ஸ்ரீ நாராயண கவசம்-

ஸ்ரீ நாராயண கவசம்

ஓம் ஓம் ஓமென ஒள்ளியர் ஓதிடும்
ஓமதின் பொருளாய் உள்ளவ போற்றி!
மூன்றெழுத் திணைந்து முதலிய ஓமதில்
ஆன்ற முன் நேழுத்தாம் அகரத்தின் பொருளே!
நாராயணனே நவிலுமேவ் விடத்தும்
பேரா துறையும் பெரியவ போற்றி !
உலகும் உயிரும் உய்ந்திட உதவும்
அலகிலா அருளே அளிக்கும் தேவே
மரகத மேனி மாலே போற்றி !
உரகரி வாகன உன் தாள் போற்றி!
தாமரை புரியும் தாள்களைப் பற்றி
எமமாய்ப் பாவக்கடல் ஏறிட அருள்வாய்.

முன்புறம் கேசவன் முற்றிலும் காக்க!
பின்புறம் நாரணன் பேணிக் காக்க !
மேற்புறம் மாதவன் மிடுக்குடன் காக்க!
மேற்கில் கோவிந்தன் மெலிவின்றிக் காக்க !
வடக்கில் விஷ்ணு வண்ணமாய் காக்க!
வடகிழக்கில் மதுசூதனன் காக்க !
தென்கிழக்கில் திருவிக்ரமன் காக்க !
தென்மேற்கில் வாமனன் தேசுறக் காக்க !
கிழக்கில் ஸ்ரீதரன் கேடின்றிக் காக்க !
எழிர்தெற்கில் ரிஷிகேசன் காக்க !
வடமேற்கில் பத்மநாபன் காக்க !
சடுதியில் அகந்தாமோதரன் காக்க !

கமல மலர்ப்பாதம் கருத்தினிற் பதித்து
விமலனே பக்தியை விரைவினில் தருக !
ஒன்னலர்க் கெமனாய் ஒலித்திடும் உன் கழல்
மன்னுக என் மனம் மகிழ்வுறு கீதமாய்
அம்புகொள் புட்டில் போல் அமைந்திடும் முழங்கால்
தெம்புதன் தென்றன் தெவ்வரைச் சிதைக்க !
ஆனையின் துதிக்கை போல் அமைந்திடும் தொடைகள்
வானவர் போற்றிட வன்மையை அளிக்க !
கேசரி இடை போல் கிளர்ந்திடும் இடுப்பு
மாசறுத் தென்னை மாண்புறச் செய்கவே !
உலகினை அடக்கும் ஒருபேர் உதரம்
இலகுபொன் சுரங்கமாய் என்றனுக்கருள்க!

பிரம்மனை ஈன்ற பெருமைசேர் கொப்பூழ்
உரமிகு தூணாய் உதவுக எனக்கு
திருமகள் உறையும் தேசுறு மார்பு
பெருமைசேர் அரண்எனப் பேணியே காக்க !
எழிலுறும் அபயம் ஈந்திடும் நற்கை
அழிவைத் தடுத்து ஆக்கம் தருக !
சங்கினைப் பழிக்கும் தரமிகு நற்கழுத்து
என்றனுக்கு இன்பம் இகமதில் ஈகவே !

செந்துவர்வாயின் சிறந்த பேரொளியால்
சிந்துக தீவினை சீர்புகழ் ஓங்குக !
பார்ப்பவர் தம்மை பரவசப் படுத்தும்
ஏற்மிகு நாசிகள் என்றனுக் கருள்க !
அன்பர்க் கருளும் அழகிய மலர்க்கண்
துன்பம் எரித்துச் சுகமதை நல்குக !
வில்லென விளங்கிடும் விழுமிய புருவம்
ஒல்லெனத் தீமையை ஒழித்தருள் புரிக !
பிறையென ஒளிரும் பீடுடை நெற்றி
மறைபொருள் உணர்த்தி மகிழ்ந்திட அருள்க !
கருநிற மேகமாய்க் காணும் கேசம்
வருமிடர் போக்கி வளமழை பெயகவே !

பஞ்சாயுதம்

வலக்கை தாங்கும் வலியுறு தர்சனம்
அளக்கனைப் போக்கி அருளை அளிக்க !
இடக்கையில் பாஞ்ச ஜன்யமெனும்சங்கம்
வில்லாம் சார்ங்கம் வெங்கணை பொழிந்து
பொல்லார் தம்முயிர் போக்குக விரைவில்
கௌமோதகியாம் கவினுறு கதையால்
தெவ்வர் தலைகள் சிதைந்திட அருள்வாய் !
நாந்தக மென்னும் நவையறு நல்வாள்
வீந்திடச் செய்கவே வெம்பிணிப் பகைதனை.

மற்றவை

பீதாம்பரத்தின் பேரொளி என்றனுக்கு
ஆதாரமதாய் அறிவொளி நல்குக !
தேன்மலி துளபம் தீயவென் நஞ்சையும்
கான்மலி பேயையும் கடிதினில் போக்குக !
நன்மைகள் செய்திடும் நாராயணன் பேர்
தன்மையார் கவசமாய் தரிப்பவர்க் காகுக !
பிணியும், பேயும், பில்லி சூனியமும்,
தணியா வறுமையும் சடுதியில் ஓடுக!
ஆனையின் துயரை அகற்றிய இறைவன்

தசாவதாரம்

தானொரு மீனாய்ச் சதுர்மறை காத்தவன்
ஆமையாய் மந்தாரம் அழகுறத் தாங்கி
ஏமமோடும்பர்க்கு ஈந்தவன் அமுதம்
ஏனமாய்க் கோட்டில் ஏந்தியிப் பூமியை
ஈனமார் ரணியாட்சன்தனை ஈர்ந்தவன்
பொன்னன் செருக்கைப் போக்கி அவனை
தன்னரும் உகிரால் தாக்கிக் கிழித்துப்
பிரஹல்லாதனுக்குப் பேரருள் புரிந்த
நரஹரி உருவாய் நன்மைசெய் திருமால்
வாமனன் வடிவில் மாவலி தன்பால்
நேமமொடிரந்து நெடியவன் ஆனவன்
தந்தையின் சொல்லைத் தலைமிசைக் கொண்ட
வந்தனைக்குரிய வலியவன் பரசு
இராமனாய் வந்த ஏந்தல் தசரத
இராமனாய் தோன்றி இலங்கைக் கிறைவன்
பத்துச் சென்னியும் பாழ்பட அறுத்தவன்

வித்தகன் நல்ல வீடனர் கிலங்கை
அரசை அளித்த அஞ்சன வண்ணன்
புரசைக் களிற்றைப் போன்றவன் வலியோன்
மேழிச் செல்வம் மேலெனக் காட்ட
பாழில் கலப்பையை படையாகக் கொண்ட
பலராமநேனும் பண்பார் குரிசில்
நலமார் நந்தகோபன் நயந்த
கண்ணன் கம்சனின் காலனாய் வந்தோன்
மண்ணும் மனுவலும் பரவிடும் பரமன்
கலியுக மதனில் கல்கியின் வடிவாய்
மலியும் வினைகளை மடிக்க வந்திடுபவன்
ஆகிய பத்து அவதாரங்கள் உடையோன்

ஓகையோடடியார் யலன் உளத்தினில் உறைபவன்
பலபல பெயரில் பரவி இலங்கும்
அலகிலா மாயவன் அனைவர்க்கும் மேலாம்
நாராயணனின் நாமம் ஓதி
ஏரார் அருளை இறைஞ்சி விரும்பி
வேங்கட கிருஷ்ணன் விருப்பமோடியற்றிய
ஓங்கு புகழ் நாராயண கவசம்
நாளும் ஓதுவோர் நலமெலாம் பெற்று
நீள்புகழ் கொண்டு நிரம்பிய செல்வராய்
எவ்வகை நோயும், இழிவும் இன்றி
தெவ்வரை வென்று சிறப்புடன் வாழ்வார்.

ஆதி நாரணன் அடியினை போற்றி !
போதம் அருளும் புண்ணியன் போற்றி !
உலகங் காக்கும் உத்தமன் போற்றி !
அலகில் குணத்தான் அடியிணை போற்றி !
வாழ்க ! வாழ்க ! வையகம் வாழ்க !
வாழ்க ! அடியார் வளமெல்லாம் சிறக்க !

————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading