ஸ்ரீ ரோஹிணி திரு நக்ஷத்ரம் —

ஸ்ரீ ஆவணி ரோஹிணி திரு நக்ஷத்ரம் —  ஸ்ரீ கிருஷ்ணன் எம்பெருமான் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் பற்றி சொல்லி, அர்ஜுனன் கேட்டான் என்றதும் விஸ்வரூபமும் காட்டிய கிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..
“அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றி மட்டுமே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே”
என்று அர்ஜுனனை பார்த்து ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா ஆச்சர்யமாக சொல்கிறார்.
வேதை: ச ஸர்வை: அஹம் ஏவ வேத்ய: |
வேதாந்தக்ருத் வேத விதேவ சாஹம் || – பகவத்கீதை:-அத்யாயம் 15: ஸ்லோகம் 15
வேதம், “நாராயணனை” பற்றி மட்டுமா சொல்கிறது?
வேதம், ‘இந்திரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம் ‘ருத்ரனை’ பற்றியும் சொல்கிறதே?!
வேதம், ‘சகல தேவதைகளை’ பற்றியும் சொல்கிறதே?
இப்படி இருக்க,-‘வேதம் முழுவதும் என்னை பற்றி தான் சொல்கிறது’ என்று கிருஷ்ண பரமாத்மா எப்படி சொன்னார்?
வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு, பொதுவாக இப்படி ஒரு கேள்வி மனதில் எழுவது சகஜம்.
“வேதத்தை அறிந்து இருந்த அர்ஜுனனுக்கு,
சிவபெருமானையே தரிசித்து இருந்த அர்ஜுனனுக்கு,
சொர்க்க லோகம் சென்று தேவேந்திரனை பார்த்து இருந்த அர்ஜுனனுக்கு,
இது போன்ற கேள்வி மனதில் எழவில்லை”
என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்.
இப்படி ஒரு கேள்வியை, அர்ஜுனன் ‘கேட்கவே இல்லை’ என்று நாம் பார்க்கிறோம்.
வேதத்தின் வாக்கியங்களை கவனிக்கும் போது, கிருஷ்ண பரமாத்மா சொன்ன ரகசியம் நமக்கு புரியும்.
நாராயணனே ‘பரமாத்மா’ (பரம்பொருள்)-என்று பல இடங்களில் வேதம் தெளிவாக சொல்கிறது…
பரமாத்மாவாகிய ப்ரம்மத்தை, “புருஷன்” என்ற பெயரை கொண்டு “ஸ ஏக புருஷ: (அந்த ஆதிபுருஷன் ஒருவரே முதலில் இருந்தார்)” என்கிறது வேதம்.
வேதத்தில் வரும் புருஷ சூக்தத்தில், ‘நாராயணனே அந்த புருஷன்’ என்று விளக்கி, அந்த ‘புருஷனின் பத்னியாக மஹாலட்சுமி (ஹ்ரீஸ்ச தே லட்சுமீஸ்ச பத்னி) இருக்கிறாள்’ என்று பரமாத்மாவின் அடையாளத்தை இங்கு தீர்மானிக்கிறது, வேதம்..
நாராயணனே ‘பரமாத்மா’ (பர), என்று நிரூபிக்கும் வேத வாக்கியங்களாக “நாராயண பரோ ஜ்யோதி: | ஆத்மா நாராயண பர: || நாராயணம் பரம் ப்ரஹ்ம | தத்வம் நாராயண பர: || நாராயண பரோ த்யாதா | த்யானம் நாராயண பர: ||” என்று பல முறை சொல்கிறது வேதம்.
இப்படி ‘பர’ என்ற சொல்லாலும், ‘பர ப்ரஹ்ம’ என்ற சொல்லாலும், ‘புருஷ’ என்ற சொல்லாலும் நாராயணனை அழைக்கும் வேதம்,
அந்த ஆதி புருஷனே! ஆயிரக்கணக்கான தலைகளுடன் (அதாவது ரூபங்களுடன்) காட்சி தருகிறார் (ஸஹஸ்ர சீர்ஷா புருஷ:) என்கிறது வேதம்.
அதாவது, ‘அவரே பல ரூபங்களாக (இந்திர, ருத்ர, யம..) இருக்கிறார்’ என்ற ரகசியத்தை சொல்கிறது.
ஒரு இடத்தில் வேதம், “பிரம்மாவும் நாராயணனே! சிவனும் நாராயணனே! காலமும் நாராயணனே!” (பிரம்மா நாராயண: | சிவ: ச நாராயண: | கால: ச நாராயண: |) என்று தெளிவாக சொல்கிறது..
இன்னொரு இடத்தில் “ஏகோ நாராயணோ ஆஸீத் ந ப்ரம்மா ந ஈசான:” என்று சொல்லும் போது, “பிரளய காலத்தில் பிரம்மாவும் இல்லை சிவனும் இல்லை நாராயணன் ஒருவரே இருந்தார்” என்று வெளிப்படையாக நாராயணனின் பெயரை கூறுகிறது வேதம்.
“அந்த ஆதி புருஷனையே, பல வித பெயர்களில் சொல்கிறேன் (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி)”-என்று வேதமே தெளிவாக சொல்கிறது.
மேற்சொன்ன, இந்த வேத வாக்கியத்தை (ஏகம் ஸத் விப்ரா: பஹூதா வதந்தி! ) நாம் கவனிக்கும் போது,
கிருஷ்ண பரமாத்மா “அர்ஜுனா! வேதங்கள் அனைத்தும் என் ஒருவனை பற்றியே சொல்கிறது. வேதத்தால் அறிய பட வேண்டியவனும் நானே” என்று சொன்னதன் ரகசியம் புரியும்.
—————-
கிருஷ்ண நாமத்தால் ”
சோறு கிடைக்குமா?
ஒரு கிராமத்தில் வேலையில்லாத இளைஞன் ஒருவன் ஊர்சுற்றித் திரிந்தான்.
அங்குள்ள குளக்கரையில் இருந்த கிருஷ்ணன் கோயிலில், திருவிழா விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.
பக்தர்கள் கூடி ஒருநாள் முழுக்க கிருஷ்ண நாமத்தை ஜபம் செய்தார்கள்.
“கிருஷ்ணா’ என்ற இந்த வார்த்தையில் என்ன தான் இருக்கிறது என்று அவன் சிந்தித்தான்.
விடை தெரியவில்லை.
அங்கிருந்த பெரியவரிடம்,
“கிருஷ்ணா! கிருஷ்ணா!”என்று கூச்சல் போடுகிறீர்களே! அதனால் என்ன கிடைத்து விடும்?
உங்களுடைய கிருஷ்ணனால் எனக்கு சோறு போட முடியுமா?” என்று கத்தினான்.
பெரியவர் அந்த இளைஞனிடம், “கிருஷ்ண” நாமத்தைச் சொன்னால் சோறு மட்டுமல்ல,
நீ எதை வேண்டுகிறாயோ அது கிடைக்கும்,” என்றார்.
இளைஞனுக்கு கிருஷ்ண மந்திரத்தின் மீது சிறிதும் நம்பிக்கையில்லை என்றாலும்,
அந்தப் பெரியவர் சொல்கிறாரே என்பதற்காக கிருஷ்ண நாமத்தைச் சொல்ல முடிவெடுத்தான்.
ஊருக்கு அடுத்தாற் போல் இருந்த காட்டுப் பகுதிக்குச் சென்று தனியாக அமர்ந்தான்.
அவன் வாயில் “கிருஷ்ணா’ என்பதைத் தவிர வேறு வார்த்தை வரவில்லை.
ஒரு வழிப்போக்கன் மர நிழலில் அமர்ந்து, அவன் கொண்டு வந்த கட்டுச் சோற்றை சாப்பிட்டான்.
அசதியில் அங்கேயே தூங்கி விட்டான்.
இளைஞனோ கண்ணை மூடியபடி மரத்தில் அமர்ந்தே “கிருஷ்ண ”-நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் கண் விழித்துப் பார்த்தவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
இன்னொரு கட்டு சாதத்தை மரநிழலில் மறந்து வைத்து விட்டு வழிப்போக்கன் சென்று விட்டான்.
கிருஷ்ணநாம மகிமையால் தான் இந்த சாதம் தனக்கு கிடைத்தது என்று எண்ணி வேகமாக மரத்தை விட்டு கீழே இறங்கினான்.
எவனோ, வழிப்போக்கன் மறந்து விட்டுப் போன சோற்றைச் சாப்பிடுவதில் அவனுக்கு உடன் பாடில்லை.
இந்தச் சாப்பாட்டை சாப்பிடும் படி நிர்ப்பந்தம் ஏற்படும் வரை பட்டினியாகவே இருப்பது என்று முடிவெடுத்தான்.
அப்போது காட்டுப் பாதையில்
சில கள்வர்கள் தாங்கள் திருடிய பொருள்களுடன் வந்து மர நிழலில் அமர்ந்து பங்கிட்டுக் கொண்டிருந்தனர்.
கள்வர் தலைவன், ஜபம் செய்து கொண்டிருந்த இளைஞனைக் கண்டான்.
தங்களை வேவு பார்க்க வந்திருப்பவன் என்று ஆத்திரம் கொண்டு, இளைஞனை அந்த மரத்திலேயே கட்டி வைத்தான்.
அதற்குள் பசியில் இருந்த திருடன் ஒருவன், மரத்தடியில் இருந்த சாப்பாட்டைப் பார்த்து மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான்.
ஆனால், கள்வர் தலைவன், “இந்தச் சோற்றை நாம் சாப்பிடுவது கூடாது.
நம்மைக் கொல்லும் நோக்கத்தில் விஷம் கலந்து இவன் தான் வைத்திருப்பான்.
அந்தச் சோற்றை அவனுக்கே கொடுப்போம்!” என்று சொல்லி இளைஞனை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். இளைஞனும் அதை வயிறு நிறைய சாப்பிட்டான்.
இளைஞன் சாப்பிட்ட பிறகும் அவன் சாகாததைக் கண்ட திருடர்கள்,
உணவில் விஷம் இல்லை என்பதை அறிந்தனர்.
இளைஞனால் தங்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
கள்வர் தலைவன் இளைஞனைக் கட்டிலிருந்து அவிழ்த்து விட்டதோடு இல்லாமல் தன்னிடம் இருந்த பணத்தில் கொஞ்சம் கொடுத்தான்.
“நம்பிக்கையில்லாமல்” “கிருஷ்ண நாமம்” சொன்னதற்கே இவ்வளவு பலன் கிடைத்ததே’ என்று எண்ணியவன்,
“அழியாத செல்வம் – கிருஷ்ண நாமம் தான்”
என்ற முடிவுக்கு வந்தான். காட்டிலிருந்து ஊரில் இருக்கும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து, திருடன் தந்தப் பணத்தை உண்டியலில் போட்டான்.
“இனி ஊர் சுற்றமாட்டேன். உண்மையாக பக்தி கொண்டு உழைத்து வாழ்வேன்,”
என்று கிருஷ்ணனிட்டம் சத்தியம் செய்தான். உழைப்பால், பெரும் பணக்காரனும் ஆனான் ஆகவே, “அழியாத செல்வம் ஆன கிருஷ்ண நாமத்தை” சொல்லி பயனடையுங்கள்
—————
சித்திரை ரோஹிணி ஸ்ரீ அஷ்டபுஜகர பெருமாள் திருஅவதார திருநக்ஷத்திரமாகும்
ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலை நிறுத்த வரதராஜப் பெருமாள் உதவி புரிந்த போது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் காளியைப் படைத்து அவளுடன் கொடிய அரக்கர்களை அனுப்பி அதைக் கலைக்க முற்பட்டாள். திருமால் எட்டு கரங்களுடன் தோன்றி காளியை அடக்கி அரக்கர்களை அழித்தார். எனவே இறைவன் அட்டபுயக்கரத்தோன் ஆனார்.
மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் வலப்புறம் நான்கு கைகளுடனும் இடப்புறம் நான்கு கைகளுடனும் காட்சி தருகிறார். ஆதி கேசவப் பெருமாள், கஜேந்திர வரதன் என்பன இறைவனின் பெயர்கள் திருமங்கையாழ்வாரின் பாடல் பெற்ற பிறகு அட்டபுயக்கரத்தான் ஆனார்.
வலப்புறமுள்ள கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும் இடப்புறம் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தாங்கியுள்ளார்.
இத்தலத்தின் தலவரலாறு படி சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரத்தன்று பெருமாள் காளியை இவ்விடத்தே அடக்கினார். இதற்குச் சான்றாக இச்சந்நதியின் அருகே கருங்காளியம்மன் கோயில் ஒன்றுள்ளது.
கோயில் திருக்குளத்தில் யானை ஒன்று தாமரை மலர் பறித்து பெருமாளை ஆராதித்து வரும் வேளையில் ஒருநாள் குளத்தில் இருந்த முதலை யானையை பிடித்துக் கொள்ள, பெருமாள் தமது சக்ராயுதத்தால் முதலையைக் கொண்டு யானையை காத்து அருளிய ஸ்தலம்.
ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள் ஆகியோர் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 11 பாசுரங்களும், பேயாழ்வார் ஒரு பாசுரமுமாக மொத்தம் 12 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
பூமாதேவியை அழிக்க வந்த அரக்கனை இத்தல பெருமாள் அழித்து அவளை காப்பாற்றியதால், வீடுகட்ட நிலம் வாங்க இருப்பவர்கள், விளை நிலங்களை வாங்குபவர்கள், கட்டிய வீடுகளில் பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபட்டு பலனடைகிறார்கள்.
————–
கார்த்திகை ரோகிணி ஸ்ரீ திருப் பணாழ்வாரின் அவதார திருநக்ஷத்திரமாகும்.
ஸ்ரீவத்ஸாம்சராய் கலியுகம் 343-வதான துன்மதி வருஷம் கார்த்திகை மாசம் க்ருஷ்ண பக்ஷம் த்விதீயை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரின் புறத்தில் செந்நெல் பயிரில் அயோநிஜராய் அவதரித்து ஓர் பாணனால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றின்றி கண்ணனையே கண்டுரைத்த கடிய காதலாய் அருளிச் செய்தார்.
பாணர் அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்களைப் பாடி நம் பெருமானின் திருவடியில் இரண்டறக் கலந்தார்.
ஆபாத சூடம் அனுபூய ஹரிம் ஶயாநம்
மத்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மனவை முநிவாஹநம் தம்–திருப்பாணாழ்வார் தனியன்:
உம்பர் தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே
உரோகிணி நாள் கார்த்திகையிலுதித்த வள்ளல் வாழியே
வம்பவிழ்தார் முனிதோளில் வகுத்த பிரான் வாழியே
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே
அம்புவியில் மதிளரங்கரகம்புகுந்தான் வாழியே
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே–திருப்பாணாழ்வார் வாழி திருநாமம்:
உம்பர்தொழும் மெய்ஞ்ஞானமுறையூரான் வாழியே – உம்பர்கள் என்னும் வார்த்தை நித்யஸுரிகள் / தேவர்களைக் குறிப்பதாகும். அந்த நித்யஸுரிகளே திருப்பாணாழ்வாரைத் தொழுவார்களாம். அப்படிப்பட்ட வைபவத்தை உடையவர் திருப்பாணாழ்வார். உறையூரில் அவதரித்த உண்மையான ஞானத்தை உடைய திருப்பாணாழ்வார் வாழ்க என்பது இவ்வரியின் விளக்கம்.
உண்மையான ஞானம் என்பது பரமபதத்தில் வீற்றிருக்கும் எம்பெருமான் தான் அர்ச்சாவதாரத்தில் எழுந்தருளியிருக்கிறார் என்பதை அறிவதாகும். “நாம் பரமபதம் தான் உயர்வு; அர்ச்சாவதாரம் அதை விடக் குறைந்தது” என்று எண்ணலாம். பரமபதத்தில் எம்பெருமானின் பரத்வம் தான் வெளிப்படும். ஆனால் ஸௌலப்யம் என்பது பகலிலே எரித்த விளக்கு போல இருக்கும். அவனுடைய ஸௌலப்யத்தை பரமபதத்தில் காட்டுவதற்கு வாய்ப்பே இல்லை. தவறு செய்பவர்கள் இருந்தால் தான் எம்பெருமானின் ஸௌலப்யம் வெளிப்படும். ஆகவே தவறு செய்பவர்கள் நிறைந்துள்ள பூலோகத்தில் அர்ச்சாவதார எம்பெருமானுக்குதான் ஏற்றம் எனலாம். அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் அர்ச்சகருக்கு பரதந்த்ரன் ஆக இருப்பான். அவர் எப்போது திருமஞ்சனம் செய்கிறாரோ அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அர்ச்சகர் எப்போது உணவு கண்டருளச் செய்தாலும் அப்போது அதை ஏற்றுக் கொள்கிறான். அவர் அணிவிக்கும் ஆடைகளையே உகந்து அணிந்து கொள்கிறான். அவ்வாறு தன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து இறங்கி தன்னை எளியவனாக அர்ச்சாவதாரத்தில் காட்டுகிறான். எம்பெருமானின் அர்ச்சாவதார மேன்மையை நன்கு உணர்ந்தவர் திருப்பாணாழ்வார். எனவேதான் அமலனாதிபிரான் பத்து பாசுரங்களிலும் எம்பெருமானின் வடிவழகை மட்டுமே பாடியிருக்கிறார். அவ்வாறு சிறப்புடைய திருப்பாணாழ்வார் வாழ்க.
உரோகிணிநாள் கார்த்திகையில் உதித்தவள்ளல் வாழியே – கார்த்திகை மாதம் ரோகிணி நக்ஷத்திரத்தில் அவதரித்தவர் திருப்பாணாழ்வார். இப்பூவுலகத்தாருக்கு அர்ச்சாவதார பெருமையை எடுத்துக் காட்டிய வள்ளல் திருப்பாணாழ்வார். அவர் பல்லாண்டு வாழ்க.
வம்பவிழ்தார் முனிதோளில் வந்த பிரான் வாழியே – பிரான் என்றால் நமக்கு நன்மை செய்பவர் என்று பொருள். நமக்கு நன்மை செய்யக்கூடியவரான திருப்பாணாழ்வார் வாசனை மிருந்த மாலையை அணிந்த லோக சாரங்க முனிவர் தோளிலே ஏறி திருவரங்கம் வந்தார். அவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும்.
மலர்க்கண்ணில் வேறொன்றும் வையாதான் வாழியே – மலர் போன்று இருக்கக் கூடிய கண்களில் பெரிய பெருமாளைத் தவிர வேறு ஒரு காட்சியும் அறியாதவர் திருப்பாணாழ்வார. அப்படிப்பட்ட திருப்பாணாழ்வார் வாழ்க.
அம்புவியில் மதிளரங்கர் அகம் புகுந்தான் வாழியே – அழகியதான இப்பூவுலகில் ஸப்த ப்ரகாரம் என்று சொல்லக்கூடிய ஏழு மதிள்களால் சூழப்பட்ட திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் மனத்தில் புகுந்தவரான திருப்பாணாழ்வார் பல்லாண்டு வாழ்க.
அமலனாதி பிரான் பத்துமருளினான் வாழியே – திருப்பாணாழ்வார் அருளிய ப்ரபந்தம் பத்து பாசுரங்கள் கொண்ட அமலனாதி பிரான். அவர் வாழ்க பல்லாண்டு.
செம்பொன் அடி முடி அளவும் சேவிப்போன் வாழியே – திருவரங்கம் பெரிய பெருமாளின் சிவந்த பொன் போன்ற திருவடி தொடங்கி திருமுடி வரையிலும் அமலனாதி பிரான் ப்ரபந்தத்தில் திருப்பாணாழ்வார் வர்ணித்திருப்பார். அவ்வாறு திருவரங்கப் பெருமாளின் அவயவங்களை சேவிக்கும் திருப்பாணாழ்வார் வாழ்க என்ற இந்த வரியில் காட்டப்படுகிறது,
திருப்பாணன் பொற்பதங்கள் செகதலத்தில் வாழியே – பொன்னை ஒத்து இருக்கும் திருப்பாணாழ்வாரின் திருவடிகள் இப்பூவுலகில் பல்லாண்டு வாழ வேண்டும்.
ஆண்டாள் மாசம் இன்று அழைக்கபடும் மார்க்கழியில் ஸ்ரீ ரங்கநாதனுடன் ஐக்கியமானவர்கள் இவர்கள் இருவரே.
அரங்கனை நினைத்து 9 பாசுரங்கள் பாடிய பாணர். ‘என் அமுதினை கண்ட கண்கள், மற்றொன்றினை காணாவே; நான் பிறவி எடுத்ததன் பலன் முடிந்தது. இனி என் கண்களுக்கு வேலையில்லை. அவைகள் எனக்கு தேவையில்லை என்ற பொருளில் 10வது பாடலை பாடினார். இதை கேட்ட, அரங்கன், திருப்பாணரை, தன்னருகே அழைத்தான், தன் சோதியில் சேர்த்துக் கொண்டான்
கோயில் என்றாலே ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஸ்ரீரங்கம்தான்’ என்று போற்றிச் சொல்லப்படும் பெருமை கொண்டது திருவரங்கத் திருத்தலம்
குடதிசைமுடியை வைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலுமாகண்டு
உடலெனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.”
எனத் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிப் பரவசமடைந்த இந்த ஸ்ரீரங்கத்தில் அருளும் ஸ்ரீரங்கநாதர்,
இந்த ஆலயத்தின் ஏழு சுற்றுகளையும் ஏழு லோகங்களாகச் சொல்வார்கள்.
அவற்றில், திருமாடங்கள் சூழ்ந்த சுற்று `பூலோகம்’ என்றும்,
திரிவிக்ரம சோழன் சுற்று `புவர்லோகம்’ என்றும்,
அகளங்கன் சுற்று எனும் கிளிச்சோழன் சுற்று `ஸுவர்லோகம்’ என்றும்,
திருமங்கை ஆழ்வார் சுற்று `மஹர்லோகம்’ என்றும்,
குலசேகர ஆழ்வார் சுற்று `ஜநோலோகம்’ என்றும்,
ராஜமகேந்திரச் சோழன் சுற்று `தபோலோகம்’ என்றும்,
ஆதிதர்மவர்ம சோழர் சுற்று `சத்யலோகம்’ என்றும் போற்றப்படுகிறது.
மேலும், இங்குள்ள ஒன்பது தீர்த்தங்களும் இந்தியாவின் புனிதமான ஒன்பது நதிகளின் அம்சமாக அடங்கியுள்ளன என்கிறார்கள்.
சந்திர புஷ்கரணி கங்கையாகவும்,
வில்வ தீர்த்தம் யமுனையாகவும்,
சம்பு தீர்த்தம் சரஸ்வதியாகவும்,
பகுள தீர்த்தம் கோதாவரியாகவும்,
பலாச தீர்த்தம் கிருஷ்ணாவாகவும்,
அசுவ தீர்த்தம் நர்மதாவாகவும்,
ஆம்ர தீர்த்தம் துங்கபத்ராவாகவும்,
கதம்ப தீர்த்தம் கண்டகி நதியாகவும்,
புன்னாக தீர்த்தம் காவிரியின் வடிவாகவும் இங்கு போற்றப்படுகின்றன.
விண்ணகத்து லோகங்களும், மண்ணகத்து நதிகளும் ஒருசேர அமைந்திருக்கும் புண்ணியத்தலம் திருவரங்கம்.
‘இந்திரப்பதவி தரினும் வேண்டேன், இந்த அரங்கமாநகரத்து ஆலயம் போதும்’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பெருமைக்குரிய ஆலயம்.
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம்.
நம்பெருமாள்
வைகுண்ட ஏகாதசி பெருவிழா
இராப்பத்து மூன்றாம் திருநாள்
ஆயிரம் கால் திருமாமணி மண்டபத்தில்  நம்பெருமாள், சௌரி சாயக் கொண்டை, அதில் புஜ கீர்த்தி, சிறு சிகப்பு கல் பதக்கம்,
பிராட்டி பதக்கம், முத்து பட்டை, மார்பில் விமான பதக்கம், வைர அபய ஹஸ்தம், ரத்தின கடி அஸ்தம்,
அடுக்கு பதக்கங்கள், 2 வட முத்து சரம், ஹஸ்த தொங்கல் கைகளில் சாற்றி,
பின் சேவையில்- காசு மாலை, வெள்ளை கல் ரங்கோன் அட்டிகை, வெள்ளை அரசிலை பதக்கம் சாற்றி சேவை சாதிக்கிறார்.
—————

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

பெரியவாச்சான் பிள்ளையின் “இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ணபாதர்.
தந்தை யாமுனதேசிகர், தாய் நாச்சியராமளுக்கும் ,
சேங்கநல்லூர் எனும் தலத்தில் கலி 4329 சர்வஜித்து வருடம் ஆவணி மாதம் ரோஹிணி நட்சத்திரத்தில் அவரித்தார்.
அதாவது, கி.பி. 1228-ல் பிறந்தார். “ஆச்சான் என்பது வைணவ பரிபாஷையில் ஆசாரியன். பலர் ஆச்சான் என்ற பெயரோடிருந்தமையால்,
இவரை வேறு பிரித்துக் காட்டப் பெரிய ஆச்சான் பிள்ளை என
இருந்த பெயர் உடம்படு மெய் பட்டு பெரியவாச்சான் பிள்ளை என அழைப்பதை அறிய முடிகின்றது.
வைணவ மரபில் ஆச்சான் என்று மட்டும் சொன்னால் இவரே. கிருஷ்ணசூரி என்றும்
இவர் வழங்கப் பெற்றார்.
ஆயர் குலத்துப் பெண்களை ஆய்ச்சி என்றும் ஆண்களை ஆச்சான்(அல்லது ஆயத்தான்) என்றும் அழைப்பார்கள்.
இயர் பெயர் கிருஷ்ணன் என்று இருந்தால் பெரும்பாலும் அழைக்கும் பெயர் ஆச்சான்/ஆயத்தான் என்று இருக்கும்.
பெரிய ஆய்த்தான் பிள்ளை என்பதை தான் நாம் பெரியவாச்சான் பிள்ளை என்கிறோம்.
ஆவணி ரோகிணியில் அவதரித்ததால், இவர் கண்ணனின் அம்சமாகவே கருதப்பட்டார். கிருஷ்ணர் என்னும் திருநாமத்தையும் பெற்றார்.
பெரியவாச்சான் பிள்ளையை வியாக்கியான சக்ரவர்த்தி என்றும், உரைமன்னன் என்றும்,
உரைவித்தகர் என்றும் பரம காருணிகர் என்றும் பற்பல அறிஞர்கள் போற்றுகின்றனர்.
ஒரு சமயம் திருவரங்கத்திலே தங்கி வாழ்ந்து வந்த இவர் நஞ்சீயரிடத்தும் நம்பிள்ளையிடத்தும்
எல்லா வகையான சாத்திர உண்மைகளையும், திருவாய்மொழி வியாக்கியானங்களையும் நன்கு கேட்டுணர்ந்தார்.
நம்பிள்ளையை அவர் தம்முடைய ஆசாரியராகக் கொண்டிருந்தார்.
அவர்தம் புலமையை நன்குணர்ந்த நம்பிள்ளை, திருவாய்மொழிக்கு வியாக்கியானம் எழுதுமாறு கட்டளையிட்டார்.
அவருடைய கட்டளையின்படி அவரும் திருவாய்மொழிக்கு உரை வகுத்தார்.
இராமயணத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடுண்டு.
அதன் விளைவால் அவர் தம்முடைய உரை விளக்கத்தில் பல இடங்களில் இராமாயணப் பாடல்களைச் சான்று காட்டுவார்.
தம் குருவின் கட்டளைக்கு ஏற்ப அவர், இராமாயணப் பாடல்களின் எண்ணிக்கையுடையதாக 24000 கிரந்தத்தில் திருவாய்மொழிக்கு உரை வழங்கியுள்ளார்
————-

ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.

ஆவணி ரோகிணி ஸ்ரீ நயினாராச்சன் பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
கவிதார்க்கிக சிம்ஹாய கல்யாண குணசாலிநே
ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நமஹ
என்ற ஸ்லோகத்தை அருளினார் நாயினாராசார்யர்.
இதன் பொருள் : கவிகள் வாதம் செய்பவர்கள் ஆகியவர்களுக்குச் சிங்கம் போன்றவரும் மங்களக் குணங்கள் பொருந்தியவரும்
உபய வேதாந்தங்களுக்கும் ஆசாரியரும் ஸ்ரீமான் வேங்கடேசன் என்ற திருநாமம் சூட்டப்பட்டவருமான ஸ்வாமி தேசிகனை வணங்குகிறேன்.
தேசிகன் விஷயமாக பிள்ளை அந்தாதி அருளினார். அதில் ஸ்ரீதேசிகனுக்கும் ஸ்ரீராமானுஜருக்கும் பொருந்துமாறு சில பாசுரங்களை அமைத்திருப்பது இதன் தனிச் சிறப்பு. இவரே ஸ்ரீரங்கநாச்சியார் நியமனப்படி ஸ்ரீரங்கத்தில் வேதாந்த தேசிகனின் விக்ரஹத்தை பிரதிஷ்டை செய்து ஆராதித்துக்கொண்டு வந்தார்.
———–
ஆவணி ரோகிணி நக்ஷத்திரம்.
திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் மதுரமங்கலத்தில் ராகவாசார்யருக்கும் ஜானகி அம்மாளுக்கும் ஆவணி ரோஹிணி அன்று அவதரித்தார்.
கண்ணன் மற்றும் பெரியவாச்சான் பிள்ளை ஆகியோரின் திருநக்ஷத்திரத்தன்று பிறந்ததால் இவருக்கும் கிருஷ்ணன் என்றே பெயரிட்டனர்.
இவர் சீரியதான ஸ்ரீவத்ஸ குலத்தில் அவதரித்தார். இவர் ஆங்கில ஆண்டு 1805இல் அவதரித்தார்.
,அப்பன் திருவேங்கட ராமானுஜ ஜீயர், தலைசிறந்த ஞானியாக விளங்கியதோடு
தன்னுடைய படைப்பிலக்கியங்களின் மூலம் நம்முடைய ஸம்ப்ரதாயதிற்கு பலவகையில் தொண்டு புரிந்துள்ளர்.
நாம் அனைவரும் ஸ்வாமிகளின் திருக்கமல பாதங்களை பணிந்து பகவத், பாகவத, ஆசார்ய விஷயங்களில்
அவரைப் போலவே நாமும் ஞானம், பக்தி ஆகியவற்றைப் பெற்று வாழ்வோமாக.
ஸ்ரீவாதூல ரமாப்ரவாள ருசிர ஸ்ரக்ஸைந்ய நாதாம்சஜ
ஸ்ரீகுர்வீந்த்ரம் மஹார்ய லப்த நிஜஸத் ஸத்தம் ச்ருதா பீஷ்டதம்
ஸ்ரீராமாநுஜ முக்ய தேசிகலஸத் கைங்கர்ய ஸம்ஸ்தாபகம்
ஸ்ரீமத்வேங்கடலக்ஷ்மணார்ய யமிநம் தம்ஸத்குணம் பாவயே–அப்பன் திருவேங்கட ராமானுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமிகள் தனியன்:
திருநக்ஷத்ர தனியன்கள்
அக்ஷயாப்தே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் கலிதோதயம் |
ராமாநுஜ பதச்சாயாம் வந்தே வேங்கட லக்ஷ்மணம் ||
அக்ஷயாத்ரே ஸிம்ம க்ருஷ்ண ரோஹிண்யாம் ஜாதமாச்ரயே |
ஸ்ரீ ப்ரவாள குரோர் சிஷ்யம் முநிம் வேங்கட லக்ஷ்மணம் ||
வாழித்திருநாமம்
சீர் பெரும்பூதூரைச் செழுப்பித்தோன் வாழியே
திருப்பாவை சீயர் உளம் தேர்ந்து உணர்ந்தோன் வாழியே
பார்மேவும் பரசமயப் பற்று அறுத்தோன் வாழியே
பாடியத்தின் உட்பொருளைப் பகருமவன் வாழியே
காரிசுதன் தமிழ்மறைக்குக் கருத்து உரைப்போன் வாழியே
கருணையினால் அடியேற்குக் கழல் அளித்தோன் வாழியே
ஏராரு முனிதிலகம் என வந்தோன் வாழியே
எங்கள் எம்பார் சீயர் தமது இணையடிகள் வாழியே
—————–
வைகாசி ரோகிணி நக்ஷத்திரம்.
திருக்கோஷ்டியூர் நம்பி திருக்குருகைப்பிரான் என்கிற திருநாமத்துடன் திருகோஷ்டியூரில் வைகாசி ரோகிணியில் அவதரித்தார்.
ஆளவந்தாருடைய முக்கியமான ஶிஷ்யர்களுள் இவரும் ஒருவர்.
ஸ்ரீ ஆளவந்தார் என்னும் மஹாசார்யர் அவதரித்துப் பதினொரு வருடங்கள் கழிந்தபின் (கி.பி.987) ஸர்வஜித் வருஷத்தில்
வைகாசி ரோகிணி நட்சத்திரத்தில், காஸ்யப கோத்ரத்தில் ருக்ஸாகையில் பெரியாழ்வாருக்குப் பரம ஆப்தரான (ப்ரீதியுடையவரான)
செல்வநம்பியின் வம்சத்திலே, ஸ்ரீபுண்டரீகர் என்னும் நித்யஸூரியின் அம்சமாய்,
பூர்வஸிக ஸ்ரீவைஷ்ணவ ப்ராஹ்மண குலத்திலே அவதரித்தவர் ஆவார் திருக்கோட்டியூர் நம்பி.
இவர் பிற்காலத்தில் ப்ரஸித்தமாகத் திருக்கோஷ்டியூர் நம்பி என்றே அழைக்கப்பட்டார்.
இவருக்கு கோஷ்டி பூர்ணர், கோஷ்டி புரீஶர் என்ற திருநாமங்களும் உண்டு.
ஸ்ரீவல்லப பதாம்போஜ தீபக்த்யம் ருதஸாகரம் |
ஸ்ரீமத கோஷ்டீபரிபூர்ணம தேஸிகேந்த்ரம் பஜாமஹே ||
ஸ்ரீயப்பதியின் திருவடித்தாமரையில் ஞானமும் பக்தியுமாகிற அமுதங்களுக்குக் கடல் போன்றவரும்,
திருக்கோட்டியூர் நம்பி என்னும் பெயருடையவருமான ஆசார்ய உத்தமரை ஆச்ரயிக்கிறோம்.
திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த “பெரிய திருமொழி” என்னும் பிரபந்தத்திற்கு
“கலயாமி கவித்வம்ஸம் கவிம்லோக திவாகாரம் |
யஸ்ய கோபி: ப்ரகாஸாபிராவித்யம் நிஹதம் தம: ||”
என்னும் தனியனை அருளிச்செய்தவர் திருக்கோட்டியூர் நம்பிகள் ஆவார்.
திருநக்ஷத்ர தனியன்:
வைஸாக ரோஹிண்யுதிதம் கோஷ்டிபூர்ணம் ஸமாஸ்ரயே |
சரமஸ்லோக தாத்பர்யம் யதிராஜாய யோஸ்வதத் ||
வாழி திருநாமங்கள் :
மன்னியசீர் ஆளவந்தார் மலர்பதத்தோன் வாழியே
வைகாசி ரோகிணிநாள் வந்துதித்தோன் வாழியே
இன்னிள வஞ்சிக்கு இனிதுரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தென்னணியாம் காசிப கோத்திரத்துதித்தோன் வாழியே
திருக்குருகைப்பிரான் என்னும் பேர் திகழவந்தோன் வாழியே
முன்னர் அரும் பெரும்பூதூர் முனிக்குரைத்தோன் வாழியே
மொழிந்த திருக்கோட்டி நம்பி மூதுலகில் வாழியே.
காசிபன் தன்கோத்திரத்தைக் கருநிலத்தோன் வாழியே
கலையனைத்தால் முன்னவர்க்குக் கதியளித்தோன் வாழியே
மாசற மெய்ப்பொருளே திக்குவழங்குமவன் வாழியே
வைய்யகமுன் தரிசனத்தால் வாழுமென்றான் வாழியே
ஏசறவே உகந்தெதியை எடுத்துரைத்தான் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
தேசுபுகழ் செல்வன்மொழி தேர்ந்துரைப்போன் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
ஈரேழு மூன்றொன்றில் இதமுரைத்தான் வாழியே
ஏற்றமாம் ஆளவந்தார் இணையடியோன் வாழியே
ஈரேழுலகுக்கும் பதம் ஈயுமவன் வாழியே
எம்பெருமானார் எனும் பேர் இயம்புமவன் வாழியே
நாலேழில் நாலாநாள் நாடிவந்தோன் வாழியே
நம் மதுரகவி நிலையை நண்ணினான் வாழியே
நாலேழு நாலெழுத்தை நன்குரைத்தான் வாழியே
நங்கள் திருக்கொட்டிநம்பி நற்பதங்கள் வாழியே.
அல்பகலும் ஆளவந்தார் அடிநினைவோன் வாழியே
அனவரதம் தெற்காழ்வார்க்கு ஆட்செய்வோன் வாழியே
வெல்பொருள் வெளியிட எதியை வெறுத்துகந்தான் வாழியே
மேதினியோர் உய்வரென்று மெச்சினான் வாழியே
உள்மந்திரம் எதிராசர்க்கு ஒளித்துரைத்தான் வாழியே
உந்துமதத்தெதியை உகந்தணைந்தான் வாழியே
செல்வநம்பிகுலம் தழைக்கச் செகத்துதித்தான் வாழியே
திருக்கோட்டியூர் நம்பி செகதலத்தில் வாழியே.
————–
ஹம்பியிலுள்ள புனித ஸ்தலங்களில் ஒன்று யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோயில் ஆகும்.
இந்த கோயில் கோதண்ட ராமர் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோயிலின் பிரதான விசேஷமாகும்.
நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும்
எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
இது தவிர தியானத்தில் உட்கார்ந்த நிலையில் ஒரு ஹனுமான சிலையும் இந்த கோயிலில் உள்ளது.
இது விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது.
ஏனெனில் எல்லா ஆலயங்களிலும் ஹனுமானின் சிலை சக்தியைக்காட்டும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளதே
தவிர தியானத்தில் அமர்ந்துள்ளது போன்ற சிலை வேறெங்கும் இல்லை.
இக்கோயிலின் வெளிச்சுவர்கள் எல்லா ஹிந்து கோயில்களையும் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம்
————–
நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்.
இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்;
மேல் மூன்று பத்துகளாலே உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும்,
ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்ற படியையும்,
அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார்.
பத்தாம் பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
இவற்றுள்,
 முதற்பத்தாலே ‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் – அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன் – துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாகவுடையவனாய்
வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து, கூறிய பொருளுக்கும்,
இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம்,
‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும்,
‘இத்தன்மைகளையுடையவன் யார்?’ என்ன, ‘வண்புகழ் நாரணன்’ என்றும் ‘திருவுடை அடிகள்’ என்றும் ‘
செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி,
‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி, ‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால்
முக்கரணங்களாலும் அடிமை செய்து தலைக்கட்டுகையாலே ‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’ என்று அறுதியிட்டார்.
மூன்றாம் பத்தால், இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன்,
கைங்கரியத்துக்கு ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு,
‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே,
பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக. அடிமை செய்து தலைக்கட்டுகிறார்.
ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
இனி,
• நான்காம் பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் ‘திருநாரணன் தாள்’ என்றும்,
விரோதி ‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ ‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால்,
ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து,
‘ஐங்கருவி கண்ட இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார்.
ஐந்தாம் பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும்
‘ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத் தந்தான் என்றார்.
ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் சேர்ப்பாரை முன்னிட்டுப் பெரிய பிராட்டியார் புருஷகாரமாக
‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்ற தனால் ஏற்றுக்கொண்டார்.
ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 – 6) துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
ஏழாம்பத்தால், இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க்
‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட
‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே,
‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்;
அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே பிரிந்தபடியை அருளிச் செய்தார்.
எட்டாம் பத்தால், மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே
உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார்,
அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, அடியார்கட்கு அதீனப்பட்ட
சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம்,
ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு,
அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.
ஒன்பதாம் பத்தால், ‘நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி.,
‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,.
‘சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.
பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, ‘திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி,
இவர்க்கு அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே
‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.
——————
கார்த்திகை கார்த்திகை நக்ஷத்திரம்.
கார்த்திகை கார்த்திகை ஸ்ரீ நம்பிள்ளை அவதார திருநக்ஷத்திரமாகும்.
நம்பூர் என்ற கிராமத்தில் வரதராஜன் என்ற திருநாமத்தோடே திருவவதாரம் செய்த “வரதர்” பிற்காலத்தில்,
“நம்பிள்ளை” என்று தனது ஆசார்யராயன் மூலம் திருநாமம் சூட்ட பெற்றார்.
நஞ்ஜீயர் தனது திருவாய்மொழி வ்யாக்யானத்தை எழுத தகுந்த ஒருவர் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது அனைவரும் வரதராஜன் அதற்கு ஏற்றவர் என கூற அந்த பணியை செய்ய நஞ்ஜீயர் வரதராஜனிடம் ஒப்படைத்தார்.
தனது மூல குறிப்புகளை கொடுத்து அதனை கொண்டு 9000 படி வ்யாக்யானத்தை எழுத பணித்தார்.
வரதனும் அந்த ஒலைகளை எடுத்துக்கொண்டு நம்பூர் சென்றார்.
பெருமாளின் விசித்ர சங்கல்பத்தால் அந்த ஓலைகள் காவிரியை கடக்கும் போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட,
ஸ்வாமி வரதராஜன் தனது ஆசாரியனை வேண்டி மீண்டும் முழுவதுமாக எழுதி முடித்தார்.
இவர் தமிழிலும் வடமொழியிலும் நல்ல ஞானம் இருந்தமையால் சில இடங்களில் சில கூடுதல் அர்த்தங்களைச் சேர்த்து எழுதினார்.
நஞ்ஜீயர் அந்த வ்யாக்யானத்தைப் படித்துவிட்டு, தாம் எழுதிய வியாக்யானத்தை விட சற்று மாறுதல்கள் இருப்பதைக் கண்டு,
என்ன மாற்றம்? என்ன நடந்தது என்று கேட்டார்.
வரதரும் நடந்த விஷயத்தைக் கூறினார், அதைக் கேட்டவுடன் நஞ்ஜீயர் மிகவும் மகிழ்ந்தார்.
வரதராஜருடைய உண்மையான பெருமையை உணர்ந்து, நஞ்ஜீயர் அவருக்கு “நம்பிள்ளை” என்ற திருநாமத்தைச் சூட்டினார்.
பலருக்கு பெருமாள் என்னும் திருநாமம் இருக்க நம்பெருமாள் என்னும் திருநாமம் அழகியமணவாளனுக்கு ஒருவருக்கே
அதேபோல் பலருக்கு பிள்ளை என்னும் திருநாமம் இருக்க நம்பிள்ளை என்னும் திருநாமம் ஸ்வாமி நம்பூர் வரதராஜன் ஒருவருக்கே.
வேதாந்த வேத்ய அம்ருத வாரிராஸேர்
வேதார்த்த ஸார அம்ருத பூரமக்ர்யம்
ஆதாய வர்ஷந்தம் அஹம் ப்ரபத்யே
காருண்ய பூர்ணம் கலிவைரிதாஸம்–நம்பிள்ளையின் தனியன்:
நம்பிள்ளையின் வாழி திருநாமம்:
தேமருவும் செங்கமலத் திருத்தாள்கள் வாழியே
திருவரையில் பட்டாடை சேர்மருங்கும் வாழியே
தாமமணி வடமார்வும் புரிநூலும் வாழியே
தாமரைக் கை இணையழகும் தடம் புயமும் வாழியே
பாமருவும் தமிழ்வேதம் பயில் பவளம் வாழியே
பாடியத்தின் பொருள்தன்னைப் பகர்நாவும் வாழியே
நாமநுதல் மதிமுகமும் திருமுடியும் வாழியே
நம்பிள்ளை வடிவழகும் நாடோறும் வாழியே
காதலுடன் நஞ்சீயர் கழல்தொழுவோன் வாழியே
கார்த்திகைக் கார்த்திகை யுதித்த கலிகன்றி வாழியே
போதமுடன் ஆழ்வார் சொல் பொருளுரைப்போன் வாழியே
பூதூரான் பாடியத்தைப் புகழுமவன் வாழியே
மாதகவா லெவ்வுயிர்க்கும் வாழ்வளித்தான் வாழியே
மதிளரங்கர் ஓலக்கம் வளர்த்திட்டான் வாழியே
நாதமுனி ஆளவந்தார் நலம்புகழ்வோன் வாழியே
நம்பிள்ளை திருவடிகள் நாடோறும் வாழியே
———————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading