02_08. ஸூர்யன் முதலான க்ரஹங்களின் அமைப்பும், அளவுகளையும் இனி கூறுகிறார். ஸூர்யனின் தேர் பத்தாயிரம் யோஜனையாகும். இதில் ஒன்பதினாயிரம் ஸூர்ய மண்டலத்தாலும், பரிவாரங்கள் ஆயிரம் யோஜனைகளாலும் அமைந்துள்ளது. அச்சையும், நுகத்தடியையும் பிணைக்கும் ஏர்க்கால் இருபதினாயிரம் யோஜனையும், அச்சானது ஒரு கோடியே ஐம்பத்தேழு லக்ஷம் யோஜனையுமாகும். மிகப் பெரிய இந்த அச்சு இரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இதில் மாட்டப்பட்டுள்ள ஒரு சக்ரமே ஸம்வத்ஸர ஸ்வரூபம். முற்பகல், நடுப்பகல், பிற்பகல் மூன்றும் அச்சு கோர்க்கும் இடம். ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அநுவத்ஸரம், இத்வத்ஸரம் என்ற ஐந்து வகை வருஷங்கள் ஆரைக்கால்களாகும். ஆறு ருதுக்களும் வட்டைக் கால்களாகும். காயத்ரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, த்ரிஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி என்ற ஏழு சந்தஸ்ஸுக்கள் ஏழு குதிரைகளாகும்.
இந்த ரதத்தின் மற்றொரு அச்சு நாற்பத்தையாயிரத்து ஐனூறு யோஜனையாகும். இதன் நுகத்தடியும் அதே அளவாகும். இந்த நுகத்தடி பெரிய நுகத்தடியின் பாதியில் வாயுவைக் கயிராகக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. த்ருவனை ஆதாரமாகக் கொண்டுள்ளது. தேர்ச்சக்கரம் பெரிய அச்சில் கோர்க்கப்பட்டு மானஸோத்தர பர்வதத்தின் மேல் இருக்கிறது. இந்த மலையின் மேல் கிழக்கே வஸ்வோகஸாரா என்ற இந்த்ரப் பட்டணமும், தெற்கே ஸம்யமனீ என்ற யமப்பட்டணமும், ஸுகா என்ற வருணப் பட்டணம் மேற்கேயும், வடக்கே விபாவரீ என்ற ஸோமப் பட்டணமுமுள்ளது. இந்த ஸூர்யனாலேயே இரவு, பகல் உள்ளது. யோகிகளும் கர்மங்கள் தொலைத்த போது, இவனையே தேவயான வழியாகக் கொள்கின்றனர்.
காலையில் உதிக்கும் போதும், மாலையில் அஸ்தமிக்கும் போதும் ஸூர்யன் கண்களால் காணும் படி குளிர்ச்சியாகவும், சிவந்தும், கிரணங்களின்றியும் இருக்கிறான். நடுப்பகலிலேயே ப்ரகாசம் மிகுந்திருக்கிறான். இவை அவன் குணம் இல்லை. அவன் ஒரே போல் தான் இருக்கிறான். தொலைவிலிருந்து பார்ப்பதால் மாலையிலும், காலையிலும் இப்படித் தோன்றுகிறான். அவன் அஸ்தமிப்பதும், தோன்றுவதுமில்லை. நாம் காணுமிடங்களில் உதயமென்றும், அதற்கு நேரெதிரில் அஸ்தமயமென்றும் கூறுகிறோம்.
இந்த்ரபுரியில் அவன் இருந்தால் ஈசான்யத்திலிருப்பவர்களுக்கு மூன்றாம் யாமத்தையும், ஆக்னேயத்திலிருப்பவர்களுக்கு முதல் யாமத்தையும், தெற்கேயிருப்பவர்களுக்கு உதயத்தையும், வடக்கே இருப்பவர்களுக்கு அஸ்தமயத்தையும் செய்கிறான். இதேபோல் மற்ற திசைகளுக்கும். இவன் போக்கைக் கொண்டே திக்குகளும் கிழக்கு, மேற்கு என வழங்கப்படுகின்றன. எங்கும் ப்ரகாசிக்கும் இவன் க்ரணங்கள் மேரு மலையிலிருக்கும் ப்ரஹ்மசபையின் ஒளிக்கு முன் மழுங்கி விடுகின்றன. இந்த மேரு மலை எல்லா த்வீபங்கள், வர்ஷங்களுக்கும் வடக்கே இருக்கிறது. இந்த ப்ரஹ்ம ஸபையில் எப்போதும் பகலே இருக்கிறது. ஆனால் ஸூர்ய கிரணங்கள் படுவதில்லையாதலால் இரவுப் பொழுதும் இருக்கும்.
ஸூர்யன் அஸ்தமிக்கும் இரவு நேரத்தில் அவன் கிரணங்கள் அக்னியை அடைகின்றன. மீண்டும் பகலில் ஸூர்யனை அடைகின்றன. மேருவின் தெற்கே ஸூர்யன் உதிக்கும் போது ராத்ரி தண்ணீரை அடைவதாலும், மேருவின் வடக்கே ஸூர்யன் உதிக்கும் போது பகல் தண்ணீரை அடைவதாலும் தண்ணீர் பகலில் கொஞ்சம் சிவந்தும், இரவில் வெளுப்பாகவும் இருக்கிறது. இப்படியே புஷ்கர த்வீபத்தின் மத்ய ப்ரதேஸத்தினால் ஸூர்யன் முப்பதில் ஒரு பாகத்தையடையும் போது முஹூர்த்த காலம் உண்டாகிறது. குயவன் சக்ரத்தின் நுனியில் பூச்சி சுழல்வது போல், ஸூர்யனும் தக்ஷிணாயானத்தில் ஜ்யோதிச் சக்ரத்தின் நுனியில் சுழன்று வருகிறான்.
இப்படி ஒவ்வொரு முஹூர்த்தமாக பூமியின் முப்பதில் ஒரு பாகத்தைக் கடந்து, உத்தராயணத்தில் ப்ரவேசிக்கும் போது, அதன் முதல் ராசியான மகரத்தை அடைகிறான். இப்போது வேறுபாடுள்ள இரவு, பகல்களைச் செய்து மேலும், கும்பம், மீனம் இரண்டிலும் ப்ரவேசித்து உத்தராயணத்தின் மத்யமாகிற மேஷத்தில் ப்ரவேசித்து பூமத்யமாகிற விஷுவ கதியை அடைகிறான். இங்கே இரவும், பகலும் ஸமமாக ஆகின்றன. இதற்குப் பின் பகல் வளர்ந்து இரவு குறைய ஆரம்பிக்கும். இப்படியே மிதுன ராசியில் ப்ரவேசித்து உத்தராயணத்தை முடித்து, கர்கடகத்தில் ப்ரவேசிக்கும் போது மீண்டும் தக்ஷிணாயனம் தொடங்கும்.
தக்ஷிணாயனத்தின் ஆரம்பத்தில் வேகமாகச் செல்கிறான். அப்போது பகற்பொழுது பனிரண்டு முஹூர்த்தமே ஆகிறது. இதே அளவிலேயே பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து பூமியைக் கடக்கிறான். இப்போது இரவு பதினெட்டு முஹூர்த்தாமாகிறது. இந்த அளவில் மற்ற பதிமூன்றரை நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறான். உத்தராயணத்தில் ஸூர்யன் வேகம் இதற்கு நேர்மாறாக அமைகிறது. எனவே உத்தராயணத்தில் பகல் பதினெட்டு முஹூர்த்தங்களையும், இரவு பனிரண்டு முஹூர்த்தங்களையும் கொள்கிறது. குயவன் சக்ரத்தின் நடுபாகம் போல் த்ருவனும் மெதுவாக அங்கேயே சுழல்கிறான்.
உத்தராயண, தக்ஷிணாயன காலங்களில் ராசி மண்டலங்களின் அளவு மாறுபடுவதால் இரவு, பகல்களின் அளவும் மாறுபடுகிறது. பகலிலும், இரவிலும் ஆறு, ஆறு ராசிகளைக் கடக்கிறான். தக்ஷிணாயனத்தில் இரவு மந்தமாகவும், பகல் துரிதமாகவும், உத்தராயனத்தில் இரவு துரிதமாகவும், பகல் மந்தமாகவும் இருக்கும். இரவிற்கு உஷா என்றும், பகலுக்கு வ்யஷ்டியென்றும் பெயர். இவைகளின் நடுப்பொழுது ஸந்த்யை. இது கொடியது. இந்தப் பொழுதில் தான் மந்தேஹர் என்ற உடல் அழிவில்லாத ராக்ஷஸர்கள் ஸூர்யனை விழுங்க விரும்புகின்றனர். தினமும் இவர்களுக்கு மரணம் என்று ப்ரஹ்மாவின் சாபம். இந்த ஸந்த்யா காலங்களில் ப்ராஹ்மணர்கள் ப்ரணவம், வ்யாஹ்ருதிகளுடன் கூடிய காயத்ரீ தீர்த்தத்தால் ஸூர்யனை நோக்கிக் கொடுக்கும் அர்க்யம் வஜ்ராயுதமாகி அந்த ராக்ஷஸர்களைக் கொல்கிறது. மேலும் அக்னிஹோத்ரத்தில் செய்யும் முதல் ஆஹுதியால் ஸூர்யன் ப்ரகாசமும் பெறுகிறான்.
ப்ரணவம் விஷ்ணு ஸ்வரூபம். வேத ஸாரமாய் மூன்று வ்யாஹ்ருதிகள் அக்னி, வாயு, ஸூர்யன்.இதனாலேயே மந்தேஹர் அழிகின்றனர். ஸூர்யன் விஷ்ணுவின் அம்சம். அவனுக்குள்ளும், ப்ரணவத்திலும் ப்ரஹ்மமே இருக்கிறது. ஆகையால் ப்ரஹ்மமே ஸூர்யனை இயக்குகிறது. இப்படி வாலகில்யர் முதலான ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களாலேயே ஸூர்யன் ராக்ஷஸர்களிடமிருந்து காக்கப்படுகிறான். இதன் பின்னே தான் அவன் உலகைக் காக்கப் புறப்படுகிறான். இரவு பகல்கள் குறைந்தாலும், வளர்ந்தாலும் அவற்றின் பதினைந்தாம் முஹூர்த்தமே ஸந்த்யா ஆகும். அதாவது அர்த்தோதயத்திற்கு முன் இரண்டு நாடிகளும், அர்த்தாஸ்தமயத்திற்குப் பின் இரு நாடிகளும் ஸந்த்யா முஹூர்த்தமாகும்.
ஸூர்யன் உதித்து மூன்று முஹூர்த்தங்கள் ப்ராத: காலம். அடுத்த மூன்று முஹூர்த்தம் ஸங்கவம், பின் மத்யாஹ்னம், அபராஹ்ணம், ஸாயாஹ்னம் என்றும் இருக்கின்றன. மொத்தம் ஐந்து பாகங்கள் கொண்டது பகல். விஷுவத்தில் இரவும், பகலும் சமமாய் இருக்கின்றன. சரத் ருதுவின் ஆரம்பமான துலா ராசியிலும், வஸந்த ருதுவின் ஆரம்பமான மேஷ ராசியிலும் ஸூர்யன் வரும்போது விஷுவம் ஆகும். கர்கடகத்தில் ப்ரவேஸிக்கும் போது தக்ஷிணாயனமும், மகரத்தில் ப்ரவேஸிக்கையில் உத்தராயணமும் உண்டாகின்றன. பதினைந்து நாட்கள் ஒரு பக்ஷமும், இரு பக்ஷங்கள் ஒரு மாஸமும், இரு மாஸங்கள் ஒரு ருதுவும், மூன்று ருதுக்கள் ஒரு அயனமும், இரு அயனங்கள் ஒரு வருஷமும் ஆகும்.
இந்த ஒரு வருஷம் சாந்த்ரம், ஸாவனம், ஸௌரம், நக்ஷத்ரம் என நான்கு வகை மாஸங்களால் உண்டாக்கப்படும். இப்படி வகுக்கப்பட்ட வருஷங்கள் ஐந்து கூடி யுகம் உண்டாகும். முதல் வருஷம் ஸம்வத்ஸரம், இரண்டாவது பரிவத்ஸரம், மூன்றாவது இடாவத்ஸரம், நான்காவது அனுவத்ஸரம், ஐந்தாவது இத்வத்ஸரம் ஆகும்.
வேறு முறையில் விஷுவம் முதலியவற்றை விளக்குகிறார் பராசரர். ச்வேத மலைக்கு வடக்கே மூன்று சிகரங்களை உடைய ஒரு மலை உண்டு. இவைகள் வடக்கு, நடு, தென் திசைகள் என அமைந்திருக்கின்றன. தெற்கு சிகரத்தில் ஸூர்யன் ஸஞ்சரிக்கும்போது தக்ஷிணாயனமும், வடக்கு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் உத்தராயணமும், நடு சிகரத்தில் ஸஞ்சரிக்கையில் விஷுவமும் உண்டாகின்றன. க்ருத்திகையின் முதல் பாகத்தில் ஸூர்யன் இருக்கையில், சந்த்ரன் விசாகாவின் நான்காம் பாகத்திலிருக்கிறான். அவ்வாறே ஸூர்யன் விசாகா நக்ஷத்ரத்தின் மூன்றாம் பாகத்திலிருக்கும்போது க்ருத்திகையின் முதல் பாகத்தில் சந்த்ரன் இருப்பான். இது மஹாவிஷுவம் என்ற புண்ய காலம். இந்த காலத்தில் ப்ராஹ்மண, தேவ, பித்ருக்களுக்குக் கொடுக்கும் தானம் நேராக அவர்களிடமே கொடுக்கப்பட்டதாகி, கொடுத்தவன் எல்லாவற்றையும் செய்து முடித்தவனாகி விடுகிறான்.
அமாவாஸ்யை அன்று சந்த்ரன் காணப்பட்டால் அதை ஸினீவாலீ என்றும், இல்லையென்றால் குஹூ என்றும் அழைக்கிறோம். அதே போல் சந்த்ரன் பூர்ணமாயிருக்கும் பௌர்ணமியை ராகா என்றும், குறைந்த்ருந்தால் அனுமதி என்றும் அழைக்கிறோம். தபஸ், தபஸ்யம், மது, மாதவம், சுக்ரம், சுசி என்ற மாகமாசம் முதலியன அடங்கிய ருதுக்கள் உத்தராயணத்தையும், நபஸ், நபஸ்யம், இஷம், ஊர்ஜம், ஸஹம், ஸஹஸ்யம் என்ற ச்ராவண மாதங்கள் அடங்கிய ருதுக்கள் தக்ஷிணாயனத்தையும் சேர்ந்தவை. லோகாலோக மலையில் நான்கு லோகபாலர்கள் உள்ளனர். ஸுதன்வா, சங்கபா என்ற இருவர் கர்தம ப்ரஜாபதியின் பிள்ளைகளாவர். ஹிரண்யரோமா, கேதுமான் என்பவர்கள் மற்ற இருவர்கள்.
இதில் அகஸ்த்ய வீதிக்கு வடக்கிலும், அஜவீதிக்குத் தெற்கிலும், வைச்வானர வீதிக்கு புறத்திலும் பித்ருயாண மார்க்கம் (தூமாதி மார்க்கம்) இருக்கிறது. ப்ரஜா ஸ்ருஷ்டிக்கு உதவும் வேதத்தை ஓதிக்கொண்டும், அக்னிஹோத்ரம் செய்து கொண்டும் பலர் இங்கிருக்கின்றனர். ஒவ்வொரு யுகத்திலும் தொடர்பின்றி அழிந்திருக்கும் வேத ஸம்ப்ரதாயத்தை, வம்சத்தை தவத்தினாலும், வர்ணாச்ரம தர்மத்தினாலும், சாஸ்த்ர உக்திகளாலும், தங்கள் புத்ரர்கள் முதலானோர் வம்சத்திலேயே பிறந்து கொண்டு ப்ரளயம் உண்டாகும் ப்ரஹ்ம தினம் வரை இருக்கிறார்கள் இவர்கள். நாகவீதிக்கு வடக்காகவும், ஸப்தரிஷி மண்டலத்திற்குத் தெற்காகவும் தேவயான மார்க்கம் இருக்கிறது. இங்கிருக்கும் எண்பதினாயிரம் பேர்கள் இந்த்ரிய ஜயம் செய்து ஸித்தி பெற்றவர்கள். ஸந்ததியை வெறுத்தவர்கள். ஊர்த்வரேதஸ்ஸுக்களான இவர்கள் ஸூர்யனின் வடபுறத்து வழியை அடைந்து ப்ரஹ்ம தினம் வரை வாழ்கின்றனர். பேராசை, ராகத்வேஷம், ஸ்த்ரீஸம்போகம் முதலிய எந்த குற்றங்களுமற்றவர்கள் இவர்கள்.
ஸப்தரிஷிகளுக்கு மேல் வடபுறத்தில் த்ருவன், தர்மன் இருக்கும் விஷ்ணுபதம் இருக்கிறது. இது பூமியிலிருந்து மூன்றாவது ஆகாச ஸ்தானமாகும். விராட்புருஷனுக்கு இதயநாடி ஸ்தானமாகும் இது. புண்ய, பாபங்களற்ற யோகிகள் இங்கே வஸிக்கிறார்கள். இது ஸத்ய லோகத்திற்குக் கீழேயிருந்தாலும், இது உண்மையான பரமபதமல்ல என்றிருந்தும் முக்தியை அளிப்பதாலும், பல சிறப்புக்களுடன் கூடியதாலும் இதை பரமபதம் என்று சிறப்பிக்கின்றனர். கங்கையின் பெயரை உச்சரித்தாலே மூன்று ஜன்மங்களில் செய்த பாபங்களழியும் என்கிறார் பராசரர். இந்த கங்கை இங்கேயே உண்டாகிறது. வாமனாவதாரத்தின் போது ஸத்ய லோகம் வந்த அவரது இடது கால் கட்டைவிரலை தன் கமண்டலத்தின் நீர் கொண்டு ப்ரஹ்மா நீராட்ட அதிலிருந்து உண்டானதே கங்கையாம்.
த்ருவ மண்டலத்தின் தென் புறத்தில் வழியும் இந்த கங்கையில் ஸப்தரிஷிகள் ப்ராணாயாமம் முதற்கொண்டு அகமர்ஷண ஸ்னானத்தையும், மற்ற தேவர்களும், ஸ்த்ரீகளும் செய்கிறார்கள். கங்கையால் தான் சந்த்ரமண்டலமும் குளிர்ச்சியாக உள்ளது. அதன் பிறகு அந்த கங்கை மேரு மலையின் மீது விழுந்து ஸிதா, அலகனந்தா, சக்ஷு, பத்ரா என்று நான்கு திசைகளிலும் ஓடுகிறது. இதில் அலகனந்தாவைத் தான் பரமேச்வரன் தாங்குகிறார். அவரிடமிருந்து கபில மஹரிஷியின் சாபத்தால் சாம்பலான ஸகர மன்னனின் நூறு புத்ரர்களையும் புனிதப்படுத்தி ஸ்வர்க்கம் சேர்த்து ஓடுகிறது கங்கை. இதில் பித்ருக்களுக்கு ஒரு தடவை தர்ப்பணம் செய்தால் அவர்கள் நூறு வருஷங்கள் அளவு த்ருப்தியை அடைகிறார்கள். இதில் நீராடுவது பாவங்களனைத்தையுமப்பொழுதே போக்கும். தன் பெயரைக் கேட்பவனையும், விரும்புகிறவனையும், பார்த்தவனையும், தொட்டவனையும், சொன்னவனையும் உடனே பரிசுத்தமாக்குகிறது இது
02_11. மைத்ரேயர், “ஆசார்யரே! ஆறு பேர்களின் செயல்களைச் சொன்னீர்கள். ஸூர்யன் என்ன செய்கிறான் என்றும் கூறுங்கள். மழை, பனி, வெப்பத்திற்கு இந்த எழுவருமே காரணமாயிருக்க உலகத்தார் ஸூர்யன் உதித்தான், உச்சிக்குப் போனான், அஸ்தமித்தான் என்று ஸூர்யனை மட்டுமே கூறுகிறார்களே” என்கிறார். பராசரர் “ஸூர்யனே அந்த எழுவருள் ப்ரதானமானவன். அவன் செயலையே மற்றவர் கூடிச் செய்கின்றனர். விஷ்ணுசக்தியே ஸூர்யனாயிருக்கிறது. அந்த நாராயணனையே காலையில் ரிக் வேதங்களும், பகலில் யஜுரும், ஸாயங்காலத்தில் ஸாம வேதங்களும் துதிக்கின்றன. இந்த விஷ்ணு சக்தியே ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரராவர்.
ப்ரஹ்மா ரிக் வேத மயமாயிருந்து படைக்க, விஷ்ணு யஜுர் வேதமயமாயிருந்து காக்க, ருத்ரன் ஸாம வேதமயமாயிருந்து ஸம்ஹரிக்கிறார். இதைக் காரணம் கொண்டே ஸாமத்வனி அஸுத்தம் என்றும் கூறப்படுகிறது. இந்த விஷ்ணு சக்தி ஸூர்யனிடம் அதிகமாயிருப்பதால் மற்ற அறுவரும் அவனை அண்டி இருக்கின்றனர். கண்ணாடியில் ஒவ்வொருவரும் தத்தம் பிம்பத்தைப் பார்த்துச் செல்வது போல், விஷ்ணு சக்தியை மாதந்தோறும் ஸூர்யர்கள் பெறுகின்றனர். ஸூர்யன் தன் ப்ரபாவத்தினால் தேவ, பித்ரு, மானுஷ லோகங்களை மகிழ்விக்கிறான். சந்த்ரனின் கலைகளை ஒவ்வொன்றாக க்ருஷ்ண பக்ஷ ப்ரதமையிலிருந்து தேவர்கள் பானம் செய்ய, சதுர்தசியில் மீதமிருக்கும் இரண்டு கலைகளில் ஒன்றை அமாவாஸ்யையில் பித்ருக்கள் பானம் செய்து மகிழ்கின்றனர்.
02_12. சந்த்ரனின் தேருக்கு மூன்று சக்ரங்கள். இட, வலப் புறங்களில் பூட்டிய பத்து குதிரைகளும் முல்லை பூப்போன்ற வெண்ணிறமுடையவை. ஜலத்திலிருந்து பிறந்தவை. கல்பத்தின் ஆரம்பத்தில் பூட்டப்பட்ட இந்த குதிரைகள் கல்பம் முடியும் வரை இடைவிடாமல் சந்த்ரனின் தேரை சுமந்து வருகின்றன. இதுவும் த்ருவனையே ஆதாரமாகக் கொண்டு நக்ஷத்ரங்களைக் கடந்து செல்கிறது. ஸூர்யனுக்கு உள்ளதைப் போல் சந்த்ரனுக்கும் உதய, அஸ்தமய காலங்களில் குறைவும், வளர்ச்சியும் உண்டு. பதினாறு கலைகளைக் கொண்ட சந்த்ரனின் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வர, அமாவஸ்யையில் ஒரு கலையோடு இருக்கும் சந்த்ரனை ஸூர்யன் ஸுஷும்னை என்ற நாடியினால் ஒவ்வொரு கலையாக மீண்டும் பதினைந்து நாட்கள் வளர்க்கிறான். பூர்ண சந்த்ரனின் அமுதத்தையே முப்பத்து மூவாயிரத்து, முன்னூற்று முப்பத்து மூன்று தேவர்கள் பருகுகிறார்கள்.
பதினாறு கலைகளில் ஒவ்வொரு கலையாக க்ருஷ்ண பக்ஷத்தின் போது தேவர்கள் பருகிவர, பதினைந்தாம் நாளன்று இரண்டு கலைகளுடன் எஞ்சி இருக்கிறான் சந்த்ரன். இன்றைய தினம் ஸூர்யனின் அமா என்ற கிரணத்தில் சந்த்ரன் வஸிப்பதால், இந்த தினம் அமாவாஸ்யா என்றழைக்கப்படுகிறது. இரண்டு கலைகளோடிருக்கும் இந்த சந்த்ரன் முதலில் தண்ணீரிலும், கொடிகளிலும் பின்னர் ஸூர்யனிடமும் முறையே வஸிப்பதாலேயே இந்த நாளில் (அமாவாஸ்யா) செடி, கொடிகளை அழிப்பவன் ப்ரஹ்மஹத்தி செய்த பாபத்தை அடைகிறான். இந்த அமுதம் நிறைந்த இரண்டு கலைகளில் ஒரு கலையை இன்று பித்ருக்கள் பருகுவதால் இதை மாஸத்ருப்தி என்கின்றனர். இந்த பித்ருக்கள் ஸௌம்யர், பர்ஹிஷதர், அக்னிஷ்வாத்தர் என்று மூவகைப்படுவர். இப்படி அமுத மயமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்து தேவ, பித்ரு, தாவரங்களை மகிழ்விக்கிறான் சந்த்ரன்.
புதன் சந்த்ரனின் பிள்ளையாவான். அவன் தேர் வாயுவினாலும், அக்னியினாலும் உண்டானது. கபில வர்ணம் கொண்ட எட்டு குதிரைகளைக் கொண்டது. தேரில் இருப்பவனை மறைக்கும் வரூதம் என்ற அவயவமும், தேரின் அடிப்பாகத்தைத் தாங்கும் அனுகர்ஷம் என்ற அவயவமும், தேர்த் தட்டும், கொடியும் கொண்டது. சுக்ரனுடைய தேர் பொன்னிறமானது, எட்டு குதிரைகள் கொண்டது, பெரியது. அங்காரகன் தேர் அக்னியிலிருந்து பிறந்த பத்மராகம் போன்ற சிவந்த எட்டு குதிரைகளைக் கொண்டது. ப்ருஹஸ்பதியின் தேரும் எட்டு குதிரைகளைக் கொண்டு பொன்னிறத்தில் இருக்கிறது. இதில் வரும் ப்ருஹஸ்பதி ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு வருஷம் இருக்கிறார்.
சனியின் தேரும் ஆகாசத்தில் பிறந்த, சித்ர வர்ணமுடைய எட்டுக் குதிரைகளைக் கொண்டது. இந்த சனி மெதுவாக செல்கிறான். ராஹு வெண்ணிறமுள்ள தேரில் வண்டு வர்ணம் கொண்ட எட்டுக் குதிரைகள் பூட்டப் பட்டு சந்த்ரனையும், ஸூர்யனையும் மாறி, மாறி பர்வ காலங்களில் அடைகிறான். அதாவது ஸூர்யனுக்கு மேலே இருள் நிறைந்த மூன்றாவது ஸதானத்திலிருக்கும் இவன் க்ரஹண காலத்தில் அந்த இடத்தை விட்டு ஸூர்யனுக்குக் கீழே செல்கிறான். பூமியின் நிழலாகிய கரிய உருவத்தால் ஸூர்யனை மறைத்துத் தானும் மறைந்து விடுகிறான். கேதுவின் தேர் வைக்கோலைத் தீயிடும் போது தோன்றும் புகையின் ஒளியுடன், உருக்கிய அரக்கின் நிறத்தைக் கொண்டது.
இந்த க்ரஹங்கள், நக்ஷத்ரங்கள் என அனைத்து மண்டலமும் வாயுவாகிற கயிறால் த்ருவனிடம் கட்டப்பட்டு தங்கள் கதியில் சுற்றி வருகின்றன. சனி, அங்கிரஸ், சுக்ரன் மெதுவாகவும், ஸூர்யன், சந்த்ரன், புதன் வேகமாகவும் செல்பவை. செக்கு மாடுகள் போல இவை தாங்களும் சுற்றி, த்ருவனையும் சுற்றச் செய்கின்றன. இந்த சக்ரம் முழுவதும் கொள்ளிக்கட்டையைச் சுற்றும் போது தோன்றும் அலாதசக்ரத்தை ஒத்திருக்கின்றன. இவைகளை இப்படி சிறப்பாக இயக்குவதால் காற்று, ப்ரவஹம் என்று பெயர் பெறுகிறது. இப்படிப்பட்ட இந்த சிம்சுமார சக்ரத்தை இரவில் தரிசிப்பவன் பகலில் செய்த பாபங்களனைத்திலுமிருந்து விடுபடுகிறான். நக்ஷத்ரங்கள் உள்ள வரை இனிதாக வாழ்வான்.
இந்த சக்ரத்தின் மேல்வாசல் புறம் உத்தானபாதனும், கீழ்வாசல் புறத்தில் யக்ஞனும், தலைப்பக்கம் தர்மனும், மார்பகத்தில் நாராயணனும், முன் கால்களில் அச்வினிகளும், பின் தொடைகளில் வருணனும், அர்யமாவும், குறியில் ஸம்வத்ஸரமும், அபானத்தில் மித்ரனும், வாலில் அக்னி, மஹேந்த்ரன், காச்யபன், த்ருவன் ஆகியோரும் இருக்கின்றனர்.
உலகப்பொருட்கள் சித் (அறிவுள்ளவை), அசித் (அறிவற்றவை) என இருவகை. சித் எனும் ஜீவாத்மாக்கள் மாறுதல்களின்றி, நித்யமாய், அஸ்தி (இருக்கின்றன) என்று கூறும் வகையிலும், அசித் எனும் ஜடப்பொருள்கள் அனித்யங்களாய், மாறுபாடுகளோடு, நாஸ்தி (இல்லை) எனச் சொல்லும் வகையிலும் உள்ளன. இவையிரண்டுமே பகவானின் சரீரங்களே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்தில் ஜலமும், பின் அதிலிருந்து தாமரையின் உருவில் மலை, கடல்களடங்கிய இந்த உலகும் தோன்றியது. இவையாவும் விஷ்ணுவின் அங்கங்களே. ஸர்வம் விஷ்ணுமயம். இதில் எந்த வேற்றுமையுமில்லை. வேற்றுமைகள் ஞானத்தால் உண்டாகின்றன.
02_13. பரதன் என்ற அரசன் முன்பு ஸாளக்ராமம் செய்து தவம் செய்தும் மோக்ஷம் ஏன் பெறவில்லை. ஏன் மீண்டும் அந்தணராகப் பிறந்தார். அதைக் கூறுங்கள் என்று மைத்ரேயர் கேட்க, அதைக் கூறுகிறார் பராசரர். ஸாளக்ராமத்திலேயே பலகாலம் வஸித்து வந்த பரதர் மனத்தை பரமனிடமே செலுத்தி வந்தார். சொல் பரமனின் திருநாமமாகவும், செயல் அவன் பூஜையும், பூஜைக்குத் தேவையான பொருள்களை சேகரிப்பதாகவும், மனம் அவனிடம் லயித்துமிருந்து வேறெந்த நினைவும் இல்லாமல் காலத்தை மகிழ்வுடன் கழித்து வந்தார். அவருக்கும் உறவும், செயலும் வந்தது. ஒரு நாள் அவர் குளித்துக் கொண்டிருந்த நதிக்கரையில் முழுதும் கருவுற்றிருந்த ஒரு பெண் மான் நீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எங்கிருந்தோ கேட்ட சிங்கத்தின் கர்ஜனையில் அதிர்ந்த மான் செய்வதறியாது நீரைத் தாண்டி ஓட முயன்றதில், குட்டியை ஈன்று விட்டு, தான் அதிர்ச்சியில் இறந்து விட்டது. வெள்ளத்தில் அடித்து வந்த அந்த மான் குட்டியை பரதர் தனக்கு பரமன் தந்த குழந்தையாக மகிழ்வுடன் பாவித்து அதைப் பரிவுடன் ஆச்ரமத்திற்கு எடுத்து வந்தார்.
அது நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. ஆரம்பத்தில் ஆச்ரமத்திலேயே புலிக்குப் பயந்து மேய்ந்து கொண்டிருந்த அந்த குட்டி, வளர, வளர தைரியமாக வனத்தினுள் சென்று மேயத்தொடங்கியது. பரதர் மனமோ எப்போதும் அந்தக் குட்டியிடமே. அரசுரிமை, சொந்த, பந்த, போகங்களை விட்டு வந்த அவர் இப்பொது இந்த மான் குட்டியிடம் பெரும் பாசம் கொண்டு, அது திரும்ப சிறிது நேரமானாலும் பெரிதும் பயம் கொள்வார். அது சாப்பிட்ட, பழகிய, நடந்த, விளையாடிய இடங்களைக் கண்டு நினைத்து, நினைத்து வருந்துவார். யஜுர் வேதக் குழந்தைகள் குடுமியும், ஸாம வேதக் குழந்தைகள் மொட்டையும் சௌளத்தின் போது செய்து கொள்வது வழக்கம். இந்த மானுக்குப் பல் முளைத்து சில நாட்களே ஆகியிருக்கிறது. அதனால் அது மேய்ந்திருந்த தர்ப்பை, புல், செடி முதலியவைகளைப் பார்க்கும் போது, “மான்குட்டி மேய்ந்த புல் ஸாமவேதம் ஓதும் சிறுவர்கள் போல மொட்டையாக இருக்கின்றன. மான்குட்டியை மட்டும் காணவில்லையே” என்பார்.
இப்படி எந்த சொந்தமுமில்லாமல் மானோடே பழகிய தோஷத்தால் மோக்ஷத்தையுமிழந்த இந்த பரதர் இறக்கும் போது அந்த குட்டியைத் தனயனைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டே இறந்து போனார். இந்த பாவனையின் பலனாய் ஜம்பூமார்க்கம் என்ற கங்கைக் கரையில் மானாகவே மீண்டும் பிறந்தார். ஆனால் முன் ஜன்மத்து பக்தி வாசனையால், முற்பிறவி நினைவுடன் இருந்தார். முன்பிருந்த தன் நிலையையும், இப்போதைய நிலையையும் பார்த்த அவர் பெரும் வருத்தத்துடன் தவறைச் சரிசெய்ய நினைத்து, தாயை விட்டுப் பிரிந்து மீண்டும் ஸாளக்ராமத்திற்கே சென்று, உலர்ந்த புல், இலைகளை மட்டுமே உண்டு பிறப்பை முடித்தார்.
யோகம் தாங்களும் அனுஷ்டித்து, பிறருக்கும் போதிக்க ஞானம் பெற்றவர்களின் குலத்திலேயே இத்தகைய உயர்ந்த யோகத்திலிருந்து தவறியவர்கள் மீண்டும் பிறப்பர். அவ்வாறே ஒரு உயர்ந்த அந்தண குலத்தில் மீண்டும் பிறந்தார் பரதர். அனைத்து சாஸ்த்ரங்களையும் அறிந்தவர் ஆனார். ஞானத்தால் ஆத்மாவை உடலிலிருந்து வேறுபட்டதாய், அழிவில்லாததாய் அனைத்து ஜீவர்களுக்கும், தேவர்களுக்கும் பொதுவானதாய் அறிந்தார். இதனாலேயே உபனயனம் ஆன பின் குருகுலத்திலும் வேதத்தையும் பயிலவில்லை. கர்மாக்களையும் செய்யவில்லை. சாஸ்த்ரங்களையும் பின்பற்றவில்லை. பிறர் ஏசும்படி பேசியும், நடந்தும் வந்தார். உடை, நடவடிக்கைகளால் பிறரால் அருவருத்து ஒதுக்கப்பட்டார்.
பிறர் தம்மை வெறுத்து ஒதுங்கினால் கர்வமும், அஹங்காரமும் ஒழியும், பாபங்களும் அழியும். யோகமும் வளரும். எனவே ஜனங்கள் தம்மை அவமதித்தே நடக்க வேண்டும், அவர்களுடன் நமக்கு எந்தத் தொடர்பும் கூடாது என்ற இத்தகைய உபதேசங்களைக் கொண்டதால் பரதர், ஜடபரதர் ஆனார். பரமனும் தன்னிடம் பக்தியுடையோர் தரும் சிறு பொருளையும் பெரிதாகவும், பக்தியில்லாதோர் தருவது பெரியதாயினும் அதைச் சிறுமையாகவும் நினைப்பான். இவரோ எவர் தந்தாலும், எதைத் தந்தாலும் அதைப் பெரிதாகவே நினைத்து மகிழ்வார், அனுபவிப்பார். ஆனந்திப்பார். பெற்ற பிள்ளையாதலால் இவரைப் பெரிதும் காத்து வந்த இவர் தகப்பனாரும் இறந்தார்.
சுற்றத்தாரும், உடன் பிறந்தவர்களும், அவர்கள் புத்ரர்களும் இவரைக் கொண்டு தங்கள் வேலைகளைச் செய்து கொண்டனர். கூலியாக அல்ப உணவு மட்டுமே. அதுவும் வேறெவரும் உண்ண விரும்பாததே. இவரோ பெரு மகிழ்வோடு அவைகளை உண்டுத் தொடர்ந்து வேலைகளைச் செய்து வந்தார். உடலும் இளைக்கவில்லை. கண்களும் இருளவில்லை. எதுவும் ஆகவில்லை இவருக்கு. இதைக் கண்டு மற்றவர்களும் இவரையே குறைந்த கூலியில் நிறைந்த வேலை செய்பவராக ஆக்கிக் கொண்டனர். பல் தேய்க்க மாட்டார். தேய்த்துக் குளிக்க மாட்டார். பூணல், குடுமி, ஸந்த்யாவந்தனங்கள் இவைகளை மட்டுமே செய்து வந்தார்.
இந்த சமயத்தில் இவரைத் திடகாத்ர உருவத்துடன் பார்த்த ஸௌவீர ராஜாவின் ஸாரதி காளிக்கு நரபலியிடுவதற்காகப் பிடித்துச் சென்று, அலங்கரித்துப் பலியிட வாளை ஓங்கிய போது, தானே அந்த வாளைப் பிடுங்கிக் காளி அந்த சாரதியைப் பலியிட்டுத் தானும் பரிவாரங்களுடன் உண்டு மகிழ்ந்தாள். அதன் பின் ஒரு ஸமயம் ஸௌவீர ராஜா இந்த துக்க ஸம்ஸாரத்தில் நன்மை தருவது எது என்று கபில முனிவரிடம் கேட்டு அறிவோம் என புறப்பட்டான். பல்லக்கு சுமக்க பலர் வேண்டியிருந்தது. கூலியின்றி வேலை செய்யும் (அமிஞ்சி) வெலைக்கு இவரைத் தகுந்தவராக நினைத்த ராஜ ஸேவகன் உத்தரவுப்படி பல்லக்கையும் சுமந்தார் ஜடபரதர். பாபங்கள் தொலைய வேண்டும் என்பதையே முக்யமாக நினைத்தார் அவர்.
இவர் எந்த ஜந்துக்களுக்கும் பங்கம் வந்து விடக்கூடாது என்று பார்த்து, பார்த்து மெதுவாக நடந்தார். மற்றவர்களோ வேகமாக நடந்தனர். பல்லக்கு சீராக செல்லாததை அறிந்த ராஜா உத்தரவிட்ட பின்பும் இவ்வாறே நடந்தது. பொறுத்துப் பார்த்த ராஜா கோபிக்க அனைவரும் இவன் தான் மெதுவாக நடந்து வருகிறான் என்று கூறி விட்டனர். பரதரைக் கண்ட ராஜனும் “நன்கு பருத்திருக்கிறாய், சிறிது தூரத்திற்குள்ளாகவே களைத்து விட்டாயா, இதைக் கூட உன்னால் பொறுக்க முடியவில்லையா” எனக் கேட்டார். ஜடபரதர் “நான் பருத்தவனுமில்லை, பல்லக்கையும் நான் சுமக்கவில்லை, களைக்கவுமில்லை, வருந்தவுமில்லை, நீங்கள் தவறாகக் கூறுகிறீர்கள்” என்றார். குழம்பிய அரசர் விளக்கமாகக் கூறச் சொல்கிறார் அவனை. நானே பார்க்கிறேன் நீ பருத்து இருப்பதையும், பல்லக்கு சுமப்பதையும், களைத்து நடப்பதையும். பின் ஏன் மறுக்கிறாய் என்கிறார்.
பரதர் “ஒன்றைப் பற்றிய விசேஷத்தைக் கூற முதலில் அதை அறிந்து கொள்வதவசியம். நான், நீ என்பவை ஜீவாத்மாவைக் குறிப்பவை. அதற்கு எந்த விசேஷமும், குணமும் சிறப்பாகக் கிடையாது. அதைக் காணவும் இயலாது. அப்படி இருக்க என்னைப் பருத்தவனாக எப்படி நீங்கள் காண்கிறீர்கள். பல்லக்கை சுமக்கிறாய், பல்லக்கு உன் மீது இருக்கிறது என்று வேறு கூறுகிறீர்கள். இதுவும் பொய். கால்கள் பூமியின் மேலும், அதற்கு மேல் முழங்கால்களும், அதைப் பற்றித் தொடைகளும், தொடைகளின் மேல் இடுப்பும், மார்பும், தோள்களும் இருக்கின்றன. அந்த தோள்களே பல்லக்கைச் சுமக்கிறது. அதற்கு மேலேயே பல்லக்கு இருக்கிறது. அதற்குத் தானே பாரம். எனக்கு (ஜீவாத்மா) ஏது.
நீங்களும் அவ்வாறே பல்லக்கினுள் இருக்கும் உடலுக்குள் இருக்கிறீர்கள். எனவே ஆத்மா சுமக்கவுமில்லை, சுமக்கப்படவுமில்லை. உடல் தான் உடலைச் சுமக்கிறது. நம்மனைவரையுமே பரிணமித்த ப்ருத்வீ முதலான பூதங்களே சுமக்கின்றன. இவைகளோ ஸத்வ, ரஜ, தமோ குணங்களின் பரிணாமங்களுக்குக் கட்டுப்பட்டவை. அவைகளோ கர்ம வசப்பட்டவை. கர்மாவுக்குக் காரணம் அவித்யையே. உடலையே ஆத்மாவாக நினைப்பது. இது எல்லா ப்ராணிகளிடமுமே இருக்கிறது” என்றார். ஆத்மா விலக்ஷணமானது, கர்மாவிற்கப்பாற்பட்டது. அழிவு, பசி, தாகங்களற்றது. ஸத்வ முதலான குணங்களில்லாதது. மாற்றமில்லாதது. எல்லா ஜந்துக்களிடமும் ஒரே மாதிரியானது. இப்படியிருக்க நீங்கள் எதை வைத்து என்னைப் பார்த்து இவைகளைக் கூறினீர்கள் என்றார். அப்படி ஆத்மாவிற்கே பாரம் என்றால் அது என்னிடம் மட்டும் இல்லையே. உங்கள், மற்றும் எல்லார் ஆத்மாவிற்கும் பாரம் வர வேண்டுமே. இந்தப் பல்லக்கைச் செய்த மூலப்பொருள்களைக் கொண்டே என் உடலும் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மௌனமாகப் பல்லக்கைச் சுமந்து செல்லத் தொடங்கினார்.
(இதுக்கு மேல நமக்கு இந்த சிச்சுவேஷனுக்கு சுத்தத் தமிழ் வரல) அரசன் இதையெல்லாம் கேட்க, கேட்க அரண்டு போயி, அலறி அடிச்சினு கீழ குதிச்சு ஆசாமி கால்ல விழுந்தான். “ஐயா சாமி! நான் அறியாம, தெரியாம பண்ணின தப்ப மன்னிக்கனும். இந்த வேஷத்தில் திரியும் நீங்கள் யார், எதற்கு இங்கு வந்துள்ளீர்கள், எனக்குச் சொல்லுங்கள் (மறுபடி கேள்விகள் இவர் கிட்டயே, ஆனா இப்ப வேற நிலைல. இப்ப ஓகே!!). இப்ப நம்ம ஜடபரதர், “நான் யார் என்பதற்கு என்னால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் ஆத்மாவிற்கு ஜாதி வித்யாசங்களில்லை. எதற்கு வந்துள்ளீர்கள் என்பதற்கு பதில் எல்லாரும் அறிந்ததே. ஸுக துக்க அனுபவமே. இதை நான் ஒரு முறைச் சொல்ல அவசியமில்லை. இந்த அனுபவங்கள் கால, தேச, கர்மங்களை அனுஸரித்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரும் நேரத்திலும், ஒரு சிலருக்கே இவைகள் அனுபவிக்கக் கிடைக்கின்றன. இவைகளையனுபவிக்கவே ஜீவாத்மாக்களுக்கு சரீரம் சரியான தேச காலங்களில் உண்டாகிறது. இப்படியிருக்க எதற்கு வந்தாய் என என்னை ஏன் கேட்டீர்கள் என்றார்.
அரசர் “அந்தணரே, புரிகிறது. ஆனால் ஆத்மாவை இன்னது என ஏன் கூற முடியாது என்றீர்கள். புரியவில்லை. அதை விளக்குங்கள்” என்றார். பரதர் “அரசே! ஆத்மாவை அஹம் (நான்) என்று குறிப்பதில் தவறில்லை. ஆனால் அதையே விசேஷத்துடன் சேர்த்து ஸோஹம் (நான் இன்னவன்) என்று கூறுவதுதான் தவறு. இந்த விசேஷங்கள், ஜாதி, வர்ணம் முதலியவைகள் சரீரத்துக்கே பொருந்தும். ஆனால் சரீரம் ஆன்மாவன்று. எனவே ஸோஹம் என்று கூறுவது ப்ராந்தி(ப்ராந்தி) ஞானத்தையே உண்டாக்கும். அது பெருந்தவறு” என்றார். அதேபோல் அஹம் என்ற சொல்லைக் கூறும் பற்களும், நாக்குமே ஆத்மா ஆகாதென்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவைகள் பல, ஆனால் ஆத்மா தனியொருப் பொருள். அதைத்தவிர இந்த பற்கள், நாக்கு முதலியவைகளில் இருக்கும் இந்த்ரியங்களும் ஆத்மாவன்று. இவைகள் கருவிகளே, ஆத்மாவே கர்த்தாவாகும். ஆத்மாவோ ஸூக்ஷ்மமானது. அதை ஸ்தூலமாக நினைத்து நீ பருத்தவன் என்றெல்லாம் வழங்குவது எவ்வாறு தகும் என்றார்.
அதேபோல் சரீரம் அழியக்கூடியது, பல அவயவங்களை தலை, கை, கால் என உள்ளடக்கியது. ஆத்மா நிரவயமானதும் அழிவற்றதுமானது. எனவே சரீர அவயவங்களையோ, சரீரத்தையோ ஆத்மா எனக் கூறக்கூடாது. ஆத்மாக்கள் பல இருந்தாலும், அதில் ஒரு ஆத்மாவை அடைமொழியிட்டுக்கூற வேண்டிய நிர்பந்தமும், வேற்றுமைகளும் அவைகளுக்கில்லை. ஒரு மாட்டு மந்தையில் வெள்ளை மாடு, கருப்பு மாடு, குட்டை மாடு என வேறுபாடுகளை வைத்து அவற்றைக் கூறுகிறோம். இந்த ஆத்மாக்களுக்கோ அப்படி வேறுபாடுகளில்லை. பல இருந்தாலும் அனைத்தும் அணுவின் ஸ்வரூபங்களே. ஞான ஸ்வரூபங்களே, எனவே நீ யார் என்ற கேள்வியும், அதற்கு நான் இன்னவன் என்ற பதிலும் அர்த்தமற்றவைகளே. என்னை விட வேறானவர்கள் உண்டு, ஆனால் அவர்கள் வேறானவர்களல்ல” என்கிறார்.
உருவங்கள் வளர்ச்சியும், மாறுதலும் உடையன. நீங்கள், உங்கள் அரசு, பொருள்கள், இந்தப் பல்லக்கு, இதைச் சுமக்கும் நாங்கள் என அனைத்தும் உண்மையல்ல. உருவ மாறுபாட்டால் இவையனைத்தும் அழியக்கூடியவையே. இந்த பல்லக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். உயிருடன் வளரும் நிலையில் இருந்த போது இதை மரம் என்றும், வெட்டியபின் கட்டை என்றும் அழைத்தார்கள், பல கட்டைகளால் ஒன்று சேர்த்து, ஒன்றைச் செய்தபின் பல்லக்கு என்பதும் உண்டாயிற்று. இப்போது மரமும், கட்டையும் இல்லை. உங்களை கட்டையிலோ, மரத்திலோ அமர்ந்திருப்பதாக யாராவது இப்போது கூறுவார்களா. ஆனால் இந்த கட்டைகளைப் பிரித்தால் பல்லக்கும் மறைந்துவிடும். அதேபோல் இந்த குடையிலுள்ள கம்பிகளைப் பிரித்து விட்டால் குடையும் மறைந்து விடும்.
இதேபோல் தான் நாமும். ஒரு கர்ம விசேஷத்தினால் அரச குலத்தில், ராஜ சரீரத்துடன் நீங்கள் பிறந்துள்ளீர்கள், நாங்களும் உங்களை ராஜா என்கிறோம். நானும் அப்படியே ப்ராஹ்மண சரீரத்தில் இருக்கிறேன். ஆகையால் உலகம் ஆண், பெண், ஆடு, மாடு, மரம், பறவை என்று கூறுவதெல்லாம் கர்ம நிமித்தமான சரீரத்தைப் பற்றியே. ஆத்மா ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல, தேவனுமல்ல, மனிதனுமல்ல, ம்ருகமும் அல்ல. என்றும் பரிணாமத்தின் காரணமாக வேறு பெயரை அடையாமலிருப்பதே ஸத்துப் (நிலையான) பொருள்களாகும். நீங்கள் கூறும் பொருள்களில் எது இது என்று முடிந்தால் தெரிந்து கொள்ளுங்கள். நீங்களே அரசனாகவும், பகைவனாகவும், கணவனாகவும், மகனாகவும், தந்தையாகவும் இருக்கிறீர்கள். உங்களை எப்படி அழைப்பேன் நான். உடலுறுப்புகளையே ஆத்மாவென்றால் அவற்றுள் நீங்கள் தலையா, கையா, வயிறா, கால்களா. உமக்கு இந்த உடல் யார், அதேபோல் இந்த உடலுக்கு நீங்கள் யார், ஆராய்ந்து பாருங்கள். நீங்கள் இந்த உடலை விட வேறானவர். நிபுணராக இருந்தால் ஆராயுங்கள் என்றார் ஜடபரதர்.
02_14. தடியனாக இருந்து கொண்டு பல்லக்கை வேகமாகச் சுமக்கவில்லையே என்று கோபித்துத் தான் கேட்ட ஒரு சில கேள்விகளுக்கு ஆத்ம தத்வத்தையே முழுதாக விளக்கிய பரதரிடம் கால்களில் விழுந்து “முக்காலமுமறிந்த முனிவரே, ஆத்ம தத்வத்தின் உண்மை நிலையை விளக்கிய தங்கள் உபதேசங்களைக் கேட்டு என் மனம் மிக்கக் களிப்புற்று ஒரு நிலையில் நில்லாது வட்டமடிக்கிறது. அனைத்து ப்ராணிகளிடமுமிருக்கும் ஆத்மா முக்குண ப்ரக்ருதியிலிருந்தும் வேறானதென்பதையுணர்ந்தேன். “பல்லக்கு என் மீது இல்லை, நானும் பல்லக்கைச் சுமக்கவில்லை, உடல்தான் பல்லக்கைச் சுமக்கிறது, அதுவோ என்னை விட வேறானது, பஞ்ச பூதங்களாலானது, பஞ்ச பூதங்கள் முக்குணங்களால் ஏவப்படுகிறது, இந்த இயக்கமும் கர்மாவின் காரணமாயிருக்கிறது” இவைகளைக் கேட்ட போதே என் மனம் என் வசத்திலில்லை. இந்த பரமார்த்த விஷயத்தையே மேலும் கேட்கவும் விரும்புகிறேன்.
வேறு வேலையாகச் செல்லும் இவனுக்கு உபதேஸிக்கவேண்டாம் என நினைத்து விடாதீர்கள். கபில மஹரிஷியிடமும் இந்த ஸம்ஸாரத்தில் உயர்ந்ததெது என்பதை அறியவே சென்று கொண்டிருந்தேன். மஹாத்மா கபிலர் விஷ்ணுவின் அம்சமாக அஞ்ஞானத்தை இவ்வுலகில் அழிக்கவே அவதரித்திருக்கிறார். என் நல்வினைப் பயனாக அவரே தான் உங்களுருவில் என் முன்பு தோன்றியுள்ளார் என்று நினைக்கிறேன். அவரை விட இதைப் போன்ற தத்வங்களை விளக்குபவர்கள் யாருமில்லை என்றே நினைக்கிறேன். அளவில்லா ஆவல் இருப்பதால் நான் உபதேசத்திற்குத் தகுதியுடையவனே. தங்களிடம் பணிந்திருக்கும் இந்த அடியேனுக்கு உயர்ந்ததெது என்பதை உபதேசித்தருளுங்கள். பலவகை விஞ்ஞானங்களும் அலைபோல் இருக்கும் ஞானக்கடல் நீங்கள்” என ப்ரார்த்தித்தான்.
(இந்த புராண ப்ளாG வேலைல இப்பதான் ஒரு பிக்-அப்பே வருது. உலக உற்பத்தி, த்வீபங்கள், அதன் விசேஷங்கள், அளவுகள், இடங்கள்?நம்பணும், ஆனா ப்ரூப் பண்ண, மறுக்க, இங்க யாருக்கும் அறிவியல் ஞானம் போறாது, கண்ணுக்குத் தெரிஞ்சதுகள்லயே இன்னும் ஆராய்ச்சி முடியலை, முடிஞ்சாலும் பல, அதுவும் ஒண்ணுக்கொண்னு எதிரா தீர்வுகள், அனைத்துக்கும் ப்ரூப்புகள். இதத்தவிர ஒரு விஷயத்தில ஓரளவுக்குப் போனவனுக்கு இன்னொரு விஷயத்துல பூஜ்யம், உதாரணமா இப்ப வந்திருக்கற, வரப்போற வ்யாதிகள். ஜோஸ்யனும், விஞ்ஞானிகளும் பல விஷயங்கள்ல ஒண்ணு. ரெண்டு பேரும் தீர்மானமா பேசுவாங்க, எல்லாம் தெரிஞ்சு, தெளிஞ்சாச்சுன்னு முடிவு பண்ணிப்பாங்க. ரெண்டு பேர் சொன்னதலயும் சிலது நடக்கும், சிலது நடக்காது (நான் சொன்னதுலயே நடக்கும், அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் விஷயம் படிச்சவங்க. பின்ன நடக்காதா?) ரெண்டுல எது நடந்தாலும் விமர்சனமும், பரிசும் நிச்சயம். நடந்தா இவங்களுக்கு, நடக்கலேன்னா “நான் இதத்தான் அப்பயே சொன்னேன்ல” ன்னு இன்னொரு விஞ்ஞானியோ, ஜோஸ்யரோ வருவாரில்ல அவங்களுக்கு. இந்த புராண, இதிஹாஸங்கள்ல இதுதான் ஸ்வாரஸ்யமே. ஒரே பராசரர் (அவருக்கு சொன்னவர்கள், தொகுத்த வ்யாஸர், பல பேர்) கணக்கு, புவியியல், அறிவியல், அணு, மெய்ஞ்ஞானம், கதை, மொழியியல் ன்னு இது வரைக்குமே இவருக்கு எத்தனை முகங்கள். நமக்கு ஒண்ணுல கொஞ்சம் தெரிஞ்சுக்கவே விஷயம் தெரிஞ்ச மெரிட்ல, புரிஞ்சு படிச்ச வாத்யார், இடம், பணம் (அதச் சொல்லு) இதெல்லாம் கிடைக்க கஷ்டம், பின்ன நாமளும், நண்பர்களோட அனுபவிச்சு, ஆர்வமா படிக்கனும். கண்ண கட்டும்!! இங்க என்னடான்னா, ஒண்ணும் சொல்ல முடியல. ஜட ப்ரதர், அதான் பரதர்டயே போலாம் திரும்பி. ஏதோ கேள்வி கேட்டதுக்கு பல, பலான விஷயங்களை விளக்கினவர். இப்ப ராஜா விருப்பத்தோட, இதான் படிக்கப் போற விஷயம்னு தெரிஞ்சு கேட்கறார். விடுவாரா இனிமே)
ஜடபரதர் “அரசே! ச்ரேயஸ் (உயர்ந்தது) எதுன்னு தெரிஞ்சுக்கனுமா, பரமார்த்தத்தைத் (உண்மைப் பொருள்) தெரிஞ்சுக்கனுமா. ரெண்டும் ஒன்றல்ல, வெவ்வேறு. உயர்ந்ததெல்லாம் உண்மைப் பொருளல்ல. உயர்ந்தவைகளும் பலவகைல இருக்கு. ஒருத்தனுக்கு பணம் ச்ரேயஸ், இன்னொருவனுக்கு மக்கட்பேறு ச்ரேயஸ். இன்னொருவனுக்கு ராஜ்யம், ஸ்வர்க்கம், பலன் கருதாது யாகங்களைச் செய்பவனுக்கு கர்மாக்களே ச்ரேயஸ். ஆத்ம த்யானம் செய்பவனுக்கு அதுவே ச்ரேயஸ். ஜீவாத்மாவுக்கும், பரமாத்வாவுக்கும் ஏற்படும் ஐக்யம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது. முக்யமான ஏழை மட்டும் இங்கு கூறியிருக்கிறேன். ஆனால் இவையெதுவுமே பரமார்த்தம் இல்லை.
பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது பரமார்த்தமாயின் பணத்தை அடைந்தபின் வேறெதையும் விரும்பக்கூடாது. ஒன்றால் பெறத்தக்கதாகவும், ஒன்றைப் பெறப் பயன்படுத்தப்படுவதாகவும் இருப்பது பரமார்த்தத்தின் இலக்கணமன்று. நாமோ பணத்தைச் செலவிடுகிறோம். அதைக் கொண்டு தர்மார்த்தங்களைப் பெற முயற்சிக்கிறோம். இந்த இலக்கணப்படி இருப்பது ஆத்மா ஒன்று தான். இதைக் கொடுத்து அடையத்தக்கதாக வேறொன்றுமில்லை. பிள்ளைகளும் அவன் தகப்பனுக்கே பரமார்த்தம், அவனுக்கு அவன் பிள்ளைகளே பரமார்த்தம், இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருப்பதால் அதுவும் பரமார்த்தமில்லை. பொதுவாக இருப்பதே பரமார்த்தம்.
கார்யங்களனைத்தும் தத்தம் காரணங்களுக்கே பரமார்த்தமேயன்றி அனைத்திற்கும் பரமார்த்தமாகாது. ராஜ்யங்கள் நிலையற்றவை, எனவே அதுவும் பரமார்த்தமன்று. மூன்று வேத விதிகளின் படி அழியும் பொருள்களான ஸமித், நெய், தர்ப்பங்களைக் கொண்டு செய்யும் யாகக் கர்மாக்களும் பரமார்த்தமன்று. மண்பாண்டம் ஒருநாள் மண்ணாவது போல் இந்த யாகாதிகளும் ஞானிகளுக்கு நிலையற்றது. பலன் கருதாத கர்மாக்களும் மோக்ஷத்தையளிப்பதால் பரமார்த்தமாகாது. பரமார்த்தப் பொருள் பேதமற்றது. ஆத்ம த்யானம் உலகப் பொருள்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டித் தானும் வேறாக இருப்பது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. மேலும் ஆரம்பத்தில் கொஞ்சம் தெளிவும் (விசதம்), பின் அதிகமான தெளிவும் (விசததரம்) என்று தன்னில் தானே மாறுதலை அடைகிறது த்யானம். அது இடைவிடாத நினைவுகளின் கோப்பே. ஒவ்வொரு க்ஷணத்திலும் பரிணமிக்கும் அது. எனவே அதுவும் பரமார்த்தமன்று.
ஜீவ, பரமாத்மாக்களின் கடைசி சேர்க்கை, அதன் ஐக்யம் உலகில் ஒவ்வாதது. வெவ்வேறான தன்மைகளைக் கொண்ட இரு பொருள்கள் ஒன்றாக சேர்வதும், மற்றொன்றாகவே ஆவதும் உண்மைக்கு ஒவ்வாது. எனவே அதுவும் பரமார்த்தமல்ல. அந்த நிலையும் அபரமார்த்தமே. எனவே இந்த ஏழும், இன்னும் பலவும் ச்ரேயஸ்ஸுக்களேயன்றி பரமார்த்தங்கள் ஆகாது. இனி சுருக்கமாகப் பரமார்த்த வஸ்துவைக் கூறுகிறேன், கேள்” என்றார்.
ஆத்மவஸ்து அவயவங்களின் சேர்க்கையாலுண்டான உடலைப் போலில்லாமல் தனிப்பொருளாய் இருப்பது. தீபம் தன் ஒளியால் இடங்களில் பரவுவது போல இந்த ஆத்மாவும் தன் குணமான ஞானத்தால் பரவுகிறது. பல வகை சரீரங்களில் இருந்தாலும் அவைகளால் எந்த மாறுதலும் அடையாதது. குற்றமில்லாதது, முக்குணங்களற்றது. அதைவிட வேறானது. பிறப்பு, வளர்ச்சி, அழிவுகளற்றது. அறிவுள்ளது. நிறைந்தது. ஞான மயமானது. இப்படிப்பட்ட ஆத்ம வஸ்துவே தேவ, மனுஷ்ய, மற்ற ஜீவராசிகளில் இருக்கிறது. இதுவே பரமார்த்தம். இதை விட்டு இந்த வஸ்துவிற்கு தன்மைகளை ஏற்றி, அதைப் பலவாறு நினைப்பவர் உண்மையான ஞானம் இல்லாதவரே.
புல்லாங்குழலில் புகும் காற்றுகளில் வித்யாஸமே இல்லை. ஆனால் அவை பல சந்துகளில் நுழைந்து வெளிப்படும் போது ஷட்ஜம் முதலான பெயர்களை அடைகின்றன. அதே போல்தான் ஆத்மாவும் கர்ம வினைகளால் தேவன், மனிதன் என்ற வ்யவஹாரங்களை அடைகிறது. இந்த கர்ம வினைகள் அழிந்ததும், வ்யவஹாரங்களும் அழிகின்றன. ஆக பரமார்த்தமாயிருப்பது ஆத்ம வஸ்து ஒன்றே என்று ஸௌவீரனுக்குக் கூறுகிறார் பரதர்.
02_15. அத்வைதக் கதை ஒன்றை ஜடபரதர் ஸௌவீரனுக்கு இங்கு கூறுகிறார். அரசே! முன்பு ஒருமுறை நிதாகருக்கு அத்வைத ஞானத்தை உண்டாக்க ருபு என்பவர் அருளியதைக் கூறுகிறேன். ருபு பரமேஷ்டி(ப்ரஹ்மா)யின் புத்ரர். பிறவியிலேயே தத்வ ஞானமுடையவர். புலஸ்த்யருடைய புத்ரர் நிதாகர் இவருக்கு சிஷ்யர். அவருக்குப் பல விஷயங்களையும் நன்கு மகிழ்ச்சியுடன் கற்பித்த ருபு, ஆத்ம அத்வைத ஞானம் நிதாகருக்கு இன்னும் உண்டாகவில்லை என்பதை அறிந்திருந்தார். நிதாகர் தேவிகா நதிக்கரையில் சோலைகளும், அனைத்துப் பொருட்களும் நிறைந்திருக்க புலஸ்த்யர் நிர்மாணித்திருந்த நகரத்தில் வேத கர்மாக்களைச் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். ஆயிரம் தேவ வருஷங்கள் சென்ற பின் ஒரு நாள் அவரைக் காண ருபு அங்கே சென்றார்.
பூஜைகளையும், வைச்வதேவத்தையும் முடித்து வாசலில் அதிதிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிதாகர் அவரைக் கண்டார். பல காலம் கழிந்து விட்டதால் ஆசிரியர் என்ற ஞாபகமில்லை. ஏதோ ஒரு உயர்ந்த ப்ராஹ்மணர் கிடைத்தாரென்று மகிழ்ந்து அர்க்யம் கொடுத்து, கால்களை அலம்பி விட்டு, ஆசமனமும் செய்வித்து இங்கேயே அமுது செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ருபு உடனே நான் தாழ்ந்த பொருள்களை விரும்புவதில்லை. உமது க்ருஹத்தில் என்னென்ன இருக்கின்றன என்று கேட்டார். நிதாகர் “ஸ்வாமி, அரிசி மாவிலும், யவ, தான்யங்களாலும் செய்த அப்பங்கள், காய், கனி, கிழங்குகளும் இருக்கின்றன. தாங்கள் வேண்டியதை இஷ்டம்போல் அமுது செய்யலாம்” என்றார்.
ருபு இவைகள் எனக்கு வேண்டாம், தேன்குழல், பாயஸம், மோர்க்குழம்பு முதலியவைகள் வேண்டும் என்றார். அவற்றைச் செய்துத் தரும்படி உடனே நிதாகரும் மனைவியிடம் அன்பாகக் கூறுகிறார். அவளும் கணவன் சொல்படியும், விருந்தோம்பலில் விருப்புற்றும் அவ்வாறே படைத்துப் பரிமாரினாள். அக்காரவடிசல் முதலிய அனைத்து வகைகளையும் ருபுவும் மகிழ்வுடன் விரும்பி உண்டு முடித்தார். நிதாகர் அவரை வணங்கி பசி, தாகம் தீர்ந்ததா, த்ருப்தி ஆனீர்களா, பரிமாறியவை போதுமா, கலக்கம் தீர்ந்ததா, எங்கிருக்கிறீர்கள் தாங்கள். எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள், எங்கிருந்து வருகிறீர்கள் என கேள்விகளைக் கேட்டார். சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த ருபு ஆத்ம தத்வ போதனையைத் தொடங்கினார். இனி ருபு.
“அந்தணரே! பசியிருப்பவனுக்கே ஆஹாரம் த்ருப்தி உண்டாக்கும். அதில்லாதவனுக்கு ஆஹாரத்தால் த்ருப்தி எப்படி உண்டாகும். எனக்குப் பசியே இல்லை. எனவே நீரளித்த உணவால் எனக்குத் த்ருப்தி உண்டாக இடமே இல்லை. நீர் எப்படி உமக்கு த்ருப்தி உண்டாயிற்றா என்று கேட்கிறீர். முதலில் பசியும், தாஹமும் உண்டாவதெப்படியென்பதை அறிந்து கொள்ளும். சாப்பிட்ட பொருள்களை வயிற்றில் இருக்கும் அக்னி (ஜாடராக்னி) ஜீர்ணித்தபின் மேலும் உணவுப் பொருள்களைப் போடாவிட்டால் அந்த அக்னி ப்ருத்வீ ஸம்பந்தமான தாதுக்களை எரிக்கத் தொடங்கி விடுகிறது. இந்த எரிச்சலில்தான் பசி உண்டாகிறது.
இதே அக்னியால் வயிற்றில் இருக்கும் நீரும் வற்றிப் போகும் போது தாஹமும் உண்டாகிறது. இந்த இச்சைகளே பசி, தாஹம் என்றழைக்கப்படுகின்றன. இவை மனம் ஸம்பந்தப்பட்டவைகளேயாதலால் மனோதர்மங்களே. ஆயினும் உடலின் தாதுப்பொருள்கள் அழிவதாலுண்டாவதால் தேஹதர்மங்கள் (பண்புகள்) எனவும் கூறுவர். இந்த தர்மங்கள் எனக்கு எப்போதுமே கிடையாது. அடுத்ததாக மனத்தெளிவும், த்ருப்தியும் சித்தத்தைப் பொறுத்தது. அதைத்தான் கேட்க வேண்டும். அவைகளுடனும் ஆத்மா ஸம்பந்தப்படுவதில்லை. மேலும் எங்கிருக்கிறீர், எங்கிருந்து வருகிறீர், எங்கு செல்கிறீர் என்று கேட்டீர்கள். இவை ஸம்பந்தமாக சிலதைக் கூறுகிறேன் கேளும்.
ஆத்மா எங்குமிருக்கிறது. எதிலும் ஒட்டாதது. அதற்கு இந்த கேள்விகள் பொருந்துமா என்று நினைத்துப் பாருங்கள். எனவே நான் செல்கிறேன், நீ செல்கிறாய் என்பவை அர்த்தமற்றவை. இப்படியிருக்க ஆத்மாவிற்கு ஏது உயர்ந்த உணவு என்று யோசிக்க வேண்டாம். உங்களைப் பரிக்ஷிக்கவே அதைக் கேட்டேன் நான். இந்த ஆத்மாவிற்கு உயர்ந்த உணவில் விருப்பும், அற்ப உணவுகளில் வெறுப்பும் இயற்கையில் உண்டானதா (ஸ்வபாவிகங்கள்) அல்லது காரணத்தால் உண்டானதா (ஔபாதிகங்கள்) என்பதில் உங்கள் கருத்தையறிந்து கொள்ளவே அப்படிக் கேட்டேன். மற்றபடி ஆத்மாவிற்கு அதெல்லாமும் இல்லை. உணவுப்பண்டங்களில் ருசியும், ருசியில்லாமையும் உடல் நிலைக்குத் தகுந்தாற்போல் தோன்றும். பசி இருந்தால் எதுவும் தாழ்ந்தவைகளும் ருசியே. பசியில்லாதவனுக்கு உயர்ந்தவைகளும் வேண்டாதவையே. ஆக எதுவும் எப்போதும் ஒருவனுக்கு ருசிகரமாகவே இருந்ததில்லை.
இன்னும் கேளும். மண்ணால் ஆன வீடு, மண்ணைக் கொண்டு மொழுக, மொழுக உறுதியாகும். அப்படியே ப்ருத்வீ மயமான இந்த உடலும் உறுதிப்பட யவம், கோதுமை, பயறு, நெய், எண்ணெய், பால், தயிர், வெல்லம், கனி என ப்ருத்வியைச் சார்ந்த பொருள்களை சாப்பிட வேண்டியிருக்கிறது. இந்தப் பொருட்களின் ஸூக்ஷ்ம அம்சங்கள் உடலை வளர்த்து, ஸ்தூல அம்சங்கள் மல, மூத்ரங்கள் என வெளியாகி விடுகின்றன. அந்த ஸூக்ஷ்ம அம்சங்களே தாதுக்களாக மாறி வளர்கின்றன. எனவே தாழ்ந்த, உயர்ந்த உணவுகள் என்ற பாகுபாடுகள் காரணம் பற்றியே (ஔபாதிகங்கள்) என்றே அறிய வேண்டும். இவைகளை எல்லாம் அறிந்து, தெளிந்த பின் இவைகளை இப்படி உயர்ந்தது, தாழ்ந்தது, தேவன், மனுஷ்யன் என்றெல்லாம் வேறுபடுத்திப் பார்க்கும் மனதை வேற்றுமைகளிலிருந்து விலக்கி, இவையெல்லாம் கர்மாவால் வந்தவை. ஆத்மாவிற்கு வேற்றுமை கிடையாது என்ற ஞானத்தை உண்டாக்க வேண்டும். அந்த ஸமத்வ ஞானமே முக்திக்குக் காரணம். இனி இவ்வாறு வேற்றுமைகளை எண்ணாதீர்கள் என்றார் ருபு.
நிதாகர் அவரைப் பணிந்து “ஸ்வாமி, மஹரிஷி, அஞ்ஞானம் அகன்றது. ஆனால் மீண்டும் கேட்கிறேன். தாங்கள் யார். என்ன காரணமாக இங்கு வந்தீர்கள்” என்று கேட்டுக்கொண்டார். ருபு நிதாகரே! நானே உன் ஆசார்யன் ருபு. ஜீவாத்மாக்களில் பேதமில்லை என்பதை உணர்த்தவே இங்கு வந்தேன். அதை முடித்து விட்டேன். செல்கிறேன். சுருக்கமாக எந்த வேற்றுமைகளுமில்லாத இந்த ஜீவாத்மாக்களும், உலகும் வாஸுதேவனின் உடலே” என்றார்.
இதன் பின் ருபு தன் வழி சென்றார். ஜீவாத்மாக்கள் பல. ஆனால் தத்வத்தால் வேறுபாடுகளில்லாதது. அவைகள் அனைத்தும் ஜகத்துடன் சேர்ந்து பரமாத்மாவின் உடலே என்கிறார் பராசரர்.
02_16. இப்படிக்கூறிச் சென்ற ருபு மஹரிஷி மீண்டும் ஆயிரமாண்டுகள் சென்றபின் மீண்டும் அதே அத்வைத ஞானத்தையே சிஷ்யனுக்கு உபதேஸிக்க விரும்பி மீண்டும் நகரத்திற்கு வந்தார். இது ஒரு முறைச் செய்த உபதேஸத்தால் நிலைப்பதில்லை. எனவேதான் மீண்டும் வருகிறார். அரசன் அப்போது தன் பெரிய பரிவாரங்களோடு பட்டண ப்ரவேசம் செய்து கொண்டிருந்தான். அப்போது தான் காட்டிலிருந்து ஸமித், தர்ப்பை முதலானவைகளைச் சேகரித்துக் கொண்டு வந்திருந்த நிதாகர் பசி மயக்கத்துடனும், இந்தக் கூட்டத்தில் சென்றால் தீண்டல் உண்டாகும் என்று நினைத்தும் ஜனங்களில்லாத இடத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் வந்து அவரைச் சந்தித்து, வணங்கி ருபு “ஏன் இங்கு ஒதுங்கி நிற்கிறீர்கள், என்ன காரணம்” என்றார்.
நிதாகர் அவரிடம் “அந்தணரே! அரசன் பட்டண ப்ரவேசம் செய்கிறான். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைக் காண்கிறீர் அல்லவா. அதனால் தான் ஒதுங்கி இருக்கிறேன்” என்றார். ஆரம்பித்தார் ருபு, “இந்தக் கூட்டத்தில் அரசன் யார், மற்ற மக்கள் யார். நீர் இந்த வேற்றுமைகளையறிந்திருப்பதாலுங்களைக் கேட்கிறேன்” என்றார். நிதாகர் அவரைப் பார்த்து “இதை நீங்கள் அறியவில்லையா. இதோ மலைச்சிகரம் போலிருக்கும் இந்த யானையில் வீற்றிருக்கிறானே, அவனே அரசன். அவனைச் சூழ்ந்திருக்கும் இவர்கள் சாதாரண மக்கள்” என்றார். ருபு மீண்டும் ஒன்றுமறியாதது போல “இரண்டு பொருள்களைச் சுட்டிக் காண்பித்து ஒன்றை யானை என்றும், இன்னொன்றை அரசனென்றும் கூறுகிறீர்கள். இவற்றில் எது யானை, எது அரசன் என்று எனக்குப் புரியும்படி வேறுபடுத்திக் கூறுங்களேன். எனக்கு ஒரு வேற்றுமையும் புரியவில்லை” என்றார்.
நிதாகர் இப்போதும், “ஐயா! கீழேயிருப்பது யானை, மேலேயிருப்பவன் அரசன். வாஹனமாயிருப்பது யானை. வஹிக்கப்படுகிறவனரசன். இது உமக்கு ஏன் புரியவில்லை. இதையறியாதார் ஒருவரும் இருக்க மாட்டார்களே” என்றார். ருபு “கீழ், மேல் என்றால் என்ன. அதை விளக்கும்” என்றார். வந்ததே கோபம் நிதாகருக்கு. ஜம்மென்று ருபுவின் தோள்களில் தாவி ஏறிக்கொண்டார் நிதாகர்!! கஜவாஹனன் அரசன். அவனைப்போல் நானிப்போது முனிவாஹனன். அரசன் யானை மீதிருப்பது போல், நானிப்போது உங்கள் மேலிருக்கிறேன். அங்கு கீழேயிருப்பது யானை, இங்கு நீர். மேலேயிருப்பது அங்கு அரசன். இங்கு நான். நானும், அரசனுமிருக்குமிடம் மேல், நீங்களும், அந்த யானையும் இருக்குமிடம் கீழ். புரிகிறதா இப்போது.
என்னை மன்னித்து விடுங்கள், எனக்கு இதை இதற்கு மேல் விளக்க வேறு வழி தோன்றவில்லை. ப்ரஹ்மஞானியான தங்களுக்கு அபசாரம் செய்து விட்டேன். மன்னியுங்கள்” என்று இறங்கிக் கொண்டார். ருபுவா? ம்ஹூம். இன்னும் குழப்பி விட்டீர்கள் இப்போது. நான் அரசன் போல, நீங்கள் யானை போல என்றீர்கள். முதலில் நான், நீ என்பவைகளை விளக்குங்கள். பின்பல்லவா அதை வைத்து அரசனையும், யானையும் புரிந்து கொள்ள முடியும். எனவே எனக்கும். உமக்குமுள்ள வேற்றுமைகளை விளக்கும்” என்று நிதானமாகக் கேட்டார் நிதாகரை. இந்தக் கேள்வியைக் கேட்டதும் தான் வந்திருப்பவரைப் புரிந்து கொண்டார் நிதாகர். கண்கூடாகத் தெரியும் இந்த வேற்றுமை உடலைப் பற்றியது. இதை எவரும் அறிவர். ஆனால் அனைத்தையும் ஆத்மாவின் ஞானாகாரங்களாகப் பார்க்கும் ஒருவருக்கு தனக்கும், மற்றவருக்குமுள்ள வேற்றுமையே தெரியாது. அப்படிப் பண்பட்ட அத்வைத ஞானம் பெற்ற இவர் நம் ஆசார்யர் ருபுவாகத்தானிருக்க வேண்டும்.
“உத்தமரே! நீங்கள் என் ஆசார்யர் ருபுவாகத் தானிருக்க வேண்டும். மற்ற ஒருவருக்கு இப்படி நிலைத்த அத்வைத ஞானம் கிடையாது. என்னை அனுக்ரஹிக்க தாங்கள் தான் இங்கு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறி ருபுவின் பாதங்களில் விழுந்தார். ருபுவும் அதை ஆமோதித்து ஆமாம், முன்பு நீ செய்த பணிவிடையால் மகிழ்ந்தே மீண்டும் உனக்கு ஆத்ம அத்வைதத்தை உபதேஸிக்க இங்கு வந்தேன். இந்த அத்வைதமே பரமார்த்த ஸாரம். இதை நீ உணர வேண்டும் என்று கூறிச் சென்றார். நிதாகரும் இந்த போதனைகளால் நிலைத்த ஆத்மாத்வைதி ஆனார். எல்லா ஆத்மாக்களையும் தன்னைப் போலவே நினைத்தார். இப்படி பரப்ரஹ்மத்தைத் த்யானித்து முக்தியை அடைந்தார்.
இப்படி மேற்கண்ட ருபு, நிதாகர் கதையை ஸௌவீர தேசத்தரசனுக்குக் கூறி ஜடபரதர், “அரசரே, நீங்களும் நிதாகரைப் போல எந்த வேற்றுமைகளுமின்றி அனைத்து ஆத்மாக்களையும் அறிய வேண்டும். கர்மாக்களின் காரணமாகவே இப்படி பல வேறுபட்ட சரீரங்களில் ஆத்மாக்கள் இருக்கின்றன. முடிவாக இந்த உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் மஹாவிஷ்ணுவின் சரீரங்களே. இவையாவும் அழியக்கூடியவை (ச்யுதங்கள்), அவனொருவனே அழிவற்றவன் (அச்யுதன்). அவனே உயர்ந்தவன். நான், நீ என மற்ற அனைத்துமே அவன் சரீரமே. ஆகையால் பேதத்தை விட்டு, அத்வைதத்தைக் கைக்கொள்ளுங்கள்” என்றார். கபிலரிடம் உபதேசம் பெற எண்ணிய அரசனும், பேத ஞானத்தை விட்டு, பரமார்த்த ஞானம் கொண்டான்.
இந்த ப்ராஹ்மண பிறப்பிலேயே பரதரும் மோக்ஷம் பெற்றார். இந்த பரதரின் சரித்ரத்தை பக்தியுடன் சொல்பவர், கேட்பவர் அனைவரும் மோஹமின்றி ஆத்ம தத்வத்தை அறிவர். மோக்ஷ ஸாம்ராஜ்யத்தையும் அடைவார் என மைத்ரேயருக்குக் கூறி முடித்தார் பராசரர்.
——————————————————————
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மைத்ரேய முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பராசர முனிவர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply