இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி
இனத்துத்தி அணி பணம் ஆயிரங்கள் ஆர்ந்த
அரவரச பெரும் சோதி அனந்தன் என்னும்
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
திரு அரங்க பெரு நகருள் தெண்ணீர் பொன்னி
திரை கையால் அடி வருட பள்ளி கொள்ளும்
கருமணியை கோமளத்தை கண்டு கொண்டு என்
கண் இணைகள் என்று கொலோ களிக்கும் நாளே–1-1-
பதவுரை
திரு அரங்கம்–ஸ்ரீரங்கமென்கிற
பெரு நகருள்–பெரிய நகரத்திலே
இருள் இரிய சுடர் மணிகள் இமைக்கும்–இருளானது சிதறி யொழியும் படி ஒளி விடுகின்ற மணிகள் விளங்கா நிற்கப் பெற்ற
நெற்றி–நெற்றியையும்
இனம் துத்தி–சிறந்த புள்ளியையும்
அணி–அழகாக உடைய–
ஆயிரம் பணங்கள் ஆர்ந்த–ஆயிரம் படங்களை உடையவனாய்
அரவு அரசன்–நாகங்களுக்குத் தலைவனாய்
பெரு சோதி–மிக்க தேஜஸ்ஸை யுடையனான
அனந்தன் என்னும்–திருவனந்தாழ்வானாகிற
அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை–அழகு மிக்கு உயர்த்தியை யுடைய வெண்ணிறமான திருப் படுக்கையிலே
மேவி–பொருந்தி
தெள் நீர் பொன்னி–தெளிந்த தீர்த்தத்தையுடைய காவிரி யானது
திரை கையால் அடி வருட–அலைகளாகிற கைகளாலே திருவடிகளைப் பிடிக்க
பள்ளி கொள்ளும்–திருக் கண் வளர்ந்தருளா நின்ற
கரு மணியை–நீல மணி போன்றவராய்
கோமளத்தை–ளெஸகுமார்யமே வடிவெடுத்தவரான பெரிய பெருமாளை
என் கண் இணைகள்–என் கண்களானவை
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
களிக்கும் நாள்–ஆநந்தடையும் நாள்
என்று கொல்–எந்நாளோ!
திருவரங்கம் பெரிய கோயிலில் உபய காவேரீ மத்யத்தில் திருவனந்தாழ்வான் மீது
திருக் கண் வளர்ந்திருளா நின்ற அழகிய மணவாளனை அடியேன் கண்ணாரக் கண்டு
களிக்கும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ! என்கிறார்.
ஆயிரம் பைந்தலைய அனந்தனாகையால்
ஒவ்வொரு தலையிலும் ஒவ்வொரு மாணிக்க மணி உண்டாகையால் மணிகள் எனப்பட்டது.
ஒரு மணியின் சுடரே இருளனைத்தையும் ஒழிக்கவற்றாயிருக்க,
ஆயிரம் மணிகளின் சுடரால் இருளிரியச் சொல்ல வேண்டாவே.
இமைத்தல்-விழித்தல் அதாவது இங்கு, விளங்குதல்.
துத்தி-படத்தின் மேலுள்ள பொறி.
மேவி என்ற வினையெச்சம் பள்ளி கொள்ளும் வினையைக் கொண்டு முடியும்.
பொன்னி-பொன்களைக் கொழிக்கையாலே காவிரிக்குப் பொன்னி யென்று பெயராயிற்று.
“பொன்னி திரைக் கையாலடி வருட” என்றது-காவிரியின் அலைகள் இனிதாக மோதிக் குளிர்ச்சி பெற்றுள்ள
கரையிலே பரமஸூகமாகக் கண் வளர்ந்தருள்கின்றமையைக் கூறியவாறு.
கோமளம்-வடசொல்,
கண்ணால் துகைக்க வொண்ணாத ஸௌகுமார்ய முடையவனை”என்பது வியாக்கியானம்.
————–
வாயோர் ஈர் ரைஞ்சூறு துதங்கள் ஆர்ந்த
வளை வுடம்பின் அழல் நாகம் உமிழ்ந்த செந்தீ
வீயாத மலர் சென்னி விதானமே போல்
மேன்மேலும் மிக எங்கும் பரந்ததன் கீழ்
காயாம்பூ மலர் பிறங்கல் அன்ன மாலைக்
கடி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத் தூணே பற்றி நின்று என்
வாயார என்று கொலோ வாழ்த்தும் நாளே ?–1-2-
பதவுரை
கடி அரங்கத்து-நறு மணம் மிக்க கோயிலிலே
ஓர் ஈர் ஐ நூறு வாய்–ஓராயிரம் வாய்களிலே
துதங்கள் ஆர்ந்த–ஸ்தோத்ர வாக்கியங்கள் நிறைந்திருக்கப் பெற்றவனாய்
வளை உடம்பின்–வெளுத்த உடம்பை யுடையவனாய்
அழல்–(எதிரிக்ள வந்து கிட்ட வொண்ணாதபடி) அழலை உமிழா நிற்பவனான
நாகம்–ஆதி சேக்ஷன்
உமிழ்ந்த–(தன் வாயினின்று) வெளிக் கக்கிய
செம் தீ–செந் நிறமான ஆகநி ஜ்வாலையானது
சென்னி–தலையின் மேலே
வீயாத மலர்–அழிவில்லாத புஷ்பங்களாற் சமைத்த தொரு மேற் கட்டி போல
எங்கும் மேல் மேலும் பரந்து மிக–மேற்புறமெங்கும் விஸ்தரித்து விளங்க
அதன் கீழ்–(ஆதிசேக்ஷன் உமிழ்ந்த அக்நி ஜ்வாலையாகிற) அந்தப் புஷ்ப விதாநத்தின் கீழே)
அரவு அணையில்–சேஷ சயநத்திலே
பள்ளி கொள்ளும்–கண் வளர்ந்தருளா நிற்பவனும்
காயா பூ மலர் பிறங்கல் அன்ன– காயாவின் அழகிய பூக்களாலே தொடுக்கப்பட்ட நீலமாலை போன்றவனாய்
மாலை–பெருமை பொருந்தியவனாய்
மாயோனை–ஆச்சர்யனான ஸ்ரீரங்கநாதனை (அடியேன்)
மனம் தூண் பற்றி நின்று– திருமணத் தூண்களிரண்டையும் அவலம்பாகப் பற்றிக்கொண்டு நின்று
என் வாய் ஆர வாழ்த்தும் நாள் என்று கொல்–என் வாய்த்தினவு தீர ஸ்துதி செய்யுங்காலம் என்றைக்கு வாய்க்குமோ?.
ஆயிரம் வாய்களாலும் ஆயிர நாமங்களைச சொல்லி எம்பெருமானைத் துதிப்பவனும்,
‘சுத்த ஸத்வகுணமுடையவன்’ என்பது நன்கு விளங்குமாறு பால்போல
வெளுத்த உடலையுடையவனுமான ஆதிசேஷன்,
எம்பெருமானிடத்திலுள்ள பரிவின் மிகுதியாலே அஸ்நாதத்திலும் பயத்தை மங்கிப்பவனாதலால்
கொடிய அரக்கரசுரர்கள் விபவாவதாரங்களிற் போல அர்ச்சையிலும் வந்து நலிவர்களோ என்னும்
அதி சங்கையினால் அவர்கள் அணுக முடியாதபடி எப்போதும் அழலை வாயில் நின்று கக்கிக் கொண்டிருப்பதனால்
செந்நிறமான அந்த அக்நி ஜ்வாலையானது அவனுடைய தலைகளின் மேற் கிளம்பி விசேஷமாகப் பரவி
‘சண்பகம் முதலிய செம் மலர்களாலே ஒரு மேற் கட்டி அமைக்கப்பட்டுள்ளதோ’ என்று
உத்பரேக்ஷிக்கத் தக்கதாய் விளங்க, அத்தகைய மேற்கட்டியின் கீழே
அரவணையின் மீது பள்ளி கொண்டருளா நின்ற பெரியபெருமாளை ஸேவித்த மாத்திரத்திலேயே
“காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்” என்றபடி சைதில்யம பிறந்து தரித்து நிற்க முடியாத அவஸ்தை விளையுங்கால்
அவ் வழகிய மணவாளனுடைய திருக் கண்ணோக்கத்திலே நிலாவுகின்ற இரண்டு திருமணத் தூண்களை
அவலம்பமாகப் பற்றிக் கொண்டு தரித்து நின்று, வெகு நாளாக இழந்த இழவு தீர ஸ்தோத்ரம் பண்ணும்படியான
பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.
(மணத் தூணே பற்றிநின்று) அழகிய மணவாளன் ஸந்நிதியில் அண்மை யிலிருக்கும்
இரண்டு தூண்களுக்குத் “திரு மணத் தூண்” என்பது ஸம்ப்ராதாயத் திரு நாமம்.
. “மணத்தூணருகில் நின்று கொண்டு” என்னாமல்
“பற்றி நின்று” என்றதன் உட்கருத்தை ஸ்ரீரங்க ராஜஸ்த்தில் படடர் வெளியிட்டருளினார்.
அழகிய மணவாளனுடைய திருக்கண்ணோக்கமாகிற அமுதவாற்றின் பெரு வெள்ளமானது
அநுபவிக்க இழிந்தவர்களை ஒருமித்து நிலை நின்று அநுபவிக்க வொணணாதபடி தூக்கித் தள்ளி அசைக்குமளவில்,
அவர்கள் அவலம்பமாகப் பற்றிக் கொண்டு நிற்பதற்காக நாட்டப் பட்டுள்ளவை போன்ற
திருமணத் தூண்களைப் பற்றுவோம் என்பது இந்த ச்லோகத்தின் கருத்து.
அழகிய மணவாளனது திரு மேனியின் பரிமளம் இரண்டு தூணாகப் பரிணமித்து
உருவெடுத்து நிற்பதால் “திருமணத்தூண்” என்று திருநாமமாயிற்று என்பர்.
————-
எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும்
எடுத்தேத்தி ஈர் இரண்டு முகமும் கொண்டு
எம்மாடும் எழில் கண்கள் எட்டினோடும்
தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற செம்பொன்
அம்மான் தன் மலர் கமல கொப்பூழ் தோன்ற
அணி அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
அம்மான் தன் அடி இணை கீழ் அலர்கள் இட்டு அங்கு
அடியவரோடு என்று கொலோ அணுகும் நாளே–1-3-
பதவுரை
எம் மாண்பின் அயன்–ஸர்வ விதத்தாலுமுண்டான மாட்சிமையை யுடைய நான்முகன்
நான்கு நாவினாலும் (தனது)–நாலு நாக்கினாலும்
எடுத்து–சொற்களை யெடுத்து
ஏத்தி–துதித்து
ஈர் இரண்டு முகமும் கொண்டு–நான்கு முகங்களாலும்
இனிது ஏத்தி–இனிமையாக (வேதங்களாலே) ஸ்தோத்திரம் பண்ணி
எழில் கண்கள் எட்டினோடும்–அழகிய எட்டு கண்களினாலே
எம் மாடும்–எல்லாப் பக்கங்களிலும்
தொழுது இறைஞ்ச நின்ற–நன்றாக ஸேவிக்கும்படி அமைந்த
செம் பொன்–செவ்விய பொன் போல் (விரும்பத்தக்க வடிவுடைய) ஸ்வாமியான தன்னுடைய
கமலம் மலர் கொப்பூழ்–தாமரைப் பூவை யுடைய திருநாபி யானது
தோன்ற–விளங்கும்படி
அணி அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
அம்மான் தன்–பெரிய பெருமாளுடைய
அடிஇணை கீழ்-திருவடிகளின் கீழே
அலர்கள் இட்டு- புஷ்பங்களை ஸமர்ப்பித்து
அங்கு அடியவரோடு–அங்குள்ள கைங்கர்ய பரர்களோடு கூட
அணுகும் நாள் என்று கொல்-நெருங்கி வாழ்வது என்றைக்கோ?
பிரமன் வாயார வாழ்த்திக் கண்ணாரக் கண்டு களிக்கும் படியாவும்,
ஸகல லோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக் கமலம் நன்கு விளங்கும்படியாகவும்
திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடு கூட
அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்ய ஸந்நிதானத்திற்குப் போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.
எம் மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன் வசமாகக் கைக் கொண்டிருக்கும்
அதிசயத்தை யுடையவன் என்பது உட் கருத்து.
————
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை வேலை
வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி
ஆவினை அன்று உய்ய கொண்ட ஆயர் ஏற்றை
அமரர்கள் தம் தலைவனை அம் தமிழ் இன்ப
பாவினை அவ் வடமொழியை பற்றற்றார்கள்
பயில் அரங்கத்து அரவு அணை பள்ளி கொள்ளும்
கோவினை நாவுற வழுத்தி என் தன் கைகள்
கொய்ம் மலர் தூ என்று கொலோ கூப்பும் நாளே—-1-4-
பதவுரை
மாவினை வாய் பிளந்து உகந்த மாலை–குதிரை வடிவங்கொண்டு வந்த கேசியினுடைய வாயைக் கிழித்து மகிழ்ந்த பெருமானாய்
வேலை வண்ணணை–கடல் போன்ற வடிவை யுடையவனாய்
என் கண்ணணை–என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’
அன்று–(இந்திரன் கல் மழை பெய்வித்த) அக் காலத்திலே
வன் குன்றம் ஏந்தி–வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி
ஆவினை உய்யக் கொண்ட–பசுக்களைக் காப்பாற்றி யருளின
ஆயர் ஏற்றை–இடையர் தலைவனாய்
அமரர்கள் தம் தலைவனை–நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய்,
அம் தமிழ் இன்ப பாவினை–அழகிய தமிழ்ப் பாஷையாலாகிய ஆநந்த மயமான அருளிச் செயல் போல் யோக்கியனாய்
அ வடமொழியை–அழகிய ஸம்ஸ்க்ருத பாஷையாலாகிய ராமாயணாதிகள் போல் யோக்யனாய்
பற்று அற்றார்கள் பயில் அரங்கத்து–ஸம்ஸார பந்தம் அற்றவர்களான விரக்தர்கள் நித்திய வாஸம் செய்கிற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்,
கோவினை–ஸ்வாமியான ஸ்ரீரங்கநாதனை
நா உற–நாக்குத் தடிக்கும்படி
வழுத்தி–துதித்து
என் தன் கைகள்–என்னுடைய கைகளானவை
கொய் மலர் தூய்–(காலத்தில்) பறிக்கப்பட்ட புஷ்பங்களை பணிமாறி
கூப்பும் நாள் என்று கொல்–அஞ்ஜலி பண்ணும் நாள் எதுவோ!
குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ள வந்த கேசியென்னு மசுரனைக் கொன்று
தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும்,
கடலைக் கண்டாற் போலே வடிவைக் கண்ட போதே தாப த்ரயமும் தீரும்படியிருப்பவனும்,
அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும்
பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை
நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து
‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம்
என்றைக்கு வாய்க்குமோ என்கிறார்.
எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற
திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர
வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார்.
(பற்றற்றார்கள் பயிலரங்கம்)
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,
அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.
———
இணை இல்லா இன் இசை யாழ் கெழுமி இன்பத்
தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த
துணை இல்லா தொன் மறை நூல் தோத்திரத்தால்
தொன் மலர் கண் அயன் வணங்கி யோவாது ஏத்த
மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ
மதிள் அரங்கத்து அர வணையில் பள்ளி கொள்ளும்
மணி வண்ணன் அம்மானை கண்டு கொண்டு என்
மலர் சென்னி என்று கொலோ வணங்கும் நாளே ?—1-5-
பதவுரை
இன்பம்–(வீணா கானத்தாலே) இன்பந்தருகின்ற
தும்புருவும்–தும்புரு மஹரிஷியும்
நாரதனும்–நாரத முனிவனும்
இணை இல்லா இன் இசை–ஒப்பற்றதும் போக்யமுமான இசையை
யாழ்–வீணையிலே
கெழுமி–நிறைத்து
(வீணா கானத்தைப் பண்ணிக் கொண்டு)
இறைஞ்சி ஏத்த–திருவடிகளிலே விழுந்து) வணங்கித் துதிக்கவும்
தொல் மலர்க் கண் அயன்–நித்யமான நாபீ கமலத்தி லுதித்த நான்முகனானவன்
வணங்கி–நமஸ்கரித்து
துணை இல்லா–ஒப்பு இல்லாததும்
தொல்–அநாதியுமான
மறை நூல் தோத்திரத்தால்–வேதசாஸ்த்ரங்களாகிற ஸ்தோத்ரங்களால்
ஓவாது ஏத்த–இடைவிடாமல் துதிக்கவும்
மணி மாடம் மாளிகைகள்–மணி மயமான மாட மாளிகைகளையும்
மல்கு செல்வம்–பூர்ணமான ஸம்பத்தையும்
மதிள்–ஸப்த ப்ராகாரங்களையுமுடைய
அரங்கத்து–கோயிலிலே
அரவு அணையில் பள்ளிகொள்ளும்;
மணி வண்ணன் அம்மானை–நீல மணி போன்ற திருநிறத்தை யுடையனான எம்பெருமானை
கண்டு கொண்டு–ஸேவித்து
என் மலர் சென்னி–என்னுடைய பூமாலை யணிந்த தலையானது
வணங்கும் நாள் என்று கொல்–(அவன் திருவடிகளில்) நமஸ்கரிப்பது என்றைக்கோ!
தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத் குணங்களை இனிய இசையுடன் வீணையிலே யிட்டுப் பாடிக் கொண்டும்,
நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக் கொண்டும் வணங்கப்
பள்ளி கொண்டருளா நின்ற பெரிய பெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும்,
அரசாட்சிக்கு ஏற்பப் பூ முடி சூடிக் கிடக்கின்ற என் தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும்
என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார்.
இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்
———
அளி மலர் மேல் அயன் அரன் இந்திரனோடு ஏனை
அமரர்கள் தம் குழுவும் அரம்பையரும் மற்றும்
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும் முந்தி
திசை திசையில் மலர் தூவி சென்று சேரும்
களி மலர் சேர் பொழில் அரங்கத்து உரகம் ஏறி
கண் வளரும் கடல் வண்ணர் கமல கண்ணும்
ஒளி மதி சேர் திரு முகமும் கண்டு கொண்டு என்
உள்ளம் மிக என்று கொலோ வுருகும் நாளே—1-6-
பதவுரை
அளி மலர் மேல் அயன்–(மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப் பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்
அரன்–சிவனும்
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும்–இந்திரனோடு கூட மற்றைத் தேவர்களின் திரளும்
அரம்பையரும்–ரம்பை முதலிய தேவ மாதரும்
மற்றும்–மற்றுமுள்ள
தெளி மதி சேர் முனிவர்கள் தம் குழுவும்–தெளிந்த ஞானத்தை யுடைய (ஸநகாதி) மஹர்ஷிகளின் ஸமூஹமும்
உந்தி–ஒருவர்க்கொருவர் நெருக்கித் தள்ளி
திசை திசையில்–பார்த்த பார்த்தவிடமெங்கும்
மலர் தூவி–புஷ்பங்களை இறைத்துக் கொண்டு
சென்று சேரும்–வந்து சேர்தற்கு இடமான
களிமலர் சேர் பொழில் அரங்கத்து–தேன் மிக்க மலர்களை யுடைய சோலைகளை யுடைத்தான கோயிலிலே
உரகம் ஏறி–திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டு
கண் வளரும்–திருக்கண் வளர்ந்தருளா நின்ற
கடல் வண்ணர்–கடல் போன்ற வடிவை யுடையரான பெரிய பெருமாளை யுடைய
கமலம் கண்ணும்–செந்தாமரை போன்ற திருக் கண்களையும்
ஒளி மதி சேர் திரு முகமும்–ஒளியை யுடைய சந்திரன் போன்ற திருமுக மண்டலத்தையும்
கண்டு கொண்டு–ஸேவிக்கப் பெற்று
என் உள்ளம்–என்னுடைய மனமானது
மிக உருகும் நாள் என்று கொல்–மிகவும் உருகுங்காலம் என்றைக்கோ?
தேவர்களும் தேவ மாதர்களும் முனிவர்களும் ஆராதந உப கரணங்களைக் கோண்டு வந்து,
திரள் மிகுதியாலே ஒருவரை யொருவர் நெருக்கி தள்ளிப் புகும்படியான கோயிலிலே கண் வளர்ந்தருளாகின்ற
பெரிய பெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முக சந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று,
‘பாவியேனுக்கும் இப் பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று
நெஞ்சுருகும் படியான நாளும் வரப் போகிறதோ! என்கிறார்.
———
மறம் திகழும் மனம் ஒழித்து வஞ்சம் மாற்றி
ஐம்புலன்கள் அடக்கி இடர் பார துன்பம்
துறந்து இரு முப் பொழுது ஏத்தி எல்லை இல்லா
தொன் நெறி கண் நிலை நின்ற தொண்டரான
அறம் திகழும் மனத்தவர் தம் கதியை பொன்னி
அணி அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம் திகழும் மாயோனை கண்டு என் கண்கள்
நீர் மல்க என்று கொலோ நிற்கும் நாளே ?—-1-7-
பதவுரை
மறம் நிகழும் மனம் ஒழித்து–கொடுமையால் விளங்கா நின்றுள்ள மனத்தை ஒழித்து
வஞ்சம் மாற்றி–வஞ்சனைகளைப் போக்கி
வல் புலன்கள் அடக்கி–கொடிய இந்திரியங்களை அடக்கி
இடர் பாரம் துன்பம் துறந்து–(மேன் மேலும்) துக்கத்தை விளைப்பனவாய்ப்
பெருஞ்சுமையா யிராநின்ற பழ வினைகளை வேரறுத்து
இரு முப்பொழுது ஏத்தி–பஞ்ச காலங்களிலும் துதித்து
எல்லை இல்லா தொல் நெறிக் கண் நிலை நின்ற–அளவிறந்த பழைய மர்யாதையிலே நிலை நின்ற
தொண்டர் ஆன–தாஸ பூதர்களான
அறம் திகழும் மனத்தவர் தம்–தர்ம சிந்தையே விளங்கும் மனமுடையரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு
கதியை–பரம ப்ராப்யனாய்
பொன்னி அணி அரங்கத்து–காவிரியால் அழகு பெற்ற கோயிலிலே
அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
நிறம் திகழும்–அழகு விளங்கா நின்றுள்ள
மாயோனை–ஆச்சரியனான எம்பெருமானை
என் கண்கள்–எனது கண்களானவை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
நீர் மல்க நிற்கும் நாள் என்று கொல்–ஆநந்தக் கண்ணீர் ததும்பும்படி நிற்பது என்றைக்கோ?
முன்னடிகளிரண்டும் ஸ்ரீவைஷ்ணவ லக்ஷணங்கூறுவன.
“திகழும் மனம் மறம் ஒழித்து” என்று அந்வயித்து,
விளாங்கா நின்ற மனத்தில் நின்றும் கொடுமையை நீக்கி என்றுரைத்தலுமாம்.
மறம்-கொலை, கோபம், கொடுமை.
இடர்ப் பாரத் துன்பம் துறந்து-“பாரமாய பழவினை பற்றறுத்து” என்கை.
மஹத்தான துக்கத்தை விளைவிக்கக் கூடியதும்,
மனிதனைக் கீழே அமுக்குவதில் தலைச் சுமை போன்றதுமான பழையவினையை வேரோடு களைந்து என்றபடி.
(இருமுப் பொழுதேத்தி.) இரண்டும் மூன்றும் ஐந்து; பஞ்ச காலபராயணர்களாய் என்றபடி.
இதனைச் சிறிது விவரிப்போம்; –
ஒரு தினத்தின் பகற்பொழுதை ப்ராத:காலம், ஸங்கவகாலம், மத்யாஹ்நகாலம், அபராஹ்காலம், ஸாயங்காலம் என்று ஐந்தாகப் பகுத்து,
ஸூர்யோதயம் முதல் அவ்வாறு நாழிகை இவற்றிற்கு முறையே உரியவை என்று வரையறுத்து,
அபிகமநம், உபாதாநம், இஜ்யா, ஸ்வாத்யாயம், யோகம் என்ற ஐந்து ஒழுக்கங்களையும் முறையே
அந்த (ப்ராத:காலம் முதலிய) ஐந்து சிறுபொழுதிலும் அநுஷ்டிக்கும்படி பாஞ்சராத்ரம் முதலிய ஆகமங்கள் கூறும்.
இரவில் ஆசரிக்க வேண்டுவதும் யோகாநுஷ்டாநமே இவற்றின் விவரம் வருமாறு:-
முதலாறு நாழிகையாகிய ப்ராத:காலத்திலே, ஸ்நாநம் ஸந்த்யாவந்தனம் ஜபம முதலிய காலைக் கடன்களைச் செய்து முடித்துத்
தாம் ஆராதிக்கவேண்டிய எம் பெருமானுடைய ஸந்நிதியிற்சென்று ப்ரதக்ஷிண நமஸ்கார ஸ்தோத்ரம்
முதலியவற்றால் எம் பெருமானை உகப்பிக்க வேண்டும்; இஃது அபிகமநகால நியமம்.
அதற்கு அடுத்த ஸங்கவகாலத்திலே, பகவதாராதநத்துக்கு வேண்டிய சுத்த தீர்த்தம் சந்தனம் புஷ்பம் தூப தீப த்ரவ்யங்கள்
முதலியவற்றையும், எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய பால் தயிர் நெய் தேன் முதலிய வற்றையும்
எம்பெருமானுக்கு அமுது செய்விப்பதற்கு வேண்டிய அரிசி பருப்பு கறியமுது சர்க்கரை நெய் தயிர் பழம் முதலிய
போஜநோபகரணங்களையும் ஸம்பாதித்துத் தொகுத்து ஸித்தஞ் செய்யவேண்டும். இஃது உபாதாநகால நியமம்.
மூன்றாவதான மத்யாஹ்ந காலத்திலே, மாத்யாஹ்நிகஸநாநமும் மாத்யாஹ்நிகச் சடங்கும் செய்து
விதிமுறை வழுவாது பகவானுக்குத் திருவாராதநம் பண்ணிப் பக்குவமான உணவுகளை அமுது செய்வித்து
அங்ஙனம் நிவேதித்த உணவுகளை அதிதிகளோடு புஜிக்க வேண்டும். இஃது இஜ்யாகால நியமம்.
அதற்கு அடுத்ததான அபராஹ்ந காலத்திலே, மோக்ஷமார்க்கத்துக்கு உரிய வேத வேதாந்த வேதாந்தங்களையும்
இதிஹாஸ புராணங்களையும் மற்றும் உரிய நுர்ல்களையும் தாம் கற்றலும் கற்பித்தலும் வேண்டும். இது ஸ்வாத்யாயகாலநியமம்.
ஈற்றதான ஸாயங்காலத்திலே, மாலைக் கடனாகிய ஸந்த்யா வந்தனத்தைச் செய்யத் தொடங்கி
ஸூர்யாஸ்தமனமான பின்பு ஜபத்தைப் பூர்த்திசெய்து இரவு போஜநாநந்தரம் ஏகாந்தமாக இருந்து
ஐம்பொறிகளை யடக்கி ப்ராணாமஞ்செய்து மனத்தைப் பரமாத்மாவினிடத்தே நிலை நிறுத்தி
பகவத்குணாநு ஸந்தானத்தோடு பள்ளி கொள்ள வேண்டும். இது யோகாகாலநியமம்.
இவ்வாறு அநுஷ்டிக்கும் பாகவதர் பஞ்சகாலபராயணர் எனப்படுவர்.
————
கோலார்ந்த நெடும் சார்ங்கம் கூன் நல் சங்கம்
கொலை ஆழி கொடும் தண்டு கொற்ற ஒள் வாள்
காலார்ந்த கதி கருடன் என்னும் வென்றி
கடும் பறவை இவை அனைத்தும் புறம் சூழ் காப்ப
சேலார்ந்த நெடும் கழனி சோலை சூழ்ந்த
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாலோனை கண்டு இன்ப கலவி எய்தி
வல் வினையேன் என்று கொலோ வாழும் நாளே ?–1-8-
பதவுரை
கோல் ஆர்ந்த–அம்புகளோடு கூடிய
நெடு சார்ங்கம்–பெரியதான ஸ்ரீ சார்ங்க மென்னும் வில்லும்
கூன் நல் சங்கம்–வளைந்து விலக்ஷணமான ஸ்ரீ பாஞ்சஜந்யமென்னும சங்கமும்
கொலை ஆழி–(எதிரிகளைக்) கொலை செய்ய வல்ல ஸூதர்சநமும்
கொடும் தண்டு–(பகைவர்களுக்குக்) கொடுந்தொழில் புரிகின்ற கௌமோதகி யென்னும் கதையும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றி பெற்று ஒளி மிக்க நந்தகமென்னும் வாளும்
கால் ஆர்ந்த கடும் கதி–வாயு வேகம் போன்ற மிகவும் விரைந்த நடையை யுடைய
கருடன் என்னும்–பெரிய திருவடி யென்னும் பேரை யுடைய
வென்றி பறவை இவை அனைத்தும்–ஐய சீலமான பக்ஷிராஜனும் (ஆகிய) இவை யெல்லாம்
புறம் சூழ் காப்ப–நாற் புறமும் சூழ்ந்து கொண்டு ரக்ஷையிட
சேல் ஆர்ந்த நெடு கழனி–(நீர் வளத்தால்) மீன்கள் நிரம்பிய விசாலமான
கழனிகளாலும்
சோலை சூழ்ந்த–சோலைகளாலும் சூழப்பட்ட
திரு அரங்கத்து அரவு அணையில்
பள்ளி கொள்ளும்;
மாலோனை–ஸர்வாதிகனான எம்பெருமானை
வல் வினையேன்–மஹா பாபியான அடியேன்
கண்டு–ஸேவிக்கப் பெற்று
இன்பம் கல்வி எய்தி–ஆநந்த மயமான ஸம்ச்லேஷத்தையும் பெற்று
வாழும் நாள் என்று கொல்–வாழ்வது என்றைக்கோ?
பஞ்சாயுதங்களும், திருவடி விஷ்வகஸேநன் முதலிய நித்யஸூரி வர்க்கங்களும்
‘அழகிய மணவாளனுக்கு எந்த ஸமயத்தில் என்ன தீங்கு நேரிடுமோ? என்று அதி சங்கை பண்ணி
எப்போதும் நாற்புறமும் சூழ்ந்து காவலாயிருக்கத் திருவனந்தாழ்வான் மீது திருக்கண் வளர்ந்தருளா நின்ற பெரிய பெருமாளை,
ஸாம்ஸாரிக ஸூகாபாஸங்களிலேயே ருசி கண்டிருக்குமபடி மஹா பாபத்தைப் பண்ணி
நித்ய கைங்கரியத்தை இழந்து கிடக்கிற அடியேன் என்றைக்கு ஸேவித்து வாழப் போகிறேன் என்கிறார்.
இப் பாசுரத்தை அடியொற்றியே ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் அருளிச் செய்தமையும் காண்க
—————
தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே?—-1-9-
பதவுரை
தூராத காதல் மனம்–ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான
தொண்டர் தங்கள் குழாம்–ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே
குழுமி–கூடி
திரு புகழ்கள் பலவும் பாடி–(எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி
ஆராத மனம் களிப்போடு–(அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே
அழுத கண் நீர்–அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள்
மழை சோர–மழை போல் பெருகி வர
நினைந்து உருகி ஏந்தி–(எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி,
நாளும்–எப்போதும்
சீர் ஆர்ந்த முழவு ஓசை–நல்ல வாத்யங்களின் கோஷமானது
பரவை காட்டும்–கடலோசை போல் முழங்கப் பெற்ற
திரு அரங்கத்து ஸ்ரீரங்கத்திலே அரவு அணையில் பள்ளி கொள்ளும்
போர் ஆழி–(பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய
திருவாழி யாழ்வானை யுடையவரான
அம்மானை–எம்பெருமானை
கண்டு–ஸேவிக்கப் பெற்று
துள்ளி–ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி
பூதலத்திலே–பூமியிலே
புரளும் நாள் என்று கொல்–(உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!.
“இன் கனி தனி யருந்தான்” (நல்ல பொருள்களைத் தனியே அநுபவிக்கலாகாது) என்றாற்போல,
பகவத் குணங்களைத் தனியே அநுபவிக்கக் கூடாதாகையால்,
அக் குணங்களை வாய் விட்டுக் கதறினாலன்றி த்ருப்தி பெற முடியாதபடி கரை புரண்ட காதலை யுடைய
பாகவதர்களின் கோஷ்டியிலே கலந்து அவர்களுடன் எம்பெருமானது கீர்த்திகளை வாயாரப் பாடி
அதனால் ஆநந்தக் கண்ணீர் பெருகப் பெற்று ‘நமக்குமன்றோ இவ்வநுபவம் கிடைத்தது!’ என்கிற
உள்ளடங்காத பேரின்பப் பெருமையாலே
“மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை” என்கிற திருவாய் மொழியிற்படி
தலை கால் தெரியாமல் துள்ளிக் கூத்தாடி, இப்போது ஸிம்ஹாஸநத்திலே மார்பு நெறித்திருக்கு மிருப்புத் தவிர்ந்து
ஆநந்த மிகுதியாலே நிலத்தில் வீழ்ந்து புரளும்படியான பாக்கியம் வாய்ப்பது என்றைக்கோ? என்கிறார்.
தூராத மனக் காதல் சப்தாதி விஷயங்களை எவ்வளவு அநுபவித்தாலும் எத்தனை நாள் அநுபவித்தாலும்
சிறிதும் த்ருப்தி அடையாத இந்திரியங்களை யுடையவர்களின் கோஷ்டியில் நின்றும் விலகி,
எம்பெருமானை எவ்வளவு அநுபவித்தாலும் பர்யாப்தி பெறாத மெய்யடியார்கள் திரளிலே புக விரும்புகிறபடி.
பரவை காட்டும் என்றது-
கடலின் அலைகளின் கோஷத்துக்கு ஓய்வு இல்லாதாப் போலே
கோயிலில் வாத்யங்களின் முழக்கத்துக்கு ஓய்வு இல்லாமையால் கடலை ஒத்திருக்கின்ற என்றவாறு.
பரவை-கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி.
————-
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய
மண் உய்ய மண் உலகில் மனிசர் உய்ய
துன்பம் மிகு துயர் அகல அயர் ஒன்றில்லா
சுகம் வளர அக மகிழும் தொண்டர் வாழ
அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும்
அணி அரங்கன் திரு முற்றத்து அடியார் தங்கள்
இன்ப மிகு பெரும் குழுவு கண்டு யானும்
இசைந்த உடனே என்று கொலோ விருக்கும் நாளே ?—1-10-
பதவுரை
வன்–(நைமித்திக ப்ரளயத்தில்) அழியாதிருக்கக் கடவதும
பெரு–பெருமை தங்கியதுமான
வானகம்–ஸ்வர்க்கம் முதலிய மேலுலகங்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
அமரர்–தேவர்கள்
உய்ய–உஜ்ஜீவிக்கவும்
மண் உய்ய–பூலோகம் உஜ்ஜீவிக்கவும்
மண் உலகில் மனிசர் உய்ய–பூலோகத்திலுள்ள மனிதர்களெல்லாம் உஜ்ஜீவிக்கவும்
மிகு துன்பம் துயர் அகல–மிக்க துக்கத்தை விளைப்பதான பாவங்கள் நீங்கவும்
அயர்வு ஒன்று இல்லா சுகம் வளர–துக்கம் கலசாத சுகம் வளரவும்
அகம் மகிழும்–(எப்போதும்) மனதில் ஆனந்தத்தை யுடையரான
தொண்டர்–ஸ்ரீவைஷ்ணவர்கள்
வாழ–உஜ்ஜீவிக்கவும்
அன்போடு–திருவுள்ளத்தில் உகப்போடு
தென் திசை நோக்கி–தெற்குத் திக்குக்கு அபிமுகமாக
பள்ளி கொள்ளும்–பள்ளி கொண்டிரா நின்ற
அணி அரங்கன்–ஸ்ரீரங்கநாதனுடைய
திரு முற்றத்து–ஸந்நிதியுள் திரு முற்றத்திலே
அடியார் தங்கள்–ஸ்ரீவைஷ்ணவர்களுடைய
இன்பம் மிகு பெரு குழுவு கண்டு–ஆநந்தம் நிரம்பிய பெரிய கோஷ்டியை சேவித்து
யானும்–அடியேனும்
இசைந்து–(அவர்களுள் ஒருவனாக) மனம் பொருந்தி
உடனே–அவர்களோடு கூட
இருக்கும் நாள் என்று கொல்–வாழ்ந்திருக்குங்காலம் எப்போது (வாய்க்குமோ?).
தேவர்களும் மநுஷயர்களும் விலக்ஷண ஸ்ரீவைஷ்ணவர்களும் வாழவும்
பாவங்கள் நீங்கிப் புண்ணியங்கள் செழிக்கவுமாகக்
குட திசை முடியை வைத்துக் குண திசை பாதம் நீட்டி வட திசை பின்பு காட்டித் தென் திசை இலங்கை
பாகவதர்களை யுடைய கோஷ்டியிலே சேர்ந்து
அடியேனும் அவர்களைப் போலே திளைத்து வாழ்வது என்றோ! என்கிறார்.
————–
திடர் விளங்கு கரை பொன்னி நடுவு பாட்டு
திரு வரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்
கடல் விளங்கு கரு மேனி அம்மான் தன்னை
கண்ணார கண்டு உகக்கும் காதல் தன்னால்
குடை விளங்கு விறல் தானை கொற்ற ஒள் வாள்
கூடலர் கோன் கொடை குலசேகரன் சொல் செய்த
நடை விளங்கு தமிழ் மாலை பத்தும் வல்லார்
நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே—1-11-
பதவுரை
திடர் விளங்கு கரை–மணற்குன்றுகள் விளங்கா நின்ற கரையை யுடைத்தான
பொன்னி நடுவு பாடு–காவிரியின் நடுவிடத்து
திரு அரங்கத்து அரவு அணையில் பள்ளி கொள்ளும்:
கடல் விளங்கு–கடல் போல் விளங்குகின்ற
கரு மேனி–கரிய திருமேனியை யுடைய
அம்மான் தன்னை–பெரிய பெருமாளை
கண் ஆர கண்டு உகக்கும் காதல் தன்னால்–கண்கள் த்ருப்தி யடையும்படி
ஸேவித்து ஆநந்திக்க வேணும்’ என்று உண்டான ஆசையினால்
குடை விளங்கு–(அரசாட்சிக்கு ஏற்ப) வெண் கொற்றக் குடையுடன் விளங்கா நிற்பவரும்
விறல் தானை–பராக்கிரமம் மிக்க ஸேஸனைகளை யுடையவரும்
கொற்றம் ஒள் வாள்–வெற்றியும் ஒளியும் பொருந்திய வாளை யுடையவரும்
கூடலர் கோன்–மதுரையிலுள்ளவர்களுக்குத் தலைவரும்
கொடை–ஔதார்யத்தையே இயற்கையாக வுடையவருமான
குலசேகரன்–குலசேகரப் பெருமாள்
சொற்செய்த–அருளிச் செய்த
நடை விளங்கு–தமிழ் நடையானது நன்கு விளங்கா நின்ற
தமிழ் மாலை பத்தும்–தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசரங்களையும்;
வல்லார்–ஓத வல்லார்கள்
நலம் திகழ் நாரணன்–கல்யாண குண சாலியான ஸ்ரீமந் நாராயணனுடைய
அடி கீழ் நண்ணுவார்–திருவடிகளில் சேரப் பெறுவர்.
————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply