தன்னை விரும்பாமால் பிரயோஜநாந்தரத்தையே விரும்பி அகன்று போக நினைப்பார்க்கும்
திருமேனி நோவக் காரியஞ் செய்தருள்பவனாயிரா நி்ன்றான் எம்பெருமான்;
விபவாவதாரங்களிலே இழந்தார்க்கும் உதவுவதற்காகத் திருமாலிருஞ்சோலை மலை முதலிய
திருப்பதிகளிலே கோயில் கொண்டிரா நின்றான்;
அன்னவனை வணங்கி யுய்ந்தேனென்கிறார்.
பாயிரும் பரவை தன்னுள் பருவரை திரித்து, வானோர்க்
காயிருந் தமுதங்க் கொண்ட அப்பனை எம்பி ரானை,
வேயிருஞ்சோலை சூழ்ந்து விரிகதி ரிரிய நின்ற,
மாயிருஞ்சோலை மேய மைந்தனை வணங்கி னேனே.–3-
பதவுரை
பாய் இரு பரவை தன்னுள்–பரந்து ஆழ்ந்த திருப்பாற்கடலிலே
பரு வரை–பெரியதான (மந்தர) மலையை
திரித்து–சுழலச்செய்து (கடல் கடைந்த)
வானோர்க்கு ஆய் இருந்து–தேவர்களுக்குப் பக்ஷபாதியாயிருந்து
அமுதம் கொண்ட–அமுதமெடுத்துக் கொடுத்தருளின
அப்பனை–உபகாரகனும்
எம் பிரானை-எமக்கு ஸ்வாமியானவனும்
இரு–மிகப்பெரிய
வேய் சோலை சூழ்ந்து–மூங்கிற் சோலைகளாலே சூழப்பட்டு (அதனால்)
விரி கதிர் இரிய நின்ற–ஸூர்யன் கண்ணுக்குத் தெரியாதபடி யிருக்கப்பெற்ற
மாயிருஞ் சோலை–திருமாலிருஞ்சோலை மலையிலே
மேய–நித்ய வாஸம் செய்தருள்கிற
மைந்தனை–மிடுக்கனுமான ஸர்வேச்ரனை
வணங்கினேன்-வணங்கப்பெற்றேன்.
கடல் கடையும் போது மந்தரமலையை மத்தாக நாட்டிக் கடைந்தனனாதலால் ‘பருவரைதிரித்து‘ எனப்பட்டது.
எம்பெருமான் அவாப்த ஸமஸ்த காமனாகையாலே அவன் செய்தருளுங் காரியமெல்லாம் பிறர்க்காகவே யிருக்கும்;
நிலா தென்றல் சந்தனம் முதலிய பொருள்கள் பிறர்க்கு உபயோகப்படுவதற்கென்றே யிருப்பது போலவே
எம்பிரானுமிருப்பனென்பது விளங்க வானோர்க்காயிருந்து என்றது.
”அமுதம் தந்த” என்ன வேண்டியிருக்க கொண்டே என்றது – எம்பெருமானது நினைவாலென்க.
கடல் கடைந்து அமுதமெடுத்தது அவர்களுக்காக வல்லாமல் தன் பேறாக நினைத்திருந்ததனால்.
விரிகதிர் இரியநின்ற = ஸூர்ய கிரணங்கள் உள்ளே புக வொண்ணாமல் நிழல் செய்திருக்கையைச் சொன்னபடி.
———————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ P.B.A,ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply