவனை என்றும்விட்டுநீங்காது உடனுறைதலைக்குறித்து,
அங்ஙனந் தனக்குப் பிரியாத இன்பம் நேர்ந்திலதே யென்ற அழுக்காறு கொண்டனள் இத்தலைவி யென்பது தோன்றும்.
மூன்றாமடியிலுள்ள ‘ஆட்டி’ என்பதில், ஆள் – பகுதி, இ – பெண்பால்விகுதி, ட் – எழுத்துப்பேறு. (இதன் ஆண்பால் – ஆளன்.)
திருமால் உலகமளந்த காலத்தில் மேலே சத்தியலோகத்திற் சென்ற அப்பெருமானது திருவடியைப் பிரமன் தன்கைக்
கமண்டல தீர்த்தத் தாற் கழுவிவிளக்க, அக்காற்சிலம்பினின்று தோன்றியதனால், சிலம்பாறு என்று பெயர்:
நூபுரகங்கை யென்ற வடமொழிப்பெயரும், இதுபற்றியதே; நூபுரம், சிலம்பு – ஒருவகைக்காலணி.
“எந்தநோயும் எனக்கு இல்லை” என்றது, அழகர் விஷயமான காதல்நோயே யன்றி நீங்கள் நினைக்கிறபடி
வேறு எவ்வகையான நோயும் எனக்கு இல்லை யென்றவாறுமாம்.
“சொன்னேன்” என்பது, தேற்ற முணர்த்தும். தலைவனைப்பிரிந்திருக்கிற நிலையிலே, அவனோடு நேரிலாவது இடையிட்டாவது
சம்பந்தமுடைய பொருள் ஏதேனும் கிடைத்தால், அது அப்பிரிவுநோயைத் தணிவிப்பது இயல்பாதலால்,
எனது இவ்விரகதாபம் தணிவதற்கு எம்பெருமானது திருவடித்தீர்த்தத்தில் நீராட்டுதலே ஏற்றதா மென்றாள்.
பகவத்விஷயமூலமான எனது இவ்வாற்றாமைக்கு அதன்சம்பந்தமான பரிகாரஞ் செய்தலே தகுதி யென்று
ஐயங்கார் தம்பக்கல் பரிவுடையார்க் குக் கூறுதல் இதற்குஉள்ளுறைபொருளாதலால்,
எம்பெருமானது ஸ்ரீபாத தீர்த்தமாய் எப்பொழுதும் திவ்வியதேசத்தின் சம்பந்தமுடையதாய்க் கங்கையினும்
புனிதமான புண்ணியதீர்த்தத்திலே தம்மை நீராடப்பண்ணுங்க ளென்றாராம்.
எம்பெருமானது சம்பந்தத்தை நேரிலேனும் பரம்பரையாக வேனும் பெற்ற பாகவதரது சம்பந்தம் இவ்வாற்றாமைக்குப்
பரிகாரமா மென்பதும் இதற்கு ஸ்வாபதேசமாகலாம்.
தேவதாந்தர சம்பந்தத்தையும், அதனால்நிகழும் தாமசகாரியங்களையும் ஸ்ரீவைஷ்ணவர் சிறிதும்பொறா ரென்பது,
முதல்வாக்கியத்தாற் போதரும்.
————-
வண்டு விடு தூது
எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சந்
தனக்கா இயங்கும் தமர வண்டீர் சொல்லும் தத்துவ நூல்
கனக்காவியம் கவி வல்லோர் புகழ் அலங்கார னுக்கு
வனக்காவி அம் கண்ணி மா மலராள் மணவாளனுக்கே –50–
(இ – ள்.) சந்தனம் கா இயங்கும் – சந்தனமரச்சோலைகளிலே (நறு மணம்நுகர்தற்காகச்) சஞ்சரிக்குந் தன்மையுள்ள,
தமரம் வண்டீர் – ஓசையை யுடைய வண்டுகளே! –
தத்துவம் நூல் – தத்துவசாஸ்திரங்களிலும்,
கனம் காவியம் – பெரிய காவியங்களிலும்,
கவி – கவிபாடுதலிலும்,
வல்லோர் – வல்ல வர்களான ஆன்றோர்களால்,
புகழ் – துதிக்கப்பெற்ற,
அலங்காரனுக்கு – அழகனும், –
வனம் காவி அம் கண்ணி – நீரிலுள்ள நீலோற்பலமலர்போ ன்ற அழகிய கண்களையுடையவளான,
மா மலராள் – சிறந்த தாமரை மலரில் வீற்றிருக்கின்றவளாகிய திருமகளினது,
மணவாளனுக்கு – கணவனுமாகிய தலைவனுக்கு, –
எனக்கு ஆவி அங்கும் உடல் இங்கும் ஆகி இருப்பதை சொல்லும் – எனக்கு உயிர் அத்தலைவனிடத்தும்
உடம்பு மாத்திரம் இங்குமாயிருக்கிற செய்தியைச் சொல்லுங்கள்; (எ – று.)
தலைவனைப்பிரிந்த தலைவி, இங்ஙனஞ்சொல்லி, தலைவனிடத்து வண்டுகளைத் தூதுசெல்லுமாறு வேண்டுகிறாள்.
எனதுபிராணநாதனான தலைவன் என்னைவிட்டுப்பிரிந்து சென்றபொழுதே எனது உள்ளத்தின் உணர்வுமுழுவதும்
அத்தலைவன் பின்னேயே சென்றுவிட உயிர்நீங்கிய உடல்போலப் பொலிவிழந்து யான்மாத்திரம்
இங்கு உள்ளே னென்பாள், ‘எனக்கு ஆவி அங்கும் உடலிங்குமாகி இருப்பது’ என்றாள்.
இதனால் இவள் விரகவேதனையால் அயர்ப்பும் மயக்கமுமாக இடையிடையே மூர்ச்சையடைதல் புலனாம்.
தலைவனுள்ளஇடம், நீங்கள் சந்தனமரங்களின் நறுமணத்துக்காக உத்ஸாகத்தோடு ஆரவாரஞ்செய்துகொண்டு
செல்லுஞ் சோலைகளையுடைய தாதலால், அங்குச்செல்லுதல் உங்கட்கும் இனிதாம் என்பது பட,
‘சந்தனக்கா வியங்குந் தமரவண்டீர்’ என்று விளித்தாள்.
“அறுகால் வரிவண்டுக ளாயிர நாமஞ்சொல்லிச்,
சிறுகாலைப்பாடுந்தென்திருமாலிருஞ்சோலையே” என்ற அருளிச்செயல் இங்கு அறியத்தக்கது.
தமரம் என்றது, வண்டுகள் செய்யும் ரீங்காரத்தொனியை.
மூன்றாமடி – தலைமகனுடைய புகழ்ச்சிறப்பையும், நான்காமடி – காதற்குக்கட்டுப்பட்டவ னவ னென்பதையுங் காட்டும்.
பெரியாழ்வார் ஆண்டாள் திருமங்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் என்கிற ஆழ்வார்கள்
தமதுதிவ்வியப்பிரபந்தங்களால் துதித்துள்ளதும், ஸ்ரீபாஷ்யகாரருடைய அந்தரங்கசிஷ்யர்களில் முதல்வரான கூரத்தாழ்வான்
ஸுந்தரபாஹுஸ்தவமென்ற வடமொழிப்பிரபந்தம் பாடித் துதித்துள்ளதும் முதலியனபற்றி,
‘தத்துவநூல் கனக்காவியங் கவிவல்லோர் புகழலங்காரன்’ எனப்பட்டான்.
புலவர்பாடும்புகழுடையோரது சிறப்பு மற்றையனைவர்சிறப்பினும் மேம்படுதலால், அத்தன்மைத்தான புகழையுடைய
அலங்கார னென்று தன்தலைவன் பெருமையைக் கொண்டாடினாள்.
‘வண்டீர் சொல்லும்’ என, பேசாதது பேசுவதுபோலவும், கேளாதது கேட்பதுபோலவும் சொல்லப்பட்டது; வழுவமைதி:
“ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே,
அவையல பிறவும் நுவலிய நெறியாற், சொல்லுந போலவுங் கேட்குந போலவுஞ்,
சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்” என்ற தொல்காப்பியச்சூத்திரம் காணத்தக்கது:
வண்டுக்குச் செவியுணர்வில்லையென்பது, “தும்பி வண்டாதி கண்ணறிவி னாலறிவுயிர்” என்பதனாற் புலனாம்.
(இனி, இதற்குச் செவியுணர்வும் உண்டென்று சாதிப்பர் நச்சினார்க்கினியர்.)
பிரிந்தநிலையிலே தலைவி மதிமயக்கமுடையளாதலால், இங்ஙனம் புலன்குறைந்தவற்றையும் விளித்துப் பேசுவன். செய்யுளாதலின்,
‘அங்கு’ எனச் சுட்டுப்பெயர் முன்வந்தது. கா – பாதுகாக்கப்படுவது என்று காரணப்பொருள்படும்.
வண்டீர் – வண்டார் என்பதன் ஈற்றயல்திரிந்த விளி: அது, உயர்த்திச்சொல்லுதலால் அஃறிணை உயர்திணையான திணைவழுவமைதி.
‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி உயர்வுப்பொருளில் ‘வண்டு’ என்ற பால்பகா அஃறிணைப்பெயரோடு சேர்ந்துவந்த தென்க;
தன்வேண்டு கோளை நிறைவேற்றுதற்பொருட்டு வண்டுகளைக் கொண்டாடி யழைப்பவ ளாய், இங்ஙனம் மரியாதைகாட்டி விளித்தாள்.
தத்துவநூல் – ஜீவாத்மா பரமாத்மா வினை வினைப்பயன் உலகம் முதலிய பொருள்களின் உண்மை
நிலையை யுணர்த்தும் நூல். கவியினாற்செய்யப்பட்டது. காவ்யம் எனத் தத்திதாந்தநாமம்;
அதன் இலக்கணத்தை, அணி நூல்களிற் காண்க. அன்றலர்ந்த வாடாத மல ரென்பது தோன்ற, ‘வனக் காவி’ எனப்பட்டது.
திருமகளின்கண்களுக்கு நீலோற்பலமல ருவமை, கருமை மென்மை யழகுகளி லென்க.
“பூவிற்குத் தாமரையே” என்றபடி தாமரை சிறத்தலால், ‘மாமலர்’ எனப்பட்டது.
ஐயங்கார் தமது ஆற்றாமையை ஆசாரியமூலமாக எம்பெருமானுக்குத் தெரிவித்துத் தமதுதுயரந்தணியக்கருதி
அவர்களைத் தமக்குப் புருஷகார மாகும்படி வேண்டுதல், இதற்கு உள்ளுறைபொருள்.
ஸ்வாபதேசத்தில் ‘தூது என்பது, (வட 10) கடகமான ஆசார்யவிஷயத்தை’ என்றனர் ஆன்றோர்.
பிரிந்த தலைவிதலைவரைச் சேர்த்தற்குத் தூதர்போல பிரிந்துநின்ற ஜீவாத்ம பரமாத்மாக்களைச் சேர்த்தற்கு ஆசாரியர் உரியவராதல் காண்க.
பலவகை மலர்களிலுஞ் சென்று அவற்றின்சாரமான தேனை அம்மலர்கள்கெடாதபடி கவர்ந்து உண்ணுந்தன்மையனவான
வண்டுகளை, பலவகைநூல்களிலும் பிரவேசித்து அவற்றின்சாரமான தத்துவப்பொருளை அந்நூல்கள்நலிவுபடாத படி கிரகித்து
அனுபவிக்குந்தன்மையரான ஆசாரியராகச் சொல்லத்தகும்.
வண்டுகளுக்கு இரண்டுஇறகுகள்போல, ஆசாரியர்க்கு ஞானமும் அநுட்டா னமும் உயர்கதிச்செலவுக்கு உறுதுணை யென்க.
அன்றியும், நறுமணத்தை யும் மதுவையும்நாடி அவையுள்ள இடங்களிலெல்லாம்திரிதல் வண்டுகளுக்கு இயல்பாதல்போல,
ஸர்வகந்தனென்றும் உள்ளக்கமலத்திலூறுகிறதேனென்றும் சொல்லப்படுகிற எம்பெருமானை நாடி
அவனெழுந்தருளியிருக்கின்ற திவ்வியதேசங்களிலெல்லாம் யாத்திரைசெய்தல் ஆசாரியராகக்கடவரான பாகவதர்க்கு இயல்பாம்;
இங்கு “சந்தனக்காஇயங்கும்” என்ற அடைமொழி இக்கருததை உட்கொண்டது,
“தமரவண்டீர்” என்றது, தான்வருத்துக்கூறு வானாகிய உத்தமதூதனுக்கு இன்றியமையாப்பண்பாகின்ற ஆராய்ந்தசொல்
வண்மையையுடைய ஆசாரியர்களே யென்று விளித்தபடி. பிறவும் நோக்கிக் கொள்க.
———-
மணவாளர் ஆவி நிகர் திரு மாதுக்கு மால் அழகர்
பணவாள் அராவில் கண் பள்ளி கொள்வார் திருப்பாதம் எண்ணக்
குணவாளர் ஆவீர் இன்றே உயிர்காள் உம்மைக் கூற்றுவனார்
நிணவாள் அராவி அறுக்கும் அப்போது நினைப்பு அரிதே –51–
(இ – ள்.) உயிர்காள் – பிராணிகளே! –
ஆவி நிகர் திருமாதுக்கு மணவாளர் – (தமக்கு) உயிர்போன்ற (பிராணநாயகியான) திருமகளுக்குக் கணவரும்,
மால் அழகர் – பெருமையையுடைய அழகரும்,
பணம் வாள் அராவில் கண்பள்ளிகொள்வார் – படத்தையும் ஒளியையு முடைய திருவனந்தாழ்வான்மேலே
படுத்துக்கொண்டு யோகநித்திரை செய்தருள்பவருமான எம் பெருமானுடைய,
திருப்பாதம் – திருவடிகளை,
எண்ண – தியானிக்குமாறு,
இன்றே – இப்பொழுதே,
குணவாளர் ஆவிர் – நற்குணமுடையவராவீர்கள்; (ஏனென்றால்,-)
உம்மை – உங்களை,
கூற்றுவனார் – யமன்,
நிணம் வாள் அராவி அறுக்கும் – (நீங்கள்செய்துள்ள கொடுவினைக்கு ஏற்ப() நிணந்தோய்ந்த
வாளாயுதத்தைக் கூர்செய்து அதுகொண்டு அறுக்கும்படியான,
அப்போது – அந்தஅந்திமகாலத்தில்,
நினைப்பு அரிது – (எம்பெருமான் திருவடிகளை) நினைப்பது இயலாதாகும்; (எ – று.) – ஈற்றுஏகாரம் – தேற்றம்.
பிராணிகாள்! யமன் வந்து நலிய வருந்தும் மரணகாலத்திலே எம் பெருமான்திருவடியை நினைத்தல் அசாத்திய மாதலால்,
இப்பொழுதே அதனை நினைப்பீர்களானால், உங்கட்கு யமனாலாகுங் கொடுமை இல்லையாக நற்கதிபெற்று உய்யலாம் என்பது கருத்து.
“வடவேங்கடநாதனைத் தேசத்துள்ளீர், நெஞ்சக்கரவடநீக்கி யின்றேதொழும் நீண்மறலி,
துஞ்சக்கரவடம் வீசுமக்காலந் தொழற்கரிதே” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“எய்ப் பென்னைவந்து நலியும்போதங்கேது நானுன்னை நினைக்கமாட்டேன்,
அப்போதைக் கிப்போதே சொல்லிவைத்தேன்” என்ற ஆழ்வாரருளிச்செயலைப் பின்பற்றியது, பிந்தினவாக்கியம்.
இன்றியமையாமையும், மிக்கஅன்புக்கு இடமாதலும் பற்றி, “ஆவிநிகர் திருமாது” எனப்பட்டாள்.
“அராவின்கண்” என்ற பாடத்துக்கு, கண் – ஏழனுருபு. எண்ண – எண்ணுதலினால் எனினுமாம்;
முந்தியபொருளில், காரியப்பொருட்செயவெனெச்சம். எதிர்காலம்;
இப்பொருளில், காரணப் பொருட்செயவெனெச்சம்: இறந்தகாலம்.
கூற்றுவனார் என்றவிடத்து, ‘ஆர்’ என்ற பலர்பால்விகுதி – கொடுமை தோன்ற இழித்தற்பொருளில் வந்தது நிணவாள் –
(முன்பு அறுக்கப்பட்ட பிராணிகளின்) உடற்கொழுப்புத் தோய்ந்த வாள்.
———–
நினைப்பு அரியாய் எளியாய் உம்பர் யார்க்கும் நின் அன்பருக்கும்
வினைப்பரி ஆனவன் வாய் பிளந்தாய் வியன் சோலை மலை
தனிப் பிரியாய நின்ற தாள் அழகா முன் சனனத் துள்ளும்
உனைப் பரியாமல் அன்றோ பரித்தேன் இவ் உடலத்தையே –52–
(இ – ள்.) உம்பர் யார்க்கும் – தேவரெல்லார்க்கும்,
நின் அன்பருக்கும் – உன்பக்கல் பக்தியையுடைய அடியார்கட்கும்,
நினைப்பு அரியாய்எளியாய் – (முறையே) சிந்தித்தற்குஅரியவனும் எளியவனுமாயிருப்பவனே!
வினை பரிஆனவன் வாய் பிளந்தாய் – தீச்செயல்களையுடைய குதிரைவடிவாய் வந்த அசுரனது வாயைக் கிழித்தவனே!
வியல் சோலைமலை தனை பரியா நின்ற தாள் அழகா – பெரிய திருமாலிருஞ்சோலைமலையானது
தன்னைவகிக்கப்பெற்ற திருவடியையுடைய அழகனே! –
முன் சனனத்துள்ளும் உனை பரியாமல் அன்றோ இ உடலத்தை பரித்தேன் – முற்பிறப்பிலும் உன்னை விரும்பிப்
பக்திசெய்யாமற்போனதனாலன்றோ இப்பிறப்புஎடுத்தேன்; (எ – று.)
முற்பிறப்பில் உன்னிடம் பக்திசெய்திருந்தால், எல்லாக்கருமங்களும் ஒழியப் பிறப்பற்று மீளாவுலகமாகிய
முத்தியை அடைந்திருப்பே னாதலால், இப்பிறப்பு எனக்கு நேர்ந்திராது என்பதாம்.
இங்ஙனம், சென்றபிறப்பிற் பக்திசெய்யாது போனதற்குக் கழிவிரக்கங்கொள்வார்போன்று,
இப்பிறப்பிலும் இதுவரை பழுதேபலபகலும்போக்கினமைக்கு அஞ்சி இனியாயினும்
மீளப்பிறத்தலில்லையாம்படி பக்திசெய்யக்கடவே னென்றவாறாம்.
முதலடி – உம்பர்க்குநினைப்பரியாய், அன்பர்க்குஎளியாய் என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள்;
க்ரமாலங்கார மென்பர் வடநூலார்.
“பத்துடையடியவர்க்கெளியவன் பிறர்களுக்கு அரிய, வித்தகன்” என்ப வாதலால், இங்ஙனம் விளிக்கப்பட்டான்.
உம்பர்யார்க்கும் – (நின்பக்கல் மெய்யன்பில்லாத) தேவர்கட்கெல்லாம் என்றபடி. ‘நினைத்தற்கும் அரியாய்’ எனவே,
காணுதல் கிட்டுதல் துதித்தல் முதலியவற்றிற்கு அரியா யென்பது சொல்லவேண்டாதாயிற்று;
நினைப்பு என்பதில் இழிவுசிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நினைப்புஅரியாய் – நான்காம் வேற்றுமைத் தொகை.
‘உம்பர்யார்க்கும் அரியாய்’ என்றவிடத்து, ‘நினைப்பு’ என ஒருசெயலை எடுத்துக்கூறி,
‘நின்னன்பருக்குஎளியாய்’ என்றவிடத்து ஒருசெயலையுங் குறிப்பிடாது பொதுப்பட ‘எளியாய்’ என்றதனால்,
பக்தியுள்ள அடியார்கட்குக் காணுதற்கும் கிட்டுதற்கும் துதித்தல்முதலிய வற்றிற்கும் எளியனாய்
அவர்கள் தீவினையைப் போக்குதலும், அவர்கட்கு நல்வினையை அருளுதலும், அவர்கள் தன்னை வேண்டியபடி
ஏவல்கொள்ளுமாறு அவர்கட்குத் தன்னையேகொடுத்தலும் செய்வனென்க.
‘உம்பர்யார்க்கும் நினைப்பரியாய்’ என்றது – பரத்வத்தையும், “நின் அன்பருக்கு எளியாய்” என்றது – ஸௌலப்யத்தையும் காட்டும்.
வியல் – விசாலமுணர்த்தும் உரிச்சொல்; “வியலென் கிளவி அகலப் பொருட்டே” என்பது தொல்காப்பியம்.
தாள் – சாதியொருமை; ஆதலால், ‘தனை’ என்ற ஒருமை அமையும்.
இனி, சோலைமலைமேல் நின்று அதனைக்காக்கின்ற திருவடிகளையுடைய அழகனே என்றலு மொன்று: இப்பொருளில், தன் – சாரியை.
———-
உடலம் புயங்கத்து உரி போல் விடும் அன்று உவணப் புள்ளின்
அடம் அம் புயமிசை நீ வர வேண்டும் ஐ ஆனற்கும்
மடல் அம்புயற்கும் வரம் தரும் சோலை மலைக்கு அரசே
கடல் அம்பு உயர் வரையால் அடைந்தாய் என்னைக் காப்பதற்கே –53–
(இ – ள்.) ஐ ஆனனற்கும் – ஐந்துமுகங்களையுடையவனான சிவபிரா னுக்கும்,
மடல் அம்புயற்கும் – இதழ்கள்நிறைந்த தாமரைமலரில் தோன்றி யவனான பிரமனுக்கும்,
வரம் தரும் – வேண்டியவரங்களைக் கொடுத்தருள்கின்ற,
சோலை மலைக்கு அரசே – திருமாலிருஞ்சோலைமலைக்குத் தலைவனே!
கடல் அம்பு உயர் வரையால் அடைத்தாய் – சமுத்திரஜலத்தை உயர்ந்தமலைகளைக்கொண்டு அணைகட்டி யடைத்தவனே! –
புயங்கத்து உரி போல் உடலம் விடும் அன்று – பாம்பு தன்தோலைவிட்டுநீங்குதல்போல (உயிர்) உடம்பைவிட்டுநீங்கும் அந்நாளில்,
என்னை காப்பதற்கு – என்னைப் பாதுகாத்தற்காக,
உவணம் புள்ளின் அடல் அம் புயம்மிசை நீ வர வேண்டும் – கருடப் பறவையின் வலிய அழகிய தோள்களின்மேல் (ஏறி)நீ எழுந்தருளவேண்டும்.
இப்பிறப்பின்முடிவிலே, மறுபிறப்பில்லாதபடி என்னைக்காக்குமாறு நீ பெரியதிருவடியின்மே லெழுந்தருளிக் காட்சி தரவேண்டும் என்பதாம்; “சாமிடத்தென்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடுசக்கர மேந்தினானே” என்றார் பெரியாழ்வாரும்.
என்னை – என்உயிரை யென்றபடி.
புஜங்கம் என்ற வடசொல் – மார்பினால் ஊர்வதென்றும், வளைந்துசெ ல்வ தென்றும் காரணப்பொருள்படும்.
உவணம்- ஸுபர்ண மென்ற வட சொல்லின் விகாரம்; அழகியஇறகுகளையுடைய தென்பது அதன்பொருள்:
பர்ணம் – இறகு. வரந்தரும் அரசு என இயையும்; வரந்தரும்மலை எனினும் இழுக்காது.
விளியிரண்டனுள் – முந்தியது – பரத்வத்தையும், பிந்தியது – திவ்வியசக்தியையுங் காட்டும். அம்பு – வடசொல்.
———–
காப்பவன் அந்த மலரோனையும் கறைக் கண்டனையும்
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் புனல் பார் விசும்பு
தீ பவனம் தரும் தெய்வ சிகா மணி சேவடியை
நாப் பவம் நந்தப் புகழ் வார்க்கு ஒப்பு இல்லை நவ கண்டத்தே –54-
(இ – ள்.) காப்பவன் – (எல்லாவுலகங்களையுங்) காத்தற்றொழில்செய் பவனும்,
அந்த மலரோனையும் கறைக்கண்டனையும் – அந்தப் பிரமனையும் சிவனையும்,
பூப்ப அனந்தரம் போக்க வைப்பான் – (முறையே முதலிற்) படைத்தற்றொழில்செய்யுமாறும் பின்பு
(இறுதியில்) அழித்தற்றொழில்செய்யு மாறும் நியமித்துவைப்பவனும்,
புனல் பார் விசும்பு தீ பவனம் தரும் – நீர் நிலம் வானம் நெருப்பு காற்று என்னும் பஞ்சபூதங்களையும் (ஆதியிற்) படைத்தருளிய,
தெய்வ சிகாமணி – தேவர்கட்குச்சிரோரத்தினம் போன்றவனுமான அழகப்பிரானுடைய,
சே அடியை – சிவந்த திருவடிகளை,
பவம் நந்த – (தங்கட்குப்) பிறப்பு இனிஇல்லையாம்படி,
நா புகழ்வார்க்கு – நாவினால் துதிக்கின்ற பாகவதர்களுக்கு,
நவ கண்டத்து ஒப்பு இல்லை – ஒன்பது கண்டங்களிலும் நிகராவார் எவரு மில்லை; (எ – று.)
இது, பாகவதமகிமை கூறியது.
படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழில்களுள், படைத்தலைப் பிரமனைக் கொண்டும்,
அழித்தலைச் சிவனைக்கொண்டும் நடத்தி, காத்தலைத் தானே மேற்கொண்டு நடத்துபவ னென்பது,
முதலிரண்டுவிசேஷணங்களின் கருத்து;
“ஆக்குந்தொழிற்கு விரிஞ்சியைவைத்து அழிக்குந்தொ ழிற்குச் சிவனைவைத்துக்,
காக்குந்தொழில் தான்கைக்கொள் அருட்கட வுள்”,
“ஆக்குமாறயனாம் முதலாக்கியவுலகங், காக்குமாறு செங்கண்ணிறை கருணையங்கடலாம்,
வீக்குமாறரனாம் அவைவீந்தநாள் மீளப், பூக்குமாமுத லெவன் அவன்பொன்னடிபோற்றி” என்றார் பிறரும்.
பூப்ப மலரோனையும், போக்கக் கறைக்கண்டனையும் வைப்பான் என முறையே சென்று இயைதலால்,
முறைநிரனிறைப்பொருள்கோள்.
மலரோன் – திருமாலின் திருநாபித்தாமரைமலரில் தோன்றியவன்.
“அந்தமலரோன்” என்றது, பிரசித்தி பற்றி; உலகறிசுட்டு.
அந்தம் மலரோன் என்று எடுத்து, அழகிய தாமரை மலரில் தோன்றியவ னெனினும் அமையும்.
கறைக்கண்டன் – பாற்கடலில் தோன்றிய விஷத்தை யுண்டதனாற் கறுத்த கழுத்தை யுடையவன்.
இனி, “அந்தமலரோனையும் கறைக்கண்டனையும்” என்பதை மத்திமதீபமாக “காப்பவன்” என்றதனோடும் இயைத்து,
அவர்களையுமுட்படப் பாதுகாப்பவ னெனினும் அமையும்.
ஐம்பெரும்பூதங்கள் முறைபிறழக் கூறப்பட்டன, செய்யுளாதலின்.
தெய்வசிகாமணி – தேவர்கள்முடிமேற்கொள்ளும்இரத்தினம் போன்றவன்; அவர்களாற் சிரமேற்கொண்டு கொண்டாடப்படுபவன்:
தேவாதிதேவன் இது, திருமாலிருஞ்சோலைமலையெம்பெருமான் திருநாமங்களி லொன்று.
புகழ்வார்க்கு என்றவிடத்து, ‘நா’ என வேண்டாதுகூறியதனால், நாப்படை த்தபயன்பெறுமாறு புகழ்வார்க்கு என விசேஷார்த்தங்கொள்க;
“பஞ்சவர்க்குத் தூது, நடந்தானை யேத்தாத நா வென்னநாவே,
நாராயணாவென்னா நா வென்னநாவே” என்றார் பிறரும்.
நந்துதல் – அழிதல். நவகண்டம் – கீழ் விதேகம், மேல்விதேகம், வடவிதேகம் , தென்விதேகம், வடவிரேபதம்,
தென்னிரேபதம், வடபரதம், தென்பரதம், மத்திமம் என்பன.
இதற்குப் பிறவாறு கூறுதலு முண்டு. நவகண்டத்தும் என இணைத்தென்றறிபொருளில் வரும் முற்றும்மை விகாரத்தால் தொக்கது.
நான்காமடியில், பவனந்த என்றவிடத்தில், நகரம் னகரமாகக்கொள் ளப்பட்டது, திரிபுநயத்திற்காக.
————-
கண்டா கனன் கண்ணன் அல்லால் கதி இன்மை கண்டு அடைந்தது
உண்டாக நம்ப ஒட்டாது உங்கள் ஊழ் வினை உண்மை அறிந்து
அண்டா கன வண்ணனே அருளாய் என்று அழகனுக்கே
தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் பிறர் தொண்டர்களே –55-
(இ – ள்.) பிறர் தொண்டர்களே – வேறுதெய்வங்கட்கு அடிமையா யிருப்பவர்களே! –
கண்டாகனன் – கண்டாகர்ணனென்பவன்,
கண்ணன் அல்லால் கதி இன்மை – ஸ்ரீகிருஷ்ண பகவானேயல்லாமல் (முத்தியளிக்கத்தக்க) புகலிடம் வேறுஇல்லாமையை,
கண்டு – அறிந்து,
அடைந்தது – (அப்பெருமானையே) சரணமடைந்த செய்தி,
உண்டு ஆக – உளதாயிருக்க வும்,
உங்கள் ஊழ்வினை நம்ப ஒட்டாது – உங்கள்விதியானது (அதனை) நம்பும்படி செய்யாது; (இனிமையாயினும் நீங்கள்),
உண்மை அறிந்து – யதார்த்தத்தைத் தெரிந்துகொண்டு,
அண்டா கனம் வண்ணனே அருளாய் என்று “இடைப்பிள்ளையாய் வளர்ந்தவனே! மேகம்போலுந் திருநிறமுடையவனே! கருணைபுரிவாய்” என்று,
அழகனுக்கே தொண்டு ஆக நல் நெஞ்சினால் உரைப்பீர் – அழகனுக்கே அடிமையாகுமாறு நல்லமனத்துடன் சொல்லுங்கள்; (எ – று.)
“எந்தை வானவர்க்கும், வணங்கரியா னன்றிக் காப்பாரில்லாமை விண்மண்ணறியும்,
வணங் கரியானவர் வாணன் கண்டாகனன் மார்க்கண் டனே” என்றபடி ஸ்ரீமந்நாராயணனே பரம்பொரு ளென்று
சாதித்தற்குச் சாக்ஷியாகிற திவ்வியசரித்திரங்களுள், முதலிற் சிவபக்தியோடு விஷ்ணு த்வேஷமும் மேலிட்டிருந்த
கண்டாகர்ணன் பின்பு சிவனால்முத்திபெறமாட்டாது கண்ணபிரானாற் பெற்றன னென்ற வரலாறு சிறத்தலால்,
அதனை இங்கு எடுத்துக்காட்டினர்.
“கனவண்ணாவென்றோதொலிவந்தடையா, ஈனக்கண்டாகனற்கீந்தான்பரகதி யென்னப்பனே” என்றார் திருவேங்கடத்தந் தாதியிலும்.
க்ருஷ்ணன் என்ற திருநாமம் – கருநிறமுடையவ னென்றும், (கண்டவர் மனத்தைக்) கவர்பவனென்றும்,
(எல்லாவற்றையுஞ்) செய்பவ னென்றும், மற்றுஞ் சிலவகையாகவும் பொருள்படும்.
ஊழ்வினை – ஜந்மாந்தரகர்மம்; இங்கு இது, பாவத்தின்மேல் நின்றது.
இரண்டாமடியிலும், நான்காமடியிலும் நகரம் னகரமாகக் கொள்ளப்பட்டது, திரிபுநயத்தின்பொருட்டு.
இரண்டாமடியில், ஆகல்என்று பதம்பிரித்துத் தொழிற்பெயராக வுரைத்தலும் அமையும்.
————
தொண்டு படார் திருமால் இருஞ்சோலையில் சோதிக்கு அன்பு
கொண்டு படா மலர் இட்டு இறைஞ்சார் மடக்கோதையரைக்
கண்டு படா முலை தோய் அனுராகம் கருதி இரா
உண்டு படா நிற்கும் போதும் நைவார் எங்கன் உய்வதுவே –56–
(இ – ள்.) (சிற்றறிவாளர்கள்,) திருமாலிருஞ் சோலையில் சோதிக்கு – திருமாலிருஞ்சோலைமலையி லெழுந்தருளியிருக்கிற பரஞ்சோதி சொரூபியா கிய அழகப்பிரானுக்கு,
அன்புகொண்டு தொண்டுபடார் – பக்திகொண்டு அடிமைப்படார்;
படா மலர் இட்டு இறைஞ்சார் – வாடாத மலர்களை (அப் பெருமான் திருவடிகளில்) இட்டு அருச்சித்து வணங்கார்;
மடம் கோதையரை கண்டு – இளமைப்பருவமுடைய மாதர்களைப் பார்த்து,
படாம் முலைதோய் அனுராகம் கருதி – கச்சணிந்த அவர்கள் கொங்கைகளில் அணைகிற இன்பத்தில் ஆசையை மனத்திற்கொண்டு,
இரா உண்டு படாநிற்கும்போது நைவார் – இராப்பொழுதில் உணவுண்டு படுத்துக்கொள்ளும்போது வருந்துவார்கள்;
(இப்படிப்பட்டவர்கள்), உய்வது – நற்கதிபெறுவது,
எங்ஙன் – எவ்வாறோ? (எ – று.) – ஈற்றுஏகாரம் – இரக்கம்.
பேரின்பத்தைத்தரவல்ல பெருமான்பக்கல் அன்புகொண்டு அவனுக்கு ஆட்பட்டு அருச்சியாது
சிற்றின்பவாசையால் தவிப்பவர்கள் உய்யுமாறு இல்லை யென்பதாம்.
இது, சிலவகை லௌகிகர்களுடைய இயல்பை நோக்கி இரங்கிக் கூறியவாறாம்;
லோககாயதிகனென்னுஞ் சார்வாகனது கொள்கையை வெறுத்துக்கூறியது இது வென்னலாம்.
படாமலர் . செவ்விமாறாத பூ – கோதையர் – பூமாலைபோன்ற மெல்லியலார்;
(செயற்கை யழகின் பொருட்டுப்) பூமாலையைத் தரித்தவர்கள்; (இயற்கையிற்) கூந்தலகுடையவர்கள்,
படாம் – படம் என்ற வடசொல்லின் விகாரம்; (கடம் = கடாம் என்பது போல.) ஆடையைக்குறிக்கிற இச்சொல்,
இங்குக் கஞ்சகத்தைக் குறித்தது: பொதுப்பெயர், சிறப்புப்பொருளுணர்த்திற்று.
அநுராகம் – வடசொல். எங்ஙன் – எங்ஙன மென்பதன் விகாரம்.
“பெண்டிராற்சுகங்களுய்ப்பான் யெழுந்தோரிடும்பைபூண்டு,
உண்டிராக் கிடக்கும்போது உடலுக்கே கரையேது,
தண்டுழாய்மாலை மார்பன் தமர்களாய்ப் பாடியாடித்,
தொண்டுபூண்ட முதமுண்ணாத்தொழும்பர் சோறுகக்குமாறே” என்ற திருமாலையை அடியொற்றியது, இச்செய்யுள்.
———–
உய்வம் தொழும்பு செய்து என்று இருப்போமை உய்யாமல் ஐவர்
பெய்வம் தொழு வினைக்கே என்பரால் பெருந்தேன் சிகரம்
தைவந்து ஒழுகும் மலை அலங்கார சதுமுகத்துத்
தெய்வம் தொழும் தெய்வமே என் கொலோ உன் திரு உளமே –57–
(இ – ள்.) பெருந் தேன் – மிகுதியான தேன்,
சிகரம் தைவந்து ஒழுகும் – சிகரத்தைத் தடவிக்கொண்டு பெருகப்பெற்ற,
மலை – திருமாலிருஞ் சோலைமலையி லெழுந்தருளியிருக்கிற,
அலங்கார – அழகனே!
சது முகத்து தெய்வம் தொழும் தெய்வமே – நான்குமுகங்களையுடைய கடவுளாகிய பிரமதேவனும் வணங்கப்பெற்ற முதற்கடவுளே! –
தொழும்பு செய்து உய்வம் என்று இருப்போமை “(உனக்கு)அடிமைசெய்துஉஜ்ஜீவிப்போம் ” என்று எண்ணியிருக்கின்ற எங்களை,
ஐவர்-ஐம்பொறிகளாகிய பகைவர்கள்,
உய்யாமல்தொழுவினைக்கே பெய்வம் என்பர்- (அங்ஙனம்) உஜ்ஜீவிக்கவொட்டாதபடி கொடிய பாவங்களிலே
(உங்களை) அகப்படுத்துவோம்” என்று கறுவிச் சொல்லுகின்றார்கள்;
உன் திருஉளம்என்கொலோ (இவ்விஷயத்தில்) நின்திருவுள்ளக்கருத்து யாதாயிருக்கின்றதோ? (எ – று.) – ஆல் – ஈற்றசை.
“வாழ்விப்பானெண்ணமோ வல்வினையி லின்னமென்னை, ஆழ்விப்பா னெண்ணமோ அஃதறியேன் –
தாழ்விலாப், பாடலழகார் புதுவைப்பட்டர் பிரான் கொண்டாடுங், கூடலழகா நின்குறிப்பு” என்றபடியாம்.
எதுவும் அவனையன்றி அசையாதாதலால், “உன்திருவுளம் என்கொலோ” என்றார்.
ஐம்பொறிகளை “ஐவர்” என உயர்திணையாகக் கூறியது, இழிப்புப்பற்றிய திணைவழுவமைதி.
தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் “தாம் வந்தார் தொண்டனார்” என்பது
உயர்சொல் குறிப்புநிலையின் இழிபு விளக்கிற்று’ என்றது, இங்கு உணரத்தக்கது. ஐவர் – தொகைக்குறிப்பு.
ஐம்பொறிகளின் வழியாக ஐம்புலன்களையும் வேண்டியபடியெல்லாம் அனுபவிக்க விரும்பும் ஆசை
எங்களைத் தீவழிச்செலுத்த முயல்கின்றது என்றவாறாம்.
தொழுவினை – தொழுமரம்போல அகப்படுத்தி வருத்துங்கருமம்; குட்டநோய் போலக் கொடிய கரும மெனினுமாம்.
தொகுதியாகிய கரும மென்னவும் படும்; ஏ – பிரிநிலையோடு இழிவுசிறப்பு.
தைவந்து, தைவா – பகுதி; தைவரல் – தடவுதல் கோட்டுப்பூ முதலிய மலர்களினின்றும் தேன் கூடுகளினின்றும்
பெருகுகின்ற மிக்கதேன் சிகரத்தின் மீதெல்லாம் வழிந்தோடப்பெற்ற மலையென்க.
எல்லாப்பொருள்களையும் படைக்கிற கடவுளும் வணங்கும்படி யான தெய்வ மெனவே,
அவனது படைப்புக்கு உட்பட்ட பிறரெல்லாரும் வணங்கத்தக்க தெய்வமென்பது சொல்லவேண்டாதாயிற்று.
என் என்ற முற்றே வினாப்பொருளைக் காட்டியதனால், கொல் ஓ – அசைகள்; கொல் – ஐயமுமாம்.
————
திருவிளையாடு திண் தோள் செங்கண் மால் பல தேவருடன்
மருவு இளையான் திருமால் இருஞ்சோலை மலை என ஓர்
உரு விளையாமல் பிறப்பார் பலர் புகழ் ஓதி சிலர்
கரு இளையா நிற்க வித்தாவர் முத்தியில் காமம் அற்றே –58-
(இ – ள்.) “திரு விளையாடு திண் தோள் – வீரலக்ஷ்மி வீற்றிருந்து குலாவுதற்கிடமான வலியதோள்களையுடைய,
செம் கண் மால் – சிவந்த திருக் கண்களையுடைய திருமாலும்,
பலதேவருடன் மருவு இளையான் – (தனக்குத்தமையனான) பலராமருடனே மனங்கலந்து பொருந்திய தம்பியுமாகிய எம்பெருமானது,
திருமாலிருஞ்சோலைமலை-‘, என – என்று,
ஓர் உரு விளையாமல் – ஒருதரமேனும் சொல்லாமல்,
பிறப்பார் – (கருமம் ஒழியப்பெறாது மாறிமாறிப் பலபிறப்பும்) பிறந்து வருந்துபவர்,
பலர் – (உலகத்திற்) பலராவர்;
சிலர் – சிலபேரோ,
காமம் அற்று – சிற்றின்பவாசையொழிந்து,
புகழ்ஓதி – (அத்திருமலையின்) மகிமையை எடுத்துச்சொல்லி, (அதனால்),
கரு இளையாநிற்க – பிறப்புக்கள் (இனித் தம்மைச் சேரமாட்டாவாய்) வலிகுன்றி நிற்க,
முத்தியில் வித்துஆவர் – வீட்டுலகத்தில் முளைக்கும் விதையாவார்கள்.
முத்திபெறத்தக்கவராவ ரென்பதாம். “முத்தியில்வித்தாவர்” என்பதை,
“உரனென்னுந் தோட்டியா னோரைந்துங் காப்பான், வரனென்னும் வைப்புக் கோர் வித்து” என்றாற்போலக் கொள்க:
அத்திருக்குறளினுரையிற் பரிமேலழகர் “அந்நிலத்திற்சென்று முளைத்தலின், “வித்து” என்றார்;
ஈண்டுப்பிறந்திறந்து வரும் மகனல்லன் என்பதாம்” எனஉரைத்தது, இவ்விடத்திற்கும் ஏற்கும்.
திருவிளையாடுதிண்டோள் – வெற்றித்திரு நீங்காதுஉறையுந்தோள்என, புயவலிமை கூறியவாறாம்.
இனி, பெரியபிராட்டியார் தழுவிவிளையாடப் பெற்ற திண்ணியதோள்க ளெனினுமாம்.
திருவிளையாடுதிண்டோள் – திருமகள் விளையாடும்மலைகள்போலுள்ளன தோள்க ளென்ற குறிப்பு;
“திருவிளையாடுதிண்டோள் திருமாலிருஞ்சோலைநம்பி” என்றார் ஆண்டாளும்:
“பெரிய பிராட்டியார்க்கு லீலார்த்தமாகச் சேண்குன்று சமைத்தாற்போலே யாய்த்துத் திருத்தோள்களிருப்பது” என்று அங்கு உரைத்தனர் ஆன்றோர்.
கண்களிற் சிலசிவந்தரேகைகளிருத்தல் உத்தமவிலக்கண மாதலால், “செங்கண் மால” என்றார்.
செங்கண் – செந்தாமரைமலர்போன்ற கண் என்ற குறிப்பு; செங்கண்மால் – புண்டரீகாக்ஷன்.
பலராமன் – கண்ணனுக்குத் தமையன், திருமாலின் எட்டாம் அவதாரம்:
வசுதேவனுடைய பத்தினிகளுள் தேவகியின் ஏழாவது கருப்பத்திலே முதலில் ஆறுமாசந்தங்கிப் பின்பு ரோகிணியின்
கருப்பத்திற் சென்றுசேர்ந்து ஆறுமாசம் இருந்து பிறந்தவன். இவனிடத்து ஆதிசேஷாம்சமும் உண்டு.
“பலதேவனென்னுந், தன் நம்பியோடப் பின்கூடச்செல்வான்”,
“பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கோர் கீழ்க் கன்றாய், இட்டீறிட்டு விளையாடி யிங்கேபோதக் கண்டீரே” என்றபடி
முறைதவறாமல் தமையனான பலராமனுக்குக் கீழ்ப்படிந்து அவனைத்தழுவி நடப்பவன் கண்ண னென்பார்,
“பலதேவருடன் மருவிளையான்” என்றார். பலதேவர் என்ற வடமொழிப்பெயர்,
பலத்தினால் விளங்குபவரென்று பொருள்படும். நம்பிமூத்தபிரா னென்பது, இவர்க்குச் சம்பிரதாய நாமம்.
விளைத்தல் – நிகழ்த்துதல். உருவிளைத்தல் – உருச்சொல்லுதல்.
“திரு மாலிருஞ்சோலையென வோருரு விளையாமற் பிறப்பார்” எனவே, அங்ஙனம் ஒருமுறை கூறினாலும்
முத்திசித்திக்கு மென்பது போதரும். கரு – கர்ப்ப மென்ற வடசொல்லின் சிதைவு; பிறப்புக்கு இலக்கணை.
காமமற்றுப் புகழோதி – காமியபலன்களை விரும்புதலின்றி (நிஷ்காம்யமாக) எம்பெருமானுடைய கீர்த்தியை
எடுத்துச் சொல்லி யெனினுமாம். இனி, ‘சிலர், முத்தியிற் காமமற்று – வீடுபெறும்விருப்பமின்றி,
திருமாலிருஞ்சோலைமலையென்று ஒருதரமேனுஞ் சொல்லாமல், உலகத்தில் தம்மைப்போலப் பிறந்திறந்து
வருந்துபவராகிய பலருடைய புகழை எடுத்தோதி, கரு (பிறப்பு) மேன்மேல் விளைதற்கு வித்தாவர்’ என உரைப்பினும் அமையும்.
———–
காமத் தனை பொய் அழுக்காறு கோபம் களவு கொலை
ஆம் அத்தனையும் உடையேனை ஆறும் கொல் ஆன் பொருப்பு ஆம்
தாமத்து அனைவரும் போற்ற நின்றான் பண்டு தாமரையோன்
பூமத்தனைச் செய்த நோய் துடைத்தான் அடிப் போதுகளே –59-
(இ – ள்.) ஆன் பொருப்பு ஆம் தாமத்து – இடபகிரியாகிய இடத்திலே,
அனைவரும் போற்ற நின்றான் – எல்லாரும் (தன்னை) வணங்கும்படி நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருப்பவனும், –
தாமரையோன் – தாமரைமலரில் தோன்றியவனான பிரமன்,
பண்டு – முன்பு (தன்தலையைக்கிள் ளியகாலத்தில்),
பூ மத்தனை செய்து – ஊமத்தம்பூவைச் சூடுபவனான சிவபிரானுக்கு உண்டாக்கிய (பிரமகத்தி தோஷத்தாற் கையிற்கபாலமொட்டிக் கொண்டதனா லாகிய),
நோய் – (பிச்சையெடுத்தல்) துன்பத்தை,
துடைத்தான் – தீர்த்தருளியவனு மாகிய எம்பெருமானுடைய,
அடி போதுகள் – திருவடித்தாமரைமலர்களானவை, –
காமத்தனை – சிற்றின்பவாசையையுடை யவனும்,
பொய் அழுக்காறு கோபம் களவு கொலை ஆம் அத்தனையும் உடையேனை – பொய்யும் பொறாமையும் கோபமும்
திருட்டுத்தனமும் கொல்லுதற்றொழிலு மாகிய அவ்வளவு தீங்குகளை யுடையவனுமான என்னை,
ஆளும் கொல் – பாதுகாத்தருளுமோ? (எ – று.)
இங்ஙனங் கூறியது, நைச்யாநுஸந்தாநம்; அதாவது – தம்மைத் தாழ்த்திக் கூறுவது:
“அரும்பாதகன் பொய்யன் காமுகன் கள்வன் அருள்சிறிதும்,
அரும்பாதகன்னெஞ்சன் ஆறாச்சினத்தன் அவாவினின்றுந்,
திரும்பாதகன் மத்த னானேற்குச் சேடச்சிலம்பமர்ந்த,
திரும்பாதகஞ்சந் தரி லதுகா ணுன்றிருவருளே” என்றார் திருவேங்கடத்தந்தாதியிலும்.
“பண்டேயுன் தொண்டாம் பழவுயிரை யென்னதென்று, கொண்டேனைக் கள்வனென்று” என்றபடி
எம்பெருமானுக்குஉரியதான உயிரை அங்ஙனம் பகவததீநமெ ன்றுகருதாது ஸ்வதந்திரமென்று எண்ணுதலும்,
அவ்வாறு மாறாக எண்ணி அதனைக்கெடுத்தலும், “களவு கொலை” எனப்பட்டன.
அழுக்காறு – பிறராக்கம்பொறாமை: அழுக்கறு என்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர்: அழுக்கறு – ஒருசொல்.
இனி, அழுக்கு அறு என்னும்இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல்தன்மைப்பட்டு, எதிர்மறையிலக்கணையால்,
குற்றத்தைநீக்கு என்னும் பொருளைத் தராமல் குற்றத்தையுடையவனாகு எனப் பொருள்பட்டுப்
பொறாமையைக் குறித்த தென்றுங் கொள்ளலாம். கொல் – வினா. மத்தம் – ஊமத்தையென்னும் பொருளதாதலை,
“கரந்தை மத்தமொ டெருக்கலர் கூவிளை கடுக்கை, நிரந்த பொற்சடை நின்மலக்கொழுந்து” எனக் கம்பராமாயணத்திலுங் காண்க.
ஊமத்தைக்கு ‘பூமத்தம்’ என்று ஒருபெயர் வழங்குதலும் உண்டு.
———-
போது அகத்தானும் வெண் போதகத்தானும் புராந்தகனும்
தீது அகத்து ஆனது தீர் தரும் காலை திரு அரை சேர்
பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் பின்னை என்ன
பாதகத்தால் மறந்தோ தனி நாயகம் பாவிப்பரே –60-
(இ – ள்.) போது அகத்தானும் – தாமரைமலரைத் (தான்பிறந்த) இடமாக வுடையவனான பிரமனும்,
வெள் போதகத்தானும் – (ஐராவதமென்னும்) வெள்ளையானையையுடையவனான இந்திரனும்,
புர அந்தகனும் – திரிபுரத் துக்கு அழிவுசெய்தவனான சிவனும், –
அகத்து ஆனது தீது தீர்தரும் காலை – (அசுரர் அரக்கர் முதலிய கொடியவர்கள் செய்யும் உபத்திரவங்களால்)
தம் மனத்திலுண்டான துன்பம் நீங்கவேண்டியசமயத்தில்,
திரு அரை சேர் பீதகத்தாய் அழகா அருளாய் என்பர் – ‘திருவரையிற்பொருந்திய பீதாம்ப ரத்தையுடையவனே!
அழகனே! (எம்பக்கல்) கருணைசெய்வாய்’ என்று துதித்துப் பிரார்த்திப்பார்கள்;
பின்னை – (அப்பரமனருளால் தமது துயர்தீர்ந்த) பின்பு, –
என்ன பாதகத்தாலோ – என்ன தீவினையினாலோ,
மறந்து – (அப் பெருமான் தங்கட்குச்செய்த உபகாரத்தையும் தங்கள் நிலைமையையும்) மறந்துபோய்,
தனி நாயகம் பாவிப்பர் – ஒப்பற்ற தலைமையைத் தமக்குஏறிட்டுக் கொண்டு அதற்குஏற்ப ஒழுகுவார்கள்! (எ – று.)
தமக்கு ஆபத்துவந்தபோது அதனைத்தீர்த்துக்கொள்ளத் திறமில்லா மல் எம்பெருமான் திருவடிகளில் விழுந்து சரண்புகுந்து,
அவனாற்காரியங்கொண்டபின்பு “யானே முழுமுதற்கடவுள்” என்று செருக்கிப்பேசித் திரிந்து
தீவினைக்கு உள்ளாவது என்ன பேதைமை! என்று, பிரமன் முதலிய தலைமைத் தேவர்களின் இயற்கையைக்குறித்து இரங்குகின்றார்.
போதகம் – பத்துப்பிராயத்து யானைக்கன்று; இங்கு யானையென்ற மாத்திரமாய் நின்றது.
பீதகம் – பொன்னிறம், பொன். அகத்து ஆனது தீது – தம்மிடத்து உண்டாகிய தீமை யெனினுமாம்.
—————————————————————–————————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை பெருமாள் ஐயங்கார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply