நதியை அடுத்த சோலையின் சிறப்பை இராமன் கேட்க, முனிவன் எடுத்துரைத்தல்
‘தங்கள் நாயகரின் தெய்வம்தான் பிறிது இலை’ என்று எண்ணும்
மங்கைமார் சிந்தை போலத் தூயது; மற்றும் கேளாய்:
எங்கள் நான்மறைக்கும், தேவர் அறிவிற்கும், பிறர்க்கும், எட்டாச்
செங் கண் மால் இருந்து, மேல்நாள் செய் தவம் செய்தது அன்றே. 6
தங்கள் நாயகரின் தெய்வம் தான்பிறிது இலை – தங்களது கணவரைக் காட்டிலும் தெய்வம் வேறுஇல்லை;
என்றெண்ணும் மங்கைமார்- என்று கருதும் பெண்ணரசிகளது;
சிந்தை போலத் தூயது – மனத்தைப்போல (இச்சோலை) தூய்மையானது;
மற்றும் கேளாய் – பின்னும் சொல்லுகிறேன் கேட்பாயாக;
எங்கள் நான் மறைக்கும் – எங்களுடைய நான்கு வேதங்களுக்கும்;
தேவர் அறிவிற்கும் – தேவர்களின் நுட்பமான அறிவுக்கும்;
பிறர்க்கும் எட்டாச் செங்கண்மால் – மற்றவர்களுக்கும் (உள்ளம். உரை) செயல்களால் எட்டமுடியாத திருமால்;
இருந்து மேல் நாள் – இங்குத் தங்கி முன் ஒரு காலத்திலே;
செய்தவம் செய்ததன்றே – செம்மையான தவத்தைச் செய்த இடமல்லவா?
ரமணீயம் ப்ரஸன்னாம்பு ஸத் மனுஷ்ய மாதோ யதா -ஸ்லோகார்த்தம்
—————–
‘”பாரின்பால், விசும்பின்பாலும், பற்று அறப் படிப்பது அன்னான்
பேர்” என்ப; “அவன் செய் மாயப் பெரும் பிணககு ஒருங்கு தேர்வார்
ஆர்?” என்பான்; அமல மூர்த்தி கருதியது அறிதல் தேற்றாம்;
ஈர்-ஐம்பது ஊழி காலம் இருந்தனன் யோகத்து, இப்பால். 7-
பாரின்பால் விசும்பின் பாலும்- மண்ணுலகிலும் விண்ணுலகிலும்;
பற்று அறப்படிப்பது – (பிறப்புக்குக் காரணம் ஆன) உலகப் பற்றுக்கள் நீங்க. சொல்லப் பெறுவது;
அன்னான் பேர் என்பார் – அத்திருமாலின் பெயர்களே என்று சொல்லிய கோசிகன் மேலும்;
அவன் செய் மாயப் பெரும்பிணக்கு – அப்பரமன் செய்யும் மாயமாகிய பெருங்கலகத்தை;
ஒருங்கு தேர்வார் ஆர் என்பான் – ஒரு சேரத்தெளிந்து தேர்பவர் யாரென்று சொல்லும் தெளிவுடையவர்
எவரும் இலர் என்று கூறிவிட்டு;
அமலமூர்த்தி கருதியது – களங்கமற்ற அப்பரமன் நினைத்துள்ளதை;
அறிதல் தேற்றாம் – அறிந்து சொல்லும் தெளிவில்லேன்;
ஈரைம்பது ஊழிக்காலம் – நூறு யுகம்வரையும்;
இருந்தனன் யோகத்து இப்பால் – இவ்விடத்திலே யோகத்தில் இருந்தான் என்றான்.
——————
முனிவன் உரைத்த மாவலி வரலாறு
‘ஆனவன் இங்கு உறைகின்ற அந் நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்,
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்; 8
ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய் – அத்தகைய திருமால் இங்கு வாழ்ந்து வருகின்ற அந்தக் காலத்திலே;
ஊனம் இல்ஞாலம் ஒடுங்கும் எயிற்று – குற்றமற்ற இவ்வுலகம் ஒடுங்கத் தகுந்த இரு பற்களை உடைய;
ஆண் ஏனம் எனும் திறல் – ஆதிவராகத்தோடு ஒப்பு கூறத்தக்கவன் இவனே என்னுமாறு;
மாவலி என்பான் – மகா பலி என்னும் பெயருடைய அசுரர்குலத் தலைவன்;
வானமும் வையமும் – விண்ணுலகத்தையும். மண்ணுலகத்தையும்.
வவ்வுதல் செய்தான்- கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.
———————
‘செய்தபின், வானவரும் செயல் ஆற்றா
நெய் தவழ் வேள்வியை முற்றிட நின்றான்;
ஐயம் இல் சிந்தையர் அந்தணர் தம்பால்,
வையமும் யாவும் வழங்க, வலித்தான்; 9
செய்த பின் – மாவலி அவ்வாறு விண்ணையும் மண்ணையும் வவ்வுதல் செய்த பிறகு;
வானமும் செயல் ஆற்றா – தேவர்களும் செய்ய இயலாத;
நெய்தவழ் வேள்வியை – நெய்மிகுந்து அவி வழங்கும் வேள்வியை;
முற்றிட நின்றான் – செய்து நிறைவேற்ற நிலைத்தவனாகி;
ஐயம் இல் சிந்தையர் – ஐயமில்லாத உள்ளம் உடையவராகிய;
அந்தணர் தம்பால் – அந்தணர்களிடத்திலே;
வையமும் யாவும் – பூமியையும் மற்றெல்லாவற்றையும்;
வழங்க வலித்தான் – வழங்கத் துணிந்தான்.
—————–
‘ஆயது அறிந்தனர் வானவர், அந் நாள்;
மாயனை வந்து வணங்கி இரந்தார்;
“தீயவன் வெந் தொழில் தீர்” என நின்றார்;
நாயகனும், அது செய்ய நயந்தான். 10-
வானவர் ஆயது அறிந்தனர் – தேவர்கள் மாவலியின் அந்தச் செய்தியைத் தெரிந்தனர்;
அந்நாள் மாயனை வந்து வணங்கி நின்றார் – அப்போது திருமாலை வந்து வணங்கி நின்றனர்;
தீயவன் வெந்தொழில் தீர் என இரந்தார் – கொடியவனான மாவலியினது கொடுந் தொழிலைத் தீர்ப்பாய் எனக் கெஞ்சிக் கேட்டனர்;
நாயகனும் அது செய்ய நயந்தான் – தலைவனாகிய திருமாலும் அக்காரியத்தைச் செய்ய ஒருப்பட்டான்.
—————–
‘காலம் நுனித்து உணர் காசிபன் என்னும்
வால்-அறிவற்கு அதிதிக்கு ஒரு மகவு ஆய்,
நீல நிறத்து நெடுந்தகை வந்து, ஓர்
ஆல் அமர் வித்தின் அருங் குறள் ஆனான். 11
காலம் நுனித்து உணர்- முக்காலங்களையும் சூக்குமமாகக் கணித்து எதனையும் உணரவல்ல;
காசிபன் என்னும் வால் அறிவற்கு – காசிபன் என்ற பெயருடைய மெய்யறிவுடைய முனிவனுக்கும்;
அதிதிக்கும் ஒருமகவாய் – அவனது மனைவியான அதிதி என்பவளுக்கும் ஒப்பற்ற குழந்தையாக;
நீல்நெடுந்தகை வந்து – நீல நிறத்தை உடைய திருமால் வந்து பிறந்து;
ஓர் ஆல்அமர் வித்தின் – ஆலமரம் நுண்ணுருவில் தங்கியிருக்கத் தகுந்த அந்த ஆலம் விதையை ஒத்து;
அரும் குறள் ஆனான் – அரிய குறள் உருவத்தில் வளர்ந்து வந்தான்.
பிரஹ்மேச மத்ய கணநா கணநா அர்க்க பங்க்தவ்
இந்த்ர அனு ஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத்
இஷுவாகு வம்ச யது வம்ச ஜநிச்ச ஹந்த
ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந –ஸ்ரீ அதி மானுஷ ஸ்தவம் 15-
அநுபமஸ்ய–ஒப்பற்ற
பரஸ்ய தாம்ந –பரஞ்சோதியாகிய எம்பெருமானுக்கு
பிரஹ்மேச மத்ய கணநா –ப்ரஹ்ம ருத்ரர்களின் நடுவே ஒருவனாக எண்ணப் பெறுகையும்
கணநா அர்க்க பங்க்தவ் –துவாதச ஆதித்யர்கள் திரளில் எண்ணப் பெறுகையும்
இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதிக்குப் பிள்ளையாகப் பிறந்ததனால் உபேந்த்ரனாக ஆனதும்
இஷுவாகு வம்ச யதுவம்ச ஜநிச்ச –இஷுவாகு வம்சத்திலும் யதுவம்சத்திலும் அவதரித்ததும்
அமூநி -ஆகிய இவ் வவதாரங்கள் எல்லாம்
ஹந்த ஸ்லாக்யாநி –அதிசயாவஹங்கள் அன்றோ -ஆச்சர்யம்
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
கேவல பரத்வமும் கேவல ஸுவ்லபயமும் ஸ்லாக்யமாக மாட்டாவே
ஸுவ்லப்யம் பொலியும்படி பரத்வத்தை மறைத்து அருளி அவதரித்து ஒளி பெறுவதே
பிரஹ்மேச மத்ய கணநா –விஷ்ணுவாய் -நல்லரன் நாரணன் நான்முகனுக்கு –என்றபடி
நாட்டைப் படைத்து அயன் முதலாயத் தந்த
ப்ரதமஜ -மத்யே விரிஞ்சு கிரீஸம் பிரதம அவதாரம்
இணைவனாம்
கணநா அர்க்க பங்க்தவ் –ஆதித்யர் பன்னிருவரில் உயர்ந்த விஷ்ணு நான் -ஸ்ரீ கீதா
இந்த்ர அனுஜத்வம் அதிதேஸ் தந யத்வ யோகாத் -அதிதி காஸ்யபருக்கு -ஸ்ரீ வாமனனாய் –
ஸூர்ய மண்டல வர்த்தி தானே ஸூர்யனாக திருவவதரித்து
இஷுவாகு வம்ச யது வம்ச ஜநிச்ச ஹந்த ஸ்லாக்யாநி அமூநி அநுபமஸ்ய பரஸ்ய தாம்ந —
இவ் வவதாரங்கள் எல்லாம் இச்சா பரிக்ருஹீதம்–அதிசயவஹம் அன்றோ -என்றபடி
கீழே இஹ அவதீர்ண –என்றவாறே
இவ் வவதாரங்களை அனுசந்தித்து அருளிய படி –
———————-
‘முப்புரிநூலினன், முஞ்சியன், விஞ்சை
கற்பது ஒர் நாவன், அனல் படு கையன்,
அற்புதன்,-அற்புதரே அறியும் தன்
சிற்பதம் ஒப்பது ஒர் மெய்க்கொடு-சென்றான். 12-
அற்புதன்- ஆச்சரிய மாயையில் வல்லவனாகிய திருமால்;
முப்புரி நூலினன் – மூன்றாகத் திரிக்கப்பட்ட பூணூலை அணிந்தவனாகியும்;
முஞ்சியன் – முஞ்சி என்னும் புல்லாலாகிய அரைநாணை உடையவனாகியும்;
விஞ்சை கற்பது ஓர் நாவன் – வேதவித்தையைச் சொல்லுகின்ற நாவைக் கொண்டவனாகவும்;
அனல்படு கையன் – அனல் தோன்றும் கையை உடையவனாவும்;
அற்புதரே அறியும் – அற்புத ஞானம் வாய்ந்த மேலோர்களே அறிந்து கொள்ளத் தகுந்த தான;
தன் சிற்பதம் ஒப்பது ஓர் – தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய ஒரு;
மெய்க்கொடு சென்றான் – வடிவத்தை எடுத்துக் கொண்டு மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.
——————-
‘அன்று அவன் வந்தது அறிந்து, உலகு எல்லாம்
வென்றவன், முந்தி வியந்து எதிர் கொண்டான்;
“நிந்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
எந்தனின் உய்ந்தவர் யார் உளர்?” என்றான். 13
அன்று அவன் வந்தது அறிந்து – அன்று அந்த வாமனன் வந்ததை அறிந்து;
உலகு எல்லாம் வென்றவன் – உலகையெல்லாம் வென்றவனான மாவலி;
முந்தி விரைந்து எதிர் கொண்டான் – முற்பட விரைந்து சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தான். பின்பு;
நிறைந்தோய் – நிறைந்த தவம் உடைய மேலோனே;
நின்தனில் அந்தணர் இல்லை – உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை;
என்தனின் உய்ந்தவர் யார் இனி என்றான் – என்னைவிட உய்வு பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான்.
———–
‘ஆண்தகை அவ் உரை கூற, அறிந்தோன்,
“வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி,
நீண்ட கையாய்! இனி, நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்” என்றான். 14-
ஆண்தகை அவ்வுரை கூற – வீரம் மிக்க மாவலி அவ்விதமாகச் சொல்லவே;
அறிந்தோன் – அனைத்தும் அறிந்தவனாகிய அவ்வாமனமூர்த்தி;
வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட கையாய் – வேண்டி வந்தவர்களது விருப்பத்துக்கு மேற்படும்படி வாரி வழங்கி
அதனால் நீண்டிருக்கும் கைகளை உடையோய்!;
இனி நின் உழை வந்தோர் மாண்டவர் – உன்னிடம் வந்தவர்கள் மாண்புடையவராவர்;
அல்லவர் மாண்பிலர் என்றான் – அல்லாதவர் மாட்சியில்லாதவரே என்றான்.
————
‘சிந்தை உவந்து எதிர், “என் செய்?” என்றான்;
அந்தணன், “மூஅடி மண் அருள், உண்டேல்;
வெந் திறலாய்! இது வேண்டும்” எனா முன்,
“தந்தனென்” என்றனன்; வெள்ளி, தடுத்தான்: 15
சிந்தை உவந்து – (மாவலி இதைக் கேட்டு) மனம் மிக மகிழ்ந்து;
என் செய என்றான் – மறு மொழியாக நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்;
அந்தணன் – அதைக் கேட்ட வாமனனாக வந்த திருமால்;
வெந்திறலாய் – கொடிய வலிமை வாய்ந்த மாவலியே;
உண்டேல் மூவடிமண் அருள் இது வேண்டும் – உள்ளதாயின் என் காலால் மூன்றடி மண் தருவாயாக இதுவே வேண்டும்;
எனா முன் தந்தனென் என்றான் – என்று சொல்லுதற்கு முன்பே (மாவலி) தந்தேன் என்றான்;
வெள்ளிதடுத்தான் – அப்போது அசுர குருவாகிய சுக்கிரன் த்ராதே என்று தடுத்தான்.
—————-
‘”கண்ட திறத்து இது கைதவம்; ஐய!
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல்;
அண்டமும் முற்றும் அகண்டமும், மேல்நாள்,
உண்டவன் ஆம்; இது உணர்ந்துகொள்” என்றான். 16-
ஐய! இது கண்ட திறத்திது கைதவம்- தலைவனாகிய மாவலியே! ஆராய்ந்து உணர்ந்தால் இந்த அந்தண வடிவம் கபடமானது;
கொண்டல் நிறக் குறள் என்பது கொள்ளேல் – (இதனை) மேகம் போன்ற நிறமுடைய குறள் வடிவம் என நினைக்காதே;
அண்டமும் முற்றும் அகண்டமும் – இந்தப் பூமியையும் அதனைச் சூழ்ந்துள்ள பேரண்டங்களையும்;
மேல் நாள் உண்டவன் ஆம் – முன் ஒரு காலத்திலே உண்டவனாகிய திருமாலே ஆகும்;
இது உணர்ந்து கொள் என்றான் – இதை அறிந்து கொள்வாய் என்று கூறினான்.
——————
‘”நினைக்கிலை; என் கை நிமிர்ந்திட வந்து,
தனக்கு இயலாவகை தாழ்வது, தாழ்வு இல்
கனக் கரியானது கைத்தலம் என்னின்,
எனக்கு இதன்மேல் நலம் யாது கொல்?” என்றான். 17
நினைக்கிலை – சுக்கிரனே! நீ நினைத்துப் பார்த்துக் கூறினாயில்லை;
என் கை நிமிர்ந்திட – என்னுடைய கை மேலாக நிமிர்ந்து நிற்க;
தனக்கு இயலா வகை வந்து தாழ்வது – தனது தன்மைக்குப் பொருந்தாத விதத்தில் தானே வந்து என் முன் தாழ்ந்து நிற்பது;
தாழ்வு இல் கனக் கரியானது கைத்தலம் என்னின் – எவ்விதத்திலும் தாழ்வில்லாத மேகம் போன்ற கரிய நிறத்தை உடைய
திருமாலின் கை என்றால்;
எனக்கு இதன்மேல் நலம் – எனக்கு இதைவிட மேலான நன்மை;
யாது கொல் என்றான் – ஏது இருக்கிறது என்று மாவலி கூறினான்.
———————–
‘”துன்னினர் துன்னலர்” என்பது சொல்லார்,
முன்னிய நல் நெறி நூலவர்; ‘முன்வந்து,
உன்னிய தானம் உயர்ந்தவர் கொள்க’
என்னின், இவன் துணை யாவர் உயர்ந்தார்? 18
நன்னெறி முன்னிய நூலவர் – நல்ல நெறியினையே நினைந்துள்ள நூலறிவு வாய்ந்த பெரியோர்கள்;
துன்னினர் துன்னலர் என்பது சொல்லார் – நெருங்கியவர். நெருங்காதவர் என்ற வேறுபாடு கருதார்;
உன்னிய தானம் – தாம் செய்வதாக நினைத்த தானப் பொருள்;
உயர்ந்தவர் முன்வந்து கொள்க – உயர்ந்தோர் முற்பட வந்து கொள்க;
என்னின் – என்று சொல்லிவிட்ட பிறகு அதனைப் பெறவந்திருக்கும் பலருள்ளும்;
இவன் துணை யாவர் உயர்ந்தார் – இந்த வாமனனுக்கு இணையாகக் கல்வி கேள்விகள் வல்ல உயர்ந்தோர் யாருண்டு?
————-
‘”வெள்ளியை ஆதல் விளம்பினை, மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவது அல்லால்,
எள்ளுவ என் சில? இன் உயிரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால். 19
வெள்ளியை ஆதல் விளம்பினை- நீ வெள்ளறிவுடையனாதலின். உன் இயற்கைக்கேற்ப சொல்லினை;
மேலோர் – மேன்மைக் குணம் உடைய பெரியோர்கள்;
வள்ளியர் ஆக – தாம் வள்ளமை உடையோராயின்;
இன் உயிரேனும் – தமது இனிய உயிரையே என்றாலும்;
வழங்குவர் அல்லால் – கொள்வோர்க்குக் கொடுப்பாரே அல்லாமல்;
எள்ளுவ என்சில – சில கூறி பரிகசிப்பரோ?;
கொள்ளுதல் தீது கொடுப்பது நன்று – பிறர்பால் ஏற்றல் தீமை ஈதலே நன்மையாகும்.
—————–
‘”மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள்; மாயாது
ஏந்திய கைகொடு இரந்தவர்;-எந்தாய்!-
வீந்தவர் என்பவர்; வீந்தவரேனும்,
ஈந்தவர் அல்லது இருந்தவர் யாரே? 20-
மாய்ந்தவர் மாய்ந்தவர் அல்லர்கள் – இறந்தவர்கள் இறந்தவர்களாக எண்ணப்படுபவர்கள் அல்லர்;
மாயாது ஏந்திய கை கொடு இரந்தவர் – இழிவு வந்த போதும் இறந்து படாமல் ஏந்திய
கைகளைக் கொண்டு. வசதி உள்ளவர் முன் சென்று யாசிப்பவர்களே;
வீழ்ந்தவர் – இறந்தவர்களாகக் கருதப்படுவோராவர்;
எந்தாய் வீந்தவரேனும் எனது தந்தைக் கொப்பானவே! பருவுடல் மறைந்து இறந்தவரே எனினும்;
இருந்தவர் – உயர்ந்தவர்தம் மனத்தில் மறையாது புகழுடம்புடன் இருந்தவர்கள்;
ஈந்தவரே அல்லது யாரே – நாடிவந்தோர்க்கு ஈந்தவரே அல்லாது வேறு யார்?
———————
‘”அடுப்ப வரும் பழி செய்ஞ்ஞரும் அல்லர்;
கொடுப்பவர் முன்பு, ‘கொடேல்’ என நின்று,
தடுப்பவரே பகை; தம்மையும் அன்னார்
கெடுப்பவர்; அன்னது ஒர் கேடு இலை” என்றான். 21-
அடுப்ப அரும்பழி செய்ஞ்ஞரும் அல்லர்- பிறர் அழியும்படி பழிச்செயல் செய்யும் தீத்தொழிலுடையோர் பகைவரல்லர்;
கொடுப்பவர் முன்பு – கொடுப்பவருக்கு எதிரே நின்று கொண்டு;
கொடேல் என நின்று தடுப்பவரே பகை – கொடுக்காதே என்று கூறித் தடுப்பவரே பகைவராவார்;
அன்னார் தம்மையும் கெடுப்பவர் – அத்தகையோர் கொள்வாரையும் கொடுப்பாரையுமல்லாது தம்மையும் கெடுத்துக் கொள்பவரே ஆவர்;
அன்னது ஓர் கேடு இலை என்றான் – (ஈவது விலக்கும்) அதனை ஒத்த கேடு வேறில்லை என்றான்.
—————-
‘”கட்டுரையின், தம கைத்து உள போழ்தே
இட்டு, இசைகொண்டு, அறன் எய்த முயன்றோர்
உள் தெறு வெம் பகை ஆவது உலோபம்;
‘விட்டிடல்’ என்று விலக்கினர் தாமே.” 22-
தமகைத்து உள போழ்தே- தமது செல்வம் இருக்கும் காலத்திலே; இட்டு இசை கொண்டு – இரப்போர்க்கு ஈந்து புகழ் பெற்று:
அறன் எய்த முயன்றோர்- அறத்தை அடைய முயல்பவர்களான அறவாளர்;
உள்தெறு வெம்பகை யாவது உலோபம் – மனத்தை அழிக்கும் கொடிய பகையாய் இருப்பது உலோப குணமாகும்;
விட்டிடல் என்று – (அதனை) விட்டுவிட வேண்டும் என்று;
தாம் கட்டுரையின் விலக்கினர்- (மேலோர்) நீதி நூல்களில் விளக்கிக் கூறியுள்ளனர்.
———–
‘எடுத்து ஒருவர்க்கு ஒருவர் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கு அழகிதோ. தகவு இல் வெள்ளி?
கொடுப்பது விலக்கு கொடியோய் உனது சுற்றம்
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றிவிடுகின்றாய்!*
தகவு இல்வெள்ளி – பெருந்தன்மை இல்லாத சுக்கிரனே;
ஒருவருக்கு ஒருவர் எடுத்து ஈவதனின் முன்னம் – நாடி வந்திருக்கும் ஒருவருக்கு உடையவர்
ஒருவர் பொருளை எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு;
தடுப்பது நினக்கு அழகிதோ – கொடுக்க வேண்டாமெனத் தடுப்பது உனக்கு அழகாகுமோ?;
கொடுப்பது விலக்கு கொடியோய் – ஈவதை விலக்கும் கொடிய குணம் கொண்டவனே!;
உனது சுற்றம் – உன்னைச் சார்ந்து நிற்கும் உனது சந்ததியானது;
உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி – உடுக்கத் துணியும். உண்ண உணவும் இல்லாமல்;
விடுகின்றாய் – விடுகின்றாய் என்பதை அறிவாயாக.
———————
‘முடிய இம் மொழி எலாம் மொழிந்து, மந்திரி,
“கொடியன்” என்று உரைத்த சொல் ஒன்றும் கொண்டிலன்;
“அடி ஒரு மூன்றும், நீ, அளந்து கொள்க” என,
நெடியவன் குறிய கை நீரில் நீட்டினான். 23-
இம்மொழி யெலாம் முடிய மொழிந்து – இத்தகைய நீதிகளை எல்லாம் முற்றும் எடுத்துச் சொல்லி;
மந்திரி கொடியன் என்று உரைத்த சொல் – அமைச்சனும். புரோகிதனுமான சுக்கிரன்
வாமனனைக் கொடியன் என்று கூறிய சொற்களை;
ஒன்றும் கொண்டிலன் – ஒரு சிறிதும் ஏற்றுக் கொள்ளாதவனாகி;
நீ அடி ஒரு மூன்றும் – (வாமனனைப் பார்த்து) நீ என்னைக் கேட்ட அந்த மூன்றடி அளவுள்ள நிலத்தை;
அளந்து கொள்க என – உனது காலால் அளந்து கொள்க என்று சொல்ல;
நெடியவன் குறிய கை – திருமால் தனது குறுங்கைகளை;
நீரில் நீட்டினான் – மாபலி வார்த்த தான நீரில் நீட்டினான்.
—————–
‘கயம் தரு நறும் புனல் கையில் தீண்டலும்,
பயந்தவர்களும் இகழ் குறளன், பார்த்து எதிர்
வியந்தவர் வெருக் கொள, விசும்பின் ஓங்கினான் –
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்பவே. 24-
கயம் தரு நறும் புனல்- குளத்தின் நறுமணமுள்ள அந்தத் தான நீர்;
கையில் தீண்டலும் – தனது கைகளில் தீண்டபப்பட்டவுடனே;
பயந்தவர்களும் இகழ் குறளன் – பெற்றவரும் இகழும்படியான குறுகிய வடிவு கொண்ட வாமன மூர்த்தி;
எதிர்பார்த்து வியந்தவர் – எதிர்நின்று பார்த்து வியந்து கொண்டிருந்தவர்களும்;
வெருக்கொள – அஞ்சும்படியாக;
உயர்ந்தவர்க்கு உதவிய உதவி ஒப்ப – அறிவு ஒழுக்கங்களில் சிறந்த மேலோருக்குச் செய்த உதவி சிறந்து
விளங்குவதுபோல;
விசும்பின் ஓங்கினான் – வானத்தின் அளவுக்கு வளர்ந்து நின்றான்.
————-
‘நின்ற கால் மண் எலாம் நிரப்பி, அப்புறம்
சென்று பாவிற்றிலை, சிறிது பார் எனா;
ஒன்ற, வானகம் எலாம் ஒடுக்கி, உம்பரை
வென்ற கால் மீண்டது, வெளி பெறாமையே. 25-
நின்ற கால் – நிலத்தில் ஊன்றி நின்ற கால்;
மண் எலாம் நிரப்பி- நிலத்தின் பரப்பை யெல்லாம் மூடி;
பார் சிறிது எனா – இப்பூமி சிறிய அளவுடைய தென்று;
அப்புறம் சென்று பாவிற்றிலை -அப்புறம் போய்ப் பாவவில்லை;
உம்பரை வென்ற கால் – வானம் சிறிதாகுமாறு மேலே நீண்டு உயர்ந்து வென்ற காலானது;
வானகம் எலாம் ஒன்ற ஒடுக்கி – வானத்தை எல்லாம் ஒருமிக்கச் சிறிதாகும் படி தனக்குள் ஒடுக்கி;
வெளி பெறாமையால் மீண்டது -மேலும் இடம் கிடைக்காமையால் மீண்டது.
——————
‘உலகு எலாம் உள்ளடி அடக்கி, ஓர் அடிக்கு
அலகு இலாது, அவ் அடிக்கு, அன்பன் மெய்யதாம்,
இலை குலாம் துழாய் முடி ஏக நாயகன்,-
சிலை குலாம் தோளினாய்!-சிறியன் சாலவே! 26-
ஓரடி உலகு எலாம் உள் அடி அடக்கிற்று- ஊன்றிய காலாகிய ஒரு அடி உலகத்தை எல்லாம் பாதத்துள் அடக்கிவிட்டது;
அலகு இலா அவ்வடிக்கு – அளந்து கொள்ள இடமில்லாத அந்த மூன்றாம் அடிக்கு;
அன்பன் மெய் அது ஆம் – பக்தனாகிய மகாபலியின் தலையே அளவடியாக ஆயிற்று;
சிலைகுலாம் தோளினாய் – வில் பொருந்திய தோளினை உடைய இராமா!;
இலைகுலாம் துழாய்முடி- இலைகள் மிகுந்த துளப மாலையை அணிந்துள்ள;
ஏகநாயகன்- உலகுக்கு ஒரு தனி முதல்வனான அத்திருமாலாகிய;
சாலச் சிறியன்- மிகச் சிறிய வடிவினானா அவ்வாமனன்.
——————
‘”உரியது இந்திரற்கு இது” என்று, உலகம் ஈந்து போய்,
விரி திரைப் பாற்றுடல் பள்ளி மேவினான்;
கரியவன், உலகு எலாம் கடந்த தாள் இணை
திருமகள் கரம் செக்கச் சிவந்து காட்டிற்றே! 27-
உரியது இந்திரற்கு இது என்று- இம்மூவுலகாட்சியும் இந்திரனுக்கே உரிமை உடையது என்று கூறி;
ஈந்து போய் – அவற்றை அந்த இந்திரனுக்கு தந்து போய்;
விரிதிரைப் பாற்கடல் பள்ளி மேவினான் – விரிந்த அலைகளை உடைய பாற்கடல் படுக்கையை அடைந்தான்;
உலகு எலாம் கடந்து – மூவுலகத்தையும் அளந்த;
கரியவன் தாள் இணை – கருமை நிறம்வாய்ந்த அத்திருமாலின் பாதங்கள்;
திருமகள் கரம் தொட – திருமகளான இலக்குமி தொட்டு வருடவே;
சிவந்து காட்டின – செந்நிறம் கொண்டு விளங்கின.
——————–
திருமால் இருந்த இடமே வேள்விக்கு ஏற்ற இடம் என முனிவன் கூறுதல்
‘ஆதலால், அரு வினை அறுக்கும்; ஆரிய!
காதலால் கண்டவர் பிறவி காண்குறார்;
வேதநூல் முறைமையால் வேள்வி முற்றுவேற்கு,
ஈது அலாது இல்லை, வேறு இருக்கற்பாலதே. 28-
அருவினை அறுக்கும் ஆரிய – உயிர்களைப் பற்றி வருத்தும் அரிய வினைகளை அழித்துக் காக்கும் மேலோனே!;
காதலால் கண்டவர் – (இந்தத் தூய்மையான இடத்தை) காதல் கொண்டு காண்பவர்கள்;
பிறவி காண்குறார் – பிறவி நோயைக் காணமாட்டார்கள்;
ஆதலால். வேதநூல் முறைமையால் – ஆதலாலே. வேத நூல்களில் கூறியமுறைப்படி;
வேள்வி முற்றுவேற்கு – வேள்வியை நடத்த நினைத்திருக்கும் எனக்கு;
இருக்கற்பாலது – வீற்றிருந்து செய்யத்தக்க இடம்;
ஈது அலாது வேறு இல்லை – இவ்விடம் அல்லாது வேறில்லை.
—————–———————————————————–
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ கம்ப நாட்டாழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பரத லஷ்மண சத்ருக்ந ஸீதா பிராட்டி ஸமேத சக்ரவர்த்தி திருமகன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply