ஸ்ரீ விஷ்ணு புராணம் -மூன்றாம் அம்சம்-ஸ்ரீ சீதாராம ஸ்வாமிகள் தொகுத்தவை–

03_01. “ஆசார்யரே! தாங்கள் பூமி, கடல், ஸூர்யன் முதலியவற்றின் அமைப்பையும், தேவ, ருஷி, நான்கு வர்ணங்கள், த்ருவ சரித்ரம் இவைகளையும் விவரமாகச் சொன்னீர்கள். இதைப்போலவே மன்வந்த்ரங்கள், அவற்றின் அதிகாரிகள், தேவர்கள் இவர்களைப் பற்றிக் கூற வேண்டும்” என்று மைத்ரேயர் கேட்கிறார். ஆயிரம் சதுர்யுகங்களைக் கொண்ட ப்ரஹ்மாவின் பகல் பொழுதை பதினான்கு மன்வந்த்ரங்களாகப் பிரித்தால் எழுபத்தொரு சதுர்யுகங்களும், இன்னும் கொஞ்ச காலமும் கிடைக்கும். இதுவரை ஸ்வாயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்தம, தாமஸ, ரைவத, சாக்ஷுஷ என ஆறு மன்வந்த்ரங்கள் முடிந்துள்ளன. இப்போது ஸூர்ய புத்ரனான வைவஸ்வதனின் மன்வந்த்ரம் நடந்து கொண்டிருக்கிறது.

கல்பத்தின் ஆதியிலிருந்த ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் விச்வபுக் என்பவன் இந்த்ரன். ப்ரியவ்ரதன், உத்தான பாதன் முதலானோர் ஸ்வாயம்புவனின் புத்ரர்கள். யாமர் முதலான பன்னிருவர் தேவர்கள். மரீசி முதலானோர் ரிஷிகள். இவையெல்லாம் முதல் அம்சத்தில் கூறப்பட்டுள்ளது. இரண்டாவதான ஸ்வாரோசிஷத்தில் விபஸ்சித் என்பவன் இந்த்ரன். பாராவாரர், துஷிதர் என்று பன்னிரு தேவதைகள். ஸப்தரிஷிகள் ஊர்ஜஸ்தம்பன், ப்ராணன், தத்தன், அக்னி, ரிஷபன், நிஸ்வரன், சார்வரீவான் என்பவர்கள். சைத்ரன், கிம்புருஷன் முதலானோர் மனுவின் புதல்வர்கள். மூன்றாவதான் உத்தமனுக்கு அஜன், பரசுதிவ்யன் முதலானோர் புத்ரர்கள். ஸுசாந்தி இந்த்ரன். ஸுதாமாக்கள், ஸத்யர்கள், சிவர்கள், ப்ரதர்தனர்கள், வசவர்த்திகள் என்று பன்னிருவர் அடங்கிய ஐந்து கணங்கள். ஊர்ஜைக்கும், வஸிஷ்டருக்கும் பிறந்த ரஜஸ், காத்ரன், ஊர்த்வபாஹு, ஸவனன், அனகன், ஸுதபஸ், சுக்ரன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

நான்காவது மனுவான தாமஸனுக்கு ராஜாக்களான நரன், க்யாதி, தேது, ரூபன், ஜானு, ஜங்கன் முதலானோர் பிள்ளைகள். இந்த மன்வந்த்ரத்தில் சிபி சக்ரவர்த்தி நூறு அச்வமேதங்களைச் செய்து இந்த்ரனானான். இருபத்தேழு பேர் கொண்ட ஹரிகள், ஸத்யர்கள், ஸுதீக்கள் என்ற கணங்கள். ஜ்யோதிர்தாமா, ப்ருது, காவ்யன், சைத்ரன், அக்னி, தனகன், பீவரன் என்ற எழுவர் ஸப்தரிஷிகள். பலபந்து, ஸுஸம்பாவ்யன், ஸத்யகன் முதலான புதல்வர்களைப் பெற்ற ரைவதன் ஐந்தாவது மனு. இவனின் மன்வந்த்ரத்தில் விபு என்பவன் இந்த்ரன். பதினான்கு பேர்களைக் கொண்ட அமிதாபர்கள், பூதநயர்கள், வைகுண்டர்கள், ஸுஸமேதஸ்ஸுக்கள் என்ற தேவ கணங்கள். ஹிரண்யரோமன், வேதஸ்ரீ, ஊர்த்வபாஹு, அபரன், வேதபாஹு, ஸுதாமா, பர்ஜன்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

இந்த ஐந்து மனுக்களில் ஸ்வாயம்புவன், உத்தமன், தாமஸன், ரைவதன் ஆகியோர் ப்ரியவ்ரதனின் தவத்தாலும், மஹாவிஷ்ணுவின் அருளாலும் அவன் வம்சத்தில் பிறந்தவர்களே. இனி ஆறாவது மன்வந்த்ரம். ஊரு, பூரு, சதத்யும்னன் முதலான பிள்ளைகளைப் பெற்ற சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் மனோஜவன் என்பவன் தேவேந்த்ரன். எட்டு பேர்களைக் கொண்ட ஆப்யர், ப்ரஸூதர், பவ்யர், ப்ருதுகர், லேகர் என்ற ஐந்து கணங்கள். ஸுமேதஸ், விரஜஸ், ஹவிஷ்மான், உத்தமன், மது, அதிநாமா, ஸஹிஷ்ணு ஆகியோர் ஸப்தரிஷிகள்.

விவஸ்வான் எனும் ஸூர்யனின் புதல்வனான ச்ராத்த தேவனே இப்போது நடந்து கொண்டிருக்கும் ஏழாவது மன்வந்த்ரத்திற்கு அதிபதி. இக்ஷ்வாகு, ந்ருகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாகன், அரிஷ்டன், க்ருஷன், வ்ருஷத்ரன் ஆகிய ஒன்பது பேர் இவனின் புதல்வர்கள். ஆதித்யர்கள், வஸுக்கள், ருத்ரர்கள் முதலானோர் தேவர்கள். புரந்தரன் தேவேந்த்ரன். வஸிஷ்டர், காச்யபர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், விச்வாமித்ரர், பரத்வாஜர் ஆகியோர் ஸப்தரிஷிகள். முதலாவது ஸ்வாயம்புவ மன்வந்த்ரத்தில் ருசி என்பவரிடம், ஆகூதியினிடம் விஷ்ணு மானஸ புத்ரனாய் யக்ஞம் என்ற பெயரில் பிறந்து மனு முதலான அனைவரையும் காத்தார். அவரே இரண்டாவது ஸ்வாரோசிஷ மன்வந்த்ரத்தில் துஷிதை என்பவளிடம் அஜிதன் என்ற பெயருடன் துஷிதர் என்ற தேவர்களுடன் பிறந்தார்.

மூன்றாவதான உத்தம மன்வந்த்ரத்தில் ஸத்யையிடம் ஸத்யன் என்ற பெயருடன் ஸத்யர்கள் என்ற தேவர்களுடன் பிறந்தார். தாமஸ மன்வந்த்ரத்தில் ஹர்யையிடம் ஹரி என்ற பெயருடன் ஹரி என்ற தேவர்களுடனும், ரைவதத்தில் ஸம்பூதி என்பவளிடம் மானஸபுத்ரனாய் தேவவரன் எனும் பெயருடன் மானஸர் என்ற தேவர்களுடனும், சாக்ஷுஷ மன்வந்த்ரத்தில் விகுண்டையிடம் வைகுண்டன் என்ற பெயருடன் வைகுண்டர் என்ற தேவர்களுடனும் பிறந்தார். இவரே இந்த ஏழாவது வைவஸ்வத மன்வந்த்ரத்தில் காச்யப ப்ரஜாபதிக்கு அதிதியினிடம் வாமனனாய் அவதரித்தார். மஹாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, அவனை வென்று, அனுக்ரஹித்தார். எங்கும் வ்யாபித்திருக்கும் விஷ்ணு சக்தியே தேவதைகளாக, மனுக்களாக, ஸப்தரிஷிகளாக, மனு புத்ரர்களாக, தேவராஜனாக அனுக்ரஹிக்கிறது. இவர்களனைவரும் விஷ்ணுவின் சொத்துக்கள் போன்றவர்.

03_02. மேல்வரும் மன்வந்த்ரங்களின் வரலாறு. ஸூர்யனுக்கும், விச்வகர்மாவின் புதல்வி ஸம்ஞ்ஞா என்பவளுக்கும் பிறந்தவர்களே ச்ராத்ததேவன் (தற்போதைய மனு), யமன், யமுனா நதி ஆகியோர். ஒரு சமயம் கணவனின் தேஜஸ்ஸைத் தாங்க முடியாத இவள் அவனுக்கு பயந்தும், அவனுக்குப் பணிவிடை செய்யவும் தன் நிழலைப் போன்ற சாயா என்பவளைப் படைத்து விட்டுக் கானகம் சென்று தவமியற்றத் தொடங்கி விட்டாள். சாயாவிற்கும், ஸூர்யனுக்கும் சனி பகவானும், இன்னொரு மனுவும், தபதி என்ற பெண்ணும் தோன்றினர்.

ஒரு சமயம் யமன் விளையாட்டாகத் தன் தாயென நினைத்து சாயாவை உதைக்க முற்பட்டான். அவள் கோபித்து உன் கால் அறுந்து விழ வேண்டும் என சபித்து விட்டாள். இதைக் கேட்டதும் ஸூர்யனும், யமனும் ஸந்தேஹமடைந்தார்கள். ஸூர்யன் நீ யமனுடைய உண்மைத் தாயில்லை. வேறொருத்தி. நீ யார் என்பதைச் சொல் என்ற கேட்க, சாயா அனைத்தையும் கூறிவிட்டாள். உடனே தன் யோகத்தால் உண்மையான ஸம்ஞ்ஞா உத்தர குரு க்ஷேத்ரத்தில் குதிரையுருவில் தவம் செய்வதையறிந்த ஸூர்யன் தானும் தன் தேஜஸ்ஸைக் குறைத்து ஆண் குதிரை வடிவில் அவளைத் தேடிச் சென்று சேர்ந்தான். அச்வினீ தேவர்களைப் பெற்றான். ரேதஸ்ஸின் கடைசிப் பகுதியினால் ரேவந்தன் என்பவனையும் பெற்றான். மீண்டும் ஸம்ஞ்ஞாவைத் தன்னிடம் அழைத்துச் சென்றான்.

தன் பெண் ஸம்ஞ்ஞா ஸூர்யனின் தேஜஸ்ஸைப் பொறுக்க முடியாமல் அவதிப்படுவதையறிந்த விச்வகர்மா கோபம் கொண்டு ஸூர்யனின் தேஜஸ்ஸைக் குறைக்க, அவனைப் (ஸூர்ய மண்டலத்தை)பிடித்து சாணையில் தேய்த்தான். அப்போது ஸூர்யனின் தேஜஸ்ஸில் எட்டில் ஒரு பங்கு பூமியில் மிகுந்த ஒளியுடன் தெறித்து விழுந்தது. அதைக் கொண்டு சக்ராயுதம் செய்து விஷ்ணுவிற்குக் கொடுத்தான் விச்வகர்மா. சிவனுக்கும் த்ரிசூலம் செய்து கொடுத்தான். குபேரனுக்குப் புஷ்பக விமானத்தையும், முருகனுக்கு வேலையும், மற்ற தேவர்களுக்கும் இப்படி ஆயுதங்களையும் செய்து கொடுத்தான்.

இப்படி ஸூர்யனுக்கும், சாயாதேவிக்கும் பிறந்தவனே எட்டாவது மன்வந்த்ரத்தின் அதிபதியான ஸாவர்ணி மனு. இவன் ச்ராத்த தேவனை ஒத்திருந்ததால் ஸாவர்ணி என்றழைக்கப்பட்டான். இந்த எட்டாவதான ஸாவர்ணிக மன்வந்த்ரத்தில் பாதாள லோகத்தில் வஸித்துவரும் மஹாபலி இந்த்ரன். விரஜஸ், சார்வரீவான், நிர்மோகன் முதலானோர் ஸாவர்ணிக்கு மகன்களாகி அரசாள்வர். இருபது பேர் உடைய ஸுதபர், அமிதாபர், முக்யர் என்பன தேவ கணங்கள். தீப்திமான், காலவர், ராமன், க்ருபர், அச்வத்தாமா, என் குமாரன் (வ்யாஸர்), ரிஷ்யச்ருங்கர் ஆகியோர் ஸப்தரிஷிகள். ஒன்பதாவதான தக்ஷஸாவர்ணி மனுவின் புதல்வர்கள் பஞ்சஹஸ்தன், நிராமயன், ப்ருதுச்ரவன் முதலானோர். அத்புதன் இந்த்ரன். பன்னிரண்டு பேர் கொண்ட வாரர், மரீசிகர்ப்பர், ஸுதர்மாக்கள் ஆகியோர் தேவ கணங்கள். ஸவனன், த்யுதிமான், ஹவ்யன், வஸு, மேதாதிதி, ஜ்யோதிஷ்மான், ஸத்யன் ஆகியோர் ஸப்தரிஷிகள்.

ஸுக்ஷேத்ரன், உத்தமௌஜஸ், பூரிஷேணன் முதலான பத்து அரசர்களைப் பிள்ளைகளைப் பெறும் ப்ரஹ்மஸாவர்ணி பத்தாவது மனு. அப்போது ஸுதாமாக்கள், வீருதர்கள் என்ற நூறு பேர் கொண்ட தேவ கணத்திற்கு சாந்தி என்பவன் இந்த்ரன். ஹவிஷ்மான், ஸுக்ருதன், ஸத்யன், தபோமூர்த்தி, நாபாகன், ப்ரதிமௌஜஸ், ஸத்யகேது ஆகியோர் ஸப்தரிஷிகள். அடுத்ததான பதினோறாவது மன்வந்த்ரத்திற்கு தர்மஸாவர்ணிகர் மனு. ஸர்வத்ரகன், ஸ்வதர்மா, தேவாநீகன் முதலான அரசர்கள் அவனுடைய பிள்ளைகள். காமகமர், நிர்வாணர், ருசிகள் என்ற முப்பது பேர் கொண்ட தேவ கணங்களுக்கு வ்ருஷா என்பவன் இந்த்ரன். நிச்சரன், அக்னிதேஜஸ், வபுஷ்மான், க்ருணி, ஆருணி, ஹவிஷ்மான், அனகன் ஸப்தரிஷிகள்.

ருத்ரபுத்ரன் ருத்ரஸாவர்ணி அடுத்ததான பன்னிரண்டாவது மன்வந்த்ரத்தில் மனு. தேவவான், உபதேவன், தேவச்ரேஷ்டன் முதலானோர் இவன் புதல்வர்கள். ருதுதாமா இந்த்ரன். ஹரிதர், ரோஹிதர், ஸுமனஸ்ஸுக்கள், ஸுகர்மர், ஸுராபர் என்ற பத்து பேர்களைக் கொண்ட தேவ கணங்கள். தபஸ்வீ, ஸுதபஸ், தபோமூர்த்தி, தபோரதி, தபோத்ருதி, தபோத்யுதி, தபோதனன் என்பவர் ஸப்தரிஷிகள். ரௌச்யன் பதிமூன்றாவது மன்வந்த்ரத்தில் மனு. ஸுத்ராமர், ஸுதர்மர், ஸுகர்மர் என்று முப்பத்து மூன்று பேரைக் கொண்ட தேவ கணங்கள். திவஸ்பதி இந்த்ரன். நிர்மோகன், தத்வதர்சி, நிஷ்ப்ரகம்ப்யன், ந்ருத்ஸுகன், த்ருதிமான், அவ்யயன், ஸுதபஸ் ஸப்தரிஷிகள். சித்ரஸேனன், விசித்ரன் முதலானோர் மனுவின் பிள்ளைகள்.

பதினான்காவதான பௌம மனுவிற்கு உரு, கம்பீரபுத்தி முதலானோர் புத்ரர்கள். அப்போது சுசி என்பவன் சாக்ஷுஷர், பவித்ரர், கனிஷ்டர், ப்ராஜிதர், வாசாவ்ருத்தர் என்ற ஐந்து தேவ கணங்களுக்கு இந்த்ரன். அக்னிபாஹு, சுசி, சுக்ரன், மாகதன், ஆக்னீத்ரன், யுக்தன், ததாஜிதன் ஆகியோர் ஸப்தரிஷிகள். இப்படி பதினான்கு மன்வந்த்ரங்களின் அதிகாரிகளும் அந்தந்த மன்வந்த்ரங்களில் ஒரே ஸமயத்தில் அதிகாரங்களைப் பெற்று, அதிகாரங்களை இழக்கவும் செய்கின்றனர். இந்த பதினான்கு மன்வந்த்ரங்களும் ப்ரஹ்மாவின் பகல் பொழுது.

நான்கு யுகங்களின் முடிவில் வேதம் அத்யயனம் இன்றி அழிகின்றது. அப்போது ஸப்தரிஷிகள் ஸ்வர்கத்திலிருந்து அவதரித்து மீண்டும் அவைகளை அத்யயனம் பண்ணும்படி செய்கின்றனர். மனுக்கள் ஒவ்வொரு யுகத்தின் போது ஸ்வாயம்புவர், தக்ஷர் முதலானோர் செய்த ஸ்ம்ருதிகளைச் செய்கின்றனர். தேவர்கள் மன்வந்த்ர இறுதி வரை யாக, ஹோமங்களில் கிடைக்கும் ஹவிர்பாகங்களைப் பெற்று வாழ்கிறார்கள். மனுவின் புத்ரர்களும், அவர்களின் வம்சங்களும் அரசாள்கிறார்கள். இப்படிப் பதினான்கு மன்வந்த்ரங்கள் (ஆயிரம் யுகங்கள்) கொண்ட ஒரு கல்பமும், அடுத்த இரவுப் பொழுதான மற்றொரு கல்பமும் கழிந்ததும் விஷ்ணு உலகை தன்னுதரத்துள் விழுங்கி, பாம்பின் மேல் ப்ரளய வெள்ளத்தில் யோக நித்ரை புரிகிறார். பின் மீண்டும் ஸ்ருஷ்டியை, ஸ்திதியையும் செய்கிறான்.

க்ருத யுகத்தில் அவரே கபிலர் முதலான முனிவர்களின் உருவில் ஞானோபதேசம் செய்கிறார். த்ரேதா யுகத்தில் சக்ரவர்த்திகளாக அவதரித்து துஷ்டர்களை சிக்ஷித்தும், சிஷ்டர்களை ரக்ஷித்தும் அருள்கிறார். த்வாபரத்தில் வேதவ்யாஸராய் அவதரித்து ஒன்றான வேதத்தை ரிக், யஜுர், ஸாம, அதர்வணம் முதலான பல பிரிவுகளாகப் பிரித்து உலகைக் காக்கிறார். கலியின் இறுதியில் கல்கியாக அவதரித்து வேதங்களையும், வேத தர்மங்களையும் மீறும் துஷ்டர்களை நல்வழிப்படுத்துகிறான்.

03_03. மைத்ரேயர் “மஹரிஷி! இப்படி அனைத்திற்கும் ஆத்மாவாகவும், படைத்தும், காத்தும், தன்னிடத்திலேயே லயமடையச் செய்வது உயர்ந்த விஷ்ணு பகவானே, அவனைத் தவிர வேறெதும் இல்லை என்பதை அறிந்தேன். இதுவரை யார், யார் வ்யாஸர் என்பதையும், வேதங்களின் உட்பிரிவுகளையும் அருள வேண்டும் இனி” என்கிறார். “வேதத்தை வகுத்தல் (வேத வ்யாஸம்) என்ற பதவிப் பெயரே வ்யாஸர் என்பது. வேதம் அனேகமாயிரம் கிளைகளைக் கொண்ட ஒரு பெரிய மரம். அதை விரிவாகக் கூறுவது முடியாததொன்று. எனவே சுருக்கமாய்க் கூறுகிறேன். மிகப் பரந்திருக்கும் ஒரே வேதத்தைப் படித்து, மனதில் தக்க வைத்துக் கொள்ள வேண்டியவர்களின் உற்சாகமும், தவமும், ஆற்றலும், வாழ்நாளும் மிகவும் குறைவு. இவர்களுக்கு நன்மை செய்யவே ஒவ்வொரு த்வாபர யுகத்திலும் வ்யாஸரூபமாய் அவதரித்து ஒன்றான வேதத்தைப் பலவாகப் பிரிக்கிறான் பரமன்.

இந்த வைவஸ்வத மன்வந்த்ரத்தில் இருபத்தெட்டு த்வாபர யுகங்களிலும் ஒவ்வொரு முறை வேதம் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் த்வாபர யுகத்தில் ஸ்வயம்பூவான ப்ரஹ்மாவே வேதவ்யாஸராயிருந்தார். அதற்கு மேல் மனுவும், சுக்ராச்சார்யார், ப்ருஹஸ்பதி, ஸூர்யன், யமன், தேவேந்த்ரன், வஸிஷ்டர், ஸாரஸ்வதர், த்ருதாமா, த்ரிவ்ருஷா, பரத்வாஜர், அந்தரிக்ஷர், தர்மீ, த்ரையாருணி, தனஞ்ஜயன், க்ருதஞ்ஜயன், ஸஞ்ஜயன், பரத்வாஜர், கௌதமர், உத்தமர்(ஹர்யாத்மா), வேனன்(வாஜிச்ரவஸ்), ஸோமசுஷ்மாயணர்(த்ருணபிந்து), ப்ருகு வம்சத்து ருக்ஷர்(வால்மீகி), இருபத்தைந்தாவது த்வாபர யுகத்தில் என் பிதா(சக்தி), இருபத்தாறில் நான்(பராசரர்), இருபத்தேழில் ஜாதுகர்ணன், இந்த இருபத்தெட்டாவது த்வாபரத்தில் என் மகன் க்ருஷ்ண த்வைபாயனன் வேத வ்யாஸன். இனி வரப்போவது த்ரோணாசார்யாரின் குமாரன் அச்வத்தாமா. இவர்களே வேதத்தை நான்காகப் பிரித்தது.

ஓம் எனும் ப்ரணவம் நிலையானது, ஏகாக்ஷர ஸ்வரூபம். வேதம் பிரிந்தாலும் இது பிரியாதது. பூ:,புவ:, ஸுவ: என்ற மூன்று வ்யாஹ்ருதிகளும், ரிக், யஜுர், ஸாம, அதர்வ என்ற நான்கு வேதங்களும் இதிலேயே நிலைபெற்றிருப்பதால் இதுவே ப்ரஹ்மம். இதுவே ஜகத்காரணமாக வைத்து வணங்கத்தக்கது. ஜகத்தின் உற்பத்திக்கும், லயத்திற்கும் காரணமாகவும், மஹத் தத்வத்திற்கு மேம்பட்டதாகவும், அதைவிட ஸூக்ஷ்மமாகவும், ப்ரதானமாகவும் இருப்பது இது. இது அனாதி, எங்கும் நிறைந்தது, அழிவற்றது, உலகை மயக்கும் தமோ குணத்துக்கு இருப்பிடமானதிது. ஸத்வ குணத்தின் ப்ரகாசமானதிது. ரஜோ குணத்தால் புருஷார்த்தங்களையும் தருவதிது. மோக்ஷ ஸாதனம் இது. பரமாத்ம ஸ்வரூபத்தைக் காட்டுவதால் உபநிஷத்துகளில் அவ்யக்தம், அக்ஷரம் என்றெல்லாம் வழங்கப்படுவதிது. சுத்தமானது, வாஸுதேவனுக்கு ஸ்வரூபமானது. ஒன்றான, பலவான வேத ஸ்வரூபங்களாக இருப்பவனும் அவனே. ஸகல ஆத்மாக்களுக்கும் அந்தர்யாமி அவன்” என வேதத்தின், ப்ரணவத்தின் பெருமையைக் கூறி அதை வணங்குகிறார் பராசரர்.

03_04. ஆதியில் ப்ரஹ்மாவினால் அத்யயனம் செய்யப்பட்ட வேதம் நான்கு பாதங்களுடன், அனேகமாயிரம் சாகைகளுடனிருந்தது. இந்த வேதத்தினால் தான் தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய, ப்ரஹ்ம என்ற பஞ்ச மஹா யக்ஞங்களும், அக்னி ஹோத்ரம், தர்ச பூர்ண மாஸம், சாதுர்மாஸ்யம், பசுபந்தம், ஸோமம் என்ற ஐந்து யக்ஞங்களும், த்ரவ்யம், தேசம், பலம்,காலம், ஞானம், கர்மம், காரகம், ச்ரத்தா, அவஸ்தை(நிலைமை), ஆக்ருதி, நிஷ்டை என்ற யக்ஞ அவயவங்களும் உலகத்தில் பரவின. அப்படியிருந்த வேதத்தை என் புத்ரன், மஹாத்மா க்ருஷ்ண த்வைபாயனன் எப்படிப் பிரித்தானோ அப்படியே தான் நானும், மற்றவர்களும் செய்திருந்தோம்.

என் மகன் இத்தகைய சிறப்புறக் காரணம் அவன் நாராயணனின் அம்சமாதலால்தான். நாராயணனே என் மகன் என்றறிவாயாக. நாராயணனைத் தவிர வேறொருவன் இல்லை மஹாபாரதத்தைச் செய்ய. இதிலிருந்தே அவன் நாராயணனின் அம்சம் என்பது ஐயமின்றி விளங்கும். ஒவ்வொரு வேத சாகையையும் அத்யயனம் செய்ய ஏற்றவர்களை ஆராய்ந்து நியமித்தான் பேரறிவாளனான என் புதல்வன். ரிக் வேதத்தை பைலருக்கும், யஜுர் வேதத்தை வைசம்பாயனருக்கும், ஸாமத்திற்கு ஜைமினிக்கும், அதர்வ வேதத்தை ஸுமந்துவுக்கும் பிரித்துக் கொடுத்தான். இதேபோல் இதிஹாஸ புராணங்களுக்கும். அவற்றை ப்ரசாரம் செய்பவர்களுக்கு ஆற்றல் அதிகம் வேண்டும். கேட்பவர் மனதில் நன்கு அர்த்தங்கள் பதியும்படி, நேரில் நடப்பது போல், அவர்களுக்கு மயிர் கூச்சல் ஏற்படுமாறு சொல்ல ரோமஹர்ஷணர் என்ற ஸூதரை ஏற்படுத்தினான். தேர்ந்தெடுத்த வ்யாஸனும் மஹா புத்திசாலி, மஹா முனிவர். ஸூதனும் அப்படியே மஹா புத்திசாலி, மஹா முனிவன்.

யாகத்தில் அத்வர்யு, உத்காதா, ஹோதா, ப்ரஹ்மா என்ற நால்வர் இருப்பர். இவர்களுடைய வேலைகளுக்கு சாதுர்ஹோத்ரம் என்று பெயர். இவையாவும் வேதத்தில் இருப்பதால் தான் ஒன்றாக இருந்த வேதத்தை நான்காகப் பிரித்தார். யஜுர்வேதம் அத்வர்யுவின் கார்யத்தையும், ரிக் வேதம் ஹோதாவின் கார்யத்தையும், ஸாம வேதம் உத்காதாவின் கார்யத்தையும், இந்த மூன்று வேதங்களிலும் ப்ரஹ்மாவின் கார்யத்தையும், அதர்வத்தில் அரசர்களுக்கு வேண்டிய சாந்தி, புஷ்டி, அபிசார புரோஹிதம் முதலானவைகளையும் ஏற்படுத்தினார். இப்படி நான்காகப் பிரிக்கப் பட்ட வேதமரமே பின்பு காடாக மாறியது.

ரிக் வேதத்தைப் பெற்ற பைலர் அதை இரு ஸம்ஹிதைகளாகப் பிரித்து இந்த்ரப்ரமிதிக்கு ஒன்றையும், பாஷ்கலருக்கு மற்றொன்றையும் தந்தார். பாஷ்கலர் தன்னுடையதை நான்காக்கி போதி, அக்னிமாடகர், யாக்ஞவல்க்யர், பராசரர் (இவர் வேறு) என்ற நால்வருக்களித்தார். இந்த்ரப்ரமிதி தன்னுடையதை மாண்டுகேயர் என்ற தன் புதல்வனுக்கு ஓதுவித்தார். இப்படி குரு, சிஷ்ய பரம்பரையில் வந்து கொண்டிருந்த இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை வேதமித்ரன் என்ற சாகல்யர் அத்யயனம் செய்து, பின் அதை ஐந்தாகப் பிரித்து முத்கலன், கோமுகன், வாத்ஸ்யன், சாலீயன், சைசிரன் என்ற தன் ஐந்து சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த சாகபூர்ணர் இந்த்ரப்ரமிதி ஸம்ஹிதையை மூன்றாகப் பிரித்து, வேதாங்கமான ந்ருக்தத்தையும் செய்து முறையே அவற்றை க்ரௌஞ்சன், வைதாளிகி, பலாகன், ந்ருக்தன் என்பவர்களுக்குக் கொடுத்தார். சாகல்யருடன் படித்த இன்னொருவர் பாஷ்கலி என்பவர். அவர் அதையே மூன்றாக்கி காலாயனி, கார்க்யர், ஜபன் என்ற தன் சிஷ்யர்களுக்குக் கொடுத்தார். இப்படியே ரிக் வேதம் சாகை, ப்ரதிசாகை, அனுசாகை என பலவாறு பிரிந்தது.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading