இரண்டாம் திருவந்தாதி -பாசுரங்கள் -21-40–திவ்யார்த்த தீபிகை சாரம்–

முதல் திருவந்தாதியில் “நாவாயிலுண்டே நமோநாராணாயவென்று ஓவாதுரைக்கு முரையுண்டே,
மூவாத மாக்கதிக்கண் செல்லும் வகையுண்டே என்னொருவர் தீக்கதிக்கண் செல்லுந்திறம்”(9”) என்ற
பாசுரத்தின் கருத்தைப் பெரும்பாலும் தழுவியதாமிப்பாசுரம்.

தாமுளரே தம் உள்ளம் உள் உளதே தாமரையின்
பூ உளதே ஏத்தும் பொழுது உண்டே -வாமன்
திரு மருவு தாள் மருவு சென்னியரே செவ்வே
அரு நரகம் சேர்வது அரிது—————–21-

பதவுரை

தாம் உளரே–(எம்பெruருமானைப் பணிவதற்குப் பாங்கான கரண களேபரங்களை யுடைய)
சேதநர் தாங்கள் ஏற்கனவே இருக்கின்றார்களே;
தம் உள்ளம் உள்உளதே–(எம்பெருமானைச் சிந்திப்பதற்கான) தங்களுடைய (மனமும் வெளியே போய்த் தேட வேண்டாதபடி)
தமக்குள்ளே யிருக்கின்றதே.
தாமரையின் பூ உளதே–(எம்பெருமான் திருவடிகளில் சாத்தந்தக்க) தாமரைப்பூ (குளங்கள் தோறும்) நிறைந்து கிடக்கின்றதே;
ஏத்தும் பொழுது உண்டே–அவனை வாய் விட்டுப் புகழ்வதற்கு ஏற்ற காலம் ஏராளமாக வுள்ளதே;
வாமன்–(தன் உடைமையைப் பெறுகைக்குத் தான் யாசகனாகச் சென்ற சீலமுள்ள) வாமந மூர்த்தியான ஸர்வேச்வரனுடைய
திரு மருவு தாள்–அழகிய திருவடிகளை
மருவு–பணிவதற்குப் பொருத்தமான
சென்னியரே–தலையை யுடையவர்களாக இருக்கின்றார்களே;
(இப்படி ஒன்றாலும் குறையின்றியே யிருக்கவும் இவ்வுலகத்தவர்கள்)
செவ்வே–நேராக
அரு நரகம்–கொடிய நரகத்தை
சேர்வது–அடைவதானது
அரிது–ஆச்சரியப்படத்தக்க அருமையான செயலாயிருக்கின்றது.

எம்பெருமானை ஏத்துவதற்கு ஏற்ற ஸாமகரிகள் குறைவற்றிருக்கச் செய்தேயும் இவ்வுலகத்தவர் விலக்கடி தேடிக்கொண்டு
நரகத்திற்சென்று சேருகின்றார்களே! இஃது என்னோ! என்று வயிறெரிகிறார்.
“ஜிஹவே! கீர்த்தய கேசவம் முரரிபும்” என்ற முகுந்தமாலை ச்லோகத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானைப் பணிவதற்கு
ஏற்ற கரசரணாதி அவயங்களோடு கூடியிருக்கின்றார்களே;
இனி புதிதாகத் தங்களைத் தாம் ஸ்ருஷ்டிபண்ணிக் கொள்ள வேண்டியதில்லையே;
எல்லாவற்றிறுக்கும் மூல காரணமான நெஞ்தானும் வெளியிற் சென்று தேடவேண்டாதபடி உள்ளே அமைந்து கிடக்கின்றதே;
அர்ச்சிப்பதற்கு உரிய தாமரை மலர்கள் தடாகங்கள்தோறும் மலிந்து கிடக்கின்றனவே;
‘போதுபோகவில்லை; போதுபோகவில்லையே’ என்று பாழும் ஸம்ஸாரிகள் தவிக்க வேண்டும்படி பொழுதும் ஏராளமாகவுண்டே
பகவானைத் துதிப்பதற்கு; தலைபடைத்த ப்ரயோஜனம் பெற அவனை வணங்கலாமே; இப்படி ஒன்றாலொன்று குறையின்றியிருக்க,
இவர்கள் நித்ய ஸம்ஸாரிகளாகவேயிருக்க வழிதேடுவது என்ன கேடுகாலமோ வென்றவாறு,
“நாராயணேதி சப்தோஸ்தி வாகஸ்தி வசவர்த்தி நீ- ததாபி நரகே கோரே பதந்தீதி கிமத்புதம்” என்ற
புராண ச்லோகமும் இப்பாட்டுக்கு ஒரு புடை சார்பாக அநுஸந்திக்கத்தகும்.

————————————————————————–

அரியது எளிதாகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரைப் பெற்றால் -கரியதோர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தது அன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து——22-

பதவுரை

(சேதநனுக்கு வேண்டிய ஸகல காரியங்களையும் தானே செய்வதாக என்று கொண்டு)
பெருக முயல்வாரை–மிகவும் உத்ஸாஹங் கொண்டிருக்கின்ற மஹாபுருஷனான எம்பெருமானை
பெற்றால்–கிடைக்கப் பெற்றால்
அரியது–செய்வதற்கு அருமையான செயலும்
எளிது ஆகும்–லகுவாய்விடும்; (இப்படியாக எங்கே கண்டோமென்னில்)
வெண்கோடு–வெண்ணிறமான தந்தங்களையுடைய
மால்–பெரிய
கரியது ஓர் யானை–கருநிறமுள்ள கஜேந்திராழ்வான்
தண்–குளிர்ந்த
கோடு–பொய்கைக் கரையிலே
மா–சிறந்த
மலரால்–தாமரைப் பூக்களைக் கொண்டு
(மடுவின் கரையிலெழுந்தருளின எம்பெருமான் திருவடிகளிலே)
தாழ்ந்து–வணங்கி யடிமை செய்ததனால்
வென்று முடித்தன்றே–விரோதியை ஜயித்துத் தன் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டதன்றோ.
ஆற்றலால்–தன்னுடைய சக்தியினால்
மாற்றி–சேதநன் செய்யும் முயற்சி ஒன்றும் வேண்டாவென்று விலக்கி

எம்பெருமான் ஸர்வசக்தனென்பதை யறிந்து கொண்டு, அப்படி ஸர்வசக்தனான அவனே நம்முடைய பாரங்களைத்
தன் தலைமீது ஏற்றுக்கொண்டு நமக்காகவேண்டிய ஸகலகாரியங்களையுஞ் செய்து தலைக்கட்டத்தானே
உத்ஸாஹங் கொண்டிருக்கிறானென்பதையறிந்து அவனுடைய ப்ரவ்ருத்திக்கு விலக்கான நம்முடைய ப்ரவ்ருத்தியை
நிறுத்திக்கொள்வோமாயின் நமக்குப் பெறமுடியாத தொன்றுமில்லை, எல்லாம் எளிதேயாம்;
இதற்கு உதாஹரணமுங் காண்மின்; முதலையின் வாயிலகப்பட்ட கஜேந்திராழ்வான் தனது சக்தியைக்கொண்டு
அவ்வாபத்தைப் போக்கிக்கொள்ள நினைத்துத் தானாக முயற்சிசெய்து கொண்டிருந்தவரையில் துன்பம் நீங்கப்பெற்றதில்லை;
‘தன்னாலானமட்டும் ஒரு கை பார்க்கட்டும்’ என்று எம்பெருமான் விலகியே நின்றான்;
இனி நம்மாலாகாதென்று துணிந்து ஸ்வப்ரவ்ருத்தியைவிட்டு ‘ஆதிமூலமே!’ என்றழைத்த பின் தன்காரியமாகக் கொண்ட
எம்பெருமான் அரைகுலையத் தலை குலைய மடுவின் கரையிலே ஓடிவந்து வினைதீர்த்தொழித்தானன்றோ.

ஆற்றலால் மாற்றிறப் பெருக முயல்வாரைப் பெற்றால் அரியது எளிதாகும் –
ஆற்றலாவது சக்தி; எம்பெருமானுடைய சக்தியைச் சொன்னபடி,
மாற்றி – சேதகனுடைய ப்ரவ்ருத்திகளை விலக்கி என்றபடி.
சேதநன் தன்னுடைய முயற்சியை நீக்கிக்கொண்டு எம்பெருமானுடைய சக்தியே ஓங்கும்படி நின்றால்
அரிய காரியமும் எளிதாக முடியுமென்பது தேர்ந்த கருத்து.

ஈற்றடியிலுள்ள ‘கோடு’ என்னுஞ் சொல் நீர்க்கரையென்னும் பொருளது.
“தண் தோட்டு மாமலரால்” என்றும் பாடமுண்டாம்; தோடு – அகவிதழ்; மலர்க்கு விசேஷணம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை ஆச்ரயிப்பவர்களின் இடையூறுகளைத் தொலைத்து அவரவர் மேன்மேலும் விரும்புகின்ற
இஷ்டங்களையுந் தந்தருள்வனென்கிறது.

தாழ்ந்து வரம் கொண்டு தக்க வகைகளால்
வாழ்ந்து கழிவாரை வாழ்விக்கும் -தாழ்ந்த
விளங்கனிக்கு கன்று எறிந்து வேற்றுருவாய் ஞாலம்
அளந்தடிக்கீழ் கொண்ட வவன்—-23-

பதவுரை

தாழ்ந்த–(பழத்தின் கனத்தினால் கிளைகள்) தாழ்ந்து கிடந்த
விளா–விளா மரத்தினுடைய
கனிக்கு–பழங்களை உதிர்ப்பதற்காக
கன்று–கன்றை (எறி கோலாகக் கொண்டு) வீசி யெறிந்தவனாயும்
வேறு உரு ஆய்–(திருமாலான தன்னுடைய வடிவத்தை விட்டு யாசகனான வாமன மூர்த்தி வடிவமாய்
ஞாலம்–பூமியை
அளந்து–அளந்து
கொண்ட–அடங்கும்படி கொண்டவனாயுமுள்ள
அவன்–அந்த எம்பெருமான்
தாழ்ந்து–தனது திருவடிகளிலே வணங்கி
வரம் கொண்டு–(எங்கள் இஷ்டத்தை நீயே பூர்த்தி செய்து தரவேணுமென்று சொல்லித் தனது) திருவருளைப் பெற்று
தக்க வகைகளால்–(தங்கள் தங்கள் நிலைமைக்கு) ஏற்ற வண்ணமாக
வாழ்ந்து–ஐச்வரியத்தையோ கைவல்யத்தையோ பகவத் ப்ராப்தியையோ பெற்று
கழிவாரை–மேன்மேலும் ஸுகத்தை மிகுத்துக் கொள்ள வேணுமென்றிருக்கிற அந்தந்த அதிகாரிகளை
வாழ்விக்கும்–வாழ்விப்பான்.

பின்னடிகளில் கபித்தாஸுர வத்ஸாஸுரர்களைக் கொன்றழித்ததையும் மாவலியின் கொழுப்பையடக்கியதையும் பேசினதன் கருத்தாவது –
துரஹங்சாரியான மாவலியின் கையில் அகப்பட்டக் கிடந்த பூமியைத் தன் திருவடிகளிலே கொண்டு வாழ்வித்தவன்,
வணங்கினவர்களின் விரோதிகள் கபித்தாஸுரனும் வத்ஸாஸரனும் பட்டபாடுபாடும்படி போக்கிக் கர்ப்பனென்பதாம்.

வேற்றுருவாய் -திருமகள் கொழுநனாயிருக்கும் உருவத்தை விட்டு யாசக ப்ரஹ்மசாரியின் உருவத்தை யேறிட்டுக்கொண்டு என்றபடி.
அன்றி, இரக்கும் போது சிறியகாலைக்காட்டி, அளக்கும்போது பெரியகாலைக் கொண்டு என்றுமாம்.

————————————————————————–

எம்பெருமான் தன்னை வணங்கினவர்களை வாழ்விப்பனென்று கீழ்ப்பாசுரத்திலருளிச் செய்த ஆழ்வார்.
அடியே பிடித்து சேதநனுடைய ஸத்தையை நோக்கிக் கொண்டு போருகிற எம்பெருமானுக்கு
இஃது ஓரேற்றமே வென்கிறார் போலு மிப்பாட்டால்.

அவன் கண்டாய் நன் நெஞ்சே யார் அருளும்கேடும்
அவன் கண்டாய் ஐம் புலனாய் நின்றான் -அவன் கண்டாய்
காற்றுத் தீ நீர் வான் கருவரை மண் காரோதச்
சீற்றத் தீ யாவானும் சென்று —24-

பதவுரை

நல்நெஞ்சே–நல்ல மனமே!
ஆர் அருளும்–பரி பூர்ண க்ருபையாலே உண்டாகக் கூடிய மோக்ஷமும்
கேடும்-நிக்ரஹத்தால் வரக் கூடியதான ஸம்ஸாரமும்
(ஆகிய இரண்டுக்கும் நிர்வாஹகன்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானே யாவன்;
ஐம்புலன்–பஞ்சேந்திரிய வடிவமான சரீரத்திற்கு உத்பாதகங்களான
காற்று தீ நீர் வான் மண் ஆய் நின்றான் அவன் கண்டாய் –பஞ்ச பூதங்களாய் நிற்பவனும் அந்த எம்பெருமானே யாவன்;
கரு வரை–கறுத்த மலைகளும்
(அவன் கண்டாய்)–அவனேயாம்;
சென்று–(இந்தப் பிரபஞ்சத்தை யழிக்கத் திருவுள்ளம்) ப்ரஸரித்து
கார் ஓதம் சீற்றம் தீ ஆவானும்–கறுத்த கடலைச் சீறிச் சுடவல்ல படபாக்நி யாகுமவனும்
அவன் கண்டாய்–அந்த எம்பெருமானேயாம்.

ஆரளுங் கேடும் அவன் கண்டாய் இந்த ஸம்ஸாரத்தை ப்ரவர்த்திப்பித்தவன் எம்பெருமானே யாதலால்
சேதன வர்க்கங்களைக் காக்க வேண்டியதும் அவனுக்குப் பாரமாயிற்று;
ஆகவே, கண்ணபிரானே கரணகளேபரங்களைக் கொடுத்து ஸம்ஸாரத்தில் ப்ரவர்த்திப்பித்த
அவதாரிகளைத் தன்னுடைய மாயையான ஸம்ஸாரத்தில் நின்றும் மீளச் செய்வானாம் என்றவாறு-
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே” என்று சோதி வாய்திறந்து பணித்ததும் உணர்க.

————————————————————————–

“ஈச்வரன் அவதரித்துப் பண்ணின ஆனைத்தொழில்களெல்லாம் பாகவதாபசாரம் பொறாமையென்று ஜீயரருளிச்செய்வர்”
என்பது ஸ்ரீவசநபூஷணம் அதாவது – ஸங்கல்பமாத்திரத்தாலே எல்லாவற்றையும் நிர்வஹிக்கவல்ல ஸர்வசக்தியான ஸர்வேச்வரன்
தன்னை யழியமாறி மநுஷ்யர்களைப்போன்று அவதரித்துக் கைதொடனாய்நின்று செய்த ராவணாதிநிரஸநரூபமான
அதிமாநுஷருத்யங்களெல்லாம் மஹர்ஷிகள் முதலான பாகவதர்திறத்தில் அவ்வவர் பண்ணின அபசாரம் ஸஹியாமையாலே
என்று நஞ்சீயரருளிச் செய்வராம்
திருவாழி யாழ்வானைக் கூட ஏவாமல் ஸங்கல்பமாத்திரத்தாலே காரியஞ் செய்யவல்லமை எம்பெருமானுக்கிருந்தாலும்
ஆச்ரிதர்களுக்காகத் தான் உடம்பு நோவக் காரியஞ் செய்தாலன்றித் தனக்கு த்ருப்தி பிறவாதாகையால்
தானே நேரில்வந்து தோன்றிக் கைதொட்டுக் காரியஞ்செய்கின்றானாம்.

சென்றதிலங்கை மேல் செவ்வே தன் சீற்றத்தால்
கொன்றது ராவணனை கூறுங்கால் -நின்றதுவும்
வேயோங்கு தண் சாரல் வேங்கடமே விண்ணவர் தம்
வாயோங்கு தொல் புகழான் வந்து—-25—

பதவுரை

விண்ணவர் தம் வாய்–தேவர்களின் வாயினால்
ஓங்கு தொல் புகழான்–உயர்வாகக் கூறப்படுகின்ற பழமையான புகழை யுடைய எம்பெருமான்
செவ்வே–நேராக
சென்றது–சீறிச் சென்றது
இலங்கை மேல்–லங்காபுரியின் மேலாகும்;
தன் சீற்றத்தால்–தனக்கு வந்தேறியான கோபத்தால்
கொன்றது–ஸம்ஹரித்தது
இராவணனை–ராவணனையாம்;
கூறுங்கால்–சொல்லுமிடத்து
வந்து நின்றதுவும்–(சேதநர் எக்காலத்தும் உஜ்ஜீவிக்கவேணுமென்று கருதி) வந்து
வேய் ஓங்கு தண் சாரல் வேங்கடமே–மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள குளிர்ந்த சாரலையுடைய திருவேங்கடமலையேயாம்.

படாதபாடுகள் பட்டு இலங்கையை நோக்கிச் செல்லாமலே “பஸ்மீபவது ராவண:” என்றாற்போன்ற வொரு
ஸங்கல்பமாத் கிடத்தாலே இராவணனை நீறாக்கி யொழித்திருக்கலாமே;
அப்படியிருக்கவும், வந்து பிறந்து இலங்கையை நோக்கிப் படைதிரட்டிச் சென்றதும்
இராவணனைப் போர்க்களத்திலே கொன்றதும் என்னோ?

இராவணன் முதலிய துஷ்டர்களை ஸங்கல்பமாத்திரத்தாலே நிக்ரஹித்து விடக்கூடுமாயினும்,
“பரித்ராணாய ஸாதூநாம்” என்று சொல்லப்பட்ட ஸாதுபரித்ராணம் (சிஷ்டர்களை வாழ்விப்பது) ஸங்கல்பத்தால் தலைக்கட்டாது;
திவ்யமங்கள விக்ரஹத்தினழகைக் கண்ணாரக் காண வேணுமென்றும் அனைத்துக்கொள்ள வேணுமென்றும்
அன்பர்கொள்ளும் ஆவலை நேரில் வந்தவதரித்தே தீர்க்கவேணுமேயன்றி ஸங்கல்பத்தால் தீர்க்கப்போகாதாகையாலே
“பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் – தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகேயுகே” என்று
சொல்லப்பட்ட அவதார ப்ரயோஜநங்கள மூன்றனுள் முக்கியமாக ஸாதுபரித்ராண மொன்றுக்காகவே
விபவாவதாரங்களும் அர்ச்சாவதாரங்களும் செய்தருள்கிறானென்பதை வெளியிடுதலே இப்பாட்டின் பரம தாத்பர்யமாம்.

விண்ணவர்தம் வாயோங்கு தொல்புகழான் – ராவண ஸம்ஹாரம் முடிந்த பின் பிரமன் முதலிய தேவர்கள் வந்து
தோத்திரஞ்செய்ததைக் கூறிற்றாகவுங் கொள்ளலாம்.

————————————————————————–

கீழ்ப்பாட்டில், “நின்றதுவும் வேயோங்கு தண்சாரல் வேங்கடேமே” என்று திருமலையின் ப்ரஸ்தாவம் வந்ததனால்
அத்திருமலையிலேயே இவ்வாழ்வார்க்கு இன்னமும் திருவுள்ளம் அவகாஹித்து அதன் வைலக்ஷண்யத்தை யருளிச் செய்கிறார்.

வந்தித்து அவனை வழி நின்ற ஐம்பூதம்
ஐந்தும் அகத்தடக்கி ஆர்வமாய் -உந்திப்
படி யமரர் வேலையான் பண்டு அமரர்க்கு ஈந்த
படி யமரர் வாழும் பதி—-26–

பதவுரை

படி அமரர்–நிலத் தேவரான பிராமணர்கள்
வாழும்–நித்யவாஸம் பண்ணுகிற
பதி–திருப்பதியாகிய திருமலை யென்பது,
வழி நின்ற–(எம்பெருமானை ஆச்ரயிப்பதற்குத் தடங்கலாய்) குறுக்கே நிற்பனவான
ஐம்பூதம் ஐந்தும்–பஞ்ச பூதங்களையும் பஞ்சேந்திரியங்களையும்
அகத்து அடக்கி–வெளியிற் போக வொண்ணாதபடி நியமித்து
அவனை–அவ் வெம்பெருமானை
வந்தித்து–வணங்கி
ஆர்வம் செய்–பக்தி யுடையவர்களாய்
உந்தி–ஒருவரை யொருவர் தள்ளிக் கொண்டு மேல் விழுந்து
படி–வந்து படிகின்ற
அமரர்–தேவர்களுக்காக
வேலையான்–திருப்பாற்கடலிலுள்ள பெருமான்
பண்டு அமரர்க்கு ஈந்த–முன்னைத் தேவர்களான நிர்ய ஸுரிகட்கும் (அநுபாவ்யமாகக்) கொடுத்த தலமாகும்.

இரண்டரை யடிகளால் க்ஷீராப்தி நாதனை வருணித்தாராயிற்று. தேவர்கள் ஜிதேந்திரியர்களாய்க் கொண்டு
நான் முன்னே நான் முன்னே யென்று ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு வந்து படியுமிடமான திருபபாற்கடலிலே
பள்ளிகொள்ளும் பெருமான், இந்நிலவுலகத்தில் ஸ்ரீவைஷ்ணவர்கள் அநுபவித்து வாழுமிடமான திருவேங்கடமலையை
நித்யஸூரிகளுக்குத் தந்தான் – என்ற விதன கருத்து யாதெனில்;
“தண்ணருவி வேங்கடமே வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” என்று திருமழிசைப்பிரானும் ,.
“மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்” என்று திருப்பாணாழ்வாரும் அருளிச் செய்தபடியே
இத்திருமலை இவ்விபூதியிலுள்ளார்க்கு மாத்திரமேயல்லாமல் அவ்விபூதியிலுள்ள நித்யஸுரிகளுக்கும் எட்டிப் பிடித்தாற்போல்
வந்து பணியுமாறு அமைக்கப்பட்ட திருப்பதியாமென்பதே. “
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபங்கொண்டு, அமர்ந்து வானவர் வானவர்கோனொடும்,
நமன்றெழுந் திருவேங்கடம்” என்ற திருவாய்மொழியுங் காண்க.

வந்தித்து – வடமொழித்தாது வடியாகப் பிறந்த வினையெச்சம்.
உந்தி – வினையெச்சம்; ‘உந்து’ என்பது வினைப்பகுதி.
மூன்றாமடியில், படியமரர் – வினைத்தொகை.
வேலை – கடற்கரையை யுணர்த்தும் வடசொல்லாகிய ‘வேலா’ என்பது ஐயீறாகி இலக்கணையால் கடலையுணர்த்திற்று.
ஈந்த – ‘ஈந்தது’ என்பதன் விகாரம். படியமரர் வாழும் = படி – பூமி; வானுலகத்தில் தேவர்கள் விளங்குவது போல
இருள்தருமா ஞாலமான இந்தப்பூமியில் விளங்குபவர்; எனவே, அந்தணர்களையும் ஸ்ரீவைஷ்ணவர்களையும் சொல்லிற்றாம்.

————————————————————————–

பதி யமைந்து நாடிப் பருத்து எழுந்த சிந்தை
மதி உரிஞ்சி வான் முகடு நோக்கி -கதி மிகுத்தங்கு
கோல் தேடி யோடும் கொழுந்ததே போன்றதே
மால் தேடி ஓடும் மனம்——27-

பதவுரை

பதி–திருமலைத் திருப்பதியிலே
அமைந்து–வேரூன்றி நின்று
நாடி–எங்கே யென்று தேடிக் கொண்டு
பருத்து எழுந்த சிந்தை
மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரதத்தை யுடையதாய்
மதி உரிஞ்சி–சந்திர பதத்தையும் உராய்ந்து கொண்டு
வான் முகடு நோக்கி–(அப்பால்) அண்ட முகட்டையும் பார்த்து விட்டு
(அங்கும் நில்லாமல்)
மால் தேடி–பரமபத நாதனைத் தேடிக் கொண்டு
கதி மிகுத்து ஓடும்–விரைவு மிகுந்து செல்லுகின்ற
மனம்–என்னெஞ்சமானது
அம் கோல் தேடி ஓடும்–அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்லுகின்ற
கொழுந்து அது போன்றது–கொடியை ஒத்திரா நின்றது.

கீழிரண்டு பாசுரங்களில் எம்பெருமானுடைய திருமலையிலிருப்பை அநுஸந்தித்த ஆழ்வார்
இவ்விடத்தில் தாம் தம்முடைய ஆசைதீர அப்பெருமானோடு பரிமாற வேணுமென்று பாரித்தார்;
அர்ச்சாவதாரமாகையாலே அப்படிப்பட்ட பரிமாற்றம் ஒன்றும் பெற்றிலர்;
விபவாவதாரங்கள் காலாதீதமாய்ப் போகையாலே இனி பரமபதநாதனோயேயாகிலும் கலந்து பரிமாறப் பெறலாமோ
என்று பார்த்துத் தம் திருவுள்ளம் பரமபதத்தளவும் பதறிச் செல்லும்படியைப் பேசுகிறாரிப் பாசுரத்தில்.

முதலடியில் முடிவிலுள்ள ‘சிந்தை’ என்னுஞ்சொல் எழுவாய் போலத் தோற்றுமாயினும் அஃது எழுவாய் அன்று;
பாட்டின் முடிவிலுள்ள மனமே எழுவாய்; சிந்தை அதற்கு விசேஷணமாய் அந்வயிக்கும்
எனது மனமானது திருவேங்கட மலையிலே சென்று சேர்ந்து தன் ஆவல் தோற்றும்படி எங்கே யெங்கே யென்று திருமாலைத் தேடி
அங்குத் தன் நினைவு தலைக் கட்டப் பெறாமையாலே மிகவும் வளர்ந்து மேற்கிளர்ந்த மனோ ரகத்தை யுடையதாகி
மேலே மேலே சென்று திருநாட்டுத் தலைவனைத் தேடியோடா நின்றது;
இஃது, அழகிய கொள் கொம்பைத் தேடிக் கொண்டு பரந்து செல்கின்ற கொடியைப் போன்றுள்ளது – என்றாராயிற்று.

————————————————————————–

கீழ்ப்பாட்டில் “கோல் தேடியோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்” என்னும்படியாக
ஆசை கரைபுரண்டு செல்லப்பெற்ற மதமுடைய திருவுள்ளத்திலே திருவேங்கடமுடையான் அழகிய மணவாளன்
திருப்பாற்கடல் நாதன் பரமபதநாதன் ஆகிய எம்பெருமான்க ளெல்லாரும் வந்து குடிகொண்டபடியைக் கூறுகின்றாரிதில்.

மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் —-28-

பதவுரை

எனை பலரும்–கணக்கில்லாத வைதிக புருஷர் யாவராலும்
தேவாதி தேவன் எனப்படுவான்–தேவர்கட்கும் தேவவென்று ப்ரஸித்தமாகச் சொல்லப்படா நிற்பவனும்
மா கடலான்–பரந்த திருப்பாற் கடலிலே பள்ளி கொண்டிருப்பவனும்
முன் ஒரு நாள்–முன்பொரு காலத்தில்
(ஸ்ரீகிருஷ்ணனா யவதரித்தபோது)
மா வாய் பிளந்த–குதிரை யுருக் கொண்டு வந்த கேசியின் வாயைக் கீண்ட
மகன்–சிறு பிள்ளை யானவனும்
மற்றும்–பின்னும்
நினைப்பு அரிய நீள் அரங்கத்து உள்ளான்–நினைப்பதற்கும் அருமையான யோக்யதை மிக்கிருந்துள்ள கோயிலிலே பள்ளி கொள்பவனுமாகி
வேங்கடத்தான்–திருமலையிலே (ஸர்வ ஸுலபனாய்க் கொண்டு) எழுந்தருளி நிற்பவன்
(இப்போது)
மனத்து உள்ளாள்–என் மநஸ்ஸிலே நித்ய வாஸம் பண்ணா நின்றான்.

தேவாதிதேவனான பரமபத நிலயன் ஜகத்ரக்ஷணார்த்தமாக முதலில் திருப்பாற்கடலில் வந்து தங்கிப் பின்பு
ஸ்ரீக்ருஷ்ணனாயவதரித்து ‘இப்படி நாம் வருவதும்போவதுமாக இராமல் ஸ்திர ப்ரதிஷ்டையாக இருந்து
ஸம்ஸாரிகளைக் காக்க வேணும்’ என்று திருவுள்ளம் பற்றிக் கோயில் திருமலை முதலிய திருப்பதிகளிலே
யெழுந்தருளியிருந்து இப்போது என்னெஞ்சிலே வந்து கிடக்கிறானென்கிறார்.

இப்பாட்டில் ‘மனத்துள்ளான்’ என்பது முதலிலேயிருந்தாலும் அர்த்தஸ்வாரஸ்யம் நோக்கி அது முடிவு சொல்லாகக் கொள்ளப்படும்.

தேவாதி தேவன் – வடசொல் தொடர்.

மாவாய்ப்பிளந்த வரலாறு – கண்ணபிரானைக் கொல்லும்படி கம்ஸனாலேவப்பட்டிருந்த அஸுரர்களில் ஒருவனான
கேசியென்பவன் குதிரையினுருவங் கொண்டு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி களைத்துத் துரத்திக்கொண்டு
கண்ணன் மேற்பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப்பெருக்கி நீட்டி அதன் வாயிற்கொடுத்துத் தாக்கிப்
பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்பதாம்.

————————————————————————–

கிருஷ்ணாவதாரம் நினைவுக்கு வந்துவிட்டால் ஆழ்வார்கள் விரைவில் ஓயமாட்டார்களே!
கீழ்ப்பாட்டில் “முன்னொருநாள் மாவாய்பிளந்த மகன்” என்று கிருஷ்ணாவதாரம் ப்ரஸக்தமானபடியால்
அது தன்னிலேயே திருவுள்ளம் அவகாஹித்து அநுபவித்து இப்பாசுரம் பேசுகிறார்.

மகனாக கொண்டு எடுத்தாள் மாண்பாய கொங்கை
அகனார உண்பன் என்று உண்டு -மகனைத் தாய்
தேறாத வண்ணம் திருத்தினாய் தென்னிலங்கை
நீறாக வெய்தழித்தாய் நீ——-29-

பதவுரை

தென் இலங்கை–அழகிய லங்காபுரி
நீறு ஆக–நீறாகி யொழியும்படி
எய்து–அம்புகளைச் செலுத்தி
அழித்தாய்–முடித்தவனே!
நீ-:மகன் ஆக கொண்டு எடுத்தாள்
உன்னைப் புத்திர பாவனை செய்து (பரிவுகாட்டி முலை கொடுக்க) எடுத்துக்கொண்ட பூதனையினுடைய
மாண்பு ஆய கொங்கை–அழகான முலையை
அகன் ஆர உண்பன் என்று உண்டு–வயிறார உண்ணக் கடவேனென்று சொல்லி (பாலோடு அவளுயிரையும்) குடித்து
மகனை–புத்ரனான உன் விஷயத்திலே
தாய்–உனது தாயாகிய யசோதை
தேறாத வண்ணம்–நம்பிக்கை யற்றிருக்கும்படி
திருத்தினாய்–செய்துவிட்டாய்.

விஷந்தடவின முலையைக் கொடுத்து உன்னைக் கொல்லவந்த பேய்ச்சியானவள் மெய்யே தாய் போன்று பரிவு காட்டி
உன்னை வாரியெடுத்தணைத்து முலைகொடுத்தாள்; நீயும் மெய்யே குழந்தையாகவே பாவனைகாட்டி ,
பாலின் கனத்தாலே விம்மி விளங்குகின்ற அம்முலையைச் சுவைத்துண்பவன் போல அவளுயிரையே உறிஞ்சியுண்டாய்;
அது முதலாக உனது மெய்த்தாயான யசோதைப்பிராட்டிக்கு உன்னிடத்தில் நம்பிக்கையுண்டாக இடமில்லாமலே போயிற்று;
‘இவனை நாம் சிறு குழந்தையென்று நம்பவே கூடாது’ என்று எப்போதும் துணுக்குத்துணுக்கென்று அவள்
அஞ்சியிருக்கும் வண்ணமே செய்துவிட்டாய் என்றாராயிற்று.

அகன் – அகம்; மகரனசுரப்போலி.

“தேன்னிலங்கை நீறாக எய்தழித்தாய்” என்ற விளியின் கருத்தாவது – க்ருஷ்ணாவதாரத்தில் மாத்திரமே இப்படி
நம்பிக்கையற்று அஞ்சியிருக்க வேணுமேயொழிய ராமாவதாரத்தில் இப்படிப்பட்ட அச்சத்திற்கு அவகாசமில்லை;
பருவம் முற்றினபின்பே ராவண ஸம்ஹாரம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்தாயாகையாலே – என்பதாம்.

தென்னிலங்கை – தென் திசையிலுள்ள இலங்கை என்றுமாம். தென் – அழகுக்கும் பெயர்.

————————————————————————–

எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை நினைந்து வாயாரப் பேசி யேத்துகிறார்.
திரிவிக்கிரமனாகி உலகளந்தாய்; மஹாவராஹமாகி உலகிடந்தாய்; வங்கக்கடல் கடைந்தாய்;
அக்கடலிலே அணைகட்டினாய் என்று மஹர்ஷிகள் கூறுகின்றார்களென்கிறார்.

நீ அன்று உலகளந்தாய் நீண்ட திருமாலே
நீ அன்று உலகு இடந்தாய் என்பரால் -நீ யன்று
காரோத முன் கடைந்து பின் அடைத்தாய் மா கடலை
பேரோத மேனிப் பிரான்—30-

பதவுரை

பேர் ஓதம் மேனி பிரான்–பெரிய கடல் போன்ற திருமேனியை யுடைய பெருமானே!
நீண்ட திருமாலே–எண்ணுதற்கு அரிய பெருமை படைத்த திருமாலே
நீ–இப்படிப்பட்ட நீ
அன்று–முன்பொருகால்
உலகு–உலகங்களை
அளந்தாய்–(திரிவிக்கிரமனாகி) அளந்து கொண்டாய் (என்றும்)
நீ–நீ
அன்று–மற்றுமொரு காலத்தில்
உலகு–பூமியை
இடந்தாய்–(மஹாவராஹமாகி) அண்டபித்தியில் நின்றும் ஒட்டு விடுவித்துக் கொணர்ந்தாய் (என்றும்)
நீ அன்று-;
கார் ஓதம் முன் கடைந்து-கரிய கடலை முன்னே கடைந்தா யென்றும்
மா கடலை–(அந்தப் பெரிய கடல் தன்னையே)
பின்–பிறகு (ராமவதாரத்திலே)
அடைத்தாய்–அணை கட்டித் தூர்த்தாயென்றும்
என்பர்–(மஹர்ஷிகள்) சொல்லுகின்றனர்.

காரோதம் கடைந்த வரலாறு : – முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துக்குச்
சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒரு பூமாலை ப்ரஸாதிக்கப்பெற்ற ஒரு வித்யாதரமகள்,
மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன் கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டு வருகையில்
தூர்வாஸ மஹாமுநி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க; அவ்விஞ்சை மங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்.
அதன் பெருமையையுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம் முனிவன் ஆநந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து,
அப்பொழுது அங்கு வெகு உல்லாஸமாக ஐராவத யானையின் மேற் பவனி வந்து கொண்டிருந்த இந்திரனைக் கண்டு
அவனுக்கு அம்மாலையைக் கை நீட்டிக் கொடுக்க, அவன் அதனை மாவட்டியினால் வாங்கி
அந்த யானையின் பிடரியின் மேல் வைத்தவளவில் அம்மதயானை அதனைத் துதிக்கையாற் பிடித்திழுத்துக் கீழெறிந்து
காலால் மிதித்துத் துவைத்தது; அது கண்டு முநிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி
‘இவ்வாறு செல்வச் செருக்குற்ற உன்னுடைய ஐச்வரியங்களெல்லாம் கடலில் ஒளிந்து விடக்கடவன’ என்று சபிக்க,
உடனே தேவர்களின் செல்வம் யாவும் ஒழிந்தன; ஒழியவே அசுரர் வந்து பொருது அமரரை வென்றனர்.
பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து அப்பிரான் அபயமளித்துக் கட்டளையிட்டபடி
அசுரர்களையுந் துணைகொண்டு மந்தரமலையை மத்தாக நாட்டி வாஸுகி யெனனும் மஹாநாகத்தைக் கடைகயிறாகப்பூட்டிப்
பாற்கடலைக் கடையலாயினர். அப்பொழுது மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்களின் வேண்டுகோளினால்
திருமால் பெரியதோர் ஆமைவடிவமெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின் மீது கொண்டு தாங்கி
அம்மலை கடலில் அழுந்திவிடாமல் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன்.
இப்படி ஸ்ரீமந்நாராயணன் அக்கடலினிடையே மஹா கூர்மமாய் மந்தரபர்வதத்திற்கு ஆதாரமாய் எழுந்தருளியிருக்க,
வாஸுகியின் வாலைப்பிடித்துக் கொண்ட தேவர்களும் தலையைப்பிடித்துக் கொண்ட அசுரர்களும் ஆகிய இரு திறத்தாரும்
அதனை வலியப்பிடித்து இழுத்துக் கடையவல்ல வலிமையில்லாதவராய் நிற்க, அது நோக்கி அத்திருமால் தான்
ஒரு திருமேனியைத் தரித்துத் தேவர்கள் பக்கத்திலேயும் நின்று வாஸுகியின் வாலையும் தலையையும் பிடித்து
வலமும் இடமுமாக இழுத்துக் கடைந்தனன் என்பதாம்.

கடலடைத்த வரலாறு :- விபீஷணாழ்வான் இராமபிரான் பக்கல் வந்து சேர்ந்து உய்ந்தபின் பெருமாளைப் பார்த்து
‘ஸ்வாமிந்! இந்த நம்முடைய ஸேனைகள் கடலைக்கடந்து அப்பாற் செல்லவேண்டுமாதலால்
அதற்காகக் கடலரசனை நீர் சரணம் புகவேணும்’ என்ன; இராமபிரான் “கடலைக்கடக்க உபாயம் சொல்ல வேண்டும்” என்று
கடலரசனாகிய வருணனைப் பிரார்த்தித்துத் தர்ப்பசயனத்திலே படுத்து மூன்று நாளளவும் ப்ராயோபவேசமாகக் கிடக்க,
ஸமுத்ரராஜன் அப்பெருமானது மஹிமையைக் கருதாமல் உபேக்ஷையாயிருந்துவிடவே ஸ்ரீராமன் அது கண்டு கோபங்கொண்டு
‘அனைவரும் நடந்தேசெல்லும்படி கடலை வற்றச் செய்வேன்’ என்று ஆக்நேயாஸத்ரத்தைத் தொடுக்கத் தொடங்கியவளவிலே
வருணன் அஞ்சி நடுங்கி ஓடிவந்து இராமபிரானைச் சரணமடைந்து கடல் வடிவமான தன்மேல் அணைகட்டுதற்கு உடன்பட்டு
நளன் கையினால் நீரில் போகட்ட கற்களும் மிதக்குமென்று அவனுக்கு அவன் தகப்பனார் வரமளித்திருக்கிறாராகையால்
அவனைக் கொண்டு ஸேது கட்டவேணுமென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான். இராகவனும் அப்படியே
மற்ற வானரங்கள் சுற்றுமுள்ள மலைகளைப் பிடுங்கிக் கொண்டுவந்து நளன் கையில் கொடுக்கச் செய்து
நளன் கையினால் அம்மலைகளை நீரில் போகடுவித்து ஸேது கட்டுவித்தான்.
அவ்வழியாய் வானரப்படைகளோடு இராமபிரான் இலங்கை சேர்ந்து அந்நகரையும் இராவணனுள்ளிட்ட
அரக்கர் குலத்தையும் நீறுபடுத்தின வரலாறு ப்ரஸித்தம்.

“பேராத மேனிப்பிரான் – காரோத முன்கடைந்து” என்ற சொல்லாற்றலால், கடல் கடைகிறபோது
ஒரு கடலை மற்றொரு கடல் நின்று கடைந்தாற் போலே யிருந்ததென்பது தொனிக்கும்.
‘என்பர்’ என்பது “அளந்தாய்” இடந்தாய், அடைத்தாய்” என்ற மூன்றிடத்தும் அந்வயிக்கும்.

முதலடியில், ‘நீண்ட, என்றது – திரிவிக்கிரமனாய் நீண்ட என்றபடியுமாம்.

————————————————————————–

ஆபத் பந்துவான பகவானுடைய திருவடிகளில் செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி
முதலிய புஷ்பங்களைப் பணிமாறித் தொழுமவர்கள்
அப்ராக்ருதமான அப்பரமனது திருமேனியை ஸேவித்து நித்யாநந்தம் அநுபவிக்கப் பெறுவர்களென்கிறார்.

பிரான் என்று நாளும் பெரும் புலரி என்றும்
குரா நற் செழும் போது கொண்டு -வராகத்
தணி யுருவன் பாதம் பணியுமவர் கண்டீர்
மணி யுருவம் காண்பார் மகிழ்ந்து—31–

பதவுரை

பிரான் என்றும்–‘மஹோபகாரங்கள் பண்ணினவனே!’
பெரு புலரி என்றும்–‘இன்றே நல் விடிவு’ என்றும் (கொண்டாடிக் கொண்டு)
நாளும்–நாள்தோறும்
நல்குரா–நல்ல மணம் மிக்க
செழு–அழகிய
போது கொண்டு–புஷ்பங்களைக் கொண்டு,
வராகத்து அணி உருவன் பாதம்–அழகிய வரா ஹவுருக் கொண்ட பெருமானுடைய திருவடிகளை
பணியுமவர் கண்டீர்–வணங்குபவர்களே
மணி உருவம்–(அப்பெருமானுடைய) திவ்ய மங்கள விக்ரஹத்தை
மகிழ்ந்து காண்பர்–ஸேவித்து ஆநந்திக்கப் பெறுவர்கள்.

(பிரானென்னும் பெரும்புலரியென்றும் பணியுமவர் கண்டீர்.)
ஸ்ரீவசநபூஷணத்திலே – “அஜ்ஞரான மநுஷ்யர்கள் வாளா தந்தானென்றிருப்பர்கள்;
ஜ்ஞாநவான்கள் ‘இன்றென்னைப் பொருளாக்கித் தன்னையென்னுள்வைத்தான் – எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே –
நடுவே வந்து உய்யக்கொள்கின்ற நாதன் – அறிய தனவறிவித்த அத்தா நீ செய்தன அடியேனறியேனே –
பொருளல்லாத வென்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய் –
என்னைத் தீமனங்கெடுத்தாய் – மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்று ஈடுபடா நிற்பார்கள்”
என்றருளிசி செய்தவை இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

பிரானே! என்றும் பெரும்புலரி என்றும் சொல்லிக் கொண்டு எம்பெருமான் பாதம்பணிய வேணுமென்கிறாரிவ்வாழ்வார்.
‘இன்றளவும் மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து விஷயாந்தரங்களிலே ஆழ்ந்து உண்டியே உடையே உகந்தோடித்
திரிந்தவென்னை இன்று உன் திருவடிகளிலே கொண்டு கூட்டினையே!, இதனிலும் மிக்க வுபகாரமுண்டோ?, என்று
பெருநன்றி பாராட்டவேணுமென்பது “பிரானென்றும்” என்பதன் கருத்து. (பிரான் – உபகாரசன்; இங்கே இது ஸம்போதநம்.)

பெரும்புலரி என்றும் =“பழுதே போயின” என்கிறபடியே பாழாய்க் கழிந்த பல நாள்களுக்குள்ளே பகவத் விஷயத்திலிழியும்படி
விடிந்த இந்நாளே நல்ல நாள்! என்று நாளைக் கொண்டாட வேணுமென்கிறது.
கம்ஸன் தனது வேலைக்காரனான அக்ரூரனை யழைத்து ‘நீ போய்க் கண்ணபிரானை யழைத்து வா’ என்று
கட்டளையிட்டனுப்ப அவனும் புறப்பட்டு வரும்போது ,.
“அத்ய மேஸ பலம் ஜந்ம ஸுப்ரபாதாச் மே நிசா – யதுந்நித்ராப்ஜபத்ராக்ஷம் விஷ்ணோ! த்ரக்ஷ்யாம்யஹம் முகம்.”
கம்ஸன் சோறுண்டு வளர்ந்த வெனக்கும் இன்று எம் பெருமான் திருமுகத்திலே விழிக்கப்பெறும் பாக்கியம் நேர்கின்றமையாலே
இன்றே என் பிறவி பயன்பெற்றது; இன்றே நல்விடிவு என்று கனிந்து கூறினது போலவும்,
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்” என்று ஆய்ச்சிகள் நாளைக் கொண்டாடினது போலவும்.

குராநற் செழும்போது = ‘குரா’ என்று பரிமளத்திற்கும் ஒரு புஷ்ப விசேஷத்திற்கும் பெயர்.
இங்கே அவ்விரண்டு பொருளுங்கொள்வர்,
காண்பர் மகிழ்ந்து = கண்டு மகிழ்வர் என்றவாறு.

————————————————————————–

தம்முடைய ‘மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் பேசுகிறார்’.

மகிழ்ந்தது சிந்தை திருமாலே மற்றும்
மகிழ்ந்தது உன் பாதமே போற்றி -மகிழ்ந்தது
அழலாழி சங்கமவை பாடியாடும்
தொழிலாகும் சூழ்ந்து துணிந்து—-32–

பதவுரை

திருமாலே!–லக்ஷ்மீபதியே!
சிந்தை–என் நெஞ்சமானது
மகிழ்ந்தது–(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;
மற்றும்–நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்
உன் பாதமே போற்றி–உன் திருவடிகளையே துதித்து
மகிழ்ந்தது–ஆநந்திக்கப் பெற்றது;
ஆகம்–என்னுடைய தேஹமானது
அழல்–எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற
ஆழி–திருவாழியையும்
சங்கம்–ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்
அவை–மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்
பாடி ஆடும்–கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற
தொழில்–வியாபாரத்திலே
சூழ்ந்து–பொருந்தி
துணிந்து–இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு
மகிழ்ந்தது–களிக்கப் பெற்றது.

திருமாலே! சிந்தை மகிழ்ந்தது = நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனால் ஆநந்தமடையும்;
என்னுடைய சிந்தை அப்படியன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நீயும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும்
சேர்த்தியைச் சிந்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா நின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது = மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவ தாகையாலே
மனத்துக்கு அடுத்ததான வாக்கை ‘மற்றும்’ என்கிறது.
நாட்டாருடைய வாக்கு விஷயாந்தரங்களை வருணித்து அதனாலே களிப்புறும்;
என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்த்துக்கூறி மகிழ்வுறுகின்றது.
இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழிலுறுதியைக் கூறுகின்றார்.
திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்களோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட,
அப்பாடலுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரீரம் தொழிலாகக் கொண்டுள்ளது என்றாராயிற்று.

————————————————————————–

“யத் ஹி மநஸா த்யாயதி தத் வாசா வததி தத் கர்மணா கரோதி” என்று வேதத்திற் சொல்லுகிறபடியே
முதலில் சிந்தை சிந்திப்பது பிறகு வாய் சொல்லுவது, அதன்பிறகு உடல் செய்வது என்றிப்படி
மனமொழி மெய்களின் செயல்முறைமை ஏற்பட்டிருக்கும் விதமாகத் தமக்கு அந்த மூன்று கரணங்களும்
பகவத் விஷயத்தில் அவகாஹித்தபடியைக் கீழ்ப்பாசுரத்திற் பேசினர்;
இந்த முறைமையின்படியே ஒழுகாது, வாக்குக்கு முன்னே சரீரம் முந்துகிறபடியை இப்பாசுரத்தில் மொழிகின்றார்.
‘நான் முன்னே நான் முன்னே’ என்று தம்முடைய இந்திரியங்கள் பகவத் விஷயாநுபவத்துக்கு முற்படும்படியைத் தெரிவித்தவாறு.
கீழ்ப்பாட்டில் மனமொழி மெய்களை வரிசையாகச் சொல்லி,
இப்பாட்டில் ‘சிந்தை, அங்கம், வாய், என்று மாறுபடக் கூறியிருத்தல் காண்க.

துணிந்தது சிந்தை துழாய் அலங்கல் அங்க
மணிந்தவன் பேருள்ளத்துப் பலகால் -பணிந்ததுவும்
வேய் பிறங்கு சாரல் விரல் வேங்கடவனையே
வாய் திறங்கள் சொல்லும் வகை——-33–

பதவுரை

சிந்தை–என் மனமானது
துழாய் அலங்கல் அணிந்தவன் பேர்–திருத்துழாய் மாலையை அணிந்துள்ள பெருமானுடைய திருநாமங்களை
பல்கால்–பலமுறை
உள்ளத்து–நினைப்பதில்
துணிந்தது–த்ருடமாக அத்யவஸாயங் கொண்டது;
அங்கமும் (பல்கால்)–எனது உடலும் எப்போதும்
பணிந்தது–வணங்குவதாயிரா நின்றது;
வாயும்–என் வாக்கும்
வேய் பிறங்குசாரல்–மூங்கில் மிக்கிருக்குந் தாழ்வாரையையுடைய
விறல் வேங்கடவனை–திருமலையிலெழுந்தருளியிருக்கிற மிடுக்குடைய பெருமானது
திறங்களே-தன்மைகளையே
(பல்கால்)-எப்போதும்–
சொல்லும் வகை–சொல்லுகிற விதத்திலே
(துணிந்தது)–துணிவு கொண்டதாயிற்று.

“வேய் பிறங்கு சாரல்” என்ற விசேஷணம் ‘வேங்கடவனை என்பதில் ஏக தேசமான வேங்கடத்தில் அந்வயிக்கும்;
‘விறல்’ என்ற விசேஷணம் வேங்கடவனுக்கு அந்வயிக்கும். விறல் – பெருமை, வலி, வீரம், வெற்றி.

திறம் – குணம், சாமர்த்தியம், தன்மை, மேன்மை முதலியன.
திருவேங்கடமுடையானுடைய ஸ்வரூபகுண விபூதிகளைச் சொல்லிக் கொண்டிருப்பதிலே வாய்துணிவு கொண்டதென்கை.

————————————————————————–

கீழருளிச் செய்தபடி தம்முடைய மதோவாக்காயங்கள் எம்பெருமான் பக்கலிலேயே ஊனமுற்றதற்குக் காரணம் –
அந்த எம்பெருமான் மஹாபலியிடத்தினின்று பூமியை மீட்டு இந்திரனுக்குத் தருவதென்கிற வியாஜத்தால்
எல்லார் தலையிலும் திருவடியை வைத்து வாழ்வித்தது போல,
தம் தலைமேலும் திருவடிகளை வைத்து விசேஷகடாக்ஷஞ் செய்தருளினதேயாமென்பது இப்பாட்டில் தோன்றும்.

வகையால் அவனி இரந்து அளந்தாய் பாதம்
புகையால் நறு மலரால் முன்னே -மிக வாய்ந்த
அன்பாக்கி ஏத்தி அடிமைப் பட்டேன் உனக்கு
என் பாக்கியத்தால் இனி—–34–

பதவுரை

முன்னே–முற்காலத்திலே
வகையால்–உபாயத்தினால்
அவனி–பூமியை
இரத்து–(மாவலிபக்கல்) யாசித்து
அளந்தாய்–அளந்து கொண்ட வுன்னுடைய
பாதம் புகையால்–திருவடிகளை தூபங்கொண்டும்
நறுமலரால்–நல்ல பரிமளமுள்ள புஷ்பங்களைக்கொண்டும்
மிக வாய்ந்த அன்பு ஆக்கி–மிகுதியாக (நன்றாக)ப் பொருந்தின ப்ரீதியுடனே
ஏத்தி–துதித்து
இனி–மேலுள்ள காலமெல்லாம்
என் பாக்கியத்தால்–நீ என்மேல் பண்ணின விசேஷ கடாக்ஷமாகிற பாக்யத்தாலே
உனக்கு அடிமைப்பட்டேன்–உனக்குத் தொண்டனாய் விட்டேன்.

வகையால் – தந்திரத்தாலே யென்றபடி; இராவணன் போலவே மாவலியும் தேவர்களுக்குத் தீங்கிழைத்தவனாதலால்
ராவணனைக் கொன்றொழித்தது போலவே இவனையுங் கொல்ல வேண்டியிருந்தும்,
இவன் உதாரகுணமொன்றை மேற்கொண்டிருந்ததனால் இவனைக் கொல்லவேண்டாவென்று கொண்டு
மூவடியிரந்து பெறுகிற இச்செயலிலேயே பூமியை இந்திரனுக்குச் சேர்ப்பித்தலும் மாவலியை அடக்குதலுமாகிற இரண்டும்
எளிதிற் கைகூடுமென்று நினைத்துச் செய்த தந்திரம் அறிக.

இனி, வகையால் என்பதற்கு வடிவழகு, மழலைச்சொல், மனத்தைக் கவரவல்ல செயல் முதலிய வகைகளாலே என்றுரைக்கவுமாம்.

அவநி – வடசொல்.

என் பாக்கியத்தால் = நான் செய்த பாக்கியத்தால் என்று பொருளன்று எனக்கு நேர்ந்த பாக்கியத்தால் என்கை
எம்பெருமானார் காலத்திலே திருவரங்கம் பெரிய கோயிலில் ஒருநாள் நம் பெருமாள் புறப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு
பெரிய திருமண்டபத்துக்குக் கீழாக மஹாஜ்ஞாதாக்களான முதலிகளெல்லாரும் திரளவிருந்தவளவிலே ஒரு ஸ்ரீ வைஷ்ணவர்
“நாம் அநாதிகாலமாக ஆர்வீட்டு வாசலிலே எவனுடைய புறப்பாட்டை எதிர்பார்த்துக்கொண்டு கிடந்தோமோ தெரியாது,
இன்று ப்ராப்த சேஷியான பெருமாளுடைய புறப்பாடு பார்த்து வந்திருக்க என்ன பாக்கியம் பண்ணினோமோ!’ என்ன,
அந்த ப்ரஸங்கத்திலே நித்ய ஸம்ஸாரியாய்ப் போந்தவனுக்கு ஒருநாள் பகவத் விஷயத்திலே ருசிபிறப்பதற்குக் காரணமென்ன?’
என்று விசாரிக்கச்செய்தே ‘யாத்ருச்சிகஸுக்ருதம்’ என்று சிலரும் ‘அஜ்ஞாதஸுக்ருதம்’ என்று சிலருமாய் இப்படி வார்த்தைகள் உண்டாக,
அவ்வளவில் அங்கிருந்த கிடாம்பிப்பெருமாள் ‘நமக்கு பகவத் விஷயம் போலே ஸுக்ருததேவர் என்றும் ஒருவர் ஆச்ரயணீயருண்டோ?’ என்ன
அதற்குப் பிள்ளை திருநறையூரரையர் ‘ஸுக்ருத மென்று சொல்லுகிறதும் வேறொன்றையன்று. பகவத் விஷயத்தையே காண்’ என்றாராம்.

ஸ்ருஷ்டி அவதாரம் முதலியவற்றாலே எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனாகவே ஒரு நாளடைவில் நமக்கு
பகவத் விஷயத்தில் ருசி பிறக்கிறபடியாலே அந்த பகவத் கடாக்ஷந்தன்னையே பாக்கியமென்கிறது.
இவ்வர்த்தத்தையே ஸ்ரீமத்வேதாந்த தேசிகனும் ரஹஸ்யத்ரயஸாரத்திலே
“உபாய: ஸ்வப்ராப்தேருபநிஷததீத: ஸ பகவாந், ப்ரஸத்த்யை தஸ்யோக்தே ப்ரபதந நிதித்யாஸநகதீ ததாரோஹ:
பும்ஸாம் ஸுக்ருத பரிபாகேந மஹதா. நிதாநம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாணநிபுண:” என்று தெளிவருளிச் செய்தார்.

“எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய விதி சூழ்ந்ததா லெனக்கேலம்மான் திரிவிக்கிரமனையே” என்று –
எம்பெருமான் ஸர்வலோக வ்யாபியானது தம்மைக் கைப்பற்றிக் கொள்வதற்காகவேயென்று நம்மாழ்வார் அநுஸந்தித்தது போல
இவ்வாழ்வாரும் அநுஸந்திக்கின்றமை முதலடியிலே நன்கு விளங்கும்.

————————————————————————–

“உண்ணுஞ்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையுமெல்வாங் கண்ணன்” என்கிறபடியே
பரம போக்யனான நீயிருக்கையில்’ நாட்டிலுள்ளவர் உன்னையே நாரக போஷக போக்யங்களாகப் பற்றாமல்
சப்தாதிவிஷயங்களை விரும்பித் திரிகின்றார்களே! என்று உலகத்தார் செயலை வெறுத்து
உன்னைப் பற்றுவதே எல்லார்க்கும் தஞ்சமென்று கூறுகிறார்.

இனிது என்பர் காமம் அதனிலு மாற்ற
இனிது என்பர் தண்ணீரும் எந்தாய் -இனிது என்று
காம நீர் வேளாது நின் பெருமை வேட்பரேல்
சேம நீர் ஆகும் சிறிது—–35–

பதவுரை

எந்தாய்–என் ஸ்வாமி யானவனே!
(பாமரர்கள்)
காமம்–ஹேயமான சப்தாதி விஷயங்களை
இனிது என்பர்–போக்யமாகக் கொள்பர்;
(விரக்தர்களுங்கூட)
தண்ணீர் அதனிலும் ஆற்றவும் இனிது என்பர்–அந்த சப்தாதி விஷயங்களிற் காட்டிலும் தண்ணீர் மிகவும் போக்யமென்பர்கள்;
காமம் நீர்–(கீழ்ச் சொல்லப்பட்ட) காமத்தையும் தண்ணீரையும்
இனிது என்று வேளாது–போக்யமாகக் கொண்டு அவற்றிலே ஆசை கொள்ளாமல்
நின் பெருமை சிறிது வேட்பர் ஏல்–உன்னுடைய போக்யதையே கொஞ்சமேனும் விரும்பி மேல் விழுவார்களாயின் (அது)
சேமம் நீர் ஆகும்–(எல்லா நிலைமையிலும்) ரக்ஷகமான தன்மையை யுடையதாகும்

‘காமம்’ என்பது ஆசைக்குப் பேராயினும் ஆசைபடுவதற்கு உரிய விஷயாந்தரங்களையும் சொல்லக் கடவது:
கூத்துப் பார்ப்பது, பாட்டுக்கேட்பது, பூச்சூடுவது சாந்து பூசுவது, மாதர்களை யணைவது முதலியவை விஷயாந்தரங்க ளெனப்படும்.
இவையே போக்யமென்று ஒழிவர் பலர்; மற்றும் பலர் விஷயாந்தர விரக்தர்களென்று பெயர் சுமந்தும்
சோற்றையுந் தண்ணீரையும் விட்டிருக்கமாட்டாமல் அவற்றை போக்யமாகக் கொள்வர்.
அநந்ய போக்யத்வத்தை ஸ்வரூபமாக வுடைய அதிகாரிகள் முதலடியிற் சொன்ன விஷயாந்தரங்களையும்
இரண்டாமடியிற் சொன்ன தண்ணீர் முதலியவற்றையும் போக்யமாகக் கொள்ளாது
“எனக்குத் தேனே பாலே கன்னலே யமுதே” என்று பரமபோக்யனாகச் சொல்லப்படுகிற உன்னையே
விரும்பப்பெறில் இவ்விருப்பமே அவர்கட்குச் செமமாகும் என்றாராயிற்று.

இரண்டாமடியிற் ‘தண்ணீர்’ என்றதும் மூன்றாமடியில் ‘நீர்’ என்றதும் – சோறு, வெற்றிலை முதலியவற்றுக்கும் உபலக்ஷணமென்க.
“வாஸூதேவஸ்ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப.” என்று பகவத் கீதையிலே துர்பலனாகச் சொல்லப்பட்டுள்ள
மஹாத்மாவாக இருக்குமவர்கட்கே குறைவற்ற சேமமுண்டாகுமென்றதாயிற்று.

சேமநீர் = ‘க்ஷேமம்’ என்னும் வடசொல் சேமமெனத் திரிந்தது.
நீர் – நீர்மையையுடையது; நீர்மையாவது தன்மை.

————————————————————————–

சிறியார் பெருமை சிறிதின் கண் எய்தும்
அறியாரும் தாம் அறியார் ஆவர் -அறியாமை
மண் கொண்டு மண் உண்டு மண் உமிழ்ந்த மாயன் என்று
எண் கொண்டு எண் நெஞ்சே இரு–36–

பதவுரை

சிறியார்–(இயற்கையான மேன்மை சிறிதுமில்லாமல்) அற்பரான ஸம்ஸாரிகளுடைய
பெருமை–(நானே ஈச்வரன் என்று அஹங்கரிப்பதால் வருகிற) மேன்மையானது
சிறிதின் கண் எய்தும்–(தமக்குப் பழமையாயுள்ள) தாழ்விலேயே கொண்டு சேர்ப்பிக்கும்;
அறியாரும்–அவிவேகிகளும்
(தங்களை ஸர்வஜ்ஞராக நினைத்திருந்தார்களாகிலும்)
தாம் அறியார் ஆவர்–(நன்மை தீமைகளைத்) தாங்கள் அறியாதவர்களாகவே ஒழிந்திடுவர்;
என் நெஞ்சே–என் மனமே!.
அறியாமை–பிறர் அறியாதபடி
மண் கொண்டு–(மாவலியிடத்தில்) பூமியைப் பெற்றவனாயும்
மண் உண்டு–இந்தப் பூமியை (ப்ரளயத்திலே)திருவயிற்றில் வைத்தவனாயும்
மண் உமிழ்ந்த–(பிறகு) அந்தப்பூமியை வெளிப்படுத்தினவனாயுமிருக்கிற
மாயன் என்று–ஆச்சர்யகரனான எம் பெருமான் என்று
எண் கொண்டு–இடைவிடாது கருதி
இரு–(அவனைப்பற்றின நமக்கு ஒரு குறை இல்லையென்று) நிர்ப்பரனாக இருப்பாயாக.

சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும் = உலகத்தில், இயற்கையாகச் சிறிதேனும் மேன்மையுடையவர்களாயிருந்தால் அவர்கள அதிகப்படியாக மேன்மையை ஏறிட்டுக்கொண்டாலும் ஒருவாறு ஏற்கும்; சிறிதும் மேன்மையற்றவர்கள் ‘நாமே பெரியோம்; நம்மிற் பெரியாரில்லை’ என்று மார்பு நெறித்தால் அந்த அஹங்காரமானது அவர்களுடைய சிறுமையை நன்கு ஸ்தாபித்துவிடும். ஆகையாலே அற்ப தேவைகளான பிரமன் முதலியோரைப் பெருந்தலைமை யுடையவராக மதிப்பது நம்மைத் தாழ்ந்த நிலைமையிற் சேர்ப்பிக்கு மென்றவாறுமாம். எய்தும் – எய்துவிக்கும்; பிறவினையில் வந்த தன்வினை. இவ்வாறு வருவதனை வடநூலார் ‘அந்தர்ப்பாவிதணிச்’ என்பர்.

அறியாரும் தாமறியாராவார் = ஒன்றுந் தெரியாத மூடர்கள் எல்லாமறிந்தவர்கள் போலப் பாவித்திருந்தார்களாகிலும், அப்படிப்பட்டவர்கள் நன்மைகளைத் தாங்களுமறியார்கள்; பிறர் போதித்தாலும் கேட்டு உணரமாட்டார்கள்; ஆகவிப்படி சிறியாரும் அறியாரும் மலிந்து கிடக்கிற இந்நிலத்திலே, நெஞ்சே! நீ அவர்களின் வகுப்பில் சேராமல் பகவத் விஷயத்தையே சிந்தித்திரு – என்கிறார் பின்னடிகளால்.

அறியாமை = எதிர்மறை வினையெச்சம்.
‘திருமால்தான் இப்படி வாமந வேஷங்கொண்டு யாசகனாய் வந்தா’ னென்று பிறர் அறியாத வண்ணம் என்றபடி.

————————————————————————–

கீழ்ப்பாட்டிலருளிச் செய்தபடி எம்பெருமானிடத்து அந்வயிப்பதற்குப் பாங்கல்லாத பிறவிகள் வீண் என்கிறார்.
எம்பெருமான் ஆத்மாக்களுக்குப் பல ஜன்மங்களை யுண்டாக்குவது ஒரு ஜன்மததிலில்லாவிட்டாலும்
ஒரு ஜன்மத்திலாவது இவை நம்மை ஆச்ரயித்து ஈடேறவேணுமென்னும் விருப்பத்தினாலேயே
இந்த விருப்பம் நிறைவேறாவிடில் ஆத்மாக்களுக்கு நேர்கின்ற பிறவிகளெல்லாம் வியர்த்தமே யென்க.

இரும் தண் கமலத்து இரு மலரின் உள்ளே
திருந்து திசை மகனைத் தந்தாய் -பொருந்திய நின்
பாதங்கள் ஏத்திப் பணியாவேல் பல் பிறப்பும்
ஏதங்கள் எல்லாம் எமக்கு—-37-

பதவுரை

இரு–பெரிய
தண்–குளிர்ந்த
கமலத்து–திருநாபிக் கமலத்தின்
இரு மலரின் உள்ளே–பெருமை பொருந்திய பூவில்
திருந்து–ஸமர்த்தனான
திசைமுகனை–நான்முகக் கடவுளை
தந்தாய்–படைத்தருளின பெருமானே!
பொருந்திய–ஸர்வ லோக சரண்யனாகி எல்லாரோடும் பொருந்தி யிருக்கிற
நின்–உன்னுடைய
பாதங்கள்–திருவடிகளை
ஏத்தி–வாயாரத் துதித்து
பணியா ஏல்–வணங்கித் தொழுவதிற்கு உறுப்பாகா விட்டால்
எமக்கு–எங்கட்டு
பல் பிறப்பும் எல்லாம்–பலவகையாகப் பிறக்கின்ற பிறவிகளெல்லாம்
ஏதங்கள்–பயனற்றவையே யாம்

பின்னடிகளுக்கு வேறு வகையாகவுங் கருத்துரைக்கலாம்; எனக்கு நேர்ந்த பல பிறவிகளும் உன் நினைவின்படி
உன்னை ஆச்ரயிப்பதற்கு உறுப்பாகவேணும். அங்ஙனம் ஆகாவிடில், உலகத்திலே பிறக்கின்ற உயிர்களின்
துயரமெல்லாம் என்னொருவனுக்கு உண்டாகும் – என்று இக்கருத்தில், ஏதங்கள் – துக்கங்கள் என்கை.

முன்னடிகளில், ‘ நான்முகனை உந்திக்கமலத்தில் தோற்றுவித்தவனே!’ என விளித்தது –
முமுக்ஷûக்கள் சரணம் பற்றுதற்கு உரியவனே! என்றபடி; இப்பொருள் எங்ஙனே கிடைக்குமெனில்;
“யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்… முமுக்ஷûர்வை சரணமஹம் ப்ரபத்யே”
(முதலில் பிரமனைப் படைப்பவன்யாவனோ அப்பெருமானை முமுக்ஷுவாகிய நான் சரணம் புகுகின்றேன்)
என்பதாக உபநிஷத்தில் ஓதியிருப்பதுகொண்டு இப்பொருள் கிடைக்குமென்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்.

திருத்து திசைமுகன் = ஸ்ருஷ்டி செய்யவேண்டும் விதத்தை ஒருமுறை சொல்லிக்கொடுத்துவிட்டால்
அதில் அடிக்கடி ஸந்தேகங் கொண்டிராமல் புத்தி சாதுர்யத்தாலே முற்றும் நிர்வஹிக்கவல்ல நான்முகன்.

————————————————————————–

உலகத்தில் தனவான்களென்று பேர் படைத்துள்ள பலர் ‘நமக்கு ஏராளமான செல்வமிருக்கும்போது என்ன குறை-
இதுவே நமக்கு ஆபத்பந்து’ என்றெண்ணி எம்பெருமானை நெஞ்சிலும் நினையாதே பணத்தையே தொட்டுத் தொட்டுப்
பார்த்துக் கொண்டு காலங்கழிப்பதுண்டே; அன்னவர்களுடைய நெஞ்சிலே உறுத்தும்படி இப்பாசுர மருளிச்செய்கிறார்.
‘ஒரு நாயகமாய் ஓட வுலகுடனாண்டவர், கருநாய் கவர்ந்த காலர் சிதைகியபானையர் பெருநாடுகாண
இம்மையிதே பிச்சைதாங் கொள்வர்” என்று தொடங்கிப் பல பாசுரங்களிலே நம்மாழ்வாரருளிச் செய்த
செல்வ நிலையாமையை இவர் ஓரடியால் சுருங்க வருளிச் செய்தனரென்க.

எமக்கு என்று இரு நிதியம் ஏமாந்து இராதே
தமக்கென்றும் சார்வம் அறிந்து -நமக்கென்றும்
மாதவனே என்னும் மனம் படைத்தது மற்றவன் பேர்
ஓதுவதே நாவினால் ஓத்து—38-

பதவுரை

இரு நிதியம்–(இப்பொருளை எப்போது நாம் கொள்ளையடிக்கப் போகிறோம்’ என்று
அயலார் எதிர்பார்த்திருப்பதற்குக் காரணமான) பெருஞ்செல்வத்தை
எமக்கு என்று–தங்களுடையதாக நினைத்து
ஏமாந்து இராதே–மனச் செருக்குக் கொண்டிராமல்
தமக்கு என்றும் சார்வம் அறிந்து–தங்களுக்கு எப்போதும் ரக்ஷகமாயிருக்கக் கூடிய உபாயத்தை யறிந்து
நமக்கு என்றும் மாதவனே என்னும் மனம் படைத்து–‘நமக்கு எக்காலத்திலும் எம்பெருமானே சரணம்’ என்று
துணிந்திருக்கும் நெஞ்சையுடையராய்
மற்று–அதற்குப் பின்பு
அவன் பேர்–அத்திருமாலினது திருநாமங்களை
ஓதுவதே–ஸங்கீர்த்தநம் பண்ணுவதே
நாவினால் ஒத்து–நாவுக்கு ஓதுவதற்கு உரிய விஷயம்.

இடத்தைவிட்டுச் செல்வதையே இயல்வாகவுடையதாதல் பற்றியே ஸம்பத்துக்குச் செல்வமென்று பெயரிடப்பட்டதாதலால்
இப்படி நிலையற்றதான செல்வத்தை நம்பிச் செருக்குக் கொண்டிராதே ‘எப்போதும் ஸ்திரமாயிருக்கக்கூடிய பற்றுக்கோடு எது?’
என்று ஆராய்ந்து பார்த்து ‘திருமகள் கொழுநனான எம்பெருமானே நமக்கு என்றும் சார்வம்’ என்கிற
தெளிவுபெற்று அவனுடைய திருநாமங்களை ஓதுவதே உறும் – என்றாராயிற்று.

நிதியம் = ‘நிதி’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்று வந்துள்ளது.
இரு நிதி – பெருத்தநிதி. ஏமாத்தல் – களித்தல். சார்வம் – ‘சார்வு’ என்னுஞ் சொல் ‘அம்’ சாரியை பெற்றது.

————————————————————————–

ஸகல வேத வேதாந்த விழுப்பொருளை உங்கட்குச் சுருக்கமாகச் சொல்லுகின்றேன் கேளுங்கள்;
சக்தி யுண்டாகில் வேதங்களை அதிகரித்து அவற்றின் மூலமாக ஸ்ரீமந்நாராயணனது திருநாமங்களை ஸங்கீர்த்தனம் பண்ணுங்கள்
“வேதாக்ஷராணி யாவந்தி படிதாநி த்விஜாதிபி: தாவந்தி ஹரிநாமாநி கீர்த்திதாநி ந ஸம்சய:”
(அதாவது – அந்தணர்களால் வேதத்தின் எத்தனை அக்ஷரங்கள் ஓதப்படுகின்றனவோ அத்தனையும்
பகவந் நாமங்களே ஓதப்பட்டனவவ் என்றாற்போலே வேதாக்ஷரங்களைக் கொண்டே ஹரிநாம ஸங்கீர்த்தநம் பண்ணுங்கள் என்றவாறு)
அதில் சக்தியும் அதிகாரமுமில்லா தவர்களா யிருப்பின் ‘கேசவா!, கோவிந்தா!, மாதவா!, மதுஸூதநா!’
என்றாவது சொல்லிக் கொண்டிருங்கள். எவ்வகையினாலாவது எம்பெருமானது திருநாமங்களை
ஸங்கீர்த்தநம் பண்ணவேணுமென்பதே ஸகல்வேத தாத்பர்யமாகும்.

ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–

பதவுரை

ஏழைகாள்–‘கண்ட கண்ட தேவதைகளின் கால்களிலெல்லாம் விழுகிற அறிவு கேடர்களே!,
ஓத்து அதனை–வேதமோதுவதாகிற காரியத்தை(ச் செய்ய)
வல்லீர் ஏல்–ஸமர்த்தர்களா யிருப்பீர்களாகில்
நன்று–அப்படியே வேதமோதுவது நல்லது;
அதனை மாட்டீர் ஏல்–அது செய்ய சக்தி யற்றவர்களாகில்
மாதவன் பேர்–திருமாலின் திருநாமங்களை
சொல்லுவதே–உச்சரிப்பதே
ஓத்தின் சுருக்கு–ஸகல வேதங்களின் ஸாரமாகும்;
ஓத்தின் பொருள் முடிவும் இத்தனையே–வேதத்தினுடைய அர்த்தங்களில் நிஷ்கர்ஷிக்கப்படடதும் இவ்வளவே; (ஆகையாலே)
உத்தமன்–புருஷோத்தமனான எம்பெருமானுடைய
பேர்–திருநாமங்களைக் கொண்டு
ஏத்தும் திறம்–(அவனைத்) துதிக்கும் வகையை
அறிமின்–தெரிந்து கொள்ளுங்கள்.

“த்யாயந் க்ருதே யஜந் யஜ்ஞை: த்ரேதாயாம் த்வாபரே ர்ச்சயந் யதர்ப்நோதி ததாப்நோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்”
கிருதயுகத்தில் தியானஞ் செய்வதாலும் த்ரேதாயுகத்தில் வேள்விகள் செய்வதாலும்,
த்வாபரயுகத்தில் அர்ச்சிப்பதாலும் எவ்விதமான பேற்றைப் பெறுகிறானோ, அவ்விதமான பேற்றை கலியுகத்தில்
திருநாம ஸங்கீர்த்நத்தினால் பெறுகிறான் என்று சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டுள்ளது காண்க:
இதுபற்றியே “ஓத்தின் பொருள்முடிவு மித்தனையே” என்றும்
“மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின்சுருக்கு” என்றும் இதிற் சொல்லப்பட்டது.

வேதத்தில், இந்திரன் சந்திரன் வருணன் என்றிப்படி பலப்பல நாமங்கள் வந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு
அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணன் வரையிற் சென்று அர்த்தஜ்ஞாந முண்டாக வேணுமென்பது வேதாந்திகளின் கொள்கை.
ஆகவே “வேதை: ச ஸர்வைரஹமேவ வேத்ய:” ஸகல வேதங்களாலும் அறியப்படுபவன் நானே” என்று
அப்பெருமானே சோதி வாய்திறந்து அருளிச் செய்திருப்பதற் கிணங்க வேதங்களிலுள்ள ஸகல தேவதா நாமங்களையும்
பகவத்பரமாக நிர்வஹித்து அநுஸந்திப்பதே வேததாத்பர்ய ஸாரமாகும்.
இதற்கு சாஸ்த்ரஜ்ஞாநம் விசேஷமாக வேண்டியிருப்பதால் அவ்வளவுக்கு அதிகாரிகளல்லாதவர்கள் திருமகள்நாதனை
ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிற ‘மாதவன்’ முதலிய திருநாமங்களைக் கொண்டே ஏத்தலாம் என்பதும் இப்பாசரத்தின் கருத்தாகும்.

————————————————————————–

சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷய போகங்ள் செய்வதனால்
சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்;
ஆனால் நீங்கள் என்ன நினைக்கலாமென்றால்,எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்?
போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ?
கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்து கொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும்
முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்;
“ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை: கண்டாவரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே” = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம்
முதலியவற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று
ஞானிகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள்: நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்றதென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை;
ஆதலால் சிலேஷ்மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுநனுடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள்.
நீங்கள் பற்றியிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவை யென்றால், பகவத் விஷயஜ்ஞாநம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமவை;
ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமே யன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.

சுருக்காக வாங்கிச் சுலாவி நின்று ஐயார்
நெருக்கா முன் நீர் நினைமின் கண்டீர் -திருப் பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும் அறியாத
போகத்தால் இல்லை பொருள்—-40–

பதவுரை

ஐயார்–கோழையானது
சுருக்காக வாங்கி–சரீரத்தைச் சுருங்க வலித்து
சுலாவி நின்று–உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று
நெருக்காமுன்–(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே,
திரு பொலிந்த ஆகத்தான் பாதம்–பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை
நீர் நினைமின்–நீங்கள் சிந்தியுங்கோள்:
அறிந்தும்–பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும்
அறியாத–அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல
போகத்தால்–சப்தாதி விஷயங்களால்
பொருள் இல்லை–ஒரு ப்ரயோஜனமுமில்லை.

ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப் பெயர்; ‘ஆர்’ விகுதி – இழிவு சிறப்பு. கலாவுதல் -சூழ்ந்து கொள்ளுதல்.

அறிந்துமறியாத போகத்தால் = விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை.
அன்றியே; ‘விஷயபோகம் பொல்லாதது’ என்று தெரிந்துகொண்டாலும் அந்த அறிவின் பலனாக அதை விட்டுத் தொலைக்கணுமே;
அப்படி விடமுடியாத போகம் – என்றும்பொருள் கூறுவர்.
இப்பொருளில், ‘அறியாத’ என்றது – அறிவின் காரியமான விடுகையைப் பெறமாட்டாத என்றபடி.
மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே.

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ பூதத் ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading