ஸ்ரீ தெள்ளியதா நம்பிள்ளை செப்பு நெறி தன்னை வள்ளல் வடக்குத் திருவீதிப்பிள்ளை நன்குரைத்த ஈடு முப்பத்தாறாயிரம் – -5-3-7–

அவன் குண ஹானி சொல்லுகிற ஸ்த்ரீகள் வாய் அடங்கும்படி நாம் அவனை வரக்கண்டு
அந்த உபகாரத்துக்காக தலையால் வணங்க வல்லோமே -என்கிறாள்

வலை யுள் அகப்படுத்து என்னை நன் நெஞ்சம் கூவிக் கொண்டு
அலை கடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவுமாம் கொலோ? தையலார் முன்பே–5-3-7-

வலை யுள் அகப்படுத்து-என்னை-இத்யாதி
தப்பாதபடி ஸ்மித -புன்முறுவல், வீக்ஷணாதிகளாலே -கடைக்கண் நோக்கம் முதலியவைகளிலே அகப்படுத்தி.

நல் நெஞ்சம் கூவிக் கொண்டு –
தான் என்றால், “நெஞ்சே இயற்றுவாய் எம்மோடு நீ கூடி”-பெரிய திருவந். 1- என்று நான் பிற்பாடையாம்படி
என்னில் காட்டிலும் முற்படும்படியான நெஞ்சைத் தன் பக்கலிலே நொடித்துக் கொண்டு.

அலை கடல் பள்ளி அம்மானை-
ஸ்ரீமத் துவாரகையில் இருக்கில், ‘பெண்களுக்கு ஓலக்கங் கொடுத்த இடம்’ என்று சம்பந்தம் சொல்லிக் கொண்டு வரக் கூடும்” என்று
எட்ட ஒண்ணாத நிலத்திலே பின்னையும் போய்ப் புக்கான்.
பெண் பிறந்தார்க்கு நினைக்க ஒண்ணாதபடி ஷூபிதமான -கொந்தளிக்கிற கடல் என்பாள் ‘அலை கடல்’ என்கிறாள்.
மஹா தனம் -பெரிய செல்வம் கைப்பட்டவாறே கடல் ஓடத் தொடங்கினான்.

ஆழிப்பிரான் தன்னை –
புக ஒண்ணாத நிலத்திலே புக்கான்’ என்று விட ஒண்ணாதபடி யாயிற்றுக் கையும் திருவாழியுமான அழகு.
கடல் ஓடியாகிலும் பெற வேண்டியாயிற்று இருப்பது.

கலை கொள் அகல் அல்குல் தோழி-
நல்ல புடைவையை யுடைத்தான அகன்ற நிதம்பப் பிரதேசத்தையுடைய தோழீ! என்றது,
உன் வடிவு போலே அநுகூலமாய் இருக்க வேண்டாவோ உன் வார்த்தையும் என்றபடி.
அன்றிக்கே, அவள் மடியிலே கிடந்து சொல்லுகிறாள் ஆகவுமாம்.
கீழே “தோழிமீர், என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்;
இங்கே, ‘தோழி நம் கண்களாற் கண்டு’ என்று விளிக்கிறாள்; இவை சேரும்படி என்? என்னில்,
தாய்மார் சொல்லுகிற வார்த்தையை இவர்களும் சொல்லுகையாலே “தோழிமீர் என்னை இனி உமக்கு ஆசை இல்லை” என்றாள்.
இங்ஙனம் பேசுவாரை விட்டுத் “தீர்ந்த என் தோழி” என்னலாம்படி
நெஞ்சு கலந்து ஒரு நீராய் இருக்கிற உயிர்த் தோழியைப் பார்த்து வார்த்தை சொல்லுகிறாள்.

நம் கண்களால் கண்டு-
இப்போது இவள் ஹிதம் சொன்னாளே யாகிலும், காணும்போது நான்கு கண்களாலே காணும் காண்பது;
அல்லது, இரண்டு கண்களாலும் காண வேண்டாள்.
(நான்கு கண்களாலே’ என்கையாலே, புருஷகாரம் முன்னாகச் சேவிக்க வேண்டும் என்பது ஸ்வாபதேசம்.
இதனால், ‘வேதம் வல்லார்களை’ முன்னிட்டே அவனைக் காண்பார் என்றபடி)

தலையில் வணங்கவும் ஆம் கொலோ தையலார் முன்பே-
பிரிந்த இடத்தில் தன்னுடைய ஸ்த்ரீத்வத்துக்கு -பெண் தன்மைக்குப் போரும்படி அவன்தானே வரப் பார்த்திருந்திலள்,
அவனும் வரவு தாழ்த்தான்’ என்று பழி சொல்லுகிற இவர்கள் முன்பே அவனும் வந்து,
அவன் வந்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாகத் தலையாலே வணங்கப் பெற வல்லமோ!
இத் திருவாய் மொழியை ஆழ்வான், ராஜேந்திர சோழனில் சந்தியா சதஸ்ஸிலே நிர்வஹித்துக் கொண்டிருக்க,
ஆமருவி நிரை மேய்த்தான் நம்பியார்’ என்பார் நூறு வயது போந்திருப்பார் ஒருவர், நடுங்க நடுங்க எழுந்து நின்று,
ஆழ்வான்! தலைமகள் தலையாலே வணங்கப் பெறுமோ?’ என்ன,
பெறும், சிஷ்டாசாரம் உண்டு காணும்; ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் சிரஸா ச அபிவாதயே –
தலையாலே தொழுதலையும் செய்வாய்”என்று அநுஷ்டித்தாள் காணும்’ என்று அருளிச்செய்தார்.
கர்மனை வஹி சம்சித்திம் ஆஸ்திதா ஜநகாதாய -கர்மத்தினாலேயே பல சித்தியைப் பெற்றார்கள் ஜநக குலத்திலுள்ளவர்கள்” என்கிறபடியே,
ஜநக குலத்திலுள்ளவர்களிலும் ஆசாரத்தில் மேற்பட்டார் இலர் அன்றோ.

(பர்த்தாவை சேவிக்க சாஸ்திரம் அனுமதி இல்லையோ–ஓர் உயிர் ஈர் உடல் என்பதால் –
கௌசல்யா லோகபர்த்தாரம் சுஷுவேயம் மனஸ்விநீ தம் மமஅர்த்தே சுகம் பிருச்ச சிரஸா ச அபிவாதய”- சுந். 38 : 56.)

கௌசல்யேத்யாதி -மநஸ்விநீ கௌசல்யா லோக பர்த்தாரம் யம் சுஷீவே-நாட்டில் பெண்கள் ‘இங்கு இருக்கும் நாள்களுக்கு
நமக்கு ரக்ஷகனாய்ப் பின்பு நரகத்தில் புகாதபடி விலக்குவதற்கும் ஒரு பிள்ளை வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெறுவர்கள்;
அங்ஙன் அன்றிக்கே, என் மாமியார் தன் நெஞ்சில் உண்டான பரந்த நோக்கத்தாலே,
உலகத்துக்கெல்லாம் ரக்ஷகனாக வல்லான் ஒரு பிள்ளையைப் பெற வேணும்’ என்று நோன்பு நோற்றுப் பெற்றார்;
அவர் நினைவு தப்பலாமோ? அந்த உலகத்துக்குள்ளே இருக்கிற ஒரு பெண் அல்லளோ நான்.
இனி, ‘நாட்டில் பெண்கள் கணவன்மார்கள் சமர்த்தர்களான போது ஆதரித்தும்,
சமர்த்தர்கள் அல்லரான போது உபேக்ஷித்தும் போரக் கடவர்களாய் இருப்பர்கள் என்பது ஒன்று உண்டு;
நீ எல்லா நிலைகளிலும் அவரை ஆதரித்துப் போருவாய்’ என்று அவர் என்னைக் குறித்துச் சொல்லிவிட்டார்;
நானும் அப்படியே செய்து போரா நிற்க, கிண்ணகத்தில் குமிழிக் கீழே சாவி போமாறு போலே,
தாம் என்னுடைய ரக்ஷணத்தில் நெகிழ நின்றது அவர் நினைவு சங்குசிதம் -குறைவுபட்டது ஆகவோ என்று சொன்னேன் என்று சொல்லு.
தம் மம அர்த்தே சுகம் பிருச்ச – எங்களுடைய ரக்ஷணத்துக்கு நாங்கள் பிரார்த்தித்துப் பெற வேண்டுவது ஒன்று இல்லையே அன்றோ,
அதுவும் அவர் நினைவில் உண்டு ஆகையாலே; இனி,கிரமப் பிராப்தி பற்றாமையால் உள்ளதே அன்றோ இப்போது படுகிறது.
தாம் உளராக எங்களுடைய ரக்ஷணம் தப்பாதே அன்றோ;
ஆனபின்பு, தம்முடைய உண்மையை ஆகாசிக்கை யன்றோ இனி எங்களுக்கு உள்ளது;
ஆகையாலே, அங்குத்தைக்கு ஒரு குறையும் இல்லையே என்று கேட்டேன் என்று சொல்லு.
சிரசா அபிவாதய ச-நாட்டார் அளவு அன்றிக்கே, தாம் விசேஷித்து என்னைக் கைப் பிடிக்கையால் உண்டான வாசியை யான் பெறாத பின்பு,
நாட்டாரைப் போலவாகிலும் பெறக் குறை இல்லை அன்றோ.
இனி நாட்டர் பெறுவது பெறப் பார்த்தால், அவர்கள் தம் பக்கல் செய்யுமத்தையும் செய்யவேணுமே அன்றோ;
ஆன பின்பு, நான் என் தலையாலே தம் திருவடிகளிலே வணங்கினேன் என்று நீ எனக்காக
அவர் திருவடிகளிலே விழு என்றும் அருளிச்செய்தாள்.”

(ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத்
தீண்ட லாவதோர் தீவினை தீர் வரம்
வேண்டினாள் தொழுது என்று விளம்புவாய்- என்பது, கம்பராமாயணம்.)

இதுதான் ப்ரணயரோஷம் -ஊடுதலால் உண்டாகும் சீற்றம் தலை எடுத்துச் சொல்லுகிற வார்த்தையோ,
அபேக்ஷை தோற்றச் சொல்லுகிற வார்த்தையோ’ என்ன,
கீழே, திருவடி வந்தபோது பிரணய ரோஷத்தாலே வந்த சிவிட்குத் தோற்றச் சொன்ன வார்த்தைகள் அடைய மாறும்படி
குளிர அவன் வார்த்தை சொல்ல, பின்பு திரு வுள்ளத்திலே ஓர் ஆறுதல் பிறந்து,
பெருமாளைச் சேராமையால் உண்டான குறைபாடும் கிடக்க அருளிச் செய்கிற பாசுரம்’ என்று அருளிச் செய்தார்.

(இதனால், மனைவிக்குரிய பிரணய ரோஷத்தால் அன்றிக்கே, “அஹம்
சிஷ்யாச தாஸீச” என்கிறபடியே, சேஷத்வத்துக்குத் தகுதியாகச் சொன்னாள்- என்றபடி.)

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading