ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்–

ஶ்ரீ ஜெகந்நாத அஷ்டகம்

கதாசித் காலிந்தீ தட விபின சங்கீதகரவோ
முதாபீரீ நாரீ வதன கமலாஸ்வாத மதுப:
ரமா சம்பு ப்ரஹ்மாமர பதி கணேசார்ச்சித பதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 1

யமுனைக்கரையில் உள்ள சோலைகளில், சில வேலைகளில் பகவான் ஜெகந்நாதர் மிக்க ஆனந்தத்துடன்,
புல்லாங்குழலை ஊதி, இசைக்கச்சேரி நிகழ்த்துவார்.
அவர் விரஜபூமியிலுள்ள இடையர்குல கன்னியர்களின் தாமரை போன்ற, வதனங்களை சுவைக்கும், பெரும் வண்டு போன்றவர்.
அவருடைய தாமரைப் பாதங்கள் லக்ஷ்மி, சிவன், பிரம்மா, இந்திரன், கணேசன் போன்ற மகா ஜனங்களால், பூஜிக்கப்படுகின்றன.
அந்த ஜெகந்நாத ஸ்வாமியே, எனது காட்சிக்குரியவராக இருக்க வேண்டும்.

———

புஜே சவ்யே வேணும் சிரசி சிகி பிச்சம் கடி தடே
துகூலம் நேத்ராந்தே சஹசரி கடாக்ஷம் விதததே
சதா ஸ்ரீமத் வருந்தாவன வசதி லீலா பரிச்சயோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே பதம் 2

பகவான் ஜெகந்நாதரின் இடது கரத்தில், புல்லாங்குழலை வைத்திருக்கின்றார். தலையில் மயிலிறகை அணிந்துள்ளார்.
இடுப்பில் மஞ்சள் நிறபட்டாடை உடுத்தியிருக்கிறார்.
அவருடைய கடைக்கண்கள், அவருடைய பிரேம பக்தர்களைப் பார்த்து அருளை பொழிந்து கொண்டிருக்கின்றன.
அவர் தனது நித்ய இருப்பிடமாகிய, விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்து கொண்டு, தன்னை வெளிப்படுத்திகிறார்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி எனக்கு காட்சிக்கொடுக்க மாட்டாரா ?

——–

மஹாம்பேதேஸ் தீரே கனக ருசிரே நீல சிகரே
வசன் ப்ராசாதாந்த : சகஜ பல பத்ரேன பலினா
சுபத்ரா மத்யஸ்த சகல சுர சேவாவசர தோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 3

பெரிய சமுத்திரத்தின் கரையில், தங்கமயமான நீலாசல மலையின் உச்சியல், இருக்கும் பெரிய மாளிகையில்,
சக்தி வாய்ந்த சகோதரர் பலபத்ரருடனும் நடுவிலே, தங்கை சுபத்ரையுடனும் விற்றிருந்து, பகவான் ஜெகந்நாதர் தேவர்களைப் போன்ற,
தன்மை கொண்ட ஆத்மாக்களுக்கு, பக்தி சேவையாற்றும் சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது தான் என் வாழ்வின் நோக்கம்.

———

கிருபா பாராவார சஜல ஐலத ஸ்ரேணி ருசிரோ
ரமா வாணி ரமா ஸ்புரத் அமல பங்கேருஹ முக
சுரேந்திரைர் ஆராத்ய ஸ்ருதி கண சிகா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே –பதம் 4

பகவான் ஜெகந்நாதர் கருணாசமுத்திரம். மழை முகில்களின், கறுப்புக் கோடுகள் போன்ற அழகு நிறைந்தவர்.
லக்ஷ்மி தேவியின் இன்ப வார்த்தைகளால், திருப்தியடைபவர்.
அவருடைய வதனம், நன்றாக மலர்ந்த தாமரை மலர் போன்று அப்பழுக்கற்றது.
அவர் தேவர்களாலும், முனிவர்களாலும், பூஜிக்கப்படுகிறார். அவருடைய புகழ் உபநிஷத்துகளில் பாடப்படுகின்றன.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பதுதான் எனது ஆவலும், நோக்கமும்.

———-

ரதாருடோ கச்சன் பதி மிலித பூதேவ படலை
ஸ்துதி ப்ராதுர்பாவம் ப்ரதி பதம் உபாகர்ண்ய சதய
தயா சிந்துர் பந்து சகல ஜகதாம் சிந்து சுதயா
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 5

பகவான் ஜெகன்நாதர் ரதத்தில், வீதி வழியாக, அசைந்து பவனி வரும் பொழுது, ஒவ்வொரு அசைவிலும்,
உரக்க பாராயணம் பண்ணுகின்றவர்களின் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்.
அத்துடன் பிராமணர்கள் ஓதும் வேதப் பாடல்களும் கேட்கும்.
அவர்களின் ஸ்லோகங்களை கேட்டுக்கொண்டு, பகவான் ஜெகன்நாதர் அவர்களுக்கு சாதகமாக அவர்களை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார்.
அவர் கருணாசமுத்திரம். உலகனைத்திற்கும் உண்மையான நண்பன்.
அந்த ஜெகந்நாத ஸ்வாமி, அமிர்தக் கடலிலிருந்து தோன்றிய லக்ஷ்மி சமேதராய் பார்ப்பது தான் எனது ஒரே ஆவல் ஒரே நோக்கம்.

————

பர ப்ரம்மா பீட : குவலய தலோத்புல்ல நயனோ
நிவாஸி நீலாத்ரி நிகித் சரணோ அனந்த சிரஸி
ரசானந்தீ ராதா சரஸ வபுர் ஆலிங்கன சுகோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 6

நீலத்தாமரை இதழ்களின் அடுக்குகளை போன்ற, அழகிய தலைப்பாகை அணிந்திருக்கும், பரப்பிரம்மமாகிய பிரபு ஜெகந்நாதரின் கண்கள்,
நன்கு மலர்ந்து சிவந்த தாமரை மலரைப் போன்று விரிந்து பரவசமூட்டுகிறது.
நீலாசல மலையில் வசிக்கும் அவரது பாதார விந்தங்கள், அனந்த தேவனின் தலையிலே வைக்கப்பட்டிருக்கிறது.
பகவான் ஜெகந்தாதர் மாதுர்ய ரசத்தில் திளைத்து, குளிர்ந்த குளம் போன்று திகழும்
ஶ்ரீமதி ராதா ராணியின் மேனியினைத் தழுவிப் பேரானந்தமடைகிறார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியை காண்பது ஒன்றே எனது வாழ்வின் நோக்கமாகும்.

————

ந வை யாசே ராஜ்யம் ந ச கனக மாணிக்ய விபவம்
ந யாசே அஹம் ரம்யாம் சகல ஜன காம்யாம் வர வதூம்
சதா காலே காலே பிரமத பதினா கீத சரிதோ
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 7-

இந்த ராஜ்யத்தை விரும்பியோ அல்லது பொன், மாணிக்கம் , போன்ற செல்வத்தை வேண்டியோ பாராயணம் செய்ய வில்லை.
திறமையும் அழகும் நிறைந்த மனைவி வேண்டும், என மற்றவர்கள் ஆசைப்படுவது போல, நான் ஆசைப்படவில்லை.
நான் ஜெகந்நாத ஸ்வாமியை விருப்பி பாராயணம் பண்ணுகிறேன். அவருடைய புகழை சிவபெருமான் எப்போதும் பாடுகின்றார்.
அத்தகைய ஜெகந்நாத ஸ்வாமியைக் காண்பது ஒன்றே எனது நோக்கம்.

————

ஹர த்வம் சம்சாரம் த்ருததரம் அசாரம் சுர பதே
ஹர த்வம் பாபானாம் விததிம் அபராம் யாதவ பதே
அஹோ தீனே நாதே நிஹித சரணோநிச்சிதம் இதம்
ஜகந்நாத ஸ்வாமி நயன பத காமி பவதுமே–பதம் 8

தேவர்களுக்கு அதிபதியே ! தயவு செய்து இந்த பயனற்ற, பிரபஞ்ச வாழ்க்கையை விரைவில் நீக்கி விடுவீராக!
யது வம்சத்தின் தலைவனே! கரையற்ற சமுத்திரமாகிய பாவக் கடலை அழிப்பீராக !
ஐயஹோ வீழ்ச்சியடைந்தவர்களுக்கு வேறு கதியில்லை.
ஆனால் ஜெகந்நாதரின் பாதாரவிந்தங்கள், என்றும் தஞ்சம்ளிக்கும் என்பது நிச்சயம்.
அத்தகைய ஜெகந்நாதரை காண்பதே எனது நோக்கம்.

————-

ஜகந்நாதாஷ்டகம் புண்யம்
ய : படேத் ப்ரயத : ஸுச்சி:
ஸர்வ பாப விசுத்தாத்மா
விஷ்ணு லோகம் ஸ கச்சதி–பதம் 9

தன்னுணர்வு பாதையில் வழுவாது முன்னேறிக் கொண்டிருக்கும், நல்லொழுக்கம் மிக்க ஒவ்வொரு ஜீவாத்மாவும்,
பகவான் ஜெகந்நாதரை போற்றும் எட்டு பாடல்கள் அடங்கிய, இந்த ஜெகந்நாதாஷ்டகத்தை, தினமும் ஓதுவதன் மூலம்,
தனது பாவ விளைவுகளில் இருந்து முற்றிலும் விடுதலை பெறுவதுடன் ,
இறுதியில் பகவத் தாமமான கோலோகத்( வைகுண்டத்)தை அடைவது நிச்சயம்.

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸூபத்ரா தேவி ஸ்ரீ நம்பி மூத்த பிரான் ஸமேத ஸ்ரீ புண்டரீகாக்ஷ பெருமாள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading