(495-வது திருநாமம் குரு முதல் 502-வது திருநாமம் போக்தா வரை – ஹயக்ரீவ அவதாரத்தின் பெருமைகள்)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)
(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்)
(529 – 538 – கபில அவதாரம்)
538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்
(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்டநாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
—————
503. கபீந்த்ராய நமஹ (Kapeendhraaya namaha)
ஹயக்ரீவராகத் தான் உபதேசித்த வேத தருமங்களைத் தானே ராமனாக அவதரித்துத் திருமால் பின்பற்றிக் காட்டினார் என்பதை உணர்த்தவே மீண்டும் ஒருமுறை ராமனின் பெருமைகள் இங்கே ஹயக்ரீவரைத் தொடர்ந்து சொல்லப்படுகின்றன.கம்பராமாயணம் பால காண்டத்தில் வரும் காட்சி. தேவர்கள் அனைவரும் மேரு மலையில் உள்ள ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினார்கள். பிரம்மாவைப் பார்த்து, பிரம்மதேவரே ராவணன் போன்ற அரக்கர்களாலே நாங்கள் மிகவும் துன்புறுகிறோம்.
அவர்களிடம் இருந்து எங்களை நீங்கள் தான் காக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அப்போது பிரம்மா, நம் அனைவரையும் அரக்கர்களிடம் இருந்து காக்க வேண்டும் என்றால் அது திருமாலால் தான் முடியும். வாருங்கள், திருமாலைத் தியானிப்போம் என்றார். அதன்படி எல்லோரும் திருமாலைத் தியானிக்க, கருட வாகனத்தில் திருமால் அவர்கள் முன்னே தோன்றினார்.
கருமுகில் தாமரை நல்காடு பூத்து நீடு
இருசுடர் இருபுறத்து ஏந்தி ஏந்தலர்த்
திருவொடும் பொலிய ஓர் செம்பொன்
குன்றின்மேல் வருவதுபோல் கலுழன்மேல் வந்து தோன்றினான்–என்று வர்ணிக்கிறார் கம்பர்.
நீருண்ட கார்மேகத்தில் தாமரைக் காடு பூத்து, அம்மேகம் சூரிய சந்திரர்களை ஏந்தியபடி மின்னலை உள்ளடக்கி, தங்கமலை மேல் வந்தால் எப்படி இருக்குமோ அதுபோல் திருமால் தோன்றினார் என்கிறார் கம்பர்.அதாவது, திருமாலின் கார்வண்ணத் திருமேனி கார்மேகம். அவரது திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் தாமரைக் காடு போல் விளங்குகின்றன. அவர் ஏந்தியிருக்கும் சங்கு சக்கரங்கள் சந்திர சூரியர்களைப் போல் இருக்கின்றன. திருமார்பில் உள்ள பிராட்டி மின்னலாய் ஒளிவீசுகிறாள். வாகனமான கருடன் பொன்மலை போல் விளங்குகிறார்.
இக்காட்சி வால்மீகி ராமாயணத்தில் வேறுமாதிரி இருக்கிறதே என்ற சிந்தனையில் ஆழ்ந்து விட்டால், இந்த அரிய காட்சியில் உள்ள இறைவனின் அழகையும் இலக்கியச் சுவையையும் இழக்க நேரிடும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.இப்படித் தோன்றிய திருமாலிடம் தேவர்கள் ராவணன் போன்ற அரக்கர்களிடம் இருந்து தங்களைக் காக்குமாறு வேண்டினார்கள். அப்போது அவர்களிடம் திருமால், நீங்கள் அஞ்சவேண்டாம், நான் பூமியில் அவதாரம் செய்து ராவணனையும் அவனது அரக்கர் கூட்டத்தையும் கூண்டோடு அழிப்பேன் என்று வாக்களித்தார்.
மேலும், தேவனாலோ யட்சனாலோ கந்தருவனாலோ சித்தனாலோ சாரணனாலோ கிம்புருஷனாலோ அசுரனாலோ அரக்கனாலோ தனக்கு மரணம் வரக்கூடாது என்று வரம்பெற்ற ராவணன், மனிதன் மிருகம் இருவரையும் அலட்சியத்தால் விட்டுவிட்டான். ராவணனின் மரணத்துக்குக் குரங்குகளும் ஒரு காரணமாகும் என்று நந்தி சாபம் கொடுத்திருக்கிறார்.
எனவே, தேவர்களே, நான் தசரதன் மகனாக – மனிதனாக – அவதரிக்கிறேன். என் படுக்கையான ஆதிசேஷன் லட்சுமணனாகவும், சக்கரம் பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் தோன்றுவார்கள். வானவர்களான நீங்கள் வானரங்களாக வந்து பூமியில் பிறப்பீர்களாக. ராவணனை முடித்து விடலாம் என்றார் திருமால். அதன்படி, தேவர்களுள் இந்திரன் வாலியாகவும் அங்கதனாகவும் தோன்றினான். சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நீலனாகவும், வாயுவும் சிவனும் அனுமனாகவும் தோன்றினார்கள்.
ஸர்வலோகேச்வரஸ் ஸாக்ஷாத் லோகானாம் ஹிதகாம்யயா
அனைத்துலகையும் ஆளும் திருமாலே, வானர வடிவில் தேவர்கள் புடைசூழ வந்து நீங்கள் அரக்கர்களை அழித்தொழித்தீர்கள் என்று துதிக்கிறார் பிரம்மா. இப்படி வானரர்களாக வந்த வானரர்களுக்குத் தலைவராக ராமன் விளங்குவதாலே, கபீந்த்ர: என்று ராமன் அழைக்கப்படுகிறார். கபி என்றால் வானரம் அல்லது குரங்கு. இந்த்ர என்றால் தலைவர். கபீந்த்ர: என்றால் வானரங்களின் தலைவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 503-வது திருநாமம்.கபீந்த்ராய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் எல்லாக் குறைகளையும் ராமன் போக்கி அருள்வார்.
——————
504. பூரிதஷிணாய நமஹ (Bhoori Dhakshinaaya namaha)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)
சிருங்கேரி மகா சன்னிதானம் ஒரு கதை சொல்வார். ஓர் ஊரிலே ஒரு புடலங்காய் வியாபாரி இருந்தாராம். அவர் ஒவ்வொரு நாளும் யாராவது ஒருவருக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்து வந்தாராம். இப்படித் தன் வாழ்நாள் முழுவதும் தானம் செய்து வந்தாராம், அந்தப் புடலங்காய் வியாபாரி. இந்த தானத்தின் விளைவாக, அடுத்த பிறவியில் அவர் ஒரு பெரிய அரசனின் மகனாகப் பிறந்தார்.
தந்தைக்குப் பின், தான் முடிசூடிக் கொண்டு சிறந்த அரசனாக ஆட்சி புரிந்தார். அந்தப் பிறவியில் மிகவும் மன நிறைவுடன் வாழ்ந்து வந்தார் அவ்வரசன். அவர் ஒரு ஜோதிடரைச் சந்தித்துத் தான் இவ்வளவு மன நிறைவுடன் வாழ என்ன காரணம் என்று கேட்டார்.அவரது ஜாதகத்தை அலசி ஆராய்ந்த ஜோதிடர், கடந்த பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் நீங்கள் தானம் செய்துள்ளீர்கள். இந்த பிறவியில் நீங்கள் பெற்றுள்ள நிம்மதியான வாழ்வுக்கு அந்த தானமே காரணம் எனச் சொன்னார்.
இதைக் கேட்ட அந்த அரசன், ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்ததற்கே இவ்வளவு பலன் என்றால், இனி நாம் இந்தப் பிறவியில் பலப்பல புடலங்காய்களாகப் பலப்பல நபர்களுக்குத் தானம் செய்தால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும் என யோசித்தார்.அடுத்த நாள் முதல், அந்த நாட்டில் உள்ள மக்கள் யாராலும் புடலங்காய் வாங்கவே முடியவில்லை. ஊரில் உள்ள அனைத்துப் புடலங்காய்களையும் அரண்மனைப் பணியாட்களை அனுப்பி வாங்கி வரச் செய்தார் அரசன். அந்தப் புடலங்காய்களை எல்லாம் பலப்பல நபர்களுக்குத் தினந்தோறும் தானமாக வழங்கி வந்தார். அந்தப் பிறவி முடிந்தது.
அடுத்த பிறவியில் அந்த அரசர் மொத்த வியாபாரம் செய்யும் ஒரு புடலங்காய் வியாபாரியாக ஆனார். அந்த பிறவியிலும் ஒரு ஜோதிடரைப் பார்த்தார். அந்த ஜோதிடர், நீ முன் ஒரு பிறவியில் ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் வீதம் தானம் செய்தாய். அதனால் அரசனாக பிறந்தாய். அந்த பிறவியில் அரசனாகி பலப்பலப் நபர்களுக்குப் பலப்பலப் புடலங்காய்களாகத் தானம் செய்ததால், இந்த பிறவியில் பெரிய புடலங்காய் வியாபாரியாய்ப் பிறவி பெற்றாய் என்றார்.
அந்த வியாபாரிக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் வந்தது. பலர்க்குப் பலப்பலப் புடலங்காய்கள் தானம் செய்ததற்குப் பலனாக நான் இன்னும் பெரிய சக்கரவர்த்தியாக அல்லவோ ஆகி இருக்க வேண்டும். இப்படிப் புடலங்காய் வியாபாரியாக ஏன் பிறந்தேன் என்று கேட்டார் வியாபாரி.ஒரு புடலங்காய் வியாபாரியின் நிலைக்கு, ஒரு நாளைக்கு ஒரு புடலங்காய் தானம் செய்வது என்பது உயர்ந்தது. ஆனால் அரசன் தானம் செய்தால் அவன் தகுதிக்கு ஏற்றபடித் தங்கம், வைரம் என்றல்லவா தானம் செய்திருக்க வேண்டும்! அதை விட்டுவிட்டுப் புடலங்காயையே தானம் செய்தால், எண்ணம் போல்தான் பிறவி கிடைக்கும் என்றார் ஜோதிடர். அதன்பின் அந்த வியாபாரி தானத்தின் பெருமையை முழுமையாக உணர்ந்து கொண்டாராம்.
தானம் என்றால் ராமனைப் போல் செய்ய வேண்டும். ராமன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்தார். அப்பொழுது ரிஷிகள், சான்றோர்கள், வேதம் வல்லார் என அனைவர்க்கும் அள்ளிக் கொடுத்தார் ஸ்ரீராமன். இவ்வாறு கணக்கே பாராமல், அவரவருக்குரிய தட்சிணையையும், சம்மானத்தையும் அள்ளிக் கொடுத்து, தானம் எப்படிச் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக விளங்கியதால், ஸ்ரீராமனுக்கு பூரிதஷிண: என்று திருநாமமே ஏற்பட்டது.
யாகங்கள், தானங்கள் போன்றவற்றைச் செய்வதால், இறைவனாகிய ஸ்ரீராமனுக்குப் புதிதாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. நாம் எல்லோரும் அவனைப் பின்பற்றி, நிறைய தானம் செய்ய வேண்டும் என்பதற்காக ராமன், தானம் செய்து காட்டியிருக்கிறார். பல யாகங்கள் செய்து அதற்கு தட்சிணையாக நிறைய தானம் செய்ததால் பூரிதக்ஷிண: என்று ஸ்ரீராமன் அழைக்கப்பெற்றார். பூரி என்றால் தாராளமாக, தக்ஷிணை என்றால் சம்மானம். பூரிதக்ஷிண: என்பது ஸஹஸ்ரநாமத்தின் 504-வது திருநாமம்.பூரிதக்ஷிணாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அனைவருக்கும் பரந்த உள்ளம் ஏற்படும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.
—————–
505. ஸோமபாய நமஹ (Somapahaya namaha)
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி, வடுவூர் என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிக்குப் பவித்தோற்சவம் நடைபெறும்.அதே சமயத்தில், அதே ஊரில், புராணத் தெருவில் ராமரின் பக்தரான வில்லுர் ஸ்ரீநிதி சுவாமிகளின் அவதார உற்சவமும் ஐந்து நாட்கள் நடைபெறும். வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளும் கார்த்திகை தீபத் திருநாளன்றே அவதாரம் செய்தார். எனவே இறைவனின் உற்சவமும் அடியவரின் உற்சவமும் ஒன்றாக நடக்கும் வைபவத்தை அங்கே அந்த சமயத்தில் காணலாம்.
வில்லூர் ஸ்ரீநிதி சுவாமி, வடுவூர் ராமனின் புன்னகையை அனுபவித்துப் “புன்னகை ராமாயணம்’’ என்றொரு ராமாயணமே இயற்றியுள்ளார். அந்த உற்சவக் காலத்தில், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே.கருணாகராச்சாரிய மகாதேசிக சுவாமியும், அடியேனும், வடுவூர் ராமன் முன் புன்னகை ராமாயணத்தைப் பாராயணம் செய்வோம். அதை ஆனந்தமாக கேட்டு அருள்வான் ராமன். இந்த உற்சவத்தின் நடுவே ஒவ்வொரு ஆண்டும், ஒருநாள் ஏகாதசி வந்துவிடும்.
அந்த சமயம், அடியேனின் குருவான ஸ்ரீ.உ.வே. கருணாகராச்சாரியார் சுவாமி ஏகாதசி அன்று முழுமையாக விரதம் இருந்து உற்சவத்தில் பங்கேற்பார். இதை ஒவ்வொரு ஆண்டும் அடியேனும் கவனித்து வந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு அடியேன், கருணாகராச்சாரியார் சுவாமிகளிடம், “சுவாமி, ஏகாதசி அன்று தண்ணீர்கூட உட்கொள்ளாமல் விரதம் மேற்கொண்டு உற்சவத்திலும் பங்கேற்பது எளிதன்று. உங்கள் வயதையும், உங்களுக்கு இருக்கும் நீரிழிவு நோயையும் கருத்தில் கொண்டு ஏதாவது உணவு எடுத்துக் கொள்ளலாமே’’ என்று கேட்டேன்.
அதற்குக் கருணாகராச்சாரியார் சுவாமி, “என் ஆச்சாரியனும் தந்தையுமான வில்லூர் ஸ்ரீநிதி சுவாமிகளின் உற்சவம் இது. அவரது இஷ்டதெய்வமான ராமனின் உற்சவம் இது. ராமனும் ஆசானும் துணைநிற்க, எனக்கு எந்த ஒரு பாதிப்பும் நேராது. உண்ணாமல் இருந்தால், சர்க்கரையின் அளவு குறையும் என்றுதான் மருத்துவனான நீ சொல்வாய். இது தவிர வேறு என்ன ஆகிவிடும் எனக் கேட்டார்.ஒரு மருத்துவனாக அடியேன், சர்க்கரையின் அளவு அதிகமாகவும் வாய்ப்பு இருக்கிறது சுவாமி. அதற்கு ஸோமோகி விளைவு எனப் பெயர். ஸோமோகி என்ற விஞ்ஞானி இதைக் கண்டுபிடித்தார். சர்க்கரையின் அளவு குறையும் பொழுது, நம் உடம்பில் சில ஊக்கிகள் (Hormones) உருவாகிச் சர்க்கரை அளவைச் சமன் செய்ய முயலும். அப்பொழுது அதன் எதிர்விளைவாகச் சர்க்கரையின் அளவு கூடவும் வாய்ப்புள்ளது எனச் சொன்னேன்.
ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி உணவு உட்கொண்ட பின் சர்க்கரையின் அளவு கூடுகிறதா குறைகிறதா என்று பார் என்று கருணாகராச்சாரியார் சுவாமி தெரிவித்தார். துவாதசி அன்று அவர் உணவு உட்கொண்டு முடித்தபின், ஒன்றரை மணிநேரம் கழித்துச் சர்க்கரையின் அளவைப் பரிசோதித்தேன். சரியாக 140 mg/dl என்று இருந்தது.அடடா ஸோமோகி விளைவு எடுபடவில்லையோ என்றேன். ஆச்சாரியனோ, இது ஸோமோகி விளைவன்று, இது ஸோமயாஜீ விளைவு. ஸோமயாகம் செய்பவர்களை ஸோமயாஜீ என்பர். ஸோமயாகம் செய்கையில் பல நாட்கள் விரதம் இருக்க வேண்டும். நமது முன்னோர்கள் பலர் ஸோம யாகம் செய்துள்ளனர். அவர்களின் அருள் நமக்கு நிச்சயமாக உண்டு.
மேலும் நமக்கு வழிகாட்டுவதற்காகத் தான் ராமனே பல ஸோம யாகங்கள் செய்து, யாகம் செய்கையில் விரதமும் அனுசரித்தான். ராமனை விடச் சிறந்த ஸோமயாஜீ உண்டா. அந்த ராமனின் திருத்தலத்தில் நாம் இருக்க, முன்னோர்களின் அருள் இருக்க, ஸோமயாஜீ விளைவு துணையிருக்க, ஸோமோகி விளைவு என்ன செய்யும் என்று பெருமிதத்துடன் சொன்னார் கருணாகராச்சாரியார் சுவாமி.
இப்படிப் பல ஸோம யாகங்கள் செய்து, அவ்யாகங்களில் இருந்து வரும் ஸோம பானத்தைப் பருகினான் ராமன். ஸோமம் என்னும் செடியிலிருந்து வருவதால் ஸோமரசம், ஸோமபானம் என்று அது சொல்லப்படுகிறது. இதை யாகத்தில் நாராயணனுகு அர்ப்பணித்துப் பிரசாதமாக உட்கொள்வர். இன்றைய காலத்தில் சிலர் ஸோமபானத்துக்குத் தவறான பொருள் சொல்லி வருவதை நாம் காணமுடிகிறது. ஆனால் வேத நூல்களில் சொன்ன விளக்கத்தை ஏற்பதே என்றும் சாலச் சிறந்தது.
நாம் விரதம் இருந்து யாகம் உள்ளிட்ட வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்பதற்காக, ஸ்ரீராமன் முன்னோடியாக விரதம் இருந்து யாகம் செய்து ஸோம ரசத்தை உட்கொண்டு நமக்கு வழிகாட்டியுள்ளார். நம் சக்திக்கு ஏற்றவாறு நாமும் ஏகாதசி போன்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறார் ஸ்ரீராமன். அசுவமேத யாகம், ஸோம யாகம் போன்ற யாகங்கள் செய்து அதிலிருந்து பிரசாதமாகப் பெறப்படும் ஸோம பானத்தை உட்கொள்வதால் ராமன் ஸோமப: என அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 505-வது திருநாமம். ஸோமபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறநெறிகளைப் பின்பற்றி நடக்கக் கூடிய வலிமையை ஸ்ரீராமன் தந்தருள்வான்.
—————–
506. அம்ருதபாய நமஹ (Amruthapaaya namaha)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ராமனின் பெருமைகள்)
ஸ்ரீராம பட்டாபிஷேகம் அயோத்தியில் இனிதே நிறைவு பெற்றது. தேவர்களும் முனிவர்களும் ராமனையும் சீதையையும் வாழ்த்தினார்கள். தேவர்கள் குறிப்பாக லட்சுமணனை வாழ்த்தினார்கள். பலப்பல வரங்களைப் பெற்றவனும், பல்வகை மாயா ஜாலங்கள் செய்ய வல்லவனுமான இந்திரஜித்தை வதைப்பது சாதாரண காரியம் அன்று எனச் சொல்லி லட்சுமணனின் சாகசத்தை முனிவர்கள் கொண்டாடினார்கள். அவ்வாறே அனுமனின் தொண்டையும் பாராட்டினார்கள்.
இதைக் கவனித்த ராமன், முனிவர்களே, லட்சுமணனின் மனைவி ஊர்மிளையை யாருமே கொண்டாடவில்லையே. கைங்கரியச் செம்மல் என்று லட்சுமணன் விளங்குவதன் பின்னணியில் ஊர்மிளை தன் கணவனைப் பிரிந்திருந்த தியாகம் இருக்கிறதே. அவளது தியாகத்தை நாம் அவசியம் போற்றவேண்டும். கணவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட பெரும் துயரத்தையும் பொருட்படுத்தாமல் இருந்த ஊர்மிளைக்கு நான் வரம் தரப்போகிறேன் என்றான் ராமன்.ஊர்மிளையை அழைத்து அவள் விரும்பும் வரம் என்ன என்று கேட்டான் ராமன். ராமனைக் கைகூப்பி வணங்கிவிட்டு ஊர்மிளை, சுவாமி, நான் ஏதும் பெரிதாகத் தியாகம் எல்லாம் செய்யவில்லை.
எது நடந்தாலும் அது உங்களது அருள் அன்றி வேறு எதனாலும் சாத்தியமில்லை. எனவே எனக்காகக் கோயில் கட்டுவது, என்னைக் கொண்டாடுவது, என்னைப் போற்றிப் பாராட்டுவது உள்ளிட்ட எதுவுமே இனி உலகில் இருக்க வேண்டாம். எல்லாப் புகழும் உங்களுக்கு மட்டுமே, அது தான் சரி. அடியேன் நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைப் பெற விரும்புகிறேன். அதைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள்.
அதற்கு ராமன், ஊர்மிளா, இனி நான் பல யாகங்கள் செய்யப் போகிறேன். அந்தந்த வேள்விகள் தோறும் அவற்றிலிருந்து வரும் ஒரு பிரசாதத்தை உனக்கு நான் தருவேன் என்றான். அதற்கு ஊர்மிளை, அடியேன் யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பிரசாதத்தைக் கேட்கவில்லையே. நீங்கள் அமுதுசெய்த பிரசாதத்தைத் தானே அடியேன் கேட்டேன் என்றாள். ராமன், ஊர்மிளா, எந்த யாகத்தில் எந்தப் பொருளை அக்னியில் சமர்ப்பித்தாலும், அந்தப் பொருளை அக்னிதேவன் அமுதம் ஆக்கி, அதைத் திருமாலுக்குச் சமர்ப்பித்து விட்டு அதன் பின் திருமாலின் பிரசாதமாகத் தான் மற்ற தேவர்களிடம் அக்னி சேர்க்கிறான்.
நான் திருமாலின் அவதாரம் என்பது இப்போது வந்த ரிஷிகளின் வாக்கின் மூலம் நீ அறிந்திருப்பாய். எனவே அந்த வேள்விகளால் ஆராதிக்கப்படுபவன் நானே. அதில் வரும் பிரசாதம் எனது பிரசாதமே. அதை உனக்குத் தருகிறேன் என்று விடையளித்தான்.யாகத்தில் வந்த ராமனின் அமுதமயமான பிரசாதத்தைத் தொடர்ந்து உண்டு வந்த ஊர்மிளை அமுதமயமாகவே மாறிவிட்டாள். அதனால் அவளே பூரி ஜகந்நாதர் க்ஷேத்திரத்தில் உள்ள அமுதமயமான பிரசாதமாக ஆகிவிட்டாள் என்கிறது பூரி க்ஷேத்திர மாஹாத்மியம்.
எனக்குக் கோயில் வேண்டாம், வழிபாடு வேண்டாம், கொண்டாட்டம் வேண்டாம், உங்கள் பிரசாதத்தை உண்ணும் பேறு மட்டும் வேண்டும் என்று கேட்ட ஊர்மிளையைப் பிரசாதமாகவே ஆக்கி அருள்புரிந்து விட்டான் ஸ்ரீராமன்.இன்றும் பூரியில் ஜகந்நாதரின் மஹாபிரசாதம் அமுதத்துக்கு நிகரானதாகக் கொண்டாடப் படுகிறது. அது அம்ருத நிலையாகிய முக்தி வரை நம்மைச் சேர்க்க வல்லது என்று தல வரலாறு சொல்கிறது.
ஊர்மிளை இப்படி மஹா பிரசாதமாக ஆனதற்கு, யாகத்தின் அமுதமயமான பிரசாதத்தை ஊர்மிளை பெற்றதே காரணம். ராமன் நடத்திய அனைத்து வேள்விகளிலும் அவன் சமர்ப்பித்த ஹவிர்பாகம் என்னும் உணவு யாவும், அக்னிதேவனால் அமுத வடிவில் மீண்டும் ராமனிடமே சேர்க்கப்பட்டன. அதை ராமன் பருகிப் பின் தன் பிரசாதமாகப் பிறர்க்கு வழங்கி இருக்கிறான். எனவே ராமன் யாகம் செய்தவன் மட்டும் அல்லன், யாகத்தில் அர்ப்பணிக்கப் படும் பொருளை அமுது செய்யும் இறைவனும் அந்த ராமனே. அதனால் தான் அம்ருதப: என்று ராமன் அழைக்கப்படுகிறார்.
அம்ருதம் என்பது யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் ஹவிர்பாகத்தைக் குறிக்கிறது. அம்ருதப: என்றால் யாகத்தில் அர்ப்பணிக்கப்படும் அமுதைப் பருகுபவர் – அதாவது, யாகத்தால் ஆராதிக்கப்படுபவர் என்று தாத்பரியம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 506-வது திருநாமம்.அம்ருதபாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அமுத நிலையாகிய வைகுண்ட வாழ்ச்சியை ஸ்ரீராமன் அருள்வார்.
——————–
507. ஸோமாய நமஹ (Somaaya namaha)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும்ஸ்ரீராமனின் பெருமைகள்)
வனவாசம் செல்லும் ராமபிரானின் வடிவழகைக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் வர்ணித்து ஒரு பாடல் பாடியுள்ளார்.
வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியில் மறையப்
பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்
மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ
கருமை நிறம் கொண்ட ராமபிரானின் திருமேனி அழகுக்கு என்ன உவமை சொல்லலாம் என்று சிந்தித்துப் பார்த்தார் கம்பர். கறுப்பு நிறம் கொண்ட மையைச் சொல்லலாமோ எனச் சிந்தித்து, மையோ என்றார்.
ஆனால் மையில் கருமை இருந்தாலும் ராமனுக்கு இருக்கும் பளபளப்பையோ பொலிவையோ மையில் காணமுடியவில்லை. அதனால் மை பொருத்தமான உவமையாக ஆகாது. ஒளியும் பளபளப்பும் மிக்க மரகதக் கல்லைச் சொல்லிப் பார்க்கலாம் என்று யோசித்த கம்பர், மரகதமோ என்று அடுத்த உவமையை அடுக்கினார். ஆனால் மரகதக்கல்லில் ஒளி இருந்தாலும் குளிர்ச்சி இல்லை, ராமனின் திருமேனியில் மிகுந்த குளிர்ச்சி உள்ளதே. அப்படியிருக்க, மரகதக் கல் எப்படிப் பொருத்தமான உவமையாகும் எனக் கருதி, அடுத்த உவமையைச் சிந்தித்தார். குளிர்ந்த கடல்நீரை உவமையாகச் சொல்லலாமோ எனக் கருதி, நீலவண்ணம், குளிர்ச்சி யாவும் நிறைந்த மறிகடலோ என்றார் கம்பர். ஆனால் கடல்நீர் உப்பு கரிக்குமே.
ராமன் அமுதம் போல் அல்லவோ இருக்கிறான். எனவே உப்பு நிறைந்த கடல்நீரை ராமனுக்கு உவமையாக்க முடியாது எனக் கருதி அதற்கு அடுத்த உவமையைச் சிந்தித்தார். தூய நீரை மழையாகப் பொழியும் கார்மேகத்தை உவமையாகச் சொல்வோம் என்று முடிவெடுத்த கம்பர், அடுத்து மழைமுகிலோ என்றார். ஆனால் கார்மேகத்தில் கருமை குளிர்ச்சி தூய்மை யாவும் இருந்தாலும் கூட, மழை பொழிந்து முடித்து விட்டால், வெளுத்துப் போகிறது.
ராமனோ எவ்வளவு அருள்மழை பொழிந்தாலும் வெளுக்காமல் அப்படியே கருமையோடு இருக்கிறானே. அப்படியானால் மேகமும் அவனுக்கு உவமையாகாது. இப்படி எந்தப் பொருளை உவமையாக்க முயன்றும் ராமனின் அழகுக்கு நிகரான உவமையைச் சொல்ல முடியவில்லை. திடப்பொருளான மரகதக்கல், திரவப் பொருளான கடல்நீர், இரண்டுக்கும் இடைப்பட்ட மை, வாயுப்பொருளான மேகம் என எதுவுமே ராமனின் அழகுக்கு நிகராகாத நிலையில், இனி என்ன வார்த்தை சொல்லி ராமனை அழைப்பது என்று சிந்தித்தார். கவிச்சக்கரவர்த்திக்கே வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. என்னிடம் இனி வார்த்தைகளே இல்லையே என்று தெரிவிக்கும் விதமாக, ஐயோ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் கம்பர்.
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே
இப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரழகோடு திகழ்ந்து, தன்னை அனுபவிக்கும் அடியார்களுக்கு அமுதமாக இனிப்பதால், ஸ்ரீராமன் ஸோம: என்று அழைக்கப்படுகிறார். இவ்விடத்தில் ஸோம என்பதற்கு அமுதம் என்று பொருள். அனுபவிப்போர்க்கு அமுதமாக இனிப்பவர் ஸோம: அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 507-வது திருநாமம். ஸோமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்நாளில் எந்நாளும் இனிமையான நாளாக அமையும்படி ஸ்ரீராமன் அருள்புரிவார்.
————–
508. புருஜிதே நமஹ (Purujithey namaha)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)
தசரதன் தனக்குப் பிறந்த நான்கு குழந்தை களான ராமன், லட்சுமணன், பரதன்சத்ருக்னன் ஆகியோரை வசிஷ்டரிடம் கல்வி பயிலச்செய்தார். அப்போது லட்சு மணன் எந்நேரமும் ராமனை விட்டுப் பிரியாமல் கூடவே இருந்து பணிவிடைகள் செய்து வந்தான். சத்ருக்னன் அவ்வாறே ராம பக்தனான பரதனைவிட்டுப் பிரியாது உடனிருந்து பரதனுக்கு அனைத்துவிதப் பணிவிடைகளும் செய்துவந்தான்.
அந்த நாட்களில் காலை நேரங்களில்ராமனும், லட்சுமணனும் சோலைகளுக்குச் சென்று அங்கே தவத்திலும் இறை வழிபாட்டிலும் ஈடுபட்டு வரும் முனிவர்களை அடிபணிவார்களாம். அந்த முனிவர்கள் கூறும் நல் வார்த்தைகளையும், அறிவுரைகளையும் கேட்டு, அவர்களுக்குத் தங்களால் இயன்ற பணிவிடைகளையும் ராம, லட்சுமணர்கள் செய்வார்கள்.அதன்பின் பகல் முழுவதும் வசிஷ்டரின் குருகுலத்தில் வித்தைகளைப் பயில்வார்கள். தங்கள் குலகுருவான வசிஷ்டரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்டவர்களாய், அவரையே தெய்வமாக எண்ணி வழிபட்டுவந்தார்கள்.
மாலைப்பொழுது வந்தவாறே, ராம லட்சு மணர்களும் அயோத்தி நகர்ப் புறத்துக்கு வருவார்களாம். அச்சமயம் எதிரில் வரக் கூடிய பொதுமக்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் நலமாக உள்ளீர்களா, உங்கள் வீட்டில் எல்லோரும் நலமா என்றெல்லாம் பலவாறு விசாரிப்பார்களாம். அவ்வாறு ராம லட்சுமணர்கள் பேசும் இனிய வார்த்தைகளைக் கேட்ட மக்கள், கார்முகில் பொழியும் மழையைக் கண்டு மகிழும் பயிர்களைப்போல் என பெருமகிழ்ச்சி அடைவார்களாம்.
இதைக் கம்பர் பால காண்டத்தில், திருஅவதாரப் படலத்தில்,
வீரனும் இளைஞனும் விரிபொழில்களின் வாய்
ஈரமோடு உறைதரு முனிவரர் இடைபோய்
சோர்பொழுது அணிநகர் துறுகுவர் எதிர்வார்
கார்வர அலர்பயிர் பொருவுவர் களியால்
மேலும், ஏழையர் யாவது உதவி என்று கேட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை எல்லாம் உடனே செய்து விடுவானாம் ராமன். அதனால் குடிமக்கள் யாவரும் ராமனை உளமார வாழ்த்திவந்தார்கள்.ராமனுடைய நன்னடத்தை, பணிவு, நற்பண்புகள் உள்ளிட்டவற்றைக் கண்டு வியந்து வசிஷ்டரும் ராமன் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தாராம். எல்லாவற்றுக்கும் மேலாக, அயோத்திமக்கள் ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்னன் ஆகிய நான்கு இளவரசர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனையோடு அயோத்தியில் உள்ள அனைத்துக் கோயில்களுக்கும் சென்று தினசரி வழிபாடு செய்து விட்டு வருவார்களாம். இதையும் கம்பர்,
ஏழையர் அனைவரும் இவர்தட முலைதோய்
கேழ்கிளர் மதுகையர் கிளைகளும் இளையார்
வாழிய என அவர் மனன் உறு கடவுள்
தாழ்குவர் கவுசலை தயரதன் எனவே
இவ்விடத்தில் கம்பர், கௌசல்யாவும் தசரதனும் ராமனை எவ்வளவு வாழ்த்துவார்களோ அவ்வளவு தூரம் நாட்டு மக்கள் அத்தனை பேருமே ராமனிடம் அன்பு காட்டி அவனை வாழ்த்தினார்கள் என்கிறார். இப்படி பலதரப் பட்ட மக்களும் ராமனைப் போற்றிக் கொண்டாட என்ன காரணம் என்று பார்த்தால், அதை ஒரே ஸ்லோகத்தில் வால்மீகி தெரிவிக்கிறார்;
ஸத்யேன லோகான் ஜயதி, தீனான் தானேன ராகவ:
குரூன் சுச்ரூஷயா தீமான், தனுஷா யுதி சாத்ரவான்
தான் கடைப்பிடிக்கும் சத்தியத்தால் உலகங்களையே வென்றான் ராமன். தானத்தால் ஏழைகளின் மனங்களை வென்றான் ராமன். தனது பணிவிடைகளால் குருமார்களின் மனங்களை வென்றான். வில் எடுத்துப் போர்புரியும் தன் மிடுக்கால் எதிரிகளின் மனங்களைக் கூட வென்றுவிட்டான் ராமன். அதனால்தான் எல்லாரும் ஒன்று போல் ராமனை எப்போதும் வாழ்த்துகிறார்கள்.
இப்படி அனைவரின் மனங்களையும் வென்ற ராமன், புருஜித் என்று அழைக்கப்படுகிறார்.புருஜித் என்றால் பலரின் மனங்களை வென்றவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 508 – வது திருநாமம்.
“புருஜிதே நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நம் மனங்களையும் ராமன் தன்பால் ஈர்த்து, தூயபக்தி வளர அருள்புரிவார்.
—————–
512. ஸத்யஸந்தாய நமஹ (Sathya-Sandhaaya namaha)
(503-வது திருநாமம் கபீந்த்ர முதல் 512-வது திருநாமம் ஸத்யஸந்த வரை – தருமத்தின் வடிவமாக இருக்கும் ஸ்ரீராமனின் பெருமைகள்)ராவணன் சீதையை அபகரித்துச் சென்றவாறே, சீதையைத் தேடிக் கொண்டு ராமனும், லட்சுமணனும் சென்றார்கள். வழியிலே ராவணனால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் அடிபட்டுக் கிடந்த ஜடாயுவைக் கண்டார்கள். ஜடாயு ராமனைப் பார்த்து, “ராமா, நான் ஒரு அதிர்ச்சிச் செய்தியைச் சொல்லப் போகிறேன், நீ பல்லாண்டு வாழ்க’’ என்று ராமனை வாழ்த்தி விட்டுப் பேசத் தொடங்கினார்.
என்று ரத்தினச் சுருக்கமாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார் ஜடாயு. “ராமா, எந்த சீதையைத் தேடிக் கொண்டு நீ இங்கே அலைகிறாயோ, அந்த சீதையையும் எனது உயிரையும் ராவணன் கொண்டு சென்றுவிட்டான்’’ என்றார். சொல்ல வந்த செய்தியை இதை விடச் சுருக்கமாகவும், தெளிவாகவும் சொல்ல முடியுமா? அத்துடன் நில்லாமல் ராமனுக்கு ஆறுதல் வார்த்தையும் சொன்னார் ஜடாயு.
விந்தோ நாம முஹூர்த்தோஸௌ ஸ ச காகுத்ஸ்த நாபுதத்
“ராமா, ராவணன் சீதையை அபகரித்த நேரம் விந்தம் என்று அழைக்கப்படும் முகூர்த்தம் ஆகும். அந்தச் சமயத்தில் எந்தப் பொருள் பறிபோனாலும் போனபடி அப்படியே திரும்ப வந்துவிடும் என்று பெரியோர்கள் சொல்வார்கள். எனவே சீதையும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் உன்னிடம் திரும்ப வந்துவிடுவாள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு உயிர் நீத்தார் ஜடாயு.
ஆஹா, நாட்டில் ஒரு தந்தை என்னைப் பிரிந்த துயரால் இறந்தார். காட்டில் கிடைத்த இந்தத் தந்தையும் எனக்கு உதவி செய்யப் போய் உயிர் நீத்து விட்டாரே என்று பலவாறு வருந்தினான் ராமன். அதன்பின், தசரதனுக்குத்தான் நேரடியாக ஈமக்கிரியை செய்ய முடியாத குறை தீர, ஜடாயுவைத் தந்தையின் ஸ்தானத்தில் வைத்து ஈமக் கிரியை செய்ய முடிவெடுத்தான் ராமன். அப்போது ஜடாயுவைப் பார்த்து, “மயா த்வம் ஸமநுஜ்ஞாதோ கச்ச லோகான் அநுத்தமான்’’ `நான் சொல்கிறேன், ஜடாயுவே, நீங்கள் வைகுண்ட லோகத்தைச் சென்று அடைவீராக’ என்றான் ராமன். அடுத்த நொடியே, ஜடாயுவின் உடலில் இருந்த ஜீவாத்மா புறப்பட்டு வைகுண்ட லோகத்தை அடைந்துவிட்டது. இதைக் கீழத் திருப்பதியில் புளியமரத்தடியில் அமர்ந்தபடி திருமலை நம்பிகள் ராமானுஜருக்கு விளக்கியபோது, அனைத்தும் அறிந்த ராமானுஜர், ஆசார்யன் வாயால் ரகசியத்தைப் பெறுவதற்காக ஒரு கேள்வி கேட்டார்.
ராமன், தனது இறைத் தன்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனிதனாகத் தானே தன்னைப் பாவித்துக் கொள்வான். அந்த ராமன் எப்படித் தன் வாயால் ஜடாயுவை வைகுண்டம் போகுமாறு ஏவினான் என்பதைச் சற்றே விளக்க வேண்டும் என்று கேட்டார் ராமானுஜர்.அதற்குத் திருமலை நம்பிகள், ராமன் தனது இறைத் தன்மையை வெளிப்படுத்தாமல் தசரதன் மகனாக இருந்துகொண்டே ஜடாயுவுக்கு முக்தி அளித்துவிட்டான் என்றார்.
அது எப்படி என்று ராமானுஜர் வினவ, “ஸத்யேன லோகான் ஜயதி’’ என்ற வால்மீகியின் வரிகளை மேற்கோள் காட்டிய திருமலை நம்பிகள், தனது சத்தியத்தால் அனைத்து உலகங்களையும் வென்றிருந்தான் ராமன். யார் ஒருவன் சத்தியத்தைக் கடைபிடிக்கிறானோ, அவனுக்கு அனைத்து உலகங்களும் கட்டுப்படும். சத்தியசந்தனான ஒரு நபர் ஒரு வார்த்தை சொன்னால், பரமனும் பஞ்ச பூதங்களும் அனைத்து உலகங்களும் சேர்ந்து அதை மெய்ப்பித்து விடுவார்கள். எனவே சத்தியசந்தனான ராமன் ஜடாயுவைப் பார்த்து, “நீ வைகுண்டம் போ’’ என்றவாறே, வைகுண்டத்துக்கு வழியான அர்ச்சிராதி மார்க்கம், தானே வழிவிட்டது.
வைகுண்டநாதன் ஜடாயுவை வரவேற்றார். வைகுண்டத்தை அடைந்துவிட்டார் ஜடாயு என்று விளக்கினார். வடமொழியில் `ஸந்தா’ என்றால் உறுதிமொழி என்று பொருள். தான் அளிக்கும் ஸந்தா என்னும் உறுதிமொழிகள் அனைத்தையும் சத்தியமாக ஆக்குவதால் – மெய்ப்பித்துக் காட்டுவதால், உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் – ஸத்யஸந்த என்று ராமன் அழைக்கப்படுகிறார்.
ஜடாயுவைப் பார்த்து, “வைகுண்டம் போ..’’ என்றான் ராமன். தான் அதுவரை கடைபிடித்த சத்தியத்தாலேயே அந்த வாக்கை மெய்ப்பித்துக் காட்டவும் செய்தான். `ஸத்யஸந்த’ என்றால் உறுதிமொழிகளை மெய்ப்பித்துக் காட்டுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 512-வது திருநாமம். “ஸத்யஸந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் சத்தியத்தில் இருந்து விலகாதிருக்கும் படி ஸ்ரீராமன் காத்தருள்வார்.
—————
513. தாசார்ஹாய நமஹ (Dhaashaarhaaya namaha)
நாரதர் பூமியில் இருந்து மூன்று மன்னர்களை அழைத்துக் கொண்டு தேவலோகத்துக்குள் நுழைந்தார். “நாராயண… நாராயண…’’ என்ற நாரதரின் குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்தான் இந்திரன். அவருடன் வந்திருக்கும் மூன்று மன்னர்களைக் கவனித்தான். யார் இவர்கள் என்று நாரதரிடம் வினவினான். நாரதர், “இந்திரா உன்னோடு சேர்ந்து இந்திர லோகத்தில் மகிழ்ந்திருக்க விரும்பி இந்த மூன்று மன்னர்கள் வந்திருக்கிறார்கள். சுவர்க்கத்தை அடைய விரும்பிப் பூமியிலே பற்பல தானங்கள் எல்லாம் செய்த கொடை வள்ளல்கள் இம்மூவரும் என்றார். அவர்களுக்குத் தன் உலகில் இடம் கொடுக்க இந்திரனுக்கு மனமில்லை. அதனால் இந்திரன் நாரதரிடம், “நாரதரே, நம் சுவர்க்க லோகத்தில் மூவருக்கு இடமில்லை.
யாராவது ஒருவரைப் பூமிக்கு அனுப்பி வைத்து விடுங்கள் என்றான். யாரை அனுப்புவது என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “அந்த மூன்றாவது மன்னன் இருக்கிறானே, அவனிடம் நானே ஓர் ஏழை வடிவில் தானம் வாங்கப் போயிருந்தேன். அவனது தங்க ரதத்தை எனக்குத் தானமாக வழங்குமாறு வேண்டினேன். ஆனால், தங்கரதம் தராமல் மரத்தால் ஆன ரதத்தைத் தான் தந்தான். இரண்டாம் முறை சென்று கேட்டேன், சந்தன மர ரதத்தைத் தந்தான்.
மூன்றாம் முறை சென்று கேட்டேன், தேக்கு மர ரதம் தந்தான். கடைசி வரை தங்க ரதம் தரவே இல்லை. அவனைப் பூமிக்கு அனுப்புங்கள் என்றான். நாரதரும் அவனை அனுப்பி வைத்தார். “இந்த இருவரையும் உள்ளே அனுமதிக்கலாமா’’? என்று கேட்டார் நாரதர். அதற்கு இந்திரன், “இருங்கள் நாரதரே, அந்த இரண்டாவது மன்னன் இருக்கிறானே, அவன் நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் பயணித்த போது, நான் மாறுவேடத்தில் எதிரே சென்று, ஒரு குதிரையை எனக்குத் தானம் தருமாறு கேட்டான், அவனும் தந்தான்.
இரண்டாம் குதிரையைக் கேட்டேன், அதையும் தந்தான். மூன்றாம் குதிரையையும் கேட்டபோது, அதையும் கூடத் தந்தான். ஆனால், நான்காம் குதிரையைக் கேட்டபோது, அதை வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய், நான் தேரில் பயணிக்க ஒரு குதிரையாவது வேண்டும் என்று சொல்லி விட்டான். நான்குக்கு மூன்று தந்த இவனை இங்கே சேர்க்க மாட்டேன். அவர் பூமிக்குச் செல்லட்டும் என்றான் இந்திரன். அவரும் பூமிக்கு வந்தார்.
மீதமுள்ள ஒரு மன்னரையாவது உள்ளே அழைத்துக் கொள்வான் இந்திரன் என்று எல்லாரும் எதிர்பார்த்த நிலையில், இந்திரன், “இந்த மன்னனிடம் முன்னொரு சமயம் நான் மாறு வேடத்தில் கோதானம் வாங்கப் போனேன். நூறு பசுக்களை அவன் தானம் செய்தான். தானம் செய்துவிட்டு, நான் நூறு பசுக்களைத் தானம் செய்தேன் என்று தன் நண்பனிடம் சொன்னான். இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டால், அதன்பின் அப்பொருள் நமது அன்று. ஆனால், நான் கொடுத்தேன் என்று தானம் செய்த பின், ஒருவன் சொல்கிறான் என்றால் அது தோஷமுள்ள தானம். அவனுக்கும் சுவர்க்கத்தில் இடமில்லை, போகலாம் என்று சொல்லிவிட்டான்.
மூன்று மன்னர்களும் பூமிக்கு வந்துவிட்டார்கள். நாரதர் அவர்களைத் தேடி வர, தங்களது மனவருத்தத்தை நாரதரிடம் சொல்லி அழுதார்கள். நாரதரோ, “மன்னர்களே, இந்திரனின் மனம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு உணர்த்தவே நான் உங்களைச் சுவர்க்கத்துக்கு அழைத்துச் சென்றேன். நீங்கள் நூறு நல்லது செய்தாலும் அதில் உள்ள தோஷத்தைத் தான் பார்ப்பான் இந்திரன். ஆனால் நீங்கள் ஆயிரம் தவறுகள் செய்தாலும், அதிலும் ஒரு நல்லதைப் பார்க்கும் ஒருவன் இருக்கிறான் என்றார் நாரதர். யார் அவன் என்று மன்னர்கள் கேட்க, அவர்களை ஆயர்ப்பாடிக்கு அழைத்துச் சென்றார் நாரதர். ஆயர்ப்பாடியில் ஒரு சடலம் எரிந்து கொண்டிருந்தது. அதிலிருந்து அகர் வாசனை எழுந்தது.
மூன்று மன்னர்களும் நாரதரிடம், “யோகிகளின் உடலை எரித்தால் தானே இத்தகைய வாசனை வரும், யோகி யாராவது மரணம் அடைந்திருக்கிறாரா’’? என்று கேட்டார்கள். அதற்கு நாரதர், “யோகியும் இல்லை, முனிவரும் இல்லை, பூதனை என்ற பேய்யின் சடலத்தை எரிக்கிறார்கள். அதிலிருந்து அகர்வாசனை வருகிறது என்றார். “அது எப்படிச் சாத்தியம்?’’ என்று மன்னர்கள் கேட்டார்கள்.
பூதனை கண்ணனுக்கென்றே விஷப்பால் சமர்ப்பித்தாள் அல்லவா, அந்த விஷப்பாலையே தனக்குச் சமர்ப்பித்த காணிக்கையாகக் கருணையுடன் கண்ணன் ஏற்றுக் கொண்டான். அவளுக்கு முக்தி அளித்துவிட்டான். அதனால்தான், அவளது சடலம் மணக்கிறது என்றார் நாரதர். அப்படியானால் இவன், தான் குற்றம் காணாமல் குணத்தைக் கொள்பவன் என்று அறிந்து கண்ணனின் திருவடிகளைப் பற்றி மூன்று மன்னர்களும் வைகுண்டமாகிய முக்தியையே பெற்றுவிட்டார்களாம்.
நாம் என்ன சமர்ப்பித்தாலும், அதை எளிமையோடும் கருணையோடும் குற்றம் காணாமல் யார் ஒருவர் ஏற்றுக் கொள்கிறாரோ, அவருக்குத் தானே நாம் பரிசுகளைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவேதான் திருமால் “தாசார்ஹ’’ என்று அழைக்கப்படுகிறார். `தாச’ என்பது நாம் காணிக்கையாக்கும் பரிசுகளைக் குறிக்கிறது. அதை எளிமையோடு ஏற்பதால், காணிக்கைகளைப் பெறுவதற்குத் தகுதியானவர் – தாசார்ஹ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 513-வது திருநாமம்.“தாசார்ஹாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், சமர்ப்பிக்கும் அனைத்துக் காணிக்கைகளையும் திருமால் மகிழ்ச்சியோடு ஏற்று அருள்புரிவார்.
514. ஸாத்வதாம் பத்யை நமஹ (Saathvathaam Pathyai namaha)
திருநெல்வேலியில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் சங்காணி என்ற ஊர் உள்ளது. அங்கே வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. தென்காஞ்சி என்றே அந்தக் கோயில் வழங்கப் படுகிறது. நாயக்க மன்னர்கள் மதுரையை ஆண்டு வந்த காலத்தில், நாயக்க மன்னர் வரதராஜர் கோயில் அர்ச்சகருக்கு ஓர் ஓலை அனுப்பி வைத்தார். வரதராஜப் பெருமாளைத் தரிசிப்பதற்காகத் திருக்கோயிலுக்கு மன்னர் வர உள்ளதாக அந்த ஓலையிலே எழுதப் பட்டிருந்தது. அதைக் கண்ட அர்ச்சகர், மறுநாள் பெருமாளுக்குச் சிறப்பு பூஜைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார். மன்னருக்கு வழங்குவதற்குரிய பிரசாதங்களைத் தயாரிக்கப் பொருள்களை வாங்கினார்.
பெரிய பூமாலைகள் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க ஆவன செய்தார்.மாலைப் பொழுது வந்தது, அர்ச்சகருக்குக் கடும் காய்ச்சல் ஏற்பட்டது. அந்தக் காய்ச்சலோடேயே அர்த்த ஜாம பூஜையைச் செய்துவிட்டு வீடு திரும்பினார் அர்ச்சகர். கடும் உடல் வலியாலும் காய்ச்சலாலும் துன்புற்ற அவர், வரதராஜப் பெருமாளிடம் மனமுருகி, வரதராஜா நாளை மன்னர் கோயிலுக்கு வர உள்ளார்.
நான் காய்ச்சல் என்ற காரணத்தால் நாளை வராமல் இருந்தால், நான் தினந்தோறுமே பூஜை செய்யவில்லையோ என்று மன்னர் சந்தேகப்பட வாய்ப்புள்ளது. பகவானே, நீதான் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டியபடியே அசந்து உறங்கிவிட்டார்.
உறங்கிய அர்ச்சகர், அடுத்த நாள் மாலைதான் கண் விழித்தார். மாலைப் பொழுது வந்ததை அறிந்து அலறி அடித்துக் கொண்டு கோயிலை நோக்கி ஓடினார் அர்ச்சகர். திருக்கோயிலிலே மக்கள் கூடி இருப்பதைக் கண்டார் அர்ச்சகர். மன்னர் வந்து விட்டாரா என்று விசாரித்தார் அர்ச்சகர். என்ன இப்படிக் கேட்கிறீர்கள், காலையில் மன்னர் வந்த போது நீங்கள் தானே அவரை முறைப்படி வரவேற்று, அவருக்குப் பெருமாளின் ஆள் உயர மாலையைச் சாற்றி, பெருமாளின் சிறப்புப் பிரசாதங்களை எல்லாம் வழங்கி, நன்கு கௌரவித்து அனுப்பி வைத்தீர்கள் என்றார்கள்.
இதோ மன்னர்கூட உங்களுக்கு வழங்கச் சொல்லி ஒரு பெட்டி நிறைய தங்கக் காசுகளை வைத்து விட்டுப் போயிருக்கிறார் பாருங்கள் என்று ஒரு பெட்டியையும் மக்கள் காட்டினார்கள். நாம் கோயிலுக்கே வராமல் எப்படி மன்னருக்கு இத்தனை மரியாதைகள் நடைபெற்றன என்று சிந்தித்தார். இந்தச் சிந்தனையோடு நீராடி விட்டு, தமது அனுஷ்டானங்களை முடித்துவிட்டு, மாலை பூஜைகளைச் செய்யத் திருக்கோயிலுக்குள்ளே சென்றார் அர்ச்சகர்.
வரதராஜப்பெருமாள் அர்ச்ச கரைப் பார்த்து, “காய்ச்சல் குணமாகி விட்டதா?’’ என்று கேட்டார். அப்போதுதான் தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டது என்ற நினைவே அர்ச்சகருக்கு வந்தது. “ஆஹா, என் நோயைப் போக்கியதோடு இல்லாமல் நோயைப் பற்றிய எண்ணத்தையே பகவான் போக்கிவிட்டானே!’’ என்று அப்போதுதான் உணர்ந்தார் அர்ச்சகர்.
வரதராஜப் பெருமாள், “அர்ச்சகரே, காய்ச்சலோடு நீங்கள் ஏன் சிரமப் பட வேண்டும் என்று கருதி உங்களைப் பகல் முழுவதும் ஓய்வெடுக்க வைத்தேன். உங்கள் வடிவில் நானே வந்து மன்னருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து முடித்துவிட்டேன் என்று கூறினார். “பகவானே, எனக்காக நீ இத்தனையும் செய்ய வேண்டுமா?’’ என்று கேட்டார் அர்ச்சகர். “என்னை அண்டி இருப்போருக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள்’’ என்று கேட்டார் வரதராஜப் பெருமாள். “இந்தப் பெட்டி நிறைய மன்னர் தந்த தங்க நாணயங்கள் உள்ளன, அவை என் பரிசாக உங்களுக்கு வந்தன என்று கருதி நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்றும் கூறினாராம் பெருமாள்.
இப்படித் தன்னை அண்டியிருக்கும் அடியார்களுக்குத் தலைவனாக இருந்து அவர்களைக் காப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். ஸாத்வதர் என்ற சொல், சத்துவ குணமே வடிவெடுத்த திருமால் அடியார் களைக் குறிக்கிறது. அந்த ஸாத்வதர்களுக்குப் பதியாக – தலைவனாக இருப்பதால், திருமால் ஸாத்வதாம்பதி என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 514-வது திருநாமம்.“ஸாத்வதாம் பத்யை நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை ஆபத்பாந்தவராக இருந்து திருமால் காத்தருள்வார்.
——————–
515. ஜீவாய நமஹ(Jeevaaya namaha)
பூமியில் கலியுகம் தொடங்கிய வேளையில், மகாலட்சுமித் தாயார் திருமாலிடம், “சுவாமி, பார்த்தீர்களா, பூமியில் கலியுகம் தொடங்கி விட்டது. மூன்று வித தாபங்களால் நம் குழந்தைகள் துன்புறுகிறார்கள். ஆத்யாத்மிகம் எனப்படும் உடல்ரீதியாக வரும் நோய்கள் போன்ற துன்பங்கள், ஆதிபௌதிகம் எனப்படும் மற்ற உயிர்களால் வரும் துன்பங்கள், ஆதிதைவிகம் எனப்படும் இயற்கைச் சீற்றங்களால் வரும் துன்பங்கள் என மூன்றும் சுட்டெரிக்கத் துன்புறும் நம் குழந்தைகளை உங்களை விட்டால் வேறு யார் காப்பார்கள்”? என்று கேட்டாள்.
அதற்குத் திருமால், “நான் காப்பதற்குத் தயாராக இருக்கிறேனே. ஆனால், என்னைத் தியானிக்கச் சொல். என்னைக் குறித்துத் தவம் புரியச் சொல். நானே கதி என்று என்னைச் சரண் அடையச் சொல். வைகுண்டத்துக்கு வர முடியாவிட்டால், பாற்கடலுக்கு வந்து என்னைத் தரிசிக்கட்டும், அல்லது அவரவர் உள்ளங்களிலேயே நான் இருக்கிறேனே, அங்கிருக்கும் என்னை வழிபடட்டும், காக்கிறேன்’’ என்று பதிலளித்தார்.திருமகளோ, “சுவாமி, கலியுகத்தில் வாழும் மனிதர்களுக்குப் பக்தி, ஞானம், இறைநம்பிக்கை, தவம் அனைத்துமே குறைவு.
அவர்கள் வைகுண்டத்தையும் பாற்கடலையும் நம்புவார்களா என்றே சொல்ல முடியாது. மேலும், இதயத்துக்குள் நீங்கள் இருந்தாலும், உங்களைக் காணவல்ல யோகசக்தி அவர்களிடம் இல்லையே என்றாள். நான் என்ன செய்ய வேண்டும் என்று திருமால் கேட்க, திருமகள், “நீங்கள் விக்கிரக வடிவில் திருக்கோயில்களிலே எழுந்தருள வேண்டும். அதுதான் கலியுகத்தில் உள்ள மக்களைக் காக்க ஒரே வழி’’ என்று கூறினாள். நம்மைக் காக்க எப்படித் திருமால் ராமனாகவும், கண்ணனாகவும், நரசிம்மனாகவும் அவதாரம் செய்தாரோ, அதுபோல், கலியுகத்தில் மூவகை வெப்பங்களில் இருந்தும் நம்மைக் காக்கும் பொருட்டு, திருவரங்கநாதனாக, திருமலையப்பனாக, காஞ்சி வரதராஜனாக இப்படிப் பல வடிவங்களில் கோயில் கொள்வது என்று முடிவெடுத்தார் திருமால்.
முடிவெடுத்தபின் திருமகளிடம் திருமால், “தேவி, இப்போது பிருகு முனிவர் வந்து கொண்டிருக்கிறார். என் லீலைக்குக் கொஞ்சம் நீயும் ஒத்துழைக்க வேண்டும்’’ என்றார். அப்படியே ஆகட்டும் என்றாள் திருமகள். மும்மூர்த்திகளுக்குப் பரீட்சை வைக்க நினைத்த பிருகு முனிவர், திருமாலின் திருமார்பில் உதைக்க, அதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்குப் புறப்பட்டு வந்தாள் மகாலட்சுமி.
மகாலட்சுமியைத் தேடுவதைச் சாக்காக வைத்துக் கொண்டு பூமிக்கு வந்தார் திருமால். திருவேங்கடமலையில் ஸ்ரீநிவாசனாக எழுந்தருளினார். பூமியில் ஓரிடத்தில் கோயில் கொண்டால் போதாது, இன்னும் பல இடங்களில் கோயில் கொள்ள வேண்டும் அல்லவா, அதனால் ஒரு மலை உச்சியில் எழுந்தருளினால் அங்கிருந்த படி இன்னும் எங்கெங்கெல்லாம் கோயில் கொள்ளலாம் என்று கழுகுப் பார்வை போல் பார்த்துத் திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதால்தான், திருவேங்கட மலையை முதலில் தேர்ந்தெடுத்தாராம்.
பிராட்டி பெருமாளிடம், நீங்கள் எடுத்துக் கொள்ளும் திருமேனி கரிய நீருண்ட மேகம் போல் நன்றாகக் கருத்திருக்க வேண்டும். அப்போதுதான் மூவகை வெப்பங்களில் தவிக்கும் மக்களைக் குளிர்வித்து அருள வசதியாக இருக்கும் என்றும் கூறினாளாம். அதனால்தான் கார்மேனியோடு திருமலையில் கோயில் கொண்டு, திருமலையோடு நில்லாமல், மேலும் பல திருத்தலங்களைத் தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் கார்மேனியோடு கோயில் கொண்டு, இன்றளவும் நம்மை அருள்மழையில் நனைத்து அருள்புரிந்து வருகிறார்.
க்ருபே விகதவேலயா க்ருத ஸமக்ரபோஷைஸ் த்வயா
கலிஜ்வலந துர்கதே ஜகதி காளமேகாயிதம்
வ்ருஷ க்ஷிதி தராதிஷு ஸ்திதிபதேஷு ஸாநுப்லவைர்
வ்ருஷாதிபதிவிக்ரஹைர் வ்யபகதாகிலாவக்ரஹை:
என்று இக்கருத்தை ஸ்வாமி வேதாந்த தேசிகன் “தயா சதகம்’’ என்ற துதியிலே தெரிவிக்கிறார்.இப்படிக் கலி நாளுக்கு இரங்கிக் கல்லிலே இறங்கி நிலையாகக் கோயிலில் நின்று நம்மை வாழ்விப்பதால், திருமால் ஜீவ என்று அழைக்கப்படுகிறார். ஜீவ என்றால் வாழ வைப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 515-வது திருநாமம்.“ஜீவாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை, அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்துத் தனக்குத் தொண்டு செய்ய வைத்து வாழ்வை அருள்வார்.
—————————-
516. விநயித்ரே நமஹ (Vinayithrey namaha)
இப்படி அடியார்களின் கோஷ்டி பசியால் வாடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு வெள்ளி கங்காளத்தோடு ஒரு சிறுவன் அங்கே வந்தான். அந்தச் சிறுவன் தன் உடலெங்கும் பன்னிரண்டு திருமண் காப்புகளை அணிந்திருந்தான். அவன் நடாதூர் அம்மாளை வணங்கி விட்டுப் பணிவோடு நின்றான்.
யார் அப்பா நீ என்று விசாரித்தார் நடாதூர் அம்மாள். சுவாமி நான் திருவேங்கட மலையில் இருந்து வருகிறேன். திருமலையில் பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வரும் ராமாநுஜரின் சீடரான அனந்தாழ்வானின் சீடன் நான். நீங்கள் இத்தனை பேரும் பசியோடு வருவீர்கள் என்பதால் அனந்தாழ்வான் உங்களுக்கு உணவளித்துவிட்டு வரச் சொன்னார் என்று பதில் அளித்தான் சிறுவன்.
நாங்கள் வருகிறோம் என்று அனந்தாழ்வானுக்குச் செய்தி அனுப்பவே இல்லையே அவர் எப்படி அறிந்துகொண்டு உணவு கொடுத்து அனுப்பினார் என்று நடாதூர் அம்மாள் வினவ, அதெல்லாம் எனக்குத் தெரியாது சுவாமி. எனது குரு அனுப்பி வைத்தார், அடியேன் உணவு கொண்டு வந்தேன். அவ்வளவு தான் என்று விடையளித்தான் சிறுவன்.
சற்று யோசித்த நடாதூர் அம்மாளுக்குச் சிறுவன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவன் உண்மையிலேயே அனந்தாழ்வானின் சீடன்தானா, அல்லது தூய்மையற்ற, கெடுதல் விளைவிக்கக்கூடிய உணவை வேறு யாராவது இவன் மூலம் கொடுத்து, அதை அடியார்கள் எல்லோரும் சாப்பிட்டுப் பெரும் தீங்கு நேர்ந்தால் என்ன செய்வது என்று பலவாறு சிந்திக்கத் தொடங்கினார் நடாதூர் அம்மாள்.
சிறுவனைப் பார்த்து, நீ அனந்தாழ்வானின் சீடன் என்றால், உன் குருவை வணங்கும் விதமாக நீ தினமும் கூறும் தனியன் சுலோகத்தைச் சொல் என்றார் நடாதூர் அம்மாள். சற்றும் தயங்காமல்,
அகிலாத்ம குணாவாஸம் அஞ்ஞான திமிராபஹம்
ஆச்ரிதானாம் ஸுசரணம் வந்தே அனந்தார்ய தேசிகம்
– என்று ஸ்லோகத்தைச் சொல்லி, இதுவே அனந்தாழ்வானின் தனியன் என்றான் சிறுவன்.
அதன்பின் அவன்மீது நம்பிக்கை கொண்ட நடாதூர் அம்மாள், அவன் கொண்டு வந்த வெள்ளி கங்காளத்தில் உள்ள உணவைத் தன்னுடன் வந்த அடியார்க்குப் பகிர்ந்தளித்துத் தாமும் உண்டார். அவர்கள் உண்டபின், கங்காளத்தை நீங்களே மலைக்கு மேல் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டுச் சிறுவன் சென்று விட்டான்.
கங்களாத்தோடு நடாதூர் அம்மாளும் சீடர்களும் திருமலை மீது ஏறிச் சென்றார்கள். அதே நேரம் திருவேங்கடமலையில் ஒரே கூச்சல், குழப்பம். திருமலையப்பனின் வெள்ளிக் கங்காளத்தைக் காணவில்லை என்று ஒரே பரபரப்பு. கங்காளத்தோடு வரும் நடாதூர் அம்மாள் கோஷ்டியைப் பார்த்தவாறே, அனந்தாழ்வான் அவரிடம் விரைந்தோடி வந்து, இந்த கங்காளம் உங்களிடம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டார். நடந்தவற்றை எல்லாம் விளக்கினார் நடாதூர் அம்மாள்.
நான் எந்த ஒரு சீடனையும் அனுப்பவில்லை, நீங்கள் சொல்வது போல் என்னைக் குறித்துத் தனியனும் கிடையாது, அப்படி ஒரு சீடனும் எனக்குக் கிடையாது என்றார் அனந்தாழ்வான். அப்படியானால் இவை அனைத்தும் மலையப்பனின் லீலை. ஆஹா அனந்தாழ்வானே உங்கள் சீடனாக அந்த பகவானே வந்து எங்களுக்கு அருள்புரிந்து எங்கள் பசியைப் போக்கி உள்ளான், என்றார்.
இதைக் கேட்டவாறே மலையப்பனிடம் ஓடிய அனந்தாழ்வான், இறைவா என்னைக் குறித்த ஒரு தனியன் சுலோகத்தை நீயே இயற்றி உன் திருவாயால் சொன்னாயா என்று உருகினார். அதற்குப் பதில் அளித்த மலையப்பன், என் பக்தர்களை ராஜகுமாரர்கள் போல் வைத்துப் பாதுகாப்பவன் நான். ராஜகுமாரன் பசியோடு இருப்பதை ராஜா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாரா அதனால்தான் கங்காளத்தோடு நானே ஓடினேன் என்றார் மலையப்பன்.
இப்படி ராஜகுமாரர்களைப் போல் தனது அடியார்களைக் கருதி அவர்களைப் பேணிக் காப்பதால் வினயிதா என்று திருமால் அழைக்கப்படுகிறார். வினயிதா என்றால் பேணிக்காப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 516-வது திருநாமம்.வினயித்ரே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களை ராஜகுமாரர்கள் போல் வாழவைத்து மலையப்பன் காத்தருள்வார்.
——————
517. ஸாக்ஷிணே நமஹ (Saakshiney namaha)
ஓர் ஊரில் ஓர் அண்ணனும் தங்கையும் வாழ்ந்துவந்தார்கள். இருவரும் சகோதர-சகோதரி பாசத்துக்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ்ந்தார்கள். தங்கைக்குத் திருமண வயது வந்தவாறே அவளுக்கு ஏற்ற மணமகனைத் தேடும் பணியில் அண்ணன் ஈடுபட்டார். ஆனால் தங்கையோ வேறொரு நபரை விரும்பினாள், அதைத் தன் அண்ணனிடம் சொல்லவும் தயங்கினாள். இந்நிலையில் அண்ணன் தனது தங்கைக்குத் திருமண ஏற்பாடுகளை எல்லாம் செய்து கொண்டிருக்க, அண்ணனுக்குத் தெரியாமல் தான் விரும்பிய அந்த நபரை மணந்து கொள்ள ஊரை விட்டுச் சென்று விட்டாள் தங்கை. விரும்பியவரை மணக்கவும் செய்தாள். தங்கையின் செயலால் அண்ணன் வேதனையுற்றாலும் கூட, தன்னைத் தேற்றிக் கொண்டு அவள் இருப்பிடத்தை அறிந்து அவளைக் காணச் சென்றார் அண்ணன்.
ஆனால் அங்கே போய்ப் பார்க்கையில், தங்கை தேர்ந்தெடுத்த வாழ்க்கை சிறப்பானதாக இல்லை என்பதை அறிந்தார் அண்ணன். அவளது கணவரின் வியாபாரத்தில் பல சிக்கல்களும் கடன் தொல்லைகளும் இருந்தன. இருவரும் கடுந்துயரத்தில் இருப்பதை அறிந்துகொண்டார் அண்ணன். தங்கையின் உயிருக்கும் அவளது கணவரின் உயிருக்கும் சிலரால் ஆபத்து இருப்பதையும் உணர்ந்தார் அண்ணன்.
இந்தச் சூழலில்தான் நேரடியாகத் தங்கைக்கு உதவினால் அது தங்கைக்குக் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துமோ என்று சிந்தித்தார் அண்ணன். தங்கை நன்றாக வாழவேண்டும் என்பது தானே நமது லட்சியம். நாம் செய்கிறோம் என்பதை வெளிக்காட்டாமல் தங்கையையும் அவள் குடும்பத்தையும் காக்கலாமே என்று தீர்மானித்தார் அண்ணன்.தங்கையை யாரேனும் தாக்க வந்தால் மறைமுகமாக அண்ணன் அவர்களுடன் சண்டையிட்டு வீழ்த்தினார். தங்கைக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் மறைமுகமாக வழக்குரைஞரை வைத்து வாதாடி வெற்றிபெற்றுத் தந்தார் அண்ணன். இப்படிப் பல வகைகளில் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கையைக் காப்பாற்றி வந்தார் அண்ணன்.
எல்லாம் தானே நடக்கிறது என்று நினைத்திருந்த தங்கை, ஒரு சூழலில் யாரோ ஒருவர் நமக்கே தெரியாமல் நம்மிடம் எதையுமே எதிர்பாராமல் நமக்குத் துணைநிற்கிறார் என்று புரிந்துகொண்டாள். இப்படி உதவி செய்யக் கூடியவர் என் அண்ணனாகத் தான் இருக்க வேண்டும் என்று சிந்தித்து, அண்ணா என்று அழைத்தாள் தங்கை. அண்ணன் எதிரே வந்தார். தங்கை தனது கண்ணீரால் அண்ணனின் பாதங்களைக் கழுவினாள். அண்ணனும் அவளை ஏற்றார்.
ஸஹஸ்ரநாமத்தில் எதற்காகத் திரைக்கதை வந்தது என்று உங்களுக்குத் தோன்றலாம். இது திரைக்கதை அன்று, நம் வாழ்க்கைக் கதை. அந்தத் தங்கையை அண்ணன் வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்தது போல் இறைவன் நமக்குப் பிறவியும் ஞானமும் தந்து அந்த அறிவை வளர்க்கவும் செய்கிறார். தங்கையின் திருமணத்துக்காக அண்ணன் பல முயற்சிகள் எடுத்ததுபோலே நாம் முக்தி அடைவதற்காக ஒவ்வொரு நொடியும் இறைவன் முயல்கிறான்.
ஆனால் தங்கை தனது வாழ்வைத் தானே தேர்ந்தெடுக்க முடிவெடுத்துப் பிரிந்து சென்றது போல், நாமும் இறைவனின் கையை எதிர்பாராமல் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் என்ற செருக்கோடு வாழ்கிறோம். ஆனாலும் தங்கையை அண்ணன் தேடிச் சென்றது போல், நம்மை விடாமல் பின்தொடர்ந்து வருகிறான் இறைவன்.ஒரு பிறவியில் உள்ள அண்ணன்-தங்கை உறவுக்கே இவ்வளவு பாசம் என்றால், என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நமக்கு அனைத்து வித உறவுமாகவும் இருக்கும் இறைவன் நம்மீது எவ்வளவு அன்பு கொண்டிருப்பான்.
தங்கைக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் மறைமுகமாக அண்ணன் காப்பாற்றியது போல் நமக்கு ஏற்படும் எத்தனையோ ஆபத்துகளில் இருந்து தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் காத்துக்கொண்டே இருக்கிறான். ஆனால் என்றோ ஒரு நாள் இறைவன் தான் நமக்கு இத்தனை பேருதவிகளும் செய்தான் என்ற புரிதல் ஏற்படும் போது, இறைவா என்று அவன் திருவடிகளை நாம் பற்றினால், நம்மை நிச்சயம் அங்கீகரித்து ஏற்று முக்தி என்ற பேரின்பப் பெருவாழ்வைத் தந்தருள்வான் என்பதில் ஐயமில்லை.
இப்படி நம்மைக் காக்கவேண்டும் என்பதற்காக எந்நேரமும் நம்மைக் கண்காணித்துக்கொண்டே இருப்பதால் திருமால் ஸாக்ஷீ என்று அழைக்கப்படுகிறார். ஸாக்ஷீ என்றால் அனைவரையும் கண்காணிப்பவர் என்று பொருள். பிரபஞ்சத்தின் மிகப்பெரிய கண்காணிப்புப் புகைப்படக் கருவியாக விளங்கும் திருமாலை ஸாக்ஷீ என்று ஸஹஸ்ரநாமத்தின் 517-வது திருநாமம் சொல்கிறது.ஸாக்ஷிணே நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை எப்போதும் திருமால் துணைநின்று காத்தருள்வார்.
—————————–
518. முகுந்தாய நமஹ (Mukundhaaya namaha)
நம்மாழ்வார் முக்தி அடையும் தருணம் வந்தது. அழகர் மலையில் எழுந்தருளியிருக்கும் கள்ளழகர் நம்மாழ்வார் முன்னே தோன்றி, நீங்கள் இந்த சரீரத்துடன் வைகுண்டம் வாருங்கள் என்று அழைத்தார். இறைவா என்ன சொல்கிறாய் இந்த சரீரத்தில் பற்று வைக்கக் கூடாது என்று தேறி அடியேன் முக்திக்கு வரப் பார்க்கிறேன். நீயோ இந்த சரீரத்துடன் வைகுண்டத்துக்கு வரச் சொல்கிறாயே என்று கேட்டார் நம்மாழ்வார்.
அதற்கு கள்ளழகர், ஆழ்வீர் உடல் என்பது தள்ளத் தக்கது தான். அதில் பற்று வைக்கக் கூடாதுதான். ஆனால் அந்தச் சட்டம் மனிதர்களுக்குத் தான் பொருந்தும். நான் இறைவன். எனது அடியாரான உங்களது திருமேனியில் எனக்கு மிகுந்த அன்பு உண்டு. மற்றைய மனிதர்களின் உடல் போல் சாதாரண உணவுப் பண்டங்களை உண்டு வளர்ந்த உடல் அன்றே உங்களது திருமேனி. என்னையே உண்ணும் சோறாகவும் பருகும் நீராகவும் தின்னும் வெற்றிலையாகவும் உட்கொண்ட தெய்வீகத் திருமேனி ஆயிற்றே. அதனால் உங்களைப் போன்ற மகான்களின் உடலை நான் வெறுத்துத் தள்ள மாட்டேன், விரும்பி அனுபவிப்பேன் என்றார் அழகர்.
இப்படித் தனது திருமேனியில் திருமால் செலுத்திய அன்பை நம்மாழ்வார் திருவாய்மொழியில்,
திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண்திருவேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே
– என்று பாடுகிறார். திருமாலிருஞ்சோலை என்னும் அழகர் மலையை விடவும், திருப்பாற்கடலை விடவும் நம்மாழ்வாரின் தலையில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார் திருமால். வைகுண்ட லோகத்தை விடவும், திருவேங்கட மலையை விடவும் நம்மாழ்வாரின் திருமேனியை அதிகமாக விரும்புகிறார் திருமால். இன்னதென்று சொல்ல முடியாதபடி நம்மாழ்வாரின் உயிர், மனம், மொழி, மெய் ஆகியவற்றை விரும்புகிறார் திருமால்.
அதனால் ஆழ்வாரை ஒருநொடியும் பிரியாமல் அவரோடேயே திருமால் திகழ்கிறார் என்பது பாசுரத்தின் கருத்து. இந்நிலையில் நம்மாழ்வார் திருமாலுக்கு அறிவுரை சொன்னார். இறைவா நீ தானே சாஸ்திரங்களில் சரீரத்தை விட்டு விட்டுத் தான் முக்தி அடைய முடியும் என்று விதித்திருக்கிறாய். நீ விதித்த விதியை நீயே மீறிக் கெட்ட பெயர் வாங்கிக்கொள்ளாதே என்றெல்லாம் சொன்னார் நம்மாழ்வார்.
அதற்கு திருமால், தலையிலே வாசனைக்காக வேர் சூடிக்கொள்ளும் பெண்கள் அந்த வேரில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணையும் சேர்த்து அணிவார்கள் தெரியுமா வேருடன் மண்பற்று சேர்ந்திருந்தால் தானே முழுமையான நறுமணம் இருக்கும் அவ்வாறே உங்களைப் போன்ற ஞானிகளின் சரீரமும் ஏற்றம் மிக்கது. அந்த சரீரத்தோடு உங்களை ஏற்றுக் கொண்டால்தான் நான் பரம ரசிகன் என்று அர்த்தம் என்றார்.
என் மீது உனக்கு இவ்வளவு அன்பு இருக்கிறது என்றால் ஏன் இத்தனை நாள்கள் நான் பிரார்த்தித்தும் எனக்கு முக்தி அளிக்காதிருந்தாய் என்று கேட்டார் நம்மாழ்வார். அதற்கு அழகர், நீங்கள் முதல் பாட்டு பாடியதுமே நான் முக்தி அளித்திருந்தால், நான்கு வேத சாரமான நான்கு பிரபந்தங்கள் உங்கள் திருவாயில் இருந்து எப்படித் தோன்றியிருக்கும் உங்களைக் கொண்டு உலகைத் திருத்தவே இத்தனை காலம் உங்களை உலகில் வைத்தேன் என்று விடையளித்தார்.
அப்படி என்னைக் கொண்டு உலகை நீ திருத்த நினைத்தால், நான் மற்றவர்க்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும். எனவே தள்ளத் தக்க எனது உடலை விட்டு விட்டுத் தான் உன்னிடம் வருவேன் என்றார் நம்மாழ்வார். அதைத் திருமாலும் ஏற்று நம்மாழ்வாருக்கு முக்தி அளிக்க,
சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரை கையெடுத்து ஆடின
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய என்
அப்பன்வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே
– என்று பாடியபடி நம்மாழ்வாரை சரீரத்தை விட்டு வைகுண்டலோகத்தை அடைந்தார்.
முக்தியை விரும்பித் தன் திருவடிகளைத் தஞ்சமாகப் பற்றிய நம்மாழ்வாரைப் போன்ற அடியார்களுக்கு முக்தி அளிப்பதால், திருமால் முகுந்த என்று அழைக்கப்படுகிறார். முகுந்த என்றால் முக்தி அளிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 518-வது திருநாமம்.முகுந்தாய நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்கு வைகுண்டப் பெருவாழ்வைத் திருமால் தந்தருள்வார்.
————————-
519. அமித விக்ரமாய நமஹ (Amitha Vikramaaya namaha)
ராவணனின் தாயான கைகசிக்குக் கும்பீநசி என்றொரு தங்கை இருந்தாள். அவளும் ராவணனின் தந்தையான விச்ரவஸ் முனிவரையே மணந்தாள். கும்பீநசிக்கும் விச்ரவஸ்ஸுக்கும் பிறந்த மகன் கரன் என்ற அரக்கன். கரன் ராவணனுக்குத் தம்பி முறை உறவினன்.தன் தங்கை சூர்ப்பணகையைத் தண்டகாரண்யத்தில் உள்ள ஜனஸ்தானம் என்னும் பகுதியில் வசிக்கச் செய்த ராவணன், அவளுக்குப் பாதுகாப்பாகக் கரனை நியமித்து வைத்தான். சூர்ப்பணகை கட்டளை இட்டபடி நடக்க வேண்டும் என்று கரனுக்கு உத்தரவிட்டிருந்தான் ராவணன். அதன்படி சூர்ப்பணகையின் காவலனாக ஜனஸ்தானத்தில் பதினான்காயிரம் அரக்கர்களோடு வசித்துவந்தான் கரன்.
ஒருநாள் திடீரெனக் காதும் மூக்கும் அறுபட்ட நிலையில் கரனிடம் ஓடி வந்தாள் சூர்ப்பணகை. என்ன ஆயிற்று என்று பதறிப் போய்க் கேட்டான் கரன். அதற்கு சூர்ப்பணகை, வனத்துக்கு வந்த இரண்டு மனிதர்களோடு ஒரு கட்டழகி நின்றிருந்தாள். அவளை ராவணனுக்காக நான் எடுத்துச் செல்ல முயன்றேன். அப்போது அவர்கள் என்னை இப்படிச் செய்துவிட்டார்கள் என்று கூறினாள்.
அதைக் கேட்டுக் கடும் கோபம் கொண்ட கரன் போருக்கு எழுந்தான். அவனிடம் இருந்த பதினான்கு அரக்க வீரர்கள் அவனுக்கு முன் எழுந்து, இதற்காக நீங்கள் போக வேண்டாம் இப்பணியை எங்களிடம் தாருங்கள் அந்த மனிதர்களை நாங்கள் அழித்துவிட்டு வருகிறோம் என்று சொல்லிப் புறப்பட்டார்கள்.அந்தப் பதினான்கு பேரும் ராமனுடன் போரிட்டு மாண்டுபோனார்கள். இந்தச் செய்தி கரனின் காதுக்கு எட்டியவாறே, தூஷணன் திரிசிரஸ் உள்ளிட்ட தனது சேனாபதிகளோடு கூடிய பெரும் சேனையைத் திரட்டிக் கொண்டு ராமனை எதிர்த்துப் போர் புரியப் புறப்பட்டு வந்தான் கரன்.
தீய சகுனங்கள் தென்படுவதாக அகம்பனன் என்ற அரக்கன் எச்சரித்த போதும், அதைப் புறக்கணித்து விட்டுப் பதினான்காயிரம் அரக்கர்களை உள்ளடக்கிய மாபெரும் சேனையோடு ராமனைத் தாக்க அவன் இருப்பிடத்துக்கு வந்தான் கரன்.
அரக்கர் சேனை வருவதைப் பார்த்த ராமன், லக்ஷ்மணனைச் சீதைக்குக் காவலாக வைத்துவிட்டுத் தனி ஒருவனாகப் போருக்குப் புறப்பட்டான். சிங்கத்தைப் பல யானைகள் சூழ்வது போல் அரக்கர் சேனை ராமனைச் சூழ்ந்துகொண்டது. அரக்கர் சேனை தன்னைச்சுற்றி வளைத்தவாறே, ராமன் தனது வில்லை வளைத்தான்.அந்த நொடி முதல் ராமனின் வில்லில் இருந்து அம்புமழை புறப்படத் தொடங்கியது.
வானத்தன கடலின்புற வயலத்தன மதிசூழ்
மீனத்தன மிளிர்குண்டல வதனத்தன மிடல்வெங்
கானத்தன மலையத்தன திசைமுற்றிய கரியின்
தானத்தன காகுத்தன சரமுந்திய சிரமே
மேலுள்ள வரிகள் போல் அரக்கர்களின் தலைகள் வானிலும் கடலிலும் நட்சத்திர மண்டலத்திலும் காடுகளிலும் மலைகளிலும் அஷ்ட திக் கஜங்களிடமும் போய் விழும்படி ராமன் பாணங்கள் வீசி, தனி ஒருவனாக அத்தனை அரக்கர்களையும் அழித்தொழித்தான்.கடைசியில் கரன் ஒருவன் மட்டுமே மீதம் இருந்தான். அவன் மாயப்போர் புரிந்து தனது பாணங்களால் ராமனின் திருமேனியையே மறைத் விட்டான். ஆனால் ராமனோ தளராமல், தன் கையைப் பின்னே நீட்டினான். ராமன் வருணனிடம் கொடுத்து வைத்திருந்த விஷ்ணு தனுஸ்சை வருணன் ராமனிடம் கொண்டு வந்து சமர்ப்பித்தான்.
அதில் பாணத்தைப் பூட்டிக் கரனைத் தாக்கினான் ராமன். ராவணனின் வலக்கரம் அறுந்து கீழே விழுவது போல் கரன் கீழே விழுந்து மாண்டு போனான். வெற்றி வாகை சூடியவனாக, விஜயராகவனாக ராமன் திரும்ப வர, சீதாதேவி ஓடிப்போய் ராமனை ஆரத் தழுவி அவனது வெற்றியைக் கொண்டாடினாள்.இப்படி ஆயிரக்கணக்கில் அரக்கர்கள் வந்தாலும் தனி ஒருவனாக இருந்து அவர்களை அழிக்கும் அளவுக்கு, அந்த வீரத்தை நாம் ரசித்து, படித்து, கேட்டு, சொல்லி, மகிழ்ந்து கொண்டாடும் அளவுக்கு, எல்லையில்லாத சக்தி படைத்தவராகத் திருமால் விளங்குவதால், அவர் அமிதவிக்ரம என்று அழைக்கப்படுகிறார். அமித என்றால் அளவில்லாத, விக்ரம என்றால் சக்தி. அமிதவிக்ரம என்றால் அளவில்லாத சக்தி படைத்தவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 519-வது திருநாமம். அமிதவிக்ரமாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குத் திருமால் சக்தி கொடுத்து அருள்வார்.
————————–
520. அம்போநிதயே நமஹ (Ambho Nidhaye namaha)
(திருநாமங்கள் 520-523 பாதாள லோகத்தில் இருந்தபடி மொத்தப் பிரபஞ்சத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் கூர்ம மூர்த்தியின் பெருமைகள்) வீர சிகாமணி பல்லவராயன் என்ற மன்னன், ஸ்ரீபராசர பட்டர் என்ற ஆசார்யரை வந்து அடிபணிந்தான். சுவாமி, நான் ஒரு மன்னனாக இருக்கிறேன். பல ராஜ்ஜியப் பணிகளைக் கவனிக்க வேண்டியுள்ளது. இயந்திரத்தனமாக வாழும் அடியேனுக்கு இறைவனை நினைக்கவே நேரம் இல்லை.
இறைவனை நான் நினைப்பதற்கோ, இறைவன் என்னைக் காப்பதற்கோ எளிமையான வழி இருந்தால் சொல்லுங்கள் என்று வேண்டினான் பல்லவராயன். அதற்குப் பராசர பட்டர், கடற்கரை வெளியை நினைத்திரும் என்று பதில் அளித்தார். பராசர பட்டரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த பல்லவராயன், கடற்கரையை நினைப்பதால் என்ன பலன் என்று கேட்டான். அப்போது பராசர பட்டர் கீழ்க்காணும் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்.
ராமனும் லட்சுமணனும் வானரச் சேனையோடு இலங்கை நோக்கிப் புறப்பட்டுச் சேதுக்கரையை வந்தடைந்தார்கள். இனி கடலைக் கடப்பதற்கு என்ன வழி என்பதை நாளை சிந்திப்போம் என்று முடிவெடுத்து விட்டு அன்றிரவு எல்லோரும் உறங்கச் சென்று விட்டார்கள்.அச்சமயம் வானர வீரர்கள் ராம லக்ஷ்மணர்களிடம், நீங்கள் இருவரும் நன்றாக உறங்குங்கள். நாங்கள் விழித்திருந்து இரவு முழுவதும் காவல் காக்கிறோம் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் நடந்தது என்னவென்றால், நடந்து வந்த களைப்பில் மொத்த வானரச் சேனையும் உறங்கி விட்டது. அத்தனை பேரும் உறங்கினாலும் கூட, இரவு முழுவதும் ராமனும் லக்ஷ்மணனும் கண் விழித்திருந்து வில்லும் கையுமாக வானரச் சேனையைச் சுற்றிச் சுற்றி வந்து எழுபது வெள்ளம் வானரச் சேனையையும் பாதுகாத்தார்கள்.
அனுமன் நடுவில் சற்றே விழித்துக் கொண்டு ராமனிடம், நீங்கள் ஏன் இப்படி விழித்திருந்து சிரமப்பட வேண்டும் என்று கேட்டார். அதற்கு ராமன், எப்போது இந்த வானரச் சேனை என்னை நம்பி வந்து விட்டதோ இனி அவர்களைக் காக்கும் முழு பொறுப்பும் என்னுடையது என்று பதில் அளித்தான்.இச்சம்பவத்தை நினைவுகூர்ந்த பராசர பட்டர், பல்லவராயனிடம், அந்தச் சேதுக் கடற்கரையைத் தான் நினைக்குமாறு உன்னை அறிவுறுத்தினேன். வானரர்கள் தாங்கள் ராமனைப் பாதுகாக்கப் போவதாக நினைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் உறங்கிய போதும் அவர்களைக் காத்து நின்றவன் ராமன் என்பதே உண்மை. அதுபோலத் தான் நீயும் விழித்திருக்கும் நேரத்தில் எதையேனும் நினைத்து இறைவனின் அருளை நாடலாம் என நினைக்கிறாய். ஆனால் நீ உறங்கிக் கொண்டிருக்கும் போது கூட இறைவன் உன் கூடவே தான் இருக்கிறான், உன்னைக் காத்துக் கொண்டு தான் இருக்கிறான்.
மேலும், ராஜ்ஜியப் பணிகள் நிறைய இருப்பதாகச் சொன்னாயே. அவற்றுள் எதையுமே நீ செய்யவில்லை. உன்னைக் கருவியாகக் கொண்டு திருவரங்கநாதன் தான் அத்தனையும் செய்து கொண்டிருக்கிறான். உனக்கு மேல் ஒரு சக்கரவர்த்தி இருந்து உன்னைத் தாங்குகிறார். அவனுக்கு மேல் இந்திரன் இருந்து கொண்டு மூவுலகை ஆள்கிறான். அந்த இந்திரனுக்கும் மேல் பிரம்மா இருந்து கொண்டு இந்திரனுக்கு ஆணைகள் இடுகிறார்.
அந்த பிரம்மாவோடு சேர்த்துப் பதினான்கு உலகங்களையும் ஆதிசேஷன் தாங்குகிறார் என்று சாஸ்திரங்கள் மூலம் நாம் அறிகிறோம்.அப்படியானால் ஆதிசேஷன் தாங்கும் பிரபஞ்சத்தில் பூலோகத்தில் பாரததேசத்தில் பேரரசனுக்கு உட்பட்ட உனது சிற்றரசு என்பது எம்மாத்திரம் என்று நினைத்துப் பார். உன் கடமையைச் செய்யாமல் சோம்பேறியாக இருக்கச் சொல்லவில்லை. ஆனால் நான் பெரியவன் என்ற கர்வம் மட்டும் வந்துவிடவே கூடாது. அனைத்தையும் தாங்குபவர் ஆதிசேஷன் என்றால், அந்த ஆதிசேஷனுக்கும் கீழே திருமால் கூர்ம மூர்த்தியாக இருந்து, ஆதிசேஷனோடு சேர்த்து மொத்தப் பிரபஞ்சத்தையும் இயக்கி வருகிறார் தெரியுமா. அவரால் தாங்கப்பட்டு நீ செயல்படுகிறாய் என்பதைப் புரிந்துகொள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
இன்றும் பெருமாள் கோவில்களில் உள்ள சேஷவாகனங்களின் கீழே கூர்ம மூர்த்தி ஆமை வடிவில் எழுந்தருளி இருப்பதைத் தரிசிக்கலாம். இப்படிப் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திக் கொண்டு ஆதிசேஷனோடு உலகங்களைத் தாங்கும் கூர்ம மூர்த்தி அம்போநிதி என்று அழைக்கப்படுகிறார். அம்பஸ் என்றால் தண்ணீர், அதாவது பாதாளஜலம். நிதி என்றால் இவ்விடத்தில் தன்னை இருத்தியவர் என்று பொருள். அம்போநிதி என்றால் பாதாள ஜலத்தில் தன்னை இருத்திய கூர்ம மூர்த்தி என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 520-வது திருநாமம்.
`அம்போநிதயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.
————————
521. அனந்தாத்மனே நமஹ (Ananthaathmaney namaha)
1000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த ஆதிசேஷனின் அம்சமான ராமாநுஜர், அனைவரும் இறைவனை அடையலாம் என்ற உயர்ந்த நெறியை உலகுக்கு உணர்த்தினார். ராமாநுஜர் திவ்ய தேச யாத்திரைக்குச் சென்ற போது, தமிழகத்தின் தென்கோடியில் உள்ள திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தை அடைந்தார்.
அந்தத் திருக்குறுங்குடியில் கோவில் கொண்டுள்ள திருக்குறுங்குடி நம்பிபெருமாள், ராமாநுஜரைத் தன் திருக்கோவிலுக்கு வரவேற்று, அவரைப் பார்த்து, ராமாநுஜரே, நான் பல அவதாரங்கள் எடுத்து, உபதேசங்கள் செய்து, நடந்து காட்டி, பல முயற்சிகளை எடுத்தும் மக்கள் யாரும் திருந்துவதாகத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வந்து பூமியில் அவதாரம் செய்து வெகு விரைவில் எல்லாரையும் திருத்திவிட்டீர்களே, உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டார்.
பகவானே, நீ அறியாததில்லை. எல்லாம் அறிந்தும் லீலைக்காக என்னிடம் நீ கேட்கிறாய். அப்படியானால் உன் லீலையில் நானும் பங்கேற்கிறேன். ரகசியத்தை அறிய வேண்டும் என்றால் இப்படிப் போகிற போக்கில் கேட்கலாமா. எனக்கு ஆசாரியன் என்ற ஸ்தானத்தைத் தந்து விட்டு நீ சிஷ்யனாக அமர்ந்துகொண்டால், அந்த ரகசியத்தைச் சொல்கிறேன் என்று விடையளித்தார் ராமாநுஜர்.
உடனே திருக்குறுங்குடி நம்பி ஆசார்ய சிம்மாசனத்தை ராமாநுஜருக்கு அளித்தார். தான் சிஷ்யனாகக் கீழே நின்று கொண்டார். தனது ஆசார்யனான பெரிய நம்பிகள் அந்த ஆசனத்தில் அமர்ந்திருப்பதாக எண்ணி அந்த ஆசனத்தை விழுந்து வணங்கினார் ராமாநுஜர். அதன்பின் தான் அந்த ஆசனத்தில் பணிவோடு ஏறி அமர்ந்து கொண்டார். பகவானே, இப்போது அதே கேள்வியைக் கேள், பதில் சொல்கிறேன் என்றார் ராமாநுஜர். திருக்குறுங்குடி நம்பியும் கேட்க, திருமந்திரம் என்னும் எட்டெழுத்து மந்திரத்தையும், த்வயம் எனப்படும் இரண்டு வரிகள் கொண்ட மந்திரத்தையும் ஆசார்ய ஸ்தானத்தில் இருந்தபடிப் பெருமாளுக்கு ராமாநுஜர் உபதேசம் செய்தார். அதைத் தொடர்ந்து ராமாநுஜர், இந்த இரண்டு மந்திரங்களையும் உபதேசம் செய்து தான் மக்களைத் திருத்தினேன் என்று பெருமாளிடம் கூறினார்.
நான் இதைச் சொல்லிப் பார்த்தேன், ஆனால் மக்கள் திருந்தவில்லையே என்று பெருமாள் கேட்க, ராமாநுஜர், பகவானே, நீ சொல்வதற்கும் அடியேன் சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது. நீ பெரியவன் என்பது தான் உண்மை. ஆனால் நீயே உன் வாயால் நான் பெரியவன் என்று சொன்னால் அதை இந்தக் கலியுக மக்கள் ஏற்க மாட்டார்கள். நான் உபதேசிக்கும் போது, அவன் பெரியவன் என்று உன்னைப் பற்றிச் சொன்ன போது மக்கள் ஏற்று விட்டார்கள். தானே தன் பெருமையைப் பேசுவதை விட, வேறொரு நபர் பேசுவது தானே பொருத்தமாக இருக்கும் என்று விளக்கினார்.
ஆஹா என்று ராமாநுஜரின் விளக்கத்தைப் பாராட்டினார் திருக்குறுங்குடி நம்பி. அந்தப் பெருமாளைத் தனது சிஷ்யராக அங்கீகரித்த ராமாநுஜர், வைஷ்ணவ நம்பி என்ற திருநாமத்தையும் அந்தப் பெருமாளுக்கு வழங்கினார் என்பது வரலாறு.எல்லாம் ஆனபின் சிம்மாசனத்தில் இருந்து கீழே இறங்கிய ராமாநுஜர், இறைவா இப்போது உனக்குத் திருப்தி ஏற்பட்டிருக்கும் என நம்புகிறேன். என்னை ஆசார்ய சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்க்க நினைத்தாய். உன் ஆசைக்காக அடியேனும் செய்தேன். இனி என் கருத்தைச் சொல்கிறேன் கேள். எட்டெழுத்து மந்திரம், த்வய மந்திரம் ஆகியவற்றை உலகுக்கு உரைத்தவன் நீ. உபதேசம் செய்வதற்குரிய ஞானத்தை அடியேனுக்குத் தந்தவன் நீ.
அடியேனை ஒரு கருவியாகப் பயன்படுத்தி அடியேன் மூலம் பல செயல்களை நிகழ்த்தியவன் நீ. உள்ளிருந்து நீ கொடுத்த சக்தி, ஞானம் உள்ளிட்டவற்றைக் கொண்டு நீயே எல்லாம் நிகழ்த்தி விட்டு, ஏதோ நானே செய்தது போல் என்னைக் கொண்டாடுகிறாயே, உன் எளிமையையும் லீலையையும் என்னவென்று சொல்வேன் என்று நம்பியிடம் சொன்னார்.
அதற்கு நம்பி, அப்படியில்லை, நீங்களே ஆதிசேஷன் தானே. உங்களுக்கு இல்லாத ஆற்றலா என்று ராமாநுஜரிடம் கேட்டார். ராமாநுஜரோ, பகவானே சரியான உதாரணம் சொன்னாய். நான் ஆதிசேஷனாக இருந்து 14 உலகங்களைத் தாங்குகிறேன் என்றால், அந்த ஆதிசேஷனுக்குள்ளும் அந்தர்யாமியாக இருந்து சக்தி தருபவன் நீ தானே. ஆதிசேஷனுக்குக் கீழே கூர்ம மூர்த்தியாக இருந்து தாங்கிக் கொண்டிருப்பவன் நீ. எனவே அனைத்துக்கும் நீயே காரணம் என்றார்.
இப்படி ஆதிசேஷனுக்குள்ளும் ஆத்மாவாக இருந்து அவரோடு சேர்த்து அவர் சுமக்கும் பிரபஞ்சத்தையும் தாங்கும் கூர்ம மூர்த்தி அனந்தாத்மா என்று அழைக்கப்படுகிறார். அனந்தன் என்பது ஆதிசேஷனின் திருநாமங்களுக்குள்ளும் ஒன்று. அனந்தாத்மா என்றால் ஆதிசேஷனுக்கு ஆத்மாவாக இருந்து தாங்குபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின்
521-வது திருநாமம்.
`அனந்தாத்மனே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்குச் செருக்கு, கர்வம் ஏற்படாதபடிக் கூர்ம மூர்த்தி நம்மைத் தாங்கிப் பிடித்துச் சரியான வழியில் வழிநடத்துவார்.
—————————-
522. மஹோததிசயாய நமஹ (Mahodhadhishayaaya namaha)
வடுவூர் ஸ்ரீராமன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஆசுகவி வில்லூர் ஸ்ரீ நிதி சுவாமிகள் 1930களில் வடுவூரில் வசித்துவந்தார். அவரது தந்தை வாங்கி இருந்த பல கடன்கள் அடைக்கப்படாமல் இருந்தபடியால், அவரது ஒரே மகன் என்ற முறையில் வடுவூரில் இருந்த வீடு, தோட்டம் என அனைத்தையும் விற்றுக் கடன்களை அடைத்து விட்டார் ஸ்ரீ நிதி சுவாமிகள். இனி வடுவூரிலிருந்து இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். அவருக்கோ வடுவூர் ராமனை விட்டுப் பிரிந்து போக மனமேயில்லை. வேறு வழியில்லாமல், கடனை அடைப்பதற்காக வீட்டை விற்க நேரிட்டு விட்டது. ராமனிடம் இருந்து விடைபெற்றுச் செல்வதற்காகத் திருக்கோவிலுக்குள் சென்றார் ஸ்ரீ நிதி சுவாமிகள்.ராமனைப் பார்த்து ஒரு ஸ்லோகம் இயற்றி அதை விண்ணப்பித்தார்.
க்ருஹ க்ஷேத்ர ஆராமா ஜனக சரண ஸ்பர்ச ஸுபகா:
த்வயா மத்தோ நீதா மனுகுல பதே கிம் மம தத:
த்ரிபங்கீ ஸம்ஸேவ்யம் மதுர மதுரம் தே வபுரிதம்
மதந்தஸ் ஸம்ஸக்தம் ந கலு பரிஹர்த்தும் ப்ரபவஸி
ராமா, என்னிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்து விட்டாயே. என் தந்தையின் திருவடி ஸ்பரிசம் பட்ட வீடு, நிலம், தோட்டம் எல்லாம் என்னை விட்டுச் சென்று விட்டன. ஆனாலும் இதற்காக எல்லாம் நான் கவலைப் படப் போவதில்லை. ஏனென்றால் இங்கே வடுவூரில் அழகாக வளைந்தபடி எழுந்தருளியிருக்கும் உனது இந்த வடிவம் என் நெஞ்சை விட்டு நீங்காமல் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ராமா, உன்னிடம் ஒரு சவால் விடுகிறேன்.
என்னிடமிருந்து வீட்டையும் நிலத்தையும் தோட்டத்தையும் பறித்த நீ, முடிந்தால் என் உள்ளத்தில் இருக்கும் உன் உருவத்தைப் பறித்துக் கொள் பார்க்கலாம். நீயே நினைத்தாலும் என் மனதிலிருந்து உனது வடிவம் நீங்காது என்று சவால் விட்டு விட்டு வடுவூரில் இருந்து புறப்பட்டார். சுமார் நாற்பது ஐம்பது வருடங்கள் கடந்தன. ஸ்ரீ நிதி சுவாமிகளின் மகன்கள் நன்றாக வளர்ந்து, வசதி வாய்ப்பு பெற்றவாறே, 1986-ம் ஆண்டு வடுவூரில் விற்ற வீட்டை மீண்டும் வாங்க முயன்றார்கள். இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த வீடு மாறாமல் அப்படியே இருந்தது. வீட்டின் சொந்தக்காரரும் ஸ்ரீநிதி சுவாமிகளுக்கே வீட்டை விற்கச் சம்மதம் தெரிவித்தார்.
அதன்பின் அவ்வீட்டை வாங்கி, வடுவூர் ராமர்கோவிலுக்கு மிக அருகில் இருக்கும் அதே வீட்டுக்குக் குடிவந்து, தினந்தோறும் வடுவூர் ராமனின் புன்னகையிலும் அழகிலும் ஈடுபட்டுப் புன்னகை ராமாயணம் இயற்றினார் ஸ்ரீநிதி சுவாமிகள். இதில் வியப்பு என்னவென்றால் இத்தனை வருடங்கள் வீட்டைப் பாதுகாத்து மீண்டும் ஸ்ரீ நிதி சுவாமிகளிடமே வழங்கியவர் பெயர் திரு.கோதண்டராமன்.
இந்த லீலையின் வாயிலாக மற்ற செல்வங்கள் வரும், போகும். ஆனால் இறைவன் தான் நிரந்தரமான செல்வம், அவன் என்றுமே தன் அடியார்களை விட்டுப் போவதில்லை என்பதை வடுவூர் ராமன் உணர்த்தி விட்டான். அதுபோலத்தான் பிரளயக் காலத்திலும் கூட, மொத்தப் பிரபஞ்சமும் பிரளய வெள்ளத்தில் மூழ்கிவிடும். பிரபஞ்சமே அழிந்த பின்னும் கூட, அதைக் கீழே இருந்து தாங்கும் ஆதிசேஷனும் கூர்ம மூர்த்தியும் நிரந்தரமாக இருப்பார்கள். அந்த ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷனைப் படுக்கையாக்கி அவர் மீது பள்ளி கொண்டிருப்பாராம் கூர்ம மூர்த்தி. மொத்தப் பிரபஞ்சமும் அழிந்தாலும், தனது படுக்கையான ஆதிசேஷனும், கூர்ம மூர்த்தியான தானும் அழிவதில்லை என்று பகவான் இதன்மூலம் உணர்த்துகிறார்.
இப்படி ஊழி வெள்ளத்தில் ஆதிசேஷப் படுக்கையில் பள்ளிகொண்டிருக்கும் கூர்ம மூர்த்தி மஹோததிசய என்று அழைக்கப்படுகிறார். மஹோததி என்றால் ஊழிக்கடல். சய என்றால் சயனித்திருப்பவர். மஹோததிசய என்றால் பிரளயக் கடலில் பள்ளி கொண்டிருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 522-வது திருநாமம். `மஹோததிசயாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு பக்தி, ஞானம், வைராக்கியம் உள்ளிட்ட நீங்காத செல்வங்கள் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
——————————
523. அந்தகாய நமஹ (Anthakaaya namaha)
ஓர் ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரே மகன். அந்த மகன் பொறுப்பில்லாமல் கேளிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்தான். விவசாயத் தொழிலின் பெருமைகளை எல்லாம் தந்தை எடுத்துச் சொல்லி அறிவுறுத்தினாலும் கூட அதையெல்லாம் மகன் கேட்பதாக இல்லை. ஒருநாள் தந்தை மகன் கையில் கலப்பை, கதிர் அரிவாள் போன்ற கருவிகளைத் தந்து வயலுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் மகன் கதிர் அரிவாளைக் கொண்டு கையில் வெட்டுக் காயம் ஏற்படுத்திக் கொண்டு வந்தானாம் மகன். கதிரை அறுக்க அரிவாள் தந்தால் கையிலே காயம் ஏற்படுத்திக் கொள்கிறாயே என்று தந்தை அவனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனாலும் மகன் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
மறுநாள் தந்தை மகனை வயலுக்கு அனுப்பி வைத்தால், கலப்பையைக் காலில் போட்டுக் கொண்டு காலிலே காயத்தோடு வீடு வந்து சேர்ந்தான். நிலத்தை உழுவதற்குக் கலப்பையைப் பயன்படுத்தாமல் இப்படிக் காலில் போட்டுக் கொள்வதா என்றெல்லாம் தந்தை புலம்பினார். மகன் அதையும் கண்டுகொள்ளவில்லை. ஒருநிலையில் தந்தை மகனின் மனம் மாற ஒரு வருட காலம் அவகாசம் தருவோம் என்று கருதி, அவனிடமிருந்து கலப்பையையும் அரிவாளையும் வாங்கி வைத்து விட்டார். மீண்டும் ஊர்சுற்றத் தொடங்கினான் மகன். யாராவது விவசாயத் தொழில் பார்க்கவில்லையா என்று அவனிடம் விசாரித்தால், என் தந்தை இரக்கமில்லாதவர். என்னிடமிருந்து கதிர் அரிவாளையும் கலப்பையையும் பிடுங்கி வைத்துக்கொண்டார். அதனால்தான் என்னால் வேளாண்மைப் பணிக்குச் செல்ல முடியவில்லை என்று சொல்வானாம் அந்த மகன்.
இது நியாயமா, இவனிடம் கலப்பையைத் தந்தால் காலைக் காயப்படுத்திக் கொள்கிறான். அரிவாளைத் தந்தால் கையைக் காயப் படுத்திக் கொள்கிறான். அதனால்தானே இதற்கு ஓர் ஓய்வு தரும்விதமாகத் தந்தை இவற்றை வாங்கி வைத்தார். கொஞ்ச காலம் கழித்து மகனின் மனம் மாறினால், மீண்டும் அவனிடம் அதை அவர் வழங்கத்தானே போகிறார். அதுபோலத் தான் இறைவனும்.
கலப்பை, கதிர் அரிவாள் போல், நம்மிடமும் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைத் தந்து இந்த பூலோகம் என்னும் நிலத்துக்கு நம் தந்தையான திருமால் நம்மை அனுப்பி வைக்கிறார். நாம் உடல், புலன்கள், ஞானம் உள்ளிட்ட கருவிகளைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முக்தி என்ற பயிரை அறுவடை செய்வோம் என்ற எதிர்பார்ப்புடன் நம்மை அனுப்பி வைக்கிறார் திருமால்.
ஆனால் நாமோ அந்த மகனைப் போலவே தவறான வழியில் கருவிகளைப் பயன்படுத்தி விடுகிறோம். இந்த உடலையும் புலன்களையும் அறிவையும் கொண்டு செய்யக் கூடாத செயல்களில் நாம் ஈடுபடுகிறோம். அதனால் தான் ஒருநிலையில், நாம் செய்யும் பாபங்களுக்குத் தற்காலிகமாகவாவது ஓர் ஓய்வு அளிப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் இறைவன். அந்த விவசாயி கருவிகளை மகனிடமிருந்து பறித்து வைத்தது போல், பிரளயத்தில் நம் உடல் ஞானம் புலன்கள் எல்லாவற்றையும் தற்காலிகமாக நம்மிடமிருந்து பறித்து வைக்கிறார் திருமால். அதன்பின் மீண்டும் இந்த உடலையும் புலன்களையும் ஞானத்தையும் தந்து மீண்டும் உலகைப் படைக்கிறார் திருமால்.
இப்படி நாம் பாபங்கள் செய்வதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்காகப் பிரளயத்தை ஏற்படுத்துகிறார் பாதாள லோகத்தின் கீழே எழுந்தருளியிருக்கும் கூர்ம ரூபியான திருமால். எனவேதான் அவர் அந்தக என்று அழைக்கப்படுகிறார். அந்தக என்றால் முடிவை ஏற்படுத்துபவர். இந்தப் படைப்புச் சுழற்சிக்குப் பிரளயம் என்ற தற்காலிக முடிவை ஏற்படுத்தும் கூர்மமூர்த்தி அந்தக. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 523-வது திருநாமம்.`அந்தகாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் தம் உடல், புலன்கள், அறிவு ஆகியவற்றை நல்வழியில் செலுத்தும்படிக் கூர்ம மூர்த்தி வழிகாட்டுவார்.
————————–
- அஜாய நமஹ (Ajaaya namaha)
ஒரு பெரிய பட்டிமன்றம். பள்ளி ஆசிரியருக்கு இறையருள் கிட்டுமா, கல்லூரிப் பேராசிரியருக்கு இறையருள் கிட்டுமா என்பதே தலைப்பு. இரு தரப்புகளிலும் மாறி மாறிப் பல வாதங்களை முன்வைத்து வருகிறார்கள்.அப்போது பள்ளி ஆசிரியர் தரப்பில் பேச வந்தவர் ஸ்ரீமந் நாராயணீயத்தில் அஜாமிளன் சரிதத்தில் இடம்பெற்றுள்ள,
ந்ருணாம் அபுத்த்யாபி முகுந்த கீர்த்தனம்
தஹதி அகௌகான் மஹிமா அஸ்ய தாத்ருச:
என்ற சுலோகத்தை மேற்கோள் காட்டி, பகவானின் திருநாமத்தைத் தெரிந்து சொன்னாலும் பலன் உண்டு. தெரியாமல் சொன்னாலும் பலன் உண்டு. நாங்கள் பள்ளியில் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவர்களின் பெயர்களைப் படிக்கும் போதெல்லாம் எத்தனையோ முறை கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா என்று மாணாக்கரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அல்லது லக்ஷ்மி, கமலா, மைதிலி, ருக்மிணி என்று மாணவியரின் பெயர்களைச் சொல்லி அழைத்திருப்போம். அவற்றை எல்லாம் திருமகளும் திருமாலும் தங்களைக் குறித்துச் செய்யப்பட்ட நாம சங்கீர்த்தனமாக எண்ணி அருள்புரிவார்கள்.
ஆனால் கல்லூரி ஆசிரியருக்கு இந்தப் பாக்கியம் கிட்டாது. ஏனெனில் வருகைப் பதிவேட்டைக் கையில் எடுத்து வைத்துக் கொண்டு, ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையைப் படித்துத் தான் மாணவர்களின் வருகையைப் பதிவிடுவாரே ஒழிய பெயர்களைப் படிக்கும் வழக்கம் கல்லூரியில் இல்லையே. அதனால் பள்ளி ஆசிரியரே இறையருளுக்குப் பாத்திரம் ஆவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பேசி விட்டு அமர்ந்து கொண்டார்.
அடுத்துப் பேச வந்த கல்லூரிப் பேராசிரியர், பள்ளி ஆசிரியரின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன். வருகைப் பதிவேட்டில் அவர்கள் தான் மாணவ-மாணவியரின் பெயர்களைப் படிக்கிறார்கள். கல்லூரிப் பேராசிரியர்களான நாங்கள் எண்ணிக்கைகளைத் தான் வாசிப்போம். ஆனால் எண்ணிக்கைகளை வாசிப்பதால் இறையருள் கிட்டாது என்று அவர் எப்படிச் சொல்ல முடியும். எண்ணிக்கைகளைச் சொன்னாலும் இறையருள் கிட்டும்.
நம்மாழ்வார் திருவாய்மொழியில்,
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்
எண்ணிலும் வரும் என் இனி வேண்டுவம்
என்று பாடியுள்ளாரே. ஆகவே நான் ஒன்று என்று சொன்னால், ஒப்பற்ற ஒருவனான தன்னைச் சொன்னதாகவும், இரண்டு என்றால், பிராட்டியோடு இருவராய் விளங்கும் தன்னைச் சொன்னதாகவும், மூன்று என்றால் மூன்று ரகசிய மந்திரங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், நான்கு என்றால் நான்கு வேதங்களால் போற்றப்படும் தன்னைச் சொன்னதாகவும், ஐந்து என்றால் ஐந்து நிலைகளில் எழுந்தருளியிருக்கும் தன்னைச் சொன்னதாகவும், ஆறு என்றால் ஆறு குணங்கள் நிறைந்த தன்னைச் சொன்னதாகவும், ஏழு என்றால் ஏழு மலைகளுக்கு மீது மேவும் தன்னைச் சொன்னதாகவும், பத்து என்றால் பத்து அவதாரங்கள் எடுத்த தன்னைச் சொன்னதாகவும், பன்னிரண்டு என்றால் பன்னிரு ஆழ்வார்களால் போற்றப்பட்ட தன்னைச் சொன்னதாகவும் எடுத்துக் கொண்டு அருள்புரிவார். எனவே எங்களுக்கும் நிச்சயமாக இறையருள் கிட்டும் என்று பேசி விட்டு அமர்ந்தார்.நடுவர் தீர்ப்பளிக்க வேண்டிய நேரம். நடுவர் தீர்ப்பு வழங்குகிறார். அகாரார்த்தோ விஷ்ணு: என்பார்கள். அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கும்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
என்றார் வள்ளுவர். எழுத்துகளுக்கு
அகரம் ஆதியாக இருப்பது போல், அகிலத்துக்கெல்லாம் ஆதியாக இருப்பவர் பகவான். எனவே முதன்முதலில் விஜயதசமி நாளில் மாணவனாகப் பலகையில் என்றைக்கு நீங்கள் அ என்று எழுதினீர்களோ, அப்போதே உங்கள் இருவருக்கும் திருமால் அருள்புரிந்து விட்டார் என்று சொல்லிப் பட்டிமன்றத்தை முடித்து வைத்தாராம். ஆக, அ என்ற எழுத்து திருமாலைக் குறிக்கிறது. அ என்ற எழுத்தால் குறிக்கப்படுவதால், அஜ என்று திருமால் அழைக்கப்படுகிறார். முன்பு இரு முறை வந்த அஜ என்ற திருநாமத்துக்கு வேறு விதமாகப் பொருள்கொள்ளப்பட்டது. 524-ம் திருநாமமான அஜ என்பதற்கு, அ எனும் எழுத்தால் குறிப்பிடப்படுபவர் என்று பொருள். அஜாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் நாவில் எப்போதும் தனது நாமங்கள் நிறைந்திருக்கத் திருமால் அருள்புரிவார்.
——————————–
- மஹார்ஹாய நமஹ (Mahaarhaaya namaha)
முண்டக உபநிஷத்தில் வரும் வரலாறு. பிரம்மதேவன் தனக்கு மகனாகத் தோன்றிய அதர்வா என்னும் முனிவருக்கு மிக உயர்ந்த பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தை உபதேசம் செய்தார். அதன் பின் அதர்வா முனிவர் அங்கிரர் என்னும் தனது சிஷ்யருக்கு அதை உபதேசம் செய்தார். அங்கிரர் சத்தியவாகருக்கு உபதேசம் செய்தார். சத்தியவாகர் ஆங்கிரஸ் என்னும் முனிவருக்கு உபதேசம் செய்தார். அந்த ஆங்கிரஸ் முனிவரை சௌனக முனிவர் அடிபணிந்து ஒரு கேள்வி கேட்டார்.
எந்த ஓன்றை அறிந்து கொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகுமோ அதை அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் சௌனக முனிவர். ஆங்கிரஸ் முனிவர் பதில் கூறுகிறார்: பகவான் ஸ்ரீமன் நாராயணனை அறிந்துகொண்டால் அனைத்தையும் அறிந்ததாக ஆகும். அவரைப்பற்றி அறிந்துகொள்ள அபரா வித்யை, பரா வித்யை என இரண்டு வித்யைகள் உதவுகின்றன. அபரா வித்யா என்றால் வேதங்கள், உபநிடதங்கள், வேதத்தின் அங்கங்கள் இவைகளைப் படித்தலாகும். இவற்றைப் படித்தபின், அதன்படிப் பரமாத்மாவைத் தியானிக்க வேண்டும்.
அப்படித் தியானிப்பதைப் பரா வித்யை என்பர். இவை இரண்டையும் பின்பற்றினால் பரமாத்மாவை அறியலாம்.
இந்த உலகத்துக்கே மூல காரணமாக பகவான் இருக்கிறான். இந்த உலகத்துக்கே வித்தாகவும் பகவான் இருக்கிறான். அவன் ஒருவனை அறிந்தால், அவனது மேன்மைக்காக இருக்கும் அவன் சொத்தாகிய இந்த மொத்த உலகத்தையும் அறிந்து கொள்ளலாம்.
முதலில் ஆச்சாரியர் மூலமாகவும், பின் பகவானை இடைவிடாது தியானித்தும் பகவானின் அருளாலே பகவானை சென்று அடையலாம். பகவான் தான் உன் இலக்கு, உன் உபாசனைக்கும் அவன் தான் இலக்கு என்றார் ஆங்கிரஸ்.அந்த உபாசனையை எப்படி செய்ய வேண்டும் என சௌனகர் கேட்டார். ஆங்கிரஸ் முனிவர் ஓர் உவமை சொல்லி விளக்குகிறார்…. வில்லிலே அம்பு பூட்டிப் பாணம் போட வேண்டும் என்றார். ஒம்காரம் ஆகிய பிரணவம்தான் வில்லாக இருக்கிறது. அதில் சரமாக, அம்பாக ஜீவாத்மாவைப் பூட்ட வேண்டும். பிரணவத்தை வில்லாக வைத்து ஜீவாத்மாவை அம்பாக பூட்டி, இலக்காகப் பரமாத்மாவை வைக்க வேண்டும்.
கவனம் எங்கும் சிதறாமல் பகவானிடம் மட்டுமே சிந்தனையை வைத்து பகவானை உபாசிக்க வேண்டும். அப்படி ஜீவாத்மாவை பகவானை நோக்கிச் செலுத்தினால், ஜீவாத்மா பகாவானின் திருவடியை அடைந்துவிடும். பகவானை விட்டுத் தனித்திருக்க முடியாதவன் தான் என்ற புரிதல் பெற்று, பகவத் கைங்கரியத்திலும் பகவத் அனுபவத்திலுமே ஜீவாத்மா ஈடுபட்டிருக்கும் என்பது ஆங்கிரஸ் தந்த விளக்கமாகும்.
இதன்மூலம் அவர் உணர்த்தும் விஷயம் யாதெனில் இறைவனுக்கு நாம் நம்மையே காணிக்கையாக அர்ப்பணிக்க வேண்டும். நாம் மற்ற பொருள்களை இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் மற்ற பொருள்களை மட்டும் அர்ப்பணித்து விட்டு, நம்மை அவன் திருவடிகளில் அர்ப்பணிக்காது போய்விடக் கூடாது. எனவே முக்கியமாக நம்மையே – நமது நான் என்ற எண்ணத்தை – முழுமையாக அவனுக்கே காணிக்கையாக்கி விடவேண்டும்.
எனவேதான் நம்மாழ்வார்,
பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே
தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே
என்று பாடுகிறார். இறைவனுக்கு என் நெஞ்சையே சந்தனமாகவும், பா மாலைகளையே மாலை மற்றும் ஆடைகளாகவும், கை கூப்புதல் என்னும் செயலையே ஆபரணங்களாகவும் அர்ப்பணித்து என்னையே காணிக்கை ஆக்குகிறேன் என்பது இப்பாடலின் கருத்தாகும். இப்படி பகவானுக்குச் செய்யும் திருவாராதனத்தில் நம்மையே அர்பணிக்க வேண்டும் என்னும்படி ஏற்றம் மிக்கவராக விளங்குகிறார் திருமால். அப்படி ஆத்மாவை அர்ப்பணித்தல் தான் இறைவனுக்குச் செய்யும் சிறந்த பூஜை. மஹா என்றால் மிகச்சிறந்த பூஜை, அர்ஹ என்றால் தகுதி படைத்தவர். மஹார்ஹ என்றால் ஆத்மாவை அர்ப்பணித்தல் என்னும் மிகச்சிறந்த பூஜைக்கு உரியவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 525-வது திருநாமம்.மஹார்ஹாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் அத்திகிரி அருளாளர் நிலையிலக்கில் அம்பு போல் அமிழ்ந்து அனுபவிக்கும் பேற்றைப் பெறுவார்கள்.
———————
- ஸ்வாபாவ்யாய நமஹ (Swaabhavyaaya namaha)
நான்கு போட்டியாளர்களுக்கு இடையே யார் சிறந்தவர் என்று ஒரு கடும் போட்டி நடக்கிறது. முதல் போட்டியாளர் நமது சரிரம். இரண்டாவதாக, நம் சரிரத்துக்குள் இருக்கும் ஜீவாத்மா. முன்றாவதாக பகவானுடய சுத்தசத்துவ மயமான திருமேனி. நான்காவதாக பகவானுடைய எங்கும் பரந்த திவ்ய ஆத்ம ஸ்வரூபம். முதலில் நமது சரீரமும் பகவானின் திருமேனியும் களம் காண்கின்றன.
நமது கர்மாதீனமான சரீரத்துக்கும் பகவானுடைய திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தால், சந்தேகமே இல்லாமல் பகாவனுடய திருமேனி தான் வெல்லும். இரண்டையுமே தியானிப்பது எளிது தான் என்றாலும், நமது சரிரத்தைத் தியானிப்பதால் பலன் எதுவும் கிடையாது. மீண்டும் மீண்டும் பிறவிச் சுழற்சிதான் கிட்டும். அதுவே பகாவானின் திருமேனியைத் தியானித்தால் இனிமையும் கிடைக்கும், மோக்ஷமும் கிடைக்கும். எனவே முதல் போட்டியிலே பகாவானின் திருமேனியே ஜெயிக்கும்.
இரண்டாவது போட்டி எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும், நுண்ணியதாக இருக்கும் நமது ஜீவாத்ம ஸ்வரூபத்திற்கும் இடை நடக்கிறது. இவை இரண்டையுமே தியானிப்பது எளிதன்று. ஜீவாத்மாவைத் தியானிப்பதால் ஆத்மாவையே அனுபவித்தல் என்ற கைவல்ய நிலை கிடைக்குமே தவிர பகவானை அடைதல் என்பது முடியாது. எங்கும் பரவி இருக்கும் பரமாத்மாவின் ஸ்வரூபத்தைத் தியானித்தால் நாம் பகவானை அடைந்து பகவானுக்கு கைங்கர்யம் செய்யலாம். அதனால் இந்தப் போட்டியில் பரமாத்மாவின் ஸ்வரூபமே வெற்றி பெறும்.
மூன்றாவதாகப் பராமாத்மாவின் ஸ்வரூபத்திற்கும் பரமாத்மாவின் திவ்ய மங்களத் திருமேனிக்கும் போட்டி நடந்தது. பகாவானின் திருமேனியை தியானிப்பது எளிது, அது மோட்சமும் தருகிறது. அதுவே பகாவானின் ஆத்ம ஸ்வரூபம் மோட்சம் தரும் என்றாலும் அதைத் தியானிப்பது கடினம்.பகவானின் ஆத்ம ஸ்வருபம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. வேதங்களால் கூட அதை முழுமையாக கூற முடியாது. ஆனால் பகவானின் திருமேனியையோ அர்ச்சாவதார ரூபத்தில் நம்மால் எளிதில் தியானிக்க முடியும். ஆதனால் பகவானின் திருமேனியே இப்போட்டியில் வெற்றி பெறும்.
இதைத் தான் ஸ்வாமி வேதாந்த தேசிகன் ரஹஸ்ய த்ரய சாரத்தில்,
பராவர ஸுக க்ராஹ்யம் ப்ரேம போத ப்ரஸாவகம்
ஸ்வரூபாத் ஸ்வாமினோ ரூபம் உபாதேய தமம் விது:
என்று தெரிவிக்கிறார். தியானிக்கவும் எளிதாக இருக்க வேண்டும், தியானிப்பவருக்கு முக்தியும் தரவேண்டும் என்றால், அது பெருமாளின் திருமேனி ஒன்றுக்கே சாத்தியமானது என்பது இதன் கருத்து. அதனால் தான் இறைவனை அடைய விரும்பும் அடியார்கள் எப்போதும் அவனது திவ்ய மங்கல விக்ரஹமாகிய திரு மேனியையே தியானித்து, பாவித்து வழிபடுகிறார்கள்.
திருமங்கை ஆழ்வார்,
காவியே வென்ற கண்ணார் கலவியே கருதி நாளும்
பாவியேனாக எண்ணி அதனுளே பழுத்தொழிந்தேன்
தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தையானைப்
பாவியேன் பாவியாது பாவியேன் ஆயினேனே
என்று திருக்குறுந்தாண்டகத்தில் பாடுகிறார். பாவித்தல் என்றால் வழிபடுதல் என்று பொருள். பாவ்ய என்றால் வழிபடத் தக்கவர். ஸ்வம் என்றால் சொத்து, இங்கே ஸ்வம் என்பது பகவானின் சொத்தாக இருக்கும் அவர்களின் அடியார்களைக் குறிக்கிறது. ஸ்வம் எனப்படும் அடியார்களால், பாவ்ய – வழிபடத் தக்க திருமேனியோடு பகவான் விளங்குவதால், ஸ்வாபாவ்ய – அடியார்களால் வழிபடத் தக்கவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 526-வது திருநாமம். ஸ்வாபாவ்யாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், எப்போதும் இறைவனைத் தியானித்து வாழும் பேற்றை நமக்கு அவர் அருள்வார்.
———————
- ஜிதாமித்ராய நமஹ (Jitamithraya namaha)
குருக்ஷேத்ரப் போர்களத்தில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையும், 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனையும் அணிவகுத்து நிற்கிறார்கள். கிருஷ்ணன் பார்த்தசாரதியாகத் தேரோட்ட, அர்ஜுனன் போர்க்களத்தில் நுழைகிறான். அர்ஜுனன் கண்ணனிடம் இரண்டு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்தியருள வேண்டும். என் பக்கம் யார் இருக்கிறார்கள், எதிர்ப் பக்கம் யார் இருக்கிறார்கள் எனக் காண விரும்புகிறேன் என்று பிரார்த்தித்தான்.
கண்ணனும் அவ்வாறே இரு சேனைகளுக்கும் மத்தியில் தேரை நிறுத்த, இரு சேனைகளையும் பார்வையிட்டான் அர்ஜுனன். அங்கே தன் கூட்டாளிகளோ அல்லது எதிரிகளையோ அவன் காணவில்லை. மாறாகத் தன் உறவினர்கள், நண்பர்கள், ஆச்சாரியர்கள், சகோதரர்கள், பாட்டன்மார்கள், பிஷ்மர், துரோணர் போன்ற மகான்கள் ஆகியோரைக் காண்கிறான். இவர்களைப் பார்த்ததும் அர்ஜுனன் கலங்கி, கண்ணா என் காண்டீவம் கையில் இருந்து நழுவி விழுகிறது, என்னால் நிற்கக் கூட முடியவில்லை என்று அப்படியே தேரில் கலங்கிப்போய் அமர்ந்துவிட்டான்.
கண்ணா எனக்கு எது நல்லது எது தீயது என்று தெரியவில்லை, பீஷ்ம துரோணர்கள் பூஜிக்கத் தக்கவர்கள். கௌரவர்கள் என் பங்காளிகள். இவர்களை எதிர்த்து எப்படிப் போர் புரிவது. நீயே நான் என்ன செய்ய வேண்டும் என்று சொல் என்றான் அர்ஜுனன்.கண்ணன் இந்த இடத்தில் அர்ஜுனன் ஒருவனின் கலக்கத்தை மட்டும் பார்க்கவில்லை. நம் அனைவரின் மனக் கலக்கத்தையும் பார்த்தான். நம் அனைவர்க்கும் சேர்த்துப் பதில் கூற விழைகிறான் கண்ணன். அதுதான் கீதை உபதேசம்.
கீதோபதேசம் எப்படித் தொடங்குகிறது என்றால், பகவானுக்குச் செய்யும் பூஜையாக நினைத்துக் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டும். அதனால் வரும் உலகியல் பலனின் மீது பற்று வைக்கக்கூடாது என கர்ம யோகத்தில் தொடங்குகிறது. பின் பக்தி யோகத்தில் ஈடுபட்டு எப்படி மோக்ஷத்தை அடைவது என்பது வரை கீதையில் உபதேசம் செய்தான் கண்ணன்.
அர்ஜுனனுக்குப் போர் புரிவது கடமை. அந்த கடமையைப் பலனை எதிர்பார்க்காமல் செய் என்று அவனுக்கு வழிகாட்டினான். இது உணர்த்தும் தத்துவம் யாதெனில், நம் மனம் தான் குருக்ஷேத்திரப் போர்க்களம். அதில் 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனைகள் தான் நம் மனத்தில் உள்ள நல்ல எண்ணங்கள். 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகள் தான் தீய எண்ணங்கள். நல்ல எண்ணங்களை விடத் தீய எண்ணங்களே பெரும்பாலும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன.
அர்ஜுனன்தான் ஜீவாத்மா. இந்த ஜீவாத்மா 7 அக்ஷௌஹிணி பாண்டவர் சேனையான நல் எண்ணங்களின் துணை கொண்டு 11 அக்ஷௌஹிணி கௌரவ சேனைகளான தீய எண்ணங்களை அழிக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் போய், தீய எண்ணங்களின் மீது பற்று வைத்து விடுகிறது ஜீவாத்மா. அதனால் நம் மனதில் பெரும் மனப் போராட்டம் எழுகிறது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை அழித்து நாம் போர்புரிய வேண்டும். அதற்கான வழியாகத் தான் கர்ம யோகத்தை பகவான் தருகிறான். இந்தக் கர்ம யோகத்தை பின் பற்றினால் நல்ல எண்ணங்கள் நம் மனதில் வளரும்.
அதைக்கொண்டு ஜீவாத்மா பக்குவப்படும். அதன்பின் பரமாத்மாவின் துணையோடு தீய எண்ணங்களை வீழ்த்திப் பக்தி யோகத்தில் ஈடுபட்டுப் பரமாத்மாவை அடையலாம்.
இப்படி நம் மனதில் உள்ள தீய எண்ணங்களாகிய எதிரிகளை நம் சார்பில் பகவானே வென்று, அவைகளை வீழ்த்தி நாம் ஆன்மீக முன்னேற்றம் அடைவதற்கு வழிகாட்டுவதால், திருமால் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார்.
அமித்ர என்றால் எதிரிகள். ஜித என்றால் வெல்லப்பட்ட. நம் உள் எதிரிகளாகிய தீய குணங்களைத் திருமால் வென்று தருவதால், அவர் ஜிதாமித்ர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 527-வது திருநாமம்.ஜிதாமித்ராய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், தீய எண்ணங்கள் நம் உள்ளத்தில் எழாமல் திருமால் அருள்புரிவார்.
—————————–
- ப்ரமோதனாய நமஹ(Pramodhanaaya namaha)
ஆயர்ப்பாடியில் கோமதி என்றொரு கோபிகை வாழ்ந்து வந்தாள். அவளிடம் ஒரே ஒரு பசுமாடுதான் இருந்ததாம். அந்தப் பசுமாட்டுக்கு அவள் தினந்தோறும் புண்ணாக்கு, வைக்கோல் ஆகிய அனைத்தும் அளித்தாலும், அது சரியாகவே பால் சுரக்கவில்லை. எத்தனையோ கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடியும் மாடு பால் கறப்பதாகவே தெரியவில்லை. ஒருநாள், தங்கள் குலகுருவான கர்காச்சாரியாரை வணங்கச் சென்றாள் கோமதி. அவரிடம் தன் நிலையைச் சொல்லி பசு, பால் கறப்பதற்கு ஏதேனும் ஆலோசனை சொல்லுமாறு வேண்டினாள். அதற்கு கர்காச்சாரியார், நம் யசோதையின் மகன் கண்ணன் இருக்கிறானே, அவனுக்கு எதிரே கொஞ்ச நேரம் உன் மாட்டை நிறுத்தி வை. அதன்பின் நடப்பதைப் பார் என்று ஆலோசனை வழங்கினார்.
அடடா, கண்ணனா, அவன் இருக்கும் பாலையும் வெண்ணெயையுமே திருடிச் சென்று விடுவானே, மாட்டை வேறு அவன் எதிரே கொண்டுபோய் நிறுத்துவதா என்று சற்றே யோசித்தாள், கோமதி. இருந்தாலும், குருவின் வார்த்தையில் அர்த்தம் இருக்கும் என்ற நம்பிக்கையில் யசோதையின் வீட்டு வாசலுக்குச் சென்றாள்.கண்ணனை வெளியே அழைத்தாள். கண்ணனின் பார்வை தனது பசுவின் மீது படும்படி அதை நிறுத்தினாள். திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் என்று ஆண்டாள் பாடியபடி, கண்ணனும் தனது இரு கண் களாலும் அந்தப் பசுவை ஆசையுடன் நோக்கினான். சரி, கண்ணனின் பார்வை பட்டுவிட்டது.
மறுநாள் காலை எழுந்தாள் கோமதி. மாட்டைக் கறக்கத் தொடங்கினாள். பார்த்தால் இருபத்தைந்து லிட்டருக்கும் மேல் பால் கறந்தது அந்த மாடு. கோமதிக்கு ஒரே சந்தோஷம். வீட்டுத் தேவைகளுக்கு ஒரு லிட்டர் பாலை மட்டும் உபயோகித்து விட்டு, மீதமுள்ள பாலில் தயிரை விட்டு உறைகுத்தி வைத்தாள். அடுத்த நாள் காலையில் பார்த்த போது, இருபத்தைந்து லிட்டர் தயிர் அப்பாத்திரத்தில் இருந்ததாம். நாம் கொஞ்சம் பாலை எடுத்துப் பயன்படுத்திய பின்னும் எப்படி 25 லிட்டர் தயிர் கிடைத்தது என்று வியந்தாள் கோமதி.
அடுத்து தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்த போது, 25 லிட்டர் தயிரிலிருந்து 25 லிட்டர் வெண்ணெய் கிடைத்தது. இது இன்னும் கோமதியை வியப்பில் ஆழ்த்தியது. 25 லிட்டர் வெண்ணெயைக் காய்ச்சிய போது, அதிலிருந்து 25 லிட்டர் நெய்யும் கிடைத்தது.வியப்பின் உச்சத்தை அடைந்த கோமதி, 5 லிட்டர் நெய்யை எடுத்துக் கொண்டு கர்காச்சாரியாரின் ஆசிரமத்துக்குச் சென்றாள். உங்கள் ஹோமத்துக்குப் பயன்படுத்தக் காணிக்கையாக இந்த நெய்யைக் கொண்டு வந்தேன் என்றாள். உன் மாடுதான் பாலே கறப்பதில்லையே, உனக்கு ஏது இவ்வளவு நெய் என்று கேட்டார் கர்காச்சாரியார்.
சுவாமி, நீங்கள் சொன்னபடி மாட்டைக் கண்ணன் முன்னே நிறுத்தினேன். அதன்பின் மாடு ஒருநாளைக்கு 25 லிட்டர் பால் கறக்கிறது. அதைத் தோய்த்தால் 25 லிட்டர் தயிரும், அதைக் கடைந்தால் 25 லிட்டர் வெண்ணெயும், அதைக் காய்ச்சினால் 25 லிட்டர் நெய்யும் கிடைக்கின்றன. எல்லாம் உங்கள் மகிமை என்றாள்.
அதற்கு கர்காச்சாரியார், எல்லாம் கண்ணனின் மகிமை. கண்ணனின் திருமேனியைத் தரிசிக்கும்போது உள்ளார்ந்த பேரானந்தம் பார்ப்பவர்க்கு ஏற்படும். நமது கஷ்டங்களைப் போக்கிப் பேரானந்தத்தைத் தரவல்லது அவனது திருமேனி. கண்ணனின் திருமேனியைச் சேவித்ததால் உன் மாடு மிகவும் மகிழ்ந்து விட்டது. மாட்டின் மனம் மகிழ்ந்தால் பால் நிறைய சுரக்கும். உண்மையான மனமகிழ்ச்சி என்பதில் இறை அனுபவத்தில்தான் கிடைக்கும் என்று விளக்கினார்.
அதன்படி கோமதி தனது பசுவைத் தினந்தோறும் கண்ணன் முன்னே நிறுத்த, நாளுக்கு நாள் கறவை மாடான அது, கன்றுக்குட்டி போல் இளமையாகிக் கொண்டே போனதாம். ஆண்டாளும் திருப்பாவையில் கற்றுக்கறவை – கன்றுபோல் இளமையாக இருக்கும் கறவை என்று சொன்னது இங்கே நோக்கத்தக்கது.
இப்படி ஆன்மீகப் பேரானந்தத்தைத் தந்து அடியார்களை மகிழ்விப்பதால், திருமால் ப்ரமோதன என்று அழைக்கப்படுகிறார். ப்ரமோதன என்றால் அடியார்களை மகிழ்விப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 528-வது திருநாமம்.
“ப்ரமோதனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்நாளும் திருநாளாக மகிழ்ச்சியுடன் விளங்கும்படித் திருமால் அருள்புரிவார்.
—————
- ஆனந்தாய நமஹ(Aanandaya Namaha)
(529 – 538 – கபில அவதாரம்)
உலகம் படைக்கப்பட்ட காலத்தில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிரம்மாவாலே நியமிக்கப் பட்டவர்கள் பிரஜாபதிகள் ஆவர். அந்தப் பிரஜாபதிகளுள் முக்கியமானவர் கர்தமப் பிரஜாபதி. அவர் பிரம்மாவிடம், தருமத்துக்காகப் பிள்ளைகளைப் பெறுவது உயர்ந்ததா, அதைவிட உயர்ந்த ஆனந்தம் வேறேதும் உண்டா என்று வினவினார். அதற்குப் பிரம்மா, கர்தமா, என்னை நாராயணன் தன் உந்தித் தாமரையில் படைத்தார்.
எனக்கு வேதங்களை உபதேசித்தார். அந்த வேதங்களுள் ஒரு பகுதியாக ஆனந்தவல்லி என்ற பகுதி வருகிறது. அப்பகுதி ஆனந்தத்தின் அளவுகோல்களை விளக்குகிறது. நல்லவனாக, கற்றவனாக, ஆசீர்வதிக்கப்பட்டவனாக, மன உறுதிமிக்கவனாக, உடல்வலிமை மிக்கவனாக, உலகமே கொண்டாடும்படியாக இருக்கும் ஓர் இளைஞனின் ஆனந்தம் ஓர் அலகு மனித ஆனந்தம் ஆகும்.
அதைப் போல், நூறு மடங்கு மனித கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப்போல் நூறு மடங்கு தேவ கந்தர்வர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பித்ருக்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவர்களின் தலைவனான இந்திரனின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு தேவ குருவான பிருஹஸ்பதியின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு பிரம்மாவின் ஆனந்தம்.
அதைப் போல் நூறு மடங்கு நாராயணனின் ஆனந்தம்.
இது வேதம் காட்டிய அளவு.
அதாவது, திருமாலின் ஆனந்தம் இவ்வளவுதான் என்று நம்மால் கணக்கிடவே முடியாது என்பதையே வேதம் இவ்வாறு தெரிவிக்கிறது. அவர் ஆனந்தமே வடிவெடுத்தவர். எனவே அவர்தான் உயர்ந்த ஆனந்தம் என்று விளக்கினார் பிரம்மா. அப்படியானால் இல்லற வாழ்வில் நாம் ஈடுபட வேண்டாம். பகவானையே தியானித்துக் கொண்டு வாழ்ந்து விடுவோம் என்று முடிவெடுத்தார் கர்தமப் பிரஜாபதி. பத்தாயிரம் வருடங்கள் திருமாலைக் குறித்துக் கடுந்தவம் புரிந்தார் கர்தமர். அந்தத் தவத்துக்கு உகந்து திருமால் கருட வாகனத்தில் அவருக்குக் காட்சி அளித்தார்.
கழுத்திலே வெள்ளை மற்றும் நீலத் தாமரைகளால் ஆன மாலைகளுடனும், அழகிய திருக்குழல் கற்றைகளுடனும், தூய மஞ்சள் பட்டாடையோடும், நான்கு திருக்கரங்களோடும், சங்கு சக்கரம் உள்ளிட்ட திவ்ய ஆயுதங்களோடும், முகத்தில் மெல்லிய புன்னகையோடும் தோன்றினார் திருமால். அவர் திருமார்பில் திருமகள் திகழ்கிறாள். அவரது திருவடிகளைக் கருடனின் தோள்களின் மேல் பதித்திருக்கிறார். இந்த உயர்ந்த அழகை ரசித்த கர்தமர், நான் எதை அடைய வேண்டும் என நினைத்துத் தவம் புரிந்தனோ அந்தப் பேரானந்தத்தை அடைந்துவிட்டேன் என்று கூறி பகவானைத் துதித்தார்.
கர்தமர், பகவான்தான் உண்மையான பேரானந்தம் என்று பிரம்மா மூலம் புரிந்துகொண்டு, பகவானை நோக்கித் தவம் புரிந்து நாராயணனைக் கருட வாகனத்தில் சேவித்து அந்த உண்மையான ஆனந்தத்தை அடையவும் செய்தார். பின், இந்தக் கர்தமர்க்கு வரமளிக்கும் விதமாக அவருக்கு மகனாகப் பிறந்து பேரானந்தத்தைத் தரப்போவதாக நாராயணன் அவருக்கு வாக்களித்தார்.
அதன்படி கர்தமரின் மகனாகக் கபில வாசுதேவராகப் பின்னர் திருமால் திரு அவதாரம் செய்தார். பேரானந்தம் பெற்றுய்ந்தார் கர்தமர். இப்படி ஆனந்தமே வடிவெடுத்தவராக இருந்து, அடியார்க்குப் பேரானந்தம் தருவதால், கபில வாசுதேவர் ஆனந்த என்று அழைக்கப் படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 529-வது திருநாமம்.
“ஆனந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பேரானந்தத்தைத் திருமால் தந்தருள்வார்.
————–
- நந்தனாய நமஹ(Nandanaaya Namaha)
திருமாலைக் குறித்துத் தவம் புரிந்த கர்தமப் பிரஜாபதிக்குத் திருமால் கருட வாகனத்தில் காட்சி தந்தார் என்பதைக் கடந்த திருநாம விளக்கத்தில் பார்த்தோம். அவ்வாறு தன்முன்னே தோன்றிய திருமாலைத் தரிசித்த கர்தமர், இறைவா, உன் கருணையை என்னவென்று போற்றுவேன்’ என்று துதிக்கத் தொடங்கினார்.நாங்கள் உன்னைக் குறித்துச் செய்யும் பக்தியோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அதை விடப் பன்மடங்காக நீ அருள்புரிகிறாயே. நீ செய்யும் அருளையும் நீ தரும் பலனையும் பார்க்கும் போது, நாங்கள் செய்யும் பக்தியோ வழிபாடோ பூஜ்ஜியம் என்று தான் சொல்ல வேண்டும்’ என்று பகவானிடம் கர்தமர் சொன்னார்.
அதன்பின் திருமால் கர்தமரைப் பார்த்து, என் அடியார்களின் நலனை நான் பேணாமல் வேறு யார் பேணுவார்கள்! அது இருக்கட்டும். உங்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று சொல்லுங்கள். தருகிறேன்’ என்று கூறினார்.அதற்கு கர்தமர்,இறைவா, பிரம்மா என்னை மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டுப் பிரஜாபதி என்ற பதவியில் அமர்த்தி உள்ளார். ஆனால் நானோ அவர் தந்த கடமையை விட்டு நீயே கதி என்று தவத்தில் ஈடுபட்டு விட்டேன். இனி மேற்கொண்டு நான் பிரம்மாவின் கட்டளைப் படி தருமப்படி இல்வாழ்க்கை வாழ்ந்து, என் கடமையை நிறைவேற்ற அருள்புரிய வேண்டும்’ என்று வேண்டினார்.
மேலும், இறைவா நீ தரும் இல்வாழ்க்கை நான் உன்னை வந்தடைவதற்குத் தடையாக ஆகிவிடக்கூடாது. அந்த உலகியல் சுகம் உன்னை நான் மறப்பதற்குக் காரணமாக ஆகிவிடக் கூடாது. அதற்கு நீயே அருள்புரிய வேண்டும் என்று கோரினார் கர்தமர்.அதற்கு திருமால்,கர்தமரே, நீங்கள் கவலைப் படவேண்டாம். என்னைக் குறித்துச் செய்த எந்த ஒரு வழிபாடும் வீண்போகாது. அதில் நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கு நல்ல இல்வாழ்க்கையும் அமையும். சுவாயம்புவ மனு தனது மகளான தேவஹூதியை உங்களுக்கு மணம் முடித்துத் தருவார். நாரதர் மூலம் உங்கள் பெருமையை மனுவுக்கு நான் உணர்த்திவிட்டேன். தேவஹூதியை மணந்து, இல்வாழ்க்கை தருமங்களை நன்றாகப் பின்பற்றுங்கள்.
உங்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறப்பார்கள். அவர்களுக்கு ஏற்ற மாப்பிள்ளைகளும் உரிய காலத்தில் கிடைப்பார்கள். இல்வாழ்க்கை வாழும் காலத்தில் எனது நினைவும் உங்கள் மனதில் இருந்துகொண்டேதான் இருக்கும்.எல்லாவற்றுக்கும் மேலாக, நானே உங்களுக்கு மகனாக, பத்தாவது குழந்தையாக வந்து பிறப்பேன். அந்த அவதாரத்தில் எனக்குக் “கபில வாசுதேவன்’’ என்ற பெயர் ஏற்படும்.
எனது அந்த வடிவை நீங்கள் தியானித்து வாருங்கள். உரிய காலத்தில் உங்களுக்கு முக்தியையும் நானே தருவேன்’’ என்று கூறினார். இதைக் கேட்ட கர்தமர், பகவானின் கருணையை நினைத்து நினைத்து உருகினார். பேரானந்தம் தருபவர், பேரானந்தமே வடிவெடுத்தவர் என்றெல்லாம் பிரம்மா திருமாலைப் பற்றிச் சொன்னார். ஆனால் அவர் எத்தகைய அருளைப் புரிந்து எத்தகைய ஆனந்தம் தருவார் என்று இப்போதுதான் அறிந்தேன் என்று பரவசப்பட்டார் கர்தமர். அந்தப் பரவசத்தால் ஆனந்தக் கண்ணீர் சிந்தினார் கர்தமர். அந்தக் கண்ணீர்தான் “பிந்து சரஸ்’’ என்ற பொய்கையாக உருவானது. இப்படிப் பொய்கையாக உருவாகும் அளவுக்கு ஆனந்தக்கண்ணீர் வடிக்கும்படி அடியார்களுக்குப் பேரானந்தம் அருள்வதால், திருமால் நந்தன என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 530-வது திருநாமம்.
“நந்தனாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் திருமால் ஆனந்தக் கண்ணீர் சிந்த வைத்து மகிழ்விப்பார்.
—————-
- நந்தாய நமஹ (Nandhaaya Namaha)
கர்தமருக்குக் காட்சி அளித்த திருமால், உங்களுக்கு வரப்போகும் மனைவியை அவளது தந்தையே உங்களிடம் அழைத்துக் கொண்டு வந்து சேர்ப்பார் எனச் சொல்லி இருந்தார். தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு அளித்திருந்தார். இதையெல்லாம் கேட்டு மகிழ்ந்த கர்தமப் பிரஜாபதி, இறையருளை நினைத்து, தான் சிந்திய ஆனந்தக் கண்ணீரின் திரளான பிந்து சரஸ் கரையில் பகவானைத் தியானித்தபடி வாழ்ந்து வந்தார்.
அதே சமயம், நாரதர் சுவாயம்புவ மனுவைச் சந்தித்து, உங்கள் மகள் தேவஹூதிக்குத் தகுந்த வரன் கர்தமப் பிரஜாபதி ஆவார். அவரை பிந்து சரஸ் கரையில் சந்தியுங்கள் எனக் கூறினார். அழுக்கு படிந்த ரத்தினக் கல் போல் ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்த அருமா மனிதரான கர்தமரைச் சந்தித்தார் சுவாயம்புவ மனு.
கர்தமரை அணுகித் தனது மகளைத் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டார் மனு. கர்தமரும் பகவானின் வாக்குப்படி இசைந்தார். திருமணம் நடந்தது. மிகச்சிறந்த அடியாரான கர்தமருக்குப் பணிவிடை செய்வது தன் பாக்கியம் என்று கருதிய தேவஹூதியும், அடியார்க்கு அடியாராகத் தன்னை நினைத்து கர்தமருக்கு அனைத்துப் பணிவிடைகளும் செய்து வந்தாள்.
காலங்கள் கடந்தன. ஒரு நாள், கர்தமர் தியானத்தில் இருந்து கண் விழித்து, தேவஹூதியைப் பார்த்தார். தேவஹூதி மிகவும் வயதான நிலையில் இருப்பதைக் கவனித்தார். நமக்குச் சேவை செய்தே இவளுடைய இளமைக் காலம் கழிந்துவிட்டதே. இவளுக்காக நாம் ஒன்றுமே செய்யவில்லையே என வருந்தினார் கர்தமர். `உனது இளமை முழுவதும் என் பணிவிடையிலேயே கழிந்து விட்டதா’? என்று அவளிடம் கேட்டார்.
உங்களுக்குப் பணிவிடை செய்ததே எனக்கு ஆனந்தம்’ எனக் கூறினாள் தேவஹூதி. கர்தமர், தேவஹூதியை பிந்து சரஸில் நீராடச் சொன்னார்.நீராடியதும் தேவஹூதிக்கு இளமை திரும்பியது. வெளியே வந்து பார்த்தபோது, கர்தமரும் இளமையாகக் காட்சி அளித்தார்.இருவரும் திவ்வியமான விமானத்தில் ஏறி 100 வருடங்கள் உலகத்தைச் சுற்றினர். தேவஹூதி கர்தமரிடம்,எப்படி நமக்கு இளமையும், இளமைக் காலத்தில் கிடைக்கும் அனைத்து இன்பங்களும் இப்போது கிடக்கின்றன’ எனக் கேட்டாள். அதற்குக் கர்தமர், `நாராயணன் தர்மத்துக்கு விரோதமில்லாமல் அனைத்து இன்பங்களும் எனக்குக் கிடைக்கும் என வரம் கொடுத்தார். மேலும், அவரே மகனாக பிறப்பதாகவும் வரம் கொடுத்துள்ளார்’ எனக் கூறினார். பகவானிடம் அனைத்து இன்பங்களுக்கு உரிய கருவிகளும் இருக்கின்றன. அவனே நமக்கு எது நல்லதோ அதைக் கொடுப்பான்.
நாம் அவன் அருள் மட்டும் போதும் என மனதார வேண்டினால் நமக்குத் தேவையான உலகியல் இன்பமும் கொடுத்து மோட்சத்துக்கான வழியும் தருவான் என்றும் கூறினார் கர்தமர். இப்படி அடியார்கள் இன்பம் துய்ப்பதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தன்னகத்தே கொண்டவராக விளங்கி, உரிய நேரத்தில் அவற்றை அடியார்களுக்கும் தந்து அனுபவிக்கச் செய்வதால், திருமால் `நந்த’ என்று அழைக்கப் படுகிறார். நந்த என்றால் இன்பத்துக்குரிய கருவிகள் அனைத்தையும் தன்னகத்தே உடையவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 531-வது திருநாமம்.
“நந்தாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் குறையில்லா மகிழ்ச்சி நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
————
532. ஸத்யதர்மணே நமஹ (Sathyadharmaney Namaha)
தன்னைக் குறித்துத் தவம் செய்த கர்தமப் பிரஜாபதிக்குக் காட்சி அளித்த திருமால், அவருக்கு இல்வாழ்க்கையும் நன்றாக அமையும், முக்தியும் நிச்சயம் கிட்டும் என்று வாக்களித்து இருந்தார். அதன்படித் திருமாலின் அருளால், கர்தமப் பிரஜாபதியும், அவரது மனைவியான தேவஹூதியும் தங்கள் இல்வாழ்வை ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஒன்பது பெண் குழந்தைகள் பிறந்தனர். முன்பே திருமால் வாக்களித்து இருந்ததற்கேற்ப, அந்த ஒன்பது பெண்களுக்கும் ஏற்ற மாப்பிள்ளைகள் அமைந்தார்கள். அந்தந்த மாப்பிள்ளைகளுக்கு அவர்களை மணமுடித்து வைத்தார் கர்தமப் பிரஜாபதி.
இப்படிக் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றிய பின், துறவறம் மேற்கொள்வது குறித்துச் சிந்திக்கலானார் கர்தமர்.அப்போது தேவஹூதி கர்தமரிடம், “சுவாமி, நீங்கள் துறவறம் போக முடிவெடுப்பது போல் தெரிகிறது. நீங்கள் மட்டும் இறைவனை அறிந்து அவன் பாதங்களை அடைந்தால் போதுமா. அடியேனுக்கும் அந்த ஆசை இல்லையா. அதனால் அடியேனுக்கும் நீங்கள் இறைவனைக் குறித்து உபதேசம் செய்தருள வேண்டும். அதன்பின் துறவறம் பற்றிச் சிந்தியுங்கள்’’ என்று வேண்டிக்கொண்டாள்.
அதைக் கேட்ட கர்தமப் பிரஜாபதி, “நான் துறவறம் பற்றிச் சிந்தித்தது உண்மைதான். ஆனால், இப்பொழுது உடனே நான் துறவறம் மேற்கொள்ளப் போவதில்லை. பகவானின் வாக்குப்படி நமக்கு ஒரு பத்தாவது குழந்தை பிறக்கப் போகிறது. நமக்கொரு மகன் பிறப்பான். அவன் பகவானின் அம்சமாக பிறப்பான். இறைவனே வந்து நமக்கு மகனாகப் பிறக்கவுள்ள நிலையில், அவரைத் தரிசிக்காமல் நான் துறவறம் போக மாட்டேன். நமது மகனாக பிறக்கப் போகும் பகவானின் அம்சமான கபில வாசுதேவர், இப்போது உன் கருவில் உள்ளார். இறைவனை அடைவதற்குரிய வழிகளுள் ஒன்றான சாங்கிய யோக முறையை அந்தக் கபில வாசுதேவர் உலகத்துக்கே உபதேசிப்பார். அவரே உனக்கும் பகவானைப் பற்றி உபதேசிப்பார். அவர் உபதேசிக்கும் வரை காத்திரு’’ என்று சொன்னார்.
அவ்வாறே கருவுற்றிருந்த தேவஹூதிக்கு உரிய காலத்தில் அழகான ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை திருமாலின் அவதாரமான கபில வாசுதேவர் என்று உணர்ந்த கர்தமர், கபிலரை வணங்கிவிட்டு அதன்பின் துறவறம் சென்றார். காட்டில் இடைவிடாது திருமாலின் வடிவமான கபிலரைத் தியானித்த கர்தமர், உரிய காலத்தில் முக்தி அடைந்துவிட்டார். தேவஹூதிக்குக் கபில வாசுதேவர், ஆத்மா – பரமாத்மாவைக் குறித்த உபதேசமாகிய சாங்கிய யோகத்தை உபதேசித்துத் தேவஹூதி முக்தி பெறுவதற்கும் வழிகாட்டினார்.
அவளும் அவ்வாறே நற்கதி பெற்றாள். அதன்பின் கபில வாசுதேவர் உலகெங்கும் சாங்கிய சாஸ்திரத்தைப் பிரச்சாரம் செய்தார் என்கிறது ஸ்ரீமத் பாகவத புராணம். கர்தமருக்குத் திருமால் செய்த அனுக்கிரகங்கள் என்னென்ன என்று சற்றே யோசித்தால்,
* தேவஹூதி என்ற நல்ல மனைவி
* அவளுடன் கூடிய நல்ல இல்வாழ்க்கை
* ஒன்பது பெண் குழந்தைகள்
* அந்த ஒன்பது பெண்குழந்தைகளுக்கும் ஏற்ற மணமகன்கள்
* பத்தாவது குழந்தையாகத் திருமாலே அவதாரம்
* அவரே தேவஹூதிக்குச் செய்த ஞான உபதேசம்
* அவரது அருளால் கர்தம-தேவஹூதி தம்பதியருக்கு முக்தி.
ஆக, இவ்வுலகில் வாழும் நல்ல இல்வாழ்க்கை தொடக்கமாக, அவ்வுலகப் பெருவாழ்வாகிய முக்தி வரை தன் பக்தருக்கு என்னென்னவெல்லாம் தருவதாகத் திருமால் வாக்களித்தாரோ, அவை அனைத்தையும் குறைவின்றி அருளியிருக்கிறார் என்பதை இதன்மூலம் அறியமுடிகிறது. கர்தமருக்கு, தான் கொடுத்த அனைத்து வாக்குகளையும் நிறைவேற்றியதால், கபில வாசுதேவர் ஸத்யதர்மா என அழைக்கப்படுகிறார்.
ஸத்யதர்மா என்றால் தன் செயல்களிலே நேர்மையாக இருந்து கொடுத்த வாக்கு அனைத்தையும் நிறைவேற்றுபவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 532-வது திருநாமம்.
`ஸத்யதர்மணே நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் நேர்மையுடன் வாழ்ந்து கொடுத்த வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் மிக்கவர்களாக விளங்கத் திருமால் அருள் புரிவார்.
——————-
533. த்ரிவிக்ரமாய நமஹ (Trivikramaaya Namaha)
கர்தமப் பிரஜாபதிக்கும் தேவஹூதிக்கும் மகனாகத் திருமால், கபில வாசுதேவர் என்ற திருநாமத்துடன் அவதரித்தார். இறைவனே தங்களுக்கு மகனாக வந்தமையை எண்ணி, கர்தமரும் தேவஹூதியும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். கபிலரின் திருமேனி ஒளியாலே கர்தமரின் ஆசிரமம் ஒளிபெற்று விளங்கியது. அவர்களின் முகத்திலும் புன்னகை ஒளிவீசியது. இப்படி அவர்கள் கபிலரின் அவதாரத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கபில மூர்த்தியைத் தரிசிக்க விரும்பிய பிரம்மா, கர்தமரின் ஆசிரமத்திற்கு வந்தார். தனது மகனான கர்தமரிடம் பிரம்மா, “தந்தை சொல்வதைக் கேட்டு நடப்பதுதான் மகனுக்கு முதல் கடமை. உன் தந்தையான எனது பேச்சைக் கேட்டு நீ நடந்து, என் வாக்கை நீ நிறைவேற்றியதில் எனக்கு மகிழ்ச்சி’’ எனக் கூறினார்.
ஏனெனில், கர்தமருக்கு முக்தி அடைவதில்தான் விருப்பம் இருந்தது. ஆனால், தந்தையான பிரம்மா, பிரஜாபதி ஸதானத்தில் கர்தமரை அமர்த்தினார். உலகில் பிரஜைகளை உற்பத்தி செய்யும் பொறுப்பைக் கர்தமருக்கு அளித்தார். தந்தையின் கட்டளையையும் மீறாமல், அதே நேரம் முக்திக்கான வழியும் பாதிக்கப்படாமல் வாழ வேண்டும் என்ற விருப்பத்தில் பகவானை நோக்கித் தவம் புரிந்தார் கர்தமர்.
அந்த எண்ணத்தைப் பாராட்டும் விதமாகத்தான், பகவான் கர்தமருக்குக் காட்சி கொடுத்துத் தானே மகனாகப் பிறப்பதாகவும் வாக்கு கொடுத்தார். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், பிரம்மா கர்தமரைப் பாராட்டினார். மேலும், கர்தமனே உனக்கு மகனாகப் பிறந்திருப்பது பகவான் நாராயணன்தான். பொன்போன்ற குழல்கற்றைகளோடும், தாமரைக் கண்களோடும், திருவடியில் தாமரை முத்திரையோடும் இருக்கும் இந்தக் குழந்தையின் தோற்றத்தைப் பார். திருமாலுக்குரிய அடையாளங்களோடேயே இக்குழந்தை வந்து பிறந்துள்ளது. இவர்தான், உலகுக்கே `சாங்கிய யோகம்’ என்ற பெயரில் ஆத்ம-பரமாத்ம தத்துவங்களை உபதேசிக்கப் போகிறார். உன் தவத்துக்குப் பரிசாகவும், உன் பக்திக்கான வெகுமதியாகவும், உன் எண்ணத்துக்கான கௌரவமாகவும்தான், திருமாலுக்கே தந்தையாகும் பேறு உனக்குக் கிட்டியுள்ளது என்றார் பிரம்மா.
மேலும், கர்தமர் – தேவஹூதி இருவரையும் பார்த்து, இவர் உலகிலே சித்த புருஷர்களாலும், ஞானிகளாலும், சான்றோர்களாலும் போற்றப்படுபவராக விளங்கப் போகிறார். ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்று வேதங்களுக்குள்ளே யார் ஒருவன் நிறைந்துள்ளானோ, அந்த இறைவனேதான் உங்களுக்கு மகனாக வந்திருக்கிறான் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று பிரம்மதேவர் கூறினார்.
பொதுவாக, நான்கு வேதங்கள் இருந்தாலும்கூட, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸாமவேதம் ஆகிய மூன்றைப் பிரதானமாக எடுத்து, அவற்றை `த்ரயீ’ என்றும் மூன்றுவேதம் என்றும் சொல்வது வழக்கம். தந்தையின் வாக்கை நிறைவேற்றும் ஒவ்வொரு தனயனையும், தான் விரும்பி ஆதரிப்பேன் என்று உணர்த்தவே திருமால் தந்தை சொல்லில் நிலைநிற்கும் கர்தமருக்கு மகனாகத் திருமால் தோன்றினார்.
ஸம்ஸ்க்ருதத்தில், `த்ரி’ என்றால் மூன்று, `விக்ரம’ என்றால் நிறைந்திருப்பவர். `த்ரிவிக்ரம’ என்றால் மூன்று வேதங்களிலும் நிறைந்திருப்பவர். மூன்று வேதங்களில் நிறைந்த திருமாலே கபில மூர்த்தியாக வந்தபடியால், த்ரிவிக்ரம என்று கபிலருக்குத் திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 533-வது திருநாமம்.
`த்ரிவிக்ரமாய நமஹ’ என்று தினமும் சொல்லி வந்தால், வேதங்களின் பொருளை உணரும் பக்குவத்தை நமக்குத் திருமால் தந்தருள்வார்.
——————–
534. மஹர்ஷயே நமஹ(Maharshaye Namaha)
கர்தமர் தமக்கு மகனாகத் தோன்றிய கபில வாசுதேவரைத் தரிசித்து, அவரைத் துதித்துவிட்டு, துறவறம் சென்றார். முன்பே தேவஹூதி தன் கணவரான கர்தமரிடம் ஆத்ம தத்துவம் குறித்த உபதேசம் செய்யுமாறு பிரார்த்தித்திருந்த போது, நம் மகனாகிய கபில வாசுதேவர், உனக்கு உபதேசிப்பார் என்று முன்பே கர்தமர் கூறியிருந்தார். அந்த அடிப்படையில், தனது மகன் கபிலரிடம் தனக்கு உபதேசம் செய்தருளுமாறு தேவஹூதி பிரார்த்தித்தாள். கபில வாசுதேவர் இறைவனை அடையும் வழியாகிய பக்தியோகத்தை உள்ளடக்கிய சாங்கிய சாஸ்திரத்தைத் தேவஹூதிக்கு உபதேசித்தார். அவ்வாறு பக்தியிலே ஈடுபடுபவன் ஆத்மாவைக் குறித்த ஞானத்தோடும், உலகியல் விஷயங்களில் வைராகியத்தோடும் திகழ வேண்டும் என்றெல்லாம் உபதேசம் செய்துள்ளார். கருவிலே குழந்தை உருவாகி வருவதை விஞ்ஞானப் பூர்வமாகத் தேவஹூதிக்கு உபதேசிக்கிறார் கபிலர். கருவில் இருக்கும் குழந்தைக்கு முதல் மாதத்தில் தலை உருவாகிறது.
இரண்டாம் மாதத்தில் கை கால்கள் வேறுபட்டுத் தெரியத் தொடங்குகின்றன. மூன்றாம் மாதத்தில் நகங்கள் ரோமங்கள், எலும்புகள், தோல் உருவாகின்றன. மூன்று மாதம் நிறைவடைந்தவாறே ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பது தெளிவாகிறது.நான்காம் மாதத்தில் ரத்தம், மாமிசம் ஆகிய அனைத்துமே நன்றாக உருவாகிவிடுகின்றன. ஐந்தாம் மாதத்தில் பசி தாகத்தை நன்றாக உணர்கிறது குழந்தை.
ஆறாம் மாதத்தில் குழந்தை நன்றாக அசையத் தொடங்குகிறது. ஆறு மாதக் குழந்தையாக சிசு இருக்கும் போது, பகவான் அதற்கு ஒரு காணொலிக் காட்சியைக் காட்டுகிறார். இதுவரை அந்த ஜீவாத்மா எடுத்து பிறவிகள், அவற்றில் செய்த பாபங்கள், அதற்காகப் பெற்ற தண்டனைகள் ஆகியவற்றைக் காணொலியில் காட்டுகிறார் இறைவன். அதைப் பார்க்கும் அக்குழந்தை, இப்பிறவியையாவது வீணடிக்காமல் இறைவனை நோக்கி மனதைச் செலுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை மேற்கொள்கிறது. அதன்பின் பத்து மாதம் நிறைவடையும் வேளையில், `ஸூதி மாருதம்’ என்ற ஒரு காற்று குழந்தையை வந்து பீடித்துக் கொள்கிறது.
அதுதான் குழந்தையின் தலையைக் கீழ் நோக்கித் திருப்பி, பிரசவத்துக்கு வழிவகை செய்கிறது. ஆனால் அந்தக் காற்றால் பீடிக்கப்பட்டவாறே, குழந்தை கருவுக்குள், தான் மேற்கொண்ட தீர்மானங்களை எல்லாம் மறந்துவிடுகிறது. பக்தியில் ஈடுபடவேண்டும் என்பதை மறந்து, எல்லாரையும் போலே உலகியல் விஷயங்களிலே ஈடுபடத் தொடங்கிவிடுகிறது.
எனவே அப்படியெல்லாம் மனதை அலையவிடாது, மனதை இறைவனின் திருவடிகளில் ஈடுபடுத்தி, முக்தி அடைவதற்கான வழியில் நிலைநிற்க வேண்டும் என்று பலவாறு உபதேசம் செய்தார் கபில வாசுதேவர். ரிஷி என்றால் சாமானியரின் கண்களுக்குத் தெரியாத விஷயங்களையும், காணவல்ல நுண்ணிய பார்வை உடையவர் என்றும் பொருள். சாமானியரால் காணமுடியாத குழந்தையின் உற்பத்தி, கருவின் வளர்ச்சி போன்ற விஷயங்களில் இருந்து தொடங்கி, ஆத்மா முக்தி அடைவது வரை அனைத்து சூட்சுமமான விஷயங்களையும் பிரத்தியட்சமாகக் கண்டு அவற்றை உபதேசமும் செய்தபடியால், கபில வாசுதேவர் `மஹர்ஷி’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 534-வது திருநாமம்.
`மஹர்ஷயே நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல நுண்ணிய பார்வை கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
—————
535. கபிலாசார்யாய நமஹ (Kapilaachaaryaaya Namaha)
கபில வாசுதேவர் தேவஹூதிக்குப் பல நுண்ணிய விஷயங்களை உபதேசம் செய்தருளினார். அவற்றுள் பகவானின் திருவடிகளை அடைய வேண்டும் என்றால் நாம் பக்தி யோகத்தில் ஈடுபடவேண்டும் என்று அவர் செய்த உபதேசம் மிகவும் முக்கியமானதாகும். காதலோடு இறைவனைத் தியானிப்பதற்குத் தான் பக்தி யோகம் எனப் பெயர். இதற்கு ஞானம், வைராக்கியம் என இரண்டு அங்கங்கள் உள்ளன. ஞானம் என்றால் பகவானைப் பற்றிய புரிதல். வைராக்கியம் என்றால் உலகியல் விஷயங்களில் பற்று வைக்காமல், பகவானிடத்தில் ஈடுபடுதல். இவற்றோடு கூடிய பக்தி யோகத்தில் ஈடுபட்டால் பகவானை அடையலாம் என தேவஹூதிக்கு உபதேசம் செய்தார் கபிலர்.
உபதேசத்தைப் பெற்றுக் கொண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள் தேவஹூதி. மிகப்பெரிய ஞானப் பொருளைத் தனக்கு உபதேசித்தருளிய கபிலருக்குக் கைம்மாறு அறியாது மௌனத்தில் ஆழ்ந்தாள். கபிலரோ, புன்னகையோடும் கையில் உபதேச முத்திரையோடும் பிரசன்னமாக அவள் முன்னே விளங்கினார்.இந்த நிலையில், கபிலர் தேவஹூதியிடம், “தாயே உங்களுக்கு நான் உபதேசித்த இந்த சாங்கிய யோகத்தை, இனி உலகிற்கு உபதேசம் செய்யப் போகிறேன். அதனால், எனக்கு விடைகொடுங்கள் என்றார். தன் மகனைப் பிரியப் போகிறோமோ என்று எண்ணித் தேவஹூதி மிகவும் வருந்தினாள்.
ஆனால், கபிலர் தனது நிலையையும் தனக்கு அடுத்திருக்கும் அவதார நோக்கத்தையும் தேவஹூதிக்குச் சூட்சுமமாக உணர்த்தி அருளினார். அதனால் தேவஹூதியும் ஆறி இருந்தாள். தாயிடம் விடைபெற்றுக் கொண்டு கபிலர், உலகில் சாங்கிய யோகப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அதே நேரம் கர்தமரின் ஆசிரமத்தில் தங்கி இருந்த தேவஹூதி, தன் மகனான கபில வாசுதேவரின் வடிவத்தை இடைவிடாது தியானித்தபடி பக்தி யோகத்தில் ஈடுபட்டாள்.
அந்த பக்தியோகத்தில், சித்தி பெற்றவாறே உரிய காலத்தில் மோட்சமாகிய வைகுண்டத்தை அடைந்தாள் தேவஹூதி.தேவஹூதி சித்தி அடைந்த இடம் சித்தபதம் எனப் பெயர் பெற்றது. அவள் சரீரம் ஒரு நதியாக மாறியது. எத்தனை மனிதர்கள் வந்தாலும் போனாலும் நதி என்பது இடைவிடாமல் ஓடிக் கொண்டே இருப்பது போல், தனது ஞானமும் நதிபோல ஓடிக் கொண்டே இருக்கும் என்பதன் அடையாளமாக நதியாகவே ஓடத் தொடங்கினாள் தேவஹூதி.
இப்படித் தனது தாய்க்குக் குருவாக இருந்து அவளை மோட்சத்தில் சேர்த்தார் கபில வாசுதேவர். அதன்பின் உலகுக்கே குருவாக இருந்து உலகத்தோர் அனைவருக்கும் நல் உபதேசங்களை அருளினார். கபில என்ற சொல் பழுப்பு நிறத்தைக் குறிக்கும். ஆசார்யர் என்றால் குரு. பழுப்பு நிறம் கொண்டவராகத் தோன்றி, சிறந்த ஆசார்யராகத் திகழ்ந்து, தேவஹூதி உள்ளிட்ட பலரை பக்தியோகத்தில் நிலைநிறுத்தி அவர்களின் முக்திக்கு வழிகாட்டியதால், கபில மூர்த்தி, `கபிலாசார்யா’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 535-வது திருநாமம்.
`கபிலாசார்யாய நமஹ’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குக் குருவருளும், திருவருளும் நிறையும்.
———-
————————
537. மேதினீபதயே நமஹ (Medhineepathaye Namaha)
துருவ மகாராஜாவின் வம்சத்திலே அங்கன் என்ற மகாராஜா தோன்றினார். அவர் துருவனைப் போலவே நல்லொழுக்கம் கொண்டவராகவும், மிகவும் புகழ் பெற்றவராகவும் விளங்கினார். அவருக்கு சுனீதா என்ற மனைவி இருந்தாள். அங்கனுக்கும் சுனீதாவுக்கும் வேனன் என்ற மகன் பிறந்தான். இந்த வேனன் இளமைக்காலம் முதலே தீய ஒழுக்கம் கொண்டவனாக இருந்தான், நல்லோர்களைத் துன்புறுத்திவந்தான். இப்படித் தவறு செய்துவந்த தன் மகன் அங்கனைப் பார்த்து வேனன், நம் குல முன்னோர்கள் எவ்வளவு உயர்ந்த நல்லொழுக்கத்தையும் நன்னெறிகளையும் கடைப்பிடித்து வந்தார்கள். அவர்களின் பெருமைக்கு இழுக்கு நேரும்படி நீ இப்படித் தவறுகள் செய்யலாமா, வேண்டாம். திருந்தி வாழ்வாயாக என்றெல்லாம் அறிவுரை கூறினான். ஆனால் வேனன் இவற்றை எல்லாம் கேட்பதாகத் தெரியவில்லை.
மகனை நினைத்து மனம் வருந்திய அங்க மகாராஜா, காட்டுக்குச் சென்று துறவறம் மேற்கொண்டார். இப்பொழுது நாட்டை ஆள மன்னரே இல்லாமல் போனது. பிருகு முனிவர் உட்பட மற்ற முனிவர்களும் மகாராணி சுனீதாவைச் சந்தித்தனர். காட்டுக்குச் சென்ற அங்க மகாராஜாவின் மனநிலை எங்களுக்குப் புரிகிறது, ஆனால் நாட்டுக்கு ஒரு ராஜா வேண்டும், உங்களுக்கு இருப்பது ஒரே ஒரு மகன் தான். ஆதலால் வேனனுக்குப் பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள்.
மகாராணி சுனீதாவும் அதற்கு இசைந்தாள். வேனனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஆட்சியில் அமர்ந்த வேனன், அப்பாவி மக்களுக்கு வரி விதித்தான், இயற்கை வளங்களைச் சுரண்டினான், முனிவர்களைத் துன்புறுத்தினான், வேதம் சொல்லத் தடை விதித்தான், தீயவர்களை நன்றாக வாழ வைத்தான். இப்படி பூமிக்குப் பலவிதத்திலே தொல்லை கொடுத்தான் வேன ராஜா.
பொறுமைக்குப் பெயர் போன பூமிதேவியே ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள கனிம வளங்கள், இயற்கை வளங்கள், நிலவளம், நீர் வளங்களை மறைத்துக்கொண்டாள். இப்பொழுது முனிவர்கள் அனைவரும் கோபம்கொண்டு தங்களின் தவ சக்தி என்னும் தீயை வேனன் மீது ஏவினார்கள். அந்த அக்னியில் எரிந்து வேனன் மாண்டுபோனான்.இப்பொழுது அடுத்த ராஜா யார் என்ற கேள்வி வந்தது. முனிவர்கள் பிரம்மாவின் உதவியை நாடினார்கள். அப்போது பிரம்மா அவர்களுக்கு வழி சொன்னார் – முனிவர்களே, லோக ஷேமத்துக்காகப் பாதாள லோகத்தில் கபில வாசுதேவர் தவம் புரிகிறார். கபிலரின் உதவியை நாடுங்கள். அவர் வழி சொல்வார் என்று பிரம்மாஅறிவுறுத்தினார்.
கபிலரின் உதவியை முனிவர்கள் நாட, நீங்கள் வேனனின் உடலை அவன் தாயிடம் இருந்து வாங்கி அவனது கையைக் கடையுங்கள். அதிலிருந்து பகவானின் அம்சாவதாரமாக ப்ருது என்பவரும் மஹாலட்சுமியும் அம்சமாக அர்சிஸ் என்பவளும் தோன்றுவார்கள் எனக் கூறினார்.அவ்வாறே முனிவர்களும் வேனனின் உடலைக் கடைய, ப்ருது சக்ரவர்த்தியும் அர்சிஸ்ஸும் தோன்றினார்கள். வேனனின் கொடுங்கோல் ஆட்சியால் கோபம்கொண்ட பூமிதேவி, பசு வடிவில் ஒளிந்திருந்தாள். அவளிடம் சென்ற ப்ருது சக்கரவர்த்தி, மீண்டும் வளங்களைச் சுரக்க வேண்டும் என்று கேட்டார். பகவானே கேட்பதால் பூமியால் மறுக்க முடியவில்லை.
நான் மீண்டும் வளங்களைச் சுரக்கிறேன், ஆனால் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். அதனை யாரும் அழிக்கவோ, சுரண்டவோ கூடாது, அதனை அழித்தால் என்ன ஆகும் எனக் காண்பிக்கவே நான் வளங்களை மறைத்துக் கொண்டேன் என்று சொன்னாள் பூமிதேவி. பின் பசு வடிவில் இருந்த பூமியிடம் இருந்து வளங்களை எல்லாம் கறந்தார் ப்ருது. ப்ருது சக்கரவர்த்தி பூமியிடம் இருந்து வளங்களைக் கடைந்து எடுத்ததால் தான் பூமி தேவி ப்ருத்வீ எனப் பெயர் பெற்றாள்.
இப்படிப் பூமியில் எல்லா வளங்களும் நிறைய வேண்டும் எனப் பாதாளத்தில் உலக நன்மைக்காக தவம் புரிந்தும், அறிவுரைகளை வழங்கியும் உலகத்தைப் பாதுகாக்கும் கபில வாசுதேவர் மேதினீபதி என அழைக்கப்படுகிறார். மேதினீ – பூமி, பதி – தலைவர், மேதினீபதி – பூமிக்குத் தலைவர்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 537-வது திருநாமம்.“மேதினீபதயே நமஹ’’ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு எல்லா வளங்களும் நிறையும்படித் திருமால் அருள்புரிவார்.
————
538. த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)
(538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்)பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டு விட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும் என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா.
பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார். அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால், அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார். அதன்பின் பிரம்மா பழையபடி உலகின் படைப்புத் தொழிலைநடத்தத் தொடங்கினார்.
இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.
வராகப் பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது. வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும்.
இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. ஓம் என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள்.அவற்றுள் அ என்பது பராமாத்வைக் குறிக்கிறது, ம என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, உ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது.
இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.த்ரிபத என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம்“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.
——–
538.(A). த்ரிபதாய நமஹ(Tripadhaaya Namaha)
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்பு அடியேனும் அடியேனின் சில நண்பர்களும் அடியேனின் வீட்டில் அமர்ந்து, மடிக்கணினியில் கிரிக்கெட் விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். EA Sports cricket 07 விளையாட்டைப் பெருமாபாலும் பல இளைஞர்கள் அறிவார்கள். அச்சமயம் அடியேனின் ஆசார்யனான டாக்டர் ஸ்ரீஉ.வே. கருணாகராச்சாரியார் ஸ்வாமி, அடியேனின் இல்லத்துக்கு எழுந்தருளினார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிக்கவரான கருணாகராச்சாரியார் அடியேனைப் பார்த்து என்ன விளையாடுகிறாய் என்று கேட்டார். மடிக்கணினியில் விளையாடும் மட்டைப்பந்து ஆட்டம் என்று அதைப் பற்றி அவரிடம் சொன்னேன். நானும் பார்க்கிறேன், நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள் என்று சொல்லிவிட்டு, ஸ்வாமியும் அமர்ந்து பார்க்கத் தொடங்கினார்.
கொஞ்ச நேரத்தில், ஆஹா இந்த மடிக்கணினி கிரிக்கெட் விளையாட்டு தத்வ த்ரயத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறது என்று வியந்து சொன்னார். பெரியோர்கள் எதைப் பார்த்தாலும் இறைவனோடு தொடர்பு படுத்திப் பார்ப்பார்கள் என்று கேள்விப் பட்டுள்ளேன். நீங்கள் எப்படி விளையாட்டில் கூடத் தத்வ த்ரயத்தைக் காண்கிறீர்கள் என்று அடியேன் வியப்போடு சுவாமியிடம் கேட்டேன். அதற்கு அவர் விடையளித்தார்; உலகிலுள்ள அறிவில்லாத ஜடப் பொருள்களுக்கு அசேதனம் என்று பெயர். அறிவுள்ள ஜீவாத்மாக்களான நமக்கு சேதனம் என்று பெயர்.
இந்த அசேதனங்களையும் சேதனர்களையும் ஆளும் இறைவனுக்கு, ஈச்வரன் என்று பெயர். அசேதனம், சேதனம், ஈச்வரன் ஆகிய மூவிதத் தத்துவங்களையே “தத்வ த்ரயம்’’ என்று குறிப்பிடுகிறோம். இங்கே உன் விளையாட்டை எடுத்துக் கொண்டால், உனது மடிக்கணினிதான் ஜடப்பொருளாகிய அசேதனம். அதற்கு ஞானம் என்பது கிடையாது. அந்த மடிக்கணினியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களே உலகில் நாம் காணும் ஜீவாத்மாக்களாகிய சேதனர்கள் ஆவார்கள். ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு மடிக்கணினியையும் அதன் திரையில் தோன்றும் வீரர்களையும் இயக்கும் நபர் ஈச்வரனின் ஸ்தானத்தில் உள்ளார்.
நாம் ஜாய்ஸ்டிக்கைக் கையில் வைத்துக் கொண்டு கணினியையும் அதில் தெரியும் வீரர்களையும் இயக்குவது போலே, இறைவன் தன் சங்கல்பத்தால் உலகையும் அதில் வாழும் உயிர்களையும் இயக்கிக்கொண்டிருக்கிறார். ஆனால், உணர்ச்சிவசப் பட்டுப் பார்ப்பவர் ஏதோ நிஜமாகவே ஒரு நபர் திரையில் இருந்து சிக்ஸர் அடிப்பதாக நினைக்கக் கூடும். அப்படித்தான் நாமெல்லோரும் ஏதோ நாமே நம் முயற்சியால் செயல்படுவதாக எண்ணுகிறோம்.
ஆனால், உண்மையில் இறைவன்தான் நம்மை இயக்குகிறான் என்பதை ஞானிகளே அறிவார்கள் என்று அழகாக விளக்கினார். இந்தக் கருத்தையே கபில முனிவரும் தமது சாங்கிய யோகத்தில் உபதேசம் செய்தார். போக்தா என்பது உலகிலுள்ள இன்பங்களை அனுபவிக்கும் ஜீவாத்மாக்களைக் குறிக்கும். போக்யம் என்பது இவ்வுலகில் நம்மால் அனுபவிக்கப்படும் ஜடப்பொருள்களைக் குறிக்கும். நியந்தா என்பது இவர்களை இயக்கி ஆளும் இறைவனைக் குறிக்கும். இந்த மூன்று தத்துவங்களையும் தமது உபதேசங்கள் மூலம் தெளிவாக விளக்கியதால், கபில வாசுதேவர் த்ரிபத – மூன்று தத்துவங்களை விளக்கியவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-A திருநாமம்.
இதே திருநாமம் வராகப் பெருமாளின் பெருமையைச் சொல்வதாகவும் அமைந்துள்ளது. அதை அடுத்த விளக்கத்தில் காண்போம்.
“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நமக்கும் மூன்று தத்துவங்களைப் பற்றிய தெளிந்த ஞானம் திருமாலின் திருவருளால் உண்டாகும்.
————–
538.(B) த்ரிபதாய நமஹ (Tripadhaaya Namaha)
538-வது திருநாமம் முதல் அடுத்த சில திருநாமங்கள் வராக அவதார வைபவம்பிரளயக் காலத்தில் பிரளயக் கடல் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து விடும். அந்தப் பிரளயக் கடலுக்குள் பூமியை மறைத்து வைத்துவிட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். பிரளயக் கடலுக்குள் பூமி சிக்குண்டுவிட்டதால், பிரம்மாவால் மேற்கொண்டு உலகில் உயிர்களைப் படைக்க முடியாத நிலை ஏற்பட்டது. “திருமாலே நாராயணா நீதான் பூமியை மீட்டுத் தர வேண்டும்’’ என்று திருமாலிடம் வேண்டினார் பிரம்மா. பிரம்மாவின் மூக்குத் துவாரத்தில் இருந்து ஒரு பன்றி வெளியே வந்து குதித்தது. அந்தப் பன்றி வேறுயாரும் அன்று, சாட்சாத் திருமாலே உலகைக் காப்பதற்காகப் பன்றி வடிவம் எடுத்து வராக மூர்த்தியாகத் தோன்றியுள்ளார். அந்த வராகப் பெருமாள் கிடுகிடுவென மலையளவு வளர்ந்து மஹாவராகனாக விளங்கினார்.
அந்த வராக மூர்த்தியின் திருமேனியிலேயே வேள்விகள், யாகங்கள், வேதப் பகுதிகள் அனைத்தும் இருந்தன. அதனால் அவரை யக்ஞ வராகன் என்று முனிவர்கள் அழைத்தனர். வராகப் பெருமாள் பிரளயக் கடலுக்குள் சென்று ஒரு பன்றி எப்படி தனது கோரைப் பற்களால் கிழங்கை கொத்தி எடுக்குமோ அதைப்போல் பூமியை மீட்டு வந்தார். அவரைத் தடுக்கப் பார்த்த ஹிரண்யாட்சனையும் அழித்தொழித்தார்.
அதன்பின் பிரம்மா பழையபடிஉலகின் படைப்புத் தொழிலை நடத்தத் தொடங்கினார். இப்படிப் பூமியை மீட்டுத் தந்த வராகப் பெருமானுக்கு ரிஷிகள் எல்லாரும் பல்லாண்டு பாடினர். மூன்று வேதங்களையும், யாக யக்ஞங்களையும் உன் சரீரமாகக் கொண்டிருப்பவனே, உனக்குப் பல்லாண்டு என்று பாடினர் முனிவர்கள். வேதங்களின் எந்தெந்தப் பகுதிகள் வராகனின் திருமேனியில் எந்தெந்த அங்கங்களாக இருந்தன என்பதை ஸ்ரீமத் பாகவத புராணத்தில் சுகமுனிவர் வர்ணித்துள்ளார்.
வராகப்பெருமானின் தோளாக காயத்ரி மந்திரம் இருக்கிறது, ரோமங்களாகத் தர்பைப் புல் இருக்கிறது, கண்களாக நெய் இருக்கிறது, அவரின் உதடாக சிருக் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, மூக்காக சிரவம் என்னும் யாகப் பாத்திரம் இருக்கிறது, இடா என்னும் பாத்திரம் அவரின் வயிறாக இருக்கிறது, சமசம் என்னும் பாத்திரம் அவரின் காதுகளாக இருக்கிறது, அவரின் நாவிலே சோம பாத்திரம் இருக்கிறது, பலப்பல யாகங்களே அவருக்குப் பற்களாக இருக்கிறது, கோரைப் பல்லாக யாகத்தின் யூபஸ்தம்பம் இருக்கிறது.
வராகப் பெருமாள் நாக்கை வெளியே நீட்டினால் யாகத்தின் அக்னி ஜுவாலை வெளியே வரும். இத்தகைய திருமேனி படைத்த வராகப் பெருமானின் முதுகிலே மூன்று திமில்கள் உண்டு. அந்தத் திமில்கள் ஓம்காரமாகிய பிரணவத்தில் இருக்கும் மூன்று எழுத்துக்களைக் குறிக்கின்றன. `ஓம்’ என்னும் பிரணவத்தை அ, உ, ம என்று மூன்று எழுத்துகளாகப் பிரிப்பார்கள். அவற்றுள் `அ’ என்பது பரமாத்மாவைக் குறிக்கிறது, `ம’ என்பது ஜீவாத்மாவைக் குறிக்கிறது, `உ’ என்பது பரமாத்மாவுக்கே ஜீவாத்மா தொண்டன் எனக் காட்டுகிறது. இத்தத்துவத்தை உணர்த்தும் ஓம் என்னும் பிரணவம் வேதங்களிலும், வேள்விகளிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், அந்த வேதங்களையும் யாகங்களையும் தனது திருமேனியாகக் கொண்டிருக்கும் வராகப் பெருமாள், பிரணவத்தை தனது முதுகில் மூன்று திமில்களாகக் கொண்டிருக்கிறார்.
`த்ரிபத’ என்றால் மூன்று திமில்களை உடையவர் என்று பொருள். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துகளைக் குறிக்கும் மூன்று திமில்களை முதுகிலே கொண்டிருக்கும் வராகப் பெருமாள் த்ரிபத என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 538-வது திருநாமம் (B).
“த்ரிபதாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், பிரணவத்தின் ஆழ்பொருளை உணரும் ஞானநிலையை ஞானப் பிரானாகிய வராகமூர்த்தி நமக்குத் தந்தருள்வார்.
————-
539. த்ரிதசாத்யக்ஷாய நமஹ (Thridhashaadhyakshaaya Namaha)
படைப்புக் கடவுள் என்னும் ஸ்தானத்தில் திருமாலாலே அமர்த்தப்பட்ட பிரம்ம தேவர், தேவர்கள் முனிவர்கள் ஆகிய ஒவ்வொரு குழுவையும் படைத்து வந்தார். அதைத் தொடர்ந்து மனிதர்களைப் படைக்க முற்பட்டார் பிரம்மா. முதற்கண் தனது உடலில் இருந்து சுவாயம்புவ மனு என்ற ஆணையும் சதரூபா என்ற பெண்ணையும் உருவாக்கினார். ஆனால், அந்த சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் வசிப்பதற்குரிய இடமே இல்லை.
மனிதர்கள் வாழ வேண்டிய மொத்த பூமியின் நிலப்பரப்பையும் ஊழிக் கடலுக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான் ஹிரண்யாட்சன் என்ற அசுரன். நாங்கள் வாழ்வதற்குரிய இடத்தைக் காட்டுங்கள் என்று சுவாயம்புவ மனுவும் சதரூபாவும் பிரம்மாவிடம் வேண்டினார்கள்.
அப்போது பிரம்மா, இந்நிலையில் என்னைப் படைத்த என் தந்தையான நாராயணன் ஒருவனால்தான் நம்மைக் காக்க முடியும் என்று சொல்லி விட்டு, மனதாரத் திருமாலை வேண்டினார். அப்போது கட்டை விரல் அளவுள்ள பன்றி ஒன்று பிரம்மாவின் மூக்கு துவாரத்தில் இருந்து வெளியே வந்து குதித்தது. அதுதான் திருமாலின் பன்றி வடிவிலான வராக அவதாரம். அதன் பின் பேருருவம் தாங்கிய வராகப் பெருமான், ஊழி வெள்ளத்துக்கு உள்ளே சென்று, ஹிரண்யாட்சனை அழித்து பூமியை மீட்டுத் தந்தார்.அதைக் கண்ட தேவர்கள், வராகனை வழிபட்டு வராகனுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தார்கள்.
தேவர்களுக்கு யாகத்தில் ஹவிர்பாகம் கிடைக்க வேண்டும் என்றால், பூமியிலே யாக யஜ்ஞங்கள் நிறைய நடக்க வேண்டும். அதற்கு அடிப்படையில் பூமி நன்றாக நிலைநிற்க வேண்டுமல்லவா. எனவே வராகர் பூமியை மீட்டுத் தந்தமையால்தான் தேவர்கள் அத்தனை பேரும் க்ஷேமம் அடைந்தார்கள். வேத கோஷம் என்றென்றும் பூமியில் ஒலிக்கும்படி வராகர் அருள் செய்தமையால் ரிஷிகள் க்ஷேமம் அடைந்தார்கள். தன் திருமேனியிலேயே யாக யஜ்ஞங்களைக் கொண்டவராக வராகர் விளங்கியதால், பெரிதாக வேத அறிவில்லாத நம் போன்றோரும் அவர் வடிவைக் காணும் போதே வேதங்களைப் பற்றியும் யாகங்களைப் பற்றியும் அறியும்படிச் செய்கிறார் வராகப் பெருமான். இப்படி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது உடனே அவர்களை வந்து காப்பதால், வராகர் `த்ரிதசாத்யக்ஷ’ என்று அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 539-வது திருநாமம். த்ரிதச என்ற சொல் தேவர்களைக் குறிக்கிறது. தச என்றால் பத்து, த்ரி என்றால் மூன்று, த்ரிதச என்றால் முப்பது என்று பொருள். மொத்தம் முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தாலும், அந்த 33 கோடி என்ற எண்ணிக்கையைச் சுருக்கமாக 30 என்று குறிப்பிட்டு த்ரிதச என்று சொல்வது வழக்கம்.
அத்யக்ஷ என்றால் பொதுவாகத் தலைவர் என்று பொருள். இங்கே ஆபத்தில் உதவுபவர் அத்யக்ஷ என்று பொருள்படுகிறது. அந்த வகையில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் உடனே வந்துதவும் தலைவராக விளங்கும் வராகப் பெருமாள் த்ரிதசாத்யக்ஷ என்று அழைக்கப்படுகிறார்.
“த்ரிதசாத்யக்ஷாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை வராகப் பெருமாள் அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காத்தருள்வார்.
—————
540. மஹாச்ருங்காய நமஹ (Mahaashrungaaya Namaha)
ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் பகவானைப் பார்த்து, உன்னுடய அவதாரங்களிலேயே வராக அவதாரம் அளவில் பெரியதா அல்லது திரிவிக்கிரம அவதாரம் அளவில் பெரியதா எனக் கேட்டார். பகவான் ஆழ்வாரிடம், தாங்கள் தலைசிறந்த பக்தரல்லவோ. பக்தரான நீங்கள் உங்கள் அனுபவத்திலிருந்து இதற்கான விடையை எனக்குக் கூறுங்கள் என்றார். ஆழ்வாரோ, பகவானே இப்போதே அந்த இரண்டு அவதாரங்களின் அனுபவத்தையும் எனக்குத் தந்தால், நான் ஒப்பிட்டுப் பார்த்து இதற்கான விடையைத் தருகிறேன் எனக் கூறினார். பெருமாள் வராகனாக பூமியை குடைந்தெடுக்கும் காட்சியைப் பொய்கை ஆழ்வாருக்குக் காண்பித்தார். மேலும், ஓங்கி உலகளந்த உத்தமனாகவும் காட்சி அளித்தார்.
பொய்கை ஆழ்வார் இரண்டு அவதாரங்களையும் சேவித்தார். இப்போது தமது பாட்டில் இதற்கான விடையைச் சொல்கிறார் பொய்கையாழ்வார். பொய்கை ஆழ்வார் அருளிய முதல் திருவந்தாதியின் 9-வது பாசுரமாக இது அமைந்துள்ளது.
பொருகோட்டு ஓர் ஏனமாய்ப் புக்கிடந் தாய்க்கு அன்று உன்
ஒருகோட்டின் மேல்கிடந்தது அன்றே – விரிதோட்ட
சேவடியை நீட்டித் திசைநடுங்க விண்துலங்க
மாவடிவின் நீயளந்த மண்
ஓங்கி உலகளந்த பொழுது உன் திருவடி அளவிற்கு இந்த மண்னுலகம் இருந்தது. அதனால் உன் ஒரு திருவடியால் இந்த மண்ணுலகத்தை அளந்தாய். அதே சமயம் நீ வராகனாக அவதரித்து இந்த பூமியை மீட்கும் பொழுது உன் கோரைப் பற்களுக்கு நடுவே ஒரு சிறிய மணி இருப்பது போல்தான் பூமி இருந்தது. திரிவிக்கிரமனாக அவதரித்த பொழுது உன் முழுப் பாத அளவிற்கு இருந்த பூமி, வராகனாக அவதரித்த பொழுது கோரைப் பற்களுக்கு நடுவே சிறுமணி இருப்பது போல் சிறியதாகக் காட்சி அளித்தது.
இதன் மூலம் வராகப் பெருமாளாக அவதரித்த வடிவே பெரியது என்று பாட்டில் கூறினார். இப்படிப் பூமியின் அளவை வைத்துப் பெருமாளின் வடிவைக் கணக்கிட்டார் பொய்கை ஆழ்வார். ஏன் வராக பெருமாள் இவ்வளவு பெரிய வடிவை எடுத்தார் என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை சுவையான விளக்கம் அளித்துள்ளார். பல தானங்கள் செய்யும் பெரிய செல்வந்தர், தன் வீட்டுக்கு நான்கு நபர்கள் சாப்பிட வந்தால்கூட நாற்பது நபர்கள் சாப்பிடும் அளவிற்கு உணவு தயாரிப்பாராம். அது போல வராக பெருமாள் கருணையே வடிவானவர்.
தனது திருமேனியின் அழகையே அடியார்களுக்கு விருந்தாகக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவதரித்தவர். அதனால்தான் அடியார்கள் நன்றாக அனுபவிக்கட்டும் என்று கருதி மிகப் பெரிய வடிவத்தை எடுத்தார். வராகப் பெருமாளின் ஒரு பல் மொத்த பூமியைத் தாங்குகிறது என்றால் எவ்வளவு பெரிய வடிவம். ஆக, பூமியின் வடிவைக் கருத்தில் கொள்ளாமல், பூமியை மீட்க இந்த வடிவம் போதும் என்று கணக்கிடாமல், தன் அளவற்ற கருணையின் அளவைக் கருத்தில் கொண்டு பூமியே தன் பற்களில் சிறுமணி போல் இருக்கும்படித் தோன்றியதால், வராகப் பெருமாள் மஹாச்ருங்க என்று அழைக்கப்படுகிறார். மஹாச்ருங்க என்றால் பெரிய கோரைப் பல்லை உடையவர் என்று பொருள்.
மஹா என்றால் பெரிய, ச்ருங்க என்றால் கோரைப்பல். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 540-வது திருநாமம்.
“மஹாச்ருங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களுக்குத் தனது அருள் பன்மடங்கு கிட்டும்படித் திருமால் அருள்புரிவார்.
—————
541 (A). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)
கச்யப முனிவரின் மனைவிகளுள் ஒருத்தியான திதி தேவி, ஒரு பிரதோஷ நாளில் மாலை வேளையில் தன் கணவரான கச்யபரிடம் வந்தாள். எனக்குக் குழந்தை பாக்கியம் வேண்டும், அந்தக் குழந்தையை இப்போதே எனக்கு அருள வேண்டும் என்று கச்யபரிடம் வேண்டினாள் திதி. இது பிரதோஷ காலம். சம்ஹார மூர்த்தியான சிவபெருமான் நாட்டியம் ஆடும் நேரம். இச்சமயத்தில் நாம் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அந்திப் பொழுது இதற்கேற்ற பொழுதன்று. இரவுப் பொழுது வந்தபின் உன் விருப்பத்தைப் பூர்த்தி செய்கிறேன் என்று சொன்னார் கச்யப முனிவர். ஆனால் ஆசையின் மேலீட்டால் அதைப் பொருட்படுத்தாமல் தனது கோரிக்கையில் உறுதியாக நின்றாள் திதி. கச்யபர் தனது அனுஷ்டானங்களையும் அக்னி காரியங்களையும் செய்ய முடியாத படி அவருக்கு இடையூறு செய்யும் வகையில் அவரிடம் மீண்டும் மீண்டும் தன் ஆசையைத் தெரிவித்துவந்தாள்.
வேறு வழியே இல்லாமல் திதி கேட்டபடி பிள்ளை வரத்தை அவளுக்கு அருளினார் கச்யபர். அதன்பின் கச்யபர் நீராடி விட்டு, பிராணாயாமம் செய்து மேற்கொண்டு தனது அனுஷ்டானங்களைச் செய்யப் போனார்.இந்த நிலையில்தான் தனது தவறை உணர்ந்தாள் திதி. சிறிது காலம்தானே நம் கணவர் பொறுத்திருக்கச் சொன்னார். அந்த அளவு கூட பொறுமை இல்லாது இப்படி ஆசைக்கு அடிமை ஆகிவிட்டேனே என்று வருந்தினாள். கணவர் கச்யபரின் பாதங்களில் வந்து விழுந்தாள்.
சுவாமி, ஏதோ ஆசையின் மேலீட்டால் தவறு செய்துவிட்டேன். அடியேனை மன்னிக்க வேண்டும் என்று வேண்டினாள் திதி. ஆனால் கச்யபரோ, நான் எவ்வளவு அறிவுரை சொல்லியும் நீ கேட்கவில்லை. இனி வருந்தி என்ன பயன். உனக்கு இரண்டு மகன்கள் பிறப்பார்கள். இருவரும் உலகையே கதறச் செய்து அச்சுறுத்துவார்கள், இதை மாற்ற முடியாது என்று சபித்துவிட்டார். அழுது கதறிக் கொண்டு கச்யபரின் பாதங்களில் விழுந்தாள் திதி. அடியேனை மன்னிக்க வேண்டும் என்று மீண்டும் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய கச்யபர், அவள்மீது கருணை கொண்டார். கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. எனினும், பிள்ளைகள் தீயவர்களாகப் பிறந்த போதும், உனக்கு ஒரு பேரன் பிறப்பான். அவனை உலகமே கொண்டாடும் என்றார்.
இதன் விளைவாகவே, இரணியகசிபு, இரணியாட்சன் என்ற இரண்டு அசுரப் பிள்ளைகள் திதியின் வயிற்றில் பிறந்தார்கள். திருமாலின் வாயில்காப்பாளர்களாய் ஜயன்-விஜயன் என்ற பெயரோடு முன்பு இருந்த அவர்கள், சனத்குமார சாபத்தால் பூமியில் பிறக்க நேரிட்டது. அவ்விருவரும் திதியின் கருவை அடைந்தார்கள். அவர்களுள் ஒருவனான இரணியகசிபுவின் மகனான பிரகலாதன் தான் கச்யபர் சொன்ன படி உலகமே கொண்டாடும் பிள்ளையாக விளங்கினான்.
இரணியகசிபுவும் இரணியாட்சனும் பிறக்கும் நேரத்தில் மலைகள் நடுங்கின, திசைகள் எரிந்தன, வானிலிருந்து கொள்ளிக் கட்டைகள் விழுந்தன, வால் நட்சத்திரம் தோன்றியது, காற்றில் மரங்கள் பறந்தன, மேகங்கள் சூரியனை மறைத்தன, கடல் கொந்தளித்தது, நதிகளில் பெருவெள்ளம் ஓடியது, ஆந்தைகள் அலறின, பசுக்கள் பயந்து ஒளிந்துகொண்டன, கிரகங்கள் வக்கிரமாகச் சுழன்றன. இத்தகைய சூழலில் தான் இருவரும் பிறந்தார்கள்.அந்த இரணியாட்சன் மொத்த உலகையும் பிரளயக் கடலுக்கு உள்ளே ஒளித்து வைத்தான். திருமால் பன்றி வடிவத்துடன் வராகராகத் தோன்றி அந்த இரணியாட்சனை அழித்துப் பூமியை மீட்டார்.
இரணியாட்சன் எமனுக்கு நிகராகக் கருதப் படுபவன். பூமியில் உள்ள உயிர்களை அழிப்பவன் எமன் என்றால், மொத்த பூமியையும் அழிக்கப் பார்க்கும் எமனாக இருந்தான் இரணியாட்சன். அந்த எமனாகிய இரணியாட்சனைச் சக்கராயுதத்தாலே வெட்டிச் சாய்த்தபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம். க்ருதாந்த என்றால் எமன். க்ருத் என்றால் வெட்டி வீழ்த்தியவர். க்ருதாந்தக்ருத் என்றால் எமன் போன்றவனை வெட்டிச் சாய்த்தவர்.
க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களின் அனைத்துத் துன்பங்களையும் தன் சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்துவார் திருமால்.
————–
541 (B). க்ருதாந்த க்ருதே நமஹ (Kruthaantha Kruthey Namaha)
பிரளயக்கடலில் இருந்து வராகப் பெருமாள் பூமிதேவியை மீட்டபோது, பூமிதேவி வராகனிடம், இந்தப் பிரளயக் கடலில் இருந்து என்னைக் காத்தது ஒருபுறம் இருக்கட்டும். இதை விடக் கொடுமையான, கடுமையான பிறவிப் பெருங்கடலில் நம் குழந்தைகளான ஜீவாத்மாக்கள் அத்தனை பேரும் துன்புற்றுக் கிடக்கிறார்களே. அவர்களைக் காக்க ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டாள்.
அப்போது வராகப் பெருமாள், பூமியிடம் ஒரு சரம சுலோகத்தைச் சொன்னார்
ஸ்திதே மனஸி ஸுஸ்வஸ்தே சரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா விச்வரூபம் சமாம் அஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்
இளமைக்காலத்தில் ஒருவன் என்னைத் தியானித்து, நானே கதி என்று சரண் அடைந்து விட்டால், முதுமைக் காலத்தில், உயிர்பிரியும் தறுவாயில், அந்த பக்தன் என்னை மறந்து விட்டாலும் கூட, அந்த பக்தனை நினைவில் கொண்டு நான் மறவாமல் அவனைக் காப்பேன்.
இளமைக் காலத்தில் தன்னை நினைப்பதற்கு எளிமையான இரண்டு வழிகளை வராகப் பெருமாள் கூறினார்.
1.வாசனையுள்ள பூச்செடிகளை வளர்த்து, அந்தப் பூக்களைப் பறித்து, தானே நாரில் மாலையாகத் தொடுத்து இறைவனுக்குச் சமர்ப்பித்தால் இறைவனின் மனம் மிகவும் மகிழும்.
2. இறைவனின் திருநாமங்களைப் பாமாலையாகப் பாடுதல்.
இந்த இரண்டையும் இளமைக் காலத்தில் ஒருவன் செய்துவந்தால், அவனது மனம் மெல்ல மெல்லப் பக்குவப்பட்டு சரணாகதி நிஷ்டையை அடைந்து விடுவான். இதுவே வராகர் செய்த உபதேசம்.இப்படி பக்தி என்பது இளமைக் காலத்தில் செய்ய வேண்டியது என்பதை உணர்த்தி, அந்த இளமைப் பருவத்திலேயே சரணாகதி செய்திட வேண்டும் என்பதையும் விளக்கி, அந்த பக்தனைத் தான் என்றும் மறக்காமல் காப்பேன் என்ற தன் சித்தாந்தத்தைத் தெளிவாக உரைத்தவர் வராகப் பெருமாள்.கண்ணன் கீதையில் சொன்ன சரம சுலோகத்தில் – மற்ற எல்லா வழிகளையும் விட்டு நானே கதி என்று என்னிடம் சரணாகதி செய்தால், எல்லாப் பாபங்களையும் போக்கி முக்தி அளிக்கிறேன் என்றார்.
ஸ்ரீராமன் ராமாயணத்தில் சொன்ன சரம சுலோகத்தில் – சரணம் என்று சொல்லிக் கொண்டு என் பாதங்களில் விழுந்தால், நிச்சயமாக அபயம் அளித்தே தீருவேன் என்றார். வராகப் பெருமாள் ஒருபடி மேலே போய், தனது சரம சுலோகத்தில் – என்னைச் சரணடைந்த பக்தன் என்னை மறந்தே போனாலும் கூட, நான் அவனை மறவாமல் நினைவில் கொண்டு காத்தே தீருவேன் என்று கூறியுள்ளார்.
இத்தகைய தனது அற்புதமான சித்தாந்தத்தை வழங்கியதாலே வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார். க்ருதாந்தம் என்றால் சித்தாந்தம், க்ருத் என்றால் வழங்கியவர். தனது உபதேசத்தின் மூலமாகவும், வராக புராணத்தின் வாயிலாகவும் தனது சித்தாந்தத்தைத் தெளிவாக வழங்கியபடியால் வராகப் பெருமாள் க்ருதாந்தக்ருத் என்று அழைக்கப்படுகிறார்.அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 541-வது திருநாமம்.க்ருதாந்தக்ருதே நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமக்கும் வாழ்வில் சித்தாந்தத் தெளிவு ஏற்படும்படி வராகர் அருள்புரிவார்.
——————-
544. ஸுஷேணாய நமஹ: (Sushenaaya Namaha)
(திருநாமங்கள் 544 முதல் 568 வரை 25 திருநாமங்கள், வைகுண்ட நாதனுடைய திருமேனி அழகின் வர்ணனை)
திருவரங்கத்தில் அரையர் சேவை என்பது பிரசித்தமாக, இன்றளவும் நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் நடக்கும் அத்யயன உற்சவத்தின் ஒரு பகுதியாக அரையர் சுவாமிகள் என்று அழைக்கப்படும் மகான்கள், ஆழ்வார் பாசுரங்களை இசைத்து, அபிநயம் பிடித்துக் காட்டுவார்கள். அதை அரையர் சேவை என்று அழைப்பார்கள். ராமாநுஜர் காலத்தில் இப்படி ஒரு முறை அரையர் சேவை நடைபெற்று வந்த சமயம். அப்போது அரையர் சுவாமி நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருந்து ஒரு பாசுரத்தை எடுத்து அபிநயம் பிடித்துக் காட்டினார்.
அன்னைஎன் செய்யில்என்? ஊர்என் சொல்லில்என்? தோழிமீர்!
என்னைஇனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண்துவராபதி
மன்னன் மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே.– என்பது நம்மாழ்வாரின் பாசுரம்.
நம்மாழ்வார், பராங்குச நாயகி என்னும் பெண் பாவத்தில் இப்பாசுரத்தைப் பாடியுள்ளார். கண்ணன் மீதான காதலாலே பிச்சேறிய நிலையை அடைந்த பராங்குச நாயகி, கண்ணனைக் குறித்து மடல் எடுப்பது என்ற முடிவுக்கு வருகிறாள். மடல் எடுத்தல் என்பது என்னவென்றால், தலைவனைப் பிரிந்த தலைவி, தலைவன் தன்னைத் தேடி வந்து தன்னை மணக்க வேண்டும் என்பதற்காக, தலைவனின் படத்தைக் கையில் வைத்துக் கொண்டு, பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரையில் அமர்ந்த படி, ஊரெங்கும் சென்று ஊராரிடம் தலைவனிடம் தன்னைச் சேர்த்து வைக்குமாறு வேண்டுவாள். இதற்கு மடல் எடுத்தல் அல்லது மடல் ஊர்தல் என்று பெயர்.
தன் காதலனான கண்ணன் வராமையால், பராங்குச நாயகி இப்போது அவ்வாறு மடல் எடுக்கும் முடிவுக்கு வருகிறாள். அப்போது அவளது தோழி பராங்குச நாயகியைத் தடுத்தாள். கடலன்ன காமத்தர் ஆகிலும் மாதர் மடல் ஊரார் மற்றையர் மேல் என்ற பழமொழியை நினைவு கூர்ந்த தோழி, சமஸ்கிருத இலக்கியங்களில் பெண்கள் மடல் ஊரும் வழக்கம் உண்டு. ஆனால், தமிழ்ப் பெண்கள் மடல் ஊர்ந்ததாகத் தமிழ் இலக்கியங்களில் வழக்கமில்லை. எனவே இந்த முடிவை மாற்றிக் கொள் என்றுஅறிவுரை சொன்னாள் தோழி.
மேலும், உன் தாயும் மற்ற உறவினர்களும் நம் வீட்டுப் பெண் இப்படி வரம்பு கடந்து போய் மடல் ஊர்கிறாளே என்று வருந்த மாட்டார்களா, அவர்களுக்காகவாவது உன் முடிவைக் கை விடு என்றாள் தோழி.அதற்குப் பராங்குச நாயகி பதில் அளிக்கிறாள் – தாய் என்ன செய்தாலும், ஊர் என்ன சொன்னாலும், அதைப் பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. தோழிகளே நீங்களும் என்மீது இனி பற்று வைக்காதீர்கள். வண்துவராபதி எனப்படும் மன்னார்குடியில் எழுந்தருளியிருக்கும் ராஜகோபாலன் எனக்கு வலைவீசினான். அந்த வாசுதேவனின் வலையில் நான் சிக்குண்டு கிடக்கிறேன். இனி என்னை நீங்கள் மறந்துவிடுங்கள். இத்தகைய கருத்துள்ள பாசுரத்துக்கு அபிநயம் பிடிக்கும் அரையர் சுவாமிகள், மீனவர் வலைவீசுவது போல் அபிநயம் பிடித்து, அந்த வாசுதேவன் வலையுள் பராங்குச நாயகி அகப்பட்டதாகச் சித்தரித்துக் காட்டினார்.
அதை ரசித்துக் கொண்டிருந்த ராமாநுஜர், தம் கைகளால் இரு கண்களையும் காட்டினார். அதைக் கவனித்த அரையர் சுவாமிகள், அபிநயத்தை மாற்றி, தம்முடைய இரு கண்களையும் காட்டி வாசுதேவன் வலையுளே என்று அபிநயம் பிடித்தாராம்.அதாவது, ஜீவாத்மாக்களைத் தன் பால் ஈர்க்க விரும்பும் திருமால், நூலால் ஆன வலையை விரித்துப் பிடிப்பதில்லை. தன் கண்ணழகையே வலையாக விரிக்கிறார்.
அதில் மயங்கி ஜீவாத்மாக்கள் அவர் திருவடியில் வந்து சேர்கிறார்கள் என்பது இதன் தாத்பரியம். நம்மாழ்வார் போன்ற மகான்கள் தொடங்கி, நம் போன்ற சாமானியர் வரை, தன் திருமேனி அழகையே வலையாக வீசிப் பிடிக்கிறார் திருமால். `ஸுஷேண’ என்றால் அழகான சேனையை உடையவர் என்று பொருள். ஜீவாத்மாக்களாகிய நம்மை வென்றெடுக்கும் சேனையாகத் தன் திருமேனி அழகையே படையாகப் பயன்படுத்துகிறார் திருமால். `ஸு’ என்றால் அழகிய, `ஸுஷேண’ என்றால் தனது அழகான திருமேனியைப் படையாக்கி அதன் மூலம் எல்லா ஜீவாத்மாக்களையும் வெல்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 544-வது திருநாமம்.“ஸுஷேணாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால் நாமும் அவரது வலையில் சரியாக மாட்டிக் கொண்டு, மற்ற வலைகளில் சிக்காதபடி நமக்கு அருள்புரிவார்.
———–
545. கனகாங்கதினே நமஹ: (Kanakaangadhiney Namaha)
திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமாலைத் தரிசிக்கப் பிரகலாதனின் மகனான விரோசனன் வந்தான். பக்தப் பிரகலாதனின் மகனான போதும், அவனிடம் அசுரத் தன்மை மேலோங்கி இருந்தது. அவனது நிலையை நாம் நமது சந்தேகத்துக்கு விஷயம் ஆக்காமல், நம் மனதில் அத்தகைய அசுரத் தன்மைகள் இல்லாதிருக்க இறைவனை இறைஞ்சி நிற்பதே உத்தமம். இத்தகைய விரோசனன் பாற்கடலுக்கு வந்தான். திருமால் ஆதிசேஷப் படுக்கையில் யோக நித்திரையில் இருக்க, அவர் அணிந்திருந்த வைரக் கிரீடத்தைத் திருடிச் சென்றுவிட்டான் விரோசனன். உறங்குவான் போல் யோகு செய்த திருமால் விழித்துக் கொண்டு கருடனை அழைத்தார்.
விரோசனனிடம் இருந்து கிரீடத்தை மீட்டு வருமாறு கருடனுக்கு ஆணையிட்டார். பாதாள லோகம் வரை சென்ற விரோசனனைத் துரத்திப் பிடித்து அவனுடன் போரிட்டார் கருடன். அவனிடம் இருந்து திருமாலின் வைரக் கிரீடத்தை மீட்டார். மீட்டெடுத்த கிரீடத்தை எடுத்துக் கொண்டு பாதாளத்தில் இருந்து திருப்பாற்கடல் நோக்கிப் பறந்து வந்தார் கருடன்.வழியில் பிருந்தாவனத்தில் ஓர் அழகிய குழந்தையைப் பார்த்தார் கருடன். அக்குழந்தை நீலமேகம் போல் வண்ணம் கொண்டதாக, குழல் ஊதிக் கொண்டு மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தது. ஆஹா… இந்தக் குழந்தைக்குத்தான் இக்கிரீடம் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது என்று கருதிய கருடன், கிரீடத்தை அக்குழந்தையின் தலையில் வைத்துவிட்டார்.
அந்தக் குழந்தை கண்ணன் என்பதை வாசகர்களான நீங்கள் அறிவீர்கள். அந்தக் கிரீடமும் கண்ணனின் தலைக்குச் சரியாகப் பொருந்திவிட்டது. இளைஞன் வடிவில் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் அணியும் கிரீடம், குழந்தை கண்ணன் தலைக்கும் பொருந்தியது. திருப்பாற்கடலுக்குத் திரும்ப வந்தார் கருடன். கிரீடம் எங்கே என்று திருமால் கேட்க, வழியில் கண்ட அழகான குழந்தைக்கு வைத்துவிட்டதாகப் பதில் அளித்துவிட்டாராம் கருடன்.
இந்த நிலையில் வைரக் கிரீடத்துடன் வீடு திரும்பினான் கண்ணன். அதைக் கண்டு வியந்த யசோதை, ஏது இந்தக் கிரீடம் என்று கேட்டாள். ஏதோ ஒரு கழுகு பறந்து வந்து என் தலையில் கிரீடத்தை வைத்துவிட்டுச் சென்றுவிட்டது என்றான் கண்ணன். கண்ணா, ஏற்கனவே பல அசுரர்களால் உனக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதில் வைரக் கிரீடத்தை நீ தலையில் அணிந்தால், அதைத் திருடுவதற்காக வேறு யாரேனும் அசுரர்கள் வரக்கூடும். இதை நம் ஊர் பெருமாளுக்குச் சமர்ப்பித்துவிடலாம் என்றாள் யசோதை.
இப்போது திருநாராயணபுரம் எனப்படும் மேல்கோட்டையில் உள்ள ராமப்ரியன் என்ற பெருமாள்தான் அப்போது, ஆயர்பாடியில் எழுந்தருளி இருந்தார். அந்தப் பெருமாளுக்குச் சமர்ப்பித்தாள் யசோதை. கிரீடத்தை அர்ச்சகர் சாற்றியபோது, அவர் திருமேனிக்கும் அது சரியாகப் பொருந்திவிட்டது. பின்னாளில் அப்பெருமாள் திருநாராயணபுரத்துக்கு எழுந்தருளிய பின்னும், இந்த வைரக் கிரீடத்தின் நினைவாக, வைரமுடி உற்சவம் நடைபெற்று வருவதைக் காணலாம்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், திருப்பாற்கடல் பெருமாள் அணியும் கிரீடத்தை, பாலகனான கண்ணன் அணிந்தாலும், விக்கிரக வடிவில் உள்ள ராமப்ரியப் பெருமாள் அணிந்தாலும், அவர்களுக்கும் சரியாகப்பொருந்துகிறது. எப்படி மூன்று வெவ்வேறு பெருமாள்களுக்கு ஒரே கிரீடம் பொருந்தும் என்னில், அதுதான் பெருமாளின் திரு ஆபரணங்களின் சிறப்பு. அவை பகவானை விட்டுப் பிரியாமல், அவர் எடுத்துக் கொள்ளும் வடிவத்துக்கு ஏற்றபடி தங்களையும் அமைத்துக் கொள்ளும்.
திருமால் விஸ்வரூபம் எடுத்தால், அவரோடு சேர்ந்து அவரது ஆபரணங்களும் வளரும். சிறு வடிவம் கொண்டால், அவைகளும் சிறுத்துவிடும். இப்படி உலகியலுக்கு அப்பாற்பட்ட திவ்யமான ஆபரணங்களை அணிந்திருப்பதால், திருமால் `கனகாங்கதீ’ என்று அழைக்கப்படுகிறார். `அங்கத’ என்றால் தோள்வளை என்று பொருள், இங்கே அது அனைத்து ஆபரணங்களுக்கும் ஆகுபெயராகும். `கனக’ என்றால் பொதுவாக தங்கம் என்று பொருள், இங்கே அது திவ்யமான என்ற பொருளில் வருகிறது. கனகாங்கதீ என்றால் திவ்யமான திருவாபரணங்களை எப்போதும் தரித்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 545-வது திருநாமம்.“கனகாங்கதினே நமஹ’’ என்றுதினமும் சொல்லி வந்தால், திருமாலோடு எப்போதும் கூடி இருக்கும்
———
546. குஹ்யாய நமஹ (Guhyaaya Namaha)
ஒரு ஊரில், ஒரு குருவும் சிஷ்யனும் வாழ்ந்து வந்தார்கள். அந்த சிஷ்யனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. “ஏன் கடவுளைக் கண்களால் பார்க்க முடிவதில்லை, அப்படிப் பார்க்க முடிந்தால் அனைவரும் கடவுளை ஏற்பார்கள் அல்லவா! கடவுளை ஏற்பவர், மறுப்பவர் என இரு பிரிவுகளே இருக்காதே’’ எனக் குருவிடமே கேட்டார் அந்த சிஷ்யன். அதற்கு விடையளித்த குரு, “பூவின் வாசனையை உன்னால் கண்களால் பார்க்க முடியுமா, உன்னால் நுகர மட்டுமே முடியும். மூக்கைத் தவிர வேறு எந்த புலனாலும் பூவின் வாசனையை உறுதி செய்ய முடியாது. இருந்தும், பூக்களுக்கு வாசனை இருக்கிறது என நம்புகிறாய் அல்லவா. இதற்கு மற்றொரு உதாரணம் சொல்கிறேன், ஓர் இசையைக் கேட்க மட்டுமே முடியும். இசையைத் தொடவோ, நுகரவோ முடியாது. இருந்தும், காது கொடுத்துக் கேட்பதை வைத்தே இசையை நம்மால் அனுபவிக்க முடிகிறது.
ஐம்புலன்களில் ஏதேனும் ஒரு புலனை வைத்தே, ஒரு பொருளின் இருப்பை உறுதி செய்து, அது இருப்பதாக ஏற்கிறோம். இந்த நிலையில், ஐம்புலன்களைக் கொண்டு நம்மால் ஒன்றை அறிய முடியவில்லை என்பதால் மட்டுமே, அது இல்லை எனக் கூறவும் முடியாது’’ எனச் சொன்னார் குரு. சிஷ்யனோ, “இறைவனை ஐம்புலன்களாலும் உணர முடியவில்லையே, இதை எப்படிப் புரிந்துகொள்வது’’ எனக் கேட்டார். குரு, “இதற்கும் சில உதாரணம் உள்ளது’’ எனக் கூறினார்.
நம் கண்களால் குறிப்பிட்ட அளவு தான் பார்க்க முடியும். VIBGYOR என்ற ஒளிக் கற்றைகள் வரை மட்டுமே பார்க்க முடியும். அதைக் கடந்து Infra-Red Rays, Ultra Violet Rays ஆகியவற்றை எல்லாம் நம் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக இது எல்லாம் இல்லை எனக் கூற முடியுமா. அதற்கான கருவியைக் கொண்டு நம்மால் பார்க்க முடியும் அல்லவா.
நம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதால், நம்மால் எதையும் மறுக்கவும் முடியாது. நம் காதுகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு சத்தத்தை மட்டுமே கேட்க முடியும், அதற்காக அதற்கு மிகுந்த ஒலி எதுவுமே இல்லை எனக் கூற முடியாது. நம் ஐம்புலன்கள் ஓரளவுக்கு உட்பட்டவை, அதை கடந்து நம்மால் உணர முடியாது. பகவானின் திருமேனி சுத்த சத்வ மயமானது. உலகியலுக்கு அப்பாற்பட்டது, பஞ்ச உபநிஷத் மயமானது. நமது உடல் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்டது. பகவானை நம் கண்களால் பார்க்க முடியுமா, இறைவனைக் காண நம் கண்களுக்கு சக்தி இல்லை.
இறைவனைக் காண என்ன வழி எனக் கேட்டால், பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணபிரான் விஸ்வரூபம் எடுத்துக் காட்டினான். ஆனால் அர்ஜுனனால் அதை உடனே பார்க்க முடியவில்லை. திவ்யமான தெய்வீகமான பார்வையைத் தருகிறேன், அதைக் கொண்டு என் திருமேனியைப் பார் எனக் கூறினான் கண்ணபிரான். பின்தான் அவனால் பகவானைத் தரிசிக்க முடிந்தது.
ஒரு Virus-ஐ நம் கண்களால் பார்க்க முடியாது, ஒரு விஞ்ஞானி தன் கருவியின் துணை கொண்டு பார்த்து உறுதி செய்தால் நாம் ஏற்கிறோம் அல்லவா, அதைப்போல பகவானைக் காண உபநிஷத், வேதங்களைக் கற்றுத் தேறிய மகான்களான ரிஷிகள், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் தங்கள் தெய்வீகக் கண்களால் இறைவனைக் கண்டு இப்படித்தான் இறைவன் இருக்கிறான் எனக் கூறினால், அதைக்கொண்டு நாம் பகவானை ஏற்கவேண்டும்.
அவர்கள் காட்டிய வழியில் பகவானை நாம் வணங்கினால், வைகுண்டம் சென்று தெய்வீகக் கண்களைப் பகவானிடமே பெற்று நேரே பரவாசுதேவனைத் தரிசிக்கலாம்.எனவே இப்படிச் சாதாரணக் கண்களால் காண முடியாதபடி மறைந்திருப்பதால் திருமால் குஹ்ய என்று அழைக்கப் படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 546-வது திருநாமம்.“குஹ்யாய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத புதிர்களுக்கும் நமக்கு விடை கிடைக்கும்படி திருமால் அருள்புரிவார்.
—————-
547. கபீராய நமஹ (Gabheeraya Namaha)
ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனது தந்தை நல்ல ஆசார சீலர். அவர் தனது துணிகளைத் தானே துவைத்து ஆகாசக் கொடியில் காய வைத்து மறு நாள் மடி வஸ்திரமாக உடுத்துவார். ஒரு நாள் சிறுவன் மடித் துணி மீது விழுப்புத் துணியை போட்டுவிட்டான். தந்தையோ இப்படி மடி வஸ்திரம் முழுவதும் விழுப்பாக மாறிவிட்டதே என வருந்தினார். இதைச் சிறுவனும் கவனித்துக் கொண்டிருந்தான்.
மறுநாள் விழுப்புத் துணி மீது மடி வஸ்திரத்தைப் போட்ட சிறுவன், இப்பொழுது அனைத்தும் மடி வஸ்திரமாக மாறிவிட்டதே, இனிமேல் வருத்தப்படத் தேவையில்லை தந்தையே எனக் கூறினான். இதைக் கேட்ட தந்தை, தூய பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய பொருள் தான் தூய்மை குறைந்து போகும். தூய்மையற்ற பொருள் தூய்மை பெறாது. விழுப்புத் துணியை எதன் மீது போட்டாலும் விழுப்பாகத் தான் போகுமே தவிர அது மடி ஆக முடியாது எனக் கூறினார்.
சிறுவன் அது எப்படி எனக்கு புரியவில்லையே எனக் கூறினான். இதைக் கவனித்த ஓரு பெரியவர், தூய்மையான பொருள் மீது தூய்மையில்லாத பொருள் பட்டால், தூய்மையில்லாத பொருளில் இருக்கும் தீய குணம் தான் எளிதாக பரவும். அதனால் தூய்மை குறைந்து தான் போகும். தீய குணங்கள் மற்றும் தீய எண்ணங்கள் பரவும் வேகத்தில் நல்லது பரவாது. இது தான் உலக இயல்பு என்றார். பாலுடன் விஷத்தைக் கலந்தாலும், விஷத்துடன் பாலைக் கலந்தாலும், அனைத்தும் விஷமாகத் தானே ஆகும் என்றார்.
சிறுவனோ, எப்படித்தான் ஓரு பொருளைத் தூய்மை படுத்துவது என வினவினான். தேய்த்தாங்கொட்டை போன்ற பொருள்களைக் கொண்டு இன்னொரு பொருளைத் தூய்மைப் படுத்தமுடியும். ஆனால் தூய்மைப் படுத்தும் பொருள் மாற்றம் அடைந்துவிடும் என்றார் பெரியவர்.தன் நிலையை மாற்றிக் கொள்ளாமல் ஒரு பொருளை தூய்மைப் படுத்துவது என்பது சாத்தியமா எனக் கேட்டான். ஒரே ஒருவனுக்கு மட்டும் இது சாத்தியம். அவன் தான் பகவான் நாராயணன், அவனும் அவனது அடியார்களும் தங்களைப் போலவே மற்றவர்களையும் தூய்மையாக்க வல்லவர்கள் என்றார் பெரியவர்.
பல பாபங்கள், தோஷங்கள் கொண்ட நாம் பகவானிடம் வருகிறோம். நமது தோஷங்கள் அவனைத் தீண்டுவதில்லை, மாறாக அவனது தூய்மை நம்மிடமும் வந்து சேர்ந்து விடுகிறது. தன் பாதுகையான சடாரியை நம் தலையில் வைத்து மீண்டும் தன் திருவடியில் சேர்த்துக் கொள்கிறான். ஆனால் சடாரியின் தூய்மை இதனால் என்றும் குறைவதில்லை. மாறாக நமக்கு சடாரியின் மூலமாகத் தூய்மையைத் தருகிறான். இதுதான் தான் பகவானின் இயல்பு என்று விளக்கினார்.இப்படித் தான் மாறுதல் அடையாமல் நம்மைத் தூய்மைப் படுத்தும்படி காம்பீரியம் மிக்கவராக இருக்கும் திருமால் கபீர என்று அழைக்கப்படுகிறார். அதுவே சஹஸ்ரநாமத்தின் 547-வது திருநாமம்.“கபீராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாம் எப்போதும் தூய்மையாக இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.
———
548. கஹனாய நமஹ (Gahanaaya Namaha)
நான்கு நண்பர்கள் காட்டு மார்க்கமாகப் பயணித்தார்கள். நடுவில் ஒரு கல் பாறை அவர்களை தடுப்பது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. அது என்னவாக இருக்கும் என அவர்களுக்கு ஆர்வம். ஆனால், இருட்டில் அடர்ந்த காட்டில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.முதல் நண்பர் மெதுவாகப் பாறையைத் தடவிப் பார்த்து இது தூணாக இருக்கும் எனக் கூறினார். இரண்டாவது நண்பர் பக்கவாட்டில் தடவிப் பார்த்து இது முறம், முறத்திற்குச் சிலை வைத்துள்ளனர் எனக் கூறினார்.
முன்றாவது நபரோ இது கல் பாறை எனப் புரிந்துக் கொள்கிறேன் என்றார். நான்காவது நபரோ ஏதோ குச்சி நட்டு வைத்துள்ளனர் என்றார். இப்படியே நால்வர்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. காலை விடிந்த பிறகு இது என்ன என்பதை உறுதி செய்துவிட்டுப் பயணத்தைத் தொடர்வது என முடிவு செய்தனர்.
சூரிய ஒளி வந்தவுடன் அங்கே ஒரு யானை சிலை தென்பட்டது. முதல் நபர் தும்பிக்கையைத் தடவிப் பார்த்துள்ளார். இரண்டாவது நபர் யானையின் காதுப் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். முன்றாவது நபர் யானையின் உடல் பகுதியைத் தடவிப் பார்த்துள்ளார். நான்காவது நபர் வால் பகுதியை தடவிப் பார்த்துள்ளார். அதனால் அவர்களுக்கு முறையே தூண், முறம், பாறை, குச்சி என வெவ்வெறாகத் தெரிந்துள்ளது.
நால்வரும் அவர்கள் பார்வையிலிருந்து சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னதுதான் சரி என வாதிட்டதுதான் இங்கே தவறு. இதே போல் பகவானை இவர் தான் பகவான் என வரையறுக்க முடியாது. அவர் எண்ணில் அடங்காத மங்கல குணங்களைக் கொண்டவர். ராமாநுஜர் கத்ய த்ரயத்தில் எண்ணில் அடங்காத மங்கல குணக் கூட்டங்களின் கடல் என்று பெருமாளைக் குறிப்பிடுகிறார்.
இத்தனைக் குணங்களையும் நம்மால் அனுபவிக்க முடியாது. எதேனும் ஒரு குணத்தையோ ஒரு சில குணங்களையோ மட்டும் அனுபவித்து, அவ்வளவு தான் பகவான் என நம்மால் அவரை ஓர் எல்லைக்குள் சுருக்கி விட முடியாது. நேதி நேதி என்ற பிருகதாரண்யக உபநிஷத் வாக்கியம், இதுவரை நான் சொன்னது மட்டும் தான் இறைவனின் பெருமை என்று நினைத்து விடாதே, இன்னமும் அவனிடம் எவ்வளவோ பெருமைகள் உள்ளன என்று சொல்கிறது என்று ராமாநுஜர் பாஷ்யத்தில் விளக்குகிறார்.
நமக்கு எப்படி பகவானை அனுபவிக்க பகவான் வழி காண்பித்துள்ளானோ அதன்படி நாம் பகவானை அடைவதற்கான வழியில் செல்ல வேண்டும். மற்றவரையோ, மற்ற மத்தையோ நாம் தவறு என சொல்ல நமக்கு உரிமை இல்லை. ஏனெனில், அவரவரின் பக்குவத்துக்கு ஏற்றபடித் தன்னை ஒவ்வொருவருக்கும் பகவான் வெளிப்படுத்திக் காட்டுவார். ஆனால், இவ்வளவு தான் என்ற ஒரு வரையறைக்குள்ளே அவர் என்றுமே அடங்காதவர்.
அதனால்தான் திருமால் கஹன என்று அழைக்கப்படுகிறார். கஹன என்றால் இவ்வளவுதான் என அறிய முடியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 548-வது திருநாமம்.
கடலின் ஆழத்தில் நமக்குச் சில செடிகள் தெரியும். அதற்காக அவ்வளவு தான் கடலின் ஆழம் எனக் கூற முடியாது. அதுபோல் இறைவனின் பெருமையின் ஆழத்துக்கும் எல்லையே இல்லை.
கஹனாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், புரியாத பல விஷயங்களிலும் நமக்குத் தெளிவு ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.
—————-
549. குப்தாய நமஹ (Gupthaaya Namaha)
எட்டெழுத்து மந்திரமாகிய திருமந்திரம், இரண்டு வரி மந்திரமாகிய துவயம், கண்ணன் கீதையில் சொன்ன சரம ஸ்லோகம் ஆகிய மூன்று ரகசியங்களின் ஆழ்பொருளைத் திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் அறிய விழைந்தார் ராமாநுஜர்.இவ்வரும்பொருளை அறிவதற்காகப் பல முறை திருக்கோஷ்டியூருக்கு ராமாநுஜர் சென்ற போதும், அவருக்குத் திருக்கோஷ்டியூர் நம்பி அவ்வளவு எளிதில் உபதேசிப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி ராமாநுஜரைத் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தார்.
இதைத் திருக்கோஷ்டியூரில் உள்ள சில அடியார்கள் கவனித்தார்கள். ராமாநுஜரிடம் சென்று, சுவாமி, உங்களுக்கே இது கிடைப்பது இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்றால், இந்த அர்த்தங்களை நாங்கள் எப்படி அறிந்து உய்வது என்று வருந்திச் சொன்னார்கள்.அதற்கு ராமாநுஜர், ஆசார்யன் கருணை உள்ளவர். எப்படியும் உபதேசம் செய்யாமல் இருக்க மாட்டார். அதற்கு முன் அடியேனின் தகுதியை நன்கு ஆராய விழைகிறார். எனவே நாம் அதற்கு உட்பட்டுத் தான் ஆகவேண்டும். எனினும், அடியேனுக்கு அந்த அர்த்தம் கிடைத்தால் அவசியம் உங்களுக்கும் உபதேசம் செய்து விடுகிறேன் என்று வாக்களித்தார்.
பலமுறை திருவரங்கத்துக்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடந்த ராமாநுஜருக்கு, பதினெட்டாவது முறை திருக்கோஷ்டியூர் நம்பி உபதேசம் செய்தார். முக்கியமாக, கீதையின் சரம ஸ்லோகமான – ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ, அஹம்த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: – என்ற ஸ்லோகத்தின் ஆழ்பொருளை உபதேசித்தார். இறைவனை அடைவதற்கு வேறு எதுவுமே வழி இல்லை என்று உணர்ந்து இறைவனின் திருவடிகளையே தஞ்சமாகப் பற்ற வேண்டும். அப்படி சரணாகதி செய்தவரின் அனைத்துப் பாபங்களையும் இறைவனே போக்கி அவர்களுக்கு முக்தி அளிப்பார் என்பது இதன் ஆழ்பொருள்.
மேற்கூறிய மந்திரங்களின் உபதேசம் எல்லாம் முன்பே மதுராந்தகத்தில் பெரிய நம்பிகளிடம் ராமாநுஜர் பெற்றதால், பிரபலமாக இதுகுறித்துச் சொல்லி வரப்படும் கதை அவ்வளவு தூரம் பொருத்தமாக இல்லை. அதிகாரப் பூர்வமான குரு பரம்பரை நூல்களில் சொல்லப்பட்ட விஷயமே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இப்பொருளைப் பெற்ற ராமாநுஜர், திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள தெற்காழ்வான் சந்நதிக்கு வந்தார். சில அடியவர்களுக்கு ரகசியப் பொருளை உபதேசிப்பதாகச் சொல்லி இருந்தார் அல்லவா, அதன்படி அவர்களுக்கு உபதேசமும் செய்து விட்டார் ராமாநுஜர்.
இச்செய்தியைக் கேள்விப்பட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, குருவின் வாக்கை மீறி நீ தகுதி இல்லாதவர்களுக்கு எல்லாம் அர்த்தங்களைச் சொல்லி விட்டாய் ராமாநுஜா. உனக்கு இனி நரகம் தான் என்று சொன்னார்.அதற்கு ராமாநுஜர் பணிவோடு, சுவாமி, அடியேன் தகுதி இல்லாதவர்க்குச் சொல்ல விரும்பவில்லை. ஆனால் குலம், பாலினம், ஞானம் போன்றவற்றைத் தகுதியாகக் கருதாமல், ஆசையையே தகுதியாகக் கொண்டு உபதேசம் செய்தேன். மேலும், அடியேன் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை. நீங்கள் சொன்ன அர்த்தங்களைக் கேட்டு இவர்கள் அத்தனை பேரும் முக்தி பெறப் போகிறார்களே. இத்தனை பேர் முக்தி பெறுவதற்காக நான் ஒருவன் நரகம் போனாலும் பரவாயில்லை என்றார்.
ராமாநுஜரின் கருணையைக் கொண்டாடிய திருக்கோஷ்டியூர் நம்பி, எம்பெருமானாரே என்று அவரை அழைத்து ராமாநுஜரின் பரந்த மனதைப் பாராட்டினார்.இப்படி ஆசை உடையோர் அனைவருக்கும் உபதேசித்தாலும், இறைவன் மீது பொறாமை கொண்டோர், அதர்மச் செயல்களில் ஈடுபடுவோர், இறைவனைப் பழித்துப் பேசுவோர் போன்றோருக்கு உபதேசிக்கக் கூடாது என்பது ராமாநுஜரின் கருத்தாகும். ஆசை என்ற தகுதி இல்லாதவர்களிடமிருந்து இறைவனைப் பற்றிய விஷயங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப் பட வேண்டும் என்பது ராமாநுஜர் வழிவந்த ஆசார்யர்களின் கொள்கை.
இப்படி பூர்வாசார்யர்களாலே பாதுகாக்கப்பட்டு வைத்திருக்கும் திருமால் குப்த என்று அழைக்கப்படுகிறார். குப்த என்றால் தகுதி இல்லாதோரிடம் இருந்து பாதுகாக்கப் பட்டவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 549-வது திருநாமம்.குப்தாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால், இறைவன் மீது நமக்கு ஆசை பெருகும்படி அவரே நமக்கு அருள்புரிவார்.
————–
550. சக்ரகதாதராய நமஹ (Chakragadaadharaaya Namaha)
சீதையைத் தேடி இலங்கைக்குச் சென்ற அனுமான், அசோகவனத்தில் சீதையைக் கண்டார். ராமாயணம் பாடியும், ராமனின் அங்க அடையாளங்களைச் சொல்லியும், சீதா – ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை விவரித்தும், மேலும் ராமனின் கணையாழியைச் சீதையிடம் கொடுத்தும், தான் ராமதூதன் என்பதை உணர்த்தினார் அனுமான். சீதையிடம், உங்களைச் சந்தித்ததற்குச் சான்றாக ஏதேனும் அடையாளங்களைத் தாருங்கள் என்று பிரார்த்தித்தார் அனுமான்.
தனது சூடாமணியை அடையாளமாகத் தந்த சீதை, மேலும் சீதா ராமர்களுக்கு மட்டுமே தெரிந்த சில நிகழ்வுகளை அனுமானிடம் அடையாளமாகச் சொன்னாள். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் காகாசுரனின் கதை.சித்திரகூடத்தில் மந்தாகினி நதிக்கரையிலே சீதாராமர்கள் ஆச்சர்யமாக விளையாடினர். பின், சீதை மடியில் தலை வைத்து ராமபிரான் பள்ளிகொண்டார். அப்பொழுது இந்திரனின் மகன் காகாசுரன் சீதையின் திருமார்பில் கொத்தினான். சீதைக்கோ உறங்கிக் கொண்டிருக்கும் ராமனை எழுப்ப மனமில்லை.ஆனால், ராமனின் முகத்தில் சீதையின் திருமார்பிலிருந்து வழியும் ரத்தம் தெறித்தது. ரத்தம் பட்டு விழித்தெழுந்த ராமன், சீதையின் திருமார்பு புண்பட்டிருப்பதைக்கண்டார்.
இதற்கு யார் காரணம் என்று ராமன் தேடியபோது, ராமனிடம் அழகு காட்டிக் கொண்டு ஒரு மரக்கிளையில் அமர்ந்திருந்தான் காகாசுரன். ராமன், தான் சயனித் திருந்த தர்ப்பைப் பாயிலிருந்து ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து பிரம்மாஸ்தரத்தை ஜபித்து, அதைக் காகாசுரன் மீது ஏவினான். காகாசுரனிடம் அஸ்திரம் நெருங்கி வரும் பொழுது, அஸ்திரத்தின் வெப்பம் தாங்க முடியாமல் காகாசுரன் ஓடத் தொடங்கினான்.
அவன் ஓடினால் அஸ்திரம் துரத்துகிறது, அவன் நின்றால் அஸ்திரமும் நிற்கிறது. முதலில் தன் தந்தையான இந்திரனின் உதவியை நாடினான் காகாசுரன். ஆனால், இந்திரன் அடைக்கலம் தரமுடியாது என்று மறுத்துவிட்டான். இதுபோல், ராம பாணத்தின் பெருமையை உணர்ந்து மூவுலகில் உள்ள தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், பறவைகள் உள்ளிட்ட எவருமே காகாசுரனுக்கு அடைக்கலம் தர முன்வரவில்லை. இறுதியில், ராமனிடமே வந்து சரணாகதி செய்தான் காகாசுரன்.
இவ்விடத்தில், வால்மீகி ராமாயணத்தில் உள்ளபடி மட்டும் நாம் எழுதினால், காகாசுரன் காலை நீட்டிக்கொண்டு விழுந்து, அதன் பின் சீதை அவன் தலை ராமன் திருவடியில் படும் படி கிடத்தினாள் என்ற செய்தி உள்ளதே, அதை நீங்கள் விட்டுவிட்டீர்களே என்று வாசகர்கள் கேள்வி கேட்பார்கள். எனவே பத்மபுராணத்தில் சொல்லப்பட்ட அந்த விஷயத்தையும் இணைத்து ரசித்துக்கொள்வோம். காகாசுரன் எப்படி சரணாகதி செய்வது என்று கூடத் தெரியாமல், இரண்டு கால்களையும் ராமன் முன் நீட்டிக் கொண்டு விழுந்தான். சீதாபிராட்டி கருணையோடு அவன் தலை ராமன் திருவடியில் படும் படி அவனைக் கிடத்தி, அவனைக் காப்பாற்றுமாறு ராமனிடம் பிரார்த்தித்தாள்.
காகாசுரனைக் காப்பது என்று ராமன் முடிவெடுத்தான். ஆனால், ஏவிய பிரம்மாஸ்திரத்துக்கு ஏதேனும் இலக்கு தர வேண்டும். அதனால், காகாசுரனின் கண்ணை அந்த பாணம் பறிக்குமாறு செய்தான் ராமன். பகவான் தன் கையால் ஒரு அஸ்திரத்தைத் தொட்டு ஏவினாலே அந்த அஸ்திரம் சுத்த சத்துவமயமாக மாறிவிடுகிறது. பகவான் என்ன மனதில் கொள்கிறாரோ, அதைத் தான் அது செய்யும். இதை நம் ஆச்சாரியர்கள், பகவான் எந்த ஆயுதத்தை உபயோகம் பண்ணினாலும், அதில் சக்கரத்தாழ்வாரின் அம்சம் இருக்கும் என்கிறார்கள். இந்த தர்ப்பைப் புல்லிலும் சக்கரத்தாழ்வார் ஆவேசம் செய்த படியால்தான் ராமனின் திருவுள்ளம் அறிந்து செயல்பட்டது அந்த தர்ப்பை.
காகாசுரன் ஓடினால் துரத்தியது, நின்றால் தானும் நின்றது. அவன் கண்ணைப் பறிக்கட்டும் என்று ராமன் தீர்மானித்த போது, கண்ணை மட்டும் பறித்தது. ஸ்ரீவைகுண்டத்தில் இத்தகைய பல ஆயுதங்களை பகவான் ஏந்தியுள்ளான். அத்தனை ஆயுதங்களும் நித்தியசூரிகள். அவர்கள் ஆயுதங்களாக இருந்து பகவானுக்குக் கைங்கரியம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் சக்கரமாக ஸுதர்சனாழ்வார், சங்காக ஸ்ரீபாஞ்சஜன்யாழ்வார் ஆகியோர் இருக்கிறார்கள். இருவரையும் எப்போதும் தரித்திருப்பதால், திருமால் சங்குசக்ரகதாதர என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 550-வது திருநாமம்.“சக்ரகதாதராய நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களைத் தன் திவ்யாயுதங்களால் திருமால் காத்தருள்வார்.
————–
551. வேதஸே நமஹ (Vedhasey Namaha)
சாந்தோக்ய உபநிஷத்தில் 8-வது அத்தியாயத்தில் தஹர வித்யையின் அங்கமாகப் பிரஜாபதி வித்யை வருகிறது. அதில் பிரம்மா உபன்யாசம் செய்ய, அதைத் தேவர்களின் தலைவனான இந்திரனும், அசுரர்களின் தலைவனான விரோசனனும் அமர்ந்து கேட்கிறார்கள். ஜீவாத்மாவின் தன்மை மற்றும் ஜீவாத்மா முக்தி பெற்றுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை எல்லாம் பிரம்மா விளக்குகிறார். ஒரு ஜீவாத்மா முக்தி அடைந்துவிட்டால், பாவங்களால் தீண்டப்படாமலும், மூப்பு, மரணம், பசி, தாகம், சோகம் என்பதெல்லாம் இல்லாமலும், பகவானுக்குக் கைங்கரியம் செய்வதற்கு ஏதுவான இருப்பிடத்தோடும், தருமத்துக்கு விரோதமில்லாமல் ஆசைப்படும் அனைத்தும் நிறைவேறும் தன்மையோடும் இருக்கும் என்று விளக்கினார் பிரம்மா.
இந்திரனும், விரோசனனும் அப்படிப்பட்ட ஜீவாத்மாவை அறிய விரும்புகிறோம் என்று பிரம்மாவிடம் கேட்டார்கள். பிரம்மா அதை அவ்வளவு எளிதில் உபதேசிக்க முடியாது. நீங்கள் இருவரும் 32 வருடம் பிரம்ம சரிய விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்றார். இந்திரனும் விரோசனனும் 32 வருட விரதத்ததைப் பூர்த்திச்செய்தனர். பிரம்மா அவர்களுக்கு உபதேசம் செய்யத்
தொடங்கினார்.
உங்கள் கண்களால் கண்ணாடியில் எதைப் பார்க்கிறீர்களோ, அதுதான் ஜீவாத்மா. கண்களால் பார்க்கும் பிரதிபிம்பம்தான் ஜீவாத்மா என்றார். பிரம்மா இவ்வாறு சொல்லி இருவரையும் சோதனைதான் செய்தார். உண்மையில் அதுவல்ல ஜீவாத்மா. இதைக் கேட்ட இருவரும் தங்களின் பிரதிபிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தார்கள். விரோசனன், இதுதான் ஜீவாத்மா எனில், நாம் நம் சரீரத்துக்கு நன்கு அலங்காரம் செய்ய வேண்டும் என நினைத்தான். இந்த உபதேசத்தை ஏற்றுக் கொண்டு, விரோசனன் பிரம்மாவிடம் விடைபெற்றான். இந்திரனுக்கு இது அவ்வளவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால், இன்னும் கொஞ்சம் விளக்குமாறு பிரம்மாவிடம் பிரார்த்தித்தான்.
பிரம்மா, அதற்கு இன்னும் 32 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்குமாறு சொன்னார். அதன்பின் இந்திரனிடம் பிரம்மா கனவில், நம்மைப் போலவே ஒரு வடிவம் வருகிறதே, அவன்தான் ஜீவாத்மா என்றார். இந்த முறையும் இந்திரனால் அது ஜீவாத்மா என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கனவில் வரும் பிம்பமும் பல உணர்வுகளை அனுபவிக்குமே, அது எப்படி ஜீவாத்மாவாக இருக்க முடியும் என யோசித்தான்.
இந்திரனிடம், பிரம்மா இதைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள மீண்டும் 32 வருடம் பிரம்மசரிய விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். இந்த முறை பிரம்மா, ஆழ்ந்த தூக்க நிலையில் இருப்பவன்தான் ஜீவாத்மா என்றார் இந்திரனிடம். கனவுகளையும் கடந்து தூங்குபவன்தான் ஜீவாத்மா என்றார். இந்திரன் யோசித்தான், தூங்குபவன் நினைவில்லாமல் இருப்பான். அவன் எப்படி ஆனந்தமே வடிவாக இன்பத்தை அனுபவிக்க முடியும் என யோசித்தான்.
ஜீவாத்மா பற்றி பூர்த்தியாக அறிய மேலும், 5 வருடம் பிரம்மசரிய விரதம் மேற்கொள்ள வேண்டும் என்றார் பிரம்மா. இப்படி மொத்தம் 101 வருடம் முழுமையாக பிரம்மசரிய விரதத்தை முடித்த பின்னர், பிரம்மா இந்திரனுக்கு ஜீவாத்மா பற்றி முழுமையாக விளக்குகிறார்.`யார் ஒருவன் இந்த சரீரத்துக்குள் இருந்தால் கண்கள் பார்க்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் இருந்தால் காது கேட்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் மூக்கு நுகருமோ, அவன்தான் ஜீவாத்மா.
யார் ஒருவன் உள்ளே இருந்தால் மனம் சிந்திக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. யார் ஒருவன் உள்ளே இருந்தால் நாக்கு சுவைக்குமோ, அவன்தான் ஜீவாத்மா. இதை எல்லாம் உள்ளே அடக்கி, “நான்’’ என்ற ஒரு உணர்வு இருக்கிறதே, அதுதான் ஜீவாத்மா. இன்று பிறவிப்பிணியில் கட்டுண்டு இருப்பதால், உனக்கு அதன் பெருமை தெரியவில்லை. ஜீவாத்மாவை உள்ளபடி புரிந்துகொண்டால், அதன்பின் முக்தி பெறலாம். பகவானை அடையலாம்’ என்றார் பிரம்மா.இந்திரனுக்கு ஓர் ஐயம் எழுந்தது.
பகவானை அடையவேண்டும் என்றால், அவரைப்பற்றி உபதேசம் செய்து இருக்கலாமே, எதற்கு ஜீவாத்மாவைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கேட்டார். அதற்கு பிரம்மா, இந்த ஜீவாத்மாவைத் தன் சொத்தாக, அடிமையாகக் கொண்டவன்தான் பரமாத்மா. இந்த ஜீவாத்மாவுக்கே இவ்வளவு பெருமை என்றால், இதற்கு தலைவனாக இருக்கும் பகவானுக்கு எவ்வளவு பெருமை என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
இது போல், எத்தனை எத்தனை ஜீவாத்மாக்களுக்குத் தலைவனாக இருக்கிறான் பகவான். ஒரு ஜீவாத்மாவை அறிந்து கொள்ள 101 வருடம் பிரம்மசரிய விரதம் இருக்கச் சொல்கிறார் பிரம்மா. எண்ணிலடங்கா ஜீவாத்மாக்களை தன் சொத்தாகக் கொண்டு, அவற்றுக்குத் தலைவனாக இருப்பவனின் பெருமையை நாம் உணர வேண்டும். ஜீவாத்மாவுக்கும் கல்யாணக் குணங்கள் இருக்கிறது.ஆனால், பகவான் கல்யாணக் குண கூட்டங்களின் கடலாக இருக்கிறான் என விளக்கினார். இந்திரன், முக்தி பெற்றால் என்ன கிடைக்கும் எனக் கேட்டான்.
பிரம்மா, அந்த உத்தம புருஷனை அடைவாய் என்றார். வைகுண்டத்துக்கு வரும் ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் தன் அத்தனை ஆனந்தங்களையும் பகிர்வார் பெருமாள். அதனால்தான் பகவான் `வேதாஹா’ எனக் அழைக்கப்படுகிறான். தன்னிடம் உள்ள மகிமைகளைத் தன் அடியார்க்கும் தருபவர் வேதாஹா. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 551-வது திருநாமம். பல வகைப்பட்ட, எல்லையில்லாத, மிகப்பெரிய, தனது பெருமைகளையெல்லாம் தன் அடியார்களுக்கு எப்பொழுதும் வழங்குபவர் என்று பொருள்.“வேதஸே நமஹ’’ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஆத்மாவைவிட மேம்பட்ட பரமாத்மா விஷயமான ஞானம் ஏற்படும் படி திருமால் அருள்புரிவார்.
———————
552. ஸ்வாங்காய நமஹ (Swaangaya Namaha)
திருக்கச்சி நம்பி என்ற மகான், பூவிருந்தவல்லி என்னும் க்ஷேத்திரத்தில் வாழ்ந்து வந்தார். சிறுவயது முதலே பகவானிடம் மிகுந்த பற்று வைத்திருந்தார். நீண்ட நாட்களாகப் பெருமாளுக்கு விசிறி வீசிக் கைங்கரியம் செய்ய வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. 108 திவ்ய தேசத்துக்கும் தலைமையிடமாகக் கருதப்படும் திருவரங்கம் வந்து, அரங்கனைப் பணிந்தார் திருக்கச்சி நம்பி. தனக்கு ஆலவட்ட (விசிறி வீசுதல்) கைங்கரியம் தந்தருளுமாறு பிரார்த்தித்தார் நம்பி. உபய காவிரிக்கு மத்தியில் குளிர்ச்சியாக நான் இருக்கிறேன். இந்தக் கைங்கரியத்தை மலைக்கு மேல் இருக்கும் திருமலையப் பனிடம் பிரார்த்தித்துப் பாருங்கள் என்றார் அரங்கன்.
திருக்கச்சி நம்பி திருமலைக்குச் சென்றார். அங்கே மலையப்பனிடம் கைங்கரியத்துக்குப் பிராத்தித்தார். மலையப்பனோ, இது `குளிர் அருவி வேங்கடம்’ என ஆழ்வார்களே பாடியுள்ளனர். மலைமேல் அருவிகளுக்கு மத்தியில் நான் குளிர்ச்சியாகத் தான் இருக்கிறேன். நீங்கள் இந்த கைங்கரியத்தைக் காஞ்சி வரதரிடம் பிரார்த்தியுங்கள். அவர்தான் யாகத்தில் தோன்றியவர் என்றார். திருக்கச்சி நம்பி அத்திகிரிவரதரிடம் அடிபணிந்தார். அத்திவரதர், ஆலவட்டக் கைங்கரியத்தை ஏற்கிறேன்.
ஆனால், ஒரு கேள்விக்கு பதில் அளித்தபின் கைங்கரியத்தை ஏற்கிறேன் என்றார். அரங்கனும், மலையப்பனும் ஆலவட்டக் கைங்கரியத்தை மறுத்த பின்னும், என்னிடம் கைங்கரியத்திற்குப் பிரார்த்தித்து இங்கு வந்துள்ளீர்களே, நான் உங்கள் கைங்கரியத்தை ஏற்பேன் என்ற எண்ணம் எதனால் உங்கள் மனதில் உண்டானது எனக் கேட்டார். வரதன் என்றால் வரத்தை அருளுபவன் என்று பொருள்.கேட்கும் அனைத்து வரங்களையும் அடியார்க்குத் தர வல்லவனான நீ, உனக்குத் தொண்டு செய்யும் பேற்றைக் கேட்டால் தராமல் இருக்க மாட்டாய். அதனால்தான் உன்னிடம்
வந்தேன் என்றார்.
ஒரு சாதாரண மன்னனுக்குக்கூட அவரின் பணியாள்கள் இரண்டு பக்கமும் சாமரம் வீசிப் பணிவிடை செய்து, அவர்தான் தங்களை ஆளும் மன்னர் என்ற பெருமையை உலகறியச் செய்கிறார்கள். அதுபோல், சர்வலோகச் சக்கரவர்த்தியான வரதருக்கு ஆலவட்டக் கைங்கரியம் போன்ற உபசாரங்களைச் செய்து உன் பெருமையை மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்று அடியேனின் விருப்பம்.
இந்தக் கைங்கரியத்தால் பகவானான உனக்குப் புதிதாக பெருமை வரப்போவதில்லை. ஒரு குடை பிடித்து அடியார்கள் பகவானுக்கு உபசாரம் செய்வது போல், பகவான் தன் திருவடி நிழலை அடியார்களுக்கு தருகிறான். அதில்தான் நாம் அடைக்கலம் பெற்று உய்யமுடியும். கோவர்த்தன கிரிதாரியாக ஆயர்களைக் கண்ணன் ரட்சித்த வரலாற்றை நாம் அறிவோம். நம்மைப் பிறவிப் பிணியிலிருந்து மீட்டு அருளுபவனுக்கு ஒரு சிறு கைம்மாறு போல்தான் ஆலவட்டம் வீசுதல், சாமரம் வீசுதல் போன்றவை.
இந்தக் கைங்கரியங்கள் பகவானான உனக்கு மட்டுமே உரித்தானவை என்றார் திருக்கச்சி நம்பி. எனவே, அடியார்கள் பகவானுக்குச் சாமரம் வீசுதல் போன்றவை எல்லாம் பகவானின் இறையாண்மைக்கான அடையாளங்களாகும். இத்தகைய இறையாண்மைக்கான அடையாளங்களை கொண்டிருப்பதால், திருமால் `ஸ்வாங்க’ என்று அழைக்கப்படுகிறார்.
வைகுண்டத்தில் தனது இறையாண்மைக்கு உரிய அத்தனை அடையாளங்களுடனும் காட்சியளிப்பவர் திருமால். தனக்கே உரித்தான உலகை ஆளும் சர்வசக்தியை உடையவன் என்னும் அடையாளங்களுடன் காட்சி அளிப்பவர் ஸ்வாங்க. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 552-வது திருநாமம்.“ஸ்வாங்காய நமஹ’’ என்று தினமும் சொல்லி வந்தால், நாமும் உலகில் நல்ல அடையாளங்களோடு நேர்மையாக வாழ திருமால் அருள்புரிவார்.
————
553. அஜிதாய நமஹ (Ajithaaya Namaha)
அயோத்தியைப் புரஞ்ஜயன் என்னும் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவர் ராமபிரானுக்குக் குல முன்னோர், ஈக்ஷ்வாகு குலத்தில் தோன்றியவர். அந்தச் சமயம் தேவ லோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே கடும் யுத்தம் நடந்து வந்தது. அந்தப் போரிலே அசுரர்களின் கை ஓங்கி விட்டது. இந்திரன் திருப்பாற்கடல் நோக்கி ஓடி வந்து, நாராயணனைஅடி பணிந்தான். தான் வெற்றி பெற அருள்புரியுமாறு திருமாலிடம் வேண்டினான்.
திருமாலோ இந்திரனிடம் அயோத்தியை ஆண்டு வரும் புரஞ்ஜய மன்னரிடம் உதவி கேட்கச் சொன்னார். இந்திரன் பூமிக்கு வந்து புரஞ்ஜயனைச் சந்தித்தான். தேவலோகத்துக்கு வந்து, தேவர்களுக்காகப் போர் புரிந்து அசுரர்களை வீழ்த்தி, தேவர்களின் ஆட்சியை மீட்டுத் தருமாறு வேண்டினான் புரஞ்ஜயனிடம் வேண்டினான் இந்திரன்.
அதைக் கேட்ட புரஞ்ஜயன், தனது தலைநகரான அயோத்தியில் அப்போது கோவில் கொண்டிருந்த திருவரங்கநாதனைச் சென்று வணங்கினான். பெருமாள் சந்நிதி முன் நின்ற புரஞ்ஜயன், இறைவா, இந்திரன் வந்து என்னைப் போர் புரிய அழைக்கிறான். அசுரர்களை எதிர்த்துப் போர் புரியுமாறு கேட்கிறான். இது எனக்கு சாத்தியமா, மனிதனாக இருக்கும் நான் எப்படி தேவர்களுக்கு உதவ முடியும் என்று பெருமாளிடம் பிராத்தித்தான்.
திருமால் திருவாய் மலர்ந்து, அது உனக்கு சாத்தியமே, உன் ஊரின் பெயர் அயோத்தியா. அயோத்தியா என்றால் யாராளும் கைப்பற்ற முடியாத ஊர் என அர்த்தம். நான் இங்கே வசிப்பதால், என் இருப்பிடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. அதனால் தான் இந்த ஊருக்கு இப்படி ஒரு திருநாமம் ஏற்பட்டது. நான் இந்த க்ஷேத்திரத்தில் மட்டுமல்ல உன் உள்ளத்திலும் குடிகொண்டிருக்கிறேன். புரஞ்ஜயனுக்கு இதைக் கேட்டதும் நம்பிக்கை வந்தது. போர் புரிய தேவ லோகத்துக்குச் சென்றான்.
புரஞ்ஜயன் தேவலோகத்தில் போர் புரிய வாகனம் வேண்டுமென இந்திரனிடம் கேட்டான். அந்தச் சமயத்தில் தேவர்களிடம் ஒரு வாகனம் கூட இல்லை. அனைத்தையும் இழந்த நிலையில் இருந்தார்கள் தேவர்கள். இந்திரன் தானே வாகனமாக வருகிறேன் எனக் கூறிக் காளை மாடாக வடிவம் கொண்டான். அந்தக் காளை மாட்டின் திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டு, அசுரர்களை வென்றான் புரஞ்ஜயன்.
ககுத் என்றால் மாட்டுத் திமில். திமில் மீது ஏறி அமர்ந்து போரிட்டதாலே புரஞ்ஜயன் ககுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். அவன் வம்சத்தில் வந்ததாலே ராம பிரான் காகுத்ஸ்தன் எனப் பெயர் பெற்றான். ககுத்ஸ்தன் வெற்றி பெற்றுத் தந்ததால், இந்திரன் மிகவும் மகிழ்ந்து ஒரு பாராட்டு விழா எடுப்பதாகச் சொன்னான். ககுத்ஸ்தனோ, எல்லாம் நாராயணன் செயல், அவன் என்னுள் குடிக் கொண்டு வெற்றியடையச் செய்தான், அதனால் இந்த வெற்றிக்கான நன்றியை நீ திருமாலிடம் தான் கூற வேண்டும் என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
பகவான் ஓர் இடத்தில் குடி கொண்டால், அந்த இடத்தை யாராலும் கைப்பற்ற முடியாது. ககுத்ஸ்தனுக்குள் திருமால் எழுந்தருளி இருந்தபடியால் தான் அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவ்வாறே பகவானின் இருப்பிடமான வைகுண்டமும். அங்கே எப்போதும் பகவான் எழுந்தருளி இருப்பதால் வைகுண்டத்தை யாராலும் வெல்ல முடியாது. அதனால் தான் வைகுண்டத்துக்கு அயோத்யா என்ற பெயரே உண்டு – யாராலும் வெல்ல முடியாத லோகம் என்று பொருள்.
வைகுண்டத்தைக் காலத்தாலோ, படைப்பு அழிப்பு போன்றவற்றாலோ கைப்பற்ற முடியாது, அதாவது தங்கள் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்த முடியாது. வைகுண்டத்தில் இருக்கும் பகவான், பகவானின் தொண்டர்கள், நித்யசூரிகள் அனைவரும் எந்த மாற்றத்துக்கும் உட்படாதவர்கள். அதனால் வைகுண்டத்துக்கு அஜித என்னும் திருநாமம் ஏற்பட்டது.
அஜிதா என்றால் எதனாலும் அழிக்கமுடியாதது, யாராலும் கைப்பற்ற முடியாதது என்று பொருள். எதனாலும் அழிக்க முடியாத வைகுண்டமாகிய அஜிதாவை இருப்பிடமாகக் கொண்டிருப்பதால், நாராயணன் அஜித எனப் பெயர் பெற்றார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 553வது திருநாமம்.
அஜிதாய நமஹ என்று தினமும் சொல்லி வருவோர்க்கு வாழ்வில் என்றும் வெற்றி ஏற்படும்படி திருமால் அருள்புரிவார்.
——————
554. க்ருஷ்ணாய நமஹ (Krishnaaya Namaha)
சுவாமி வேதாந்த தேசிகன், திருவரங்கநாதனின் பாதுகையை வர்ணித்து இயற்றிய பாதுகா சஹஸ்ரத்தின் 732வது ஸ்லோகத்தில் கவிநயத்துடன் அழகாக ஒரு வர்ணனையை அளிக்கிறார்.
மதுஜித் தனு காந்தி தஸ்கராணாம்
ஜலதானாம் அபயம் விதாதுகாமா
சபலேவ ததங்க்ரிம் ஆச்ரயந்தீ
பவதி காஞ்சன பாதுகே விபாதி
கார்மேகத்துக்கும் அரங்கனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன.
1.அரங்கன் கருனை மழை பொழிகிறார், கார்மேகமோ தண்ணீரை மழையாகப் பொழிகிறது. மழை பொழிதலில் ஒற்றுமை.
2.அரங்கன் மின்னல் போன்ற பிராட்டியின் இசைவைப் பார்த்தபின் தான் அனுக்கிரகம் செய்கிறார். கருமேகமும் மின்னல் வெட்டிய பின்தான் மழை கொடுக்கும். மின்னலை மேகத்தின் மனைவியாகச் சொல்லக் கூடிய வழக்கமும் உண்டு.
3.அரங்கன் எப்படி எப்பொழுது அனுக்கிரகம் பண்ணுவார் என்பதைக் கணிக்கவே முடியாது. கார்மேகத்தையும் கணிக்க முடிவதில்லை, எவ்வளவு அறிவியல் உதவி இருப்பினும் எப்படி, எந்த அளவில் மழைப் பொழிவு இருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடிவதில்லை.
4.அரங்கன் அனுக்கிரகம் செய்யும் போது ஏற்றத்தாழ்வு பார்ப்பதே கிடையாது. அனைத்து பக்தர்களுக்கும் சமமாகவே அருள்புரிகிறார். கார்மேகத்திற்கும் எந்த ஏற்றத்தாழ்வும் கிடையாது. காடு, மலை, ஏழை பணக்காரர் அனைவருக்கும் ஒரே மழை தான்.
5.ரங்கநாதனைச் சேவித்தால் பக்தர்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள், அதே போல் கார்மேகத்தைப் பார்த்தால் மயில்கள் ஆடும்.
6.ரங்கநாதனுடைய அனுக்கிரகம் ஆழ்வார்களின் வாக்கில் விழுந்தால் முத்தான பாசுரங்களாக வருகிறது. கார்மேகத்திலிருந்து மழைத் துளி சிப்பிக்குள் விழுந்தால் அது முத்தாக மாறுகிறது.
இவ்வளவு ஒற்றுமைகளை இருவரும் கொண்டுள்ளதால், அரங்கனுடைய கருப்பு நிறத்தைத் தான் மேகங்கள் திருடிவிட்டன என்று நினைக்கிறேன் என்றார் தேசிகர். நிறத்தை மட்டுமில்லாமல் குணங்களையும் அரங்கனைப் போலவே கொண்டிருப்பதால் இவ்வாறு கூறுகிறேன் என்றார். இந்நிலையில் கார்மேகத்தின் மனைவியாக மின்னல் சிந்தித்ததாம். நம் கணவர் இப்படித் திருமாலிடம் இருந்தே நிறத்தைத் திருடி விட்டாரே. அவர் நம் கணவரைத் தண்டித்து விடுவாரோ என்று அஞ்சியதாம்.
அதனால் தான் கார்மேகத்தின் மனைவியான மின்னல் அரங்கனின் திருவடியில் சரணாகதி செய்து விட்டது. சரணாகதி செய்ததன் அடையாளம் தான் அந்த மின்னலே அரங்கன் திருவடியில் பாதுகையாக வடிவெடுத்து இருக்கிறது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்தாகும். பாதுகைகள் மின்னலைப் போல ஒளி விசிக்கொண்டு இருப்பதால் இவ்வாறு மின்னலே பாதுகையாக வந்ததாக உருவகப் படுத்துகிறார் தேசிகன். இதில் வேதாந்தக் கருத்துகளும் உள்ளன. மேகம் ரங்கநாதனிடமிருந்த நிறத்தை திருடிவிட்டது, இருப்பினும் மேகத்திற்காக அதன் மனைவி மின்னல் சரணாகதி செய்கிறது. அதையும் ஏற்கிறார் ரங்கநாதர்.
அதுபோலே நாம் செய்த தவறுக்காக இன்னொருவர் சரணாகதி செய்தாலும் பெருமாள் ஏற்கிறார். பகவானின் கருணை அவ்வளவு பெரியது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மனதில் கார்மேகம் போல் குளிர்ச்சியைத் தருகின்ற கருமை நிறம் படைத்தவர் திருமால். வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவனும் கார்மேக வண்ணனாகவே காட்சி தருகிறார். அதனால் தான் திருமாலுக்கு க்ருஷ்ண என்று திருநாமம். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 554வது திருநாமம். கிருஷ்ணாய நமஹ என்று தினமும் சொல்லி வந்தால் நமது பிழைகளையும் கருணைக் கடலான திருமால் மன்னித்து அருள்வார்.
———–
557. அச்யுதாய நமஹ (Achyuthaaya Namaha)
விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான் இந்திரன். இனி தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற அளவுக்குக் கர்வத்தை அடைந்தான் இந்திரன். நானே தேவலோகத்தின் ராஜா, தேவர்கள் ரிஷிகள் அனைவரும் தினமும் வந்து என்னை வணங்க வேண்டும், என்னைக் குறித்து முகத்துதி பாட வேண்டும் என்றெல்லாம் பலவாறு சட்டங்கள் போட்டான் இந்திரன்.
ஒருநாள் இந்திரன் தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து, எனக்குப் பெரிய அரண்மனை ஒன்றை அமைத்துத் தர வேண்டும். இதுவரை யாருமே அவ்வளவு பெரிய அரண்மனையில் வாழ்ந்திருக்கக் கூடாது. அத்தகைய பிரம்மாண்டமான அரண்மனையாக அது இருக்க வேண்டும் என்றான் இந்திரன். விஸ்வகர்மாவும் அப்படியே செய்யத் தொடங்கினார்.இதை எல்லாம் கவனித்த தேவர்களும் முனிவர்களும், திருமால் மற்றும் சிவனின் உதவியை நாடினார்கள். இந்திரனுக்கு எப்படியாவது பாடம் புகட்ட வேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று திருமாலும் சிவனும் கூறி விட்டார்கள்.
விஸ்வகர்மா இந்திரனுக்காகக் கட்டிக் கொண்டிருந்த அரண்மனை வாசலில் ஒரு சிறுவன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த இந்திரன், அந்தச் சிறுவனிடம், என்ன சிறுவனே, அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது பார்த்தாயா என்று கர்வத்துடன் கேட்டான்.அதற்கு அந்தச் சிறுவன், ஆம் இந்திரரே, இதுவரை இருந்த எந்த ஒரு இந்திரனும் இவ்வளவு பெரிய அரண்மனையில் இருந்ததில்லை என்றான்.
அதைக் கேட்ட இந்திரன், இதுவரை யார் இந்திரனாக இருந்தார்கள் என்று கேட்டான். அதற்கு அச்சிறுவன், ஆம் உங்களுக்கு முன்பும் இந்திரன் என்ற பதவியில் பலர் இருந்துள்ளார்கள். இப்போது நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்கு முன் உங்கள் பதவியில் இருந்த யாரும் இத்தகைய அரண்மனையில் வாழ்ந்ததில்லை என்று நான் சொன்னேன் என்று விளக்கம் தந்தான்.
அப்படியானால் எனக்கு முன்பு இப்பதவியில் இருந்த இந்திரர்கள் யாவரும் என்ன ஆனார்கள் என்று கேட்டான் இந்திரன். அந்தச் சிறுவன் இந்திரனின் கையைப் பிடித்து ஒரு கரையான் புற்றுக்கு அழைத்துச் சென்றான். அதிலிருந்து வெளிவரும் எறும்புகளைக் காட்டி, இவர்கள் அனைவருமே இதற்கு முன் இந்திரர்களாக இருந்தார்கள். பதவியில் இருக்கும் சமயத்தில் கர்வம் அதிகரித்துச் செருக்குடன் செயல்பட்டதால், அவர்கள் பதவியை இழந்து எறும்பாகப் பிறந்து விட்டார்கள். அப்படி எறும்பாகப் பிறந்தால் தான், உலகம் எவ்வளவு பெரியது, நாம் எவ்வளவு சிறியவர் என்பதைப் புரிந்து கொண்டு பணிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறினான் சிறுவன்.
அந்தச் சிறுவனைப் பார்த்துக் கைகூப்பி, நீங்கள் யார் என்று கேட்டான் இந்திரன். கொஞ்ச நேரத்தில் இங்கே ஒரு துறவி வருவார். அவர் நான் யார் என்று சொல்வார் என்று சொல்லி விட்டுச் சிறுவன் மறைந்து விட்டான். அவ்வாறே ஒரு துறவி அவ்வழியே வந்தார். அவரிடம் இச்சிறுவன் யார் என்று கேட்டான் இந்திரன்.
அதற்கு அந்தத் துறவி, என் மார்பில் உள்ள ரோமங்கள் உதிர்ந்து கொண்டே வரும். மொத்தமும் உதிர்ந்தால் அப்போது உள்ள இந்திரன் தனது பதவியை இழந்து விடுவான். மீண்டும் எனக்கு ரோமங்கள் முளைக்கும். அவை உதிர்ந்தவுடன் அடுத்த இந்திரன் பதவி இழப்பான். இதை நீ அறிவாயா என்று கேட்டார். இன்னும் கலங்கிப் போன இந்திரன், அப்படியானால் நீங்கள் யார் என்று கேட்டான். அப்போது அந்தத் துறவி, நான் தான் சிவன், அந்தச் சிறுவன் வடிவில் வந்தவர் திருமால். உனக்குப் பாடம் புகட்டவே நாங்கள் இப்படி வேடமிட்டு வந்தோம். இனியாவது கர்வத்தை விடு என்று உபதேசித்து விட்டுச் சென்றார்.
இப்படி இந்திரன் உள்ளிட்ட பதவிகள் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆனால் திருமால் தனது பதவியில் எப்போதும் நழுவாமல் நிலைபெற்று இருப்பார். ஏனெனில் அவர்கள் பாப-புண்ணியங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர். பரமாத்மாவாக விளங்குபவர். அதனால் தான் அச்யுத – தன் நிலையில் இருந்து என்றுமே விலகாதவர் என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 557-வது திருநாமம்.அச்யுதாய நமஹ என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பணிவும் பொறுமையும் வளரும்படி திருமால் அருள் புரிவார்.
—————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பராசர பட்டர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பீஷ்மர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வியாச பகவான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply