பிரவேசம் –
ஸ்ரீ கௌசலையார் பெற்ற பேற்றை அனுபவித்தார் கீழில் திரு மொழியில் –
பால்ய அவஸ்தை எல்லாம் அனுபவித்து பிராப்த யௌவனர் ஆனவாறே -அனுபவிக்கப் பெறாதே இழந்த
ஸ்ரீ சக்கரவர்த்தியோ பாதியும் தமக்கு பிராப்தி ஒத்து இருக்கையாலே அனுபவிக்கப் பெறாதே இழந்தேன் என்று
அவன் சொல்லுகிற பாசுரத்தாலே தம் இழவைப் பேசுகிறார் —
வன் தாள் இணை வணங்கி வள நகரம்
தொழுது ஏத்த மன்னனாவான்
நின்றாயை அரி அணை மேல் இருந்தாயை
நெடும் கானம் படர போகு
வென்றாள் எம்மி ராமாவோ!
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—- 9-1–
பதவுரை
எம் இராமாவோ–ஓ எமது இராமனே!
வளம் நகரம்–அழகிய அயோத்தி மாநகரத்துப் பிரஜைகள் அனைவரும்
வல் தாளின் இணை வணங்கி தொழுது ஏத்த–(சரணமடைந்தவர்களை எப்பொழுதும் விடாமற் பாதுகாக்கும்)
வலிமையையுடைய (உனது) இரண்டு திருவடிகளிலும் (விழுந்து) நமஸ்கரித்து (எழுந்து) கைகூப்பி நின்று துதிக்க
மன்னன் ஆவான் நின்றாயை–அரசனாகப் பட்டாபிஷேகஞ் செய்து கொள்ளுதற்கு ஸித்தனாய் நின்றவனும்
அரி அணை மேல் இருந்தாயை–சிங்காசனத்தின் மீது வீற்றிருக்க ஸித்தனாயிருந்தவனுமான உன்னை
நெடுங்கானம் படர போகு என்றாள்–பெரிய காட்டிற்கு செல்லுதற்கு (இந்நகர் விட்டு நீங்கிப்) போ என்று (கைகேயி) கூறினாள்
நல் மகனே–நல்ல குமாரனே!
நான்–நான்
உனை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு–உன்னைப் பெற்று வளர்த்த தாயான கைகேயியின் வார்த்தையைக் கேட்டு
நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்–நன்றாக! உன்னை நிலவுலகத்தை ஆளும்படி செய்தேன்
வன் தாள் இணை வணங்கி
தானும் ராஜ்ய பரப்பை எல்லாம் ஆண்டானாய் இருக்கச் செய்தே-அவ்வளவன்றியே –
வண் புகழ் நாரணன் திண் கழல்-என்னுமா போலே
ஆஸ்ரிதரை எல்லா அவஸ்தையிலும் விடேன் என்னும் திருவடிகளை வழி பட்டு
வள நகரம் தொழுது ஏத்த
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற -ஸ்ரீ திரு நகரியிலே
அப்படி இருக்கிற ஸ்ரீ திரு நகரி தொழுது ஏத்த
மன்னனாவான் நின்றாயை –
திரு அபிஷேகத்துக்கு முன்புள்ள கர்த்தவ்யங்கள் எல்லாம் தலைக் கட்டி திரு அபிஷேகம் பண்ணுகைக்கு
திருக் காப்பு நாண் சாத்தி நிற்கிற யுன்னை
அரி அணை மேல் இருந்தாயை
சிம்ஹாசனத்திலே பதஸ்தனாய் இருந்தான் என்னும் படி தோற்றச் சமைந்து இருக்கிற யுன்னை
நெடும் கானம் படர போகு வென்றாள்
இப்படி ராஜாக்கள் அல்லாதாரும் புக மாட்டாத காட்டை -தேவ நேந வனம் கத்வா -என்னுமா போலே
இவ் ஊரில் நின்றும் புறப்பட்டு
வழியே போய்க் காட்டிலே புகுமது அன்றியே காட்டிலே போம்படியாய்-
நெடிய காட்டிலே இறே போகச் சொல்லிற்று
எம்மி ராமாவோ!
நினைக்கவும் -சொல்லவும் -காணவும் -தாபம் போம்படியான உம்மை இறே போகச் சொல்லிற்று
உன்னை பயந்த கைகேசி தன் சொல் கேட்டு
திரு அபிஷேக கல்யாண வார்த்தை -ஸ்ரீ கௌசல்யையாரிலும் காட்டில் தனக்கு நான் சென்று சொல்லி
ப்ரீதி காண வேணும் என்னும்படி பெற்ற தாயாய்ப் போந்த கைகேயி வார்த்தை கேட்டு
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்
வஞ்சன பரை என்று அறியாதே தாய் என்று இவளுக்கு வார்த்தை சொல்லப் புகுந்து –
அவள் வார்த்தையிலே அகப்பட்டு
பூமிப் பரப்பை எல்லாம் அழகிதாக உன்னை ஆள்வித்தேன்
நன் மகனே! உன்னை நானே—-
நான் இப்படி செய்த இடத்திலும் நீர் குணாதிகராம் படி நின்றீர் –
நான் நானாம் படி செய்தேன் –
—————————————————————————————
வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு இரு நிலத்தை
வேண்டாதே விரைந்து ,வென்றி
மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து
மா ஒழிந்து வானமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும்
இளம் கோவும் பின்பு போக
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ!
எம்பெருமான்! என் செய்கேனே ?– 9-2–
பதவுரை
எம் இராமாவோ!
வெவ் வாயேன் வெவ் உரை கேட்டு–கொடிய வாயை யுடையேனை என்னுடைய கடுஞ்சொற்களைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே–பெரிய நிலவுலகத்து அரசாட்சியை விரும்பாமலே விட்டிட்டு
விரைந்து–சீக்கிரமாக
வென்றி மை வாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து மா ஒழிந்து–வெற்றியை விளைப்பதான
மைம் மலை போன்ற வடிவத்தையுடைய யானையும் தேரும் குதிரையுமாகிய வாஹநங்களை யொழிய விட்டு
வனமே மேவி–காட்டையே சேர்ந்து
நெய் வாய வேல் நெடு கண் நேரிழையும்–நெய்ப்பூசிய நுனியையுடைய வேலாயுதம் போன்ற
நீண்ட கண்களையும் தகுதியான ஆபணரங்களை யுமுடையளான பிராட்டியும்
இளங்கோவும்–இளைய பெருமாளும்
பின்பு போக–உடன் தொடர்ந்து வர
எவ்வாறு நடந்தனை–எங்ஙனம் நடந்து சென்றாயோ!
எம் பெருமான்–எமது ஐயனே!
என் செய்கேன்–நான் என் செய்வேன்!
வெவ் வாயேன் வெவ் வுரை கேட்டு
அநலாஸ்யனான என்னுடைய -காடு ஏறப் போம் -ராஜ்யத்தைத் தவிரும் -என்ற
என் வார்த்தையைக் கேட்டு
இரு நிலத்தை வேண்டாதே –
உம்மைப் பிரியில் முடிவோம் -என்று வளைப்புக் கிடக்கிற நகர ஜனங்களை எல்லாம் ஒளித்து-
அவர்களைக் கை விட்டு
விரைந்து –
போகிறோம் -என்று விளம்பிப் போமாகில் -ராஜ்யத்தில் நசையாலே நின்றோம் என்று
கைகேயி நினைக்கும் -என்று விரைந்து
வென்றி மைவாய களிறு ஒழிந்து தேர் ஒழிந்து-மா ஒழிந்து –
வென்றியை விளைப்பதாய்-அஞ்சன கிரி போலே
பெரிய வடிவை உடைத்தாய் இருக்கிற ஆனை என்ன -தேர் என்ன -குதிரை என்ன -இவற்றை ஒழிந்து
வனமே மேவி
இவற்றை ஒழிந்தால் இந்த தேசத்துக்கு போலியான தேசத்திலே போய்ப் புகாதே வனமே மேவி
நெய் வாய வேல் நெடும் கண் நேர் இழையும் இளம் கோவும் பின்பு போக
நீர் போய்ப் புக்காலும் புகுகைக்கு தகாதவர்களை கூடக் கொண்டு
எவ்வாறு நடந்தனை? எம்மி ராமாவோ! எம்பெருமான்! என் செய்கேனே ?–
கால் நடை நடந்து அறியாத நீர் இவர்களையும் கூடக் கொண்டு பொல்லாத காட்டிலே போனீர் –
என்னாயனே நான் என் செய்கேன் –
———————————————————————————–
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன்
குலமதலாய்! குனி வில்லேந்தும்
மல்லணைந்த வரை தோளா! வல் வினையேன்
மனம் உருக்கும் வகையே கற்றாய்
மெல்லணை மேல் முன் துயின்றாய்
இன்று இனி போய் வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
காகுத்தா! கரிய கோவே! —–9-3–
பதவுரை
கொல் அணை–கொலைத் தொழில் பொருந்தின
வேல்–வேலாயுதம் போன்ற
வரி நெடுங்கண்–செவ்வரி பரந்த நீண்ட கண்களையுடைய
கௌசலை தன்–கௌஸல்யையினது
குலம்–குலத்தில் தோன்றிய
மதலாய்–குமாரனே!
குனி வில் ஏந்தும்–வளைந்த வில்லைத் தரித்த
மல் அணைந்த வரை தோளா–வலிமை பொருந்திய மலைகள் போன்ற தோள்களை யுடையவனே!
வல் வினையேன்–மஹா பாபியான என்னுடைய
மனம் உருக்கும் வகையே கற்றாய்–மனதை உருகச் செய்வதற்கே வல்லவனே!
காகுத்தா–ககுத்ஸ்தனென்னும் அரசனது குலத்தில் தோன்றியவனே!
கரிய கோவே–கருநிறமுடைய ஐயனே!
மெல் அணை மேல் முன் துயின்றாய்–மென்மையான பஞ்சனை மெத்தையின் மேல் முன்பெல்லாம் படுத்து உறங்கிப் பழகினவனான நீ
இனி இன்று போய்–இனிமேற் புதிதாக இன்றைக்குச் சென்று
வியன் கானம் மரத்தின் நீழல்–பெரிய காட்டிலுள்ள மரத்தின் நிழலிலே
கல் அணை மேல் கண் துயில கற்றனையோ–கருங்கற் பாறைகளையே படுக்கையாகக் கொண்டு அதன் மேற்படுத்துத் துயிலப் பழகின்றாயோ
கொல் அணை வேல் வரி நெடும் கண் கௌசலை தன் குலமதலாய்! –
கொலையிலே அணைந்த வேல் போலே புகரை உடைத்தாய் –
செவ்வரி கருவரியையும் உடைத்தாய் பரப்பையும் உடைத்தான கண்ணை யுடைய
ஸ்ரீ கௌசலையாருடைய உத்தாரகர் ஆனவனே –
குனி வில்லேந்தும் மல்லணைந்த வரை தோளா!
வீரர்கள் வில் ஒருக்கால் நாணி இறங்கிடாமையாலே வளைந்த படியே இருக்கும் இறே –
அந்த வில் தானும் மிகை என்னும் படி
மலை போலே பெரிய மிடுக்கை உடைய தோளையும் உடையவனே
வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய்-
ஆயுத அழகாலும் தோள் அழகாலும் என் நெஞ்சை அழிக்கவே கற்றவனே
மெல்லணை மேல் முன் துயின்றாய்-
அழகிய படுக்கையிலே முற்காலம் எல்லாம் கண் வளர்ந்த நீர் –
இன்று இனி போய் –
பல மாளிகைகளிலே பல படுக்கைகளிலே கண் வளர்ந்த நீர் இன்றாக இனிப் போய்
வியன் கான மரத்தின் நீழல்-
காட்டில் வர்த்திப்பார் தாங்களும் வெருவும்படி-காட்டிலே -இலை இல்லாத மரத்தின் நிழலின் கீழே
கல்லணை மேல் கண் துயில கற்றனையோ?
பாறைகளை யணையாகக் கண் வளரும் படி கற்றீரோ
காகுத்தா! கரிய கோவே!-
இச் செயல்கள் உம்முடைய குடிப்பிறப்புக்கும் சேராது -உம்முடைய வடிவு அழகுக்கும் சேராது –
———————————————————————
வா போகு வா இன்னம் வந்து
ஒருகால் கண்டு போ மலராள் கூந்தல்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
விடையோன் தன் வில்லை செற்றாய்!
மா போகு நெடும் கானம் வல் வினையேன்
மனம் உருக்கும் மகனே! இன்று
நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப்
போகாதே நிற்க்குமாறே! —9-4–
பதவுரை
வா–(சற்று இங்கே) வா
போகு–இனிச் செல்வாய்
வா–மறுபடியும் இங்கு வா
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ–(போம்போது) பின்னையும் ஒரு தரம் வந்து என்னைப் பார்த்து விட்டுப் போ
மலர் ஆள் கூந்தல்–பூக்களை எப்பொழுதும் தரிக்கிற மயிர் முடியை யுடையவளும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டு ஆ–மூங்கில் போன்ற அழகிய தோள்களை யுடையளுமான பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக
விடையோன் தன் வில்லை செற்றாய்–சிவனுடைய வில்லை முறித்தவனே!
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே–மஹா பாபியான எனது மனதை உருகச் செய்கிற மைந்தனே!
இன்று–இப்பொழுது
நீ–நீ
மா போகு நெடுங்கானம் போக–யானைகள் ஸஞ்சரிக்கிற பெரிய காட்டுக்குப் போக
என் நெஞ்சம்–எனது மனமானது
இரு பிளவு ஆய் போகாதே நிற்கும் ஆறே–இரண்டு பிளப்பாகப் பிளந்து போகாமலே வலியதாய் நிற்கும் தன்மை என்னோ?
வா போகு வா –
சற்றுப் போது காணா விட்ட வாறே வரும்படி காண்கைக்காக ஸூமந்த்ரனை விட்டு அழைப்பிக்கும்-
பிறகு பின்பும் பிறகு அழகையும் காண்கைக்காகப் போ என்னும் –
பின்னையும் கண் மறையப் போனவாறே வா வென்னும் –
இன்னம் வந்து ஒருகால் கண்டு போ –
வந்தவாறே இன்னம் போம் போது ஒருக்கால் கண்டு போம் என்னும் –
இப்படி யாகும் இவன் யாத்ரை தான் இருப்பது –
மலராள் கூந்தல்
பூ மாறாதே யாளும் மயிர் முடியையும்
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா
பசுமைக்கும் சுற்றுடைமைக்கும் ஒழுகு நீட்சிக்கும் வேய் போலே இருக்கிற அழகிய தோளை
உடையாளாய் இருக்கிற ஸ்ரீ பிராட்டி நிமித்தமாக –
விடையோன் தன் வில்லை செற்றாய்!
பெரு மிடுக்கனான ருத்ரனுடைய வில்லை முறித்தவனே
மா போகு நெடும் கானம் –
ஆனைகள் சஞ்சரிக்கிற காடு
வல் வினையேன் மனம் உருக்கும் மகனே! –
பால்ய அவஸ்தை தொடங்கி பதினாலாண்டு உன் சௌந்தர்யாதி சேஷ்டிதங்களாலே மஹா போகங்களை
என்னை அனுபவிப்பித்த உன்னை முடிய அனுபவிக்கப் பெறாதே மஹா பாபத்தைப் பண்ணி
என்னுடைய ஹ்ருதயத்தை சிதிலம் ஆக்குமவனே
இன்று நீ போக என் நெஞ்சம் இரு பிளவாய்ப் போகாதே நிற்க்குமாறே! —
உன் சந்நிதியில் இருக்கிற என் நெஞ்சமானது நீ போனவாறே சிதிலமாகாதே வலித்திரா நின்றதீ –
இதுக்கு ஹேது அறிகிறிலேன்-
——————————————————————————————–
பொருந்தார் கை வேல் நுதி போல்
பரல் பாய மெல் அடிகள் குருதி சோர
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப
வெம்பசி நோய் கூர இன்று
பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
கேகயர் கோன் மகளாய் பெற்ற
அரும் பாவி சொல் கேட்ட அரு வினையேன்
என் செய்கேன்? அந்தோ! யானே— 9-5–
பதவுரை
பொருந்தார் கை வேல் நுதி போல்–பகைவர்கள் கையிலேந்தும் கூர்மையான வேலாயுதத்தின் நுனி போன்ற
பரல்–பருக்கைக் கற்கள்
பாய–(காலில் தைத்து அழுத்தவும்)
மெல் அடிக்கள் குருதி சோர–மென்மையான (உனது) பாதங்களினின்று ரத்தம் பெருகவும்
வெயில் உறைப்ப–(மேலே) வெயிலுறைக்கவும்
வெம் பசி நோய் கூர–(வேண்டிய போது உணவு கிடையாமலே) வெவ்விய பசியாகிய நோய் மிகவும்
பெரும் பாவி யேன் மகனே–மஹா பாபியான எனது மைந்தனே!
இன்று–இப்பொழுது
விரும்பாத கான் விரும்பி போகின்றாய்–(எவரும்) விரும்பாத காட்டை
(நான் போகச் சொன்னேனென்பதனாலே) விரும்பி (அவ்விடத்துக்குச் செல்கிறாய்)
கேகயர்கோன் மகள் ஆய்பெற்ற அரும்பாவி–கேகயராஜன் பெற்ற மகளான கொடிய பாவியாகிய கைகேயியினுடைய
சொல் கேட்ட அரு வினையேன் யான்–வார்த்தையைக் கேட்ட கொடியேனாகிய நான்
அந்தோ! என் செய்கேன்–ஐயோ! என்ன செய்வேன்!
பொருந்தார் கை வேல் நுதி போல் பரல் பாய
சத்ருக்கள் கையில் வேல் முனையை இட்டிருந்தால் போல் பரற்களானவை பாய
மெல் அடிகள் குருதி சோர
இங்குத்தையில் மிதிக்க சஹியாத ஸூகுமாரரான திருவடிகள் பாறைகள் மேலே மிதிக்கையாலே ரதத்தைப் புறப்பட விட
விரும்பாத கான் விரும்பி –
ஸூகுமாரர் அல்லாதாரும் விரும்பாத காட்டை நான் போகச் சொன்னேன் என்னுமத்தாலே விரும்பி
வெயில் உறைப்ப வெம்பசி நோய் கூர -மிக
மேலே வெய்யிலானது உறைப்ப-நினைத்த போது அமுது செய்யக் கிடையாமையாலே வெவ்விய பசியான நோய்
இன்று- பெரும் பாவியேன் மகனே! போகின்றாய்
மஹா பாபியான என் வயிற்றிலே பிறக்கையாலே இறே ஸூ குமாரரான நீர் காடு ஏறப் போகிறது
கேகயர் கோன் மகளாய் பெற்ற அரும் பாவி சொல் கேட்ட –
கேகேய ராஜன் மகளாய் பெற்றது ஒரு மஹா பாபத்தை யாய்த்து -அவள் வார்த்தையிலே அகப்பட்ட
அரு வினையேன் என் செய்கேன்? அந்தோ! யானே—
பிரதிகிரியை அல்லாத செயலைச் செய்த என்னால் செய்யலாம் பரிஹாரம் இல்லை –
—————————————————————————–
அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல்
கேளாதே அணி சேர் மார்வம்
என் மார்வத் திடை அழுந்த தழுவாதே
முழுசாதே மோவாது உச்சி
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
கமலம் போல் முகமும் காணாது
எம்மானை என் மகனை இழந்திட்ட
இழி தகையேன் இருகின்றேனே– 9-6–
பதவுரை
அம்மா என்று உகந்து அழைக்கும்–ஐயா! என்று மகிழ்ச்சி கொண்டு (என்னை) அழைக்கின்ற
ஆர்வம் சொல் கேளாதே–ப்ரீதி விளங்குஞ்சொல்லை (நான்) கேட்கப் பெறாமலும்
அணி சேர் மார்வம்–ஆபரணங்கள் பொருந்திய (என் மகனது) மார்பு
என் மார்வத்திடை அழுந்த–என் மார்பிலே அழுந்தும்படி
தழுவாதே–(நான் அவனை) இறுக அணைத்துக் கொள்ளாமலும்
முழுசாதே–(அந்த ஆலிங்கந போகக் கடலில்) முழுகாமலும்
உச்சி மோவாது–உச்சியை மோந்திடாமலும்
கைம்மாவின் நடை அன்ன மெல் நடையும்–யானையினது நடை போன்ற (கம்பீரமான அம்மகனது) மென்மையான நடையின் அழகையும்
கமலம் போல் முகமும் காணாது–தாமரை மலர்போன்ற (அவனது) முகப் பொலிவையும் காணமாலும்
எம்மானை என் மகனை இழந்திட்ட–எமது ஐயனான என் மகனைக் (காடேறப் போக்கி) இழந்து விட்ட
இழி தகையேன்–இழிவான செயலைச் செய்தவனான நான்
இருக்கின்றேனே–(இன்னமும் அழிந்திடாமல்) உயிர் வாழ்ந்திருக்கின்றேனே.
அம்மா என்று அழைக்கும் ஆர்வ சொல் கேளாதே-
வேறு ஒன்றைக் கணிசியாதே -காரியப் பாடு அற-ஐயர் -என்று அழைக்கும் ப்ரேமம் வழிந்து
புறப்பட்ட சொல்லைக் கேளாதே –
அணி சேர் மார்வம் என் மார்வத் திடை அழுந்த தழுவாதே முழுசாதே மோவாது உச்சி
ஆபரணங்களாலே அலங்க்ர்தமான திரு மார்வைக் கொண்டு-ஸூ காடம் பரிஷச்வஜே -என்னும்படி
ஏக தத்வம் என்னும் படி தழுவி முழுசாதே –
முழுசி அநந்தரம் உச்சியை மோந்து கொள்ளாதே
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும்
மத்த மாதங்க காமி நம் -என்னும் படி அமைந்து இருக்கிற நடை அழகும்
கமலம் போல் முகமும் காணாது
விகாசம் செவ்விக்கு தாமரை ஒரு போலியான திரு முகத்தைக் காணாது
எம்மானை என் மகனை –
நடை அழகாலே என்னை எழுதிக் கொண்ட என்மகனை
இழந்திட்ட இழி தகையேன் இருகின்றேனே–
இப்படித் தண்ணிய செயலை செய்தக்கால் முடியவும் ஆகாதே இருக்கவும் வேணுமோ நான் –
——————————————————————————–
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூம் துகில் சேர் அல்குல்
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது
அங்கங்கள் அழகு மாறி
ஏமரு தோள் என் புதல்வன் யான் இன்று
செல தக்க வனம் தான் சேர்த்தல்
தூ மறையீர்! இது தகவோ? சுமந்திரனே!
வசிட்டனே! சொல்லீர் நீரே –9-7-
பதவுரை
தூ மறையீர்–நித்ய நிர்த் தோஷமான வேதத்ததை ஓதி யிருக்கிற பிராமணர்களே!
சுமந்திரனே–(ராஜ தர்மத்தை நன் கறிந்து நடத்திப் போந்த ஸுமந்த்ரரே!)
வசிட்டனே–ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற) வஸிஷ்ட மஹர்ஷியே
(உங்களை ஒரு விஷயம் கேட்கிறேன்)
பூ மருவும் நறு குஞ்சி–புஷ்பம் மாறாதே யிருப்பதாய் மணம் கமழா நின்ற திருக் குழலை
புன் சடை ஆ புனைந்து–விகாரமான ஜடையாகத் திரித்து
பூ துகில் சேர் அல்குல்–நல்ல பட்டுப் பீதாம்பரங்கள் சாத்த வேண்டிய திருவரையிலே
காமர் எழில் விழல் உடுத்து–காண்கைக்கு ஆசைப்படத்தக்க அழகிய விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணி யாது–திருவாபரணங்கள் அணியாமல்
அங்கங்கள் அழகு மாறி–இயற்கை யழகுக்கு மேல் திருவாபரணங்களால் உண்டாகக்கூடிய செயற்கை யழகின்றியிலே
ஏமரு தோள் என் புதல்வன் தான்–ஸுரக்ஷிதமான தோள்களை யுடையனான எனது குமாரனானவன்
யான் இன்று செல தக்க வனம் சேர்தல்–நான் இப்போது போகவேண்டிய காட்டுக்குத் தான் போவது
தகவோ–தகுதி தானோ!
நீரே சொல்லீர்–(தர்மஜ்ஞரான) நீங்களே (ஆராய்ந்து) சொல்லுங்கள்
பூ மருவி நறும் குஞ்சி சடையா புனைந்து
பூ மாறாதே இருப்பதாய் பரிமளத்தைப் புறப்பட விடா நிற்கும் திருக் குழலை –
மனுஷ்யர்க்குப் பார்க்க ஒண்ணாத படி ஜடையாக்கி
பூம் துகில் சேர் அல்குல் காமர் எழில் விழல் உடுத்து –
அறுபதினாயிரம் ஆண்டு தேடின திருப் பரியட்டங்களில் நல்லவை எல்லாம் சாத்தக் கடவ திருவரையிலே –
கண்டார் விரும்பும் படி விச்வாமித்ரத்தைக் கயிறாக முறுக்கிச் சாத்தி
கலன் அணியாது அங்கங்கள் அழகு மாறி
ஸ்வா பாவிகமான அழகு ஒழியத் திரு ஆபரணங்கள் சாத்தாமையாலே அத்தாலே வரும் அழகு இன்றியே
ஏமரு தோள் என் புதல்வன் –
விக்நம் பண்ணினாரை அழியச் செய்து அபிஷேகம் பண்ண வல்ல என் மகன்
யான் இன்று செல தக்க வனம் தான் சேர்த்தல்
அறுபதினாயிரம் ஆண்டு போகங்களை புஜித்து-வீத ராகனான நான் போகக் கடவ காட்டிலே
ஸூகுமாரராய்-போக யோக்யரான தாம் போகை
தூ மறையீர்! இது தகவோ?
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதி இருக்கிற பிராமணரே -நீங்கள் இது சொல்லி கோள்-இது தர்மமோ
சுமந்திரனே! வசிட்டனே! சொல்லீர் நீரே
ராஜ தர்மத்தை பழக அறிந்து நடத்திப் போந்த ஸ்ரீ ஸூமந்த்ரனே -சொல்லாய்
இவ்வம்ச த்துக்கு குருவாய் ராஜ தர்மங்களை உபதேசித்துப் போருகிற ஸ்ரீ வசிஷ்ட பகவானே சொல்லாய் –
‘பூணார் அணியும், முடியும், பொன்னா சனமும், குடையும்,
சேணார் மார்பும், திருவும், தெரியக் காணக் கடவேன்,
மாணா மரவற் கலையும், மானின் தோலும் அவைநான்
காணாது ஒழிந்தேன் என்றால், நன்று ஆய்த்து அன்றோ கருமம்? –ஸ்ரீ கம்ப ராமாயணம்/அயோத்தியா காண்டம்/4-நகர் நீங்கு படலம்-65-1670
‘பூண் ஆர் அணியும் – அணிதற்குப் பொருந்திய அணிகலன்களும்;
பொன் ஆசனமும்- பொன்மயமான சிங்காதனமும்;
குடையும் -வெண்கொற்றக் குடையும்;
சேண் ஆர்மார்பும் – அகன்று பொருந்திய மார்பும்;
திருவும் – அங்கே வீற்றிருக்கும்திருமகளும்;
தெரியக் காணக் கடவேன் நான் – விளங்கப் பார்த்தற்குக் கடமைப்பட்ட யான்;
மாணா மர வற்கலையும் – மாட்சிமை இல்லாத மரவுரியும்;
மானின் தோலும் – மேனியில் போர்த்துக்கொள்ள மான் தோலும்;
அவை – ஆகிய அவற்றை;
காணாது ஒழிந்தேன் என்றால் – பாராமல் (விண்ணுலகு) சென்றுவிட்டேன் என்றால்;
கருமம் நன்றுஆய்த்து அன்றோ? – என் செயல் நல்லதாக ஆய்விடும் அல்லவா?
————————————————————-
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும்
தம்பியையும் பூவை போலும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என்
மருகியையும் வனத்தில் போக்கி
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள் வானில் போக்க
என் பெற்றாய்? கைகேசி! இரு நிலத்தில்
இனிதாக இருக்கின்றாயே– 9-8-
பதவுரை
கைகேசீ–கைகேயியே
பொன் பெற்றார் எழில் வேதம் புதல்வனையும்–கல்விச் செல்வத்தைப் பெற்றவர்களான உபாத்தியாயரின்
கீழே யிருந்து அழகிய வேதங்களை ஓதியிருக்கிற மூத்த மகனான இராமனையும்
தம்பியையும்–(அவனது) தம்பியான லக்ஷ்மணனையும்
பூவை போலும்–(பேச்சின் இனிமையிற் கொஞ்சுகிற) கிளி போன்றவளும்
மின் பற்றா நுண் மருங்குல் மெல் இயல்என் மருகியையும்–மின்னலும் ஈடாகமாட்டாத நுண்ணிய இடையையும்
மென்மையான தன்மைனையு முடையவளுமான என் மருமகளாகிய ஸீதையையும்
வனத்தில் போக்கி –காட்டுக்குப் போகச்செய்து
நின் பற்று ஆம் நின் மகன் மேல் பழி விளைத்திட்டு–உனது அன்புக்கு இடமான உன் மகனான பரதன்
மேற் பழியுண்டாம்படி செய்து (இவ்வளவு செய்துவிட்டு நீ)
என்னையும் நீள் வானில் போக்க–(புத்ர விரஹத்தால்) என்னையும் தூரத்திலுள்ள மேலுலகத்திற்குச் செலுத்துதலினால்
என் பெற்றாய்–நீ என்ன பயனடைந்தாய்!
இரு நிலத்தில்–பெரிய இவ்வுலகத்தில்
இனிது ஆக–சுகமாக
இருக்கின்றாயே–வாழ்கின்றாயே
பொன் பெற்றார் எழில் வேத புதல்வனையும் தம்பியையும்
தந்யர் என்று எல்லாரும் சொல்லும் படி இருக்கிற உபாயாத்யர்கள் கீழே இருந்து அழகிய சகல வேத சாஸ்திரங்களையும்
ஓதி இருக்கிற ஸ்ரீ பெருமாளையும் -அவரை அல்லாது அறியாத தம்பியாரையும்
பூவை போலும் மின் பற்றா நுண் மருங்குல் மெல்லியல் என் மருகியையும் –
பூவை போலே இருப்பாளுமாய் -மின்னுக்கு ஒப்பான இடையை யுடையாளுமாய் ம்ருது ஸ்வபாவையுமான
என் மருமகளான பிராட்டியையும்
வனத்தில் போக்கி
காட்டிலே போக விட்டு
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
உன்னை அல்லது வேறு ஒருவரை தாய் என்று இராத ஸ்ரீ பெருமாளையும் ஸ்ரீ இளைய பெருமாளையும்
வனத்திலே போக விட்டு
என்னையும் நீள் வானில் போக்க என் பெற்றாய்? கைகேசி!
இச் செயல்கள் எல்லாம் செய்து நீ பெற்ற பிரயோஜனம் என்
இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே–
சம்சார ஸூகம் ஆகிறது -புத்ரர்களோடும் பர்த்தாவோடும் கூடி இருக்கை யாய்த்து –
உனக்கு புத்ரரான ஸ்ரீ பெருமாளைக் காட்டிலே போக்கி என்னையும் ஸ்வர்க்கத்திலே
போக்குகையாலே சம்சார ஸூகம் அழகியதாக அனுபவிக்கக் கடவை இறே –
————————————-
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையும் உன் அருமையையும் உன் நோயின்
வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக
கொண்டு வனம் புக்க எந்தாய்!
நின்னையே மகனாய் பெற பெறுவேன்
ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —9-9-
பதவுரை
முன் ஒருநாள்–முன்பு ஒரு நாளிலே
மழு ஆளி சிலை வாங்கி–பரசுராமனிடத்திலிருந்து அவன் கை வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் பெற்றாய்–அவனியற்றிய தபஸ்ஸின் பயனை முழுதும் (அம்புக்கு இலக்காக்கி) அழித்திட்டவனே!
உன்னையும் உன் அருமையையும்–உன்னுடைய மேன்மையையும் (நான் பெருந்தவஞ் செய்து) உன்னை அருமை மகனாகப் பெற்ற தன்மையையும்
உன் மோயின் வருத்தமும்–உனது பெற்ற தாயான கௌசல்யை (உன்னை பிரியில் தரியேன் என்று) உன் பின் தொடர்ந்த வருத்தத்தையும்
ஒன்று ஆக கொள்ளாது–ஒரு பொருளாகக் கொள்ளாமல்
என்னையும்–என்னையும்
என் மெய் உரையும்–எனது ஸத்ய வாக்கையும்
மெய் ஆக கொண்டு–பொருளாகக் கருதி
வனம் புக்க எந்தாய்–காடேறச் சென்ற எமது ஐயனே!
நெடுந்தோள் வேந்தே–பெரிய தோள்களை யுடைய அரசனே!
ஏழ் பிறப்பும்–இனி அனேக ஜன்மங்கள் பிறந்து பிறந்த ஜன்மந்தோறும்
நின்னையே மகன் ஆக பெற பெறுவேன்–நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும்படி பேறு பெறக் கடவேன்.
முன் ஒரு நாள் மழு வாளி சிலை வாங்கி
முன் ஒரு காலத்திலே மழுவை ஆயுதமாக உடைய ஸ்ரீ பரசுராமன் கையிலே
ஸ்ரீ சார்ங்கத் திரு வில்லை வாங்கி
அவன் தவத்தை முற்றும் செற்றாய்
அவன் லோகாந்தரங்களை ப்ராபிக்கக் கடவதாக ஆர்ஜித்த தபஸ்ஸை அவ்வம்பாலே அழித்துப் பொகட்டாய்
உன்னையும் உன் அருமையையும் –
உன் ஸ்லாக்கியதையும்-மஹதாதபசாராம –என்று நான் உன்னைப் பெறப்பட்ட அருமையையும்
உன் நோயின் வருத்தமும் ஒன்றாக கொள்ளாது
உன்னைப் பிரியில் தரியேன் -என்று பின் தொடர்ந்த ஸ்ரீ கௌசல்யையார் வ்யசநத்தையும் ஒன்றாக கொள்ளாது
என்னையும் என் மெய் உரையும் மெய்யாக கொண்டு வனம் புக்க எந்தாய்!
உன்பக்கல் எனக்கு உண்டான பாவ பந்தத்தை மெய்யாக அறியாதே என்னைப் பிதா என்றே நினைத்து
நெடு நாள் சத்யம் சொல்லிப் போந்தவனை நான் தோன்றி அசத்திய பிரதிஜ்ஞன் ஆக்க ஒண்ணாதே
எனக்கு சத்தியத்தை சத்யமாக்க வேணும் என்று நெஞ்சிலே கொண்டு காடு ஏறப் போன என்னாயனே
நின்னையே மகனாய் பெற பெறுவேன் ஏழ் பிறப்பும் நெடும் தோள் வேந்தே —
அநேக ஜன்மங்கள் பிறந்து – பிறந்த ஜன்மம் தோறும் நீ எனக்குப் பிள்ளையாய்ப் பிறக்கும் படி
பேறு உடையேன் ஆவேன்
நெடும் தோள் வேந்தே
ரஷ்ய வர்க்கத்தின் அளவில்லாத காவல் துடிப்புடைய தோளை உடையவனே –
—————————————————
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும்
சுமித்ரையும் சிந்தை நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட
கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
கானகமே மிக விரும்பி நீ துறந்த
வள நகரைதுறந்து நானும்
வானகமே மிக விரும்பி போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! —9-10–
பதவுரை
மனுகுலத்தார் தங்கள் கோவே–மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே!
தேன் நகு மா மலர் கூந்தல்–தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய
கௌசலையும்–கௌஸல்யையும்
சுமித்திரையும்–ஸுமித்ரையும்
சிந்தை நோவ–மனம் வருந்த
கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன்சொல் கொண்டு–வக்ரமான வடிவம் போலவே
மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட
கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு
கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த–காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட
வளம் நகரை–(உன் பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை
நானும் துறந்து–நானும் விட்டிட்டு
வானகமே மிக விரும்பி போகின்றேன்–மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன்.
தேனகுமா மலர் கொந்தாள் கௌசலையும் சுமித்ரையும் சிந்தை நோவ-
தேனைப் புறப்பட்டு விக்கிற மலரோடு கூடின மயிர் முடியை உடைய ஸ்ரீ கௌசலையாரும்-
ஸ்ரீ ஸூமத்ரையாரும் நெஞ்சு நோவ
கூன் உருவில் கொடும் தொழுத்தை சொல் கேட்ட கொடியவள் தன் சொல் கொண்டு இன்று
வடிவிலே வக்ரம் போலே நெஞ்சம் வக்கிரமாய் திண்ணிதான கூனியை யுடைய வார்த்தையைக் கேட்ட
கைகேயியுடைய வார்த்தையிலே அகப்பட்டு
கானகமே மிக விரும்பி நீ துறந்த வள நகரை துறந்து
நான் போகச் சொன்னேன் -என்னுமத்தையே கொண்டு ஒருவர்க்கும் சஞ்சரிக்க அரிதான காட்டை விரும்பி –
திரு அபிஷேகத்துக்கு அலங்கரித்து இருக்கிற ஊரை நீ கை விட்டாய் என்று நானும் ஸ்ரீ திரு அயோதயையைத் துறந்து
நானும் வானகமே மிக விரும்பி போகின்றேன்-
நீ இல்லாத நகரி இறே -அத்தாலே ஸ்வர்க்கமே யாகிலும் நீ இல்லாத ஊரை விட்டுப் போகின்றேன்
மனு குலத்தார் தங்கள் கோவே! –
மநு குலோத்பவனானவனே-
————————————————————————————
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய்
வனம் புக்க வதனுக்கு ஆற்றா
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான்
புலம்பிய அப் புலம்பல் தன்னை
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன்
குடை குலசேகரன் சொல் செய்த
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார்
தீ நெறி கண் செல்லார் தாமே–9-11-
பதவுரை
ஏர் ஆர்ந்த–அழகு நிறைந்த
கரு–கரு நிறமுடைய
நெடுமால்–மஹா விஷ்ணு
இராமன் ஆய்–ஸ்ரீ ராமனாகத் திருவவதரித்து
வனம் புக்க–காட்டுக்குச் சென்றதான
அதனுக்கு–அச் செயலை
ஆற்றா–பொறுக்க மாட்டாமல்
தார் ஆர்ந்த தட வரை தோள் தயரதன் புலம்பிய–வெற்றி மாலை பொருந்திய பெரிய மாலை போன்ற
தோள்களை யுடைய தசரத சக்ரவர்த்தி கதறின
அப் புலம்பல் தன்னை–அக் கதறல்களை,
கூர் ஆர்ந்த–கூர்மை மிக்க
வேல் வலவன்–வேற்படையின் தொழிலில் வல்லவரும
கோழியர் கோன்–உறையூரிலுள்ளார்க்குத் தலைவரும்
குடை–கொற்றக்குடையை உடையவருமான
குலசேகரன்–குலசேகராழ்வார்
சொல் செய்த–அருளிச் செய்த
சீர் ஆர்ந்த–சிறப்பு மிக்க
தமிழ் மாலை இவை– தமிழ்ப் பிரபந்தரூபமான இப் பத்துப் பாசுரங்களையும்
வல்லார்–கற்க வல்லவர்கள்
தீ நெறிக்கண்–கொடிய வழி யொன்றிலும்
செல்லார்–சென்று சேர மாட்டார்கள்.
(தான், தாம்–அசைகள்)
நிகமத்தில் –
ஏரார்ந்த கரு நெடுமால் ராமனாய் வனம் புக்க வதனுக்கு ஆற்றா-
எல்லா பிரகாரத்தாலும் பூர்ணனாய் -சர்வாதிகனான ஸ்ரீ சர்வேஸ்வரன் கர்ம வஸ்யரோடே-
இதர சஜாதீயனாய் வந்து அவதரித்து –
கர்மவஸ்யரும் போகத் தகாத காட்டில் புக்கான் -என்றதுக்கு ஆற்ற மாட்டாதே
தாரர்ந்த தடவரை தோள் தயரதன் தான் புலம்பிய அப் புலம்பல் தன்னை
அறுபதினாயிரம் ஆண்டு ராஜ்ஜியம் பண்ணுகையாலே மாலை மாறாத திண்ணியதான மலை போலே
தோளை உடைய ஸ்ரீ சக்கரவர்த்தி பிரலாபித்த பாசுரத்தை –
கூரார்ந்த வேல் வலவன் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த-
கூர்மை மிக்க வேலையையும் உடையராய் -ஸ்ரீ உறையூருக்கு நியாமகருமாய் -ஐஸ்வர்ய பிரகாசகமுமான
வெண் கொற்றக் குடையும் உடையருமான ஸ்ரீ குலசேகரப் பெருமாள் அருளிச் செய்த –
சீரார்ந்த தமிழ் மாலை இவை வல்லார் தீ நெறி கண் செல்லார் தாமே–
பாட்யேகேயேச மதுரம் -என்று இவை பூரணமான தமிழ் தொடை வல்லவர்கள் –
பகவத் விஷயத்தை காற்கடைக் கொண்டு விஷய பிரவணர் ஆகார்கள் –
————————————————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ குலேசேகரர் ஆழ்வார் ஸ்வாமிகள் திரு வடிகளே சரணம்.
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்
Leave a Reply