ஸ்ரீ முக்திநாத் (ஸ்ரீ சாளக்கிராமம்)-நேபாளம்

ஸ்ரீ முக்திநாத், நேபாள நாட்டின், முஸ்தாங் மாவட்டம் அமைந்த இமயமலையில், முக்திநாத் பள்ளத்தாக்கில், 3,710 மீட்டர் உயரத்தில் அமைந்த, இந்து மற்றும் பௌத்தர்களின் புனித தலமாகும்.

           ஸ்ரீ வைணவர்கள் போற்றும் 108 திவ்ய தேசங்களில், முக்திநாத் சிறந்த திவ்ய தேசமாகும். திருமங்கையாழ்வார் மற்றும் பெரியாழ்வார் ஆகியவர்கள் முக்திநாதரை போற்றிப் பாடி மங்கள்சாசனம் செய்துள்ளனர். ஆண்டின் மார்ச் மாதம் முதல் சூன் மாதம் முடிய முக்திநாத் தரிசனம் செய்ய ஏற்ற காலமாகும்.

         கடும் குளிர் மற்றும் மேக மூட்டத்தால் முக்திநாத் பயணம் கடுமையானது. எனவே முதலில் காட்மாண்டிலிருந்து, பொக்காராவை அடைந்து, அங்கிருந்து வான் வழியாக விமானம், ஹெலிகாப்டர் அல்லது சிற்றுந்து மூலம் ஜொம்ஸம் சென்று, பின்னர் ஜுப் மற்றும் சிறிது துரம் நடந்து முக்திநாதரை தரிசிக்கலாம்

ஆழ்வார்கள், இத்தலத்தை, 12-பாசுரங்களால், சாளக்கிராமம் என்றே மங்களாசாசனம் செய்துள்ளனர்.

வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடமுடை வதரி யிடவகை யுடைய எம் புருடோத்த மனிருக்கை
தடவரை யதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்ட மென்னும் கடி நகரே.–பெரியாழ்வார் திருமொழி-4.7.9 (399)

கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்,
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செறுக்களத்து,
மலை கொண்டலை நீரணைகட்டி மதிள் நீரிலங்கை வாளரக்கர் தலைவன்,
தலை பத்தறுத்துகந்தான் சாளக்கிராமமடை நெஞ்சே.–திருமங்கையாழ்வார்-பெரிய திருமொழி-1.5.1 (988)

சாளக்கிராமம்-ஆழ்வார்கள்-மங்களாசாசனம்(12-பாசுரங்கள்)

முக்திநாத் பூமி நுழைவு வாசல்

60.1(a) முக்திநாத் பூமி நுழைவு வாசல்
  • ஜொம்ஸம்–கண்டகி நதியோரம் வேனில் பயணம்–பினனர் குதிரை சவாரி–சிறிது தூரம் நடை பயணம்முக்திநாத் தலம்.60.1(b) மலையடிவாரம்
  • முக்திநாத் கோவிலின் பாதை நுழைவு வாசல்- மூன்று கலசங்களோடு ஒரு அமைப்பு.60.1(c)
  • மூலஸ்தான விக்ரகங்கள்-பஞ்சலோகம்
  • எதிரே ஒருபுரம் ஹோமம்-மறுபுரம் விளக்குகள்60.1(d)
  • மூலவர் : ஸ்ரீமூர்த்தி ; தாயார்  : ஸ்ரீதேவி நாச்சியார்
    தீர்த்தம்  : சக்ர தீர்த்தம், கண்டகி நதி
    விமானம்  : ககன விமானம்.
  • கருவறைக்குள், ஸ்ரீசாளக்ராம நாராயணன், முக்தி நாராயணன்  ஸ்ரீதேவி, பூதேவியர்.
  • பெருமாளின் இடது பக்கம் ராமானுஜர், பிள்ளையார். பெருமாளின்  பக்கம் புத்தர் சிலை தாய்லாந்து பாணியில் கிரீடம்.
  • பெருமாளுக்கு வலது பக்கம் புத்தர் அமர்ந்த நிலையில்.  அவருக்கு முன்னால் இரண்டு உருவங்கள். நரநாராயணர்கள்.  இரண்டு சாளக்ராமங்கள்.60.1(e)
  • காலை இந்து முறை பூஜை, மாலை புத்த முறை பூஜை
  • ஒரே ஒரு பிரகாரம் மட்டுமே அமைந்துள்ளது. பிரகாரம் சிறியது. கருவறையில் மூலவர் உள்ளார். அருகில் உள்ள மூர்த்தங்களை ஸ்ரீமாதா என்று அங்குள்ள பூசாரி கூறுகிறார். அத்திருமேனிகள் ஸ்ரீதேவி, பூதேவி என்று தலவரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது.
  • கோவில் உச்சியில் கலசம்!   வாசலுக்கு முன்னால் ஒரு திறந்த வெளி முற்றம். இரண்டு பக்கமும் செவ்வக  தீர்த்தக்குளங்கள். ஒன்று பாவங்கள் களைய, இன்னொன்று புண்ணியம் சேர்க்க! சரஸ்வதி குண்டம், லக்ஷ்மி குண்டம்  என்ற பெயரில் இருக்கும்.
60.1(f)

           கோயிலுக்கு வெளியே,கோவிலின் பின்புரம், சந்நிதியைச் சுற்றி 108 திவ்யதேசங்களின் புஷ்கரணி தீர்த்தத்துக்குச் சமமான 108 கோமுக தீர்த்தங்கள் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. பிரகாரத்தின் வெளியே தீர்த்தங்கள் கோமுகிவாய் வழியாக விழுகிறது. அவற்றில் வரிசையாகக் குளித்துக்கொண்டே சந்நிதியைச் சுற்றி வரலாம்.

60.1(g)

         மிகக் குளிர்ந்த நீர். மன உறுதியும் உடல் உறுதியும் இருந்தாலே இதில் நீராடலாம்.வெளியே அதிக சந்நிதிகள் இல்லை. இராமனுஜருக்கும், கருடாழ்வாருககும் திருமேனிகள் உள்ளன. சிறிய யாக சாலை உள்ளது.

60.1(h)

                கோயிலில் கூட்டமே இல்லை. இருநதாலும் அங்கே இருக்கும் பூசாரி அவர்கள் மொழியில் கூறிக்கொண்டே இருக்கிறார் , அர்த்த மண்டபம் போன்ற கட்டுமானங்கள் இல்லை.

தலபுராணம்

       முன்பொரு காலத்தில் ஜலந்திரன் என்ற அரக்கன் வாழ்ந்து வந்தான். அவன் மனைவி பிருந்தை. மிகுந்த பதிவிரதா தன்மையுடையவள். தன் கணவனையே ஸ்ரீகிருஷ்ணராக நினைத்து தினமும் பணிவிடைகள் செய்து வந்தாள்.

    ஜலந்திரன் சாகா  வரம் வேண்ட பிரம்மாவை நோக்கி கடும் தவம் செய்யலானான். தவத்தின் உக்கிரம் தாங்கமுடியாத பிரம்மா, ஜலந்திரனே! உனக்கு மரணமே கிடையாது என்று சொல்ல என்னால் முடியாது! எப்போது உன் தேகத்தின் பாதியான உன் மனைவி பிருந்தையின் பதிவிரதாய் தன்மை மாசு படுகிறதோ, அந்தக் கணம் நீ கொல்லப்படுவாய்” என்று வரம் அளித்தார். ஜலந்திரனும் மகிழ்ந்தான்.

      ஆணவம் கொண்ட ஜலந்திரன், ஈரேழு உலகங்களையும் ஆட்டிப் படைத்து, தேவலோகம் சென்று ஈசுவரனையே சண்டைக்கு இழுத்தான்

       அவராலும் ஜலந்திரனை ஏதும் செய்ய முடியவில்லை. நிலைமையின் விபரீதம் உணர்ந்த பிரம்மா, திருமாலைச் சரணடைந்தார். ஜலந்திரன் மனைவியான ஸ்ரீபிருந்தையின் பதிவிரத தன்மை அவனைக் காத்து வருகிறது. ஈசுவரனாலேயே எதுவும் செய்ய முடியவில்லை. நீர்தான் ஜலந்திரன் அழிவதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.அதன்படியே திருமாலும், பிரம்மனுக்கு அபயம் அளித்து அனுப்பினார்.

        இதற்கிடையில் உக்கிர யுத்தத்தில் ஈசுவரனும், ஜலந்திரனும் உச்சக் கட்டத்தில் போரிடும் போது, சிவபிரானின் நிலை மிக அபாயகரமாய் இருந்தது.

        அதே நேரத்தில், ஜலந்திரன் ரூபம் எடுத்து, பிருந்தையின் அரண்மனைக்குள் பிரவேசித்தார் திருமால். பிருந்தையும் தன் கணவனே வந்திருக்கிறார் என்று எண்ணி பல்வேறு பணிவிடைகள், உபசரிப்புகள் எல்லாம் செய்கிறாள். அப்படி பதியல்லாத ஒருவனை பதியென்று நினைத்து சேவைகள் செய்தவுடன், பிருந்தையின் பதிவிரதா தன்மை மாசடைந்து விடுகிறது.

     உடனே, சிவபிரான் ஜலந்திரனின் தலையைத் துண்டித்துவிடுகிறார். துண்டிக்கப்பட்ட தலை பிருந்தையிடம் வருகிறது. திருமாலும் சுய உருவுடன் காட்சி அளிக்கிறார்.

       பிருந்தை கோபமும் துயரமுமாக, கணவனுக்குப் பிறகு உன்னைத்தவிர யாரையும் நான் தொழவில்லை. என் உன்னதமான பதிவிரதா தன்மையை கல் மனம் கொண்டு இழக்கச் செய்த நீ கல்லாகிப் போவாய்” என்று உடலைத் தியாகம் செய்ய முற்படுகிறாள்.

      அதைக்கேட்ட திருமால், பிருந்தை உன்னுடைய விருப்பத்தை அப்படியே ஏற்கிறேன். நேபாளம் முக்திநாத்) கண்டகி நதியில் சாளகிராமமாக நான் வெளிப்படுவேன்.

சாளக்கிராமம்

      முக்திநாத்தில் பக்தர்களால் ஆராதிக்கப்படுவேன். உலக நன்மைக்காக நடத்தப்பட்ட காரியங்களில் இதுவும் ஒன்று.

         ஆனால், பாற்கடலில் அமிர்த கலசம் தோன்றும்போது, என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பிரவகிக்கும். அந்தக் கண்ணீர் துளிகள், நிலத்தில் விழுந்து, துளசிச் செடியாக மாறும். நீதான் அந்தத் துளசி!

      உன்னை, எனக்கு மிகவும் பிரியமான கார்த்தீக சுத்த துவாதசியில் தாமோதரனாக வந்து மணம் புரிவேன். என்னுடைய பூஜைக்கு உன்னைத் தவிர வேறு எதுவும் உயர்ந்தது இல்லை.

      அனைவராலும் பூஜிக்கப்படத் தக்கவளாக நீ விளங்குவாய். உன்னை பூஜிப்பதாலேயே, என்னுடைய அருளைப் பெறுவார்கள். உன் பதிவிரதா தன்மை உன்னை பூஜிக்கும் அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும்!” என்று அருள்பாலித்தார்.

       அது முதற்கொண்டு துளசிச் செடியும் சாளக்கிராமமும் விஷ்ணு பூஜைக்கு உகந்ததாக ஆயிற்று.

இராமாநுஜ கூடம்-ராணிபௌவா-ஆஸ்ரமம்

      இவ்விடத்தில், முக்திநாத் பக்தர்கள், முன்கூட்டியே அறிவித்தால், தேவையான தங்கும் வசதி மற்றும் அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

60.1(i)

       இங்கு மலைப்பகுதிகளில் சாளக்கிரமங்கள் என்று கூறப்படும் கற்கள் கிடைக்கின்றன.

       நைமிசாரண்யத்தில் இறைவன் காடாகவும்புஷ்கரத்தில் நீராகவும்பத்ரிநாத்தில் மலையாகவும்ஸ்ரீரங்கத்தில் அர்ச்சாவிக்ரகமாகவும்முக்திநாத்தில் சாளக்கிரமமாகவும் இருப்பதாக ஐதீகம்.

      இந்த சாளக்கிரமங்களை ஸ்ரீமந் நாராயணனாக வழிபடு கின்றனர். வீட்டில் இதை வைத்துப் பூசை செய்வது  நல்லது.

       ஒரு சங்கில் துளசி இலைகளை இட்டு அதனுள்   நீர் ஊற்றி அந்த சங்கினால் சாளக்கிரமத்திற்கு அபிஷேகம் செய்வது நல்ல பலன்களைத் தரும்  என்பார்கள்.

60.2:கண்டகி ஆறு (நாராயணீ ஆறு)-கங்கா நதியின் துணை ஆறு: 

     காளி–கண்டகி ஆறு அல்லது கண்டகி ஆறு, நாராயணீ ஆறு  நேபாள நாட்டின் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். நேபாளத்தில் இவ்வாறை காளி-கண்டகி என்றும் நாராயணீ என்றும், இந்தியாவில் கண்டகி என்றும் அழைப்பர். கண்டகி ஆறு, துணை ஆறாக, இந்தியாவின் பீகார் மாநிலத்தின் சோன்பூரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

     நேபாளத்தில் பாயும் காளி-கண்டகி ஆற்றில் கிடைக்கும் சாளக்கிராமத்தை வைணவ சமயத்தினர் திருமாலின் அம்சமாக கருதி பூஜையில் வைத்து வழிபடுவர்.
        இமயமலையின் நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் நுபின் இமயமலையின் உறைபனி ஆற்றிலிருந்து காளி-கண்டகி ஆறு உற்பத்தியாகி, பின் தென்மேற்காக முக்திநாத் வழியாக பாய்கிறது.

      பின் காளி-கண்டகி ஆறு கிழக்கே திரும்பி, மகாபாரத மலைத்தொடர்கள் வழியாக செல்லும் போது, கண்டகி ஆற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் கட்டி, நேபாள நாட்டின் மிகப்பெரிய புனல் மின்நிலையம், மின்சாரம் உற்பத்தி செய்கிறது.

        காளி-கண்டகி ஆறு தெற்கில் திரும்புகையில், திரிசூலி எனும் துணை ஆறு, தேவிகாட் எனுமிடத்தில், காளி-கண்டகி ஆற்றுடன் கலக்கிறது. பின்னர் சித்வான் சமவெளியில் பாய்ந்து, தென்மேற்கே கோவிந்தகாட் நகரத்தை கடந்து இந்தியப் பகுதிக்குள் நுழையும் போது காளி-கண்டகி, கண்டகி ஆறு எனப் பெயர்க் கொள்கிறது.

      இந்தியாவில் நுழைவதற்கு முன் நேபாளத்தின் காக்பெனி நகரத்தில் பாயும் காளி-கண்டகி ஆறு, இந்திய-நேபாள எல்லையில் பாய்கையில் பட்ச்னாடு மற்றும் சோன்கா ஆகிய துணை ஆறுகளுடன் சேர்ந்து சோன்பூரில் கூடுமிடத்தை, திரிவேணி சங்கமம் என்பர்.

    சோன்பூர்–பீகார்  கண்டகி ஆறு, கங்கா நதியில் சங்கமம்- “கங்கா-கண்டகி-கார்கா” நதிகள் சங்கமம்”-கஜேந்திர மோட்சம் 

     கண்டகி நதியில் கஜேந்திரன் என்ற யானையை முதலை பிடித்துக் கொண்டது. கஜேந்திரன் ஆதிமூலமே என்று அலற ஸ்ரீமன் நாராயணன் ஓடி வந்து முதலையை தன் சக்கரத்தால் வீழ்த்தி யானையைக் காப்பாற்றிய இடம் உள்ளது. இந்த நதிக்கரையில் ஒரு ஆலயம் உள்ளது. நாராயணர் கோயில்.இங்கு யானை, முதலை இவற்றின் சிலைகளும் உள்ளன.

       ஐப்பசி-பௌர்ணமி தினம் மகிமை வாய்ந்தது. இந்தத் திருநாளையட்டி ராஜஸ்தானில் பிரம்மனை போற்றி கொண்டாடப்படும் புஷ்கர் மேளாவும் பீகார்- சோன்பூரில் நடைபெறும் சோன்பூர் மேளாவும் பிரசித்திப் பெற்ற விழாக்கள் ஆகும்.

       கங்கை, கண்டகி, கார்கா ஆகிய நதிகள் சூழ அமைந்திருக்கும் சோன்பூர் குறித்து பாகவத புராணம் விவரிக்கிறது. ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட இந்த தலம், தொன்மை வாய்ந்த விசால திரிகூட பர்வத சேத்திரத்தைச் சார்ந்த பகுதியாக திகழ்ந்ததாம்!

         இத்தகு பெருமைகள் மிக்க சோன்பூர், நதிக் கரையில் அழகுற அமைந்துள்ளது ஹரிஹரநாத் ஆலயம். கூம்பு வடிவ கோபுரத்துடன் மிக எளிமையாகத் திகழும் இந்த ஆலயத்தில் இறைவனுக்கென்று தனியே கருவறையும் கிடையாது. விசாலமான- வட்ட வடிவ முற்றம் போன்ற ஓர் இடத்தில், உயரமான பீடத்தில்… சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஒன்றாக இணைந்து ஹரிஹரனாகக் காட்சி தருகிறார்கள். சிலையின் வலப் பாகம்- ஹரியின் தோற்றம்; இடப் பாகம்- ஹரனின் தோற்றம். இந்த ஹரிஹர மூர்த்தத்துக்கு வில்வம் மற்றும் துளசி மாலைகள் சாத்தப்படுகின்றன.
      முற்காலத்தில் இந்தப் பகுதியில் அடிக்கடி எழும் சைவ-வைணவ தர்க்கங்கள் மற்றும் பிரச்னைகளைப் புறந்தள்ளி, மக்களிடம் ஒற்றுமையை வலியுறுத் துவதற்காக இந்த ஆலயம் எழுப்பப் பட்டதாகக் கூறுவர். விஸ்வாமித்திரருடன் மிதிலை சென்ற ஸ்ரீராம-லட்சுமணர்கள் இந்தக் கோயிலை எழுப்பியதாகவும் கூறுவர்.

      கோயிலுக்கு அருகில் உள்ளது ‘கோன்ஹரா’ படித்துறை (கோன்ஹரா என்றால் ‘தோல்வி யுற்றது யார்?’ என்று அர்த்தம்). இங்குதான் கஜேந்திர மோட்சம் நடந்தேறியதாம் (கஜேந்திர மோட்சம் நடந்த இடம் என்று பல தலங்களையும் குறிப்பிடுவர்)! சண்டையில் தோற்றது யானையா, முதலையா? வாதத்தில் தோல்வி யுற்றது சைவமா, வைணவமா என்ற கேள்வி எழுந்த இடத்துக்கு கோன்ஹரா என்ற பெயர் பொருத்தம்.

      ஐப்பசி-பௌர்ணமி அன்று, இங்குள்ள கங்கையில் நீராடி, ஹரிஹரனை கங்கா தீர்த்தத்தால் அபிஷேகித்த பின்னரே சந்தை கூடுகிறது. இந்தப் படித்துறையில் நீராடிய யானைகள், வரிசையாக கோயிலை வலம் வந்து இறைவனை தரிசிக்கும் அழகே அழகு! இந்தத் திருநாளன்று துவங்கும் சோன்பூர் சந்தை, சுமார் 21 அல்லது 25 நாட்கள் வரை நடைபெறுகிறது. இந்த சந்தையில், சகலமும் கிடைக்குமாம்!

கந்தர்வன்-ஹூஹூ:முதலையாக

     திரிகூட பர்வதத்தின் நடுவே இருந்த நீர் நிலையில், தனது ஆசை நாயகிகளுடன் ஜலக்கிரீடையில் இருந்தான் கந்தர்வத் தலைவன் ஹூஹூ.

    அப்போது, ஒரு முனிவரும் அங்கு நீராடிக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் திளைத்திருந்த ஹுஹு, நீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரது கால்களை வாரி விட்டான். இதனால் கோபம் கொண்ட முனிவர், ‘ஹுஹு’வை முதலையாகும்படி சபித்தார். தன் தவறு உணர்ந்து அவன் மன்னிப்பு கேட்க, ‘பரந்தாமனின் அருளால் விமோசனம் பெறுவாய்’ என்று கூறிச் சென்றார் முனிவர்.

இந்திரயுத்யும்னன்:யானையாக

     அதே வேளையில், விஷ்ணு பக்தனான இந்திரயுத்யும்னன், ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அப்போது, அங்கு வந்த அகத்திய முனிவரை அவன் வரவேற்கத் தவறினான். இதனால் கோபமுற்ற அகத்தியர், யானையாக மாறும்படி  அந்த மன்னனை சபித்தார். அவன் சாப விமோசனம் வேண்டவே, ‘பரந்தாமன் அருளால் விமோசனம் கிடைக்கும்!’ என்று அருளிச் சென்றார் அகத்தியர்.

     இதன்பின்னரே, படித்துறையில் யானை- முதலை சண்டையும் கஜேந்திர மோட்சமும் நிகழ்ந்ததாக இங்கே சொல்கிறார்கள்.

     ஸ்ரீசக்கரத்தால் அறுபட்ட முதலை, கந்தர்வனாக உருப்பெற்று சொர்க்கம் சென்றது. கஜேந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த பரந்தாமன், மன்னனை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்றார்.

    இதையட்டியே ஹரிஹர்நாத் ஆலயமும், அதைச் சுற்றியுள்ள சிறு கோயில்களும் தோன்றியதாகச் சொல்வர். கஜேந்திர மோட்சத்தை பறைசாற்றும் சிலை ஒன்றை, படித் துறைக்குச் செல்லும் வழியில் காணலாம்.

         ஐப்பசி பௌர்ணமியன்று, ‘கோன்ஹரா’ தீர்த்தக்கட்டம் அருகில் நடைபெறும் கஜேந்திர வழிபாடு, ஹரிஹர்நாத் திருவிழா மற்றும் சோன்பூர் மேளா ஆகிய விழாக்களைக் காணக் கண் கோடி வேண்டும்!

வரலாற்றில் கண்டகி ஆறு

      மகாபாரதத்தில் இதிகாசத்தில் கண்டகி ஆறு குறித்த செய்திகள் உள்ளது. சிவபுராணத்தில், சிவபெருமான் சங்கச்சூடனை வதம் புரியும் படலத்தில் கண்டகி ஆறு குறித்த செய்தி உள்ளது.

     நேபாளத்தின் கண்டகி சமவெளியில், காளி-கண்டகி ஆறு பாயுமிடத்தில் சித்வான் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. நேபாள நாட்டின் பெரிய தேசியப் பூங்கா, சித்வான் தேசியப் பூங்காவாகும்.

      இப்பூங்கா, இமயமலையின் சிவாலிக் மலைத்தொடரில், தென்மத்திய நேபாளத்தின், சித்வான் மாவட்டம், நவல்பாரசி மாவட்டம், மக்வான்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டது.

சித்வான் தேசியப் பூங்காவின் தெற்கு பக்கத்தில் வால்மீகி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

சாளக்கிராமங்கள்

      முக்திநாத் பகுதியில் பாயும் கண்டகி ஆற்றாங்கரையில் காணப்படும் சாளக்கிராமக் கற்கள் இயற்கையாக வட்ட வடிவத்தில் அல்லது சுருள் வட்ட வடிவில் காளி-கண்டகி ஆற்றாங்கரையில் கிடைக்கிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.

  • முற்றிலும் சிவப்பு நிற சாளக்கிராமம் ‘நரசிம்மக்கல்-இதை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.
  • சக்கர வடிவத்தில், கறுப்பாக இருந்தால் ஐஸ்வர்யம், மகிழ்ச்சி, உடல் ஆரோக்கியம் பெருகும். குடும்பம் சிறக்கும்.
  • முன்பகுதியில் பாம்பு போன்ற தோற்றமோ, பொன்னிறத்தில் ரேகைகள் இருந்தாலோ நலங்கள் வந்து சேரும். இக்கல்லை ‘வாமதேவன் கல்’ என்பர்.
  • இடப்புறம் பச்சை நிறத்தில் இருக்கும் கல் பாவத்தைப் போக்கக் கூடியது.
  • வட்ட வடிவமான சாளக்கிராமம் செல்வம் தரும்.
  • குடை வடிவ கல்லை வணங்கினால் நாடாளும் பாக்கியம் கிடைக்கும்.
  • சாளக்கிராமத்தில் சக்கரம் போன்ற அமைப்பு அல்லது பாம்புகளின் தலையுடன், பல்வேறு நிறங்களில் காணப்பட்டால் அது ‘லட்சுமி காந்தம்’ எனப்படுகிறது. இக்கல்லைப் பூஜை செய்து வணங்குபவர்களுக்கு வேண்டும் வரமும், செல்வமும் கிடைக்கும்.
  • சாளக்கிராமம் உடைந்ததாக இருப்பினும் அதனைப் பயன்படுத்தலாம். இதனால் எவ்விதக் கெடுதலுமில்லை.
  • நீல நிறம்—செல்வம், சுகம் (ஸ்ரீ கிருஷ்ண ஷேத்திரம்)
  • பச்சை—பலம் , தைரியம் (ஸ்ரீ நாரயண ஷேத்திரம்)
  • .வெண்மை—ஞானம் , பக்தி , மோட்சம் (வாசுதேவ ஷேத்திரம்)
  • கருப்பு—புகழ் , பெருமை (விஷ்ணு ஷேத்திரம்)
  • மஞ்சள் நிறம்— வாமன ஷேத்திரம்
  • பசும்பொன் (அ) மஞ்சள் கலந்த சிகப்பு நிறம்—ஸ்ரீ நரசிம்ம ஷேத்திரம்
  • சாளக்கிராமத்தில் தெய்வீக சக்தி இருப்பது மட்டுமின்றி , அவற்றில் 14 உலோகங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சாளக்கிராமங்களை பெரியவர்களிடமிருந்தும் , சாஸ்த்திர ஞானம் பெற்றவர்களிடமிருந்தும் வாங்குதல் நன்று .
  •       சாளக்கிராமத்தை பால் (அ) அரிசியின் மீது வைத்திருந்து பின்னர் எடுத்துப் பார்த்தால் ,அதன் எடை முன்பு இருந்ததை விடக் கூடுதலாக இருக்கும்-துண்டிக்கப்பட்டிருந்தாலும் (அ) விரிந்து போனதாய் இருந்தாலும்-சாளக்கிராமம் எங்கு இருக்கிறதோ அங்கு தோசமில்லை.

பொக்காரா-ஜொம்சொம் செல்லும் விமானங்கள் லகு-ரக விமானங்கள். .அளவில் சிறியவை. 1+1 இருக்கை அமைப்பு. இதில் விமானி, துணை விமானி, பணிப்பெண் ஆகிய மூன்று பேர், இருப்பார்கள் .16 பயணிகள் அமரக்கூடியது.வாநிலை காலை 8 மணிக்கு மேல் தான் தெளிவாகும். சிலநாட்களில் நாள் முழுதும் சீராகாமல் போக்குவரத்து இல்லாமலே போய்விடுமாம்.

        பொக்காராவிற்கும் ஜொம்சொம்மிற்கும் இடையே 15 நிமிட பயணம். விமானம் மிக உயரமாகப் பறந்து மலைமுகடுகளைத் தொட்டுவிடுவது போல் தாவிச் சென்றது

ஜீப் சுமார் இரண்டு மணி நேரம் சென்றது. வழி நெடுகிலும் பெரிய ஆறு கண்டகி, ஓடிக்கொண்டே இருக்கிறது. மிக உயரத்தில் இருந்து பார்க்கிற போதும் ஆறு ஓடுவது அச்சத்தைத் தருகிறது. எங்காவது  நீண்ட தூரத்திற்குப் பிறகு மிகச்சிறிய கிராமங்கள் உள்ளன. சில இடங்களில் குங்குமப்பூச் செடித் தோட்டங்கள் உள்ளன.

———————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading