ஸ்ரீ திருக் குறும் தாண்டகம் -5–ஸ்ரீ திவ்யார்த்த தீபிகை சாரம் —

கீழ்ப்பாட்டிலுள்ள ”கேட்கயானுற்றதுண்டு” என்ற வாக்கியத்தை இப் பாட்டிலும் இயைத்துக் கொள்ளலாம்.
”தீர இரும்புண்ட நீரது போல என்னாருயிரை யாரப் பருக, எனக்காராவமுதானாயே” என்ற
திருவாய்மொழிப் பாசுரத்தையே பெரும்பாலும் அடியொற்றி அருளிச் செய்வது இப்பாசுரம் என்க.

இரும்பனன் றுண்ட நீர்போல் எம்பெரு மானுக்கு, என்றன்
அரும்பெற லன்பு புக்கிட் டடிமைபூண் டுய்ந்து போனேன்,
வரும்புயல் வண்ண னாரை மருவியென் மனத்து வைத்து,
கரும்பினின் சாறு போலப் பருகினேற் கினிய லாறே.–5-

பதவுரை

இரும்பு–இரும்பானது
அனன்று–பழுக்கக் காய்ந்து
உண்ட நீர் போல்–(அக்காய்ச்சலடங்கும்படி) உட் கொண்ட ஜலம் போலே
எம்பெருமானுக்கு–எம்பெருமான் திறத்திலே
என் தன்–என்னுடைய
அரு பெறல் அரு பெறல் அன்பு புக்கேட்டு–பெறுதற்கரிதான அன்பைச் செலுத்தி
அடிமை பூண்டு–கைங்கரியம் பண்ணி
உய்ந்து போனேன்–உஜ்ஜீவிக்கப் பெற்றேன்;
(அன்றியும்)
வரும்-(அடியார் இருக்குமி்டந்தேடி) வருகி்ன்ற
புயல் வண்ணனாரை–மேக வண்ணனான அப்பெருமானை
மருவி–கி்ட்டி
என் மனத்து வைத்து–என்னெஞ்சிலே பொருந்த வைத்து
கரும்பின் இன் சாறு போல–கரும்பினுடைய இனிய ரஸம் போலே
பருகினேற்கு–அநுபவிக்கப் பெற்ற எனக்கு
இனிய ஆறே–போக்யமாயிருக்கிறபடி என்னே!.

இரும்பானது அக்நியாலே மிகவும் காய்ச்சப்பட்டு அக்காய்ச்சலடங்க நீரைப் பருகுமா போலே
நானும் என்னுடைய தாபமடங்க பகவத் விஷயத்தில் அன்பாகிற தண்ணீரைப் பருகி,
ப்ராப்தமான அவ் விஷயத்திலே அடிமை செய்யப் பெற்று
உஜ்ஜீவித்தேனென்பன முன்னடிகள்.

தகாத விஷயங்களில் அன்பு உண்டாவதே சஹஜமாய்,
பகவத் விஷயத்தில் அன்பு உண்டாவது மேட்டுமடையா யிருத்தல் பற்றி அரும்பெறலன்பு எனப்பட்டது.
நெருப்பிலே தாமரை பூத்தாலும் பூக்கும்;
அஹங்காரப் பெரு நெருப்பிலே எம்பெருமான் விஷயமான அன்பு விளைவது மிகவுமரிது.

‘அடிமைப்பூண்டு‘ என்றதனால் ஆத்மாவுக்கு அடிமையே ஆபரணமென்பது பெறப்படும்.

(வரும்புயல் வண்ணனாரை இத்யாதி.)
இருந்தவிடத்தே யிருந்து வர்ஷித்து இன்பம் பயக்கும் மேகம் போலே அடியாருள்ள விடங்களிலே சென்று வர்ஷித்து
இன்பம் பயக்கும் மேகம்போலே அடியாருள்ள விடங்களிலே சென்று ஈரக்கையாலே தடவி
விடாய் தீர்க்குமவன் எம்பெருமான்.

அன்னவனை என் மனத்திலே பொருந்த வைத்துக் கருப்பஞ்சாறு போலே பருகினேன்;
பருகின மாத்திரத்திலே வாயாற்சொல் வொண்ணாத இனிமையாயிருக்கின்றதே! ;
இதற்கென்ன காரணம்! தெரியவேணுமென்றாராயிற்று.

———————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading