03_01. “ஆசார்யரே! தாங்கள் பூமி, கடல், ஸூர்யன் முதலியவற்றின் அமைப்பையும், தேவ, ருஷி, நான்கு வர்ணங்கள், த்ருவ சரித்ரம் இவைகளையும் விவரமாகச் சொன்னீர்கள். இதைப்போலவே மன்வந்த்ரங்கள், அவற்றின் அதிகாரிகள், தேவர்கள் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும்” என்று மைத்ரேயர் கேட்கிறார். ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்ட ப்ரஹ்மாவின் பகல் பொழுதை பதினான்கு மன்வந்த்ரங்களாகப் பிரித்தால் எழுபத்தொரு சதுர்யுகங்களும், இன்னும் கொஞ்ச காலமும் கிடைக்கும். இதுவரை ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷுஷ என ஆறு மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன. இப்போது ஸூர்ய புத்ரனான வைவஸ்வதனின் மன்வந்த்ரம் நடந்து கொண்டிருக்கிறது.
கல்பத்தின் ஆதியிலிருந்த ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் விச்வபுக் என்பவன் இந்த்ரன். ப்ரியவ்ரதன், உத்தான பாதன் முதலானோர் ஸ்வாயம்புவனின் புத்ரர்கள். யாமர் முதலான பன்னிருவர் தேவர்கள். மரீசி முதலானோர் ரிஷிகள். இவையெல்லாம் முதல் அம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதான ஸ்வாரோசிஷத்தில் விபஸ்சித் என்பவன் இந்த்ரன். பாராவாரர், துஷிதர் என்று பன்னிரு தேவதைகள். ஸப்தரிஷிகள் ஊர்ஜஸ்தம்பன், ப்ராணன், தத்தன், அக்னி, ரிஷபன், நிஸ்வரன், சார்வரீவான் என்பவர்கள். சைத்ரன், கிம்புருஷன் முதலானோர் மனுவின் புதல்வர்கள். மூன்றாவதான் உத்தமனுக்கு அஜன், பரசுதிவ்யன் முதலானோர் புத்ரர்கள். ஸுசாந்தி இந்த்ரன். ஸுதாமாக்கள், ஸத்யர்கள், சிவர்கள், ப்ரதர்தனர்கள், வசவர்த்திகள் என்று பன்னிருவர் அடங்கிய ஐந்து கணங்கள். ஊர்ஜைக்கும், வஸிஷ்டருக்கும் பிறந்த ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.
நான்காவது மனுவான தாமஸனுக்கு ராஜாக்களான நரன், க்யாதி, தேது, ரூபன், ஜானு, ஜங்கன் முதலானோர் பிள்ளைகள். இந்த மன்வந்த்ரத்தில் சிபி சக்ரவர்த்தி நூறு அச்வமேதங்களைச் செய்து இந்த்ரனானான். இருபத்தேழு பேர் கொண்ட ஹரிகள், ஸத்யர்கள், ஸுதீக்கள் என்ற கணங்கள். ஜ்யோதிர்தாமா, ப்ருது, காவ்யன், சைத்ரன், அக்னி, தனகன், பீவரன் என்ற எழுவர் ஸப்தரிஷிகள். பலபந்து, ஸுஸம்பாவ்யன், ஸத்யகன் முதலான புதல்வர்களைப் பெற்ற ரைவதன் ஐந்தாவது மனு. இவனின் மன்வந்த்ரத்தில் விபு என்பவன் இந்த்ரன். பதினான்கு பேர்களைக் கொண்ட அமிதாபர்கள், பூதநயர்கள், வைகுண்டர்கள், ஸுஸமேதஸ்ஸுக்கள் என்ற தேவ கணங்கள். ஹிரண்யரோமன், வேதஸ்ரீ, ஊர்த்வபாஹு, அபரன், வேதபாஹு, ஸுதாமா, பர்ஜன்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.
இந்த ஐந்து மனுக்களில் ஸ்வாயம்புவன், உத்தமன், தாமஸன், ரைவதன் ஆகியோர் ப்ரியவ்ரதனின் தவத்தாலும், மஹாவிஷ்ணுவின் அருளாலும் அவன் வம்சத்தில் பிறந்தவர்களே. இனி ஆறாவது மன்வந்த்ரம். ஊரு, பூரு, சதத்யும்னன் முதலான பிள்ளைகளைப் பெற்ற சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் மனோஜவன் என்பவன் தேவேந்த்ரன். எட்டு பேர்களைக் கொண்ட ஆப்யர், ப்ரஸூதர், பவ்யர், ப்ருதுகர், லேகர் என்ற ஐந்து கணங்கள். ஸுமேதஸ், விரஜஸ், ஹவிஷ்மான், உத்தமன், மது, அதிநாமா, ஸஹிஷ்ணு ஆகியோர் ஸப்தரிஷிகள்.
விவஸ்வான் எனும் ஸூர்யனின் புதல்வனான ச்ராத்த தேவனே இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏழாவது மன்வந்த்ரத்திற்கு அதிபதி. இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், க்ருஷன், வ்ருஷத்ரன் ஆகிய ஒன்பது பேர் இவனின் புதல்வர்கள். ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள் முதலானோர் தேவர்கள். புரந்தரன் தேவேந்த்ரன். வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விச்வாமித்ரர், பரத்வாஜர் ஆகியோர் ஸப்தரிஷிகள். முதலாவது ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ருசி என்பவரிடம், ஆகூதியினிடம் விஷ்ணு மானஸ புத்ரனாய் யக்ஞம் என்ற பெயரில் பிறந்து மனு முதலான அனைவரையும் காத்தார். அவரே இரண்டாவது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் துஷிதை என்பவளிடம் அஜிதன் என்ற பெயருடன் துஷிதர் என்ற தேவர்களுடன் பிறந்தார்.
மூன்றாவதான உத்தம மன்வந்த்ரத்தில் ஸத்யையிடம் ஸத்யன் என்ற பெயருடன் ஸத்யர்கள் என்ற தேவர்களுடன் பிறந்தார். தாமஸ மன்வந்த்ரத்தில் ஹர்யையிடம் ஹரி என்ற பெயருடன் ஹரி என்ற தேவர்களுடனும், ரைவதத்தில் ஸம்பூதி என்பவளிடம் மானஸபுத்ரனாய் தேவவரன் எனும் பெயருடன் மானஸர் என்ற தேவர்களுடனும், சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் விகுண்டையிடம் வைகுண்டன் என்ற பெயருடன் வைகுண்டர் என்ற தேவர்களுடனும் பிறந்தார். இவரே இந்த ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் காச்யப ப்ரஜாபதிக்கு அதிதியினிடம் வாமனனாய் அவதரித்தார். மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அவனை வென்று, அனுக்ரஹித்தார். எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு சக்தியே தேவதைகளாக, மனுக்களாக, ஸப்தரிஷிகளாக, மனு புத்ரர்களாக, தேவராஜனாக அனுக்ரஹிக்கிறது. இவர்களனைவரும் விஷ்ணுவின் சொத்துக்கள் போன்றவர்.
03_02. மேல்வரும் மன்வந்த்ரங்களின் வரலாறு. ஸூர்யனுக்கும், விச்வகர்மாவின் புதல்வி ஸம்ஞ்ஞா என்பவளுக்கும் பிறந்தவர்களே ச்ராத்ததேவன் (தற்போதைய மனு), யமன், யமுனா நதி ஆகியோர். ஒரு சமயம் கணவனின் தேஜஸ்ஸைத் தாங்க முடியாத இவள் அவனுக்கு பயந்தும், அவனுக்குப் பணிவிடை செய்யவும் தன் நிழலைப் போன்ற சாயா என்பவளைப் படைத்து விட்டுக் கானகம் சென்று தவமியற்றத் தொடங்கி விட்டாள். சாயாவிற்கும், ஸூர்யனுக்கும் சனி பகவானும், இன்னொரு மனுவும், தபதி என்ற பெண்ணும் தோன்றினர்.
ஒரு சமயம் யமன் விளையாட்டாகத் தன் தாயென நினைத்து சாயாவை உதைக்க முற்பட்டான். அவள் கோபித்து உன் கால் அறுந்து விழ வேண்டும் என சபித்து விட்டாள். இதைக் கேட்டதும் ஸூர்யனும், யமனும் ஸந்தேஹமடைந்தார்கள். ஸூர்யன் நீ யமனுடைய உண்மைத் தாயில்லை. வேறொருத்தி. நீ யார் என்பதைச் சொல் என்ற கேட்க, சாயா அனைத்தையும் கூறிவிட்டாள். உடனே தன் யோகத்தால் உண்மையான ஸம்ஞ்ஞா உத்தர குரு க்ஷேத்ரத்தில் குதிரையுருவில் தவம் செய்வதையறிந்த ஸூர்யன் தானும் தன் தேஜஸ்ஸைக் குறைத்து ஆண் குதிரை வடிவில் அவளைத் தேடிச் சென்று சேர்ந்தான். அச்வினீ தேவர்களைப் பெற்றான். ரேதஸ்ஸின் கடைசிப் பகுதியினால் ரேவந்தன் என்பவனையும் பெற்றான். மீண்டும் ஸம்ஞ்ஞாவைத் தன்னிடம் அழைத்துச் சென்றான்.
தன் பெண் ஸம்ஞ்ஞா ஸூர்யனின் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் அவதிப்படுவதையறிந்த விச்வகர்மா கோபம் கொண்டு ஸூர்யனின் தேஜஸ்ஸைக் குறைக்க, அவனைப் (ஸூர்ய மண்டலத்தை)பிடித்து சாணையில் தேய்த்தான். அப்போது ஸூர்யனின் தேஜஸ்ஸில் எட்டில் ஒரு பங்கு பூமியில் மிகுந்த ஒளியுடன் தெறித்து விழுந்தது. அதைக் கொண்டு சக்ராயுதம் செய்து விஷ்ணுவிற்குக் கொடுத்தான் விச்வகர்மா. சிவனுக்கும் த்ரிசூலம் செய்து கொடுத்தான். குபேரனுக்குப் புஷ்பக விமானத்தையும், முருகனுக்கு வேலையும், மற்ற தேவர்களுக்கும் இப்படி ஆயுதங்களையும் செய்து கொடுத்தான்.
இப்படி ஸூர்யனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவனே எட்டாவது மன்வந்த்ரத்தின் அதிபதியான ஸாவர்ணி மனு. இவன் ச்ராத்த தேவனை ஒத்திருந்ததால் ஸாவர்ணி என்றழைக்கப்பட்டான். இந்த எட்டாவதான ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் பாதாள லோகத்தில் வஸித்துவரும் மஹாபலி இந்த்ரன். விரஜஸ், சார்வரீவான், நிர்மோகன் முதலானோர் ஸாவர்ணிக்கு மகன்களாகி அரசாள்வர். இருபது பேர் உடைய ஸுதபர், அமிதாபர், முக்யர் என்பன தேவ கணங்கள். தீப்திமான், காலவர், ராமன், க்ருபர், அச்வத்தாமா, என் குமாரன் (வ்யாஸர்), ரிஷ்யச்ருங்கர் ஆகியோர் ஸப்தரிஷிகள். ஒன்பதாவதான தக்ஷஸாவர்ணி மனுவின் புதல்வர்கள் பஞ்சஹஸ்தன், நிராமயன், ப்ருதுச்ரவன் முதலானோர். அத்புதன் இந்த்ரன். பன்னிரண்டு பேர் கொண்ட வாரர், மரீசிகர்ப்பர், ஸுதர்மாக்கள் ஆகியோர் தேவ கணங்கள். ஸவனன், த்யுதிமான், ஹவ்யன், வஸு, மேதாதிதி, ஜ்யோதிஷ்மான், ஸத்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.
ஸுக்ஷேத்ரன், உத்தமௌஜஸ், பூரிஷேணன் முதலான பத்து அரசர்களைப் பிள்ளைகளைப் பெறும் ப்ரஹ்மஸாவர்ணி பத்தாவது மனு. அப்போது ஸுதாமாக்கள், வீருதர்கள் என்ற நூறு பேர் கொண்ட தேவ கணத்திற்கு சாந்தி என்பவன் இந்த்ரன். ஹவிஷ்மான், ஸுக்ருதன், ஸத்யன், தபோமூர்த்தி, நாபாகன், ப்ரதிமௌஜஸ், ஸத்யகேது ஆகியோர் ஸப்தரிஷிகள். அடுத்ததான பதினோறாவது மன்வந்த்ரத்திற்கு தர்மஸாவர்ணிகர் மனு. ஸர்வத்ரகன், ஸ்வதர்மா, தேவாநீகன் முதலான அரசர்கள் அவனுடைய பிள்ளைகள். காமகமர், நிர்வாணர், ருசிகள் என்ற முப்பது பேர் கொண்ட தேவ கணங்களுக்கு வ்ருஷா என்பவன் இந்த்ரன். நிச்சரன், அக்னிதேஜஸ், வபுஷ்மான், க்ருணி, ஆருணி, ஹவிஷ்மான், அனகன் ஸப்தரிஷிகள்.
ருத்ரபுத்ரன் ருத்ரஸாவர்ணி அடுத்ததான பன்னிரண்டாவது மன்வந்த்ரத்தில் மனு. தேவவான், உபதேவன், தேவச்ரேஷ்டன் முதலானோர் இவன் புதல்வர்கள். ருதுதாமா இந்த்ரன். ஹரிதர், ரோஹிதர், ஸுமனஸ்ஸுக்கள், ஸுகர்மர், ஸுராபர் என்ற பத்து பேர்களைக் கொண்ட தேவ கணங்கள். தபஸ்வீ, ஸுதபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதனன் என்பவர் ஸப்தரிஷிகள். ரௌச்யன் பதிமூன்றாவது மன்வந்த்ரத்தில் மனு. ஸுத்ராமர், ஸுதர்மர், ஸுகர்மர் என்று முப்பத்து மூன்று பேரைக் கொண்ட தேவ கணங்கள். திவஸ்பதி இந்த்ரன். நிர்மோகன், தத்வதர்சி, நிஷ்ப்ரகம்ப்யன், ந்ருத்ஸுகன், த்ருதிமான், அவ்யயன், ஸுதபஸ் ஸப்தரிஷிகள். சித்ரஸேனன், விசித்ரன் முதலானோர் மனுவின் பிள்ளைகள்.
பதினான்காவதான பௌம மனுவிற்கு உரு, கம்பீரபுத்தி முதலானோர் புத்ரர்கள். அப்போது சுசி என்பவன் சாக்ஷுஷர், பவித்ரர், கனிஷ்டர், ப்ராஜிதர், வாசாவ்ருத்தர் என்ற ஐந்து தேவ கணங்களுக்கு இந்த்ரன். அக்னிபாஹு, சுசி, சுக்ரன், மாகதன், ஆக்னீத்ரன், யுக்தன், ததாஜிதன் ஆகியோர் ஸப்தரிஷிகள். இப்படி பதினான்கு மன்வந்த்ரங்களின் அதிகாரிகளும் அந்தந்த மன்வந்த்ரங்களில் ஒரே ஸமயத்தில் அதிகாரங்களைப் பெற்று, அதிகாரங்களை இழக்கவும் செய்கின்றனர். இந்த பதினான்கு மன்வந்த்ரங்களும் ப்ரஹ்மாவின் பகல் பொழுது.
நான்கு யுகங்களின் முடிவில் வேதம் அத்யயனம் இன்றி அழிகின்றது. அப்போது ஸப்தரிஷிகள் ஸ்வர்கத்திலிருந்து அவதரித்து மீண்டும் அவைகளை அத்யயனம் பண்ணும்படி செய்கின்றனர். மனுக்கள் ஒவ்வொரு யுகத்தின் போது ஸ்வாயம்புவர், தக்ஷர் முதலானோர் செய்த ஸ்ம்ருதிகளைச் செய்கின்றனர். தேவர்கள் மன்வந்த்ர இறுதி வரை யாக, ஹோமங்களில் கிடைக்கும் ஹவிர்பாகங்களைப் பெற்று வாழ்கிறார்கள். மனுவின் புத்ரர்களும், அவர்களின் வம்சங்களும் அரசாள்கிறார்கள். இப்படிப் பதினான்கு மன்வந்த்ரங்கள் (ஆயிரம் யுகங்கள்) கொண்ட ஒரு கல்பமும், அடுத்த இரவுப் பொழுதான மற்றொரு கல்பமும் கழிந்ததும் விஷ்ணு உலகை தன்னுதரத்துள் விழுங்கி, பாம்பின் மேல் ப்ரளய வெள்ளத்தில் யோக நித்ரை புரிகிறார். பின் மீண்டும் ஸ்ருஷ்டியை, ஸ்திதியையும் செய்கிறான்.
க்ருத யுகத்தில் அவரே கபிலர் முதலான முனிவர்களின் உருவில் ஞானோபதேசம் செய்கிறார். த்ரேதா யுகத்தில் சக்ரவர்த்திகளாக அவதரித்து துஷ்டர்களை சிக்ஷித்தும், சிஷ்டர்களை ரக்ஷித்தும் அருள்கிறார். த்வாபரத்தில் வேதவ்யாஸராய் அவதரித்து ஒன்றான வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் முதலான பல பிரிவுகளாகப் பிரித்து உலகைக் காக்கிறார். கலியின் இறுதியில் கல்கியாக அவதரித்து வேதங்களையும், வேத தர்மங்களையும் மீறும் துஷ்டர்களை நல்வழிப்படுத்துகிறான்.
03_03. மைத்ரேயர் “மஹரிஷி! இப்படி அனைத்திற்கும் ஆத்மாவாகவும், படைத்தும், காத்தும், தன்னிடத்திலேயே லயமடையச் செய்வது உயர்ந்த விஷ்ணு பகவானே, அவனைத் தவிர வேறெதும் இல்லை என்பதை அறிந்தேன். இதுவரை யார், யார் வ்யாஸர் என்பதையும், வேதங்களின் உட்பிரிவுகளையும் அருள வேண்டும் இனி” என்கிறார். “வேதத்தை வகுத்தல் (வேத வ்யாஸம்) என்ற பதவிப் பெயரே வ்யாஸர் என்பது. வேதம் அனேகமாயிரம் கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரம். அதை விரிவாகக் கூறுவது முடியாததொன்று. எனவே சுருக்கமாய்க் கூறுகிறேன். மிகப் பரந்திருக்கும் ஒரே வேதத்தைப் படித்து, மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவர்களின் உற்சாகமும், தவமும், ஆற்றலும், வாழ்நாளும் மிகவும் குறைவு. இவர்களுக்கு நன்மை செய்யவே ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் வ்யாஸரூபமாய் அவதரித்து ஒன்றான வேதத்தைப் பலவாகப் பிரிக்கிறான் பரமன்.
இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் இருபத்தெட்டு த்வாபர யுகங்களிலும் ஒவ்வொரு முறை வேதம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் த்வாபர யுகத்தில் ஸ்வயம்பூவான ப்ரஹ்மாவே வேதவ்யாஸராயிருந்தார். அதற்கு மேல் மனுவும், சுக்ராச்சார்யார், ப்ருஹஸ்பதி, ஸூர்யன், யமன், தேவேந்த்ரன், வஸிஷ்டர், ஸாரஸ்வதர், த்ருதாமா, த்ரிவ்ருஷா, பரத்வாஜர், அந்தரிக்ஷர், தர்மீ, த்ரையாருணி, தனஞ்ஜயன், க்ருதஞ்ஜயன், ஸஞ்ஜயன், பரத்வாஜர், கௌதமர், உத்தமர்(ஹர்யாத்மா), வேனன்(வாஜிச்ரவஸ்), ஸோமசுஷ்மாயணர்(த்ருணபிந்து), ப்ருகு வம்சத்து ருக்ஷர்(வால்மீகி), இருபத்தைந்தாவது த்வாபர யுகத்தில் என் பிதா(சக்தி), இருபத்தாறில் நான்(பராசரர்), இருபத்தேழில் ஜாதுகர்ணன், இந்த இருபத்தெட்டாவது த்வாபரத்தில் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் வேத வ்யாஸன். இனி வரப்போவது த்ரோணாசார்யாரின் குமாரன் அச்வத்தாமா. இவர்களே வேதத்தை நான்காகப் பிரித்தது.
ஓம் எனும் ப்ரணவம் நிலையானது, ஏகாக்ஷர ஸ்வரூபம். வேதம் பிரிந்தாலும் இது பிரியாதது. பூ:,புவ:, ஸுவ: என்ற மூன்று வ்யாஹ்ருதிகளும், ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்ற நான்கு வேதங்களும் இதிலேயே நிலைபெற்றிருப்பதால் இதுவே ப்ரஹ்மம். இதுவே ஜகத்காரணமாக வைத்து வணங்கத்தக்கது. ஜகத்தின் உற்பத்திக்கும், லயத்திற்கும் காரணமாகவும், மஹத் தத்வத்திற்கு மேம்பட்டதாகவும், அதைவிட ஸூக்ஷ்மமாகவும், ப்ரதானமாகவும் இருப்பது இது. இது அனாதி, எங்கும் நிறைந்தது, அழிவற்றது, உலகை மயக்கும் தமோ குணத்துக்கு இருப்பிடமானதிது. ஸத்வ குணத்தின் ப்ரகாசமானதிது. ரஜோ குணத்தால் புருஷார்த்தங்களையும் தருவதிது. மோக்ஷ ஸாதனம் இது. பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டுவதால் உபநிஷத்துகளில் அவ்யக்தம், அக்ஷரம் என்றெல்லாம் வழங்கப்படுவதிது. சுத்தமானது, வாஸுதேவனுக்கு ஸ்வரூபமானது. ஒன்றான, பலவான வேத ஸ்வரூபங்களாக இருப்பவனும் அவனே. ஸகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி அவன்” என வேதத்தின், ப்ரணவத்தின் பெருமையைக் கூறி அதை வணங்குகிறார் பராசரர்.
03_04. ஆதியில் ப்ரஹ்மாவினால் அத்யயனம் செய்யப்பட்ட வேதம் நான்கு பாதங்களுடன், அனேகமாயிரம் சாகைகளுடனிருந்தது. இந்த வேதத்தினால் தான் தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய, ப்ரஹ்ம என்ற பஞ்ச மஹா யக்ஞங்களும், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ண மாஸம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸோமம் என்ற ஐந்து யக்ஞங்களும், த்ரவ்யம், தேசம், பலம்,காலம், ஞானம், கர்மம், காரகம், ச்ரத்தா, அவஸ்தை(நிலைமை), ஆக்ருதி, நிஷ்டை என்ற யக்ஞ அவயவங்களும் உலகத்தில் பரவின. அப்படியிருந்த வேதத்தை என் புத்ரன், மஹாத்மா க்ருஷ்ண த்வைபாயனன் எப்படிப் பிரித்தானோ அப்படியே தான் நானும், மற்றவர்களும் செய்திருந்தோம்.
என் மகன் இத்தகைய சிறப்புறக் காரணம் அவன் நாராயணனின் அம்சமாதலால்தான். நாராயணனே என் மகன் என்றறிவாயாக. நாராயணனைத் தவிர வேறொருவன் இல்லை மஹாபாரதத்தைச் செய்ய. இதிலிருந்தே அவன் நாராயணனின் அம்சம் என்பது ஐயமின்றி விளங்கும். ஒவ்வொரு வேத சாகையையும் அத்யயனம் செய்ய ஏற்றவர்களை ஆராய்ந்து நியமித்தான் பேரறிவாளனான என் புதல்வன். ரிக் வேதத்தை பைலருக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும், ஸாமத்திற்கு ஜைமினிக்கும், அதர்வ வேதத்தை ஸுமந்துவுக்கும் பிரித்துக் கொடுத்தான். இதேபோல் இதிஹாஸ புராணங்களுக்கும். அவற்றை ப்ரசாரம் செய்பவர்களுக்கு ஆற்றல் அதிகம் வேண்டும். கேட்பவர் மனதில் நன்கு அர்த்தங்கள் பதியும்படி, நேரில் நடப்பது போல், அவர்களுக்கு மயிர் கூச்சல் ஏற்படுமாறு சொல்ல ரோமஹர்ஷணர் என்ற ஸூதரை ஏற்படுத்தினான். தேர்ந்தெடுத்த வ்யாஸனும் மஹா புத்திசாலி, மஹா முனிவர். ஸூதனும் அப்படியே மஹா புத்திசாலி, மஹா முனிவன்.
யாகத்தில் அத்வர்யு, உத்காதா, ஹோதா, ப்ரஹ்மா என்ற நால்வர் இருப்பர். இவர்களுடைய வேலைகளுக்கு சாதுர்ஹோத்ரம் என்று பெயர். இவையாவும் வேதத்தில் இருப்பதால் தான் ஒன்றாக இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். யஜுர்வேதம் அத்வர்யுவின் கார்யத்தையும், ரிக் வேதம் ஹோதாவின் கார்யத்தையும், ஸாம வேதம் உத்காதாவின் கார்யத்தையும், இந்த மூன்று வேதங்களிலும் ப்ரஹ்மாவின் கார்யத்தையும், அதர்வத்தில் அரசர்களுக்கு வேண்டிய சாந்தி, புஷ்டி, அபிசார புரோஹிதம் முதலானவைகளையும் ஏற்படுத்தினார். இப்படி நான்காகப் பிரிக்கப் பட்ட வேதமரமே பின்பு காடாக மாறியது.
ரிக் வேதத்தைப் பெற்ற பைலர் அதை இரு ஸம்ஹிதைகளாகப் பிரித்து இந்த்ரப்ரமிதிக்கு ஒன்றையும், பாஷ்கலருக்கு மற்றொன்றையும் தந்தார். பாஷ்கலர் தன்னுடையதை நான்காக்கி போதி, அக்னிமாடகர், யாக்ஞவல்க்யர், பராசரர் (இவர் வேறு) என்ற நால்வருக்களித்தார். இந்த்ரப்ரமிதி தன்னுடையதை மாண்டுகேயர் என்ற தன் புதல்வனுக்கு ஓதுவித்தார். இப்படி குரு, சிஷ்ய பரம்பரையில் வந்து கொண்டிருந்த இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை வேதமித்ரன் என்ற சாகல்யர் அத்யயனம் செய்து, பின் அதை ஐந்தாகப் பிரித்து முத்கலன், கோமுகன், வாத்ஸ்யன், சாலீயன், சைசிரன் என்ற தன் ஐந்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த சாகபூர்ணர் இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை மூன்றாகப் பிரித்து, வேதாங்கமான ந்ருக்தத்தையும் செய்து முறையே அவற்றை க்ரௌஞ்சன், வைதாளிகி, பலாகன், ந்ருக்தன் என்பவர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த இன்னொருவர் பாஷ்கலி என்பவர். அவர் அதையே மூன்றாக்கி காலாயனி, கார்க்யர், ஜபன் என்ற தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இப்படியே ரிக் வேதம் சாகை, ப்ரதிசாகை, அனுசாகை என பலவாறு பிரிந்தது.
03_05. யஜுர் வேதமும் இப்படி வைசம்பாயனரால் இருபத்தேழு பிரிவுகளாக்கப்பட்டு அவர் சிஷ்யர் பலருக்கும் ஓதுவிக்கப்பட்டது. ஒரு சமயம் பல மஹரிஷிகள் ஒன்று கூடி ஸபை ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு எல்லா மஹரிஷிகளும் வரவேண்டும் என்றும், அப்படி வராதவர்களுக்கு ஏழு நாட்களுக்குள் ப்ரஹ்மஹத்தி தோஷம் ஏற்படும் என்றும் முன்னதாக விதித்தனர். அந்த நாள் வந்த போது வைசம்பாயனர் மட்டும் வரவில்லை. தன் ஸஹோதரியின் ஆண் குழந்தை வழியில் இருப்பதை அறியாமல் அதை இடறிவிட அதுவும் உடனே இறந்து விட்டது. வைசம்பாயனருக்கும் இதைக் காரணமாகக் கொண்டு ப்ரஹ்மஹத்தி பற்றிக் கொண்டது.
அவர் உடனே தன் சிஷ்யர்களை அழைத்து நான் தெரியாமல் தான் இதைச் செய்து விட்டேன். எனினும் தெரிந்தே செய்தால் வரும் ப்ரஹ்மஹத்யா தோஷத்திற்கான ப்ராயச்சித்தத்தை அறிந்து, அதை உடனே அனுஷ்டித்து என்னைக் காப்பாற்றுங்கள் என்றார். ப்ரஹ்மராதனின் புத்ரர் யாக்ஞவல்க்யர் என்பவரும் வைசம்பாயனரின் ஒரு சிஷ்யர். தர்மங்களனைத்தையுமறிந்தவர். குரு சிஷ்ரூஷையில் பற்றுள்ளவர். அவர் ஆர்வத்தால் “இதற்கு எதற்கு அனைத்து சிஷ்யர்களும். நான் ஒருவனே போதுமே இதைத் தாங்கவும், போக்கவும். அவர்களுக்கு இதைத் தாங்க ஆற்றலும், தவமும் போதாதே” என்று கேட்டுக் கொண்டார். குருவின் மேலுள்ள பக்தி மேலீட்டால் இப்படிக் கூறிய யாக்ஞவல்க்யரை வைசம்பாயனர் கோபித்துக் கொண்டார்.
“நீ மற்ற ப்ராஹ்மணர்களை அல்ப சக்தியுள்ளவர்கள் என்றாய். இப்படி ப்ராஹ்மணர்களை அவமதிக்கும் சிஷ்யன் எனக்கு வேண்டாம். நீ என்னிடமிருந்து கற்றவை அனைத்தையும் உடனே கக்கிவிடு” என்று கூறி விட்டார். யாக்ஞவல்க்யர் வருத்தமடைந்தாலும் விஷயத்தைப் புரிந்து கொள்ளாமல், கோபித்துக் கொள்ளும் இந்த ஆசார்யரும் இனி நமக்கு வேண்டாம் என்று தன் வாயில் விரல்களை விட்டு யஜுர் வேதத்தை ரூபங்களாக, ரத்தத்துடன் வாந்தி எடுத்து விட்டுப் போய் விட்டார். மற்ற சிஷ்யர்கள் ரத்தத்துடன் இருந்ததால் அந்த பாகங்களை தித்திரி எனும் பறவை உருவங்கொண்டு அவற்றை உண்டனர். தைத்திரீயர்கள் என்று பெயரும் பெற்றனர். அந்த பாகமும் தைத்திரீயம் என்று பெயர் பெற்றது.
வேறு சில சிஷ்யர்கள் வைசம்பாயனரின் ப்ரஹ்மஹத்யா தோஷத்தைப் போக்குவதற்காக ஆத்வர்யவம் (அத்வர்யுவின் வேலை) என்ற வ்ரதத்தை அனுஷ்டித்தனர். அவர்களுக்கு சரணாத்வர்யு என்ற பெயர் உண்டாயிற்று. வேதங்களைக் கக்கிவிட்ட யாக்ஞவல்க்யர் மீண்டும் யஜுர் வேதங்களைக் கற்க விரும்பி ஸூர்யனை உபாஸித்தார். “பகவானே! நீரே மோக்ஷத்திற்கு வழியாயிருக்கிறீர். அளவற்ற தேஜஸ்வியும் நீரே. வேதங்களின் ஸ்வரூபமாயும், ப்ரகாசத்துடனும் இருக்கிறீர். வெயிலைக் கொடுக்கிறீர். சந்த்ரனைப் போஷிக்கிறீர். ஜகத்துக்குக் காரணமாயிருக்கிறீர். கலை, காஷ்டங்களும் உன்னைக் கொண்டே உலகத்தார் கணிக்கிறார்கள். நீரே த்யானிக்கத்தக்கவர். ப்ரபஞ்ச ஸ்வரூபியும் நீரே, பரப்ரஹ்ம ஸ்வரூபியும் நீரே, ப்ரணவ ஸ்வரூபியும் நீரே.
நீரே சந்த்ரனையும் வளர்த்து தேவதைகளையும், பித்ருக்களையும் ரக்ஷித்து வருகிறீர். த்ருப்தி ஸ்வரூபமாயிருப்பவரும் நீரே. பனி, வெப்பம், மழைகளை உண்டுபண்ணுபவரும் நீரே. முக்கால ஸ்வரூபியும் நீரே. இருளைப் போக்கி உலகிற்குப் பதியாய் இருப்பவரும் நீரே. உன் உதயமின்றி உலகில் ஒருவரும் ஸத்கர்மங்களை அனுஷ்டிக்கத் தகுதியடைய மாட்டான். தண்ணீரும் உன்னாலேயே சுத்தியடைகிறது. ஆதி தேவனும் நீரே. உமது தேரின் ஒளியே உலகிற்கு இதமாக இருக்கிறது. ஞான ரூபமாகவும், அம்ருத ரூபமாகவுமிருந்து உன் குதிரைகள் உமது தேரைத் தாங்குகின்றன. உலகிற்குக் கண் நீர்” என்று பலவாறுத் துதித்து வணங்கினார். குதிரை வடிவில் ஸூர்யனும் அவருக்குக் காட்சியளித்து வேண்டும் வரத்தை அளிப்பதாக மகிழ்வுடன் கூறினார். யாக்ஞவல்க்யர் என் முந்தைய குருவான வைசம்பாயனர் அறியாத யஜுர் வேதங்களை எனக்கு அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். வ்யாஸர் வைசம்பாயனருக்கு உபதேஸிக்காத அயாதயாமம் என்ற யஜுஸ்ஸுக்களை ஸூர்யனும் யாக்ஞவல்க்யருக்கு உபதேசித்தார். குதிரையின் (வாஜி) உருவிலிருந்து உபதேஸித்ததால் இதை அத்யயனம் செய்பவர் வாஜிகள் என்றழைக்கப்பட்டனர். இந்த வாஜஸனேய சாகையை காண்வ சாகை முதலான பதினைந்து பிரிவுகளாகப் பிரித்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.
03_06. ஜைமினி தான் பெற்ற ஸாமத்தை தன் புத்ரன் ஸுமந்துவுக்கும், அவர் தன் புத்ரர் ஸுத்வாவிற்கும், ஸுத்வா அவர் புத்ரர் ஸுகர்மாவிற்கும் உபதேஸித்தார். ஸுகர்மா அதை ஆயிரமாகப் பிரித்து ஹிரண்யநாபன், பௌஷ்பிஞ்சி என்ற தன் இரு சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இதில் ஹிரண்யநாபர் (கௌஸல்யர்) தன் சிஷ்யர்களான வட திசையைச் சேர்ந்த ஐனூறு பேர்களுக்கு ஐனூறு ஸம்ஹிதைகளை உபதேஸித்தார். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டுக் கீழ்த் திசைக்குச் சென்று அத்யயனம் செய்து வந்தனர். எனவே இவர்கள் கீழ்த்திசை ஸாமகர் எனப்படுகின்றனர். பௌஷ்பிஞ்சியிடம் லோகாக்ஷி, கௌமுதி, கக்ஷீவான், லாங்கலி முதலான பல சிஷ்யர்கள் ஸம்ஹிதைகளைக் கற்று அதை மேலும் பலவாறுப் பிரித்தனர். ஹிரண்ய நாபருடைய சிஷ்யர்களில் ஒருவரான க்ருத நாமா என்பவர் தான் கற்றதை இருபத்து நான்கு ஸம்ஹிதைகளாகப் பிரித்துத் தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார்.
அதர்வத்தைப் பெற்ற ஸுமந்து தன் சிஷ்யன் கபந்தனுக்கு அதை உபதேஸித்தார். அவர் அதை இரண்டாகப் பிரித்துத் தன் சிஷ்யர்கள் தேவதர்சனுக்கும், பத்யனுக்கும் ஓதுவித்தார். தேவதர்சன் அதை நான்காக்கி அவர் சிஷ்யர்களான மேதன், ப்ரஹ்மபலி, சௌக்லாயனி, பிப்பலாதன் என்பவர்களுக்குத் தந்தார். பத்யர் பிரித்த மூன்று சாகைகளை அவர் சிஷ்யர்கள் ஜாபாலி, குமுதாதி, சௌனகர் மூவரும் பெற்றனர். சௌனகர் தான் பெற்றதை இரண்டாக்கி பப்ரு, ஸைந்தவர் இருவருக்கும் தந்தார். ஸைந்தவர் மஞ்சுகேசருக்குத் தந்ததை அவர் இரண்டாக்கினார். ஆனால் அதைப் பெற்றவர்கள் பற்றித் தெரியவில்லை. இந்த இரு ஸம்ஹிதைகளில் தான் முக்யமான ஐந்து அம்சங்கள் உள்ளன.
நக்ஷத்ர கல்பம் என்பது நக்ஷத்ரம் முதலானவைகளின் ஸ்வரூபம், குணங்களைப் பற்றியது. வேத கல்பம் என்பது ப்ரஹ்ம தத்வமான ப்ரோஹித கார்யங்களைப் பற்றியது. ஸம்ஹிதா கல்பம் மந்த்ரங்களின் உபயோக முறைப் பற்றியது. ஆங்கிரஸ கல்பம் ஸதம்பனம்(கட்டுதல்), மோஹனம்(மயக்குதல்), மாரணம்(கொல்லுதல்) முதலான அபிசார ப்ரயோகங்களைப் பற்றியது. சாந்தி கல்பம் யானை, குதிரை முதலான பதினெட்டு சாந்திகளைப் பற்றியது. அதர்வ வேதத்தின் முக்ய பாகங்கள் இவை.
மைத்ரேயா! சாஸ்த்ரங்களில் முதன்மை பெற்ற புராணமே முதலில் ப்ரஹ்மாவின் முகத்திலிருந்து வெளிவந்தது. அதன் பிறகே வேதங்கள் வெளியாயின. ப்ராஹ்மம் என்ற பெயரில் முதலில் நூறு கோடி க்ரந்தங்களுடன் இருந்த இந்த புராணம், த்ரேதா யுகத்தில் ப்ரஹ்மா முதலான பதினெட்டு ரிஷிகளால் ப்ராஹ்மம், பாத்மம் முதலான பதினெட்டு புராணங்களாக ஒவ்வொரு கோடி க்ரந்த அளவில் சுருக்கிப் பிறிக்கப்பட்டது. த்வாபரத்தின் முடிவில் பின் வ்யாஸரால் இதன் ஸாரங்கள் மட்டும் நான்கு லக்ஷ க்ரந்தங்களாகச் சுருக்கப்பட்டு, பாரதம், ருபுநிதாகர் முதலானோர் கதைகள், ப்ருத்வி கீதை, பித்ரு கீதை, வராஹ முதலான கல்ப வரலாறுகள், ஸ்ருஷ்டி, மன்வந்த்ராதிகள், வம்ச சரிதங்கள் முதலானவற்றை விளக்கும் பதினெட்டு புராணங்களாக்கப்பட்டது.
வ்யாஸரிடம் ஸூதவம்சத்தில் சிறந்த ரோமஹர்ஷணர் இவைகளைப் பெற்றுத் தன் ஆறு சிஷ்யர்களான ஸுமதி, அக்னிவர்சஸ், மித்ராயுஸ், சாம்ஸபாயனர், அக்ருதவ்ரணர், ஸாவர்ணி என்பவர்களுக்குத் தந்தார். அக்ருதவ்ரணர்(காச்யபர்), ஸாவர்ணி, சாம்ஸபாயனர் இம்மூவரும் வ்யாஸர் செய்த புராண ஸம்ஹிதைகளைக் கொண்டு தாங்களும் சிலவற்றைச் செய்தனர். இம்மூன்றுக்கும் மூலமாக ரோமஹர்ஷணரும் ஒன்றைச் செய்தார். இந்த நான்கு ஸம்ஹிதைகளின் ஸாரத்தைக் கொண்டே நான் இந்த விஷ்ணு புராணத்தைச் செய்தேன் என்றார் பராசரர். ப்ராஹ்மம், பாத்மம், வைஷ்ணவம், சைவம், பாகவதம், நாரதீயம், மார்கண்டேயம், ஆக்னேயம், பவிஷ்யம், ப்ரஹ்மவைவர்த்தம், லிங்கம், வராஹம், ஸ்காந்தம், வாமனம், கௌர்தமம், மாத்ஸ்யம், காருடம், பரஹ்மாண்டம் என்பன இந்த பதினெட்டு புராணங்கள்.
எல்லா புராணங்களிலும் ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம், வம்சம், மன்வந்த்ரம் என அனைத்திற்கும் விஷ்ணுவே கர்த்தாவாகக் கூறப்படுகிறார். அனைத்தும் அவர் செயலல்லவா. இந்த புராணங்கள் அனைத்தும் உலகிற்கு அவச்யமான தர்மங்களையே கூறுகின்றன. எனவேதான் இவைகள் வித்யாஸ்தானங்களில் சேர்கின்றன. சிக்ஷை முதலான வேதாங்கங்கள் ஆறு, வேதங்கள் நான்கு, மீமாம்ஸை, ந்யாயம், புராணம், தர்ம சாஸ்த்ரம் இவையே வித்யாஸ்தானங்கள் ஆகும். இதிஹாஸங்கள் புராணங்களிலேயே சேரும். இவற்றுடன் ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், அர்த்த சாஸ்த்ரம் இவைகளையும் சேர்த்து வித்யாஸ்தானங்களைப் பதினெட்டாகவும் கூறுவர். இந்த சாஸ்த்ரங்களை உலகில் ப்ரஹ்ம, தேவ, ராஜ எனும் மூவகை ரிஷிகள் ப்ரசாரம் செய்கின்றனர்.
03_07. மஹரிஷி! கேட்ட அனைத்திற்கும் பதில் அருளி விட்டீர்கள். இன்னொன்றையும் தங்களிடமே கேட்க விரும்புகிறேன். இந்த ப்ரஹ்மாண்டத்தில் ஏழு த்வீபங்களும், மேலும், கீழுமாக ஏழு, ஏழு உலகங்களும் பலவகை ப்ராணிகளுடன் நிறைந்திருக்கிறது. ஓரங்குலத்தின் எட்டில் ஒரு பங்கு கூட ப்ராணிகள் வஸிக்காத இடம் என்று இந்த ப்ரஹ்மாண்டத்திலில்லை. இந்த ப்ராணிகள் அனைத்தும் கர்ம பந்தத்தால் இங்கு பிறந்து, வளர்ந்து, முடிவில் யமனின் உத்தரவில் துன்பங்களையனுபவித்து மீண்டும் தேவ, மானுஷாதி யோனிகளில் பிறக்கின்றன. மீண்டும் இறக்கின்றன. இப்படியே பிறப்பிறப்பு க்ரமத்தில் சுற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதே சாஸ்த்ரங்கள் கூறும் முடிவு. இவை இப்படி இந்த சக்ரத்தில் கிடந்துழலாமல் எந்த நல்ல விஷயத்தைச் செய்தால் இதைத் தாண்டமுடியும் என்பதை அருளுங்கள்” என்கிறார் மைத்ரேயர்.
“மைத்ரேயா! இதே கேள்வியை முன்பொரு ஸமயம் நகுலன் பீஷ்மரிடம் கேட்டான். அதற்கு அவர் கூறிய பதிலையே நான் உனக்குக் கூறுகிறேன். பீஷ்மர், “குழந்தாய்! கலிங்க தேசத்தைச் சேர்ந்த ஒரு ப்ராஹ்மண நண்பர் என்னிடம் ஒரு முறை வந்திருந்தார். அவரிடம் நான் பல கேள்விகளைக் கேட்க, கேட்க முற்பிறவி ஞானமும், மஹா யோகமும் வாய்த்திருந்த அவரும் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அவர் வாக்கு என்றும் பொய்த்ததில்லை. எது எப்படி ஆகும் என்று கூறுகிறாரோ அது அப்படியே ஆகும். அவரிடம் நான் இந்த கேள்வியைக் கேட்டபோது அதற்குப் பதிலாக அவர் யமகிங்கர ஸம்வாதத்தை எனக்கு உபதேஸித்தார். அதை நான் உனக்குக் கூறுகிறேன்” என்றார்.
ஒரு ஸமயம் வாழ்நாள் முடிந்த ஜீவன்களைப் பிடித்து வருவதற்காகக் கையில் பாசத்துடன் புறப்பட்ட தன் படனைக் கூப்பிட்டு ரஹஸ்யமாக அவன் காதில் யமன் கூறுகிறான். “படனே! ஜீவர்களைப் பிடிக்கச் செல்லும் போது ஒன்றை நினைவில் வைத்துக் கொள். கண்டபடி உன் கைவரிசையைக் காட்டி, பின் நீ கஷ்டப்படக்கூடாது. மதுஸூதனனை அனுஸரித்தவர்களிடம் அருகில் கூட நீ போய் விடாதே. மற்ற பாமரர்களுக்கே நான் ப்ரபு. அவர்களுக்கு அல்ல, அவர்கள் முன்பு நீ கையும், கயிறுமாகச் சென்றால் என் தலை இங்கிருக்காது, எனவே அவர்களைக் கண்டால் கயிறைக் கீழே போட்டு கை குவித்து, ஸாதுவாகப் போ” என்று கூறினான்” என்று கூறினார் அந்த கலிங்க தேசத்து ப்ராஹ்மணர்” என்று கூறினார் நகுலனிடம் பீஷ்மர்” என்றார் மைத்ரேயரிடம் பராசரர்.
ராஜரே! உங்களையே நாங்கள் ப்ரபு என்று மதிக்கிறோம். உம்மை விட மேலான ப்ரபுக்கள் சிலர் இருக்கிறார்களா என்றனர் யம படர்கள். யமன் “ஸாமான்யர்களுக்கே நான் ப்ரபு. யமன் என்ற சொல் தண்டிப்பவன் எனும் பொருளைத் தரும். ஸகல தேவதைகளாலும் பூஜிக்கப்படும் பரமனே எனக்கு இந்தப் பெயரை அளித்துள்ளான். நன்மைகளைப் பரப்பவும், தீமைகளை விலக்கவும் என்னை வைத்துள்ளான் அவன். அந்த ஹரியே எனக்குக் குரு. நான் ஸ்வதந்த்ரனில்லை. அவனுக்கு வசமானவன். நான் ஏதாவது தவறு செய்தால் என்னைத் தண்டிக்கும் யமனும் அவனே. எனவே ஹரியும், ஹரியைத் துதிப்பவர்களும் எனக்கு ப்ரபுக்கள்” என்றான்.
காற்று பூமியிலிருந்து கிளம்பும் போது துகள்களும் கிளம்புவது போல் அவன் ஸ்ருஷ்டிக்கும் போது ப்ரக்ருதியில் தேவன், மனுஷ்யன், பசு என்று ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுகின்றன. காற்று அடங்கும் போது போல, இவைகளும் அவரிடமே லயமடைகின்றன. அவரே ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரங்களைச் செய்பவர். ஸ்வர்ணம் பல வகை ஆபரணங்களிலும் இருப்பது போல அவனே அனைத்து உலகப் பொருள்களுக்கும் ஆத்மா. அவனையே எல்லா தேவர்களும் வணங்கி வழிபடுகின்றனர். பலன் கருதாமல் அவனை வணங்க வேண்டும். அப்படிச் செய்பவனின் எல்லா பாவங்களும் அழிந்தொழியும். இப்படிப்பட்ட பக்தர்களைக் கண்டால் நெய்யால் கொழுந்து விட்டு எரியும் தீயை விட்டு விலகுவது போல விலகிவிட வேண்டும்” என்றான் யமன்.
இதைக் கேட்ட யமபடர்கள் வைஷ்ணவன் என்பவன் லக்ஷணமென்ன. அவனை எப்படி அறிவது என்று கேட்டனர். அதற்கு யமதர்மராஜன் “எவன் தனது வர்ணாச்ரம தர்மங்களை ஆணையாக எண்ணி அனுஷ்டித்து வருகிறானோ, நண்பன், பகைவன் என்ற பாகுபாடின்றி இருக்கிறானோ, அடுத்தவர் பொருளையும், உயிரையும் அபகரிக்காமலிருக்கிறானோ அவனே தூய்மையான மனம் கொண்ட வைஷ்ணவன். அவர்களை கலியின் தோஷங்கள் அடையாது. அவர்கள் மனதில் ஜனார்தனன் நித்யவாஸம் செய்வான். சந்த்ரனின் கிரணங்கள் குவிந்திருக்கும் இடங்களில் எப்படி தீயின் வெப்பம் நெருங்காதோ, அப்படியே ஸ்படிக மலைப்பாறையைப் போன்ற பரமன் இருக்கும் மனதையும் பொறாமை முதலான குணங்கள் நெருங்காது. அவர்கள் அழுக்கற்ற அறிவாளர்களாகவும், சாந்தமாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், அனைத்துயிர்க்கும் நட்பாகவும், இதமான சொற்களை உடையவர்களாகவும், கர்வம், கபடங்களின்றியும் இருப்பார்கள். இந்த அடையாளங்களைக் கொண்டு ஒருவனை வைஷ்ணவன் என்று அறியுங்கள்” என்றான்.
ஸூர்யன் இருந்தால் இருட்டு அங்கு எப்படி இருக்கும். எனவே பாபமற்ற அவர்களை நாம் நெருங்கக்கூடாது. யம, நியம முதலான யோகங்களால் பாவங்களைப் போக்கி, அனுதினம் அச்யுதனிடம் ஈடுபட்டிருப்பவர்களையும் வைஷ்ணவனென்று அறியலாம். அருகில் ஒருவரும் இல்லாத ஒரு வழியில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு தங்கக் கட்டியைக் கண்டாலும் அதை வெறும் புல்லாக நினைத்து மனத்தை பரமனிடமே வைத்து ஒருவன் செல்வானாகில் அவனை வைஷ்ணவனென்று அறியலாம். இனி பெருமாளிடம் பக்தியில்லாத பாவிகளின் அடையாளங்களையும் கூறுகிறேன் கேள்,
பிறர் பொருளைக் கொள்ளை அடிப்பவன், உயிர்களைக் கொல்பவன், பொய்யும், கடுஞ்சொற்களையும் கூறுபவன், மதம் கொண்டு திரிவான், தூய அறிவின்றி இருப்பான். பிறர் செல்வத்தைப் பொறுக்க மாட்டான். நல்லோரை நிந்திப்பான். பரமனை எவ்வகையிலும் ஆராதிக்கமாட்டான். பக்தர்களுக்கு தன் கையால் எதையும் தர மாட்டான். நெருங்கின நண்பர்களிடமும், மனைவி, மக்கள், மக்கள், தந்தை, தாய், வேலைக்காரன் என அனைவருக்கும் வஞ்சனை செய்வான். பொருளாசை மிகுத்திருப்பான். அதர்மங்களை அனுதினமும் செய்து அதிலேயே சிக்கியிருக்கும் அவனை ம்ருகம் என்றே நினைக்க வேண்டும். உன் முழு அதிகாரத்தையும் இவனிடம் செலுத்தலாம்.
மற்றபடி வைஷ்ணவர்களின் கண் படும் இடங்களுக்குக் கூட நீ சென்று விடாதே. நானும் கூட அங்கு செல்வதில்லை. அவர்கள் நேரே வைகுண்டம் செல்லத் தக்கவர்கள். அப்படிச் செல்கையில் அவர்களால் வழியிலுள்ள லோகங்களும் பரிசுத்தமடைகின்றன. ஆனால் அவர்கள் நம் லோகத்தின் வழியாகச் செல்வதில்லையாதலால் நமது லோகத்துக்குக் கூட அவன் கடாக்ஷம் கிடைக்க வழியில்லை. எனவே இத்தகைய மகிமை வாய்ந்த வைஷ்ணவர்களின் அருகில் கூட நீ சென்று விடாதே” என்றான். இதை நகுலனிடம் கூறிய பீஷ்மர் “இந்த ஸம்ஸாரமென்ற பெரும் ஸாகரத்திலிருந்து நம்மைக் காக்க மஹாவிஷ்ணுவைத் தவிர வேறெவருமில்லை. அவனைச் சரணமடைந்தவர்களுக்கு யம பயமில்லை” என்று கூறியதாகக் கூறி யம கீதையை மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.
03_08. “மஹரிஷி! அந்த ஜகன்னாதனை ஆராதிக்கும் முறையையும், அதனால் பெறும் பலன்களையும் கூறியருள வேண்டும்” என்கிறார் மைத்ரேயர். “இதே கேள்வியை முன்னொரு ஸமயம் ப்ருகு மஹரிஷியின் புத்ரரான ஔர்வ மஹரிஷியிடம் ஸகர ராஜன் கேட்டபோது அவர் கூறிய அனைத்து சாஸ்த்ரங்களையும் நான் உனக்குக் கூறுகிறேன்” என்று பதிலுரைக்கிறார் பராசரர். இவ்வுலக ஸுகங்களையும், ஸ்வர்கத்தின் ஸுகங்களையும், ப்ரஹ்ம பதவியையும், மோக்ஷத்தையும் அளிக்கவல்லது பகவானின் ஆராதனை என்று ஆரம்பிக்கிறார் ஔர்வர். ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, வேளாள என்று நான்கு வர்ணங்கள். ப்ரஹ்மசர்ய, கார்ஹஸ்த்ய, வானப்ரஸ்த, ஸன்யாஸ என்று ஆச்ரமங்கள் நான்கு. வர்ணங்களுக்கும், ஆச்ரமங்களுக்கும் தர்மங்கள் வேறுபடும். அந்தந்த தர்மங்களை அனுஷ்டிப்பதே பரமனுக்கு மிக உகந்தது. அதுவே அவனுக்கு மிகுந்த ஆராதனையுமாகும்.
யாகங்களை அனுஷ்டிப்பதும் விஷ்ணுவின் ஆராதனையே. பல தேவதைகளைக் குறித்து அவைகளில் மந்த்ரங்களைக் கூறினாலும், அவையனைத்தும் அவர்களுக்கும் அந்தராத்மாவாக இருக்கும் விஷ்ணுவையே குறிக்கும். எனவெ எந்த தேவதையின் மந்த்ரங்களும் விஷ்ணுவின் மந்த்ரமேயாகும். அதே போல மற்ற ஜீவன்களைத் துன்புறுத்தும்போதும் அவனே துன்புறுத்தப்படுகிறான். எவரையும் நேரிலோ(அபவாதம்), மறைவிலோ (பைசுன்யம்) நிந்திக்கவும் கூடாது. பொய் சொல்லவோ, பிறர் மனம் வருந்தும் வகையிலோ பேசக்கூடாது. பிறர் மனைவி, பொருள்களில் பற்றுதல் வைக்கக் கூடாது. ப்ராணிகளைக் கொல்லவோ, அடிக்கவோ கூடாது. தேவர், ப்ராஹ்மணர், ஆசார்யர்களிடம் பணிவிடை செய்வதில் விருப்பத்தோடு இருக்கவேண்டும். நம்முயிர் போல அனைத்துயிர்களையும் நினைக்க வேண்டும்.
அந்தணர்கள் முடிந்த வரை தானங்களை அவச்யம் செய்ய வேண்டும். யாகங்களால் தேவதைகளை ஆராதிக்க வேண்டும். அதற்காக வேதாத்யாயனம் செய்ய வேண்டும். தினமும் ஸ்னான, தர்பணங்களை குறைவின்றி செய்ய வேண்டும். அக்னிஹோத்ரம், ஔபாசனங்களைக் காத்துவர வேண்டும். நல்வழியில் பொருளீட்டியவர்களிடமிருந்து ப்ரதிக்ரஹம் பெற வேண்டும். எல்லா ப்ராணிகளுக்கும் இதத்தையே செய்ய வேண்டும். நட்பு கொள்ள வேண்டும். அடுத்தவர் பொருளை துச்சமாக மதிக்க வேண்டும். ருது காலத்தில் பத்னியோடு சேர வேண்டும்.
க்ஷத்ரியன் தானம், யாகம், அத்யயனம் மூன்றையும் அவச்யம் செய்யவேண்டும். ப்ராஹ்மணர்களுக்கு தானமும், பல யாகங்களும் செய்ய வேண்டும். போர் செய்வதும், பூமியைக் காப்பதும் இவர்களுக்கு முக்யம். நாட்டில் நடக்கும் யக்ஞம் முதலான அனைத்து கார்யங்களிலும் இவனுக்கு ஆறில் ஒரு பங்கு உண்டாகையால் இவன் நிச்சயம் மக்களைக் காக்க வேண்டும். துஷ்டர்களைத் தண்டிக்க வேண்டும், தயவு காட்டி விடக் கூடாது. நல்லவர்களைக் காக்க வேண்டும். வர்ணாச்ரமம் இப்படி அரசனால் காப்பாற்றப்படுமானால் அவன் விரும்பிய நல்ல லோகங்களை அடைவான்.
பசு பராமரிப்பு, தானம், யாகம், அத்யயனம், நித்ய, நைமித்திக கர்மாக்கள், வர்த்தம் செய்தல், பயிரிடல் இவைகள் வைச்யனுக்கு ஜீவனம். இம்மூவர்க்கும் பணிவிடை செய்து, அவர்களுக்கு அடிபணிந்திருப்பதே சூத்ரனின் வேலையாகும். அப்படிச் சம்பாதித்த பொருளைக் கொண்டு அவன் குடும்ப பரிபாலனம் செய்யவேண்டும். எதுவும் அப்படிக் கிடைக்காத போது பல சரக்கு வ்யாபாரம், தச்சு வேலை முதலியவைகளைச் செய்து குடும்பத்தைக் காக்க வேண்டும். தானமும் சக்திக்க்கேற்றபடி செய்ய வேண்டும். நமஸ்கார மந்த்ரங்களைக் கொண்டு வைச்வதேவம், பித்ரு கார்யங்கள் முதலியவைகளைச் செய்யலாம். வேத, வேதாங்களை ஓதக்கூடாது.
ந்யாயமான முறையில் பொருளீட்டல், ருது காலத்தில் மனைவியோடு சேர்தல், உயிர்களிடத்து அன்பு, பொறுமை, தற்பெருமையின்மை, இதமான வார்த்தை கூறல், பிறர் பொருள் விரும்பாமை, மலர் சூடுதம் முதலான மங்கலச் செயல்கள், உடல் வாடாமல் வேலை செய்தல், அன்புடைமை, பேராசையின்மை, கருமித்தனமின்மை, குறை கூறாமை, சோம்பலின்மை இவை யாவர்க்கும் பொதுவான தர்மங்கள். இவையாவுமே ஸுபிக்ஷமான காலத்தில் அனுஷ்டிக்க வேண்டியவை. ஆபத்கால தர்மங்களை இனி கூறுகிறேன். சக்தியில்லையெனில் ஆபத்காலத்தில் ப்ராஹ்மணன் க்ஷத்ரியனுடையதையும், க்ஷத்ரியன் வைச்யனுடையதையும், வைச்யன் சூத்ரனுடையதையும் மேற்கொள்ளலாம். சூத்ரனுக்கு ஆபத்தர்மம் முன்னமே கூறப்பட்டது. எக்காரணம் கொண்டும் ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் சூத்ர தர்மத்தைக் கொள்ளக்கூடாது. கர்மங்களை கலக்கக் கூடாது. சக்தியுள்ளவர்கள் தம் கர்மாக்களைத் தவிர்த்தலும், சக்தியற்றவர்கள் மேல் கர்மாக்களையனுஷ்டித்தலுமே கலக்கம் (ஸாங்கர்யம்).
03_09. இளமையில் உபனயனம் செய்யப்பெற்று, வேதாத்யயனம் செய்வதற்காக குருகுலம் சென்று வசிப்பவனே ப்ரஹ்மசாரி ஆகிறான். இவன் மனதையடக்கி, தூய்மை, நல்லொழுக்கங்களுடன், குரு சிஷ்ரூஷை செய்து வரவேண்டும். கள், மாம்ஸங்களை விலக்கி, ப்ராஜாபத்ய முதலான வ்ரதங்களுடன் வேதங்களைக் கற்க வேண்டும். இரண்டு ஸந்த்யைகளிலும் ஸூர்யனையும், அக்னியையும் அடக்கத்துடன் வணங்க வேண்டும். பின் ஆசார்யனை நமஸ்கரிக்க வேண்டும். ஆசார்யன் நிற்கையில் தான் அமரக்கூடாது. ஆசார்யன் அமர்ந்த பின் அதைவிடத் தாழ்ந்த ஆசனத்தில் தான் அமர வேண்டும். ஆசார்யனுக்கு எதிர்க்கருத்துக்களைக் கூறக்கூடாது. ஆசார்யன் உத்தரவு பெற்று அவன் எதிரிலேயே அத்யயனம் செய்ய வேண்டும். குருவின் உத்தரவுடன் பிக்ஷை பெற்றே, குருவின் அனுமதியினுடனேயே உண்ண வேண்டும். ஆசார்யன் நீராடிய பின் அவர் நீராடிய நீரிலேயே தான் நீராட வேண்டும். ஆசார்யனுக்குத் தேவையான ஸமித், நீர் முதலான பொருள்களை வேளையில் ஏற்படுத்தித் தரவேண்டும். வேதார்த்தங்களை அறியும் வரை அத்யயனம் செய்து விட்டு, குருதக்ஷிணையைக் கொடுத்து விட்டு, குருவின் அனுமதியினுடனேயே கார்ஹஸ்த்யம் செல்ல வேண்டும்.
குருவின் அனுமதி பெற்ற ப்ரஹ்மசாரி விதிப்படி ஒரு பெண்ணை மணக்க வேண்டும். தனக்குரிய தர்ம வழியில் தர்மங்களை அனுஷ்டிப்பதற்காக பணம் சம்பாதிக்க வேண்டும். எள்ளுடன் நீர் கலந்தும், பிண்ட தானத்தாலும் பித்ருக்களைப் பூஜிக்க வேண்டும். வேத யாகங்களால் தேவதைகளைப் பூஜிக்க வேண்டும். அதிதிகளை அன்னமிட்டு பூஜிக்க வேண்டும். வேதங்களை ஓதுவதால் ரிஷிகளை பூஜிக்க வேண்டும். நன்மக்களைப் படைப்பதால் ப்ரஹ்மாவைப் பூஜிக்க வேண்டும். வைச்வதேவ பலியால் ஸர்வ பூதங்களையும் பூஜிக்க வேண்டும். அன்பினால் அனைவரையும் கவர வேண்டும். இத்தகைய க்ருஹஸ்தன் பல நல்ல லோகங்களை அடைகிறான்.
ப்ரஹ்மசாரிகளும், ஸன்யாஸிகளும் க்ருஹஸ்தர்களையே அண்டியிருக்கிறார்கள். க்ருஹஸ்தர்கள் இல்லையேல் இவர்கள் இல்லை. பலருக்கும் உதவுவதால் இந்த ஆச்ரமமே உயர்ந்தது. பலர் படிப்பதற்காகவும், தீர்த்த, க்ஷேத்ராடனத்திற்காகவும், யாத்ரைக்காகவும் உலகைச் சுற்றி வருகின்றனர். இவர்களுக்கு வஸிக்க இடமோ, உணவோ நிலையாக இல்லை. இவர்களை இவையெல்லாவற்றையும் அளித்துத் தாய் போல் காப்பது இந்த க்ருஹஸ்தர்களே. விருந்தினர்களுக்கு நல்வரவு கூறி, உபசரித்து, நீர், உணவு, ஆசனம், படுக்கை முதலானவைகளை இவர்களே செய்துத் தர வேண்டும். அப்படிச் செய்யாமல் அதிதி அத்ருப்தியுடன் சென்றால் அவன் தன்னுடைய பாபங்களை இந்த க்ருஹஸ்தனுக்குக் கொடுத்து விட்டு, க்ருஹஸ்தனின் புண்யங்களை எடுத்துச் சென்று விடுகிறான். எனவே அதிதியை அவமதிக்கக் கூடாது, அஹங்காரம் காட்டக் கூடாது, கொடுத்துவிட்டு வீணாகிப் போனதே என்று நினைக்கக் கூடாது. விருந்தினர்களை விரட்டக் கூடாது. கடுஞ்சொல் கூறக்கூடாது.
இப்படிக் காலத்தைக் கழித்த க்ருஹஸ்தன் வயது முதிர்ந்ததும், சடங்குகளை முடித்தபின் கடைசி காலத்தைக் கழிக்க பத்னியோடோ, அல்லது பத்னியைப் புத்ரர்களிடம் ஒப்படைத்துவிட்டோ காடு தேடி செல்ல வேண்டும். இலை, கிழங்கு, பழங்களையே உண்ண வேண்டும். தாடி, ஜடைகளைத் தரிக்க வேண்டும். தரையிலேயே படுக்க வேண்டும். பற்றற்றவனாயிருத்தல் பரமனையே நினைத்து (முனி) இருக்க வேண்டும். ம்ருகங்களின் தோலையோ, மரவுரியையோ, புல், தர்ப்பங்களையோ தரிக்க வேண்டும். மூன்று வேலையும் நீராடி, தேவதா பூஜை, ஹோமங்கள், அதிதி பூஜை, பிக்ஷை இடுதல், பூதபலி இவைகளைச் செய்ய வேண்டும். காட்டில் கிடைக்கும் எண்ணையையே தேய்த்துக் கொள்ள வேண்டும். வெயில், குளிர் என அனைத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். இப்படியிருக்கும் வானப்ரஸ்தன் அக்னி குப்பைகளைக் கொளுத்துவது போல் பாபங்களைத் தொலைத்து பரிசுத்தனாகி நிலைத்த லோகங்களுக்குச் செல்கிறான்.
மனைவி, மக்கள், செல்வம் முதலானவைகளில் பற்றுதலை விட்டே ஸன்யாஸம் பெற வேண்டும். காம, க்ரோத முதலியவைகளை ஒழித்து, தர்ம, அர்த்த முதலானவைகளையும் விடுத்து, ப்ரஹ்ம ஞானத்திலேயே பற்றுதலோடிருக்க வேண்டும். எந்த பாகுபாடுமின்றி எவரிடமும் ஸமத்வ பாவத்தோடிருக்க வேண்டும். ம்ருகம், பறவை இவைகளுக்குக் கூட மனது, வாக்கு, செயல்களால் தீங்கிழைக்காமலிருக்க வேண்டும். எதிலும் ஸம்பந்தமின்றி இருக்க வேண்டும். க்ராமத்தில் ஓரிரவும், பட்டணங்களில் ஐந்திரவுகளும் தங்கலாம். ஒருவருக்கும் தன்னிடம் அன்போ, த்வேஷமோ வராமல் நடந்து கொள்ள வேண்டும். ப்ராணனைக் காப்பதற்காக மட்டுமே பிக்ஷை எடுக்க வேண்டும். குலத்தாலும், ஆசாரத்தாலும் உயர்ந்தவர்களின் இல்லத்திலும் அடுப்பு அடங்கி, அனைவரும் சாப்பிட்ட வீட்டிற்கே பிக்ஷைக்குச் செல்ல வேண்டும். பசிக்கு உண்பதாக நினைக்காமல் தன்னுடலில் ஜாடராக்னியில் செய்யும் அக்னிஹோத்ரமாகவே நினைத்து முகமாகிய குண்டத்தில் அன்னமாகிற ஹவிஸ்ஸை இடுவதாக நினைத்துண்ண வேண்டும். அஹங்கார(நான்), மமகாரங்களை(என்னுடையது) விடுக்க வேண்டும். எல்லா உயிர்க்கும் அபயம் அளிப்பவனாயிருக்க வேண்டும். அப்பொழுதான் எந்த உயிர்க்கும் அவனிடம் பயமுண்டாகாது.
03_10. ஸகரன் “மஹரிஷி! கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம், விஷ்ணுபலி, ஜாதகர்மம், நாமகரணம், உபநிஷ்க்ரமணம், அன்னப்ராசனம், சௌளம், உபனயனம், நான்கு வ்ரதங்கள்(ப்ராஜாபத்யம்,ஸௌம்யம், ஆக்னேயம், வைச்வதேவம்), விவாஹம் என்ற பதினான்கு கர்மாக்களையும், நித்ய, நைமித்திக, காம்ய கர்மங்களையும் தர்மங்களையறிந்த தாங்கள் விவரிக்க வேண்டும்” என்று ஔர்வரிடம் கேட்கிறார். ஔர்வர் “குழந்தை பிறக்கும் முன் கர்ப்பாதானம், பும்ஸுவனம், ஸீமந்தம், உன்னயனம் முதலானவைகளையும், பிறந்த பின் ஜாதகர்மா முதலானவைகளையும், அப்யுதய ச்ராத்தத்தையும் செய்ய வேண்டும்.
ப்ராஹ்மணர்கள் தேவ பூஜைகளையோ, நாந்தீ, பித்ரு கார்யங்களையோ செய்யும் போது இரட்டைப் படையில் ப்ராஹ்மணர்களை கிழக்கு முகமாக இருக்கச் செய்து, த்ருப்தி அடையும் வரை உணவூட்ட வேண்டும். நாந்தீ என்றால் சுபம், உத்ஸவம். இதையே ப்ரதானமாகக் கொண்ட சில தேவதைகள் நாந்தீமுக தேவதைகளாவர். இவர்களும் பித்ரு தேவதைகளைச் சேர்ந்தவர்களே. இவர்களுக்காக தயிர், யவம், இலந்தைப் பழம் இவைகளுடன் கலந்த பிண்டங்களைத் தீர்த்தத்தோடு தேவ (விரல்களின் நுனி வழி) அல்லது ப்ராஜாபத்ய தீர்த்தத்தினாலோ(சுண்டு விரலின் கீழுள்ள பகுதி வழி) ப்ரதக்ஷிணமாகத் தர வேண்டும். இந்த நாந்தீ ச்ராத்தத்தை எல்லா வ்ருத்தி காலங்களிலும் (கல்யாணம், க்ருஹ ப்ரவேசம், சௌளம், ஸீமந்தம் முதலியன) செய்ய வேண்டும்.
குழந்தை பிறந்த பத்தாம் நாள் தகப்பனே பெயர் வைக்க வேண்டும். குழந்தையின் பெயர் குல தேவதை, குல முன்னோர்களின் பெயரைக் கொண்டதாக இருக்க வேண்டும். சர்ம, வர்ம, குப்த, தாஸ என்ற வார்த்தைகளை முறையே ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்ய, சூத்ர வர்ணங்களில் பிறந்த குழந்தைகளுக்குக் கடைசியில் சேர்க்க வேண்டும். அர்த்தமில்லாமலோ, வெட்கப்படும்படியாகவோ, தீச்சொல்லுடனோ, அமங்களமாகவோ, அருவருப்பாகவோ பெயர் இருக்கக்கூடாது. இரட்டைப்படையில் (புத்ரனுக்கு)எழுத்துக்கள் கொண்டதாயிருக்க வேண்டும். நீண்டோ, குறுக்கியோ, நெட்டெழுத்துக்கள் அதிகமாகவோ, கடின சந்தியுடனோ இருக்கக் கூடாது. எளிதில் உச்சரிக்கக்கூடியதாயிருக்க வேண்டும்.
இதற்குப் பின் உபனயனம் வரை மற்ற கார்யங்களையும் தகப்பனே செய்து வைக்க வேண்டும். அதன் பின் குருவின் க்ருஹத்தில் வஸித்து வேதத்யயனம், குருதக்ஷிணை, வ்ரதங்களை முடித்துக் கொண்டு விரும்பினால் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையேல் குரு, குருபுத்ரனுக்குப் பணிவிடை செய்து கொண்டு ப்ரஹ்மசாரியாகவோ, வானப்ரஸ்தனாகவோ, ஸன்யாஸியாகவோ இறுதி வரை வாழலாம். ஆனால் முடிவை மாற்றி வேறு ஆச்ரமத்திற்கு இடையில் செல்லக்கூடாது.
விவாஹம் செய்து கொள்ள விரும்புபவன் தன் வயதில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேற்படாத வயதுள்ள பெண்ணை மணக்கலாம். அவள் நீண்ட கூந்தலுடனோ, கூந்தலே இல்லாமலோ இருக்கக் கூடாது. கரிய நிறத்திலோ, பசிய நிறத்திலோ, அளவிற்கு அதிகமான அல்லது குறைவான அவயவங்களுடன் இருக்கக் கூடாது. சூத்ரன் முதலோரால் வளர்க்கப்பட்டவள், இழி குலத்திலே பிறந்தவள், உடலில் ரோமம் அடர்ந்தவள், நோயாளி, துஷ்டத்தனமுள்ளவள், தோஷமுள்ள வார்த்தைகளைக் கூறுபவள், தொற்றுநோயுள்ள பெற்றோருக்குப் பிறந்தவள், ஆண்மையின் அடையாளங்களுள்ளவள், கரகரப்பான குரல் படைத்தவள், இளைத்தவள், காக்கைக் குரலுள்ளவள், மயிரடர்த்தி இல்லாத இமைகளுள்ளவள், வட்டமான கண்ணுள்ளவள், உயர்ந்த குதிகாலுள்ளவள், சிரிக்கும் போது கன்னத்தில் அதிக அளவில் குழி விழுபவள்,
அமைதியற்றவள், வெளுத்த நகங்களுள்ளவள், சிவந்த கண்களுள்ளவள், பருத்த கை, கால்களுள்ளவள், குள்ளப் பெண், நெட்டைப்பெண், கூடிய புருவங்களுள்ளவள், பற்களுக்கிடையே இடைவெளியுள்ளவள், பயங்கரமான முகமுள்ளவள், தாய் வம்சத்தில் ஐந்து தலைமுறைக்குட்பட்டவள், தகப்பன் வம்சத்தில் ஏழு தலைமுறைக்குட்பட்டவள் இவர்களை விலக்க வேண்டும். ப்ராஹ்மம், தைவம், ஆர்ஷம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், காந்தர்வம், ராக்ஷஸம், பைசாசம் என்று விவாஹம் எட்டு வகையாகும். ப்ராஹ்மம் என்பது வரனைக் கூப்பிட்டு, சக்திக்கேற்ப கன்னியை அலங்கரித்துக் கொடுத்தல், யாகத்தில் ரித்விக்காக இருப்பவனுக்குக் கொடுப்பது தைவம், இரண்டு எருதுகளைப் பெற்றுக் கொண்டு கன்னியைக் கொடுப்பது ஆர்ஷம், இருவரும் சேர்ந்து தர்மத்தை அனுஷ்டியுங்கள் என்று கொடுப்பது ப்ராஜாபத்யம். பணம் பெற்றுக் கொண்டு பெண்ணைக் கொடுப்பது ஆஸுரம். ஆணும், பெண்ணும் மனம் ஒன்றுபட்டபோதே சேர்தல் காந்தர்வம், பெண்ணைச் சண்டை போட்டு, வென்று தூக்கிக் கொண்டு வருவது ராக்ஷஸம். பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருவது பைசாசம். ப்ராஹ்மணர்கள் ப்ராஹ்ம, தைவ, ஆர்ஷ, ப்ராஜாபத்ய முறைகளிலும், காந்தர்வ, ராக்ஷஸ, ஆஸுர வழிகளில் மற்ற மூவரும் விவாஹம் செய்யலாம். பைசாச விவாஹம் மிகுந்த பாபத்தைத் தருவது.
03_11. ஸகரன் “மஹரிஷி! ஸதாசாரத்தை எனக்குப் போதியுங்கள். ஆசாரங்களைக் கடைபிடிப்பவன் இங்கும், மேலுலகிலும் துன்பம் அடைவதில்லை என்று கூறுகிறார்கள். எனவே அதை எனக்கு அருளுங்கள்” என்று ஔர்வ மஹரிஷியிடம் கேட்கிறான். மஹரிஷி “ஆம், நீ கூறுவது உண்மையே. இரண்டு உலகையும் தரவல்லதே ஸதாசாரம். குற்றமற்ற ஸாதுக்களே ஸத்துக்கள். அவர்களுடைய ஒழுக்கமே ஸதாசாரம் ஆகும். இந்த ஆசாரத்தை ஸப்தரிஷிகளும், மனுக்களும், ப்ரஜாபதிகளும் உபதேசித்தும், அனுஷ்டித்தும் காண்பித்துள்ளார்கள். ஸூர்யோதயத்திற்கு முன் மூன்றாவது முஹூர்த்தமான ப்ராஹ்ம முஹூர்த்தத்தில் அறிவுடையவன் தூக்கத்தை விட்டு எழ வேண்டும். முஹூர்த்தம் என்பது இரண்டு நாழிகைகள் ஆகும். அதாவது விடிவதற்கு ஆறு நாழிகைக்கு முன். எழுந்ததும் தர்மத்தையும், அதன் வழியிலான அர்த்தத்தையும், இவையிரண்டிற்கும் முரண்படாத காமத்தையும் சிந்திக்க வேண்டும்.
பின் க்ராமத்தின் தென் மேற்கு (நிர்ருதி) திசையில் அம்பு பாயும் அளவு தூரம் சென்று மல, ஜலங்களைக் கழிக்க வேண்டும். தன் நிழல், மரத்தின் நிழல், பசு, ஸூர்யன், அக்னி, காற்று, ஆசார்யன், அந்தணன் இவர்களைப் பார்த்துக் கொண்டும், எதிரிலும் கழிக்கக் கூடாது. உழுத நிலத்திலும், பயிர்களுக்கு நடுவிலும், பசுக்கள் இருக்கும் இடத்திலும், மக்கள் கூட்டத்திலும், வழி, நதிக்கரை, நீர்நிலை, சுடுகாடு இவைகளில் கழிக்கக்கூடாது. சங்கடமில்லாத போது பகலிலும், இரவிலும் முறையே வடக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் கழிக்க வேண்டும். அப்போது பூணலை வலக்காதில் சுற்றிக்கொண்டு, அங்க வஸ்த்ரத்தால் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும். பூமியில் சருகுகளைப் பரப்பி அதன் மேலேயே கழிக்க வேண்டும்.
மௌனியாய் கழிக்க வேண்டும். கழித்த இடத்தில் அதிக நேரம் இருக்கக் கூடாது. அதன் பின் சுத்தமான மண்ணால் முன்புறம் ஒரு தடவையும், பின் புறம் மூன்று தடவையும், இடக்கையில் பத்து முறையும், பின் இரு கைகளிலுமாக ஏழு தடவையும் சுத்தம் செய்து கொண்டு, அதன் பின்னே ஜலத்தால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். புற்று மண், ம்ருகங்கள் தோண்டித் தள்ளின மண், தண்ணீருக்குள் இருக்கும் மண், சுத்தம்(சௌசம்) செய்து மீதமான மண், சுவரிலிருந்து எடுத்தது, பூச்சிகள் நிறைந்தது, கலப்பையால் தோண்டப்பட்டது இம்மாதிரியான மண்ணை உபயோகப்படுத்தக்கூடாது. வெறும் ஜலத்தால் மட்டும் சுத்தம் செய்து கொள்ளவும் கூடாது. உபயோகிக்கும் நீரும் தெளிந்ததாக, துர்நாற்றம், நுரை, குமிழிகள் இல்லாததாக இருக்க வேண்டும். இதன் பின் கால்களை மண்ணாலும், நீராலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின், வேறு நீர் நிலைக்கு வந்து மூன்று முறை ஆசமனம் செய்ய வேண்டும்.
பின் அகமர்ஷண ஸூக்தம் முதலானவைகளை ஜபித்து(பஞ்சாங்க) ஸ்னானம் செய்து, ஸந்த்யையை உபாஸிக்க வேண்டும். பின் தலைமயிர்களை உலர்த்துதல், அலங்கரித்தல், கண்ணாடி பார்த்தல் முதலான மங்கள கார்யங்களைச் செய்ய வேண்டும். பணம், பொருளில்லாமல் யாகம் முதலானவைகளையும் செய்ய முடியாது. எனவே தனக்குரிய வழியில் பணத்தை ஈட்ட வேண்டும். இதன் பின் மத்யாஹ்ன ஸ்னானம் நதி, நதம், குளம், தேவதைகளாலுண்டாக்கப்ப்பட்ட நீர்நிலைகள், மலையருவி, இவையேதும் இல்லையேல் கிணறு இவற்றில் செய்ய வேண்டும். முடியவில்லையெனில் வென்னீரிலோ அல்லது மந்த்ர ஸ்னானமோ செய்யலாம். பின் சுத்த வஸ்த்ரங்களை அணிந்து கொண்டு தேவ, ரிஷி, பித்ரு தர்ப்பணங்களைச் செய்ய வேண்டும். அதன் பின் அனைத்துலகங்களிலுமுள்ள ஸகல ஜீவராசிகளின் பொருட்டும் காம்ய தர்ப்பணம் செய்து, மாத்யாஹ்னிகம் செய்து, க்ருஹத்திலிருக்கும் பூஜையை செய்ய வேண்டும்.
சுத்த ஜலத்தால் அபிஷேகித்து, ஆடை, ஆபரண, அலங்காரங்கள் செய்து, தூப தீபம் காண்பித்து, விதவிதமான அன்னங்களை நிவேதனம் செய்ய வேண்டும். இதன் பின் எல்லா இனத்தைச் சேர்ந்த பூதங்களுக்கும் பலி கொடுப்பதற்காக சமைத்த உணவு வகைகளைக் கொண்டு வைச்வதேவத்தைச் செய்ய வேண்டும். அதன் பின் ஒரு மாடு பால் கறக்கும் நேரம் வரை வீட்டிலேயே பொறுத்திருந்து யாராவது அதிதிகள் வருகிறார்களா என்று பார்க்க வேண்டும். வந்தால் வரவேற்று, ஆஸனம் தந்து, கால்களை அலம்பி விட்டு, அன்னமிட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இனிதே பதிலுரைத்து, அவர் செல்லும் வரை கூட இருந்து த்ருப்தி உண்டாக்க வேண்டும்.
குலம், கோத்ரம் தெரியாதவனும், தரித்ரனாகவும், உறவற்றவனாகவும், சாப்பிடும் ஆசையில் இருப்பவனும், ஒரே இடத்தில் இல்லாதவனும், வேறொரு இடத்திலிருந்து வருபவனுமானவனே அதிதி. அவனை ப்ரஹ்மனைப் போல் பாவிக்க வேண்டும். இவனை விட்டுத் தான் மட்டும் உணவுண்பவன் நரகத்திற்குச் செல்கிறான். இதைத் தவிர நிதமும் ஒரு ப்ராஹ்மணனை நித்ய ச்ராத்தத்திற்காகச் சாப்பிடச் செய்ய வேண்டும். அவன் தன்னூரைச் சேர்ந்தவனாகவும், ஆசாரம், குலங்களில் தேர்ந்தவனாகவும், பஞ்சமஹா யக்ஞங்களைச் செய்பவனாகவும் இருக்க வேண்டும். இதன் பின் அன்னத்தைக் கொஞ்சம் “ஹந்த” என்று சொல்லி எடுத்து வைத்து அதை வேதாத்யயனம் செய்திருக்கும் ப்ராஹ்மணனுக்குக் கொடுக்க வேண்டும். ப்ரஹ்மசாரிக்கும், ஸன்யாஸிக்கும் மூன்று கவளங்களுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும்.
குலம் கோத்ரம் தெரியாதவர், வேதாத்யயனம் செய்து யக்ஞங்கள் செய்பவர், ப்ரஹ்மசாரி ஸன்யாஸிகள், வேதாத்யயனம் முதலான காரணங்களுக்காக யாத்ரை வருபவர் என அதிதிகள் இப்படி நான்கு வகையாவர். இவர்களுக்கு அளிக்கும் அன்னத்தை தாதா, ப்ரஹ்மா, இந்த்ரன், வஸுக்கள், அக்னி, ஸூர்யன் ஆகியோர் உண்கின்றனர். இவர்கள் உண்ட பின் கல்யாணம் ஆகி புகுந்த வீடு செல்லாமல் இங்கேயே இருப்பவள், கர்ப்பிணி, முதியோர், சிறுவர்கள் இவர்களை ருசிக்க சாப்பிடச்செய்து அதன் பிறகே தான் உண்ண வேண்டும். இப்படி நீராடி, ஜபித்து, வைச்வதேவம், பஞ்சமஹாயக்ஞங்கள் செய்து உண்பதாலேயே அன்னம் சுத்தியடைகிறது.
இப்படியில்லாமல் நீராடாமல் உண்பவன் மலத்தையும், ஜபம் செய்யாமல் உண்பவன் சீழ், ரத்தம் இவைகளையும், வைச்வதேவம் செய்யாமல் உண்பவன் மூத்ரத்தையும், குழந்தை முதலானோருக்கு முன் உண்பவன் ம்ருகங்களின் மலத்தையும், அதிதிகளுக்குக் கொடாமல் உண்பவன் க்ருமிகளையும், ஹோமம் செய்யாமல் உண்பவன் விஷத்தையும் உண்பதாக ஆகிறான். விதிகளின் படி உண்பவனுக்கு இம்மையில் ஆரோக்யமும், பலமும், பகைவரிடம் பயமின்மையும் கிடைக்கும். நல்ல வாசனைகளையும், புஷ்பங்களையும் தரித்து, கைகளில் ரத்னம் முதலியவைகளை அணிந்து கொண்டு உண்ண வேண்டும். ஒற்றைத் துணியோடு உண்ணக் கூடாது. ஈரமான கை, கால்களோடு உண்ணக் கூடாது. முகத்தை சுத்தம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு உண்ண வேண்டும்.
கிழக்கு, வடக்கு நோக்கி உண்ண வேண்டும். மூலையைப் பார்த்துக் கொண்டோ, கவலையோடோ உண்ணக்கூடாது. உணவு உயர்ந்ததாகவும், இதமாகவும் இருக்க வேண்டும். உணவை சுத்த நீரால் ப்ரோக்ஷித்து விட்டே உண்ண வேண்டும். அங்கஹீனர்கள், வ்யாதியஸ்தர்கள் முதலான அருவருக்கத் தக்கவர்கள் கொண்டுவரும் உணவையும், நன்கு சமைக்கப்படாததையும், ஆஸனங்களிலும், அசுத்தமான இடங்களிலும் வைத்துக் கொண்டும் உண்ணக்கூடாது. கோபதாபங்களின்றி சுவைத்து உண்ணும் நினைவுடன் உண்ண வேண்டும். நெருப்பில் பக்வம் செய்யாததைத் தவிர (பழம், கிழங்கு, பக்ஷணங்கள்) பழையதை உண்ணக்கூடாது. சத்தில்லாததை உண்ணக்கூடாதது. தேன், தண்ணீர், தயிர், நெய் இவை தவிர வேறெதையும் மீதமானால் உண்ணக்கூடாது.
முதலில் இனிப்பு, நடுவில் புளிப்பு, உப்பு, பின் கசப்பு, காரம் இப்படி உண்ண வேண்டும். முதலில் த்ரவம், பின் கடினம், பின் மறுபடி த்ரவம் என்று உண்ண வேண்டும். சாஸ்த்ரம் அனுமதிக்காதவற்றை உண்ணக்கூடாது. உண்ணும் போது பேசக் கூடாது. ப்ராண, அபாண, வ்யான, உதான, ஸமான என்ற ஐந்து ப்ராணன்களுக்காக முதல் ஐந்து பிடிகளை உண்ண வேண்டும். உத்ராபோசனத்திற்குப் பிறகு கைகளை முழங்கை வரை சுத்தம் செய்து, முகத்தையும், கால்களையும் அலம்பிக் கொண்டு, கிழக்கு அல்லது வடக்கு பார்த்து ஆஸனத்தில் அமர்ந்து சாந்தமாக, ஓய்வாக இஷ்ட தேவதைகளை த்யானிக்க வேண்டும்.
காற்றால் வளர்க்கப்பட்ட அக்னி, ஆகாசத்துடன் கூடிய (வயிறு முட்டாம சாப்பிட்டிருந்தால்)அன்னத்தை ஜரித்து, அதன் சாரத்தால் என் சரீரத்தைப் காத்து, வளர்த்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். நான் உண்ட அன்னம் என் உடலிலுள்ள பூமி, ஜலம், அக்னி, காற்று ஆகிய பூதங்களுக்கு பலத்தைத் தந்து எனக்கு சுகத்தை உண்டாக்கட்டும். மேலும் ஐந்து ப்ராணன்களுக்கும் புஷ்டியைத் தந்து எனக்குக் குறைவற்ற சுகத்தை உண்டாக்கட்டும். வயிற்றில் இருக்கும் அக்னியும், வடவாக்னியும் அன்னத்தை ஜரிக்கச் செய்து அதன் வளர்ச்சியால் எனக்கு சுகத்தையும், ஆரோக்யத்தையும் உண்டாக்கட்டும். விஷ்ணு ஒருவனே இந்த்ரியங்களுக்கும், உடல்களுக்கும் ஆத்மா. முதற்பொருள் அவனே. கல்யாண குணங்களை உடையவன் அவனே. இந்த உண்மை நான் உண்ட உணவை ஜீர்ணமாக்கி, எனக்கு நலம் தரும் வகையில் பரிணாமத்தை அடையட்டும். உண்பவனும், உணவும், அதன் பரிணாமமும் விஷ்ணுவே என்ற உண்மையாலும் நான் உண்ட உணவு ஜீர்ணமாகட்டும்.
மேற்கண்ட பத்தியின் பொருளுள்ள ச்லோகம் மூலத்தில் உள்ளது. அந்த ஆறு ச்லோகங்களையும் சொல்லி தன் கையால் வயிற்றைத் தடவ வேண்டும். அதன் பின் உடலுக்கும் உள்ளத்துக்கும் தளர்ச்சியைத் தரும் வேலைகளைச் செய்யாமல், எளிய வேலைகளாகச் செய்து கொண்டு சிறிது நேரம் இருக்க வேண்டும். பின் ஸாயங்காலம் மீண்டும் ஸந்த்யையை ஸ்திரமாக உபாஸிக்க வேண்டும். காலையில் ஸூர்யன் உதிக்கும் முன்பும், மதியம் ஸூர்யன் உச்சியில் இருக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் முன்னும் உபாஸிக்க வேண்டும். ப்ரஸவம், இறப்பு, சித்தப்ரமை, வ்யாதி, பயம் இவைகளால் பாதிப்பில்லாத காலங்களில் ஸந்த்யையுடன் ஸூர்ய உபஸ்தானத்தைத் தவறாமல் செய்யவேண்டும்.
ஸந்த்யா காலங்களில் தூங்கக்கூடாது. தவறினால் தகுந்த ப்ராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும். அதுவும் செய்யாதவர்கள் தாமிஸ்ர நரகத்தை நிச்சயம் அடைவர். ஸாயம் ஸந்த்யோபாஸனைக்குப் பின் மீண்டும் வைச்வதேவ பலிகளைப் பத்னியுடன் செய்து, அதிதி பூஜைகளைச் செய்து, பின் தான் சாப்பிட்டு, கை, கால்களை அலம்பிக் கொண்டு ஆசமனம் செய்து விட்டு படுக்கைக்குச் செல்ல வேண்டும். பகலில் அதிதி பூஜை செய்யாததை விட இரவில் அதிதி பூஜை செய்யாதோருக்கு எட்டு மடங்கு அதிக பாபம் உண்டாகும். எனவே முடிந்த அளவு வரவேற்று, உபசரித்து, உணவு, நீர் தந்து, ஆஸனம், படுக்கை, படுக்க இடம் இவற்றைச் செய்ய வேண்டும்.
யானைத் தந்தத்தாலான கட்டிலில் படுத்துறங்குவது நன்று. இல்லாத போது விரிசல்கள், மேடு, பள்ளங்கள், அழுக்கு, பூச்சி, எறும்பு போன்ற குறைகள் இல்லாமல் ஒரு சிறந்த மரத்தால் ஆன கட்டிலில் மேல் விரிப்பு விரித்து கிழக்கிலோ, தெற்கிலோ தலை வைத்து படுக்க வேண்டும். மற்ற திசைகள் நோயைத் தரும். க்ருஹஸ்தன் ருது காலத்தில் (வீட்டு விலக்கு முடிந்து ஸ்னானம் செய்த நான்காம் நாளிலிருந்து பதினாறு நாட்கள்), ஆண் நக்ஷத்ரத்தில் (அச்வினி, க்ருத்திகை, ரோஹிணி, புனர்வஸு, புஷ்யம், ஹஸ்தம், அனுஷம், ச்ரவணம், பூரட்டாதி, உத்ரட்டாதி ஆகிய பத்து நக்ஷத்ரங்கள்), சுப காலத்தில், இரட்டைப்படை தினங்களில் மனைவியைச் சேர்வது சாலச் சிறந்தது.
அப்போதும் மனைவி அனுகூலமாகவும், நோயில்லாமலும், ரஜஸ்வலையாக(விலக்காக)இல்லாமலும், இருவரும் கோபம், அசௌகர்யம் முதலியன இல்லாமலும், கர்ப்பிணியாக இல்லாமலும், சக்தியோடும், வேறொருவரிடம் ஆசையின்றியும், தன்னிடம் ஆசையோடும், பசியில்லாமலும், அதிகமாக உணவுண்ணாமலும் இருக்க வேண்டும். (சரியாப் போச்சு, மாஸத்துக்கு ஓரிரு நாள் தான் தேறும், எல்லாமே அளவு தான் போல). நீராடி, மாலை, சந்தனம் முதலியவைகளை அணிந்து மகிழ்ச்சியோடு, மித ஆகாரம் உண்டு, ஆசையோடும், அன்போடும் மனைவியை (மட்டும்) சேர வேண்டும். சதுர்தசி, அஷ்டமி, அமாவாஸ்யை, பௌர்ணமி, மாஸப்பிறப்பு ஆகிய காலங்களை விலக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், மாம்ஸம் உண்டிருப்பதுவும் விலக்கவேண்டியவைகளே. இவைகளை மீறுபவன் விண்மூத்ர போஜனம் என்னும் நரகத்தை அடைவான். இப்படி விலக்கிய காலங்களில் இருவரும் ஆராதனைகளிலும், த்யானமும், ஜபமும், நல்ல பேச்சுக்களாலும் காலத்தைக் கழிக்க வேண்டியது. அடுத்தவர் மனைவியோடும், ம்ருகங்களோடும் சேரக்கூடாது. கோவில், ப்ராஹ்மணர்கள் மற்றும் ஆசார்யர்களின் இருப்பிடங்களில் சேரக்கூடாது. புண்ய தீர்த்தம், மாட்டுக்கொட்டில், ஜனங்கள் கூடுமிடம், சுடுகாடு இவைகளைச் சேர்ந்த நந்தவனங்கள், ஜலம், தரை இவைகளோடும், இந்த இடங்களிலும் சேரக்கூடாது. ஸந்த்யா காலங்கள், இயற்கை உபாதையோடு இருக்கும் போது (மல, ஜல விஸர்ஜனம் செய்யும் உணர்ச்சி தோன்றும் போது)சேரக்கூடாது. இவைகளை மனதாலும் மனதாலும் நினைக்கக் கூடாது. மிகுந்த பாபமும், கடும் நோயும், பழியும் இவற்றால் உண்டாகும். நரகத்திலும் உழன்று மீண்டும் புழுக்களாகப் பிறப்பர்.
03_12. க்ருஹஸ்தன் தேவதைகள், பசுக்கள், ப்ராஹ்மணர்கள், ஸித்தி பெற்றவர், பெரியோர் இவர்களை எப்போது பூஜிக்க வேண்டும். ஸந்த்யோபாஸனை செய்ய வேண்டும். அக்னி பூஜை செய்ய வேண்டும். நல்ல வஸ்த்ரங்களையே அணிய வேண்டும். விஷத்தைப் போக்கும் மூலிகைகளையும், ரத்னம் முதலானவைகளையும் அணிய வேண்டும். தலைமயிரையும், சரீரத்தையும் அழுக்கின்றி அலங்கரித்துக் கொள்ள வேண்டும். மல்லிகை போன்ற அழகிய வெண்ணிறம் கொண்ட பூக்களை அணிந்திருக்க வேண்டும். பிறர் பொருளை அபகரிக்கக்கூடாது. ப்ரியமான, உண்மையான பேச்சுக்களையே பேச வேண்டும். குறை கூறக்கூடாது. பிறர் மனைவியையும், அடுத்தவருடன் பகையையும் விலக்க வேண்டும். துஷ்ட வாகனம், வெள்ளம் அரித்த ஆற்றங்கரை, பகைவன், தாழ்ந்தவன், பித்தன், பலருக்குப் பகைவன், துன்புறுத்துபவன், துஷ்ட பெண்களோடு சேர்ந்தவன், அற்பன், பொய்யன், அதிக செலவு செய்பவன், கோள் சொல்பவன், இல்லாதவரைப் பேசுபவன், வஞ்சகன் இவற்றையும் விலக்க வேண்டும். துணையின்றி செல்லக்கூடாது.
வெள்ளத்திற்கு எதிராக நீந்துதல், எரியும் வீட்டில் நுழைதல், மரத்தின் உச்சி, பற்களைக் கடித்தல், மூக்கை உயரத்தேய்த்தல், வாயைத் திறந்து கொட்டாவி விடுதல், பெருமூச்சு விடுதல், இருமல், சப்தம் போட்டு சிரித்தல், ஓசையோடு அபானன் வெளியிடுதல், நகம் கடித்தல், துரும்புகளைக் கிள்ளுதல், தரையில் எழுதுதல், மீசையைக் கடித்தல், உதட்டைக் கசக்குதல் இவற்றையும் விலக்க வேண்டும். அசுத்தமான, கெடுதல் தரும் வெளிச்சங்கங்களைப் பார்க்கக்கூடாது. அம்மணமாயிருக்கும் பெண்களைப் பார்க்கக் கூடாது. உதயாஸ்தமய காலங்களில் ஸூர்யனைப் பார்க்கக்கூடாது.
பிணத்தையும், பிணப்புகையையும் அருவருக்கக் கூடாது. சரீரம் சுக்ல, சோணிதமயம். இதில் சுக்லம் எனும் உஷ்ணம் அக்னியின் அம்சம். சோணிதம் எனும் ரஸம் சந்த்ரனின் அம்சம். அக்னியின் அம்சமான சுக்லம் இறக்கும் போது ப்ராணனோடு சென்று விடுகிறது. மீதமிருக்கும் சோணிதம் எரிக்கும் போது வாஸனையாக வருகிறது. எனவே அதை அருவருக்கக் கூடாது. இரவில் நாற்சந்தி, மேடை கட்டி பூஜிக்கப்படும் வேம்பு, அரசு முதலான மரங்கள், சுடுகாடு, உத்யான வனம்(பூங்கா), துஷ்ட ஸ்த்ரீ இவைகளை விலக்க வேண்டும். பூஜைக்குரியவர், தேவதை, ப்ராஹ்மணர்கள், நெருப்பு இவற்றின் நிழலைக் குறுக்காகத் தாண்டிச் செல்லக் கூடாது. பாழுங்காடு, பாழும் வீடு இவற்றில் வஸிக்கக் கூடாது.
மயிர், எலும்பு, முள், அசுத்தம், பலியிட்ட பொருள்களில் சாம்பல், உமி இவைகளை மிதிக்கக் கூடாது. ஸ்னானம் செய்த நீரால் நனைந்த தரையை மிதிக்கக் கூடாது. அயோக்யர் ஸஹவாஸம் கூடாது. சூது முதலானதை மனதாலும் நினைக்கக்கூடாது. மதம் பிடித்த யானை, பாம்புகளை பின் தொடரக்கூடாது. அவற்றின் எதிரேயும் நிற்கக்கூடாது. அதிகமாகக் கண் விழிப்பது, அதிகம் தூங்குவது, நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருப்பது, படுத்திருப்பது, அதிகம் வருந்தி வேலை செய்வது இவைகளை விலக்க வேண்டும். பல்லாலும், கொம்பாலும் துன்புறுத்தும் ப்ராணிகள், பனி, எதிர் காற்று, எதிர் வெயில் இவைகளை விலக்க வேண்டும். அம்மணமாகவோ, கச்சமின்றியோ, ஒற்றைத் துணியோடோ நீராடவோ, உறங்குவோ, ஆசமனம் செய்யவோ, பூஜை செய்யவோ கூடாது. இவைகளைக் கச்சத்துடனும், மேல் வஸ்த்ரத்தோடுமே செய்ய வேண்டும்.
நல்லவரோடு அரை நிமிஷம் கூடியிருத்தலும் நலமே. உயர்ந்தவர்களோடும், தாழ்ந்தவர்களோடும் பகை கொள்ளக் கூடாது. விவாஹமும், விவாதமும் சம அந்தஸ்து உடையவருடனேயே செய்ய வேண்டும். கலகத்தை ஆரம்பிக்கக் கூடாது. லாபம் கருதிக் கூட விரோதம் பாராட்டக்கூடாது. பகையால் வரும் நஷ்டத்தைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். லாபம் வருமென்றாலும் பகையை கொள்ளக்கூடாது. ஸ்னானத்திற்குப் பின் துண்டினால் உடம்பைத் துடைத்துக் கொள்ள வேண்டும். மயிரை அடுத்தவர் மேல் நீர் படும் படி உதறக்கூடாது. நின்று கொண்டு ஆசமனம் செய்யக் கூடாது. ஒருகாலால் மற்றொரு காலை மிதிக்கக்கூடாது. பெரியவர் முன் கால் நீட்டக்கூடாது.
குருவின் முன்னிலையில் உட்காரவோ, படுக்கவோ கூடாது. அவர் அமர்ந்த பின் அனுமதி பெற்று தாழ்ந்த ஆஸனத்தில் அமரலாம். கோவில், நாற்சந்தி, மங்களப் பொருள்கள் இவைகளைக் கண்டால் ப்ரதக்ஷிணமாகச் செல்ல வேண்டும். மற்றவற்றை ப்ரதக்ஷிணமாகச் செல்லக்கூடாது. ஸூர்யன், சந்த்ரன், அக்னி, நீர், காற்று, பெரியவர்கள் இவர்களுக்கு எதிரில் காறி உமிழவோ, மல ஜல விஸர்ஜனமோ கூடாது. நின்று கொண்டோ, வழியிலோ மல ஜல விஸர்ஜனம் கூடாது. கோழை, மல ஜலம், ரத்தம் இவைகளை மிதிக்கக்கூடாது. போஜன காலம், பலி காலம், ஹோம, ஜப காலம், மங்கள காலம், ஜனங்கள் திரண்டிருக்கும் காலம் இவைகளிலும் துப்புதல் முதலியன கூடாது.
பெண்களை இகழவோ, நம்பவோ, பொறாமை கொள்ளவோ, அனாதரவு செய்யவோ கூடாது. ஏழைகளுக்கு உதவ வேண்டும், பெரியோர்களைச் சார்ந்திருக்க வேண்டும். மனவடக்கத்தோடும், இதமாகவும், ப்ரியமாகவும் தகுந்த காலத்தில் அளவோடு சொல்ல வேண்டும். பகுத்தறிவு, தகாத கார்யங்களைச் செய்வதில் வெட்கம், பொறுமை, வேதத்தில் நம்பிக்கை, கல்வியாலும் குலத்தாலும் மேன்மை, மேம்பட்டவர்களிடம் அடக்கம் இவைகள் வேண்டும். அகாலத்தில் இடி இடிக்கும் போதும், அமாவாஸ்யை, பௌர்ணமி, தீட்டு காலங்களிலும் வேதம் ஓதாமல் இருக்க வேண்டும்.
கோபம் கொண்டவர்களை மேலும் கிளப்பி விடாமல் (உசுப்பேத்தறது) சாந்தி அடையச் செய்தல், பொறாமை முதலான குணங்களின்றி எவரிடமும் உறவு கொள்ளுதல், அஞ்சியவர்களுக்கு ஆறுதல் அளித்தல் இவைகளைச் செய்தால் ஸ்வர்கத்திலும் சிறப்பை அடையலாம். இந்தச் செயல்களுக்கு ஸ்வர்கமும் ஈடாகாது. குடை, தடி, செருப்பு முதலியவைகளை காலங்களில் உபயோகிக்க வேண்டும். மேலேயோ, பக்க வாட்டிலோ, வெகு தூரத்திலோ வேடிக்கை பார்த்துக் கொண்டு நடக்கக்கூடாது. ஒரு நுகத்தடி (மாட்டு வண்டி சக்கரத்தின் மையத்திலிருந்து கட்டியிருக்கும் மாட்டின் கழுத்து வரையிலான தூரம், எப்டி சொல்றேன் பாத்தீங்களா) வரையிலான வழியை நன்கு பார்த்து கொண்டு செல்ல வேண்டும்.
இப்படிச் சிறந்த அறிவோடு, நல்லொழுக்கத்தோடு, கல்வி, கேள்விகளில் சிறந்திருந்து தனக்குத் தீங்கு நினைப்பவருக்கும், கோள் சொல்பவருக்கும், கடுஞ்சொல் சொல்பவருக்கும் நட்பு பாராட்டி, இனிய சொல் கூறி நடந்து வருபவனுக்கு மோக்ஷம் கையில் உள்ளது. இவர்களாலேயே உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது. உண்மையைக் கூற வேண்டும், அதுவும் அடுத்தவருக்கு ப்ரியமாக, நன்மை தரக்கூடியதாய் இருக்க வேண்டும், அதையும் இனிமையாகக் கூற வேண்டும். இதையே படித்தவன் மனதாலும், வாக்காலும், உடலாலும் செய்ய வேண்டும். இதில் எதாவது ஒன்று தவறுமானால், அந்த சமயத்தில் (கருத்து கூறாமல்) பேசாமல் இருப்பதே மேல்.
03_13. ஒருவன் புத்ரன் பிறந்ததும் உடுத்தியிருக்கும் துணியோடு ஸ்னானம் செய்ய வேண்டும். ஜாதகர்மா, அப்யுதய ச்ராத்தம் இவைகளைச் செய்ய வேண்டும். தேவர்கள், பித்ருக்கள் ஸ்தானத்தில் இரட்டையாக ப்ராஹ்மணர்களை வரித்து, கவனத்துடன் அவர்களை ப்ரதக்ஷிணமாகப் பூஜித்து, போஜனம் செய்விக்க வேண்டும். பின் இலந்தை, தயிர், அக்ஷதை இவைகள் கலந்த பிண்டங்களை கிழக்கு அல்லது வடக்கு முகமாக தேவ அல்லது ப்ரஹ்ம தீர்த்தத்தால் தர வேண்டும். இந்த ச்ராத்தத்தால் நாந்தீமுக பித்ருக்கள் த்ருப்தி அடைகின்றனர். குழந்தைகளின் கல்யாணங்களிலும், க்ருஹப்ரவேசம், நாமகரணம், சௌளம், ஸீமந்தம், உபனயனம், மற்ற சுபகாலங்கள், தேசாந்திரம் சென்று வந்த புத்ர, பௌத்ரர்களைப் பார்க்கும் போதும், வ்ருத்திகளிலும் இந்த நாந்தீ ச்ராத்தத்தைச் செய்ய வேண்டும்.
ஒருவன் மரணமடைந்தால், சரீரத்தை தீர்த்தங்களால் நீராட்டி, மாலை முதலியவைகளால் அலங்கரித்து, க்ராமத்திற்கு வெளியில் தஹனம் செய்து நீர் நிலைகளில் கட்டியிருக்கும் துணியுடன் ஸ்னானம் செய்ய வேண்டும். பின் தெற்கு முகமாய் கோத்ரத்தையும், பெயரையும் சொல்லி தர்ப்பணம் செய்ய வேண்டும். மாலையில் மாடுகள் வரும் போதோ, நக்ஷத்ரங்கள் தெரியும்போதோ வீட்டினுள் நுழைய வேண்டும். படுக்கையில் படுக்கக் கூடாது. தரையிலேயே புல் முதலியவைகளைப் பரப்பிப் படுக்க வேண்டும். தீட்டு முடியும் வரை தினமும் தரையில் பிண்டத்தை இறந்தவனுக்காக தர வேண்டும். இந்த பிண்டம் இடுகிறவன் பகலில் மட்டும் தான் உண்ண வேண்டும். மாம்சம் உண்ணக்கூடாது. உறவினர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கிணங்க உணவிட வேண்டும். அவர்கள் த்ருப்தியடைந்தால் இறந்தவனும் த்ருப்தி அடைகிறான்.
இறந்த முதல் நாள், மூன்றாம், ஏழாம், ஒன்பதாம் நாள் கட்டியிருக்கும் ஆடையை விட வேண்டும். ஊருக்கு வெளியில் ஸ்னானம் செய்து எள்ளுடன் தீர்த்தம் விட வேண்டும். நான்காம் நாள் அஸ்தி ஸஞ்சயனம் (எலும்புகளை எடுத்தல்) செய்ய வேண்டும். இதன் பின் கர்த்தா ஸபிண்டர்களைத் (ஏழு தலைமுறைக்கு உட்பட்டவர்கள்) தொட்டாலும் தோஷமில்லை. ஏழு தலைமுறைக்கு அப்பாற்பட்டவர்கள் ஸமான உதகர்கள். இவர்கள் ஔபாஸனம் முதலான எல்லா கர்மாக்களையும் செய்யலாம். ஆனால் போகங்களான அலங்கரித்துக் கொள்ளல், சந்தனம் பூசிக் கொள்ளுதல், பூச்சுடுவது முதலியன கூடாது. ஸஞ்சயனத்திற்குப் பின் ஸபிண்டர்களோடு படுத்துக்கொள்ளலாம், உட்கார்ந்துக் கொள்ளலாம். ஸ்த்ரீ போகம் கூடாது.
சிறுவன், மஹா நதி, பர்வதம், பாஷை இவைகளால் வேறுபட்ட தேசங்களிலிருப்பவன், ஜாதி மற்றும் குலாசாரங்கள் நீங்கிய பதிதன், ஸன்யாஸி இவர்கள் இறந்தால் ஸ்னானத்திலேயே தீட்டு கழிந்து விடும். அதன் பின் தீட்டு கிடையாது. தற்கொலை செய்து கொண்டாலும் இவ்வாறே. தவறி நடந்துவிட்டால் தீட்டு உண்டு. பந்துக்களுக்குப் பத்து நாளும் (க்ஷத்ரியர்களுக்குப் பனிரெண்டு நாள், வைச்யர்க்குப் பதினைந்து நாள், வேளாளர்க்கு ஒரு மாதம்)தீட்டு உண்டு. ப்ராஹ்மணர்கள் தங்களின் ஆறு செயல்களையும் இந்த காலத்தில் விட வேண்டும். இவ்வாறு தீட்டு காலம் முடிந்த மறு நாள் (பதினோறாம் நாள் முறையே) ஒற்றைப்படையில் ப்ராஹ்மணர்களைப் புஜிக்கச் செய்து, அவர்களின் இலைக்கருகில் தர்ப்பைகளைப் பரப்பி, அதில் இறந்தவனுக்காகப் பிண்டத்தை வைக்க வேண்டும். இப்படியாக ஏகோத்திஷ்ட ச்ராத்தத்தை முடிக்க வேண்டும்.
இதற்குப் பின் தீட்டுடையவன் தீர்த்தத்தையும்(ப்ராஹ்மணன்), ஆயுதத்தையும்(க்ஷத்ரியன்), தாற்றுக்கோலையும்(மாடு, குதிரை மேய்க்கும் சாட்டை- வைச்யர்), தடியையும் (சூத்ரன்) தொட்டு சுத்தி அடைகிறார்கள். இதன் பின் தத்தம் தர்மங்களை ஒட்டிச் செல்லலாம். இதன் பின் கர்த்தா மாதந்தோறும் இறந்த திதியில் ஏகோத்திஷ்ட முறையில் (ஆஹ்வானம், அக்னௌகரணம், வைச்வதேவிக விப்ரநிமந்த்ரணம் முதலியன விடுத்து) ச்ராத்தம் செய்ய வேண்டும். ஒரே பவித்ரத்துடன், ஒரே அர்க்யம் கொடுக்க வேண்டும். ப்ராஹ்மணர்கள் புஜித்த பின் பிண்டம் தர வேண்டும். புஜித்த ப்ராஹ்மணர்களை நோக்கி அபிரம்யதாம் (ஸந்தோஷத்தில் திளைக்கிறீர்களா) என்று கர்த்தா கேட்க, அவர்கள் அபிரதா: ஸ்ம: (ஸந்தோஷம் தான்) என்று பதில் சொல்ல வேண்டும். ச்ராத்த முடிவில் இன்னாருக்கு அக்ஷய்யம் என்று சொல்ல வேண்டும்.
இப்படி ஏகோத்தர விதிப்படி ஒரு வருஷம் முழுதும் ஒவ்வொரு மாதமும் மாஸிகம் செய்து, பின் ஸபிண்டீகரணம் (பனிரெண்டாவது நாளிலோ, ஆறாம் மாதமோ அல்லது வருஷ முடிவிலோ) செய்ய வேண்டும். இந்த ச்ராத்தத்தில் பித்ருக்களுக்கு மூன்று அர்க்ய பாத்ரங்களும், ப்ரேதனுக்கு ஒன்றும் எள், சந்தனம் இவைகளோடு வைக்க வேண்டும். ப்ரேத பாத்ரத்திலுள்ளதை பித்ரு பாத்ரங்களில் கலக்க வேண்டும். இதன் பின்னேதான் அவன் ப்ரேதத் தன்மையிலிருந்து பித்ரு தன்மையை அடைகிறான். இதன் பின் அவனை முதலாகக் கொண்டு மூன்று பித்ருக்களை ச்ராத்தத்தில் அர்ச்சிக்க வேண்டும். புத்ரன், பௌத்ரன், ப்ரபௌத்ரன், ஸஹோதரன், அவனுடைய ஸந்ததி, ஸபிண்டர்களுடைய ஸந்ததி, ஸமான உதகர்களுடைய ஸந்ததி, தாய் வழி ஸபிண்டர்களின் ஸந்ததி, தாய் வழி ஸமான உதகர்களின் ஸந்ததி இவர்களில் முந்தையவர்கள் இல்லாத போது பின்னிருப்பவன் முறையே கர்மாவைச் செய்யலாம்.
இரண்டு வம்சத்திலும் ஒருவரும் இல்லையெனில் ஸ்த்ரீ, கூடப்படித்தவன், இறந்தவன் பணத்தைக் கொண்டு அரசனும் கர்மாவைச் செய்யலாம். பிணத்தைக் கொளுத்துவது முதல் ஜலத்தைத் தொடுவது வரை பூர்வ க்ரியைகள் என்றும், மாதாமாதம் செய்யும் மாஸிகம் முதலியவைகள் மத்யமங்கள், ஸபிண்டீகரணத்திற்குப் பின் நடப்பவை உத்தர க்ரியைகள் என்று மூன்று வகையில் அழைக்கப்படுகின்றன. பூர்வ க்ரியைகளை தந்தை, தாய் வழி ஸபிண்ட, ஸமானோதக, ஸஹாத்யாயி, அரசன் இவர்கள் செய்யலாம். உத்தர க்ரியைகளை புத்ர, பௌத்ர, தௌஹித்ர, அவர்களின் புத்ரர்களோ தான் செய்ய வேண்டும். வேறு எவரும் செய்வதற்கு உரியவர் அல்லர். மத்யம க்ரியைகளை இருவரில் எவரும் செய்யலாம். ஸ்த்ரீகள் இறந்தாலும் இப்படியே.
03_14. ச்ரத்தையுடன் செய்யப்படுவதே ச்ராத்தம். இதனால் ப்ரஹ்மா முதல் அனைத்து தேவர்களும், பித்ருக்களும், ம்ருகங்களும், பறவை முதலான அனைத்து ஜீவராசிகளும், அனைத்து பூதங்களும் மகிழ்கின்றன. எனவே க்ருஷ்ண பக்ஷத்திலும், அமாவாஸ்யை, அஷ்டகைகளிலும் ச்ராத்தம் செய்ய வேண்டும். ச்ராத்தத்திற்கு உரிய பொருளோ, ப்ராஹ்மணனோ கிடைக்கும் போதும், வ்யதீபாதம், அயனம், விஷுவம், க்ரஹணங்கள், பனிரெண்டு ராசிகளில் ஸூர்யன் ப்ரவேசிக்கும் காலம், நக்ஷத்ரங்கள் மற்றும் க்ரஹங்களுக்குப் பீடை ஏற்படும் காலம், துர் ஸ்வப்னம், புதிய தான்யங்கள் வரும் காலம் இவைகளில் காம்ய ச்ராத்தத்தைச் செய்யலாம்.
அனுஷம், விசாகம், ஸ்வாதீ நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை கூடி வரும் காலங்களில் செய்யும் ச்ராத்தத்தால் பித்ருக்கள் எட்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும், திருவாதிரை, புனர்வஸு, புஷ்ய நக்ஷத்ரங்களில் அமாவாஸ்யை வந்திருக்கும் போது செய்தால் பனிரெண்டு வருஷங்கள் நிலைத்திருக்கும் த்ருப்தியையும் பெறுகின்றனர். அவிட்டம், சதயம், பூரட்டாதிகளில் அமாவாஸ்யை வந்திருந்தால் அன்று செய்யும் ச்ராத்தம் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கூடி த்ருப்தி அளிக்கக்கூடியது. வைகாசி மாஸ சுக்ல பக்ஷ த்ருதீயை, கார்த்திகை சுக்ல பக்ஷ நவமி, புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாக மாஸ அமாவாஸ்யை இன்னான்கு திதிகளும் யுகாதிகள். யுகாதிகளிலும், க்ரஹணங்களிலும், மூன்று அஷ்டகைகளிலும், அயனங்களிலும் எள்ளுடன் கலந்த தீர்த்தத்தை பித்ருக்களுக்காக விடுபவன் ஆயிரம் வருஷங்கள் ச்ராத்தங்கள் செய்த பலனைப் பெறுகிறான்.
மாசி அமாவாஸ்யை சதயத்தில் வந்தால் அது பித்ருக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும். அவிட்டத்தில் வந்தால் அப்போது அன்ன, தீர்த்தத்தைப் பித்ருக்களுக்குத் தர வேண்டும். இது பத்தாயிரம் வருஷ பித்ரு த்ருப்தியைத் தரும். பூரட்டாதியில் வரும் மாசி மாஸ அமாவாஸ்யையில் ச்ராத்தம் செய்தால் பித்ருக்கள் ஆயிரம் யுகங்கள் வரை கவலையின்றி தூங்குகிறார்கள். கங்கை, சதத்ரூ, யமுனை, வ்யாஸை, ஸரஸ்வதீ, நைமிசாரண்யத்திலுள்ள கோமதீ தீர்த்தங்களில் நீராடி, பித்ரு பூஜை செய்வது ஸகல பாபங்களையும் போக்கும். நாம் எப்போது புரட்டாசி க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி, மாசி அமாவாஸ்யையில் புத்ரர் தரும் தர்ப்பண தீர்த்தத்தைப் பெறுவோம் என்று பித்ருக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
பித்ருபக்தியில் சிறந்த புரூரவஸிடம் ஸனத்குமாரர் கூறிய பித்ரு கீதை: ஒருவனுக்கு சுத்தமான மனமும், நல்வழியில் ஈட்டிய பணமும், சிறந்த காலமும், சாஸ்த்ர விதிகளும், ஸத்பாத்ரமும், பக்தியும் கூடிவருமோ அவை அவன் விரும்புவதை நிறைவேற்றும். நம் குலத்துதித்த புத்திமானான புண்யன் செல்வ நிலைக்குத் தகுந்தாற்போல் கபடமின்றி நமக்குத் தவறாமல் ச்ராத்தம் செய்ய வேண்டும். வசதி மிகுந்தவன் வஸ்த்ர, போஜன, தங்கம், வெள்ளி, ரத்னங்கள், வாகனங்கள் எனக் கொடுத்தும், வசதியில்லாதவன் உணவளித்தும், அதுவும் இல்லையேல் ஆமத்தையும் (பாகம் செய்யாத தான்யங்கள்), அதற்கும் வழியில்லையேல் தக்ஷிணையோ, கடைசியில் கொஞ்சம் எள்ளையோ ப்ராஹ்மணர்களுக்குத் தரவேண்டும்.
இதற்கும் வழியில்லையேல் ஏழெட்டு எள்ளுடன் கூடிய தீர்த்தத்தையாவது பூமியில் விட வேண்டும். இதற்கும் கீழ் ச்ரத்தையோடு ஒரு வேளை பசுக்களுக்கு த்ருப்தி அளிக்கும் வரை புல் முதலானவைகளைக் கொடுக்க வேண்டும். இதுவும் முடியாவிடில் காட்டில் போய் கைகளை உயரத் தூக்கிக் கொண்டு ஸூர்யன் முதலான லோக பாலர்களைப் பார்த்துக் கொண்டு “என்னிடம் ச்ராத்தம் செய்ய பொருள் இல்லை. பித்ருக்களை வணங்குகிறேன். என் பக்தியால் பித்ருக்கள் த்ருப்தியடைய வேண்டும். என் கைகளை வாயு மார்க்கத்தில் உயரத் தூக்கியுள்ளேன்” எனக் கதற வேண்டும். இப்படி சக்திக்கேற்ப ச்ராத்தம் செய்பவன் நம் குலத்தில் பிறக்க வேண்டும் என்று பித்ருக்கள் கூறுகிறார்கள் என்று ஸனத்குமாரர் புரூரவஸுக்குக் கூறியதாக ஸகரனுக்கு ஔர்வர் கூறுகிறார்.
03_15. இரண்டாம் காடகத்தில் அயம் வாவய: பவதே என்பது முதலான மூன்று நசிகேத அனுவாகங்களையும், மூன்று மது ரிக்குகளையும், ப்ரஹ்மமேது மா முதலான த்ரிஸுபர்ண அனுவாகங்களையும் அத்யயனம் செய்து அதன் படி நடப்பவனும், ஆறு அங்கங்களோடு வேதாத்யயனம் செய்தவனும், வேதத்தின் பொருளை அறிந்தவனும், அதன்படி நடப்பவனும், ப்ரப்ரஹ்ம த்யானம் செய்பவனும், ஜ்யேஷ்டமென்னும் ஸாமத்தைப் பாடுபவனுமே ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கத் தக்கவன். இவர்கள் கிடைக்காவிடில் ரித்விக், ஸஹோதரியின் புத்ரன், தௌஹித்ரன், மாப்பிள்ளை, மாமனார், மாமா, தவம் செய்வோர், பஞ்சாக்னி உபாஸகர், சிஷ்யர், ஸம்பந்தி, பெற்றோரைப் பூஜிப்பவன் இவர்களை வரிக்கலாம்.
மித்ர த்ரோஹம் செய்தவன், பிறவியிலேயே சொத்தை நகம் உடையவன், நபும்ஸகன், இயற்கையிலேயே சொத்தையான, கரும்பற்களை உடையவன், கன்னியைக் கெடுத்தவன், காரணமின்றி வேதத்தையும் அக்னியையும் விட்டவன், ஸோம விக்ரயம் செய்தவன், பதிதன், திருடன், கோள் சொல்பவன், க்ராமத்திற்காகக் கூலி வாங்கிக் கொண்டு யாகம் செய்பவன், கூலிக்கு வேதம் ஓதுபவன், கூலிக்கு வேதம் ஓதுவிப்பவன், விதவையை மணந்தவன், பெற்றோரை விட்டவன், சூத்ர ஸ்த்ரீயின் குழந்தைகளை வளர்ப்பவன், சூத்ர ஸ்த்ரீயை மணந்தவன், தேவதைகளைப் பூஜிப்பதால் பிழைப்பு நடத்துபவன் (குருக்கள், மாந்த்ரீகன், பட்டர் முதலானோர்) இவர்களை ச்ராத்தத்தில் ப்ராஹ்மணனாக வரிக்கக் கூடாது.
கர்த்தா முதல் நாளே தகுதியுள்ளவர்களை தேவ, பித்ருக்களுக்கு வரித்து சிறிது நேரம் பொறுத்திருக்குமாறு ப்ரார்த்திக்க வேண்டும். இதற்குப் பின் இருவரும் கோபத்தையும், ஸ்த்ரீ போகத்தையும், களைப்பையும் தவிர்க்க வேண்டும். ஸ்தீரீ போகம் கொண்டால் தங்களின் பித்ருக்களை ரேதஸ்ஸின் குழியில் தள்ளிய பாபத்தைச் செய்தவர்கள் ஆகிறார்கள். இந்த்ரிய நிக்ரஹம் செய்த யதிகள் ச்ராத்தத்தன்று தற்செய்லாக கர்த்தாவின் க்ருஹத்திற்கு வந்தால் அவர்களை நிமந்த்ரணம் (வரித்தல்) செய்ய ப்ரார்த்திக்க வேண்டும். இப்படி க்ருஹத்திற்கு வந்த ப்ராஹ்மணர்களை கால் அலம்ப நீர் கொடுத்து, உபசரித்து, ஆசனம் தந்து போஜனம் செய்விக்க வேண்டும். பித்ருக்கள் ஸ்தானத்தில் ஒற்றையாகவும், தேவர்கள் ஸ்தானத்தில் இரட்டையாகவும் அல்லது இரண்டிலும் ஒவ்வொருவராகவும் வரிக்கலாம்.
பித்ரு வர்க்கத்தைச் சேர்ந்த தேவர்களின் ஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களை கிழக்கு முகமாகவும், பித்ருக்களாக வரிக்கப்பட்டவர்களை வடக்கு முகமாகவும் போஜனம் செய்விக்க வேண்டும். இவர்களுக்கு தனித்தனியே அல்லது சேர்த்தே ச்ராத்தமும், பாகமும் செய்யலாம் என்பது ரிஷிகளின் அபிப்ராயம். தேவஸ்தானத்தில் வரிக்கப்பட்டவர்களுக்கு ஆஸனத்திற்காக தர்ப்பைகளைக் கொடுத்து, அர்ச்சித்து அர்க்யம் கொடுத்து அவர்கள் அனுக்ஞையுடன் தேவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டும். யவ உதகத்தால் அர்க்யம் கொடுத்து, புஷ்பம், சந்தனம், தூப, தீபங்களால் உபசரிக்க வேண்டும். இப்படியே பித்ருக்களுக்கு அப்ரதக்ஷிணமாக அனைத்தையும் செய்ய வேண்டும். அனுமதி பெற்று தர்ப்பங்களை இரட்டிப்பாகத் தர வேண்டும். தில உதகத்தால் அர்க்யம் தர வேண்டும்.
இந்த சமயத்தில் அன்னத்தை விரும்பி அதிதிகள், ப்ராஹ்மணர்கள் யாரேனும் வந்தால் வரித்தவர்களின் அனுமதியோடு அவர்களுக்கும் போஜனம் செய்விக்க வேண்டும். அர்ச்சிக்கப்படாத அதிதி ச்ராத்த பலனை அழித்து விடுகிறான். பின் பக்வம் செய்த காய், உப்பு காரம் கலக்காத அன்னம் இவைகளை வரித்தவர்களின் அனுமதியோடு அக்னி, ஸோமன், யமன் இவர்களுக்காக மூன்று முறை ஆஹுதி செய்ய வேண்டும். அதில் மிகுந்த அன்னத்தில் ஒரு பாகத்தை வரித்தவர்களின் இலையில் பரிமாற வேண்டும். ப்ராஹ்மண போஜனத்திற்கு செய்த அன்னம் நன்கு பக்வம் செய்யப்பட்டு, ருசியோடு, இஷ்டமானதாக, நிறைய, கர்த்தா இன்சொல்லோடு, அவசரமின்றி, கோபமின்றி இருக்க வேண்டும். ப்ராஹ்மணர்களும் இசைந்து, பேசாமல், மலர்ச்சியோடு உண்ண வேண்டும்.
உண்ணும் போது ரக்ஷோக்த மந்த்ரங்களைப் படித்து, பூமியில் எள் பரப்பி, அந்த ப்ராஹ்மணர்களையே தன் பித்ருக்களாக பாவிக்க வேண்டும். பூஜிக்க வேண்டும். உண்டபின் பூமியில் விகிராந்தம் இட வேண்டும். அவர்கள் கை, கால்கள் சுத்தி செய்து ஆசமனம் செய்ய தனித்தனியே தீர்த்தம் தர வேண்டும். அவர்கள் அனுமதியோடு பின்னே அன்ன பிண்டங்களை எள்ளோடும், சாகத்தோடும் தர வேண்டும். திலோதகத்தை பித்ரு தீர்த்தத்தால் தர வேண்டும். ப்ராஹ்மணர்கள் உண்ட பாத்ரங்களுக்குப் பக்கமாக தெற்கு நுனியாகப் பரப்பிய தர்ப்பைகளில் அர்ச்சித்த பிண்டத்தை முதலில் பிதா, பின், பிதாமஹர், பின் ப்ரபிதாமஹர் எனத் தரவேண்டும். தர்ப்பைகளின் அடியில் நாலாமவரான பித்ருக்கள் முதலானோருக்கு பாத்ரங்கள், தர்வியில் ஒட்டியிருப்பதைத் துடைத்துக் கொடுத்தல் முதலானவைகளால் த்ருப்தி செய்ய வேண்டும்.
பின் இப்படியே மாத்ரு வர்க்கத்தார்க்கும் செய்ய வேண்டும். பின் பித்ருக்களுக்கும், தேவர்களுக்கும் தக்ஷிணை செய்து, ஆசி பெற்று, விஸர்ஜனம் செய்ய வேண்டும். அர்ச்சிக்கும் போது முதலில் தேவர்கள், பித்ரு வர்க்கம், மாதாமஹ வர்க்கம் எனச் செய்து விஸர்ஜனத்தில் பித்ருக்கள், மாதாமஹர், விச்வேதேவர்கள் எனச் செய்ய வேண்டும். ப்ராஹ்மணர்கள் செல்லும் போது நன்கு உபசரித்து, வாசல் வரை சென்று, விடை பெற்று உள்ளே வரவேண்டும். பின் வைச்வதேவம் செய்து, அனைவருடன் சேர்ந்து புஜிக்க வேண்டும். தௌஹித்ரன், குதபகாலம் (தினத்தின் எட்டாவது முஹூர்த்தம், பதினான்கு நாழிகைக்கு மேல், பதினாறு நாழிகைக்குள்), எள் இவை மூன்றும் ச்ராத்தத்திற்குச் சிறந்தது. எனவே கோபம், அவஸரம் இவைகளை விடுத்து பித்ரு, மாதாமஹ ச்ராத்தங்களைச் செய்பவனை விச்வேதேவர்கள், பித்ருக்கள் யாவரும் வ்ருத்தி செய்கின்றனர். பித்ருக்களின் கனம் சந்த்ரனை ஆதாரமாய்க் கொண்டது. சந்த்ரன் யோகத்தை ஆதாரமாய்க் கொண்டவன். எனவே யோகியை உபசரித்தால் அனைவரும் மகிழ்வார்.
03_16. காலசாகக் கீரை, தேன், ப்ரசாந்திகமெனும் காட்டு தான்யம், செந்நெல், கருஞ்சாமை, வெண்சாமை, வழுதுணை, பிரண்டை முதலான காட்டு மருந்துகள், கிழங்குகள், யவம், உளுந்து, பயறு, கோதுமை, நெல், எள், மலையகத்தி, கடுகு, பாகல், பலா, வாழை, அவரை முதலியவை ச்ராத்தத்திற்குச் சிறந்தவை. கயா ச்ராத்தம் ஜன்ம சாபல்யம் தரும். ஆக்ரயணம் செய்யாத தான்யங்கள், மொச்சை, காராமணி, அணு எனும் கல்ப தான்யம், மஸூரம், சுரை, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, முள்ளங்கி, காந்தாரகம் எனும் வாசனையுள்ள சம்பா, கரம்பம், உப்பு, உப்புச் சுவை மிகுந்தவை, உவர் நிலத்தில் உண்டானவை, சிவந்தவை, மரப் பிசின் (பெருங்காயம்), வாயால் சொல்லத்தகாதவை இவை கூடாது.
இரவில் கொண்டு வந்தது, பாழடைந்த கிணற்றிலிருந்தது, குறைந்த அளவுள்ளது, துர்நாற்றமும் நுரையுமுள்ளது இந்த தீர்த்தங்கள் கூடாது. கன்றில்லா பசுவின் பால், ஒற்றைக்குளம்புள்ளவைகளின் பால், ஒட்டகம், ஆடு, எருமை, மான் இவைகளின் பாலும் கூடாது. நபும்ஸகன், நக்னன், பெரியோர்களால் தள்ளப்பட்டவன், சண்டாளன், பாஷண்டன், அருவருப்பான நோயுள்ளவன், வேத தர்மங்களை விட்டவன், வீட்டு விலக்கானவள், ப்ரஸவித்தவள், சௌசமும்(சுத்தம்) ஆசாரமும் இல்லாதவன், பிணம் தூக்கிப் பிழைப்பவன், கோழி, நாய், குரங்கு, ஊர்ப்பன்றி இவைகள் சூழ்ந்த இடங்களையும், நகம், மயிர், பூச்சி, கஞ்சி இவைகளோடு சேர்ந்ததும் பழையதுமான அன்னத்தையும் ச்ராத்தத்திற்கு விலக்க வேண்டும்.
பூமியில் எள்ளை இறைத்து ராக்ஷஸர்களை விரட்ட வேண்டும். மறைவான இடத்தில் செய்ய வேண்டும். சுத்தமான அன்னத்தை நாம, கோக்ரங்களுடன் கொடுத்தால் பித்ருக்கள் தேவ லோகத்தில் இருந்தால் அன்னம் அம்ருதமாகவும், பசுக்களாக இருந்தால் புல்லாகவும் இப்படி பலவாறு மாறி அவர்களுக்கு த்ருப்தி அளிக்கிறது. இமயமலைச் சாரலில் கலாபம் எனும் க்ராமத்தின் உபவனத்தில் மனுபுத்ரனான இக்ஷ்வாஹு மஹராஜனிடம், “கயையில் பிண்டம் போடும் நல்லொழுக்கமுடையவர்களும், பாத்ரபத க்ருஷ்ண த்ரயோதசி, மாக அமாவாஸ்யையிலும் நமக்குத் தேனும், நெய்யும் கலந்த பாயஸம் தரும் நல்லவர்களும் நம் குலத்தில் பிறப்பார்களா? நம் குலத்தில் பிறந்தவர்கள் பத்து வயது நிரம்பிய கன்னிகையை விவாஹம் செய்து தருவார்களா? உடலில் சிவந்தும், முகத்திலும் வாலிலும் நன்கு வெளுத்தும், கொம்பிலும் குளம்பிலும் சிறிது வெளுத்தும் இருக்கும் நீலம் எனும் ரிஷபத்தை விடுவார்களா? விதிப்படி தக்ஷிணை தந்து அச்வமேதமாவது செய்வார்களா” என்று பித்ருக்கள் தங்கள் இஷ்டத்தைக் கேட்டிருக்கிறார்கள்.
03_17. நக்னன் என்றால் யார் என்கிறார் மைத்ரேயர். “ஆடையில்லாதவனையே உலகத்தார் நக்னன் என்கிறார். ஆனால் ச்ராத்தத்தின் போது இருக்கக் கூடாதவனான நக்னன் என்பவன் வேறு. ரிக், யஜுர், ஸாம வேதங்களே மூன்று வர்ணத்தாருக்கும் ஆடையும், ரக்ஷையும் ஆகும். அதை விட்டவனே நக்னன். என் பிதா வஸிஷ்டர் பீஷ்மருக்கு முன்பொரு சமயம் கூறியதைக் கூறுகிறேன். தேவாஸுர யுத்தம் ஒரு ஸமயம் தேவமானத்தில் நூறு வருஷம் நடந்தது. ஹ்ராதன் முதலான அஸுரர்களால் தேவர்கள் தோற்று, மஹாவிஷ்ணுவிடம் ப்ரார்த்தித்தனர். ஸ்தோத்ரத்தின் முடிவில் தோன்றிய பரமனிடம் “உன்னுடைய அம்சமேயான நாங்களும் அஸுரர்களும் அவித்யையால் வேறு வேறாகப் பார்த்துக் கொள்கிறோம். அவர்களை அழிக்க வேண்டுகிறோம்.
ப்ரஹ்மாவின் ஆக்ஞையையும் மீறி எங்களுடைய யக்ஞபாகங்களை அவர்கள் அபஹரித்து விட்டனர். வர்ணாச்ரம தர்மங்களை அவர்கள் தவறாமல் செய்து கொண்டிருப்பதால் எங்களால் அவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. தாங்கள் தான் இதற்கு ஒரு உபாயம் செய்ய வேண்டும். அவர்களைக் கொன்று எங்களைக் காக்க வேண்டும்” என்று தேவர்கள் ப்ரார்த்தித்துக் கொண்டனர். விஷ்ணு தன்னிடமிருந்து ஒரு மாயனை உண்டாக்கி, இவன் அந்த அஸுரர்களை வேத மார்க்கத்திலிருந்து விலக்கி விடுவான். ப்ரஹ்மனின் ஆணையை மீறியவர் எவரும் தண்டிக்கத்தக்கவரே. வேத வழியிலிருந்து விலகியவர்களை நீங்கள் எளிதில் அழித்து விடலாம்” என்று அருளினார். அவ்வாறே அவனை முன்னிட்டுக் கொண்டு, அஸுரர்களை வென்றனர் தேவர்கள்.
03_18. தவம் செய்து கொண்டிருந்த அஸுரர்களை நர்மதைக் கரையில் கண்ட மாயாமோஹன் உடனே ஆடையின்றி, மழுங்கச் சிரைத்தத் தலையுடனும், கையில் மயில் தோகையுடனும் அவர்களிடன் சென்று, “அஸுரத் தலைவர்களே! எதற்குத் தவம் செய்கிறீர்கள். இம்மைப் பயனுக்கா, அல்லது மோக்ஷமெனும் மறுமைப் பயனுக்கா” என்று கேட்க, அவர்கள் “மோக்ஷம் விரும்பியே செய்கிறோம். நீ கேட்பதைப் பார்த்தால் இது ஸம்பந்தமாக ஏதோ சொல்ல விரும்புவது போலுள்ளது. சொல்” என்றனர். மாயனும் “அப்படியானால் நான் சொல்லப்போகும் மோக்ஷத்துக்குக் காரணமான தர்மத்திற்கு நீங்கள் தகுதியுடையவர்களாக (அர்ஹர்கள்) இருங்கள். இதைவிட வேறெதும் மோக்ஷத்தைத் தராது. இதுவே ஸ்வர்கத்தையோ, மோக்ஷத்தையோ தரக்கூடியது. எனவே இந்த தர்மத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.
இது தர்மமாகவும், அதர்மமாகவும், ஸத்தாகவும், அஸத்தாகவும், மோக்ஷத்தைத் தருவதும், தராததுமாகவும், பர அபரமார்த்தமாகவும், செய்யத்தகுந்ததாகவும், தகாததாகவும், சொல்லத்தகுந்ததாகவும், தகாததாகவும், திகம்பரர்களுடையதாகவும், ஆடைகளணிந்தவர்களுடையதாகவும் இருக்கும்” என்று பலவாறு குழப்பி அவர்களை மதி மயக்கி, வேத மார்க்கத்திலிருந்து விலக்கினான். அவர்களும் அந்த தர்மத்தைக் கொண்டார்கள். தகுந்தவர்(அர்ஹர்) ஆவீர் என்று அடிக்கடி கூறியதால் மாயனுக்கு அர்ஹன் என்ற பெயரும், அந்த தர்மம் அர்ஹத்வம் என்றும், அதைக் கொண்டவர்கள் ஆர்ஹதர் என்றும் ஆயினர். இதுவே ஜைன மதமாகப் பரவியது.
இதன் பின் அர்ஹன் மேலும் சில அஸுரர்களிடம் சிவந்த ஆடைகளோடு, ஜிதேந்த்ரியனாய், தபஸ்வி வேஷம் கொண்டு “அஸுரர்களே! பசுக்களைக் கொல்லும் ஜீவஹிம்ஸை நிறைந்த இந்த யாகங்கள் எதற்கு? மோக்ஷத்திற்காகவா? இந்த யாகங்களால் எந்த பயனும் இல்லை. நான் சொல்வதைக் கேளுங்கள். இவ்வுலகம் விஞ்ஞான மயமானது. ஞானிகளும் இதையே கூறுகின்றனர். மேலும் ஆதாரமற்றது. அநாதியாகவே தோஷமுள்ளதாக ஸம்ஸார ஸங்கடங்களில் உழல்கிறது. இதை அறியுங்கள்” என்று பலமுறை உபதேஸித்தான். அறியுங்கள் (புத்யத) என்று பல முறை கூறியதால் புத்தன் என்றும், இந்த வாதம் புத்யத்வம் என்றும் ஆனது. மதம் பௌத்தமானது. இப்படி அஸுரர்கள் எவரும் வேத தர்மங்களை விடுத்து, அந்தணர்களையும் மதிக்கத் தவறினர்.
“ப்ராணி வதம் கூடாது என்று கூறப்பட்டுள்ள போது, யாகங்களில் மட்டும் அது பயனைத் தருவதென்று கூறுவது ஆராயாமல் சொல்வதாகும். எனவே யாகங்களைச் செய்ய வேண்டாம். யாகங்கள் செய்வது இந்த்ரனாகி ஸ்வர்கத்தை அனுபவிப்பதற்காகத் தானே. இந்த்ரன் யாக ஸமித்துக்களான ஹோமம் செய்யப்படும் வன்னிக் கட்டைகளை சாப்பிடுகிறான் என்கிறது வேத மதம். கட்டையைச் சாப்பிடும் அநாகரிகமான இந்த்ரனாவதற்கு யாகங்கள் செய்வதை விட ம்ருதுவான இலைகளை உண்ணும் ஆடுகளாகப் பிறப்பதே சிறந்தது. யாகங்களில் இறக்கும் ஆடுகள் ஸ்வர்கத்திற்குச் செல்கின்றன என்றால், வைதீகர்கள் தங்கள் தந்தைகளையே யாகங்களில் வெட்டிப் போட்டு, ஸ்வர்கத்திற்கு அனுப்பலாமே.
அதேபோல் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு வயிறு புடைக்க சோறு போடுவதும் வீணே. இங்கிருப்பவர் சாப்பிட்டால் எங்கோ இருப்பவர்களுக்கு பசி, நீர் உண்ட த்ருப்தி உண்டாகிறதென்றால், வெளியூர் செல்லும் தகப்பன் கையில் உணவைத் தயாரித்துக் கொண்டு செல்வது ஏன். தான் வெளியூர் செல்லும் போது வீட்டிலிருக்கும் பிள்ளையையே தனக்கு ச்ராத்தம் செய்யச் சொல்ல வேண்டியது தானே. பசியும், தாகமும் அடங்கி விடுமல்லவா. இந்த உலகத்திலேயே வேறு ஊர் செல்பவர்க்கு நாம் செய்யும் ச்ராத்தம் பசியையும், தாகத்தையும் தீர்க்காதபோது, வேறு உலகத்திற்கே சென்று விட்டவர்களுக்கு, நாம் பூலோகத்தில் ச்ராத்தம் செய்து ப்ராஹ்மணர்களுக்கு உணவிடுவது, நீர் கொடுப்பது எப்படி த்ருப்தியைத் தரும்.
எல்லாம் பொய். பாமரர்களை ஏய்க்கவே இந்த ச்ராத்தம் முதலான சடங்குகள் எல்லாம். ஆகவே புத்திசாலி அஸுரர்களே, நீங்கள் அவற்றையெல்லாம் நம்பாதீர்கள், விரும்பாதீர்கள். அவற்றை ஒதுக்குவதே உங்களுக்கு நன்மை தரும். எழுத்துக்களாலும், சொற்களாலும் செய்த வேதவாக்யங்கள் அனித்யங்கள். நாம் எப்போதும் நம்பத் தகுந்தவன் சொல்வதையே ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த வேதங்களைக் கூறியவர் அப்படி யார். ஒருவரும் கூறாமல் இவை ஆகாசத்திலிருந்து குதித்தவைகளா? எனவே புத்திசாலிகளுக்குகந்ததும், உங்களுக்கு நம்பத்தகுந்தவனுமான நான் சொல்வதைக் கேளுங்கள். இவைகளை விட்டொழியுங்கள்” என்றெல்லாம் பலவாறு மீதமிருந்த அஸுரர்களையும் புத்தன் குழப்ப, அவர்கள் முழுவதுமாக வேத மார்க்கத்தை விட்டு விலகினர். நாஸ்தீகர்களும், நக்னர்களுமான அவர்களை அப்போது தேவர்கள் எளிதில் வென்றனர்.
எனவே வேதங்களையும், வேத தர்மங்களையும் விட்டவர்களே நக்னர்கள். இதேபோல் நான்கு ஆச்ரமங்களில் ஏதாவது ஒன்றில் எப்போது இருக்க வேண்டும். ஆச்ரமமில்லாமல் இருக்கக் கூடாது. அவர்களும் நக்னர்களே. சக்தியுள்ள போதும் கர்மாக்களை விட்டவன் அந்த நாளிலேயே பதிதன் (ப்ரஷ்டன்-விலக்கத் தக்கவன்) ஆகிறான். ஒரு பக்ஷம் விட்டவன் விசேஷ பதிதனாகிறான். மீண்டும் ப்ராயச்சித்தம் செய்தே இவர்கள் சுத்தி அடையலாம். ஒரு வருஷம் கர்மாக்களை விட்டவன் மிக்க பாபியாகிறான். இவனுக்கு ப்ராயச்சித்தமே கிடையாது. இவனை எவரும் பார்க்கவே கூடாது. அப்படிப் பார்த்தால் பாபம் தீர ஸூர்யனையும், நல்லவர்களையும் பார்க்க வேண்டும். தொட்டால் உடுத்திய வஸ்த்ரத்துடன் குளிக்க வேண்டும்.
எவன் வீட்டில் தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் பூஜிக்கப் பட வில்லையோ அவனை விட பாபம் செய்தவர் உலகில் எவருமில்லை. தேவ, ரிஷி, பித்ருக்கள், அதிதிகள் வருந்தி விடும் பெரு மூச்சினால் இவர்கள் தீண்டப்பட்டவர்கள், இவர்களுடன் உட்காருதல், இவர்கள் வீட்டிற்குச் செல்லுதல் முதலான பாபங்களை எவரும் செய்யக்கூடாது. அப்படி ஒரு வருஷம் செய்தால் அவர்களுக்கும், அந்த பாபிக்குச் சமமான பாபமே வந்து சேரும். அவன் உணவை உண்டாலோ, அவன் படுக்கையில் படுத்தாலோ உடனே அந்த பாபம் நமக்கும் வந்து விடும். நான்கு வர்ணத்தவர்க்கும் எங்கு கலப்பு (ஸாங்கர்யம்) இருக்கிறதோ அந்த இடத்தையும் பெரியோர்கள் விட வேண்டும்.
முன்பு சததது என்ற ஓர் புகழ் பெற்ற அரசன் இருந்தான். அவன் மனைவி சைப்யை சிறந்த பதிவ்ரதை. அவளுடன் சேர்ந்து அரசன் தினமும் ஜனார்த்தனனை த்யான, ஹோம, ஜப, தான, உபவாஸ முதலியவைகளால் ஆராதித்து வந்தான். இவர்களிருவரும் ஒரு கார்த்திகை ஏகாதசியில் கங்கையில் நீராடி விட்டுக் கரையேறும் போது, எதிரில் ஒரு பாஷண்டி (ஸ்வதர்மத்தை விட்டவன்) வருவதைக் கண்டனர். அவன் இந்த அரசனுக்கு வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசார்யனின் ஸ்னேஹிதன். அந்த மரியாதைக்காக அவனுடன் சததது சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தான். இதைத் தவறென்று கருதிய சைப்யை அவனுடன் பேசாமல், பார்த்த பாபம் தீர ஸூர்யனையும் உடனே தர்சித்தாள்.
பின் வீடு திரும்பிய அவர்கள் விஷ்ணு பூஜையைச் செய்து, கடமைகளைச் செய்தனர். இப்படிக் காலங்கள் கழிந்த போது ஒரு சமயம் அரசன் இறக்கவே, சைப்யையும் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தாள். உபவாஸ காலத்தில் பாஷண்டனுடன் பேசிய ராஜன் மறுபடி நாயாகப் பிறந்தான். அரசி காசிராஜனுக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவள் முற்பிறவி நினைவுடனும் இருந்தாள். ஸகல நற்குணங்களும் நிறைந்த அவள் தன் தகப்பன் தனக்கு மணம் முடிக்க முயற்சிப்பதை அறிந்து அதைத் தடுத்து விட்டு, திவ்ய த்ருஷ்டியினால் விதிசை எனும் நகரத்தில் தன் முன் ஜன்மத்துக் கணவன் நாயாகப் பிறந்திருப்பதை அறிந்து அங்கு ஓடினாள். நாயையும் அங்கு கண்டு பிடித்து, அதற்குப் பிடித்த உணவு வகைகளை எப்போது அதற்குக் கொடுத்து, உபசரித்தாள்.
தன் குணத்திற்கேற்ப நன்றிக்காக வாலை ஆட்டிக் காண்பித்த அதற்கு முன்பிறவியை உணர்த்தினாள். தன் செயலை நினைத்துப் பெரிதும் வருந்திய நாய்ப் பிறப்பில் இருக்கும் சததது, நகருக்கு வெளியேயுள்ள ஒரு மலையிலிருந்து கீழே விழுந்து (மருப்ரபதனம்)உயிரைப் போக்கிக் கொண்டான். மீண்டும் கோலாஹலம் எனும் மலை ப்ரதேசத்தில் நரி ஜன்மம் எடுத்த அவனை மீண்டும் தன் ஞான த்ருஷ்டியால் கண்டு பிடித்த ராஜகுமாரி இப்போதும் அவனை உபஸரித்து உண்மையைக் கூறினாள். அவனும் மிக வருந்தி உணவை எடுத்துக் கொள்ளாமலேயே இருந்து உடலை விட்டான். இப்படி மேலும் செந்நாய், கழுகு, காக்கை, கொக்கு, மயில் எனப் பிறவிகளை எடுத்தான். இளவரசியும் தொடர்ந்து அவனைக் காத்தாள்.
இப்படி மயில் பிறவியிலிருக்கும் போது ஜனகர் அச்வமேத யாகம் செய்து முடிவில் (அவப்ருதம்) ஸ்னானம் செய்யும் காலத்தில் இளவரசி மயிலையும் கொஞ்சி முன் பிறவிகளை நினைவு படுத்தி அதனுடன் ஸ்னானம் செய்தாள். மயிலும் உடலை விடுத்து இப்போது ஜனகருக்கே மகனாகப் பிறந்தது. இந்த சூழ்நிலையில் தந்தையிடம் தனக்கு ஸுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்ன இளவரசி ஜனகனின் மகனாகப் பிறந்திருக்கும் தன்னுடையவனையே மீண்டும் வரித்து, அவனுடன் பல காலம் வாழ்ந்திருந்து, விதேஹ ராஜ்யத்தையும் பெரும் பொருளுடனும், புகழுடனும், வெற்றிகளோடும், நற்பெயரோடும் ஆண்டு அனுபவித்து ஒரு யுத்தத்தில் அரசன் வீர மரணம் எய்த போது தானும் உடன்கட்டை ஏறி ஸ்வர்க்கத்திற்கும் மேலான லோகங்களை அனுபவித்தாள். இதிலிருந்து பாஷண்டனும் பேசிய பாபமும், அச்வமேத அவப்ருத ஸ்னானத்தின் மஹிமையும் புரியும்.
இதேபோல் மேலும் சிலர் உள்ளனர். அவர்களையும் விலக்க வேண்டும். வேதங்களில் விலக்கப் பட்ட கர்மாக்களைச் செய்பவன்(விகர்மஸ்தன்), சாமியார் வேஷம், கமண்டலம், தண்டம் இவைகளைத் தாங்கி, ஒருவருக்கும் தெரியாமல் பாபத்தைச் செய்பவன்(பைடாலவ்ரதிகன்), பூனையின் வ்ரதமுடையவன், எதிரில் ப்ரியமாகவும், மறைவில் அப்ரியமாகவும் ஒருவரைப் பற்றிச் சொல்பவன்(சடன்), நற்செயல்கள் செய்யும் போது பல தோஷங்களைக் காட்டி அவற்றில் சந்தேஹத்தை ஏற்படுத்துபவன்(ஹைதுகன்), கொக்கு போல ஒன்றும் தெரியாதவனாக இருந்து, ஸமயம் பார்த்து தீங்கிழைப்பவன் (பகவ்ருத்தி) இவர்களை பேச்சளவிலும் உபசரிக்கக் கூடாது. பெரும் பாபம் சேரும். காரணமின்றி ஜடை வளர்ப்பவர் மொட்டை அடித்துக் கொள்பவர், தேவ ரிஷி பித்ருக்களுக்கு நிவேதிக்காத உணவை உண்பவர், உள்ளும் வெளியும் சுத்தமில்லாதவர் இப்படி நக்னர்கள் பல விதம். இவர்கள் பார்த்தாலே ச்ராத்தம் அழியும், அன்றைய புண்யமும் போகும்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply