ஸ்ரீ அப்புள்ளார் அருளிச் செய்த ஸ்ரீ சம்பிரதாய சந்திரிகை -ஸ்ரீ மா முனிகள் வைபவம் –

ஆதியிலே அரவரசை அழைத்து அரங்கர் அவனியிலே இரு நூறாண்டு இரும் நீரென்னப்
பாதியிலே உடையவராய் வந்து தோன்றிப் பரம பதம் நாடி அவர் போவேன் என்ன
நீதியாய் முன் போலே நிற்க நாடி நிலுவை தனை நிறைவேற்றி வாரும் என்னச்
சாதாரணம் என்னும் மா வருடம் தன்னில் தனித் துலா மூல நாள் தான் வந்தாரே –1–

நற் குரோதன வருட மகர மாத நலமாகக் கன்னிகையை மணம் புணர்ந்து
விக்கிரம வற் சரக்கில் வீட்டிருந்து வேதாந்த மறைப் பொருளைச் சிந்தை செய்து
புக்ககத்தில் பெண் பிள்ளை போலே சென்று புவனி யுள்ள தலங்கள் எல்லாம் வணங்கி வந்து
துக்கமற வைணவர்கள் தொண்டு செய்யத் துரிய நிலை பெற்று உலகை உரைக்க கொண்டாரே -2–

செய நாமமான திருவாண்டு தன்னில் சீரங்க ராசருடைத் திருநாள் தன்னில்
செயமாகத் திரு வீதி வாரா நிற்கத் தென்னாட்டு வைணவர் என்று ஒருவர் வந்து
தயையுடைய மணவாளப் பெருமான் அனார் தன் முன்னே ஓரருத்தம் இயம்பச் சொல்லிச்
சயனம் செய்து எழுந்து இருந்து சிந்தித்து ஆங்கே சந்தித்துக் கோயில் காத்து அருளினாரே –3-

வதரியாச் சிரமத்தில் இரு மெய்த் தொண்டர் வகையாக நாரணனை அடி வணங்கிக்
கதியாக ஒரு பொருளை அளிக்க வேண்டும் கண்ணனே அடியேங்கள் தேற வென்ன
சதிராகச் சீர் சைல மந்திரத்தின் சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்குச் சென்மின் நீவீர் பாதியையும் சொல்லுதும் யாம் தேற வென்றார் –4–

சென்றவர்கள் இருவருமே சேர வந்து திருவரங்கன் தினசரியை கேளா நிற்பச்
சந்நிதி முன் கருடாழ்வார் மண்டபத்தில் தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில்
பொன்னி தன்னில் நீராடிப் புகழ்ந்து வந்து புகழ் அரங்கர் சந்நிதி முன் வணங்கி நிற்பச்
சன்னதி இன்று அரங்கர் தாமே அந்தத் தனியன் உரை செய்து தலைக் கட்டினாரே—5-

நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில் நலமான ஆவணியில் முப்பத்து ஒன்றில்
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித் தொல் கிழமை வளர் பக்க நாலா நாளில்
செல்வமிகு பெரிய திரு மண்டபத்தில் செழும் திருவாய் மொழிப் பொருளைச் செப்பும் என்றே
வல்லியுரை மணவாளர் அரங்கர் நம் கண் மணவாள மா முனிக்கு வழங்கினாரே –6-

ஆனந்த வருடத்தில் கீழ்மை ஆண்டில் அழகான ஆனி தன்னில் மூல நாளில்
பானு வாரம் கொண்ட பகலில் செய்ய பவ்ரணையில் நாளிட்டுப் பொருந்தி வைத்தே
ஆனந்த மயமான மண்டபத்தில் அழகாக மணவாளர் ஈடு சாற்ற
வானவரும் நீரிட்ட வழக்கே என்ன மணவாள மா முனிகள் களித்திட்டாரே –7-

தேவியர்கள் இருவருடன் சீர் அரங்கேசர் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
தாவிதமா இந்த உலகோர்கள் வாழத் தமிழ் மறையை வர முனிவன் உரைக்கக் கேட்டே
ஆவணி மாசம் தொடங்க நடக்கும் நாளில் அத்தியயனத் திரு நாள் அரங்க நாதர்
தாவமற வீற்றிருந்து தருவாய் என்று தாம் நோக்கி சீயர் தமக்கு அருளினாரே –8-

அருளினதே முதலாக அரங்கருக்கும் அன்று முதல் அரும் தமிழை அமைத்துக் கொண்டு
தெருளுடைய வியாக்கியை ஐந்துடனே கூட்டித் திகழ் திரு மா மணி மண்டபத்தில் வந்து
பொருள் உரைக்கும் போது எல்லாம் பெருமாளுக்குப் புன் சிரிப்பும் பாவனையும் மகிழ்வும் கொள்ள
அருளுடைய சடகோபர் உரைத்த வேதம் அது கேட்டுச் சாற்றியது இத்தனியன் தானே –9-

நாமார் பெரும் சீர் கொள் மண்டபத்து நம்பெருமாள் தாமாகவே வந்து தனித்து அழைத்து -நீ மாறன்
செந்தமிழ் வேதத்தின் செழும் பொருளை நாள் தோறும் வந்துரையாய் என்னுரையால் வாய்ந்து –10-

சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்பப் போற்றித் தொழும் நல்ல அந்தணர் வாழ் விப்பூதலத்தே
மாற்றாற்ற செம்பொன் மணவாள மா முனி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி யல்லவோ தமிழ் ஆரணமே –11-

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அப்புள்ளார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading