ஸ்ரீ கம்ப ராமாயணம்/ஆரணிய காண்டம்–மிகைப் பாடல்கள்–

1. விராதன் வதைப் படலம்-

ஆதியானிடம் அமர்ந்தவளை
அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை
இறைஞ்ச, ‘இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல்
வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண்
மதி தண்டம் உமிழ்வோய்.–1-/3-1-

ஆதியான் – சிவன்; இடம் அமர்ந்தவள் – உமை

———-

‘உன்ன அங்கி தர,
யோகிபெலை யோக சயனன்-
தன்னது அன்ன சரிதத்
தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச
மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து
மன வேகம் உதவி.–2-/3-2-

அங்கி – நெருப்பு; யோக சயனன் – திருமால்

———

பருதியைத் தரும் முன்
அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி,
கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி
சுமந்து கொள்’ எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து
அரசி சாரும் எனலும்.–3-/3-3-

பருதி – சூரியன்; அனுசன் – பின் பிறந்தோன் (தம்பி); சுருதி-
வேதம்.

———–

பாற்கடல் பணிய பாம்புஅணை
பரம் பரமனை
ஏற்கை ஏத்தி இவண்
எய்துதலின், என்னை எதிர
வாற்கலன் பொதி அசைந்தென
கரத்தின் அணையா,
ஊர்க்க முன், பணி உவந்து அருள்
எனப் பெரிது அரோ.–4-/3-4-

பரம் பரமன் – மேலுக்கு மேலானவன்

————-

அன்றது அக் கடல் அளித்து
அகல நின்று அளிதுஅரோ;
சென்று தக்க பணி சேர் முனி
திறத்து எனின்அரோ;
வென்று இதற்கு மொழி மேல்
இடுதல் வேண்டுதல்அரோ;
இன்று இதற்கும் ஓர் எல்லை
பொருள் உள்ளுள் உளரோ.–5- / 3-5-

அளிது – இரங்கத்தக்கது.

——–

யோசனைப் புகுத யோகி முனி
யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று
அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன
எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர்
அடைந்தனர் அவண். –6 /4-1-

——–

ஆதி நான்மறையினாளரை
அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின்
மாயையினில் வஞ்ச நடமே. –7 / 4-2-

———

விண்ணை ஆளிசெய்த மாயையினில்
மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும்
என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை
எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர்
அசைந்தனன் அரோ.–8-

——-

ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன்.–9 / 62-1-

ஆடு அரம்பை – நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய
தேவசாதிப் பெண்; கூடு – உடம்பு.

———

வலம்செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன்.–10 /64-1-

நலிஞ்சு – நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச – போலி
(நலிந்து, பொலிந்த); நாம வேல் – அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன்
என்பது ஓர் அரக்கனின் பெயர்.

——

வெம்பு விற்கை வீர! நீ
அம்பரத்து நாதனால்,
தும்புருத்தன் வாய்மையால்,
இம்பர் உற்றது ஈதுஅரோ.–11/65-1-

வெம்பு வில் – வெதும்புகின்ற வில்; அம்பரத்து நாதன் –
தேவருலகத் தலைவன்; இம்பர் – இவ்வுலகு.

——

3. அகத்தியப் படலம்-

‘அருந் திறல் உலகு ஒரு
மூன்றும் ஆணையின்
புரந்திடும் தசமுகத்து
ஒருவன், பொன்றிலாப்
பெருந் தவம் செய்தவன்,
பெற்ற மாட்சியால்
வருந்தினெம் நெடும் பகல் –
வரத! – யாம் எலாம்.–12/14-1-

தசமுகத்து ஒருவன் – பத்துத் தலை கொண்ட இராவணன்;
பொன்றிலா – அழியாத.

———-

‘தேவர்கள்தமைத் தினம்
துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி,
திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர்
செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன்
வலத்துக்கு யார் வலார்?–13 / 14-2-

துரந்து – விரட்டி.

—————

அவன் வலி படைத்து,
மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் –
இறைவ! – இன்னுமே.–14 / 14-3-

புங்கவர் – உயர்ந்தோர்.

———

ஆயிர கோடி என்று
உரைக்கும் அண்டமேல்
மேய போர் அரக்கரே
மேவல் அல்லதை,
தூய சீர் அமரர் என்று
உரைக்கும் தொல் கணத்து
ஆயவர் எங்ஙன் என்று
அறிந்திலோம், ஐயா!–15 / 14-4-

மேவல் அல்லதை – வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங்
கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர
அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை).

———–

“வெள்ளியங் கிரியிடை
விமலன் மேலை நாள்,
கள்ளிய அரக்கரைக்
கடிகிலேன்” எனா,
ஒள்ளிய வரம் அவர்க்கு
உதவினான்; கடற்
பள்ளி கொள்பவன் பொருது
இளைத்த பான்மையான்.–16 /4-5-

வெள்ளியங்கிரி – கயிலை மலை; விமலன் – இயல்பாகவே
மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் – திருமால்.1

———–

‘நான் முகன் அவர்க்கு
நல் மொழிகள் பேசியே
தான் உறு செய்
வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
சிறைப்பட்டு மீண்டுளார்.’–17 /14-6-

வினைத்தலை – வினைப் பயனிலே.

———–

என்று, பினும், மா தவன்
எடுத்து இனிது உரைப்பான்:
‘அன்று, அமரர் நாதனை
அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
வலிமைக்கு நிகர் யாரே!–18 / 53-1-

தச முகப் பதகன் – இராவணனாகிய பாதகன்.

———-

‘ஆயவர்கள் தங்கள் குலம்
வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
கடனது’ என்றான்;
நாயகனும், ‘நன்று!’ என
அவற்கு நவில்கின்றான்:–19 / 53-2-

ஆயவர்கள் தங்கள் – அரக்கர்களாகிய அவர்கள்.

———–

4. சடாயு காண் படலம்

‘தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர்
தடங் கொங்கைத் தையலாருள்,
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
புணர்ந்தனன்; அத்தோகைமாருள்,
மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து
முக் கோடி விண்ணோர் ஈன்றாள்;
மைக் கருங் கண் திதி என்பாள் அதின்
இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள்.–20 / 24-1-

ஐம்பதின்மர் – ஐம்பது பேர்; விண்ணோர் – தேவர்கள்;
இரட்டி – இரண்டு மடங்கு.

———-

தானவரே முதலோரைத் தனு பயந்தாள்;
மதி என்பாள் மனிதர்தம்மோடு-
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
பயந்தனளால்; சுரபி என்பாள்
தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள
பிற பயந்தாள்; தெரிக்குங்காலை,
மானமுடைக் குரோதவசை கழுதை, மரை,
ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள்.–21 / 24-2-

தானவர் – அரக்கர்; வயிறு வாய்த்தாள் – கர்ப்பம் உற்றாள்.

———-

மழை புரை பூங் குழல் விநதை, வான்,
இடி, மின், அருணனுடன் வயிநதேயன்,
தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல்
பெரும் பறவைதம்மை ஈன்றாள்;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல்,
காடை, பல பிறவும் ஈன்றாள்;
கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே
செடி முதலாக் கண்ட எல்லாம்.–22 / 24-3-

மழை புரை பூங்குழல் – மேகம் போன்ற பொலிவு பெற்ற
கூந்தல்; கூகை – ஆந்தை; இழை புரையும் தாம்பிரை – (மகளிர்க்கு)
ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால்.

———-

வெருட்டி எழும் கண பணப்பை வியாளம்
எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்;
மருள் திகழும் ஒரு தலைய புயங்கம்
எலாம் கதை என்னும் மாது தந்தாள்;
அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி,
உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம்
ஆகிய பலவும், தெரிக்குங்காலை.–23-/24-4-

கண பணப் பை வியாளம் – கூட்டமாயுள்ள படமும்
நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட
பாம்புகளைக் குறித்தது); மருள் – அச்சம்; புயங்கம் – பாம்பு;
செலசரம் – நீரில் இயங்கும் உயிரினங்கள்.

———-

‘அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை,
கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற
மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை,
தாம்பிரை, ஆம் மட நலார்கள்,
விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்;
விநதை சுதன் அருணன் மென்தோள்,
புது மதி சேர் நுதல், அரம்பைதனைப்
புணர, உதித்தனம் யாம், புவனிமீதே.–24 / 24-5-

புது மதி சேர் நுதல் – (அமாவாசைக்குப் பின்) புதிதாகத்
தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி. 24-5

———

என்று உரைத்த
எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித்
தொழுது, கண்
ஒன்றும் முத்தம்
முறை முறையாய் உக-
நின்று, மற்று இன்ன
நீர்மை நிகழ்த்தினார்.–25 / 27-1-

எருவை அரசன் – பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று
தாரவர் – நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்;
முத்தம் – முத்துப் (போன்ற).

———

5. சூர்ப்பணகைப் படலம்-

கண்டு தன்இரு வழி
களிப்ப, கா….கத்து
எண் தரும் புளகிதம்
எழுப்ப, ஏதிலாள்
கொண்ட தீவினைத் திறக்
குறிப்பை ஓர்கிலாள்
அண்டர் நாதனை, ‘இவன்
ஆர்?’ என்று உன்னுவாள்.–26 / 11-1-

எண்தரும் புளகிதம் – எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு);
அண்டர் நாதன் – தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர்
கிலாள் – குறிப்பாக உணராதவளாய்.

———-

பொன்னொடு மணிக் கலை
சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக்கலைகள்
விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் –
கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல
என, ஆம் என, நடந்தாள்.–27 / 33-1-

பொன்னொடு மணிக் கலை – பொன்னும் மணியும் சேர்த்துச்
செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப – ஒலிக்க.

———-

6. கரன் வதைப் படலம்

ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்;
அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை,
குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீயே எனத் திரியும்
கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள்
எல்லா வகையும் தோற்றேனே.–28 / 7-1-

ஆற்றேன் – தாங்க மாட்டேன்; வல்லபங்கள் – வெற்றிகள்.

———

பத்துடன் ஆறு எனப்
பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள்
வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு
அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து
அவன் அருள உற்றுளார்.–29/ 35-1-

வித்தக வரத்தர் – சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்;
முத்தலைக் குரிசில் – திரிசிரா என்னும் அரக்கர் தலைவன்.

————-

ஆறு நூறாயிரம் கோடி
ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு
இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி,
வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன்
படைத் தொகுதி என்பரால்.–30 / 38-1

ஆழித் தேர் – சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை.

——-

276. நடந்து தன் இரு கரத்தினின்
நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
தாரையின் விதைத்தான்.—31/ 148-1-

சிலைவாய் – வில்லிலிருந்து.

——–

277. விழுந்த வெம் படை தூடணன்
சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
இறைவனைப் புகழ்ந்தார்.–32 /161-1-

அழிந்த சிந்தையர் – தளர்ந்த மனத்தவராய்; காதல் – அன்பு.

————

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

278. பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு
என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை
உரைக்கு உவமை பெற, குலிசத்தவன் முதலாம்
உலகு இறைமைக்கு உரிய மேலோர்
இருக்கும் அரித் தவிசு எவைக்கும் நாயகம்
ஈதுஎனக் குறித்து அங்குஇமையோர் தச்சன்
அருக்கர் வெயில்பறித்து அமைத்தஅரிமுகத்தின்
மணிப் பீடத்து அமர்ந்தான் மன்னோ.–33 / 2-1

பரிக்கும் – ஈர்க்கும் (அண்டத்தின் கோளங்கள்
ஒன்றையொன்று ஈர்ப்பன); குலிசத்தவன் – வச்சிராயுதம் ஏந்தும்
இந்திரன்; அரித் தவிசு – சிங்க ஆசனம்; நாயகம் – தலைமை;
இமையோர் தச்சன் – மயன்; அருக்கர் – சூரியர்கள்; அரிமுகத்தின்
மணிப் பீடம் – சிங்க முகம் அமைத்து மணிகள் பதித்த (அழகிய)
பீடம்.

——

பொருப்பினையும் கடந்த புயப் பரப்பினிடைப்
பொழி கதிரின் ஒளி குலாவி,
பரப்பும் இருட் குறும்பு எறிந்த பகல்
ஒளியும் கெடத் துரந்து, பருவ மேகத்து
உருப் பயில் இந்திர நீலச் சோதி தளைத்து
உலகம் எலாம் உவந்து நோக்க,
திருப் பயில் உத்தரிகமொடு செறி
வாகுவலய நிரை திகழ மன்னோ.–34 /5-1-

பொருப்பு – மலை; துரந்து – விரட்டி; உரு – நிறம், அழகு;
உத்தரிகம் – மேலாடை; வாகு – தோள்.

————–

இலங்கு மரகதப் பொருப்பின் மருங்கு தவழ்
இளங் கதிரின் வெயில் சூழ்ந்தென்ன,
அலங்கு செம் பொன் இழைப் பயிலும்
அருந்துகிலின் பொலிந்தஅரைத் தலத்தின்மீது,
நலம் கொள் சுடர்த் தொகை பரப்பும்
நவமணிப்பத்தியின் இழைத்தநலம் ஆர்கச்சு
துலங்க அசைத்து அதில் சுரிகையுடை வடி
வாள் மருங்கினிடைத் தொடர மன்னோ.–35 / 5-2

வெயில் – ஒளி; வடி – கூர்மை.

——–

281. வானுலகு அளிக்கும் புரந்தரன் ஆதி,
மருவும் எண் திசைப் படு நிருபர்
ஆனவர்தமது புகழ் எலாம் ஒருங்கே
அன்ன மென் புள் உருத் தாங்கி,
தான் இடைவிடாது தசமுகத்து அரக்கன்
பதத்து இடைத் தாழ்ந்து தாழ்ந்து எழல்போல்
பால் நிறக் கவரி மயிர்க் குலம் கோடி
பாங்கினில் பயின்றிட மன்னோ.–36 /5-3-

அளிக்கும் – காக்கின்ற; புரந்தரன் – இந்திரன்; கவரி மயிர்க்
குலம் – வெண்சாமரைக் கூட்டம்; பாங்கினில் – பக்கங்களில்.

———–

தேவ கன்னியர்கள், இயக்கர் தம் குலத்துத்
தெரிவையர், சித்தர் மங்கையர்கள்,
மேவ அருந் திறல் சேர் நாகர் மெல்லியர்கள்,
விளங்கு கந்திருவர், மேல் விஞ்சைக்
காவலர் குலத்தில் தோன்று கன்னியர்கள்,
ஆதியாய்க் கணிப்பு இல் பல் கோடிப்
பாவையர் எவரும் பாங்குற நெருங்கி,
பலாண்டு இசை பரவிட மன்னோ.–37 / 5-4

கணிப்பில் – கணக்கற்ற; பலாண்டு – பல்லாண்டு.

———

தண் கதிர் பொழியும்
ஓர் தவள மா மதி
விண் பிரிந்து இரு
நிலத்து இருந்து, வேறு வேறு
எண் கடந்து உரு
எடுத்து இருளை ஓட்டல்போல்
வெண் குடைத் தொகை
பல கோடி மேவவே.–38 /7-1-

தவள மா மதி – வெள்ளையாயுள்ள பெருமைக்குரிய சந்திரன்.

———-

284. ஏவலின் புரி தொழில்
எவையும் செய்து, செய்து
ஓவு இலர், துயர்க் கடற்கு
ஒழிவு காண்கிலர்,
மேவரும் பெரும் பயம்
பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
தாழ்ந்து நிற்கவே.–39 / 7-2-

ஓவு இலர் – நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு – முடிவு.

——-

வியக்கும் முப் புவனமும்
வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
இறைஞ்சி நிற்கவே.–40 /11-1-

கயக்கிய – கசக்கிய.

———

பெருந் திசை இரிந்திடப்
பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
எடுத்துப் போற்றவே.–41 / 11-2-

களாஞ்சி – காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம்.

——–

287. கடி நகர் அழித்துத்
தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
இரந்து நிற்கவே.–42/15-1-

கடிநகர் – காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி.

———–

288. நிகர் அறு புவனம் மூன்று
என நிகழ்த்திய
தொகையினில் தொகுத்திடும்
அண்டச் சூழலில்
வகையினைக் குரு முறை
மரபின் வஞ்சியாப்
புகரவன் விரித்து எடுத்து
இயம்பிப் போகவே.–43 /15-2-

குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் – குரு நெறி
மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு.

———-

289. மதியினில் கருதும் முன்
வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
தனி விளம்பிப்போகவே.–44 / 15-3

திதி முதல் அங்கம் அஞ்சு – திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம்.

———

290. ‘உரிய நும் குலத்து உளேன்
ஒருவன் யான்’ எனப்
பரிவுறும் பழமைகள்
எடுத்துப் பன்னியே,
விரை மலர் சிதறி, மெய்
அன்பு மீக்கொளா,
நிருதி அங்கு அடிமுறை
காத்து நிற்கவே.–45 / 17-1-

நிருதி – தென்மேற்குத் திசைக் காவலன்.

———-

என்ற பொழுதில், கடிது
எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
கழறுற்றிடுவதானாள்.
கடிது எழுந்து – விரைவாக எழுந்து. 49-1

292. என்பதை மனக்கொடு
இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின்
எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை
இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை
எடுத்து அறைசெய்கிற்பாள்.
மனக்கொடு – மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப – வலிமை
உடையவனே. 51-1

293. ‘ஈது அவர்கள்தங்கள் செயல்’
என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
இதனைக் கழறுகின்றான்.
காதுறு சினத்தன் – சிதைக்கும் சினம் உடையவனாய். 57-1

294. இற்று எலாம் அரக்கி ஆங்கே
எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே,
கொண்ட வெங் கோபத் தீயில்
சொற்ற ஆதரத்தின் வாய்மை
எனும் புனல் சொரிதலோடும்
அற்றதால; பின்பு ஆங்கு
அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே.
கொற்றவாள் அரக்கன் – வெற்றி தரும் வாள் ஏந்திய
அரக்கன் (இராவணன்); ஆதரம் – அன்பு, பற்று. 81-1

8. மாரீசன் வதைப் படலம்

295. ஆயிரம் அடல்
கையுடையானை மழு வாளால்
‘ஏ’ எனும் உரைக்குள் உயிர்
செற்ற எதிர் இல்லோன்
மேய விறல் முற்றும்
வரி வெஞ் சிலையினோடும்
தாயவன் வலித் தகைமை
யாம் உறு தகைத்தோ.
ஆயிரம் அடல் கையுடையான் – ஆயிரம் வெற்றிக் கைகளை
உடைய கார்த்தவீரியன்; எதிர் இல்லோன் – ஈடு இல்லாதவன் (வாலி);
தாயவன் – கடந்தவன் (இராமன்). 25-1

9. இராவணன் சூழ்ச்சிப் படலம்

296. ஓவரு கவனம்மீது
உற்றுச் சென்றுளான்,
பூ வரு சாலையுள்
பொருந்த நோக்குறா,
‘யாவர், இவ் இருக்கையுள்
இருந்த நீர்?’ என்றான் –
தேவரும் இடர் உறத்
திரிந்த மேனியான்.
ஓவரு – நீக்குதற்கு அரிய; பூவரு சாலை – மலர்கள் மலரும்
(இலைக்) குடில்; நோக்குறா – பார்த்து. 24-1

297. ‘மேனகை, திலோத்தமை,
முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
அவன் தன் மாட்சியால்,
ஊனம் இல் அடைப்பை, கால்
வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.
ஏழையர் – பெண்கள்; அடைப்பை – வெற்றிலைப் பை
(தாங்குதல்). 43-1

298. ‘சந்திரன், இரவி
என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
ஈண்டு, அவன்
கந்து அடு
கோயிலின் காவலாளரே.
தேசு – ஒளி; கந்து அடு கோயில் – கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை. 43-2

299. என்றனள்; அபயம், புட்காள்!
விலங்குகாள்! இராமன் தேவி,
வென்றி கொள் சனகன் பேதை,
விதியினால் அரக்கன் தேர்மேல்
தென் திசை சிறைபோகின்றேன்;
சீதை என் பெயரும் என்றாள்;
சென்று அது சடாயு வேந்தன்
செவியிடை உற்றது அன்றே.
புட்காள் – பறவைகளே; பேதை – பெண். 43-2

10. சடாயு உயிர் நீத்த படலம்

300. ‘பின்னவன் உரையினை
மறுத்து, பேதையேன்,
அன்னவன்தனைக் கடிது
அகற்றினேன்; பொரு
மன்னவன் சிறை அற
மயங்கினேன்; விதி
இன்னமும் எவ் வினை
இயற்றுமோ?’ எனா,

பின்னவன் – தம்பி (இலக்குவன்); பொரு மன்னவன் –
(இராவணனை எதிர்த்து) போரிட்ட கழுகரசன் (சடாயு). 45-1

301. சடாயுவைத் தடிந்த வாளைச்
சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
‘தடால்’ எனக் கபாடம் சாத்தி,
சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
கோமுகன்-குறளி ஒத்தான்.
கபாடம் – வாயில் (கதவு). 58-1

302. ‘பெண்ணை விட்டு அமைந்திடின்
பிழையது ஆம்’ என,
உள் நிறை கூடமும்
உவந்த சாலையும்,
மண்ணினில் இராமன் மார்பு
அமர்ந்த ஆதியும்
விண்ணினில் மேதினி
வேண்டி எய்தினாள்.

303. முன்னமே பூமியை
முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
ஏகினான் செய
உன்னியே இராவணன்
உவந்ததொத்துஅரோ.
மாகம் – வானம். 58-3

304. சடாயுவும் சாய்ந்தனன்;
சனகி சாய்ந்தனள்;
விடா செயம் ஏதியும் பிற
கதி வேறு உளோள்
தொடா மறைக் கிரியையும்
சுவைத்த கோமகன்
அடாத மேற் செயல் எலாம்
அமைத்தல் என்சயம்?
ஏதி – ஆயுதம். 58-4

305. மூன்று பத்து ஒருபது
முந்து யோசனை
ஏன்றது; பாவையும், ‘ஏது’?
என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
தொழுது, ‘தொல் உலகு
ஈன்றவள் இவள்’
என, இசைத்து இறைஞ்சியும்.
மூன்று பத்து ஒருபது – நாற்பது. 58-5

306. ‘இசைக் கடல் உறைபவ!
இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
தொழுது போயினான்?
இசைக்கடல் – புகழ்க்கடல். 58-6

307. தேன்றிரும் இராவணன்
சேற என்று எதிர்ந்து,
ஊன்று செம்பாதி சேய்
தூண்டத் தூண்டிட,
மூன்று தன் பதத்தில்
ஒன்று இழிந்த மொய் கரத்து
ஊன்று தண்டு ஒடிந்தென
வீழ ஓடினான்.
(301 – 307 பாடல்கள் தெளிவில்லை). 59-1
11. அயோமுகிப் படலம்

308. என்று அவள் கூறலும்,
மைந்தனும், ‘இன்னே
நன்றியதாய நறும்
புனல் நாடி,
வெனறி கொள் வீரன்
விடாய்அது தீர்ப்பான்
இன்று இவண் வந்தனன்’
என்று உரைசெய்தான்.
நன்றியதாய – நல்லதான; வென்றி கொள்வீரன் – வெற்றி
கொள்ளும் வீரன் (இராமன்); விடாய் – தாகம். 55-1

12. கவந்தன் படலம்

309. ‘பாரிடமே இது;
பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
மா அனைய பாழியாய்!
பாரிடம் – பெரிய இடம்; பரவை சுற்றும் பார் – கடல் சூழ்ந்த
உலகம்; பாழி – வலிமை. 21-1

310. காவாய் என்பால், தன்
ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, ‘இவ்
வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
என் புகல் அம்மா!
இவ்வெய்யோற்கு – இந்தக் கொடியவனுக்கு. 29-1

13. சவரி பிறப்பு நீங்கு படலம்

311. ‘மாங்கனி, தாழையின் காய்,
வாழையின் கனிகளோடும்,
ஆம் கனி ஆவதே என்று அருந்தி,
நான் விரும்பி வைத்தே
பாங்கின் நல் அமுது செய்மின்’
என்று அவள் பரவி, நல்கும்
தேம் கனி இனிதின் உண்டு,
திருஉளம் மகிழ்ந்தான், வீரன்.
அமுது செய்மின் – சாப்பிடுங்கள். 5-1

————- ————————————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading