ஆயர் சிறுமியர் தாம் மார்கழி நீராடினால் நாட்டுக்கு விளையும் நன்மைகளை இங்ஙனே மநோ ரதித்துக் கொண்டிருக்க,
பர்ஜந்யனும், ‘எம்பெருமானடிபணியுமவர்கட்குச் சிறிது கிஞ்சித்கரித்து நாமும் நமது ஸ்வரூபத்தை
நிறம் பெறுவித்துக் கொள்ள வேணும்” எனக் கருதி,
‘நான் உங்கள் திறத்துச் செய்ய வேண்டுமடிமைத் திறத்தை ஆய்ந்துரைக்க வேணும்’ என்று
இவர்களின் நியமநத்தைப் பிரார்த்தித்து நிற்க,
ஆய்ச்சிகள், “பர்ஜந்யனே ! ‘பெண்கள் நோற்றபடி யென் ! மழை பெய்தபடி யென்!’ என்று
அனைவரும் தலை துலுக்கிக் கொண்டாடும்படி வர்ஷிக்க வேணும்” என்று
அவன் செய்ய வேண்டு மடிமையைக் கையோலை செய்து கொடுக்கின்றனர்; இப்பாட்டால்.
(பர்ஜந்யன் – மழைக்கு நிர்வாஹகன்; மேகமென்றவாறு.)
ஆழி மழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழியம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பதவுரை
ஆழி மழை கண்ணா–மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான பர்ஜந்யனே !
நீ–நீ
கை-(உன்னுடைய) கொடையில்
ஒன்றும்-ஒன்றையும்
கரவேல்–ஒளியா தொழியவேணும்; (நீ செய்ய வேண்டிய பணி என்ன வென்றால்)
ஆழியுள் புக்கு–கடலினுட் புகுந்து
முகந்து கொடு–(அங்குள்ள நீரை) மொண்டு கொடு
ஆர்த்து–கர்ஜனை பண்ணி (பேரொலி செய்து)
ஏறி–(ஆகாயத்தே) ஏறி,
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து–காலம் முதலிய ஸகல பதார்தத்ங்களுக்குங் காரண பூதனான
எம் பெருமானுடைய திருமேனி போல் (உனது) உடம்பிற் கருமை பெற்று
பாழி அம் தோள் உடை பற்பநாபன் கையில்–பெருமையும் அழகும் கொருந்திய தோள்களை யுடையவனும்,
நாபிக் கமல முடையனுமான எம் பெருமானுடைய கையில் (வலப் பக்கத்திலுள்ள)
ஆழி போல் மின்னி–திருவாழி யாழ்வானைப் போல் ஒளி மல்கி,
வலம்புரி போல் நின்று அதிர்ந்து–(இடப் பக்கத்திலுள்ள) பாஞ்ச ஜந்யாழ்வானைப் போல் நிலை நின்று முழங்கி,
சார்ங்கம் உதைத்த–ஸ்ரீ சார்ங்கத்தாலே தவளப்பட்ட
சரம் மழை போல்–பாண வர்ஷம் போல்,
வாழ (உலகத்தாரனைவரும்) வாழும்படியாகவும்
நாங்களும்–(கண்ண பிரானோட்டைக் கலவிக்கு நோன்பு நோற்கிற) நாங்களும்
மகிழ்ந்து–ஸந்தோஷித்து
மார்கழி நீராட–மார்கழி நீராட்டம் செய்யும் படியாகவும்
உலகினில்–இல் வுலகத்தில்
தாழாதே–தாமதம் செய்யாமல் (சடக்கென)
பெய்திடாய்–மழை பொழியக் கடவை.
ஏல் ஓர் எம் பாவாய் !.
வாராய் பர்ஜந்யனே ! உனது ஔதார்யத்தை நீ எள்ளளவும் ஒளிக்கலாகாது;
கடலினுட் புகுந்து அங்குள்ள நீரை முற்றும் முகந்து கொண்டு பெரு முழக்கஞ்செய்து வானத்தின் மீதேறி
எம்பெருமானது திருமேனி போலக் கருமை பூண்டு,
அவனது வலங்கை யாழிபோல் மின்னி இடங்கைச் சங்கம்போல் அதிர்ந்து,
ஸ்ரீ சார்ங்கம் சரமழை பொழியுமாறு போல நாடெங்கும் நீரைச் சொரிந்து
எமது மார்கழி நீராட்டத்தை மகிழ்ச்சியுடனே தலைக் கட்டவேணும் என்பது –
இவர்கள் கட்டளை யிடும் பரிசு.
ஸந்நிதிகளில் கைங்கர்ய பரர்களை அருளிப் பாடிடும் போது,
“குடை தூக்குவான்!, சாமரை வீசுவான்!, திருச்சின்ன மூதுவான் !” என்றிங்ஙனே அவரவர்கள் அதிகரித்த
காரியத்தை யிட்டு அருளிப் பாடிடுவது ஸம்ப்ரதாய மாதலால்
இவர்களும் அந் நடையை அடி யொற்றி “ஆழி மழைக் கண்ணா!” என்று
அவன் அதிகரித்த காரியத்தையிட்டு அழைக்கின்றனரென்க.
எம்பெருமான் படைப்புத் துடைப்புத் தொழில்களை அயனரர் தலையிலிட்டுத் தான் காத்தற்றொழிலைக் கைப்பற்றினாற்போல,
‘பிடி, அடி’ என்னுங் காரியத்தை நமன் முதலியோர் தலையிலிட்டு,
உனது நீர்மைக்குப் பொருந்த எல்லாரையுங் குளிர நோக்குங் காரியத்தில்
நியமிக்கப்பட்டவனன்றொ நீ எனப் புகழ்கின்றவாறு காண்க.
ஒன்றும் நீ கை கரவேல் :-
உன் கொடையில் ஒன்றும் வஞ்சியாதொழிய வேணும் என்றபடி.
புண்ணியம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷித்தல், பாவம் பண்ணினாரிருந்தவிடத்து வர்ஷியாதொழிதல்
என்றொரு விஷம நியதி கொள்ளற்பாலதன் றென்கை.
கை கரக்கை – கொடை மாறுகை.
மேகத்தின் முழக்கம் மகிழ்ச்சிக்கு உறுப்பாதலால் ஆர்த்து என்று அம் முழக்கத்தை வேண்டுகின்றனர்.
கடல் கடந்து இலங்கைக்குச் சென்ற அனுமன் செய்தியை உணராத குரக்கினங்கள்
கடற்கு இக் கரையில் வருந்தி ஏங்கிக் கிடந்த போழ்து, அனுமன் பிராட்டியைக் கண்ட களிப்பின் மிகுதியால்
ஆரவாரித்துக் கொண்டு வந்து இவ் வாநர வீரர்களை மகிழ்வித்தவாறு போல
நீயும் ஆரவாரத்தினால் எம்மை மகிழ்விக்க வேணுமென வேண்டியவாறு.
ஏறி என்றதனால்,
முகந் தோற்றாமே நின்று காரியஞ்செய்யும் எம்பெருமானைப் போலன்றி,
“விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல்” என்றபடி ஆகாசாவகாசமெல்லாம் வெளி யடையும்படி
உன் வடிவைப் பரப்பிக் காட்டிக் காரியஞ் செய்ய வேணுமென்ற விருப்பம் தோன்றும்.
ஊழி முதல்வன் –
ஊழி என்று காலத்துக்குப் பெயர்;
இங்குக் காலத்தைக் கூறியது மற்றுமுள்ள எல்லாப் பதார்த்தங்களையுங் கூறியவாறாம்;
இஃது உபலக்ஷணமெனப்படும்.
“உருவம் போல் மெய் கறுத்து” என்ற சொல் நயத்தால்,
அவ் வெம்பெருமானது திருமேனியின் நிறத்தை மாத்திரம் நீ ஒருபுடை ஏறிட்டுக் கொள்ளலாம் அத்தனை யொழிய,
அவன்றன் அக வாயில் தண்ணளி எவ் வகையானும்
உன்னால் ஏறிடுவித்துக் கொள்ள அரிது என்னுங்கருத்துத் தோன்றுமென்ப.
இங்கு, “நாச்சியார் விழி விழிக்க வொண்ணாது என்றாற்போலே” என்ற
ஆறாயிரப்படி அருளிச் செயல் நோக்கத் தக்கது;
அவ் வாக்கியத்தின் பொருள் வருமாறு:-
திருவரங்கம் பெரிய கோயிலில் சிறிய திருவத்யயநோத்ஸவத்திற் கடைநாளிரவு ஸ்ரீரங்கநாதன்,
நாச்சியார் திருக் கோலம் பூண்டு, ஸேவை ஸாதித்தருள, ஸ்ரீபட்டர் ஸேவித்துப் பெருமானை நோக்கி
‘நாச்சியாருடைய வேஷத்தை ஏறிட்டுக் கொண்டதத்தனை யொழிய அவள் போல் விழி விழிக்க உன்னாலாகாதே’
என்றுரைத்தருளினாரென்ற ஐதிஹ்யத்தை உளப்படுத்தியவாறு.
கண்ண பிரானது திருமேனி நிறத்தைக் காண விருப்பமுடைய இவர்கள்
அதன் போலியை யாகிலுங்கண்டு களிப்போமென்னுமாசையால்
“ஊழி முதல்வனுருவம் போல் மெய் கறுத்து” என்கிறார்கனென்னுங் கருத்துமுணரற்பாலது.
பாழி அம் தோள் –
வலிமையும் அழகும் பொருந்திய தோள்;
எனவே, ரக்ஷகத்வ போக்யத்வங்களிரண்டும் தோளுக்குள்ளன வென்றதாயிற்று.
பற்பநாபன் கையிலாழி போல் மின்னி –
“பற்பநாபன் போல் மின்னி” என்னாதொழிந்ததென் எனில்;
அரசனை நோக்கி ‘உனக்கு மகன் பிறந்தான்’ என்றால் அவன் தனது காம்பீர்யந் தோற்றம் பேசாதிருப்பினும்
உரிய அடியார் பக்கலில் உகப்பும் அதனாலாய கார்யங்களுங் காணப்படுதல் போல,
வெற்றி பெற்ற எம்பெருமான் தான் ஸாதாரணமாயிருப்பினும் திருவாழி யாழ்வான்
மிக மின்னித் தோற்றுவனாதலால் “ஆழி போல் மின்னி” என்றனரென்க.
“சார்ங்கமுதைத்த சர மழைபோல்” என்றவுடனே,
அச் சார்ங்கத்துச் சர மழை ராவணாதியரை முடித்தாற் போல்
இதுவும் முடித்து விடிற் செய்வதென் என்றஞ்சி வாழ உலகினிற் பெய்திடாய்” என்றனர்.
———————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply