ஸ்ரீ விஷ்ணு புராணம் -நாலாம் அம்சம்-

04_01. அரசர்களின் வம்சங்களைப் பற்றிக்கூறுமாறு மைத்ரேயர் கேட்க, பராசரர் “ப்ரஹ்மத்தை முதலாகக் கொண்ட இந்த மனு வம்சத்தின் வரலாற்றை கேட்பவர்களின் வம்சம் மேன்மேலும் வளரும். ஸகல பாபங்களும் அகலும். ரிக், யஜுர், ஸாமமயனான விஷ்ணுவிடம் ஹிரண்யகர்ப்பனான ப்ரஹ்மாவும், அவர் வலக்கால் கட்டை விரலிலிருந்து தக்ஷ ப்ரஜாபதியும் தோன்றினார். தக்ஷனின் புதல்வி அதிதியின் பிள்ளை விவஸ்வான். விவஸ்வான் பிள்ளை மனு. மனுவிற்கு இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், திஷ்டன், கரூசன், ப்ருஷத்ரன் என்று ஒன்பது புத்ரர்கள்.

இவர்கள் பிறப்பதற்கு முன் மனு மித்ராவருணர்களை உத்தேஸித்து புத்ரனை வேண்டி ஒரு யாகம் செய்த போது, அவர் மனைவி ஹோதாவிடம் சென்று புத்ரியை வேண்டுமாறு கூறினாள். இந்தக் குழப்பத்தால் இளா என்ற பெண் யாகப் பயனாகப் பிறந்து, உடனே மித்ர வருணர்களின் ஆசியால் ஸுத்யும்னன் என்ற ஆண் பிள்ளையாகவும் மாறிவிட்டாள். முன்பொரு ஸமயம் பரமேச்வரனும், பார்வதியும் ஒரு காட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொது சில மஹரிஷிகள் அங்கு வந்து விட்டனர். வெட்கமும், கோபமும் கொண்ட பார்வதி குடிசையில் மறைந்து கொண்டாள். நிலைமையைப் புரிந்து கொண்ட ரிஷிகளும் வெளியே சென்று விட்டனர். பார்வதியை த்ருப்தி செய்வதற்காக அந்தக் காட்டில் இனி யார் நுழைந்தாலும் அவர்கள் பெண்ணாக மாறி விடுவர் என்று வரம் கொடுத்தார்.

வேட்டைக்குச் சென்றிருந்த ஸுத்யும்னன் தற்செயலாக இதே காட்டிற்குள் நுழைந்து விட மீண்டும் பெண்ணாகி விடுகிறான். இந்தக் காட்டிற்கு இளாவ்ருதம் என்று பெயர். வெட்கமும், துயரமும் கொண்ட அவன்(ள்) சந்த்ரனின் புத்ரனான புதனுடைய ஆச்ரமத்தினருகில் சுற்றிக் கொண்டிருந்தான். அவளிடம் புதன் புரூரவஸ் என்ற பிள்ளையைப் பெற்றான். இதன் பின் மஹரிஷிகளின் பெருமை வாய்ந்த ஒரு யாகத்தால் ஸுத்யும்னன் மீண்டும் ஆண்மை எய்தினான். இவனுக்கு இப்போது உத்கலன், கயன், விதானன் என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். ஆண், பெண் குழப்பத்தால் ஸுத்யும்னனுக்கு அரசுரிமை வாய்க்கவில்லை.

வஸிஷ்டரின் உத்தரவால் தந்தையிடமிருந்து கிடைத்த ப்ரதிஷ்டானம் என்ற நகரத்திற்குத் தனக்குப் பின் புரூரவஸ்ஸை மன்னனாக்கினான் இளா என்ற ஸுத்யும்னன். மனுவின் மற்றொரு புத்ரனான ப்ருஷத்ரன் ஆசார்யர் வஸிஷ்டரின் பசுக்களைக் காத்துக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் இரவு ஒரு புலி பசுக்களை உண்பதற்காக அவற்றுள் புகுந்து விட்டது. அப்போது தவறுதலாக ஒரு பசுவை ப்ருஷத்ரன் கொன்று விட, வஸிஷ்டர் அவனை சூத்ரனாக சபித்து விடுகிறார். மற்றொருவனான கரூசன் கரூச தேசத்தை ஆண்டு வந்தான். அவனுக்கு பராக்ரமர்களான க்ஷத்ரியர்கள் பிறந்தனர். மற்றொருவனான த்ருஷ்டனுக்கு நாபாகனும், அவனுக்குப் பலந்தனனும் பிறந்தான். தாழ்ந்த செய்கைகளால் வைச்யத் தன்மை அடைந்த நாபாகனால் பலந்தனனுக்கும் க்ஷத்ரியத் தன்மை போய்விட்டது.

பலந்தனனுக்கு வத்ஸப்ரீதியும், அவனுக்கு ப்ராம்சுவும், அவனுக்கு ப்ரஜாபதியும், அவனுக்கு கனிமித்ரனும், அவனுக்கு சாக்ஷுஷனும், அவனுக்கு விம்சனும், அவனுக்கு விவிம்சகனும், அவனுக்கு கநிநேத்ரனும், அவனுக்கு அதிவிபூதியும், அவனுக்கு கரந்தமனும், அவனுக்கு அவிக்ஷித்தும், அவிக்ஷித்துக்கு மருத்தனும் பிறந்தனர். மருத்தன் செய்த யாகங்களில் கருவிகள் அனைத்தும் தங்கத்தாலானவை. இந்த்ரன் ஸோமபானத்தாலும், ப்ராஹ்மணர்கள் தக்ஷிணையாலும் இந்த யாகத்தில் த்ருப்தி அடைந்தனர். இவன் சபையில் தேவர்கள் இருந்தனர். இந்த மருத்தன் சக்ரவர்த்தியாக விளங்கினான். இவனுக்கு நரிஷ்யந்தனும், அவனுக்கு தமனும், அவனுக்கு ராஜவர்தனனும், அவனுக்கு ஸுவ்ருத்தியும், அவனுக்குக் கேவலனும், அவனுக்கு ஸுத்ருதியும், அவனுக்கு நரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு கேவலனும், அவனுக்கு பந்துமானும், அவனுக்கு வேகவானும், அவனுக்கு புதனும், அவனுக்கு த்ருணபிந்துவும், அவனுக்கு ஜலபிலா என்ற பெண்ணும் பிறந்தனர்.

த்ருணபிந்துவை அலம்புஸா என்ற அப்ஸரஸ்ஸுக்கும் விசாலன் பிறந்தான். அவன் விசாலன் எனும் நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ஹேமசந்த்ரனும், அவனுக்கு சந்த்ரனும், அவனுக்கு தூம்ராக்ஷனும், அவனுக்கு ஸ்ருஞ்ஜயனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ஸோமதத்தனும் பிறந்தனர். இந்த ஸோமதத்தன் பத்து அச்வமேத யாகங்களைச் செய்தான். இவனுக்கு ஜனமேஜயன் பிறந்தான். இந்த அரசர்கள் அனைவரும் விசாலா நகரை ஆண்டவர்கள். இதேபோல் மனுவின் மற்றொரு புத்ரனான சர்யாதிக்கு ஸுகன்யா என்ற பெண்ணும், ஆனர்த்தன் என்ற புத்ரனும் பிறந்தனர். ஸுகன்யா ச்யவன மஹரிஷியை மணந்தாள்.

ஆனர்த்தனுக்கு ரேவதன் பிறந்தான். அவன் குதஸ்தலீ நகரிலிருந்து கொண்டு ஆனர்த்த ராஜ்யத்தை ஆண்டு வந்தான். இவனுக்கு ரைவதனும், அவனுக்கு ககுத்மி முதலான நூறு புத்ரர்கள் பிறந்தனர். ககுத்மிக்கு ரேவதி என்ற பெண் பிறந்தாள். அவளுக்கு யாரை மணம் முடிப்பது என்பதைக் கேட்கலாம் என்று ப்ரஹ்மலோகத்திற்கு அழைத்துச் சென்ற ககுத்மி அங்கு ஹாஹா, ஹூஹூ என்ற இரு கந்தர்வர்கள் பாடிக் கொண்டிருந்ததை மனம் லயித்து கேட்டுக் கொண்டிருந்தான். அதிதானம் என்ற அந்த ஸங்கீதம் சித்ரை, தக்ஷிணை, வார்த்திகைகளில் சுற்றிக் கொண்டு அனேக யுகங்கள் பாடப்பட்டு வந்தது. ககுத்மியும் அவ்வளவு காலமும், காலம் போவதறியாமல் அதை விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

இது முடிந்ததும் ப்ரஹ்மாவிடம் சென்று தன் பெண்ணுக்கு யாரை மணம் முடிக்கலாம் என்று கேட்ட அரசனிடம், நீர் யார், யாரைத் தேர்ந்தெடுதுள்ளீர்கள் என்று ப்ரஹ்மா கேட்க, அரசன் சிலரைக் கூறுகிறான். தலையைக் கவிழ்த்துக் கொண்டு சிரிப்புடன் ப்ரஹ்மா கூறலானார்: “அரசே! நீங்கள் கூறும் வரன்களின் ஸந்ததிகள் கூட இப்போது பூலோகத்தில் இல்லை. பூலோகத்தில் நீங்கள் இங்கு கச்சேரியில் லயித்திருந்த காலத்தில் பல சதுர் யுகங்கள் சென்று விட்டன. இப்போது வைவஸ்வத மனுவின் இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் கலியுகம் நெருங்கிய வண்ணம் இருக்கிறது. ஆகையால் வேறு ஒருவனுக்குத் தான் உன் பெண்ணை நீ தர வேண்டும். உன் சுற்றம், பொருள், வேலையாட்கள் என எதுவும் இப்போது இல்லை”.

வரன்கள் கிடைக்காததற்கு வருந்திய ககுத்மி ப்ரஹ்மாவிடமே தகுந்த வரனைச் சொல்ல வேண்டினான். “அரசே! பூமியில் விஷ்ணுவே இப்போது அம்சமாய் அவதரித்திருக்கிறார். அவருடைய ஆதி, மத்யம், அந்தம், ஸ்வரூபம், ப்ரபாவம், பலம் இவைகளை நானும் அறிந்திலன். காலமும் அவருக்கு எந்த மாறுதலையும் உண்டாக்குவதில்லை. சரீரமும், அழிவும், நாம, ரூபங்களுமற்றவரவர். அவர் அனுக்ரஹத்தாலேயே நான் ஸ்ருஷ்டியையும், ருத்ரன் ஸ்ம்ஹாரத்தையும் செய்கின்றோம். மற்ற தேவதைகளின் ஸ்வரூபமும் அவரே. அவரிடமே உலகம் நிலைத்துள்ளது. அவரும் எதிலும் நிறைந்துள்ளார். உன் குதஸ்தலி நகரம் இப்போது யாதவர்கள் அரசாளும் த்வாரகையாக உள்ளது. ஆதிசேஷனின் அம்சமாய் அவதரித்திருக்கும் பலதேவனுக்கு உன் பெண்ணை மணம் முடி” என்றார் ப்ரஹ்மா.

குதஸ்தலியை விட முழுதும் வேறுபட்டிருக்கும் த்வாரகையையும், குள்ளமாகவும், சக்தி குறைந்தவர்களாகவும் இருக்கும் மனிதர்களையும் திரும்பிப் பெண்ணுடன் வந்த ககுத்மி கண்டான். ஸமுத்ரத்தின் கரையில் இருந்தது குதஸ்தலி. த்வாரகை ஸமுத்ரத்தின் நடுவில் இருக்கிறது இப்போது. கலப்பையை ஆயுதமாகத் தரித்து, ஸ்படிக மலை போல் வெளுத்து, உயர்ந்து அகன்ற மார்புடன் இருக்கும் பலராமருக்குத் தன் பெண் ரேவதியை மணம் முடித்தான் ககுத்மி. அவரும் ஏற்றுக் கொண்டார். தன்னை விட மிகவும் உயரமாக இருந்த பெண்ணை கலப்பையால் அழுத்தித் தனக்கு உரியவளாக்கிக் கொண்டார் பலராமர். ககுத்மி பின் இமயம் சென்று தவம் புரிந்தார்.

04_02. ககுத்மி ப்ரஹ்மலோகம் சென்றிருந்த போது குதஸ்தலியை புண்யஜனர் என்ற ராக்ஷஸக் கூட்டம் அவர் தம்பிகளை நான்கு திசைகளிலும் விரட்டி விட்டு தாங்கள் ஆண்டனர். தம்பிகளில் ஒருவனான வ்ருஷ்டனிடமிருந்து வார்ஷ்டகம் என்ற ராஜ குலம் உண்டாயிற்று. மனுவின் மற்றொரு புதல்வனான நாபாகனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு விரூபனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ரதீதரனும் பிறந்தனர். ரதீரதனின் மனைவியிடம் அங்கிரஸ் என்ற ப்ராஹ்மணர் ப்ரம்ஹ வர்ச்சஸ் உள்ள பிள்ளைகளை உண்டாக்கவே, அவர்கள் ப்ராஹ்மண்யமும், க்ஷத்ரியத்வமும் கலந்தவர்கள் ஆனார்கள்.

இதேபோல் ஒரு ஸமயம் மனு தும்மியபோது அவர் மூக்கிலிருந்து தோன்றிய இக்ஷ்வாகுவிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். விகுக்ஷி, நிமி, தண்டன் என்ற மூவரே அதில் முக்யமாயிருந்தனர். சகுனி முதலான ஐம்பது பேர்கள் உத்தராபதத்திற்கும், நாற்பத்தெட்டு பிள்ளைகள் தக்ஷிணாபதமென்ற நாட்டிற்கும் அரசராயினர். ஒரு ஸமயம் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றிருந்த விகுக்ஷி பல ம்ருகங்களைக் கொன்று மிகவும் களைத்திருந்தான். தந்தை அஷ்டகை ச்ராத்தத்திற்கு மாம்ஸம் கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டிருந்ததை நினைவில் கொண்ட அவன் பசியால் சேமித்த விலங்குகளுள் முயலை மட்டும் தான் சாப்பிட்டு விட்டு, மற்ற அனைத்தையும் தந்தையிடம் ச்ராத்தத்திற்காகக் கொண்டு வந்து தந்தான்.

அவற்றை பரிக்ஷித்த வஸிஷ்டர் “அரசே! ச்ராத்தத்திற்கு என ஸம்பாதித்த இந்த மாம்ஸங்களுள் ஒன்றான முயல் மாம்ஸத்தை உன்னுடைய துராத்மாவான இந்த பிள்ளை தின்று விட்டதால் இவையனைத்துமே தோஷம் காரணமாக விலக்கத்தக்கவை, அசுத்தமாகிவிட்டன இவை” என்று கூறி விட்டார். இதனால் விகுக்ஷி சசாதன் (முயலைத் தின்றவன்) என்று அழைக்கப்பட்டான். இக்ஷ்வாகுவும் அவனைக் கைவிட்டான். இக்ஷ்வாகுவின் இறப்பிற்குப் பின் இவன் அரசாண்டான். புரஞ்ஜயன் என்ற புத்ரனையும் பெற்றான்.

முன்பொரு ஸமயம் த்ரேதா யுகத்தில் பலத்தால் அஸுரர்கள் தேவர்களை வென்றனர். விஷ்ணுவை ஆராதித்த அவர்களிடம் “சசாதனுடைய புத்ரன் புரஞ்ஜயன் உடலில் நான் புகுந்து அஸுரர்களை வெல்வேன். எனவே நீங்கள் அவனிடம் சென்று உதவி கோருங்கள்” என்றார். தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட புரஞ்ஜயன் “நூறு அச்வமேதங்கள் செய்த உங்கள் தலைவன் இந்த்ரன் எனக்கு வாஹமானால் ஒழிய அந்த அஸுரர்களை வெல்வது கடினம்” என்று நிபந்தனை விதித்தான். இந்த்ரன் இதற்குடன்பட்டு வ்ருஷபமானான் (எருது). எருதின் முதுகுக் கொண்டையின் (ககுத்)மீதிருந்து போர் புரிந்து வென்றதால், புரஞ்ஜயனுக்கு ககுத்ஸ்தன் என்ற பெயர் நிலைத்தது. இவனுக்கு அநேநஸ் என்பவனும், அவனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விஷ்டராச்வனும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

யுவனாச்வனுக்கு சந்த்ராம்சம் பொருந்தியிருந்ததால் சாந்த்ரன் எனப்பட்டான். அவனுக்கு சாபஸ்தன் பிறந்து சாபஸ்தீ நகரை நிர்மாணித்தான். இவனுக்கு ப்ருஹதச்வனும், அவனுக்குக் குவலயாச்வனும் பிறந்தனர். அவன் உதங்க மஹரிஷியின் பகைவனான துந்து என்ற அஸுரனைத் தன் இருபத்தோராயிரம் புத்ரர்களோடு சென்று கொன்று, துந்துமாரன் என்ற பெயர் கொண்டான். அந்த சண்டையில் த்ருடாச்வன், சந்த்ராச்வன், கபிலாச்வன் என்ற மூன்று பிள்ளைகளைத் தவிர மீதம் ஆயிரமாயிரம் புத்ரர்களும் துந்துவின் மூச்சுக் காற்றால் இறந்தனர். த்ருடாச்வனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு நிகும்பனும், அவனுக்கு அமிதாச்வனும், அவனுக்கு க்ருசாச்வனும், அவனுக்கு ப்ரஸேனஜித்தும், அவனுக்கு யுவனாச்வனும் பிறந்தனர்.

இந்த யுவனாச்வனுக்கு நெடுங்காலமாக புத்ரன் இல்லாமையால் வெறுத்துப் போய், காட்டிலும், ரிஷிகளின் ஆச்ரமங்களிலுமே இவன் திரிந்து கொண்டிருந்தான். இவனிடம் கருணை கொண்ட மஹரிஷிகள் தாங்களாகவே அவனுக்கு ஒரு புத்ரனை வேண்டி இஷ்டியைச்(வேள்வி) செய்தனர். நள்ளிரவில் அந்த வேள்வி முடியவே மந்த்ர தீர்த்தம் நிரம்பிய கலசத்தை யாக வேதியின் நடுவில் வைத்து விட்டு, மஹரிஷிகள் அயர்ந்து விட்டனர். அப்போது பெரும் தாஹத்துடன் அங்கு வந்த யுவனாச்வன் தூங்குபவர்களை எழுப்ப வேண்டாம் என்று, பராக்ரமம் வாய்ந்த பிள்ளையைப் பெற அவன் மனைவி அருந்த வேண்டிய அந்த மந்த்ர தீர்த்தத்தைத் தான் குடித்து விடுகிறான்.

முனிவர்கள் விஷயமறிந்து வருத்தமடைந்து கொண்டிருக்க, அவன் வயிற்றில் ஒரு கர்ப்பம் உண்டாகி, காலத்தில் வலக்கைக் கட்டை விரலாலேயே யுவனாச்வன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு ஒரு குழந்தை வெளியேயும் வந்து விடுகிறது. யுவனாச்வன் இறந்து விடுகிறான். இந்தக் குழந்தைக்கு யார் பால் கொடுப்பார்கள் என்று முனிவர்கள் வருந்தும்போது இந்த்ரன் “என்னைத் தாயாகக் கொண்டு இது பாலுண்ணும்” என்று கூறி தன் பவித்ர (மோதிர)விரலால் அம்ருதத்தை வர்ஷிக்க, அதை உண்ட குழந்தையும் விரைவில் வளர்ந்தது. இந்தக் குழந்தையே மாந்தாதா என்ற பெயரில் பின்னர் சக்ரவர்த்தியாகி ஸூர்யன் உதித்து அஸ்தமிக்கும் எல்லை வரை ஆண்டது. இவனுக்கும் சசிபிந்து என்பவனின் பெண்ணான இந்துமதிக்கும் புருகுத்ஸன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற மூன்று பிள்ளைகளும், ஐம்பது பெண்களும் பிறந்தனர்.

இந்த நேரத்தில் ரிக் வேதியான ஸௌபரி மஹரிஷி, ஜலத்திற்குள் பனிரெண்டு வருஷமாகத் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வஸித்து வந்த ஸம்மதன் என்ற மீன்களின் அரசன் தன் பிள்ளை, பேரன்களோடு அங்குமிங்கும் உல்லாஸமாக அங்குமிங்கும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்ததில் தன் தவத்தைக் கலைத்துக் கொண்ட ஸௌபரி மஹரிஷி மீன்கள் ஸம்மதன் மேல் அங்குமிங்கும் விளையாடுவது போல தானும் பிள்ளை, பேரன்களோடு விளையாட வேண்டும் என்ற எண்ணம் கொண்டார். வந்தார் மாந்தாதாவிடம். அவனின் பூஜை, உபஸரிப்புகளை ஏற்றுக்கொண்டு “அரசே! நான் திருமணம் செய்ய நினைத்திருக்கிறேன். எனக்குப் பெண் தா.

எத்தனையே அரசர்கள் பெண் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும் ககுத்ஸ்த வம்சத்தவர்களே இரப்போரின் மன விருப்பத்தை நிறைவேற்றுபவர்கள் என்று உன்னிடம் நான் வந்துள்ளேன். உங்களிடம் வந்தவர்கள் வீணே திரும்புவதில்லை. உனக்கோ ஐம்பது பெண்கள். அவர்களில் ஒரு பெண்ணையாவது எனக்குக் கொடு. என் துக்கத்தைப் போக்கு” என்றார். உடல் தளர்ந்த கிழவரின் வேண்டுகோளுக்கும், அவர் கோபத்துக்கும் பயந்து அவன் யோஸிப்பதைக் கண்ட மஹரிஷி “பெண்ணாகப் பிறந்தால் யாருக்காவது கொடுத்துதானே ஆக வேண்டும். நான் என்ன தவறாகக் கேட்டு விட்டேன். உனக்கும், எனக்கும் லாபமே, கொடுத்து விடு” என்றார்.

அரசன் உசிதமாக “நற்குடியில் பிறந்த எவரையாவது தாங்களே எங்கள் பெண்கள் தேர்ந்தெடுப்பதே எங்கள் குல வழக்கம். நான் இதில் என்ன செய்ய. நீங்களோ கேட்டு விட்டீர்கள். எனக்கு ஒன்றும் தோன்றவில்லை, அதனால் தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான். முனிவரா விடுவார். “சரி, குடும்ப வழக்கத்தைக் கெடுக்க வேண்டாம். என்னை அந்தப் புரத்திற்குள் விடச்சொல். எந்தப் பெண் என்னைத் தானாக வரிக்கிறாளோ அவளையே நான் மணக்கிறேன். ஒருவரும் வரிக்கவில்லையெனில், இந்த கிழப்பருவத்திற்கு இது வீண் என்று விட்டு விடுகிறேன்” என்றார். இந்தக் கிழவரை எவள் வரிக்கப் போகிறாள் என்று அரசனும் காவலாளியைக் கூப்பிட்டு முனிவரை அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறான்.

அவனும் அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று “இவரை வரிப்பவர் எவராயினும் மன்னர் மறுப்பின்றி அவருக்கே இவரை மணம் முடிப்பார்” என்று அறிவிக்கிறான். முனிவர் இப்போது எவரும் வியக்கும், விரும்பும் அழகையும், உருவத்தையும் கொள்கிறார். ஐம்பது இளவரசிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அவரிடம் மனதைப் பறி கொடுக்கின்றனர். இந்த விஷயத்தை அறிந்த மன்னன், வேறு வழியின்றி தன் வார்த்தையின் படி தன் ஐம்பது பெண்களையும் அவருக்கே விவாஹம் செய்து வைக்கிறான். அனைவரும் முனிவருடன் ஆச்ரமம் சென்று விடுகின்றனர்.

இளவரசிகளான அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக குடியிருப்புகளை உண்டாக்கித்தர நினைத்த மஹரிஷி விச்வகர்மாவை உடனே அழைத்து “பறவைகள் சப்தமிடும் தாமரைக் குளங்கள், பூச்செடிகள், பழ மரங்கள், நந்தவனங்கள், பரந்த மெத்தை, மேடைகள், மாடங்கள், கூடங்கள் நிறைந்த தனித்தனி மாளிகைகளை உண்டாக்கித் தர வேண்டும்” என உத்தரவிடுகிறார். அப்படியே செய்து முடிக்கிறான் விச்வகர்மா. நந்தனன் என்ற நித்ய நிதியையும் படைக்கிறார் மஹரிஷி. அவைகளோடும், பல போகங்களோடும், அவர்களோடும் அதிதி பூஜைகளோடும், மனம் மகிழ்வோடு உள்ள வேலைக் காரர்களோடும் காலத்தைக் கழித்து வந்தனர்.

ஆண்டுகள் கழிகின்றன. பெண்கள் ஸந்தோஷமாக இருக்கிறார்களா என்ற அறிய விரும்பிய மாந்தாதா மாப்பிள்ளையான ஸௌபரி மஹரிஷியின் ஆச்ரமத்திற்கு வருகிறான். வசதிகளைக் கண்டு வியந்தபடி ஒவ்வொரு பெண்ணின் மாளிகைக்கும் சென்று உபசரிப்புகளை ஏற்றுக் கொண்டு அவர்களை நலம் விசாரிக்கிறான். அனைவருமே அப்பாவின் ஆசியில் மிகவும் உல்லாசமாகவும், த்ருப்தியுடன் இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் ஒவ்வொருவருமே மஹரிஷி எப்போதும் தங்களுடனே இருப்பதாகவும், எனவே மற்ற ஸஹோதரிகளைப் பற்றி இது குறித்து வருந்துவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்த மன்னன் மஹரிஷியிடமும் சென்று அவரைப் பூஜித்து, கொண்டாடுகிறான்.

“தேவரீருடைய மஹிமையை நன்கு அறிகிறேன். இத்தகைய செல்வங்களும், சிறப்புகளும் வேறெங்கும் நான் கண்டதில்லை, தங்களின் தவத்தின் சக்தியைப் புரிந்து கொண்டேன்” என்று அவரைப் பலவாறு புகழ்ந்து விட்டு, சிலகாலம் தானும் அங்கு இருந்து அவைகளை அனுபவித்து விட்டு, நகருக்குத் திரும்புகிறான். நூற்றைம்பது குழந்தைகளுக்குத் தகப்பனாகிறார் ஸௌபரி மஹரிஷி. கொஞ்சி மகிழ்கிறார். அவர்கள் சிரிப்பையும், விளையாட்டையும், ஸேஷ்டைகளையும், தவழ்வதையும், நடப்பதையும் கண்டு ஸந்தோஷிக்கிறார். அவர்களின் பல்வேறு பருவங்களைப் பற்றி யோசித்தும் மகிழ்கிறார். இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கையில் ஒரு ஸமயம் அவருக்கு விழிப்பு வருகிறது.

“மோஹம் வளர்ந்து விட்டது, எவ்வளவு லக்ஷம் வருஷங்கள் கழிந்தாலும் இந்த ஆசைகள் முடியாது போலிருக்கிறதே. பிள்ளைகளைப் பார்த்தால், பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும், அதன் பின் கொள்ளுப் பேரன்களைப் பார்க்க வேண்டும் என்றும் நீண்டு கொண்டே தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசையும் பூர்த்தியானதும், புதிதாக இன்னொரு ஆசை பிறக்கிறது. மரணத்தின் போதுதான் இவைகளுக்கு முடிவு போலும். தவம் செய்து கொண்டிருந்த நான் மீனின் ஸஹவாசத்தால் இப்படி அழிந்து விட்டேனே. இனி எவரோடும் கூட்டு வைக்கக் கூடாது. அது பல தோஷங்களை உண்டாக்குகிறது. ஒரு மனைவியோடு இருப்பவனுக்கே பல கஷ்டங்கள் இருக்கும் போது, பலரை மணக்க நினைத்தேனே.

ஆஹா, எவ்வளவு தூரம் வந்து விட்டேன். யோகம், ஸித்திகளைப் பெற்றவர்களுக்கே ஸஹவாஸம் இவ்வளவு கஷ்டங்களைத் தருமென்றால், அல்பர்கள் இப்படிப்பட்டக் கூட்டுறவால் பதிதராகவே ஆகிவிடுவரே” இப்படிப் பலவாறு புலம்பி முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார். லோக குருவான விஷ்ணுவே இதற்கு கதி. அவனையே மீண்டும் சரணடைந்து தவத்தால் இந்த கஷ்டங்களை விட்டு விலகுவேன் என்று முடிவு செய்து போகங்களைத் துறந்து, மனைவிகளோடு வானப்ரஸ்தராகி, பல தர்மங்களை வனத்தில் அனுஷ்டித்து, பக்வம் அடைந்ததாக உணர்ந்த போது அக்னி ஹோத்ர அக்னிகளை தன் ஆத்மாவில் முடிந்து, ஸன்யாஸ ஆச்ரமத்திலிருந்து அழிவில்லாத மோக்ஷத்தையும் அடைந்தார்.

இந்த ஸௌபரி மஹரிஷியின் சரிதத்தை நினைப்பவனும், படிப்பவனும், படிக்கச் செய்பவனும், கேட்பவனும், கேட்கச் செய்பவனும், மனதில் வைப்பவனும், எழுதுபவனும், எழுதச் செய்பவனும், கற்பவன், கற்பிப்பவன் என அனைவரும் எட்டு பிறப்புக்கள் வரை தீய சிந்தையும், தீய ஒழுக்கமும் அண்டாது வாழ்வார்கள். அத்தனை புண்யமானது இந்த சரிதம்.

04_03. மாந்தாதாவின் மகன்களுள் அம்பரீஷனுக்கு யுவநாச்வனும், அவனுக்கு ஹரிதனும் பிறந்தனர். இவனைக் கொண்டே அங்கிரஸ்ஸுக்கள் ஹாரீதர்கள் என்று ஆனார்கள். ஒரு ஸமயம் ரஸாதலத்தில் இருந்த நாகர்களை காச்யபருக்கும், அவர் மனைவி முனிக்கும் பிறந்தவர்களான மௌனேயர் என்ற ஆறு கோடி கந்தர்கவர்கள் வென்று அவர்களின் உயர்ந்த ரத்னங்களையும், ஆட்சியையும் கைப்பற்றினார்கள். நாகர்கள் இது பற்றி மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர்கள் ப்ரார்த்தனைக்கு மனமிறங்கிய பெருமான் தானே மாந்தாதாவின் மகனான புருகுத்ஸனிடம் ப்ரவேசித்து அந்த துஷ்ட கந்தர்வர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கேக் கொடுப்பதாகக் கூறினார்.

இதைக் கேட்ட நாகர்களும் பெரிதும் மகிழ்ந்து தங்கள் ஸஹோதரியான நர்மதையை புருகுத்ஸனுக்கு மனைவியாக்கி, அவனை நாகலோகத்திற்கு அழைத்து வந்தனர். மஹாவிஷ்ணுவின் அனுக்ரஹத்தால் புருகுத்ஸனும் மௌனேயர்களை அழித்து, ஆட்சியை மீண்டும் நாகர்களுக்கு அளித்து விட்டுத் தன் நகரம் திரும்பினான். மிகவும் ஸந்தோஷப்பட்ட நாகர்கள் நன்றிக்கடனாக “நர்மதையின் பெயரைக் கூறுபவனையும், மனதில் நினைப்பவனையும் எந்த விஷமும் ஒன்றும் செய்யாது. விஷத்தையே உண்டாலும் அவனுக்கு அதனால் எந்த பாதிப்பும் இருக்காது. இரவிலும், பகலிலும் எங்கு சென்றாலும் அவனைப் பாம்புகள் கடிக்காது” என்ற வரத்தைக் கொடுத்தனர். புருகுத்ஸனுக்கும் ஸந்ததி விளங்க வரம் அளித்தனர்.

புருகுத்ஸனுக்கும், நர்மதைக்கும் த்ரஸதஸ்யு என்பவனும், அவனுக்கு அனரண்யனும், அவனுக்கு ப்ருஷதச்வனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு ஹஸ்தனும், அவனுக்கு வஸுமனஸ்ஸும், அவனுக்கு த்ரிதன்வாவும், அவனுக்கு த்ரைய்யாருணியும், அவனுக்கு ஸத்யவ்ரதனும் பிறந்தனர். இதில் அனரன்யனை ராவணன் திக் விஜயம் செய்த போது கொன்று விட்டான். இந்த ஸத்யவ்ரதனே பிறகு த்ரிசங்கு என்று பெயருடன் சண்டாளனானான். சங்கு என்றால் முளையுடன் கூடிய குச்சி. அடித்தால் அப்படி வலிக்கும். மணக்கோலத்தில் இருந்த ப்ராஹ்மணப் பெண்ணைக் கவர்ந்து, அவள் தந்தையிடம் “சண்டாளனாகப் போவாய்” என்ற சாபம் பெற்றது, வஸிஷ்டர் ஹோமத்திற்கு உதவிக் கொண்டிருந்த பசுவைக் கொன்றது, மாம்ஸத்தை ஒரு முறை ப்ரோக்ஷிக்காமலே உண்டது இப்படி மூன்று துக்கம் தரும் பாபங்களை செய்ததால் ஸத்யவ்ரதனுக்கு அவன் தந்தை த்ரையாருணி த்ரிசங்கு என்று பெயர் வைத்தான்.

இப்படி சண்டாளனான த்ரிசங்குவின் காலத்தில் பனிரெண்டு வருஷங்கள் மழை பொய்த்து விட்டது. பெரும் பஞ்சத்தில் மாம்ஸம் சாப்பிட்டுத்தான் உயிர் வாழ வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். மாம்ஸமும் சண்டாளனிடமிருந்து தான் கிடைத்தது. சண்டாளனிடமிருந்து ஒன்றைப் பெறுவது மிகவும் பெரிய பாபம், குற்றம். அந்த நிலை மஹரிஷி விச்வாமித்ரருக்கும் வந்தது. மஹரிஷி இந்தச் செயலுக்குட்பட்டதைக் கண்ட த்ரிசங்கு மிகவும் மனமுடைந்து மஹரிஷிக்காகத் தானே வனத்தில் வேட்டையாடி தினமும் மாம்ஸங்களை கங்கைக் கரையில் ஒரு ஆலமரத்தில் கட்டி வைத்தான். இந்த உதவியால் தன் குடும்பத்துடன் பெரிதும் மகிழ்வுடன் வாழ்ந்த விச்வாமித்ரர் அவனை ஸ்வர்கத்திற்கு அனுப்பி வைத்தார்.

த்ரிசங்குவிற்கு ஹரிச்சந்த்ரனும், அவனுக்கு ரோஹிதாச்வனும், அவனுக்கு ஹரிதனும், அவனுக்கு சஞ்சுவும், அவனுக்கு விஜயன், வஸுதேவன் என்ற இருவரும் பிறந்தனர். விஜயனுக்கு ருருகனும், அவனுக்கு வ்ருகனும், அவனுக்கு பாஹுவும் பிறந்தனர். ஹைஹயர், தாளஜங்கர் முதலான பகைவர்களிடம் போரில் தோற்ற பாஹு கர்ப்பிணியாக இருந்த தன் ஒரு மனைவியுடன் காட்டிற்குள் சென்று விட்டான். அவனின் மற்றொரு மனைவி சக்களத்தியின் கர்ப்பம் அழிவதற்காக விஷத்தைக் கொடுத்து விடுகிறாள். கர்ப்பம் ஏழு வருடங்களாக இந்த விஷத்தால் பிறக்காமல் வயிற்றிலேயே இருந்தது. வயது முதிர்ந்த பாஹுவும் ஒரு ஸமயம் ஔர்வ மஹரிஷியின் ஆச்ரமத்தினருகில் மரணமடைந்து விடுகிறான்.

கணவன் சிதையிலேயே உடன்கட்டை ஏறத் துணிந்த அவனது கர்ப்பிணி மனைவியை ஔர்வர் தடுத்து நிறுத்தி “அம்மா, பிடிவாதம் செய்யாதே. உன் வயிற்றில் பெரும் பூமண்டலாதிபதியும், பராக்ரமசாலியும், யாகங்களைச் செய்பவனும், சத்ருக்களை அழிப்பவனுமான ஒருவன் இருக்கிறான். நீ இறந்தால் அவனும் இறப்பான். எனவே உன்னுடைய இந்த ஸாஹஸத்தை நிறுத்தி விடு” என்று கூறுகிறார். அவளைத் தன் ஆச்ரமத்திற்கே அழைத்துச் செல்கிறார். அங்கு விஷத்துடனேயே பிறக்கும் ஆண் குழந்தைக்கு ஔர்வ மஹரிஷியே சடங்குகளைச் செய்து “ஸகரன்” என்ற பெயரையும் வைத்து, தகுந்த பருவத்தில் உபனயனம் செய்வித்து, ஸகல வித்தைகளையும் கற்பிக்கிறார். ப்ருகு மஹரிஷியிடமிருந்து பெற்ற ஆக்னேயம் என்ற அஸ்த்ரத்தையும் உபதேஸிக்கிறார்.

தகுந்த ஸமயத்தில் தாயிடமிருந்து தன் ராஜ்யம், தந்தை, பகைவர்கள் என அனைத்து விஷயங்களையும் அறிந்து கொண்ட ஸகரன் பெரும் கோபம் கொண்டு, சபதம் பூண்டு ஹைஹயர், தாளஜங்கர் மேலும் அவர்களைச் சேர்ந்த சகர், யவனர், காம்போஜர், பாரதர், பப்லவர் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அந்த வம்சங்களைச் சேர்ந்த மிஞ்சியவர்கள் ஸகரனின் குல குருவான வஸிஷ்டரைத் தஞ்சமடைகின்றனர். அவர்களிடம் கருணை கொண்ட அவரும் ஸகரனிடம் வந்து “குழந்தாய்! இவர்களைக் கொல்லாதே, தர்மங்களிலிருந்து விலகினாலே ஒருவன் இறந்தவனாகி விடுகிறான். எனவே உன் சபதத்தைக் காக்க நானே இவர்களை வைதீக தர்மங்களிலிருந்து விலக்குகிறேன். இனி இவர்கள் வெறும் உயிரை மட்டும் கொண்ட பிணங்களே (ஜீவத் ம்ருதர்கள்). இவர்களை நீ விட்டு விடு” என்று கூறுகிறார்.

ஆசார்யரின் வார்த்தைக்குப் பெரிதும் மதிப்பு கொடுத்து அதன்படியே அவர்களின் உயிரை மட்டும் விட்டு, வேஷங்களையும், ஆசாரங்களையும் பறித்து விடுகிறான். யவனர்களின் தலையை மொட்டையடித்து, பாரதர்களின் தலைமயிரைத் தொங்கவிட்டு, பப்லவர்களுக்குக் காரணமின்றி தாடி, மீசை வைத்து, இன்னும் சிலருக்கும் இப்படி எதையாவது செய்து அவர்களை கர்மாக்களைச் செய்வதற்கும் அதிகாரமின்றி வேதாத்யனனம் முதலியவைகளை அழித்து விட்டான். இவர்களே ம்லேச்சர்கள் என்று ஆனார்கள். ப்ராஹ்மணர்களாலும் கைவிடப்பட்டார்கள். ஸகரனும் ஏழு த்வீபங்களையும் எந்த தடைகளுமின்றி நன்கு ஆண்டு வந்தான்.

04_04. ஸகரனின் மனைவிகளாக சாச்யபரின் பெண் ஸுமதியும், விதர்ப்ப ராஜனின் பெண் கேசினீயும் அமைந்தனர். புத்ர பாக்யத்திற்காக இவ்விருவரும் ஔர்வரைப் பூஜித்தனர். அவர்களிடம் கருணை கொண்ட ஔர்வர் ஒருவருக்கு வம்ச வ்ருத்தி செய்யும் ஒருவனையும், மற்றொருவருக்கு அதற்கு உதவாத அறுபதினாயிரம் பிள்ளைகளையும் அனுக்ரஹிப்பதாக அருளினார். விதர்ப்பராஜனின் மகள் கேசினீ குலம் விளங்கும் ஒரு பிள்ளையையும், ஸுமதி அறுபதினாயிரம் பிள்ளைகளையும் இசைந்து பெற்றுக் கொண்டனர். கேசினீக்கு அஸமஞ்ஜஸனும், அவனுக்கு அம்சுமானும் பிறந்தனர்.

அஸமஞ்ஜஸனும், ஸுமதிக்குப் பிறந்த அறுபதினாயிரம் புதல்வர்களும் பிறந்ததிலிருந்தே தீய வழிகளில் சென்று கொண்டிருந்தனர். இளமைத் திமிர் அடங்கியதும் சரியாகிவிடுவார்கள் என்ற ஸகர மன்னனின் எண்ணம் பலிக்கவில்லை. யாகங்களையும், பல தர்ம கார்யங்களையும் அழித்துக் கொண்டிருந்தனர் அஸமஞ்ஜஸனும், அறுபதினாயிரம் பேரும். ஸகரன் வேறு வழியின்றி அஸமஞ்ஜஸனை நாடி கடத்தி விட்டான். அறுபதினாயிரம் பேர்களின் அட்டூழியங்களைப் பொறுக்காத தேவர்கள் மஹாவிஷ்ணுவின் அம்சமாய் அப்போது அவதரித்திருந்த கபில மஹரிஷியிடம் சென்று முறையிட்டனர். இவர்களின் துன்பங்களிலிருந்து உலகைக் காத்தருள வேண்டினர். அவரும் இன்னும் சில நாட்களிலேயே அவர்கள் அழிவார்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

இந்த ஸமயத்தில் ஸகரன் அச்வமேதம் செய்ய ஆரம்பித்தான். யாகக் குதிரையைக் காக்கும் பொறுப்பைத் தன் அறுபதினாயிரம் புத்ரர்களிடம் விடுத்து யாகத்தை ஆரம்பித்தான். அவர்கள் பாதுகாப்புடன் உலகெங்கும் சுற்றிக் கொண்டிருந்த அந்தக் குதிரையை ஒருவன் ரஹஸியமாக பாதாள லோகத்திற்கு ஓட்டிச் சென்று விடுகிறான். பயமும், பெரும் கோபமும், பரபரப்பும் அடைந்த ஸகர புத்ரர்கள் குதிரையின் குளம்படியை அனுஸரித்து பாதாள லோகத்தை நோக்கி பூமியைத் தோண்டிக் கொண்டுச் சென்றனர். பாதாள லோகத்தையும் அடைந்தனர். அங்கே தவம் செய்து கொண்டிருந்த கபில மஹரிஷியையும், அவருக்கருகில் யாகக் குதிரையையும் கண்டனர். முனிவரையே குற்றவாளியாகத் தீர்மானித்து யாகத்தைக் கெடுத்த அவரைக் கொன்று விடுவதாக பெரும் கூச்சலுடன் அவரிடம் ஓடினர். தன் பார்வையாலேயே அறுபதினாயிரம் ஸகர புத்ரர்களையும் கொளுத்திச் சாம்பலாக்கி விட்டார் கபில மஹரிஷி.

பிள்ளைகளையும், யாகக் குதிரையையும் காணாத ஸகரன் தன் பேரனான அம்சுமானை அழைத்து அவர்களைத் தேடி அழைத்து வரச் சொன்னான். தந்தைமார்கள் தோண்டிய வழியே அவர்களைத் தேடிப் பாதாளத்தை அடைந்த அம்சுமான் அங்கு ப்ரகாசமாயிருக்கும் கபில மஹரிஷியைக் காண்கிறான். அவரைப் பலவாறு போற்றிப் புகழ்ந்து, நமஸ்கரிக்கிறான். இவனின் உபஸரிப்பால் பெரிதும் உவந்த மஹரிஷி “குழந்தாய்! யாகக் குதிரையை அழைத்துச் செல். தாத்தாவிடம் சேர்த்து விடு. உன் பௌத்ரன் பகீரதன் ஸ்வர்க லோகத்திலிருக்கும் கங்கையைப் பூலோகம் கொண்டு வரப் போகிறான். பெரும் பேறு பெற்ற நீயும் என்னிடம் வரத்தைப் பெற்றுக் கொள்” என்றார்.

மஹரிஷியின் வார்த்தைகளால் மகிழ்ந்த அம்சுமான் மஹரிஷியின் கோபத்தால் இறந்து போன தன் பித்ருக்களுக்கு ஸ்வர்கத்தை வேண்டுகிறான். “நான் முன்னமே கூறிய படி உன் பேரனால் பூலோகத்திற்கு வரும் கங்கையின் தீர்த்தம் இந்த சாம்பல் குவியலில் பட்டதும் இந்த ஆத்மாக்கள் ஸ்வர்கத்தை அடையும். இந்த கங்கை பகவானின் கால் கட்டை விரலிலிருந்து தோன்றியது. அளவிட முடியாத பெருமை பெற்றது. பாவங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் ஸ்னானம் செய்யாவிட்டாலும், இறந்தவனுடைய சரீரத்தைச் சேர்ந்த சாம்பல், எலும்பு, தோல், நரம்பு, மயிர் என ஏதாவதொன்று இதில் நனைந்தாலும் அவன் பதிதனாக இருந்தாலும் அவனுக்கு ஸ்வர்கத்தைத் தரும் புனித கங்கை.

அம்சுமான் கொண்டு வந்த குதிரையைக் கொண்டு யாகத்தையும் முடித்த ஸகரன், அவன் பிள்ளைகள் பாதாளம் செல்வதற்காகத் தோண்டிய குழியில் நீர் நிரம்பி உண்டான ஸமுத்ரத்தைத் தன் பிள்ளையாக எண்ணினான் (ஸாகரம்). அம்சுமானுக்குத் திலீபனும், அவனுக்குத் தான் பகீரதனும் பிறந்தனர். அவன் பலகாலம் கடும் தவம் புரிந்து ஆகாச கங்கையையும் பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் கங்கையும் பாகீரதி எனப்பட்டாள். பகீரதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு நாபாகனும், அவனுக்கு அம்பரீஷனும், அவனுக்கு ஸிந்துத்வீபனும், அவனுக்கு அயுதாயுவும், அவனுக்கு ருதுபர்ணனும் பிறந்தனர். இந்த ருதுபர்ணனே நள மஹராஜன் புஷ்கரனிடம் சொக்கட்டான் ஆடி தன் போகங்களை இழந்து தவித்த போது, ஆட்டத்தின் மர்மங்களை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து மீண்டும் புஷ்கரனிடமிருந்து ராஜ்ய போகங்களைப் பெறுவதற்கு உதவியவன்.

ருதுபர்ணனுக்கு ஸர்வகாமனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு மித்ரஸஹனும் (ஸௌதாஸன்) பிறந்தனர். இந்த ஸௌதாஸன் ஒரு முறை வேட்டைக்குச் சென்றிருந்த போது மற்ற அனைத்து விலங்குகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்த இரு புலிகளைக் கண்டான். ஒன்றை வேட்டையில் கொன்றான். அது இறக்கும் போது பயங்கரமான ராக்ஷஸ உருவத்துடன் இறந்தது. மற்றதும் “இதற்கு உன்னை தகுந்த ஸமயத்தில் பழி வாங்குவேன்” என்று கூறி மறைந்து விட்டது. ஸமயத்தை எதிர்பார்த்திருந்த அது ஒரு ஸமயம் ஸௌதாஸன் யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கும் போது, குலகுரு வஸிஷ்டரின் உருவில் வந்து யாக முடிவில் நர மாம்ஸத்தைத் தனக்குத் தரவேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றது.

அதுவே சமையல்காரனாக உருவம் தாங்கி நர மாம்ஸத்தைப் பக்வம் செய்து அரசனிடம் பணிவுடன் கொடுத்தது. உண்மை அறியாத ஸௌதாஸனும் அதைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்து குருவிற்குச் சமர்பித்தான். உண்மையான வஸிஷ்டர் அதைக் கண்டு மாம்ஸம், அதுவும் நர மாம்ஸம் என்று உணர்ந்து பெரும் கோபத்துடன், நீயே இதை விரும்பிச் சாப்பிடுபவனாக ஆகக்கடவது என்று அரசனை சபித்து விட்டார். குழப்பமும், பதட்டமும் அடைந்த மன்னன் அவரிடமே நடந்த விஷயங்களைக் கூறி “நீங்களே ஏற்பாடு செய்யச் சொல்லி விட்டு, இப்போது என்னை சபித்து விட்டீர்களே” என்று வருந்தினான்.

த்யானத்தால் விஷயங்களை முழுதும் தெரிந்து கொண்ட வஸிஷ்டரும் ராக்ஷஸன் செய்த தவறுக்கு ஒன்றும் அறியாத இவனை சபித்து விட்டோமே என்று வருந்தினார். மீண்டும் அவனிடமே இந்த சாபம் பனிரெண்டு வருஷங்கள் உன்னிடம் இருந்து பின் விலகும் என்று அருளினார். தவறே செய்யாமல் நாம் ஏன் பனிரெண்டு வருஷங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ஆராயாமல் சபித்த குருவை நாமும் சபித்தால் என்ன என்று கோபத்துடன் சபிப்பதற்காக ஜலத்தையும் எடுத்து ஜபித்தான். மனைவி மதயந்தீ கணவனின் எண்ணத்தை அறிந்து கொண்டாள். பூஜிக்கத்தக்க குலகுருவைச் சபிப்பதிலிருந்து தன் கணவனைத் தடுத்து, அவன் செய்ய நினைப்பது தகாத செயல். பாபச்செயல் என்று அறிவுரை கூறினாள்.

அவளின் உபதேஸத்தால் தான் செய்ய இருந்த தவறை உணர்ந்த ஸௌதாஸன் ஜபித்த நீரை எங்கு விட்டாலும் அங்குள்ள வளமை அழியும் என்று தன் காலிலேயே விட்டுக் கொண்டான். மந்த்ரதீர்த்தம் பட்ட அவனது கால் உடனே வெளுப்பும், கறுப்பும் கலந்த ஒரு விசித்ர வர்ணத்தில் (கல்மாஷம்) மாறிவிட்டது. இதனால் அன்றிலிருந்து அவன் கல்மாஷபாதன் என்று அழைக்கப்பட்டான். ராக்ஷஸனாக மாறிய கல்மாஷபாதன் (என்ற ஸௌதாஸன் என்ற மித்ரஸஹன்) காடுகளில் அலைந்து திரிந்து மனிதர்களைப் பிடித்துத் தின்று கொண்டிருந்தான். இப்படி ஒரு ஸமயம் காட்டில் தன் பத்னியுடன் சேர்ந்திருந்த ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டான். முனிபத்னி அவனிடம் பலவாறு கெஞ்சினாள்.

அவனது பூர்வங்களையும், சிறப்புகளையும் எடுத்துக் கூறினாள். இக்ஷ்வாஹு குல திலகமான மித்ரஸஹனல்லவா நீ. உனக்குத் தெரியாத தர்மங்கள் உண்டோ. ஸ்த்ரீ தர்மத்திலிருக்கும் நான் ஸுகத்தை அனுபவிக்காமலிருக்கும் போது என் பர்த்தாவைக் கொல்வது பாபமல்லவா. எனவே அவரை விட்டுவிடு எனப் பலவாறு கெஞ்சினாள். புலிக்கு தர்மோபதேசம் செய்தால் அதற்குப் புரியவா போகிறது. முனிவரை அடித்துக் கொன்றான். சாப்பிட்டான். சொல்வதைக் கேட்காத, புரிந்து கொள்ளாத அவனிடம் கடுங்கோபம் கொண்ட முனிபத்னி நீயும் இதேபோல் காம ஸுகத்திற்கு முயலும் போது இறந்து படுவாய் என்று சபித்து விடுகிறாள். இரண்டாவது சாபம். பனிரெண்டு வருடங்கள் கழித்தும், இந்த முனிபத்னியின் சாபத்தை நினைவில் கொண்டு அவனும் பலகாலம் இல்லற சுகம் இல்லாமலேயே கவனமாக இருந்தான்.

ஸந்ததியே இல்லாமல் தன்னுடன் வம்சம் முடிவதால் வருந்திய கல்மாஷபாதனும், மனைவி மதயந்தீயும் புத்ர ப்ராப்திக்காக வஸிஷ்டரை வேண்டிக்கொண்டனர். அவருடைய அனுக்ரஹத்தால் மதயந்தீ கர்ப்பவதி ஆனாள். ஆனால் ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. பொறுமையிழந்த அரசி கல்லினால் வயிற்றில் இடித்துக் கொண்டாள். ஆண்குழந்தை ஒன்று அப்போது பிறந்தது. அச்மகன் (அச்மா=கல்) என்று பெயர் வைத்தனர் இந்தக் குழந்தைக்கு. இவனுக்கு மூலகன் என்பவன் பிறந்தான். இவன் காலத்தில் தான் க்ஷத்ரியர்களைப் பூண்டோடு அழித்துக் கொண்டிருந்தார் பரசுராமர். இவனையும் கொல்ல வந்தபோது பல பெண்கள் ஆடையின்றி இவனை சூழ்ந்து மறைத்துக் கொண்டனர். இதனால் இவன் உயிர் தப்பினான். பெண்கள் இவனுக்குக் கவசமாய் இருந்து இவனுக்கு நாரீகவசன் என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த மூலகன் என்ற நாரீகவசனுக்கு தசரதனும், அவனுக்கு இலிபிலி என்பவனும், அவனுக்கு விச்வஸஹனும், அவனுக்கு கட்வாங்கனும் பிறந்தனர். கட்வாங்கன் தேவர்களுக்குத் துணையாயிருந்து அஸுரர்களை வெல்ல உதவினான். அதற்கு ப்ரதிபலனாக அவனை ஸ்வர்கத்திற்கு அழைத்துச் சென்று பல போகங்களை அவன் அனுபவிக்கச் செய்து, அதன் பின் வேண்டிய வரத்தைப் பெறுமாறு கூறுகின்றனர். புத்திசாலியான கட்வாங்கன் முதலில் தனது மீதமிருக்கும் ஆயுசைக் கூறுமாறும், அதற்குத் தக்கவாறு வரங்களைக் கேட்பதாகவும் கூறுகிறான். வேறு வழியின்றி தேவர்களும் அவனது ஆயுசைக் கணக்கிட்டு “இன்னும் ஒரு முஹூர்த்தமே உள்ளது உன் ஆயுள்” என்ற செய்தியைக் கூறுகின்றனர். (ஒரு முஹூர்த்தத்துல என்னத்த அனுபவிக்கறது, அவன் புத்திசாலிதான்) இதைக் கேட்டவுடன் விமானம் மூலம் உடனேயே பூலோகம் வந்து சேர்ந்தான் கட்வாங்கன்.

“ப்ராஹ்மணர்களுடன் இருப்பதை விட பெரிதொன்றுமில்லை. நான் ஒரு பொழுதும் ஸ்வதர்மங்களை விட்டதில்லை. அனைத்து ஸ்தாவர, ஜங்கம ஜீவ ராசிகளிலும் பரமனைத் தவிர வேறெதையும் நான் கண்டதில்லை. இவையெல்லாம் உண்மையானால் மஹரிஷிகள் உபாஸிக்கின்ற பெருமானையே நான் அடைவேனாக” என்று விஷ்ணுவினிடமே தன் ஆத்மாவை அர்ப்பணம் செய்து, அந்த ஒரு முஹூர்த்த காலத்திலேயே மோக்ஷத்தையும் அடைந்தான் கட்வாங்கன். இந்த கட்வாங்கனுக்குத் தீர்க்கபாஹுவும், அவனுக்கு ரகுவும், அவனுக்கு அஜனும், அவனுக்கு தசரதனும் பிறந்தனர்.

இந்த தசரதனுக்குத் தான் தன் அம்சங்களுடன் பகவான் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களாகப் பிறந்தார். விச்வாமித்ரரின் யாகம் காக்க இளமையிலேயே கானகம் சென்று, தாடகையைக் கொன்று, மாரீசனை ஸமுத்ரத்தில் தள்ளி, ஸுபாஹு முதலான ராக்ஷஸர்களை அழித்தான். தன் பாதத்தால் அஹல்யைக்கு சாப விமோசனம் தந்து, விச்வாமித்ரரின் யாகம் காத்த ராமன் அவருடனேயே மிதிலை சென்று ஜனகரின் சிவதனுசை ஒடித்து, ஜனகருக்கு யாக சாலைக்காக பூமியை உழுதபோது கிடைத்த ஸீதை என்ற அயோநிஜையை பத்னியாக்கிக் கொண்டான். அயோத்தி செல்லும் வழியில் க்ஷத்ரியர்களை அழிப்பவரும், ஹைஹய குலத்தை ஒழித்தவருமான பரசுராமரின் வீர்யத்தை அடக்கி, அதன் பின் தந்தை சொல்படி ராஜ்யத்தைத் துறந்துத் தம்பியோடும், மனைவியோடும் கானகம் புகுந்தான்.

கானகத்தில் கர, தூஷணர்களைக் கொன்று, பின் ஸீதையின் பிரிவால் வருந்தி அலைந்து கொண்டிருந்த போது, வழியில் கபந்தனைக் கொன்று, ஸுக்ரீவனைத் தோழனாகக் கொண்டு, வாலியையும் கொன்றான். அதன் பின் அனுமன் மூலம் ஸீதை இருக்குமிடம் அறிந்து, கடலில் அணை கட்டி ராவணாதி அரக்கர் குலத்தை அழித்து, அக்னி ப்ரவேசத்தினால் ஸீதையைப் புனிதையாக்கி, தேவர்கள் புகழ்ந்த ஸீதையுடன் மீண்டும் அயோத்தி திரும்பினான். இப்படி ராமாயணத்தைச் சுருக்கிச் சொல்லி விட்டேனே என்று நினைக்க வேண்டாம். மைத்ரேயே! உண்மையில் பல நூறு வர்ஷங்கள் வர்ணித்தாலும் அந்த மஹோத்ஸவத்தை முடிக்க முடியாது. எனவே அந்த மங்களமான மஹோத்ஸவத்தைச் சுருங்கக் கூறுகிறேன் கேள்” என்றார் பராசரர்.

லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகிய தம்பிகளுடன், விபீஷணன், ஸுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான், அனுமான் முதலான துணைவர்களுடம் மலர்ந்த முகத்துடன் குடை, சாமரங்களை ஏந்திக் கொண்டிருக்க, ப்ரஹ்மா, இந்த்ரன், அக்னி, யமன், நிருருதி, வருணன், வாயு, குபேரன், ருத்ரன் என எல்லா தேவர்களும் துதிக்க, வஸிஷ்டர், வாமதேவர், வால்மீகி, மார்க்கண்டேயர், விச்வாமித்ரர், பரத்வாஜர், அகஸ்த்யர் என ரிஷிகள் மூன்று வேதங்களால் துதி செய்ய, வீணை, புல்லாங்குழல், ம்ருதங்கம், பேரி, படஹம், சங்கம், காஹளம், கோமுகம் முதலான வாத்யங்கள் முழங்க, இன்னும் பல கோலாகலங்களுடன் ஸர்வ லோக ரக்ஷணனாக ராமன் பட்டாபிஷேகம் செய்யப் பட்டான். பதினோராயிரம் ஆண்டுகள் நல்லாட்சியும் புரிந்தான்.

இளவரசனான பரதன் மூன்று கோடி கந்தர்வர்களைக் கொன்று, அந்த ராஜ்யத்தை வென்றான். சத்ருக்னனும் மது புத்ரனான லவணன் என்ற அஸுரனைக் கொன்று மதுரா நகரை ஏற்படுத்தினான். இப்படி இந்த ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்கள் தங்கள் பராக்ரமங்களால் துஷ்ட நிக்ரஹம் செய்து விட்டு இப்பூமியை விட்டுக் கிளம்பிய போது, அவர்களிடம் பக்தி கொண்ட அந்நாட்டு ப்ராணிகளும் கூட மோக்ஷத்தை அடைந்தன. ராமனுக்கு லவ, குசனும், லக்ஷமணனுக்கு அங்கதன், சந்த்ரகேதுவும், பரதனுக்குத் தக்ஷகன், புஷ்கலனும், சத்ருக்னனுக்கு ஸுபாஹு, சுரஸேனனும் பிறந்தனர்.

இந்த சந்ததி குசன், நிஷதன், அனலன், நபஸ், புண்டரீகன், க்ஷேமதன்வா, தேவானீகன், அஹீனகு, குரு, பாரியாத்ரன், பலன், சலன், உத்கன், வஜ்ரநாபன், சங்கணன், வ்யுஷிதாச்வன், விச்வஸஹன், ஹிரண்யநாபன், புஷ்யன், த்ருவஸந்தி, ஸுதர்சனன், அக்னிவர்ணன், சீக்ரகன், மரு,ப்ரசுச்ருகன், ஸுஸந்தி, அமர்ஷன், ஸஹஸ்வான், விச்வபவன், ப்ருஹத்பலன் என வளர்ந்தது. இதில் ஹிரண்யநாபன் ஜைமினி சிஷ்யரான மஹா யோகீச்வரர் யாக்ஞவல்க்யரிடமிருந்து யோகத்தைக் கற்றவன். மரு என்பவனே இன்றும் இமயமலைக்கருகில் கலாபம் என்ற க்ராமத்திலே தன் யோக பலத்தால் யாருக்கும் தெரியாமல் வஸித்து வருகிறான். இவனே இனி வரும் க்ருத யுகத்திலே ஸூர்ய வம்ச முதல்வனாகப் போகிறான். ப்ருஹத்பலனென்பவன் மஹாபாரத யுத்தத்திலே அர்ஜுன புத்ரன் அபிமன்புவால் கொல்லப் பட்டான். இப்படிப் பட்ட இந்த ஸூர்ய வம்சத்தைப் பற்றிக் கேட்பவர்களும், படிப்பவர்களும் இவ்வுலகிலும், ஸ்வர்கத்திலும் விரும்பிய போகங்களைப் பெற்று, எல்லோராலும் கொண்டாடப்படுவர்.

04_05. இக்ஷ்வாகுவின் புதல்வர்களில் ஒருவனான நிமி ஆயிரம் வருடங்கள் செய்யத்தக்க ஸத்ரயாகத்தை ஆரம்பித்தான். அதில் ஹோதாவாக இருக்க வஸிஷ்டரை வேண்டிக் கொண்டான். அவர் இந்த்ரனின் ஐநூறு ஆண்டுகள் செய்யத்தக்க மற்றொரு யாகத்தில் ஏற்கனவே ரித்விக்காக இருக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும், அது முடியும் வரைப் பொறுத்திருக்கும் படியும் நிமியிடம் கூறுகிறார். நிமி இதற்குப் பதிலொன்றும் கூறாமல் மௌனமாக இருக்கிறான். அவன் ஒப்புக்கொண்டு விட்டதாக நினைத்துக் கொண்ட வஸிஷ்டர் இந்த்ரனின் யாகத்திற்குச் சென்று விட்டார். ஆனால் நிமி, குலகுரு இல்லாததால் கௌதமர் முதலான மஹரிஷிகளைக் கொண்டு தன் யாகத்தை ஆரம்பித்து விட்டான்.

இந்த்ரன் யாகம் முடிந்து நிமியிடம் வந்த வஸிஷ்டர் தம்மை எங்கும் போக வேண்டாம் என்று கூறி இருந்தால் இங்கேயே இருந்திருப்போமே, அப்போது மௌனமாக இருந்து விட்டு இப்படி யாகத்தை ஆரம்பித்து விட்டானே என்று வருத்தமும், கோபமும் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த நிமியை நோக்கி இவன் உடலற்றவனாவான் (விதேஹன்) என்று சாபமிட்டார். இதையறிந்த நிமி தூங்கிக் கொண்டிருந்த போது, எதையும் கூறாமல் தனக்குச் சாபமிட்ட வஸிஷ்டரையும் விதேஹராவார் என ப்ரதி சாபமிட்டான். இருவருமே கண்ணுக்குத் தெரியாதவர்களானார்கள். இதன் பின் மித்ரா வருணர் ஊர்வசியிடம் மோஹம் கொண்ட போது அதிலிருந்து வஸிஷ்டர் வேறு தேஹம் கொண்டார்.

நிமியினுடைய தேஹத்தை யாகம் செய்து கொண்டிருந்த ரித்விக்குகள் (தனக்கு உதவியாக இருப்பதற்காக யஜமானன் தக்ஷிணைகள் கொடுத்து வரித்த அத்வர்யு, ஹோதா, உத்காதா, ப்ரஹ்மா ஆகியோர்) தைலங்களால் பதப்படுத்திக் காத்து வந்தனர். யாகம் தொடர்ந்து முடிந்தது. தங்கள் பங்கைப் பெறுவதற்காக யாகத்தின் இறுதியில் வந்த தேவர்களிடம் இந்த ரித்விக்குகள் யஜமானனுக்காக வரம் வேண்ட, அவர்களும் தர இசைந்தனர். ஆனால், நிமி தான் அந்த சரீரத்தை விரும்பவில்லையென்றும், தான் இனி அனைவரின் கண்களிலும் வஸிக்க வேண்டும் என்ற வரத்தைக் கோரிப் பெற்றான். இதனாலேயே கண்களை ஜீவராசிகள் இமைக்கின்றன. அரசனில்லாமல் ராஜ்யம் கெட்டு விடக்கூடாது என்று நிமியின் உடலைக் கடைந்து ஜனகன் (வைதேஹன், மிதி) என்ற புத்ரனை உண்டாக்கினர் மஹரிஷிகள்.

இந்த மிதியின் வம்சம் உதாவஸு, நந்திவர்த்தனன், ஸுகேது, தேவராதன், ப்ருஹதுக்தன், மஹாவீர்யன், ஸுத்ருதி, த்ருஷ்டகேது, ஹர்யச்வன், மரு, ப்ரதிகன், க்ருதிரதன், தேவமீடன், விபுதன், மஹாத்ருதி, க்ருதராதன், மஹாரோமா, ஸ்வர்ணரோமா, ஹ்ரஸ்வரோமா என்று வளர்ந்தது. இந்த ஹ்ரஸ்வரோமாவிற்கு ஸீரத்வஜனும், குசத்வஜனும் பிறந்தனர். இந்த ஸீரத்வஜன் தான் பிள்ளைப் பேறுக்காக யாகம் செய்ய பூமியை உழுத போது, ஸீதை தோன்றினாள். குசத்வஜன் ஸாங்கர்ய தேசத்திற்கு அதிபதியாக இருந்தான். ஸீரத்வஜனுக்குப் பின் பானுமான், சதத்யும்னன், சுசி, ஊர்ஜன், சதத்வஜன், க்ருதி, ரஞ்ஜனன், புருஜித், அரிஷ்டநேமி, ச்ருதாயுஸ், ஸுபார்ச்வன், ஸ்ருஞ்ஜயன், க்ஷேமாவி, அநேநஸ், பௌமதன், ஸத்யரதன், உபகு, உபகுப்தன், ஸ்வாகதன், ஸ்வாங்கன், ஸ்வாபனன், ஸுவர்சஸ், ஸுபாஷன், ஸுச்ருதன், ஜயன், விஜயன், ருதன், ஸுநயநன், வீதஹவ்யன், த்ருதி, பஹுளாச்வன், க்ருதி என்று வளர்ந்தது. பெரும்பாலும் ஆத்ம வித்யையில் நிலை பெற்ற இந்த ஜனக (மிதி, விதேஹ) வம்சம் மிதிலா நகரை ஆண்டது.

04_06. ஸூர்ய வம்ச வ்ருத்தியைக் கேட்டறிந்த மைத்ரேயர், சந்த்ர வம்சத்தையும் கூறக் கேட்கிறார். விஷ்ணுவின் நாபியிலிருந்து தோன்றிய ப்ரஹ்மாவின் புத்ரர் அத்ரி மஹரிஷி. இவரின் புத்ரன் தான் சந்த்ரன். ஓஷதிகள், ப்ராஹ்மணர்கள், நக்ஷத்ரங்கள் இவைகளுக்கு அதிபதியாக ப்ரஹ்மாவால் பட்டம் சூட்டப்பட்ட இவன் ராஜஸூய யாகமும் செய்து முடித்தான். செருக்கால் தேவகுரு ப்ருஹஸ்பதியின் பத்னி தாரையை அபஹரித்தான். மற்ற தேவர்களும், குருவும், ப்ரஹ்மாவும் சொல்லியும் அவளை விடாத சந்த்ரனின் பக்கம் ப்ருஹஸ்பதியின் பகையாளியான சுக்ராச்சார்யார் இந்த சமயம் பார்த்து தன் சிஷ்யர்களான ஜம்பன், கும்பன் முதலான தைத்ய, தானவர்களுடன் சேர்ந்து கொண்டு தேவர்களுக்கெதிராக யுத்த முயற்சிகளையும் கொண்டார்.

ப்ருஹஸ்பதியின் பிதாவான அங்கிரஸ்ஸிடமே ருத்ரரும் வித்யாப்யாஸம் செய்தார். எனவே குரு புத்ரராதலால் ருத்ரரும், தங்களின் குருவாதலால் தேவ ஸைன்யமும் ப்ருஹஸ்பதியின் பக்கம் சேர்ந்தது. தாரையின் நிமித்தாமாய் தாரகாமயம் என்ற தேவாஸுர யுத்தம் கடுமையான யுத்தம் மூண்டது. ப்ரஹ்மா இதில் தலையிட்டு தாரையை ப்ருஹஸ்பதியிடமே விடுமாறு சந்த்ரனிடம் கூற, முடிவில் அவனும் அவ்வாறே செய்தான். ஆனால் இப்போது அவள் கர்ப்பிணி. சந்த்ரனால் பலாத்காரமாக உண்டாக்கப்பட்ட அந்தக் கர்ப்பத்தை விட்டு விடுமாறு அவளிடம் ப்ருஹஸ்பதி கூற பதிவ்ரதையான அவளும் அதை நாணற்கற்றையில் விட்டாள்.

ஆனால் உண்டான குழந்தையின் உன்னதமான தேஜஸ்ஸைக் கண்டு ப்ருஹஸ்பதி, சந்த்ரன் இருவருக்குமே அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஆனால் எவர் கேட்டபோதும் அது யாருடைய குழந்தை என்பதைக் கூற வெட்கத்தினால் தாரை மறுத்துவிட்டாள். இதனால் கோபம் கொண்ட குழந்தை தாயைத் தண்டிக்க முடிவு செய்தது. மீண்டும் சமாதானம் செய்து வைத்த ப்ரஹ்மா, தாரையிடம் உண்மையை உரைக்குமாறு கூறுகிறார். தாரை அந்தக் குழந்தைச் சந்த்ரனுக்குப் பிறந்தவன் என்று கூறுகிறாள். சந்த்ரனும் மிகுந்த ஸந்தோஷத்துடன் அவனுக்கு புதன் என்று பெயர் சூட்டிக் கொண்டாடுகிறான்.

இந்த புதனுக்கும், இளைக்கும் புரூரவஸ் என்பவன் பிறந்தான். அவன் யாக, தானங்களில் சிறந்தவன். ஊர்வசிக்கும் இவனுக்கும் காதல். இதனால் மித்ராவருணர்கள் ஊர்வசியிடம் காமம் கொண்ட போது அதற்கு ஊர்வசி உடன்படாததால், பூலோகத்தில் ஒருவனுக்கு மனைவியாக சில காலம் வசிக்கக்கடவாய் என்று அவர்கள் ஊர்வசியைச் சபித்து விட்டனர். பூலோகத்தில் இவளிடம் மனதைப் பறிகொடுத்த புரூரவஸ் இவளிடம் தன்னை மணக்குமாறு வேண்டுகிறான். அதற்கு இவள் மூன்று நிபந்தனைகளை விதித்து, அவைகளுக்கு உடன்பட்டால் அவனை மணப்பதாகக் கூறுகிறாள்.

தான் குழந்தைகளைப் போல் வளர்க்கும் இரு ஆடுகளை படுக்கையறையிலேயேதான் எப்போதும் வைத்திருப்பேன் என்பது முதலாவது நிபந்தனை. ஆடையின்றித் தான் புரூரவஸ்ஸைப் பார்க்க நேரிடக்கூடாது என்பது இரண்டாவது. எப்போதும் நெய்யையே உணவாகக் கொள்வேன் என்பது மூன்றாவது நிபந்தனை. இவைகளை ஏற்றுக்கொண்டு அவளை மணந்த புரூரவஸ்ஸும் அவளுடன் அறுபத்தொரு வருஷங்கள் இன்பம் துய்த்திருந்தான். ஊர்வசியும் தேவலோகத்தையும் இந்த ஆனந்தத்தில் வெறுத்திருந்தாள். ஊர்வசியில்லாத ஸ்வர்க லோகம் குறையோடு இருந்தது.

இதனால் ஊர்வசியை மீண்டும் தேவலோகத்திற்குக் கொண்டு வருவதற்காக விச்வாவஸு என்ற கந்தர்வ ராஜன் ஒரு இரவு கந்தர்வர்களுடன் வந்து ஆடுகளை அபஹரித்துச் சென்றான். ஆடுகள் கத்துவதைக் கேட்டு ஊர்வசியும் நான் குழந்தைகளைப் போல வளர்த்து வந்த ஆடுகளை எவனோ அபஹரித்துச் செல்கிறானே. நான் அனாதையானேனே. இதை யாரும் தடுக்கவில்லையே. ஒன்றுக்கும் உதவாத ஒருவனை நான் புருஷனாக அடைந்திருக்கிறேனே என்று கத்தத் தொடங்கி விட்டாள். அப்போது புரூரவஸ் ஆடையின்றி இருந்தான். இருட்டில் இவள் நம்மை நிர்வாணமாகப் பார்க்க முடியாது என்று அப்படியே கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைத் திருடியவர்களைப் பிடிக்க அவஸரமாகச் சென்றான்.

இதுதான் ஸமயம் என்றிருந்த விச்வாவஸுக்கள் ப்ரகாசமான ஒரு மின்னலையும் ஏற்படுத்தி ஊர்வசியைப் புரூரவஸ்ஸின் நிர்வாணக்கோலத்தைக் காணச் செய்தனர். இரண்டு நிபந்தனைகளும் மீறப்பட்டு விட்டதால் ஊர்வசியும் தேவலோகம் திரும்பி விட்டாள்.
கந்தர்வர்களும் வந்த வேலை முடிந்ததென்று ஆட்டுக்குட்டிகளை அங்கேயே விட்டு விட்டு மறைந்து விட்டனர். ஊர்வசியைக் காணாத புரூரவஸ் பித்துப் பிடித்து திகம்பரனாகவே அலையத் தொடங்கி விட்டான். பல நாள் கழித்து அவளையும், கூட நான்கு அப்ஸரஸ்ஸுக்களையும் ஒரு தாமரைக் குளத்தில் குருக்ஷேத்ரத்தில் கண்டான். பலவாறு அவளைப் புகழ்ந்தும், திட்டியும், நல்லதும் கூறினான் புரூரவஸ்.

ஊர்வசி, “விவேஹத்தை இழக்காதீர்கள். உங்களால் கர்ப்பிணியாய் இருக்கிறேன் இப்போது நான். உங்களுக்கு ஒரு புத்ரன் பிறக்கப் போகிறான். எனவே ஒரு வருஷம் கழித்து வாருங்கள். நான் ஓரிரவு உங்களுடன் கூடி வஸிக்கிறேன்” என்று கூறினாள். புரூரவஸ்ஸும் சந்தோஷச் செய்திகளுடன் நாடு திரும்பினான். ஊர்வசி அவனைப் பற்றியும், தான் அவனுடன் வாழ்ந்தது பற்றியும் மற்ற அப்ஸரஸ்ஸுக்களிடம் புகழ்ந்து கூறினாள். அவர்களும் அவனைக் கொண்டாடி, தாங்களும் அவனுடன் வஸிப்பதை விரும்புவதாகக் கூறினர். ஒரு வருஷம் கழிந்ததும், “ஆயுஸ்” என்ற புத்ரனை அவனிடம் கொடுத்து விட்டு, தானும் அவனுடன் ஒரு இரவு அவனுடன் கூடியிருந்தாள். அவ்வாறே மற்ற அப்ஸரஸ்ஸுக்களும் அவள் அனுமதியுடன் அவனுடன் கூடி இருந்து தாங்களும் பிள்ளைகளைப் பெற்றனர்.

மஹாராஜரே! எங்களிடம் அன்பு கொண்ட கந்தர்வர்கள், அதனால் தங்களுக்கு வரங்களைத் தர முன் வந்துள்ளார்கள் என்றாள் ஊர்வசி. புரூரவஸ் “நான் பகைவர்களை வென்று, இந்த்ரிய சக்தி மிகுந்தவனாக, உறவினர், பொக்கிஷங்கள் குறைவின்றி இருக்கிறேன். எனவே ஊர்வசியே எனக்கு வேண்டியது. அதை அருளுங்கள்” என்று கந்தர்வர்களிடம் வேண்டினான். கந்தர்வர்கள் ஒரு அக்னி ஸ்தாலியை அவனிடம் கொடுத்து வேத வழியில் அந்த அக்னியை மூன்றாக்கி, ஊர்வசியின் கூடுதலை விரும்பி யாகம் செய்யுங்கள். அவளை அடைவீர்கள் என்று கூறிச் சென்றனர். சரியென்று அதைப் பெற்றுக் கொண்ட வந்த அவன் வழியில் யோசித்தான்.

ஊர்வசியைப் பெற்று வராமல் இந்த ஸ்தாலியைப் போய் பெற்றுக் கொண்டு வந்து விட்டோமே என்று அதை அங்கேயே வைத்து விட்டு வருத்தத்தோடு நாட்டுக்கு வந்து விட்டான். நள்ளிரவில் உறங்காமல் குழப்பத்தில் “ஊர்வசியை அடைய உதவுமென்று கந்தர்வர்கள் கொடுத்த அக்னி ஸ்தாலியையும் காட்டிலேயே வைத்து விட்டு வந்து விட்டோமே” என்று மீண்டும் காட்டிற்கு வந்தான். அக்னி ஸ்தாலியை வைத்து விட்டுப் போன இடத்தில் வன்னி மரத்தை நடுவில் கொண்ட ஒரு அரச மரத்தைக் கண்டான். “இந்த அக்னி ரூபமான மரத்தையே அரணியாக்கி, கடைந்து அக்னியை உண்டாக்கி உபாஸிப்போம்” என்று அந்த மரத்தைத் தன் நாடு கொண்டு வந்தான்.

காயத்ரீ மந்த்ரத்தை உச்சரித்துக் கொண்டே அரணியைச் செய்ய, இருபத்து நான்கு அளவுள்ள அரணியும் உண்டாயிற்று. அதைக் கடைந்து மூன்று அக்னியையும் பெற்று வேத விதிப்படி, ஊர்வசியை உத்தேஸித்து யாகங்களைச் செய்த புரூரவஸ் மீண்டும் கந்தர்வ லோகத்தையும், ஊர்வசியையும் நிரந்தரமாகப் பெற்றான். ஒன்றாய் இருந்த அக்னி இப்படி இந்த மன்வந்த்ரத்தில் மூன்றாயிற்று.

04_07. புரூரவஸ்ஸுக்கு ஆயுஸ், அமாவஸு, விச்வாவஸு, ச்ருதாயுஸ், சதாயுஸ், அயுதாயுஸ் என்று ஆறு பிள்ளைகள். அமாவஸுக்குப் பீமனும், அவனுக்குக் காஞ்சனனும், அவனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஜஹ்னுவும் பிறந்தனர். இந்த ஜஹ்னு மஹாராஜன் ஒரு ஸமயம் தன் யாகசாலையை முழுதும் மூழ்கடித்து விட்ட கங்கையைக் கோபத்தால் குடித்து விட்டார். பகீரதனும், மற்ற தேவர்களும், ரிஷிகளும் வேண்டிக்கொள்ளவே மீண்டும் மனமிரங்கித் தன் காதின் வழியாகக் கங்கையை வெளியே விட்டார். இப்படி ஜஹ்னுவிற்குப் பெண்ணானதால் கங்கைக்கு ஜாஹ்னவீ என்ற பெயர் உண்டாயிற்று.

இந்த ஜஹ்னுவின் வம்சம் ஸுமந்து, அஜகன், பலாகாச்வன், குசன் என வளர்ந்தது. குசனுக்கு குசாம்பன், குசநாபன், அதூர்த்தரஜஸ், வஸு என்று நான்கு பிள்ளைகள். இதில் குசாம்பன் இந்த்ரனுக்கொப்பான மகன் வேண்டும் என்று கடும் தவமிருந்தான். இவன் தவத்தால் பயந்த இந்த்ரன் தானே இவனுக்குக் காதி (கௌசிகன்) என்ற பெயரில் மகனாய்ப் பிறந்தான். இவனுக்குப் பிறந்த பெண்ணான ஸத்யவதியைத் தனக்கு மணம் முடித்து தரும்படி ப்ருகு மஹரிஷியின் புத்ரர் ரிசீகர் வேண்டினார். ஆனால் முதுமையும், கோபமும் மிகுந்த அந்த ப்ராஹ்மணருக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பாத காதி கன்யா சுல்கமாக ஒரு காது கறுத்தும், உடலெங்கும் வெளுத்தும் இருக்கிற காற்றை விட வேகமுடைய ஆயிரம் குதிரைகளைத் தந்தால் நீங்கள் இவளை அடையலாம் என்றார்.

ஆனால் ரிசீகர் வருணனிடம் சென்று அச்வதீர்த்தத்தில் தோன்றிய அத்தகைய குணங்களுடைய ஆயிரம் குதிரைகளைப் பெற்றுக் கொண்டு வந்து காதியிடம் விட்டார். ஸத்யவதியையும் மணந்தார். சென்று விட்டார் அவளுடன் காட்டிலிருக்கும் தன் ஆச்ரமத்திற்கு. ஸத்புத்ரனை வேண்டி மந்த்ரங்களின் வீர்யத்துடன் கூடிய ஒரு வகையான அன்னத்தை(சரு) தன் மனைவி ஸத்யவதிக்காக உண்டாக்கினார் ரிசீகர். இதையறிந்த ஸத்யவதியின் தாய் தனக்கும் அம்மாதிரி செய்து தரச்சொல்லி புத்ரியிடம் கூறினாள். மனைவியின் வேண்டுகோளின்படி க்ஷத்ரிய தேஜஸ்ஸுடன் கூடிய மற்றொரு சருவைத் தன் மாமியாருக்காகச் செய்தார். இதை உன் தாயிடம் கொடுத்து சாப்பிடச் சொல், இதை நீ சாப்பிடு என்று இரண்டையும் தன் மனைவியிடம் கொடுத்து விட்டு கானகம் சென்றார் ரிசீகர்.

ஆனால் ஸத்யவதியின் தாய் “மகளே, உலகில் தனக்குப் பிறக்கும் குழந்தைக்கு இருக்கும் வீர்யத்தை வேறெவர்க்கும் விரும்ப மாட்டார்கள் எவரும். எனவே உனக்குத் தந்திருக்கும் சருவில் நிச்சயமாக உன் கணவர் சிறப்புக்களைச் சேர்த்திருப்பார். உன் தம்பியோ பூமண்டலத்தை ஆள வேண்டியவன். உன் மகனோ ப்ராஹ்மணன். அவனுக்குச் சிறப்பாக அவ்வளவு ஸாமர்த்யங்கள் தேவையிராது. எனவே சிறந்த சக்திகளங்கிய உன் சருவையும், என்னுடைய இந்த சருவையும் நாம் மாற்றிக் கொள்ளலாம்” என்று மகளிடம் கூறினாள். அவளும் அப்படியே தாயின் சொற்படி சருவை மாற்றிக் கொண்டாள். சருவை இருவரும் சாப்பிட்டனர். இருவரும் கருவுற்றனர்.

சில காலம் சென்று ஆச்ரமம் திரும்பிய ரிசீகர் தன் மனைவியை உற்று நோக்கினார். “பாபியே! செய்யத் தகாததைச் செய்து விட்டாய். உன் தாயின் சருவை மாற்றி நீ உபயோகித்திருப்பதாலேயே இது நடந்துள்ளது. உன் தாயின் சருவில் க்ஷத்ரிய தேஜஸ்க்குரிய ஐச்வர்யம், வீர்யம் முதலியவைகளையும், உன்னுடையதில் ப்ரஹ்மதேஜஸ்க்குரிய சாந்தி, ஞானம், பொறுமை முதலான வீர்யங்களையும் மந்த்ரங்களால் ஏற்றியிருந்தேன். எனவே உங்களிருவருக்கும் நீங்கள் உண்ட சருக்களின் குணங்களுடனேயே குழந்தைகள் மாறிப் பிறக்கப் போகின்றன” என்றார்.

இதைக் கேட்டதும் கலங்கிய ஸத்யவதி ரிசிகரின் பாதங்களில் விழுந்து, “ஸ்வாமி! அறியாமையால் நான் செய்த தவறை மன்னியுங்கள். ப்ராஹ்மண குலத்தில் வாழ்க்கைப்பட்ட எனக்கு இப்படித் தகாத வகையில் க்ஷத்ரிய குணங்கள் கொண்ட புத்ரன் வேண்டாம். என் புத்ரனுடைய புத்ரனுக்கு வேண்டுமானால் இந்தச் சருவின் குணத்தைக் கொடுத்து எனக்கு அருள் புரியுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள். ரிசிகரும் அருள் கூர்ந்தார். ஸத்யவதி ஜமதக்னியைப் பெற்று, நாளடைவில் கௌசிகீ என்ற நதியாக மாறி விட்டாள். ஸத்யவதியின் தாய் விச்வாமித்ரரைப் பெற்றாள். ஜமதக்னிக்கும், இக்ஷ்வாகு குலத்தில் உதித்த ரேணுகைக்கும் அரச குலங்களை அழித்த பரசுராமர் பிறந்தார் (ஸத்யவதியின் வரம் இது). விச்வாமித்ரர் ப்ரஹ்மரிஷியானார்.

ஜமதக்னியின் ஸஹோதரனென்பதால் தேவர்கள் விச்வாமித்ரருக்கு ப்ருகு வம்சத்தைச் சேர்ந்த சுநச்சேபன் என்பவனை புத்ரனாக முறைப்படிக் கொடுத்தனர். அவன் தேவராதன் எனப் பெயர் பெற்றான். இவனைத் தவிர விச்வாமித்ரருக்கு மதுச்சந்தன், தனஞ்ஜயன், க்ருததேவன், அஷ்டகன், கச்சபன், ஹரிதன் என்ற ஆறு புத்ரர்களும் உண்டாயினர். இவர்களால் அனேக கௌசிக கோத்ரங்கள் உண்டாயின. இப்படி இந்தக் கௌசிக கோத்ரங்களில் வெவ்வேறு முன்னோர்களைக் கொண்டவர்கள் தங்களுக்குள் விவாஹம் செய்து கொள்ளலாம்.

04_08. புரூரவஸ்ஸின் மூத்த மகன் ஆயு ராஹுவின் மகளை மணந்து, நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரம்பன், ரஜி, அனேனஸ் என்ற ஐந்து புத்ரர்களைப் பெற்றான். க்ஷத்ரவ்ருத்தனுக்கு ஸுஹோத்ரனும் அவனுக்கு காச்யன், காசன், க்ருத்ஸமதன் என்ற மூவரும் பிறந்தனர். க்ருத்ஸமதனுக்கு சௌனகர் பிறந்தார். இவர் தான் நான்கு வர்ணங்களை உண்டாக்கினார். காச்யனுக்குக் காசேயன் என்ற காசீராஜனும், அவனுக்கு ராஷ்ட்ரனும், அவனுக்குத் தீர்க்கதபஸ்ஸும், அவனுக்குத் தன்வந்த்ரியும் பிறந்தனர். இவர் இந்த்ரியங்களை ஸ்வாதீனமாக வைத்திருந்தார். இவர் முன்பு க்ஷீர ஸாகரத்தில் தோன்றிய போதே “காசிராஜ கோத்ரத்தில் பிறந்து எட்டு வகையான வைத்ய சாஸ்த்ரங்களை விளங்கச் செய்வாயாக. யாகங்களிலும் ஹவிர்ப் பாகத்தைப் பெறுவாயாக” என்று பரமனால் அருளப் பெற்றிருந்தார்.

தன்வந்த்ரிக்குக் கேதுமான், அவனுக்குப் பீமரதன், அவனுக்குத் திவோதாஸன், அவனுக்கு ப்ரதர்தனன், அவனுக்கு அலர்கன் என்பவனும் பிறந்தனர். ப்ரதர்தனனுக்கு சத்ருஜித், வத்ஸன், ருடத்வஜன், குவலயாச்வன் என்று பெயர்கள் உண்டு. இவன் மகன் அலர்கனைப் போல் அறுபத்தாறாயிரம் வருஷங்கள் பூமியை ஆண்டவர் வேறு எவருமில்லை. இவனுக்கு ஸன்னதியும், அவனுக்கு ஸுகேதுவும், அவனுக்கு தர்மகேதுவும், அவனுக்கு ஸத்யகேதுவும், அவனுக்கு விபுவும், அவனுக்கு ஸ்வவிபுவும், அவனுக்கு ஸுகுமாரனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும், அவனுக்கு வீதிஹோத்ரனும், அவனுக்கு பார்கனும், அவனுக்கு பார்கபூமியும் பிறந்தனர். இவனால் நான்கு வர்ணங்களும் நன்கு நடைபெற்றன.

04_09. ஆயுஸ்ஸின் மற்றொரு புதல்வனான ரஜி என்பவனுக்கு ஐநூறு பிள்ளைகள். அனைவருமே ஒப்பற்ற பராக்ரமங்கள் உடையவர்கள். இந்த ஸமயத்தில் தேவாஸுர யுத்தம் நடந்தது. இவர்களிருவருமே அப்போது ப்ரஹ்மாவிடம் போய் இந்தப் போரில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று வேண்டினர். ப்ரஹ்மா ரஜி எவர் பக்கம் இருந்து யுத்தம் செய்கிறானோ அவர்களே வெற்றி பெறுவர் என்று கூறிவிட்டார். உடனே அஸுரர்கள் முதலில் சென்று ரஜியைத் தங்கள் பக்கம் இருந்து யுத்தம் செய்யுமாறுக் கேட்டனர். அதற்கு ரஜி போரில் வென்றதும் தன்னை அவர்களுக்கு இந்தரனாகக் (தலைவனாக) கொண்டால் இதற்குச் சம்மதம் என்று கூறினான்.

“முதலில் ஒன்றைக் கூறிப் பின் அதை மாற்றிக் கூறும் பழக்கம் எங்களுக்கில்லை. இப்போது சொல்லி விடுகிறோம். ஏற்கனவே ப்ரஹ்லாதன் எங்களுக்கு இந்த்ரன். அவரே இந்த்ரனாய்த் தொடர வேண்டுமென்றே இந்த யுத்தமும். எனவே வெற்றிக்காகப் பொய் சொல்ல நாங்கள் விரும்பவில்லை” என அஸுரர்கள் ரஜியின் நிபந்தனைக்கு மறுப்பு கூறிச் சென்று விட்டனர். இதன்பின் தேவர்கள் இந்த நிபந்தனையை ஏற்று ரஜியைக் கொண்டு அஸுரர்களை வென்றனர். ஆனால் அதன் பின் இந்த்ரன் ரஜியின் கால்களில் விழுந்து “நீங்களே எங்களை பயத்திலிருந்து காத்து உணவளித்தீர்கள். எனவே நீங்கள் எனக்குத் தகப்பன் முறை. புத்ரன் இந்த்ரனாக இருப்பது தகப்பனுக்குப் பெருமை தானே. ஆகையால் நானே இந்த்ரனாகத் தொடர அருள வேண்டும்” என்று வேண்டினான்.

ரஜியும் சிரித்துக் கொண்டு “பகைவர்களே பாதம் பணிந்தால் அருள வேண்டும். உனக்கென்றால் சொல்லவும் வேண்டுமா. நீயே இந்த்ரனாக இரு” என்று கூறி தன் நகரம் திரும்பி விட்டான். ரஜிக்குப் பின் அவன் புத்ரர்கள் அரசாண்டு கொண்டிருந்த போது நாரதர் அவர்களிடம் வந்தார். இந்த்ரனும் உங்கள் தகப்பனுக்குப் புத்ரன் முறையே. எனவே நீங்கள் அவனுக்குப் பங்காளிகள். எனவே உங்களுக்கும் இந்த்ர பதவியில் உரிமையுண்டு என்று போதித்தார். இவர்களும் இதைக் கேட்டுக் கொண்டு இந்த்ரனிடம் சென்று உரிமை கோரினர். மறுத்த இந்த்ரனையும், தேவர்களையும் ஒடுக்கித் தாங்களே இந்த்ர லோகத்தில் அதிகாரம் செலுத்தலாயினர்.

சில நாட்கள் இங்குமங்கும் அலைந்த இந்த்ரன் குரு ப்ருஹஸ்பதியிடம் சென்று தன் கவலையைக் கூறி யாகங்களில் இலந்தைப் பழ அளவிலாவது புரோடாசம் (யாக அடை)கிடைக்க அருள் வேண்டினான். ப்ருஹஸ்பதி முன்னமே என்னிடம் வந்திருந்தால் இந்த நிலையே உனக்கு வந்திருக்காதல்லவா. சரி, போனது போகட்டும். விரைவிலேயே உனக்கு உன பதவியை மீட்டுத்தருகிறேன் என்று கூறி இந்த்ர தேஜஸ் அதிகரிக்கவும், ரஜியின் புத்ரர்களுக்கு அழிவையும் வேண்டி நாள் தோறும் அபிசாரம் செய்ய ஆரம்பித்தார். இதனால் புத்தி பேதலித்த ரஜி புத்ரர்கள் வர்ணாச்ரமங்களை விட்டு, வைதீக மார்கத்துக்கு எதிராக செயல் படத்தொடங்கினர். இவர்கள் இப்படி ஆனதால் இவர்களை இந்த்ரன் எளிதில் வென்று ப்ருஹஸ்பதியின் ஹோமத்தால் பெற்ற தேஜஸ்ஸுடன் மீண்டும் ஸ்வர்க பதவியை அடைந்தான். இந்த இந்த்ரன் தன் பதவியை இழந்து, மீண்டும் அதை அடைந்த கதையைக் கேட்பவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகாமலும், தர்மாத்மாக்களாகவும் இருப்பார்கள்.

ஆயுவின் மற்றொரு புத்ரனான ரம்பனுக்கு சந்ததியில்லை. க்ஷத்ரவ்ருத்தனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு ஸஞ்ஜயனும், அவனுக்கு ஜயனும், அவனுக்கு விஜயனும், அவனுக்கு க்ருதனும், அவனுக்கு ஹர்யதனனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு அதீனனும், அவனுக்கு ஜயத்ஸேனனும், அவனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு க்ஷத்ரதர்மனும் பிறந்தனர்.

04_10. புரூரவஸ்ஸின் மகன் ஆயுஸ்ஸின் மற்றொரு மகன் நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, வியாதி, க்ருதி என்று ஆறு ஸத்புத்ரர்கள். யதி ராஜ்யத்தை விரும்பாததால் யயாதி அரசனானான். இவன் சுக்ராச்சார்யாரின் பெண் தேவயானியையும், வ்ருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டையையும் மணந்து, தேவயானியிடம் யது, துர்வஸு என்ற இரு பிள்ளைகளையும், சர்மிஷ்டையிடம் த்ருஹ்யன், அனு, பூரு என்ற மூன்று புத்ரர்களையும் பெற்றான். தனக்குப் பணிவிடை செய்வதற்காகத் தன்னுடன் வந்த சர்மிஷ்டையிடம் உரிமை கொண்டு பிள்ளைப் பெற்றதை அறிந்த தேவயானி, இதைப் பற்றித் தந்தையிடம் பொருமவே, சுக்ராச்சார்யார் யயாதிக்கு கிழத்தன்மை வரும்படி சபித்து விட்டார்.

அகாலத்தில் கிழத்தன்மை பெற்ற யயாதி ஆச்சார்யரின் திருவடிகளில் விழுந்து மன்னிப்பு கோர அவரும் மனங்கனிந்து, உன் மூப்பை மற்றொரு யுவனுடன் (யௌவனமாயுள்ளவன்) மாற்றிக் கொள் என்று அருளினார். யயாதி தன் பிள்ளைகளிடம் சென்று தன் மூப்பைப் பெற்றுக் கொண்டு அவர்களின் யௌவனத்தைத் தனக்குத் தருமாறு கேட்டான். இளையவன் பூருவைத் தவிர அனைவரும் மறுத்து விட்டனர். அவர்களுக்கு ராஜ்யம் கிடையாது என்று சபித்து விட்டு, பூருவுடன் தன் மூப்பை மாற்றிக் கொண்டான். விச்வாசீ என்ற அப்ஸரஸ்ஸுடனும், தேவயானியுடனும் பல ஆண்டுகள் ஸுகமாகக் கழித்தான். தர்மத்துடன் ஆட்சி செலுத்திப் பற்பல போகங்களையும் அனுபவித்தான். புதிது, புதிதாக ஆசையும், சுகமும் தோன்றியதே தவிர சலிப்பு உண்டாகவில்லை.

ஒரு நாள் புத்தி வந்தது யயாதிக்கு. “காமத்தை அனுபவிக்க, அனுபவிக்க அது அழிந்து விடும் என்று அனுபவித்தேன். ஆனால் அது வளர்ந்ததேயன்றி அழியவில்லை. அக்னி நெய்யால் நன்கு வளர்வது போல்தான் இந்தக் காமமும் அனுபவத்தால் நன்கு வளர்கிறது. உலகிலுள்ள அனைத்துத் தான்யங்களும், பொன், பசுக்கள், பெண்கள் என அனைத்தும் ஒருவனின் ஆசைக்கே போதாது. எனவே ஆசையை விடுவதே ஒரே வழி. நாம் தளர்ந்தாலும், பல்லும், மயிரும் உதிர்ந்து விட்டாலும் ஆசை தளர்வதில்லை. ஆசையே அனைத்துத் துக்கங்களுக்கும் காரணம். எனவே புத்தியுள்ளவன் ஆசையை விட வேண்டும். அப்போது தான் ஸுகம். இதற்கு நானே சரியான உதாரணம்.

என் புத்ரனின் யௌவனத்தைப் பெற்று ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் ஆசை ஒழியவில்லை. தினமும் புதிதாகவே தோன்றுகிறது. எனவே ஆசையை விடுத்து பசி, தாகம், நான், எனது என்ற எண்ணங்களை ஒழித்து, மனதை ப்ரஹ்மத்திடம் செலுத்தி, ம்ருகங்களுடன் வாழ்வதே சிறந்தது” என்று கூறிவிட்டு மீண்டும் பூருவுடன் தன் யௌவனத்தை மாற்றிக் கொள்கிறான். தென் கிழக்கு ராஜ்யங்களுக்கு துர்வஸுவையும், மேற்கே த்ருஹ்யனையும், தெற்கே யதுவையும், வடக்கே அனுவையும் சிற்றரசர்களாக்கி விட்டு யௌவனமடைந்த பூருவை பூமண்டல அதிபதியாக்கி விட்டுத் தவம் செய்ய கானகம் சென்று விடுகிறான் யயாதி.

04_11. யயாதியின் மூத்த மகன் யதுவின் வம்சத்தைப் பற்றிக் கூறுகிறார் மஹரிஷி. இந்த வம்சத்தில் தான் அனைவராலும் அனைத்துப் பலன்களையும் கேட்டுத் துதிக்கப்படும் மஹாவிஷ்ணு அவதரித்தார். பரம பாவனமான இந்த வம்சத்தைக் கேட்பவர்கள் பாவங்களிலிருந்து விடுபடுகின்றனர். யதுவின் புத்ரர்கள் ஸஹஸ்ரஜித், க்ரோஷ்டு, நளன், நஹுஷன் என்ற நால்வர். ஸஹஸ்ரஜித்துக்கு சதஜித்தும், அவனுக்கு ஹைஹயன், ஹேஹயன், வேணுஹயன் என்ற மூன்று புதல்வர்கள். ஹைஹனுக்குத் தர்மனும், அவனுக்குத் தர்மேந்த்ரனும், அவனுக்குக் குந்தி என்பவனும், அவனுக்கு ஸஹஜித் என்பவனும், அவனுக்கு மாஹிஷ்மதீ நகரை நிர்மாணித்த மஹிஷ்மானும், அவனுக்கு பத்ரச்ரேண்யனும், அவனுக்கு துர்தமனும், அவனுக்குத் தனகனும், அவனுக்கு க்ருதவீர்யன், க்ருதாக்னி, க்ருததர்மன், க்ருதௌஜஸ் என்ற நால்வரும் பிறந்தனர்.

இந்த க்ருதவீர்யனுக்குப் பிறந்த அர்ஜுனன் ஆயிரம் கைகளுடன், ஏழு த்வீபங்களுக்கும் அதிபதியாக விளங்கினான். அத்ரி மஹரிஷியின் குலத்துதித்த தத்தாத்ரேயரைத் துதித்து ஆயிரம் கைகள், அதர்மத்தில் இஷ்டமில்லாமை, ஸ்வதர்மப் பற்று, யுத்த வெற்றி, தர்ம ஆட்சி, அனைத்துலகங்களிலும் புகழ் பெற்றவனிடமிருந்து மரணம் எனப் பல வரங்களைப் பெற்றிருந்தான். பத்தாயிரம் யாகங்களைச் செய்து, தானம், தவம், பணிவு, கேள்வி, அறிவு என்று எதிலும் எவரும் தனக்கு ஈடின்றி அனைத்துலகிலும் நல்லாட்சி புரிந்தான். ராஜா என்ற சொல் அப்போது வேறெவரையும் குறிக்காது இவனுக்கு உரித்ததாக இருந்தது. எவரும் தன் பொருளை இழந்ததில்லை இவன் காலத்தில். ஆரோக்யம், செல்வம், யோகம், பலம், வீர்யங்களுடன் எண்பத்தையாயிர வருஷ காலம் இவன் அரசாண்டான்.

ஒரு ஸமயம் மாஹீஷ்மதியில் நர்மதையில் மனைவிகளோடும், மதுவோடும் களித்திருந்த போது தேவ, தைத்ய, கந்தர்வர்களை வென்றிருந்த ராவணன் திக் விஜயமாக அங்கு வந்து இவனோடு யுத்தம் புரிந்தான். அவனை விளையாட்டாகச் சிறையிலிட்டான் இந்த கார்த்தவீர்யார்ஜுனன். இவன் விடுவிக்கும் வரை சிறையிலேயே வருந்தினான் ராவணேச்வரன். இறுதியில் பரசுராமரால் கொல்லப்பட்ட இவனுக்கு சூரன், சூரஸேனன், வ்ருஷஸேனன், மது, ஜயத்வஜன் என்பவர் முதலாக நூறு புத்ரர்கள். ஜயத்வஜனுக்குத் தாளஜங்கன் என்பவனும், அவனுக்கு வீதிஹோத்ரன், பரதன் முதலான தாளஜங்கர் என்ற நூறு பிள்ளைகளும் பிறந்தனர். பரதனுக்கு வ்ருஷனும், அவனுக்கு மதுவும், அவனுக்கு வ்ருஷ்ணியும் பிறந்தனர். இவனாலேயே இந்தக் குலத்தவர்க்கு வ்ருஷ்ணிகள் என்ற பெயர் வந்தது. மதுவின் வம்சம் என்பதால் மதுக்கள் என்றும், யதுவின் வம்சத்தவர் என்பதால் யாதவர் என்ற பெயரும் வந்தது.

04_12. யதுவின் புத்ரன் க்ரோஷ்டுவிற்கு த்வஜிநீவானும், அவனுக்கு ஸ்வாதி என்பவனும், அவனுக்கு ருசங்குவும், அவனுக்கு சித்திரரதனும், அவனுக்கு சசிபிந்துவும் பிறந்தனர். இந்த சசிபிந்து பதினான்கு ரத்னங்களுடனும் (ப்ராணன் இல்லாதவை ஏழு – சக்ரம், ரதம், மணி, கட்கம், சர்மம், கொடி, நிதி; ப்ராணன் உள்ளவை ஏழு – மனைவி, புரோஹிதன், ஸேனாபதி, ரதகாரன், காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை), லக்ஷம் பத்னிகளுடனும், பத்து லக்ஷம் பிள்ளைகளுடனும் சக்ரவர்த்தியாக இருந்தான். இவர்களில் ப்ருதுச்ரவஸ், ப்ருதுகர்மா, ப்ருதுகீர்த்தி, ப்ருதுயசஸ், ப்ருதுஜயன், ப்ருதுதாஸன் என்ற ஆறு புத்ரர்கள் முக்யமானவர்கள். ப்ருதுச்ரவஸ்ஸுக்கு ப்ருதுதமனும், அவனுக்கு உசநஸ்ஸும் (நூறு அச்வமேதங்கள் செய்தவன்), அவனுக்கு சிதபு என்பவனும், அவனுக்கு ருக்மகவசனும், அவனுக்குப் பராவ்ருத் என்பவனும், அவனுக்கு ருக்மேஷு, ப்ருதுக்மன், ஜ்யாமகன், பதிதன், ஹரிதன் என்ற ஐந்து புதல்வர்களும் இருந்தனர்.

ஜ்யாமகனுக்கு சைப்யை என்ற மனைவி. அவளுக்குப் பிள்ளையில்லை. ஜ்யாமகனுக்கு அவளிடம் பயம். எனவே இன்னொரு கல்யாணம் செய்து கொள்ளாமலே அவளிஷ்டப்படி இருந்து விட்டான். குழந்தைகளில்லை. அப்போது நடந்த ஒரு சண்டையில் இந்த ஜ்யாமகன் அனைத்துப் படைகளையும் கொன்றும், துரத்தியும் வெற்றி வாகை சூடினான். அப்போது அங்கு ஒரு பெண் தன்னைக் காப்பாற்ற எவரும் இன்றி அலறிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்டதும் “மலடியின் கணவனாகப் பிள்ளைகளின்றி இருக்கும் தனக்காகவே இந்த ஸ்த்ரீ ரத்னம் தெய்வத்தால் அனுப்பப்பட்டுள்ளது. இவளை மணக்கலாம்” என்று நினைத்தான். ஆனால் சைப்யையிடம் இருக்கும் பயத்தால் இவளை அவளிடம் உத்தரவு கேட்டே மணக்க வேண்டும் என்று நிச்சயித்துத் தன்னுடன் அவளைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்து விட்டான்.

வெற்றி வாகை சூடி வரும் அரசனை வரவேற்க வந்த சைப்யை, புதிதாக ஒரு பெண்ணை அவனிடம் கண்டதும் யாரிவள் என்று கோபத்துடன் கேட்கிறாள். அவளைக் கண்டதும் கதி கலங்கிய ஜ்யாமகன் நாக்குழறி மாற்றுப்பெண் என்று கூறி விடுகிறான். “நமக்கேது பிள்ளை, எந்தப் பிள்ளைக்கு இவளை மணம் முடிக்கப் போகிறீர்கள்” என்று மீண்டும் சைப்யை கேட்க, தான் முன்னம் கூறியதையே ஒட்டி “அன்பானவளே, உனக்கே ஒருவன் பிறப்பான். அவனுக்கு மணம் முடிக்கவே இவளை அழைத்து வந்தேன்” என்று ஒருவாறு முடித்தான். தனக்கு மகன் பிறக்கப் போவதாகக் கூறியதைக் கேட்ட சைப்யை இப்போது கோபம் மறைந்து ஸந்தோஷத்துடன் “அப்படியே ஆகட்டும்” என்கிறாள். தர்மம் தவறாத அரசனும், பதிவ்ரதையான சைப்யையும் இப்படிக் கூறியதால் அஸ்து தேவதைகளும் அதை உறுதி செய்தன.

வயது முதிர்ந்திருந்த போதும் இப்படி சில நாட்களில் கர்ப்பவதியான சைப்யை விதர்பன் என்ற புத்ரனைப் பெற்றெடுத்தாள். விதர்பனும் தன் தந்தை முன்பே தனக்காகக் கொண்டு வந்திருந்த ஸ்நுஷை (மருமகள்) என்பவளையே மணந்து கொண்டான். இவர்களுக்கு க்ரதன், கைசிகன், ரோமபாதன் என்று மூன்று குழந்தைகள். நாரதரிடமிருந்து ஞானத்தைப் பெற்றுச் சிறந்த ரோமபாதனுக்கு பப்ருவும், அவனுக்கு த்ருதியும், அவனுக்குக் கைசிகனும், அவனுக்கு சேதியும் பிறந்தனர். இவன் வம்சத்தவர்கள் சேதி நாட்டரசர்கள் ஆவர். விதர்பனின் இன்னொரு புதல்வனான க்ரதனுக்குக் குந்தியும், அவனுக்கு த்ருஷ்டியும், அவனுக்கு நித்ருதியும், அவனுக்குத் தாசார்ஹனும், அவனுக்கு வ்யோமனும், அவனுக்கு ஜீமூதனும், அவனுக்கு விக்ருதியும், அவனுக்குப் பீமரதனும், அவனுக்கு நவரதனும், அவனுக்குத் தசரதனும், அவனுக்குச் சகுனியும், அவனுக்குக் கரம்பியும், அவனுக்கு மதுவும், பின் குருவம்சன், அனு, புருஹோத்ரன், அம்சு, ஸத்வதன் என இந்த வம்சம் நீண்டது. இந்த ஸத்வதனிடமிருந்து ஸாத்வதர்கல் உண்டாயினர். இந்த ஜ்யாமக வம்ச வ்ருத்தியைக் கேட்பவர்கள் பாபங்களிலிருந்து விடுபடுகின்றனர்.

04_13. ஸத்வதனுக்கு பஜனன், பஜமானன், திவ்யன், அந்தகன், தேவாப்ருதன், மஹாபோஜன், வ்ருஷ்ணி என்ற புத்ரர்கள் பிறந்தனர். இவர்களில் பஜமானனுக்கு நிமி, க்ருகணன், வ்ருஷ்ணி என்ற மூவர் ஒரு மனைவியிடமும், சதஜித், ஸஹஸ்ரஜித், அயுதஜித் என்ற மூவர் மற்றொரு மனைவியின் வயிற்றிலும் பிறந்தனர். தேவாப்ருதனுக்குப் பப்ரு பிறந்தான். இந்த தேவாப்ருதனும், பப்ருவும் மிகவும் புகழ் பெற்றிருந்தனர். பக்கத்திலும், தூரத்திலும் இவர்களின் புகழுரைகள் ஒரே போல் இருந்தது. பிள்ளை மனிதர்களில் சிறந்தவன் என்றும், தகப்பன் தேவர்களுக்கு ஒப்பானவன் என்றும் போற்றப்பட்டனர். இவர்களிடம் உபதேசம் பெற்று எழுபத்து நாலாயிரம் பேர்கள் மோக்ஷம் பெற்றனர்.

மஹா போஜனுக்குப் பிறந்தவர்களே போஜர்கள். இவர்கள் ம்ருத்திகாவரம் என்ற நகரில் வஸித்ததால் மார்த்திகாவரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வ்ருஷ்ணிக்கு ஸுமித்ரன், யுதாஜித் என்ற இரு பிள்ளைகள். ஸுமித்ரனுக்கு அனமித்ரனும், அவனுக்கு நிக்னனும், அவனுக்கு ப்ரஸேனன், ஸத்ராஜித் என்ற இருவரும் பிறந்தனர். இந்த ஸத்ராஜித் ஸூர்ய உபாஸகன். ஸூர்யனின் நண்பன். ஒரு ஸமயம் கடற்கரையில் நின்று ஸூர்யனைத் துதிக்கையில், அதனால் மகிழ்ந்த ஸூர்ய பஹவான் அவனுக்குத் தன் தோற்றத்தைக் காண்பித்தார். ஆனால் ஸத்ராஜித்தால் அந்த உருவை அறிந்து கொள்ள முடியவில்லை.

எனவே “பகவானே! வானில் எப்படி உருண்டையாய் உள்ளீரோ அதோ போலவே என் முன்னேயும் காட்சி அளிக்கிறீர். எப்படி ஸ்தொத்ரம் செய்தாலும் உங்கள் உருவை அறிந்து கொள்ள முடியவில்லை. அனுக்ரஹித்துத் தங்கள் ஸ்வரூபத்தைக் காட்டுங்கள்” என்று வேண்டிக் கொண்டான். இதைக் கேட்ட ஸூர்ய பகவான் தான் அணிந்திருக்கும் ஸ்யமந்த்க மணியாலேயே இவனால் தன்னைக் காண முடியவில்லை. கூசி நிற்கிறான் என்பதை அறிந்து அதை எடுத்து மறைத்துக் கொண்டார். இப்போது சிறிது சிவந்ததும், குறுகியதுமான ஸூர்யனையும், அவரின் பொன்னிறம் போன்ற கண்களையும் ஸத்ராஜித் கண்டான். ஸூர்யனை இன்னும் மகிழ்வுடன் துதித்து வணங்கினான்.

இவன் துதியால் மகிழ்ந்த ஸூர்யன் வரங்களைப் பெற்றுக் கொள்ளக் கூறினார். ஸத்ராஜித் மிகுந்த ப்ரகாசம் பொருந்திய அந்த ஸ்யமந்தக மணியைத் தனக்குத் தந்து விடுமாறு கேட்டு அதைப் பெற்றுக் கொண்டு விட்டான். இந்த ரத்னத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு, மிகுந்த ப்ரகாசத்தோடு த்வாரகை சென்றான். த்வாரகாவாஸிகள் ஸூர்ய பகவானே தங்களைத் தரிஸிக்க இங்கு வந்து கொண்டிருக்கிறார் என்று க்ருஷ்ணனிடம் கூறினர். அவர் அவர்களிடம் உண்மையை எடுத்துக் கூறி, பயமின்றி அவனைத் தரிஸிக்கச் சொன்னார். அதன் பின் தன்னிடம் சேர்ந்த ஸத்ராஜித்திற்கு, இந்த ஸ்யமந்தகம் தினம் தினம் எட்டு பாரம் பொன்னைத் தந்து கொண்டிருந்தது. மேலும் இதன் மஹிமையால் அவன் ராஜ்யத்தில் வ்யாதி, பாம்பு, நெருப்பும், நீர், பஞ்சம் இவைகளாலுண்டாகும் பயங்கள் எதுவும் இல்லாதிருந்தது.

க்ருஷ்ணன் ஸ்மந்தகத்தைக் கண்டதிலிருந்தே “இதைப் பறித்து ராஜா உக்ரஸேனருக்குத் தர வேண்டும், ஆனால் வீணாக குல பேதம் வந்து விடும்” என்று நினைத்து மௌனமாயிருந்தான். க்ருஷ்ணனின் விருப்பத்தையறிந்த ஸத்ராஜித், ஸ்யமந்தகத்தைத் தன் ஸஹோதரன் ப்ரஸேனனிடம் கொடுத்து விட்டான். சுத்தக் குறைவுள்ளவர் இந்த மணியைத் தரித்தால் அது அவர்களைக் கொன்று விடும். ப்ரஸேனன் இப்படிப்பட்டவன். எனவே அவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது ஒரு சிங்கம் இவனைக் கொன்று மணியை வாயில் கவ்விக் கொண்டு ஓடி விட்டது. அதனிடமிருந்து ஜாம்பவான் என்ற கரடியரசன், சிங்கத்தைக் கொன்று மணியைத் தன் குழந்தை ஸுகுமாரகனுக்கு விளையாடக் கொடுத்து விட்டது. இதையறியாமல் யாதவர்கள் க்ருஷ்ணன் தான் ப்ரஸேனனைக் கொன்று விட்டான் என்று நினைத்தனர்.

இவர்கள் எண்ணத்தை அறிந்த க்ருஷ்ணன் அபவாதத்தைப் போக்கிக் கொள்ளவும், ப்ரஸேனன் நிலையறியவும் தானே அவர்களுடன் காட்டிற்குள் சென்றார். வழியில் அனைவரும் ப்ரஸேனனையும், சிங்கத்தின் காலடிகளையும் கண்டனர். அதன் பின் சிங்கத்தின் காலடிகளைத் தொடர்ந்து சென்ற போது இறந்து கிடந்த சிங்கத்தையும், கரடியின் காலடிகளையும் கண்டனர். அதைத் தொடர்ந்து சென்ற போது அது ஒரு குகையில் போய் முடிந்தது. ஸைன்யங்களை மலைவாசலிலேயே நிறுத்தி விட்டு உள்ளே சென்ற க்ருஷ்ணர் அங்கு ஒரு பெண் ரத்னத்தைக் காட்டி குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்டார். “ப்ரஸேனனைக் கொன்று இந்த ஸ்யமந்தகத்தை எடுத்துச் சென்ற சிங்கத்தைக் கொன்று நம் ஜாம்பவான் அதை உனக்குக் கொடுத்திருக்கிறார், பார் இதை, இது உன்னுடையது” என்று அவள் கூறிக் கொண்டிருந்தாள்.

இவ்வாறு குழந்தையை வளர்த்துக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து உண்மைகளைத் தெரிந்து கொண்ட க்ருஷ்ணனை அந்தப் பெண்ணும் பார்த்து விட்டாள். புதியதாக ஒருவனைப் பார்த்ததும் பயத்தில் அலறிய அவள் குரல் கேட்டு ஜாம்பவானும் அங்கு வந்தார். அவருக்கும் க்ருஷ்ணனுக்கும் இருபத்தொரு நாட்கள் பயங்கர யுத்தம் நடந்தது. வெளியே ஏழெட்டு நாட்கள் காத்திருந்த யாதவர்கள் க்ருஷ்ணன் ஒருவருடனும் இவ்வளவு காலம் சண்டை செய்ததில்லை. எனவே அவன் குகைக்குள்ளேயே இறந்து விட்டான் என்று உறுதி செய்து, அதை த்வாரகையிலும் சென்று பரப்பினர். இதைக் கேட்ட க்ருஷ்ணனின் உறவினர்களும் ச்ரத்தையும் க்ருஷ்ணனுக்குச் செய்ய வேண்டிய உத்தர க்ரியைகளைச் செய்தனர்.

இந்த ச்ராத்தங்களால் தெம்பும், ப்ராணனும் வலுத்தது க்ருஷ்ணனுக்கு. இதே ஸமயம் ஜாம்பவானும் உணவின்றி வலுவிழந்து, க்ருஷ்ணனை வணங்கி, “தாங்கள் தேவ, தானவ, ராக்ஷஸ, கந்தர்வர் என எவராலும் வெல்ல முடியாதவர் போலும். உம்மை மனிதர்களோ, விலங்குகளான நாங்களோ வெல்ல இயலாது. நீங்களும் எங்கள் ராமனைப் போல நாராயணனின் அவதாரமாயிருக்க வேண்டும்” என்று துதித்தார். க்ருஷ்ணனும் பூபாரம் குறைப்பதற்காகத் தான் அவதரித்துள்ளதைத் தெரிவித்து, ஜாம்பவானை இறுகத் தழுவி, அவர் களைப்பைப் போக்கினார். விஷயத்தை முழுதும் அறிந்து கொண்ட ஜாம்பவான் மகிழ்ச்சியில் திளைத்தார். அதிதிக்கு உபசாரங்களைச் செய்து, தன் பெண்ணான ஜாம்பவதியையும் முறைப்படி கன்யாதானமாகக் கொடுத்தார். ஸ்யமந்தகத்தையும் க்ருஷ்ணனுக்கேக் கொடுத்தார்.

இறந்து விட்டதாக நினைத்திருந்த க்ருஷ்ணனை ஜாம்பவதியுடனும், ஸ்யமந்தகத்துடனும் கண்டு பெரும் உபஸரிப்புடன் வரவேற்றனர் த்வாரகாவாஸிகள். ஸபையில் அனைவர் முன்பாகவும் நடந்தவைகளை விவரித்துக் கூறிய க்ருஷ்ணர் ஸ்யமந்தகத்தை மீண்டும் ஸத்ராஜித்திடமே கொடுத்து விட்டு, ஜாம்பவதியுடன் அந்தப்புரம் சென்றார். க்ருஷ்ணனின் இந்த உதார குணத்தால் மிகவும் வெட்கப்பட்ட ஸத்ராஜித் தன் பெண் ஸத்யபாமையை க்ருஷ்ணனுக்கே மணம் முடித்தான். ஸத்யபாமாவை ஏற்கனவே அக்ரூரன், க்ருதவர்மா, சததன்வா முதலானவர்கள் கேட்டிருந்தனர். ஸத்ராஜித்தின் இந்த முடிவைக் கேட்ட அவர்கள் சததன்வாவைத் தலைமையாக்கி அவனைப் போருக்குத் தூண்டினர்.

“நாம் ஏற்கனவே கேட்டிருந்தும் பெண்ணை நமக்குத் தராமல் க்ருஷ்ணனுக்குத் தந்திருக்கிறான் ஸத்ராஜித். எங்களை மதித்திராவிடினும், உன்னையாவது மதித்திருக்க வேண்டும். எனவே இனி ஸத்ராஜித் இருப்பதில் ப்ரயோஜனமில்லை. நீ அவனைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் எடுத்துக் கொள். க்ருஷ்ணன் எதிர்த்து வந்தால் நாங்கள் இருக்கிறோம்” என்று அவர்கள் சததன்வாவிடம் கூற, அவனும் இதற்கிசைந்து ஸத்ராஜித்தைக் கொல்ல ஸந்தர்பத்தை எதிர்பார்த்திருந்தான். அந்த ஸமயத்தில் பாண்டு புத்ரர்கள் வாரணாவத அரக்கு மாளிகையில் இறந்து விட்டனர் என்ற செய்தி வந்தது. அவர்கள் இறக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருந்தும், துர்யோதனனுக்குப் பாண்டவர்கள் இறப்பில் சந்தேஹம் வராமலிருப்பதற்காக அவனை துக்கம் விசாரித்து விட்டு வருவதற்காக க்ருஷ்ணன் வாரணாவதம் சென்றான்.

இந்த ஸந்தர்பத்தில் தூங்கிக்கொண்டிருந்த ஸத்ராஜித்தைக் கொன்று ஸ்யமந்தகத்தையும் அபஹரித்து விட்டான் சததன்வா. இதையறிந்த ஸத்யபாமை மிகுந்த துயரமும், கோபமும் கொண்டு தன் தேரிலேறி வாரணாவதம் வந்தாள். கணவனிடம் சென்று “என்னை உங்களுக்கு மணம் முடித்த கோபத்தில் சததன்வா என் தந்தையைக் கொன்று உலகின் இருளைப் போக்கும் அந்த உயர்ந்த ஸ்யமந்தகத்தையும் எடுத்துச் சென்று விட்டான். இது உங்களுக்கே அவமானம். எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்று கூறி அழுதாள். உள்ளூர ஸத்ராஜித்தின் முடிவையும், ஸ்யமந்தகத்தையும் நினைத்து ஸந்தோஷப்பட்ட க்ருஷ்ணன் ஸத்யபாமாவிற்காகத் தன் கண்களைச் சிவப்பாகக் காட்டிக் கொண்டு “நீ சொன்னது சரியே.

இந்த அவமானம் என்னுடையதே. இதை நான் ஒருக்காலும் ஸஹிக்க மாட்டேன். இதற்குத் தீர்வு சததன்வாவின் முடிவேயாகும். அருகிலிருக்கும் மரத்தில் பறவைகள் கூடு கட்டிக் கொண்டு தொந்தரவு செய்தால் அதற்குச் சரியான தீர்வு அந்த மரத்தையே வெட்டி விடுவது தான். பக்ஷிகளைக் கொல்வதல்ல. அதேபோல் இங்கும் சததன்வாவைக் கொல்வதை விட வேறெந்த பரிஹாரமும் சிறந்ததாக இருக்காது. வேறு வழியில்லை. நீ அழாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறித் தேரிலேறி த்வாரகை திரும்பினான். அங்கு பலராமனுடன் சேர்ந்து “அண்ணா! ஸ்யமந்தகத்திற்கு இருவர் சொந்தம் கொண்டாடினர். ஒருவனைக் காட்டில் சிங்கம் கொன்று விட்டது. மற்றொருவனை சததன்வா கொன்று விட்டான். இப்போது அது பொது. எனவே சததன்வாவைக் கொன்று ஸ்யமந்தகத்தை நாமிருவரும் எடுத்துக் கொள்வோம், உடனே தேரிலேறுங்கள்” என்றான்.

இவர்களிருவரும் புறப்பட்டுத் தன்னைக் கொல்ல வருவதை அறிந்த சததன்வா, க்ருதவர்மாவிடம் ஓடினான். அவன் க்ருஷ்ணனையும், பலராமனையும் சேர்த்து என்னால் எதிர்க்க முடியாது என்று மறுத்து விட்டான். சததன்வா உடனே அக்ரூரனிடம் சென்றான். அவன் “இவர்களை தேவர்களாலும் வெல்ல இயலாது. சக்ரதாரி உலகத்தையே அடக்கி விடுவான். அஸுரர்களின் மனைவிகளை கணவனை இழந்தவர்களாகச் செய்தவர்கள் இவர்கள். எவராலும் இவர்களை வெல்ல இயலாது” என்று பயந்து மறுத்து விட்டான். வேறு வழியில்லாத சததன்வா அக்ரூரனிடமே “இந்த ஸ்யமந்தக மணியையாவதுப் பத்திரமாகக் காத்துக் கொடுக்க முடியுமா” என்று கேட்டான்.

“நீ இறக்க நேர்ந்தாலும் இது என்னிடமிருப்பதை எவரிடமும் சொல்லாமலிருப்பாயானால், நான் வைத்துக் கொள்கிறேன்” என்று நிபந்தனை விதிக்க, அதற்குட்பட்டு, ஸ்யமந்தகத்தை அக்ரூரனிடம் கொடுத்து விட்டு நாளொன்றுக்கு நூறு காத தூரம் (ஒரு காதம் தோராயமாக மூன்று மைல்கள்) ஓடக் கூடிய ஒரு பெண் குதிரையிலேறி ஓடி விட்டான் சததன்வா. பலராமனுடன் க்ருஷ்ணனும் உயர்ந்த நான்கு குதிரைகள் பூட்டிய தேரிலேறி அவனைத் துரத்தினான். நூறு காதம் முடிந்து மிதிலைக்கருகில் மிகவும் களைப்படைந்த சததன்வாவின் குதிரை இறந்து விழுந்து விட்டது. சததன்வா கால்களாலேயே ஓடத் தொடங்கினான். அவன் குதிரையைக் கண்ட க்ருஷ்ணன் பலராமனிடம் “நம் குதிரைகளும் களைத்து விட்டன. இந்த இறந்த குதிரையைப் பார்த்து பயந்தும் விட்டன. எனவே தாங்கள் தேரிலேயே இருங்கள். நானும் ஓடிச் சென்றே, அவனைக் கொல்கிறேன்” என்று கூறி விட்டு ஓடியே அவனைத் துரத்தினான்.

இரண்டு க்ரோச தூரம் துரத்திச் சென்ற க்ருஷ்ணன் சததன்வாவைக் குறித்து தன் சக்ரத்தைப் ப்ரயோகித்தான். அது அவன் தலையை அறுத்து, அவனைக் கொன்றது. அவனிடம் ஸ்யமந்தகத்தைத் தேடி, ஏமாந்து பலராமனிடம் வந்தான் க்ருஷ்ணன். “அண்ணா! நாம் சததன்வாவைக் கொன்றது வீண், அவனிடம் அந்த மணி இல்லை” என்றான் க்ருஷ்ணன். இதை நம்பாத பலராமன் “நீ பொருளாசையால் இப்படிப் பொய் கூறுகிறாய். நான் உன் ஸஹோதரனென்பதால் இதைப் பொறுக்கிறேன். நீ நிந்திக்கத் தக்கவன். உன்னாலோ, பந்துக்களாலோ எனக்கு இனி த்வாரகையில் ஒன்றும் ஆகத் தேவையில்லை. நான் என் வழி செல்கிறேன். த்வாரகைக்கு இனி நான் வரவில்லை. உன்னுடன் வஸிக்கவும் விரும்பவில்லை. நீ உன் இஷ்டப்படி செல்” என்று கூறிவிட்டான்.

க்ருஷ்ணன் பலமுறை பலராமனிடம் விஷயங்களைக் கூறி வேண்டியும், அவனைப் புறக்கணித்துக் கோபத்துடன் விதேஹம் சென்று விட்டான் பலராமன். க்ருஷ்ணன் வேறு வழியின்றி தான் மட்டும் த்வாரகை வந்து சேர்ந்தான். விதேஹத்தில் ஜனகரால் வரவேற்று, உபஸரிக்கப்பட்டுத் தங்கியிருந்த பலராமனிடம் அந்த ஸமயத்தில் தான் துர்யோதனன் வந்து கதாயுத்தம் செய்யக் கற்றுக் கொண்டான். மூன்று வருஷங்கள் இப்படி ஓடின. உக்ரஸேனன், பப்ரு முதலான மூத்த யாதவர்கள் உண்மையிலேயே க்ருஷ்ணனிடம் ஸ்யமந்தகம் இல்லை என்பதை அறிந்து, அதை பலராமனிடம் விளக்கிக் கூறி, மீண்டும் அவனை க்ருஷ்ணனிடம் கொண்டு வந்து சேர்த்தனர்.

அக்ரூரர் அந்த ஸ்யமந்தகத்திற்குரிய யோக்யதையுடன் இருந்தார். அதுவும் அவருக்கு நிறைய பொன்னைத் தந்தது. தர்மத்திலும், பகவானிடத்திலும் ச்ரத்தையுள்ள அவர் அந்த செல்வத்தைக் கொண்டு பல யாகங்களைச் செய்து வந்தார். இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அக்ரூரர் போஜ வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு க்ருஷ்ணனைச் சேர்ந்த யாதவர்களால் என்றுமே பகை பயம் உண்டு. யாக தீக்ஷையிலிருப்பவனைக் கொன்றால் வரும் ப்ரஹ்மஹத்தி தோஷத்திற்குப் பயந்து யாதவர்கள் தன்னைக் கொல்ல மாட்டார்கள் என்ற காரணத்தாலும் அக்ரூரர் எப்போது ஏதாவதொரு யாக தீக்ஷையிலேயே இருந்தார். இவர் இப்படி மணியுடன் இருந்ததால் த்வாரகையிலும் வ்யாதி, பஞ்சம், கொலை என்று எந்த தீயவைகளும் இல்லாதிருந்தது. இப்படியே அறுபத்திரண்டு வருஷங்கள் உருண்டோடின.

இந்த ஸமயத்தில் ஸத்வதனுடைய கொள்ளுப் பேரனான சத்ருக்னன் என்பவனை போஜர்கள் கொன்று விட்டனர். இந்த ஸாத்வதர்-போஜர் சண்டையை விரும்பாத அக்ரூரர் போஜர்களுடன் த்வாரகையிலிருந்து வெளியேறினார். இப்படி அக்ரூரர் வெளியேறியதும் த்வாரகைக்குத் பாம்புகள், வ்யாதி, அகால மரணம் என அனைத்துத் தீங்குகளும் வரத் தொடங்கின. க்ருஷ்ணன் முதியோர்களுடன் ஒரு ஸபையைக் கூட்டி இது குறித்து ஆராய்ந்த போது, யாதவர்களில் மூத்த அந்தகன் என்பவர் “அக்ரூரர் நாட்டை விட்டு வெளியேறினதாலேயே இவ்வாறெல்லாம் நடக்கின்றன. இவன் பெற்றோர்களும் இப்படியே. ச்வபல்கர் என்ற அக்ரூரரின் தகப்பனார் இருக்குமிடங்களிலும் எந்த துர்பிக்ஷங்களும் இருந்ததில்லை.

இதனாலேயே மழையே இல்லாதிருந்த காசிக்கு ஒரு முறை, காசிராஜன் ச்வபல்கரை அழைத்துச் சென்றார். அவர் சென்றதும் உடனே மழை பொழிந்து விட்டது. காசிராஜன் தன் பெண்ணையே அவருக்கு மணம் முடித்தான். அவளும் அப்படியே புண்யமானவள். காலம் ஆகியும் ப்ரஸவம் ஆகாதிருந்த காசீராஜன் தன் மனைவியின் கர்ப்பத்திடம் “குழந்தாய்! ஏன் இன்னும் வெளியில் வராதிருக்கிறாய். உன் முகத்தைப் பார்க்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம். தாயையும் வருத்தாமல் சீக்ரமாக வெளியே வந்து விடு” என்று கூறினான். பனிரெண்டு வருஷங்களாக கர்ப்பத்திலேயே இருந்த அந்தப் பெண் குழந்தை “அப்பா, நீங்கள் தினமும் ஒரு ப்ராஹ்மணனுக்கு ஒரு பசு வீதம் மூன்று வருஷங்கள் தானம் செய்தால் நான் பிறப்பேன்” என்று உறுதி கூறி, அதன்படி பிறந்தாள்.

கோதானம் செய்து பிறந்தவளாதலால் காந்தினீ என்று பெயரிடப்பட்டாள். இந்த காந்தினீயே அக்ரூரரின் தாய். இப்படி அவர்கள் அனைவருமே தூய்மையானவர்கள். எனவே சிறு குற்றங்களைப் பொறுத்து அக்ரூரரைத் திரும்ப அழைத்து வாருங்கள்” என்றார். யாதவர்களும் இதை ஒப்புக்கொண்டு அவரை மீண்டும் அழைக்க, உக்ரஸேனர், ராம, க்ருஷ்ணர்களின் அபயத்தில் அவரும் மீண்டும் வந்தார். த்வாரகையும் முன்பு போல் ஸுபிக்ஷமானது. ஆனால் க்ருஷ்ணன் ஸுதாரித்துக் கொண்டான். “அக்ரூரர் வம்சத்தார் பாவனமானவர்கள் என்பதும், அதனால் அவர்களிருக்குமிடத்தில் ஸுபிக்ஷம் இருக்கிறது என்பது அல்பமாயிருக்கிறதே. நடப்பதையெல்லாம் பார்த்தால் ஸ்யமந்தகத்தின் மஹிமை போல இருக்கிறது.

எனவே அது அக்ரூரனிடம் தான் இருக்க வேண்டும். மேலும் இவ்வளவு யாகங்கள் செய்ய அக்ரூரனுக்கும் அதுதான் செல்வத்தைப் பொழிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே ஸ்யமந்தகம் அக்ரூரனிடம் தான் இருக்கிறது. இது முடிவு” என்று நிச்சயித்துக் கொண்டான்.
அரண்மனையிலேயே கபடமாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து யாதவர்களையும், அக்ரூரையும் அழைத்தான். எல்லோரும் உற்சாகமாகவும், ஸந்தோஷமாகவும் பேசிக் கொண்டிருக்கும் போது, க்ருஷ்ணன் அக்ரூரரைப் பார்த்து “அக்ரூரரே! சததன்வா ஸ்யமந்தகத்தை உங்களிடம் கொடுத்திருப்பதை நான் அறிவேன். அது உங்களிடமே இருக்கட்டும். நீங்கள் வைத்திருந்தாலும் அதன் பயனைத் தேசமே அனுபவித்து வருகிறது.

ஆனால் அண்ணா பலராமர் அதை நான் வைத்துக் கொண்டிருப்பதாக நினைத்து என் மீது கோபத்திலும், வருத்தத்திலும் இருக்கிறார். அதை நீக்குவதற்காகவாவது எனக்காக அதைக் காட்டுங்கள்” என்று எல்லோர் முன்னிலையிலும் கூறிவிட்டார். அக்ரூரர் இதைச் சிறிதும் எதிர்ப்பார்க்கவில்லை. இல்லை என்று கூறி, க்ருஷ்ணன் எல்லோர் முன்னிலையிலும் தன்னைச் சோதனை செய்து அதை வெளியே எடுத்து விட்டால், வீணான விரோதமும், அபவாதமும் வரும். வேறு வழியின்றி உரைக்கலானார் “க்ருஷ்ணா, நீ கூறுவது உண்மை. சததன்வா அதை என்னிடம் தான் தந்துள்ளான். அவன் இறந்ததும் என்றோ ஒரு நாள் நீ அதைக் கேட்பாயென்றே தான் தினமும் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்.

அதற்கு மதிப்பு கொடுத்து நானும் ஸுக போகங்களை சிறிதும் அனுபவிக்காமலேயே இருந்து வருகிறேன். உன்னிடம் இதை நானாகக் கொடுத்தாலும் விரோதம் வரக்கூடும் என்று நினைத்தேன். நானே இதை என்னிடமே வைத்திருந்தாலும் நாட்டுக்கு நல்லது தானே என்றும் நீ நினைப்பாயோ என்று இருந்தேன். இதோ, இப்போது நீயே அதை வெளிப்படையாகக் கேட்டு விட்டாய். நான் அதை உன்னிடமே கொடுத்து விடுகிறேன். நீ வைத்துக் கொள். அல்லது உனக்கு உகந்தவர்களுக்குக் கொடு” என்று கூறி அக்ரூரர் துணியில் முடிந்து, தங்கச் சிமிழில் வைத்துத் தன் மடியில் செருகி வைத்திருந்த அந்த ஸ்யமந்தகத்தை எல்லோர் முன்னிலையிலும் பிரித்தார்.

அதன் கண் கூசும் ப்ரகாசத்தால் ஸபையே ஜொலித்தது. ஸபையோர் முன்னே அதை வைத்து “இது தான் என்னிடம் சததன்வா தந்த மணி, இது யாருக்குச் சொந்தமோ அவர் எடுத்துக் கொள்ளட்டும்” என்று வைத்து விட்டார். வந்தது அடுத்த குழப்பம். மணி உண்மையில் ஸத்யபாமாவின் அப்பாவினுடையது. ஆனா சததன்வாவைக் கொன்று நாம் அந்த மணியை எடுத்துக் கொள்வோம் என்று ஏற்கனவே க்ருஷ்ணன் பலராமனிடம் கூறியுள்ளான். இப்போது அதை யாரிடம் கொடுப்பது. வண்டிச் சக்ரத்திற்கும், எருதுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட நிலை க்ருஷ்ணனுக்கு. “அக்ரூரரே! மணி என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்கவே நான் அதைக் காட்டச் சொன்னேன்.

இப்போது மணி யாருக்கு சொந்தம் என்றால் அது ஏற்கனவே எங்கள் வார்த்தைப்படி எனக்கும், அண்ணாவுக்கும் தான் சொந்தம். அதேபோல் அது ஸத்யபாமாவின் அப்பாவுடையது என்பதால் அவளுக்கும் சொந்தமானது. மேலும் இந்த மணியோ ப்ரஹ்மசர்யம், ஒழுக்கம் என்று பல நியமங்களுடன் இருப்பவர்களிடமே தானும் ஒழுங்காக இருக்கும். தேசத்தையும் ஸுபிக்ஷமாக்கும். இல்லையேல் வைத்திருப்பவர்களையே இது கொன்று விடும். இது இதன் ஸ்வபாவம். நானோ பதினாறாயிரம் மனைவிகளைக் கொண்டவன். ஆக நானும் இதை வைத்திருக்கத் தகுதியில்லாதவன், என் மனைவி என்பதால் ஸத்யபாமைக்கும் தகுதியில்லை என்றாகிறது.

அண்ணா இதை வைத்திருக்க நினைத்தால், அவர் இவ்வளவு நாள் பழகியிருக்கும் கள் குடிப்பது முதலான எல்லா போகங்களையும் அவரும் விட வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. எனவே அக்ரூரரே! யாதவர்கள், நான், ஸத்யபாமா, அண்ணா அனைவரும் உம்மை வேண்டுகிறோம். இதைத் தரித்துக் கொள்ள முழுத்தகுதியுள்ளவர் நீங்களே. எனவே நீங்களே இதை மறுப்புக் கூறாமல் லோகக்ஷேமத்திற்காகத் தரிக்க வேண்டும்” என்று முடிவாகக் கூறி, தன் மீதான பழியையும் போக்கிக் கொண்டதோடு, ஸ்யமந்தகத்தை யாருக்கு சொந்தமாக்குவது என்ற குழப்பத்தையும் ஒருவாறு போக்கிவிட்டான் க்ருஷ்ணன். தானும் எந்த புது ப்ரச்னைகளிலும் மாட்டிக் கொள்ளவில்லை.

அக்ரூரரும் க்ருஷ்ணனுக்கு இணங்கி எல்லோரும் பார்க்கும் படி ஸ்யமந்தகத்தைத் தன் கழுத்தில் அணிந்து கொண்டு இன்னொரு ஸூர்யன் போல ஸஞ்சரிக்கலானார். இப்படி இறைவனுக்கே வீண்பழி வந்து நீங்கிய இந்த பரம பாவனமான ஸ்யமந்த்க உபாக்யானத்தை நினைப்பவர்களுக்கு ஒரு நாளும் வீண் பழி வராது. இதைக் கேட்பவர் பூலோகத்தில் வாழும் வரை சரீரத்தில் எந்த கெடுதலும் இன்றி திடத்துடனும், வீண் பாபங்களின்றியும் வாழ்வார்கள்.

04_14. அனமித்ரனுக்கு சினியும், அவனுக்கு ஸத்யகனும், அவனுக்கு யுயுதானன்(ஸாத்யகி), அவனுக்கு ஸஞ்ஜயன், அவனுக்குக் குணி, அவனுக்கு யுகந்தரன் என்பவனும் பிறந்தனர். இவர்களே சைநேயர்கள். இந்த வம்சத்தில்தான் வ்ருஷ்ணியும், அவன் பிள்ளைகள் ச்வபல்கன், சித்ரகன். இந்த ச்வபல்கனுக்கும், காந்தீனிக்கும் பிறந்தவனே அக்ரூரன். ச்வபல்கனுக்கே இன்னொரு மனைவியிடம் உபமத்கு என்பவன் பிறந்தான். இவனுக்கு ம்ருதாம்ருதன், விச்வன், அரிமேஜயன், கிரிக்ஷத்ரன், உபக்ஷத்ரன், சத்ருக்னன், அரிமர்தனன், தர்மத்ருக், த்ருஷ்டதர்மன், கந்தமன், ஓஜவாஹன், ப்ரதிவாஹன் என்ற பிள்ளைகளும், ஸுரா என்ற பெண்ணும் பிறந்தனர். அக்ரூரனுக்கு தேவவான், உபதேவன் என்ற பிள்ளைகளும், அவன் தம்பி சித்ரகனுக்கு ப்ருது, விப்ருது முதலானோரும் பிறந்தனர்.

முன்கதையில் பார்த்த ஸத்வதன் பிள்ளையான அந்தகனுக்குக் குகுரன், பஜமானன், சுசி, கம்பளன், பர்ஹிஷன் என்பவர்கள் பிள்ளைகள். குகுரனுக்கு த்ருஷ்டனும், அவனுக்குக் கபோதரோமாவும், அவனுக்கு விலோமாவும், அவனுக்கு அனுவும் (தும்புருவின் தோழன்), அவனுக்கு ஆனகதுந்துபியும், அவனுக்கு அபிஜித்தும், அவனுக்குப் புனர்வஸுவும், அவனுக்கு ஆஹுகனும், ஆஹுகி என்ற புத்ரியும் பிறந்தனர். ஆஹுகனுக்குத் தேவகன், உக்ரஸேனன் இருவரும், தேவகனுக்குத் தேவவான், உபதேவன், ஸஹதேவன், தேவரக்ஷிதா என்ற நால்வரும், வ்ருகதேவா, உபதேவா, தேவரக்ஷிதா, ஸ்ரீதேவா, சாந்திதேவா, ஸஹதேவா, தேவகி என்ற ஏழு பெண்களும் பிறந்தனர். இந்த எழுவரையும் க்ருஷ்ணன் மணந்தான்.

உக்ரஸேனனுக்குக் கம்ஸன், ந்யக்ரோதன், ஸுனாமா, அனகாஹ்வன், சங்கு, ஸுபூமி, ராஷ்ட்ரபாலன், யுத்ததுஷ்டி, ஸுதுஷ்டிமான் என்ற புத்ரகளும், கம்ஸை, கம்ஸவதீ, ஸுதனு, ராஷ்ட்ரபாலிகை என்ற புத்ரிகளும் உண்டு.

ஸத்வதன் மகனான அந்தகனின் பிள்ளைகளில் மற்றொருவனான பஜமானனுக்கு விதூரதனும், அவனுக்கு சூரனும், அவனுக்கு சமீயும், அவனுக்கு ப்ரதிக்ஷத்ரனும், அவனுக்கு போஜனும், அவனுக்கு ஹ்ருதிகனும், அவனுக்கு க்ருதவர்மா, சததனு, தேவார்ஹன், தேவகர்பன் முதலானோரும், தேவகர்பனுக்கு சூரனும்(தேவபீடன்) பிறந்தனர். இவனுக்கும் மாரிஷைக்கும் பிறந்தவர்களே வஸுதேவன், தேவபாகன், தேவச்ரவன், அஷ்டகன், ககுச்சக்ரன், வத்ஸதாரகன், ஸ்ருஞ்ஜயன், ச்யாமன், சமிகன், கண்டூஷன் என்ற பத்து புதல்வர்கள். இவர்களைத் தவிர ப்ருதை, ச்ருதஸேவை, ச்ருதகீர்த்தி, ச்ருதச்ரவஸ், ராஜாதிதேவி என்ற ஐந்து பெண்களும் சூரனுக்குப்(தேவபீடன்) பிறந்தவர்களே.

இந்த வஸுதேவருக்கே பகவான் பிறக்கப் போவதை அறிந்த தேவர்கள், இவர் பிறந்த தினத்தின் போதே ஆனகம், துந்துபி முதலான வாத்யங்களை (முரசு வகைகள்) முழங்கினர். ஆகையால் இவர் ஆனகதுந்துபி என்றும் வழங்கப்படுகிறார். வஸுதேவரின் தந்தையான சூரனின் நண்பன் குந்திக்குக் குழந்தைகள் எதுவும் இல்லாததால் சூரன் தன் மூத்த மகளான ப்ருதையை முறையாக அவனுக்குத் தத்துக் கொடுத்தான். இந்த ப்ருதையையே பாண்டு திருமணம் செய்து சொண்டார். இவள் யமன், வாயு, இந்த்ரன் இவர்கள் அருளால் யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் என்ற மூவரைப் பாண்டுவின் பிள்ளைகளாகப் பெற்றாள்.

இந்த மூவரைத் தவிர இவள் கன்னிகையாக இருந்த போதே ஸூர்யனின் அருளால் கர்ணன் என்ற மகனையும் பெற்றிருந்தாள். கன்னிகையாக இருந்த போது பிறந்ததால் கர்ணனுக்கு கானீகன் என்ற பெயரும் உண்டு. இவர்களைத் தவிர பாண்டுவிற்கு மற்றொரு மனைவியான மாத்ரீயிடம் நாஸத்யன், தஸ்ரன் என்ற இரு தேவர்களின் அருளால் நகுல, ஸஹதேவன் என்ற இருவரும் பிறந்தனர். சூரனின் மற்றொரு பெண்ணாகிய ச்ருததேவாவை கரூச தேசத்து அரசனான வ்ருத்த வர்மா மணந்து தந்தவக்ரனைப் பெற்றான். ச்ருதகீர்த்தியை கேகயராஜன் மணந்து ஸந்தர்தனன் முதலான ஐந்து கேகயர்களை உண்டாக்கினான்.

ராஜாதிதேவி அவந்தி தேசத்தரசனை மணந்து விந்தன், அனுவிந்தனைப் பெற்றாள். ச்ருதச்ரவஸ் சேதி தேசத்தரசன் தமகோஷனை மணந்து சிசுபாலனைப் பெற்றாள். இந்த சிசுபாலனே முன்பு ஹிரண்யகசிபுவாக தைத்யர்களிடம் பிறந்து நரஸிம்ஹ அவதாரத்தின் போது கொல்லப்பட்டான். பின்பு மூவுலகையும் ஆட்சி செய்த தசகண்ட ராவணனாகப் பிறந்து, ராமரால் மடிந்ததும் இவனே. இப்போது மீண்டும் தமகோஷனுக்குப் பிள்ளையாகப் பிறந்து க்ருஷ்ணனிடம் பகைமை பாராட்டி, கடைசியில் அவராலேயே கொல்லப்பட்டு அவரிடமே லயமடைந்தான். ஆக விஷ்ணுவிடம் பக்தி, த்வேஷம் என்று எந்த விதத்தில் தொடர்பு வைத்துக் கொண்டாலும் உயர்ந்த ஸ்தானமே கிடைக்கும் என்பது உண்மை.

04_15. போன பிறவிகளிலும் இறைவனாலேயே தானே சிசுபாலன் கொல்லப்பட்டான். அப்போதெல்லாம் அவனுக்கு ஏன் மோக்ஷம் கிடைக்கவில்லை என்று மைத்ரேயர் பராசராச்சார்யாரைக் கேட்கிறார். முதலில் ஹிரண்யகசிபுவாகப் பிறந்த போது, நரஸிம்ஹரை ஒரு புண்யம் செய்த ப்ராணி என்றே நினைத்தான். பகவான் என்று அறியவில்லை. எனவே தான் அப்போது மோக்ஷம் பெறவில்லை. எனினும் பகவானால் கொல்லப்பட்டதால் மூவுலகையும் தன் பராக்ரமத்தால் ஆண்டு செல்வங்களையும், போகங்களையும் அனுபவிக்கத்தக்க ராவணனாகப் பிறந்தான். அப்போதும் காமவசப்பட்டு ஸீதையை அபஹரித்த போது, ராமனை மனிதனாகவே எண்ணினான். எனவே அப்போதும் மோக்ஷம் அடையவில்லை. பலனாக ஜகம் புகழும் சேதி குலத்தில் உதித்தான்.

இப்பிறப்பில் இவன் பகை நன்கு முற்றியது. அதன் விளைவாக தூங்கினாலும், நடந்தாலும், நின்றாலும், அமர்ந்தாலும் எப்போதும் க்ருஷ்ணனையே நினைத்து வந்தான். திட்டுவதற்காக க்ருஷ்ணனின் நாமங்களையும் உச்சரித்து வந்தான். அன்றலர்ந்த தாமரையிதழ் போன்ற கண்கள், சிவந்த பீதாம்பரங்கள், க்ரீடம், தோள் வளை, ஹாரங்கள், நான்கு கரங்களும், பஞ்சாயுதங்களும் என பெருமானின் திருத்தோற்றம் எப்போதும் அவன் நினைவை விட்டகலாதிருந்தது. இப்படி அவன் சொல், மனம் என்று எதுவும் இறைவன் தொடர்பை ஒரு க்ஷணமும் பிரியாதிருந்தது. இதனாலேயே சக்ரதாரி அவனைக் கொன்ற போது இப்பிறப்பில் பாபங்கள் அனைத்தும் தீர்ந்து அவருடனேயே ஐக்யமானான். இதுவே உன் கேள்விக்கு பதில்.

வஸுதேவருக்குப் பௌரவி, ரோஹிணி, மதிரை, பத்ரை, தேவகி எனப் பல மனைவிகள் இருந்தனர். இதில் ரோஹிணி பலராமன், சடன், சாரணன், துர்மதன் முதலான புத்ரர்களைப் பெற்றாள். பலராமர் ரேவதியிடம் விசடன், உல்முகன் என்ற இரு பிள்ளைகளைப் பெற்றார். சாரணனுக்கு ஸார்ஷ்டி, மார்ஷ்டி, சிசு, ஸத்யன், ஸத்யத்ருதி என்பவர் பிள்ளைகள். பத்ராச்வன், பத்ரபாஹு, துர்தமன், பூதன் முதலானோர் ரோஹிணியின் வம்சத்தில் பிறந்தவர்கள். மதிரைக்கு நந்தன், உபநந்தன், க்ருதகன் முதலானோர் பிறந்தனர். பத்ரைக்கு உபநிதி, கதன் முதலானோரும், வைசாலிக்கு கௌசிகனும் பிறந்தனர்.

தேவகிக்குப் பிறந்த கீர்த்திமான், ஸுஷேணன், உதாயு, பத்ரஸேனன், ருஜுதாஸன், பத்ரதேவன் என்ற முதல் ஆறு குழந்தைகளையும் கம்ஸன் கொன்று விட்டான். தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை யோகநித்ரை என்ற தேவதை விஷ்ணுவின் ஆணையால் நள்ளிரவில் எடுத்து ரோஹிணியின் கர்ப்பத்தில் வைத்து விட்டது. இதனால் ரோஹிணிக்கு அப்போது பிறந்த பலராமனுக்கு ஸங்கர்ஷணன் (இழுத்துக் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டவன்) என்ற பெயருண்டு. எட்டாவதாகத் தேவகிக்கு ப்ரஹ்மா முதலானோர் வேண்டுதலுக்கிணங்க பூபாரம் தீர்ப்பதற்காகத் தானே உண்டானார். அவருடைய ஆக்ஞையால் யோகநித்ரை நந்தகோபனின் பத்னி யசோதையின் கர்ப்பத்தையடைந்தாள்.

ஒரு நல்ல வேளையில் தானும் அவதரித்தார். அப்போது உலகெங்கிலும் சுப ஸகுனங்கள் தோன்றின. எவர்க்கும் மனது பயங்களின்றி லேசானது. அதர்மங்கள் அழிந்தன. இந்த க்ருஷ்ணனுக்கு ருக்மிணி, ஸத்யபாமா, ஜாம்பவதி, சாருஹாஸினி முதலான எட்டு முக்ய பத்னிகள் உட்பட மொத்தம் பதினாறாயிரத்து நூற்றி ஒன்று பத்னிகளும், ப்ரத்யும்னன், சாருதேஷ்ணன், ஸாம்பன் முதலான பதிமூன்று முக்ய புத்ரர்களுடன் லக்ஷத்தெண்பதாயிரம் புத்ரர்களும் இருந்தனர். ருக்மிணியின் புதல்வன் ப்ரத்யும்னன் ருக்மியின் பெண் ருக்மவதியை மணந்து அனிருத்தனைப் பெற்றான். இவனுக்கும் ருக்மியின் பௌத்ரியான ஸுபத்ரையை மணந்து வஜ்ரனைப் பெற்றான். அவனுக்கு ப்ரதிபாஹுவும், அவனுக்கு ஸ்சாருவும் பிறந்தார்கள்.

இப்படி ஆயிரக்கணக்கில் வளர்ந்த இந்த யது குலத் தோன்றல்களை எண்ண பல நூறாண்டுகளும் போதாது. இந்தக் குழந்தைகளுக்கு வில் வித்தைக் கற்பிக்கும் ஆசிரியர்களே மூன்று கோடியே எண்பத்தெட்டு லக்ஷம் பேர்கள். இவர்கள் தலைவன் ஆஹுகன் என்ற ஒருவனே பதினாயிரம் பதினாயிரம் லக்ஷம் பேரோடு வாழ்கிறான் என்றால் மொத்தமாக இவர்களை யாரால் கணக்கிட முடியும். முன்பு தேவாஸுர யுத்தத்தில் இறந்த அஸுரர்களே மனிதர்களாகப் பிறந்தனர். இவர்களை அழிக்கவே தேவர்கள் யாதவ குலத்தில் நூற்றி ஒன்று குலங்களில் பிறந்தனர். இவர்கள் அனைவரும் க்ருஷ்ணனின் சொல் கேட்டு, அவன் தலைமையிலேயே நடந்து வ்ருத்தி அடைந்தனர். இந்த வ்ருஷ்ணி வம்ச வரலாற்றைக் கேட்பவர்கள் அனைத்துப் பாபங்களும் தீர்ந்து விஷ்ணு பதத்தை அடைவர்.

04_16. தேவயானியின் புதல்வர்களுள் யதுவின் வம்சத்தையே இதுவரைக் கூறியுள்ளார் பராசரர். இப்போது துர்வஸுவின் வம்சம். துர்வஸு, வஹ்னி, பார்கன், பானு, த்ரயீஸானு, கரந்தமன், மருத்தன் என வளர்ந்த வம்சம் அதன் பின் ஸந்ததியில்லாதிருந்தது. ஆகையால் மருத்தன் பூருவின் வம்சத்துதித்த துஷ்யந்தனையே தனக்கும் புத்ரனாகக் கொண்டான். யயாதியின் சாபத்தால் விளைந்தது இப்படி-

04_17. சர்மிஷ்டைக்குப் பிறந்த த்ருஹ்யன், அனு, பூரு என்பவர்களுள் த்ருஹ்யனுக்குப் பின் அவன் வம்சம் பப்ரு, ஸேது, ஆரப்தன், காந்தாரன், கர்மன், க்ருதன், துர்மதன், ப்ரசேதஸ், சததர்மன் என வளர்ந்தது. இவனும் யயாதியின் சாபத்தாலேயே வடமேற்கிலுள்ள ம்லேச்சர்களுக்குத் தலைவனாக வாழ்ந்தான்.-

04_18. சர்மிஷ்டைக்குப் பிறந்த யயாதியின் நான்காம் புத்ரன் அனுவிற்கு ஸபாநலன், சக்ஷு, பரமேஷு என்ற மூன்று பிள்ளைகள். ஸபாநலன், காலாநலன், ஸ்ருஞ்ஜயன், புரஞ்ஜயன், ஜனமேஜயன், மஹாசாலன், மஹாமனஸ் என இவன் வம்சம் வளர்ந்தது. மஹாமனஸுக்கு உசீநரன், திதிக்ஷு என்ற இருவரும், இதில் உசீநரனுக்கு சிபி, ந்ருகன், நவன், க்ருமி, வர்மன் என்ற ஐவரும், சிபிக்கு ப்ருஷதர்பன், ஸுவீரன், கேகயன், மத்ரகன் நால்வரும் பிறந்தனர். திதிக்ஷுவுக்கு உசத்ரதனும், அவனுக்கு ஹேமனும், அவனுக்கு ஸுதபஸ்ஸும், அவனுக்குப் பலியும் பிறந்தனர். இவன் மனைவியினிடமே தீர்க்கதமஸ் என்ற மஹரிஷி அங்கன், வங்கன், களிங்கன், ஸுஹ்மன், பௌண்ட்ரன் என்ற ஐவரை உண்டாக்கினார். இவர்கள் தங்கள் பெயரிலேயே ராஜ்யங்களை ஆண்டனர்.

அங்கன், அணபானன், திவிரதன், தர்மரதன், சித்ரரதன்(ரோமபாதன்), சதுரங்கன், ப்ருதுலாக்ஷன், சம்பன், ஹர்யங்கன், பத்ரரதன், ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு, ப்ருஹன்மனஸ், ஜயத்ரதன், விஜயன், த்ருதி, த்ருதவ்ரதன், ஸத்யகர்மா, அதிரதன், கர்ணன், வஸுஷேணன் என அங்க வம்சம் வளர்ந்தது. இதில் ஒருவனான ரோமபாதனுக்கு(சித்ரரதன்) அஜனின் புத்ரனான தசரதன் நண்பன். எனவே குழந்தைப்பேறு இல்லாமல் வெகுகாலம் ரோமபாதன் இருந்த போது தசரதன் தன் பெண்ணான சாந்தாவை இவனுக்குப் பெண்ணாகத் தந்தான். அதேபோல் சம்பன் என்பவன் சம்பா என்ற நகரை நிர்மாணித்தவன்.

இந்த வம்சத்தில் ஒருவனான ஜயத்ரதன் ப்ராஹ்மணப் பெண்ணுக்கும், க்ஷத்ரியனுக்கும் பிறந்த ஒரு பெண்ணையே மணந்தான். ஒரு பெண் தன்னை விட மேல் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் அனுலோம ஜாதி என்றும், ஒரு பெண் தன்னை விட கீழ் வர்ணத்தைச் சேர்ந்தவனை மணந்தால் அவர்கள் வம்சம் ப்ரதிலோம ஜாதி என்றும் அழைக்கப்படும். இந்த விதத்தில் ஜயத்ரதன் மணந்த பெண் ப்ரதிலோம ஜாதியின் பிரிவான ஸூத (தேரோட்டி) ஜாதியைச் சேர்ந்தவள். இதனால் ஜயத்ரதன் வரை க்ஷத்ரிய ஜாதியாக இருந்த இந்த வம்சம், விஜயன் முதல் ஸூத ஜாதியானது. இந்த ஸூத ஜாதியைச் சேர்ந்த அதிரதன் தான் கன்னிகையாக இருந்த குந்திக்கு ஸூர்யனின் அனுக்ரஹத்தாலும், துர்வாஸரிடம் பெற்ற மந்த்ரஸித்தியாலும் பிறந்து, அவளால் கைவிடப்பட்ட கர்ணனைக் கங்கைக் கரையில் ஓர் கூடையில் கண்டெடுத்து தன் பிள்ளையாக வளர்த்தவன்.

04_19. யயாதியின் கடைசி புத்ரனாக சர்மிஷ்டைக்குப் பிறந்த பூருவின் வம்சம், பூரு, ஜனமேஜயன், ப்ரசின்வான், ப்ரவீரன், மனஸ்யு, அபயதன், ஸுத்யு, பஹுகதன், ஸம்யாதி, ரௌத்ராச்வன் என வளர்ந்தது. இந்த ரௌத்ராச்வனுக்கு ருதேபு, கக்ஷேபு, ஸ்தண்டிலேபு, க்ருதேபு, ஜலேபு, தர்மேபு, த்ருதேபு, ஸதலேபு, ஸன்னதேபு, வனேபு என்று பத்து புத்ரர்கள். ருதேபு அந்திநாரனையும், அவன் ஸுமதி, அப்ரதிரதன், த்ருவன் என்ற மூவரையும் பெற்றனர். அப்ரதிரதனுக்கே கண்வர் பிறந்தார். அவருக்குப் பிறந்த மேதாதிதி முதல் இந்த வம்சத்தைச் சேர்ந்த அனைவரும் ப்ராஹ்மணர்கள் ஆயினர். கண்வரைத் தவிர அப்ரதிரதனுக்கு ஐலீனன் என்ற மற்றொரு மகன் உண்டு.

இந்த ஐலீனனுக்கு துஷ்யந்தன் முதலான நான்கு புத்ரர்கள். இந்த துஷ்யந்தனுக்கே சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பரதன் பிறந்தான். விச்வாமித்ர மஹரிஷிக்கும், அப்ஸரஸ் மேனகைக்கும் பிறந்த சகுந்தலையை கண்வர் காத்து வந்தார். அவளை காந்தர்வ முறையில் மணந்து, அவளை கர்ப்பவதியாக்கி விட்டு நாடு திரும்பிய துஷ்யந்தன் அவளை மறந்து விட்டான். தன் பிள்ளையுடனும், கண்வ சிஷ்யர்களுடனும் ஸபைக்கு வந்திருந்த சகுந்தலையை ஏற்கவும் மறுத்து, அவமதித்துப் பேசி விடுகிறான். அப்போது “தாய் புத்ரனைத் தாங்கும் தோல் பை போன்றவளே. அவளிடம் எவன் கர்ப்பாதானம் செய்கிறானோ அவனுக்கே பிறக்கும் குழந்தை சொந்தம்.

தகப்பனே மீண்டும் புத்ரனாகப் பிறக்கிறான் என்கிறது வேதமும். எனவே துஷ்யந்த மஹாராஜனே! நீ தான் சகுந்தலையிடம் கர்ப்பாதானம் செய்திருக்கிறாய். அவள் உன் மனைவியே. எனவே அவளையும், உனக்கே உரிய இந்தக் குழந்தையையும் ஏற்றுக் கொண்டு காப்பாற்று(பரஸ்வ). அவளை அவமதிக்காதே. இந்த விஷயம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. யமனுடைய ஸபையில் இதேபோல் ஒரு முறை யாருக்குப் பிள்ளை சொந்தம் என்ற வாக்குவாதம் வந்த போது கர்ப்பாதானம் செய்தவனுக்கே பிள்ளை சொந்தம் என்று நிர்ணயிக்கப்பட்டது. எனவே இங்கும் நீயே இந்தக் குழந்தையைக் காக்க வேண்டியவன்.

உறையில் போட்டு வைக்கும் நெல், அதைக் கொட்டியவனுக்கே சொந்தமேயன்றி ஒருபோதும் உறைக்குச் சொந்தமில்லை. இங்கு சகுந்தலை கூறுவது போல் இந்தக் குழந்தையைக் காப்பதும் உன் கடமையே. நீயே அவனுக்குத் தந்தை. சகுந்தலைக்குக் கணவன்” என்று தேவர்கள் துஷ்யந்தனுக்கு உபதேஸித்த பின்பே அவன் இவர்களை ஏற்றுக் கொள்கிறான். காப்பாற்று (பரஸ்வ) என்ற பதத்திலிருந்தே அந்தக் குழந்தையும் பரதன் என்ற பெயரைப் பெற்றது. பரதனுக்கு மூன்று மனைவிகள். இவர்களிடமிருந்து பரதனுக்கு மொத்தம் ஒன்பது குழந்தைகள். ஆனால் அந்தக் குழந்தைகளைக் கண்டு பரதன் தனக்குப் பிறந்தவர்கள் போல இல்லை, எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று ஸந்தேகப்பட்டான். இதனால் இவன் மனைவிகள் மூவரும் வ்யபிசாரப் பேச்சுக்குப் பயந்து குழந்தைகளைக் கொன்று விட்டனர். பரதன் இப்படிக் குழந்தைகள் இல்லாமல் போனது பற்றியும், தன் வம்ச வ்ருத்தி பற்றியும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான்.

இது இப்படி இருக்க இதே ஸமயத்தில் தேவ குரு ப்ருஹஸ்பதி கர்ப்பவதியாயிருந்த தன் ஸகோதரன் உசத்யனின் மனைவி மமதையோடு புணர்ந்து தன் வீர்யத்தை அவளுக்குள் செலுத்தினான். தான் வளர்ந்து வரும் கருப்பையில் புதிதாக மற்றொரு கரு வளர்வதைக் கண்ட உசத்யனின் கரு, புதிதாக வந்திருக்கும் ப்ருஹஸ்பதியின் கருவை உதைத்து வெளியே தள்ளி விட்டது. இதனால் கோபம் கொண்ட ப்ருஹஸ்பதி உசத்யனின் கருவைக் குருடாகும்படி சபித்து விட்டார். அந்தக் குழந்தையே தீர்க்கதமஸ் என்ற பெயருடன் பிறந்தது. வெளியே விழுந்த வீர்யத்திலிருந்தும் ஒரு குழந்தை தோன்றியது. இது நம்மிருவரின் குழந்தை (த்வாஜம்). இதை நீயே காப்பாற்று (பர), என்று ப்ருஹஸ்பதியும், ஆண் உதவியின்றி நான் எப்படி காப்பாற்றுவது என்று மமதையும் அந்தக் குழந்தையை அங்கேயே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.

காப்பாற்று (பர), இருவருக்கும் பிறந்த குழந்தையை(த்வாஜம்) என்ற தொடர்களால் இந்தக் குழந்தை பரத்வாஜர் என்று பெயர் பெற்றது. இந்த ஸமயத்தில் தான் பூலோகத்தில் பரதன் குழந்தைப்பேற்றுக்காக மருத்துக்களைக் குறித்து ஸோமயாகம் செய்து கொண்டிருந்தான். அவனுக்கு இந்த பரத்வாஜனையே மகனாகக் கொடுத்து விட்டனர் மருத்துக்கள். ஸந்ததி அழிந்திருந்த போது கிடைத்ததால் பரதனின் இந்தக் குழந்தைக்கு விததன் என்ற பெயரும் உண்டு.

விததனுக்கு மன்யுவும், அவனுக்கு ப்ருஹத்க்ஷத்ரன், மஹாவீர்யன், நகரன், கர்கன் என்ற நால்வரும் பிறந்தனர். நகரனுக்கு ஸங்க்ருதியும், அவனுக்கு குருப்ரீதி, ரத்தி தேவன் என்ற இருவரும் பிறந்தனர். கர்கனுக்கு சினி பிறந்தான். இவர்களே சைன்யர் என்றும், கார்க்யர் என்றும் அழைக்கப்படுகின்றனர். பிறப்பால் க்ஷத்ரியர்களான இவர்கள் ப்ராஹ்மணர்களானார்கள். மஹாவீர்யனுக்கு துருக்ஷயனும், இவனுக்கு த்ரய்யாருணி, புஷ்கரிணன், கபி என்ற மூவரும் பிறந்து, இவர்களும் ப்ராஹ்மணர்களாக மாறினர். ப்ருஹத்க்ஷத்ரனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ஹஸ்தியும்(ஹஸ்தினாபுரத்தை உண்டாக்கியவன்) பிறந்தனர். அஜமீடன், த்விஜமீடன், புருமீடன் மூவரும் ஹஸ்தியின் பிள்ளைகள்.

அஜமீடனுக்குக் கண்வர் (முன்பு அப்ரதிரதருக்குப் பிறந்தவர் கண்வர் என்று கூறப்பட்டிருந்தது, இப்போ அஜமீடனுக்கு, இன்னும் எவ்ளோ பேருக்கோ, ரிஷி மூலம் ஒண்ணும் புரியல, போங்க), ப்ருஹதிஷு என்று இரு புத்ரர்கள். கண்வரின் புதல்வர் மேதாதிதி. இவர்களும் ப்ராஹ்மணர்கள். ப்ருஹதிஷுவின் வம்சம் ப்ருஹதிஷு, ப்ருஹத்தனு, ப்ருஹத்கர்மா, ஜயத்ரதன், விச்வஜித், ஸேனஜித், அவனுக்கு ருசிராச்வன், காச்யன், த்ருடஹனு, வத்ஸஹனு என்பவர்களும், இதில் ருசிராச்வன், ப்ருதுஸேனன், பாரன், நீலன், அவனுக்கு ஸமரன் முதலாக நூற்றி ஒன்று பிள்ளைகளும், ஸமரனுக்கு பாரன், ஸுபாரன், ஸதச்வன் மூவரும் பிறந்தனர். இந்த ஸமரன் கம்பில்யா நகரத்திற்கு அதிபதியாக இருந்தான்.

ஸுபாரனுக்கு ப்ருதுவும், அவனுக்கு விப்ராஜனும், அவனுக்கு அணுஹரும் பிறந்தார். இந்த அணுஹரே வ்யாஸ புத்ரரான ஸுக ப்ரஹ்மத்தின் பெண்ணான கீர்த்தியை மணந்தார். இவருக்கு ப்ரஹ்மதத்தனும், அவனுக்கு விஷ்வக்ஸேனனும், அவனுக்கு உதக்ஸேனனும், அவனுக்கு பல்லாடனும் பிறந்தனர். ஹஸ்தியின் இன்னொரு மகனான த்விஜமீடன் வம்சம் த்விஜமீடன், யவநரன், த்ருதிமான், ஸத்யத்ருதி, த்ருடநேமி, ஸுபார்ச்வன், ஸுமதி, ஸந்ததிமான், க்ருதன், உக்ராயுதன், க்ஷேம்யன், ஸுதீரன், ஸஞ்ஜயன், பஹுரதன் என்பவர்களும் பிறந்தனர். இதில் க்ருதன் ஹிரண்யநாபன் என்பவனிடமிருந்து யோகம் பயின்றான். ப்ராச்ய ஸாமர்களுடைய இருபத்து நான்கு ஸம்ஹிதைகளையும் செய்தான். இவர்களே பௌரவ வம்சத்தவர்கள். இவன் மகன் உக்ராயுதன் நீபர்கள் எனும் க்ஷத்ரியர்களை அழித்தான்.

அஜமீடனுக்கு நளினி என்ற மனைவியிடம் நீலனும், அவனுக்கு சாந்தியும், அவனுக்கு ஸுசாந்தியும், அவனுக்குப் புரஞ்ஜயனும், அவனுக்கு ருக்ஷனும், அவனுக்கு ஹர்யச்வனும், அவனுக்கு முத்கலன், ஸ்ருஞ்ஜயன், ப்ருஹதிஷு, யவநரன், காம்பில்யன் என்ற ஐவரும் பிறந்தனர். இந்த ஐவரே பாஞ்சாலர்கள். ஹர்யச்வன் இவர்களை தன் ஐந்து ராஜ்யங்களையும் பாதுகாக்க நியமித்தான். முத்கலனிடமிருந்து மௌத்கல்யர்கள் தோன்றி அவர்களும் பின்னர் ப்ராஹ்மணர்களாயினர். முத்கலனுக்கு திவோதாஸன் என்ற மகனும், அஹல்யை என்ற பெண்ணும் இரட்டைகள். இந்த அஹல்யையின் கணவர் சரத்வதர் என்ற கௌதமர். இவர்களின் மகன் சதானந்தர்.

தனுர் வேதத்தில் முழுமை பெற்றிருந்த ஸத்யத்ருதி இவரது மகன். இவர் ஒரு ஸமயம் அப்ஸரஸ் ஊர்வஸியைப் பார்த்துக் காமமுற்ற போது இவரது வீர்யம் வெளிப்பட்டு ஒரு நாணற்புதரில் விழுந்தது. அதிலிருந்து ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் தோன்றின. அவர்களை அந்த ஸமயம் வேட்டைக்கு வந்திருந்த ஸந்தனு மஹராஜன் க்ருபையால் எடுத்துச் சென்று வளர்த்தான். இதனால் இவர்களுக்கு க்ருபன், க்ருபி என்று பெயர். இந்த க்ருபி மஹரிஷி த்ரோணரை மணந்து அச்வத்தாமாவைப் பெற்றாள். திவோதாஸன் (அஹல்யையின் ஸஹோதரன்) மித்ராயுவைப் பெற்றான். அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு ஸுதாஸனும், அவனுக்கு ஸௌதாஸனும், அவனுக்கு ஸஹதேவனும், அவனுக்கு ஸோமகனும், அவனுக்கு ஜந்து முதலான நூறு பிள்ளைகளும் பிறந்தனர்.

ப்ருஷதன் இந்த நூறு பிள்ளைகளில் கடைசி. இவனுக்கு த்ருபதனும், அவனுக்கு த்ருஷ்டத்யும்னனும், அவனுக்கு த்ருஷ்டகேதுவும் பிறந்தனர். அஜமீடனின் இன்னொரு புதல்வனான ருக்ஷனுக்கு ஸம்வரணனும், அவனுக்குக் குருவும் பிறந்தனர். இவன் நிர்மாணித்ததே தர்ம க்ஷேத்ரம் எனப்படும் குருக்ஷேத்ரம். இந்த குருவிற்கு ஸுதனு, ஜஹ்னு, பரீக்ஷித் முதலானோர் பிறந்தனர். இதில் ஸுதனுக்கு ஸுஹோத்ரனும், அவனுக்கு ச்யவனனும், அவனுக்கு க்ருதகனும், அவனுக்கு உபரிச்ரவஸுவும், அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ரத்யக்ரன், குசாம்பன், குசேலன், மாத்ஸ்யன் முதலான எழுவரும், ப்ருஹத்ரதனுக்கு குசாக்ரனும், அவனுக்கு வ்ருஷபனும், அவனுக்கு புஷ்பவானும், அவனுக்கு ஸத்யஹிதனும், அவனுக்கு ஸுதன்வாவும், அவனுக்கு ஜந்துவும் பிறந்தனர்.

இந்த ப்ருஹத்ரதனுக்குப் பிறந்த இன்னொரு மகன் இரு பிளவுகளாகப் பிறந்ததால் தூக்கி எறியப்பட்டு, ஜரா என்ற ராக்ஷஸியால் மீண்டும் உடல்கள் சேர்க்கப்பட்டான். இதனால் அவன் ஜராஸந்தன் என்றழைக்கப்பட்டான். இவன் மகன் ஸஹதேவன், அவனுக்கு ஸோமபன், அவனுக்கு ச்ருதிச்ரவஸ்ஸும் பிறந்தனர்.

இதுவே மாகதர்களின் வரலாறு.

04_20. குருவின் மற்றொரு பிள்ளையான பரீக்ஷித்திற்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என்ற நால்வர் பிறந்தனர். இன்னொரு பிள்ளையான ஜஹ்னுவின் வம்சம் ஜஹ்னு, ஸுரதன், விதூரதன், ஸார்வபௌமன், ஜயத்ஸேனன், ஆராதிதன், அயுதாயு, அக்ரோதனன், தேவாதிதி, ருக்ஷன், பீமஸேனன், திலீபன், ப்ரதீபன், ப்ரதீபனுக்கு தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் மூவரும் பிறந்தனர். தேவாபி குழந்தையாயிருக்கும் போதே தவம் புரியச் சென்று விட்டான். சந்தனு எவரைத் தொட்டாலும் அவர்கள் முதுமை நீங்கி யௌவனமடைவர், மக்களுக்கு சாந்தியையும் தருபவன் சந்தனு என்று சிறப்பு. அப்படி தர்மவழியில் அரசாண்டு வந்தான் சந்தனு.

இப்படியிருக்கும் சந்தனுவின் ராஜ்யத்தில் பனிரெண்டு வருடங்கள் மழை பொய்த்தது. பெரிதும் கவலையுற்ற சந்தனு ப்ராஹ்மணர்களிடம் தான் செய்த தவறென்ன. ஏன் இப்படி நடந்தது என்று கேட்க, “அண்ணன் நலமுடன் இருக்கையிலேயே அவனுக்குரிய ராஜ்யத்தை நீ ஏற்று நடத்துவதே நீ செய்திருக்கும் தவறு. நீ பரிவேத்தாவாக (அண்ணன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்ட தம்பி)இருக்கிறாய். இந்த காரணத்தினாலேயே மழை பொய்த்து விட்டது. உடனே இந்த போகங்களையும், ராஜ்யத்தையும் தேவாபியிடமே விட்டு விடு” என்கின்றனர் அவர்கள். இதைக் கேட்ட சந்தனுவும், அவர்களோடு அண்ணாவைத் தேடி நாட்டை ஒப்படைப்பதற்காகக் கானகம் சென்றான்.

அச்மராவி என்ற சந்தனுவின் மந்திரிக்கு தர்மவானான சந்தனுவே ஆள வேண்டும் என்று விருப்பம். அவன் இதற்காக என்ன செய்வது என்று ஆராய்ந்து, தேவாபியை பதிதனாக்கி விடலாம், அப்படிச் செய்து விட்டால் அதைக் காரணம் கொண்டு தம்பியே அரசாளலாம் என்ற சாஸ்த்ரத்தைக் கொண்டு மீண்டும் சந்தனுவே அரசாள்வார் என்று அதன்படி சிலரை சந்தனுவிற்கு முன்னதாகவே அனுப்பி, அவர்கள் போதனையால் தேவாபியை வேத மார்க்கத்திலிருந்து விலகச் செய்தான். இந்த நிலையில் அவனைக் கண்ட ப்ராஹ்மணர்கள் அவன் போக்கைக் கண்டு, சந்தனுவையே அரசாளும்படியும், இப்போது அது குற்றமாகாது என்றும் கூறி அழைத்து வந்து விட்டனர். மழையும் நன்கு பொழிந்தது. சந்தனுவுக்கும், கங்கைக்கும் பீஷ்மரும், சந்தனுவின் தம்பி பாஹ்லீகனுக்கு ஸோமதத்தனும், அவனுக்கு பூரி, பூரிச்ரவன், சல்யன் என்ற மூவரும் பிறந்தனர்.

பீஷ்மர் சிறந்த புகழோடும், சாஸ்த்ரங்களை நன்கு அறிந்தவராகவும் இருந்தார். சந்தனுவுக்கும், ஸத்யவதி என்பவளுக்கும் சித்ராங்கதன், விசித்ரவீர்யன் இருவரும் பிறந்தனர். இதில் சித்ராங்கதன் அவன் பெயருள்ள கந்தர்வனாலேயே கொல்லப்பட்டான். காசி ராஜனின் பெண்களான அம்பை, அம்பாலிகை என்ற இருவரை மணந்து கொண்ட அவன் தம்பி விசித்ரவீர்யன் காம போகத்திலேயே மூழ்கி காச நோயால் இறந்தான். ஸந்ததியில்லாமல் ராஜ்யம் இருந்த இந்த நிலையில், பராசரருக்கும், ஸத்யவதிக்கும் பிறந்திருந்த வேத வ்யாஸர் தாயின் கட்டளையால் விசித்ரவீர்யன் மனைவிகளிடம் த்ருதராஷ்ட்ரனையும், பாண்டுவையும் உண்டாக்கினார். அவர்களால் அனுப்பப்பட்ட வேலைக்காரியிடம் விதுரரையும் உண்டாக்கினார்.

ஸத்யவதி தான் கன்னிகையாயிருக்கும் போதே பராசரரிடம் கூடி வேத வ்யாஸரைப் பெற்று பின் மீண்டும் பராசரரின் அருளால் களங்கமற்றவளாகவும் ஆனவள். அதன் பின்னே அவள் சந்தனுவை மணந்திருந்தாள். த்ருதராஷ்ட்ரனுக்கும், காந்தாரிக்கும் துர்யோதனன், துச்சாஸனன் முதலான நூறு பிள்ளைகள் பிறந்தனர். பாண்டு, சூரனின் புதல்வியான குந்தியை மணம் புரிந்தான். ஒரு ஸமயம் இவன் வேட்டைக்குச் சென்றிருந்த போது தர்மம் தெரிந்திருந்தும், மான் வேடத்தில் களித்திருந்த ஒரு ரிஷி தம்பதியரை வேட்டையாடி விட்டான். அவர்கள் இறப்பதற்கு முன் பாண்டுவையும் மனைவியோடு கூடினால், இவ்வாறே நீயும் இறந்து போவாய் என்று சபித்து விட்டு இறந்தனர். அது முதல் அவன் சிற்றின்பத்தைத் துறந்து, பிள்ளைப் பேறின்றி இருந்தான்.

இதற்காக, தான் கன்னிகையாயிருக்கும் போதே துர்வாஸரிடமிருந்து பெற்றிருந்த மந்த்ர உபதேஸங்களைக் கொண்டு தேவர்களை வசீகரீக்கலாம் என்பதைக் கொண்டு, குந்தி அந்த மந்த்ரங்களால் இப்போது வாரிசுகளாக யமன், வாயு, இந்த்ரன் இவர்களை வசீகரித்து முறையே யுதிஷ்ட்ரன், பீமஸேனன், அர்ஜுனன் இவர்களைப் பெற்றாள். பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்ரீயும் குந்தியிடமிருந்து ஒரு மந்த்ரத்தைப் பெற்று, அதன் மூலம் அச்வினீ தேவதைகளிடமிருந்து நகுல, ஸஹதேவனைப் பெற்றாள். பாண்டுவின் இந்த ஐந்து புதல்வர்களே பஞ்ச பாண்டவர்கள். இவர்களை மணந்த த்ரௌபதி என்பவள் யுதிஷ்ட்ரரிடம் ப்ரதிவிந்த்யனையும், பீமஸேனனிடம் ச்ருதஸேனனையும், அர்ஜுனனிடம் ச்ருதகீர்த்தியையும், நகுலனிடம் சதாநீகனையும், ஸஹதேவனிடம் ச்ருதகர்மாவையும் பெற்றாள்.

இதைத்தவிர யுதிஷ்ட்ரருக்கும், யௌதேயீ என்பவளுக்கும் தேவகனும், பீமஸேனன் ஹிடும்பைக்கு கடோத்கசனும், பீமஸேனன் காசீக்கு ஸர்வகனும், ஸஹதேவன் விஜயாவிற்கு ஸுஹோத்ரனும், நகுலன் ரேணுமதீக்கு நிரமித்ரனும் பிறந்தனர். அர்ஜுனன நாக கன்னியான உலூபியிடம் இராவானையும், மணலூர் அரசனின் பெண் மூலம் பப்ரூவாஹனனையும் பெற்றான். தனக்குப் புத்ரனில்லாததால் மகளுக்குப் பிறந்த இந்த பப்ருவாஹனனையே தனக்குப் புத்ரனாகத் தரவேண்டும் (புத்ரிகா தர்மம்)என்று அர்ஜுனனோடு மணலூர் அரசன் செய்திருந்த ஒப்பந்தப்படி அர்ஜுனனின் மகனான பப்ருவாஹனன் மணலூர் அரசனுக்கே பிள்ளையானான். அர்ஜுனனுக்கும் ஸுபத்ரைக்கும் பிறந்த அபிமன்யு இளமையிலேயே அதிரதன் என்ற பராக்ரமனாயிருந்தான். இவனுக்கும் உத்தரைக்கும் பரீக்ஷித் பிறந்தான்.

வம்சமே அழிந்திருந்த போது பிறந்ததால் பரீக்ஷித் என்ற பெயர் பெற்றிருந்தான் இவன். தாய் வயிற்றில் இருக்கும்போதே அச்வத்தாமாவின் அஸ்த்ரத்தால் அழிந்து போன இந்த பரீக்ஷித், மனித உருவில் அவதரித்திருக்கும் தேவரும், மூவரும், அஸுரரும் துதிக்கும் க்ருஷ்ணனின் மஹிமையால் மீண்டும் உயிர் பிழைத்தான். இவனே இப்போது இந்த பூமண்டலத்தைச் செழிப்போடும், சிறப்போடும் ஆண்டு வருகிறான்.

04_21. இந்த பரீக்ஷித்துக்கு ஜனமேஜயன், ச்ருதஸேனன், உக்ரஸேனன், பீமஸேனன் என நான்கு குழந்தைகள் பிறக்கப் போகின்றனர். ஜனமேஜயனுக்கு சதாநீகன் என்பவன் பிறந்து, யாக்ஞவல்க்யரிடமிருந்து வேதங்களையும், க்ருபாச்சார்யாரிடமிருந்து அஸ்த்ர வித்தைகளையும் கற்று, சிற்றின்பங்களை முற்றிலும் ஒழித்து சௌனகர் உபதேசத்தால் ஆத்ம ஞானமடைந்து மோக்ஷத்தையும் பெறப்போகிறான். இவனுக்கு அச்வமேத தத்தனும், அவனுக்கு அதிஸீமக்ருஷ்ணனும், அவனுக்கு நிசக்துவும் பிறப்பான். இவன் காலத்தில் கங்கையால் ஹஸ்தினாபுரம் அழியும். அதன் பின் இவன் கௌசாம்பி நகரில் வஸிப்பான்.

இவனுக்கு உஷ்ணனும், அவனுக்கு விசித்ரரதனும், அவனுக்கு சரசிரதனும், அவனுக்கு வ்ருஷ்ணியும், அவனுக்கு ஸுஷேணனும், அவனுக்கு ஸுநீதனும், அவனுக்கு ந்ருபசக்ஷுஸ்ஸும், அவனுக்கு ஸுகிபலனும், அவனுக்குப் பாரிப்லவனும், அவனுக்கு ஸுநயனனும், அவனுக்கு மேதாவியும், அவனுக்கு ரிபுஞ்ஜயனும், அவனுக்கு அர்வனும், அவனுக்குத் திக்மனும், அவனுக்கு ப்ருஹத்ரதனும், அவனுக்கு வஸுதாஸனும், அவனுக்கு சதாநீகனும், அவனுக்கு உதயனனும், அவனுக்கு விஹீநரனும், அவனுக்கு தண்டபாணியும், அவனுக்கு நிமித்தனும், அவனுக்கு க்ஷேமகனும் பிறக்கப் போகிறார்கள். இவனோடு தேவர்களும், ரிஷிகளும் பூஜித்த, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்களுக்கு மூலாதாரமான பாண்டவ வம்சம் முடியப் போகிறது இந்தக் கலி யுகத்தில்.

04_22. இதேபோல் ஸூர்ய வம்சத்தில் ப்ருஹத்பலனென்பவன் பாரத யுத்தத்தில் அபிமன்யுவால் கொல்லப்படுகிறான் என்று முன்பு கூறப்பட்டது. அவனுக்குப் பின் வம்சம், ப்ருஹத்பலன், ப்ருஹத்க்ஷணன், உருக்ஷயன், வத்ஸவ்யூஹன், ப்ரதிவ்யோமன், திவாகரன், ஸஹதேவன், ப்ருஹதச்வன், பானுரதன், ப்ரதீதாச்வன், ஸுப்ரதீகன், மருதேவன், ஸுநக்ஷத்ரன், கின்னரன், அந்தரிக்ஷன், ஸுபர்ணன், அமித்ரஜித், ப்ருஹத்பாஜன், தர்மீ, க்ருதஞ்ஜயன்,ரணஞ்ஜயன், ஸஞ்ஜயன், சாக்யன், சுத்தோதனன், ராஹுலன், ப்ரஸேனஜித், க்ஷுத்ரகன், குண்டகன், ஸுரதன், ஸுமித்ரன் என வளரப் போகிறது.இந்த ஸுமித்ரனுடன் இக்ஷ்வாஹுவின் வம்சம் இந்தக் கலியுகத்தில் முடியப் போகிறது.

04_23. இதே போல் ஜராஸந்தன் முதலானோர் இருந்த மாகத வம்சம் ஜராஸந்தன், ஸஹதேவன், ஸோமாபி, அனுச்ருதச்ரவஸ், வியுதாயு, நிரமித்ரன், ஸுநேத்ரன், ப்ருஹத்கர்மா, ச்யேனஜித், ச்ருஞ்ஜயன், விப்ரன், சுசி, க்ஷேம்யன், ஸுவ்ரதன், தர்மன், த்ருடஸேனன், ஸுபலன், ஸுனீதன், ஸத்யஜித், விச்வஜித், ரிபுஞ்ஜயன் என வளர்ந்தது. இவர்களே ப்ருஹத்ரத வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இனி ஓராயிரம் ஆண்டுகள் அரசாள்வார்கள்.

04_24. இந்த ராஜ வம்சங்கள் மிகவும் பரிசுத்தமானவை. இந்த வம்சங்களை அறிந்தாலே மிகுந்த புண்யமுண்டாகும். இதனாலேயே இது பற்றிக் கூறியுள்ளேன். ப்ருஹத்ரத வம்சத்தில் கடைசியாக வரும் ரிபுஞ்ஜயனின் மந்த்ரி முனிகன் என்பவன். இவனுக்கு ப்ரத்யோதன் என்ற ஒருவன் பிறக்கப் போகிறான். இந்த மந்த்ரி அரசனைக் கொன்று தன் மகனை அரசனாக்குவான். அந்த வம்சம் ப்ரத்யோதன், பாலகன், விசாகயூபன், ஜனகன், நந்திவர்த்தனன், நந்தி என ஐந்து பேர்களுடன் ப்ரத்யோதர் என்ற பெயரில் எண்ணூற்று முப்பத்தெட்டு வருஷங்கள் ராஜ்யத்தை ஆளும். பின் சிசுநாபன், காகவர்ணன், க்ஷேமதர்மா, க்ஷதௌஜஸ், விதிஸாரன், அஜாதசத்ரு, அர்ப்பகன், உதயனன், நந்திவர்த்தனன், மஹாநந்தீ என்ற சைசுநாபர்கள் பத்து பேர்கள் முன்னூற்று அறுபத்திரண்டு வருஷங்கள் அரசாள்வர்.

இந்த மஹாநந்தீ என்பவன் நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் நந்தன் (மஹாபத்மன்) என்ற ஒரு பிள்ளையைப் பெற்றான். பேராசையும், உடல் பலமும், படை பலமும் வாய்ந்த அவன் இன்னொரு பரசுராமனைப் போல் க்ஷத்ரியரனைவரையும் அழித்து, தானே அரசாளத் தொடங்குவான். இவனுக்குப் பிறக்கும் ஸுமாலி முதலான எட்டுப் பிள்ளைகளுமான இந்த நந்தர்கள் நூறு வருஷ காலம் நந்தனுக்குப் பின் ஒரே குடையின் கீழ் அரசாள்வார்கள். க்ஷத்ரியர்கள் அரசாள மாட்டார்கள். நான்காம் வர்ணத்தவரான இவர்களே அரசாள்வர். இவர்களை கௌடில்யன் என்ற ப்ராஹ்மணன் அழிக்கப் போகிறான். நான்காம் வர்ணத்தைச் சேர்ந்த முரை என்பவளுக்கும், நந்தனுக்கும் பிறந்த சந்த்ரகுப்தனை அந்த கௌடில்யன் பட்டத்துக்குரியவனாக்கப்போகிறான்.

இந்த சந்த்ரகுப்தன் முதல் சில காலம் மௌர்யர்கள் அரசாள்வர். சந்த்ரகுப்தன், பிந்துஸாரன், அசோகவர்த்தனன், ஸுயசஸ், தசரதன், ஸம்யுதன், சாலிசூகன், ஸோமசர்மா, சததன்வா, ப்ருஹத்ரதன் என்ற இந்த பத்து மௌர்யர்கள் நூற்று முப்பத்தேழு வர்ஷங்கள் இந்த பூமியை அரசாள்வர். இவர்களுக்குப் பின் சுங்கன் எனும் பத்து பேர் அரசாள்வர். கடைசி மௌர்யனான ப்ருஹத்ரதனை அவன் ஸேனாதிபதி புஷ்யமித்ரனே கொன்று விட்டுத் தானே அரசாளத் தொடங்கி விடுவான். இவனே சுங்கர்களில் முதல்வன். இவனுக்குப் பின் அக்னிமித்ரன், ஸுஜ்யேஷ்டன், வஸுமித்ரன், உதங்கன், புளிந்தகன், கோஷவஸு, வஜ்ரமித்ரன், பாகவதன், தேவபூதி என்ற சுங்கர்கள் நூற்றுப் பனிரெண்டு ஆண்டுகள் அரசாள்வர். இவர்களுக்குப் பின் ராஜ்யம் கண்வர்களின் கைக்கு மாறப்போகிறது.

கடைசி சுங்க ராஜனான தேவபூதியை வஸுதேவன் என்ற கண்வன் கொன்று அவனும், அவனுக்குப் பின் பூமித்ரன், நாராயணன், ஸுசர்மா என்ற கண்வர்களும் நாற்பத்தைந்து வருஷங்கள் அரசாள்வர். இந்த ஸுசர்மாவை ஆந்த்ர ஜாதியைச் சேர்ந்த அவன் வேலைக்காரன் பலிபுச்சகன் கொன்று அதன் பின் அவனும், அவன் ஸஹோதரன் க்ருஷ்ணனும், அவன் மகன் சாதகர்ணி, அவன் மகன் பூர்ணோத்ஸங்கன், அவன் மகன் இரண்டாம் சாதகர்ணி, அவன் மகன் லம்போதரன், அவன் மகன் இவீலகன், அவன் மகன் மேகஸ்வாதி, அவன் மகன் பத்மன், அவன் மகன் அரிஷ்டகர்மன், அவன் மகன் ஹாலன், அவன் மகன் தாலகன், அவன் மகன் ப்ரவீலஸேனன், அவன் மகன் ஸுந்தரன்(சாதகர்ணி), அவன் மகன் சகோர சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்வாதி, அவன் மகன் கோமதிபுத்ரன், அவன் மகன் புலிமன், அவன் மகன் சிவஸ்ரீ சாதகர்ணி, அவன் மகன் சிவஸ்கந்தன், அவன் மகன் யக்ஞஸ்ரீ, அவன் மகன் விஜயன், அவன் மகன் சந்த்ரஸ்ரீ, அவன் மகன் புலோமார்ச்சிஸ் என முப்பது ஆந்த்ரர்கள் நானூற்றைம்பது வருஷங்கள் அரசாள்வர்.

(இன்னும் கொஞ்சம் ராஜ்யங்களையும், அதை எவரெவர் ஆள்வார்கள் என்பதையும் கூறி இருக்கிறார்)

இனிமேல் நாடுகளை ம்லேச்சர்களும், வேளாளர்களுமே ஆள்வார்கள். இவர்களால் தன்னை அண்டியிருப்பவர்களுக்கு எந்த நன்மைகளையும் தர இயலாது. அற்பமானவர்கள். கோபம் மிகுந்தவர்கள். பொய்யிலும், அதர்மத்திலும் விருப்பமுள்ளவர்கள். பெண்கள், சிறுவர், பசுக்களை அழிப்பவர்களாக இருப்பார்கள். பிறர் சொத்துக்களை அபஹரிப்பார்கள். பலம் குன்றியும், ஆயுள் குறைந்தும், பேராசையுடனும் இருப்பார்கள். இவர்களைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களின் தைர்யத்தில் பலம் மிகுந்தும், அதர்மம் மிகுந்தும் மக்களை அழிப்பார்கள். இப்படி உலகிற்கு அழிவு உண்டாகும் நேரத்தில் பல விபரீதங்கள் தோன்றும். நற்குலப் பிறப்பை விடுத்துப் பொருளும், பணமுமே ஒருவனை உயர் குலத்தில் பிறந்தவனாகக் காட்டும்.

நல்லொழுக்கம் இல்லாமலிருந்தும், பலமே தர்மங்களை அனுஷ்டிக்கக் காரணமாகும். குலம், கோத்ரங்களை விடுத்துத் திருமணம் நடக்க ஆண், பெண்களின் மன ஒற்றுமையே போதுமானதாக இருக்கும். ஒரு பெண்ணைப் புணர அவள் தன் மனைவியாக இருக்க வேண்டும் என்ற காரணம் தேவையில்லாததாக ஆகிவிடும். உடலையே காரணமாகக் கொண்டு பெண்கள் கருதப்படுவர். உண்மை, தர்மங்களை விடுத்து, வழக்குகள் பொய்யால் வெற்றி அடையும். புண்ய பூமி, சுத்தமானது என்பனவைகளை விடுத்து உணவுப் பொருள் கிடைக்குமிடமும், நல்ல தண்ணீர் கிடைக்குமிடமுமே இருப்பிடமாகும். வேதாத்யயனத்தையும், ஆசாரத்தையும் விடுத்து பூணூல் அணிந்திருந்தாலே ப்ராஹ்மணன் எனப்படுவான்.

ப்ரஹ்மசர்யம் முதலான ஆச்ரமங்களிலும் அதற்குரிய தர்மங்களை அனுஷ்டிப்பதை விடுத்து, அவைகளுக்குரிய வேஷங்களைத் தரித்தலே முதன்மையாகும். தவறான வழியிலேயே வாழ்க்கை செல்லும். ந்யாயமாக வாழ வழியில்லாமல் போகும். சொந்தமாக பயிர் முதலிய சொத்துக்கள் இருந்தாலும், பலமில்லையானால் அவைகளால் வாழ இயலாது. சத்தமாக, உறுதியாகப் பேசுபவனே ஸபைகளில் பண்டிதனாகக் கருதப்படுவான். குணங்களைக் கொண்டு சாதுக்கள் அறியப்படமாட்டார்கள். பொருளில்லாமலிருப்பவன் தீயவனாக இருந்தாலும் சாது எனப்படுவான். ஸ்னானம் முதற்கொண்டு எதுவுமே வேத மந்த்ரங்களுடன் சடங்காகச் செய்யப்படாமல், அலங்காரத்திற்கென ஆகும். யாக, ஹோமங்களெதுவுமின்றி வெறும் தானமே தர்மமாகக் கருதப்படும்.

விவாஹத்திலும் வைதீகக் கர்மங்களுக்கு முக்யத்துவம் அழிந்து, ஒப்புதலே முக்யமாகிவிடும். யோக்யமானவனுக்குக் கிடைக்காமல், வேஷதாரிகளுக்கே தானங்களும் கிடைக்கும். தூரத்திலிருந்து கொண்டு வந்தால் அது சுத்தமில்லாததாயினும் புண்ய தீர்த்தம் என்று கருதப்படும். அரசனாவதற்கெனத் தகுதிகள் எதுவும் தேவையில்லை. எந்த ஜாதியைச் சேர்ந்தவனானாலும் பலம் இருந்தால் அவனே அரசன். இவன் ஆட்சியில் வஸிக்க விரும்பாத மக்கள் மலைகளில் எந்த வசதியும், உணவும், உடையும் இன்றி வாழ்ந்து கஷ்டப்படுவார்கள். கலியின் முடிவில் வாழ்நாள் ஒருவனுக்கு இருபத்து மூன்று வருஷங்களுக்கு மேல் இருக்காது.

இப்படி வேத, ஸ்ம்ருதிகளில் சொல்லி இருக்கும் எல்லா தர்மங்களும் அழிந்து, மக்களும் அழிந்திருக்கும் போது சம்பலம் என்ற க்ராமத்தில் விஷ்ணுயசஸ் என்ற ஒரு ப்ராஹ்மணனுக்கு கல்கி பகவான் அவதரிப்பார். அஷ்டமா சித்திகளுடன் விளங்குவார். தீயவர்கள், கடையர்கள் என அனைவரையும் ஒழித்து, மீண்டும் எஞ்சியுள்ளோரிடம் தர்மத்தை நிலை நாட்டுவார். தூங்கி எழுந்திருக்கும் போது எப்படி புத்தி தெளிவாக இருக்குமோ, அப்படி இவர்களும் கல்கி அவதாரத்தால் புத்தி தெளிவார்கள். இவர்களின் புத்ரர்கள் க்ருதயுக தர்மத்தை அனுஸரிப்பார்கள். சந்த்ரன், ஸூர்யன், ப்ருஹஸ்பதி இம்மூன்றும் புஷ்ய நக்ஷத்ரத்தில் ஒன்றாக ப்ரவேஸிக்கும் காலத்தில் க்ருத யுகம் பிறக்கும். மைத்ரேயா! உனக்கு இறந்த, இருக்கும், இன்னும் வரப் போகும் அரச வம்சங்களைக் கூறினேன். பரீக்ஷித் பிறப்பிலிருந்து நந்தன் பட்டாபிஷேகம் வரையான காலம் ஆயிரத்து ஐனூறு ஆகும்.

பெட்டி வண்டியின் உருவில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலம் ஆகாயத்தில் வடக்கே உள்ளது. இதில் ஏர்க்கால் போலிருக்கும் மூன்று நக்ஷத்ரங்களில் கிழக்கு நுனியில் மரீசியும், அவருக்கு மேற்கில் கொஞ்சம் கீழே வஸிஷ்டரும், அவருக்கருகில் தென் கிழக்கே அவர் மனைவி அருந்ததியும், வஸிஷ்டருக்கு மேலே அங்கிரஸ்ஸும் இருக்கிறார்கள். இந்த ஏர்க்காலுக்கு சதுரமாக அங்கிரஸ்ஸின் வழியிலேயே ஈசான்யத்தில் அத்ரியும், அவருக்கு தெற்கே புலஸ்த்யரும், அவருக்கு மேற்கே புலஹரும், அவருக்கு வடக்கே க்ரதுவும் இருக்கிறார்கள். நக்ஷத்ரங்களுடன் இந்த ஸப்த ரிஷிகள் மானுஷ வருஷத்தில் நூறுவருஷம் இருப்பார்கள். பரீக்ஷித்தின் காலத்தில் இவர்கள் ‘மக’ நக்ஷத்ரத்தில் இருந்தார்கள். அப்போது தான் ஆயிரத்திருநூறு தேவ வர்ஷங்கள் அடங்கிய கலி தொடங்கியது.

க்ருஷ்ணன் பூவுலகை விட்டுச் செல்லும் வரை கலி காத்திருந்தது. அது ஆரம்பமானதுமே அஞ்சிய யுதிஷ்ட்ர மஹாராஜர் பரீக்ஷித்திடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு ஸ்வர்க்க ஆரோஹனம் செய்தார். ஸப்தரிஷிகள் பூராட நக்ஷத்ரத்திற்குச் செல்லும் காலம் நந்தர்கள் காலம் ஆரம்பமாகும். அப்போது கலி நன்கு வளரும். வரப்போகும் க்ருத யுகத்தில் புரு வம்சத்தைச் சேர்ந்த தேவாபியும், இக்ஷ்வாஹு வம்சத்தைச் சேர்ந்த மருவும் கலாப க்ராமத்திலிருந்து கொண்டு க்ஷத்ரிய வம்சங்களை மீண்டும் பரவச் செய்வர். இப்படிப் பல அரசர்களைக் கண்டு “செல்வம் நிலையானதன்று என்று அறிந்திருந்தும், அரசர்கள் இப்படி மேலும், மேலும் ராஜ்யங்களைப் கைப்பற்றப் புறப்படுகின்றார்களே” என்று பூதேவி பூக்களாகிய தன் பற்களைக் காட்டிச் சிரிக்கிறாள்.

“அரசர்கள் அனைவருமே புத்திசாலிகள் தான். ஆயினும் அக்ஞானமடைந்தனர். நீர்க்குமிழி போன்ற இவர்கள் தங்களை அழிவில்லாதவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்களே. என்ன ஒரு அறியாமை. தன்னை வென்றவர்களே அரசர்கள். தன்னை வென்றதற்குப் பலனாக மோக்ஷத்தைத் தேடாமல் மந்த்ரிகளையும், வேலைக்காரர்களையும், மக்களையும், பகைவர்களையும் வென்று பூமண்டலம் முழுதுமே தனதாக ஆக்கிக் கொள்ள விரும்புமிவர்கள் தாங்கள் அழியப்போவதை உணர்வதேயில்லை. தன்னையே வெல்லும் அரிய செயலைச் செய்த இவர்கள் இப்படி அற்பமான வஸ்துக்களைப் பலனாக நினைக்கிறார்களே. ஆத்மஜயத்திற்கு இதுவா பலன்.

தந்தையும் ஆள்கிறான், மகனும் ஆள்கிறான். ஆனால் போகும் போது எவரும் என்னை எடுத்துச் செல்லாமல் இங்கேயே விட்டுச் செல்கின்றனர். மேலும் அவர்கள் வம்சத்தாரும் மீண்டும் என்னைக் கைப்பற்றவே நினைக்கின்றனர். ஆளும் அரசர்கள் ஒவ்வொருவரும் பல பேர் கை மாறும் என்னை வைத்துக் கொண்டு தூதுவர்களை அடுத்த அரசர்களிடம் அனுப்பி, “இது என் இடம், நீ வெளியேறு” என்று வேறு கூறுகின்றனர். இது மிகவும் வேடிக்கையானது” என்று பூதேவி கூறியுள்ள இவைகள் ப்ருத்வீ கீதங்கள் எனப்படுகின்றன. இதைக் கேட்பவனுக்கு ஸூர்யன் முன் பனி அழிவது போல் எனது என்ற எண்ணம் (மமகாரம்) ஒழியும். இது நிச்சயம்.

மைத்ரேயா! இப்படியாக உனக்கு மனுவின் வம்சத்தைப் பற்றிக் கூறினேன். இதில் விஷ்ணுவின் அம்சமாகப் பல அரசர்கள் தோன்றியுள்ளனர். இதை பக்தியோடு கேட்பவர்களுக்கு பாபங்கள் அனைத்தும் அழிந்து மனம் பரிசுத்தமடையும். சந்த்ர, ஸூர்ய வம்சத்து இந்த அரசர்களின் வரலாற்றைக் கேட்பவர்களுக்கு ஸகல ஸம்பத்துக்களும் உண்டாகும். இந்த்ரியங்கள் பொலிவு பெற்று ஸத்விஷயங்களில் செல்லும். பராக்ரமும், வீர்யமும், செல்வங்களும் குவிந்திருக்க வாழ்ந்திருந்த இக்ஷ்வாஹு, ஜஹ்னு, மாந்தாதா, ஸகரன், ரகு, யயாதி, ப்ருது, கார்த்த வீர்யார்ஜுனன், ராவணன் என்று ஒரு அரசர்களும் இன்று இல்லை. ஆயிரக்கணக்கான வருஷங்கள் தவம் செய்து பலன் பெற்றவர்களும் அழிந்து விட்டனர். காலத்திற்குட்பட்டு அழிந்தனர் அனைவரும். அவர்கள் கதை மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்கள் வாழ்ந்தார்களா என்பதே இன்றைய நிலையில் சந்தேஹமாக உள்ளது. எனவே வீடு, நிலம், உற்றார், சுற்றார் என ஒன்றிலும் பற்று வேண்டாம். எதுவும் சாச்வதமன்று. தன் ஆத்மாவிடமும் பற்றுதல் வேண்டாம்.

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading