ஸ்ரீ திவ்ய தேச மங்களா ஸாஸன அருளிச் செயல்கள்-ஸ்ரீ திருப் புளிங்குடி

மூலவர் -காய்ச்சின வேந்தன் / புஜங்க சயனம் -கிழக்கே திரு முக மண்டலம்
தாயார் -மலர் மகள் நாச்சியார்
விமானம் -வேத சார விமானம்
தீர்த்தம் -வருண தீர்த்தம்
மங்களா சாசனம் -நம்மாழ்வார் –

இந்திரனுக்கு ப்ரஹ்ம ஹத்தி தோஷம் ஏற்பட்டு இங்கு வந்து தோஷம் நீங்கி ஒரு யாகம் புரிந்தார் –
அதே சமயம் வசிஷ்டர் திருக் குமாரர் – சக்தி என்னும் ரிஷியால் சபிக்கப்பட்ட யஜ்ஜ சர்மா அந்த யாகத்தை அரக்கர் உருவில் தடுக்க முற்பட்டான் –
பெருமாள் அரக்கனை அழிக்க இருவருக்கும் காட்சி கொடுத்தார் -காயும் சினம் என்றுமாம்
புளிங்குடி கிடந்தது வரகுண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று -மங்களா சாசனம் –
பூமி பாலன் -/ திருவடி -பிரகாரத்தில் சாளரம் வழியே சேவை -பிடிக்க ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே
கூப்பிடும் தூரம் -கூவுதல் வருதல் -எம்பெருமானார் -ஆழ்வார் பாசுரம் வைத்து வழி சொன்ன சிறுமி
போக்ய பாக த்வரை –அஹம் அன்னம் -பக்வமாவதை எதிர்பார்த்து நின்று இருந்து கிடந்தும்

மூலவர் ஸ்ரீ காய்சின வேந்தர், ஸ்ரீ பூமி பாலர்
கோலம் சயனம்
திருமுக மண்டலம் கிழக்கு
உற்சவர் ஸ்ரீ காய்சின வேந்தர்
தாயார் ஸ்ரீ மலர் மகள் நாச்சியார், ஸ்ரீ பூமகள் நாச்சியார்
தீர்த்தம் ஸ்ரீ வருண-ஸ்ரீ நிருதி தீர்த்தம்
விமானம் ஸ்ரீ வேத சார விமானம்
மண்டலம் ஸ்ரீ பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
மாநிலம் தமிழ் நாடு
அடிப்படை இடம் ஸ்ரீ திருநெல்வேலி
நாமாவளி ஸ்ரீ மலர் மகள் நாச்சியார் ஸமேத ஸ்ரீ காய்சின வேந்தன் ஸ்வாமிநே நமஹ

————

ஸ்ரீ நம்மாழ்வார்-`12-பாசுரங்கள் மங்களாசாசனம்

கொடியார் மாடக் கோளு ரகத்தும் புளிங்குடியும்
மடியாதின்னே நீ துயில் மேவி மகிழ்ந்தது தான்
அடியா ரல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல் இப்
படி தான் நீண்டு தாவிய அசைவோ? பணியாயே. –8-3-5-

பண்டை நாளாலே நின் திரு வருளும் பங்கயத்தாள் திருவருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல் படி கால் குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளிச் சோதி வாய் திறந்து உன் தாமரைக் கண்களால் நோக்காய்
தெண் திரைப் பொருநல் தண் பணை சூழ்ந்த திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-1-

குடிக் கிடந்து ஆக்கம் செய்து நின் தீர்த்த வடிமைக்குக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிக் கடவாதே வழி வருகின்ற அடியரோர்க்கு அருளி நீ யொரு நாள்
படிக் களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக் கணியாய்
கொடிக் கொள் பொன் மதில் சூழ் குளிர் வயல் சோலைத் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-2-

கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-

புளிங்குடிக் கிடந்து வர குண மங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வாராயே–9-2-4-

பவளம் போல் கனி வாய் சிவப்ப நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ் கதிர் முறுவல் செய்து நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ் சங்கு உறை பொருநல் தண் திருப் புளிங்குடி கிடந்தாய்
கவள மாக் களிற்றின் இடர் கெடத் தடத்துக் காய்சினப் பறவை ஊர்ந்தானே–9-2-5-

காய்ச்சினப் பறவை யூர்ந்து பொன் மலையின் மீ மிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலிமான் என்று அங்கவர் படக் கனன்று முன்னின்ற
காய்சின வேந்தே கதிர் முடியானே கலி வயல் திருப் புளிங்குடியாய்
காய்சின வாழி சங்கு வாள் வில் தண்டேந்தி எம் மிடர் கடிவானே–9-2-6-

எம்மிடர் கடிந்து இங்கு என்னை யாள்வானே இமையவர் தமக்கும் ஆங்கனையாய்
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண் திருப் புளிங்குடிக் கிடந்தாய்
நம்முடை யடியார் கவ்வை கண்டுகந்து நாம் களித்துள நலம் கூர
இம்மட வுலகர் காண நீ யொரு நாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே–9-2-7-

எங்கள் கண் முகப்பே யுலகர்கள் எல்லாம் இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால் தலைச் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திருப் புளிங்குடியாய் திரு வைகுந்தத் துள்ளாய் தேவா
இங்கண் மா ஞாலத்தி தனுளும் ஒரு நாள் இருந்திடாய் வீற்று இடம் கொண்டே–9-2-8-

வீற்று இடம் கொண்டு வியன் கொள் மா ஞாலத்து இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண்ணினை குளிரப் புது மலர் ஆகத்தைப் பருக
சேற்றிள வாளை செந்நெலூடு களும் செழும் பணைத் திருப் புளிங்குடியாய்
கூற்றமாய் அசுரர் குல முதலரிந்த கொடு வினைப் படைகள் வல்லானே–9-2-9-

கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர் கெட வசுரர்கட் கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-

கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல் வழுதி நாடன் சடகோபன்
நாவில் பாடல் ஆயிரத் துள்ளும் இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி யுலகம் மூன்று அளந்தான் அடி இணை யுள்ளத் தோர்வாரே–9-2-11-

இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தாலும், தாமிரபரணி ஸ்தல புராணத்தாலும் அறிய முடிகிறது.

ஒருசமயம் மஹாவிஷ்ணு இலக்குமி தேவியுடன் வைகுண்டத்திலிருந்து புறப்பட்டு இப்பூவுலகில் தாமிரபரணி நதிக்கரையில் அழகழகாக
வரிசைக்கிரமமாக மணல்மேடு அமைந்துள்ள பகுதியில் சற்றே உல்லாசத்துடன் தனித்திருக்க, இப்பூவுலகில் வந்ததும் தன்னை விட்டுவிட்டு இலக்குமி
தேவியுடன் இவர் மகிழ்வெய்தியுள்ளாரே என்று எண்ணி பொறாமை கொண்ட பூமிப்பிராட்டி மிகவும் சினங்கொண்டு பாதாள லோகம் புக்கு மறைய உலகம்
வறண்டு இருளடைய தேவர்கள் எல்லாம் இந்நிலை மாறவேண்டுமென ஸ்ரீமந் நாராயணனைத் துதிக்க அவரும் பாதாள லோகம் சென்று பூமிப்பிராட்டியைச்
சமாதானப்படுத்தி இருவரும் தமக்குச் சமமே என உபதேசம் செய்து இருவருக்கும் நட்பு உண்டாக்கி, அவ்விரண்டு தேவிமார்களும் சூழ
இவ்விடத்தில் காட்சி தந்தார். பூமியைக் (பூமிப் பிராட்டியைக்) காத்ததாலும் பூமிபாலர் என்னும் திருநாமம் இப்பெருமானுக்கு உண்டாயிற்று. காசினி
வேந்தர் என்ற சொல்லே நம்மாழ்வாரின் பிற பாக்களில் காய்சின வேந்தர் என்று பயின்று வருகிறது.

இத்தலத்தில் நடைபெற்ற இன்னொரு புனித வரலாற்றையும் புராணம் பேசுகிறது.

யக்ஞசர்மா என்னும் அந்தணன் தனது பத்தினியுடன் இன்பம் நுகர்ந்துகொண்டிருக்கையில், வசிட்டரின் மகனான சக்தியென்பவர் தமது
ரிஷிகள் புடைசூழ வந்தவிடத்து அவர்களை மதியாதிருந்ததோடு, தட்சிணையுங்கொடுக்காது அவர்களை தீச் சொற்களால் நிந்தனையும்
செய்வித்தான். அக்கணமே அம் முனிவர்கள் அனைவரும் யக்ஞசர்மாவை ஓர் அரக்கனாகும்படி சபிக்க, தன் நிலை மாறிய அவ்வந்தணன், அம்
முனிவர்களின் பாதத்தில் வீழ்ந்து சாப விமோசனமும் வேண்டி நின்றான்.
அதற்கு முனிவர்கள் இத்திருத்தலத்தில் பின்னொரு காலத்தில் இந்திரன் யாகம் செய்வான். அப்போது அந்த யாகத்தை அழிக்க நீ எத்தனிக்கும்
போது திருமாலின் கதையால் அடிபட்டு சாபவிமோசனம் பெறுவாய் என்றனர்.

இஃதிவ்வாறிருக்க, இமயமலையில் உள்ள ஒரு தாமரைத் தடாகத்தில் இந்திரன் தனது தேவியுடன் இனிதே குலாவிக் கொண்டிருக்கும்போது
அத்தடாகத்துக்கு அருகில் மானுருக் கொண்டு ஒரு ரிஷியும் அவர் மனைவியும் விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்திரன் தனது வஜ்ராயுதத்
தால் மான் உருவில் உள்ள ரிஷியை அடித்து வீழ்த்த இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் சூழ்ந்தது. அதைத் தீர்ப்பதற்கு கண்ட விடமெங்கும்
பைத்தியன்போல் இந்திரன் அலைந்தான்.

இதைக்கண்டு மிகவும் மனம் நொந்த தேவர்கள் தமது குலகுருவான வியாழபகவானைச் சரணடைந்து ஆலோசனை கேட்க, அவர், இந்திரனைத்
திருப்புளிங்குடிக்கு அழைத்து வந்து பயப்பக்தியுடன் பூமிபாலரை வணங்கி அங்கிருந்த தீர்த்தத்தில் நீராடச் செய்ததும் பிரம்மஹத்தி தோஷம்
இந்திரனைவிட்டு நீங்கியது. இந்த தீர்த்தத்துக்கும் இந்திர தீர்த்தம் என்ற பெயர் நிலைத்தது.

தனது சாபவிமோசனத்தால் மிகவும் மகிழ்ந்த இந்திரன். திருமாலுக்கு நன்றி செலுத்தும் முகத்தான் இங்கு மிகப் பெரிய யாகம் துவங்கினான்.
அப்போது அரக்கனுருவில் உள்ள யக்ஞசர்மா திருமாலைக் குறித்து உள்ளுருகி வேண்டி கடுந்தவம் புரிந்து கண்ணீர் சிந்தி நின்றான்.

அப்போது யாக குண்டலியில் தோன்றிய ஸ்ரீமந் நாராயணன் தனது கதையினால் அவ்வரக்கனை அடித்து வீழ்த்த அவன் சாப விமோசனம்
பெற்றான்.

மூலவர்-காய்சின வேந்தர் (காசினி வேந்தர்) பூமிபாலர், புஜங்கசயனம் கிழக்கு நோக்கிய திருக்கோலம்.
தாயார்-  மலர்மகள் நாச்சியார், பூமிப்பிராட்டி, புளிங்குடிவல்லியென்ற சிறிய உற்சவப் பிராட்டியுமுண்டு.
தீர்த்தம்-  இந்திர தீர்த்தம், நிர்ருதி தீர்த்தம்
விமானம்-  வேதசார விமானம்
காட்சி கண்டவர்கள்–   இந்திரன், நிர்ருதி, வருணன், யக்ஞ சர்மா.

பெருமாளின் திருவயிற்றிலிருந்து செல்லும் தாமரைக் கொடி, சுவற்றில் உள்ள பிரம்மாவின் தாமரையோடு சேர்ந்து கொள்வது போன்ற அரிய
காட்சியும், இங்கு தவிர வேறெங்கும் காண்டற்கரிது.
(பிற இடங்களில் அல்லது பொதுவாக திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து செல்லும் தாமரைத் தண்டின் மலரில்தான் பிரம்மா அமர்ந்திருப்பது வழக்கம்)

நவக்கிரகங்களில் வியாழனொடு சம்பந்தப்பட்ட ஸ்தலம்

சயன திருக்கோலத்தில் உள்ள திருமாலின் ஒரு பாதத்தை மூலஸ்தானத்தைச் சுற்றி வருகையில் சுவற்றின் வெளிப்புறமுள்ள ஒரு
ஜன்னலின் வழியாகச் சேவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ள இக்கட்டிட அமைப்பு பிறஸ்தலங்களில் அமையப் பெறாத ஒன்றாகும்.

இராமானுஜர் இவ்வூருக்கு வந்து திருப்புளிங்குடி எம்பெருமானைச் சேவித்துவிட்டு வரும்போது, கோவிலின் வெளிப் பிரகாரத்தில் நெல்லிவாட்டிய
(நெல்லைக் காயலிட்டுக் கொண்டு இருந்த) அக்கோவிலின் அர்ச்சகர் மகளைக்கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரமென்றார். அது இன்னும்
கூப்பிடு தொலைவில் உள்ளதென்பதை “முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளா கூவுதல் வருதல் செய்திடாயென்று குரைகடல் வண்ணன் தன்னை மேவி நன்கமர்ந்தவியன் புனல் பொருநல் வழுதிநாடன் சடகோபன்” என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தினாலேயே மறைமுகமாய் சுட்டிக்காட்டினாள்.
ஆழ்வாரின் பாசுரத்தைச் செவியில் கேட்ட மாத்திரத்தில், ஆழ்வார் மீதுள்ள பேரன்பால் (யாமும் கூப்பிடு தொலை எய்திவிட்டோமோ என்றெண்ணி)
அப்படியே தரையில் வீழ்ந்து அப்பெண்ணை வணங்கினார். (இதைக்கண்ட அர்ச்சகர் தமது மகளை இராமானுஜரின் பாதத்தில் விழச் செய்து மன்னிப்பும்
கோரினார்)

திருப் புளிங்குடி-தலைவி தோழியர்க்கு அறத்தொடு நிற்றல் –

தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே எளியேற்கு
அருளப் புளிங்குடி வாழ் அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் –54–

எளியேற்கு அருளப் புளிங்குடி வாழ்
அச்சுதனைக் கொண்டு
கருளப் புள் இங்கு வந்தக் கால் —
அப்போது –
தெளியும் பசும் பொற் சிறைக் காற்று வீச -பெரிய திருவடிகளின் இறகுகளின் நின்று காற்று வீச
விளியும் துயர் போய் விடுமே -இப்பொழுது எனக்கு நேர்ந்துள்ள பெரிய துயரமும் போய் விடும் –
நோய் தீர அருமருந்து அந்த காற்றே ஆகும் –
அவன் திருமுகம் கண்டு -கடாஷத்தால் உஜ்ஜீவிக்கலாம் என்றவாறு –

அவராவி துவரா முன் அருள் ஆழிப் புட்கடவீர் அவர் வீதி ஒரு நாள் என்று அருளாழி யம்மானைக் கண்டக்கால்
இது சொல்லி அருளாழி வரி வண்டே —
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய் சிவப்பா நீ காண வாராயே -நம்மாழ்வார்
இந்த திவ்ய தேச மங்களா சாசனம் பாசுரம் –

——————————————————————

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading