மூலவர் -வடபத்ரசாயி -புஜங்க சயனம் -கிழக்கே திருமுக மண்டலம்
உத்சவர் -ரெங்க மன்னார்
தாயார் -ஆண்டாள்
விமானம் -சாம்சன் விமானம்
தீர்த்தம் -திரு முக்குளம்
மங்களாசானம் -பெரியாழ்வார் ஆண்டாள்
பெரியாழ்வார் ஆண்டாள் திருவவதார ஸ்தலம் –
ஆண்டாள் ரெங்க மன்னார் திருக் கல்யாணக் கோல சேவை
ஆண்டாள் பெருமாள் பெரிய திருவடி சேவை –
வடபத்ர சாயி ஆதிசேஷன் மேலே பள்ளி கொண்டு அருளுகிறார்
வில்லி கண்டன் -இருவர் வேட்டையாடச் செல்ல – கண்டன் மறித்து விட -வில்லி பெருமாளை வருத்தத்துடன் வேண்ட
பகவான் அவனை இந்த க்ஷேத்ரத்தை நிர்மாணிக்கச் சொல்லி
இது அவன் பெயரிலேயே ஸ்ரீ வில்லி புத்தூர் -என்று அழைக்கப் படும் என அருளினார் –
ஆண்டாள் கண்டு எடுக்கப்பட்ட திருத் துளசிச் சோலையின் அருகில் ஆண்டாள் சந்நிதியும்-
-வட பத்ர சாயி கோயிலிலே பெருமாள் சந்நிதியும் உள்ளது –
வண்டு அன்னம் -பெரியாழ்வார் ஆண்டாள் இருவரும் -மங்களா சாசனம் பாசுரம்
காட்டு அழகர் சூதபா முனிவர் மண்டூகம் சாபம்
கங்கா யமுனா சரஸ்வதி -மூவரும் -நீராட்ட உத்சவம் திரு முக்குளம்
தமிழ் அரசு சின்னம் திருக் கோபுரம் -பெரிய -தேர் பிரசித்தம்
நூறு தடா வெண்ணெய் அக்கார அடிசில் -ஐ திக்யம் – கோயில் அண்ணன் –
மூலவர் ஸ்ரீ வட பத்ர சாயி, ஸ்ரீ ரங்க மன்னார்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ ரங்க மன்னார்
தாயார் ஸ்ரீ ஆண்டாள்
தீர்த்தம் ஸ்ரீ திரு முக் குளம்
விமானம் ஸ்ரீ ஸம்சன விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ மதுரை
நாமாவளி ஸ்ரீ கோதா ஸமேத ஸ்ரீ ரங்க மன்னார் ஸ்வாமிநே ஸ்ரீ வட பத்ர சாயிநேச நமஹ
———
ஸ்ரீ பெரியாழ்வார் -1-பாசுரம் மங்களாசாசனம் –
மின்னனைய நுண்ணிடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லி புத்தூர் இனிதமர்ந்தாய்! உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறுடையாள்!
என்னும் வார்த்தை யெய்துவித்த இருடீகேசா! முலை யுணாயே. –பெரியாழ்வார் திருமொழி -2-2-6-
———
ஸ்ரீ ஆண்டாள் -1- பாசுரம் மங்களாசாசனம் –
மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூருறைவான் றன்
பொன்னடி காண்பதோராசையினால் என் பொரு கயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த வென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய். –நாச்சியார் திருமொழி -5-6-
வராஹ ஷேத்திரம்-வராஹ புராணத்தின் ரகஸ்ய காண்டத்தில் 9 அத்தியாயங்களில் இத்தல வரலாறு பின்வருமாறு பேசப்பட்டுள்ளது.
எம்பெருமான் வராஹ ரூபியாய் பிராட்டியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு நம்பாடுவான் போன்ற பக்தர்களின் கதையை இவ்விடத்தில்
பிராட்டிக்கு கூறியதாக ஐதீகம். எனவே இதனை “வராஹ ஷேத்ரம்” என்றே குறிப்பிடுகின்றன.
முன்னொரு காலத்தில் வராஹ வழிபாடே நாடெங்கும் பரவியிருந்தது. அப்போது தலைசிறந்த வராஹ ஷேத்திரங்களாகத் திகழ்ந்த தலங்கள்
திருமலை, திருக்கடன் மல்லை, திருவிட வெந்தை, தஞ்சை மாமணிக் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீமுஷ்ணம் போன்றன.
ஒரு காலத்தில் “சுதபா” என்னும் முனிவர் திருமாலிருஞ் சோலையில் தெளிவிசும்பு பெற தவமிருக்கும் கால் துர்வாச முனிவர் தமது சீடர்களுடன்
அவரைக் காண வந்து வெகுநேரம் அவரது குடிலில் காத்திருந்தார். ஆனால் நீராடுவதில் விருப்பம் கொண்டு ஜலக்கிரீடையில் ஈடுபட்டவராக
தண்ணீருக்குள்ளேயே மூழ்கி இருந்தார். துர்வாசரின் சினம் அதிகரித்துக்கொண்டே சென்றது. வெகுநேரம் கழித்து வந்த சுதபா முனிவரை
வெகுண்டு நோக்கிய துர்வாசர், நீர் யாம் வந்திருப்பதை அறிந்தும் எம்மை மதியாது தண்ணீருக்குள்ளேயே மூழ்கிக் கிடந்ததால் “எப்போதும்
நீருக்குள்ளேயே மூழ்கிக்கிடக்கும் மண்டுகமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.
தமது நிலையுணர்ந்த சுதாப முனிவர் தம்மை மன்னித் தருளும்படி மன்றாடி வேண்டினார். அதற்கு அவர் வராஹ ஷேத்திரத்திற்கு அருகில்
தருமாத்தரி என்றொரு மலையுள்ளது. அதற்கருகில் பிரவாஹித்துக் கொண்டிருக்கும் புண்ணியநதி யொன்றுள்ளது. எண்ணற்ற ரிஷிகள் அங்கு
தவஞ்செய்து அந்நதியில் நீராடிய மாத்திரத்தில் சாபந் தீர்ந்து தெளிவிசும்பும் பெற்றுள்ளனர். அவ்வருவியில் நீராடின மாத்திரத்தில் உன் சாபம் தீரும்
என்று துர்வாசர் கூறவே, அவ்வருவியில், யான் தெளிவிசும்பு பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருமாலிருஞ் சோலையானையே அங்கு காணவேண்டும்
என்று வேண்ட அதுவும் பலிக்குமென்றார். துர்வாசரின் சாபம் பலிப்பதற்கான ஒரு முகூர்த்த நேரம் ஆவதற்குள் தம் தபோ பலத்தால் ஆகாய மார்க்கத்தில்
பறந்து அந்நதியில் (நூபுர கங்கையில்) நீராடினவுடன் சாபவிமோசனம் பெற்று திருமாலிருஞ்சோலை சுந்தர ராஜனையே தியானம் பண்ண அவரும்
பிரத்யட்சமானார். இவ்வாறு திருமாலிருஞ்சோலை எழிலழகன் இங்கு வந்து குடிகொண்டார். இஃது வராஹ ஷேத்திரம் எனப் பெயர் விளங்கப்பட்ட
காலம், காலவரைக்கு உட்படாத முன்னொரு யுகத்தில் நடந்ததாகும்.
வடேசுபுரம்– மண்டுகர் தவஞ்செய்த இவ்வனத்தில் சிலயாண்டுகள் கழித்து எண்ணற்ற ரிஷிகளும் இத்தலத்தின் பேற்றையெண்ணி இங்குவந்து தவஞ் செய்யலாயினர். இது போழ்து இப்பகுதி சம்பகாரண்யம் என்ற பெயரோடு விளங்கியது.-அவ்வமயம் காலநேமி என்னும் அரக்கன் இங்கு தவஞ்செய்த முனிவர்கட்குத் தீரா இடும்பை விளைவித்து இந்திர லோகத்தையும் துன்புறுத்தினான்.
எல்லோரும் சென்று இவ்வரக்கனைக் கொல்ல வேண்டுமென்று மஹா விஷ்ணுவை வேண்ட காலம் வரும்போது அவனையழிப்போம் என்று மஹாவிஷ்ணு கூற இறுதியில் அவ்வரக்கனின் தொல்லைகள் அதிகமாக விஷ்ணு அங்கே தோன்றி சக்ராயுதத்தை ஏவினான்.
அவனைத் துண்டு துண்டாக்கிய சக்ராயுதம் அப்பாபத்தைப் போக்கித் தன்னைச் சுத்தப்படுத்த நினைத்த மாத்திரத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி
ஆகிய நதிகளை நினைக்க உடனே அவர்களும் வந்து புனிதப்படுத்தினர்.
சக்ராயுதத்தை புனிதப்படுத்திய மூன்று நதிகளும் எம்பெருமானை இவ்விடத்திலேயே இருந்து காட்சியருளவேண்டுமென்று கேட்க, அவர் தமக்கு
மிகவும் ரம்யமான ஸ்தலம் இதுதானென்றும் இப்புரிக்கு வடேசுபுர மென்றும், இங்கிருக்கும் எனக்கு வடமஹாதாமா வென்றும் (வடபெருங்கோயிலுடையான்) என்றும் பெயர் விளங்கும். யான் இங்கு நித்யவாஸம் பண்ணுவேன். நீங்கள்
மூவரும் உம்மில் ஒரு சக்தியை பிரித்து இங்கு தடாகங்களாக மாற்றிவிட்டுச் செல்லுங்கள், கலியுகத்தில் இச்சேஷத்ரம் மிகப்புகழையடையும் என்றும் கூறி
திருநாடு புக்கார்.
வில்லிபுத்தூர்–இஃதிவ்வாறிருக்க கங்கை கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த முனிவர்களில் சரப முனிவர் என்பவர் தமது பிராப்தகர்மத்தினால் வேடனாய் வந்து பிறந்து அப்போதும் தமது பூர்வ ஞான பலத்தால் தவமியற்றும் முனிவர்களை மறைந்து நின்று தாக்க, இதுகண்ட முனிவர்கள் இவனை
விரட்டிக் கொல்ல நினைக்க அவன் தனது குருவை அடைந்து நடந்த விருத்தாந்தங்களைச் சொல்ல அவர் தமது ஞான திருஷ்டியால் இவர் மஹா
ஞானியென்றுணர்ந்து இவருக்குத் தீங்கு இழைக்கக் கூடாதெனப் பணித்து, அவரைச் சமாதானப்படுத்தி உம்மைக் கொல்ல வந்த இவ்விருவரும் வராஹ
ஷேத்ரத்தில் மன்னர்களாய்ப் பிறப்பர். அவ்வாறு பிறந்து வில்லன், கண்டன் என்றும் பெயர்பெற்று வேட்டைக்கு வரும் தருவாயில் ஒரு புலியைத் துரத்திக்
கொண்டு வரும் போது இருவரும் தனித்தனியே புலியை விரட்ட காட்டிற்குள் பிரிய நேரிட்டு, புலியைத் துரத்தி சென்ற கண்டன் அதனோடு பொருது மடிய,
மடியும் தருவாயில் நாராயண மந்திரத்தைச் சொல்லி மோட்சம் பெற்றான்:
அவனைத் தேடி வந்த வில்லி பல இடங்களிலும் அலைந்து கண்டனைக் காண முடியாமல் அயர்ந்து தூங்க அவன் கனவில் வந்த பெருமாள் கண்டன்
இருக்குமிடத்தை தெரிவித்து அவனுக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடன்களை செய்துவிட்டு இக்காட்டையழித்து ஒரு திருநகரியை உண்டாக்க, அதுவும் நின் பெயரால் வில்லிபுத்தூர் என அழைக்கப்படும் என்று சொல்ல அவனும் அவ்விதமே செய்து இந்த வில்லிபுத்தூரை உருவாக்கினான்.
எம்பெருமான் (வராஹ ரூபியாய் தான் இருந்த போது பிராட்டி வேண்டியபடி) திருமகள் ஆண்டாளாக அவதரிக்கும் காலம்
நெருங்குவதையெண்ணி தனது புள்ளரையனாகிய கருடனைப் பார்த்து வில்லிபுத்தூரில் வாசம் செய்யும் மூங்கில் குடி என்னும் வம்சத்திலிருக்கும்
முகுந்தர் என்பவருக்கு 4வது புத்திரனாக விஷ்ணுசித்தர் என்ற பெயரில் அவதரிக்க கடவாய் என்ன அவ்விதமே அவதரித்து, விஷ்ணு சித்தன் என்ற
பெயர் பூண்டு, திருமால் மீது மிக்க பக்தி கொண்டு நித்ய கைங்கர்யங்களைச் செய்து இறைவனுக்குப் பாமாலையும் பூமாலையும் சூட்டி வருங்காலையில்
மதுரையை ஆண்ட வல்லபன் என்னும் பாண்டிய மன்னன் மறுமைப் பேற்றில் பேரவா கொண்டவனாக பல மதங்களையும் பற்றி ஆராய்ந்து வருங்காலையில் எது உண்மையிலேயே மோட்சம் கொடுக்க வல்லதென வினவ பற்பலரும் பற்பல விதமாய்ச் சொல்ல இறுதியிலே சகல மதத்தாரையுமழைத்து மோட்சம் தரத்தக்க மதம் (மார்க்கம்) எதுவென்று நிர்ணயஞ் செய்ய ஒரு போட்டியொன்று வைத்தான். மந்திரத்தால் செய்யப்பட்ட பொற்கிழியொன்றைக் கட்டுவித்து சகல மதத்தாரையும் அழைத்து தத்தம் மதமே சிறந்ததென வாதிடச் சொல்லி, யாருடைய மதம் சிறந்தது (மோட்சம் தரத்தக்க வல்லது) என்று நிருபிக்கும் தருவாயில் பொற்கிழி தானே அறுபட்டு விழ வேண்டுமென்றும் ஏற்பாடு செய்ய எண்ணற்ற மதத்தினரும் வந்து வாதம் பல புரிந்து வருங்காலை, விஷ்ணுசித்தன் கனவிலே தோன்றிய எம்பெருமான் அவரைச் சென்று வாதிடுமாறு சொல்ல அவ்விதமே அவரும் செய்து
பரதத்துவம் என்னும் மோட்சத்தைக் கொடுக்கவல்லது ஸ்ரீவைஷ்ணவமே என்று நிருபிக்க பொற்கிழி அறுபட்டு வீழ்ந்தது, பாண்டியன் மிகவும் மகிழ்ந்து
இவரைப் பலவாறு, கொண்டாடி துதித்து பட்டர்பிரான் என்னும் பட்டத்தையுமளித்தான்.
இதன்பின் பாண்டிய மன்னன் இவரை பட்டத்து யானை மீது ஏற்றி நகர்வலம் வரச் செய்த தருணத்தில் எம்பெருமான் பிராட்டியோடு கருட
வாகனத்தில் இவருக்கு காட்சி தந்தருளினார் அதனைக் கண்ட விஷ்ணு சித்தர் இப்பூவுலகில் எம்பெருமானுக்குத் தீங்கு யாதும் நேர்ந்திடலாகாதே, கண்ணேறு பட்டுவிடலாகாதே என்று நினைந்து பல்லாண்டு, பாடினார்.
இதன்பின் மீண்டும் வில்லிபுத்தூரையடைந்து விட்டு சித்தர் தொடர்ந்து எம்பெருமானின் கைங்கர்யத்திலீடுபட்டு நந்தவனம் அமைத்து மலர் பறித்து
எம்பெருமானுக்கு பாமாலையோடு பூமாலையும் படைத்துக்கொண்டிருந்தார்.
இஃதிவ்வாறிருக்க எம்பெருமானிடம் பிராட்டி, பூலோகம் சென்று இறைவனுக்கு கைங்கர்யம் செய்ய எண்ணியிருப்பதையுணர்த்த எம்பெருமானும்
சம்மதிக்க விஷ்ணு சித்தர் நந்தவனக் கைங்கர்யத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அதே வேளையில் அங்கிருந்த திருத்தூழாய்ச் செடியடியில் ஆடிப் பூரத்தில்
அன்றலர்ந்த மலராய் அவதரித்திருக்க சற்றே இவ்விந்தையைக் கண்ட அவர் வந்திருப்பது திருமகளேயென உணர்ந்து தம்பத்தினியான விரஜையிடம்
கொடுத்து கோதை என்றே பெயர்சூட்டி வளர்க்க, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஆண்டாள் வளர்ந்து பருவம் எய்தினாள்.
விட்டுசித்தன் என்னும் பெயர் கொண்ட பெரியாழ்வார் தினந்தோறும் இறைவனுக்குச் சூட்டிவைக்கும் பூமாலையை ஆண்டாள் தானே எடுத்து தனது
குழலிற்சூடி அதன்பின் பெருமாளுக்குச் சூட்டலானாள். இவ்வாறு தினந்தோறும் நடந்து வருவதை ஒரு நாள் கண்டுவிட்ட பெரியாழ்வார் கோதையை மிகவும் கடிந்துகொண்டு எம்பெருமானுக்குச் செய்யும் கைங்கர்யத்தில் இப்படியொரு பழுது நேர்ந்ததே என்றெண்ணி மிகவும் வருத்தமுற்று அயர்ந்து தூங்குகையில் கனவில் வந்த எம்பெருமான் ஆண்டாள் சூடிக்களைந்த கண்ணியே தமக்கு மிகவும் உகப்பு என்று சொல்ல இதைக்கேட்ட விட்டு சித்தர் மிகவும் வியந்து போனார்.
பின் ஆண்டாளுக்குத் திருமணம் முடிக்க பேச்சு எடுக்குங்காலை தான் “மானிடர்க்கு வாக்குப்படேன் அரங்கனுக்கே ஆட்படுவேன்” என்று கூறி
தனது தோழிகளை அழைத்துக் கொண்டு (கிருஷ்ணவதாரத்தில் மோஹித்து) கிருஷ்ணாவதாரத்தில் கோபிகாஸ்திரிகள் கோபாலனை எவ்விதஞ்சென்று
துதித்தினரோ அதே போன்று ஸ்ரீவில்லி புத்தூரை கோகுலமாகவும். அங்கே எழுந்தருளியிருந்த வடபெருங்கோயிலுடையானை கண்ணனாகவும், தனது
தோழிகளை கோபிகாஸ்திரீகளாகவும் கற்பனை செய்துகொண்டு தினமும் கோயிற் சென்று பாடல் புனைந்து பாமாலை சூட்ட, இவளின் எண்ணம்
ஈடேறுமோ என்று பெரியாழ்வார் வியந்திருந்த ஒரு காலையில் அவர் கனவில் தோன்றிய எம்பெருமான், “நின் திருமகளோடு அரங்கம் வாரீர்
யாமாட் கொள்வோம்” என்று சொல்ல அவ்விதமே வல்லப தேவ பாண்டியனிடம் பல்லக்குப் பரிவாரங் களைப் பெற்று அரங்கம் எழுந்தருளுகையில் தென்திருக் காவேரியின் மத்தியில் வந்து கொண்டிருக்கும் போது பல்லக்கிலிருந்து கோதை மறைய
ஈதென்ன விந்தையென்று கோயிலுக்குள் புகுந்து காணுகையில் அரங்கனுக்கு அருகில் கோதை எழுந்தருளியிருக்க இக்காட்சியைக் கண்டு மிகவும்
சிலாகித்துப் போய் வில்லிபுத்தூரார் அரங்கனடி பணிந்து இத்திருமணக் கோலத்தை வில்லிபுத்தூரிலும் காட்டியருள வேண்டுமென கேட்க, அவ்விதமே
வில்லிபுத்தூர் வந்து வடபெருங்கோயிலை அலங்கரிக்க எம்பெருமான் திருமண கோலத்தில் எழுந்தருளினார்.
மூலவர்- வடபத்ரசாயி (ரங்கமன்னார்) கிழக்கே திருமுக மண்டலம்)
தாயார்- (கோதாதேவி) ஆண்டாள்
தீர்த்தம்- திருமுக்குளம்
விமானம்- ஸம்சன விமானம்
காட்சிகண்டவர்கள்— மண்டுக மஹரிஷி, பெரியாழ்வார்.
பாண்டிநாட்டு 18 ஸ்தலங்களில் இரண்டு ஆழ்வார்கள் தந்தையும், மகளுமாய் அவதரித்தது, இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான்.
கும்பகோணத்தின் தலவரலாற்றோடு திருமலையும் ஸ்ரீரங்கமும் எவ்விதம் சம்பந்தப்பட்டதோ அதே போன்று திருமாலிருஞ்சோலையும்,
திருவரங்கமும் இத் தலத்தோடு சம்மந்தப்படுகிறது.
எம்பெருமானின் பல்வேறு அம்சங்கள் 12 ஆழ்வார்களாய் அவதார மெடுத்த காலையில், பிராட்டியே ஆழ்வாராக அவதரித்த பேறுபெற்ற ஸ்தலம்.
தமிழ்நாடு அரசு முத்திரையில் இடம் பெற்றிருப்பது இக்கோவிலின் ராஜகோபுரமாகும்.
இதற்கருகில் உள்ள திருவண்ணாமலை தென்திருப்பதி என்று பெயர் பெற்று திருமலைக்குச் செய்யவேண்டிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள்,
இங்கேயே செய்துவிடும் பழக்கமுள்ளது. திருமலை வேங்கடவனைப் போன்றேஸ்ரீனிவாச மூர்த்தியாக எம்பெருமான் இங்கே எழுந்தருளியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 4கி.மீ. தொலைவில் உள்ளது.
பெருமாளுடன் கருடாழ்வார் எழுந்தருளியிருப்பது இங்கு ஒரு சிறப்பம்சமாகும்.
ஸ்ரீரங்கத்தில் இருப்பதுபோல் அரையர் சேவையும் இங்குண்டு. சுதாப முனிவர் வராஹ ஷேத்ரத்திற்கு வந்து அழகர் மலையானை நினைத்து
தியானஞ் செய்ய அங்கே எழுந்தருளிய திருமாலிருஞ்சோலை நின்றான் சுதபா முனிவரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே இருந்து பக்தர்களின் பாவம் போக்க நித்ய வாசம் செய்து வருகிறார். இத்தலம் காட்டழகர் கோவில் என்றும், காட்டழகர் சுந்தரராஜப் பெருமாள் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் எப்போதும் தண்ணீர்வந்து கொண்டே இருக்கும். கடுமையான பஞ்ச காலத்திலும் இங்கு தண்ணீர் வரும். இந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பது தான் மிகவும் ஆச்சர்யமான விஷயமாகும். சுமார் 50 அடி அகலத்தில் கற்களால் தொட்டி கட்டி வைத்துள்ளனர். இங்கு பெருமாள் பூதேவி ஸ்ரீ தேவி சமேதராயிக் காட்சி தருகிறார்.
இத்தலம் மேற்கு தொடர்ச்சி மலையின் எழில் கொஞ்சும் செண்பகத் தோப்பு பகுதியில் உள்ளது. இங்கு செல்ல வேண்டுமெனில் செண்பகத்தோப்பு
பகவதி நகர் வரை வாகனங்கள் செல்லும், அதன்பின் சுமார் 6கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். இப்பகுதியில் காட்டுயானைகள்
அதிகம் வசித்தாலும் யாரையும் துன்புறுத்துவதில்லை.
ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்கு மிக விசேஷமான திருவிழா நடைபெறும். 6 கால பூஜையும் விசேஷ அலங்காரங்களும் நிறைந்து
இத்தலம் ஒளிமயமாய்த் திகழும். இவ்விழாவை ராஜபாளையும் பூசப்பாடி தாயாதியார் ராஜாக்களான பங்கார் ராஜாக்கள் வகையறாவினர்.
இத்திருவிழாவை சிறப்புற நடத்தி வருகின்றனர். இச்சமயம் இங்கு பெருங்கூட்டம் வரும். காரைக்குடி செட்டியார்கள் அதிகம் வருவர்.
பிறமாதங்களில் நடைபெறும் முக்கிய விழாக்கள் விசேடங்களின் போதும் இங்கும் கூட்டம் அதிகமாக வரும்.
எம்பெருமானுக்கு பெரியாழ்வார் தொடுத்த பூமாலையைச் சூடிப்பார்த்து திருப்தியடைந்து கொடுத்தனுப்பி கொண்டிருந்தாள் ஆண்டாள்.
இதன் நினைவாக இன்றும் தினந்தோறும் முதல்நாள் இரவு ஆண்டாளுக்கு சாத்தப்பட்ட மலர் மாலை வடபத்திர சாயியாக பள்ளிகொண்டிருக்கும்
பெருமாளுக்கு சிரசின் மேல் மறுநாள் காலை முதல்மாலையாக அணிவிக்கப்படுகின்றது.
பெரியாழ்வார் தமது திருமாளிகையில் வைத்து வழிபட்ட லெட்சுமி நாராயணர் இங்கு தனிக்கோவிலில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது.
பெரியாழ்வார் கட்டிவைத்த மலர் மாலையைத்தான் அணிந்துகொண்டு இதை இவ்வாறே எம்பெருமானுக்கே அணிவித்தால் அழகாய் இருக்குமா என்று
ஆண்டாள் தனது ஒப்பனையை சரிபார்த்த கண்ணாடிக் கிணறு என்று பெயர் பெற்ற சிறு கிணறு ஆண்டாள் சன்னதிக்கு அருகாமையில் இன்றும் உள்ளது.
இந்தக் கிணற்றில்தான் ஆண்டாள் தனது அழகு பார்ப்பாளாம்.
பெரியாழ்வாரின் வம்சத்தார் இன்றும் இவ்வூரில் வாழ்கின்றனர். கோவிலுக்கு வெகு அருகாமையிலேயே வாசம் செய்கின்றனர்.
பெரியாழ்வாருக்கு வாரிசு இல்லை. அவரது சகோதரர் ஆதிகேசவரின் அபிமான புத்திரரான நாராயண தாசரின் வழிவந்தோர், “வேதப்பிரான் பட்டர்”
என்ற திருநாமத்துடன் பெரியாழ்வாரின் வம்சத்துக் குரியவர்களாக இன்றும் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உற்சவகாலங்களில் ஆண்டாளுக்கும் ரெங்க மன்னாருக்கும் திருமஞ்சன நீராட்டு செய்யும் போது கட்டியம் கூறும் உரிமை இவர்களுக்குண்டு.
மார்கழி பகற்பத்து முதல் நாளன்று ஆண்டாள் ரங்க மன்னார் துணையுடன் சன்னதித் தெருவில் எழுந்தருளும்போது பெரியாழ்வாரின்
வம்சத்தில் வந்த வேதப்பிரான் பட்டர்கள் அவர்களை எதிர்கொண்டழைக்கிறார்கள். தங்கள் வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தி
பிறந்தவீட்டு உபசாரங்களையும் செய்கிறார்கள். வாசலிலும் திண்ணையிலும் காய்கறிகளையும், கனிவர்க்கங்களையும் நிரப்பி பாலும் பருப்பும் (இவ்விதம்
காய்கறிப் பரப்பி வைத்து பெண்வீட்டுச் சீதனமாக வழங்குவதை “பச்சை பரத்தி என்றும் பொரிகடலையுடன் சர்க்கரைப்பால் கலந்து கொடுப்பதை”
மணிப்பருப்பு” என்றும் வழங்குவர்) நிவேதனம் செய்து தம் குடும்பத்து பெண்ணான ஆண்டாளையும், மாப்பிள்ளை அரங்கனையும் அன்போடு
உபசரிக்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அவதார தினமான ஆடி மாதம் பூரநட்சத்திரத்தன்று நடைபெறும் திருவாடிப்பூரத் திருவிழாவும், ரத
உற்சவமும் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அப்போது இங்கு நடைபெறும் 5 கருட சேவை வேறெங்கும் இல்லாததாகும் 5 கருட சேவையில் பங்கு பெரும்
எம்பெருமான்கள்.
1. திருவண்ணாமலை (ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மருங்கமைந்த வெங்கிடாசலபதி பெருமாள்)
2. திருத்தங்காலப்பன், திருத்தங்கல் பெருமாள்.
3. வடபத்ரசாயி
4. ரெங்கமன்னார்
5. காட்டழகர் சுந்தரராஜன்
திருக்கல்யாணத்தின்போது பெண்வீட்டாரான பெரியாழ்வாரின் தற்போதுள்ள வாரிசினர் சந்நதிக்கு வந்துண்ண பெருமாள் “பரதேசம்” செல்ல
விருப்பதைத் தடுத்து மகளை மணங்கொள்ள பிரார்த்திக்க, அவ்விதமே எம்பெருமான் ஏற்றுக்கொண்டதை “திருவுள்ளம் பற்றித் திருவுள்ளம்
ஆக்கினார்” என்று அறிவிக்கிறார்கள். இந்நிகழ்ச்சி இன்றும் நடைபெறக்கூடிய தெய்வீகம் கமழும் இனிய நிகழ்ச்சியாகும்.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி, ஆகிய மூவரும் சேர்ந்தது ஆண்டாளாகக் காட்சியளிப்பது இங்குதான், மற்ற தலங்களில் பெருமாள்
தம்பதி சமேதராய்க் காட்சி அளித்தால் (கல்யாண திருக்கோலத்தில்) ஸ்ரீதேவியும், பூதேவியும் அருகிலிருப்பார்கள். இந்த தலத்தில்தான் ஆண்டாள்
ஒருவரோடு காட்சிதருகிறார். பெருமாளுக்கு வலப்புறத்தே ஆண்டாளும், இடப்புறத்தே கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். இந்த அமைப்பும்
வேறெங்கும் இல்லாததாகும்.
இங்கு திருமஞ்சனம் ஆகும் போது ஆண்டாளின் சன்னதிக்கு முன்பு ஒரு காராம்பசு கொண்டு வரப்படுகிறது. தேவி காராம்பசுவைப் பார்த்துக்
கண்திறப்பதாக ஐதீகம். தட்டொளி என்னும் கண்ணாடியும் எதிரே பொருத்தப் பட்டிருக்கிறது. இதற்குப் பிறகுதான் பிராட்டி முன்னிரவில் சூடிய மாலையைக்
கழற்றிக் கொடுக்க அதை, பெருமாள் அணிந்து கொண்டு கண்விழித்துப் பெருமாள் திருப்பள்ளி யெழுச்சியாகிறார்.
இங்குள்ள திருமுக்குள தீர்த்தம் மிகவும் பிரசித்திவாய்ந்தது.காலநேமி என்னும் கொடிய அரக்கனை எம்பெருமான் தன் சக்ராயுதத்தால்
அழித்தார். ரத்தம் தோய சக்கரத்தாழ்வார் வந்து எம்பெருமானிடம் நின்றவுடன் சக்கரத்தைத் தூய்மைப்படுத்த கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய
மூன்று நதிகளும் தமது தீர்த்தத்தை ஒரு குளத்தில் சொரிய, சக்கரம் சுத்திகரிக்கப்பட்டது. இந்த மூன்று நதிகளின் நீர் சேர்ந்ததால்தான் இதற்கு
திருமுக்குளம் என்ற பெயர் உண்டாயிற்று என்பர்.
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ கோதை
நிறத்த ஊர் விண்டு சித்தர் நீடு ஊர் பிறப்பு இலி ஊர்
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான்
வாழ் வில்லி புத்தூர் வளம் –48-
கோதை நிறத்த ஊர் -ஆண்டாள் திருவவதாரத்தால் மேம்பட்ட திவ்ய தேசம்
விண்டு சித்தர் நீடு ஊர் -பெரியாழ்வார் வாழ்ந்த பெரிய திவ்ய தேசம் –
மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி ஆர்வம் என்பதோர் பூவிட வல்லார் அன்றோ -இவர்
பிறப்பு இலி ஊர் -ஜனனம் இல்லாதவன் உடைய திவ்ய தேசம்
பிரணவம் போலே ஆண்டாள் பெருமாள் பெரியாழ்வார் மூவரும் தன்னிடம் கொண்டு இருப்பதால் -இதன் பெருமை ஒருவரால் சொல்ல முடியுமோ
பொன்னும் முத்தும் மாணிக்கம் மூன்றும் இட்டுச் செய்த ஆபரணம் போலே -திவ்ய தேசம் –
பிராட்டிக்கு ஸ்ரீ மிதிலையும் ஸ்ரீ அயோத்தியும் போலேயும் -நப்பின்னை பிராட்டிக்கு கும்ப குலமும் திரு ஆய்ப்பாடியும் போலேவும் அன்று
இறே –ஆண்டாளுக்கு பிறந்தகமும் புக்ககமும் இங்கேயே இருக்கும் ஏற்றம் உண்டே
தாழ்வு இல் இ புத்தூர் என்று ஐவர்க்குத் தான் இரந்தான் –
தாழ்வு இல்லாத புதிய ஊர்களை பஞ்ச பாண்டவர்க்கு கொடுக்க -பாண்டிய தூதனாக சென்று இரந்து
வாழ் வில்லி புத்தூர் வளம் -செழிப்பானது
குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ-ஒருவரால் நினைத்து பாராட்டும் தன்மை உடைத்து அல்லவே –
கோதை நிறத்தவூர் -விண்டு சித்தர் நீடூர் -பிறபபிலியூர்-குறித்து ஒருவர் கொண்டாடும் கொள்கைத்தோ –
தொடர் நிலை செய்யுள் குறி அணி –
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
Leave a Reply